மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.19

முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!


முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!

முடிவுக்கு வருகிறது, அமெரிக்காவின் GPS.

வந்துவிட்டது, இந்தியாவின் IRNSS
( Indian Regional Navigation Satellite System)
இனி யாரும் தப்பிக்க முடியாது

அமெரிக்காவிற்குச் சொந்தமானது, GPS
( Global Positioning System)

ரஷ்யாவிற்குச் சொந்தமானது, GLONASS
( Global Navigation Satellite System)

சீனாவிற்கு சொந்தமானது, BDS ( BeiDou Navigation Satellite System)

ஐரோப்பாவிற்கு சொந்தமானது, GNSS ( GALILEO, Global Navigation Satellite System)

இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.

அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.

அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை!!

விண்ணில் ஏழும், standby ஆக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.


இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது!!

ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று முதல், ஆறு மாதங்களில், அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி, பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது அமெரிக்க போன்ற நாடுகள், தங்களது தொழில் நுட்பம் மூலம், இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன

சுருக்கமாகச் சொல்லப் போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளும் தெரியும்.

GOOGLE MAP போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம், நம் நாடு எந்த அளவிற்கு  அமெரிக்காவின் தொழில்நுட்பப் பிடியில் இருக்கிறது என்று!!!

இதனை அறிந்த, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி, தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன.

அப்போதைய பிரதமர், மன்மோகனிடம் இந்தத் தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்லி, அனுமதி கேட்டபோது, அவர் சிலரின் தலையீடுகள் காரணமாகக்  காலந் தாழ்த்தி வந்ததாகவும், கூறப்படுகிறது.

பாஜக அரசு அமைந்ததும், மோடி உடனடியாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விலக்க எண்ணி, அதனை தற்போது நிகழ்த்திக் காட்டி விட்டார் என்றும், நமது நாட்டைச் சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும், முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும், அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும், அந்நிய நிறுவனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து, இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்க, இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

இனி யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால், யார் என அடையாளம் காண, அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!

இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி, குற்றச் செயல்களை கண்டறிந்து, உடனடியாக தண்டனை வழங்கலாம்.

பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும், IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

✨🌿இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான், இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

WhatsApp முதல் Facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும், தற்போது GPS உதவியுடன் இயங்குவதும், விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அரசுக்கு பல கோடி ருபாய் வருவாயும் கிடைக்கும்.✨!!

வாழ்க பாரதம் 🇮🇳
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.19

நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!


நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!

நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்! நீயும்
அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

1. தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

2. தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !

3. அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !

4. குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா? குசேலரைப் போல்
பக்தி செய் !

5. மனைவி அடங்காப் பிடாரியா ? சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

6. கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !

7. புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !

8. பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

9. பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா? நாரதரைப் போல் பக்தி செய் !

10. நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !

11. நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ? கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

12. உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!

13. யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ? ஜயதேவரைப் போல் பக்தி செய் !

14. இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ? குந்திதேவியைப் போல் பக்தி செய் !

15. மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ? மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

16. சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ? பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

17. உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ? ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

18. பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?கைகேயியைப் போல் பக்தி செய் !

19. உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ? நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !

20. குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ? வால்மீகியைப் போல் பக்தி செய் !

21. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ? பீஷ்மரைப் போல் பக்தி செய் !

22. உன் கணவன் கஞ்சனா ? புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !

23. வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !

24. உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !

25. உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

26. கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ? சுநீதியைப் போல் பக்தி செய் !

27. குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ? ஜடபரதரைப் போல் பக்தி செய் !

28. நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ? அக்ரூரரைப் போல் பக்தி செய் !

29. ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !

30. சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

31. உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல்
பக்தி செய் !

32. பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ? தேவகியைப் போல் பக்தி செய் !

33. அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !

34. பிறவிக் குருடனா ? சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

35. உடல் ஊனமுற்றவரா ? கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !

36. நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

37. நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ? பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

38. உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

39. வாழ்க்கையே பிரச்சனையா ? மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !

பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? இனிமேல் காரணம் சொல்லாதே !

கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!
ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!!!!
----------------------------------------------------------------------
படித்து வியந்தது; பகிர்ந்து மகிழ்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.19

அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!


அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!

1. கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். நியாயத்தின் பக்கம் உங்களால் நிற்க முடியும்.

2. ஏதோ தவறு செய்து விட்டோம் அடுத்ததில் சரியாக இருப்போம் என கடந்து போக பழகியவர்களே வெற்றி பாதையை சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.

3. கடன் கொடுத்து பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும். கடன் கேட்டு பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்.

4. மனசு ஏத்துக்கிட்டா ஒரு விஷயத்த சந்தோஷமா செய்யுறோம். அதே மனசு ஏத்துகிடலனா பிறர் பார்வைக்காக மட்டுமே செய்கிறோம்.

5. வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்.

6. உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். வெறுப்பின் வலியை வேறு யார் மூலமோ அவர்களுக்கு புரிய வரும்.

7. கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உறவிற்குள் பிரிதலை ஏற்படுத்துபவை. ஆதலால் சற்று நிதானமாக சிந்தித்து வார்த்தைகளை உபயோகிப்பது சிறந்தது.

8. நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நம்மைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மனதிற்குப் பிடிப்பதில்லை.

9. சில சமயம் நேரமே போக மாட்டேங்குது, சில சமயம் நேரம் எங்க போச்சுன்னே தெரியல. ஆனா வாழ்க்கை அசராம அதே இடத்துல தான் இருக்கு.

10. கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள்.

11. உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர் பார்த்தது போல் இல்லை என்றால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் நினைத்தது போல் மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதுவும் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும்.

12. அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது அல்ல நல்ல குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தது.

13. பார்த்தவுடன் பழகாதே. பழகியவுடன் இணையாதே. இணைந்தவுடன் பிரியாதே. பிரிந்தவுடன் வருந்தாதே. வருந்தியவுடன் தேடாதே.

14. ஒரு உறவை முறித்துக் கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகக் காரணம் ஆகின்றன.

15. முன்னெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கப் பலர் இருந்தார்கள். இப்போதெல்லாம் தூண்டி விட பலர் விரும்புகிறார்கள்.

16. நமது பிரச்சனைகளை பிறர் உதவியுடன் தீர்த்துக்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர அது கொஞ்சம் கூட குறையாது.

17. தன் மகள், மகன் கேட்கும் எந்தப் பொருளும் வீண் செலவாய்த் தெரிவதில்லை பெற்றோருக்கு.

18. மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்லை. சூழ்நிலையைப் பொருத்து நடந்து கொள்வது.

19. காயப்படுத்துகிற மாதிரி எல்லாருக்குமே பேசத் தெரியும். சிலருக்கு மட்டும் தான் எதைப் பேசக் கூடாதுனு தெரிஞ்சிருக்கு.

20. வாழ்க்கையில நல்லது கெட்டதை புத்தகத்தை விட தெளிவா புரிய வைக்கறது நாம் பழகும் சக மனிதர்கள் தான். எனவே 'ஆகச் சிறந்த புத்தகம் மனிதன்'

21. எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

22. மகிழ்ச்சி  நம்மைத் தேடி வருவதில்லை!  நாம் தான் அதை தேடிச் செல்ல வேண்டும்!

23. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை.  அவர்கள் செய்வதை வித்தியாசமாய் செய்கிறார்கள்.

24. ஓரு சிலர் மனசு கஷ்டமா இருந்தா யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள், இதைப் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது.

25. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தி முடிவு செய்யுங்கள்.

26. சென்றதை சிந்திப்பவனை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.

27. எல்லாவற்றிலும் திறந்த புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்து விடுங்கள். இவ்வளவு தானா இவர் என்று இல்லாமல் கொஞ்சம் புதிர் சுவாரஸ்யமாக இருக்க உதவும்.

28. சிலர் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக பேசுவார்கள். மற்றவர்களிடம் சாதாரணமாகப் பேச யார் பழக்குவது.

29. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள். எல்லோரையும் திருப்திப் படுத்தும் எண்ணம் வேண்டாத விஷயம். செய்ய முடியாதவற்றையும், செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

30. மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.

31. எதையும் எதிர் பார்த்து செல்லாதீர்கள். சூழ்நிலை எவ்வாறு இருப்பினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

32. உரிமையோடு உரையாடுவதாக எண்ணி உண்மையான உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடாதீர்கள்.

33. இன்னொருத்தரோட இக்கட்டனா சூழ்நிலைய தனக்கு சாதகமா மாத்தி மத்தவங்களை கஷ்டப் படுத்துவது தவறு.

34. தகுதியும் வயதும் இருந்தும், வேலைக்கு முயற்ச்சி செய்யாதவர்கள் வாழ்வதே வீண்.

35. நம்மிடம் வசதி இருக்கும் போது உதவிகள் கேட்க ஆயிரம் உறவுகள் வந்து விடும். நம்மிடம் வசதி இல்லை என்றால் நமக்கு ஆறுதல் சொல்லக் கூட உறவினர்கள் வருவதில்லை.

36. எமோஷனலா சிந்திக்கும் போது நியாமான விஷயங்களைக் கூட நமது மனது ஏற்றுக் கொள்ளத் தடுக்கிறது.

37. கடைசி வரை கிடைக்காத விஷயஙுகளுக்கு, முதலில் இருந்தே போராட வைக்கிறது வாழ்க்கை.

38. பெரிய பிரச்சனைகள் எல்லாம் அதுவாக சரியாகி நகரும் வாழ்க்கையில் சிறு பிரச்சனை எல்லாம் நினைத்துப் பார்க்காத கஷ்டத்தை தருவது தான் வாழ்க்கையின் இயல்பு.

39. தேவை என்றால் சந்தர்ப்பத்தை உருவாக்கி பேசி விடுவார்கள். தேவை இல்லை என்றால் பிஸி என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுவார்கள்.

40. மன குழப்பமில்லாத தருணங்களில்தான் பிறருக்கு உதவிகள் கூட செய்ய முடியும்.

41. உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் மீது வரும் சிலரின் அக்கறை உங்களை கஷ்டப் படுத்தாது உங்கள் மீதுள்ள பொறாமையால் அக்கறை உள்ளது போல் நடிப்பவர் காட்டும் அக்கறை உங்களைக் கஷ்டப் படுத்தும்.

42. தோல்வியை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் நினைக்க வேண்டிய ஒரு விஷயம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று.

43. யாராலும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன் வைக்க முடியும்.

44. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள்.

45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.�
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.19

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!


திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி!

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.

அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ;

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுருக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுருக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டதோடு, அதை உட்கொள்ளவும் செய்தார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.

அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை படப் பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் சொல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள்.  பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீரும்

ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார்.



நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து *செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.*
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.19

அன்பருக்காக ஒரு பதிவு!

அன்பருக்காக ஒரு பதிவு!

என்னுடைய பழைய பதிவு ஒன்றைப் படித்து விட்டு, இது மாதிரி
அடிக்கடி எழுதுங்கள், தவறாமல் வந்து தடயம் பதித்து விட்டுப்
போவோம் என்று எழுதியிருந்தார் ஒரு அன்பர்!!!!

அவருக்காக இந்தப் பதிவு!
-------------------------------------------------------------------------------

நகைச்சுவைப் பதிவு! ஆராயாதீர்கள்; அனுபவித்து மகிழுங்கள்!

------------------------------------------------------------------------------------

தன் பணக்காரக் கணவனிடம், அவனது அன்பு மனைவி சொன்னாள்

“அன்பே! எனக்கு நாளை 28வது பிறந்த நாள்!”

“ஓ...28 தான் ஆகிறதா? பார்த்தால் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிற மாதிரித் தெரிகிறது!”

மனைவி, செல்லமாக அடிப்பதற்குக் கையை ஓங்கினாள்: அவன் தடுத்து விட்டுச் சொன்னான்

“உன் பிறந்த நாளும் அதுவுமாக என்னை மருவத்து மனைக்கு அனுப்பி விடுவாய் போலிருக்கிறதே! சரி, சொல்! உனக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்?

மனைவி புன்னகைத்து விட்டுச் சொன்னாள்:

“நான்கே நொடிகளில் ஜீரோவிலிருந்து நூறுக்கு எகிறக்கூடிய (நூறைத் தொடக்கூடிய - From 0 to 100) சாதனம் ஒன்று இருக்கிறது. அதை வாங்கிக் கொடுங்கள்; அது என்ன வென்று நான் சொல்ல மாட்டேன்! நீங்களே கண்டு பிடித்து வாங்கிக் கொண்டு வாருங்கள்!”

அதன்படியே கணவன் செய்தான்!

மனைவி நினைத்தையும், கணவன் வாங்கிக் கொண்டு வந்ததையும் கீழே அறியத் தந்திருக்கிறேன்:-))))

முதலில் மனைவி நினைத்தது:விரும்பியது!


ரேஸ் கார்
---------------------------------------------------------------------------------
கணவன் வாங்கிக் கொண்டு வந்தது என்ன?
சற்று யோசித்துப் பார்த்துவிட்டுக் ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

--------------------------------------------------------------------------------------
இப்போது கணவன் மருத்துவமனை ஐ.சி.யூவில்; ஆனால் கவலைப் படும்படியாக ஒன்றும் இல்லை!
He is in a stable condition!:-)))))))
------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.19

வாத்தியார் கேட்ட லிப்ட்!


வாத்தியார் கேட்ட லிப்ட்!

கவிதைப் போட்டி ஒன்றின் தலைப்பைப் பார்த்த உடனேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது.  இதைத் தலைப்பாகக் கொடுத்திருக்காங்களே - நாம்  சுளுவாக  எழுதிவிடலாம் என்று நினைத்தேன்.

எழுதினதோடு சும்மா இருந்திருக்கக்கூடாதா? என் போதாத நேரம் அதை வகுப்பில் வைத்து கொஞ்சம் கரெக்ட் பண்ணிவிடலாம் என்று வகுப்பறைக்கு எடுத்துக்கொண்டு போனதுதான் தப்பாகப் போய்விட்டது சாமிகளா !

தலைமை ஆசிரியர் கூப்பிட்டார்ன்னு ஒரு எட்டுப் போய்விட்டுத் திரும்பறதுக்குள்ள - ஒரு வாலில்லாத பயல் அந்தக் காகிதத்தில ஒரு அடிக்குறிப்பை எழுதி வைத்துவிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் எழுதியிருந்தான்!

படிப்பைத் தவிர பசங்களுக்கு மத்ததெல்லாம் நல்லா வருது சாமி - நல்லாவே வருது!

இரண்டையும் கீழே கொடுத்திருக்கேன் - நீங்களே பாருங்க!.
----------------------------
கவிதைத் தலைப்பு: கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

மனைவியோடு வெளியில் போனால் மட்டுமே
மனமுவந்து வண்டியை எடுப்பது வழக்கம்
வாகனம் இன்றி வாசலில் நிற்கிறேன்
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

கட்டியிருக்கும் வெள்ளை வேஷ்டி, சட்டை
கணப் பொழுதில் கசங்கிவிடும் - நனைந்துவிடும்
ஆகவே பேருந்தில் அடியேன் செல்வதில்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

ஆட்டோக் காரரிடம் பேரம் இன்றி
அதிரடியாய்ச் சென்று திரும்ப
அடியவன் எனக்குப் பழக்கம் இல்லை
கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?

இந்தியப் பொருளாதாரத்தை
இயன்றவரை மேம்படுத்த
அடியேன் பெட்ரோல் போடுவதில்லை
ஆகவே கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?
-------------------------
(நான் இல்லாத நேரத்தில் வகுப்புப் பையன் ஒருவன்
எழுதி வைத்த அடிக்குறிப்பு கீழே உள்ளது)

இரண்டு பங்க்குகள் என்தந்தைக்(கு) உண்டு
இலவசப் பெட்ரோல் உங்களுக்(கு) உண்டு
அறுவையின்றி, சிகிச்சையின்றி, வகுப்பைக் கடக்க
அடியேன் எனக்குக் கிடைக்குமா லி•ப்ட்?

எப்படி இருக்கு - என்னைவிட பயல் நல்லா எழுதியிருக்கானில்லையா?
----------------------------
அப்புறம் யோசித்தேன் - என் வகுப்பில நாகபட்டினத்தில இருந்து ஒரு தம்பி வந்து படிக்குது. நல்லா படிக்கும் - அதனால அந்தத் தம்பியை மொத பெஞ்ச்சில உட்கார வச்சிருக்கேன்.

இந்த அடிக்குறிப்பை அந்தப் பையன் எழுதியிருந்தா எப்படியிருக்கும்னு கற்பனை செய்து பார்த்தேன்

அவன் எழுதியிருந்தா இப்படித்தான் எழுதியிருப்பான்

கடவுள்கொடுத்த கால்கள் உண்டே கடப்பதற்கு,
நடப்பதற்கு மனம்தான் தேவை! - அடடா
எங்களைப்போல பள்ளிக்கு ஓடிவரவா சொல்கிறோம்?
எதற்குக் கேட்கிறீர்கள் எல்லோரிடமும் லிப்ட்?
-------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.19

முன்னாடியா அல்லது பின்னாடியா?


முன்னாடியா அல்லது பின்னாடியா?

"நெக்ஸ்ட்" என்று டாக்டர் குரல் கொடுத்தவுடன் கதவைத்திறந்து கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் டாக்டருக்கே பரிதாபமாக இருந்தது.

வந்தவருக்கு வயது நாற்பது இருக்கும். இரட்டை நாடி உடம்பு. நடக்க முடியாமல் நடந்து வந்தார். முகம் மட்டும் அப்பாவித்தனமாக இருந்தது. தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பிறகு எதிரில் இருந்த இருக்கையில் சிரமப்பட்டு அமர்ந்தார்.

"சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

"உடம்பு கனத்து விட்டது சார். அதுதான் பிரச்சினை. எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. சாப்பாட்டைக் குறைக்கமுடியவில்லை. குறைத்தால் பசி பிராணன் போகிறது.இப்போது நூறு கிலோ வெயிட்டாகி விட்டது. குறைப்பதற்கு உதவுங்கள்" என்றார்.

"முப்பது கிலோ அதிகமாக இருக்கிறீர்கள். சடனாகக் குறைக்கக் கூடாது. படிப்படியாகக் குறைத்து விடுவோம். நீங்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் ஒரு நாற்பது நிமிடங்களாவது வாக்கிங் போகவேண்டும்."

"சரி சார்!"

"உங்கள் உணவுப் பழக்கத்தைப் பற்றி சொல்லுங்கள்" என்றார் டாக்டர்.

வந்தவர் பட்டியலிட ஆரம்பித்தார்." காலை ஆறு மணிக்கு ஒரு டம்ளர் காப்பி,. எட்டு மணிக்கு நான்கு இட்லி, நான்கு தோசை. பதினோரு மணிக்கு ஒரு கப் சூப், ஒரு பிளேட் காளிப்ள்வர். ஒரு மணிக்கு •புல் மீள்ஸ் வித் சிக்கன் 65, மாலை 4 மணிக்கு மூன்று பஜ்ஜி அல்லது 3 உருளைக்
கிழங்கு போண்டா, இரவு எட்டு மணிக்கு ஆறு சப்பாத்தி, ஒரு கப் ஐஸ்க்ரீம், படுக்கப்போகும் முன்பு இரவு 10 மணிக்கு ஒரு டம்ளர் கற்கண்டு பால்"

டாக்டர் உணவுக்கட்டுப்பாடு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். வந்தவரின் எடைக்கு அவருடைய அந்த மோசமான உணவுப் பழக்கம்தான் காரணம் என்று தெரிந்து கொண்டவர், அதை மாற்ற நினைத்து மெல்லிய குரலில் சொன்னார்.

"முதலில் பதினைந்து நாட்களுக்குப் பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள். இரண்டு டம்ளர் கோதுமைக் கஞ்சி , ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுங்கள்!"

வந்தவர் அப்பாவித்தனமாகக் கேட்டார், "அது இரண்டையும் எப்போது சாப்பிடவேண்டும் டாக்டர் - சாப்பிடுவதற்கு முன்னாடியா அல்லது பின்னாடியா?"
-------------------------------------------------------------
2
வழக்குரைஞருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

உன் பக்கம் உண்மை இருந்தால்
அந்த உண்மையை நீதிமன்றத்தில் அடித்துப்பேசு!

உன் பக்கம் சட்டம் இருந்தால்
நீதிமன்றத்தில் அந்த சட்டத்தை எடுத்துச் சொல்லி அடித்துப்பேசு!

அவை இரண்டுமே உனக்கு சாதகமாக இல்லையென்றால்
நீதிமன்றத்தின் மேஜையை அடித்துப்பேசு!

- மின்னஞ்சலில் வந்தது!
---------------------------
What a lawyer should know?

If you have facts on your side, hammer the facts in Judge's mind;

If you have law on your side, hammer the law in Judge's mind;

If you have neither, hammer the table!

===========================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.19

மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!


மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!

காட்சி 1

நகரப் பேருந்து ஒன்றில் பயணித்துக் கோண்டிருந்தேன்

உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.

பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!"

அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும், அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச் சொன்னார்.

"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"

அவர்கள் சளைத்தவர்களா?

அதில் ஒருவன் சொன்னான்,  "ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"

"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?" இது நடத்துனர்.

பேருந்தில் கொல்லென்று சிரிப்பு

அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2

ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில் பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம் ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டு வைத்திருக்கிறார்.

தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு நான் எங்கே போவேன்?

என் வகுப்புக் கண்மணி ஒருவன்தான் "சார் கவலைப் படாதீர்கள். உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்துதான் தினம் ஒன்றைப் படித்து அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவது என் வழக்கம்.

இன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டேன்.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3

தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தேன்
.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டது!

எவனோ ஒரு கண்மணி நான் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டானய்யா,

எழுதி விட்டான்!

நீங்களே பாருங்கள்:

"படியில் பயணம்
நொடியில் மரணம் :

"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"

அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டுப் படியில நீ பாட்டுக்குப்போடா - எப்படிடா மரணம் வரும் -

வந்தாலும் - பிடிச்சிருக்கிற பிடியைப் பாத்திட்டு அது ஓடிப்போயிரும்டான்னு எழுதியிருக்கானய்யா எழுதியிருக்கான்

இந்த மாதிரி எது செஞ்சாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வச்சிருக்கிறவங்களையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படி சாமி
பாடம் நடத்தறது - நீங்களே சொல்லுங்கள்!
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.19

எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?


எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?

செருப்பு என்ன சாதாரண சமாச்சாராமா - நம் கால்களின் பாதுகாவலன் அல்லவா - இடம் பொருள்

ஏவல் என்று பார்க்காமல் அதைக் கழற்றலாமா ?

கழற்றிவிடக்கூடாதுதான். ஆனால் கழற்றிவிட்டவனிடம் கேட்டாலல்லவா - உண்மைக் காரணம் தெரியும்!

வாருங்கள் என்னவென்று பார்ப்போம்

அடர்ந்த காடுகள் - மலைகள் சூழ்ந்த ரம்மியமான கிராமம் அது. அங்கே இரண்டு நண்பர்கள்.

விடுமுறை நாட்களில் இருவரும் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குப் போவார்கள். காட்டில் முயல், ஆடு என்று கிடைப்பதைப் பிடித்துக் கொண்டு திரும்புவார்கள்.

காட்டின் முன் பகுதில் முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும்தான் செல்வார்கள். அதற்குப் பிறகு மிகவும் அடர்ந்த காடு. கொடிய வனவிலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டுவிடும்.அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.பாதுகாப்பிற்கு ஒரு ஏர் கன் மட்டும்தான்.

சத்தம் மட்டும்தான் அது எழுப்பும்.

அப்படித்தான் அன்றும் சென்றார்கள். நான்கு முயல்கள் கிடைத்தன. வலை, சாக்கு சகிதமாகத வேட்டையை முடித்துவீட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்

விதி பாருங்கள். அடர்ந்த காட்டுப்பகுதியில் திரியவேண்டிய புலி ஒன்று வழி தவறி காட்டின் முன் பகுதிக்கு வந்து விட்டது.

புலி இவர்கள் இருவரையும் பார்த்து விட்டது: இவர்களும் புலியைப் பார்த்துவிட்டார்கள்!

அப்புறம்?

அப்புறம் என்ன- துண்டைக்காணேம் துணியைக் காணேமென்று வலை, பிடித்த முயல்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தார்கள்

புலி துரத்தும் போது ஓடித்தப்பிப்பதற்கு ஒரு டெக்னிக் இருக்கிறது. நேர் கோட்டில் ஓடக்கூடாது.

ஜிக் ஜாக்காக வளைந்து, புதர்களில் மறைந்து ஆட்டம் காட்டித்தான் ஓட வேண்டும்.

அவர்களும் அப்படித்தான் ஓடினார்கள். புலியும் மோப்பம் பிடித்துத் துரத்திக்கொண்டு வந்தது.

அப்பொது ஓடிக்கொண்டிருந்த இருவரில் ஒருவன், தன் செரூப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு ஓட ஆரம்பித்தான்

கூட ஓடிக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி ! என்னடா மடையனாக இருக்கிறானே - காட்டில் முற்கள் நிறையக்கிடக்குமே - காலில் குத்தினல் என்னாவது?

ஓடிக்கொண்டே வருத்தத்துடன் அவனிடம் கேட்டான்

"ஏண்டா, செருப்பில்லாமல் ஓடினால் புலியைவிட வேகமாக ஓட முடியுமா?"

அவன் கூலாகச் சொன்னாண்,"அதெப்படி முடியம்?"

"பின் ஏண்டா நாயே, செருப்பைக் காழற்றி எறிந்தாய்?"

அவன் முன்பைவிடக்கூலாக இப்படி சொன்னான்,

"புலியைவிட வேகமாக ஓட முடியது - ஆனால் உன்னைவிட வேகமாக ஓடமுடியுமல்லவா?"
----------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.19

வாத்தியாருக்கு வால் உண்டா?


வாத்தியாருக்கு வால் உண்டா?

அதை ஏஞ்சாமிகளா கேக்கிறீக! இன்னிக்குக் காலைல ஹெல் மாஸ்டரு - அதுதான் தலைமை வாத்தியார் (நம்ம பசங்க வச்ச பேரு சாமி - நம்மள மாட்டவிட்ராதிங்க ராசாக்களா) என்னையப் புடிச்சு காச்சு காச்சுன்னு காச்சிப்புட்டாரா - அதே வேகத்தோட வந்து பசங்களுக்கெல்லாம் பாடம் நடத்த ஆரம்பிச்சேன்.

எல்லாப் பயபிள்ளைகளும் என்னைக் கெடுத்ததுமில்லாம நாங்களும் தேன்கூடு போட்டிக்குப் போயி எழுதிட்டு வர்றோம் அய்யான்னுட்டுப் பொட்டாய்ங்ய. அதுக்குத்தான் காலையில எனக்கு ஹெல் மாஸ்ட்டருகிட்ட அந்த டோசு!

வாரத்தில ஒரு நாளாவது பாடம் நடத்த வேண்டாமா சாமி?

சரின்னு புத்தகத்தைத் தொறந்து வச்சு இன்னைக்கு என்ன பாடம்டா நடத்தலாம்னு யோசிச்சேன். போனவாரம் எந்த இடத்தில முடிச்சோம்னு எனக்கே ஞாபகம் இல்லை

கண்ணில பட்டது ANIMALS ங்கிற பாடம். சரி இந்த வானரங்களுக்கு அந்த வானரங்களை பத்தி நடத்தினாத் தான் சரியா வரும்னு அதையே நடத்த ஆரம்பிச்சேன். 

என் போதாத நேரம் சும்மா பாடத்தை நடத்தியிருக்கக் கூடாதா? பொது அறிவுல ஒரு கேள்வியைக் கேட்டுப் பிட்டே பாடத்தை ஆரம்பிப்போம்டா சாமின்னு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுவும் தெரியாத்தனமா நம்ம பார்த்திபன் சாயல்ல இருக்கிற ஒரு பையனாப் பார்த்துக் கேட்டுப்பிட்டேன்

அவன் பண்ணின கூத்தைக்கேளுங்க. வகுப்பே சிரிப்பா சிரிச்சுப் போச்சு. சிரிப்பு அடங்கெறதுக்கு அஞ்சு நிமிஷம் ஆச்சுன்னா பார்த்துக்குங்களேன்

அப்படி என்ன சிரிப்புங்கிறீங்களா"

நீங்களே பாருங்கள்:

"டேய் எங்க கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

அவன் கணீர்ன்னு குரல் கொடுத்துச் சொன்னான்

"சார், திரும்பி நில்லுங்க பார்த்திட்டுச் சொல்றேன்!"

எப்பிடியிருக்குப் பாருங்க - எல்லாம் கலி காலம்!

"Good Jokeடா சாமி" ந்னு சொல்லி அவன் உக்காரச் சொல்லிட்டேன்

வேறென்ன செய்யமுடியும்?

அடிக்கவா முடியும்?

பொம்பிளப்பிள்ளங்களை அடிச்சா - ஸ்கூல் முடிஞ்சவுடனே சாயங்காலம் 'மகளிர் காவல்' நிலையத்தில போய் உக்கார்ர மாதிரி ஆயிடும். பசங்கள அடிச்சா சாயங்காலம் ஏதாவது கட்சி ஆபீஸ்ல போயி உக்கார்ர மாதிரி ஆயிடும். எல்லாப் பயல்களுக்கும் ஏதாவது கட்சித் தொடர்பு இருக்கய்யா, கட்சித் தொடர்பு இருக்கு!

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சுப் பார்த்தேன்.

நம்ம வகுப்பில சார்ஜாவிலேயிருந்து இங்கவந்து தங்கிப் படிக்குதே ஒரு தம்பி - அந்தத்தம்பிகிட்ட இதே கேள்வியைக் கேட்டிருந்தா என்ன பதில் வந்திருக்கும்?

"டேய் கண்ணா, கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

"சார் நீங்க எந்தக் குரங்கைக் கேக்கிறீங்க? உங்களையும், ஹெட் மாஸ்டரையும் சேர்த்து நம்ம ஸ்கூல்ல மொத்தம் 25 குரங்குகள் இருக்கு - நீங்க எந்தக்குரங்குன்னு சொன்னாத்தான் நான் கரெக்டா பதில் சொல்லமுடியும்!"

"எங்களுக்குள்ள அப்படியேன்னடா ராசா வித்தியாசம்?"

" இல்ல சார், சில பேருக்கு வெட்டிட்டோம். இன்னும் சில பேருக்கு வெட்டாம இருக்கு!"

அந்தத் தம்பி பெரிய இடத்துப் பிள்ளை - இப்படித்தான் சொல்லியிருக்கும். நல்ல வேளை, அந்தத் தம்பி இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவில்லைடா சாமி!

சரி, சரி சொல்லவந்த மேட்டெருக்கு வாரேன்

வாத்தியாருக்கு வால் உண்டா?

வாத்தியாருக்கு மட்டுமில்ல சாமி, மனுசனாப் பொறந்த எல்லோருக்குமே வால் உண்டு - ஆனா அந்த வால் உடம்பில கெடையாது - மனசுல இருக்கு!

சமயம் வரும்போது எல்லாரும் அதைக் காட்டிருவாங்க!

நாங்க அதான் வாத்தியாருங்க எப்ப காட்டுவோம்னா - மனசுக்குள்ளேயே வச்சிரிந்து மார்க் போடும்போது காட்டிருவோம்!

என்ன நான் சொல்றது சரிதானே?
--------------------------------------------------------------------------
அன்புடன்

வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

17.7.19

எதற்காகச் சேர்த்தார்கள்?


எதற்காகச் சேர்த்தார்கள்?

காரில் சென்றுகொண்டிருந்த சங்கர்ராமன் வண்டியின் முன் சக்கரம் ஒரு பக்கமாக இழுப்பதை உணர்ந்து, தன்னுடைய காரைத் தார் ரோட்டைவிட்டு இறக்கி ஒட்டியிருந்த மண் பகுதியில் நிறுத்தினான்.

இறங்கிவந்து பார்த்தால் - நினைத்தது சரிதான் இடது பக்கத்து டயர் பங்ச்சராகியிருந்தது.

அது புறநகர்ப் பகுதி. நகர எல்லை நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

காரை நிறுத்திய இடம் ஒரு மன நோய் மருத்துவ மனையின் ஸைட் கேட் பகுதி.. எதிரில் பெரிய தொழிற்சாலையின் நீண்ட வளாகம்.

சங்கர்ராமன் யோசித்தான்.வேறு வழியில்லை நாமே ஸ்டெப்பினியை மாற்றி விடுவோம் என்று முடிவு செய்தான். டிக்கியில் இருந்து ஜாக்கி, வீல் ஸ்பானர், ஸ்பேர் டயர் என்று எல்லாவற்றையும் இறக்கிக்கீழே கொண்டுவந்தான்.

பங்ச்சரான டயரைக் கழற்ற ஆரம்பித்தான்.

முதலில் சக்கரத்தில் இருந்த நான்கு நட்டுக்களையும் கழற்றிக்கீழே வைத்தான். பிறகு வலுவாக அசைத்துச் சக்கரத்தை வெளியே எடுக்க முயன்றான்.

அப்போதுதான் அது நடந்தது. மருத்துவனனை வளாகத்திலிருந்து குதித்த மன நோயாளி ஒருவன், ஓடி வந்து கீழேயிருந்த நான்கு நட்டுக்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டு ஓட அரம்பித்தான்.. அப்படி ஓடியவன் சுவர் ஏறி மருத்துவ மனையின் உட்புறம் குதித்து மறைந்து விட்டான்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து விட்டது.

சங்கர்ராமன் நொந்துபோய் விட்டான்.

"நேரம்டா சாமி" என்று சோர்ந்துபோய் அந்த மருத்துவ மனையின் ஸைட் கேட்டையும், ரோட்டையும் இணைக்கும் சிறிய பாலத்தின் கைப்பிடிச் சுவற்றின் மேல் உட்கார்ந்தான்.

ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் மருத்துவ மனையின் உட்புறம் இருந்து, கேட்டின் கம்பிகளுக்கிடையே கையை நீட்டி இவனை அழைத்தான்.

சங்கர்ராமனும் அருகே சென்று "என்ன?" என்று கேட்டான்.

" ஸ்டெப்பினியை மாற்றும் வேலையை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டாய்?" என்று அவன் கேட்க, சங்கர்ராமன் இப்படிப் பதில் சொன்னான்.

"நட்டுக்கள் இல்லாமல் எப்படி மாற்றுவது?"

"ஏன் முடியாது? மற்ற மூன்று சக்கரங்களிலிருந்தும் தலா ஒரு நட்டைக் கழற்றி இதை மாற்று. டவுனுக்குப் போனவுடன் புதிதாக நான்கு நட்டுக்கள் வாங்கி எல்லாச்சக்கரங்களையும் சரி செய்து விடு."

வியப்பின் எல்லைக்கே போய்விட்டான் சங்கர்ராமன். ஆமாம், இப்படியும் செய்யலாமே! இது ஏன் நமக்குத் தோன்றாமல் போய் விட்டது என்று நினைத்தான்.

உடனே அவனைப் பார்த்துக்கேட்டான்," இவ்வளவு தெளிவாக இருக்கிறாயே - இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?"

அதற்கு அவன் சொன்னான்.

"மனநோய் சிகிச்சைக்காகத்தன் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள் - அறிவு இல்லை என்பதற்காக அல்ல!"
-----------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!