மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.10.14

Short story: சிறுகதை: காசின் அருமை!


Short story: சிறுகதை: காசின் அருமை!

காசின் அருமை

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 9
                 
எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஒன்பதாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி எனது
நடையில் எழுதியுள்ளேன். அத்துடன் இந்தச் சிறுகதை சென்ற மாதம்
மாத இதழ் ஒன்றில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றதாகும்.

உங்களுக்கு அறியத் தருவதற்காக அதை இன்று வலையில் ஏற்றி உள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
காசின் அருமை

தன் மகன் கருப்பஞ்செட்டி காசருமை தெரியாமல் வளர்வதில் சாத்தப்ப செட்டியாருக்கு மிகுந்த வருத்தம். சிக்கனமும், சேமிப்பும் நகரத்தார்களின்
இரண்டு கண்கள் என்று அவர் அடிக்கடி சொல்வார். சிறுகக்கட்டிப் பெருக வாழவேண்டும் என்பார்.

அனால் அவர் மகன் கருப்பஞ்செட்டியிடம் அதெல்லாம் எடுபடவில்லை! அவன் நின்று பேசமாட்டான். காது கொடுத்து எதையும் கேட்க மாட்டான்.
அவன் தாயார் சிகப்பி ஆச்சி, அவனைச் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். சாத்தப்ப செட்டியார் தம்பதிகளுக்குத் திருமணமாகி
10 ஆண்டுகள் கழித்து, அவன் பிறந்ததால் ஆச்சிக்கு அப்படியொரு
பாசம். கண்ணை மறைக்கும் பாசம்.

காலம் 1941ம் ஆண்டு. ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்து வெளிவந்த சபாபதி என்னும் திரைப்படம் சக்கை போடு போட்டுக்
கொண்டிருந்த காலம். அந்தப் படத்தில் வரும் கதாநாயகனைப்
போலவேதான் நம் கருப்பஞ்செட்டியும் இருந்தான். குணம், அறிவு
என்று இரண்டிலுமே அச்சு அசலாக அப்படியேதான் இருந்தான்.
தோற்றத்தில் மட்டும் வாட்டசாட்டமாக இருப்பான். வயது 16. படிப்பு
எட்டாம் வகுப்போடு சரி. அதற்குப் பிறகு படிப்பு ஏறவில்லை.

அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்ததால்,
நகரத்தார்கள் புதிதாக எதையும் செய்யாமால் இருப்பதை வைத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சாத்தப்ப செட்டியாரின் வீடு நகரச் சிவன் கோயிலுக்கு அருகில் கீழக்கொரட்டியார் தெருவில் இருந்தது. பங்கு போட்டுக்கொள்ள யாருமில்லை. முழு  வீடும் அவருடையதுதான். கீழ ஊருணிக்
கரையில் ஒரு சின்ன தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின்
முன் பகுதியில் இருந்த தகரக் கொட்டகையில் ஒடு வியாபாரம்
செய்து கொண்டிருந்தார். சீமை ஓடுகள். தேக்கு மரச் சட்டங்கள்
மற்றும் கட்டுமானத்திற்கு வேண்டிய சாமான்கள்.உதவிக்கு நான்கு வேலையாட்களை வைத்திருந்தார்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை
அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த
வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌,
இப்பொழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.

இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும்
வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச்
செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ!

ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

ஆனால் சாத்தப்பண்ணனின் ஒரே கவலை அவருடைய மகன்தான்.
கடைக்கு வந்து தொழிலைக் கற்றுக் கொள்ளப்பா என்றபோது முடியாது
என்று மறுத்துவிட்டான். நீ சும்மா திட்டிக் கொண்டே இருப்பாய்,
உங்களிடம்  யார் வேலை பார்ப்பது என்று சொல்லிவிட்டான். வேறு இடத்திலும் வேலைக்குச்  செல்ல மறுத்துவிட்டான். இரண்டு வருடம் போகட்டும் என்று அவரும் விட்டு விட்டார்.

அவனுக்கு நிறைய நண்பர்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம்
கிளம்பிப் போய்விடுவான். மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான். ஒரு புத்தம் புது ராலி  சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். சைக்கிள்கள் எல்லாம் வெள்ளைக்காரன் தேசத்தில் இருந்துதான்

அப்போது வரும். டைனமோ, காற்று அடிக்கும் பம்ப் என்று எல்லா
உபரி சாதனங்களையும் கொண்ட அற்புதமான சைக்கிள் அது.
காலையில் கிளம்பு முன் சாத்தப்ப அண்ணனிடம் வந்து நிற்பான்.
முகப்புப் பெட்டகசாலையில் இருந்து முதல் நாள் குறிப்புக்களைச்
சிட்டையில்  ஏற்றிக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து பார்த்தவுடன்
கையை நீட்டுவான். அன்றையக் கைச் செலவிற்கு, அதாவது பாக்கெட்
மணி கேட்டு நிற்பான்.

அவரும் எழுதாத ஒப்பந்தப்படி ஒரு ஒத்த ரூபாய்க் காசை எடுத்துக்
கொடுத்து அனுப்பி விடுவார்.

தங்கம் பவுன் 38 ரூபாய் விற்ற காலம் அது. ஒரு ரூபாய் என்பது
அந்தக் காலத்தில் அதிக மதிப்புடையது. ரூபாய்க்குப் பதினாறு
அணாக்கள். ஒரு அணாவிற்கு காலைப் பலகாரம் சாப்பிடக்கூடிய
காலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாதம் 15 ரூபாய்
சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் கிடைக்கும்  காலம் அது.

அவன் இப்படிக் காசருமை தெரியாமல் தினமும் ஒரு ரூபாயை வீணடிக்கின்றானே என்று வருத்தப்படுவார்.

ஒருநாள் அதற்கு முடிவு கட்ட விரும்பியவர், அவனிடம் பேச்சுக்
கொடுத்தார்:

“நான் ஒரு சின்ன வேலை சொல்கிறேன். செய்கிறாயா?”

அவன் பதில் சொன்னான். “முடிந்த வேலை என்றால் செய்கிறேன்”

ஒரு ஒத்த ரூபாய்க் காசை அவன் கையில் கொடுத்தவர், சொன்னார்.
” இந்தக் காசை நம் வீட்டுக் கிணற்றில் போட்டு விட்டு வா”

அவன் சற்றுக் கூட யோசிக்கவில்லை, தயங்கவில்லை. தங்கள்
வீட்டு முகப்பில் இருக்கும் கிணற்றில் போட்டு விட்டு உடனே
திரும்பி வந்தான்.

வந்து நின்றவனிடம் தொடர்ந்து சொன்னார் அவர்: “நாளை முதல்
உன் கைச் செலவிற்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன். ஆனால்
இன்று நீ வெளியே சென்று சம்பாத்தித்து ஒரு ஒற்றை ரூபாயைக்
கொண்டு வா பார்க்கலாம்”

“அவ்வளவுதானே, இன்று மாலைக்குள் ஒரு ரூபாய் சம்பாத்தியத்துடன் வருகிறேன்” என்று சொன்னவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று
விட்டான்

                          *********************************

சொல்வது எளிது. ஆனால் செயல் படுத்துவது என்பது எவ்வளவு
கஷ்டம் என்பது கருப்பஞ் செட்டிக்கு வெளியே சென்றவுடன்தான்
புத்தியில் உறைத்தது.

சில கூலி வேலைகளைச் செய்து அப்பணத்தைத் தேற்றிவிடலாம்
என்று முடிவு செய்தவன், அடுத்த தெருவில் இருக்கும் ஒரு செல்வந்தர் வீட்டிற்குச் சென்று, அவரிடம் ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

வயதுதான் 16 ஆனதே தவிர ஆள் தோற்றத்தில் வாட்ட சாட்டமாக
இருபது வயது இளைஞன் போல இருப்பான்.

இவனை ஏற இறங்கப் பார்த்தவர், கார் ஒட்டத் தெரியுமா? என்று
கேட்டார். அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன.

“தெரியாது” என்று சொன்னவன். கார்களைக் கழுவி சுத்தம் செய்து
தருகிறேன். கூலியாக ஏதாவது கொடுங்கள் என்றான். பரிதாபப்பட்ட
அவர் அந்த வேலையைச் செய்யும்படி பணித்து, அதற்கு வேண்டிய
துணி, வாளி, ஆகியவற்றைக் கொடுத்ததோடு, தண்ணீர் பிடிக்கும் இடத்தையும் காட்டினார்.

ஒரு மணி நேரத்தில் அவற்றைச் செய்து முடித்தான். அவரும்
அதற்குச் சன்மானமாக இரண்டு அணாக்களைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு கிளம்பியவன், கல்லுக்கட்டியில் இருந்த
பெரிய மளிகைக் கடைக்குச் சென்று அதே போல ஏதாவது கூலி
வேலை கொடுங்கள் என்றான். இவன் டிப்டாப்பாக இருப்பதைப்
பார்த்துவிட்டு சந்தேகப் பட்ட கடைக்காரர்,” ஏம்ப்பா மூடை
தூக்குவாயா? வெளியே வாகனத்தில் இருக்கும் பருப்பு மூட்டைகளை
உள்ளே கொண்டு வந்து அடுக்க வேண்டும். செய்வாயா?”
என்று கேட்டார்.

அதெல்லாம் செய்வேன் என்று சொன்னவன், அடுத்த ஒரு மணி
நேரத்தில் அந்த வேலையைச் செய்து முடித்தான். கொஞ்சம்
சிரமாமகத்தான் இருந்தது. ஆனால் மனதில் நுழைந்த வீம்பு
காரணமாக அதைச் செய்து முடித்தான். மொத்தம் 20 மூட்டைகள். மூட்டைக்குக் காலணா வீதம் கடைக்காரன் 4 அணாக்களைக்
கொடுத்தான்.

இப்படியாகத் தொடர்ந்து வேலை பார்த்ததில் மாலை 4 மணிக்குள்
15 அணாக்கள் சம்பாதித்துவிட்டான். உடல் களைத்து விட்டது.
ஆனாலும் மன உறுதி காரணமாகத் தாக்குப் பிடித்து நின்றான்.
மதியம் சாப்பாட்டிற்காக செலவழித்த ஒரணா போக மீதி பதினான்
கணாக்கள் பைக்குள் இருந்தன.

இன்னும் இரண்டணாக்கள் வேண்டுமே?

பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே அப்போது வந்திறங்கிய பெரியவரிடம் இருந்த பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களைப்
பார்த்துவிட்டு, அய்யா இவற்றை நான் தலைச்சுமையாகக் கொண்டு
வந்து உங்கள் வீட்டில் இறக்கி வைக்கிறேன்  என்றான். அவரும் பேரம் பேசியவர்

கடையில் சம்மதித்து முத்துப் பட்டணத்தில் உள்ள தன்னுடைய
வீடுவரை அவனைத் தூக்கிவர விட்டவர். கடைசியில் ஒரு அணாவைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். திரும்பவும் பேருந்து நிலையம். மீண்டும் இது போல ஒரு தலைச் சுமை. ஒரணாக் கூலி.

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. ஒரு ரூபாய் சேர்ந்து விட்டது!

வீட்டிற்குத் திரும்பும் வழியில் கொப்புடையம்மன் கோவில் வாசலில்
இருந்த கடையில், சில்லறைகளைக் கொடுத்து விட்டு ஒற்றை ரூபாய்க் காசாக அதை மாற்றி வைத்துக் கொண்டு, பாதி ஓட்டமும் பாதி
நடையுமாக மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வந்தவுடன், வீட்டில் முகப்பில் அமர்ந்திருந்த தன் தந்தையாரிடம்,
கையை நீட்டி காசைக் காட்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவன் தந்தையார், சொன்னார்: ”இந்தக் 
காசைக் கொண்டு போய் நம் வீட்டுக் கிணற்றில் வீசி விட்டு வா!”

அவனுக்குக் கடுப்பாகி விட்டது. அத்துடன் கோபமும் தலைக்கு ஏற,
காட்டுக் கூச்சலாய் கத்த ஆரம்பித்துவிட்டான்:

”என்ன அப்பச்சி? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? எத்தனை இடங்களில் கூலி வேலை செய்து இந்தக் காசை சம்பாதித்தேன் 
தெரியுமா? நான் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியுமா? இதைக் 
கொண்டு போய் கிணற்றில் வீசச் சொல்கிறீர்களே?”

”இன்று காலையில் நான் கொடுத்த காசை மட்டும் சத்தமில்லாமல் 
வீசி விட்டு வந்தாயே? இப்போது எதற்கு இத்தனை சத்தம்?”

அவனுக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. உடம்பு
முழுவதும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.
மெளனமாக
நின்றான்.

அவனுடைய தந்தை மெல்லிய குரலில்  அவனுக்குப் புரியும்படி
சொன்னார்: “யாருக்கும் காசு சும்மா வராது. கஷ்டப்பட்டால்தான் 
வரும். நான் காலையில் உன்னிடம் கொடுத்த பணமும், தினமும் 
உன்னிடம் கொடுக்கும் பணமும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது
தான். வேலையில் நஷ்டம் வராது. ஆனால் தொழிலில், வியாபாரத்தில் நஷ்டமும் வரும் தெரியுமா? பல சமயங்களில் கடனாகக் கொடுத்த சரக்கிற்குப் பணம் வராது. அதை வராத கணக்கில், நஷ்டக் கணக்கில்
தான் எழுத வேண்டியதிருக்கும் தெரியுமா? நான் ஒன்றும் உட்கார்ந்து கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை. ஓடியாடி கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றேன். அதை முதலில் நீ புரிந்து 
கொள்!”

தந்தை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவனைச் சம்மட்டியால்
அடிப்பதைப் போன்று இருந்தது.

எல்லாம் பிடிபட ஆரம்பித்தது.

“நாளை முதல் நானும் உங்களுடன் நம் கடைக்கு வருகிறேன். எனக்கு
ஒரு வேலை கொடுங்கள். என்ன வேலை வேண்டுமென்றாலும்
கொடுங்கள்!”

என்று அவன் சொல்லச் சொல்ல அவனுடைய தந்தை பிரமிப்பிற்கு
ஆளானார். தன்னுடைய ஒரு நாள் சோதனை ஓட்டம் அவனுக்குள்
ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து சந்தோஷத்திற்கும்
ஆளானார்.

அவனுக்குக் காசின் அருமை ஒரே நாளில் தெரிந்ததைக் குறித்து
மிகவும் சந்தோஷத்திற்கு ஆளானார். அனுபவம்தான் பெரிய
வாத்தியார் என்பதையும் அதுதான் எந்த மனிதனையும் மாற்றக்
கூடியது என்பதையும் தன் மகன் மூலம் அவர் உணர்ந்து
கொண்டார்.

                           *****************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. வணக்கம் குரு,

    கதை உங்கள் எழுத்து நடையில் வழக்கம்போல் அருமை. தாங்கள் குனமடைந்துரிபீர்கலென நம்புகிறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  2. காசின் அருமையையும் உழைப்பின் பெருமையையும் ஒருசேர உணர்த்தியது கதை.. அருமை..

    ReplyDelete
  3. Sir,
    Thank you very much for sharing it. I was thinking about my son, how to educate him about of value of money though he is just 5 years. But My father taught me very well. This story is really great. I like to share this with my friends. Can i copy it.

    ReplyDelete
  4. வணக்கம் சார்....

    காசில்லாதவனுக்கு காசின் அருமை
    தெரியும்!

    காசிருப்பவனுக்கு அதுதெரியாது !!
    ஏன் என்றாள் அவன்சம்பாதிக்கவில்லை

    தாத்தன்,பாட்டன்,அப்பன்.......
    இவர்கள் சம்பாதித்து வைத்தால்
    மகனுக்கோ,பேரனுக்கோ ராஜயோகம்
    அரண்மனை போன்ற வீடு !!
    பளபளக்கும் கார் !!
    வெயில்படாத தேகம்
    அழுக்குபடாத நகம்
    அயல்நாட்டு கல்வியும்
    அயல்நாட்டு மதுவின்மயக்கமும்...
    அழகுசுந்தரிகள் அனைப்பும்...
    காமரானிகள் கலப்பும்...
    இதற்கெல்லாம்+++
    கொடுப்பினை வேண்டும் அய்யா !!!

    ReplyDelete
  5. vanakkam sir,

    Nice story thanks for that
    Takecare ur health sir.

    ReplyDelete
  6. எளிமையும், கருத்தும், நிறைந்த கதை. தங்களுடைய எளிமையான நேரான நடை அழகு சேர்க்கிறது.

    சென்ற 26 செப் இரவு முதல் இன்று 7 அக்டோபர் மதியம் வரை 12 நாட்கள் மருத்துவமனை வாசம்.எனக்கு ஒன்றும் இல்லை. மனைவியாருக்கு உடல் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டியது ஆயிற்று. கூடவே இருந்து ஒரளவு குணம் ஆகியவுடன் இன்று வீடு சேர்ந்தோம்.

    வகுப்பறை வந்தால் தங்களுக்கும் உடல் நலக்குறைவு என்று கேள்விப் பட்டு விசனமாக இருந்தது.நீங்கள் எங்க‌ளுக்கு மிக முக்கியம் ஐயா! தங்கள் உடல் நலத்தை எங்களுக்காகப் பேண வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. மிகவும் அருமையான கருத்துள்ள
    ( கதை ) காவியம்.

    ReplyDelete
  8. காசு என சொல்லி உள்ளீர்
    கோடிகள் என இன்றைய

    நடைமுறைக்கு ஏற்ப தந்திருந்தால்
    நயமாக இருந்திருக்கும்...

    இத்தனை கோடிகள்
    அந்த காலத்தில் இருந்திருந்தால்..?

    ReplyDelete
  9. /////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    கதை உங்கள் எழுத்து நடையில் வழக்கம்போல் அருமை. தாங்கள் குணமடைந்து இருப்பீர்களென நம்புகிறேன்.
    நன்றி
    செல்வம்/////

    உங்களுடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி செல்வம்!

    ReplyDelete
  10. ////Blogger துரை செல்வராஜூ said...
    காசின் அருமையையும் உழைப்பின் பெருமையையும் ஒருசேர உணர்த்தியது கதை.. அருமை../////

    உங்களுடைய மேலான விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Karthikraja K said...
    Sir,
    Thank you very much for sharing it. I was thinking about my son, how to educate him about of value of money though he is just 5 years. But My father taught me very well. This story is really great. I like to share this with my friends. Can i copy it./////

    நல்லது. நன்றி. கதையின் URL சுட்டியை ( Send the link of the post) உங்களின் நண்பர்களுக்கு அனுப்பிவையுங்கள்!

    ReplyDelete
  12. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்....
    காசில்லாதவனுக்கு காசின் அருமை
    தெரியும்!
    காசிருப்பவனுக்கு அதுதெரியாது !!
    ஏன் என்றாள் அவன்சம்பாதிக்கவில்லை
    தாத்தன்,பாட்டன்,அப்பன்.......
    இவர்கள் சம்பாதித்து வைத்தால்
    மகனுக்கோ,பேரனுக்கோ ராஜயோகம்
    அரண்மனை போன்ற வீடு !!
    பளபளக்கும் கார் !!
    வெயில்படாத தேகம்
    அழுக்குபடாத நகம்
    அயல்நாட்டு கல்வியும்
    அயல்நாட்டு மதுவின்மயக்கமும்...
    அழகுசுந்தரிகள் அனைப்பும்...
    காமரானிகள் கலப்பும்...
    இதற்கெல்லாம்+++
    கொடுப்பினை வேண்டும் அய்யா !!!/////

    அது எல்லாம் நல்ல கொடுப்பினை ஆகாது சக்திவேல்!

    ReplyDelete
  13. ////Blogger sundari said...
    vanakkam sir,
    Nice story thanks for that
    Takecare ur health sir./////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ////Blogger kmr.krishnan said...
    எளிமையும், கருத்தும், நிறைந்த கதை. தங்களுடைய எளிமையான நேரான நடை அழகு சேர்க்கிறது.
    சென்ற 26 செப் இரவு முதல் இன்று 7 அக்டோபர் மதியம் வரை 12 நாட்கள் மருத்துவமனை வாசம்.எனக்கு ஒன்றும் இல்லை. மனைவியாருக்கு உடல் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டியது ஆயிற்று. கூடவே இருந்து ஒரளவு குணம் ஆகியவுடன் இன்று வீடு சேர்ந்தோம்.
    வகுப்பறை வந்தால் தங்களுக்கும் உடல் நலக்குறைவு என்று கேள்விப் பட்டு விசனமாக இருந்தது.நீங்கள் எங்க‌ளுக்கு மிக முக்கியம் ஐயா! தங்கள் உடல் நலத்தை எங்களுக்காகப் பேண வேண்டுகிறேன்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger Maaya kanna said...
    மிகவும் அருமையான கருத்துள்ள
    ( கதை ) காவியம்./////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  16. ////Blogger வேப்பிலை said...
    காசு என சொல்லி உள்ளீர்
    கோடிகள் என இன்றைய
    நடைமுறைக்கு ஏற்ப தந்திருந்தால்
    நயமாக இருந்திருக்கும்...
    இத்தனை கோடிகள்
    அந்த காலத்தில் இருந்திருந்தால்..?////

    கோடிகள் எல்லாம் அந்தக் காலத்தில் இல்லை. அதனால்தான் அந்தக்காலம் நன்றாக இருந்திருக்கிறது வேப்பிலையாரே!

    ReplyDelete
  17. தன் உடல் நோகச் சம்பாதிக்கும்போதுதான் அப்பாவின் உடல் வலி தெரிகிறது, மகனுக்கு. அருமையான கதை. கதாநாயகன் மட்டுமில்லை படிப்பவர்களும் நிறையக் கற்றுக் கொண்டோம், ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com