 |
| தில்லி உமா அக்காவிற்கான இரட்டையர்கள் படம் |
---------------------------------------------------------------------------------------------
மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 6 கண்மணிகளின் 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!
1
மண் ஆசை
ஆக்கம்: தனுசு
++++++++++++++++++++++++++++++++++
விளைநிலங்கள் எனும் நில மகள்
புலம் பெயர்ந்து
விண்ணுக்கு சென்றுவிட்டாள்
பொன்மகள் என்ற அடைமொழியோடு.
நன்செய் நிலமும் நலிந்துவிட்டது
புன்செய் நிலமும் பொசுங்கி விட்டது -
இவை யாவும்
பணம்செய் நிலமாய் மாறிவிட்டது.
நெல்லுக்கும் இடமில்லை
கரும்புக்கும் களமில்லை
வாழைக்கும் காலமில்லை-நடக்கும்
வழிதடதிற்கும் வழியில்லை.
மாந்தோப்பும் மறைந்து விட்டது
தென்னந்தோப்பும் தொலைந்து விட்டது
புளியந்தோப்பும் புதைந்துவிட்டது
பூந்தோட்டதிற்கும் பூமாலை போட்டாகிவிட்டது.
கரிசல் மண்ணும் கால்கோடி
களி மண்ணும் முக்கால் கோடி
வெறும் மண்ணும் பலகோடி
கருங்கல் இடமும் நிறைக்கும் கோடி
ஏறுமலை ஏறு என வீறு கொண்டு ஏறுவது
விளைநிலத்தின் நிலையில்லா விலைகளா?- மண்
பித்துகொண்டு அலையும்
பணம் கொண்ட மனங்களின் கொலை வெறியா?.
காலடியில்கிடக்கும் மண் மீது
ஆசைஏனடா மனிதா - நீ
ஊரை சுருட்டி உயிலாக்கி கொண்டாலும்
இறுதியில் இருக்கப்போவது
இலவச மண்ணில்தான்.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
 |
| ராதையும் கிருஷ்ணரும் |
ஓவியம் ஆக்கம் தேமொழி
தேமொழி அவர்கள் தன் பதினம் வயதில் தீட்டிய ஓவியங்களில் ஒன்று. ஒரு மாத நாட்காட்டியில் உள்ள ஓவியம் ஒன்றினைப் பார்த்து அவர் வரைந்தது. வாட்டர் கலரில் வாஷ் டிராயிங் போல் இல்லாமல் ஆயில் பெயிண்ட்டிங் எஃபெக்ட் வருவது போல வரைவது அவருக்குப் பிடித்த முறை. அதன்படியே வரைந்துள்ளார். வரைந்து வண்ணம் தீட்ட உபயோகித்து
HB pencil, Water colours, Round Brushes (probably size numbers 0 to 5), and Sketch Pens (camel products of http://www.camlin.com )
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
 |
| ஜெய்ப்பூர் நகரம் |
ஏன் சிரித்தார்கள்?
தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். திருமதி.S. உமா, தில்லி
ஜெய்ப்பூருக்கு முதன்முதலில் கிளம்பும்போது அங்கு மொழிப்பிரச்சனை ஏற்படும் என முதலில் நான் கனவில் கூட நினைக்கவில்லை. சரி நாம்தான் ஹிந்தி படித்திருக்கிறோமோ, எழுதப்படிக்கத் தெரியும், பேசவும் இரண்டொரு மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ரயிலில் ஏறியதுமே நான் நினைத்தது தவறு எனப்புரிந்தது. அவர்கள் ஹிந்தியில் கேட்பது அவ்வளவு எளிதாகப்புரியவில்லை. இரண்டு மூன்று முறை 'என்ன? என்ன?' என்று கேட்டபின்பே புரிந்தது.
திரும்ப பதில் பேசுவதிலும் சிரமமிருந்தது.
ஜெய்ப்பூர் போனதும் பிரச்சனை அதிகமாகவே இருந்தது. ராஜஸ்தானிகள் பேசும்போது அவர்கள் மொழியும் கலந்து பேசுவதால் தலையும் புரியாது, வாலும் புரியாது. வீட்டில் சித்தப்பா குடும்பத்தினருடன் தமிழில்தான் உரையாடல். வேலையில் ஆங்கிலம், ஹிந்தி என்று கலந்துகட்டி அடித்ததால் ஆறு மாதங்களில் ஓரளவு சமாளிக்கும் அளவு தேறியிருந்தேன். ஆனாலும் இன்றுவரை நிறைய வார்த்தைகள் புரியாது.
வேலையில் சேர்ந்து எட்டு மாதங்களிலேயே அதைவிட இன்னொரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே மாறினேன். சித்தப்பா பெண்கள் இருவரும் பார்ட்டி கேட்டதால் சினிமா போகலாம் என முடிவு செய்தோம். 'ஜுட்வா' (judwah) என்ற
ஹிந்திப்படத்திற்குப்போகலாம் என முடிவானது. டிக்கெட் வாங்கிவிட்டு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் கவனம் அங்கே ஒட்டியிருந்த போஸ்டரின் பக்கம் சென்றது. சல்மான்கான் இரண்டு வேறு வேறு கெட் - அப்புகளில் இருந்தார். நான் சும்மா இருக்காமல் தங்கைகளிடம் 'இந்த படத்தில் சல்மான்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் போல' என்றேன். அவ்வளவுதான் எல்லாரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர். எதற்கு என்று புரியவில்லை.
அவர்களும் நிறுத்தும் வழியாய் இல்லை. நானும் பொறுமையை இழந்து 'இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு சிரிக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு என் பெரிய தங்கை சொன்ன பதில்
"உமாக்கா, ஜுட்வா என்றால் இரட்டைப்பிறவி என்று அர்த்தம்"
- S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
குழந்தைகளின் உலகமே தனி!
ஆக்கம்: By K.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
ஒவ்வொன்றையும் ஆய்ந்து,பார்த்து அறிந்து, தொட்டு, சுவைத்து,கேட்டு அறியும் குட்டி விஞ்ஞானிகள்தான் குழந்தைகள். மலர்கள் மொட்டு அவிழ்வதுபோல அவர்களுக்கு இந்த உலகத்தின் ஆச்சரியங்களும், இந்த உலகத்திற்குக் குழந்தைகளும் மலர்கிறார்கள்.
இந்த உலகம் கண்கள் விரிய முக மலர்ச்சியுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
பதிலுக்குக் குழந்தைகளும் உலகத்தை ஆனந்தமாக அனுபவிக்கின்றன.
'உள்ள நிறைவினில் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ...?' கள்ளம் அறியாத குழந்தைகள் உள்ள நிறைவுடன் வளைய வரும்.
உலகாயதம் என்ற நஞ்சு கலவாத தேன் போன்றவர்கள் குழந்தைகள்.
போலியான முகத் திரையயோ, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடமோ குழந்தைகளிடம் இல்லை.
ஒரு குழந்தை துள்ளி விளையாடும் இடத்தில் எல்லா உயிர்களும் புத்துணர்ச்சி அடைகின்றன.8 வயதுவரை இந்த நிலை தொடர்கிறது.
அவர்களுடைய சிந்தனை ஓட்டத்தை யாராலும் கணிக்க முடியாது. நாம் அவர்களிடம் எதிபார்ப்பது ஒற்றைப் பாதை சிந்தனையே. வீட்டிலும், பள்ளியிலும் நாம் போட்டு வைத்துள்ள சட்டகத்தில் அவர்கள் அடங்க வேண்டும்/பொருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.
அதற்குள் தங்களை பொருத்திக் கொள்ள முடியாத குழந்தைகளை மன நிலைக் குறைபாடு உள்ளவர்கள் என்று நாமே முத்திரை குத்துகிறோம்.
அமெரிக்காவில் வித்தியாசமாகப் பள்ளிகள் இருக்கும் என்று ஒரு நினைப்பு இங்கு உள்ளது.அப்படி அல்ல. அங்கேயும் 'நான் சொன்னபடி புரிந்துகொள்' என்ற ஆசிரியர்கள் உண்டு என்பதை அறிந்தேன்.
2 வது வகுப்புப் படிக்கும் மாணவர்களிடம் வித்தியாசமானதைக் காணும் பயிற்சி அளிக்கப்படுகிறது.(Odd man out)
ஒரு மனிதன், ஒரு நாய்,ஒரு பன்றி ஆகியவற்றின் படங்கள் உள்ள தாள் ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் கொடுக்கப் பட்டது. 'இவற்றில் எது வித்தியாசமானது' என்று ஆசிரியை கேட்கிறார். ஆசிரியையின் எதிர்பார்ப்பு குழந்தைகள் மனிதனைச் சொல்ல வேண்டும்; ஏனெனில் மற்ற இரண்டும் மிருகங்கள். ஒரு பையன் பன்றியைச் சொல்கிறான்.
காரண்ம் கேட்டதற்கு இப்படிச் சொன்னான்:'நாயும் மனிதனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பன்றியை அதுபோல ஒரு 'பெட்' ஆகப் பெரும் பான்மையோர் வைத்துக்கொள்வதில்லை. அதனால் இந்த மூவரில் பன்றியே
வித்தியாசமானது."
இதில் என்ன தவறு? இப்படிச் சொல்வதும் ஒரு கோணம்தானே?
ஆனால் அந்தப் பையனுக்கு 'கோணப் பார்வை' என்று பெயர் கிடைத்தது.
இன்னொரு பையன் பசுமாட்டைப்பற்றி 4 வரிகள் எழுதச் சொன்னால் இவ்வாறு எழுதினான்: "பசுவிற்கு 4 காலுண்டு.இரண்டு கொம்பு உண்டு. கிட்டப்போனால் முட்டிவிடும்."
தனக்குத் தெரிந்ததை சொந்தமாக தனக்குத் தெரிந்த மொழியில் எழுதினான் சிறுவன்.
ஆசிரியர் எதிர்பார்த்ததோ,"பசு ஒரு சாதுவான பிராணி. அது நமக்குப் பாலைத் தருகிறது. பால் நமது உடல்/எலும்பு வளர்ச்சிக்கு அவசியமாகிறது'
பையனுக்கு வித்தியாசமான மூளை என்று பட்டம் கட்டப்பட்டான்.
********************************************************
இது நான் தஞ்சையில் ஒரு பள்ளியினுடன் தொடர்பில் இருந்த போது நடந்த சம்பவம்.
ஒரு சிறுவன் பிராமண வகுப்பைச் சார்ந்தவன்.வீட்டில் அவர்கள் வழக்கப்படி அசைவம் சமையல் முற்றிலும் விலக்கப்பட்ட சூழல். நல்ல சூடிக்கையான பையன்.அவனால் சும்மா ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது.
ஒரு நாள் வகுப்பறையின் மூலையில் பெரிய கூட்டம். ஆசிரியை சத்தம் கொடுக்காமல் சிறார்களின் பின்னால் நின்று என்ன என்று கவனித்துள்ளர்.
ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் இரண்டு தங்கமீன்கள் வளைய வருகின்றன. அதனை மாணவர்கள் ஆர்வமுடன் போய் போய் பார்க்கின்றனர்.அதனை அவர்களுக்குக் காட்டுபவன் அந்த அந்தணச் சிறுவன்.
ஆசிரியை தன் இருப்பைக் காட்டிக் கொண்டு விசாரணையைத் துவக்குகிறார்.
அந்த 'மீனவ நண்பனை'விசாரிக்கிறார். அவன் அந்த மீன் பற்றிய எல்லாத் தகவல்களையும் சொல்கிறான். அந்த மீனின் அறிவியல் பெயர், அதன் உணவு முறை,அது கிடைக்கும் கடலின் பெயர், அது இருக்கும் இடத்தில் அமைதியும்
நல்லெண்ணமும் இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கை, தன் வகுப்பறையில் எல்லோருக்கும் நட்பு வளர்ந்து ,அனைவரின் மதிப்பெண்களும் உயர வேண்டும் என்று தான் எடுத்துள்ள முன் முயற்சி .. என்று ஆர்வத்துடன் ஆசிரியைக்குப் பாடம் நடத்துகிறான் அந்த மாணவன்.
ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது. (நம்ம வாத்தியார் ஐயா மட்டும்தான் எக்ஸெப்ஷன்.)
பையன் வகுப்பின் அமைதிக்கும், கட்டுக் கோப்புக்கும் சவால் விடுகிறான் என்று சத்தம் போட்டார் ஆசிரியை. அந்த மீன்களை அவன் கதறக் கதறக் கேட்காமல் ஜன்னல் வழியே வெளியில் கொட்டினார்.அவற்றினை நாயும், காகமும் வந்து கவ்விப் போவதைப் பார்த்துக் கேவிக் கேவி அழுதான் சிறுவன்.
அதன் பின்னர் அந்தப் பையன் படிப்பில் காட்டிய ஆர்வம் குறைந்தது. அவனுடைய ஊக்கம் தூக்கத்தைத் தழுவியது. வீட்டுக்கு அவன் மீன் வளர்த்த செய்தி சொல்லப்பட்டது.
"ஒரு பிராமணனாப் பொறந்துட்டு இப்படிச் செய்யலாமாடா? நம்ம குல மானமே போச்சுடா"என்று அப்பா அவனை மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கினார்.
அவனால் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தவறாகச் சொல்கிறேன்.
இந்தச் சமூகத்தால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே சரி.
வீட்டிலும் பள்ளியிலும் மட்டம் தட்டப்பட்டு உதவாக்கரை என்று பெயர் எடுத்தான்.அப்படியே ஆகியும் விட்டான்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.
"இன்பம் எனச் சில கதைகள் -- எனக்கு
ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் -- கெட்ட
தோல்வி என்றும் வீழ்ச்சி என்றும் சிலகதைகள்
என் பருவம் என்றன் விருப்பம் -- எனும்
இவற்றினுக்கு இணங்க என்னுளம் அறிந்தே
அன்பொடு அவள் சொல்லிவருவாள்; -- அதில
அற்புதமுண் டாய்ப் பரவசம் அடைவேன்."
"கண்ணன் என் தாய்" பாரதியின் பாடலில் கண்டுள்ளபடி தாயோ, ஆசிரியையோ அல்லது இருவருமோ அமைந்து விட்டால் குழந்தையின் மனவளர்ச்சி சும்மா 'ஜெட்' வேகம் பிடிக்கும்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ளுவோம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. !
நன்றி வணக்கம்! வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
கீழே உள்ள கானொளியும் அவர் அனுப்பியதுதான். அதையும் பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
 |
| தண்ணீர்மலை முருகன் கோவிலின் நுழைவாயில் |
தண்ணீர் மலையானே, தங்கமயில் ஏறி வருவாய் நீயே!
கவிதை ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்
விநாயகர் காப்பு!
ஆனை முகத்தோனே ஆறுமுகனுக்கு மூத்தோனே
வினைதீர்க்கும் நாயகனே வேத முதல்வனே
சுனைக் கடிகமலமலர் பூத்தக் கற்பகமே
நினைச் சரணமென்று பணிகிறேன்!
வெண்பா!
தண்ணீர்மலை உறையும் முருகா! -நாங்கள்
வேண்டும் வரம்தர வேண்டும் இறைவா!
வெள்ளை மனம்வேண்டும் முருகா! -வீணான
தொல்லை தரும் இருள் நீங்கவே - சிறு
பிள்ளை குணமது வேண்டும் முருகா! -நெஞ்சில்
கள்ளமில்லா எண்ணமதை நாளும் பெறவே
உள்ளன்போடு தொழுகிறோம் முருகா! -உணர்வில்
உயிரில் உறைந்திடுவாய் குமரா! (1)
சத்தியத்தின் திருவுருவே முருகா! -சலிப்பில்லா
சத்திய மனம் தருவாய் சக்திகுமரா!
சங்கடம் தீர்ப்பவனே முருகா! -ஒப்பில்லா
சங்கரனின் புத்திரனே முத்தமிழ் குமரா!
சரவணப் பொய்கையிலே உதித்தவனே முருகா!
சரணகோஷம் பாடிப்பணிகின்றோம் தலைவா! -சிவ
சக்தியின் மைந்தனே முருகா! -அளவிலா
சக்தியைத் தருபவனே சுவாமிநாதா!(2)
கருணையில்லையோ? என்மேல் உனக்கு கனிவுமில்லையோ?
கருத்தநாயகியின் கணவனேத் தொந்திபெருத்த நாதனின்சோதரனே!
வறுத்து எடுக்குதையா! வறுமையது -எனையாவரும்
வெறுத்து ஒதுக்கிடவே; நொறுக்கியே போட்டதையா!
தடுத்து நிறுத்துமையா! எந்தன் தரித்திரியம் போய்விடவே
விடுத்து எழுந்திடேன் நிந்தன் பாதமலர்தனையே!
பொறுக்க முடியலையே முருகா! நீயுமின்னும்
பொறுப்பதேனோ? எனைக்காக்க மறுப்பதேனோ?(3)
நோய்தீர்ப்பாய் முருகா! மனப் பேயால் -வந்த
நோய்தீர்ப்பாய் முருகா! காணும் யாவிலும்
மெய்யதையே கண்டுணரும் வழியதைக் கூறாயோ!
ஐய! தேனினும் இனியனே தென்பழனி முருகனே
மெய்யா! ஊனிளுரைந்து உயிரில் கலந்தோனோ!
பொய்யர்தம் பொய்யுரையை பொறுக்கும் மனமதை
மையல் கொள்ளச் செய்வாயே மயில்வாகனனே!
தையல் நாயகியின் புதல்வனே!(4)
வேலை வேண்டும்; வேலையா! ஏதாவதொரு
வேலை வேண்டும் முருகையா! -நாங்கள்
தங்கவோர் வீடுவேண்டும் வேலையா! தங்கவேலையா!
அங்கமெல்லாம் மின்னவே தங்கவைர நகைவேண்டும்
தங்கமான வேலையா! வைரவேலையா! -உந்தன்
மயில்மேய நன்புஞ்சைக் காடுவேண்டும் கதிர்வேலையா!
மயிலோடுவந்த சேவல்கூவ கேணிமேடுவேண்டும் கந்தையா!
மயிலேரிவந்தேநீ வாழ்த்தவேண்டும் சுப்பையா!(5)
இல்லறம் நல்லறமாம் முருகா! -அந்த
நல்லறம் எனக்குமின்னும் வாய்க்கவில்லையே -திருக்குமரா!
சொல்லறம் கொண்டிங்குனைப் பணிகின்றேன் -நீயெனக்கு
நல்லதைச் செய்வாயென நம்பியுனை போற்றுகின்றேன்
கள்ளமில்லா நல்லோனை கடமைத்தவறா வல்லோனை
உள்ளமெல்லாம் நினைத்தவிர வேறொன்றை நினையாதானை
நல்கணவனை யான்பெற்றிடவே -எல்லையிலா நினது
நல்கருணை பொழிவாய் தேவதேவனே!(6)
பிள்ளையொன்று வேண்டிநின்றோம் முருகா! -நீயும்
பேசாமல் இருப்பதேன் முத்துக்குமரா
கிள்ளைமொழி கேட்டிடவேங்கும் நெஞ்சம் -எந்தன்
சொல்லை நீயும்கேளா மலிருப்பதேனோ? கந்தா!
கொள்ளை இன்பம் கோடிப்பணமிவை -எல்லையில்லா
பிள்ளையன்பு முத்தத்திற்கு ஈடாகுமோ? நாதா!
சொல்லித்தான் தெரியுமோ? முருகா! -உந்தன்
பிள்ளைநான் படும்பாடறியாயோ! சிவபாலா! (7)
பாராமுகமேனோ? ஆராமுதனே! ஆறுமுகனே! -பதில்
கூறாயோ! நினது திருவாய் மலர்ந்தே!
தீராயோ! ஏழையென் பாவங்களை வேரோடுப்பிடிங்கி
ஆரத்தழுவாயோ! உயிர்கசிய ஊனுருக்கி பணிகின்றேன்
தாராயோ! எனதொப்புள்க் கொடிமுல்லை துயர்போக்கி
பார்த்தாயோ! பாவிநான் படும்பாட்டை -அன்புக்கடலே
அருள்வாயோ! அற்பமான வாழ்வதையும் ஆனந்தமாக்க
உதறுவாயோ! இறுகப்பிடித்தேனின் மலர்ப்பாதத்தை.(8)
ஆணவம் போக்கவேண்டும் முருகா! -வாழ்வில்
ஆனந்தம் பூக்கவேண்டும் ஆறுமுகா! - கொடும்
அகந்தையை அழிக்கவேண்டும் முருகா! -மனதில்
அகமாயையை நீக்கவேண்டும் மாயோன் மருகா!
கர்வம் களையவேண்டும் முருகா! -இப்பிறப்பில்
கர்மவினை யாவும்கரைந்தோட வேண்டும் கந்தா!
சர்வமும் நீயானாய் முருகா! -அந்த
சர்வேசன் செல்லமான சிவகுமரா!(9)
ஊனமதை போக்குவாய் முருகா -மனயீன
ஊனமதை போக்குவாய், கோபமும்; குரோதமும்
தானென்ற அகந்தையும்; தகமையில்லா ஆணவமும்;
வீணான ஆசையும்; வேண்டாத மோகமும்
தானாகப்போகவே தயைசெய்வாய் எந்தையே! ஞானவேலா!
தேனான பாடல்களை தினந்தோறும் வார்த்திடவே
கானமழையில் நாளும் நானுனை நனைத்திடவே
ஞானமதை எனக்கருள்வாய் ஞானக்கடலே!(10)
எங்கும் நிறைந்தவனே முருகா! இங்கில்லாமல் போவாயோ!
சங்கடத்தில் மூழ்கித் தவிக்கின்றேன் -நான்வலம்புரி
சங்கெடுத்தூதி அழைகின்றேன்நின் சங்குப்பூக் காதில்விழவில்லையோ?
அங்கமெல்லாம் சிலிர்க்கவே ஆறுமுகனுனை நினைகின்றேன்
தங்கமயிலேறி வாராயோ! வெகுதூரம் சென்றுமறைவாயோ?
பொங்கிப் பெருகும் துக்கத்தால் நெஞ்சடைத்து நிற்கின்றேன்
கங்கையெனப்பெருகும் கண்ணீரால் நின்தங்கப்பாதம் நனைக்கின்றேன்
தயங்காமல் வந்தென்னைக்காவாய் பெம்மானே!(11)
கனவா இல்லை நினைவா கந்தையா!
கணநேரம் கண்டக் காட்சியது முருகையா!
மனமது உன்னினைவில் மஞ்சத்தில் படுத்திருந்தேன்
மணக்கோல உன்படத்தில் மல்லிகைப் பூக்கக்கண்டேன்
மணம்பரப்பும் மல்லிகைவாசம் என்னுயிர்வரை வீசகொண்டேன்
நினது கோளவிழிகள் அசையக்கண்டேன் -நினதிருக்கர
ஞானவேலது பறந்தெனைவலம் வந்துனை அடையக்கண்டேன்
தேனான அனுபவமது தேனினுமினியனே!(12)
ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்
---------------------------------
வாத்தியாரின் அடிக்குறிப்பு:
வெண்பா என்றால் நாலடிதானே வரும் என்று நினைப்பவர்கள், கீழே உள்ள தளத்தைப் பாருங்கள். அதில்வெண்பாவிற்கு உரிய இலக்கணத்தை விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆலாசியம் எழுதிய வெண்பா பஃறொடை வெண்பா என்ற பிரிவில் வரும். 5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
எனக்குத் தெரியாதா கவிதை எழுத? என்று சொல்லி, நமது லால்குடிக்காரரும் ஒரு கவிதை எழுதி அனுப்பியுள்ளார்
இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர் பெயர் தெரியவில்லையாம். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தவர் பே நா அப்புசாமி. தமிழில் எழுதியவர். கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
"உந்தன் கல் இதயம்"
==================
உன் கண்களை
லில்லிபூவின் நீலத்தில் படைத்தான்
உன் எழில் முகத்தை
அன்றலர்ந்த தாமரையாற் செய்தான்
உன் பற்களை
வெண்மை பளிரீடும் மல்லியால் செதுக்கினான்
உன் அதரத்தை
புத்தம் புதிய துளிர் இலைகளால் ஆக்கினான்
உன் கரங்களை
சம்பக மலரின் இதழ்களால் உருவமைத்தான்
அது எப்படி, என் அன்பே!
அவன்,(அதுதான் உன்னைப் படைத்தவன்)
உன் இதயத்தை மட்டும் கல்லால் சமைத்தான்?
- கே.முத்துராமகிருஷ்ணன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
7
நகைச்சுவை
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக இருக்கும் நம் நாயகன், ஒரு பெண்ணை மணந்துகொண்டார். சுமாரான அழகு உள்ளவள். அத்துடன் குணக்கேடானவள். இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பிறகு ஓய்ந்து போன நமது நாயகன் மாமனாருக்கு கோபத்துடன் மின்னஞ்சல் அனுப்பினான்.
Your product not meeting my requirement
உங்களுடைய தயாரிப்பு என்னுடைய தேவைகளுக்குப் பொருந்திவரவில்லை!
உடனே மாமனாரிடம் இருந்து பதில் வந்தது:
Warranty expired.Manufacturer not responsible
வாரன்ட்டி பிரீயட் முடிந்து விட்டது தயாரிப்பாளர் அதற்குப் பொறுப்பில்லை
Sent by G.அனந்தமுருகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!