மாணவர் பதிவேடு (Enrolment Register)

25.11.09

Short Story: ஆசையின் அளவு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: ஆசையின் அளவு!

இறைவன் எழுந்தருளினார். அவர் எழுந்தருளிய இடம் ஒரு வனாந்தரப் பகுதி.
அவர் எங்கே வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் எழுந்தருள்வார். பாஸ்போர்ட், விசா, டாலரில் கை இருப்பு, பாதுகாப்பு சோதனைகள், போர்டிங் பாஸ் என்று எந்த சிக்கலும் இல்லாதவர் அவர்!

திரைப்படங்களில் வரும் நாட்டாமைக்காரரின் தோற்றத்தில் அவர் இருந்தார்.

அங்கே நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மர மொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன.

காலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.

அவன்மேல் இரக்கம் கொண்டு, அவனருகில் சென்ற இறைவன், கணீரென்ற குரலில் சொன்னார்:

“வெட்டியது போதும், போ!”

திடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப் பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன் சொன்னான்,” அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இன்னும் ஒரு நான்கு நாழிகைகள்
வெட்டிவிட்டுப் புறப்படுகிறேன். தயவு செய்து அதை நீங்கள்அனுமதிக்க வேண்டும்!”

அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.

சற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காட்டி, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.

அவனும் செய்தான்.

அவன் கொண்டுவந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று ஜொலிக்கும் தங்கமாக மாறியது அந்தக்கல்! பளபளவென்றும் மின்னியது.

விறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துவிட்டான். மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கோள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

“என்ன, மகிழ்ச்சிதானே? இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்.போய் வா” என்றார்

சட்டென்று அவன் சொன்னான்,” அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தீராது!”

புன்னகைத்த இறைவன், “ அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.

அவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.

அவன் கொண்டுவந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் ஜொலிக்கும் தங்கமாக மாறியது!.

திகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”

புன்னகைத்த கடவுள்,” இவன் பேராசை மிக்கவன்: என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றார். ஆமாம் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்தார்.

விறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தது. வந்தது இறையென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப்போனான். கலங்கி என்ன பயன்? காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.

ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது! மனம் பக்குவப்பட்டால் மட்டுமே இறைவன் திருவடியில் சேர முடியும்!
----------------------------------------------------
மின்னஞ்சல் பாடம் (எண் 12) அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

A to P வரை துவக்க எழுத்தைக் கொண்ட பெயர்களுக்குப் புது மின்னஞ்சல் ஐ.டி ஒன்றை ஏற்படுத்தி அனுப்பியுள்ளேன். மற்றவர்களுக்குப் பழைய மின்னஞ்சல் ஐ.டியிலேயே பாடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்குமேல் அனுமதியில்லை எனும் கூகுள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குத் தலைவணங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விட்டேன். ஒரே சமயத்தில் அனைவருக்கும் பாடங்கள் செல்வதற்காக இந்த ஏற்பாடு

முதல் பிரிவிற்கு : vaaththiyar2010@gmail.com
இரண்டாவது பிரிவினருக்கு: vaaththiyar@gmail.com

பாடங்கள் கிடைக்காதவர்கள், அந்தந்தப் பிரிவிற்கே கடிதம் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் 60 மணி நேர விடுப்பில், சொந்த ஊருக்குச் செல்வதால், அடுத்த வகுப்பு 28.11.2009 சனிக்கிழமை காலையில் துவங்கும்.

நேரம்?

இணைய வகுப்பிற்கு ஏது நேரம் அல்லது காலம்? வாத்தியார் துவங்கும் நேரம்தான் வகுப்பறையின் நேரம். நீங்கள் வரும் நேரம்தான் உங்களுக்கான வகுப்பறை நேரம்!

சரி, காலை 10:30 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்!

விடுமுறையில் செல்வதால், உங்களுக்கு இங்கேயும் பாடம். அங்கேயும் (மின்னஞ்சல் வகுப்பிலும்) பாடம். அனைவரும் Home work செய்து, எடுத்துக் கொண்டு வாருங்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!
--------------------------------------------------
உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
--------------------------------------------------
முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.

1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்:
நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம்
(நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)

2. வலிமை:
பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak)

கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
------------------------------------------------
1
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்! (அட, நன்றாக இருக்கிறதே:-)))
-------------------------------------------------
1 -A
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
---------------------------------------------------
2
தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!
----------------------------------------------------
2 -A
தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!
-------------------------------------------------
சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும்.

உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள்
கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்!

கிரகங்களின் மதிப்பெண்கள்: தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை

இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.

40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில்

ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.

அர்த்தமானதா? புரியும்படி உள்ளதா?
-----------------------------------------------
வர்கோத்தமத்தைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன். மூலத்திரிகோணத்தைப்பற்றி எழுத வேண்டும். அதை நாளை எழுதுகிறேன். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

23.11.09

முடிவும், துவக்கமும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
முடிவும், துவக்கமும்!

1
சில பூக்கள் சூரிய ஒளியில் மலர்கின்றன; சில பூக்கள் நிழலில் மலர்கின்றன. நாம் எந்த இடத்தில் மலர்வோம் என்று கடவுளுக்குத் தெரியும். ஆகவே கவலை யின்றி, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

2
எதுவும் தன்னிச்சையாக நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். விடாமுயற்சியின் மூலம்தான் வெற்றிபெற முடியும். நன்மைகளை யாரும் தேடித்தர மாட்டார்கள். நீங்கள்தான் தேடிப் பெற வேண்டும்!

3
மற்றவர்களுடைய எண்ணங்களை மாற்றுவதற்கு முதல் வழி உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்! வெண்ணையை உருக வைக்கும் அதே சூரியன்தான், களி மண்ணைக் கெட்டியாக்குகிறது! உங்கள் எண்ணப்படிதான் வாழ்க்கை அமையும். நல்லவற்றையே எண்ணுங்கள்!

4
வெள்ளத்தில் மீன்கள் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன. வெள்ளம் வடிந்தவுடன் பூச்சிகளுக்கு மீன்கள் இறையாகின்றன. காலதேவன் ஆளாளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பான். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருங்கள்.

5
ஒரு இடத்தில் சூரிய அஸ்தமனம் எனும்போது, இன்னும் ஒரு இடத்தில் சூரிய உதயம் இருக்கும். மனது ஒடிந்து போகாதீர்கள். முடிவு என்று நீங்கள் நினைப்பது ஒரு புதிய துவக்கமாக இருக்கலாம்!

6
பத்து சதவிகித வாழ்க்கை உங்கள் செயல்களால் உருவாவது. வருவதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிர்றீர்கள் என்பதை வைத்துத்தான் மீதமுள்ள 90% வாழ்க்கை, அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

20.11.09

Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாசமிக்கவர் களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவத்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக் கூடியவன் ஒருவன் உங்களுக்குக் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்வர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடம் அடுத்த பாடம். பாடத்தின் தலைப்பு: கிரகங்களின் பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும் (Mutual aspect and exchange of planets)

அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடமாக வரும்!
++++++++++++++++++++++++++++++++++

“வாத்தி (யார்) எப்போது அது வரும்?”

”மூன்று நாட்கள் கழித்து 24.11.2009 செவ்வாய்க்கிழமையன்று வரும்”

”ஏன் அப்படி?”

”இடையில் மூன்று நாட்கள் வாத்தியார் வெளியூர் செல்வதால் வகுப்பறைக்கு விடுமுறை!”

“சரி, அதை ஏன் இப்போதே சொல்லி, எங்களைச் சஸ்பென்ஸில் வைத்துவிட்டுப் போகிறீர்கள்?”

“பத்திரிக்கைகளுக்குக் கதைகள் எழுதி எழுதி, அடுத்தவர்களை சஸ்பென்சில் வைப்பது வாத்தியாருக்குக் பழகிவிட்டது. ஆகவே குறுகுறுப்போடு பொறுத்திருங்கள். பாடம் சுவையாக இருக்கும்!”
........................................................................
வகுப்பறை பதிவேட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,012
மின்னஞ்சல் வகுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 760 மட்டுமே!
மீதம் உள்ளவர்களுக்குப் பாடம் வேண்டாமா?
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தால்தானே பாடங்களை அனுப்ப முடியும்?

ஆகவே இதுவரை மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்காதவர்கள், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வாத்தியாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

gmail contacts folderல் வருகின்ற பெயர்களைச் சேர்ப்பதற்கு (வாத்தியாரின் பல வேலைகளுக் கிடையே) இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். ஆகவே தெரிவித்த பிறகு மூன்று நாட்கள் பொறுமை காக்க வேண்டும். அதையும் மனதில் வையுங்கள்

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
........................................................................
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

19.11.09

Lesson on yoga: Amala Yoga: அம்லா யோகம்!



++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: Amala Yoga: அமலா யோகம்!

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18.11.09

Lessons on yogas: சரஸ்வதி யோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: சரஸ்வதி யோகம்

சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். நம் வகுப்பறை சார்பில் சென்னை மெரீனாவில் ஒரு பாராட்டுவிழா நடத்திவிடலாம்!

அன்புடன்,
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

17.11.09

Lessons on yogas: Dainya Parivartana Yoga: தைன்ய பரிவர்த்தனை யோகம்!

பயந்துவிடாதீர்கள். அம்மணி துஷ்டத்தனத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவ்வளவுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: Dainya Parivartana Yoga: தைன்ய பரிவர்த்தனை யோகம்!

தைன்ய எனும் வடமொழிச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

dainya — poverty = வறுமை
dainya — and degradation = பங்கப்பட்ட
dainya — humbleness; தாழ்ந்த
dainya — humility = இழிவு, அவமானம்

இதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாது:-))))
+++++++++++++++++++++++++++++++++++++

யோகத்தின் அமைப்பு: ஆறாம் வீட்டு அதிபதி, 1,2,3,4,5,7,9,10 & 11 ஆம் வீட்டுக்காரர்கள் ஒருவருடன் பரிவர்த்தனையாகி, அவருடைய வீட்டில் மாறி அமர்ந்திருக்கும் நிலைமை, இந்த யோகத்தைக் குறிக்கும்.

வில்லனுக்கு, உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை!
உங்கள் மொழியில் சொன்னால் ஒரு கிரிமினலுக்கு உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை. என்னென்ன விளைவுகள் வரும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

பொதுப்பலன்: பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட வீடுகளால், வீட்டு அதிபதிகளால் உண்டாகும் பலன்கள் கெட்டுவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக்கொண்டு விடும்! ஜாதகனுக்குத் தொடர்ந்து உபத்திரவங்கள் இருக்கும். உடற்கோளாறுகள் உண்டாகும். சிலர் துஷ்டத்தனம் மிகுந்தவர்களாக அல்லது ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

The 6th house lord exchanges houses with the Lagna lord, or the 2nd lord, or the 3rd lord, or the 4th lord, or the 5th lord, or the 7th lord, or or the 9th lord, or the 10th lord, or the 11th lord Result : This combination leads to a wicked nature, persistent trouble from opponents, and ill health.

wicked = sinful, mischievous, immoral = துஷ்ட, கெட்ட, தீய, ஒழுக்கமற்ற,
பாவகரமான என்று பொருள் கொள்ளவும்

எனக்கு இந்த யோகம் இருக்கிறதே என்று யாரும் நொடிந்து போய் உட்கார்ந்து விடவேண்டாம். ஜாதகத்தின் வேறு அம்சங்களால் இது (இந்த யோகம்)
தள்ளுபடியாகி இருக்கலாம் அல்லது செல்லாமல் போயிருக்கலாம். ஆகவே ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்!

லக்கினாதிபதி அல்லது ஒன்பதாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்குப் பல உபத்திரவங்கள் பக்கத்திலேயே வராது. வந்தாலும் ஓடிவிடும். அப்படியே வந்தாலும் ஜாதகன் அவற்றை ஒரு கை பார்த்துவிடுவான்.

He will have the standing power or he will be equipped to handle any situation.
+++++++++++++++++++++++++
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

16.11.09

Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2.பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்,
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி
காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

14.11.09

நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?


++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?

Week end posting!

பள்ளிக்கூட நகைச்சுவை! (School Jokes)
+++++++++++++++++++++++++++++++
1
வாத்தியார்: உன் பெயர் என்ன?

மாணவன்: மை நேம் ஈஸ் சூரஜ் பிரகாஷ்

வாத்தியார்: தமிழில் கேட்டால், தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்

மாணவன்: என் பெயர் சூரிய ஒளி!
............................................................................
2

வாத்தியார்: 1869ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜி பிறந்தார்!

வாத்தியார்: 1873ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜிக்கு நான்கு வயது?
....................................................................
3
வாத்தியார்: காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் நமக்கு என்ன கிடைத்தது?

மாணவன்: ஒரு நாள் விடுமுறை கிடைத்தது!
...................................................................
4
வாத்தியார்: ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒத்த நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணம் கூறு
(give an example of Coincidence)

மாணவன்: என்னுடைய அப்பா, அம்மா இருவருக்கும், ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடந்தது!
...................................................................
5
வாத்தியார்: உன் அப்பாவிற்கு என்ன வயது?

மாணவன்: எனக்கு என்ன வயதோ அதுதான் என்னுடை அப்பாவின் வயது!

வாத்தியார்: அது எப்படி?

மாணவன்: நான் பிறந்த பிறகுதான் அவர் அப்பாவானார்!
...................................................................
6
வாத்தியார்: தவளை ஒன்று இருக்கிறது. கார் ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை கிலோ முப்பது ரூபாய். அப்படியென்றால் என் வயது என்ன?

மாணவன்: 32 வயது!

வாத்தியார்: உனக்கெப்படித் தெரியும்?

மாணவன்: என் அக்காவின் வயது 16. அவள் ஒரு அரைக் கிறுக்கு. அதை வைத்து உங்கள் வயதைச் சொன்னேன்!
-----------------------------------------------
எல்லாம் எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா? இருக்கலாம். மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் மட்டும் என்னுடையது. இரண்டாம் முறை படிப்பதில் தவறில்லை! அதனால் பதிவிட்டேன்!

அன்புடன்
வாத்தியார்







வாழ்க வளமுடன்!

13.11.09

Lesson on Yoga: Dhwaja Yoga: துவஜ யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga: Dhwaja Yoga: துவஜ யோகம்!

துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம்.

இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை

பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
..........................................................................

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும்.

தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது
சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன்

பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

A planetary combination formed by all the malefic placed in the 8th house and
all benefices in the ascendant. Under this combination, a leader is born
==================================================
சார், நான் மேஷ லக்கினக்காரன் செவ்வாய் எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? அல்லது நான் மகர லக்கினக்காரன், சனி எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? என்று யாரும் கேட்க வேண்டாம். ரிஷிகள் இந்த யோகத்திற்கான விதி முறைகளைக் கூறியுள்ளபோது அதை அப்படியே எடுத்துக் கொள்வது நல்லது! மாட்டேன் என்றால் - It is your problem and it is not concerned with astrology!

அன்புடன்
வாத்தியார்!






வாழ்க வளமுடன்!

12.11.09

Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!

சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்

வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்!

இன்னும் பல சக்கரங்கள் உள்ளன!

காலச் சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம்
ராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்

பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான்.

மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்),
3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக்
கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது

பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.

சார், 3ல் எனக்கு 2 இருக்கிறது, பாதி யோகம் உண்டா? என்று யாரும் கேட்க வேண்டாம். செயல்பாடுகள் பாதியாக இருப்பது பயன்படாது. நான்கு சக்கரங்களில், இரண்டுதான் இருக்கின்றன அல்லது இரண்டுதான் காற்றுடன் இருக்கின்றன எனும்போது கார் எப்படி ஓடும்?யோசித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்!

நன்றி, வணக்கம்

அன்புடன்,
உங்கள் வகுப்பறை,
வாத்தியார்






வாழ்க வளமுடன்!

11.11.09

Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

"If you do not hope, you will not find what is beyond your hopes"
படத்தைக் கர்சரால் அழுத்திப் பார்த்தால், அருமையான இந்த வாசகம் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”
இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.
...........................................................
2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
............................................................
6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
.............................................................
7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
...............................................................
9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
..................................................................
10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
........................................................................
11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்
.......................................................................
12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்
......................................................................
13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
+++++++++++++++++++++++++++++++++++++

பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
+++++++++++++++++++++++++++++++++++++
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேண்டுகோள்.

கடந்த 3 மாதங்களுக்குள் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
பின்னூட்டங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு நேரமின்மை இரண்டு மடங்காகி விட்டது

ஆகவே
1. தேவைப் பட்டால் மட்டுமே கேள்வி கேளுங்கள்.
2. பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்
3. உங்கள் ஜாதகத்தைவைத்து, கொக்கிக் கேள்விகளைக் கேட்காதீர்கள்

அந்த மாதிரிக் கேள்விகளுக்கு அனுமதி இல்லை.
ஆமாம், பின்னூட்டப் பெட்டிக்குக் காவல் போடப் பட்டுள்ளது.
ஆயிரம் மாணவர்களை வைத்துப் பாடம் நடத்தும் ஒரே வாத்தியார் நானாகத்தான் இருக்கும்! அதற்காக எனக்கு விருதுகள் வேண்டாம்.
என்னை நீங்கள் புரிந்து கொண்டு நடப்பதுதான் எனக்கு உண்மையான விருது!!!!!!!
---------------------------------------------------------------
புதிதாக வருபவர்களுக்கு, வந்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

1. வகுப்பறையில் 270 பாடங்கள் உள்ளன
2. ஆவண அறையில் 8 அடிப்படைப் பாடங்கள் உள்ளன (Link: http://vaaththiyar.blogspot.com/)
3. மின்னஞ்சல் வகுப்பில் 10 அலசல் பாடங்கள் உள்ளன

அவை அனைத்தையும் படித்து, மனதில் ஏற்றிக் கொண்ட பிறகு புதுப் பாடங்களுக்கு வாருங்கள். தற்சமயம் நடத்தப் படுபவை மேல் நிலைப் பாடங்கள். அவைகள் புரிவதற்கு நீங்கள் நான் சொன்ன 288 பாடங்களையும்
படிப்பது ஒன்றுதான் வழி. குறுக்கு வழியெல்லாம் கிடையாது. அதை மனதில் வையுங்கள்

இல்லையென்றால் 2ஆம் வாய்ப்பாடு தெரியாத குழந்தை ப்ளஸ் டூ வகுப்பில் சேர்ந்து பாடத்தைக் கவனிக்கும் நிலை உங்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------------
உங்கள் அனைவரையும் ஜோதிடத்தில் மேதை ஆக்குவது என் நோக்கமல்ல! ஜோதிடத்தை அறியத்தருவது மட்டுமே என் நோக்கம். நீங்கள் மேதையாவது உங்கள் கையில் இருக்கிறது.

அன்புடன்
வாத்தியார்,





வாழ்க வளமுடன்!

9.11.09

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

7.11.2009 சனிக்கிழமையன்று மதியம், கோவை, குமரகுரு பொறியியற் கல்லூரியில், தமிழ்மணம் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி பயிலரங்க வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் சென்று
வந்தேன்.

நிகழ்ச்சி மதியம் 2:30 மணிமுதல் 4:45 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

அக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர்.திரு முத்துக்குமார் அவர்களூம். பேராசியர். திரு. தங்கமணி அவர்களும் நிகழ்ச்சிக்குச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்கள் கணினியில் தமிழின் மேன்மை குறித்தும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்தும் நல்லதொரு உரை நிகழ்த்தினார். சக பதிவர்
திரு.ரவி அவர்கள் (விக்கிபீடியா ரவி) தமிழில் கிடைக்கும் மென்பொருள் பற்றியும், தமிழில் தட்டச்சுவது பற்றியும் செயல்முறை விளக்கங்களை அளித்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்.

துவக்கத்தில் திரு. காசி ஆறுமுகம் அவர்களையும், INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்களையும் வந்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ளூம் வண்ணம் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள்

தமிழ்மணத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் ஏழு பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1. திரு.காசி ஆறுமுகம்
2.திரு.லாதானந்த்,
3.திரு. சஞ்சை காந்தி,
4. மரவளம்.திரு.வின்சென்ட்,
5. ecogreenunits திரு.எஸ்.கே.பாபு,
6. திரு.ரவி
7. அடியவன்

பயிற்சி வகுப்பிற்கு, அக்கல்லூரியில் கணினி பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்கள், சுமார் 36 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன். அதை நீங்கள் கண்டு மகிழக் கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா


பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்கள்

தொப்பியுடன் அமர்ந்திருப்பவர் பதிவர் சஞ்சை காந்தி, அவருக்குப்பின்னால் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.லதானந்த். அதேவரிசையில் இடது கோடியில் மஞ்சள் சட்டையுடன் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.ரவி.

திரு.கவியரசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி!

திருவாளர்கள் காசி.ஆறுமுகம், லாதானந்த்! பின் வரிசையில் அடியவன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

8.11.09

வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.

அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 850 பிரதிகள் விற்று விட்டன.

காரைக்குடியில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்வு ஒன்றில், வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,திருமண விழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 650 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை வாங்கிக்கொண்டு விட்டார்கள்.

மீதமுள்ள 150 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறும் 50 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!

விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும். புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில் உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.
அல்லது காசோலை (AWB Cheque) அல்லது வரைவோலை (Demand Draft) அல்லது மணியார்டர் (Postal Money Order) மூலமாக பணத்தை அனுப்பலாம்.

புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.

1. திரு.SM.வீரப்பன், துணைப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சிக் கோட்டம், திருச்சி (இவர் தீவிர வாசகர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர். அதோடு திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் அவர்களின் மூத்த சகோதரர்)

2. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை நீங்கள் படிக்க முடியும்!

எனது முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.

எனது இரண்டவது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.



+++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் புத்தகம் பிரதிகள் இல்லை. இரண்டாவது புத்தகம் 20 பிரதிகள் உள்ளன. அது வேண்டுபவர்கள் எழுதினால் பதிப்பகத்தார் அதையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

7.11.09

Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

எச்சரிக்கை: Week End Post or You can take it as Weak End Post
++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை மறந்து விட்டு, சற்று நிம்மதியாகவும், மகிழ்ச்சியோடும் இருப்போம். வாருங்கள்! இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது. உம்மன்னா’ மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு அல்ல!

++++++++++++++++++++++++++++++++++++++++++++

1

”வீட்டில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் அல்லது காரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.”

”என்ன அது ?”

“புது மோட்டார் சைக்கிள் அல்லது புதுக்காரின் விலையைக் கேளுங்கள்”

“அதே போல நம் மனைவி அழகாக இல்லையே எனும் வருத்தத்தைப் போக்க ஏதாவது வழி இருக்கிறதா?”

“இருக்கிறது. அழகான பெண்ணிடம், அவள் கணவன் அடிவாங்கும்போது அல்லது கடி வாங்கும்போது பாருங்கள். “
+++++++++++++++++++++++++++++++++++
2.

தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினைக்காக ஒட்டுமொத்தமாகப் பன்னிரெண்டு பெண்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”

யாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++
3

“நல்ல வக்கீலுக்கும் (good lawyer) பெரிய வக்கீலுக்கும் (great lawyer) என்ன வித்தியாசம்?

”நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாகத் தெரியும், பெரிய வக்கீலுக்கு நீதிபதியை நன்றாகத் தெரியும்!”
+++++++++++++++++++++++++++++++++
4.

சிறந்த நடிகரை அரசு தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேசிய விருது!

சிறந்த நடிகரை மக்கள் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேர்தல் விருது!
+++++++++++++++++++++++++++++++++++
5.

எட்டாம் வகுப்பில், வாத்தியாரம்மா சொன்னார்: “ நான் கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வேன் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. அனைவரும் எழுதுங்கள்.”

சற்று நேரம் ஆனது.

ஒரு பயல் மட்டும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற வாத்தியாரம்மா கேட்டார்,” நீ ஏன்டா எதையும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?”

அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

“நான் என் செயளாலருக்காகக் காத்திருக்கிறேன் (I’m waiting for my secretary)”
+++++++++++++++++++++++++++++++++++
6

இரவு மணி பதினொன்று. ஒரு ஆதர்ச தம்பதிகள் கட்டிலில் படுத்திருந்தார்கள். இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)

கணவன் அரைத் துக்கத்தில். மனைவிக்குத் தூக்கம் வரவில்லை.

மனைவி, குறையுடன் சொன்னாள்:

“இப்போதெல்லாம் நீங்கள், முன்னைப் போல இல்லை. மாறிவிட்டீர்கள். என் கையைப் பிடித்தவாறுதானே படுத்துக் கொள்வீர்கள். இன்று ஏன் அப்படிச் செய்யவில்லை?”

அரைத் தூக்கக் கணவனின் கை தன்னிச்சையாக வந்து மனைவியின் கையைப் பற்றிக் கொண்டது.

மனைவி தொடர்ந்து சொன்னாள்:

“முன்பெல்லாம் படுத்துத் தூங்கும் முன்பு, நீங்கள் என் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை.

அதுவும் நடந்தது.

“முன்பெல்லாம் முத்தமிட்டவுடன் நீங்கள் என் ஆட்காட்டி விரலைச் செல்லமாகக் கடிப்பது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை?”

சாடாரென்று எழுந்த கணவன், போர்வையை உதறிவிட்டு, கட்டிலை விட்டு இறங்கினான்

மனைவி பதற்றத்துடன் கேட்டாள் ”எங்கே போகிறீர்கள்?”

”தொண தொணக்காமல் இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன்!”

“+++++++++++++++++++++++++++++++++++
7. ஆண்டு இறுதி தேர்வு

பட்டப் படிப்பு. கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கேள்விகள் எல்லாம், ”ஆமாம்/இல்லை” என்று டிக்’ அடிக்கும்படியான கேள்விகள்.

அனைவரும் விறுவிறுப்பாகத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும், கேள்வித்தாள் முழுவதையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தான்.

பணத்தைச் சுண்டிப் பார்த்து, தலை வரும் கேள்விகளுக்கு ஆமாம் என்றும், பூ வரும் கேள்விகளுக்கு இல்லை என்றும் டிக் அடித்துக் கொண்டே வந்தான். ஒரு வழியாக எழுதி முடித்தான். பேனாவை மூடி மகிழ்ச்சியோடு தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

சற்று தூரத்தில் இருந்து அந்தக் கருமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேர்வுக் கண்காளிப்பாளர், தொலைகிறான் என்று சும்மா இருந்துவிட்டார்.

சற்று நேரம் சென்றது.

அரங்கின் மறு பக்கம் சென்று விட்டுத் திரும்பியவர், நமது ஆசாமி என்ன செய்கிறான் என்று பார்த்தார். இப்போது அவன் வியர்க்க விறுவிறுக்கக் கலவரத்துடன் காசை மீண்டும் சுண்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வியப்படைந்த அவர், அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் கேட்டார்,” மறுபடியும் எதற்குக் காசைச் சுண்டிப் போட்டுப் பார்க்கிறாய்?”

அவன் கலங்கிய குரலில் சொன்னான்: “ எழுதியதை சரி பார்க்கிறேன். ஒன்றும் சரியாக வரமாட்டேன் என்கிறது!”
++++++++++++++++++++++++++++++++++++++++
8.
டீச்சர்: ஒரு வார்த்தை நான்கு முறை வரும்படியாக சொற்றொடர் ஒன்றைச் சொல்லு!

மாணவன்: லாரா தத்தா பிரெயன் லாராவை மணந்தால் அவருடைய பெயர் லாரா லாரா என்று மாறிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த எட்டில் எது நன்றாக உள்ளது?

நட்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

6.11.09

Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்"
- கவியரசர் கண்ணதாசன்

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.

நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.

Navamsa is the one by ninth division of a rasi chart. It is the magnified version of a rasi chart

ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”

அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?

சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.

வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.

ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்) பாடம் எங்கே?”

”அது மின்னஞ்சல் பாடம்”

“ஏன் அது மின்னஞ்சல் பாடம்?”

“அதில் பல வில்லங்கமான தகவல்கள் உள்ளன. அதோடு அது மேல் நிலைப் பாடம். இங்கே எழுதினால், வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே அது மின்னஞ்சல் பாடமாகக் கொடுக்கப்பெற்றுள்ளது.”

“மின்னஞ்சல் பாடம் எப்போது வரும்?”

“மின்னஞ்சல் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவக் கண்மணிகளில், A to P எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு முதலில் (வெள்ளிக் கிழமையன்று) வரும். R to Y எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு அடுத்த நாள் (சனிக்கிழமையன்று) வரும்”

“ஏன் அப்படி?

“ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்






வாழ்க வளமுடன்!

5.11.09

Lessons on Yogas: Nisva Yoga : நிஸ்வா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas: Nisva Yoga : நிஸ்வா யோகம்!

ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற செல்வம் என்று பொருள்படும்! (Sva means Wealth and Nisva means one devoid of wealth)

லட்சணம் என்பது ‘அவ’ எனும் சொல்லைச் சேர்க்கும்போது மாறுபடுவதைப் போல அது என்று வைத்துக் கொள்ளுங்கள்

செல்வம் எப்படி மறுக்கப்படும்?
மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.

1. வராமல் போகலாம்.
2. வருவதைவிட நமது தேவை அதிகமாகப்போய் பற்றாத நிலை ஏற்படலாம்.
3. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம்.

எது எப்படியோ, பல சமயங்களில் நாம் பணமின்றி அல்லாட நேரிடும் நிலை ஏற்படலாம். அதற்குப் பெயர்தான் நிஸ்வா யோகம்
-------------------------------------------------------------
அதற்கான அமைப்பு என்ன?

இரண்டாம் வீட்டு அதிபதி தீமைபயக்கும் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் ஜாதகத்தில் இருப்பது இந்த அமைப்பாகும். இந்த அவயோகமாகும்.

”அருள் இல்லாதவனுக்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இலாதவனுக்கு இவ்வுலகம் இல்லை”

ஆகவே, பனம், பொருள், செல்வம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னவாகும் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் இதற்கு விளக்கம் எழுதவில்லை. உங்கள் சிந்தனைக்கே அதை விட்டுவிடுகிறேன்.
---------------------------------------------------------------
பரிகாரம் என்ன?

உபவாசம் இருப்பதும், தீவிர இறைவழிபாடும் மட்டுமே இதற்குப் பரிகாரம். பிரச்சினை முழுமையாக நீங்கி விடுமா? ஓரளவு குறையும். அதோடு தாக்குப்பிடிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்
----------------------------------------------------------------
எச்சரிக்கை:

யோகங்கள் என்பது வடித்த சாதத்தைப் போன்றது. வடித்த சாதத்தில், பருப்பையும் நெய்யையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். அல்லது சாம்பாரை ஊற்றிக் குழைத்துச் சாப்பிட்டால், வேறு ஒரு சுவை கிடைக்கும். வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று விதம் விதமாகச் சேர்க்கும்போது, விதம் விதமாகச் சுவையான உணவு கிடைக்கும். அதுபோல யோகங்களுடன், மற்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, சுயவர்க்கப்பரல்கள் எனும் மசாலாக்களைச் சேர்க்கும்போது யோகங்களின் சுவை அதாவது தன்மை அதாவது பலன்களும் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்

ஆகவே இந்த அவயோகம் இருப்பவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் அலசிப் பார்க்க வேண்டுகிறேன்.

இதை எழுதும்போது எனக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி: “சார், எனக்கு இந்த யோகம் இல்லையே, என்று யாரும் வருத்தப் பட மாட்டீர்கள்!”

நன்றி வணக்கத்துடன்
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

4.11.09

Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் தெரியாது என்று சொல்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகி, கீழே சுட்டியில் (URL Link) கொடுத்துள்ள மேட்டரைப்
படித்துவிட்டு, மறுபடியும் பதிவிற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சுட்டி:-

அடடா, அருமை சார், எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதுவரை நீங்கள் எழுதியதில் எந்த யோகமும் இல்லை. இதுவாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று ஆர்வமுடன் சொல்பவர்களுக்கு இந்த யோகத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அத்ந்த நிபந்தனை ஒத்துவந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

முதலில் நீங்கள் ஸ்திர ராசிக்காரரா (Fixed signs)என்று சொல்லுங்கள்

“சார், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்துவிடுங்கள். ஸ்திர ராசி எதெது என்பதைப் படித்தேன். மறந்து விட்டது. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சொல்லும் மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs)
1. ரிஷபம் (Taurus),
2. சிம்மம் (Leo),
3. விருச்சிகம் (Scorpio)
4. கும்பம் (Aquarius)

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்!

”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?”

பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள்.

உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome)
2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான்.
3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?)
4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், என்ன சஸ்பென்சை இழுத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் எழுதுவது கதையல்ல - ஜோதிடக் கட்டுரை, அதை நினைவில் வையுங்கள்”

சரி, உங்கள் ஆர்வம் புரிகிறது. இதோ அந்த யோகத்திற்கான அமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்
2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும்.
3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும்
4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க

வேண்டும்

அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்:
லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்

A planetary combination formed by Ascendant placed in a fixed sign,
Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and
the lords of 2nd and 10th houses in mutual exchange.

This yoga is powerful in making the individual extremely beautiful,
loved by pretty women, owner of vast wealth and villas.
He attains a very high social status.
-----------------------------------------------------------
சார், படத்திற்கு என்ன விளக்கம்?
தேவேந்திரன் ஐராவதம் எனும் வெள்ளை நிறமுடைய யானையை வைத்திருந்தானாம். அதை நினைவு படுத்த இந்தப் படம். இப்போது வெள்ளை யானை கிடைக்காது. ஆகவே இந்த் யோகம் உள்ளவர்கள். வெள்ளை
நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மெர்சிடஸ் பென்ஸ் அல்லது பென்ட்லி கார்களை வைத்துக் கொள்ளலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறைக் கண்மணிகள் யாருக்காவது இந்த அமைப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் நேரில் வந்து பார்க்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------


வாழ்க வளமுடன்!

3.11.09

Lessons on yoga: Ara Sauri Yoga ஆர செளரி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yoga: Ara Sauri Yoga ஆர செளரி யோகம்!

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------

என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different fortfolios). அவை அத்தனையும் கெடும்.


என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.
ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?
உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

31.10.09

Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொல்லும் கண்ணன் எனும் மன்னன், ஒரு நாள், தர்மரை அழைத்துச் சொன்னார்:

“தர்மா, தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

அதை உடனே செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.

அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்:

“துரியோதனா, நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான்.

பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:

“மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”

புன்னகைத்த கண்ணன், அவரைப் பிறகு வரச் சொல்லி அனுப்பி விட்டார்.

சற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான். ஒரு நல்லவன் கூடக் கண்ணில் படவில்லை என்றான்.

புன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,”துரியோதனா, உன் தாய் மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா?”

துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான்.

அடுத்து, தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்,” உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன், உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா? உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?”

தர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.

நடந்ததை முழுவதுமாகத் தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச்
சொன்னார்.

“நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் ஒரு நாள் விடுப்பில் ஊருக்குச் செல்வதால், திங்கட்கிழமை வகுப்பறைக்கு விடுமுறை!

அடுத்த வகுப்பு 3.11.2009 செவ்வாயன்று!

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

30.10.09

Lesson on yoga: Amarak Yoga: அமரக் யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: Amarak Yoga: அமரக் யோகம்!

அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
(வாத்தி)யார்


வாழ்க வளமுடன்!

29.10.09

Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்


சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers

இன்றையப் பொழுது இனியதாகட்டும்!

(மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்

இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும்.

புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.
++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த யோகம் இருப்பவர்கள், தங்கள், ஜாதகத்தையும், புகைப்படத்தையும் அனுப்பலாம். அவர்களுக்காக தனிப்பதிவு ஒன்று போட்டுக் கலக்கி விடுகிறேன்.

இந்த அமைப்பில் பாதி இருப்பவர்கள், கேள்விகள் கேட்டு என்னைக் கலக்க வேண்டாம்!:-)))

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.10.09

Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

ராகு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.

ராகு என்ன நம் விரோதியா? பேட்டை தாதாவா? அவராக வந்து அடிப்பதற்கு? பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார்.

சிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும்.

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி! அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்கு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும்.

அதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்!

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்:
மேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம்

சற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம்
-------------------------------------------------------
சிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்:
ராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம்.

ராகுவிற்கான பரிகாரப் பாடல்:

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி
இறவா இன்பம் எதிலும் வெற்றி
ராகு தேவே இறைவா போற்றி!

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:

கேது தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவா கேண்மையாய் ரட்சி

(பரிகாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்)

இ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது! விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள்! உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

ராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து
கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

இன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது!

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
முழு பொதுப்பலன்களுக்கான சுட்டிகள் இங்கே!

1. தினமலர்:

2. தினத்தந்தி:
=============================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

27.10.09

Lessons on yogas: ஆதி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: ஆதி யோகம்!

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்!








வாழ்க வளமுடன்!

26.10.09

Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!
----------------------------------------------------------------
This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!
+++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன............?

Those who have enrolled their name using the above option, please inform your mail Id to my mail address: classroom2007@gmail.com Then only you will get the mail lessons! Please co-operate with me!




வாத்தியாரின் பல்சுவை பதிவில் இன்று

ஏன் பெண் உறங்கவில்லை! கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..
மேலும் படிக்க.......
...... இங்கே கிளிக்’குங்கள்!

அடிப்படைப் பாடங்கள் இங்கே:.Click here !

என்னுடைய மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com


அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது!