மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.3.12

Short Story: மாமியாரும் மருமகளும்



                                         

சிறுகதை

அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில், 20.2.2012 அன்று வெளிவந்த சிறுகதை. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்




-----------------------------------------
Short Story: மாமியாரும் மருமகளும்              

"அப்பச்சி இல்லாத பெண் அடுத்த மருமகளாக வேண்டும்" என்று கோதை ஆச்சி சொல்லியதும், சைக்கிள் கடை சாத்தப்ப அண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

சைக்கிள்கடை என்பது அடையாளப் பெயர். இப்போது சைக்கிள் உதிரி உறுப்புக்கள் விற்பனைக் கடை இல்லை. இழுத்து மூடிவிட்டு, சொந்த ஊருக்கு வந்து விட்டார். அவர் மகன்களின் உத்தரவு. மகராசன்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறார்கள். எதற்கு வியாபாரத்தைக் கட்டிக்கொண்டு கஷ்டப்பட வேண்டும்? எதற்கு கடையைத் திறந்து வைத்துக்கொண்டு காத்துக் கிடக்க வேண்டும்? அதனால் வேளா வேளைக்கு சாப்பாட்டை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் அன்னலெட்சுமி உணவகமும், வேப்ப மரத்துக் காற்றும் நிறைந்த தன் சொந்த ஊருக்கே வந்துவிட்டார்.

ஆச்சி, அதாவது அவருடைய மனைவி பத்து வருட விசாவில் அமெரிக்காவிற்குப் போய்விட்டார்கள். வருடத்திற்கொரு முறை பொங்கல் சமயத்தில் ஊருக்கு வந்து விட்டு போவார்கள். எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள்

கழிப்பறையில் தண்ணீருக்குப் பதில் காகிதம், வாரம் ஒருமுறை சமைக்கப்பெற்று ஓவன்களில் வைக்கப்பெற்ற உணவு. வாரத்தில் ஐந்து நாட்கள், கார் ஓட்ட ஆளில்லாமல், வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் வாழ்க்கை போன்ற இத்யாதிகளால், அண்ணனுக்கு அமெரிக்காவைப் பிடிக்காமல் போயிற்று. சொந்த ஊரே சொர்க்கம் என்பார்.

தினத்தந்தி பேப்பர், இட்லி சாமார், தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய் ஆகியவை இல்லாமல் அண்ணனுக்கு ஒரு நாள் பொழுது கழியாது.

ஆகாத போகாத சீரியல்களையும், வன்முறைகளும், குத்தாட்டங்களும் நிறைந்த இன்றைய திரைப்படங்களையும், ஆடல் பாடல் காட்சிகளையும், தொலைக் காட்சியில் பார்த்துக்கொண்டு அசராமல் நாற்காலியைத் தேய்க்கும் பழக்கம் அவருக்கில்லை.

அதனால் அவராகவே முன்வந்து திருமண சேவையைக் கையில் எடுத்தார். ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. அவரும், அவருடைய சேவையும் பிரபலமாகி நிறைய நகரத்தார்கள் தேடிவரத் துவங்கினார்கள். முன்னூறுக்கும் குறையாத வரன்கள் அவரிடம் எப்போதும் இருக்கும். ஐந்து ஆண்டுகளாக இந்தச் சேவையைச் செய்கிறார். காசு, கமிஷன் என்று எதுவும் வாங்குவதில்லை. இலவச சேவைதான். நகரத்தாராகப் பிறந்தவர்கள் எதாவது தர்மச் செயலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். என்னால் முடிந்தது இது. அதனால் மகிழ்வோடு செய்கிறேன் என்பார்.

வரன் பேசுவதில் உள்ள நெளிவு சுளிவு எல்லாம் அவருக்குத் தெரியும். உங்கள் பையனின் படிப்பிற்கு இந்தத் தோதிற்கு மேல் எல்லாம் பெண் கிடைக்காது.
டிப்ளமோ பையனுக்கு டிகிரிப் பொண்ணத் தேடினால் எப்படி? பெண் சம்மதிக்க வேண்டுமே. பேசாமல் இந்த இடத்தையே முடித்துக்கொள்ளுங்கள் என்று சமயங்களில் ஓங்கிப் பேசியும் விடுவார். வந்தவர்கள் அரண்டு போய்விடுவார்கள். அத்துடன் அவர் பேச்சில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்வார்கள். மாதம் எப்படியாவது இரண்டு திருமணங்கள் கைகூடிவிடும்,

திருமணம் முடித்துக்கொண்டவர்கள் பத்திரிக்கை வைத்துக் கூப்பிடுவார்கள். தவறாமல் போய் வருவார். பத்து அங்குல அல்லது பன்னிரெண்டு அங்குல எவர்சில்வர் வாளியில் பழங்கள், வெற்றிலை, பாக்கு, பூ முதலியவறை நிறைவாக வைத்துக் கொடுப்பார்கள். திருமணம் பேசிவிட்ட முறைக்குக் கொடுக்கிறோம் என்பார்கள். இரண்டு வீட்டார்களும் கொடுப்பார்கள். அண்ணனும் மறுக்காமல் வாங்கிக்கொண்டு வருவார். அப்படிச் சேர்ந்த வாளிகள் நிறைய உள்ளன.

சரி, கதைக்கு வருகிறேன்.

"அப்பச்சி இல்லாத பெண் அடுத்த மருமகளாக வேண்டும்" என்று கோதை ஆச்சி சொல்லியதும், அண்ணன் பதிலுக்குக் கேட்டார்:

"என்ன ஆச்சி அதிசயமாக இருக்கிறது? பெற்றோர்கள், மைத்துனன்கள் உள்ள வரனாக வேண்டும். அப்போதுதான் நிறைவாக இருக்கும். பெண்ணிற்கும் ஆத்தாவீட்டுத் தொடர்பு காலத்திற்கும் இருக்கும் என்பார்கள். நீங்கள் கேட்பது வித்தியாசமாக இருக்கிறதே"

"அப்படித்தான் என்னுடைய முதல் பையனுக்குப் பண்ணினேன்.சம்பந்திச் செட்டியாரும், அவர் வீட்டுக் கூட்டமும் சேர்ந்து என் மகனைக் கொத்திக் கொண்டு போய்விட்டார்கள். என் மகனுக்கு என்னுடன் ஒட்டுதல் இல்லாமல் செய்துவிட்டார்கள். மொத்தத்தில் பையனைப் பறிகொடுத்து விட்டேன். அடுத்தவனாவது என்னோடு இருக்கட்டும் என்றுதான் அப்படிக் கேட்கிறேன்"

"ஏன், என்ன நடந்தது?" என்று அண்ணன் கேட்க, ஆச்சி விவரித்துச் சொன்னார்கள்.

ஏற்ற இறக்கங்களுடன் ஆச்சி சொல்லச் சொல்ல அண்ணன் வியப்பின் எல்லைக்கே போய் விட்டார்.

                                           *****************************************

மன வருத்தம் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்? எல்லோருக்குமே ஒரு வருத்தம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். சில வருத்தம் தீரக் கூடியதாக இருக்கும். சில வருத்தம் தீராமல் சகதிக் குட்டையாக நெஞ்சில் தங்கி விடும்.

கோதை ஆச்சிக்கும் அப்படியொரு வருத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டு.

அதை அவர் வெளிப்படுத்தும் விதமே அலாதியாக இருக்கும்.

"ஒரு பிள்ளையைப் பெத்து, வளத்து, ஆளாக்கி, மனுஷனாக்குறதுக்கு, அதுவும் புத்திசாலியா, பொழைக்கத் தெரிஞ்சவனா ஆக்குறதுக்கு, பெத்தவளுக்கு இருபது வருஷமாகும். ஆனா புதுசா வர்றவ, இருபது நிமிஷத்துல அவனை முட்டாளாக்கி விடுவாள்!"

"அப்படியா? எதை வச்சு சொல்றீங்க?" என்று குறுக்குக்கேள்வி கேட்டால், ஆச்சி அதற்கு உடனே இப்படிப் பதில் சொல்வார்கள்.

"இப்ப கண்கூடா பாத்துக்கிட்டு இருக்கேன்ல. எத்தனை வீட்ல நடக்குது - எங்க வீட்ல நடந்துச்சு. அத வச்சுத்தான் சொல்றேன்"

"நீங்க கல்யாணமாகி மாலையும் கழுத்துமா வந்த பிறகு உங்க மாமியாருக்கும் அந்த நெனப்பு வந்திருக்கும்ல?"

"அதான் இல்லை. எங்க மாமியாருக்கு நான் நாலாவது மருமக. வீட்டோடு இருக்கும்படியா ஆயிடுச்சு. அடுப்படியிலேயே கிடந்து வறுபட்டிருக்கேன். ஒரு வருடத்திற்கு வேற வைக்கவும் இல்லை. ஒன்றாகத்தான் குடித்தனம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது கேஸ் எல்லாம் கிடையாது. விறகு அடுப்பில்தான் சமையல். காலையில் ஆறு மணிக்கு அடுப்படிக்குள் நுழைந்தால், வெளியே வருவதற்கு காலை மணி பதினொன்னாகிவிடும். எங்க வீட்டுச் செட்டியார் ஆத்தா பிள்ளை. ஒன்றையும் கண்டுக்கவே மாட்டார். அவதிப் பட்டிருக்கிறேன். ஒரு ஆண்டு கழிச்சுத்தான் எனக்கு விடுதலை கெடச்சுது. எங்க செட்டியாருக்கு மதுரையில வேலை கெடச்சு என்னையும் கூட்டிக்கிட்டிப் போனாக!"

"ஓஹோ...!"

"என்ன ஓஹோ? என் கதையை விடுங்க! பிள்ளையைப் பறிகொடுத்த கதையைச் சொல்றேன். அதை மட்டும் கேளுங்க...!" என்று துவங்கி, தன் மூத்த மகனின் கதையை விரிவாகச் சொல்வார்.

ஆச்சியின் மூத்த மகன் அண்ணாமலைக்குப் படித்து முடித்தவுடன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மும்பையில் உள்ள தங்கள் பயிற்சி மையத்தில், மூன்று மாதங்கள் பயிற்சி கொடுத்தவர்கள், பெங்களூரில் வேலை போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

பையன் மிகவும் சிக்கனமானவன். அவனுடன் சேர்ந்தவர்கள் எல்லாம் மூன்று பேர்கள் அல்லது நான்கு பேர்களாகச் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியபோது, இவன் மட்டும் பணம் கொடுத்துத் தங்கும் விருந்தினனாக - அதாவது paying guest ஆக- ஒரு நகரத்தார் வீட்டில் போய்த் தங்கினான்.

அதை வீடு என்று சொல்ல முடியாது. லாட்ஜ் போன்ற அமைப்பில் உள்ள கட்டிடம். மேன்ஷன். மாத வாடகைக்கு அறைகள் கிடைக்கும். மொத்தம் 40 பேர்கள் தங்கியிருந்தார்கள். ஒரு செட்டி நாட்டு சமையல்காரர் மற்றும் இரு பணியாளர்களை வைத்து செட்டியார் மூன்று வேளை உணவிற்கும் வழி பண்ணியிருந்தார். மாதக் கட்டணம் ஆறாயிரம் ரூபாய்.

ஆச்சியின் கணிப்புப்படி அங்கேதான் அவனைச் சனி பிடித்தது.

பையனுக்கு மாதம் நாற்பதாயிரம் சம்பளம். மெஸ் பில மற்றும் இதர செலவுகளுக்கு எடுத்துக்கொண்ட பணம் போக, மாதம் முப்பதாயிரம் ரூபாயகளைச் சுளையாக ஆத்தாவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். ஆச்சிக்கும் நிலை கொள்ளாத மகிழ்ச்சி. அவனுடைய கல்லூரிப் படிப்பிற்குக் கட்டிய முதன்மை நிதிக்காக (Capitation Fee) கணவருடைய குடும்ப ஓய்வுத் திட்ட பரஸ்பர நிதிக் கணக்கில் இருந்து வாங்கியிருந்த கடன் தொகையைக் கட்டி முடித்தார். சின்ன மகனின் படிப்புச் செலவிற்கான சுமை தலையில் உட்கார்ந்து கொள்ளாமல் தாராளமாகச் செலவு செய்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, அவன் அனுப்பிய தொகைக்கு ஏதாவது ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் அப்பச்சி கீழையூரில் எழுதிக் கொடுத்திருந்த ஒரு ஏக்கர் இடத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்து விட்டார்கள். அதில் அவனுக்கும் ஒரு சநதோஷம்.

கதை அப்படியே ஒரே ஸ்பீடில், நிதானமாக, மானகிரி - கல்லல் சாலையில் கார் செல்வதைப்போல சென்று கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? ஒரு திருப்பம், ஒரு முடிச்சு இருக்க வேண்டாமா?

மெஸ்காரச் செட்டியார் அதைச் செய்தார்.

அண்ணாமலையின் சிக்கனத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும், குடும்பத்தின் பெருமையையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த செட்டியார் ஒரு முடிவிற்கு வந்தார்.

அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். மூத்த மகள் முத்து லெட்சுமியை அண்ணாமலைக்கு கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆச்சியின் கணிப்புப்படி சனி அசுர வேகத்தில் அவருக்கு உதவி செய்தது.

பெண் அப்படி ஒன்றும் லட்சணமாக இருக்கமாட்டாள். நடிகை கண்ணாம்பாள் சின்ன வயதில் இருந்ததைப் போல இருப்பாள். பெங்களூரில் வளர்ந்ததால் நகரத்து கெட்-அப் இருக்கும். நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசத்தும்படி பேசுவாள். பெங்களூர் ஏ.எம்.சி பொறியியற் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள். விப்ரோவில் வேலை.

செட்டியார் ஒரு பிள்ளையார் நோன்பு நந்நாளில் கோதை ஆச்சி மகனை தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனவர், தன மனைவி, மக்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார். பையன் நடிகர் விஷாலைப் போல நல்ல உயரம் மற்றும் கம்பீரமான தோற்ற்த்துடன் இருப்பான். தொடர்ந்து இரண்டு மூன்று முறைகள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனவர், தன் திட்டத்தை வீட்டில் சொல்ல, அனைவருக்கும் சம்மதம்.

பையனை இங்கேயே மடக்கி சம்மதிக்க வைத்துவிட்டால், முடிந்ததைக் கொடுத்து அதிகம் செலவில்லாமல் பெண்ணைக் கட்டிக்கொடுத்து விடலாம் என்பது அவருடைய திட்டம். மெதுவாகக் காய்களை நகர்த்தி அதைச் செயல் படுத்தினார்.

ஐந்து காரெட்டில் பூச்சரம் ஒன்றை மட்டும் போட்டார். மற்ற பெரிய நகைகளுக்கெலாம் புறங்கையைக் காட்டிவிட்டார். வரதட்சணையாக மூன்று லட்சம் மட்டும் கொடுத்தார். அதுவும் தன் பெண் போட்டு வைத்திருந்த வங்கி வைப்புநிதிச் சீட்டைக் கொடுத்துச் சரி பண்ணிவிட்டார்.

கோதையாச்சிக்குப் பெரிய ஏமாற்றம். தன் மகனுக்கு பெரிய தோதில் திருமணம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்.

அண்ணாமலைக்குக் கல்யாணம் நடந்தபோது அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். மனைவிக்கு நாற்பதாயிரம் சம்பளம். மொத்தத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானம்.

செட்டியாரின் மெஸ் மடிவாலா பகுதியிலும், வீடு அருகில் பிருந்தாவன் நகரிலும் இருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதிகளுக்கு தன் வீட்டின் மேல் பகுதியிலேயே ஒரு பெரிய அறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டார். காசைப் பிடித்த கேடு, வாடகை வீட்டிற்கெல்லாம்க் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அத்துடன் மாப்பிள்ளையின் வருமானம், சம்பந்தி ஆச்சியின் கைக்குப் போவதைத் தடுக்கும் விதமாக, தங்கள் பகுதியிலேயே ஒரு வீட்டை 75 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். அது பழைய வீடு, அதற்கு எதற்கு புதுமனை புகுவிழா என்று சொல்லி, கட்டை போட்டதுடன்,  அந்த வீட்டை ஒரு நிறுவனத்திற்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகைக்கும் கொடுத்து விட்டார். அந்தப் பணத்தையும், சம்பளப் பணத்தையும் சேர்த்து அண்ணாமலை
வீட்டுக்கடன் தவணைத் தொகையை மாதாமாதம் வங்கியில் கட்டுவதற்கே சரியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அண்ணாமலை இயற்கையிலேயே சிக்கனமானவன் என்பதால், தன் மாமனார் செய்யும் செயல்களின் உள் நோக்கம் புரியாமல் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான்.
அவன் ஊருக்குப் போவதும் சுத்தமாகக் குறைந்துவிட்டது. வாரம் ஒருமுறை தன் தாயாருடன் செல்போனில் பேசுவான். அத்தோடு சரி!

அடுத்து ஒரு குழந்தை பிறக்க, அதைப் பார்த்துக்கொள்ளும் காப்பகமாக செட்டியாரின் வீடு மாறியிருந்தது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், அது மிகவும் செள்கரியமாகவும் இருந்த்து.

இப்போது அண்ணாமலைக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் தன் தாயாரைப் பார்க்க அவன் இரண்டு முறைகள்தான் மதுரைக்கு வந்திருப்பான். வரும்போது தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு வருவான். அவள் அட்டைப் பூச்சியைபோல அவனுடன் ஒட்டிக் கொண்டிருப்பாள். ஆச்சியால் தன் மகனுடன் தனிப்பட்டு எதுவும் பேச முடியாது.

அதனால்தான் ஆச்சி சொல்வார்கள்: "என் மகனைப் பறி கொடுத்துவிட்டேன். மெஸ்காரச் செட்டியார் தூக்கிக்கொண்டு போய்விட்டார்"

                           +++++++++++++++++++++++++++++++++++++++++++++

சைக்கிள்கடை சாத்தப்ப அண்ணன் உதவியுடன் ஒரு பெண்ணைத் தன் விருப்பப்ப்டி தெரிவு செய்த கோதை ஆச்சி, சின்ன மகனுக்கு நிச்சயம் செய்ததோடு ஒரு வளர்பிறை முகூர்த்த நாளில் திருமணத்தையும் சிற்ப்பாக நடத்தி முடித்தார்.

பொறியியல் படித்த பெண்ணாக இருககக்கூடாது. அப்பச்சி இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆச்சியின் இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்றபடி சின்ன மருமகள் வந்து சேர்ந்தாள்.

மாநிறம்தான். ஆனால் பிடறியை மறைக்கும் அடர்ந்த தலைமுடி, பேசும் கண்கள், முத்துபோன்ற பற்கள், சிரித்த முகம் என்று அம்சமாக இருந்தாள். அளவான பேச்சு. கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்வாள். அதையும் இன்முகத்தோடு சொல்வாள்.

ஆச்சிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்பது ஆச்சிக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது.

                           ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிள்ளையார்பட்டியில் ஆவணி மாதம் நடைபெறும் விநாயக சதுர்த்தி திருவிழாவில் பங்கு கொள்வதற்காக சாத்தப்ப அண்ணன் அங்கே சென்றிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது.

கோவிலின் வெளி மண்டபத்தில் கோதை ஆச்சியைப் பார்த்தவர், பேச்சுக்கொடுத்தார்.

"என்ன ஆச்சி, நல்லா இருக்கீகளா?"

"என்ன் அண்ணே, என்னை ஆச்சீங்கிறீக? நான் உங்களைவிட பத்து வயசு சின்னவ!"

"இருக்கட்டுமே, அதுக்காக பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமா? ஆச்சி என்பது ஒரு விகுதிக்காகத்தான். ஒரு மரியாதைக் காகத்தான்!"

"அப்ப்டீன்னா சரி. நான் நல்லாயிருக்கேன் அண்ணே! நீங்க நல்லாயிருக் கீகளா?"

"எனக்கென்ன குறை ஆத்தா? பழநிஅப்பன் படியளக்கிறான். சந்தோஷமா இருக்கேன். உங்க சின்ன மருமகள் நல்லம்மை எப்படி இருக்கிறாள்?"

"பேருதான் நல்லம்மை. எனக்கு கெட்டம்மை ஆகிவிட்டாள்"

அதைச் சொல்லச் சொல்ல ஆச்சியின் கண்கள் கலங்கி விட்டன.

திடுக்கிட்ட சாத்தப்ப அண்ணன், ஆச்சியைச் சமாதானப் படுத்தும் விதமாகச் சொன்னார்.

"என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க ஆச்சி, எங்க பெரியத்தா மகவிட்டுப் பேத்திதானே அவள். நான் சரி பண்ணி விடுகிறேன்"

"முதலில் உங்கள் பெரியத்தா மகளைச் சரி பண்ணுங்கள். பிறகு பேத்தியைச் சரி பண்ணலாம்! பெரிய மகனைச் சம்பந்திச் செட்டியாரிடம் பறி கொடுத்தேன். சின்னவனை ச்மபந்தி ஆச்சியிடம், அதாவது உங்க பெரியத்தா மக வீட்டில பறி கொடுத்து விட்டேன். எல்லாம் அவுக ஆதிக்கமாப் போச்சு"

"ஆதிக்கம்னு எதைச் சொல்றீக? உங்களை வரக்கூடாதுன்னு அவுக சொல்றாகளா?"

"அவுக சொல்வாகளா? சொல்லாம செஞ்சிட்டாங்க!" என்று சொன்ன ஆச்சி ந்டந்ததைச் சுருக்கமாகச் சொன்னார்க்ள்.

திருமணமான புதிதில் முதல் மூன்று மாதங்களுக்கு எல்லாம் சுமூகமாகத்தான் இருந்ததாம். மகன் மருமகளுடன் சென்னைக்குச் சென்ற ஆச்சி, சின்னம் சிறுசுகள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று சொல்லி ஒரு வாரத்தில் திரும்பி விட்டார்களாம்,

மகனுக்கு துரைப்பாக்கத்தில் உள்ள கணினி நிறுவனம் ஒன்றில் வேலை. திருவான்மியூரில் வீடு. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. காலை எட்டு மணிக்குப் போனால் இரவு 8 மணிக்குத்தான் திரும்புவான். முதலில் அதைப் பொறுத்துக்கொண்ட மருமகள் மூன்று மாதங்கள் கழித்து முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டாள். பகல் முழுவதும் சும்மா இருக்கச் சிரமமாக இருக்கிறது, நானும் வேலைக்குப் போகிறேனே என்று ஆரம்பித்தவள், அடம் பிடித்து ஒரு வேலையில் சேர்ந்துவிட்டாள். நுண்ணுரியியலில் முதுகலை பட்டம் பெற்றவள், மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து விட்டது. அடுத்து இன்னொன்றிற்கு அடி போட்டு, தன் தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்து தங்களுடன் வைத்துக்கொண்டு விட்டாள். வீட்டைப் பார்த்துக்கொள்ளவும், சமையலுக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்லி விட்டாள்.

அடுத்த ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறக்க. சம்பந்தி ஆச்சிக்கான வேலை நிரந்தரம் ஆகி விட்டது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னைக்குப் போய் வந்த கோதை ஆச்சி, பிறகு போவதைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள்.

சம்பந்தி ஆச்சி சமைத்து நாம் என்ன சாப்பிடுவது அல்லது சம்பந்தி ஆச்சியை உட்கார வைத்து நாம் ஏன் சமைத்துப்போட வேண்டும் என்ற இரு விதமான தன் முனைப்பு மனதிற்குள் முளைத்து வேறூன்றி விட்டது. கடைசியில் போவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.

பொறுமையாக இவையனைத்தையும் கேட்ட சாத்தப்ப அண்ணன் அழுத்தம் திருத்தமாக்ச் சொன்னார்:

"ஆச்சி இதெல்லாம் உப்புப் பெறாத விஷயம். உங்கள் மகனுக்கு உங்கள் மேல் உளள பிரியம் போய்விட்டது என்றால்தான் பிரச்சினை. அப்படி உண்டா?"

"இல்லை இல்லை. அதெல்லாம் இல்லை. அவன் இன்றும் பிரியமாகத்தான் இருக்கிறான். மாதம் தவறாமல் எனக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி விடுகிறான். என் வங்கிக் கணக்கில் தன்னிச்சையாக அந்தப் பணம் வரவாகிவிடும்"

"பிறகென்ன? தவறெல்லாம் உங்கள் மேல்தான்" என்று சாத்தப்ப அண்ணன் சொல்ல, செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது கோதை ஆச்சிக்கு.

"மருமகள் என்ற கண்ணோட்டத்தில் வந்தவளைப் பார்க்காமல், அவளை உங்கள் மகளாக நினத்துக் கொண்டு பாருங்கள். அது போல சம்பந்தி ஆச்சியை வேற்றாளாக நினைக்காமல், உங்கள் உடன் பிறந்த சகோதரியைப் போல நினைத்துப் பழகுங்கள், எல்லாம் சரியாகிவிடும்." என்று சொன்னவர், தொடர்ந்து சொன்னார். "உடன் இருப்பவர்களை அனுசரித்துக்கொண்டு போனால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதுதான் வாழவதற் குரிய முக்கியமான கோட்பாடு ஆகும். எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு போவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் அனைவரும் உங்களுக்கு வேண்டியவர்களாகிவிடுவார்கள். அடுத்தமுறை உங்களை நான் பார்க்கும்போது, உங்கள் மருமகளுடன்தான் பார்க்க விரும்புகிறேன். அதற்கு ஏற்றபடி நடந்துகொள் ஆத்தா!"

புன்சிரிப்புடன் எழுந்தவர், ஆச்சியை வணங்கிவிட்டு, தன் துண்டை உதறித் தன் தோள்மேல் போட்டுக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார்,

ஆச்சி தன் நிலைக்கு வருவதற்கு அரை மணி நேரம் ஆயிற்று.

அந்த அரை மணி நேரத்திற்குள் ஆச்சியின் மனதை அக்கோவிலில் உறையும் கற்பக விநாயகர் பக்குவப்படுத்தியிருந்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

40 comments:

  1. Dear sir,

    This true.
    This is not a story this is real.

    Today's Mamiyarum Marumagalum sammanthigalum 90% appaditthan.

    Thanks to your real story

    ReplyDelete
  2. வணக்கம். ஐயா


    மிகவும் அருமையான கதை.

    --

    ReplyDelete
  3. மிக அருமையான கதை. 'விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை' என்பதை உணர்த்தும் அழகான முடிவு. இக்காலத்திற்குத் தேவையான கருத்து. நன்றி

    ReplyDelete
  4. எந்த ஒரு சமூகத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு கதைக் க‌ருவை நகரத்தார் சமூகத்திற்கு ஏற்றபடி பக்குவமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ஒரு தாயால் மகனுக்குத் திருமணம் ஆன பின்னரும் அவன் மீது உள்ள பாசத்தைப் பங்கு போட முடிவதில்லை. மருமகளை ஒரு இடையில் வந்த தொந்திரவாகவே பார்ப்பது மகனைப்பெற்ற மூத்தவர்களின் குணமாக உள்ளது.

    தாயுக்குப்பின் தாரமா? தராத்திற்குப் பின் தாயா? என்று குழம்புவதே ஒரு புதுத் திருமணமான ஆணின் குழப்பமாக உள்ளது.

    இவையெல்லாவற்றையும் தெளிவான நடையில் அழகுறச் சொல்லியுள்ளீர்கள் ஐயா! நன்றி!

    ReplyDelete
  5. கவலைப் படாதே சகோதரா
    பாய் மட்டன் கடை இருக்கு சகோதரா

    ReplyDelete
  6. தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொண்டு எங்கேயும் இருக்கும் மாமியார்களின் மனக் குழப்பம் தான் கதையின் கரு,என்றாலும் கதா பாத்திரங்கள் வந்து நிற்கும் இடங்களும் பேசும் நடை முறை வார்த்தைகளும் கதையை சரளமாக படிக்க வைக்கிறது .

    "ஒதுங்கினால் ஒதுக்கிவிடுவார்கள் " ஒதுங்காமல் ஓட்டினால் தான் உறவு கெட்டிப்படும் .

    ReplyDelete
  7. கோதை ஆச்சிக்கு மிகவும் குறுகிய மனப்பான்மைதான். அவருக்கே தனக்கு என்ன வேண்டும் என்பது சுத்தமாகப் புரியவில்லை. எதிலும் நல்லதை எடுத்துக்கொண்டு காலத்திற்கேற்ற மாறுதல்களை ஒத்துக்கொண்டு அனுசரித்துப் போக மனமில்லை.

    நன்கு படித்து, பொறுப்புடன் வேலை பார்த்து, பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் மகன்கள் கிடைத்த மகிழ்ச்சியும் கோதைக்கு இல்லை.
    மகன்களின் தகுதிக்கேற்ற, நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மருமகள்களையும் மெச்சத் தெரியவில்லை.
    மகன்களும், மறுமகள்களும், சம்பந்தி வீட்டாரும் அவரை வெறுத்து ஒதுக்கியதாகவோ மரியாதைக் குறைவாகவோ நடத்தியதாகவும் தெரியவில்லை.
    வேலை பார்க்கும் மருமகள்கள் வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உதவிக்கு தங்கள் பெற்றோர்களின் துணையை நாடுவது மட்டும் ஏனோ அவர் கண்களை உறுத்துகிறது. தனியே இருக்க வேண்டாம் பேரக் குழந்தைகளுடனும் எங்களுடனும் வந்து இருந்து விடுங்கள் என்று மருமகள்களும் மகன்களும் கூப்பிட்டாலும், வீட்டு வேலைக்கும் பிள்ளை வளர்க்கவும் நான் என்ன வேலைக்காரியா? என்று கேட்பவர்களின் வகையைச் சேர்ந்தவர் கோதையம்மா.

    நன்கு வளர்த்து, நன்கு படிக்க வைத்து, தன் திறமையை வீணாக்காமல் வேலைக்கு போகும் பெண்ணிற்கு உதவியாக, மனமகிழ்ச்சியுடன் உடனிருக்கும் பெண்ணின் தாய் என்றுமே தாய்தான், அதனை சுமையாக எண்ணும் மாமியார் என்றும் மாமியார்தான்.

    நல்ல கதை ஐயா. காலத்திற்கேற்ற கதை. கோதை ஆச்சியும் அவருக்கு ஆலோசனை கூறும் சாத்தப்ப அண்ணனும் நல்ல பாத்திரங்கள். ஆனால் அவரும் கோதை போல்தான் ...அவர் மனைவிக்கு அசௌகரியம் இருந்தாலும் குழந்தைகளுடன் இருப்பது பிடித்திருக்கிறது, இவருக்கோ பிள்ளைகளைவிட மற்றவை வாழ்கையில் அதை விட பெரிதாக தெரிகிறது. நானே உங்களிடம் பதிவில் கதை எப்பொழுது போடுவீர்கள் என கேட்க எண்ணியிருந்தேன், அதற்குள் கதை வந்துவிட்டது.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  8. குரங்கு: இருட்டுவதற்குள் இருவருக்கும் உணவைத் தேட வேண்டும்!
    நாய்: நண்பேண்டா!

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    அருமையான ஆக்கம்,மிகவும்
    சிறப்பாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  10. நல்ல அற்புதமானக் கதை...
    முதல் மகனின் மனைவி தமது விருப்பம் போல் நடக்க முடியாது போன பின்பு காரணத்தைப் புரிந்துக் கொள்ள முயலாமல் அடுத்த மகனுக்கு மூத்த மருமகளுக்கு உள்ள ஏதுகளுக்கு எதிர்மறையாகப் பெண்ணை தேடுவது என்பது இன்றும் பல இடங்களில் காண முடிகிறது.... அதை அருமையாக கதையில் காண்பித்து இருக்கிறீர்கள்.

    இந்தியாவில் சும்மா இருப்பது இனிமையாக இருந்தாலும்; வெளிநாட்டில் சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...
    அப்படி இருப்பதை விரும்பாவிட்டாலும் பல நேரங்களில் தவிர்க்க முடியாத சூழல் அது.

    மகளை மருமகளாக பார்க்கும் பக்குவம் யாவருக்கும் வர வேண்டும்... அதே நேரம் சூழலைப் புரிந்துக் கொண்டு சம்பந்திகளும் மாப்பிள்ளையின் பெற்றோர்களின் உறவைப் பற்றிய அக்கறையோடு அது தனது மகள் அங்கே சென்ற பிறகு தலை கீழாக மாறாமலும் பார்த்தும் கொள்ள வேண்டும். அப்படி நல்ல இங்கிதம் உள்ள சம்பந்திகள் கிடைக்க புண்ணியமும் செய்து இருக்க வேண்டுமல்லவா!

    சாத்தப்ப அண்ணன் மனதில் நிற்கிறார்!
    நல்லக் கதை ஐயா!
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. வார்த்தைப் பிசகு!!??

    மருமகளை மகளாகப் பார்க்கும் நல்ல எண்ணம் வேண்டும்....

    ReplyDelete
  12. ////redfort said...
    Dear sir,
    This true.
    This is not a story this is real.
    Today's Mamiyarum Marumagalum sammanthigalum 90% appaditthan.
    Thanks to your real story/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //// kannan said...
    வணக்கம். ஐயா
    மிகவும் அருமையான கதை.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  14. /// Parvathy Ramachandran said...
    மிக அருமையான கதை. 'விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை' என்பதை உணர்த்தும் அழகான முடிவு. இக்காலத்திற்குத் தேவையான கருத்து. நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. //// kmr.krishnan said...
    எந்த ஒரு சமூகத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு கதைக் க‌ருவை நகரத்தார் சமூகத்திற்கு ஏற்றபடி பக்குவமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒரு தாயால் மகனுக்குத் திருமணம் ஆன பின்னரும் அவன் மீது உள்ள பாசத்தைப் பங்கு போட முடிவதில்லை. மருமகளை ஒரு இடையில் வந்த தொந்திரவாகவே பார்ப்பது மகனைப்பெற்ற மூத்தவர்களின் குணமாக உள்ளது.
    தாயுக்குப்பின் தாரமா? தராத்திற்குப் பின் தாயா? என்று குழம்புவதே ஒரு புதுத் திருமணமான ஆணின் குழப்பமாக உள்ளது.
    இவையெல்லாவற்றையும் தெளிவான நடையில் அழகுறச் சொல்லியுள்ளீர்கள் ஐயா! நன்றி!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. //// thanusu said...
    கவலைப் படாதே சகோதரா
    பாய் மட்டன் கடை இருக்கு சகோதரா////

    பாய் கடை இருந்தென்ன? குரங்கிற்கு பழக்கடை இருக்கிறதா?

    ReplyDelete
  17. //// thanusu said...
    தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொண்டு எங்கேயும் இருக்கும் மாமியார்களின் மனக் குழப்பம் தான் கதையின் கரு,என்றாலும் கதா பாத்திரங்கள் வந்து நிற்கும் இடங்களும் பேசும் நடை முறை வார்த்தைகளும் கதையை சரளமாக படிக்க வைக்கிறது .
    "ஒதுங்கினால் ஒதுக்கிவிடுவார்கள் " ஒதுங்காமல் ஓட்டினால் தான் உறவு கெட்டிப்படும் ./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  18. //// தேமொழி said...
    கோதை ஆச்சிக்கு மிகவும் குறுகிய மனப்பான்மைதான். அவருக்கே தனக்கு என்ன வேண்டும் என்பது சுத்தமாகப் புரியவில்லை. எதிலும் நல்லதை எடுத்துக்கொண்டு காலத்திற்கேற்ற மாறுதல்களை ஒத்துக்கொண்டு அனுசரித்துப் போக மனமில்லை.
    நன்கு படித்து, பொறுப்புடன் வேலை பார்த்து, பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் மகன்கள் கிடைத்த மகிழ்ச்சியும் கோதைக்கு இல்லை.
    மகன்களின் தகுதிக்கேற்ற, நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மருமகள்களையும் மெச்சத் தெரியவில்லை.
    மகன்களும், மறுமகள்களும், சம்பந்தி வீட்டாரும் அவரை வெறுத்து ஒதுக்கியதாகவோ மரியாதைக் குறைவாகவோ நடத்தியதாகவும் தெரியவில்லை.
    வேலை பார்க்கும் மருமகள்கள் வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உதவிக்கு தங்கள் பெற்றோர்களின் துணையை நாடுவது மட்டும் ஏனோ அவர் கண்களை உறுத்துகிறது. தனியே இருக்க வேண்டாம் பேரக் குழந்தைகளுடனும் எங்களுடனும் வந்து இருந்து விடுங்கள் என்று மருமகள்களும் மகன்களும் கூப்பிட்டாலும், வீட்டு வேலைக்கும் பிள்ளை வளர்க்கவும் நான் என்ன வேலைக்காரியா? என்று கேட்பவர்களின் வகையைச் சேர்ந்தவர் கோதையம்மா.
    நன்கு வளர்த்து, நன்கு படிக்க வைத்து, தன் திறமையை வீணாக்காமல் வேலைக்கு போகும் பெண்ணிற்கு உதவியாக, மனமகிழ்ச்சியுடன் உடனிருக்கும் பெண்ணின் தாய் என்றுமே தாய்தான், அதனை சுமையாக எண்ணும் மாமியார் என்றும் மாமியார்தான்.
    நல்ல கதை ஐயா. காலத்திற்கேற்ற கதை. கோதை ஆச்சியும் அவருக்கு ஆலோசனை கூறும் சாத்தப்ப அண்ணனும் நல்ல பாத்திரங்கள். ஆனால் அவரும் கோதை போல்தான் ...அவர் மனைவிக்கு அசௌகரியம் இருந்தாலும் குழந்தைகளுடன் இருப்பது பிடித்திருக்கிறது, இவருக்கோ பிள்ளைகளைவிட மற்றவை வாழ்கையில் அதை விட பெரிதாக தெரிகிறது. நானே உங்களிடம் பதிவில் கதை எப்பொழுது போடுவீர்கள் என கேட்க எண்ணியிருந்தேன், அதற்குள் கதை வந்துவிட்டது.
    நன்றி ஐயா.////

    உங்களின் விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. //// தேமொழி said...
    குரங்கு: இருட்டுவதற்குள் இருவருக்கும் உணவைத் தேட வேண்டும்!
    நாய்: நண்பேண்டா!////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    அருமையான ஆக்கம்,மிகவும்
    சிறப்பாக உள்ளது. நன்றி////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  21. விலங்கு இனங்களில் கூட இரண்டு பகை இனங்கள் கூடிவிடுகின்றன. மனித இனத்தில் மட்டும்தான் சொந்தபந்தங்களிடம் கூட தீராத பகை வளர்கிறது.
    அந்த கருப்பு நாய் அன்னையைப்போலும், குரங்கு குழந்தையைப் போலும்
    அழகாக உள்ளன. பரந்த இவ்வுலகில் அவைகளுக்கான உணவை இறைவி கட்டாயம் இரவுக்குள் கொடுத்து இருப்பார். அவ்யக்த(காரணம் இல்லாத) கருணாமூர்த்தி அல்லவா அன்னபூரணி?

    ReplyDelete
  22. திரு.கே.எம்.ஆர் அவர்கள் தயவு செய்து பொறுத்தருள வேண்டும். அவ்யக்த என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பொருள்,'அழிவில்லாத' என்பதாகும்.('யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி' என்பதன் பொருள் 'மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ' , கீதை,பன்னிரண்டாம் அத்தியாயம், பக்தியோகம்)
    'அவ்யாஜ' என்றால் 'காரணமில்லாத' என்று பொருள்.('அவ்யாஜ கருணாமூர்த்தி அஜ்ஞான த்வாந்த தீபிகா';லலிதா ஸஹஸ்ரநாமம்)
    தேவி அழிவில்லாத கருணாமூர்த்தி என்ற வகையில் தாங்கள் சொன்னதும் சரியே.

    ReplyDelete
  23. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    நல்ல அற்புதமானக் கதை...
    முதல் மகனின் மனைவி தமது விருப்பம் போல் நடக்க முடியாது போன பின்பு காரணத்தைப் புரிந்துக் கொள்ள முயலாமல் அடுத்த மகனுக்கு மூத்த மருமகளுக்கு உள்ள ஏதுகளுக்கு எதிர்மறையாகப் பெண்ணை தேடுவது என்பது இன்றும் பல இடங்களில் காண முடிகிறது.... அதை அருமையாக கதையில் காண்பித்து இருக்கிறீர்கள்.
    இந்தியாவில் சும்மா இருப்பது இனிமையாக இருந்தாலும்; வெளிநாட்டில் சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...
    அப்படி இருப்பதை விரும்பாவிட்டாலும் பல நேரங்களில் தவிர்க்க முடியாத சூழல் அது.
    மகளை மருமகளாக பார்க்கும் பக்குவம் யாவருக்கும் வர வேண்டும்... அதே நேரம் சூழலைப் புரிந்துக் கொண்டு சம்பந்திகளும் மாப்பிள்ளையின் பெற்றோர்களின் உறவைப் பற்றிய அக்கறையோடு அது தனது மகள் அங்கே சென்ற பிறகு தலை கீழாக மாறாமலும் பார்த்தும் கொள்ள வேண்டும். அப்படி நல்ல இங்கிதம் உள்ள சம்பந்திகள் கிடைக்க புண்ணியமும் செய்து இருக்க வேண்டுமல்லவா!
    சாத்தப்ப அண்ணன் மனதில் நிற்கிறார்!
    நல்லக் கதை ஐயா!
    பகிர்வுக்கு ////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    வார்த்தைப் பிசகு!!??
    மருமகளை மகளாகப் பார்க்கும் நல்ல எண்ணம் வேண்டும்..../////

    ஆமாம். அந்த எண்ணம் இருந்தால் உறவுகளில் விரிசல் இருக்காது!

    ReplyDelete
  25. //// kmr.krishnan said...
    விலங்கு இனங்களில் கூட இரண்டு பகை இனங்கள் கூடிவிடுகின்றன. மனித இனத்தில் மட்டும்தான் சொந்தபந்தங்களிடம் கூட தீராத பகை வளர்கிறது.
    அந்த கருப்பு நாய் அன்னையைப்போலும், குரங்கு குழந்தையைப் போலும்
    அழகாக உள்ளன. பரந்த இவ்வுலகில் அவைகளுக்கான உணவை இறைவி கட்டாயம் இரவுக்குள் கொடுத்து இருப்பார். அவ்யக்த(காரணம் இல்லாத) கருணாமூர்த்தி அல்லவா அன்னபூரணி?////

    ஆமாம். அதனால்தான் பறவைகளும், விலங்குகளும் இவ்வுலகில் உயிர் வாழ்கின்றன!

    ReplyDelete
  26. //// eswari sekar said...
    story super////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. //// Parvathy Ramachandran said...
    திரு.கே.எம்.ஆர் அவர்கள் தயவு செய்து பொறுத்தருள வேண்டும். அவ்யக்த என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பொருள்,'அழிவில்லாத' என்பதாகும்.('யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி' என்பதன் பொருள் 'மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ' , கீதை,பன்னிரண்டாம் அத்தியாயம், பக்தியோகம்)
    'அவ்யாஜ' என்றால் 'காரணமில்லாத' என்று பொருள்.('அவ்யாஜ கருணாமூர்த்தி அஜ்ஞான த்வாந்த தீபிகா';லலிதா ஸஹஸ்ரநாமம்)
    தேவி அழிவில்லாத கருணாமூர்த்தி என்ற வகையில் தாங்கள் சொன்னதும் சரியே.////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. //தேவி அழிவில்லாத கருணாமூர்த்தி என்ற வகையில் தாங்கள் சொன்னதும் சரியே.////

    'அவ்யாஜ'த்தை மனதில் நினைத்துக்கொண்டு 'அவ்யகத்தம்' என்று தட்டச்சு செய்தது பிழையே.சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தங்களைப் போன்ற பன்மொழியாற்றலும்,ஆழ்ந்த‌ படிப்பும் உள்ளவர்கள் இங்கு வருவதும் ஆர்வத்துடன் பின்னூட்டங்களை இடுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    கனமான கருத்துக்களை எளிமையான மொழியில் சுவையாக எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  29. விலங்குகளுக்குள் பகை இல்லை
    விளங்கிக் கொள்ள விரும்பாத மனிதனிடத்தில் தான் போரும் பனிப்போரும்

    பணிப்போர் பலர் இருந்ததும்
    பணியில்லா பிணியுடையோர்

    மற்றதை மாற்ற நினைப்பது முறையாமோ..?

    ReplyDelete
  30. பார்வதி, நீங்கள் ஏன் சமஸ்கிரதத்தில் உள்ள ஸ்லோகங்களை தமிழ் படுத்த முயற்சிக்க கூடாது. ஜோதிட வகுப்பறைக்கு ஏற்றவாறு நவகிரகங்களின் சுலோகங்களை தமிழாக்கம் செய்து கொடுக்கலாமே. அர்த்தம் புரியாமல் இறைவழிபாடு செய்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். தினமலர் இணைய தளத்தில் பல ஸ்லோகங்கள் உள்ளன.
    http://temple.dinamalar.com/slogan.php

    அஷ்டோத்திர சதநாமாவளி (இறைவனின் 108 போற்றிப் பாடல்கள் எனக் குறிப்பிடப் படுவது) , அஷ்டகம் எனப்படும் எட்டு சிறு பாடல்களை கொண்டவைகளில் அந்த எண்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம் (8, 108, 1008 என்பது ஏன்?). வாரம் ஒரு அஷ்டோத்திர சதநாமாவளியை தமிழாக்கம் செய்து மாணவர் மலரில் இடம் பெற செய்தபின் அவைகளை தொகுத்து நூலாக வெளியிடலாமே. ஏதோ ஊதுற சங்கை ஊதி வைக்கிறேன்.

    ReplyDelete
  31. நேற்று ஹோலி விடுமுறை, இன்றுதான் இந்தக் கதையைப்படித்தேன். மிக அருமை.

    சாத்தப்ப அண்ணன் கடைசியில் சொன்ன தீர்வு நடைமுறையில் கடைபிடிக்க சாத்தியமான ஒன்றே. உண்மையில் எல்லாம் இருப்பவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. ஹைதராபாத்தை ஆண்டுவந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் தன் தந்தையின் செருப்பில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வைரக்கல்லை தன் மேஜையில் பேப்பர் வெயிட்டாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தாராம். அவர் மறைவுக்குப்பின் அதன் மதிப்பு தெரிந்து ஏலம் விடப்பட்டதாம். அதுபோன்றுதான் இதுவும்.

    ReplyDelete
  32. மனமகிழ்ச்சியுடன் உடனிருக்கும் பெண்ணின் தாய் என்றுமே தாய்தான், அதனை சுமையாக எண்ணும் மாமியார் என்றும் மாமியார்தான்.//

    அந்த தாய் தன் மருமகளிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  33. தேமொழியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.அதாவது 'ததாஸ்து'
    என்று சொல்கிறேன்.

    அடியேன் மதுராஷ்டகத்தை ஒருமுறையும், சந்திரசேகர அஷ்டகததினை ஒருமுறையும் தமிழ் படுத்தியுள்ளேன். பார்வதி ராமசந்திரன் இன்னும் அருமையாகச் செய்ய முடியும்.

    ReplyDelete
  34. //// kmr.krishnan said...
    //தேவி அழிவில்லாத கருணாமூர்த்தி என்ற வகையில் தாங்கள் சொன்னதும் சரியே.////
    'அவ்யாஜ'த்தை மனதில் நினைத்துக்கொண்டு 'அவ்யகத்தம்' என்று தட்டச்சு செய்தது பிழையே.சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தங்களைப் போன்ற பன்மொழியாற்றலும்,ஆழ்ந்த‌ படிப்பும் உள்ளவர்கள் இங்கு வருவதும் ஆர்வத்துடன் பின்னூட்டங்களை இடுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    கனமான கருத்துக்களை எளிமையான மொழியில் சுவையாக எழுத வேண்டுகிறேன்.////

    அவ்வப்போது எழுதிக்கொண்டுதானே இருக்கிறார் சுவாமி!

    ReplyDelete
  35. //// அய்யர் said...
    விலங்குகளுக்குள் பகை இல்லை
    விளங்கிக் கொள்ள விரும்பாத மனிதனிடத்தில் தான் போரும் பனிப்போரும்
    பணிப்போர் பலர் இருந்ததும்
    பணியில்லா பிணியுடையோர்
    மற்றதை மாற்ற நினைப்பது முறையாமோ..?/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  36. //// தேமொழி said...
    பார்வதி, நீங்கள் ஏன் சமஸ்கிரதத்தில் உள்ள ஸ்லோகங்களை தமிழ் படுத்த முயற்சிக்க கூடாது. ஜோதிட வகுப்பறைக்கு ஏற்றவாறு நவகிரகங்களின் சுலோகங்களை தமிழாக்கம் செய்து கொடுக்கலாமே. அர்த்தம் புரியாமல் இறைவழிபாடு செய்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும். தினமலர் இணைய தளத்தில் பல ஸ்லோகங்கள் உள்ளன.
    http://temple.dinamalar.com/slogan.php
    அஷ்டோத்திர சதநாமாவளி (இறைவனின் 108 போற்றிப் பாடல்கள் எனக் குறிப்பிடப் படுவது) , அஷ்டகம் எனப்படும் எட்டு சிறு பாடல்களை கொண்டவைகளில் அந்த எண்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம் (8, 108, 1008 என்பது ஏன்?). வாரம் ஒரு அஷ்டோத்திர சதநாமாவளியை தமிழாக்கம் செய்து மாணவர் மலரில் இடம் பெற செய்தபின் அவைகளை தொகுத்து நூலாக வெளியிடலாமே. ஏதோ ஊதுற சங்கை ஊதி வைக்கிறேன்.////

    மொத்த நட்சத்திரப் பாதங்கள் 108. அத்ற்காக 108!

    ReplyDelete
  37. //// Uma said...
    நேற்று ஹோலி விடுமுறை, இன்றுதான் இந்தக் கதையைப்படித்தேன். மிக அருமை.
    சாத்தப்ப அண்ணன் கடைசியில் சொன்ன தீர்வு நடைமுறையில் கடைபிடிக்க சாத்தியமான ஒன்றே. உண்மையில் எல்லாம் இருப்பவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை. ஹைதராபாத்தை ஆண்டுவந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் தன் தந்தையின் செருப்பில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வைரக்கல்லை தன் மேஜையில் பேப்பர் வெயிட்டாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தாராம். அவர் மறைவுக்குப்பின் அதன் மதிப்பு தெரிந்து ஏலம் விடப்பட்டதாம். அதுபோன்றுதான் இதுவும்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி உமாஜி!

    ReplyDelete
  38. //// Uma said...
    மனமகிழ்ச்சியுடன் உடனிருக்கும் பெண்ணின் தாய் என்றுமே தாய்தான், அதனை சுமையாக எண்ணும் மாமியார் என்றும் மாமியார்தான்.//
    அந்த தாய் தன் மருமகளிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.////

    மாமியார் அத்தனை சுலபமாக தாயாகிவிடமாட்டார்:-))))

    ReplyDelete
  39. ///// kmr.krishnan said...
    தேமொழியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.அதாவது 'ததாஸ்து'
    என்று சொல்கிறேன்.
    அடியேன் மதுராஷ்டகத்தை ஒருமுறையும், சந்திரசேகர அஷ்டகததினை ஒருமுறையும் தமிழ் படுத்தியுள்ளேன். பார்வதி ராமசந்திரன் இன்னும் அருமையாகச் செய்ய முடியும்.////

    நானும் ததாஸ்தைச் சொல்லிவைக்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com