மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label ஞாயிறு மலர். Show all posts
Showing posts with label ஞாயிறு மலர். Show all posts

16.10.11

மின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்?


வாரமலர்: இன்றைய வாரமலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. முதலில் வருவது வகுப்பறையின் சீனியர் மாணவர் எழுதியது. அடுத்தது வாத்தியார் எழுதியது. இரண்டையும் படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை எழுதுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++

1
அவர் மனைவிக்கு எத்தனை கானா பைகள்?

கானா பைகள் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் முழுப் பதிவையும் படிக்கவும்!
--------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப் போல ஓர் அம்மாஞ்சிக்கு வயிற்று நோவு வந்து சேரந்தது. வைத்தியரிடம் போனான். வைத்தியர் என்றால் ஏ,பி,சி,டி 26 எழுத்துக்களையும் போட்டுக்கொண்டு இருக்கிறாரே அந்த ஆங்கில டாக்டர் இல்லை.நாட்டு வைத்தியர்.

"உமது நோயை 3 வேளை மருந்தில் சரி பண்ணி விடுகிறேன்".

"ஆஹா! மகிழ்ச்சி ,மகிழ்ச்சி ! மருந்தை எடுத்துக் கொடும்"

ஒரு சூரணம், ஒரு கஷாயம் கொடுத்தார். 5 அணா பீஸ் கொடுத்துவிட்டு வாசல் வரை வந்துவிட்ட நோயாளியை வைத்தியர் திரும்ப அழைத்தார்.

"இந்த மருந்து நன்றாக‌ வேலை  செய்ய ஒரு 'கண்டிஷன்' இருக்கே!அதை நான் சொல்லலியே!"

"என்ன 'கண்டிஷன்'?"

"மருந்து சாப்பிடும் போது குரங்கு ஞாபகம் மட்டும் வரக்கூடாது."

"வந்தால் என்ன ஆகும்?"

"என்ன ஆகும்?! மருந்து வேலை செய்யாது.அப்புறம் என்னைக் குறை சொல்லக் கூடாது. குரங்கை நினைக்காமல் மருந்தைச் சாப்பிடும்."

'சரி' என்று அம்மாஞ்சி வீட்டுக்கு வந்து மருந்தைச் சாப்பிடக் கையில் எடுத்தார்.

வைத்தியர் போட்ட 'கண்டிஷன்' நினைவுக்கு வந்தது.கூடவே குரங்கு ஞாபகம் வந்தது.

அம்மாஞ்சி மருந்தை சாப்பிட்டரா, வயிற்று நோவு சரியாயிற்றா என்று முடிவைக் கேட்காதீர்கள்.எனக்குச் சொன்ன என் தாத்தா முடிவைச் சொல்லவில்லை.

இந்தக் கதை எதுக்கு இப்போ?

ஏனென்றால், நான் வகுப்பறைக்கு எதாவது எழுத வேண்டுமானால் உடனே என் மனதில் தோன்றுவது சப்பான்(ஜப்பான்தான், தமிழ் ஆர்வத்தால் சப்பான் ஆகிவிட்டது)மைனர்வாள் தான்.

"ஆகா! சண்டை வந்தது பிராமணா; சாத‌த்து மூட்டையைக் கீழே வையும்!"என்று டெல்லிக்காரவுக கிளம்ப வேண்டாம்.(அந்தக் கதை அப்புறம் சொல்கிறேன்)

மைனர்வாளை டார்வின் தியரி படி நம் மூதாதையுருடன் ஒப்பிட்டு விட்டதாகப் பின்னூட்டம் போட வேண்டாம் என்று டெல்லிக்கு புறா மூலம் ஓலை அனுப்பி விட்டேன்.

வகுப்பறயை பற்றி நினைத்தாலே வாத்தியாருக்கு முன்னால் மைனர்வாள் தான் மனக்கண் முன் வந்து நிற்கிறார்.

மனோதத்துவ டாக்டரை கேட்டேன். "ஆமாம்! இது ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா" என்ற புதுவிதமான மன நிலை. மன நோய் வகையில் சேர்க்க முடியாது.மன நிலைப்பாடுதான்.ஆனால் இதை சரியாகக் கவனிக்காவிடில் மனநோயில் கொண்டு விட்டுவிடும்" என்றார்.

"கவனிப்பது என்றால் எப்பூடி?"

"எப்பூடின்னா?அப்படித்தான். அடிக்கடி மைனர் உம்மைக் காலை வாரவும், நீர் அவரைக் கையைப்பிடித்து இழுக்கவுமாக இருந்து கொண்டே இருக்கவும்.அப்போ உங்களுக்குள்ள ஒரு 'இது'வந்துடும். மைனரோ ஃபோபியா முற்றாது."

'சரி'ன்னு வந்துட்டேன்.

நான் சாமியார்களைப் பற்றி எழுதினால் மைனருக்கு ஆகுமா ஆகாதா என்ற ஆராய்ச்சி. அனுஷ்கா சர்மா கனுஷ்கா கர்மா என்றெல்லாம் எழுத வரமாட்டேன் என்கிறது என்ன செய்ய?

விவேகானந்தர் பற்றி எழுதினால், 'கீதையைவிட ஃபுட்பால் சிறந்தது என்று விவேக் சொல்லியிருக்கார்' என்று அந்த ஃபுட் பாலாலேயே தாக்குகிறார்.

அதனாலே எனக்கு கட்டுரைக்கான செய்திப் பஞ்சம் வந்துவிட்டது.இந்த வாரம் அதிகம் மூளையை கசக்கி எழுதியுள்ளேன்.

ஃபுட் பால் விஷயம் போலவே confidence trickster matter ஒன்று விவேகானந்தருடன் தொடர்புடையது.

ஒரு சோப்பளாங்கி விவேகானந்தரிடம் போய் ஞான உப‌தேசம் கேட்டான். ஒன்றுக்கும் உதவாத அவனிடம் சொன்னார்,"நீ நான் நம்பும் படி ஏதாவது டூப் சொல்லி என்னை நம்ப‌ வை பார்க்கலாம்" என்றார்.

அவன் சொன்னானா என்று தெரியவில்லை.ஆனால் என் வாழ்க்கையில் அப்படி ஏமாந்த நிகழ்வைச் சொல்கிறேன்.

தஞ்சைக்கு நான் வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்தது. யாரையும் அதிகம் பழக்கம் இல்லை. ஒருவருடைய இயல்பும் பிடிபடாத சமயம்.

மதிய‌ உணவு இடை வேளையில் எல்லோரும்  சேர்ந்து அமர்ந்து உண்போம்.

அந்த சமயத்தில் பல செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறும்.

காய்கனி எந்தக் கடைத் தெருவில் மலிவு, தஞ்சாவூரிலேயே சிறந்த டைலர் யார்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தெரிகிறதா இல்லை வெறும் கோடுதானா, பாக்கெட் பால் நல்லதா, கைப்பால் நல்லதா ..... இப்படிப் பல.

தங்க‌ம் விலையில் இருந்து,பாய்லர் பற்ற வைக்க சாண‌ உருண்டை வரை பல விஷயங்கள் பேசுவோம்.

என் insufficient time. அதாங்க, போறாத காலத்தின் போது, காபி பற்றிய பேச்சு சாப்பாட்டு மஹாசபையில் அலசப்பட்டது.

"எந்தக் கடையில் காப்பித் தூள் வங்கற?"

ஒருவர் சொன்னார்: 'ராமன்ஸ்'

'நாதன்ஸ் தான் பெஸ்ட்'

'நாங்க‌ லியோ தாம்பா'

'நரசூஸ்தான் பாரம்பரியமானது.'

நான் மெளன‌மாகத்தான் இருந்தேன்.

"என்னா முத்து பேச்சைக் காணோம்" என்றார் அவர்.

அவர்னா? அவர்தான். எனக்கு ஆப்பு வைக்கப் போகிறவர்.

நான் சொன்னேன்:"நாங்க 3 விதமான சீட்ஸ் வாங்கி ஒரு விகிதத்தில் கலந்து மண்சட்டியில் தினமும் வறுத்து, அவ்வப் போது கை மெஷினில் அறைத்து ஃபில்டரில் வடிகட்டி, கறந்த பால் காய்ச்சி, மிதமான சர்க்கரை சேர்த்து
....."

'தினமுமா?'

"ஆம்!காலை மாலை இரண்டு வேளையும்!"

'எப்படி முடிகிறது?'

"நல்ல காபி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தான். ஜென் புத்த மதத்தில் டீ சாப்பிடுவதே ஒரு சடங்கு போல இருக்குமாம்.அதுபோல காலையில் காபி தயாரிப்பதையே ஒரு தியானம் போலச் செய்கிறோம்."

"ஆகா! கேட்கவே சுகமாக இருக்கே! காபியின் மணத்தையும் சுவையையும் உன் பேச்சே கொண்டு வந்து விட்டதே.ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து அந்தக் காபியை எனக்குக் கொடேன்."

"பேஷா! எப்போ வருகிறீர் சொல்லும்."

"நாளை சனிகிழமை! அரை நாள் தான் அலுவலகம்! நாளை மாலை 4 மணிக்கு வருகிறேன்."

வீட்டில் வந்து சொன்னேன்!

மறுநாள், கேசரி, அடை,அவியல், காபி என்று மெனுவைப் போட்டார்கள்.

சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்.

மகிழ்ச்சியுடன் வரவேற்று சிற்றுண்டியைக் கொடுத்தோம்.

காபியை சாப்பிட்டுவிட்டு  'ஆகா, ஓகோ' என்று புகழ்ந்தார்.

"தேவாமிர்தம்னா இதுதான்!அடடா என்ன சுவை, என்ன மணம்!!"

வீட்டுப் பெண்களுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

"என் வீட்டில் அவளுக்குத்தான் உடம்பே சரியில்லை.அத‌னால் சரியான சமையல்,காபி, டிபன்  சாப்பிட்டு 5 வருஷம் ஆயிற்று.5 வருஷம் கழித்து இன்றுதான் நல்ல டிபன் காபி"

"அடை இன்னொன்று சாப்பிடுங்கள்.காபி இன்னொரு கப் தரவா?"

'ஆகா, கொடுங்கள்' என்று கேட்டு மீண்டும் மீண்டும் புகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லி ஒரு அன்னியோன்னியத்தை வர வழைத்துவிட்டார்.

பெண்கள் மகுடி கேட்ட பாம்பாக மாறிப் போனார்கள்.

"அவளுக்கு ஹிஸ்டெரெக்டமி(கர்பப்பை) ஆபரேஷன். இன்னும் 2 நாளில் வைத்து உள்ளது. 3000/= ஆகும்.(1974) பணம் தான் இல்லை. என்ன செய்யப் போகிறேனோ!? எல்லாம் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு இருக்கேன்"

'அதென்ன. நாங்கள் இல்லையா? கவலைபடாதீர்கள்.'

மந்திரித்து விட்டது போல எல்லோரும் கிளம்பி வீட்டையே கவிழ்த்துப்போட்டுத் தேடி 3000/= தேர்த்தி அவருக்குத் தக்க மரியாதைகளுடன்
கொடுத்தோம்.

"இப்படிப்பட்ட மனுஷாளை நான் பார்த்ததே இல்லை. எங்க‌ தஞ்சாவூர்காராள் இல்லையோல்லியோ நீங்கள்?அதான். இந்த ஊர்க்காரப்பசங்க எச்சக் கையால் காக்காய் ஓட்டமாடான்.ரொம்ப அபூர்வம்னா இப்படிப்பட்ட மனுஷாளைப் பார்கிறது! சரி வரேன். ரொம்ப தேங்ஸ்!"

காலில் வெந்நீர் பட்டவரைப் போல ஓடிவிட்டார்.

மறுநாள் ஞாயிறு. அலுவலகம் விடுமுறை.

திங்கள் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.

மதியம் சாப்பாட்டு மஹாநாட்டில் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

"சார் இன்னிக்கு ஏன் வரவில்லை தெரியுமோ?"

"அவனுக்கென்ன வராததிற்குக் காரணம்? எந்த சீட்டாட்ட கிளப்பில் விழுந்து கெடக்கிறானோ? எவ்வள்வு ஸ்டேக்கோ? யாருக்குத் தெரியும்?"

எனக்கு 'பகீர்' என்றது.

"இல்லை, சனிக்கிழமை என்னிடம் சொன்னார், அவர் பார்யாளுக்கு யுடெரஸ்ஆபரேஷன் அப்படின்னு"

"அவன் பார்யாளுக்கு எத்தனை யுட்ரஸ் இருக்குமோ யாருக்குத் தெரியும்? ஊர் பூரா வாரா வார‌ம் இதே கதையைச் சொல்லிக் கடன் வாங்கிண்டு ஓடிப் போய்டுவான். பார் சாயங்காலம் அவன் பார்யாள் விசாரிச்சுண்டு வருவா பார்."

சொல்லிவைத்தார் போல மாலை அலுவலக வாசலில் அந்தப் பெண் வந்து நின்று கொண்டிருந்தார்.முதல் முறையாக அவரைப் பார்க்கிறேன். சோகமயமான மஹாலட்சுமி!

"யார்? யார்? கொடுத்தா பணம் அவருக்கு? எந்த கிளப்பில இருக்கார்? எதாவது சொல்லிண்டு போனாரா? இங்கயானா அவரோட அம்மாவுக்கு ரொம்ப சீரியசா இருக்கு.ஆத்தில ஒரு குந்துமணி அரிசி இல்லை. கிழவிக்கு கஞ்சி காய்ச்சக் கூட குருணை இல்லை. பொறுப்பே இல்லாம எங்கயோ சொல்லிக்காம சீட்டாட போய்ட்டாரே!"

நான் பேச்சு வராமல் நின்றேன். பணம் போனது எனக்குப் பெரிசாகத் தெரியவில்லை.

இக்கட்டான நிலையில் குடும்பததை விட்டு விட்டு, சீட்டாடப் பொய் சொல்லிப் பணம் பறித்துக்கொண்டு போயுள்ளாரே அந்த மனிதர்.சே! என்ன மனுஷன் இவர்!

பாத்திரம் அறிந்து அளிக்கச் சொன்ன பெரியவர்கள் எவ்வளவு முன் யோசனை உடையவர்கள்.

புத்திக் கொள்முதல்!

அப்புறம்?

அப்புறம் என்ன, விழுப்புரம்?

அவர் திருந்தினாரா? அவர் திருந்துவதற்கு ஏற்பட்ட சம்பவம் எது என்றெல்லாம் வளர்க்க இது கதையல்ல. நிஜம்!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: வகுப்பரையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)


கர்ப்பப் பைகள் என்று தலைப்பில் போடாமல், க.பைகள் என்று சுறுக்கிப் போட்டுள்ளேன். க. என்ற எழுத்து கானாவாக மாறியதற்குக் காரணம் எங்கள் பகுதி சொல்வழக்குகள்தான் காரணம் - வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வாரமலர் - பகுதி இரண்டு

மின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்? 

பஞ்சபூதங்கள் ஐந்தல்ல - ஆறு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு!

மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாய கர்மச் செயல்! The Karma of Forwarding Emails to One and All

பகவத் கீதை - புது அத்தியாயம் - எண் 19

அர்ஜுனன்:  வாசுதேவா, எனக்கு வரும் எண்ணற்ற மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்பும் - Forwarding Emails - அடாவடி வேலையை,
மன்னிக்கமுடியாத செயலை நான் எப்படிச் செய்வேன்? அதுவும் உயிரினும் மேலான நண்பர்களுக்கும், உற்றார்களுக்கும், உறவினர்களுக்கும்,
வயதில் மூத்தவர்களுக்கும் மதிப்பிற்கு உரியவர்களுக்கும் எப்படி அவற்றை நான் அனுப்புவேன். மனம் ஒப்பவில்லையே?

கிருஷ்ணர்:  இன்றைய காலகட்டத்தில், நண்பன், எதிரி, உறவினன் அந்நியன் இளைஞன், வயோதிகன் என்ற பேதங்கள் (பிரிவுகள்) கிடையாது.
அனைவரும் சமமானவர்களே! வேண்டியவர்களே! எதையாவது சொல்லி நீ தப்பிக்க முடியாது. அதுதான் இணைய தர்மம் (Net-Dharma) மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து பார்ப்பதற்குத் தயங்காதே. வந்திருக்கும் அத்தனை மெயில்களையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய். உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பெறும் கர்மா அது ஒன்றுதான். நீ கடைபிடிக்க வேண்டிய தர்மமும் அதுதான்!

அர்ஜுனன்: மாதவா, என் மனசாட்சிக்கும், ஆன்மாவிற்கும் ஒவ்வாத செயலைச் செய்யச் சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள்.
சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்!

கிருஷ்ணர்: குந்திபுத்திரனே! இன்று நிலவும் மாயவட்டத்திற்கு நீ ஒன்றும் விதிவிலக்கல்ல! டாலரும், யென்னும், யூரோகரன்சியும் ஆட்சி செய்யும்
இன்றைய உலகிற்கு உனக்கு நீயே கமிட்டாகி உள்ளாய். நீ என்பது உன்னையும், உன்னுடைய கணினி மவுஸையும் சேர்த்துக் குறிக்கும்! அதை மறந்து விடாதே! மெயில்கள் 25 ஆண்டுகாலமாக கோலோட்சிக்கொண்டுள்ளன. நீ வைகுண்டம் போனாலும் போவாய். அவைகள் போகாது. தொடர்ந்து அவைகள் இங்கேயே நிற்கக்கூடியவை. ஆட்சி செய்யக்கூடியவை. மாயைக்குள் படுத்துக்கொள்ளாதே! எழுந்து உட்கார்! உனது  கடமையைச் செய்! வரும் மெயில்களில் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்!

அர்ஜுனன்:  கண்ணா, மாய உலகத்தில் மின்னஞ்சலுக்கு உரிய முக்கியத்தைக் கொஞ்சம் தெளிவுறச் சொல்லுங்கள்

கிருஷ்ணர்:  அப்படிக்கேள். இப்போது சொல்கிறேன். மின்னஞ்சல் இவ்வுலகின் ஆறாவது பூதம். E*mail is the 6th element in the universe நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு! மின்னஞ்சல்களை உருவமுள்ளவைகள் என்று உணரவும் முடியாது. உருவமில்லாதவைகள் என்று ஒதுக்கவும் முடியாது. அவைகளுக்கு  உயிருண்டு. ஆனால் மரணமில்லை. மின்னஞ்சல்கள் ஒரு மகத்தான வேலையைச் செய்கின்றன. மின்னஞ்சல்களைப் படிப்பதன் மூலமும்,  மற்றவர்களுக்கு அவற்றை அனுப்புவதன் மூலமும் தங்கள் நேரம் சரியான விதத்தில் செலவிடப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். தங்கள்
அறிவையும், முயற்சியையும் தாண்டி தாங்கள் சாதிப்பதாக, சாதனை செய்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆன்மா ஒரு உடலை விட்டு
நீங்கி பிரிதொரு உருவம் எடுப்பதைப்போல மின்னஞ்சல்களும் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்குப் போய்ச் சேருகிறது.
அவைகள் உலகை விட்டு நீங்குவதும் இல்லை. அழிவதும் இல்லை.

அர்ஜுனன்:  பகவானே, மின்னஞ்சல்களின் உண்மையான தன்மைகள் என்ன?

கிருஷ்ணர்:  நெருப்பால் அவற்றை எரிக்க முடியாது. காற்றுடன் கலந்து அவைகள்காணாமல் போகாது. அவற்றைத் வெற்றி கொள்ளவும் முடியாது. தோல்வி அடையச் செய்யவும் முடியாது. உன்னுடைய பரிபூரண ஆன்மாவைப்போல மின்னஜ்சல்களும் நிலையானவை. நீ  உன்னுடைய  வில்லில் இருந்து செலுத்தும் அம்புகளைப் போல அல்ல அவைகள். சமயங்களில் நீ ஃபார்வேர்ட் செய்யும் மின்னஞ்சல்கள் வழி  தவறினாலும்  உன்னிடமே திரும்ப வந்து சேரக்கூடிய தன்மை உடையவை! நீயும் வேண்டிய மட்டும் திரும்பத் திரும்ப எத்தனை முறைகள்  வேண்டும் என்றாலும் ஒரு க்ளிக்கில் அந்த நபருக்கே அவற்றை அனுப்பலாம். இப்போது புரிகிறதா அவற்றின் உண்மையான தன்மை மற்றும்  மேன்மை?

அர்ஜுனன்: வாசுதேவா, கோடி வந்தனங்கள் உமக்கு உரித்தாகுக! மூடிக் கிடந்த என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். மெயில்களின் மேன்மையை  நன்கு புரிந்துகொண்டேன். இதுவரை நான் செய்து வந்த தவறு எனக்கு விளங்குகிறது. இதுவரை எனக்கு வந்த மெயில்கள் அனைத்தையும்  படித்துப் பார்ப்பதிலேயே எனது நேரத்தைச் செலவிட்டேன். வேறு எந்த வேலையையும் நான் செய்யவில்லை. யாருக்கும் அவற்றை ஃபார்வேர்ட்  செய்யவில்லை. இன்று முதல் என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். படிப்பதைவிட அவற்றை மற்றவர்களுக்குப் ஃபார்வேர்ட் செய்வதுதான்  முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டேன். அதுதான் தர்மமும் கூட. சிம்ப்பிளாக ஃபார்வேட் பட்டனை அமுக்கி, அங்கிங்கெனாதபடி  அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைக்கிறேன். அதர்மத்திற்கு எதிராக நடக்கும் இன்றைய குருஷேத்திர யுத்தத்தில் அனைவரையும் பங்கு  கொள்ளச் செய்ய அதுதான் சிறந்த வழி!

கிருஷ்ணர்:  வெற்றி, தோல்வி எல்லாம் உன் கையில் இல்லை. செயல் மட்டுமே உன் வசம். பலன் உன் கையில் இல்லை. அனுப்புவதோடு
நிறுத்திக் கொள். கிடைக்கும் ஒவ்வொருவன் கையிலும் அதை விட்டுவிடு.
அது ஒன்றுதான் உன்னுடைய தலையாய கடமை. ததாஸ்து!

- மின்னஞ்சலில் வந்த சரக்கு. மொழிமாற்றம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம் புதிய அத்தியாயம் எப்படி உள்ளது சாமிகளா? ஒரு வரி எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------------

9.10.11

Short Story: எது பெரிய தண்டனை?

வார மலர்

இந்த வார வாரமலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. முதலில் உள்ளது நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவர் எழுதியது.
அடுத்து உள்ளது, வாத்தியார் உங்களுக்காக வலையேற்றியுள்ள அவருடைய சிறுகதைகளில் ஒன்று. இரண்டையும் படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் ஒன்று By KMRK

------------------------------------------------------------------------- 
இன்னும் வரவில்லை அவர்!

இரவு மணி 8:30 இருக்கும்.

சமையல் அறையில் அப்பள‌ம் பொரித்துக் கொண்டு இருந்த நீலா அந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டாள். யாரையோ யாரோ கழுத்தைப் பிடித்து அழுத்துவதைப் போல ஒரு அசாதாரண ஒலி! 

அவசரமாக சமையல் அறையை விட்டு வெளியில் வந்து கூடத்தை எட்டிப் பார்த்தாள்.அக்கா, கழுத்தைப் பிடித்துக் கொண்டு 'ஊ ஊ ஊ' என்று பேச முடியாமல் கத்திக் கொண்டு இருந்தாள்.

அக்காவின் சங்கிலியைப் பிடித்து இழுத்தவாறு யாரோ ஒருவன் சோபாவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.அக்கா கழுத்து இறுக்கப்பட்டதால் ஓங்கிக்குரல் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.

இத்தனைக்கும் அக்காவின் கணவரும் அக்காவுடனேயே அதே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.அவருக்கு நடப்பது ஒன்றும் தெரியவில்லை.

காரணம்?

அவருக்கு சுத்தமாகக் காது கேட்காது.காதொலிக் கருவி அணிந்து கொள்வது அவருக்கு கூச்சமாக இருக்கிறதாம். தன்னை மறந்து தொலைக்காட்சி பார்ப்பார்.வாய் அசைவுகளை வைத்து கதையெல்லாம் சரியாகச் சொல்லுவார்.

நீலா சட்டென்று கொதிக்கும் எண்ணையுடன் வாணலியைத் தூக்கிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

"டேய்! சங்கிலியை விடு. இல்லாவிட்டால் கொதிக்கும் எண்ணயைத் தலையில் கவிழ்த்து விடுவேன்"என்று சத்தம் போட்டாள்.

திருடன் பயந்து போனான்.'வெடுக்'கென்று சங்கிலியை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக ஓடினான். கால் பாகம் சங்கிலி அறுந்து அவனிடம் போய்விட்டது. முக்கால் பாகம் அக்கா கையில் தங்கியது.

திருடன் சுவறேறிக் குதித்து இருளில் மறைந்து போனான்.

கணவரை உலுக்கி செய்தியைச் சொன்னாள் அக்கா.

"ஒகோ!அப்படியா?இதோ போய் பார்க்கிறேன். ம்ம்ம். அந்த டார்ச்சை எடு. ஒரு தடியைக்கொடு....." என்று எழுந்தார் குடும்பத் தலைவர்.

"திருடன் இந்த திறந்திருந்த பின் கதவு வழியாகத்தான் வந்து இருக்கணும்.நாம் அவனுக்கு முதுகைக் காண்பித்து உட்கார்ந்து இருந்ததால் நமக்குத் தெரியவில்லை. ஏற்கனவே நீ கனத்த சங்கிலியைப் போட்டு இருப்பதை அறிந்தவனாகத்தான் இருக்கணும்.நம் வீட்டினை எட்டி இருந்து நன்கு நோட்டம் விட்டு, நமது நடைமுறையெல்லாம் அறிந்து கொண்டு திட்டமிட்டுத்தான் வந்து இருக்கிறான்......"

'பெரிய ஷெர்லாக் ஹோம்ஸ்! துப்பறிகிறார் பாரு'அக்கா முணுமுணுத்தாள்.

"அயித்தான்!இப்படி அத்வான காட்டிலே கொண்டு வீட்டைக் கட்டாதீர்கள் என்று
படித்துப் படித்துச் சொன்னேனே.. என் பேச்சைக் கேட்டீர்களா?!"நீலா உரக்கச் சொன்னாள்.

"ஆமாம்!ரொம்ப இருட்டாகத்தான் இருக்கு. மழை வேற வராப்பல இருக்கு"
என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ்.

"கெட்டுது போ. வாழ்ந்தாப்பல‌தான்..."என்று நொடித்தாள் அக்கா.

அப்போதுதான் புழக்கடையில் நான்குபுறமும் 'டார்ச்' ஒளியை பாய்ச்சினார் ஷெர்லாக். சுற்றுச்சுவர் மூலையில் ஏதோ ஒரு பொருள் கருப்பாக உருண்டையாகக் கிடந்தது.அதன் மீதே ஒளியை நிலையாக நிறுத்தி,

"அதோ பாருங்கள். அது என்னவாக இருக்கும்? உற்றுப்பாருங்கள்."என்றார்.

"என்ன ஏதாவது காய்ந்த பழக்கொட்டையாக இருக்கும்" என்றாள் நீலா!

"எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றாள் அக்கா!

"எனக்கென்னமோ அது கை எறி குண்டாக இருக்கும் என்று தோன்றுகிறது.அந்தத் திருடன் தான் போட்டு இருக்க வேண்டும்." இது ஷெர்லாக்.

அதற்குமேல் அவர்களை அங்கே நிற்க விடவில்லை நமது துப்பறியும் நிபுணர்.
வீட்டிற்குள் துரத்திவிட்டார். தானும் வந்து வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார்.

'என்ன செய்வது காவல்துறைக்கு இப்பவே தெரிவிக்கலாமா காலையில் தெரிவிக்கலாமா' என்றெலாம் தானும் குழம்பிக் கொண்டு, மனைவியையும் மைத்துனியையும் நன்றாகக் கலக்கினார் ஷெர்லாக்.

அப்போது வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

'திக்' என்றது ஷெர்லாக்கிற்கு.

இவர் ஒன்றும் சலனம் காட்டாததால் மேலும் ஓங்கித்தட்டி 'சார் சார்' என்று குரலும் கேட்டது.

தயங்கித் தயங்கிக் கதவருகில் சென்றார்.

"சார்! நாங்கள் காவல் துறை! போலிஸ்! கதவைத் திறவுங்கள்."

'அட!இங்கே நடந்தது எல்லாம் எப்படி உடனே போலீசுக்குத் தெரிந்தது?!'

வியப்புடன் கதவைத் திறந்தார் ஷெர்லாக்.

ஒரு அதிகாரியும், இரண்டு காவலர்களும் சீருடையில் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

"சார்! இந்தப்பக்கம் யாராவது சந்தேகத்திற்கு இடமாக நடமாடினால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்க. வீட்டு முன்னும் பின்னும் இரவு முழுதும் விளக்கு எரிய விடுங்க.கொஞ்சம் திருட்டுப் பசங்க இந்தப் பக்கம் நடமாடுவதா எங்களுக்குத் தகவல். உங்க வீடு வேற தனியா நிக்குதா, நீங்க ரொம்ப உஷாரா இருக்கணும் சார்!" என்றனர்.

"ஆமாம்! உஷா கூட ஊருக்குப் போயிருக்கா" என்றார்  ஷெர்லாக்.

நீலாவுக்குப் பொறுக்கவில்லை. முன்னால் வந்து நின்று நடந்ததையெல்லாம்
விலாவாரியாகச் சொன்னாள்.

"பாத்தீங்களா! அந்தப் பய இந்தப்பக்கம் வரதைப் பார்த்து எங்க‌ளுக்கு தகவல் வந்ததால்தான் வந்தோம்.சரி காலையிலே ஒரு புகார் எழுதிக் கொடுங்க."

நடப்பதை ஒருவாறு புரிந்து கொண்ட ஷெர்லாக், மிகவும் கீழ்க் குரலில்
'இங்கன வாங்க சார்'என்று பதுங்கிப் பதுங்கி அழைத்துச் சென்று "குண்டை"க் காண்பித்தார்.

"அது குண்டு மாதிரி இல்லையே" என்றார் அதிகாரி.

"இல்ல சார் அது குண்டுதான் சார்" என்றார் ஷெலாக்.

"சரி எதுக்கு ரிஸ்க்?! யோவ் 321! நாளைக்குக் காலையில் பாம் ஸ்குவாடைக் கூட்டி வந்து பாத்துடு! சரி சார்! குண்டு கிட்ட போகாதீங்க. இந்த ஒரு ராத்திரி ஜாக்கிரதையாக இருங்க" அதிகாரி மிடுக்காக வெளியேறிவிட்டார்.

321 தயங்கி நின்றார். ஷெர்லாக்கின் முகத்தை மாற்றி மாற்றிப் பார்த்தார்.

"அது ஒண்ணும் இல்லை சார்,ஸ்குவாடுக்கு வேன் வைக்கணும் காலைல டிபன் வாங்கித் தரணும். செலவுக்கு......!"

ஒரு வழியாகப் புரிந்து கொண்ட ஷெர்லாக் ரூ 500/‍= கொடுத்தார்.

"பத்தாது சார் இன்னொரு 500/=கொடுங்க" என்றது  321!

கொடுத்தார் ஷெர்லாக்.

சொன்ன சொல் தவறாமல் காலையில் ஒரு 7,8 பேர்கள் ஒரு வாடகை வேனில் வந்து இறங்கினார்கள். வீட்டை விட்டு வெளியேறித் தள்ளிப் போய்விடும்படி ஷெர்லாக்கையும் குடும்பத்தாரையும் அனுப்பி வைத்தார்கள்.

சிறிது நேரத்தில் திரும்ப அழைத்தார்கள்.

"குண்டுதான் சார். நல்ல வேளை வெடிக்கலை. நாங்க அதை செயலிழக்கச்செய்து விட்டோம்.தப்பித்தீர்கள்!"

321 இன்னும் கொஞ்ச‌ம் செலவுக்கு என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

காவல் நிலைய‌த்துக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்தார் ஷெர்லாக்.

ஒரு வாரம் சென்று 321 வந்தார்.

"சார் சங்கிலித்திருடன் இருக்கிற இடம் தெரிந்து விட்டது எப்படியும் பிடித்து விடுவோம். அவனைப் பிடித்தால், அவங்கிட்ட இருக்கிற உங்க மனைவியின் அறுந்த சங்கிலியோடு ஒத்துப் பார்க்க ஒரு துண்டு சங்கிலி கொடுங்க சார்!"
என்றார்.

நீலா இப்போது தலையிட்டாள். "ஏன் கான்ஸ்டேபிள் சார்! திருடனைப் பிடித்த பிற‌கு துண்டுச் சங்கிலி அவனிடம் இருக்குமா என்பதே சந்தேகம். அதற்கு எதற்கு இப்பவே சங்கிலி மாதிரி கேட்கிறீர்கள்? முதலில் திருடன் கிடைக்கட்டும். சங்கிலி அவன் வசம் இருக்கிறதா என்று பார்ப்போம்.இருந்தால் எங்கள் சங்கிலியைக் கொண்டு ஒப்பு நோக்குவோம்...."

"சரி இந்தப்பெண்ணுக்கு என் மேல நம்பிக்கை இல்லை போல ... சரிசார் ... உங்களுக்காக 'பாம் ரிஸ்க்' எல்லாம் எடுத்து உள்ளோம்.....சரி விடுங்க.வரேன்..." கோவமாகக்கிளம்பினார் 321!

ஷெர்லாக் அவரை சமாதனப் படுத்தி கைவசம் இருந்த அறுந்த சங்கிலியில் 2 கிராம் அளவு குறட்டை வைத்து வெட்டி எடுத்துக் கொடுத்தார்.

"ஓகே சார்! திருடன் கிடைத்த உடன் வந்து கூப்பிடறேன். அதுவரைக்கும் ஸ்டேஷன் பக்கமே வராதீங்க."

கடந்த 20 வருடங்களாக 321 வந்து கூப்பிடுவார் என்று ஷெர்லாக் வாசலைப்பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார்.

என்றாவது ஒரு நாள் 321 வருவார்.

நம்பிக்கைதானே சார் உலகம்?

(இது ஓர் உண்மைச் சம்பவம். மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்லியுள்ளேன்.
சிறிது கூட கற்பனை,புனைவு கிடையாது.)

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராம கிருஷ்ணன்(லால்குடி)
--------------------------------------------------------------------------------------------------- 

ஆக்கம் 2  By வாத்தியார்

----------------------------------------------------------------------------------
 Short Story: எது பெரிய தண்டனை? 

சாயப்பட்டறையின் ஸ்டாக் அறைக்குள், சாப்பிட்டு முடித்த பாத்திரங்களையும், கைகளையும் கழுவிக் கொண்டு திரும்பிய மேஸ்திரி சாமிக் கண்ணு, அங்கே தன் முதலாளி பழநியப்ப செட்டியார் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனான்.

சுட்டெரிக்கும் வெய்யில். ஈரோடு நகருக்கே உரிய மனிதனை வறுத்தெடுக்கும் ஈரப்பதம் குறைவானகாற்று. மணி மதியம் இரண்டிருக்கும். இந்த நேரம் அவர் தன் வீட்டில் ஏஸி அறையில் கோழித்தூக்கம் போடும் நேரம். நான்கு மணிக்கு எழுந்து, கால் முகம் கழுவி, இடைப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, ஐந்து மணிக்குத்தான் அவர் வருவது பழக்கம். வந்தால் இரவு ஒன்பது மணி வரைக்கும் இருப்பார்.

முழுநேரமும் பட்டறையின் முன் பக்கக் கட்டிடத்திலுள்ள தன் அறையில்தான் இருப்பார். இங்கே ஸ்டாக் அறைக்கெல்லாம் எப்போதாவதுதான் வருவார்.

இன்று இந்த நேரத்தில் வந்திருப்பதன் நோக்கம் புரியாமல் விழித்த சாமிக்கண்ணு, வார்த்தைகளைப் பாதி மென்றவாறு மெல்லிய குரலில் கேட்டான்.

“என்ன முதலாளி திடீரென்று வந்திருக்கிறீர்கள்? ஏதாவது அவசர வேலையா?”

“இல்லை சாமிக்கண்ணு!”

“பொல்யூஷன் கண்ட்ரோல் (Pollution Control) ஆட்கள் வரப்போவதாகத் தகவல் வந்ததா முதலாளி?

“சென்ற மாதம்தானே வந்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துவிட்டுப் போனார்கள். மாதா மாதம் வருவதற்கு அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?”

அவர் குரலில் கோபம் தெரிந்தது. சாமிக்கண்ணு அரண்டு போனான். ஒன்றும் பேசாமல் மெளனமாக நின்றான். செட்டியார் தொடர்ந்தார்.

“உட்காரு.” என்று அவர் அழுத்தமாக, கோபமாகச் சொல்ல, எதிரில் இருந்த ஸ்டுலின் விளிம்பில் அமர்ந்தான்.

“நிசமாகச் சொல்லு, எதுக்கு நான் வந்திருப்பேன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியாது முதலாளி.”

பழநியப்ப செட்டியார் சற்று நேரம் அவனை நிதானமாக உற்றுப் பார்த்தார்.

“பூவாத்தாள் என்ற பெண்னைத் தெரியுமா உனக்கு?”

அவன் முகம் பேயறைந்ததைப் போல ஆகிவிட்டது.

“எனக்குத் தெரியாது முதலாளி”

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்துப் படித்தார்.

“பூவாத்தாள், அய்யனார் குடியிருப்பு, பூசாரி சென்னிமலை சந்து, சூரம்பட்டி நான்காவது சாலை, ஈரோடு 638 009 ”

“எனக்கு எந்தப் பெண்னையும் தெரியாது முதலாளி”

“பொய் சொல்லாதே! எனக்குப் பொய் சொல்றவங்களைச் சுத்தமாப் பிடிக்காதென்று உனக்குத் தெரியாதா சாமிக்கண்ணு?”

“இல்லை முதலாளி, தெரிஞ்சிருந்தா எதுக்குப் பொய் சொல்லப் போறேன்?”

“ஆனால், அவள் உன்னை நன்றாகத் தெரியும் என்கிறாள். அதற்கு என்ன சொல்கிறாய்?”

“அவள் அடையாளம் தவறி என்னைச் சொல்கிறாள் என்று நினைக்கிறேன் முதலாளி. நேரில் பார்த்தால் அவள் எனக்குத் தெரிந்தவளா அல்லது தெரியாதவளா என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.”

பழநியப்ப செட்டியார் அடுத்த குண்டைப் போட்டார்.

“நீ இப்போது அவளை நேரில் பார்க்க முடியாது. அவள் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறாள்”

செட்டியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சாமிக்கண்ணு நிலை குலைந்து போய் விட்டான். மின்னல் தாக்கியதைப் போல இருந்தது. செட்டியாரின் செல்வாக்கெல்லாம் அவனுக்குத் தெரியும். இனிமேலும் பொய் சொன்னால் விவகாரம் பெரிதாகி விடுமென்று, மெதுவாக உண்மையை ஒப்புக் கொண்டான்.

“தெரியும் முதலாளி! பயத்தில் பொய் சொல்லி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!”

“எப்படித் தெரியும்? எத்தனை நாட்களாகத் தெரியும்?”

“அவள் முன்பு நமது பட்டறையில் வேலை பார்த்தவள். அப்போதிருந்து தெரியும்”

“அவளுக்கு என்ன வயது?”

“இருபத்தைந்து வயது.”

“உனக்கு என்ன வயது?”

“இந்தச் சித்திரையோடு நாற்பத்தைந்து முடிகிறது முதலாளி”

“நாற்பத்தைந்து வயசு ஆசாமிக்கு, இருபத்தைந்து வயசுப் பெண்ணின் தொடுப்பு எதற்காக? நாசமாகப் போவதற்கா? சரி, அதை எதற்காகப் பேச வேண்டும்? அது உன் சொந்த விவகாரம். பட்டறைக்கு வெளியே நீ செய்யும் பாதகச்செயல்! அதில் உன் குடும்பம் வேண்டுமென்றால் பாதிக்கப் படலாம். எனக்கு என்ன வந்தது? தொடுப்பு சங்கதியை விட்டு விடுவோம். நீ அவளுக்கு மாதா மாதம் எவ்வளவு பணம் கொடுக்கிறாய்? அதற்கு ஏது பணம்? மறைக்காமல் அதை மட்டும் சொல்!”

“மாதம் முவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் முதலாளி.”

“மீண்டும் பொய் சொல்கிறாய். உன் வீட்டிற்குப் போய் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன். உன் சம்பளப்பணம் மொத்தமும் - அதாவது பதினைந்தாயிரம் ரூபாயும் அப்படியே உன் மனைவியின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதில் நீ ஒரு பைசாவைக்கூட எடுப்பதில்லை! இந்த மூவாயிரம் எங்கிருந்து வருகிறது?”

“நீங்கள் தினப்படியாகக் கொடுக்கும் நூறு ரூபாயைத்தான் சேர்த்துவைத்து அவளுக்குக் கொடுக்கிறேன் முதலாளி!”

“எத்தனை மாதங்களாகக் கொடுத்து வருகிறாய்?”

“ஆறு மாதமாகத்தான் பழக்கம். அவளைக் கை கழுவி விடுகிறேன். பெரிய மனசு பண்ணி என்னை மன்னித்து விடுங்கள் முதலாளி.”

செட்டியார் சட்டைப் பையிலிருந்து வேறு ஒரு சீட்டை எடுத்தார்.

“என்னிடம் கணக்கு இருக்கிறது. அவளுடன் உனக்கு இரண்டாண்டுகளாகத் தொடர்பு. மாதம்  பத்திலிருந்து, பன்னிரெண்டாயிரம்வரை கொடுத்து வந்திருக்கிறாய். இதுவரை கொடுத்தது உத்தேசமாக மூன்று லட்ச ரூபாய்.”

“இல்லைவே இல்லை முதலாளி, இந்தக் கணக்கை யார் சொன்னது? அந்தச் சண்டாளி சொன்னாளா?”

“சண்டாளத்தனம் பண்ணியதெல்லாம் நீ! அவளை எதுக்காகச் சண்டாளி என்கிறாய்?”

சாமிக்கண்ணு வாய் மூடி மெளனியாக இருந்தான். உடம்பு படபடத்தது. அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.

செட்டியார் தொடர்ந்தார்.

”ஒரு பெண் தன் பங்கைக் குறைத்துச் சொன்னாலும் சொல்வாளே தவிர, கூட்டிச் சொல்ல மாட்டாள். தொகையில் தப்பு இல்லை. இப்போது கேள்வி ஒன்றுதான் பாக்கியுள்ளது. இந்தப் பணம் ஏது உனக்கு?”

”அந்த ராட்சசி பொய் சொல்கிறாள். அவ்வளவு பணம் என்னிடம் ஏது முதலாளி?”

“என்னையே திருப்பிக் கேட்கிறாயா? அதுதான் நான் கேட்கும் கேள்வி! எப்படிக் கிடைத்தது அந்தப் பணம்?”

“இல்லை முதலாளி திண்டல்மலை முருகன் சத்தியமா அவ்வளவு பணம் நான் கொடுக்கவில்லை முதலாளி!”

“ஆகா, ஒன்றை மறைக்க ஒன்பது பொய் சொல்கிறாய். அதோடு உனக்குப் பொய் சாட்சி சொல்ல முருகப்பெருமானை வேறு கூப்பிடுகிறாயா? சரி, வேறு வழியில்லை. இப்படிக் கேட்டால் நீ ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டாய். இரு, கூப்பிட வேண்டியவர்களைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லியவாறு செட்டியார் தன் சட்டைப் பையிலிருந்த செல்போனை எடுக்கவும், அரண்டு போய், பயத்தின் எல்லைக்கே போய் விட்டான் சாமிக்கண்ணு.

“முதலாளி, என்னைக் காப்பாத்துங்க! ஒன்னும் பண்ணிடாதீங்க!” என்று கத்திக் கதறியவாறு நெடுஞ்சான் கிடையாக அவர் காலில் விழுந்தான். கதறியழுதான்.

அந்த சத்தத்தில், ஸ்டாக் அறை என்று சொல்லப்படும் அந்தப் பெரிய அறையின் வாசலில் கூட்டம் கூடி விட்டது. பட்டறையின் பின் பகுதியில் உள்ள ஷெட்டில் அமர்ந்து, தங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு பணிக்குத் திரும்பி யிருந்த தொழிலாளிகள்தான் அவர்கள்.

“முதலில் எழுந்திரு!” என்று அவர் கனத்த குரலில் சொல்ல எழுந்து நின்றான்.

வாசலில் நின்றிருந்தவர்களில் வயதில் மூத்தவரும், பட்டறையின் ஆரம்ப காலத்திலிருந்து வேலை பார்த்து வருபவருமான நல்லப்பனை மட்டும் உள்ளே வரச் சொல்லி விட்டு, மற்றவர்களைச் சைகை மூலம் தள்ளியிருக்கச் சொன்னார்.

“சரி, ஒன்றும் செய்யமாட்டேன். பயப்படாதே! அனால் உண்மை அத்தனையும் வெளியே வரவேண்டும். என்ன செய்தாய் சொல்.”

நடுங்கும் குரலில் அவன் சொன்னான். “சாயப் பவுடரை திருடிக்கொண்டு போனேன். தினமும் ஒரு கிலோ அளவு”

“அதாவது தினமும் அறுநூறு மதிப்புள்ள சாயத்தைக் கொண்டு போனாய், இல்லையா?”

“ஆமாம். சாப்பிடக் கொண்டு வரும் டிஃபன் கேரியரில் கொட்டிக் கொண்டு போனேன்.”

”அதனால்தான் வெளியே நின்று கொண்டிருக்கும் வாட்ச்மேன்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. என்ன விலைக்கு விற்றாய்?”

“பாதி விலைக்கு விற்றேன்.”

“அதுவும் நீ கொண்டு போய் விற்கவில்லை. திருட்டு சாயம் வாங்கும் கடைக்கு உன்னைத் தெரிந்து விடும் என்பதால் உன் தொடுப்புக்காரி மூலமாகவே விற்றாய் இல்லையா?”

“ஆமாம் முதலாளி”

”உன்னை நான் எவ்வளவு நம்பிக்கையோடு வைத்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?”

“வேணும்னு செய்யல முதலாளி. சூழ்நிலை அப்படி ஆயிட்டுது! எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கெட்ட சகவாசம்தான். அதை இன்னியோட விட்டுடறேன் முதலாளி”

“சரி, வேறு எதைத் திருடிக் கொண்டு போனாய் சொல்! அந்தச் சாயப்பவுடர் கடைக்காரனும் இப்போது போலீஸ் கஸ்டடியில் தான் இருக்கிறான். உண்மையைச் சொல்”

“வேறு எதையும் கொண்டு போகவில்லை முதலாளி! என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்து விடாதீர்கள் முதலாளி. நான் குடும்பஸ்தன். உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'

”எப்படிக் கொடுப்பாய்?”

“என் பெண்டாட்டி கழுத்திலும் கைகளிலும் போட்டிருக்கும் நகைகள் இருபத்தைந்து பவுன்கள் இருக்கும் அதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள் முதலாளி”

“அவளுடைய நகைகள் உனக்கு எப்படிச் சொந்தமாகும்? அது அவளுடைய தாய் வீட்டுச் சீதனமல்லவா? அதில் உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

இதுவரை மறைவாக வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சாமிக்கண்ணுவின் மனைவி சரோஜா, அதிரடியாக உள்ளே நுழைந்தவள், செட்டியாரின் காலில் விழுந்து, குரல் கொடுத்து அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய மகனும், மகளும் வெளிறிய முகத்துடன் உள்ளே வந்து நின்றார்கள். மகளுக்குப் பதினேழு வயது இருக்கும். மகனுக்குப் பத்தொன்பது வயது இருக்கும். பையன் உணர்வைக் காட்டிகொள்ளாமல் அதே நேரத்தில் கலக்கத்துடன் நின்றான். பெண் மட்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவர்கள் மூவரையும் அங்கே பார்த்த சாமிக்கண்ணு சொல்ல முடியாத அதிர்ச்சிக்கு ஆளாகினான்.

செட்டியார்தான் இறுக்கத்தைப் போக்கும் விதமாகப் பேசத் துவங்கினார்.

“எழுந்திரம்மா! உங்களை யாரம்மா இங்கே வரச்சொன்னது?”

“இல்லை அய்யா! வராத மனிதர் நீங்கள், வீடு வரை வந்து விசாரித்து விட்டுத் திரும்பியதும், நான் பொறி கலங்கிப் போனேன். ஏதோ தப்புத் தண்டா நடந்திருக்கு. என்னாகுமோன்னு பயந்துபோய் பின்னாடியே ஓடியாந்தேன். பிள்ளைகளும் தனியாகப் போகாதேன்னு சொல்லிக் கூடவே வந்திரிச்சுங்க. இவருடைய நடவடிக்கையில் எனக்கு ஒரு வருடமாகவே சந்தேகம். ஆனா பாவிமகஎன்னால ஒன்னும் கண்டுபிடிக்க முடியலை! இப்ப நீங்க வகையா பிடிச்சிட்டீங்க! எனக்குத் துரோகம் பண்ணினது கூடப் பரவாயில்லை. ஆனா உங்களுக்குத் துரோகம் பண்ணினதை மன்னிக்கவே கூடாது அய்யா! அந்தச் சிறுக்கியோட சேர்த்து இவரையும் உள்ளே போடுங்க.அதுக்காக நாங்க யாரும் வருத்தப் பட மாட்டோம்!”

“உள்ள போடுறதுக்கு ஒரு நிமிடம் ஆகாதும்மா! இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு நீ ஜீவனத்து என்னம்மா செய்வாய்?”

“இந்த ஊர்ல கிடைக்காத வேலையா? எங்கயாவது கூலி வேலை பார்த்து என் இரண்டு பிள்ளைகளையும் நான் ஆளாக்கியிருவேன். அதுக படிக்கிறதுக்கு மட்டும் எப்போதும் போல நீங்க பண உதவி செய்ங்க அது போதும் எனக்கு!”

அவள் இப்படிப் பேசியதும் செட்டியார் அசந்து விட்டார். என்ன தெளிவான சிந்தனை இந்தப் பெண்ணிற்கு!

செட்டியார் தீர்க்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

“சாமிக்கண்ணு! எதை வேண்டுமென்றாலும் மன்னிக்கலாம்.ஆனால் துரோகத்தை மட்டும் மன்னிக்கக் கூடாது. உன் மனைவி பிள்ளைகளுக்காக உன்னைச் சும்மா விடுகிறேன். நீ போகலாம். ஆனால் உனக்கு இந்த நிமிடம் முதல் இங்கே வேலையில்லை. எங்காவது சென்று பிழைத்துக்
கொள். ஆனால் அங்கே ஒழுங்காக இரு!”

இதைச் சொல்லியவுடன், செட்டியார் தன் இருக்கையை விட்டு எழுந்தார்.

சாமிக்கண்னு அவரைச் சாஷ்டாங்கமாக விழுந்து மீண்டும் ஒருமுறை வணங்கியவன், அங்கே மேலும் நிற்க வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, விறுவிறுவென்று நடந்து வெளியேறி விட்டான். செட்டியாரை வணங்கிவிட்டு அவன் மனைவி, தன் பிள்ளைகளுடன் வெளியேறினாள்.

வெளியே நின்றிருந்த தொழிலாளர்களில் நான்கைந்து பேர்கள் உள்ளே வந்து நிற்க, மூத்த தொழிலாளி நல்லப்பன் பேசினார்.

“எசமான், அவனை நீங்க விட்டது தப்பு! போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும்!”

“இத்தனை ஆண்டுகளாக என்னிடம் வேலை பார்த்தவனைப் போலீஸில் பிடித்துக் கொடுக்க மனம் வரவில்லை. அதனால்தான் தொலைந்து போகட்டும் என்று விட்டேன்.”

“அவன் திருடிக் கொண்டு போனது உங்களுக்கு நஷ்டம் என்று பட வில்லையா? அந்த நஷ்டம் நஷ்டம்தானே!”

“நான் லாபத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டால் மனிதநேயம் இல்லாமல் போய் விடும். மனிதநேயத்தை விடப் பெரிய லாபம் என்ன இருக்கிறது சொல் நல்லப்பா?”

“நீங்க சொல்றதெல்லாம் பெரிய விஷயங்க. எங்க அறிவிற்கு அதெல்லாம் பிடிபடாது. ஆனாலும் ஒன்னு சொல்றேன் எசமான். இவ்வளவு கஷ்டப்பட்டுக் கையும் களவுமா அவனைப் பிடித்த நீங்கள், அவனைத் தண்டிக்காமல் விட்டது தப்பு!”

செட்டியார் புன்னகைத்தார்.

“தண்டிக்காமல் விட்டேனா? தண்டித்துத்தான் அனுப்பியிருக்கிறேன் நல்லப்பா!”

இந்த இடத்தில் அறையில் இருந்த அனைவரும் ஒருசேர வியப்புடன் கேட்டார்கள்.

“தண்டித்து அனுப்பியிருக்கிறீர்களா? எப்படிச் சொல்கிறீர்கள் முதலாளி?”

“இங்கே நடந்ததையெல்லாம் அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் இல்லையா? இனிமேல் அவர்களிடம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது அவனுக்கு? அதைவிடப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

அனைவரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.

செட்டியார் எழுந்தவர் போய் விட்டார்.

சற்று நேரத்தில் அவருடைய கார் புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டபின்தான் அவர்களுடைய மெளனம் கலைந்தது!

- மூன்று ஆண்டுகட்கு முன்பு அடியவன் எழுதி ஒரு மாத இதழில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்!
    ***************************************************************************

வாழ்க வளமுடன்!

2.10.11

இந்தியாவிற்கான சேவகர்கள்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவிற்கான சேவகர்கள்

வாரமலர்
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி நாள். இதே தேதியில் 1869ல் மஹாத்மாஜி பிறந்தார்.

இந்தியா கிழக்கு இந்திய கும்பனியாரிடமிருந்து,இங்கிலாந்து அரசியின் நேர் ஆளுகைக்கு வந்தபின்னர், 11 ஆண்டுகள் கழித்துத்தான் மஹாத்மாஜி பிறந்தார்.

தென் ஆப்பிரிக்க மண்ணில் சத்தியாகிர‌கப் போராட்ட முறைகளை வகுத்து, சிறிது நடைமுறைப் படுத்திவிட்டு அதனை சோதித்துப் பார்க்கத் தாயகமாம் பாரதம் வந்து  தன் பணியைத் துவக்கினார்.

"இந்தியாவிற்கான சேவகர்கள்" (Servants of India) என்ற அமைப்பில் தொண்டாற்ற முனைந்தார்.

அப்போது 1 ஜூன் 1915ல் அவ‌ர் எழுதிய‌ ஒரு க‌டித‌த்தின் த‌மிழ் வ‌டிவ‌த்தைக் கீழே த‌ந்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
அஹ‌ம‌தாபாத்
                                               1 ஜூன் 1915

அன்புள்ள‌ ஐயா!

திரு ந‌டேச‌ன் அவ‌ர்க‌ள் தாங்க‌ள் அவ‌ருக்கும் என‌க்கும் எழுதிய‌ க‌டித‌ங்க‌ளை என‌க்கு அனுப்பி வைத்துள்ளார்.அக் க‌டித‌ங்க‌ளுக்காக‌ என்
ந‌ன்றியை  உங்க‌ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்க‌ள் ம‌க‌னுக்கும் என‌க்கும் க‌டித‌த் தொட‌ர்பு இருந்துள்ள‌து. உங்க‌ளுடைய‌ ம‌க‌னின்
க‌டைசிக் க‌டித‌த்தில் தான் த‌ன் த‌ந்தை‌யால்(உங்க‌‌ளால்) வீட்டை விட்டு விர‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌தாக‌க் குறிப்பிட்டுள்ளார். அத‌னால் நேற்று
உங்க‌ள் ம‌க‌னுக்கு இங்கே என்னிட‌ம் வ‌ந்துவிடும்ப‌டி எழுதினேன்.இறுதியாக‌ அவ‌ருடைய‌ விருப்ப‌ம் "இந்தியாவிற்கான‌ சேவ‌க‌ர்க‌ள்" அமைப்பில் இணைந்து ப‌ணியாற்றுவ‌தே போலும்!உங்க‌ள் ம‌க‌ன் இங்கே வ‌ந்த பின்ன‌ர், அவ‌ருடைய‌ வ‌ய‌து குறைவான‌து என்று தெரிய‌வ‌ருமாயின் அவ‌ரை நான்  க‌ட்டாய‌ம் தங்க‌‌ளிட‌ம் திருப்பி அனுப்பி விடுவேன் என்று என்ன‌ள‌வில் கூறிக் கொள்கிறேன். பெற்றோர்க‌ளின் அனும‌தியில்லாம‌ல் குறைந்த‌ வ‌ய‌துள்ள இளைஞர்களை நான் எடுத்துக் கொள்‌வ‌தில்லை.ஆக‌வே தாங்க‌ள் என்னுடைய‌ ஒத்துழைப்பின் மேல் முழுமையான‌
ந‌ம்பிக்கை வை‌க்க‌லாம்.

                                            உங்க‌ள் உண்மையுள்ள‌,
                                                எம்.கே.காந்தி

பி.ஜி பால‌சுந்திர‌ சாஸ்திரி,‌
கோவிந்த‌புர‌ம் கிராம‌ம்,
ஆடுதுறை அஞ்ச‌ல்,
த‌ஞ்சாவூர் மாவ‌ட்ட‌ம்
சென்னை மாகாண‌ம்.
--------------------------------------------------------------------------------
நேற்று ஆடுதுறையைக் க‌ட‌ந்துதான் திருக்க‌டையூர் சென்றேன்.ஆடுதுறை என்ற‌ பெய‌ர்ப் ப‌ல‌கையைக் க‌ண்ட‌போது, காந்திஜியின் இக்க‌டித‌த்தை எப்போதோ வாசித்த‌து நினைவுக்கு வ‌ந்த‌து. அத‌னை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விழைந்தேன்.

இக்க‌டித‌ம் ப‌ல‌ செய்திக‌ளை ந‌ம‌க்குத் தெரிவிக்கிற‌து.

1. எல்லா க‌டித‌ங்க‌ளையும் ம‌தித்து உட‌னுக்குட‌ன் ப‌தில‌ளிக்கும் காந்திஜியின் ப‌ண்பு.

2. காந்திஜி தேசிய‌த்த‌லைவ‌ர் ஆகாத‌ கால‌ க‌ட்ட‌த்திலேயே பார‌த‌த்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு குக்கிராம‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌
இளைஞ‌ன் அவ‌ருடைய‌ ப‌ணிக‌ள் ப‌ற்றி தெரிந்து வைத்துள்ளான்.

3. ஆச்சார‌மான‌ சாஸ்திரி குடும்ப‌த்தில் பிற‌ந்துவிட்டு, தேச‌ப்ப‌ணிக்காக‌த் த‌ன்னை மாற்றிக் கொள்ள‌வும், ஆசா‌ர‌ங்க‌ளையும் குடும்ப‌த்தையும்
துற‌க்க‌வும் துணிந்து விட்டான் அந்த‌ இளைஞ‌ன்.

4. அத‌ற்காக‌த் த‌ன் த‌ந்தை த‌ன்னை விர‌ட்டி விட்ட‌தாக‌ ஒரு புளுகை(?) அவிழ்த்து விட்டுள்ளான்.

5. காந்திஜி ஏதோ ஒரு ஆள் கிடைக்கிற‌தே என்று நினைக்காம‌ல், வ‌ய‌துத்த‌குதி இல்லையெனில் திருப்பி அனுப்பிவிடுவ‌தாக‌ உறுதி அளிக்கிறார்!

6. த‌க‌வ‌ல் தொட‌ர்பு மிக‌வும் குறைந்த‌ அக்கால‌த்திலேயே நாட்டின் தென்கோடி இளைஞ‌னுட‌ன் ஒரு ச‌ம‌பாவ‌ ச‌ம்பாஷ‌ணையை செய்ய‌ காந்திஜியால் முடிந்து இருக்கிற‌து

கோவிந்த‌புர‌ம் இன்றும் கூட‌ மிக‌வும் சிறிய‌ கிராம‌ம்தான்.ப‌க‌வ‌ன் நாம‌ போதேந்திர‌ சுவாமிக‌ளின் அதிஷ்டான‌ம்(பிருந்தாவ‌ன‌ம்) அங்கு
உள்ள‌து.என‌வே விவ‌ர‌ம் அறிந்த‌ ஆன்மீக‌ அன்ப‌ர்க‌ள் அங்கே யாத்திரை செல்வார்க‌ள்.த‌ற்ச‌ம‌ய‌ம் புதிதாக‌ த‌ட்சிண‌ ப‌ண்ட‌ரிபுர‌ம் என்று ஸ்ரீ
பாண்டுர‌ங்க‌னுக்குக் கோவில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. என‌வே சிறிது யாத்திரிக‌ர்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் க‌ட‌ந்த 5 வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ கிராம‌த்தில் உண்டு.

ஆனால் 1915ல் இது ஒரு குக்கிராம‌மே. காந்திஜியின் ஆன்ம‌ வ‌லிமையாலேயே இக்குக்கிராம‌ இளைஞ‌ன் க‌வ‌ர‌ப்ப‌ட்டு இருக்க‌ வேண்டும்.

வாழ்க‌ ம‌ஹாத்மா காந்திஜியின் புக‌ழ்!

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்கியோன்:கே முத்துராம‌கிருஷ்ண‌ன்.(லால்குடி)



----------------------------------------------------------------------------------------
அந்த யூட்யூப் காணொளியில் வரும் பாடலுக்கான இந்திச் சொற்களை ஆங்கிலத்திலும்,அதன் ஆங்கில மொழியாக்கத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் அளித்துள்ளேன். இந்திப்பாடல் பாடப்பட்டுள்ளது மிகவும் நன்றாக உள்ளது. அதனைப்போலவே அதே ராகத்தில் பாட தமிழில் யாராவது பாடல் எழுதிக் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்.
-கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

Ufak Pe Paanv Aur Chalon Akad Ke Chalon
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Falak Pakad Ke Utho Aur Hawa Pakad Ke Chalo
Tum Chalo Toh Hindustan Chale
Tum Chalo Toh Hindustan Chale
Hindustan Chale
Chalo
ENGLISH TRANSLATION
=======================
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
Lend your hand to pull out the Sun in the morning,
Fill your hands with sunlight, and throw it around,
Keep you legs on the horizon, and walk with pride,
Hold the sky to stand, and walk with the wind in your hands,
Be the front-runner; because when you walk, Hindustan (India) walks with you.
‍‍‍‍‍‍‍‍================================
தமிழ் மொழி பெயர்ப்பு
====================
வானத்தை கையகப்படுத்து;
காற்றினை உன் புயத்தில் ஏற்றிக் கொண்டு கைவீசி நட;
நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;
கதிரவனைக் காலையில் இழுத்துவரக் கைகொடு;
உன் கரங்களில் கதிரொளியை நிரப்பிக் கொண்டு எல்லாதிசைகளிலும் அவ்வொளியைத் தெளித்துவிடு;
வான்வெளியில் உன் பாதங்களைப் பதித்து செம்மாந்து நட;
வானத்தைக் கையகப்படுத்து;
காற்றினை உன் புயத்தில் ஏற்றிக் கொண்டு கைவீசி நட;
நீ முன்னோடு,ஏனெனில் இந்தியா உன் பின்னோடும்;
-----------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

25.9.11

மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

வாரமலர்

பதினான்கே வயதான ஜேக் நல்ல கால் பந்து ஆட்டக்காரன்.15 வயதுக்குக் குறைவான குழுவில் ஒரு முக்கிய உருப்பினன். 31  ஆகஸ்டு 2011 ஜேக்கின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாயிற்று. ஆம்! அன்றுதான்  கால் பந்து விளையாடும் போது அவனுக்கு ஓர் எதிர்பாராத விபத்து நேர்ந்தது.

 ஆவேசமாகப் பந்தை உதைத்து ஜேக் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தான்.'கோல் போஸ்டாக' இர்ண்டு உயரமான கம்புகள் நடப்பட்டு இருந்தன.தரையில் சொருகுவதற்கு வாகாக கூரான இரும்பு முனைகள் கம்புகளின் முனையில் இருந்துள்ளன.பந்து ஒரு'கோல் போஸ்டை'த் தாக்கி, அக் கம்பு தரையை விட்டுக் கிளம்பி அம்பு போல் பயணித்து ஜேக்கின் வலது புயத்தில் பாய்ந்து குத்தி,மறுபக்கம் வெளி வந்து விட்டது. திடீரென ஏற்பட்ட விபத்தால் ஜேக் அதிர்ச்சி அடைந்தானே தவிர பயமோ பதட்டமோ அடைய வில்லை.அவனுடைய அதிர்ஷ்டம் இரத்த நாளங்களைத் தாக்காமல் வெறும் சதையில்தான் இரும்பு முனை குத்தியுள்ளது.

நம் ஊரில் கன்னத்தில் முதுகில் அலகு குத்துவார்களே  அதுபோலத்தான். என‌வே இர‌த்த‌ம் வ‌ர‌வில்லை. எனெனினும் வ‌லி மிக‌வும் இருந்துள்ள‌து.க‌ம்பின் நீள‌ம் கார‌ண‌மாக‌ ஜேக்கால் ஆம்புல‌ன்ஸில் ஏற‌முடிய‌வில்லை.என‌வே குத்தியுள்ள‌ நிலையிலேயே க‌ம்பின் நீள‌ம் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு குறைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னால் ஏற்ப‌ட்ட‌ அசைவுக‌ள் பெருவ‌லியைக் கொடுத்தன‌. ஜேக் க‌ண் க‌ல‌ங்காம‌ல் பொறுத்துக் கொண்டான்.

அதன் பின்ன‌ர் அம்புல‌ன்ஸில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் செல்ல‌ப் ப‌ட்டான்  ஜேக்.அங்கே உட‌னே அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டு வீடு திரும்பினான். கோடை விடுமுறை முடிந்து 7 செப்ட‌ம்பெர் 2011 முதல் நாளே அன்றே ப‌ள்ளியில் ஆஜ‌ராகி விட்டான் ஜேக்! (நானா‌க‌ இருந்தால் அந்த‌ ஆண்டுப் ப‌டிப்பையே ஒத்தி வைத்து இருப்பேன்!)

இந்த‌ விப‌த்தைப்ப‌ற்றி முழு விவ‌ர‌த்தையும் இங்கிலாந்தில் உள்ள‌ எல்லா கால்ப‌ந்தாட்ட‌க் குழுக்க‌ளுக்கும் தெரிவித்து இது போன்ற‌ கூர்முனையுள்ள‌ 'கோல் போஸ்டு'க‌ளைத் த‌விர்க்க‌ அர‌சு அறிவுரை கூறியுள்ள‌து.அதுதான் ஒரு பொறுப்பான‌ அர‌சின் சிற‌ப்பு.

 ஜாக்கின் புகைப்படம், உங்கள் பார்வைக்காக!
--------------------------------------------------------------
2.
கம்மா‌ டிஸ்சார்டு என்ற‌ 25 வ‌ய‌து மங்கையின் பேட்டியில் இருந்து:

"கே: உங்க‌‌ளை எது புன் முறுவ‌ல் பூக்க‌ வைக்கும்?

ப‌:சூரிய‌ வெப்ப‌ம்,வெளிச்ச‌ம்,ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ள்!"

ந‌ன்றாக‌க் க‌வ‌னியுங்க‌ள். ம‌கிழ்ச்சி கொடுப்ப‌தில் முத‌லிட‌ம் கொடுப்ப‌து எது?

சூரிய ஒளி!

ஆம்! ஆண்டின் 7,8 மாத‌ங்க‌ள் ப‌னி, குளிர்காற்று,ம‌ழை, மேக‌ மூட்ட‌ம் என்று உள்ள‌ நாட்டில் சூரிய‌ ஒளியை க‌ண்டால் ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ள் தான் கோடை.ப‌னிக்கால‌த்தில் வெளியில் ந‌ட‌மாட‌ முடியாம‌ல் வீட்டிற்குள்ளேயே முட‌ங்கிக் கிட‌க்கும் பெண்க‌ள் முதிய‌வ‌ர்க‌ளுக்கு 'வின்ட‌ர் புளூஸ்'என்ற‌ ம‌ன‌ அழுத்த‌ நோய் உண்டாகுமாம்.

2012 ஒலிம்பிக்ஸ் ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ளிலேயே ந‌ட‌க்க‌ இருக்கிற‌து.

பிபிசி யின் ப‌ருவ‌நிலை அறிக்கையைப் பார்த்துவிட்டே எல்லோரும் ஒரு நாளின் ப‌ணிக‌ளைத் திட்ட‌மிடுகிறார்க‌ள்.95% கால‌நிலை அறிக்கை ச‌ரியாக‌வே உள்ள‌து. சில‌ ச‌ம‌ய‌ம் அறிக்கையின் ப‌டி இய‌ற்கை ந‌ட‌க்க‌ வில்லை எனில் எல்லோரும் அந்த‌ 'மெட்ரோலாஜிக‌‌ல் துறையைக் க‌ண்டிக்கிறார்க‌ள். ச‌மீப‌த்தில் ப‌ருவ‌ நிலை அறிக்கை த‌யாரிக்கும் அறிவிய‌ல் முறை ச‌ரிதானா என்ப‌தை ஆய்வு செய்ய‌ ஒரு நாடாளும‌ன்ற‌க் குழு அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

(மேலும் ஓரிரு வார‌ங்க‌ள் இல‌ண்ட‌ன் செய்திக‌ள் தொட‌ரும்.)

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்க‌ம்:
நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராம‌கிருஷ்ண‌ன். (லால்குடி).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

4.9.11

லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 3


லண்டன் மாநகரில் உள்ள ஒரு நூலகத்தின் எழில்மிகு தோற்றம்!
---------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 3
அதுதானய்யா இங்கே அழகு!

வாரமலர்

இங்கிலாந்தில் என் மனதுக்கு மிகவும் பிடித்தது நூலகங்களைப் பராமரிக்கும் அழகு.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய நூலகமும் பல கிளை நூலகங்களும் நிறுவப்ப‌ட்டு எல்லா நூலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.ஒரு கிளை நூலகத்தில் புத்தகங்களை எடுத்துவிட்டு வேறு எந்தக் கிளையிலும் திருப்பி அளிக்கலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் 'பார்கோட்'அளிக்கப்பட்டு அதனைக் கணினி மூலம் இயக்குவதால் இது சாத்தியமாகிறது.கிளை நூலகங்கள் மக்கள் நடமாடும் கடைகளுக்கு அருகே எல்லோரும் காணத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொருள் வாங்க‌ வரும் போதே நூலகத்திலும் புத்தகம் மாற்றிக் கொள்ள வசதியாக நூலகங்கள் இருக்கும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கப் பல ஆக்கபூர்வமான யுக்திகளைக் கையாள்கிறர்கள்.வயதிற்கேற்ற புத்தகங்கள் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.நம் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களை எடுத்துக் கொடுக்கலாம். ஒரே ச‌ம‌ய‌த்தில் 5,6 புத்த‌க‌ங்க‌ள் கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம்.

ப‌ள்ளிக‌ளுக்குக் கோடை விடுமுறை இங்கு 45 நாட்க‌ள் போல‌. ஜூலை க‌டைசி வார‌ம் முத‌ல் செப்ட‌ம்ப‌ர் முத‌ல் வார‌ம் வ‌ரை கோடை விடுமுறை. இந்த‌ ச‌ம‌ய‌த்தில் நூல‌க‌ங்க‌ள் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்துகின்ற‌‌ன‌. 3 முறையாவ‌து நூல‌க‌த்துற்கு சிறார் வ‌ர‌ வேண்டும். 6 புத்த‌க‌ங்க‌ளையாவ‌து எடுக்க‌ வேண்டும்.ஒவ்வொரு முறையும் எதாவ‌து சிறிய‌ விளையாட்டுச் சாமான் ப‌ரிசாக‌க் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. மூன்றாவ‌து முறை வ‌ந்த‌வுட‌ன் மெட‌ல் அளிக்க‌ப்ப‌டுகிற‌து. சான்றித‌ழ் ப‌ள்ளிக்கு அனுப்பப் ப‌டுகின்ற‌து. புத்த‌க‌ம் ப‌டிக்கும் ஆர்வ‌த்தை இந்த‌க் க‌ணினி ம‌ய‌மான‌ நாட்க‌ளிலும் இங்கே ஊக்குவிப்ப‌தைக் க‌ண்டு ம‌ன‌ம் ம‌கிழ்ந்தேன்.

என் பேத்திக்கு(வ‌ய‌து 4+) நூலக‌ மெட‌ல் கிடைத்துவிட்ட‌து. அந்தக் குழ‌ந்தையின் ம‌கிழ்ச்சியைக் காணும் போது, அந்த‌ நூல‌க‌ நிர்வாக‌த்தைக் கை எடுத்துக் கும்பிட‌த் தோன்றிய‌து.

ஏதோ குழந்தை‌க‌ளுக்குத்தான் நூல‌க‌ம் என்று நினைக்காதீர்க‌ள்.வ‌ய‌து முதிர்ந்தோருக்குக் க‌ண் பார்வைக் குறைவைக் க‌ண‌க்கில் கொண்டு பெரிய‌ எழுத்துள்ள‌ புத்த‌க‌ங்க‌ள் என்று த‌னிப்ப‌குதி உள்ள‌து.ந‌ம் ஊரில் பெரிய‌ எழுத்து விக்ர‌மாதித்ய‌ன் க‌தை போல‌! ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் பெரிய எழுத்துருக்களில் (large fontகளில்) கிடைக்கின்ற‌ன‌.  The case for God  என்ற‌ புத்த‌க‌ம் 550 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌தை பெரிய‌ எழுத்தில் வாசித்தேன். வெளியீட்டாள‌ர்க‌ளின் முன் யோச‌னையைப் பாராட்டாம‌ல் இருக்க‌ முடியுமா?

2

அடுத்துப் ப‌ள்ளிக் க‌ல்வி. என் பேத்தி இப்போது Reception  என்ற‌ வ‌குப்புக்குப் போக‌ப்போகிறாள். ந‌ம் ஊர் யு கே ஜி போன்ற‌‌து.இதுவ‌ரை ந‌ர்ச‌ரி வ‌குப்பு.
புத்த‌க‌ம், சில‌ப‌ஸ் என்று ஒன்றும் இல்ல‌ம‌ல் விளையாட்டாக‌ எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்க‌ள்.

எடுத்துக்காட்டாக‌, அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ள்ளித் தோட்ட‌த்தில் ஒரு ம‌ர‌த்தினைச் சுற்றி ஒரு மேடை. அது அறு கோண‌த்தில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.ஒவ்வொரு ப‌க்க‌த்திலும் சுற்றி வ‌ந்து அத‌ன் ப‌க்க‌ங்க‌ளை என் பேத்தி எண்ணி 'இந்த‌ மேடைக்கு ஆறு ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ன‌ 'என்றாள். என் ம‌க‌ள் அத‌ன் பெய‌ர் 'ஹெக்ஸ‌க‌ன்'என்றாள். 'அப்ப‌டியானால் நான்கு ப‌க்க‌ம் இருந்தால் அத‌ன் பெய‌ர் என்ன‌?' என்று குழ‌ந்தை கேட்ட‌து. இந்த‌ச் செய்தியை வ‌குப்பு ஆசிரியையிட‌ம் சொன்ன‌ போது, அவ‌ர்க‌ள் அத‌னை ஒரு விளையாட்டாக‌ மாற்றி எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும், ட்ரை ஆங்கிள், ஸ்கொய‌ர், ரெக்டாங்கிள், ச‌ர்கிள் எல்லா‌வ‌ற்ற‌யும் புரிய‌ வைத்து விட்ட‌ன‌ர்.

வீட்டில் வ‌ந்து குழ‌ந்தை 'Mr.Haaris said today....' அல்ல‌து 'Mrs.Howson told a story in the class..' என்று சொல்லுவாள். YAAR அவ‌ர்க‌ள் என்று கேட்ட‌ போது 'எங்க‌‌ள் த‌லைமை ஆசிரிய‌ர் , எங்க‌‌ள் வ‌குப்பு ஆசிரியை' என்றாள்.

என் ம‌க‌ள் , 'இந்த‌ ஊரில் ப‌த‌வியை விட‌ அவ‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ பெய‌ரைச் சொல்லி அழைப்ப‌தையே விரும்புவார்க‌ள். அத‌னால் குழ‌ந்தையிலேயே அந்த‌ப் ப‌ழ‌க்க‌ம் வ‌ரும்ப‌டி ப‌ள்ளியிலேயே ப‌ழ‌க்கி விட்டு விடுவார்க‌ள்'என்றாள்.

("பெத்துப் பேர் வ‌ச்ச‌ மாதிரி பேர் சொல்லிக் கூப்பிட‌றியே!"‍‍இது ந‌ம்ம‌ ஊர்!)

ப‌ள்ளிக‌ளுக்கு (இன்ஸ்பெக்ஷ‌‌ன்)  உண்மையாக‌ ந‌டை பெறுகிற‌து.3 வார‌ங்க‌ளுக்கு மேல் குழு ப‌ள்ளியில் அம‌ர்ந்து ஆய்வு செய்கிற‌து. ஒவ்வொரு பிரிவும் விவ‌ர‌மாக‌ விசார‌ணை செய்து முடிவு எடுக்க‌ப்ப‌டுகிற‌து.அதில் பெற்றோருக்கான‌ ப‌ங்கும் உண்டு.பெற்றோரிட‌ம் ஒரு வினாத்தாள் அளிக்க‌ப்ப‌ட்டு அதில் ப‌ள்ளியின் ந‌டைமுறைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர்க‌ளுடைய‌ அபிப்ராய‌ங்க‌ள் கேட்க‌ப்ப‌ட்டு ப‌ள்ளிக்கான‌ ம‌திப்பீட்டில் அத‌ற்கு ம‌திப்பெண் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. குழ‌ந்தைக‌ளிட‌ம் த‌னித் த‌னியாக‌ ஆசிரிய‌ர்க‌ளின் ப‌யிற்றுவிக்கும் திற‌மை ப‌ற்றி கேட்டு அறிய‌ப்ப‌டுகிற‌து.எல்லாவ‌ற்றையும் க‌ண‌க்கில் எடுத்துக் கொண்டு ப‌ள்ளிக‌ளுக்குத் த‌ர‌வ‌ரிசை அளிக்க‌ப்ப‌டுகிற‌து.

எல்லாம் ந‌ன்றாக‌ இருந்தும், 16 வ‌ய‌தில் வேலைக்குச் செல்ல‌லாம் என்ப‌தால், பெரும்பாலும் மேல் ப‌டிப்புக்குப் போகாம‌ல் ப‌ண‌ம் ச‌ம்பாதித்து பெற்றோரின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வெளியேறும் இளைஞ‌ர்க‌ள், அர‌சு அளிக்கும் க‌ல்விச் ச‌லுகைக‌ளை அனுப‌வ‌ப்ப‌தில்லை என்று என‌க்குப்ப‌டுகிற‌து.மேலும் ப‌ல‌க‌லைப் ப‌டிப்புக் க‌ட்ட‌ண‌ங்க‌ளும் மிக‌ அதிக‌ம்.

இந்தியாவில் ஒரு குறைந்த‌ ச‌ம்ப‌ள‌, சாதார‌ண‌ வேலையில் இருப்போர் த‌ன் ம‌க‌வுக‌ளைக் க‌ல்லூரிக்கு அனுப்ப‌முடியும். இங்கிலாந்த்தில் அது சாத்திய‌ம் இல்லை.

(இன்னும் வ‌ரும்)
வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்க‌ம்: வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராம‌ கிருஷ்ண‌ன்(லால்குடி)
முகாம்: இல‌ண்ட‌ன்


வாழ்க வளமுடன்!

28.8.11

லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

சமீபத்தில் லண்டனில் நடந்த கலவரத்தில் எடுக்கப்பெற்ற படம்
---------------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

ஞாயிறு மலர்

1
நான் இலண்டன் வந்த நேரமோ என்னமோ இங்கே கலவர‌ம் வெடித்து விட்டது.

இதற்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

'அப்படியானால் எது அல்லது யார் காரணம் என்பதைச் சொல்லுமேன்!' என்கிறீர்களா?அதுதான் இங்கு யாருக்குமே புரியவில்லை.

நம் ஊர் மாதிரியே ஒரு தாதா(?)வைக் காவல்துறை 'என்கவுன்டர்' செய்து போட்டுத்தள்ளிவிட்டது. இறந்தவர் கறுப்பு இனத்தவர். அவருடைய உறவினர்களும்,நண்பர்களும் காவல்துறையைக் கண்டித்து ஓர் ஊர்வலம் நடத்தினர். அது எல்லாம் முடிந்தவுடன் சிறிய அளவில் கலவரம் துவங்கியது.

ஆசியர்களுடைய கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. முக்கியமாக மின் சாதனங்கள், செல்போன், கம்ப்யூட்டெர் விற்கும் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. காவல் துறை இதை சற்றும் எதிர்பார்காதாதால் சற்றே மெத்தனமாக இருந்துவிட்டது. கேட்க ஆளில்லை என்றவுடன் புற்றீசல் மாதிரிக் கிளம்பிப் பலரும் கடைத்தெருவுக்கு வந்து கைக்கு அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிடித்தனர் ஓட்டம். பகற் கொள்ளை மாதிரி நடந்தது. காவல் துறை சுதாரிப்பதற்குள் 400 கடைகள் சூறையாடப்பட்டன.

விக்கிபீடியாவில் 'இலண்டன் ரியட்ஸ் 2011' என்று கேட்டுப்பாருங்கள். ‌  இணைப்புக்களுடன் பல தகவல்களும் கிடைக்கும்.

'டயம்ஸ்' இதழ் கொடுத்த செய்திகள் அபாரமாக‌ இருந்தன. கலவரத்தின் போது மனதாபிமான‌த்துடன் நடந்து கொண்ட 10 பேரைப் பற்றி தனிச் செய்தி கொடுத்தது டயம்ஸ்.அதில் முதல் இடம்  ஆப்கானிஸ்தான் பெரியவர் ஒருவருக்கு!அவருடைய மகனை கலவரத்தைத் தூண்டியவர்கள் 80 மைல் வேகத்தில் காரில் வேகமாக வந்து மோதித் தள்ளிக் கொன்று விட்டனர். அவர் உறவினர்களும் நண்பர்களும் பழி வாங்கத் துடித்துக் கொண்டு கிளம்பிய போது அந்தப் பெரியவர் அவர்களைத் தடுத்து "ஓர் உயிர் போனதற்கு 100 உயிரைக் கொல்ல நினைக்காதீர்கள். இந்தத் துக்கம் என் ஒருவனோடு போகட்டும். இன்னும் 100 முதியவர்களை துக்கப்படச் செய்ய வேண்டாம்"என்று சாந்தப் படுத்தினாராம்.

ஒரு பெண்  தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைக் கவர்ந்து சென்றுவிட்டாள். ஆனால் இரவு தூக்கம் வராமல் மனசாட்சி உறுத்தி உள்ளது.மறுநாள் காலையில் காவல் நிலையத்திற்கு வந்து பெட்டியை ஒப்படைத்து வருத்தம் தெரிவித்து உள்ளாள்."நான் சமூகசேவகியாக நினைத்து அதற்கான படிப்பைப் படித்து வருகிறேன். ஆனால் நானே சபலத்துக்கு ஆளாகி இப்படி செய்து விட்டேனே என்று என் மனசாட்சி குத்துகிறது. எனவே தவறுக்குப் பிராயச்சித்தமாக தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டு விட்டேன்." என்றாளாம் அப்பெண்!

கலவர‌த்திற்கான காரணங்கள் பல சொல்ல படுகின்றன.அதில் என் மனதைத் துளைப்பது 'பல இனத்தவர் கொண்ட சமூக அமைப்பு'!இந்தக் கருத்து என்ன சொல்ல நினைக்கிறது? ஆங்கிலேயர் என்ற வெள்ளையினம் மட்டுமே இங்கே வாழ வேண்டும் என்கிறதா? அப்படியானால் இங்கிலாந்து காலனியாக்கிப் பிடித்து வைத்து இருந்த நாடுகளில் இருந்து கடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக இலண்டனில் குடியேறி இதையே தன் தாய் நாடாக நினைத்து வாழும் மக்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? இங்கேயே பிறந்து வளர்ந்த வெள்ளயர் அல்லாத மக்களெல்லாம் வெளியேற வேண்டுமா?

இது பற்றிப் பல சொல்லலாம்.பலரும் ஊடகங்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள் என்பதால் இத்தோடு இதை முடித்துக் கொள்கிறேன்.

2
இங்கிலாந்தில் 6 இளைஞர்களுக்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கிறார்களாம்.அவர்கள் எல்லாம் 16 வயது முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து  வேலை யற்றோருக்கான மானியத்தைப் பெறுபவர்கள். No Employment Education or Training (NEET)  என்ற வகையில் வருகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் கலவர‌த்திற்கு, அல்லவா? சோம்பலுற் றவனின்  மனம் சைத்தான் குடிகொள்ளும் இடமல்லவா?
==============================================================
--------------------------------------------------------------------------------------------
3.
ரெடிங் என்ற இடத்தில் தமிழர்களுக்கான ஒரு சந்திப்பு நடந்தது.பெரும்பாலும் இந்த சந்திப்புக்களில் நமது உணவு வகைக்கான கையேந்திபவன் கடைகள் நிறைய வருகின்றன.'சென்னை தோசா' மிகவும் ஒரு பிரபலமான ஒரு தோசைக் கடை. இந்த சந்திப்பில் தமிழ்க் குடும்பத்தினர் வீட்டுச் சமையல் செய்து அசத்தினர். வீட்டில் செய்த இனிப்புக்கள் போளி, அதிரசம் என்று பலவும் கிடைத்தன‌.விற்பனையில் கிடைக்கும் லாபம் நற்செயல்களுக்குப் பயன்படுத்தப்படும்.

அதிகமாக யாழ் தமிழ‌ர்களே வந்திருந்தனர். அவர்களிடம் நிறையப் பேசினேன். இன்னமும் அவர்களுடைய ஈழக்கனவு கலையவில்லை.இந்திய அரசும், முந்தைய கலைஞர் ஆட்சியும் யாழ் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நான் தான் வேகமாகச் சொன்னேன்.

"நாங்கள் இப்போது உள்ள நிலைமையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுடைய ஆதரவையும் கட்சி பேதமின்றி எப்படிப் பெறுவது என்பதே இனி நாங்கள் சிந்திக்க வேண்டியது” என்றார்கள். இந்திய மக்களின் ஆதரவு குறைந்ததற்கு ராஜீவ் காந்தியைக் கொன்றது தான் காரணம்; அது ஒரு வரலாற்றுப் பிழை என்பதை ஒப்புக்கொண்டார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது சூடான் நாடு பிரிந்து தெற்கு சூடான் உருவாகிவிட்ட செய்தி கிடைத்தது. சூடானிலும் இலங்கையைப்போல இன வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களில் தெற்கு சூடானியர் பலரும் கொல்லப்பட்டனர்.அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது போலத் தங்களுக்கும் கிடைக்கக் கூடாதா? என்ற ஏக்கம் ஈழத்தமிழர்கள் குரலில் ஒலித்தது. "தெற்கு சூடானைப் போல ஈழமும் ஒரு நாள் எங்களுக்குக் கிடைக்கும்! ஓம்(ஆம்) தானே?!"என்றனர். நானும் 'ஓம் ஓம்' என்று ஆமோதித்தேன்!

அடுத்து என்னை சந்தித்து உரையாடியவர்  கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆகிய ஒருவர். அவர் பெயரை என்னால் மனதில் இருத்திக்கொள்ள முடியவில்லை.கம்போடியர் என்று ஆவர் கூறியவுடன் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்களை அவிழ்த்து விட்டேன். இந்தியப் புராணங்களில் காம்போஜம் என்று குறிப்பிடப்படுவது கம்போடியாதான் என்று கூறினேன். அந்த நண்பருக்கு 'ஜ' சொல்ல வரவில்லை. அதுவும் வாயில் மசால் தோசையினை வைத்துச் சுவைத்துக் கொண்டு காம்போஜத்தை பலவகையாக உச்சரித்தார்.

"எங்கள் சூரிய வர்மன் 12ம் நூற்றாண்டிலேயே காம்போஜத்தை ஆண்டிருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய கோவில் வளாகம் உள்ள அன்க்கோர்வாட் கோவில் இந்திய நாகரீகம், கலாச்சாரம் எவ்வாறு உலகளாவி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு" என்று கூறினேன். பொறுமையுடன் கேட்டுக்கொண்டார் என் (கம்போடிய) அமெரிக்க‌ நண்பர்.

கரோக்கி எனப்படும் ஓர் இசை அமைப்பில் பின்னணி இசை மட்டும் ஒலிக்கிறது. பாடலை நாம் பாட வேண்டும். பாடப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய‌ அறக்கட்டளைக்கு இரண்டு பவுண்டு கிடைக்கும் என்றும் எனவே பாட வாருங்கள் என்று ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டே இருந்தனர்.பலரும் பாடி மகிழ்வித்தனர். எல்லாம் சினிமாப்பாட்டுக்கள் தான். 'வாடா மாப்பிளே வாழப்பழத் தோப்பிலே...','டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை...'போன்ற பாடல்களுக்கு பாடலுடன் ஆடலும் சேர்ந்து ஒரே அமர்களம்தான் போங்கள்.

பெரியவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, சிறியவர்களுக்கான் கிரிக்கெட் போட்டி, ஓட்டபந்தயம், டென்னிகாய்ட், குட்டீசுக்கு உருளைக்கிழங்கு ஓட்டப் போட்டி என்று அமர்களப்பட்டது.ஒருபக்கம் பெண்கள் மருதாணி இடுவது,கோலம் போடுவது என்று அசத்தினர். சோளக்கதிரை தணலில் வாட்டி அளித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு.

என்னதான் சொன்னாலும் மசால் தோசை, பஜ்ஜி போண்டா ஸ்டால்களில்தான் அதிகக்கூட்டம் அலைமோதியது.

அங்குள்ள மருத்துவமனைக்கு குழந்தைகள் வார்டு வளர்ச்சிக்கு 500 பவுண்டு தானமாகக் கொடுக்கப்ப‌ட்டது.அந்த நகர மேயர் ஒரு பெண்மணி தன் கணவரோடு வந்து இருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு தவறாமல் மசால் தோசையைச் சாப்பிட்டுவிட்டுப் போனார்.

(இன்னும் வரும்)

வாழ்க வள்முடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்,(லால்குடி)
முகாம்: இலண்டன் மாநகரம்
=============================================================
கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆன 
மனிதருடன் உரையாடியபோது எடுத்த படம்!
------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

21.8.11

லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்

----------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்

வாரமலர்

1

"மண்ணின் மைந்தர்கள்" கொள்கை சிறிது சிறிதாக இங்கிலாந்தில் எதிர்காலத்தில் பர‌‌வி வலுப் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இப்போதே தென் படுகின்றன. ஜான்புல் என்ற ஒருவர்  இங்கிலாந்துக் கொடியினை ஆடையாக அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் தெரு முனைகளில் தனி நபராகப் போராட்டம் நடத்துகிறார். அவர் கையில் வைத்திருக்கும் பிரச்சார அட்டையில் 'பிரித்தானியர்களின் வேலைகளைப் பாதுகாப்போம்' என்று எழுதியுள்ளது.லியோ மெகின்ஸ்ட்ரி என்ற பிரபல பத்திரிகையாளர் 'ஆங்கிலேய முதலாளிகளுக்கு நாட்டுப்பற்று வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏனெனில் குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டவர் கிடைக்கிறார்கள் என்று அவர்களுக்கே வேலை அனைத்தையும் கொடுக்கிறார்கள்.புதிதாக உருவாக்கப்பட்ட பணிகளில் 80சதவீதம் வந்தேரிகளுக்குக் (இம்மிகரன்ட்ஸ்)கொடுக்கப்பட்டுள்ளது' என்று  புள்ளி விவரம் கொடுத்து எழுதியுள்ளார்.இதையெல்லாம் பார்க்கும் போது இங்குள்ள‌ நம்மவர்கள் இந்திய‌ வேர்க‌ளை முழுதும் இழ‌ந்துவிடாம‌ல் எத‌ற்கும் த‌யார் நிலையில் இருத்த‌ல் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிற‌து.
‍‍‍‍‍‍‍‍‍*********************************************************
2

விசித்திர‌மான‌ போட்டிக‌ள் ந‌ம்மூரில் ம‌ட்டும்தான் ந‌ட‌க்கிற‌து என்று எண்ணிவிட வேண்டாம்.இங்கேயும் உண்டு.ஆட்டுக்கிடா ச‌ண்டை, கோழிச்ச‌ண்டை எல்லாம் ந‌ம்மூரில் ந‌ட‌க்கிற‌து என்றால், இங்கே க‌ழுதைப் ப‌ந்த‌ய‌ம் ந‌ட‌க்கிற‌து. குதிரைப்ப‌ந்த‌ய‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கான‌து. க‌ழுதைப்ப‌ந்த‌ய‌ம் ஏழைக‌ளுக்கான‌து. க‌ழுதைப் ப‌ந்த‌ய‌த்திற்கு 'பெட்' க‌ட்டுவ‌து உண்டு.ஸேன்ட்ர்ஸ்ட் என்ற‌ இட‌த்தில் 40 க‌ழுதைக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ ப‌ந்த‌ய‌ம் ந‌ட‌ந்துள்ள‌து.
*************************************************************
3

இந்து நாளித‌ழில் ஞாயிறு அன்று திரும‌ண‌ விள‌ம்ப‌ர‌ம்(ம‌ண‌ம‌க‌ன், ம‌ண‌ம‌க‌ள் தேவை) அதிக‌ எண்ணிக்கையில் வ‌ரும்.அது போல‌வே ந‌ம் த‌மிழ் நாள் இத‌ழ்க‌ளிலும் அந்த‌ வ‌கை விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வ‌ரும். த‌மிழ்நாட்டில் எத்த‌னை வ‌கையான‌ சாதிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தை அந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌‌ளை ஆராய்ந்தாலே அறிந்து கொள்ள‌லாம். க‌ல்யாண‌மாலை போன்ற‌ தொலைக்காட்சி ஊட‌க‌ங்க‌ளில் கூட‌ ம‌ற‌க்காம‌ல், ம‌றைக்காம‌ல் சாதிப்பெய‌ர் சொல்லி பெண் ,ஆண் தேடுவார்க‌ள்.

இங்கேயும் வ‌குப்பு (கிளாஸ்)வேற்றுமை உண்டு. அது ப‌த்திரிகைக‌ளில் வெளிப்ப‌டையாக‌ வ‌ருவ‌தில்லை. ஆனால் ப‌ழ‌க‌த் துவ‌ங்கும் முன்ன‌ர் இருபால‌ரும்  எந்த‌ப்பிரிவு ‌என்ப‌தை எவ்வாறோ அறிந்து கொள்வ‌தாக‌வே தெரிய‌வ‌ருகிற‌து.இர‌க‌சிய‌ விசார‌ணை செய்துத‌ர‌ 'டிடெக்டிவ்' நிறுவ‌ன‌ங்க‌ளின் உத‌வி நாட‌ப்ப‌டுகிற‌து என்கிறார்‌க‌ள்.

இங்கு ம‌ண‌ம‌க‌ன், ம‌ண‌ம‌கள் தேவை விள‌ம்ப‌ர‌ங்க‌ள் நான்கு  வ‌கையாக‌ப் பிரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன.

1.ஆண்க‌ளுக்குப் பெண்க‌ள்.2. பெண்க‌ளுக்கு ஆண்க‌ள்.3. ஆண்க‌ளுக்கு ஆண்க‌ள்4. பெண்க‌ளுக்குப் பெண்க‌ள்.

நான் வாசித்த‌ 60 விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் சுமார் 20 விள‌ம்ப‌ர‌ங்க‌‌ள் 60 வ‌ய‌தைக் க‌ட‌ந்த‌வ‌ர்க‌ள் கொடுத்துள்ள‌ன‌ர்.அதிக‌ப‌ட்ச‌ வ‌ய‌து 72! ஒரு 72 வ‌ய‌து மூதாட்டி த‌ன‌க்கு ஒரு பேச்சுத் துணையாக‌, வீட்டு ஆண்பிள்ளை என்று சொல்லிக் கொள்ள‌ ஒரு ஆண் துணை தேவை என்கிறார்.

பெரும்பாலான‌வ‌ர்க‌ள்  த‌ங்க‌ளைப் ப‌ற்றி விவ‌ரிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ த‌ன்ன‌ம்பிக்கையைக் காட்டுவ‌தாக‌ உள்ள‌து.ஒரு 64 வ‌ய‌துப் பெண் த‌ன்னை இவ்வாறு கூறிக் கொள்கிறார்:  "very attractive, slim, fit, curtly, female 64...." companionship+ , friendship+ , romance+ , for fun(may be more)

இது போன்ற‌‌ சொற்க‌ள் திரும‌ண‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் காண‌க் கிடை‌க்கிற‌து. அந்த‌ + க்கு என்ன‌ பொருள் என்ப‌தை உங்க‌ளுடைய‌ க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.
****************************************************************
4.

ந‌ம‌து நாட்டைப்ப‌ற்றி சொல்வ‌து 'இந்தியா ஒரு குப்பை மேடான‌ நாடு' ம‌க்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் குப்பை போடுவ‌து இந்தியாவில் ம‌ட்டுமே உள்ள‌து என்று ஒரு தோற்ற‌ம் உல‌க‌ நாடுக‌ளில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. நான் ஹீத்ரூ விமான‌ நிலைய‌த்தில் இற‌ங்கிய‌வுட‌னேயே சாக்லேட் காகித‌ங்க‌ளும், ஐஸ்கிறீம் கோன்க‌ளும்  கிடப்பதைப் பார்த்தேன்.அருகாமையில் குப்பைத்தொட்டி இருந்தும்  கண்ட இடத்தில் குப்பைகளை வீசுவது இங்கேயும் உள்ளது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய பணியாளர்கள் அங்கே வந்து அகற்றி விடுகிறார்கள்.  குப்பை போடும் மனோபாவம் இங்கேயும் உள்ளது என்பதைக் கூறவே இதைச் சொன்னேன். இதைச் சொல்வதால் நாமும் வழக்கம் போல் குப்பை போடுவதைத் தொடரலாம் என்பது என் கருத்தாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தினசரி பிரதான சாலைகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்படுகின்றன. வாரம் ஒருமுறை வீட்டுக் குப்பைகள் அகற்றப்படுகின்றன.வீட்டு வாசலில்மறுசுழற்சிக்கான தொட்டி,மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளுக்கான தொட்டி என்று இரண்டு உள்ளன.ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு தொட்டி அகற்றப்படுகிறது.மறு சுழற்சி செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அப்படி நடப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. நமது தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இலண்டன் குப்பைகள்  வந்து இறங்கியுள்ளதையும், சில தமிழ் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் செய்தியாக வாசித்து இருக்கலாம்!

குப்பை லாரிகளில் எழுதியுள்ள வாசகம் சிந்திக்க வைக்கிறது."நாம் பிரிட்டனில் மூன்றில் ஒரு பாகம் உணவினை குப்பைகளில் கொட்டுகிறோம்"

முந்தைய அமெரிக்க அதிபர் கூறிய சொற்கள் ஏனோ என் மனதில் தோன்றியது."இந்தியா போன்ற‌ வளரும் நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக உணவைச் சாப்பிடுவதால் தான் உணவு விலைகள் ஏறிவிட்டன;பஞ்ச நிலை உணாடாகிறது"!வளர்ந்த நாடுகளில் குப்பைகளாகும் உணவைக் கணக்கில் ஏனோ எடுத்துக்கொள்வதில்லையே அவர்கள்!

நம்மூர் டாஸ்மாக் கடைகளில் நடப்பதுபோலவே குடிமகன்கள் இங்கேயும் பாட்டிலை சாலைகளிலும் நடைபாதைகளிலும் சுக்கு நூறாக உடைப்பது நடக்கிறது. கால் முழுவதும் மூடும் காலணி அணியவில்லை என்றால் கண்ணடிச் சில்லு காலில் குத்துவதைத் தவிர்க்க முடியாது.

************************************************************
5.

இங்கே செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு புனித சடங்கு போலவே நடக்கிறது.பெரும்பாலும் வித விதமான நாய்கள்தான் 'பெட்' ஆக உள்ளன.குறைந்த அளவில் பூனைகள் வளர்க்கப்படுகின்றன.தவறாமல் எல்லா செல்லப்பிராணிகளுமே கொழு கொழு என்று குண்டாகவே உள்ளன. நடைப்பயணம் போகும் போது தன் உடல் எடையையே தாங்க முடியாமல் திணறித் திணறி நடந்துவரும் நாய்களை தவறாமல் தரிசிக்கலாம்.

"உங்கள் நாய் என்றோ, உங்கள் பூனை என்றோ" செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடம் தவறியும் கூறி விட முடியாது.அந்தச் செல்லத்தின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும்.அவர்களுடைய செல்லத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்துவிட்டால் ,ஒரு பிரித்தானியரை நம் வசப்படுத்திவிட முடியும்.

நம்மூர் நாய்களைப் போலவே விளக்குக் கம்பங்களைப் பார்த்தால் காலைத் தூக்கிக் கொள்வது இங்கே உள்ள நாய்களும் செய்கின்றன.

அருகில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் கையால் எழுதிய ஒரு அறிவிப்பைப் பார்த்தேன்."என் அருமைச் செல்லம் புஸ்ஸி(கேட்) காணாமல் போய்விட்டது. ஷூ வுக்குள் போய் ஒண்டிக் கொள்ளும் பழக்கம் உடையவன். உங்கள் இல்லத்தில் அணியாமல் கிடக்கும் ஷூக்களை சோதிக்க வேண்டுகிறேன்.கண்டு பிடித்துத் தகவல் கூறுபவர்களுக்குச் சன்மானம் உண்டு"

இங்கேயுள்ள 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுடைய கார்ட்டூன் படத்தை பூங்காவில் உள்ள குப்பைத் தொட்டியின் வெளியே ஒட்டி உள்ளதை ரசித்தேன்.நாய் ஒன்றினைப் பிடித்துச் செல்லும் மங்கையின் படத்தை வரைந்து அதன் கீழே எழுதியுள்ள வாசகம் நகைப்பாக உள்ளது.

"The dog may be your loving pet; but his poos are not our pet.
Please pick up the poo and drop in the dust bin"

poo    என்பதற்கு நீங்களே பொருள் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
(மேலும் வரும்)

வாழ்க வளமுடன்!
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்: இலண்டன் மாநகர்

வாழ்க வளமுடன்!

31.7.11

அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!

----------------------------------------------------------------------------------------
அங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்!

வாரமலர்

இலண்டன் மாநகரில் உள்ள இடங்களைப்பற்றி எழுதுவது ஒன்றும் புதுமையில்லை.ஏனெனில் பலரும் எற்கனவே எழுதிய செய்திதான் அது. அல்ல‌து 'இலண்டன் டூர்' என்று யார் வேண்டுமானாலும் கூகுள் ஆண்டவரைக் கேட்டால் எல்லா இடங்களையும் பற்றி அழகிய படங்களுடன் முழு விவரமும் கொடுப்பார். அதனால் அந்த முயற்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

ஆனால் கண்டதும் கேட்டதும் படித்ததும் ஆகிய செய்திகளைச் சொன்னால்சுவையாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே என் ஆக்கத்தை அப்படி அமைத்துக் கொள்கிறேன்.

சென்னை மாந‌க‌ர் வாசிக‌ளுக்கு 'மாம்ப‌ல‌ம் ட‌ய‌ம்ஸ், அண்ணாநகர் ட‌யம்ஸ்'போன்ற இலவச வாரப் பத்திரிகைகள் அறிமுகமுண்டு.
நிறைய விளம்பரங்களும்,கொஞ்சம் உள்ளூர்,பேட்டை செய்திகளும் 
இருக்கும். இப்போது 'அண்ணாநகர் டயம்ஸி'ல் பிரபல எழுத்தாளர்
திருவாள‌ர் ரா.கி ரெங்க‌ராஜ‌ன் எழுதி வ‌ருகிறார் என்ப‌து உங்க‌‌ளுக்கு
ஓர் உப‌ரிச் செய்தி.

மேற்சொன்ன‌ இல‌வ‌சப் ப‌த்திரிகைக‌ள் போல‌வே இங்கே இல‌ண்ட‌ன் மாந‌க‌ரிலும் அந்த‌அந்த‌ப் ப‌குதிக்கான‌ ப‌த்திரிகைக‌ள் உண்டு. வியாழ‌ன்
தோறும் வீட்டில் இல‌வ‌ச‌மாக‌ வ‌ந்து விழுகின்ற‌து.அதுவே விலை
கொடுத்து வாங்கினால் அரைப்ப‌வுண்டு கொடுக்க‌ வேண்டும்.அதாவ‌து
ந‌ம்மூர் ரூ 38/= ஆகும்.

அந்த‌ப் ப‌த்திரிகையில் வ‌ந்த‌ சுவையான‌ சில‌ செய்திக‌ளை உங்க‌‌ள் முன் வைக்கிறேன்.

முத‌லில் என் க‌ண்ணையும் க‌ருத்தையும் க‌வ‌ர்ந்த‌து இந்த‌த் த‌லைப்புத்தான்:

"HAPPY ENDING FOR SUPERSTAR"

இந்த‌ச்செய்தி வ‌ந்த‌போது சூப்ப‌ர் ஸ்டார் சிங்க‌‌ப்பூரில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிவ‌ர‌ தேதி வெளியாகி இருந்த‌து.ச‌ரி ந‌ம்ம‌ ர‌ஜினி இங்கேயும் பிர‌ப‌ல‌மா என்று ஆர்வ‌த்துட‌ன் வாசித்தேன்.அந்த‌ செய்தியில் குறிப்பிட்ட‌து ஒரு குதிரை. அத‌ன் பெய‌ர் சூப்ப‌ர் ஸ்டார்! இங்குள்ள‌ ஒரு குதிரைப் ப‌ண்ணையில் குதிரைக‌ளுக்கு க‌ண்டுபிடிக்க‌ முடியாத‌ ஒரு தொற்று நோய் வ‌ந்து ப‌ல‌ குதிரைக‌ள் மாண்ட‌ன‌.உயிருட‌ன் இருந்த‌ குதிரைக‌ளை இங்குள்ள‌ மிருக‌ வ‌தைத் த‌டுப்புச் ச‌ங்க‌த்தின‌ர் மீட்டு, இட‌ம் மாற்றி அவைக‌ளுக்கு உண‌வும் சிகிச்சையும் அளித்து ந‌ல்ல‌ ஆரோக்கிய‌த்திற்குத் திருப்பிவிட்ட‌ன‌ர்.

அப்ப‌டி உயிர் பிழைத்த‌ குதிரைக‌ளில் சூப்ப‌ர் ஸ்டாரை மாற்றுத் திற‌னாளிக் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ப‌ள்ளியில் சேர்ப்பித்த‌ன‌ர். அங்கே சூப்ப‌ர் ஸ்டார் குழ‌ந்தைக‌ளின் நிலையைப் புரிந்து கொண்டு, அவ‌ர்க‌ளைத் த‌ன் மீது சும‌க்கும் போது த‌ள்ளிவிடாம‌ல் பாதுகாப்பாக‌ ந‌ட‌ந்து கொள்கிற‌தாம். அத‌னால் குழ‌ந்தைக‌ளுக்கு சூப்ப‌ர் ஸ்டார் மிக‌வும் பிடித்துப்போய் அந்த‌ப் ப‌ள்ளியின் 'பெட்' ஆகி விட்ட‌து. இப்போது அத‌ன் வாழ்க்கை ம‌கிழ்ச்சியுள்ளதாக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌வும் ஆகிவிட்ட‌து.அதைத்தா‌ன் சூப்ப‌ர் ஸ்டாருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌கிழ்ச்சி'என்று விரிவான‌ செய்தி ஆக்கியிருந்த‌ன‌ர்.‌

எப்ப‌டியோ இர‌ண்டு சூப்ப‌ர் ஸ்டா‌ர்க‌ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌கிழ‌ச் செய்கிறார்க‌ள்.அந்த‌ ஒற்றுமை ஒன்று போதாதா?
 -------------------------------------------------------------------------------------------------
இரண்டாவதாக என் கவனத்தைக் கவர்ந்தது இர‌ண்டு சின்னத் திருட்டுக்கள்.

முதல் திருட்டு ஒரு சைக்கிள். அதனை தொலைத்த‌வருடைய வேண்டுகோள் நெஞ்சைத்தொட்டது.

"நான் அந்த சைக்கிளை வாங்கி இரண்டு நாள் தான் ஆகிறது.500 பவுண்டு செலவு செய்துள்ளேன்.மேல் உபகரணங்களுக்கு  மேலும் 100 பவுண்டு செலவு செய்துள்ளேன்.நான் ஒரு கட்டிட வேலை செய்யும் தொழிலாளி. என்னிடம் கார் இல்லை.நான் வேலைக்குச்செல்ல இந்த சைக்கிளையே நம்பியுள்ளேன்.அந்த சைக்கிள் நான் மிகவும் சிரப்பட்டு சேமித்த தொகையில் வாங்கியது. இனி சுலபமாகவும், சரியான நேரத்திற்கும் வேலைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அந்த 'பைக்'கில்தான் என் வாழ்க்கையே அடங்கியுள்ளது.

அந்த சைக்கிள் எனக்கு இன்னொரு காரணத்திற்காகவும் தேவைப்படுகிறது. நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். என் குழந்தைகள் என் மனைவியின் வீட்டில் உள்ளனர். நான் வாரக் கடைசியில் சென்று காணவும், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கித்தரவும் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவும் அந்த சைக்கிள் எனக்கு மிகவும் தேவையாக உள்ளது. எனவே விளையாட்டுக்காக யாராவது எடுத்துச் சென்று இருந்தால் என் முகவரியில் கொண்டு வைத்துவிடக் கோருகிறேன். அப்படிச் செய்தால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்."

பெயர் முகவரியும் கொடுத்துள்ளார்.அவர் குழந்தைகள் பற்றி எழுதியுள்ளது மனதை மிகவும் தொட்டது. 

இன்னொரு திருட்டு கொஞ்சம் வேடிக்கை ஆனது.திருட்டுப்போன பொருள் 'சோளக்கொல்லை பொம்மை'!ஆம்! காக்காய், குருவி விரட்ட வைக்கும் பொம்மைதான். ஒரு தாயும் மகளும் தோட்டம் போட ஆசைப்பட்டனர். தாங்க‌ள் போட்ட விதைகளை பறவைகள் கொத்திவிடலாம் என்று எதிர்பார்த்து, தோட்டக்கலை அலுவலகத்தில் இருந்து 20 பவுண்டுக்கு ஒரு காகம் விரட்டும் பொம்மையை வாங்கிவந்து தோட்டத்தில் மாட்டி வைத்தனர்.ஒரு நாள் இரவு பொம்மையைக் காணவில்லை.அந்தத் தாயும் மகளும் அக்கம்பக்கம் எல்லாம்விசாரித்தனர். நாயைப் பிடித்துக்கொண்டு நடைப்பயணம் செய்யும் தாத்தா ஒருவர் ஒரு தடயம் சொன்னார்.

"உங்கள் பொம்மைக்கு நீலக் கலர் ஜீன்ஸ் அணிவித்து இருந்தீர்களா?"

"ஆமாம்!"

"ஒரு நீல‌க் க‌ல‌ர் ஜீன்ஸ் இங்கிருந்து மூன்று பேருந்து நிலைய‌ம் த‌ள்ளி ஒரு ம‌ர‌த்தில் தொங்கிக் கொண்டு இருக்கிற‌து."

"அப்ப‌டியா?ந‌ன்றி!"

தாயும் ம‌க‌ளும் விரைந்து சென்று பார்த்த‌ன‌ர். பொம்மையைத் திருடிய‌வ‌ர்க‌ள் குடி ஜோரில் பொம்மையை உதைத்து விளையாடி இருக்க‌லாம் என்று ஊகித்த‌ன‌ர். இந்த‌ செய்தியை காவ‌ல்துறைக்குத்தெரிவித்த‌ன‌ர்.ப‌த்திரிகைக்கும் கொடுத்த‌ன‌ர்.

"அற்பப் பொருள்தானே என்று அல‌ட்சிய‌ம் காட்ட‌ வேண்டாம்.இதை‌ நீங்க‌ள் க‌ண்‌டு பிடிக்காவிட்டால் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுக்குள்ளும் வ‌ந்து எதை வேண்டுமானாலும் தூக்கிச் செல்லாலாம் என்ற‌ துளிர் விட்டுவிடும் .என‌வே க‌வ‌ன‌த்துட‌ன் அந்த‌த் த‌றுத‌லைக‌ளைக்க‌ண்டு பிடித்து த‌ண்டிக்க‌ வேண்டுகிறேன்"‌ என்று புகார் கொடுத்துள்ளார்.ப‌த்திரிகை இத‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து பிர‌சுர‌ம் செய்துள்ள‌து.

எப்ப‌டி இருக்கிற‌து? ந‌ம்மூரில் இது ந‌ட‌க்குமா?
 ------------------------------------------------------------------------------------------------------
நம்மூரைப் போலவே பள்ளிகளில் இலவச உணவளிக்கும் திட்டம் இங்கு உள்ளது.எப்போதும் 25 சதவிகித குழந்தைகளும்,இளைஞர்களும் இந்த உணவினைப்பெற இருக்க வேண்டிய பொருளாதார அளவுகோல்களுக்கு மிக அருகாமையில் உள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.ஆனால் நாம் இந்த இலவசத்தைப் பெறத் த‌குதி உள்ளவர்தானா என்பதை பள்ளியில் வந்து நேரில் அறிந்து கொள்வதில் பெற்றோர், அல்லது  தனித்த தாய், தந்தைக்கு ஏதோ மனத்தடை இருப்பதை அரசு கவனித்து உள்ளது. எனவே இப்போது அந்த மன உறுத்தலைப் போக்கும் வண்ணம் ஒரு மாற்று ஏற்பாட்டை அரசு அறிவித்து உள்ளது. இந்தப் புதிய முறைப்படி, தங்கள் விசாரணையை பள்ளிக்கு நேரில் வந்து செய்து கொள்ள‌ வேண்டியது இல்லை.மாற்றாகத் தொலைபேசி மூலமோ அல்லது வலைதளம் மூலமோ தங்கள் பிள்ளைக்கு இலவச உணவு பள்ளியில் கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். நேரில் வருவதால் ஏற்படும் 'அவமான'உணர்வைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இதனை நம்மூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

தொழுநோய் கண்டுபிடிப்புத் துறைக்கு யாரோ தலைமைச் செயலகத்தில் அமர்ந்து உள்ள அதிகாரி சுற்றறிக்கை அனுப்பினார்.அதாவது பள்ளிப் பிள்ளைகளுக்குத் தொழுநோய் உள்ளதா என்று சோதிக்க உத்தரவு ஆயிற்று.அதனை ஏற்று ஒரு பள்ளிக்கு வந்தனர் அக்குழுவினர். ஒரு சில பிள்ளைகளுக்கு தேமல் இருந்தது. அவர்கள் எல்லாம் தொழுநோய் வரச் சாத்தியமானவர்கள் என்று தீர்மானித்து அவர்களுக்கு மாத்திரை கொடுக்க ஏற்பாடாயிற்று. இந்த மாத்திரையை எல்லாப் பிள்ளைகளும் பார்க்க அந்தப் பிள்ளைகளுக்கு வாயில் போடப்பட்டு தண்ணீரும் ஊற்றப்பட்டது. என்ன எதிர் விளைவு என்று சொல்லவும் வேண்டுமா? அந்தப் பிள்ளைகள் பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

நுண் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பது நம் சமூகத்தில் குறைவுதான்.
(இன்னும் வரும்)

வாழ்க வளமுடன்!

கே. முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்:இலண்டன் மாநகர்

----------------------------------------------------------------------

24.7.11

காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

 சாகித்திய அகாடெமி விருதுபெற்றுச் சிறந்த 
எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன்
------------------------------------------------------------------------------------
காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

வாரமலர்

1997 - 98ஆம் ஆண்டு ஜூனியர் போஸ்ட் இதழில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரையில், சிறுகதை என்பத‌ன் இலக்கணத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஒருமுறை அல்ல இரண்டு முறை வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தாக ஒவ்வொரு முறையும் 12க்கு குறையாத குறிப்புக்களைக் கொடுத்து இருந்தார். அவையெல்லாமும் இப்போது நினைவில் நிற்கவில்லை என்றாலும், ஒரு கருத்துமட்டும் ஆழமாக மனதில் பதிந்து உள்ளது.

"ஒரு நல்ல சிறுகதையின் கருவோ, ந‌டையோ, ஒருசில‌ சொற்களோ, சொற்றொடர்களோ வாசகனின் மனதில் நீங்காமல் பதிந்து விடுமானால் அது ஒரு நல்ல சிறுகதை எனலாம். தலைப்போ, அல்லது கதை முழுதுமோ வார்த்தைக்கு வார்த்தை நினைவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் சுஜாதா கூறியிருந்தார்.

த‌ஞ்சை,லால்குடியில் இருக்கும் போது கிடைக்காத‌ ஓய்வும், ப‌ர‌ப‌ர‌ப்பு இல்லாத‌ சூழ‌லும் இல‌ண்ட‌னில் என‌க்குக் கிடைப்ப‌தால், அவ‌ச‌ர‌ம், அவ‌ச‌ர‌மாக‌ மேய்ச்ச‌ல் நில‌த்தில் புல்லை  மேய்ந்த‌‌ ப‌சுமாடு, மாலையில் கொட்டிலில் வ‌ந்து அம‌ர்ந்து அசைபோடுவ‌து போல‌ ப‌டித்த‌ ப‌ழைய‌ செய்திக‌ளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

அம‌ர‌ர் சுஜாதா கூறிய‌து போல நான்  ப‌டித்த‌ சிறுகதைகளில் ஏதாவது சிலதையாவது என்னால் நினைவு கூற‌ முடிகிற‌தா என்று எண்ணிப் பா‌ர்த்தேன்.

ச‌மீப‌கால‌மாக‌ வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ளில் சிறுக‌தை ஒருப‌க்க‌ம், அரைப்ப‌க்க‌ம் என்று குறுகிப் போய்விட்ட‌தால் ஒன்றும் சொல்லிக் கொள்வ‌தைப்போல‌ இல்லை. மேலும் வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ள் எல்லாமும்  பேசும்ப‌ட‌ம், பொம்மை, சினிமா எக்ஸ்பிர‌ஸ் போன்ற‌ சினிமா ப‌த்திரிகைக‌ளாக‌ மாறிவிட்ட சூழ‌லில், வார‌ப் ப‌த்திரிகைக‌ள் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டேன். என் வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம். ஆன்மீக‌ப் ப‌த்திரிகை ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் திரும்பிவிட்ட‌து. போகிற‌ கால‌த்துக்கு புண்ணிய‌ம் தேடும்‌ ச‌மாச்சார‌ம்.

இல‌க்கிய‌ப்ப‌ணி ஆற்றுவ‌தாக‌ த‌ங்க‌ள் முதுகைத் தாங்க‌ளே த‌ட்டிக் கொள்ளும் சிறு ப‌த்திரிகைக‌ள் ப‌ல வ‌ந்தாலும், அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும்  நீள‌மான‌ சொற்றொட‌ர்க‌ளும், புரிய‌க் கூடவே கூடாது என்று நேர்ந்து கொண்ட‌து போல‌ எழுதும் அவ‌ர்க‌ள் ந‌டையும் திகைக்க‌ வைக்கின்ற‌‌ன‌.

ச‌மீப‌த்தில் ப‌டித்த‌து வாத்தியாரின் 'செட்டிநாட்டு ம‌ண் வாச‌னைக்க‌தைக‌ள்' 3 தொகுப்புக்க‌ளிலும் உள்ள‌ க‌தை‌க‌ள் 60ம் - கையில் இப்போது புத்த‌க‌ம் இல்லாவிடினும் 20 க‌தைக‌ளின் க‌ருவை என்னால் நினைவு ப‌டுத்திக் கொள்ள‌ முடிகிற‌து. அந்த‌ வ‌கையில் சுஜாதாவின் இல‌க்க‌ண‌ப்ப‌டி அவை ந‌ல்ல‌ சிறுக‌தைக‌ள் என்று சொல்ல‌லாம்.'ஆனால் அவை அனைத்தும் ச‌மீப‌மாக‌ப் ப‌டித்த‌வை. என‌வே நினைவில் உள்ள‌ன‌' என்ற‌ வாத‌ம் சில‌ர் முன் வைக்க‌லாம் என்ப‌தால் வாத்தியாரின் க‌தைக‌ளை இங்கு கூறுவ‌தை த‌விர்க்கிறேன்.

முத‌லில் என்னைக் க‌வ‌ர்ந்து ம‌ன‌தில் ப‌திந்த‌ க‌தை, க‌ரிச‌ல் ம‌ண் த‌ந்த‌, பாட்டாளி வ‌ர்க்க‌த்திலிருந்து முளைத்து வ‌ந்த‌ எழுத்தாள‌ர் கி.ராஜ‌நாராய‌ண‌ன் அவ‌ர்க‌ளுடைய‌து.

இதோ அந்த‌க்க‌தைச் சுருக்க‌ம்:

க‌ரிச‌ல்காட்டு கிரா‌ம‌ம் ஒன்றில் நாய‌க்க‌ர் ஒருவ‌ர் வா‌ழ்ந்து வ‌ருகிறார்.அந்த‌ ஊரில்  கோவில் காளை ஒன்று உண்டு. மினுமினுப்பான‌ க‌ரிய‌ தோலுட‌ன் த‌ன் உய‌ர்ந்த‌ திமிலுட‌ன் அது க‌ம்பீர‌மாக‌ ந‌ட‌ந்து‌ செல்வ‌தே ராஜ‌ க‌ம்பிர‌மாக‌ இருக்கும்.அந்த‌ வ‌ட்டார‌த்தில் இருக்கும் எல்லாக் க‌ன்றுக‌ளுக்கும் அந்த‌க் காளையே த‌ந்தை. ம‌க்க‌ளுக்கெல்லாம் அந்த‌ காளையிட‌ம் ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌க்தி. யாரும் அதை எதிர்த்துச் செல்ல‌ மாட்டார்க‌ள் அது வ‌ந்தால் வில‌கி வ‌ழிவிட்டு ஒதுங்கிக் கொள்வா‌ர்க‌ள்.

அதன் உரிமையாளரான நாய‌க்க‌ருக்கு அந்த‌க் காளையின் மீது அபார‌மான‌ பிரிய‌ம். காளை க‌ட‌ந்து செல்லும் போதெல்லாம் வாய் விட்டு அத‌னை வ‌ர்ணிப்பார்.

"அதோட‌ ந‌டைய‌ப் பாருடா, என்ன‌ ராஜ‌‌‌ க‌ம்பீர‌ம்! அத‌னுடைய‌ திமிலைப்பாரு, என்ன‌ உச‌ர‌ம‌ப்பா! தோலுல‌ என்ன‌ மினுமினுப்பு! ஆஹா என்ன‌ ஒரு அற்புத‌மான‌ ப‌டைப்புடா!" இதுபோல‌ வாய்விட்டுப் புக‌ழ்வார்.கேட்டுக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் புன்ன‌கையோடு க‌ட‌ந்து செல்வார்க‌ள். ம‌ன‌திற்குள் "என்ன‌ இந்த‌ நாய‌க்க‌ர், காளை மேல‌ பைத்திய‌மா இருக்காரே" என்று நினைத்துக் கொள்வார்க‌ள்.

இப்ப‌டி இருக்கும் போது, ஓர் இர‌வு  இருட்டில் காளை ப‌டுத்துள்ள‌து தெரியாம‌ல் நாய‌க்க‌ர் அத‌ன் மீது த‌டுக்கி விழுந்து விடுகிறார்.விருட்டென‌ எழுந்த‌ காளை நாய‌க்க‌ரை அல‌ட்சிய‌மாக‌க் கொம்பால் தூக்கி வீசி விடுகிற‌து . முட்புத‌ரில் போய் விழுந்த‌ நாய‌க்க‌ரை ஊர்ம‌க்க‌ள் வீட்டுக்குத் தூக்கி வ‌ந்து  ஆசுவாச‌ப் ப‌டுத்துகிறார்க‌ள். அவ‌ர் கொஞ்ச‌ம் ச‌ம‌நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஒருவ‌ன் கேட்கிறான்:

"இப்ப‌ம் என்ன‌ சொல்லுதீரு?"

சிர‌ம‌த்துட‌ன் எழுந்து அம‌ர்ந்து நாய‌க்க‌ர் சொல்கிறார்:

"அட‌டா!அதுக்கு என்ன‌ வ‌லிமய‌டா! நான் ஒரு 150 ப‌வுண்டு இருப்ப‌ன்ன‌ல்லோ? என்னையே தூசு மாதிரி தூக்கி எறிஞ்சுடுச்சே!"

அடிவாங்கியும் இப்ப‌டி அதைப் புக‌ழ்கிறாரே என்று ம‌க்க‌ள் உள்ளுக்குள் சிரிக்கிறார்க‌ள்.அப்போது கூட்ட‌த்தில் இருந்து ஒருவ‌ன் கூவுகிறான்:

"நாய‌க்க‌ருக்கு தான் ஒரு ப‌சுமாடாப் பொற‌க்க‌லையேன்னு இருக்கு!"

இத்தோடு க‌தை முடியும். அந்த‌க் க‌டைசி சொற்றொட‌ரை புரிந்து கொண்டால், ம‌ன‌திலும் உத‌ட்டிலும் சிரிப்போடு நிறைவு தோன்றும்.

இர‌ண்டாவ‌து க‌தை அம‌ர‌ர் கு.ப‌ ராஜ‌கோபால‌ன் எழுதிய‌து. கு ப‌ ர‌ 'ம‌ணிக்கொடி'க் கால‌ எழுத்தாள‌ர். ம‌னோத‌த்துவ‌த்தைப் பிர‌யோக‌ம் செய்து எழுதிய‌வ‌ர். க‌ண் பார்வை இல்லாத‌வ‌ர்.

அவ‌ருடைய‌ ஒரு க‌தை ஒன்று நினைவுக்கு வ‌ருகிற‌து. அத‌ன் சுருக்க‌ம்:

புதும‌ண‌த் த‌ம்ப‌திய‌ர் ஓர் ஒண்டுக் குடித்த‌ன‌ வீட்டில் குடியிருக்கிறார்க‌ள். எதிர் 'போர்ஷ‌'னில் ஒரு இள‌ம் வித‌வை குடியிருக்கிறாள்.இவ‌ர்க‌ள் இருவ‌ரும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து அவ‌ளுக்கு ம‌ன‌தில் பொறாமைத் தீயை வ‌ள‌ர்கிற‌து. புதும‌ணத் த‌ம்ப‌தியின‌ரின் போர்ஷ‌ன் வாச‌ல் க‌த‌வையே எப்போதும் நோட்ட‌ம் விட்டுக் கொண்டு அம‌ர்ந்திருப்பாள் கைம்பெண்.

உள்ளே க‌ட்டில் ச‌த்த‌ம், வ‌ளைய‌ல் ச‌த்த‌ம், முன‌க‌ல் ச‌த்த‌ம் எல்லாம் கைம்பெண்ணைப் பாடாய் ப‌டுத்தும்.இவ‌ர்க‌ளை 'அந்த‌' ச‌ம‌ய‌த்தில் ஒருத‌ர‌மாவ‌து  பிரிக்க‌ வேண்டும் என்று க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொள்கிறாள்.

அப்ப‌டி ஒரு ச‌ந்தர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. இர‌வு சீக்கிர‌மாக‌ த‌ம்ப‌திய‌ர் க‌ட்டிலில் ப‌டுத்துவிட்ட‌தையும், ஊதுப‌த்தி ம‌ண‌த்தையும் வைத்து அவ‌ர்க‌ள் தாம்ப‌த்திய‌த்தின் எந்த‌ நிலையில் உள்ளார்க‌ள் என்று இங்கிருந்தே அனுமானித்துக் கொள்கிறாள் கைம்பெண். அப்போது அந்த‌ புது மாப்பிள்ளையின் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் அவ‌னைத் தேடி வ‌ருகிறான். அவ‌னிட‌ம் "அந்தப் போர்ஷ‌ன்தான் க‌த‌வை ப‌ல‌மாக‌த் த‌ட்டுங்கள்" என்று சொல்லிக் கொடுக்கிறாள். அவ‌னும் யோசிக்காம‌ல் த‌ட்டுகிறான். அந்த‌த் த‌ம்ப‌தியின‌ர் வாரிசுருட்டி எழுவ‌தையும், அவ‌ச‌ர‌மாக‌ ஆடை அணிவ‌தையும் , விள‌க்குப் போடுவ‌தையும்,அந்த‌ வெளிச்ச‌த்தில் அந்த‌ப் புதுப்பெண் க‌லைந்த‌ ஆடைக‌ளுட‌ன் ச‌மை‌ய‌ல் அறைக்குள் ஓடுவ‌தைப் பார்த்து ஆன‌ந்த‌ப்ப‌டுகிறாள் கைம்பெண்.

அன்று இர‌வு கைம்பெண் ந‌ன்றாக‌‌ நிம்ம‌தியாக‌த் தூங்கினாள்.

இன்னும் இர‌ண்டு க‌தைக‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. பதிவின் நீள‌ம் க‌ருதி இங்கே நிறுத்திக் கொள்கிறேன். அவ‌ற்றையும் சொல்லுங்க‌ள் என்று யாராவ‌து ஒருவ‌ர் கேட்டாலும் ச‌ர‌க்கை அவிழ்த்து விடுகிறேன், அடுத்த‌ப‌திவில்!

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

கே. முத்துராம‌கிருஷ்ண‌ன்,லால்குடி.
முகாம்:இல‌ண்ட‌ன் மாந‌க‌ர‌ம்.

----------------------------------------------
கி.ராஜராயணன் பற்றிய மேலதிகத்தகவல்களுக்குக் கீழே கொடுத்துள்ள சுட்டியை அழுத்திப்பார்க்கவும்

வாழ்க வளமுடன்!

17.7.11

எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

------------------------------------------------------------------------------------------
 எல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா?

வாரமலர்

சென்ற பதிவில் என் விமானப் பயண அனுபவத்தை எழுதியிருந்தேன். இப்போது இலண்டனில் என் அனுபவங்களை சிறுகச் சிறுக எழுதத் துணிகிறேன்.

'ஜெட்லாக்' என்னும் நேர மாறுதலால் ஏற்படும் மயக்கம் எனக்கு 4 நாட்கள் இருந்தது.மேலும் குளிர் தாங்காமல் கபமும் வைத்துக் கொண்ட‌து. இத்தனைக்கும் இது இங்கு கோடைகாலம்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அதிக வெய்யில் அடித்து ஓய்ந்து, இப்போது நமது ஊட்டியைப் போன்ற வெப்பநிலை.தண்ணீர் மாற்றம், தூக்க நேரத்தில் தடுமாற்றம் , விமானப் பயணத்தில் நீண்டநேரம் குறுகிய இடத்தில் அமர்ந்து வந்தது எல்லாமும் சேர்ந்து சிறிது உடல் நலக்குறைவு.5ஆம் நாளில் சாதாரண நிலையை அடைந்தேன். உடனே வெளியில் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை எத்தனித்தார்.

'முதலில் கோவிலுக்குச்செல்வோம்' என்றார்.என் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பல வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வ‌ரி அம்மன் ஆலயம் அழைத்துச்சென்றார்.
ஸ்டோன்லே  என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கிலாந்து
நாட்டில் 150க்கும் மேற்ப‌ட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. இலண்டன்
மாநகரில் மட்டும் 40  இந்துக் கோவில்கள் உள்ளன.ஸ்ரீராஜராஜேஸ்வரி
அம்மன் ஆலயத்தில் பிரதான மூலவர் அம்மன் தான். விநாயகர், முருகன், அண்ணாமலையார், மதுரை மீனாட்சி அம்மன்,பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள் அரங்க‌நாதர், நவக்கிரஹங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன.குறைவில்லாமல் பால் அபிஷேகம் நடந்தது.4 குருக்கள் உள்ளனராம்.அதில் மூவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளார்.மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

தினமும் காலையில் பெயர்த்தியை நர்சரி பள்ளியில் கொண்டு சேர்க்கும் பணியை விரும்பி ஏற்றோம்.நான் ஒருபக்கமும், என் மனைவியார் ஒருபக்கமும் பெயர்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பள்ளி நோக்கிச் செல்லும் போது பெயர்த்தி சொல்லும் கதைகள், ஆனந்த அநுபவம்.இதற்காகத்தானே ஆசைப்பட்டு இலண்டன் வந்தோம். 'ஸ்கைப்'பிலும், தொலைபேசியிலும் பார்த்துக்கொண்டு, பேசிக்கொண்டு இருந்த பெயர்த்தியினை நேரில் கண்டு பழக, பேச வாய்ப்பளித்த ஆண்டவனுக்கு நன்றி!

பள்ளியில் இருந்து அப்படியே ஒரு நடைப்பயணம் மேற்கொள்வோம்.ஆரோக்கிய நடைப்பயணம்! மருத்துவர் ஆலோசனை அல்லவா?தவறாமல் கடைப்பிடிக்க வேண்டாமா?

சீரான நடை வழிப்பாதைகள்.எதிரில் வரும் நபர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினால் தவறாமல் நன்றி சொல்லும் பாங்கு.தினசரி சந்திக்கும் நபர்கள் மிகுந்த நட்புணர்வுடன் 'ஹலோ, ஹாய்' சொல்லுவது. நம்முடன் சேர்ந்து தினசரி வரும் நபர் ஒரு நாள் வராவிட்டாலும் அவ‌ர்களைப் பற்றிய விசாரிப்பு.நற்பண்புகள் என்றால் அவர்களிடம் இருந்து கற்க வேண்டும்.

ஒரு விஷயத்தில் எல்லா நாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதான். வெள்ளைப் பெண்களும் நமது தமிழக நங்கையரும் ஒன்று போலத்தான்.

நாங்கள் தினமும் காலையில் செல்லும் நர்சரிக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை அழைத்து வரும் இளம் தாய்மார்கள் பலர் உண்டு. எல்லோரும் ஒன்று போல குழந்தை பிறந்த பின்னர் உடலை சீரக வைத்து இருப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டு ஊதிய உடலுடன் உள்ளனர்.'ஒபீசிடி' உள்ள பெண்களையே  அதிகம் காணக் கிடைக்கிறது.

ஒருவேளை ஏதாவது கல்லூரி பல்கலைப் ப‌க்கம் சென்றால் மெல்லிடை நங்கையரை சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.(அதற்காக அழைத்துச் செல்லக் கேட்டால் என் வயதுக்கு என்னை ஒரு மாதிரி பார்க்க மாட்டார்களா?ஆகவே மூச்!)

மஹாத்மா காந்திஜியை 'அரை நிர்வாணப் பக்கிரி' என்று வின்ஸ்டன்
சர்ச்சில் அழைத்தார்.இங்கு வந்து பார்த்தபின்னர்தான் தெரிகிறது,   
இங்கு உள்ள ஆண் பெண் எல்லோரும் முக்கால் நிர்வாணமாக 
இருப்பது. விளையாடும் போது அணியும் குட்டி டவுசர், மேலே ஒரு 
முண்டா பனியன் மட்டும்  அணிந்து பூங்காவிலும் 'பப்' என்னும் குடிக்குமிடங்களிலும் ஆண் பெண் அனைவரும் நடமாடுகிறார்கள்.
இது கோடைகாலமாதலால் அப்படியாம்!சரி!ஏதோ நம்மால் முடிந்தது அரைக்கண்ணால் பார்த்துவிட்டு பார்க்காதது போல போய்க்
கொண்டே இருக்க வேண்டியதுதான்.நமக்கேன் இந்த வம்பெல்லாம்
சிவ சிவ!

(அனுபவம் தொடரும்)
இலண்டன் மாநகரத்தில் இருந்து
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி

----------------------------------------------------------------------------------
Sunday Jokes. Please take them as jokes

1
What Is FACEBOOK ?
Its A Place Where Boy Posts Joke, Gets No Response...
And If Girl Posts The Same Joke, She Gets 150 Likes, 300 Comments & 60 Friends Requests..
-----------------------------------------
2
Two CA's getting married.
During marriage ceremony, wife vomits
Husband asks the reason?
Wife - Capital gain arising out of previous partnership
----------------------------------------
3
Angry husband is not satisfied with his wife & sends an sms to his Mother
in law. "Your product is not matching my requirements.*

*Smart Mother in law replys - Warranty expired, manufacturer not responsible
after seal is broken.*
-----------------------------------------
4
A guy who was married to one of the twin sisters was asked "You are
married to one of the twin sisters how do you recognize your wife."
The guy answered, "You are right I don't"
-----------------------------------------
Wishing you a happy week end
With affection and love
Vaaththiyaar


வாழ்க வளமுடன்!