மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.09

சிறுகதை: மாமியாரின் மறுபக்கம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை: மாமியாரின் மறுபக்கம்!

மீனாட்சி அரசாளும் மதுரை. கோவிலுக்குக் குடமுழுக்கு முடிந்து
பத்து தினங்களே ஆகியிருந்தன. பளபளப்பு அத்தனை இடங்களிலும்
குடமுழுக்கைச் சிறப்பாக நடத்தியவர்களின் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தது.

தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சாலா, பொற்றாமரைக்
குளத்தின் வடக்குப்படிக்கட்டில் வந்து அமர்ந்தாள். தனது இரண்டு
வயதுக் குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை
சமர்த்தாக வருகிற போகிற ஜனங்களைப் பார்த்தவாறும், தன்
தாயின் கையைக் கெட்டியாகப் பிடித்தவாறும் அமர்ந்திருந்தது.

சாமி சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இருந்த விற்பனைக் கடையில்
இருந்து, லட்டு பிரசாதத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய
அவளுடைய கணவன் குமரப்பனும் அவளருகே வந்து அமர்ந்து
கொண்டான்.

அமர்ந்தவன் மெல்லக் கேட்டான், "சொக்கநாதர் சன்னதியில்
அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்தாயே
- என்ன வேண்டிக்கொண்டாய்?"

புன்னகைத்த அவள், மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்கள்தான் எனக்குக் கணவராக
வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்"

"ஏன் இந்த ஒரு ஒரு ஜென்மம் பத்தாதா? அடுத்த பிறவி எதற்கு?"

"இல்லை, உங்களோடு திகட்டும் வரைக்கும் வாழவேண்டும். அதற்கு
எத்தனை பிறவிகள் வேண்டுமோ எனக்குத் தெரியவில்லை!"

"ஓகோ!"

"நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"

"நான் அம்பாளிடம் வேண்டிக்கொண்டேன்!"

"அதுதான் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"

"எத்தனை பிறவி என்றாலும் என் ஆத்தாதான் எனக்கு மீண்டும் மீண்டும்
ஆத்தாவாக வந்து அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்."

"என்னவொரு ஆத்தா பாசம்? ஏன் இதுவரை பட்டது போதாதா?"

"என் ஆத்தாவால்தான் உன்னுடைய அபரிதமான அன்பு எனக்குப்
புலப்பட்டது. உன்னுடைய அன்பால்தான் நீ என்னைக் கட்டிப் போட்டு
வைத்திருக்கிறாய்!"

"உங்கள் தாயாருக்கு ஊரில் என்ன பெயர் தெரியுமா?"

"தெரியும். அலறுவாய் அலமேலு ஆச்சி!"

"பெண்ணிற்கு நாவடக்கம் வேண்டும். அது இல்லாததால்தான் அவர்கள்
அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னை விடுங்கள். உங்கள்
தாயபிள்ளைகள் யாரிடமாவது அவர்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா?"

"ஆண், பெண் என்ற பேதம் எதற்கு? எல்லோருக்குமே நாவடக்கம் வேண்டும்.
என் தாயாரிடம் அது இல்லை. முன்கோபம் மிக்கவர்கள். கோபத்தில்
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவார்கள். அத்தனை
பிரச்சினைக்கும் அதுதான் காரணம். கோபத்தோடு எழுகிறவன்,
நஷ்டத்தோடு உட்காருவான் என்பார்கள். அந்தக் கோபத்தால் என்
தாயார் இழந்தது அதிகம். "

"இத்தனை வயதாகியும் அவர்கள் ஏன் இன்னும் அதை உணரவில்லை?"

"அது அவர்களுடைய சுபாவம். சுபாவத்தை மாற்றிகொள்வது இயலாத
காரியம். பாகற்காய் பாகற்காய்தான். என்ன சர்க்கரை போட்டு சமைத்தாலும்
அதன் கசப்பு நீங்காது! பாகற்காயில் கசப்பும் உண்டு. அதோடு அற்புதமான
மருத்துவத் தன்மையும் உண்டு.பலருக்கும் அதன் கசப்பு மட்டுமே கண்ணில்
படும். மருத்துவக் குணத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே!"

"உங்கள் அத்தாவிடம் உள்ள அந்த மருத்துவக்குணம் என்னவென்று
சொல்லுங்களேன்"

"நேரம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்" என்று சொன்னவன் எழுந்து
விட்டான்.

அவர்கள் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++
அதே நேரம் சாலாவின் மாமியார் அலமேலு ஆச்சி அவர்கள் தன் இளைய
சகோதரன் சாத்தப்பனுன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"விளக்கமாற்றிற்குப் பட்டுக் குஞ்சம் கட்டின மாதிரி உடம்பு. சோறு வடிக்கிற
குண்டான் மாதிரி முகம். தோல் மட்டும்தான் கொஞ்சம் சிவப்பு. இவளைப்
போய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறானே - இவனுக்கு
நடிகை நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணி
வச்சிருந்தா - என்ன ஆகியிருக்கும்?" என்று ஆச்சி தன் மருமகள்
புராணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆச்சி திரைப் படங்கள், சின்னத்திரைத் தொடர்கள் என்று நிறையவே
பார்த்துக் கரை கண்டவர்கள்.வார்த்தைகள் எல்லாம் உதாரணங்களுடன்
வசனங்களாகவே வரும்.

"என்ன ஆகியிருக்கும் - நீங்களே சொல்லுங்கள்," என்று தம்பி
குறுக்கிட்டவுடன், ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.

“நாகபட்டிணத்தில் அடிச்ச சுனாமி எங்க வீட்டுக்குள்ள அடிச்சிருக்கும்.
அப்படியே என்னைக் கொண்டுபோயிருக்கும். உன்னோடு பேச நான்
உயிரோடு இருந்திருக்க மாட்டேன்”

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஆச்சி. ஆயிரம் இருந்தாலும், அவள்
உங்கள் வீட்டிற்கு வாழவந்திருக்கும் பெண். விளக்கேற்றி வைக்க வந்தவள்.
நல்ல வார்த்தையாகச் சொல்லுங்கள் ஆச்சி!”

இந்த இடத்தில், மனம் உடைந்த ஆச்சி, உணர்ச்சி மேலிட, அழுக
ஆரம்பித்து விட்டார்கள்.

“தம்பி, நான் என்ன வேண்டுமென்றா சொல்லுகிறேன்? உள்ளதைத்
தானே சொல்லுகிறேன். தேளிற்குக் கொடுக்கில் மட்டும்தான் விஷம்.
என் மருமகளுக்கு உடம்பெல்லாம் விஷம். அவளோடு இருக்க முடியாது.
அதனால்தான் வந்துவிட்டேன்.”

தன் மூத்த சகோதரியின் ஆளுமை உணர்வையும், கோப உணர்வையும்
நன்கு அறிந்த சாத்தப்பன், இந்த இடத்தில் பொறுமையாக எடுத்துச்
சொன்னான்.

"ஆச்சி ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வீட்டில்தான்
மாமியார் மருமகள் சண்டை இல்லை? ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்துப் போகாததினால்தான் பிரச்சினைகள் உண்டாகின்றன.
உங்கள் மருமகள் சாலாவையும் நான் அறிவேன். நீங்கள் சொல்லுகிற
மாதிரியான பெண்ணல்ல அவள். உங்கள் மகன் குமரப்பன் எவ்வளவு
கெட்டிக்காரன்? நீங்கள் சொல்லுகிற மாதிரி அவளுக்கு உடம்பெல்லாம்
விஷம் என்றால், அவன் அதை உணராமலா அவளுடன் குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கிறான்? எல்லா ஆத்தாக்களுக்குமே மகன் தனக்கு மட்டும்தான்
பாத்தியப்பட்டவன் என்னும் உணர்வு அதிகம். தன்னுடையது என்னும்
பொசசிவ்னெஸ் அதிகம். திருமணத்திற்குப் பிறகு உரிமைப் பத்திரம்
மாறிவிடும். வருபவளுக்கு மகன் சொந்தமாகிவிடுவான் என்பதை ஏற்றுக்
கொண்டு யதார்த்தமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது!”

”சொந்தத்தில், உள்ளூரில் நிறையப் பெண் பார்த்தேன். ஒன்றுகூட
அமையவில்லை. அவன் இவளை வெளியூரில் இருந்து பிடித்துக் கொண்டு
வந்தான். உள்ளுர்ப் பெண் என்றால் நமது குடும்பத்தின் அருமை பெருமை
தெரிந்தவளாக இருப்பாள். தெரியாவிட்டாலும் பெற்றவர்கள் சொல்லி
யனுப்பி வைப்பார்கள். அது எதுவும் தெரியாமல் வந்தவள் என்பதால்தான்,
என் கையை விட்டு என் மகன் போய்விட்டான். நானும் ஊருக்கு வந்து
இப்படித்தனியாய் இருந்து இழுபடும்படியாகி விட்டது.”

பேச்சை மேலும் வளர்க்க விரும்பாத சாத்தப்பன்,” சரி, விடுங்க
ஆச்சி! சின்னஞ்சிறுசுகள்! ஒரு நாள் உங்கள் அருமை, பெருமை
தெரியாமலா போய்விடும்? அப்போது வருவார்கள். அதுவரை
பொறுமையாக இருங்கள்!” என்று சொன்னான்.

அந்த அருமை, பெருமைகளை, அனைவரையும் உணரவைத்தான்
பழநியம்பதியில் உறையும் பழநிஅப்பன்!

**********************
இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவர் அலமேலு ஆச்சி.
அவருடைய கணவர் அண்ணாமலை செட்டியார் சாலை விபத்தொன்றில்
காலமாகிவிட்டார். ஆச்சியின் மகன் குமரப்பனுக்கு அப்போது ஐந்து
வயதுதான்.செட்டியார் வேலை பார்த்த வங்கியில் ஆச்சிக்கு
மனிதபிமான அடிப்படையில் வேலை தருகிறேன் என்றார்கள்.
ஆனால் ஆச்சிக்கு, உரிய கல்வித்தகுதி இல்லாததனால், கடை நிலை
ஊழியர் வேலை மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். ஆச்சி
மறுத்து விட்டார்கள்.

வங்கியிலிருந்து,பி.எஃப், கிராஜுட்டி, காப்பீட்டுப்பணம், ஊழியர்கள்
சங்க உதவிப்பணம் என்று நிறையப் பணம் கிடைத்தது. அதோடு
செட்டியாரை வைகுண்டத்திற்கு அனுப்பிய லாரிக் கம்பெனிக்காரர்களும்
நீதிமன்ற உத்தரவின்படி நிறையப் பணம் கொடுத்தார்கள். வந்த
பணத்தையெல்லாம், ஆச்சியின் அப்பச்சியும், மாமனாருமாகப் பேசி,
பத்திரப்படுத்தி வைத்தார்கள். ஆச்சியின் மாத வருமானத்திற்கு
வழிபண்ணி வைத்தார்கள். முதல் இரண்டு வருடம் தன் தாய்
வீட்டிலிருந்த ஆச்சி, பிறகு செஞ்சியில் இருந்த தங்கள் வீட்டிற்கே
வந்து விட்டார்கள்.

ஆச்சியின் ஆழ்மனதில் ஒரு கோபம் உண்டு. விதி தன்னை இளம்
வயதிலேயே இப்படி விதவையாக்கிவிட்டதே என்ற கோபம் அது.
தன் வயதையொத்த பெண்கள் ஜிகுஜிகுவென்று பட்டில் போகும்
போதும், வைரத்தாலி மின்ன சிரிக்கும்போதும், ஆச்சியின் மனம்
அடித்துப்போட்டது போல வலியால் துவளும். போகப் போக அது
உளவியல் ரீதியாக ஆச்சியின் மனதை, செயலை மிகவும் மாற்றி
விட்டது. அவர்களுடைய நல்ல குணமெல்லாம் மங்கிப் போய்,
எரிந்து விழும் தன்மையே மேலோங்கி நின்றது. யாருடனும் ஒட்ட
முடியாமல் போய்விட்டது.

பலர் அவர் வீட்டில் பெண் கொடுக்கத் தயங்கியபோது, அதற்கு
இடமில்லாமல், குமரப்பனே, தன்னுடன் பொறியியற் கல்லூரியில்
படித்த சாலாவையே திருமணம் செய்து கொண்டுவிட்டான்.

நிறைய வாங்கி, தன் மகனின் திருமணத்தை தடபுடலாகச் செய்ய
வேண்டும் எனும் ஆச்சியின் ஆசை, நிறை வேறாமல் போய்விட்டது.
அதில் ஆச்சிக்கு மிகுந்த வருத்தம்.

சாலாவீட்டில், வரதட்சனை வேண்டாம் என்று இவன் சொல்லிவிட்டான்.
வலுக்கட்டயமாக அவர்கள் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்களைக்கூட,
சாலா பேரிலேயே வைப்பு நிதியாகப் போடச் சொல்லிவிட்டான்.

அதே நேரத்தில் தன் தாயார் நஷ்டப்படக்கூடாது என்று, தன்
திருமணத்தால் கிடைக்கக்கூடிய ஆதாய வரவு என்ன இருக்கும் என்பதை,
தன் சிறிய தந்தையாரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு, தன்
தாயாரின் கையில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்து
விட்டான். அதோடு திருமணம் நடந்த போது, செலவுகளுக்கு, தன்னுடைய
வங்கி டெபிட் கார்டைக் கையில் கொடுத்து வேணும் என்கிற பணத்தை
எடுத்துக் கொள்ளவும் சொல்லிவிட்டான்.

தன் மகன் படித்து முடித்து புனே’யில் மிகப் பெரிய நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தபோது, என் மகனுக்கு நல்ல சாப்பாடு கிடைக்காது,
நான் வடித்துப் போடுகிறேன் என்று சொல்லி ஆச்சி அவர்களும் உடன்
வந்து விட்டார்கள். புனேயில் சிவாஜி நகரில் வீடு. தனாஜிவாடி
பகுதியில் அவன் வேலைபார்க்கும் அலுவலகம் இருந்தது.

மொழிப்பிரச்சினையால் ஆச்சி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே
இருப்பார்கள். வார விடுமுறை நாட்களில் மகன் கூட்டிக் கொண்டு
போனால்தான் உண்டு.

குன்யா முரளிதர் கோவில், ஓம் கரேஷ்வரர் கோவில் என்று துவங்கி
புனேயில் அத்தனை கோவில்களையும். கேல்கர் அருங்காட்சியகம்,
பால கந்தர்வ அரங்கு, சனிவார்வாடா அரண்மனை, சரஸ் பூங்கா,
பேஷ்வா பூங்கா என்று அத்தனை சுற்றுலாத் தளங்களையும்
ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டார்கள்.

குமரப்பனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், ஆச்சி அவர்களின்
புனே வாழ்வு முடிவிற்கு வந்துவிட்டது. சாலா பெங்களூரில் வேலை
பார்த்ததால், குமரப்பனும் பெங்களூருக்கு வேலையை மாற்றிக்
கொண்டு வந்துவிட்டான்.

அவனுடைய திருமணத்திற்குப் பிறகு, ஆச்சி, அவர்களுடன்
பெங்களூருக்கு வந்து இருந்தார்கள். அவனுக்கு அவுட்டர் ரிங்
ரோட்டில் அலுவலகம். அவளுக்கு ஒயிட்ஃபீல்ட் ரோட்டில்
அலுவலகம். மாதவபுரா ஏரியாவில் வீடு. சாலா மாருதி ஜென்கார்
வைத்திருந்தாள். பெங்களூரில் எல்லா இடங்களும் அத்துபடி.
அதோடு நன்றாகக் கார் ஓட்டுவாள். தன் கணவனைக் காலையில்
அவனுடைய அலுவலகத்தில் இறக்கிவிடுவதோடு, மாலையில்
திரும்ப வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதையும் அவள்தான்
செய்வாள்.

ஆச்சிக்கு தன் மருமகள் கார் ஓட்டுவதே முதலில் எரிச்சலைத்
தந்தது. பெண் பெண்ணாக இல்லாமல் ஆண்களைப் போல எல்லா
வேலைகளையும் செய்கிறாளே என்ற பத்தாம்பசலி எண்ணங்களால்
தொடர்ந்து பல எரிச்சல்கள். பிரச்சினைகள், சச்சரவுகள்.
மனத்தாங்கல்கள். பொறுத்துக் கொள்ள முடியாமல், காரைக்குடி
பெரிய வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார்கள். பிறகு நடந்த
தெல்லாம் கதைக்கு முக்கியமில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
குமரப்பன் தனது ஐந்தாவது திருமண நாளை, தன் மனைவி
மகளுடன், பெங்களூர் தாஜ் ரெஸிடென்ஸி ஹோட்டலில்
கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஊரில் இருந்து தகவல் வந்தது.

அவனுடைய தாயார், குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்
களாம். துவைக்கிற கல்லில் தலை அடிபட்டதால் பின்மண்டையில்
பலமான அடியாம். உடனே புறப்பட்டுப் போனான்.

காரைக்குடியில் இருந்த தனியார் மருத்துவ மனைக்காரர்கள்,
முதலுதவி செய்து, ஆச்சியின் மயக்கத்தைப் போக்கி உயிர்
பிழைக்க வைத்திருந்தார்கள். உதவிக்கு, வளவில் இருந்த மற்ற
பங்குதாரர்களும் இருந்தார்கள். தலையின் பின்பகுதியில் ரத்தம்
கசிவது நின்று விட்டாலும், மதுரை அல்லது திருச்சிக்குச் சென்று
மேற்சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

குமரப்பனும், திருச்சியில் வைத்து சிகிச்சை செய்தான். ஒன்றும்
பலனிக்கவில்லை. ஆச்சி அவர்கள் திருச்சி வந்த நான்காம் நாள்
காலையில் சிவபதவி அடைந்துவிட்டார்கள்.

ஆனால் இறக்கும் முன்பு, தன் மகனின் கைகளைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு, கலங்கிய கண்களுடன் தன் கடைசி விருப்பத்தைச்
சொல்லி விட்டுத்தான் இறந்து போனார்கள்.

அதுதான், குமரப்பனை மட்டுமல்ல, சாலாவையும் அதிர வைப்பதாக
இருந்தது. ஆச்சியின் முழு உணர்வும் அதில் வெளிப்பட்டது.

“அப்பச்சி, நான் பிழைக்க மாட்டேன் என் உள்மனது சொல்கிறது.
பணத்தை வீணாகச் செலவழித்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே.
என் காலம் முடியப் போகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்.
இளம் வயதில் விதவையாகி, ஒரு குழந்தையுடன் வாழ்வதுதான்
உலகிலேயே மிகவும் கஷ்டமான வாழ்க்கை. நான் பட்ட கஷ்டங்கள்
போதும். இளம் விதவை இந்த சமூகத்தின் கோரப்பிடியிலிருந்து
தன்னையும் காத்துக் கொண்டு, தன் பிள்ளையையும் ஆளாக்குவது
என்பது சவாலான செயல். ஒரு போராளியின் மனநிலை இருந்தால்
மட்டுமே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். நான் அப்படித்தான்
அதைச் செய்தேன். குன்றக்குடி முருகன் எனக்குத் துணையாக
இருந்தான். நான் சேர்த்து வைத்திருக்கும் பணம், எனது நகைகள்,
என் அப்பச்சி செக்காலைத் தெருவில் எனக்குக் கொடுத்த இடம்
எல்லாவற்றையும் சேர்த்தால், இன்றைய மதிப்பில் அது ஒரு கோடி
தேறும். அந்தப் பணம், இன்று இளம் வயதில் விதைவையாகிக்
குழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்கு உதவுவதாக இருக்க
வேண்டும். அதை நீ செய்வாயா? நான் சொன்னால் செய்வாய் என்று
தெரியும். இருந்தாலும், எனக்கு வாக்குக்கொடு. அப்போதுதான் நான்
மன நிம்மதியோடு போய்ச் சேருவேன்!”

கலங்கிய கண்களோடு, நிச்சயம் செய்வதாகக் குமரப்பன் தன்
தாய்க்கு வாக்குக் கொடுத்தான்.

பிறகு அதைச் செயல் படுத்தவும் செய்தான்.

தன் கணவன் சொன்ன பாகற்காயின் மருத்துவ குணம் சாலாவிற்கு
அப்போதுதான் புரிந்தது.

எல்லா மனிதர்களுமே நல்லது கெட்டது எனும் இரண்டு குணங்களையும்
உடையவர்கள்தான். நல்ல குணம் அற்புதமாக வெளிப்படும்போதுதான்
மனிதன் தெய்வமாகிவிடுகிறான்.

சாலாவிற்கு, கவியரசரின் வைரவரிகள் அவ்வப்போது நினைவிற்கு
வந்ததோடு, அவளுடைய மாமியாரின் முகத்தையும் அவள் கண்
முன் நிறுத்தத் தொடங்கின! மாமியாரின் மறுபக்கத்தை சாலவும்
உணர்ந்தாள்

”வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!”

அலமேலு ஆச்சி அவர்கள் தெவத்திரு மட்டுமல்ல, தெய்வமாகவும்
ஆகிவிட்டார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!

43 comments:

  1. கதை அருமை

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    கதையும் கருத்தாழமும் அருமை
    அலமேலு ஆச்சியைப் போல்
    இன்னும் நம் சமுதாயத்தில்
    இது போன்று
    போராடிக் கொன்று இருக்கும்
    தாய்மார்கள் நிறைய பேர் இருந்தாலும்
    அவர்கள் செய்த புண்ணியம்
    நல்ல மகன் குமரப்பனை பெற்றது தான்.

    கதை மனம் கசிய வைத்தது.

    நன்றி,
    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் . இன்று கதை அருமை .இது போல் தர்ம சிந்தனை உள்ள நல்ல கதைகளை படிக்க ஆவலாகஉள்ளோம் .பொதுவாக நகரத்தார்கள் தான தர்மங்கள் செய்வதும் ,இறைவன் திருப்பணி செய்வதும் அவர்களுக்கு ,சிறந்த பண்பாக உள்ளது, நன்றி .

    ReplyDelete
  4. கதை அருமை... ஓவ்வொரு மனிதருள்ளும் எல்லாமே கலந்து இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். அருமை. அருமை.

    ReplyDelete
  5. vannakkam sir,

    sir alamelu achi romba nallavanga en manadai thotavanga antha sala kumarappan nalavanga illa. alamelu aachi indiayavin thalai chirantha thai kulam. alamelu aachi marana pachi ennai romba kan kalaga vaithathu my god entha katha unmai kathaya(nadatha kathaya) irruka kadathu. ethuthan en virupan sir.

    your lovingly,
    lakshmi

    ReplyDelete
  6. ////SUREஷ் (பழனியிலிருந்து) said...
    அழகு/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////T K Arumugam said...
    கதை அருமை
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    நன்றி மிஸ்டர் ஆறுமுகம்!

    ReplyDelete
  8. //////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    கதையும் கருத்தாழமும் அருமை
    அலமேலு ஆச்சியைப் போல்
    இன்னும் நம் சமுதாயத்தில்
    இது போன்று
    போராடிக் கொன்று இருக்கும்
    தாய்மார்கள் நிறைய பேர் இருந்தாலும்
    அவர்கள் செய்த புண்ணியம்
    நல்ல மகன் குமரப்பனை பெற்றது தான்.
    கதை மனம் கசிய வைத்தது.
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    மனம் திறந்த உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Meena said...
    அய்யா வணக்கம் . இன்று கதை அருமை .இது போல் தர்ம சிந்தனை உள்ள நல்ல கதைகளை படிக்க ஆவலாகஉள்ளோம் .பொதுவாக நகரத்தார்கள் தான தர்மங்கள் செய்வதும் ,இறைவன் திருப்பணி செய்வதும் அவர்களுக்கு ,சிறந்த பண்பாக உள்ளது, நன்றி ./////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி சகோதரி

    ReplyDelete
  10. /////இராகவன் நைஜிரியா said...
    கதை அருமை... ஓவ்வொரு மனிதருள்ளும் எல்லாமே கலந்து இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். அருமை. அருமை./////

    மனம் திறந்த உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி மிஸ்டர் ராகவன்!

    ReplyDelete
  11. ////sundari said...
    vannakkam sir,
    sir alamelu achi romba nallavanga en manadai thotavanga antha sala kumarappan nalavanga illa. alamelu aachi indiayavin thalai chirantha thai kulam. alamelu aachi marana pachi ennai romba kan kalaga vaithathu my god entha katha unmai kathaya(nadatha kathaya) irruka kadathu. ethuthan en virupan sir.
    your lovingly,
    lakshmi//////

    இல்லை 100% கற்பனைக் கதை! நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. இப்படியும் ஆச்சிகள்! எங்களூரில் வள்ளாலாக வாழ்ந்த செட்டியாரின் மருமகள், தானம் வாங்கிச் சென்றவர்களைத் தொலைபேசியில் அழைத்து வைவார்கள்.ந‌ல்ல இயல்புகளை வெளிக் கொண்டுவரும் உங்கள் முயற்சி
    பாராட்டுக்குரியதே!
    சரி.கொஞ்ச‌ம் அதிகப் பிரசங்கம்! "அழுக ஆரம்பித்து விட்டர்கள்".......
    "அழ ஆரம்பித்து விட்டார்கள்......" எது சரி!?
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  13. அலமேலு ஆச்சியும் தெய்வமாகிவிட்டார்கள்..!

    கதை படிப்பதற்கு இனிமையாகத்தான் உள்ளது.. ஆனால் நிஜத்தில் இதுபோல் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?

    ReplyDelete
  14. ////Blogger kmr.krishnan said...
    இப்படியும் ஆச்சிகள்! எங்களூரில் வள்ளாலாக வாழ்ந்த செட்டியாரின் மருமகள், தானம் வாங்கிச் சென்றவர்களைத் தொலைபேசியில் அழைத்து வைவார்கள்.ந‌ல்ல இயல்புகளை வெளிக் கொண்டுவரும் உங்கள் முயற்சி
    பாராட்டுக்குரியதே!
    சரி.கொஞ்ச‌ம் அதிகப் பிரசங்கம்! "அழுக ஆரம்பித்து விட்டார்கள்".......
    "அழ ஆரம்பித்து விட்டார்கள்......" எது சரி!?
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com////

    ஜனரஞ்சகமான் சொற்கள். பேச்சு வழக்கில் உள்ள சொற்கள்.
    சில அப்படித்தான் இருக்கும் சார்.
    அழ ஆரம்பித்தான்
    ஏன் அழுகிறாய்?
    ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?
    அழுகி விட்டது என்பதற்குப் பொருள் வேறு.
    அழுக ஆரம்பித்து விட்டான் என்பது வேறு.
    அழ ஆரம்பித்து விட்டான்.
    இரண்டும் சரிதான். வட்டார வழக்கில் இரண்டும் உண்டு!
    அழு!
    அழுதுவிடு!
    அதன் தொடர்ச்சிதான். அழுக ஆரம்பித்தல்

    ReplyDelete
  15. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அலமேலு ஆச்சியும் தெய்வமாகிவிட்டார்கள்..!
    கதை படிப்பதற்கு இனிமையாகத்தான் உள்ளது.. ஆனால் நிஜத்தில் இதுபோல் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?//////

    நான் பார்த்திருக்கிறேன் உனா தனா! இதுபோன்ற செயல்களை!

    ReplyDelete
  16. சுப்பையா சார், உறவுகளுக்கிடையே இருக்கிற முரண்பாடுகளையும், முரண்பாடுகளுக்கிடையே இருக்கும் நற்குணத்தையும் பெரியவர்களின் கன்சர்வேடிவ் மனப்பான்மையையும் இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு சிறுகதையில் சொல்ல முடிந்திருப்பது ஆச்சரியம்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  17. Dear Sir

    Super Sir..

    Thank you

    Loving student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  18. சுப்பையா சார், பாவம் அலமேலு ஆச்சி.

    மகனாவது புரிந்து இருந்தானே.
    நல்லதொரு கதை.

    ReplyDelete
  19. /////Jawarlal said...
    சுப்பையா சார், உறவுகளுக்கிடையே இருக்கிற முரண்பாடுகளையும், முரண்பாடுகளுக்கிடையே இருக்கும் நற்குணத்தையும் பெரியவர்களின் கன்சர்வேடிவ் மனப்பான்மையையும் இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு சிறுகதையில் சொல்ல முடிந்திருப்பது ஆச்சரியம்.
    http://kgjawarlal.wordpress.com/////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் உள்ளம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Super Sir..
    Thank you
    Loving student
    Arulkumar Rajaraman/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////வல்லிசிம்ஹன் said...
    சுப்பையா சார், பாவம் அலமேலு ஆச்சி.
    மகனாவது புரிந்து இருந்தானே.
    நல்லதொரு கதை./////

    உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. good story... Every man has two faces...

    ReplyDelete
  23. Sir, Very Good story, your way of narrating is excellent, which keep us involved, good moral. Please continue to write such stories.
    Thanks Sakthi Ganesh.

    ReplyDelete
  24. கதை அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  25. கதை பிரமாதம், படிக்க ஆரம்பித்தால் Cover to Cover /Top to Bottom படிக்க துண்டுகிறது உங்கள் எழத்து
    நன்றி ஐயா.

    ReplyDelete
  26. அருமை! வாத்தியார் ஐயா.

    பூனா நகர்முழுக்க அத்துப்படிபோல இருக்கே:-)

    ReplyDelete
  27. நல்ல கதை சார். வேண்டாத மாமியார் கூட தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டப்பட்டவளாய் ஆனது இந்தக் காலம்.
    ஒவ்வெரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம் உண்டு என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றிர்கள், இதுவும் தங்களின் மாணாக்கர்களுக்கு ஒரு பாடம். அருமை.

    ReplyDelete
  28. ////Karthi said...
    good story... Every man has two faces.../////

    நன்றி கார்த்தி!

    ReplyDelete
  29. /////Sakthi Ganesh said...
    Sir, Very Good story, your way of narrating is excellent, which keep us involved, good moral. Please continue to write such stories.
    Thanks Sakthi Ganesh.//////

    உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி சக்திகணேஷ்!

    ReplyDelete
  30. ////வேலன். said...
    கதை அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  31. singaiSuri said...
    கதை பிரமாதம், படிக்க ஆரம்பித்தால் Cover to Cover /Top to Bottom படிக்க துண்டுகிறது உங்கள் எழத்து!
    நன்றி ஐயா./////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் சூரி! மிக்க நன்றி

    ReplyDelete
  32. ////துளசி கோபால் said...
    அருமை! வாத்தியார் ஐயா.
    பூனா நகர்முழுக்க அத்துப்படிபோல இருக்கே:-)/////

    வாங்க டீச்சர். உங்கள் வருகைக்கு நன்றி! டீச்சரிடம் பொய் சொல்லக்கூடாது.
    நான் மும்பைக்குப் போயிருக்கிறேன். ஆனால் புனே’விற்குப் போனதில்லை.
    கதையில் வரும் இடங்களைப் பற்றிய தகவல்களையெல்லாம் கூகுள் ஆண்டவர் கொடுத்தார்.
    (I have taken them from Google Maps)

    ReplyDelete
  33. ////பித்தனின் வாக்கு said...
    நல்ல கதை சார். வேண்டாத மாமியார் கூட தன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டப்பட்டவளாய் ஆனது இந்தக் காலம்.
    ஒவ்வெரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம் உண்டு என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றிர்கள், இதுவும் தங்களின் மாணாக்கர்களுக்கு ஒரு பாடம். அருமை.////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. வணக்கம் ஆசிரியரே,
    கதை அருமை.நீதிக் கதைகளுக்கு மனித மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதனால் பெரியவர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற கதைகள் நிறைய சொல்வார்கள்.இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் TV செய்து விட்டது.நானும் என் வீட்டு பெரியவர்களிடம் கதை கேட்டதுண்டு.
    பாடம் நடத்துவதோடு நிற்காமல், அக்கறை கொண்டு சமூக நீதியும் போதிப்பதால் ஆசிரியர் எனும் நிலையில் இருந்து இன்னும் நெருங்கி வீட்டு பெரியவர் போல எங்களுக்கு தெரிகின்றீர்.நன்றி.
    >> அலறுவாய் அலமேலு
    இது போல நம் குணம் அமைவதை நாம் மாற்ற முடியுமா?
    ஏனெனில் என் சில இயற்கை குணங்களை நான் மாற்ற முயன்றாலும் அதுதான் ஜெயிக்கிறது

    ReplyDelete
  35. கதை அருமை , எழுத்து நடை அருமை . எல்லாருக்கும் மறுபக்கம் ஊண்டு என்பதை அழகிய நடை ஊடன் சொல்லி இருபது அருமை ...

    ReplyDelete
  36. Dear Sir,

    கதை சூப்பர், ஒவ்வொருடைய குணங்களை அறிந்து நடந்தாலே வாழ்க்கை சிறப்பாக
    இருக்கும் என்பதை உணர்த்திவிட்டிர்கள்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  37. //////prince said...
    வணக்கம் ஆசிரியரே,
    கதை அருமை.நீதிக் கதைகளுக்கு மனித மனதை பக்குவப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதனால் பெரியவர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற கதைகள் நிறைய சொல்வார்கள்.இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் TV செய்து விட்டது.நானும் என் வீட்டு பெரியவர்களிடம் கதை கேட்டதுண்டு.
    பாடம் நடத்துவதோடு நிற்காமல், அக்கறை கொண்டு சமூக நீதியும் போதிப்பதால் ஆசிரியர் எனும் நிலையில் இருந்து இன்னும் நெருங்கி வீட்டு பெரியவர் போல எங்களுக்கு தெரிகின்றீர்.நன்றி.
    >> அலறுவாய் அலமேலு
    இது போல நம் குணம் அமைவதை நாம் மாற்ற முடியுமா?
    ஏனெனில் என் சில இயற்கை குணங்களை நான் மாற்ற முயன்றாலும் அதுதான் ஜெயிக்கிறது//////

    ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மனிதன் குணத்தைக் கைவிட்டு விடுவான். சூழ்நிலைக்கு ஏற்ப நடக்கும் படியாகிவிடும். நன்றி!

    ReplyDelete
  38. /////Priya said...
    கதை அருமை , எழுத்து நடை அருமை . எல்லாருக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அழகிய நடை உடன் சொல்லி இருப்பது அருமை .../////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  39. //////arumuga nainar said...
    Dear Sir,
    கதை சூப்பர், ஒவ்வொருடைய குணங்களை அறிந்து நடந்தாலே வாழ்க்கை சிறப்பாக
    இருக்கும் என்பதை உணர்த்திவிட்டிர்கள்.
    Rgds
    Nainar/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  40. கலக்கல் கதை வாத்யாரே. எழுத்துப்பணியை எப்போதோ ஆரம்பித்திருக்கவேண்டியவர் நீர்..!!!

    ReplyDelete
  41. Dear Sir,

    வேலை நிமித்தம் காரணமாக US வந்து உள்ளேன். அதனால் 3 நாட்கள் வகுப்பு அறைக்கு வரவில்லை. இது ஒரு திடீர் பயணம்.

    கலை வணக்கம்
    சரவணா

    ReplyDelete
  42. //செந்தழல் ரவி said...
    கலக்கல் கதை வாத்யாரே. எழுத்துப்பணியை எப்போதோ ஆரம்பித்திருக்கவேண்டியவர் நீர்..!!!/////

    என்னுடைய ஆதங்கம்: 25 ஆண்டுகள் கழித்துப் பிறந்திருந்தால் நானும் உங்களைப் போல ஒரு கணினிப் பொறியாளராக இருந்திருப்பேன் செந்தழலாரே! அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே!

    நான் தீவிர வாசகன். எழுத ஆரம்பித்ததெல்லாம் தற்செயலாக நிகழ்ந்தது.

    ReplyDelete
  43. ////Saravana said...
    Dear Sir,
    வேலை நிமித்தம் காரணமாக US வந்து உள்ளேன். அதனால் 3 நாட்கள் வகுப்பு அறைக்கு வரவில்லை. இது ஒரு திடீர் பயணம்.
    காலை வணக்கம்
    சரவணா////

    அங்கேயே திருமணத்திற்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிடுங்கள். அமெரிக்கப் பெண்ணாக இருந்தால் உத்தமம்:-))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com