+++++++++++++++++++++++++++++++++++++++++++++Short Story: ஆசையின் அளவு!
இறைவன் எழுந்தருளினார். அவர் எழுந்தருளிய இடம் ஒரு வனாந்தரப் பகுதி.
அவர் எங்கே வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் எழுந்தருள்வார். பாஸ்போர்ட், விசா, டாலரில் கை இருப்பு, பாதுகாப்பு சோதனைகள், போர்டிங் பாஸ் என்று எந்த சிக்கலும் இல்லாதவர் அவர்!
திரைப்படங்களில் வரும் நாட்டாமைக்காரரின் தோற்றத்தில் அவர் இருந்தார்.
அங்கே நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மர மொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன.
காலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.
அவன்மேல் இரக்கம் கொண்டு, அவனருகில் சென்ற இறைவன், கணீரென்ற குரலில் சொன்னார்:
“வெட்டியது போதும், போ!”
திடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப் பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன் சொன்னான்,” அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இன்னும் ஒரு நான்கு நாழிகைகள்
வெட்டிவிட்டுப் புறப்படுகிறேன். தயவு செய்து அதை நீங்கள்அனுமதிக்க வேண்டும்!”
அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.
சற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காட்டி, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.
அவனும் செய்தான்.
அவன் கொண்டுவந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று ஜொலிக்கும் தங்கமாக மாறியது அந்தக்கல்! பளபளவென்றும் மின்னியது.
விறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துவிட்டான். மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கோள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.
“என்ன, மகிழ்ச்சிதானே? இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்.போய் வா” என்றார்
சட்டென்று அவன் சொன்னான்,” அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தீராது!”
புன்னகைத்த இறைவன், “ அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.
அவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.
அவன் கொண்டுவந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் ஜொலிக்கும் தங்கமாக மாறியது!.
திகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.
“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”
புன்னகைத்த கடவுள்,” இவன் பேராசை மிக்கவன்: என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றார். ஆமாம் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்தார்.
விறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தது. வந்தது இறையென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப்போனான். கலங்கி என்ன பயன்? காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.
ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது! மனம் பக்குவப்பட்டால் மட்டுமே இறைவன் திருவடியில் சேர முடியும்!
----------------------------------------------------
மின்னஞ்சல் பாடம் (எண் 12) அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
A to P வரை துவக்க எழுத்தைக் கொண்ட பெயர்களுக்குப் புது மின்னஞ்சல் ஐ.டி ஒன்றை ஏற்படுத்தி அனுப்பியுள்ளேன். மற்றவர்களுக்குப் பழைய மின்னஞ்சல் ஐ.டியிலேயே பாடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
நாள் ஒன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்குமேல் அனுமதியில்லை எனும் கூகுள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குத் தலைவணங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விட்டேன். ஒரே சமயத்தில் அனைவருக்கும் பாடங்கள் செல்வதற்காக இந்த ஏற்பாடு
முதல் பிரிவிற்கு : vaaththiyar2010@gmail.com
இரண்டாவது பிரிவினருக்கு: vaaththiyar@gmail.com
பாடங்கள் கிடைக்காதவர்கள், அந்தந்தப் பிரிவிற்கே கடிதம் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் 60 மணி நேர விடுப்பில், சொந்த ஊருக்குச் செல்வதால், அடுத்த வகுப்பு 28.11.2009 சனிக்கிழமை காலையில் துவங்கும்.
நேரம்?
இணைய வகுப்பிற்கு ஏது நேரம் அல்லது காலம்? வாத்தியார் துவங்கும் நேரம்தான் வகுப்பறையின் நேரம். நீங்கள் வரும் நேரம்தான் உங்களுக்கான வகுப்பறை நேரம்!
சரி, காலை 10:30 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்!
விடுமுறையில் செல்வதால், உங்களுக்கு இங்கேயும் பாடம். அங்கேயும் (மின்னஞ்சல் வகுப்பிலும்) பாடம். அனைவரும் Home work செய்து, எடுத்துக் கொண்டு வாருங்கள்
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!



































