மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label மாண்வர் மலர். Show all posts
Showing posts with label மாண்வர் மலர். Show all posts

29.4.12

அனைவருக்கும் பொதுவானது எது?

 மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.

இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணத்தில் இருந்து திரும்பியவுடன், முதல் வேலையாக மாணவர் மலரை வலைஎற்றியுள்ளேன். சற்றுத் தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ++++++++++++++++++++++++++++++++++++++



வழிபடும் முறை எத்தனை வகைப்படும்?
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.

முற்காலத்தில் நமது இந்து தர்மத்தில் ஏராளமான வழிபாட்டு முறைகள் இருந்தன. ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்,  அவை எல்லாவற்றையும் முறைப்படுத்தி, ஆறு விதமான வழிபாட்டு முறைகளாகத் (ஷண்மத ஸ்தாபனம்) தொகுத்தார். அவை,
 1.விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபத்யம்.
 2.சிவபெருமானை பிரதான தெய்வமாக வழிபடும் சைவம்.
 3. திருமாலை முக்கியக் கடவுளாக வழிபடும் வைணவம்.
 4. முருகப் பெருமானை முதல்வனாக வழிபடும் கௌமாரம்.
 5.அம்பிகையைப் போற்றி வழிபடும் சாக்தம்.
 6. சூரிய பகவானை  முக்கிய தெய்வமாக‌ வழிபடும் சௌரம்.
என்பன.
அன்பே சிவம். எல்லாம் சிவமயம் என்னும்  உன்ன‌தக் கொள்கையை உள்ளடக்கியது சைவம்.  சைவ சமயம் அநாதியானது (ஆதி= தொடக்கம், தொடங்கிய காலம் அறிய இயலாதது)  சைவ சமயத்தினர், சிவபெருமானை, முக்கியக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)

அனத்துயிரினிடத்தும் ஈசன் உறைவதால், ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும் என்பது, சைவம் காட்டும் உயரிய நெறி.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே (திருமந்திரம் : -1857) என்று திருமூலர், மன்னுயிர்க்குச் செய்தல் மகேசனைச் சென்று சேரும் என வலியுறுத்துகிறார்.
 
சைவசித்தாந்தம் என்னும்  அற்புத நெறி, சைவ சமயத்தின்உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

இறைவன், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறான். என்பதே சைவசித்தாந்தக் கொள்கையாகும்.
இது, பசு ( ஆன்மா), 

பதி (இறைவன்), 

பாசம் (ஆணவம், கன்மம்,மாயை எனப்படுகிற‌ மும்மலங்கள் அதாவது குறைபாடுகள்) என்கின்ற முப்பெரும்  உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.
இதில், நான், எனது எனும் கருத்தே ஆணவம். 

கன்மம் என்பது செயல்கள்(வினை) மற்றும் அவற்றின் விளைவுகள்,(வினைப்பயன்கள்).வினைகளில் மூவகை உண்டு. அவை.

1.சஞ்சிதம் (பழ வினை), 2. ஆகாமியம் (வினைப்பயனை அனுபவிக்கும் பொழுதுஏற்படும் வினைப்பயன்கள்) 3.பிராரத்தம் (இப்பிறவியில் செய்யும் செயல்களின் வினைப்
பதிவுகள் )ஆகும்.

மாயை ‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது. சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்ற‌ன.


ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.  (திருமந்திரம்-எட்டாம் ந்திரம்)


 அரிசியைதவிடுஉமிமுளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவைஆணவம்

கன்மம்மாயையாகிய முக்குற்றங்களும்சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
சிவனார் ,ஆன்மாக்களின் முக்குற்றங்களை நீக்கி, சிவ சாயுஜ்ய நிலையை அடையச் செய்வதற்காகச் செய்யும்,தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ,அருளல் என்று ஐவகைப்படும்

படைத்தல்: முழு முதல் பிரம்ம நிலையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தல். (தனு ‍= உடல் ,கரணம் ‍= மனம் முதலிய கருவி, புவனம்= நாம் காணும் இந்த உலகம்,  போகம் அனுபவிக்கப்படும் பொருள்).
காத்தல்: படைத்தவற்றைக் காத்தல்.
அழித்தல்: படைத்தவற்றை,முழு முதல் பிரம்ம நிலையில் ஒடுக்குதல்,
மறைத்தல்: ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல்.
அருளல்: ஆன்மாக்களின் பாசத்தினை நீக்கி, சிவதத்துவத்தை உணர்த்துதல்.

சித்தம் சிவமாகி செய்வதெல்லம் தவமாகிய சிவனடியார்கள் எண்ணற்றோர். சிவனடியார்கள் சிலரைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

மெய்கண்டார்.:

சைவ சித்தாந்த நூல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது சிவஞான போதம். இந்த ஒப்பற்ற நூலை உலகுக்குத் தந்தவர் மெய்கண்ட தேவர். புறச்சந்தானக் குரவர்கள் நால்வருள் (மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார்)  முதன்மையானவர் இவர். சைவ சமயத்துக்கான குரு மரபையும், சைவ சித்தாந்த சாத்திரத்தையும் உருவாக்கியவர் இவரே. இவரது காலம் கி.பி. 13ம் நூற்றாண்டின் முற்பகுதி.

(சந்தானக் குரவர்கள், ஒருவருக்கொருவர், குரு சீட உறவு கொண்டோர். மடங்களை ஸ்தாபித்து, அதன் மூலம் சைவ சமயம் தழைக்கச் செய்த பெருமையுடையவர்கள்)

திருவெண்ணெய் நல்லூரில், அச்சுதக் களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். குழந்தைப் பேறின்மையால் வருந்திய அவர், அவர்தம் குருவாகிய சகலாகமப் பண்டிதரை சென்று பணிந்தார். பண்டிதர், திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார். அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய 'கண்காட்டும் நுதலானும்' என்று தொடங்கும் திருவெண்காட்டுப் பதிகத்தில், இரண்டாம் பாடலான, "பேயடையா பிரிவெய்தும்;" எனத் தொடங்கும் பாடல் வந்தது. ஆகவே, அவர், அச்சுதக் களப்பாளரையும், அவர் மனைவியையும், திருவெண்காட்டுக்குச் சென்று, அங்குள்ள மூன்று குளங்களில் நீராடி, இறைவனாரைப் பூசித்து வரச் சொன்னார்.

'இப்பிறவியில் உங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லையாயினும், சம்பந்தனின், பதிகத்தின் மேல் கொண்ட நம்பிக்கைக்காக, ஞானக்குழந்தை ஒன்றை அருளுவோம்' என்று கனவில் சிவனார் உரைக்க, அதன்படி, இறையருளால், ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றார் அச்சுதக் களப்பாளர். இறைவன் திருநாமத்தையே, சுவேதவனப் பெருமாள் என்று குழந்தைக்குச் சூட்டினார். ஒருநாள், தன் தாய் மாமனின் இல்லத்தின் வெளியே, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாளை, ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த, அகச் சந்தானக் குரவர்கள் நால்வருள் (திருநந்திதேவர், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர்) ஒருவரான‌ பரஞ்சோதி முனிவர் கண்டு, கீழிறங்கி வந்து, அவருக்குச் சிவஞான சூத்திரங்களையும் மெய்ஞ்ஞானத்தையும் அருளிச் செய்தார். அவருக்குத் தம் குருவின் பெயரான சத்திய ஞான தரிசினி (''மெய்கண்டார்' ) என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

மெய்கண்டார், தம் குரு அருளிய சிவஞானசூத்திரங்களைத் தமிழில் 'சிவஞான போதம்' என்ற பெயரில் அருளினார். 

தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்'
பின்னை மறத்தல் பிழையல் அது -------முன்னவனே
தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே 
மானே தொழுகை வலி. (மெய்கண்டார், சிவஞான போதம்)

இந்தப் பாடலில், ' தன்னுள் இருந்து, தன் அம்சமாகவே அனைத்தையும் படைத்த சிவனாரை, மறவாது ஏத்துதல் பிறவிக் கடன்' என்பதைத் தெள்ளென உணர்த்துகிறார் மெய்கண்டார்.

ஒரு நாள், மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார் மெய்கண்டார். அவரது குல குருவாகிய சகலாகமப் பண்டிதர் அதைக் கண்டு, மனம் பொறாது, அவரிடம் சென்று, 'ஆணவமாவது யாது?' என்று கேட்க, அதற்கு அவர், எதுவும் பேசாமல், விரல்களால் பண்டிதரைச் சுட்டிக் காட்டினார்.

உண்மை உணர்ந்த பண்டிதர், மெய்கண்டாரின் கால்களில், வீழ்ந்து பணிந்தார். மெய்கண்டார்,அவருக்கு 'அருணந்தி சிவம்' எனும் தீக்ஷா நாமம் தந்து சீடராக ஏற்றுக் கொண்டார்.  அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, சிவஞான சித்தியார் எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார்.


வாழ்வியல் நெறிகளில் ஒழுகுவதோடு, இறைவனைப் பூசை செய்யும் அவசியத்தை, சிவஞான சித்தியாரில் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.



காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
 மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
 வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
 பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே" (சிவஞான சித்தியார்)

அதிபத்த நாயனார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அதிபத்த நாயனார். இவர், நாகையின் கடலோரப் பகுதியான, நுளைப்பாடியில் பரதவர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானிடத்தில் மாறாத பக்தி கொண்ட சிறந்த சிவனடியாரான இவர் அக்குலத்துத் தலைவரும் ஆவார். 

அனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்.  (சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், அதிபத்த நாயனார் புராணம்)

அவர், தினந்தோறும் பிடிக்கப்பட்டு வரும் மீன்களில் சிறந்த மீனொன்றை, "இது தில்லைக் கூத்தாடும் இறைவனுக்காக" என்று மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதைப் பலகாலம் செய்து வந்தார். ஒரு நாள் ஒரு மீன் மட்டுமே அகப்படினும், அதையும் இறைவனுக்கே என்று கடலில் விட்டுவிடுவார்.

இவ்வாறிருக்க, இறைவன், அடியவர் பெருமையை உணர்த்தத் திருவுளம் கொண்டு, பலநாட்கள் ஒரு மீன் மட்டுமே கிடைக்கச் செய்தார். அதையும் அதிபத்தர், கொள்கை மாறாது, மீண்டும் கடலிலேயே விட்டு வந்தார். தன் பெருஞ்செல்வம் சுருங்கி வறியவர் ஆன போதும் அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. 

மீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார். (திருத்தொண்டர் புராணம்)

ஒரு நாள், இறைவன், பொன்னும் மணியும் பதித்த, விலை மிகுந்த அற்புதத்தன்மையுள்ள ஒரு மீன் மட்டும், அதிபத்தருக்குக் கிடைக்கச் செய்தார். ஆயினும் , அதிபத்தர், கொண்ட உறுதி தவறாது, அதனையும் கடலிலேயே விட்டு விட்டார். அவ்வாறு அவர் செய்ததும், பொன்னாசை இல்லா, கொண்ட கொள்கையிலே தளராத உறுதிப்பாட்டுடைய அதிபத்தர் முன், இறைவன், நந்திதேவர் மேல் எழுந்தருளினார்.

அப்போது,  ஐந்து விதமான தேவ‌ வாத்தியங்கள் ஒலித்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். எம்பெருமானார்,பக்தியிற்ச் சிறந்த‌ அடியவருக்கு, சிவ சாயுஜ்ய பதவி அருளினார்.

பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார். (திருத்தொண்டர் புராணம்)

சிவனாரின் மற்றொரு திருவிளையாடலைப் பார்க்கலாம்.

குசேல வழுதிப் பாண்டியன, இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த பாண்டிய மன்னன். அதன் காரணமாக ஆணவம் மிகக் கொண்டிருந்தான். அச்சமயம், இடைக்காடர் எனும் புலவர், தான் இயற்றிய பிரபந்த நூலை, மன்னன் முன் படித்துக் காட்ட வந்தர். மன்னன், நூலை வாசிக்கச் சொன்னாலும் அவன் மனம் அதில் இல்லை. தேவையற்ற இடங்களில் 'மிக நன்றாக இருக்கிறது' என்று ஒப்புக்குச் சொன்னான். இடைக்காடர், மனம் நொந்தார். அவையிலிருந்து, நேரே, சோமசுந்தரக்கடவுள் உறையும் ஆலயத்திற்குச் சென்று,அவரிடம் மனம் பொறாது, தன் வேதனைகளைக் கொட்டினார். 

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே  தன்னைச் சார்ந்தோர் 
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார்   வேம்பன் 
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன்  என்று புகலக் கேட்டுச் 
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி  
(பரஞ்சோதி முனிவர், திருவிளையாடற்புராணம், இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்)

பக்தரை மதிக்காத மன்னனைத் திருத்த, மறைகாணா திருவடிகளுடையோன் திருவுளம் கொண்டான். மறுநாள், திருச்சன்னதி திறந்தபோது அனைவரும் அதிர்ந்தனர். இறையனார், மீனாட்சி அம்மை இருவரது விக்கிரகங்களையும் காணவில்லை. மன்னனுக்குச் செய்தி போயிற்று. அவன் பதறி, அழுது, தொழுதான். அப்போது, வைகையின் தென்கரையில் புதிதாக ஒரு மண்டபம் தோன்றி அதில் சிவலிங்கம் இருக்கும் செய்தி மன்னனிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அசரீரி மூலமாக, சிவனார்."குசேலவழுதி, என் பக்தனை அவமதித்துப் பெரும்பிழை செய்தாய். பக்தர்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். இந்த மதுரையில் உள்ள பல சுயம்புலிங்கங்களுள், வட திசை அதிபனான குபேரன் பூஜித்த இந்த லிங்கத்தைத் தேர்ந்தெடுத்து நான் ஐக்கியமாகியுள்ளேன்." என்றார்.
ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ தேனும் 
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு 
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே 
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் 
                              வந்தேம் என்னா. (திருவிளையாடற்புராணம்)

 உண்மை உணர்ந்த பாண்டியன், இடைக்காடருக்கு விழா எடுப்பதாக வாக்களித்து, மன்னிப்பு வேண்டினான். இறைவன் மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளுவதாகவும், குபேரலிங்கம் உள்ள இடம் வடதிருவாலவாயாக விளங்கும் எனவும் வரமளித்தார். 

ஈசன் அனைத்துயிர்க்கும் நேசன். புராணங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம், மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி, நல்வழி நடக்கச் செய்வதே. நிஜமென்று போற்றினாலும், கதையென்று கருதினாலும் அவை கூறும் உட்பொருள் உணர்தல் உலக வாழ்வுக்கு நலம் பயக்கும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 






அனைவருக்கும் பொதுவானது எது?
ஆக்கம்: கே முத்துராமகிருஷ்ணன், லால்குடி
கலியுகம் வந்துவிட்டதற்கு அடையாளம் சொல்லும் போது பல அடையாளங்களில் ஒன்றாக 'கலியுகத்தில் உணவு காசுக்கு விற்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதாம்.

உணவை விற்பது என்பது நமது நாட்டு வழக்கம் அல்ல.உணவு என்பது பசியுள்ள அனைவருக்கும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல், கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் நாட்டு மரபு.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்பது நமது அடிநாதம்.

'அற்றார் அழிபசி தீர்த்தல்', 'வறியார்க்கு ஈதல்', 'விருந்து எதிர் கோடல்' என்பவையெல்லாம்  நமது பண்பாடு.

இவை மதம் நமக்கு இட்டுள்ள கடமையோ அல்லது கட்டுப்பாடோ அல்ல.
'இவற்றை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை' என்பது போன்ற
பயம் காட்டுதல் எதுவும் இல்லாமலேயே நமது மக்கள் இயல்பாக, இவற்றைச் செய்கிறார்கள்.அவர்களுக்கு இப்படிச் செய்வதால் தங்களுக்குப் புண்ணிய்ம் கிடைக்கும் என்ற 'குறிஎதிர்ப்பு',எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

மற்றவர்கள் காணத் தான் மட்டும் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என்று குழந்தையில் இருந்து கற்பிப்பது நமது வழக்கம்.

காக்காக்கடி கடித்து கம்மர் கட்டைப் பங்கு போடுவது நமது விளையாட்டு.

நமது நாட்டில் பேச்சு துவங்கும் முறையே 'சாப்பிட்டாச்சா?' 'என்ன சாப்பாடு?''என்ன சமையல்?'என்பதாகவே இருக்கும்.

இதுவே வெளிநாட்டுக்காரரகள் தட்ப வெப்ப நிலை பற்றிப் பேசி பேச்சைத் துவக்குவார்கள்.

ஐந்து பிள்ளைகளை வளர்க்கும் விதவை ஏழை அன்னை, ஆறாவதாக குப்பைத் தொட்டிக் குழந்தையையும் தன் குடிசையில் சேர்த்துக் கொள்வது இங்கேதான் நடக்கும்.

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்பது தான் நமது லட்சியம்.

"தனி மனிதனுக்கு உணவு இல்லயெனில்...." என்று சிந்திப்பதும் நாம் தான்.

"வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்?" என்று சொல்லக் கொதிப்பதும் நாம் தான்.

மாதுளங் காய்களை அணில் கடிக்காமல் இருக்கத் துணி கட்டப்பட்டது.எல்லாக் காய்களிலும் கட்டியாச்சா என்று இளம் பண்ணையார் வந்து மேற்பார்வை பார்த்தார்.அந்த வாலிபப் பண்ணையாரின் கொள்ளுப் பாட்டியார் அங்கே வந்தார்.

"என்னடா!எல்லாக் காயிலும் துணி சுத்திப் போட்டீங்க?!  பத்து காய சும்மா உடுங்கடா" என்றார்.

"ஏன்? எதுக்கு?"

"எதுக்கு? அணில் கடிக்க‌த்தான்" என்றார்.

பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அன்னமிடுதலே நமது  இயல்பு.

இதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.

உங்களுக்குப் பசி வந்திட்டால் எப்படி இயல்பாக உணவை நாடுவீர்களோ
அதுபோலவே பிறருக்கும் பசிவரும் என்று உணர்ந்து அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வது 'தன்ன்னுயிர் போல் மன்னுயிரையும்' கருதுதல் ஆகும்.

'எல்லோரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், அன்னத்தை இலவசமாகக் கொடுக்கக் கூடாது' என்பது வியாபாரக் கண்ணோட்டம்.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது நாகரீகம் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதால்தான்
மத மாற்றத்திற்காக உணவும்,உடையும், பண்டமாற்றாக அளிக்கப்படுகின்றன‌.

இங்கே செய்யப்படும் எந்த நற்செயலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.

ஹோட்டல், ரெஸ்டாரென்ட் என்பவை மேற்கத்திய வடிவம்.நமது நாட்டில் உணவளிக்க சத்திரங்கள் உண்டு. சத்திரத்தில் எல்லாம் இலவச உணவுதான்.

"சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பண்ண ஐயாங்கார் உத்தரவா?" என்பது ஒரு சொல்லடை.அதாவது அங்கே நிர்வாகம் ஒன்றும் தேவையற்றது என்பது கிடைக்கும் பொருள்.அப்பண்ண ஐயங்காரின் சொந்தச் சொத்துக்களை வேண்டுமானால் அவர் நிர்வகித்துக்கொள்ளலாம். பொது விஷயத்தில் தனி மனிதருக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருத்தல் என்பது நமது நாட்டு நடப்பு.

ஒரு பாரதவாசி தன் வாழ்நாளில் சஹஸ்ர போஜனம்(ஆயிரம் உணவு) செய்விக்க வேண்டும் என்பது  எழுதப் படாத எதிர்பார்ப்பு. அதனால்தான் திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.

"படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு இங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக்கோயில்  பகவர்க்கு அது ஆமே" என்பது திருமந்திரம்.

ஆண்டவனுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்தைக் காட்டிலும், அடியவர்க்கு அளித்தல் உகந்தது என்பது பெறப்படுகிறது.

அதாவது ஆண்டவனும் அடியவரும் ஒருவரே என்பதான பாவம் நமக்கு வர வேண்டும்.

"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே."

இதுவும் திருமூல நாயனார் அருளியதுதான். ஒரு விலவதளம் ஆண்டவனுக்கு, பசுவுக்கு ஒரு பிடி அகத்திக்கீரை,தான் உண்ணும் போது ஒரு கைப்பிடி அன்னமோ, அரிசியோ தானம் செய்வது எல்லோருக்கும் எளிதானது.இம்மூன்றையும் செய்யமுடியாதவர்கள் பிறருக்கு இனிமையான சொற்களையாவது சொல்லலாம். குறைந்த அளவாக நமது மரபுகளின் உட்பொருளை அறிந்து கொள்ளாமலே அவற்றை விமர்சிப்பதையாவது தவிர்க்கலாம்.

"ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின்..."

பசி அனைவருக்கும் பொது. இதில் ஏழை பணக்காரன், உடல் ஊன முற்றவன் என்ற பாகுபாடு இல்லாமல் உணவு இடுவோம்.

நாம் உணவளிப்பதால் எல்லோரும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்பதெல்லாம் அதீத கற்பனை. அந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பது ஒரு கடவுள் சேவை. அதனை செய்ய முற்படுவோம்.

(சென்ற மலரின் தஞ்சாவூராரின் இடுகையின் தாக்க‌த்தல எழுந்த எண்ணங்கள்)

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(லாலகுடி)

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

நாட்டுப்பாடல்
எடுத்துக்கொடுப்பவர்: தேமொழி

[புலிகட் தனுசு அவர்கள் சென்றவார மாணவர் மலரில் கொல்லிமலை அழகி ஒருத்தி தன் வில்லாளன் வருகைக்கு காத்திருப்பதை "காத்திருப்பில் கலங்காதே" என்று கவிதையாக வடித்திருந்தார்.  அதைப் படித்த எனக்கு ஒரு நாட்டுப்புற பாடல் நினைவில் வந்தது.  இந்தப் பாடல் அந்தப் பெண் வில்லாளனுக்கு பாடும் 'எசப்பாட்டு' போன்று அமைந்த பாடல்.  நீங்களும் அதன் பொருத்தத்தை உணர்ந்து வியப்பீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.]

விளக்கம்:
அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான்.  அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.

பெண் :    
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?

சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நின்னு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து

வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை

போலீசு வேட்டி கட்டி
புதுமலைக்குப் போறவரு
போலீசு வேட்டியில
போட்டு விட்டேன் மேவிலாசம்
கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்

துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம் பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?


வட்டார வழக்கு:
வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்;
கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?;
மேவிலாசம்-மேல்விலாசம்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி
சேகரித்த இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
பக்கம் 113

பேராசிரியர் நா. வானமாமலை,எம் ஏ.,எல்.டி. யின்
"தமிழர் நாட்டுப்பாடல்கள்"
(மூன்றாம் பதிப்பு, 1976)
இது ஒரு நாட்டுடமையாகப்பட்ட நூல் 
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 4
வரைபடம்: கிராமத்துப்பெண்
ஆக்கம்: தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

படத்திற்கான கவிதை
ஆக்கம்: தனுசு


 படம்: நன்றி-தினமலர்-27-04-2012

கண்ணாபுரம் காளி
ஆக்கம்: தனுசு
---------------------
சூரக்கோட்டை
சிங்கம் வாராடா
சிதறி ஓடு
சிறுத்தை வாராடா
விலகி நில்லு
வேங்கை வாராடா-இவள்
வரிப்புலி வம்சம் தானடா.

ஆடிச்சி புடிச்சி
ஆட வராடா
அடங்காத காளையை
மடக்கி புட்டாடா
உறிச்சி மேய
கொண்டு போராடா
உறுமி அடிச்சி
அனுப்பி வையடா

திமிலை பெறுத்து
ஒன்னும் இல்லைடா-இவள்
திமிருக்கிட்ட
தோத்து போகுண்டா
கொம்பு சீவி
கொண்டு வந்தாண்டா-இவள்
தெம்பு முன்னே
மூட்டி போடும்டா.

சூடம் ஏற்றி
கொளுத்தி கொண்டாடா
திருஷ்டி சுற்றி
பொட்டு வையடா
குத்து விளக்கு
பரிசு கொண்டாடா
கொட்டமடிக்க
ஊரைக்கூட்டடா

காங்கேயம்
அடக்கி வாராடா
தில்லிருந்தா
துணிந்து நில்லடா
பல்லெகிரும்
பார்த்து நில்லுடா-நம்ம
கண்ணாபுரம் காளி இவடா
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

ஏன் உதிர்ந்தாய் பூவே
ஆக்கம்: தனுசு

நான் ரசித்த பூவே
விழியால் ருசித்த பூவே-என்
மனதில் வேர்விட்ட செம்பருத்திப் பூவே!
ஏன் உதிர்ந்தாய் இன்று.!

உன் ஜோடிப்பூவை யாரும் பறித்தாரா?-உன்
நாடிப்பிடித்து முகர்ந்தாரா?
கண்வைத்து பெண் பூக்கள்
திருஷ்டி போட்டாரா!

வாடை காற்று தொட்டதா?
கோடை வெயில் சுட்டதா?
மழைச்சாரல்  பட்டதா?
மிண்ணல் உன்னை கண்டதா?

பட்டாம் பூச்சி முறைத்ததா?
பச்சை இலை மறைத்ததா?
வண்டு உன்னை மொய்த்ததா?
தேன் குடித்து சென்றதா?

நிலவு கோபம் கொண்டதா?
இரவு துணை போனதா?
பனியும் விழ மறுத்ததா?
மழலை கைகள் கிள்ளியதா?

உன் மரக்கிளையில்
குடியிருந்த குருவி
குடிபெயர்ந்து சென்றதா?-நீ
மணம் உடைந்து விழுந்தாயா?

உன்னைவிட அழகாய்
என்னோடு வரும் என் காதலியின் அழகை பார்த்து
வெட்கப்பட்டாயா?-அதனால் நீ
உன்னையே சிதைத்துக் கொண்டாயா?

-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
 நகைச்சுவை
அலுவலகம் புதுப்பிக்கப்படுகிறது
ஜி.ஆனந்தமுருகன்



இன்றைய நிலையில் வழிபாடு
ஜி.ஆனந்தமுருகன் 


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

7.4.12

இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்

மாணவர் மலர்!

 இன்றைய மாணவர் மலரை ஐவரின் ஆக்கக்ங்கள் அலங்கரிக்கின்றன!
படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
பக்தியின் மேன்மை!
ஆக்கம் பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு

இறைவன்பால் மனித உயிர்கள் கொண்டுள்ள அன்பே பக்தி. பக்திஏற்படவும், அந்த பக்தி உறுதியாக, நம்பிக்கையோடு இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஸ்ரீ நாராயண பட்டத்திரி 'ஸ்ரீமந் நாராயணீயத்தில்', " பக்தி என்பது முழுமையாக இருக்க வேண்டும், அதனை விடுத்து, அந்த பக்தியானது, துயரங்களை நீக்குமா என்று ஆராய்ந்தால், உனது வாக்கான, கீதையும், வேதங்களும், தெருவில் போகும் வழிப்போக்கன் ஒருவன் கூறியது போல் அல்லவா ஆகிவிடும்? என்று குருவாயூரப்பனிடம், முழுமையான பக்தியை வேண்டுகிறார்.

பக்தியைப் பொறுத்தவரை மர்க்கட நியாயம், மார்ஜால நியாயம் என்ற இருவகையைக் கூறுவதுண்டு. மர்க்கடம் என்றால் குரங்கு. குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குரங்குக்குட்டி தாயை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும். குட்டி பிடியை விட்டால் தாய் எதுவும் செய்ய இயலாது. பக்தியில் அகங்கார, மமகாரங்கள் இருந்தால், நான், எனது என்ற எண்ணம் கலந்து பக்தி செய்தால் இந்த நிலை. இதில் இறைவன் அருள் கிடைப்பது கடினம்.

மார்ஜாலம் என்றால் பூனை. பூனை, தன் குட்டியைத் தன் வாயால் கவ்வி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வைக்கும். அதே போல், பக்தன் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பிறஉயிரையும் தன் உயிர்போல் பாவிக்கும் உயர் நிலை அடையும் போது, பக்தனின் முழுப் பாதுகாப்பையும். இறைவனே எடுத்துக் கொள்கிறான். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்பது கீதாசார்யனின் திருவாக்கு. பக்தியின் இவ்விரு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஆதிசங்கரர் காலத்தில், நமது வைதிக சமயத்தில் இருபெரும் பிரிவுகள் இருந்தன. அவை
1. பூர்வ மீமாம்சை,
2. உத்தர மீமாம்சை என்பன.

பூர்வ மீமாம்சை, மனிதர்களுக்கு, யோகம் ஞானம் போன்றவை தேவையில்லை. பூஜை, ஹோமம், சடங்குகள் மூலம் தேவர்களைத் திருப்தி செய்தால், கோரிய பலன்களைப் பெறலாம் அதுவே போதும் என்ற கருத்துடையது. இதுவே பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கியது.

'உத்தர மீமாம்சை, இறைவனொருவன் இருக்கிறான். சடங்குகளோடு, யோகம், ஞானம் இவற்றின் மூலமாக, அவனை அடைவதே மனிதப் பிறவியின் பயன் என்ற கருத்துடையது. பூர்வ மீமாம்சை வேதத்தின் 'கர்மகாண்டம்' எனவும் உத்தர மீமாம்சை 'ஞான காண்டம்' எனவும் அறியப்பட்டன.

பூர்வ மீமாம்சையின் முக்கிய குரு, குமாரில பட்டர். இவர் அதன் கொள்கைகளை ஒழுங்குபடுத்தி பிரசாரம் செய்ததால் அது 'பாட்டமதம்' எனவும் பெயர் பெற்றது. அக்காலத்தில் பௌத்தம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. தர்க்கநூல் முறைகளில் அவர்கள் திறமையானவர்களாக விளங்கினர்.அதன் கொள்கைகளை அறிந்து கொண்டுஅவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து பட்டர் அதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது, அவர்கள் தன் மதத்தைக் குறைகூறும் போதெல்லாம், பட்டரின் கண்ணிலிருந்து நீர் பெருகும். அதைப் பார்த்து அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்கும் போதெல்லாம், 'ஆனந்தக் கண்ணீர்' என்று பட்டர் சமாளித்தாலும் அவர்கள் சந்தேகம் தீரவில்லை.

ஒருநாள் பட்டரை ,மற்ற பௌத்தர்கள் ஏழாவது மாடிக்குக் கூட்டிபோய் அங்கிருந்து அவரைத் தள்ளி விட்டார்கள். அப்போது அவர், 'வேதங்கள் பிரமாணம் என்பது உண்மையானால் எனக்கு ஒன்றும் நேரக்கூடாது' என்று சூளுரைத்தார். அதன்படி அவருக்கு ஒன்றும் நேரவில்லை. ஆனால், ஒரு சிறு கல் குத்தி அவரின் ஒரு கண் பார்வையிழந்தது. 'எனக்கு ஏன் இந்தக் கதி?' என்று அவர் அரற்றியபோது, ஒரு அசரீரி எழுந்தது. ''குமாரில பட்டா, வேதங்கள் பிரமாணமே என்று நீ கூறியிருந்தால் உனக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. மாறாக பிரமாணம் என்பது உண்மையானால் என்று சற்று சந்தேகம் தொனிக்கக் கூறியதால் இவ்வாறு நேர்ந்தது" என்று கூறியது. பக்தியில் சிறு சந்தேகமும் பெரிய இடரைத் தரும்.

இவரைப் பிற்காலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் வாதில் வென்றார்.

ஆதிசங்கரரின் சீடரான ஸ்ரீ பத்மபாதருக்கு, ஸ்ரீ நரசிம்ம மந்திரம் உபதேசமாகியிருந்தது. அதில் சித்தி அடைய வேண்டி, ஒரு கானகத்தில் தனிமையில் அமர்ந்து அவர் அதை ஜபம் செய்யலானார்.அப்போது அங்கு வந்த ஒரு வேடன் தனிமையில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, "ஸ்வாமி, கொடும் மிருகங்கள் உலவும் இந்தக் கானகத்தில் இவ்வாறு அமர்ந்திருக்கக் கூடாது, எதற்காக இவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள். போய்விடுங்கள்", என்று கூறினான். பத்மபாதரோ, ஒரு வேடனுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று நினைத்து, ' நான் ஒரு அதிசய மிருகத்தைத் தேடி வந்திருக்கிறேன். அது இங்கே தான் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்காக அமர்ந்திருக்கிறேன் என்றார். வேடன் அதிசயித்து, 'இந்தக் கானகத்தில் எனக்குத் தெரியாத மிருகமா? நீங்கள் அடையாளம் சொல்லுங்கள், நான் பிடித்துத் தருகிறேன்' என்றான். அவன் போனால் போதும் என்று பத்மபாதரும், 'சிங்கத் தலையும் மனித உடலும் உள்ள விசித்திர மிருகம் அது ' என்றார்.

வேடன் 'நான் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அதைப் பிடித்து வருகிறேன்' என்று கூறிவிட்டுத் தேடப் புறப்பட்டான். கானகமெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. 'அந்தப் பெரியவர் உண்மையைத் தான் கூறுவார்' என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆதலால் உணவின்றி, நீரும் அருந்தாமல் தேடினான். மாலையும் வந்தது. 'கிடைக்கவில்லை' என்று அந்தப் பெரியவரிடம் எப்படிப் போய்ச் சொல்வேன், அவர் என்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருப்பாரே!!' என்று வருந்திய அவன், 'அப்படிச் சொல்வதைவிட மரணமே மேல்' என்று காட்டுக்கொடிகளால் கழுத்தை இறுக்கிக் கொள்ள முற்படும் போது, இடி இடிப்பதுபோல் பெருமுழக்கம் கேட்டது. ஆதிமூலமான இறைவன், ஸ்ரீ நரசிம்மர், அவன் முன் தோன்றினார்.

உடனே அவன், " வந்து விட்டாயா, உன்னை எங்கெல்லாம் தேடுவது, உன்னை என்ன செய்கிறேன் பார்!!!, என்று கூறி, கொடிகளால் அவரைக் கட்டினான். 'அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை' யான ஹிரண்ய சம்ஹார மூர்த்தி ,சாதுவாக அவனுக்குக் கட்டுப்பட்டார். அவரை பத்மபாதரிடம் அழைத்துச் சென்று, 'பாருங்கள், பிடித்து விட்டேன். இப்படி மூக்கைப் பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தால் எப்படிக் கிடைக்கும்? நான் பிடித்துவிட்டேன். நீங்கள் சொன்ன மிருகம் இதுதானா என்று பாருங்கள்' என்றான். பத்மபாதருக்கு கொடிகளால் கட்டப்பட்டிருக்கும் பகவானைத் தெரியவில்லை. அவர் பிரமித்து நின்றிருந்த போது, நரசிம்மரின் கர்ஜனை கேட்டது. 'முழு நம்பிக்கையுடன் தேடியதால், இவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். பக்தியில் சந்தேகம் கூடாது. இவனின் சம்பந்தம் இருந்ததால்தான் என் குரலையாவது கேட்கிறாய், காலம் வரும்போது நான் உனக்குக் காட்சியளிப்பேன் என்று கூறி மறைந்தார். சரணாகத வத்சலனான இறைவன், தன்னையே கதி என்றிருப்போருக்குக் கட்டாயம் அருளுவான்.

ஸ்ரீ நரசிம்மரின் அவதாரத்துக்குக் காரணமே, ஒரு சிறுவனின் பரிபூரண சரணாகதி அல்லவா?.'மார்ஜால நியாயத்'துக்கு மிகச் சிறந்த உதாரணம் பக்தர்களில் சிறந்தவன் என்று போற்றப்படும்பிரகலாதனே.பிரகலாதனின் பெருமையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்ப இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறார்.

'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்

பிரகலாதனின் பரிபூரண சரணாகதி பகவானின் அவதாரத்துக்கே வழிவகுத்தது. அசுர குல வேந்தன் ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் கருவிலேயே எட்டெழுத்து மந்திரத்தை முற்றும் உணர்ந்தவன். தன் தந்தையின் நாமத்தையே அனைவரும் உச்சரித்திருந்தபோது, உலகத் தந்தையாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தின் பால் அளவிலாத பற்றுக் கொண்டிருந்த பிரகலாதன், தன் குருகுலத்தில் நாராயணனின் நாமத்தின் பெருமையைக் கூறுவதை, கம்பர்,

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

என்று அழகுறக் கூறுகிறார். தன் தந்தை தன்னைப் பல துன்பங்களுக்கு ஆட்படுத்திய போதும் இம்மியும் குறையாத இறைபக்திச் செல்வம் அவனுக்கு . இறுதியில், 'எங்கிருக்கிறான் உன் ஹரி?' என்று தந்தை வினவ, சிறிதும் சந்தேகம் இன்றி,

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்;

ஸ்ரீ எம்பெருமான், தன் உத்தரீயம்(அங்க வஸ்திரம்) நழுவிக் கீழே விழுவது அறியாமல் பூலோகத்துக்கு விரைந்து வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று, கஜேந்திரன் என்ற யானையின் குரல் கேட்டு. இரண்டாவது, பிரகலாதனுக்காக.

ஹிரண்யகசிபு விசித்திர வரங்கள் பல பெற்றிருந்தான். தனக்கு, மனிதனாலோ, மிருகத்தாலோ மரணம் ஏற்படக்கூடாது. அது போல், வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, பகலிலோ, இரவிலோ, எந்த வித ஆயுதத்தாலோ மரணம் கூடாது என்பது அவன் வரம்.

இறைவன் வெகுவேகமாக பூலோகம் வந்தார். எந்தத் தூணை அவன் பிளப்பான் என்று அறிந்திருந்தாலும், எல்லாத் தூணிலும் ஆவிர்பவித்தார். கடும் கோபம்,சீற்றம் எல்லாம் சேர்ந்து, ஹிரண்யன் தூணைப் பிளந்த போது, அதைவிட,ஆயிரமாயிரம் மடங்கு ஆற்றலுடன், பெரும் சினமே உருவெடுத்தாற்போல்,

திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

ஹிரண்யனோடு போர்புரிந்து வென்றார். அவன் வரத்தின்படி, மனிதனுமல்லாத, மிருகமுமல்லாத நரசிம்ம உருவில், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத, வாசற்படியில் அமர்ந்து, பூமியிலோ ஆகாயத்திலோ அல்லாமல் தன் மடியில் அவனை வைத்து, பகலும் இரவும் அல்லாத சந்தியாவேளையில் தன் நகங்களையே ஆயுதமாகக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தருளினார்.பின் கோபம் தணிந்து, பிரகலாதனின் குலத்தினரைக் இனிக் கொல்லுவதில்லை என வரமளித்தார்.

கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; (கம்ப இராமாயணம்)

அதனாலேயே, பிரகலாதனின் பேரனான, மஹாபலியை, தன் திருவடியைத் தலையில் வைத்து பாதாள உலகத்துக்கு அனுப்பினார்.

மார்ஜால நியாயத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

அங்கயற்கண்ணியும் ஐயனும் ஆறாறு மாதம் அரசாட்சி செய்யும் அழகுமிகு மதுரை. வரகுண பாண்டியன் அரசாட்சியில் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்திருந்த காலத்தில், பொல்லாத வேளை, ஹேமநாத பாகவதர் உருவத்தில் மதுரையில் நுழைந்தது. அரசவையில் தன் இசைமழையைப் பொழிந்து, அதன் காரணமாக‌, மன்னனும் மற்றவரும் இன்புற்றிருந்த போது, ஹேமநாதன், பாண்டிய நாட்டுப் புலவர்களை இசைவாதுக்கு அழைத்தான். தான் தோற்றால், தானும் தன் இசைத் திறமையும் பாண்டியநாட்டுக்கு அடிமை எனவும், வென்றால், பாண்டிய நாடே தனக்கு அடிமை எனவும் பந்தயம் வைத்தான்.

அரசன் திகைத்தான். எனினும் ஒப்புக்கொண்டான். அரசவைப்புலவர்கள் போட்டியிடத் தயங்கியதால், இறையருள் வெல்லட்டும் என்று, புலவர்கள் ஆலோசனைப்படி, இறையருட் செல்வரான, பாணபத்தரை அழைத்து, பாடப் பணித்தான்.

பத்தர், அதிர்ந்தார். அரசவைப்புலவர்கள் இருக்க, இறைவன் முன் பாடும் தன்னை அழைத்ததற்குக் காரணம், புலவர்களின் யோசனையே என அறிந்து வெகுண்டார்.

மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது. (நன்றி. கவிஞர் தனுசு.)

என்று கலங்கினார். முடிவில் அரசன் வேண்டுகோள் ஆணையாக மாறவே, ஒப்புக்கொண்டு இருப்பிடம் ஏகினார். இறையருள் ஒன்றே இதிலிருந்து தன்னைக்காக்கும்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே
என்று தெளிந்து, திருக்கோவில் சென்று, ஆலவாய் அண்ணலின் சன்னதியின் முன் நின்று, மனங்குமுறி,

சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த
ஆதி அந்தமில்லா அமுதே!

என் துயர் தீர்த்து வைப்பாய்!! என்று கதறினார்!!!.

அமுதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்டே
குமுதவல்லி தொழும் தேவனே! (நன்றி. கவிஞர். திரு.ஆலாசியம் அவர்கள்)

என் குறை தீர்க்க ஓடோடி வாராயோ என்று பொற்றாமரைக் குளத்துப் படிகளில் அமர்ந்து உருகினார்.

'நின்னருளாங்கதியின்றி மற்றொன்றில்லேன்' என்று பரிபூரண சரணாகதி அடைந்த பக்தனின் குரல் கேட்டு, பனிமலைமேல் வாழும் பரமன், பழந்தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரை வந்தான்.

சொக்க வைக்கும் அழகுடைய சோமசுந்தரர், பக்தனுக்காக, பழைய ஆடை அணிந்து பிறைச்சந்திரனை அரிவாளாக்கி, தன் இடுப்பில் வைத்து, தேய்ந்த செருப்பணிந்து, பழைய யாழ் ஒன்றை மீட்டியவாறு விறகு சுமந்து வந்ததை, பரஞ்சோதி முனிவர், ' திருவிளையாடற் புராணத்தில்'.

அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து அவிர் சடை அமுதம்
ஒழுக்கு வான்மதி வாங்கியே செருகியது ஒப்ப
மழுக்கு கனல் வெள் வாய்க் குயம் வலம் படச் செருகி
இழுக்கு தேய் செருப்பு அருமறை கடந்தான் ஏற்றி.

என்று விவரிக்கிறார். இரவு வரை வீதிகளில் அலைந்து பொழுதைக் கழித்துவிட்டு, இரவானதும் ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இறைவன் பாட, அதைக் கேட்ட ஹேமநாதன் அயர்ந்து போய் விசாரிக்க, தான் 'பாணபத்தரி'டம் இசை பயின்றதாகவும், தனக்கு இசை சரிவர வராததால் அவர் சொல்லிக்கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறக் கேட்ட ஹேமநாதன், அவரே மறுநாள் தன்னுடன் போட்டியிட்டுப் பாடப் போகிறார் என அறிந்து, தன் இசைத் திறமை முழுவதும் பாண்டிய நாட்டுக்கே அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இரவுக்கிரவாக ஓடி விடுகிறான்.
நடந்தவை யாவும் தன் கனவில் இறைவன் வந்து சொல்லக் கேட்டு, அரசனிடம் அறிவிக்கிறார் பாண பத்தர். 'நீயே கதி' என்று சரணடைந்த பக்தனுக்காக விறகு சுமந்த இறைவனின் திறம் எண்ணி

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே! (நன்றி. கவிஞர் திரு. ஆலாசியம்)

உன் திருவருளுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன்!!! என்று உடலும் உள்ளமும் ஆனந்தமீதுற இறைவனை வணங்கினார்.

முழுமையான பக்தி என்பது இறைவனிடம் நம்மை மனமார ஒப்படைத்தலே. இறைவன் அத்தகைய பக்தியை நமக்கு அருள அவனையே பிரார்த்திப்போம்.

பயின்மதி நீயே பயின்மதிதருதலின்
வெளியும் நீயே வெளியுறநிற்றலின்
தாயும் நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையும் நீயே முந்திநின்றளித்தலின்

(- தேசிகரின் மும்மணிக்கோவை)

என்று அந்த முழுமுதற் பரப்பிரம்மத்திடம் சரணடைவோம்.

அன்புடன்,

பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
www.aalosanai.blogspot.in
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


அம்மாஞ்சி
ஆக்கம் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

'அம்மான் சேய்'(தாய் மாமனின் மகன்)என்பதுதான் பேச்சு வழக்கில் 'அம்மான்ஜி' என்று மாறிவிட்டது.அதற்கு ஓர் அடைமொழியும் கொடுத்து 'அசட்டு அம்மான்ஜி'என்று சொல்வார்கள்.மாமனின் மகன்க‌ள் எல்லாம் இதற்காகவே ஒரு மானநஷ்ட வழக்குத் தொடரலாம். மாமன் மகன் என்றால் என்ன இளக்காரம் பாருங்கள். அத்தை மகனான அத்தான் ஒசத்தி, மாமன் மகன் மட்டமா?

மாமனின் மகளுக்கு 'அம்மங்கார்' என்று பெயர். அய்யங்காருடன் 'ரைமிங்'கா  இருந்தாலும் இது வேறு; அது வேறு!அதுபோலவே அத்தை மகள் அத்தங்கார்.

இதெல்லாம் 'அவாள்,இவாள்' சொல்லாடல். பொதுவில் பெரும்பான்மை சமூகங்களில்  எப்படி இந்த உறவு முறைகள் விளிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

'இது எதற்கு எங்க‌ளுக்கு? இளைஞர்களான எங்களுக்கு இதில் எல்லாம் அக்கறையில்லை; ஏதோ பழம் பெருச்சாளிகளுக்கான செய்திகள் இவை" என்று ஒதுங்குபவர்களுக்கு 'டாட்டா பை' சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு நான்கு தாய் மாமன்கள். அதில் ஒருவரைப் பற்றி இங்கே  சொல்ல நினைத்தேன். அவருடைய மகனான என் அம்மான்ஜியைப் பற்றியும் சிறிது சொல்வேன். விருப்பமுள்ளவர்கள் தொடருங்கள்.

என் மாமனகள் நால்வரில் இரண்டாவது மாமனைப் பற்றிதான் இந்த ஆக்கம்.

என் சிறு வயது ஆளுமைத் தாக்கங்களில் இந்த மாமனுக்கு முக்கிய இடமுண்டு.

குழந்தையாயிருக்கும் போது என்னுடைய ஒரு லட்சியம் சிதம்பரம் பேருந்து ('கொல்லப் பட இருந்த 35 வயது குழந்தை'என்ற என் ஆக்கம் 24 அக்டோபர் 2010 பார்க்கவும்) ஓட்டுனராகப் போக வேண்டும் என்பதே.அதனால் எப்போதும் பஸ் ஓட்டுவது போல, ஸ்டியரிங்கைக் கைகளில் பிடித்துள்ள பாவனையுடன்  அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருப்பேன்.

அப்படி இருக்கும் போது ஒரு நாள் இரவு வேளையில் எங்க‌ள் இல்லத்திற்கு முன்னர் ஒரு ஃபர்கோ லாரி  'க்ரும் க்ரும் க்ரும்'என்ற உறுமலுடன் வந்து நின்றது.லாரி ஓட்டுனர் இருக்கையில் இருப்பவர் முகவரி விசாரித்தார்.

"வாங்க வாங்க என் அப்பாவின் வீடுதான் அது!"என்று வரவேற்றேன்.

"ஏண்டா உன் அப்பா வீடுதான் என்றால், உனக்குத் தனி ஜாகையோ?" என்ற எகத்தாளக் கேள்வியுடன் லாரியின் உறுமலை நிறுத்தி விட்டுக் கீழே குதித்தார்.

அதற்குள் வெளியில் வந்த அம்மா, "வா வா தோதாத்திரி!செள‌க்கியமா? இது உன் மாமாடா! எனக்கு நேர் அண்ணா" என்றார்கள்.

தோதாத்ரிநாதன் என்ற பெயர் நாங்குநேரி பெருமாள் பெயர். நாங்குநேரி நெல்லை நாகர்கோவில் சாலையில் உள்ள ஒரு வைணவத் தலம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான ஊர்.வானமாமலை என்ற வைணவ மடம் அங்கு உள்ளது.

தன் அண்ணனைக் கண்ட மகிழ்ச்சி அம்மாவுக்கு.எனக்கோ 'அவ்ளோ' பெரிய லாரி வீட்டு வாசலில் வந்து நின்றது மிகப் பெரிய மகிழ்ச்சி. வெறுங்கையால் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தவனுக்கு ஈ ஓட்ட கொம்பு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.

உண்மையான ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு 'ட்ர் ட்ர் ட்ர்' என்று வாயால் ஒலி எழுப்பியபடி 'ஃபீடா' லாரி ஓட்டினேன். லாரிக்குக் கீழே நின்று கொண்டு என் தெரு நண்பர்களெல்லாம் வேடிக்கைப் பார்த்தது எனக்கு ஏகப் பெருமையாக இருந்தது.

அதில் ஒரு நண்பன் வீட்டில் ஃபியட் கார் புதிதாக வாங்கியிருந்தார்கள்.அந்தக் காரை எங்களைத் தொட விட மாட்டான் அவன். 'போடா போடா' என்று விரட்டுவான்.

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்  பூனைக்கு ஒரு காலம் வராதா? இப்போ என் முறை. அவனைக் குறிப்பாக 'லாரியைத் தொடாதே'என்று சீண்டினேன். நான் சொல்லும் நண்பர்கள் மட்டும் லாரியில் ஏறலாம். நான் 'டூ கா' விட்டுள்ளவர்கள்  லாரியை விட்டுத் தள்ளி நிற்கணும்.சில பேர் உடனே சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு 'சேர்த்தி' சொல்லி லாரியில் ஏறி விளையாடினார்கள். ஒரே 'அமளி துமளி'தான்.

'லாரி ஒசத்தியா ஃபியட் கார் ஒசத்தியா' என்ற பட்டிமன்ற‌ம் நடத்தி லாரிதான் எல்லா வகையிலும் ஒசத்தி என்று நானே நடுவராக இருந்து தீர்ப்பளித்தேன்.முக்கியமான வாதம் என்ன வென்றால் லாரியைக்கொண்டு ஃபியட் காரைமோதினால் ஃபியட் கார் அப்பளமாகிவிடும் என்பதுதான்.

மாமா அதிகம் பள்ளிப் படிப்பு இல்லாதவர்.வாத்தியார் பிள்ளை மக்கு அல்லாவா? அது இந்த மாமா விஷயத்தில் நிரூபணம் ஆயிற்று.

அக்கால வழக்கப்படி படிப்பு வராதவர்கள் ராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள். அப்படி ராணுவத்தில் சேர்ந்த மாமா 'டிரக்' ஒட்டப் பயிற்சி எடுத்து, லைசென்ஸ் பெற்று ராணுவத்தில் டிரக் ஓட்டுனராகப் பணி செய்தார்.ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்று வந்தவுடன் ஒரு ஃபர்கோ லாரியை வாங்கி ஓட்டத் துவங்கினார். 'ஓனர் கம் டிரைவர்!'

அம்மானுக்கு ஏற்ற அம்மாமி எனக்கு. சீதாலட்சுமி மாமி மாமாவைவிட படிப்புக் குறைந்தவர்கள்.பெரும்பாலும் பள்ளிக்கே அவர்கள் போயிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என் வாழ்நாளில் நான் பார்த்த அன்னியோனியமான தம்பதிகள் அவர்கள்.

கணவன் வாயைப் பார்த்துக் கொண்டு மலைத்து நிற்கும் அம்மாமியின் தோற்றம் இன்னும் என் கண்களில் நிற்கிறது.

மாமா முன்னிரவில் வீடு வந்து சேருவார். அம்மாமி அவருக்கு வென்னீரில் குளிக்க உதவியாக இருப்பார்கள்.குளியல் அறையிலேயே தன் பிரதாபங்களை அள்ளி வீச ஆரம்பித்துவிடுவார்.

"சீதே!உன் தாலிபாக்கியம்தான் நான் இன்னிக்கு உயிரோட வந்தது தெரியுமோ?"என்பார்."ஆமாம்! வாளையார் தாண்டல சீதே, நடுரோட்டில் கொம்பன் ஆனை வந்து வழி மறிக்கிறது. நா அப்படியே லாரி ஹெட் லைட்டை அணைச்சிட்டு பதுங்கிட்டேன். தும்பிக்கையை லாரிக்குள்ள விட்டு துழாவறது. ஒரு முட்டு முட்டு முட்டியிருந்தா அப்படியே விறகு லோடோட  லாரி மலையிலிருந்து உருண்டிருக்கும். எதோ உன்னோட தாலி பாக்கியந்தான் நான் தப்பிச்சு வந்திருக்கேன்"

மாமி தாலியை எடுத்து ஒத்திக்கொண்டு ஏகப்பட்ட தொண்டுகள் அவருக்குச் செய்வார்கள். நான் வளர்ந்த பிறகுதான் மாமாவின் டெக்னிக்கை புரிந்து கொண்டேன். என் மனைவியிடம் அந்த டெக்னிக் செல்லுபடியாகவில்லை. அது செல்லுபடியாக மனைவி படிக்காத நபராக இருக்க வேண்டும்.

ஒரு நாள் மாமாவிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். 'டேய்! 'சீப்டி'என்றால் என்னடா? என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. '  தெரியலையே'என்றேன். 'இதுகூடத்'தெரியாமல் என்னடா பள்ளிகூடம் படிச்சுக் கிழிக்கிற‌?' என்று போட்டு துளைத்துவிட்டார்.

நீண்ட நேர சீண்டலுக்கு பின்னர் தெரிந்தது அது 'சீ ஃப் டி'  அதாவது கன அடி; 'க்யுபிக் ஃபுட்'

என் அப்பா மாமாவிடம் 'இதுவரை எனக்கு என்னடா செஞ்சு இருக்கீங்க மச்சினன் மாரெல்லாம்?' என்று கேட்டு, மாமா செய்து வந்து கொடுத்த இரண்டு நீள பெஞ்சு (சேர்த்துப் போட்டால் கட்டில்) இதுவரை என் வீட்டில் உள்ளது .அதைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும் அப்பாவும் நினைவுக்கு வருவார்கள்.

மாமவின் மூத்த பிள்ளை பொன்னுச்சாமி. 7 மாதத்தில் பிறந்துவிட்டான். அதனால் அவன் நீண்ட வருடங்கள் சாதாரணக் குழந்தைகளைப்போல வளர்ச்சி அடையவில்லை. என்னைவிட 2 வயதுதான் இளையவன். அவனை வாழை மட்டையில் வைத்து வளர்த்தார்களாம்.

அவனுடைய மிகச்சிறிய உடம்பைப் பார்த்து நான் எலிக்குட்டி என்று பயப்படுவேனாம்.சித்தி சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள்.

அவனுடைய‌ மொழியை அவன் தாயாரை காட்டிலும் என் சித்திதான் நன்கு புரிந்து கொள்வார்கள்.

'அந்தக்கப் பியா சக்கப்பியா ஆஆ ஆ ஆ!"என்றால் சக்கைப்பழம் அதாவது 'பலாப்பழம் வேண்டும்'என்று பொருள்.

'சா பூ செபா' என்றால் 'சாதம் போடு செம்பா'. சித்தியின் பெயர் செம்பா என்ற செண்பகம்.

கோவையில் தண்ணீர் கஷ்ட காலத்தில் தெருவில் தண்ணீர் வண்டி வரும். அதற்கு அறிவிப்பாளர் என் அம்மான் சேய் தான். 'ண்ணி ண்டி'என்று கத்திக்கொண்டு தெரு முழுதும் ஓடுவான் அப்போது உண்மையாகவே அவனும் தண்ணி வண்டியைப் போலவே உடலில் இருந்து  தண்ணீரை இறைத்துக் கொண்டே ஓடுவான்.

இப்போது 60 வயதைக் கடந்து தனியாளாக தன் வயிற்றுப் பாட்டைத் தானே பார்த்து கொண்டு கோவையில் ஓர் அரசு மருத்துவமனையில் எடுபிடியாக இருக்கிறானாம்.

அம்மாஞ்சியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தேடுவதற்கு எனக்கு உடலில் தெம்பு இல்லையே!

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)  
+++++++++++++++++++++++++++++++++++++++++
3


அம்மனோ சாமியோ!!!
ஆக்கம் தேமொழி

என் சிறு வயதில் ஒரு நாள்... வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது.  பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு வீட்டின் கொல்லைப்புறம் விளையாட ஆரம்பித்தேன்.  உடன் விளையாடியவர்கள் என்னைவிட ஒரு வயது சிறிய தங்கை, ஐந்து வயது சிறிய தம்பி மற்றும்  எங்கள் அண்டை அயல் வீட்டுச் சிறுவர் சிறுமியர் கூட்டம் என ஒரு ஏழெட்டு பேர்.

எங்கள் வீடு தெருவில் கடைசி வீடு.  அதனால் மற்ற வீடுகளை விட வீட்டின் இடதுபுறம் அதிகப்படியான இடம் இருந்தது.  உடன் படிக்கும் தோழர் தோழிகளும் பக்கத்து வீடுகளிலேயே குடியிருந்தது வசதியாகிப் போனது.  பள்ளி முடிந்து திரும்பியவுடன் மீண்டும் ஒன்றுகூடி எங்கள் வீட்டின் குட்டி மைதானத்தில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.  ஒரு சிறிய பள்ளி நடப்பது போல கூச்சலும் களேபரமும் அமர்க்களமாக இருக்கும்.

வழக்கத்திற்கு மாறாக கொல்லைப்புறம் விளையாட சென்றதன் காரணம் அன்று எங்களுடன் விளையாடிய பக்கத்து வீட்டுப் பிள்ளைகளான ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆனந்த்.  ராஜேஸ்வரி என் வகுப்பு, ரஞ்சனி என் தங்கை வகுப்பு, என் தம்பியும் ஆனந்தும் பள்ளியில் சேரும் வயதைத் தொட்டிருக்கவில்லை.  பக்கத்து வீட்டின் மதில் சுவர் பக்கம் எங்கள் அம்மாவும், பக்கத்து  வீட்டு ராஜேஸ்வரியின் அம்மாவும்  அவரவர் வீட்டில் இருந்தபடி மதில் மேல் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.  எங்கள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பார்வையில் கொல்லைப்புறத்தில் அன்று  விளையாட விட்டிருந்தார்கள்.

இவர்கள் பேச்சில் வீட்டில் கைவேலைகளுக்கு உதவியாக இருக்கும் முஷீராவும் கலந்து கொண்டார்கள்.  முஷீரா கல்லுரலில் மாவு ஆட்டும் முன் அரிசி களைந்து கொண்டே பேசிக்கொண்டிருக்க, அவர் மகள் தாவணி போட்ட வயதில் இருந்த நூர்ஜஹான் எங்களுடன் விளையாட வந்துவிட்டாள்.  அவசரத் தேவைக்கு அவ்வப்பொழுது நூரை முஷீரா அழைத்து வருவது வழக்கம்தான்.  அன்று நூர் நடன ஆசிரியையாக மாறி எங்களை கொல்லைப்புற படிக்கட்டில் கொலுபொம்மைகள் போல் வரிசைக்கு மூவர் என நிறுத்தி, கலா மாஸ்டர் அவதாரம் எடுத்து நடனம் சொல்லிக் கொடுத்தாள்.

“மாடி வீட்டுப் பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு
ஐயயோ வாட் ஷல்  ஐ டூ, டெல் மீ வாட் டு டூ
அமம்ம்மோ  வாட் கேன்  ஐ டூ, ஐயாம் மாட் ஆஃப்ட்டர் யு
கொக்கர கொக்கோ, கொக்கர கொக்கோ, கோ கோ கோ கோ”
என்ற பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருந்தோம்.

பெரும்பாலும் டுவிஸ்ட்தான். சின்ன பசங்களுக்குப் பல வார்த்தைகள் தெரியாமல் பாடுவதாக பாசாங்கு செய்தாலும், எல்லோருக்கும் "கொக்கர கொக்கோ" மட்டும் நன்றாகத் தெரிந்தது.  அந்த வார்த்தைகள் மட்டும் உற்சாகம் மீறிட உரத்த குரலில் பாடப்பட்டு, சிரிப்பும் கும்மாளமுமாக கொல்லைப்புறம் அதிர்ந்தது.

பேசிகொண்டிருந்த அம்மாக்கள் குழந்தைகள் கூக்குரலினால் பேச்சு தடைபட்டு, கோபத்துடன் எங்களை அடக்க நினைத்தவர்கள் அதை மறந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.  இதன் பிறகு அம்மாக்கள் தங்களுடைய விவாதத்தின் தலைப்பை மாற்றி தங்கள் மழலைப் பட்டாளத்தின் குறும்புகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.  ராஜேஸ்வரியின் அம்மா அன்று தன் மகள்கள் செய்த குறும்பைப் பற்றி சொன்னவர்கள், இவர்களை குச்சியினால் விளாசினால்தான் அடங்குவார்கள் என்று கூறி  தண்டனையைப் பற்றி எண்ணி தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போனார்கள்.

இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள்.  அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது.  நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பெயராக மஞ்சுளா, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி. ஆர்., முத்துராமன், வாணிஸ்ரீ, ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா எனச் சொன்னால், அவள் படத்தாள்களை  லாவகமாக மடித்து கண்ணாடியின் பின்புறம் வைத்து நாங்கள் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் கண்ணாடி வழியே தெரியும்படி  செய்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.

மழலைப் பட்டாளம் வித்தையில் மயங்கியிருக்க, ராஜேஸ்வரியின் அம்மா என்னைக் கூபிட்டு "அம்மாடி இங்க வா, மாடில போயி ஒரு வேப்பங்குச்சி ஒடிச்சிட்டு வா, இன்னைக்கு போடுற போடுல, இவளுங்க இனிமே பம்பரமா நான் சொல்றபடி ஆடனும்", என்றார்கள்.  உடனே அம்மா, "ச்சே..வேணாங்க பாவம்" என்று இடை மறித்துவிட்டு, "ஏய், நீ போகாத" என்று தோழிகளுக்குத் தண்டனை வழங்க குச்சி ஒடிப்பதில் இருந்து என்னைத் தடுத்தார்கள்.  ராஜேஸ்வரியின்  அம்மாவோ "நீ போம்மா" என்று என்னைத் தூண்டினார்கள்.

என் கண்களோ நூரின் வித்தையில் இருந்தது.  பாதியில் விட்டுப் போகவோ மனமில்லை.  இருந்தாலும் குச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டால் தொந்தரவு இன்றி வித்தை பார்க்கலாம் என்று எண்ணி, பள்ளியில் வந்து இன்னமும் மாற்றாத நீல-வெள்ளைச் சீருடையுடன், மடித்துக் கட்டப்பட்ட இரட்டை சடைகளில் ஒன்று வால் போன்று அவிழ்ந்து தொங்க மாடியை நோக்கி ஓடினேன்.  எங்கள் வீட்டின் முன்புறம் இரு பெரிய வேப்ப மரங்கள் வளர்ந்து, வளைந்து மொட்டைமாடியில் தலைக்கு  மேல் பந்தல் போட்டிருக்கும்.  அதனால் சிறுவயதினரும் சுலபமாக அதை எட்ட முடியும்.

நானும் மொட்டைமாடியின் அறைக்கதவைத் திறந்து சென்று ஒரு குச்சியும் ஒடித்துக் கொண்டு வந்துவிட்டேன்.  ஆனால் மொட்டைமாடிக்கதவை திறப்பதற்கு என்றும் அம்மாவின் சிறப்பு அனுமதி தேவை.  அது நவ்டால், திண்டுக்கல் என்று எந்த ஒரு பூட்டும் போடமுடியாத, சாதாரணக் குமிழ்க் கைப்பிடி வைத்த தாழ்ப்பாள் உள்ள கதவு.  வீட்டில் சிறுபிள்ளைகள் இருப்பதால் அம்மாவிடம் அனுமதி கிடைத்தால் மட்டுமே, அவர்கள் மேற்பார்வையிலோ அல்லது அம்மாவின் நம்பிக்கைக்குரிய  ஆள் என அங்கீகாரம் பெற்றவர் முன்னிலையிலோதான் அந்த சொர்க்க வாசல் திறக்கப்படும்.  ஏதோ ஒரு தர்ம நியாத்திற்குக் கட்டுப்பட்டு நாங்களும் அந்த வயதில் அதைக் கடைபிடித்தோம்.

நான் அவசரமாக திரும்பி வருவதற்குள் வித்தையை முடித்துவிட்டு நூர் தன் அம்மாவிற்கு உதவியாக மாவாட்டப் போய்விட்டிருந்தாள். மற்றவர்களும் வேறு ஏதோ விளையாட ஆரம்பித்துவிட, நான் ஒடித்து வந்த குச்சியை ராஜேஸ்வரியின் அம்மாவிடம் சேர்த்துவிட்டு விளையாட்டில் கலந்துகொண்டேன். அம்மாக்களும் உரையாடல்களைத் தொடர்ந்தார்கள்.  அப்பொழுது திடீரென வார்த்தைகள் குழறிய வண்ணம் பயத்தில் ஒரு கூக்குரல் கேட்டது.  வீட்டின்  பக்கத்தில் உள்ள தெரு தாண்டி அடுத்த வரிசையில் வசிக்கும் லதாவின் அம்மா வானத்தை  நோக்கி கையை விரித்து ஆதிமூலமே எனக் கூப்பாடு போடுவது போல, "ஐயோ புள்ள புள்ள" என்று ஏதோ சொல்ல முயற்சித்தார்கள், ஆனால் பாவம் திகிலில் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எல்லோரும் அவர் காட்டிய திசையில் நோக்கினால் ...அங்கே என் தம்பி மாடியில்.  மொட்டைமாடியின் பின்புற மற்றும் பக்கவாட்டு கைப்பிடி மதில்சுவர்கள் இணையும் இடத்தில்  உள்ள சமையலறைப் *புகைபோக்கியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தான்.

பாவி..எனக்குத் தெரியாமல் என்னைப் பின் தொடர்ந்து வந்து,  எப்படியோ சுவரின் வலையத்தில் வானொலிக்காக நட்டு வைக்கப்பட்ட ஏரியல் கம்பில்  ஏறி, கையகல மதிலிலும் நடந்து, புகைபோக்கியிலும் ஏறி, இமயத்தின் மேல் வெற்றி வாகை சூடி நின்ற கரிகாலன் போல் நின்று கொண்டிருந்தான்.  அவசரம் போலும், ஏனோ கையில் புலிக்கொடியை மட்டும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டிருந்தான்.  அவன் அங்கு நின்றுகொண்டு விமானத்தில் இருந்தவாறு வெள்ள  சேதத்தைப் பார்வையிடும் அமைச்சர் போல வீட்டின் சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.  எல்லோருக்கும் அதிர்ச்சி.  அடுத்து என்ன நடக்குமோ, அவன் இன்னமும் நகர்ந்து கீழே விழுந்துவிடுவானோ என அச்சம். இரண்டு பெண்கள் நமக்குப் போதும் என்று அப்பா சொல்ல சொல்லக் கேட்காமல், அம்மா ஆசை ஆசையாக  வேண்டும் என்று மூன்றாவதாகப் பெற்றெடுத்த மகன் அவன்.  அன்று அவன் அவ்வாறு ஒரு 'உயர்ந்த' இடத்தில் இருப்பதைப் பார்த்தும் அம்மாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்க வேண்டும்.

அம்மா உடனே சமயோசிதமாக, "அவனோட யாரும் பேசாதீங்க, நகரப் பார்த்தான்னா நில்லுன்னு கத்துங்க" என எங்களிடம் சொல்லிவிட்டு, அவன் கவனத்தைக் கவராமல் இருப்பதற்காக வீட்டின் பின் வாசலைத் தவிர்த்து, வீட்டின் பக்கவாட்டில் உள்ள சந்து வழியாக ஓடி, முன்புற வாசல் வழியாக மொட்டைமாடிக்கு பி. டி. உஷா போல ஓடினார்கள்.  ராஜேஸ்வரியின் அம்மா சுலபமாக மதில் ஏறிக் குதிப்பவர்.  எங்கள் வீட்டிற்கு அவர்கள் வழக்கமாக அப்படித்தான் வருவார்கள்.  அவரும் மதிலை லாவகமாத் தாண்டிக்குதித்து உஷாவைத் தொடர்ந்து ஓடும் ஷைனி ஆப்ரஹாம் போல அம்மாவைத் தொடர்ந்தார்கள்.  இதற்குள் லதாவின் அம்மா, குடத்தில் தண்ணீருடன் சென்ற பெண்கள், பூக்காரி, சைக்கிளில் கோலமாவு விற்றவர், கடைக்குப் போகிறவர்கள், சோன்பப்டி வண்டிக்காரர், வீடு திரும்பும் மாணவர்கள் போன்ற பார்வையாளர்கள் என சிறு கூட்டமே பக்கத்துக்கு தெருவில் நின்று அண்ணாந்து தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மொட்டைமாடியை அடைந்த அம்மா சத்தமில்லாமல் பையப் பைய அடியெடுத்து வைத்து தம்பியை பின்புறமாக நெருங்கினார்கள்.  முதுகுப் பக்கம் எக்ஸ் போல உள்ள சஸ்பெண்டார்  வைத்த  கால்சட்டை மட்டுமே தம்பி அணிந்திருந்தான்.  தம்பியின் கால்சட்டையின் முதுகு வாரை அம்மா கபால் எனப் பிடித்ததுத் தூக்கியதும், அவன் பயத்தில் அந்தரத்தில் நீந்துவது போல் கை கால்களை உதைத்துக் கொண்டு வீரிட்டு அழ ஆரம்பித்தான்.  அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு அசையாமல் இருந்த அனைவரும்,  "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்" எனத் தம்பி பாடியது போல் உடனே அசைய ஆரம்பித்தோம்.  தெருவில் போனவர்கள் பிள்ளை பெற்றும் வளர்க்கத் தெரியாத அம்மாவின் துப்புக் கெட்டத்தனத்தை விமரிசித்த வண்ணம் அம்மாவின் மேல் வசை பாடியவாறு கலைந்து சென்றார்கள்.  சிறுவர் சிறுமியர் நாங்களும் வீட்டின் குறுக்கே புழுதி நிறைந்த கால்களுடன் தட தடவென ஓடி மாடியை அடைந்தோம்.

தம்பி எப்படி மாடிக்கு வந்தான்? யார் மொட்டைமாடிக் கதவைத் திறந்தது? என்று அம்மாவின் மூளை துப்புத் துலக்க ஆரம்பித்தது.   அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தண்டிக்க ஒடித்த வேப்பங்குச்சியில் இருந்து உருவிப் போட்ட வேப்பிலைகள் தரையில் சிதறிக் கிடக்க, என்னை சுற்றிலும் என் குற்றத்திற்கான தடயங்களுடன் நான் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன்.

என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரியின் அம்மா தவறு தன்மேல் என்று அப்ரூவராக மாறி என்னை அடிக்ககூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.  அம்மாவும் மரியாதையின் பொருட்டு சரி ...சரி என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.  பின்னர் "அடுத்தவங்கள அடிக்க குச்சி ஒடிக்கிறையா  நீ" என்று கூறி அதே வேப்பமரத்தில் இருந்து குச்சியை ஒடித்து எனக்கு அம்மா பூசை நடத்தினார்கள்.  சாமியாடிக்குதான் வழக்கமாக வேப்பிலை அடிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  அன்று முதன் முறையாக சாமியாடியே வேப்பிலை அடித்தார்.

[* இந்த விளக்கம் புகைபோக்கி என்னவென்று தெரியாத இந்தக்காலத்து எக்சாஸ்ட் விசிறி உபயோகிக்கும் மக்களுக்கு: ஒரு காலத்தில் தமிழகம் விறகு அடுப்பை விடுத்தது மண்ணெண்ணெய், எரிவாயு அடுப்புகளுக்கு மாறிக்கொண்டிருந்தாலும், சமையல் மேடைக்குமேல், மேல் சுவரில் இருந்து மேல் கூரையின் ஒரு ஓட்டை வழியே சமையலறைப் புகையை வெளியேற்ற வடிவமைக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்புதான் இந்த புகைபோக்கி என்பது. மொட்டைமாடியில் அது மூன்றடிக்கு  மூன்றடி அல்லது அதற்கும் குறைவான ஒரு மேடைபோல் இருக்கும்.  பக்கவாட்டில் புகை வெளியேற செங்கல் அளவில் பல ஓட்டைகளும் இருக்கும்.  மொட்டைமாடியில் இருந்து, "அம்மா, அம்மா நான் ஐய்யப்பு  பட்டத்த டீல் போட்டு வெட்டிடேன்மா" என்று சமயலறையில் இருக்கும் அம்மாவுடன் அந்த ஓட்டைகள் வழியே கூவித் தொடர்பு கொள்ளமுடியும்.  உடனே அம்மாவும், "எருமை மாடு, எருமை மாடு, எத்தன வாட்டி சொல்றது உனக்கு புகைபோக்கி வழியே கத்தாதேன்னு, இங்க காய்ச்சிற பால்ல கரி உழுவுது பாரு" என்று ஆசீர்வதிப்பதும் அதன் வழியே உடனே கேட்கும்] 


http://youtu.be/YPeqKpTI63E
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


கடலம்மா!
ஆக்கம் தனுசு

கடல்வாணியே - நீலக்
கடல்வாணியே
என்னை தாலாட்டும் கலைவாணியே
என்றென்றும்  தோள்மீது கைபோட்டு வாநீயே.

சமுத்திரதேவியே என் கருத்தம்மா
கடல்ஜாதி உயிர்களுக்கு தெய்வம் நீயம்மா
உன்னை போற்றவந்தேன்  தனிமையிலே
உன் அழகோ எக்காலமும் தளிர் மயிலே.

நீ அதிகாலையில் அமைதியின் அழகு
அந்திமாலையில் அலையோடு அழகு
நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு  அழகு
நெடும் பயணத்தில் நம் நட்பும் அழகு.

கண்விழித்தால் கை நீட்டி அழைப்பவளே
துயில் கொண்டால் தூளியாய் அசைபவளே-உன்னை
நுரையோடு பார்த்தாலும் சலிப்பதில்லை
பெரும் குறையோடு இருந்தாலும் புளிப்பதில்லை

தூதின்றி வருபவளே
துணையாக இருப்பவளே
தெம்மாங்கு  படிப்பவளே
என் கவிதைக்கு அரங்கேற்ற மேடை அமைத்தவளே

நிலவோடு நான்பேச
நின்றென்னை ரசிப்பவளே
விண்மீனை நான் பாட
அலையடித்து ஆட்டம் போட இசையாக சேர்பவளே.

என் கண்பார்த்து களைப்பாற
மீன்குஞ்சை மேய்ப்பவளே
வெண்பாம்பை வரவழைத்து
சுறாவோடு இறாவையும் விளையாட வைப்பவளே

இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
எத்துனை நான் இங்கே கேட்பது?
என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ.
.-தனுசு- 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்
ஆக்கம்.ஜி.ஆனந்தமுருகன்

1

2

3


 4

 5

 6

7

 8

9

10

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

31.3.12

எத்தனை புண்ணியம் தெரியுமோ?

மாணவர் மலர் 
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன் 
வாத்தியார் 
------------------------------------------------------------------------------------------------------



சிறுகதை எத்தனை புண்ணியம் தெரியுமோ?
ஆக்கம் வெ.கோபாலன் தஞ்சாவூர்

அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.

அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?" என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், "ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்" என்றான்.

கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.

ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?

யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.

போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.

அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.

அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.

ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.

இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.

இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.

பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.

ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.

இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.

"என்னம்மா வேணும்? ஏன் முனகறே?" என்று குழந்தையை வினவினாள் ரமா.

குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.

ரமா தன் கணவனிடம் கேட்டாள், "குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று" என்றாள்.

அவனுக்கோ பஜனை சுவாரசியம். "இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்." என்றான்.

அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.

அவன் மெல்லா அந்த அம்மாளிடம், "மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்" என்றான்.

அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி "அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ" என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டன் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.

கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.

தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ரவிக் அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.

ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ரவிக் பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.

அவள் சொல்கிறாள், "இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ?" என்று.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


தங்கள் கவிதாவிலாச்த்தை மக்களின் மேன்மைக்காகப் பயன்படுத்திய மகான்கள்
ஆக்கம் பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு

கவிமழை பொழியும் திறன் எல்லோருக்கும் வந்துவிடுவதல்ல. அப்படி அத்திறன் வாய்த்தாலும், அவர்களுள் பலரும் கவிஞர் என்று மட்டும்தான்  அறியப்படுவார்.

ஆனால் நம் கண்முன்னே வாழ்ந்து, மனிதருள் தெய்வாம்சம் உடையவராகப் பிரகாசித்த பல மகான்கள் திருவாக்கிலிருந்து பிரவாகித்த பாடல்கள் அவர்களின் உண்மை ஸ்வரூபத்தை உலகுக்கு உணர்த்தியதோடு, நம் ஜென்மம் கடைத்தேறவும் வழிவகுக்கின்றன.அவர்கள் தங்கள் கவிதாவிலாசத்தை உலகத்தோரின் மேன்மைக்கே பயன்படுத்தினர்.  அதனாலேயே, அவர்கள் மிக உயர்ந்த மேன்மையான நிலையில் வைத்து வணங்கப்படுகின்றனர்.

பெரும்பாலும் முதல் பாடலை அவர்கள் அனுக்கிரகித்த உடனே, அவர்கள் இன்னாரென, உலகம் உணர்ந்து கொண்டது. அவற்றுள் மிகச்சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1. அது ஒரு தெய்வக்குழந்தை.   தன் தாயிடம் சந்நியாசம் மேற்கொள்ள‌ அனுமதி பெற்றதும், ஒரு குருவைத் தேடி பிஞ்சுக் 'காலடி' நோக நடந்து சென்று கொண்டிருக்கிறது.  நர்மதா தீரம் வந்ததும், அதன் மனதில்,'தன் குரு இங்குதான் இருக்கிறார் என்று தோன்றியது. நர்மதை, தன் கரையில் பிற்கால ஜகத்குருவைப் பார்த்தாள். மறுகணமே, ஆனந்தம் மீதுற பிரவாகத்தை அதிகரிக்கலானாள். வெள்ளப்பெருக்கைப் பார்த்ததும் பயந்த கிராம மக்கள், கரையிலிருந்த ஒரு சாதுவை நோக்கி ஓடினர். அவரோ நிஷ்டையிலிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த,  சின்னக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஒளி அவர்களை ஈர்க்கவே, அந்தக் குழந்தையிடம் ஓடி வந்து முறையிட்டார்கள். அம்மையும் அப்பனும் ஏக உருவாகி வந்த, அந்தக் குழந்தை, தன் கமண்டலத்தை நதியில் காட்ட, நர்மதை, உலகமனைத்தையும் தன்னுள் அடக்கிய தெய்வத்தின் கமண்டலத்தில் சரண் புகுந்தாள்.

நிஷ்டையிலிருந்த சாது, விழித்தார்.  நடந்ததெல்லாம் அவர் அறியாததா?.   'புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம் ' என்று தமிழ் மூதாட்டி எந்த அரவினை, ஆதிசேஷனைப் பாடினாளோ, அந்த ஆதிசேஷனே, பதஞ்சலி முனிவராகவும், பின்னர் இதோ, இப்போது 'கோவிந்த பகவத் பாதரா'கவும் அவதாரம் எடுத்து, தன் சிஷ்யருக்காக, நர்மதைத் தீரத்தில் காத்திருந்த வேளையில், காத்திருந்த சிஷ்யன் எதிரே நிற்கக் கண்டார். எதுவும் அறியாதவர் போல், 'குழந்தாய், நீ யார்' என்று கேட்டார். 

கேட்ட மறுகணம், சொல்முத்துக்களை சரமாகத் தொடுத்து, அந்த பிஞ்சுக் குழந்தை கவிமழை பொழியலாயிற்று. 'தான் யார், தன் அவதார நோக்கம் என்ன, என்பதோடு, தான் பிற்காலத்தில், ஸ்தாபிக்கப்போகும் அத்வைதத் தத்துவத்தையும் சேர்த்து சொல்லாமல் சொல்லி ஸ்லோக மழை பொழிந்தது.

பின்னாளில் ஆதிசங்கர பகவத்பாதரான அக்குழந்தை சொன்ன அந்தப் பத்து ஸ்லோகங்கள் பின்னர் 'தச ஸ்லோகீ' என்றே பெயர் பெற்றன. ஒவ்வொரு ஸ்லோகமும் சிவ: கேவலோஅஹம் என்றே முடியும். இதன் பொருள் மாயையெல்லாம் அகன்ற பிறகு, எஞ்சியிருக்கும் சிவமே நான் என்பதாகும்.அதில் ஒன்றைப் பார்க்கலாம்.

ந சோர்த்வம் ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம்
ந மத்யம் ந திர்யங் ந பூர்வாபரா திக்/
வியத்வ்யாபகத்வாத் அகண்டைகரூப:
ததேகோsவசிஷ்ட: சிவ: கேவலோsஹம்//

இதன் பொருள், ஆத்மாவுக்கு, மேல், கீழ் முதலிய நிலைகளோ, கிழக்கு, மேற்கு முதலிய திசைகளோ இல்லை. பரந்து விரிந்துள்ள ஆகாயம் (பிரபஞ்ச வெளி) பாகுபாடற்று எப்படி நீக்கமற நிறைந்துள்ளதோ அது போல ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அந்த ஆத்மாவாய், ஆனந்தமாய்த் திகழ்கிற சிவமே யான். (அதாவது, சிவமும் ஆத்மாவும் ஒன்றே என்ற அத்வைதத் தத்வம் இங்கு மறைபொருள் )    ஒளியும், காற்றும் இன்ன பிறவும் இறைத்தத்துவமே.  அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது . இது பரம்பொருளின் நிர்க்குண (உருவமற்ற) நிலை. இதை,

எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே
திக்கொடு கீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே  
என்று   தாயுமானவ ஸ்வாமிகள் பாடல்களிலும்,  

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்
என்று, சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியத்தின் கவிதைவரிகளிலும் காணலாம்.

சாக்தத்தில், பெரிய அண்ட வெளியிலும் அணுவிலும் சிறிய , பரமாணுவிலும், வீற்றிருப்பவள் பரஞ்சோதியாகிய அம்பிகையே('ப்ரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா')என்று நிர்க்குணப் பரம்பொருளாக அம்பிகையை லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கிறது.   ('வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி'----- சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)

2. சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமசுந்தரி தம்பதியருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த மகனுக்குப் பேச்சு வரவில்லை. 'செந்தூர் முருகா, உன் தாள் சரணம்' என்று ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு, திருச்செந்தூர் சென்று, அங்கேயே தங்கி, விரதமிருந்து வந்தனர். 45 வது நாள், முருகனருள் அக்குழந்தையிடம் பேசியது. அக்குழந்தை வாய் திறந்து கவிமழை பொழிந்து 'கந்தர் கலி வெண்பா'வை அருளியது.  'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் மகிமையே 'கந்தர் கலி வெண்பா'.   'குமரகுருபர ஸ்வாமிகள்' என்று பின்னாளில்  உலகமெங்கும் அறியப்பட்ட‌ அக்குழந்தையின் முதல் கவியில் தான் எத்தனை எத்தனை தத்துவார்த்தங்கள்.
 - பலகோடி

      அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
      கண்டசக்தி மூன்றுட் காரணமாய்த் - தொண்டுபடும்
      ஆவிப்புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
      ஏவித்தனி நடத்தும் என் கோவே

 முதல் இருவரிகளில் இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சர்வசாதாரணமாகக் காணக் கிடைக்கின்றன. பல கோடி பிரபஞ்ச வெளிகளில் இருந்து, நாம் காணும் இந்த உலகம் உருவாகக் காரணமான, மூன்று சக்தி(படைத்தல், காத்தல், அழித்தல்)களுக்குக் உட்பொருளாய் விளங்குபவன் முருகன். இதன் மூலம், அண்ட சராசரங்கள் பல பிரபஞ்சவெளிகளை உள்ள‌டக்கியது என்பது தெரிவிக்கப்படுகிறது.  பரம்பொருள் சகுண நிலையை அடைந்து, இவ்வுலகத் தோற்றத்திற்கு மூல காரணமாகிறது.      ஐந்தொழிலான,  படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல், ஆகியவற்றை ஏவித் தனி நடத்தும் என் கோவே என்று முருகனைப் பரம்பொருளாகக் கூறுகிறார் ஸ்வாமிகள். இதை சாக்த தத்துவத்தில், பஞ்ச – பிரம்ம – சொரூபிணி (பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு ஐந்து தொழில் புரியும் ஐந்து பிரம்மங்களைத் தனது வடிவமாகக் கொண்டவள் அம்பிகை என்பது பொருள்) என்று லலிதா சஹஸ்ரநாமம் துதிக்கிறது. நமது சகோதரர் திரு. ஆலாசியமும் இதை,

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! 
 என்று புகழ்கிறார்.

3. இதுவும் ஒரு குழந்தையே. மூன்று வயது. தந்தை குளிக்கச் செல்லும்போது, 'நானும் வருவேன்' என்று அடம் பிடித்தது. தந்தை சிவபாத இருதயரும், தாய் பகவதி அம்மைக்கும் வாராது வந்த மாமணிபோல் வந்த பிள்ளை. மறுக்க மனமின்றி அழைத்துச் சென்ற அவர், குழந்தையைக் கரையில் உட்கார வைத்து, மூழ்கிக் குளிக்கலாயினார். தந்தையைக் காணாத குழந்தை,

 கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
 வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 
 எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப  
 புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்.

'தாள முடியாதது, குழந்தையின் அழுகை' அல்லவா, அதற்கு ஏன் எவ்வுயிரும் குதூகலம் அடைய வேண்டும்?  ஏனென்றால், இது புண்ணியக் கன்று,அவர் அழுவதும் அருளே( சிறு பேரழைத்தனவும் சீறி அருளாதே, ஸ்ரீஆண்டாள், திருப்பாவை.) சீர்காழி உறையும் தோணியப்பர் திருச்செவியில், குழந்தையின் அழுகுரல் கேட்டது. உமையை நோக்கி, 'பால் ஊட்டுக' எனப் பணித்தார். அன்னை அளித்த ஞானப்பால் உண்ட சிசு, வாயில் பால் வழிய அமர்ந்திருந்ததைக் கண்ட தந்தையார் 'யார் அளித்த பால் இது?' என்று வினவ, ஞானத்தின் சம்பந்தம் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான்,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்   
எனத்தொடங்கும் தேவாரம் பாடினார்.

மகான்களின் திருவாக்கிலிருந்து உதித்த கவியமுதம், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தர வல்லது. முன் ஜென்ம வினை தீர்ந்து, மாயை அகன்று, அவன் அருளால் அவன் தாள் வணங்கும்பேறு, இத்தகையோரின் சொல்லமுதைப் பருகினால் நமக்குக் கிட்டும்.

விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!    
(சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)

என்று, எங்கும் நிறைப் பரம்பொருள் அருள்புரிய வேண்டுவோம்.

பின்குறிப்பு: (வாத்தியாருக்கு) பரம்பொருளின் நிர்க்குண நிலையையும், சகுண நிலையையும், சர்வ சாதாரணமாக, கவியில் கொண்டுவருவது,  சாமான்ய மனிதர்களால் முடியக்கூடியது அல்ல என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சகோதரரின் சென்ற வாரக் கவிதை எத்தனை பேரைச் சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை. அதன் பெருமையை உரைக்கவே, சில இடங்களில் எடுத்தாள நேர்ந்தது. எத்தனையோ குடத்து விளக்குகளை குன்றின் மேல் ஏற்றும் தாங்கள் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். தவறெனில், தாங்களும் சகோதரரும் என் பிழை பொறுக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.

Please visit my blog (AALOSANAI.blogspot.in).

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


குறையிருந்தாலும் குறைவதுண்டோ?
ஆக்கம் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

சென்ற வார மாணவர் மலரில் என் ஆக்கத்தில் கண்ட செய்திகளைப் பற்றி தஞ்சாவூரார் சில உண்மைகளைக் கூறியிருந்தார்.

நான் கூறிய 'தஞ்சை=வல்லம் சாலையில் உள்ள பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் 'பின்னம்' ஆனவர்; ஆகவே வழிபடும் வழக்க்ம் இல்லை' என்று கூறியிருந்தார்.

ஆம்!அவர் கூறியது சரியே.அந்தப் பிள்ளையாரின் நல்ல கொம்பும் முன்னர் இருந்த ஒரு குருக்களின் கவனக்குறைவால் அபிஷேகக் குடம் விழுந்து முறிந்துவிட்டது.

மஹாபாரதம் எழுதுவதற்குக்காகத் தன் ஒரு கொம்பைத் தானாக முறித்துக்கொண்ட பிள்ளையாருக்கு, மற்றொரு நல்ல கொம்பும் உடைந்து விட்டது.ஆகவே அவர் 'பின்னப்பட்டு' விட்டார்!

பிள்ளையார் சிலை வடிக்கும் போதே ஒரு கொம்பு முறிந்த நிலையிலேயே காட்டப்படுகிறது. அது பின்னமாகக் கொள்ளப் படுவதில்லை.

"இறைவன் பூரணமானவன்! அந்தப் பூரணத்திலிருந்து வருபவை அனைத்தும் பூரணமானவையே!அந்தப் பூரணங்கள் அனைத்தும் மீண்டும் பூரணத்திலேயே கலந்து பூரணமாகின்றன"  என்று பேசும் ஒரு வேத சாந்திபாடம்.

பின்னம் ஆவது என்றால் உடைந்து போவது! உடைந்த விக்ரகங்களை வழிப‌டும் வழக்கம் இல்லை என்பது தஞ்சாவூரார்  கூற்று. இது தொடர்பாக சில சுவையான செய்திகள் நினைவுக்கு வந்தன.
==============================================
"நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமாகிப் போனதென்ன சொல்வீரய்யா!" என்று தில்லை நடராஜரைப் பார்த்து கேள்வி எழுப்பிய‌ ஒரு பாடல் உண்டு.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு "திரிபங்கி"என்று ஒரு பெயர் உண்டு. மூன்று இடத்தில் 'பெண்டு' உள்ள‌வர் என்று பொருள்.
=====================================
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேஸ்வரக் காளிகோவிலில் அர்ச்சராக பணியாற்றும் சமயம்  அங்குள்ள கிருஷ்ணர் விக்ரஹத்திற்கு பின்னம் ஏற்பட்டுவிட்டது.

ஸ்ரீராமகிருஷ்ணர் காளி அன்னைக்கு மட்டுமே பூஜாரி. மற்ற விக்ரஹங்களுக்கு மேலும் சில அர்ச்சகர்கள் இருந்தனர்.அதில் ஒருவர் கவனப் பிசகாக கிருஷ்ணர் விக்ரஹத்தினை சேதப்படுத்தி விட்டார்.

இங்கே பின்னப்பட்ட‌ பிள்ளையார் பற்றி எழுந்த அதே  கேள்வி அக் காலத்திலேயே எழுந்தது."உடைந்த கிருஷ்ணர் விக்ரஹத்தை வழிபடலாமா?"

அக் கோவிலின் அறங்காவலர் ராணி ராசமணியிடம் பலரும் பல அபிப்ராயங்களைக் கூறின‌ர்.பெரும்பாலானவர்களின் முடிவு 'உடைந்த விக்ரஹம் வழிபடத் தகுந்தது அல்ல' என்பதே.

புதிய விக்ரஹம் செய்ய ஆணை பிறப்பிக்க முடிவு செய்யும் முன்னர்
ஸ்ரீ பரமஹம்சரிடம் ராசமணி அம்மையார் கலந்தாலோசித்தார்.

அப்போது ஸ்ரீ பரமஹம்சர் இறை ஆவேச நிலையில் கூறினாராம்:"கிருஷ்ணர் கால் உடைந்து பின்னம் ஆகிவிட்டார் என்று அவரை மாற்ற நினைக்கும் ராச மணி தேவியாரே! உங்களுடைய மாப்பிள்ளைக்கு விபத்தில் கால் உடைந்து விட்டால் அவரையும் மாற்றிவிட்டு மகளுக்கு வேறு கணவன் தேடுவீர்களோ?"

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் திருக்கரங்களாலேயே அந்த ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹத்தை செப்பனிட்டு மீண்டும் அந்த விக்ரஹமே வழிபாட்டுக்கு வந்ததாம். இன்றளவும் அந்தப் பின்ன விக்ரஹமே வழி படப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
=================================================
ஸ்ரீ நீல கண்ட தீக்ஷ‌தர் நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் முதல் அமைச்சராக இருந்தவர்.ஸ்ரீ அப்பைய தீக்ஷ‌தரின் தத்துக் குமாரர். ஸ்ரீ நீலகண்டரும் பெருங்கவிஞர்;மஹாஞானி!

மதுரைக் கோவிலை புதுப்பிக்கும் பணியில் நாயக்க மன்னர்கள் ஈடுபட்டு இருந்த சமயம். ஒருநாள் முதல் அமைச்சர் நீலகண்டர் கோவிலில் மேற்பார்வை பார்க்கச் சென்றார்.அப்போது நாயக்க மன்னர், அரசியின் சிலைகள் கூப்பிய கைகளுடன் வடிக்கப்பட்டு வெளிப் பிராகரத்தில் அமைக்கப்பட்டு இருந்தன.

அரசியின் தொடைபகுதி செதுக்கும் சமயம் உளி தவறுதலாகப்பட்டு அந்தப்பகுதியில் ஒரு சில்லு தெறித்துவிட்டது. அச்சிலையை மாற்றி விடுவதாகச் சிற்பி நீலகண்டரிடம் கூறுகிறார்.

ஸ்ரீ நீலகண்டர் ஒரு நிமிடம் தியானம் செய்துவிட்டு, "ராணிக்கு இயற்கையாகவே  அப்படி ஒரு குறைபாடு அந்த பாகத்தில் உள்ளது. எனவே இறை விருப்பப்படி அமைந்த சிலை அப்படியே இருக்கட்டும்" என்று கூறுகிறார்.

இச்செய்தி நாயக்க மன்னர் செவிகளுக்கு ஸ்ரீநீலகண்டரின் பகைவர்களால் திரிக்கப்பட்டு சென்று அடைகிறது."எப்படி ராணியின் மறைவான அங்கத்தில் உள்ள குறை இவருக்குத் தெரிய வந்தது?" என்ற கேள்வி எழுந்தது.

ஆத்திரத்தில் அறிவு இழ‌ந்த நாயக்க மன்னர்,ஸ்ரீ நீலகண்ட‌ரின் கண்களை நோண்டிவிடும் நோக்கத்துடன் அவரைக் கைது செய்து கூட்டி வரும்படி கூறுகிறார்.ஸ்ரீ நீலகண்டர் இல்லத்து வாசலில் அரசனின் படை வீரரகள் வந்து நிற்கின்ற‌னர்.

அரசனின் எண்ணத்தை தன் உள் உணர்வால் அறிந்த நீலகண்டர் தன் கண்களைத் தானே அவித்துக் கொள்கிறார். செய்தி அறிந்த அரசன் ஓடோடி வந்து நீலகண்டரைப் பணிகிறான்.ஸ்ரீ மீனாக்ஷியை வேண்டி நீலகண்டர் பாட‌
இழந்த கண்களை மீண்டும் பெறுகிறார்.

அரசனிடம் விடை பெற்று எஙகள் பூர்விக கிராமமான  அருவன் குளம் என்னும் நாரணம்மாள்புரத்தில் வந்து தங்குகிறார்.

இக்கிராம‌ம் நெல்லைக்கு அருகில் தாழையூத்து அருகில் உள்ளது.அக்கரையில் உள்ள பாலாமடையில் ஸ்ரீநீலகண்ட தீக்ஷதரின் சமாதிக் கோவில் உள்ளது.என் 'வேர்களைத்தேடி ஒரு பயணம்' ஆக்கத்தில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
==============================================
ஸ்ரீ கிருஷ்ண அய்யப்ப சுவாமிகள் என்று ஒரு பெரியவர் இருந்தார். இப்போது அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.கிரஹஸ்த சன்னியாசி. அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.ஓய்வு பெற்ற பின்ன‌ர் மனைவியுடன் பாத யாத்திரையாகவே பலக்ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தார்.பஜனை சம்பிரதாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

நான் பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபட்டு வந்த சமயம் அவர் ஒருமுறை அங்கு வந்திருந்தார்.அவரிடம் பிள்ளையாரின் ஊனம் சுட்டிக் காட்டப்பட்டது.சுட்டியதோடு அல்லாமல் "பின்னப்பட்டவரை வழிபடலாமா?"என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.

சுவாமிகள் அமர்ந்து தியானம் செய்து விட்டுக் கூறினார்.
 "நல்ல நிலையில் முழுமையாக‌ இருக்கும் ஒரு மாக்கல் பிள்ளையாரை பெரிய பிள்ளையாருக்கு முன்பாக வைத்துவிட்டு, இருவருக்குமாகச் சேர்த்து ஆராதனைகளை செய்யவும்" என்று அருள்வாக்காகக் கூறினார்.இதுதான் நல்ல மகான்களுக்கான‌ அடையாளம். எதையுமே நிராகரிக்க மாட்டார்கள்.அவர் கூறியபடியே வழிபாடு செய்து வந்தேன்.
================================================
முன்பு ஊன முற்றவர்களைப் பல கொச்சைச் சொற்களால் அழைத்துவந்தோம். இப்போது அவர்களை 'மாற்றுத் திறனாளிகள்'என்று மதிப்பாக அழைக்கிறோம். மனிதர்களில் உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கே மதிப்பளிக்கத்துவங்கிவிட்ட நாம் தெய்வச் சிலைகளில் பழுது ஏற்பட்டால்  அவற்றைத் தள்ளிவிடலாமா?

   "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
        தரத்தினில் குறைவதுண்டோ?==உங்கள்
    அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
        அன்பு குறைவதுண்டோ?"

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்  
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்.

ஆக்கம்: ஆலாசியம், சிங்கப்பூர்

சோதியனே சுடர்மிகு ஞான வடிவானவனே 
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே 
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த  
ஆதி அந்தமில்லா அமுதே

முதே அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே  
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட 
குமுதவல்லி தொழும் தேவனே!

தேவனே தேவாதி தேவனே ஆதிமூலனே 
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே 
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!

பிரம்மமே ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே  
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால் 
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே 
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!

ஞாயிறாய் ஒளிரும் அக்னிப் பரமனொடு 
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி 
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!

(ஞமர் - பரந்து விரிந்த 
ஞெகிழி - சலங்கை 
ஞமலி – கள்  / மயில் 
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது 
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய பெரும் தீ.
 
பொங்கிய பேரொளி பரவெளி எங்கும் 
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு 
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து 
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது  முப்புரமே.

முப்புரமேவிய செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி முட்டிமோதி 
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின் ஆளுமையிலே 
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக  
எப்பொழுதும் எழில் கொஞ்சுகிறதே.  

ஆலாசியம் கோ.
சிங்கப்பூர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5


ஜல்லிக்கட்டு
ஆக்கம் தனுசு

நித்தம் ஒரு யுத்தத் திருவிழா என்வாழ்வில்
அதில் முரண்பட்டமொத்தக் காளைகளும்
என்னை அரவமின்றி அழிக்க
முப்பொழுதும் முயலும் முரட்டுவிழா.

என் தோட்டத்து  தேங்காயை எடுத்து
தெருப் புள்ளையாருக்கு உடைக்க 
சீவிய கொம்புடன் வரும் "பொலிகாளை"களை
எந்த தெம்பு கொண்டு அடக்குவது.

மிரட்டல் பார்வையால் பணியவைத்து
எதையும் சுருட்டிக் கொள்ளும்
இந்த பெரும்விழி "புலிக்குளகாளை"களை
எந்த திமிர் கொண்டு அடக்குவது.

மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது.

கொள்ளையிலே பங்குதந்து 
என்னையும்  கள்ளனாக்க துடிக்கும்
இந்த முள்ளுக்காடு  "காங்கேய காளை"களை
எந்த நீரில்லா கள்ளிக்காட்டில்  தள்ளுவது .

ஆறை நூறாக்கி கூரையை கோபுரமாக்கையில்
ஊமையாய் உலைவைக்கும் உறவென்ற
மவுனமான "மணப்பாறை  காளை"களை
எந்த மூக்கணாங் கயிறுடன் இறுக்குவது.

உள்ளத்தை மறைத்து உதட்டால் சிரித்து
என் உழைப்பை உண்டு பிழைப்பை பழிக்கும்
சிங்காரமான  "சிந்துகாளை"களை
எந்த சாட்டைக்கழி கொண்டு  விரட்டுவது.

சாந்த சொருபியாய் சோப்புபோட்டு
சத்தமின்றி என்சங்கு அறுக்கும் 
சித்திரைப் பூ"சில்லிகாளை"களை
சொல்லாமல்  அடிக்க எந்த சாந்து பூசுவது.

வெல்ல வார்த்தைகளை வாரியிறைத்து
அவர்களின் சுமையை என்மீதேற்றும்
வெள்ளை வேட்டி "பூம் பூம் காளை"களை
எந்த உறுமி அடித்து விரட்டுவது.

ஊர்  என்னை அறிய - நான்
என்னை அறிந்து போகையில்- இந்த
வேலிதாண்டும் காளைகள்
என்னை பணிய  செல்வதெப்படி?தணிய சொல்வதெப்படி ?

மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
தினவெடுத்த தோளோடு  தொடை தட்டி புறப்படுகிறேன் 
ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க .
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


புலிக்கட்
ஆக்கம் தனுசு

(அனைவருக்கும் வணக்கம். எண் 3ற்கான பதிவின் பின்னூட்டங்களைப் படித்திருப்பீர்கள். "நாம் ஊரில் ஒரு மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்" என்று நான் பின்னூட்டமிட, "வெளி நாட்டில் இருக்கும் தைரியமா" என்று தேமொழி அவர்கள்  பின்னூட்டமிட, "நான் தைரியமான ஆள்தான் எண்கள் குடும்பத்திற்கு புலிகட் என்றொரு பட்டப் பெயர் இருக்கு அது ஏன் என்றால், எண் தாத்தா புலியை  அடித்தே கொன்றார்" என்று பின்னூட்டமிட , "அதை சொல்லுங்கள்" என்று ஆலாசியம் ,உமா ஆகியோர் கேட்க, எங்களின் நினைவை விட்டே விலகிப் போன ஒரு நிஜ சம்பவத்தை எழுதி உள்ளேன்)

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சக் கொல்லை எனும் கிராமம் தான் என் தாத்தாவின் ஊர். எந்தந்தையாரின் எட்டு பத்து வயதில் நடந்த சம்பவம்.

 என் தாத்தாவிடம் ஆடு மாடுகள் நூற்றுக் கணக்கில் இருந்த நேரமாம்.இதுதான் இவருக்கு தொழில்.சுற்றி இருக்கும் ஊர்களில் நடக்கும் சந்தைகளில்   கொண்டுபோய் விற்று வருமானம் பார்ப்பார்.  வருமானம் இதிலிருந்துதான் .

ஆண்டுகள் சரியாக நினைவில்லை , சுதந்திரம் வாங்கிய பின்பு 50 களில் நடந்த சம்பவம் . இப்பொழுதும் இந்த மஞ்சக் கொல்லை கிராமம் ,இன்னும் படு
கிராமமாகவே இருக்கிறது. இப்போதைக்கு சொன்னால் விழுப்புரம் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் இணையும் இடத்தில் இருக்கிறது. நெல்லிக் குப்பம்  ,குறிஞ்சிப் பாடி ஆகிய ஊர்களை தொட்டுக் கொண்டு இருக்கும் ஊர்.  இப்போது வெறும் முந்திரி காடாக இருக்கிறது. அப்போது பனை மரங்களும் , பலா மரங்களுமாக இருந்த வனம்

மேய்ச்சலுக்காக இந்த இடங்களில்தான் ஆடு மாடுகளை விடுவார்கள் .வனத்திலிருந்த புலிகளின் அட்டகாசம் அடிக்கடி எங்களின் ஆடு மாடு மீது நடக்கும்

,ஊருக்குள்ளும் ஓரிருமுறை புலி வந்துள்ளது .

புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தும் அங்கேயே பட்டி வைப்பதும் அதனை இரவு பகல் என்று பாராமல் விசிட்டிங் செய்வதும் அந்த தினசரி வேலைகளில்  அதுவும் ஒன்ர்றாகி விட்டிருந்தது அவருக்கு.

 என் தந்தை தான் என் தாத்தாவுக்கு கடைசி பையன்.என் தந்தையோடு பிறந்தவர்கள் மூன்று ஆண்கள்,நாக்கு பெண்கள், என் தந்தை பிறந்து இரண்டு மூன்று  மாதத்தில் என் பாட்டி இறந்துவிட்டார்கள். ஆகையால் என் தாத்தாவோடு என் தந்தை எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை மேய்ச்சலுக்கு விட்ட கால்நடைகளை பார்க்க என் தந்தையையும் கூட்டிக் கொண்டு போனார் என் தாத்தா. ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் பட்டிக்கு பக்கத்தில் இரண்டு புலிகள் அங்கு பதுங்குவதைப் பார்த்து விட்டார்., காய்ந்த சுள்ளிகளையும்  ,இலைகளையும்  போட்டு நெருப்பு உண்டாக்கி அவைகளை விரட்டி அடித்தார் ,ஓடிப்போன புலிகள் மீண்டும் வரலாம் என்ற கணிப்பில் அங்கேயே தங்கி விட்டார் மாலை  நெருங்கும் வரை. மீண்டும் அந்த புலிகள் வரவில்லை என்பதால் ஆடு மாடுகளை வேலிக்குள் விட்டு அடைத்து விட்டு எந்தந்தையை அழைத்துக் கொண்டு  வீட்டுக்கு கிளம்பினார் . ஆடு மாடுகள் தங்கும் பட்டியிலிருந்து வீட்டுக்கு வர சுமார் ஒன்னரை மணி ஆகும்.

இப்போது கெடிலம் நதி என்று சொல்லும் ஆற்றின் ஒரு சிறிய கிளை இந்த பகுதியில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த கெடிலம் நதி கடலூரில் வந்து  கடலில் கலக்கிறது . இது செம்மண் பகுதி. ஆடு மாடுகள் நீர் குடிப்பதெல்லாம் இதில் தான். 

அந்த வாய்க்காலில் இறங்கி முகம் கழுவி திரும்பும் போது எதிரே முறைத்துக் கொண்டு அதில் ஒரு  புலி புதரிலிருந்து வெளி வர ஆடிவிட்டார் என் தாத்தா. .

அவர் கவலை தன் மகன் மீது.

உடனே என் தந்தையை வாய்க்காலில் இறக்கி கழுத்து வரை நீரில் நிற்க வைத்து விட்டார்.

தான் மட்டும் கரை ஏறினார். பதுங்கிய புலி பாய சாமார்த்தியமாக விலகி விட்டார்.பாந்த புலி கீழே விழா அதன் பின்னங்கால்களைப் பிடித்தக் கொண்டு கர கர வென பத்து,இருப்பது  சுத்து சுற்றி தரையில் ஓங்கி ஓங்கி அடிக்க ரத்த வெள்ளமானது புலியின் தலை , இறந்ததை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு துண்டை இரு பக்கம் தோள்களிலும் போடுவது போல் ,புலியை தூக்கி தன் தோள்களின் குறுக்கே போட்டுக் கொண்டு , என் தந்தையையும் அழைத்துக் கொண்டு ஒருமணிநேர  நடையில் அந்த பாரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அந்த வீர செயலால் ஊர்க்காரர்கள் "புலிக்கட்டி" என்று அழைத்தார்கள் .

இதில் புலிக்கட் எங்கிருந்து வருகிறது. புலிக்கட் என்றால் என்ன.
புலிக்கட் என்ற வார்த்தை புரியாததாக இருக்கும்.அது என்ன வென்றால்;
அந்த காலங்களில் நாடகங்களில் நடிப்பவர்களின் கேரக்டரை பொறுத்தே நாடக நடிகர்களின் பெயர்கள் வருமாம் .

கள்ளபார்ட் நடராசன் , ராஜாபார்ட் ரங்கதுரை என்பதெல்லாம் அப்படி வந்ததுதான் . இன்றைக்கு இளைய தளபதி, சின்ன தளபதி என்று வருவதுபோல்  அன்றைக்கு "பார்ட்"என்று தான் வருமாம்.

"கள்ள பார்ட்" என்றால் கள்ளன் ,திருடன் கேரக்டரகளையே அதிகம் செய்பவர்.
"ராஜாபார்ட்" என்றால் ராஜா கேரக்டரையே செய்பவர்கள் .

அந்தமதிப்பு மிக்க  "பார்ட்" பட்டம் அன்றைக்கு "கட்டி" அடித்தார் என்பதை குறிக்கும் வகையில் என்தாத்தவுக்கு" புலி கட்டி  " ஆக மாற்றி ஊர்காரர்கள்
அழைத்தார்கள் , அந்த" கட்டி" நாளடைவில் மருவி "கட்" என்றாகியது. அதுதான் "புலிகட் "

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வேனில், ஒரு நாய் குறைத்தாலே நாம் அடுத்த முறை அந்த தெருப் பக்கம் போக  மாட்டோம். பூனை குறுக்கே  வந்தால் அன்றைய பொழுது அத்தோடு முடிந்தது. இப்படி இருக்கையில், புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தே போவது, என்ன வகை துணிச்சல். புலி எதிரே உறும அவர் பதப் படாமல், ஓடாமல், ஒளியாமல்
நிதானமாக தன் மகனை நீரில் இறக்கி பாது காப்பாய் வைத்து விட்டு, புலியை எதிர் கொள்வது என்ன வகை துணிச்சல்.

என் தந்தை என்னிடமும் என் தம்பி இடமும் எப்போதும் சொல்வது உள்ளத்திலும் உடம்பிலும் பலம் இருக்க வேண்டும் என்பார். சின்ன வயதிலேயே உடற் பயிற்சி  செய்ய வைத்து பழக்கப் படுத்தி விட்டார். சிலம்பு விளையாட்டு கற்று கொடுத்தார்.

இந்த சிலம்பு விளையாட்டில் "படை விரட்டி" என்று ஒரு வகை கம்பு சுழல் இருக்கிறது. பத்து பேர்கள் நம்மை சுற்றிக் கொண்டாலும் கிர் கிர் கிர்ரென்று சுழற்ற  பத்து பேர்களும் பஞ்சாய் பறந்து விடுவாரகள்.

ஒரு மஞ்சள் , மஞ்சக்கொல்லை வரை வளர்ந்து என் தாத்தாவையும் என் தந்தையையும் நினைக்க வைத்தது. வகுப்பறையில் இதனை நான் பகிர்ந்துக்
கொள்வேன் என்று சிறிதும் நினைத்து பார்க்க வில்லை.

 தொலைந்து போன ஒரு நினைவை உயிரூட்டி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வைத்த தேமொழி யின் பின்னூட்டத்திற்கு மிகப் பெரிய நன்றிகள்.

நான் என்பெயரை" புலிகட் தனுசு" என்று வைத்துக் கொள்ளலாமா?
-தனுசு- 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7

வகுப்பறை நகைச்சுவை
அனுப்பியவர் வெ.கோபாலன், தஞ்சாவூர்
TEACHER:   Maria, go to the map and find North America .
MARIA:         Here it is.
TEACHER:  Correct. Now class, who discovered America ?
CLASS:         Maria.
____________________________________

TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN:           You told me to do it without using tables.
__________________________________________

TEACHER: Glenn, how do you spell 'crocodile?'
GLENN:         K-R-O-K-O-D-I-A-L'
TEACHER:  No, that's wrong
GLENN:         Maybe it is wrong, but you asked me how I spell it. (I Love this kid)
____________________________________________

TEACHER: Donald, what is the chemical formula for water?
DONALD:     H I J K L M N O.
TEACHER:  What are you talking about?
DONALD:     Yesterday you said it's H to O.
__________________________________

TEACHER:  Winnie, name one important thing we have today that we didn't have ten years ago.
WINNIE:       Me!
__________________________________________

TEACHER:  Glen, why do you always get so dirty?
GLEN:           Well, I'm a lot closer to the ground than you are.
_______________________________________

TEACHER:    Millie, give me a sentence starting with ' I. '
MILLIE:           I is..
TEACHER:    No, Millie..... Always say, 'I am.'
MILLIE:           All right....  'I am the ninth letter of the alphabet.'     
________________________________

TEACHER:   George Washington not only chopped down his father's cherry tree, but also admitted it.  Now, Louie, do you know why his father didn't punish him?
LOUIS:          Because George still had the axe in his hand.   
______________________________________

TEACHER: Now, Simon, tell me frankly, do you say prayers before eating?
SIMON:        No sir, I don't have to, my Mom is a good cook..
______________________________

TEACHER:   Clyde , your composition on 'My Dog' is exactly the same as your brother's. Did you copy his?
CLYDE :       No, sir. It's the same dog.
___________________________________

TEACHER:  Harold, what do you call a person who keeps on talking when people are no longer interested?
HAROLD:   A teacher
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8


நகைச்சுவை: எதிர்ப் பாட்டு
ஆக்கம் தேமொழி

(சபரியின் நகைச்சுவைகளை பெண்களின்/மனைவிகளின் கண்ணோட்டத்தில் மாற்றி அனுப்பியுள்ளேன்.  தமிழில் எழுதியிருக்கலாம், ஆனால் "H" என்ற
ஆங்கில எழுத்துக்கு எழுதியிருப்பதாலும், அவர் நகைச்சுவை துணுக்குகளுக்கு பதில் போல் இருப்பதாலும் ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தது.)

1.
The devil asked the wife who is a recent admission at the hell; "Do you miss your Home?"
Lady replied:  Please don't remind me of that hell, I am just enjoying my life here.

2.
Wife has suspicion of her husband's recent change in behavior of visiting neighbors home.  To find out the truth she decided to trick him.
In the middle of the night she shouted:
"Up! Quick! My husband is back!"
The husband gets up and jumps out of the window.

3.
Do you know why husband starts with 'H'...
Because for all the wife's requests… they reply with only one word that starts with "H"...
For example:….a wife is in the middle of preparing lunch, suddenly her baby is started screaming.

Wife: Honey, the baby is crying, here is the bottle ...please feed him.
Husband: How?
Wife: Ok…I will be there in a minute, at least change his diaper
Husband: How?
Wife: Good grief, at least remove the dirty diaper and wash him well, give him a bath
Husband: How?
Wife: Let us make a deal, until I am taking care of the baby please take care of this meal preparation
Husband: How?

4.
Nobody teaches Volcanoes to erupt, Tsunamis to devastate, Hurricanes to sway around & no one teaches How to choose a husband,
NATURAL DISASTERS JUST HAPPEN.

5.
Difference between Friend & Husband.
You can tell your Friend "you are the best person I ever met"
But do you think you can honestly tell THAT to your husband

6.
Judge: why did you shoot your husband instead of shooting his lover?
Wise wife: I just got rid of the cause instead of just dealing with the symptoms one by one

7.
Doctor: Sir, your wife needs rest and peace, so please arrange for a vacation.
Husband: Doc, where should I take her, do you think a hill station would be fine?
Doctor: I don't care where you want to go, I suggested you to go by yourself and leave her alone.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9

 என்ன வெட்டி முறிக்கிற -பகுதி இரண்டு!!!!
ஆக்கம்: ஜி.ஆனந்தமுருகன்
          
    இரண்டு குழந்தையுடைய தம்பதிகள்,வேலைக்கு செல்லும் கணவன் வீட்டை கவனித்து கொள்ளும் மனைவி.சீராக சென்று கொண்டுரிந்த வாழ்க்கை (NH 45 ரோட்டில் செல்வது போல்) திடீரென ஈகோ எனும் அரக்கனின் பார்வை விழுந்தது.
    
    ஏற்ற,தாழ்வுகள்,நிறைந்ததுதானே மானிட வாழ்க்கை!!அது தானே சுவாரசியம்!! ECG எடுக்கும் பொழுது திரையில் அலைகள் மேலும்,கீழும் சென்று வந்தால்தான் மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று அர்த்தம்மாகிறதல்லவா!!ஒரே சீராக (flat) இருந்தால் சவம் என்று பொருளல்லவா?!  
    
    ஆணாதிக்கம்,ஏழரையை ஆரம்பித்தது,நான் காலையிலருந்து,சாயங்காலம் வரை வேலைக்குபோய் கஷ்ட்டப்பட்டு உழைச்சிட்டு வரேன்!உன்னாலே வீட்ட,குழந்தைகள்,கூட கவனிக்க முடியலையா? "நீங்க வேலைக்கு போயிட்டு வந்தறீங்க,நான் வீட்ல எந்த வேலையும் இல்லாம அப்பிடியே உக்கந்துதானே இருக்கேன்" இது மனைவி (கலவரம்).தொடர்ச்சியாக மனைவி,"புள்ளைங்களா ரெண்டும்,அப்படியே ஒங்களமாதிரி!!?யாரோட கஷ்டத்தையும் புரிஞ்சிக்கற ஜென்மங்களா!!ஒவ்வரு நாளும் உயிரு போகுது"....கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொள்கிறாள்.அவனுக்கோ இப்போதே கண்ண கட்ட ஆரம்பித்து விட்டது!!ஒரு வேலை எறும்பு புத்துக்குள் கையை விட்டோமோ?என சந்தேகமெல்லாம் வந்து மறைந்தது.  
   
    இருந்தாலும் தன்மானம் விட்டுகொடுக்கவில்லை.....என்னடி,நீ மட்டும்தான் புதுசா குழந்தை பெத்த மாதிரி பேசற?!..அவள்,.நான் பழசாதான் பெத்துருக்கேன்...அதுங்க first பிள்ளைகளே இல்லை!?ஒங்களோட வகையறா!!??......அப்பிடின,எங்க குடும்பத்தை பார்த்த உனக்கு காட்டுமிராண்டியாக தெரியுதா!!??........அதை நான் வேற சொல்லனுமா!? "இந்த வீட்டுக்கு மாதம் 4000 சம்பளம் கொடுத்த கூட எந்த வேலையாளுங்க வரமான்ட்டாங்க" மனதின் ஆதங்கத்தை கொட்டினாள்.  
    
    கோபம் தலைகேறிய கணவன் "என்ன வீட்டுலே பெரிசா வெட்டி முறிக்கிறே!? நான் செய்யற வேலைய ஒன்னாலே செய்யமுடியுமா? ஒன்னோட வேலைய செய்ய என்னக்கு ஒரு மணி நேரம் போதும்  பண்ணிமுடிசுடுவேன்!!
      
    ம்ம்.க்கும்!!!.கிழிச்சுடுவிங்க!!?அவனை மேலும் வெறுப்பேற்ற அவன் தசாவதாரம் அல்லாமல் பல்வேறு அவதாரங்கள் எடுத்து ஆட,அவள் கூலாக டிவி சீரியலில் மூழ்கினாள்.அன்று அவனுக்கு விடுமுறையாதலால் வெளியே சென்று lunch க்கு வந்தான்.கோபமாக மனைவியை பார்க்க ..அவள் உணவு பரிமாற கிச்சனுக்கு செல்ல இவன் சோபாவில் அமர்த்து டிவியை நோக்கினான்.   

    என்ன சாருக்கு கோபமெல்லாம் போச்சா!இல்லையா!?கிச்சனிலிருந்து குரல்!? ஒன் வேலை எதுவோ?அதை மட்டும் பாரு!சும்மா,என்னை சீண்டாதே!!     

    சானலை மாற்றினான்."தினமும் மூணு கிளாஸ் பால் கொடுக்கிறேன்" விளம்பரம் வெறுப்பேற்றியது.மீண்டும் சானல் மாற்றம், மானட, மயிலாட்டங்களூம் பிடிக்காமல் மீண்டும் மாற்ற  "நல்ல ஆண் மகன் கணவனாகவே வந்து வாய்த்திடும் பொது" சன் டிவில் சீரியல் டைட்டில் சாங் ஒலித்தது. "நல்ல கேளுங்க உங்களுக்குத்தான் இந்த பாட்டு" சமயலறையிலிருந்து  சகபத்தினி.
    
    வேறு சானல் அழுத்தினான்'போன ஆட்சியில் போட்ட நடைமுறை படுத்திய திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கபடுகின்ற்ன  "ஒரு அரசியல்வாதி கத்திகத்தி  பிசிறரடைத்த குரலில்...ஒடனே கணவன் சத்தமாக "போன ஆட்சியில் செய்த கல்யாணம் கூட செல்லாதாம் "சட்டம் கொண்டுவந்து இருக்காங்கலாம்"....அடுப்படியில் "கடுகு"பொரிக்கும் (வெடிக்கும் ) சத்தம் கேட்டது,கூடவே அவளும் பொறிகிறது தெரிந்தது.மீண்டும் சானல் மாற்றம் முதல்வன் திரைப்படம் சென்றது.அதை பார்த்தவுடன் மனைவி "இது போல் (ஒரு நாள் முதல்வன் போல்)     ஒரு  நாள் நீங்க பெண்ணாக மாறனும்,  நான் ஆணாக மாறனும் நாள் வேலைக்கு போய்ட்டுவரனும்.நீங்க வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வைக்கணும்!!?? அப்படியிருந்தால் நல்ல இருக்கும்லே!!!அவள் கேட்க என்ன ஆச்சரியம் மிக பிரமாண்ட ஜோதி அவர்கள் எதிரில் தோன்றியது அதிலிருந்து இறைவன் பேசத் தொடங்கினார்.       
    குழந்தைகளே! உங்களது உரையாடல்களை கேட்டு உங்களுக்கு உதவி புரிய வந்துள்ளேன்."கணவன் இறைவனிடம் "கஷ்டமுன்னு கூப்பிட்டால் வரமாட்டேன்ரீங்கள்"  கடவுள்  "அது கர்மவினை போனஜென்ம பாவ புண்ணியம் அதை நீங்கள் அனுபவித்து ஆகவேண்டியது கட்டயமாகிறது"

என்ன சாமீ சமச்சீர் கல்வி அமுல் படுத்திற  மாதிரி சொல்றிங்க "போன மாசம் செய்த தப்புக்கு தண்டனை கொடுத்தா என்ன தப்பு பண்ணேன்னு தெரியும்? போன ஜென்ம தப்புக்கு தண்டனை கொடுத்தா எப்படி சாமீ?!!

கடவுளோட 'மூடனே,உன் நாக்கிலே சனியோட ஆதிக்கம் உள்ளது. மூன்று நாட்கள் நீ உன் மனைவி ரூபத்திலும்,உன் மனைவி உன் ரூபத்திலும் மாறுவீர்களாக!!! மீண்டும் சந்திப்போம்.எனக்கூறி மறைகிறார்.
        
    மறுநாள் அதிகாலையிலே முழிப்பு வந்தது அவளாக மாறிய  அவனுக்கு, எழுந்து குளித்து காப்பியில் ஆரம்பித்து,வாசல் தெளிப்பது,பசங்களுக்கு சுடுதண்ணீர் போட்டு,எழுப்ப சென்றால் school க்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை,சமாதானபடுத்தி அழைத்து,குளிக்க வைத்து தலை சீவி,uniform போடும் பொது குக்கரில் விசில் சத்தம்,அவசரமாக இறக்கி கொதிவரும் நிலையில் இருந்த ரசத்தை ஆப் செய்து விட்டு,காலை சிற்றுண்டிக்காக தோசை கல்லை அடுப்பில் போடும் பொது மணி 8.20 இன்னும் இருபது நிமிடங்களே உள்ளன.அதற்குள் அவனாக மாறிய அவள் குளித்துவிட்டு வர பசங்க பாட்டில்லில் தண்ணீர் பிடிங்க!........என்னக்கு ஆபீஸ் டைம் ஆயிடுச்சு!! 
   
    அதையும் அவனே செய்ய எல்லோரையும் கிளப்பிவிட்டபிறகு மணியை பார்க்க 9.10 பின் அவசரமாக வீட்டை பெருக்கி,மாப் பண்ணி பாத்திரம் துலக்கும் போதுதான் மனதில் லைட் ஆக மணியடித்தது அவசரப்பட்டு விட்டோமோ!!! சரி!பார்ப்போம் மூணு நாள்தானே என தனக்கு தானே சமாதனம் பண்ணிக்கொண்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
      
    அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எல்லாவற்றையும் arrange செய்து முடிக்க மணி 10.30 காலை உணவை சாப்பிட்டுவிட்டு,பேங்க் சென்று பணம் வித்டிராவ் பண்ணிவிட்டு,அத்தியாசிய மளிகை பொருள்கள் வாங்கி வீடு வந்து  சேர்ந்த பொழுது மணி 2.30  வாஷிங்மெஷ்னில் துவைத்து முடித்ததற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது. அவைகளைக் காயப்போட்ட பிறகு மதிய சாப்பாட்டு மணி 3.௦௦ க்கு,மனதில் 'என்னடா இது நாய் பொழப்பு?!'என எண்ணியவாரே பள்ளி முடிந்தது வரும் குழந்தைக்களுக்கு பால் கொதிக்க வைத்து ஸ்நாக்ஸ் ரெடி பண்ணுவதுக்குள்,  
'கீங்க்" ஸ்கூல்  பஸ்சின் ஹாரன் சவுண்ட் கேட்டது.அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஓட்டமாக பஸ் நிறுத்தத்திற்கு ஒடி குழந்தைகளின் ஸ்கூல்பாக்கை வாங்கி கொண்டு லஞ்ச்பாகையும் எடுத்து கொண்டு      
வருகையில் மகன் "மம்மி,என்னைய ராகுல் அடிச்சிட்டான் இப்பவே கேளுங்க!?......சரி வா நாளைக்கு பஸ் எத்துறப்போ கேட்கிறேன்  அடம் பிடித்தவனை சரிபண்ணி அழைத்துகொண்டு வருவதற்குள் பால் பொங்கும் நிலைக்கு வந்து விட shoe வை மம்மி நீ தான் அவித்துவிடனும் இது பெரிய பெண். ஸ்நாக்ஸ்,பால் கொடுத்து விட்டு கொடியில் மலர்ந்து இருக்கும் இரட்டை மல்லியை பறிப்பதற்கு மொட்டை மாடிக்கு செல்லும்முன் இரண்டு பேரும் பேஸ் வாஷ் செய்து விட்டு தனி தனியா உக்கார்ந்து ஹோம் வொர்க் செய்யணும்.சண்டை போட்டுக்கிட்டு இருந்தீகள்? அவ்வளவுதான்! சொல்லிட்டேன்.       
    பூப்பறித்து விட்டு இறங்கி வந்து பார்த்தால் குருஷேத்ரம் போல் வீடு!? இரண்டு பேரையும் விட்டு சுழட்டி அடித்து விட்டு பூக்கட்ட உட்கார்ந்தால் மணி 6.00  "அம்மா,பசிக்கிறது!" இது பையன்.சாப்பாடு போட்டுப் பாடங்களை ரிவிசன் கொடுத்து கொன்றிருக்கும் பொது கணவரின் வருகை திரும்பவும் காபி, ஸ்நாக்ஸ் சாப்பாட்டு பாத்திரம் கழுவுதல். இரவு உணவு ரெடி செய்தல் மணி படுக்கும் போது 10.30 மறுநாளும் இதே ரீப்பீடு!? அதற்க்கு அடுத்தநாள் same blood மூன்றவது நாள் கடவுள் இருவர் எதிரிலும் தோன்றுகிறார்.

உடனே இவன் "கடவுளேனு காலில் விழுந்தான்" மன்னிச்சுடுங்க சாமி உடனே என்னை பழையபடி மாத்திருங்க!அப்படின்னு கதறினான்.கடவுள் "மகனே.எனக்கு அந்த அதிகாரம் இல்லை.என கூறினார்.அப்படியெல்லாம் சொல்லபடாது சகல வல்லமையுடன் உள்ள உங்களுக்கு அதிகாரம் இல்லையா??என்ன சாமி குழப்புகிறீர்கள்?!!!!?.....ஆம் பக்தா நேற்றிரவிலிருந்து நீ கர்ப்பமாக இருக்கிறாய்!!ஆதலால்,அடுத்த ஒன்பது மாதங்கள் நீ காத்திருக்க வேண்டியதுதான்!? பெண்கள் படும் பிரபல வேதனையான பிரசவ வேதனையை நீ அனுபவித்த பின் உன் உருவம் மாறும்!?என கூறி மறைந்தார். 
          
    கதையின் நீதி:எப்பொழுதும் தப்பு செய்யகூடாது!! ( கல்யாணமான  பிறகு அது எப்படி தப்பாகும்!!!  கேள்வியெல்லாம் நல்லா கேளுங்க!!? மூணு நாளும்!!!!   (என்ன,என்ன தப்பு நீங்களே  பட்டியலிட்டுக்   கொள்ளவும்)  
                                                                                                                                                                                                                      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++       

10

Eight Gifts that Do Not Cost A penny!
Sent by S.Sabari Narayanan, Chennai

        1. THE GIFT OF LISTENING...
            But you must REALLY listen.
            No interrupting, no daydreaming,
            No planning your response.
            Just listening.       

        2. THE GIFT OF AFFECTION...
            Be generous with appropriate hugs,
            Kisses, pats on the back, and handholds.
            Let these small actions demonstrate the
            Love you have for family and friends.
       
        3. THE GIFT OF LAUGHTER...
            Clip cartoons.
            Share articles and funny stories.
            Your gift will say, "I love to laugh with you."
        
        4. THE GIFT OF A WRITTEN NOTE...
            It can be a simple
            "Thanks for the help" note or a full sonnet.
            A brief, handwritten note may be remembered
            For a lifetime, and may even change a life.
        
        5. THE GIFT OF A COMPLIMENT.. .
            A simple and sincere,
            "You look great in red,"
            "You did a super job,"
            Or "That was a wonderful meal"
            Can make some one's day.

        6. THE GIFT OF A FAVOR...
            Every day, go out of your way
            To do something kind.

        7. THE GIFT OF SOLITUDE...
            There are times when we want nothing better
            Than to be left alone.
            Be sensitive to those times and give
            The gift of solitude to others.

        8. THE GIFT OF A CHEERFUL DISPOSITION. ..
            The easiest way to feel good is
            To extend a kind word to someone.
            Really, it's not that hard to say,
            Hello or Thank You.
++++++++++++++++++++++++++++++++++++++++++