மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.3.12

உனக்கும் கல்யாணம் ஆவும்டா - அப்ப வந்து பாருடா!


மாணவர் மலர்!

இன்றைய மாணவர் மலரை நிறைய ஆக்கங்கள் (மொத்தம் 10) அலங்கரிக்கின்றன. படிப்பதற்கு வசதியாக இந்த மலர் 48 மணி நேரம் முகப்பிலேயே நிறுத்தி வைக்கப் பெற்றிருக்கும். உங்கள் வசதிபோல ஒவ்வொன்றையும் ரசித்துப் பாருங்கள். படியுங்கள். மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். எழுதுபவர்களுக்கு உங்களுடைய பின்னூட்டம்தான் ஊக்க மருந்து. அதை நினைவில் வையுங்கள்!

வாத்தியாரின் அடுத்த பதிவு திங்கட்கிழமை மாலை 7;30 மணிக்கு. அது ஜோதிடப் பதிவு. அடுத்த 3 பதிவுகளுமே ஜோதிடப் பதிவுகள்தான். சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

             
1
மனிதரில் எத்தனை வண்ணங்கள்?
ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்பது தமிழ் வேதம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது என்பது எப்படி? மனிதன் சுற்றம், நட்பு, ஊர், உற்றார் என மனிதக் காட்டுக்குள் ஓர் அங்கமாகத்தான் வாழ்கிறான். தான், தனது என்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு இருந்தால் அது அண்டை அயலாரை பாதிக்கும் அல்லவா? அப்படி ஏனையோர் பாதிக்கப்படாமலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டும், முடிந்தால் பிறருக்குத் துணையாக இருந்து கொண்டும் வாழ முடியும்.

அப்படி எத்தனை பேர் வாழ்கிறார்கள்? பண்டைய காலத்தில் மனிதனின் உலகம் தன் ஊர், உறவு என்று மட்டும் சுருங்கிக் கிடந்தது. இன்று பரந்துபட்ட உலகத்தில் அவன் நொடிப்பொழுதில் எங்கோ ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பாலுள்ள தனக்கு வேண்டியவர்களுடன் பேச முடிகிறது; கலந்தாலோசிக்க முடிகிறது. பல நாட்கள் காத்திருந்து செய்த வேலைகள் எல்லாம் இப்போது கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து முடிந்து விடுகின்றன. ஆகவே மனிதனின் வாழ்க்கை வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டது.

செயல், சிந்தனை இவற்றின் வேகத்திற்கேற்ப மனிதன் தன் மனப்போக்கினை மாற்றிக் கொண்டிருக்கிறானா என்றால் இல்லை. தான், தனது என்பதே அவன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதை தத்துவார்த்தமாக இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் குழப்பம்தான் மிஞ்சும். நடந்த, அனுபவித்த சில சம்பவங்களை பட்டியலிட்டு விளக்கினால் ஒருக்கால் இந்த வாக்கின் உண்மை புரியும். இப்போது அப்படிப்பட்ட சில சம்பவங்களைப் பார்க்கலாம். இவை அத்தனையும் நடந்தவை, அனுபவித்தவை, கற்பனை எதுவும் இல்லை என்பதை முன்னதாகச் சொல்லிவிட வேண்டும்.

முதல் சம்பவம்:-- ஒரு ஏழைச் சிறுவன். இளமைக்கால வறுமை. ஒளவை சொன்னாள் 'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று. அப்படிப்பட்ட வறுமை அவனுக்குப் பிறவியிலேயே வந்துவிடவில்லை. தந்தை நன்றாக வாழ்ந்தவர். 1920, 30களில் அவன் சமுதாயத்தினர் குடுமி வைத்துக் கொண்டு, பழைய பஞ்சாங்கமாக, ஆச்சார சீலர்களாக இருந்த நேரத்தில் இவர் தலையை ஆங்கிலேயர்கள் பாணியில் கிராப் வைத்துக் கொண்டு, கோட், சூட் அணிந்து கொண்டு, ஜில்லா போர்டு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். அவருடைய நெருங்கிய நண்பர் ஒரு இஸ்லாமியர். அயல் நாடுகளில் பல வியாபார நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர். தன் நண்பர் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு வாழ்வதைக் காட்டிலும் அவர் தன்னுடன் மலேயாவுக்கோ, அல்லது இந்தோசைனா என வழங்கிய இப்போதைய வியட்னாமிலுள்ள சைகோனுக்கோ வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று அந்த இஸ்லாமிய நண்பர் விரும்பினார். தன் நண்பனிடமும் சொன்னார். அவன் தாயாரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு அவருடன் இவரும் கப்பலேறி சைகோன் சென்றார். இவருக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, கைரேகை சாஸ்திரம் ஆகியவை நன்கு தெரியும். சைகோனில் சிலகாலம் நன்றாக வாழ்ந்தார். நன்றாக சம்பாதித்தார், அந்த சம்பாத்தியத்தில் சொந்த ஊரில் பெரிய வீடும், விளை நிலங்களும் வாங்கிப் போட்டார். இறைவனுக்குப் பொறுக்கவில்லை போலும். அவருக்கு காச நோயைக் கொடுத்து விட்டான். அப்போது அதாவது 30களில் இந்த வியாதிக்கு சரியான வைத்தியம் கிடையாது. கப்பல் ஏறி ஊருக்குத் திரும்பி சிலகாலம் கழிந்து இறந்து போனார். மகன் சிறு குழந்தை, மகள் பெரியவள் மூன்று வயது. குடும்பம் தத்தளித்தது. சிறுகச் சிறுக சேர்த்த சொத்துக்கள் கரைந்தன. இவன் வளர்ந்தான் படிப்புக்குப் பணமின்றி திணறினான். உறவினர்கள் கைகொடுக்க முன்வரவில்லை. ஏதோ தட்டிமுட்டி அயலார் உதவியுடன் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு முறை சென்னையில் அவனுக்கு ஒரு நேர்முகம் காண ஒரு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. சென்னை அவனுக்குப் புதியது. ரயில் ஏறி மறு நாள் சென்னை சென்றான். அங்கு அவனுக்குத் தெரிந்த உறவினர்கள் சிலர் இருந்தனர். இவன் ஒவ்வொரு வீடாகச் சென்றான்.முதலில் அயனாவரத்தில் ரயில்வே காலனியில் இருந்த ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றான். அந்த வீட்டினர் தாங்களே வெளியூர் செல்லவிருப்பதாகவும், அவனை வேறு எங்காவது போய்விடும்படியும் கேட்டுக் கொண்டனர். புரசைவாக்கத்தில் இருந்த மற்றொருவரைக் காணச் சென்றான். அந்த வீட்டு அம்மாள்தான் இவனுக்கு உறவு. அவள் வாயிற்கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி இவன் யார் என்பதைக் கண்டதும், மாமா ஊரில் இல்லை, நீ வேறு எங்காவது போய்ப்பார் என்றாள். அன்றைய நேர்முகத்துக்கு அப்படியே போய் தோல்வி கண்டு திரும்பினான். உறவுகள் எத்தனை தூரம் உதவி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். உறவினர்கள் மீது வெறுப்பு வந்தது.

இரண்டாவது சம்பவம்:- கரூரில் ஒரு பிரபலமான வக்கீல் வீட்டில் குடியிருந்தான். அந்த ஊரில் அவனுக்கு வேலை. அந்த வீட்டு வக்கீல் காலமாகிவிட்டார். அவர் மனைவி இவனைத் தன் மகன் என்றே கருதினாள், வருவோர் போவோரிடமும் இவன் என் மகன் என்றுதான் சொல்வார். காந்தியவாதி. கதர்தான் கட்டுவார். மகாத்மா காந்திஜியிடம் தன் நகைகளையெல்லாம் அரிஜன நல நிதிக்கென்று கொடுத்து விட்டவர். அந்த அம்மாள் வீட்டில் இவனுக்கு முழு உரிமை கொடுத்திருந்தார். அப்போதெல்லாம் ரேடியோ வசதியுள்ளவர்கள் வீடுகளில் மட்டும்தான் இருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத சாதனம் அது. அப்போது ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. இவன் அந்த அம்மாளுடைய வீட்டு ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த அம்மாளுடைய மருமகன் திண்டுக்கல்லிலிருந்து வந்திருந்தார். இவன் ரேடியோ கேட்டுக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே அவர் ரேடியோவை வேறு நிலையத்து ஒலிபரப்புக்கு மாற்றிவிட்டு, தன் மாமியாரிடம் என்ன இது, வீட்டில் கேள்வி முறையே கிடையாதா? ரேடியோவை யார்தான் கையாள்வது என்பது இல்லையே என்று கோபப்பட்டார். அன்று தலை குனிந்து வெளியேறினான், மறு நாள் அதே ஊரில் இருந்த ஜவஹர் பஜாருக்குச் சென்று ஒரு யு.எம்.எஸ். (இது ஜி.டி.நாயுடு அவர்களின் தயாரிப்பு) ரேடியோவை வாங்கிக் கொண்டு வைத்தான். கடனில்தான். அதுமுதல் பிறர் வீட்டுப் பொருள்களைத் தொடுவது என்றால் கூச்சமும், பயமும் தொற்றிக் கொண்டு விட்டது.

மூன்றாவது சம்பவம்:-- இவன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள், ஒரு பெண்ணுக்குத் தகப்பனான பிறகு அவன் மனைவி இறந்து போனாள். பெரிய மகனுக்கு புது டில்லியில் நாட்டுடைமையான வங்கியில் பணி. ஜனக்புரி எனுமிடத்தில் வீடு. இவன் மனைவியின் திவசம் வந்தது. அதற்காக மகன், மருமகள், பேரப்பிள்ளைகளோடு ம் மகளையும் அழைத்துக் கொண்டு காசிக்குச் சென்று திவசம் செய்ய அங்கிருந்த அனுமான் காட் எனுமிடத்திலிருந்த பிரபலமான சாஸ்திரிகள் வீட்டில் தங்கி திவசத்தை சிரத்தையுடன் செய்து முடித்தான். அன்று அனுமான் காட்டிலிருந்த ஒரு இந்துமத மடாதிபதியின் மடத்திற்கு ஸ்வாமிகள் வருவதாகத் தெரிந்து அங்கு சென்றான். அங்கு கூட்டம் எதுவும் இல்லை. உள்ளே அந்த ஸ்வாமிகள் மணையில் உட்கார்ந்து அருகில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். வலது கை அருகில் இருந்த மரப்பெட்டிக்குள் இருந்தது. அதில் பக்தர்களுக்குக் கொடுக்க விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. அவர் இருந்த அறையின் வாயிற்படியருகே ஒரு வடக்கத்திக்காரர் ஒரு அண்டா நிறைய லட்டு வைத்துக் கொண்டு ஸ்வாமிகளை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு லட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். இவனும் இவன் சுற்றமும், பேத்திகள் 7 வயது 3வயது உட்பட அனைவரும் அவரை நமஸ்கரித்து எழுந்தனர். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. இவன் வாயைக் கையால் பொத்திக் கொண்டு, ஸ்வாமி நான் தஞ்சையிலிருக்கிறேன். அவருக்கு மிகவும் தெரிந்த என் தாய்மாமன் பெயரைச் சொல்லி அவருடைய மருமான் நான் என்றேன். அப்போது அவர் ஒரு வினாடி திரும்பிவிட்டு மீண்டும் அருகில் இருந்தவரிடம் சுவாரசியமாக ஏதோ பணம் காசு விஷயம் பேசத் துவங்கிவிட்டார். கையைத் தூக்கி ஒரு ஆசீர்வாதம், முகத்தில் ஒரு புன்னகை, அல்லது விபூதி அல்லது குங்குமப் பிரசாதம் தருதல் எதுவும் இல்லை. இதேபோல முன்பொரு முறை கரூரில் பெரிய ஸ்வாமிகள் ஒருவரை தரிசிக்கச் சென்ற போதும், பின்னர் அவரை கர்னூல் எனுமிடத்தில் ஒரு அரிசி ஆலையில் தங்கியிருந்த்போது போய் இரவு சந்தித்த பொதும், முக மலர்ச்சியோடு கைதூக்கி ஆசீர்வதித்ததும், தன் மகள் திருமணம்த்துக்காக அவருடைய மடம் அமைந்த ஊருக்கே சென்று அவரிடம் தாம்பூலம், பத்திரிகை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச் சென்றபோதும், உடல் நலம் இல்லாமல், மெளனத்தில் இருந்தும் அவர் புன்னகைத்து, கைதூக்கி ஆசீர்வதித்த காட்சி இவன் மனக்கண்களில் ஓடியது. உடனே எல்லோரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியில் இருந்த வட இந்தியர் அண்டாவிலிருந்து லட்டு எடுத்துக் கொடுத்தார் இவனிடம். அதோ அந்த சாமிக்குக் கொடு என்று சொல்லிவிட்டு இவன் வெளியேறினான். அவன் இன்றுவரை அவரைப் பார்ப்பதுமில்லை (தரிசிப்பது) வழிபடுவதுமில்லை. அதற்காக அவர் சிக்கலில் மாட்டிக் கொன்டபோதும் மன மகிழ்ச்சியும் அடையவில்லை. வருத்தப்பட மட்டுமே முடிந்தது

.வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை மட்டுமே பார்ப்பதாக நினைக்காதீர்கள். நல்ல ஒளிமிக்க பகுதிகளும் உண்டு. ஆனால் நாம் பாடம் படித்துக் கொள்ள வசதியாக இருப்பது இதுபோன்ற இருண்ட நெகடிவ் பகுதிகள் மட்டுமே. அதனால்தான் இவற்றைத் தந்திருக்கிறேன். வாழ்க்கையில் இப்படிப்பட்ட நெகடிவ் அனுபவங்கள் குறைவு, பாசிடிவ் அனுபவங்கள் அதிகம், இருந்தாலும் தேவை கருதி நெகடிவ் நிகழ்வுகளைத் தந்திருக்கிறேன். தவறாகக் கருத வேண்டாம்.

இன்னும் நிறைய சொல்லலாம். உங்களுக்குப் பொறுமை வேண்டுமே. ஆனால், மனிதர்களைப் புரிந்து கொள்ள வேன்டுமென்பதற்காகச் சொல்கிறேன். உலகம் எப்படிப்பட்டது என்பதற்காகச் சொல்கிறேன். கவி கா.மு.ஷெரீப் ஒரு பாடல் இயற்றியிருக்கிறார். "நான் பெற்ற செல்வம்" எனும் ஏ.பி.நாகராஜன் படத்தில் வரும். "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா" என்பது அந்தப் பாடல். டி.எம்.செளந்தரராஜன் பாடியிருப்பார். அந்தப் பாடல் கவி.கா.மு.ஷெரீப் அனுபவித்து எழுதியிருக்க வேண்டும். எப்படிப்பட்ட கவிஞர் அவர்?

இளம் வயது நண்பர்கள் அதிகமாகப் படிக்கும் வகுப்பறை இது. வாழ்க்கை அனுபவம் அதிகம் இருக்குமென்று சொல்ல முடியாது. நல்ல உயர்ந்த கல்வியும், சமுதாயத்தில் தகுதியும், நல்ல மனங்களும் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மாதிரிக்குச் சில நிகழ்வுகள் தந்தேன். இப்படிப்பட்ட இருண்ட மனம் கொண்டவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிவிக்கவே இந்தப் பதிவு. நீங்களெல்லாம் கலந்து கொள்ளும் இந்த வகுப்பறையில் உங்கள் பெரிய மன‌ங்களையும், இரக்க குணத்தையும், பெருந்தன்மைகளையும் புரிந்து கொண்டிருக்கிறேன். பெரு நகரத்தின் ராஜபாட்டைகளை மட்டுமே அறிந்த உங்களுக்கு இதுபோன்ற நரகல் சந்துகளும் உண்டு என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பதிவு. உங்கள் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்லுங்கள். கேட்கிறேன்.
-வெ. கோபாலன், தஞ்சாவூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2




அலையும் அந்தாதியும்
ஆக்கம்:பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு
  
சௌந்தர்ய லஹரிக்கும் அபிராமி அந்தாதிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து, முன்பே பல முறை நான் யோசித்ததுண்டு. காலத்தால் ஆதி சங்கர பகவத் பாதரும், அபிராமி பட்டரும் வேறுபட்டவராயினும் அபிராமி அந்தாதி நிச்சயமாக ஒரு வழிநூல் அல்ல என்பதை அறிவேன். ஏனென்றால், அந்தாதி இயற்றப்பட்ட சூழலே வேறு. காலுக்குக்கீழே ஒரு அக்னிகுண்டம் எரியும் போது ஒருவர் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் உணர்ச்சிப் பிரவாகமேயன்றி வேறில்லை.

சௌந்தர்ய லஹரியைப் பொறுத்தவரை, ஆதிசங்கரர் அதை சிவபெருமானிடமிருந்து பெற்றுவரும் வேளையில், நந்தி தேவர் அதன் முதல் பகுதியைப் பறித்துக் கொள்ள, பின் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆதிசங்கரரால் அது பூர்த்தி செய்யப்பட்டது என்றும், ஆதி சங்கரர் இயற்றிய பகுதி 'சௌந்தர்ய லஹரி'' எனவும் சிவபெருமானால் வழங்கப்பட்டது 'ஆனந்த லஹரி' எனவும் பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இவ்விரண்டு நூல்களின் பல பாடல்களுக்கு ஒரு பொருளே காணக் கிடைக்கின்றன. இது அவை கூறும் ஸ்ரீவித்யா உபாசனாமுறையின் ஒற்றுமையை விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

இவற்றை எடுத்துக்கூறும் அளவுக்கு, எனக்கு ஞானம் இல்லையாயினும், சில பாடல்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். திரு ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் 'வேலும் வில்லும்' என்ற நூல், இராமாயணம்,கந்தபுராணம் இவற்றுக்குள்ள ஒற்றுமையைச் சொல்வது. இந்த நூலும், திரு. ஆலாசியம் அவர்களின் பின்னூட்டத்தில் காணப்பட்ட என் கருத்தையொத்த வரிகளுமே என்னுடைய இந்த சிறிய முயற்சிக்குக் காரணம். 'லஹரி' என்றால் 'அலை'எனப் பொருள்படும். எனவே இந்தக் கட்டுரைக்கு 'அலையும் அந்தாதியும்எனப் பெயர் சூட்டினேன். 

அலையும் அந்தாதியும்

ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் மிகச் சிறந்த தேவி உபாசகர்கள். நம்மை வாழ்விக்க வந்த மகான்கள்.
வாழ்ந்த காலம் வெவ்வேறாயினும், உணர்வால் ஒன்றுபட்ட இவ்விரு மகான்களும் தாங்கள் மனக் கண்ணால் 
கண்ட‌ அம்பிகையின் திவ்ய ரூபக் காட்சியை ஒரேமாதிரியாக வர்ணித்திருப்பதைப் பார்க்கலாம்.

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா (சௌ.ல.7)

'தேவி,சிறிய மணிகளை உடைய ஒட்டியாணம் தரித்தவள். யானையின் மத்தகம் போன்ற ஸ்தன பாரத்தால், சற்றே வணங்கின தோற்றமுடையவள்.சிறிய இடையுள்ளவள். அவள் முகமே பூர்ண சந்திரன். கைகளில்,கரும்பு வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் முதலியவற்றைத் தரித்தவள். இத்தகைய பரதேவதை, எங்கள் எதிரில் எப்போதும் நின்று காட்சியளிக்கட்டும் ' என்பது இதன் பொருள். இதே பொருளை, அந்தாதியின், 100 வது பாடலிலும் காணலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

சிவனும் சக்தியும் இணைந்த நிலையே இவ்வுலகினைச் செயல்பட வைக்கிறது.ஆயினும் 'சக்தியில்லையேல் சிவமில்லை'  என்பது சாக்தர்களின் துணிபு. (குண்டலினி) சக்தியை இழந்த சிவம் செயல்பட இயலாதவராகிறார்.

ஆலகாலவிஷத்தை உண்ட நீலகண்டன் பிரளய காலத்திலும் அழியாததற்குக் காரணம், அம்பிகையின் தாடங்க (காதணி)மகிமையே என்கிறார் ஆதிசங்கரர்.

அக்காலத்தில்,  தால(பனை) ஓலையால் ஆன காதணியே சுமங்கலிப் பெண்கள் அணிவது. பின் அதைச் சுருட்டிக் கயிற்றால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் வந்திருக்கலாம். தால ஒலையை அணிவதால் அதற்கு தாலி என்ற பெயர் வழங்கலாயிற்று. நாம், இப்போது 'மாங்கல்ய பாக்கியம்' என்று கூறுவதையே ஆதிசங்கரர், 'தாடங்க  -மஹிமா ' என்கிறார்.

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா (சௌ.ல: 28 ஸ்லோகம்)

அபிராமி பட்டரும் சிவபெருமான் உண்ட ஆலகால விஷத்தை அமுதமாக்கியது அம்பிகையே என்கிறார். 

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் (அந்தாதி :5ம் பாடல்)

இருவரும் ஒரே நிகழ்ச்சியை, அதாவது, விடம் உண்ட பின்னும் சிவனாரின் வாழ்வுக்குக் காரணம் அம்பிகையின் மகிமையே என்பதைச் சொல்வது, சக்தியில்லையேல் சிவமில்லை என்பதையே காட்டுகிறது. 

தலை சிறந்த இவ்விரு மகான்களும் மறை பொருளாக அவர்கள் துதிகளில் விட்டுச் சென்றிருப்பவை ஏராளம். அவை யாவற்றையும் விவரித்துக் கூறுவது மிகக் கடினம். உதாரணமாக ஒரு ஸ்லோகத்தைப் பார்க்கலாம்.

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம். (சௌ.ல.32)

இதில், 'ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரீ' எனும் மந்திரத்திலமைந்த, சிவன், சக்தி, காமன்,ப்ருத்வி,சூரியன், சந்திரன்,ஆகாசம்,இந்திரன், ஹரி போன்ற தெய்வங்களின் பீஜங்களும், மூன்று ஹ்ரீம்காரங்களின் பீஜங்களும், ரகசியமாக விளக்கப்படுகின்றன. குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். மேலோட்டமாகப் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும், அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான் தோன்றுகிறது. இதைப் போல், அபிராமி அந்தாதியில்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

என்ற பாடல், மேலோட்டமாகப் பார்க்கும் போது, எல்லா தேவதைகளும் அபிராமியைத் துதிக்கின்றார்கள் என்ற பொருள் தோன்றினாலும், உட்பொருள் இரண்டிலும் ஒன்றே என்பது புலப்படும். இரண்டிலும் குறிப்பிடும் தேவதைகளின் பெயர் ஒற்றுமை 
அவற்றின் பீஜங்களையே மறைபொருளாக உணர்த்துகின்றன.

பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது,உண்பது, படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர்,

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம் (சௌ.ல.27)

என்ற ஸ்லோகத்தில் பிரார்த்திக்கிறார். அபிராமி பட்டரும், இதையே,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! (பாடல்:10)

என்ற பாடலில் வெளிப்படுத்துகிறார்.

இறைவியின் ஸ்தனங்களும் அதில் தவழ்ந்தாடும் முத்து மாலையும் இருவருடைய துதிகளிலும் காணக் கிடைக்கின்றன.

வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம் (சௌ.ல.74)

என்ற ஸ்லோகத்தில் ஆதிசங்கரர், தேவியின் ஸ்தனங்களில் விளங்கும் முத்து மாலை, பரமசிவனின் புகழ் போல பொலிவுடன் உள்ளதாகக் கூறுகிறார்.

அபிராமி அந்தாதியிலும், இதன் குறிப்பைக் காணலாம்.

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே (பாடல்:85)

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து (பாடல்:53)

நவமணிகளில் எத்தனை எத்தனையோ வகையான அணிமணிகளை தேவி அணிந்திருக்க, முத்து மாலை மட்டும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம் என்னவாக இருக்க முடியும்?

கீர்த்திக்கும் புகழுக்கும் வெண்மை நிறம் ஒரு குறியீடு என்பது ஒரு புறம் இருக்க, மனோகாரகனான, சந்திரபகவானுக்கு உரிய ரத்தினம், முத்து என்பது இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. நெஞ்சுப் பகுதியில் உள்ள அனாஹதச் சக்ரம், மனமடங்கியவர்களுக்கு மட்டுமே கடக்க எளிதாகும். அதைக்கடந்தால், சஹஸ்ராரக் கமலத்தை அடையும் வழி (விசுத்தி, ஆஜ்ஞா சக்ரத்தைக் கடந்து) எளிதில் கைகூடும். இதன் குறியீடே முத்து மாலை.

இருவருமே ,தேவியின் திருவடி, தங்கள் சிரசின் மேல் இருக்க வேண்டுகிறார்கள்

ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா 
மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ
யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி: (சௌ.ல. 84),

என்ற ஸ்லோகத்தில், ஆதி சங்கரர், எந்தத் திருவடிகளை வேதங்களின் சிரசுகளான உபநிஷதங்கள் தங்களின் தலைகளில் அணிந்து கொள்கின்றனவோ, சிவனின் திருமுடியில் உள்ள கங்கையால் நீராட்டப் படுகின்றனவோ, அவற்றை ஏழையான, என் தலையிலும் அமர்த்துவாயாக என்று வேண்டுகிறார்.
அபிராமி பட்டரும் இதை,

சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற (பாடல்:89)

மற்றும்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. (பாடல்:41)

ஆகிய பாடல்கள் மூலம் வேண்டுகிறார்.

இதைப்போல பல பாடல்கள் ஒத்த பொருளில் இவ்விரு துதிகளிலும் காணக் கிடைக்கின்றன. இந்த மாபெரும் சமுத்திரங்களின் மிகச் சிறு துளியையே உங்கள் பாதத்தில் வைத்தேன்.

பிழைகளை தயவு செய்து சுட்டிக் காட்டுவது, என் நண்பர்கள் எனக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும். நன்றி

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
பெங்களூரு


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3



கொடுத்தது வாழ்த்தா அல்லது சாபமா?
கே. முத்துராமகிருஷ்ணன்(இலால்குடி)
--------------------------------
கடலூர் - திருச்சி பாஸஞ்சர் வந்து நின்ற உடனேயே ஜன்னல் வழியாக கைக்குட்டையை ஒற்றை இருக்கையில் போட்டு 'ரிஸெர்வேஷன்' செய்ததால் உட்கார இடம் கிடைத்தது. இந்த மாதிரி இடம் பிடிக்க ஒரு சாமர்த்தியம் வேண்டும்.

உண்மையில் நமது மக்கள் மிகவும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.

கூட்டத்தில் முண்டியடித்து உள்ளே போய் பார்த்தால், எல்லா சீட்டுகளும் கைக்குட்டை, சுடிதார் துப்பட்டா,புத்தகம், செல் ஃபோன், முறுக்கு பாக்கெட்,சீப்பு,  இன்னும் பல பொருட்களாலும் 'ரிஸெர்வ்' செய்யப்பட்டிருக்கும்.

ரிஸெர்வ் செய்த மஹானுபாவர்கள் நடைமேடையில் சாவகாசமாக  நின்று கொண்டு "தோபாரு, அந்த செல்`போன் என் இடம் உட்காராதே' என்பது போல் அதிகாரக் குரலில் உள்ளே இடம் தேடுபவர்களை 'செக்'கில் வைப்பார்கள்.பெரும்பாலும் அப்படி 'ரிஸெர்வ்' செய்த இடத்தில் யாரும் அம்ர்வதில்லை. இந்த குறுக்கு வழியை எப்படி மக்கள் ஏற்கிறார்கள் என்பது புரியவில்லை.

'ரிஸெர்வ்' செய்ய வைக்கும் பொருட்களில் ஒன்று கைக் குழந்தை!ஒரு முறை பேருந்தில் ஜன்னல் வழியாகக் குழந்தையை சீட்டில் வீசி இடம் பிடித்த 'அன்பு அன்னை'யைக் கண்ட அனுபவமும் உண்டு

எது எப்படியோ நானும் சாமர்த்தியமாக இடம் பிடித்துவிட்டேன்.

பச்சைக் கொடியைக் காண்பித்து, சின்னப் பிள்ளைகளை விடப் பத்து மடங்கு உற்சாகத்தோடு கார்டு விசிலை ஊதிவிட்டார்.அவர் கொடுத்த சிக்னலைக் கண்டு கொண்டுவிட்டதற்கு அடையாளமாக ஓட்டுனரும் வண்டியின் பெருத்த ஓசையை முழங்கிவிட்டார். ஒரு மதம் பிடித்த யானையைப்போல பிளிறிவிட்டு வண்டி நகரத்துவங்கியது.

இப்போதெல்லாம் ரயில் வண்டிகள் நிரம்பி வழிகின்றன.திடீரென்று பேருந்துக் கட்டணங்களை பலமடங்கு  ஏற்றிவிட்டதால் மக்கள் ரயிலுக்கு மாறிவிட்டனர்.

ஆமாம்! சத்திரம் பஸ்நிலையத்திற்கு பேருந்தில் ரூ8/‍= . திருச்சி சந்திப்புக்கே ரயிலில் ரூ4/- எதை மக்கள் தேர்வு செய்வார்கள்?  கூட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் ரயிலுக்கு முண்டியடிக்கிறார்கள்.

அதுவும் இன்று முகூர்த்த நாள் வேறு. பாச்சா உருண்டை மணம் வீசும் பட்டுப் புடவைகளை, அடிக்க வரும் நிறங்களில்அணிந்துகொண்டு, விளக்கண்ணெய் பூசி தலையை இறுக்கிப் பின்னிக் கொண்டு,கனகாம்பரம் அல்லது செவந்தியைச் சூடிக்கொண்டு பெண்கள் சாரி சாரியாக வண்டிக்குள் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர்.

"ஏ பாப்பாத்தி, எங்கன இருக்க?" என்று கிழவிகளின் குரலும்,

"இங்கனதான் ஆயா!"என்று பேத்திகளின் குரலும் விதவிதமாக ஒலித்துக்கொண்டு இருந்தன.

"பிள்ளைய பத்திரம்! கொலுசுமேல கண்ணு வைய்யி, அந்த சின்னப்புள்ளை கழுத்து சங்கிலி பத்திரம்" என்று அம்மாக்காரிகள் திருடர்களுக்கு 'க்ளூ' கொடுத்து உதவினார்கள்.

கல்லூரி செல்லும் யுவாக்கள், யுவதிகளைப் பார்த்ததும் கிராப்பை ஒதுக்கிச் சரிசெய்வதும்,பதிலுக்கு யுவதிகள் துப்பட்டா சரி செய்வதும் என்று ஒரு களையான நாடகம் அரங்கேறிக் கொண்டு இருந்தது.

ஒரு பெரிய குடும்பம், கடலூரில் இருந்தே வருகிறதுபோலும், சவுகரியமாக அமர்ந்து கொண்டு வந்தது. கண‌வன், மனைவி, 14 வயது துவங்கி கீழ்க்கணக்கில் 6 பெண் குழந்தைகள், தூளிகட்டி ஒரு கைக்குழந்தை, 7 மாதம் இருக்கலாம். தூளிக் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய மனம் மிகுந்த ஆவல் கொண்டது.அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை எப்படி அறிய வேண்டுமோ அப்படி அறிய கழுத்தை நீட்டி நீட்டிப் பார்த்தேன்.ம்ஹூம்! ஒன்றும் பயனில்லை.

அந்தக் காலம் என்றால் இந்த விஷயத்தை சுலபமாக அறிந்துவிடலாம். குழந்தையைக் காற்றோட்டமாக விட்டு இருப்பார்கள். இப்போதெல்லாம் அப்படியா? ஒரு பெரிய மூட்டையை இடுப்பில் கட்டிக் குழந்தையை போட்டிருந்தார்கள்.  அதனால் நான் எவ்வளவுதான் ஒட்டகச் சிவிங்கியைப் போல கழுத்தை நீட்டினாலும் , ஒன்றுக்கும் உதவவில்லை.

"உனக்கேன் அந்த ஆர்வம்?" என்று ஒரே சமயத்தில் பல குரல்கள் கிளம்பலாம்!.

எல்லாம் ஓர் ஆர்வக்கோளாறுதான்.6 பெண்குழந்தைகளையும், அடுத்தது ஆண்தான் என்று நம்பிக்கையோடு இந்தக் கலிகாலத்திலும் பெற்ற அந்தத் தம்பதிகளின் மன உறுதிக்கு ஆண்டவன் கிருபை புரிந்தானா இல்லையா என்று தெரிந்து கொள்ள மனம் விழைந்தது.

பயணம் முடியும் வரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களிடமே கேட்கவும் கூச்சமாக இருந்தது.ஆண் குழந்தையாக இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியோடு பதில் சொல்வார்கள். 7வதும் பெண் என்றால் அவர்கள் பதில் சொன்னாலும் சொல்லலாம். சொல்லாமல் ம‌வுனமும் சாதிக்கலாம். கேட்டால் அவர்கள் மனம் புண்படுமோ என்று கேட்கவில்லை.

பலரும் நின்று கொண்டே பயணம் செய்யும் சூழல்.நெருக்க‌மும் இருக்கமுமாகப் பயணம் நடந்துகொண்டிருந்தது.வண்டி முதல் நிலையமான மாந்துறையைத் தாண்டியது.

அந்த சம்சாரியின் குழந்தைகளில் 6 வயதுப்பெண் சிசு ஒன்று 'அல்ப சங்க்யை'வருகிறது என்று சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை மாதிரி சைகை செய்தது.

"அடடா!நேரம் காலம் கிடையாதா உனக்கு? இப்படி உயிரை வாங்கறயே...ஏங்க கொஞ்சம் கூட்டிட்டுப் போங்க!" என்று குடும்பத் தலைவி கணவனிடம் கட்டளையாகக் கூறினாள்.

அந்தச் சிறுமியின் தோளைப் பிடித்து முன்னால் நகர்த்திக் கொண்டே 'நகரு நகரு'என்று குடும்பத் தலைவன் வழி கேட்டான்.

வழி முழுவதும் கல்லூரிக் காளைகளும், இளஞ்சிட்டுக்க‌ளும்.

'கல்லூரிக் காதல்'என்று மனதில் பாடிக்கொண்டு விழியாலும், விரலாலும், உதட்டாலும் சைகையும், பேச்சுமாக இன்பமாக இருக்கும் இளைஞர்களும் இளைஞிகளும் அந்தக் குழந்தையின் அவசரத்தையும், அந்த குடும்பத் தலைவரின் குரலையும் கண்டு கொள்ளவில்லை. நகராமல் நின்றனர்.

குடும்பத் தலைவர் கடுப்பாகிப் போய்,"தம்பி அப்புறமா கடலை போடலாம் கொஞ்சம் வழிவிடப்பா" என்று சொல்லிவிட்டார்.

அதுவரை தங்களை மறந்து உண்மையாகவே கடலை போட்டு வந்துகொண்டிருந்த இளைஞர்  கூட்டம், இப்போது தன் நினைவுக்கு வந்தது.

"யோவ்! என்னாய்யா சொன்ன?"

"பிள்ளைக்கு அவசரம்,வழிவுடுன்னேன்"

"அதில்லை, வேற என்னமோ சொன்னயே!"

"வேற ஒண்ணும் சொல்லலியே"

"கடலை போட வேணாம்னு சொல்லலையா?"

"கடலையா? வேர்கடலையா? கொண்டக் கடலையா?"

"என்ன நக்கலா? நாங்க யார் தெரியுமில்லா?"

"தெரியாது"

"டேய் மச்சி! இந்தாளுக்கு நாம யாருன்னு காட்டுவோம் வாங்கடா"

ஒரு விடலை வயது மாணவர்கள் கூட்டம் அந்த குடும்பத் தலைவனை நோக்கி முண்டா தட்டிக்கொண்டு முன்னேறியது.

அந்தக் குடும்பத் தலைவி பயந்து போய் அலற ஆரம்பித்து விட்டாள்.

நான் மாணவர்களுக்கும் குடும்பத்தலைவருக்கும் இடையில் பாய்ந்து விட்டேன்.

"தலீவா! நிதானம் நிதானம்.." என்று முழங்கையால் ஓங்கிய கைகளைத் தாங்கிக்கொண்டேன்.

எப்போதுமே சண்டைக்குக் குறுக்கே ஆள் வந்துவிட்டால் இரண்டுபக்கமும் வீரம் அதிகமாகிவிடும்.

"நவுரய்யா!அந்தாளு என்னா பேச்சு பேசறான். அவனை ரெண்டு தாங்கினாத்தான் சரியாவரும்"

"ஆமா! நீங்க‌ தாங்கற வரைக்கும் நாங்க தூங்கிட்டு இருப்போம்ல.."

"ஏங்க வாய வச்சீட்டு சும்மா இருங்க.."

'அலப சங்க்யை'க் குழந்தை இரண்டு பக்க‌மும் மாறி மாறிப் பார்க்கிறது. மற்ற 5 பெண் குழந்தைகளும் பயத்தில் அழுகின்றன.எதைப்பற்றியும் கவலயின்றி தூளிக் குழந்தை தூங்குகிறது.

"வத வதன்னு பிள்ளையைப் பெத்துக்க வேண்டியது. ரயிலிலும் பஸ்ஸிலும் கூட்டியாந்து தொல்லை கொடுக்க வேண்டியது. யாரு இப்படி பெத்துக்கச் சொன்னா?" இது மாணவச் செல்வம்.

"என்னாடா சொன்ன.."என்று பாய்கிறார் குடும்பத் தலைவர். அவரை அந்த அம்மாள் பிடித்துப் பின்னால் இழுக்கிறார்.

நான் மாணவர்களின் ஓங்கிய கையைப் பிடித்துத் தடுக்கிறேன்.

அப்போது தான் அந்த பொக்கை வாய்ப் பாட்டி தன் வெண்கலக் குரலில்  ஆவேசமாகக் கூறினாள்.

" நல்லா இரு தம்பி! மக்கள பெத்த மவராசிய பழிக்கிறயா? நீ நல்லா இருக்கோணும். ஏன் பெத்தான்னு கேட்கிறியே? வேணும்னு கேக்கரவுங்களுக்கு தெய்வம் கொடுக்காது.உனக்கும் கல்லாணம் ஆவும். அப்போ நீயும் புள்ளைய‌ பெத்துக்குவ, இந்தப் பாட்டி சொல்றேன் இன்னைக்கு.. உனக்கு 7 பொம்பளப் பிள்ளையும், எட்டாவதா கிருஷ்ணர் மாதிரி ஒரு ஆம்பிள பிள்ளையும் பொறக்கும்...இந்தக் கிழவி வாக்குச் சொல்றேன் கேட்டுக்க... இது சத்தியமா, கட்டாயமா நடக்கும்...."

மாணவர்கள் கப் சிப் ஆனார்கள். பிட்சாண்டார்கோவில் நிலையத்தில் இறங்கி அடுத்தடுத்த பெட்டிகளில் தொத்திக் கொண்டார்கள்.பாட்டியை எதிர் கொள்ளமுடியாமல் ஓடிவிட்டார்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.

பாட்டியின் சொற்களில் இருந்த மந்திரம் என்ன? ஏன் மாணவர்கள் பாட்டிக்கு எதிர்வினை ஆற்றவில்லை? ஒரு பெரிய கூட்டத்தையே ஓடும்படி செய்த பாட்டியின் ஆன்ம பலம் என்ன? பாட்டி சொன்னது வாழ்த்தா? சாபமா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

வரைபடம்
வரைந்தவர் தேமொழி



சூரிய அஸ்தமனம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

சினம் என்னும் நாகம்
ஆக்கம்: தனுசு

சினம் என்றொரு குணம் -இது
சிங்கத்தையேசட்டென்று சருக்கிவிட்டு
சகதியில் தள்ளி
புத்தியை புதைக்க வைக்கும் .

சிம்மாசன ஆதிபர்களை
நொடியில் தீப்பொறியாய் தொற்றி
 சிந்திக்கும் ஆற்றலை சிதரடித்து
சரித்திரத்தை சாம்பலாக்கும்.

 இது அமைதி கடலையே
புரட்டிப் போடும் சுனாமி
பொறுமையின் பூமாதேவியையே
பொங்கவைக்கும் பூகம்பம்.

ஏறினால் இறக்க முடியா
விலைவாசி உயர்வு.
கன்னிமைக்கும் நேரத்தில்
கண்சிவக்க வைக்கும் வைரஸ்.

கொதித்தால் மூடமுடியாத
அனுஉலை
வெடித்தால் அடக்க முடியாத
எரிமலை.

பிறர்க்கு அச்சத்தை உண்டாக்கும்
உச்சக் கிரகம்.
அஞ்சுதலை தந்து-தன்னையே
கொல்லும் ஆறுதலை நாகம்.

இந்தசினம் கொண்ட ஜனங்கள்
ஜெயம் கொண்டதில்லை- இதனை
 இனம் கண்ட மனங்கள்
தோல்வி கண்டதில்லை

சினம்தவிர்க்க
விருந்தில்லை மருந்தில்லைமன்னவனே
பொறுக்கும் முயற்சி மட்டுமே-கோப
உணர்ச்சியை தடுக்கும் நண்பனே
-தனுசு- .

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


அருமைகள் பலவிதம்!
ஆக்கம்: ஆலாசியம்


நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
காசின் அருமை வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!
நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!
தம்பியின் அருமை தயவில் தெரியும்!
தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்!

--ஆலாசியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7





பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 175 -ஆவது பிறந்தநாள் கவிதை
ஞானப் பெருமானை வணங்கி பேரருள் பெருவோம்.
ஆக்கம்: ஆலாசியம்
------------------------------------
வங்கக் கடலோரம் வந்துதித்த ஞானச்சுடரே!
எங்கள் எண்ணமெல்லாம் நிறைந்த அன்புச்சுடரே!
தங்க குருவே தரணிபோற்றும் திருவே!
சங்கடமில்லா வாழ்வைமுழங்கிய வேதச் சங்கநாதமே!
காளியின் பக்தனே! வங்காளச்சித்தனே! -அன்
பாழிப் பித்தனே! ஜீவமுக்தனே!

பாரதத்தாயின் இடது இடுப்பில் இருகமர்ந்தோய்!
பாரெல்லாம் பணிந்துப் போற்ற உயர்ந்தோய்!
தேனினும் இனிய அன்பைப் பொழிந்தோய்!
'ஊனைஉருக்கி உள்ளொளி' பொங்கிப் பெருகியே;
மானுடம் செழிக்க, மகத்துவம் புரியவே;
மாணிக்கமொத்த மாணவன் நரேந்திரனை பயந்தே
மாநிலம் உய்ய மாதவம் செய்தோய்! - பரந்தாமக்
கருணைக்கடலே களங்கமில்லா அன்பின் ஊற்றே
அருள்வாய் எந்தையே! நானுனை -மானசீகக்
குருவாய் நினைந்தே நினதடிப்போற்றுகிறேன்.
ஆலாசியம் கோ.
சிங்கப்பூர்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
பையனின் சந்தேகம் அம்மா, எனக்குப் பெயர் மட்டும்தானே இருக்கறது. கடவுச் சொல் எங்கே  நான் எப்படி வந்திருக்க முடிய்ம்


நகைச்சுவைக் கார்ட்டூனை அனுப்பியவர் தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9

அடுத்துள்ள நகைச்சுவைத் துணுக்கு, படம். ஆட்டம் போடும் குழந்தை ஆகிய மூன்றையும் அனுப்பியவர்: ஜி.ஆனந்தமுருகன்





இந்த ஆட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10

No one wins over a Lawyer!
Joke Sent by Sabari Narayanan, Chennai


A Married Lawyer having fun in his car, with his secretary.


On getting home his wife observed panties on the back seat, she tore it apart screaming "honey what is this ??"


He calmly replied : "You have just destroyed the evidence of the rape case, worth a million for me which I'm handling. You can forget the Jewels you wanted !!"


She quickly fell on her knees apologising.


*No one wins over a Lawyer! Even something called "A WIFE"!!!*
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை

கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களின் எண்ணிக்கை இதில் வராது
----------------------------------------------------

வாழ்க வளமுடன்!

104 comments:

  1. மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்களே, என் அனுபவக் கட்டுரையை வெளியிட்டமைக்கு முதலில் நன்றி. சுயபச்சாதாபம் என்பது கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கடந்தகால காயங்கள், ஆறாத வடுக்கள், இப்போது நினைக்கும்போது சுவையாகத்தான் இருக்கின்றன. இவற்றை நான் வகுப்பறையில் எழுதுவதற்குக் காரணம், இங்கு பங்கு பெறும் அனைவருமே அறிவாற்றலும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவர்கள். சுவையாக பேசவும், எழுதவும் செய்வதோடு மற்றவர்களைப் புண்படாமல் வாறி விடுவதில் கெட்டிக் காரர்கள். அவர்கள் அனுபவித்திராத எத்தனை வித மனிதர்கள் இருண்ட மனத்துடன் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளத்தான் என் கட்டுரை. ஒரு மதகுரு செய்த செயல் எனக்கு அந்தக் கூட்டத்தின் மீதே வெறுப்பு ஏற்படச் செய்துவிட்டது. சென்ற பதிவில் டி.எம்.எஸ். பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களை தீபாவளி மலர் கட்டுரைகளைப் படிப்பது போல ஆர்வத்தோடு படித்தேன். இதில் பங்கு பெறுபவர்கள் எத்தனை திறமைசாலிகள் என்பதே பெருமையாக இருக்கிறது. இந்த இளைஞர் கூட்டத்தில் நானும் கே.எம்.ஆரும். நுழைந்து விட்டதே நாங்கள் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன். வகுப்பறை மாணவ மாணவியர் அத்தனை பேருக்கும் என் மனம் உவந்த வாழ்த்துக்கள். வாழ்க தங்கள் பணி.

    ReplyDelete
  2. திரு கோபாலன் அய்யா அவர்களின் ஆக்கத்தில் கடைசி பாராவில் ;இளம் வயது நண்பர்கள் அதிகம் படிக்கும் வகுப்பறை இது..........

    உண்மைதான் அய்யா இளம் வயது உள்ளவர்கள் இங்கு அதிகம் வரத்தான் செய்கிறோம். அவர்களுக்கு புதிய உலகமும் புதிய பழக்க வழக்கங்களும் கை பற்றி பெரு நகரத்தின் ராஜபாட்டை வீதிகளையே காட்டும் போது , பார்க்காமல் விட்டது சிறிய சந்துகளும் நரகல் களும் உண்டு தான்.

    வகுப்பறையில் தாங்கள் போன்ற பெரியோர்கள் போதிக்கும் இந்த தர்ம சிந்தனைகளும் , வாழ்கை அனுபவங்களும்மற்றவர்களை நிலைப் படுத்தி நேர் படுத்தி பக்குவப் படுத்தும் . அதற்க்கான வாய்ப்புகள் இங்கு வகுப்பறையில் அதிகம் .

    மனிதனுக்கு மனிதன் தர வேண்டியது முதற் கண் மரியாதை என்பதே என் கருத்து .மரியாதை தரும் பட்ச்சத்தில் மற்றவைகள் அங்கே தானாகவே முளை விட துவங்கி விடும். . மரியாதை பெற்றவுடன் ஒரு கனிவு வரும் . கனிவு வந்தவுடன் பணிவு என்று மனித நேய சமிக்சைகள் ஒவ்வன்ராக வந்து விடும் . மனிதம் மலர்ந்து விடும் .

    சிங்கப்பூரில் ஒருமுறை நான் பார்த்த ஒரு அரசாங்க விளம்பரம்."பணிவன்பு முதல் இயக்கம்".

    அதாவது மனிதன் எந்த பதவியில் இருந்தாலும் சரி எந்த நிலையில் இருந்தாலும் சரி அவன் அடுத்தவருடன் தொடர்பு கொள்ள முனையும் போது அவன் உடம்பின் முதல் இயக்கம் பணிவன்பாக இருக்க வேண்டும் என்பதாகும்.

    இந்த இயக்கம் இயங்க ஆரம்பித்தால் மனிதம் நிலை கொண்டு விடும்.

    இயக்கம் துவங்குமா? மனிதம் நிலை கொள்ளுமா?

    நாம் இயங்க துவங்குவோம் மற்றவை தானாக நிலை கொல்லும்.

    சின்ன சின்ன கதைகள் மூலம் நல்லதொரு ஒளிமிக்க பகுதிகளையும் பார்க்க வைத்திருக்கிறீர்கள் .

    ReplyDelete
  3. வாத்தியாரின் அடுத்த பதிவு திங்கட்கிழமை மாலை 7;30 மணிக்கு. அது ஜோதிடப் பதிவு. அடுத்த 3 பதிவுகளுமே ஜோதிடப் பதிவுகள்தான். சரிதானே?
    வணக்கம் சார்,
    எனக்கு ரொம்ப ஜாதக பாடம்தான் பிடிக்கும் ரொம்ப நன்றி இதில் அலசல் பாடமிருக்கின்றதா அன்னை தெரிசா ஜாதம் அலசுங்க அவங்க மங்கையர் திலகம் சகோதர ச்கோதரிகளே தங்களின் பதிவுகள் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. /// Thanjavooraan said...
    மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்களே, என் அனுபவக் கட்டுரையை வெளியிட்டமைக்கு முதலில் நன்றி. சுயபச்சாதாபம் என்பது கூடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கடந்தகால காயங்கள், ஆறாத வடுக்கள், இப்போது நினைக்கும்போது சுவையாகத்தான் இருக்கின்றன. இவற்றை நான் வகுப்பறையில் எழுதுவதற்குக் காரணம், இங்கு பங்கு பெறும் அனைவருமே அறிவாற்றலும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்டவர்கள். சுவையாக பேசவும், எழுதவும் செய்வதோடு மற்றவர்களைப் புண்படாமல் வாறி விடுவதில் கெட்டிக் காரர்கள். அவர்கள் அனுபவித்திராத எத்தனை வித மனிதர்கள் இருண்ட மனத்துடன் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளத்தான் என் கட்டுரை. ஒரு மதகுரு செய்த செயல் எனக்கு அந்தக் கூட்டத்தின் மீதே வெறுப்பு ஏற்படச் செய்துவிட்டது. சென்ற பதிவில் டி.எம்.எஸ். பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களை தீபாவளி மலர் கட்டுரைகளைப் படிப்பது போல ஆர்வத்தோடு படித்தேன். இதில் பங்கு பெறுபவர்கள் எத்தனை திறமைசாலிகள் என்பதே பெருமையாக இருக்கிறது. இந்த இளைஞர் கூட்டத்தில் நானும் கே.எம்.ஆரும். நுழைந்து விட்டதே நாங்கள் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன். வகுப்பறை மாணவ மாணவியர் அத்தனை பேருக்கும் என் மனம் உவந்த வாழ்த்துக்கள். வாழ்க தங்கள் பணி.//////

    நீங்கள் சொல்வது உண்மைதான். வகுப்பறைக்கு பல திறமைசாலிகள் வந்து போகின்றனர். அதிகம் படித்து நல்ல வேலையில் இருப்பவர்களும் வந்து போகின்றனர். ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுனர், இரண்டு விஞ்ஞானக் கழக ஆராய்ச்சியாளர்கள் , பி.ஹ்ச்.டி பட்டம் பெற்ற சிலர், அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர், 75 வயதான நியூயார்க்கில் வசிக்கும் குடும்பத் தலைவி, போன்ற பலர் வந்து படிக்கின்றார்கள். மாணவர்களில் பாதி எண்ணிக்கை அளவு, அவர்களின் profile எனக்குத் தெரியும். ஆனாலும் அதை அவர்களின் அனுமதியின்றி வெளியிடக் கூடாது என்று ரகசியம் காக்கின்றேன்.
    எராளமான அள்வு இளம் உள்ளங்கள் வந்து போகின்றன. நாளுக்கு நாள் என் பொறுப்புக் கூடிக்கொண்டே போகின்றது. அனைவரையும் கவரும் விதத்தில் எழுத வேண்டியது கட்டாயமாகிவிட்டது.

    இதெல்லாம் எனக்குக் கிடைத்த வெற்றியாக ஒருபோதும் நான் நினைதத்தில்லை. நான் தீவிர வாசகன். அது ஒன்று மட்டுமே என்னுடைய தகுதி. எழுத வந்ததெல்லாம் விபத்து. என்னுடைய போதாத நேரம். நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நிறுத்திவிடுவேன். எனக்கு வாசிப்பதில் மட்டுமே அதிக விருப்பம். ஆனால் எழுதத் துவங்கிய பிறகு அதற்கு அதிக நேரமில்லாமல் போனது துரதிர்ஷ்டமே!

    உங்கள் வாழ்த்திற்கு நன்றி! அதை முருகப்பெருமான் உங்கள் மூலமாகச் சொன்னதாக்வே நினைக்கிறேன்!

    ReplyDelete
  5. அதாவது மனிதன் எந்த பதவியில் இருந்தாலும் சரி எந்த நிலையில் இருந்தாலும் சரி அவன் அடுத்தவருடன் தொடர்பு கொள்ள முனையும் போது அவன் உடம்பின் முதல் இயக்கம் பணிவன்பாக இருக்க வேண்டும் என்பதாகும்.

    ஆறு மனமே ஆறு என்ற படத்தின் வரும் பாடல் வரிகள் இது..

    நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை விரும்பும்..

    பணியுமாம் என்றும் பெருமை அணியுமாம் தன்னை வியந்து..

    விண்னை பார்த்து நிமிர்ந்து நிற்குது பதறு என விவசாயி படத்தில் வாத்தியார் பாடல்

    சிங்கையில் தெரிந்திருந்தாலும்
    சிந்தையில் நிற்பது தமிழே..

    ReplyDelete
  6. தஞ்சை சகோதரர் சொல்லும் இளைஞர்
    நெஞ்சை அள்ளும் வயதிலா அறிவிலா

    வாதிற்கு அழைப்பதாக எண்ண
    வசவுடன் எண்ண வேண்டாம்

    வாலிபத்திற்கு விளக்கம் கேட்கும்
    வாதம் என கொள்ள வேண்டாம்

    பதிவுகள் படிக்கப்பட்டன
    பதில்கள் மவுனம்

    ReplyDelete
  7. பொங்களுரு..
    பொக்கிஷம்

    கெஞ்சு தமிழில் இருந்தாலும்
    கொஞ்சம் தொலைவில்

    அதனால் தொடர்கிறது
    அந்த மௌனம்..

    ReplyDelete
  8. அடுத்து வந்தது..
    அந்த சிந்தனையை கொண்டு தந்தது

    அது
    விக்கிரமாதினும் வேதாளமும்

    தொடர்ந்து வந்த கவிதைகளும்
    தொடங்கிவிட்ட நகைச்சுவையும்

    படித்தோம் ரசித்தோம்
    பதில் ஏதும் சொல்லமல்

    மவுனத்துடன் படிக்கிறோம் ராகம்
    மதிப்புள்ள வாத்திக்கு நன்றி சொல்லி..

    ReplyDelete
  9. @thanjavooran avl,

    இருண்ட அனுபவங்களும் இந்த‌ உலகத்தின் ஒரு பக்கம் என்று
    இளைஞர்களுக்கு பரிவுடன் எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் இன்றைய சூழ்நிலையில் அலுவலகத்தில் தான் வாழ்க்கையின் (நாளின்)பெரும் பகுதி கழிகிறது. ஆகவே சமூகத்தின் (சொந்தங்களின்) அனுபவங்கள் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.

    @பார்வதி ராமசந்திரன் அவர்கள்,
    நல்ல கட்டுரை.

    //குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். //
    லலிதா சகஸ்ர நாமாவை படிக்கலாம். ஆனால் ஜபிப்பதற்கு குரு உபதேசம் தேவை என்பது என் கருத்து.

    //மேலோட்டமாகப் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும், அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான் தோன்றுகிறது. //

    கேரளாவில் நவராத்திரி சமயங்களில் லலிதாம்பாள் சோபனம் என்று லலிதா தேவியின் வரலாற்றினை பாடி வழிபடுவார்கள். அதில் கடைசி யுத்த கள விவரனையில் இதே போல படித்ததாக நினைவு. தங்களிடம் இருந்தால் பார்க்கவும்.

    @தனுசு & ஆலாசியம்
    கவிதை அருமை. தங்கள் கவிதையின் மூலமாக தமிழ் கற்பது மிகவும் இனிமையான அனுபவம்

    @ஆனந்தமுருகன்
    அனுப்பியதில் இரண்டாவது படத்தில் ஆட்டோவிற்கு பின்னால் உள்ள வாசகம் சூழ்நிலைக்கு பொருத்தமானது. "பொய் சொன்னால் காகம் கடிக்கும்"

    @கிருஷ்ணன் சார்,
    நல்ல கட்டுரை. கிழவியின் வார்த்தைகளில் மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் சுபாவம் அவர்களை அச்சுழ் நிலையை விட்டு விலக வைத்தது. They know how to avoid unwanted unpleasant situations. nothing else..

    ReplyDelete
  10. தஞ்சைப் பெரியவர் ஐயா அவர்களின் அனுபவங்கள்
    அவரை செதுக்கிய உளிகள், அது வாழ்க்கையில்
    அனைவரும் அறிய வேண்டிய மருந்தை உண்ட நினைவுகள்...

    பணம் இல்லாவிட்டால் இந்த உலகம் என்னவெல்லாம் செய்யும்
    என்பதை அனுபவத்தில் கண்ட வாழ்வின் வலி மிகுந்த வரையறைகள்.
    ஏழை என்றால் ஏதோ பெரு வியாதிக்காரனோ!
    என்று அருவருக்கப் பார்க்கும் உறவுகளின் அருவருப்பான நாடகங்கள்...

    (வெறும் பயப் பிள்ளைக்கு பேச்சப்பாரு என்பது நான் கேட்ட வசனம்.
    அதனாலே நான் முதன் முதலில் சிங்கப்பூர் வந்து ஒரு லட்சம் சம்பாதித்த
    அந்த மாதம் என் தந்தையாருக்கு ஒருக் கடிதம் எழுதினேன்
    "அப்பா இனி நீங்கள் நிமிர்ந்து உட்காருங்கள் ஏனென்றால்
    இனி நீங்கள் லட்சாதிபதியின் தந்தை என்பதால்" என்று.....

    அந்த தந்தை இப்போது தனது எம்பத்தாறு வயதில் என்னோடு
    இருந்து பூரித்து ஆசிர்வதிக்கிறார். இங்கு வந்து நான்கு வருடம் ஆயிற்று இது வரை
    பொது போக்குவரத்திலே பஸ்ஸிலோ ரயிலிலோ ஒரு முறை
    கூட ஏறவில்லை.

    வந்த ஓரிரு தினத்திலே (ராசி இல்லாதவன் என்று மற்றவர்களோடு சேர்ந்து தன்னைத்
    தானே நொந்த அந்த எனது தந்தை தான்) நான் வாங்கிய முதல்
    காரில் அவரே முதன் முதலில் அதனில் பயணித்தார் இன்றும் தொடர்கிறது...
    இப்போது உறவுகள் யாவும் உறவாட துடிக்கிறது!)

    தொடரும்...

    ReplyDelete
  11. உயர்ந்த இடத்தில் இருப்பதாலோ! அதிகம் படித்ததாலோ,
    (ஏன்?அழகாக, சிவப்பாக). வேத உபநிடத ஞானம், நுனி நாக்கு ஆங்கிலம்,
    பன் மொழித் திறன் இவைகள் இருந்தாலும்... மனித நேயமும்
    பண்பும் இருக்க வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை
    என்பதை காண்பித்த மிகப் பெரிய உதா(ரணம்).

    நல் பயிர்களுக்கு இடையே தான் கலைகளும் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும்
    என்பதை அனுபவ ரீதியாக புரிந்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பு...
    (சாமியே வரம் தந்தாலும் பூசாரி அனுமதிக்க மாட்டான் என்பதைப் போன்றது)

    அயலாரின் பொருள் ஐயாவிற்கு தந்த அனுபவம்... மிகவும் சங்கடமான ஒன்று.
    நினைக்க கூசும்...

    (கல்லூயில் படிக்கும் போது எனது ரத்த சொந்தமே நான் கையில் எடுத்த அவர்களின் ரெக்சின் பேக்கை வாங்கிக் கொண்டு
    மஞ்சப் பையைக் கொடுத்து அனுப்பிய அனுபவம் இன்றும் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது
    இந்த நினைவுகள் எனக்கு கூச வில்லை நினைக்கும் போதெல்லாம் வலிக்கும்)

    ஐயாவின் அனுபவங்கள் அதன் பாடங்கள் அவரின் குழந்தைகளுக்கும்,
    பேரக் குழந்தைகளுக்கும் நல்லொதொரு வழிகாட்டியாக இருக்கும்.

    இவைகள் தான் உலகாயதப் பொருள்களுக்கு அப்பால் நம்மை நகர்த்துகின்றன...
    எனது எண்ணம், வாழ்வின் இரு பக்கங்களையும் பார்த்தவன் முதிர்ச்சி அடைகிறான் அவனே
    முக்திக்கும் முயல்கிறான் என்றால் இந்த வாழ்க்கை இனிமையானதே என்பேன்.

    "அன்னையையோ பார்த்ததில்லை..
    தந்தையோ காண்பதில்லை
    மாமியோ பார்ப்பதில்லை
    மாமனோ கேட்பதில்லை
    பட்சம் தந்து பரிசளிக்க யாருமில்லை"

    ஆம், இல்லாரை எல்லோரும் எள்ளுவர்...
    இருந்தும் ஞானத் தாய் மட்டும் தனது
    மடியில் அமர்த்துவாள்....

    அப்படிப் பட்ட அனுபவ சாலிகளை உறவாகப்
    பெற்றவர்கள் தாம் பாக்கியவான்கள்...
    அது வெல்லும் (வென்ற) யானை அதில் பயணிப்பது வெற்றிக்கே...

    தங்களின் அனுபவங்கள் வகுப்பறையில் வாசித்த வாழ்க்கைத் தத்துவங்கள்..
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  12. அருமை சகோதரியாரே!

    அலையும் அந்தாதியும்
    ஒப்பீடு அருமை...

    காலத்தால் வேறுபட்டாலும் கருத்தால் ஒன்றுபட்ட
    காவியங்களின் கவின் மிகு கருத்துக்கள் யாவும்...

    உண்மை முக்காலும் உண்மையானது
    என்பதை நமக்கு உணர்த்துகின்றன..

    ஒருதுளி என்றாலும் அமுதம் அன்றோ
    தங்களின் ஆக்கம் அமுதமாய் இருந்தது...

    பகிர்வுக்கு நன்றிகள்...

    நள்ளிரவைத் தாண்டி ஒரு மணி இருபது மணித்துளிகள்
    ஆனதால்.. மற்றவைகள் நாளை வாசிக்கவேண்டும் நன்றி.

    ReplyDelete
  13. வாத்தியார் ஐயா வணக்கம்.

    பப்ளி மாஸ் பழம் போல அல்லது அமுல் பேபி போல இருக்கும் குழந்தையின் ஆட்டத்தை கண்டாலே அனைத்து கவலையும் மறந்து விடும் என்ன ஒரு ஆனந்தம் பாருங்கள் முகத்தில்.

    அக்கா தேமொழியின் படம் நாணயத்தின் இருமுகங்களை காட்டுகின்றது .

    மனதை நெருடியது ஐயா கோபாலனின் படைப்பு.

    அக்கா பார்வதியின் ஆக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது சமஸ்கிரிதம் அழிந்து வரும் காலங்களில் தங்களை போன்றவர்களின் படைப்பு புத்துயிர் கொடுப்பது போல உள்ளது .

    ஐயா திரு ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புக்கு ஈடு அவர்தான் என்பதனை மீண்டும் நிருபித்து உள்ளார். ஆக மொத்தம் அனைத்தும் அருமையிலும் மிகவும் அருமை. இரண்டு கைகளில் உள்ள பத்து விரல்களை போல.

    --

    ReplyDelete
  14. Vanakkam
    Thank you Gopalan sir for sharing the experiences. as you said these experiences will guide the youngsters when they come across similar experiences.

    Themozhi, ungal "kai mozhiyum" azhagu.

    Thanusu Sir, kalakareenga.

    Aalasiam Sir, !ungal perumai ungalin ennathil theirgiradhu"

    Krishnan Sir, As usual arumayana nadai. I like your writing

    Totally a very good weekend for the classroom.

    Ramaddu

    ReplyDelete
  15. மனிதரில் எத்தனை வண்ணங்கள் என்று தலைப்புக் கொடுத்து அதனை பளிச்சென்று விளக்கும் வண்ணம் ஒரு கூட்டத்தினரின் புகைப்படத்தையும் அழகுற வெளியிட்டுள்ளீர்கள்.அதில் ஒரு பெண் பளிச்சோ பளிச்.

    தஞ்சாவூரார் ஆக்க‌ம் கொஞ்சம் கரும்பக்கத்தைக் காட்டுகிறது என்றாலும், அவரே கூறுவது போல அதுவும் அனுபவக் கல்வியே.

    அவர் கூறும் மடம் அவர் கூறுகின்ற பெரிய சுவாமிகள் பட்டத்திற்கு வருமவரை மிகச் சிறிய அளவிலேயே இருந்தது. அன்றாடம் மடத்தில் இருப்போர் உணவுக்குக் கூட வழியில்லாத கால கட்டமும் உண்டு.பெரிய சுவாமிகள் தன் தபசாலும், ஞானத்தாலும், வாசிப்பாலும், மனித மனங்களைப் புரிந்து கொண்டதாலும்,படிப்படியாக மடத்தின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தார்.அவருடைய நினைவாற்றல் அபாரமானது.அந்த நினைவாற்றலே மடத்திற்கு பல புதிய சீடர்களைக் கொண்டு சேர்த்தது.அவர் காலத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக செல்வம் பெருகியது. ஆனால் செல்வாக்கு குறைந்துவிட்டது.
    மடம், மடாதிபதிகள் எல்லோருக்குமே ஒரு நல்ல/கெட்ட காலங்கள் உண்டு போலும்.தஞ்சாவூராரின் தமிழுக்கு கேட்கவா வேண்டும். நல்ல மொழி ஆற்றலோடு உள்ளது ஆக்கம்.

    ReplyDelete
  16. திருமதி பார்வதி ராமச்சந்திரன் என் வேண்டுகோளை ஏற்று நல்ல தொரு ஆக்கத்தை அளித்துள்ளது மன மகிழ்ச்சியை அளிக்கிறது.இது தொடர‌ட்டும் என் வேண்டுகிறேன்.

    பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் என்று நினைக்காமல் இடையிடயே இது போன்ற அறிவுசால் ஆக்கங்களும் அவசியம்.மிக நல்ல ஆக்கம் பாராட்டுக்கள்.

    'அலையும், அந்தாதியும்'= தலைப்பே அருமை."தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்" என்ற பாரதியின் வரிகள் பட்டரை நினைந்து சொன்னதுதான்.

    ReplyDelete
  17. தேமொழியின் 'அஸ்தமனம்' நல்ல ஓவியம்.பார்த்து ரசித்தேன்.

    'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி..'பற்றிய தனுசுவின் ஆக்கம் நன்று.
    படித்துரசித்தேன்.

    "அத்தை பெருமை செத்தால் தெரியும்"என்ற சொல்லடையின் தாக்கமோ நண்பர் ஹாலாஸ்யத்தின் கவிதை? சிறப்பாக உள்ளது.

    ஸ்ரீபரமஹம்ஸரின் 175வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்கும் சமயம் ஹாலாஸ்யம் வகுப்பறையிலும் அதனை நினைவூட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. அடுத்துள்ள 'லைட் ஹார்டெட்' துணுக்குகள் அனுபவித்தேன்.அனுப்பிய தேமொழி, சபரி, ஆனந்த முருகனுக்குப் பாராட்டுக்கள்.ஆட்டம் போடும் குழந்தை எப்போது ஆட்டத்தை நிறுத்தும்? தொந்தி வலிக்காதா இப்படி போட்டு 'ட்விஸ்டு' கொடுத்தா?

    ReplyDelete
  19. அக்காலத்தில் பிரவசனக் கூட்டங்களில் 'சள சள' என்று பேச்சுக் குரல் கேட்கும். அப்போது 'சத்து சத்து' என்று யாராவது உரக்கக் குரல் கொடுத்து
    வம்பளப்புப் பேச்சினை கண்டிப்பார்கள். இப்படி கண்டிக்கும் குரல்களும்
    பிரவசனத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும்.

    'நான் மவுனம்,நான் மவுனம்' என்று சாலையோடு ஒரு பண்டாரம் சொல்லிக் கொண்டே போனாராம். "அதை ஏன் இப்படி சத்தமா சொல்ற?" என்று கேடாளாம் ஒரு குசும்புப் பாட்டி.இந்த ஜோக் எப்பூடீ?

    ReplyDelete
  20. //கிருஷ்ணன் சார்,
    நல்ல கட்டுரை. கிழவியின் வார்த்தைகளில் மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் சுபாவம் அவர்களை அச்சுழ் நிலையை விட்டு விலக வைத்தது. They know how to avoid unwanted unpleasant situations. nothing else..//

    நன்றி ஸ்ரீகணேஷ்! Did they not create an unnecessary/unwanted situations/ scene themselves?

    ReplyDelete
  21. //அக்கா பார்வதியின் ஆக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது சமஸ்கிரிதம் அழிந்து வரும் காலங்களில் தங்களை போன்றவர்களின் படைப்பு புத்துயிர் கொடுப்பது போல உள்ளது .

    ஐயா திரு ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புக்கு ஈடு அவர்தான் என்பதனை மீண்டும் நிருபித்து உள்ளார்.//

    பாராட்டிற்கு நன்றி மாயக்கண்ணா அவர்களே! சமஸ்கிருதம் இன்றும் என்றும் கேரளத்தில் செழுமையாகவே உள்ளது. மராட்டியத்தில் புனாவிலும், உத்திரபிரதேசத்தில் காசியிலும் சமஸ்கிருதம் உயிர்ப்புடன் உள்ளது.ஜெர்மனியிலும் மற்ற மேலை நாட்டு பலகலைகளிலும் உயிர்ப்புடன் உள்ளது.கர்நாடகாவில் மத்தூர் என்ற கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் சமஸ்கிருதத்திலேயே உரையாடுகின்றனராம்.

    பேர் அறிஞர் அண்ணா தன் முதல் நாடாளுமன்ற உரையில் 'நகரேஷு காஞ்சி'யில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டாராம்.மேலும் 'எதா ராஜா ததா பிரஜா'என்ற சமஸ்கிருத முது மொழியையும் கூறினாராம்.
    இச் செய்தி சுவாரஸ்யமாக இல்லை?

    ReplyDelete
  22. தஞ்சாவூரார்,KMRK சம்பவ விவரிப்பு,தேமொழி ஓவியம் (வரைபடம்?), தனுசு, ஆலாசியம் கவிதைகள்,பார்வதி அம்மையாரின் லஹரி கட்டுரை, ஆனந்தமுருகன்,சபரி துணுக்குகள் என்று வழக்கம்போல களைகட்டியிருக்கிறது வாத்தியார் மலர்..எல்லாமே நன்றாக இருந்தன..வாழ்த்துக்கள்..

    இதிலே KMRKவின் எழுத்துநடை இந்தவாரம் என்னை மிகவும் கவர்ந்தது..சுவாரஸ்யமாகத் தோன்றியது..
    ////அம்மாக்காரிகள் திருடர்களுக்கு 'க்ளூ' கொடுத்து உதவினார்கள்.///////
    ////சின்னப் பிள்ளைகளை விடப் பத்து மடங்கு உற்சாகத்தோடு கார்டு விசிலை ஊதிவிட்டார்.///
    ///குழந்தையை சீட்டில் வீசி இடம் பிடித்த 'அன்பு அன்னை'////
    என்று இந்த பாணியிலே ரயில் பயணத்து நிகழ்வுகளைப் படம்பிடித்துச் சொல்லி
    'ரிஸெர்வ்' -கொட்டேஷன் போட்டு சட்டிலாகத் தாக்கி ரிசர்வேஷனை கிண்டலடிக்கும் போதும்
    "உனக்கேன் அந்த ஆர்வம்?" என்று கேட்டு நியாயமான ஆர்வத்தை விளக்கும்போது சரி..கலக்கிவிட்டார் KMRK .
    பம்மல் கே.சம்மந்தத்திலே கமல் சிம்ரனுக்குச் சொன்னது வாழ்த்தா? சாபமா?என்று அதேபாணியிலே
    " நல்லா இரு தம்பி! மக்கள பெத்த மவராசிய பழிக்கிறயா? நீ நல்லா இருக்கோணும். ஏன் பெத்தான்னு கேட்கிறியே?
    வேணும்னு கேக்கரவுங்களுக்கு தெய்வம் கொடுக்காது."
    பாட்டி அம்மாள் கல்லூரிக் காளைகளுக்கு சொன்னது சிந்தனையைத் தூண்டிவிட்டது..

    அந்த சிந்தனையைப் கேள்வியாக்கிப் பகிர்கிறேன்..

    முக்தி அடையாத ஆன்மாதான் இந்த உலகத்தில் பிறவியாக பிறப்பெடுக்கிறது என்பதே ஆன்மீகவாதிகளின் கருத்தாக்கம்..
    இந்த அடிப்படையில் பார்த்தால் ஆன்மாவின் வரவு செலவுக் கணக்கிலே பிறப்பு என்பதே பாவச் செயலின் வரவுதான்..

    அந்த பாவச் செயலை நிகழ்த்தக் கருவியாக இருக்கும் தாய்மார்கள் பாவத்துக்குத் துணை போனவர்கள் என்று கொள்ளலாமா?

    குழந்தை பேறுஇல்லாத பெண்களை இந்தவகை பாவம் செய்யாத புண்ணிய ஆத்மாக்கள் என்று கொள்ளலாமா?

    ///"வேணும்னு கேக்கரவுங்களுக்கு தெய்வம் கொடுக்காது."//////

    தெய்வத்துக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
    'வேணாம் வேணாம்' ங்குற ஆளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து 'வேணும் வேணு'ங்குற ஆளுக்கு 'இல்லை..போ..' என்று சொல்ல தெய்வத்துக்கு பயித்தியம் பிடித்துவிட்டதோ?

    ஆமாம்..முறை தவறிய உறவுமுறைகளுக்குப் பிறந்த சிசுக்கள் குப்பைத் தொட்டியிலே..முறையாகத் திருமணம் செய்து வாரிசு இல்லாது அரசமரம் ஆலமரம் என்று சுற்றித் தவிக்கும் தம்பதியினர் நிலையோ பரிதாபம்..
    இந்நிலைக்கு என்ன காரணம்?காரகன் குரு எங்கே ஒழிந்து போனானோ?தெய்வங்கள் தூங்கிவிட்டனவா?
    இல்லை அப்படியோன்றே இல்லையா?

    பிள்ளை பெறுவது இப்படிப் பலருக்குப் பிரச்சினை என்றால் அதற்கும் முன்னே நடக்கவேண்டிய திருமணமே ஆகாமல் ஒண்டிக்கட்டையாய் காலம் தள்ளும் பலரின் நிலை இன்னும் பரிதாபம்..

    அல்லது இயல்பாக நிகழ்கிற பிறப்பு இறப்புக்கள்,இன்னபிற இத்தியாதிகளை இல்லாத தெய்வத்தினைத் தொடர்பு படுத்தி புகழையும் பழியையும் நாம்தான் அந்த ஜந்து மீது சுமத்துகிறோமோ?

    ReplyDelete
  23. @KMR Krishnan,
    //நன்றி ஸ்ரீகணேஷ்! Did they not create an unnecessary/unwanted situations/ scene themselves?//

    நான் எதிர்பார்த்த கேள்வி...ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்வதன்றால் மாணவர்களின் யதார்த்த பேச்சில் இருந்த உண்மை சுட்டதால் வந்த கோபம், கோபத்தால் புத்தி மற்றும் விவேகத்தை மறந்த கிழவியின் பேச்சு..அதைப் புரிந்து மேலும் வளர்க்க விரும்பாத மாணவர் சமயோஜிதம்....அவ்வளவு தான்..
    இதில் எங்கிருந்து மாயம் மந்திரம் வார்த்தைகளில் வந்தது.
    பெரியவர்கள் இன்றைய இளைஞர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது...

    ReplyDelete
  24. என்படத்தை வெளியிட்ட ஐயாவிற்கு நன்றி, அதை ரசித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி. ஆலாசியத்தின் கவிதைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படம் மிகவும் பிடித்துப்போய் தேடிப் போனதில் "oldindianphotos.in" தளத்தில் மேலும் அறிய பல படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஐயா எப்படி படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று ஒரு பதிவு போடக் கூடாதா?

    நகைச்சுவைப் பகுதியின் சிகரம் பாப்பாவின் நடனம்தான் . சபரிக்கும், ஆனந்த முருகனுக்கும் நன்றி. பாபி படத்தில் வந்த "zoot bole kauwa kaate" பாடலை ஆட்டோவின் பின்னால் பார்த்ததும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று கூகிள் transliteration இல் ஹிந்திக்கு மாற்றி பிறகு translate செய்து முயற்சித்த தகிடு தித்தங்கள் உதவாமல் போக ஸ்ரீகணேஷ் வந்து உதவி செய்துவிட்டார், அவருக்கும் நன்றி.
    ------
    இளைய தலைமுறைக்கு உலகை உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வெகு அக்கறையுடன் எடுத்துச் சொன்ன தஞ்சாவூர் ஐயாவிற்கு நன்றி. வாழ்வில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், மோப்பக் குழையும் அனிச்சம், நாவினால் சுட்ட வடு போன்ற சம்பவங்கள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும்தான். சிரத்தையுடன் எடுத்துரைத்த அன்புக்கு நன்றி.
    ------
    தேமொழி: "ஹாய் பச்சை சட்டை...நீங்கதானே இந்த இரண்டு லட்டு திங்க நினைச்சு "டேய் நீ படத்த எடு, நான் காஸ்ட்டிங் பண்ணிகிரேன்னு கூச்சல் போடறவரு."
    பச்சை சட்டை: "போங்கம்மா, போயி உன் கூகிள் காமாட்சிகிட்ட சரியாக் கேட்டிட்டு வாங்க"

    ReplyDelete
  25. பார்வதியின் "அலையும் அந்தாதியும்" ஆராய்சிக் கட்டுரை பிரமாதம். பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல பொதுவாக இலக்கியங்களை கோனார் தமிழுரையுடன் படித்து, தேர்வுக்கு தேவையான அளவு மட்டுமே மனப்பாட செய்யுள்களை படித்துதான் என் அனுபவம். நீங்கள் இருமொழிகளின் பக்தி இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரை எழுதுவது புதிய செய்திகளை அறியத் தருகிறது. நன்றி பார்வதி. உங்கள் வலைப்பூவின் சுட்டியை கொடுத்து நினைவு படுத்தியதற்கும் நன்றி.
    ------
    "பச்சைக் கொடியைக் காண்பித்து, சின்னப் பிள்ளைகளை விடப் பத்து மடங்கு உற்சாகத்தோடு கார்டு விசிலை ஊதிவிட்டார்.அவர் கொடுத்த சிக்னலைக் கண்டு கொண்டுவிட்டதற்கு அடையாளமாக ஓட்டுனரும் வண்டியின் பெருத்த ஓசையை முழங்கிவிட்டார். ஒரு மதம் பிடித்த யானையைப்போல பிளிறிவிட்டு வண்டி நகரத்துவங்கியது."

    "பிள்ளைய பத்திரம்! கொலுசுமேல கண்ணு வைய்யி, அந்த சின்னப்புள்ளை கழுத்து சங்கிலி பத்திரம்" என்று அம்மாக்காரிகள் திருடர்களுக்கு 'க்ளூ' கொடுத்து உதவினார்கள்."
    KMRK ஐயாவின் ஆக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.
    ------
    தேமொழி: "இந்த மம்தா பானெர்ஜி காங்கிரசுக்கு கொடுக்கும் இடையூறுகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?"
    பச்சை சட்டை: "அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்குங்கிறீங்க?"
    தேமொழி: "ஒ, அப்ப நீங்க அவரும் இல்லையா? சரி, கொஞ்சம் இருங்க இன்னொரு வாட்டி தேடிட்டு வந்திடறேன்"

    ReplyDelete
  26. தனுசு சினத்தை பற்றிய காலத்திற்கு ஏற்ற உங்கள் புதிய உவமைகள் தூள்...சுனாமி, பூகம்பம், விலைவாசி, வைரஸ், அனுஉலை, எரிமலை. சினத்தின் தீமையைப் பற்றி கவிதைகள் படித்ததுண்டு உன்கள் கவிதை அவற்றில் இருந்து வேறுபட்டது. உங்கள் கவிதைகள் தற்கால இலக்கியங்களின் வரிசையில் கேள்வி கேற்காமல் சேர்க்கப் பட வேண்டிய படைப்புகள். நல்ல கவிதைக்கு நன்றி.
    ------
    ஆலாசியத்தின் அருமைகள் கவிதை "நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்" என்று துன்பகாலத்தில் இன்பத்தை நினைவு கூறும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு, உயர்வு தந்த காரணத்தை நினைவு கூறுகிறது. காசு, மகன் என்ற இரு உவமைகளைத் தவிர. கவிதையும், அதை சொன்ன முறையும் நன்றாக இருக்கிறது. ராமகிருஷ்ணரின் கவிதையில் "பாரதத்தாயின் இடது இடுப்பில் இருகமர்ந்தோய்!" என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். நல்ல கவிதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டே இருப்பதற்கு நன்றி.
    ------
    தேமொழி: "நீங்க இப்படி திடீர்னு கிரிக்கெட்டுல இருந்து ஓய்வு எடுத்துக்குவீங்கன்னு நான் கொஞ்சமும் எதிபார்க்கல"
    பச்சை சட்டை: ஐயோ, இந்தக் கொசுத் தொல்லை தாங்கல! அம்மா, அவருக்கு கிரிக்கெட் ஆடத் தெரியும், எனக்கு பாடத்தான் தெரியும். பேரு ஒன்னா இருந்தா போட்டு சொதப்பனுமா? முந்திரிக்கொட்டையா இருக்கலாம், ஆனா அரை வேக்காடா இருக்கக்கூடாது. கஷ்ட காலம். சும்மா சும்மா வந்து ரோதனை பண்ணாதீங்க.

    ReplyDelete
  27. ///kmr.krishnan said...
    பேர் அறிஞர் அண்ணா தன் முதல் நாடாளுமன்ற உரையில் 'நகரேஷு காஞ்சி'யில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டாராம்.மேலும் 'எதா ராஜா ததா பிரஜா'என்ற சமஸ்கிருத முது மொழியையும் கூறினாராம்.
    இச் செய்தி சுவாரஸ்யமாக இல்லை? ///


    இதில் வியப்பொன்றும் இல்லை. மற்றவர் உயர்வை மதிக்கும் பொழுதெலாம் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" பேரறிஞர் சொன்னதைத்தானே நாம் உவமையாக சொல்கிறோம். அவர்தானே அந்த பரந்த மனப்பாண்மைக்கு வழிகாட்டியாகக் கூறப்படுகிறார்.

    ReplyDelete
  28. ///தேமொழியின் 'அஸ்தமனம்' நல்ல ஓவியம்.///
    தேமொழியின் 'அஸ்தமனம்' ?
    ஹா. ஹா. ஹா... ஆசை ..தோசை ...அப்பளம்... வடை...
    தேமொழியின் "சூரிய அஸ்தமனம்" நல்ல ஓவியம்... அப்படின்னு சொல்லலாமில்ல :)))))))))))

    ReplyDelete
  29. இன்றைய மற்ற பதிவுகளை நிதானமாகப் படித்தேன். பார்வதி அம்மையாரின் கட்டுரை மிகத் தரமான "சாக்தம்" பற்றிய விளக்கம் ஆழமானது. ஷண்மதப் பிரிவில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஆழமான தத்துவார்த்தங்கள் உண்டு. அதில் சாக்தம் மிக உயர்ந்தது. பாரதி ஓர் சாக்தன். சக்தி உபாசனை செய்வோருக்கு அதீத சக்தி கிடைப்பதாக நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. எத்தனை ஈடுபாடு இருந்தால் அபிராமிபட்டர் மன்னன் வந்து நிற்கும் போது அவனைப் பொருட்படுத்தாமல் அன்னை அபிராமியின் பேரெழில் நிலவில் குளித்துக் கொண்டிருப்பார். அன்னையைச் சரணமடைந்த அவரை அந்த அன்னை கைவிட்டுவிடவில்லை அல்லவா? இன்று பூமியில் மாந்தர்கள் உணவாக தானியம் கிடைக்க அன்னை கேட்ட வரமும் அதற்கு ஐயன் அளந்த படியிரு நாழியும் தான் காரணம் அல்லவா? நல்ல கட்டுரை. நண்பர் தனுசுவின் கவிதை அருமை. பொதுவாகச் சொல்லுவார்கள், சிலர் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மாற்றுவார்கள், வேறு சிலர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் சொல்லுவார்கள். தனுசு கவிதையாகவே சிந்திக்கிறார், ஆகவே கருத்துக்கள் கவிதைகளாக வெளிவருகின்றன.

    ReplyDelete
  30. கே.எம்.ஆரின் ரயில் பயணம் சுவையானது. தாய்மையைக் கேலி செய்யும் இழிகுணம் கண்டிக்கத் தக்கது. மாணவர்களின் பருவம் பிறரது உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளாத பருவம். மாஸ் சைகாலஜி என்பது மாணவர்கள் கூட்டமாகக் கூடி செய்யும் அராஜகம். பின்னர் தனித்தனியாக அவர்களைப் பிடிக்கும்போது அவர்கள் கோழைகளாக மாறிவிடுகிறார்கள். இந்த அவலத்தை 1964இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நான் பணிபுரிந்த அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திலும், பின்னர் காவல்துறை விசாரணையிலும் புரிந்து கொண்டேன். இதுபோன்ற நேரத்தில் பொதுவாகப் பெண்கள் துணிந்து செயல்பட்டு அக்கிரமத்தை எதிர்ப்பதைப் போல ஆண்கள் செய்வதில்லை என்பதும் உண்மை. சகோதரி தேமொழியின் ஓவியக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்தால் நல்லது. அனுமதித்தால் நான் தஞ்சை பெசண்ட் அரங்கில் ஏற்பாடு செய்கிறேன். ஓவியங்களை அனுப்பி வைத்தால். கார்ட்டூன்களும் அதன் விளக்கங்களும் ரசிக்கத் தக்கவையாகவும், அதைப் பற்றிய விமர்சனங்களும் சுவையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய மலர் சிறப்பான மலர். ஒரேயொரு குறை, ஐயர் அவர்கள் மனதில் தோன்றிய கருத்தை, அது பாராட்டோ, எதிர்ப்போ எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுவது நல்லது. இதற்காக யாரும் மனவருத்தம் அடையப் போவது இல்லை. காரணம் அவரவர் உணர்வுகளை இங்கே வெளிக்காட்டுகிறோம். அவ்வளவே. நான் சரி என்பது அவருக்குத் தவறாகக்கூடத் தெரியலாம். மனதை உடைத்து வெளிக் கொணர்வதே சரி.

    ReplyDelete
  31. வகுப்பறையில் எனது ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கும், வந்து படித்து பின்னூட்டங்கள் இட்ட அன்புள்ளங்களுக்கும் நன்றி.

    தஞ்சாவூராரின் அனுபவக் கட்டுரை பலருக்குப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. சகோதரர் தனுசு சொன்னதுபோல ராஜபாட்டைகள் மட்டுமே தெரிந்திருப்பதால் பிரயோஜனமில்லை. எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது,' ராஜபாட்டைகளில் காரோட்டுபவர்கள் விபத்துக்குள்ளாவதுண்டு, வரப்பில் நடந்து சென்றாலும், மண்ணின் மைந்தர்கள் 'பாலன்ஸ்' தவறுவதில்லை'.

    உங்களைப்போன்ற மண்ணின் மைந்தர்கள் எங்களின் வாழ்நாள் பெருமைகள்.
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
  32. //@பார்வதி ராமசந்திரன் அவர்கள்,
    நல்ல கட்டுரை.

    //குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். //
    லலிதா சகஸ்ர நாமாவை படிக்கலாம். ஆனால் ஜபிப்பதற்கு குரு உபதேசம் தேவை என்பது என் கருத்து.//

    தங்களின் கருத்து சரியே.சம்ஸ்கிருதம் உச்சரிக்க குருவின் துணை கண்டிப்பாகத்தேவை. சிறிய மாறுதலும், வேறொரு அர்த்தத்துக்கு இட்டுச் சென்று விடும் (ஜகத்குருவின் சரித்திரத்தில், பிரம்ம ராக்ஷஸ் கேட்கும் 'நிஷ்டா பிரத்யயக்' கேள்வி நினைவு வருகிறதா?). தவிர, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு பிரத்தியேக தியான ஸ்லோகம் உண்டு. அதைக் குருமுகமாகவே பெற இயலும். தங்களின் பாராட்டிற்கு நன்றி. தமிழ்நாட்டிலும் லலிதாம்பாள் சோபனம் படிக்கும் வழக்கம் உள்ளது. யுத்தகள விவரணையில் இதே அர்த்தம் வரும் பாடல்கள் உள்ளன.

    ReplyDelete
  33. KMRK அவர்களின் கதை தந்த உரையாடல் யாவும் புகை வண்டியில் அமர்ந்து அந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதைப் போலவே இருந்தது.ஆணா பெண்ணா,இதன் முடிச்சுதான் இருதியில் அவிழும் என்று வாசித்துக் கொண்டே வந்தேன்.

    குழந்தையை கையில் தூக்கி செல்லம் கண்ணம் என்று கொஞ்சி குழந்தைக்கு என்ன பேரு என்று கேட்டால் சொல்லிவிடுவார்களே,இவர் எப்படி சொல்கிறார் பார்ப்போம் , இந்த சிந்தனையிலேயே தொடர்ந்தேன்

    பெரியவர்களிடம் ஆசிதான் வாங்கவேண்டும். அவர்களிடம் சாபம் வாங்ககூடாது.அமைதியாக இருப்பவர் பேச தொடங்கினால் அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.அதிலும் வயதில் மூத்தவர் அமைதியாய் இருந்து திடீரென்ரு வாய் திறந்தால் இன்னும் பெரிய அமைதிதான் .இதுதான் அங்கே நடந்துள்ளது.

    ஆனால் பாட்டி சொன்னது வாழ்த்தானாலும் சரி சாபமானாலும் சரி இரண்டையுமே இக்காலத்தவர்கள் நிராகரித்திடுவார்கள்.ஏன் என்றால் அதில் அத்தனை பெரிய வார்த்தைகள் இருக்கின்றன.

    ReplyDelete
  34. //ஒருதுளி என்றாலும் அமுதம் அன்றோ
    தங்களின் ஆக்கம் அமுதமாய் இருந்தது...//

    மிக்க நன்றி சகோதரே, தங்கள் கவிதைகளும் அருமை. குறிப்பாக, முதல் கவிதையின் கடைசி வரிகள்,
    'தந்தையோடு கல்வி போம்,
    தாயோடு அறுசுவை உண்டி போம்,' என்று ஆரம்பித்து

    'பொற்றாலியோடு எல்லாம் போம்' என்று முடியும் ஒரு பழைய இலக்கியப் பாடலை நினைவு படுத்தியது. மிக அருமை. ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிறந்ததினத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  35. திரு.கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கம் வழக்கம் போல் மிக நன்றாக இருந்தது. நெஞ்சைத்தொட்ட வரிகள் நிறைய இருந்தன. குறிப்பாக,

    ///"வேணும்னு கேக்கரவுங்களுக்கு தெய்வம் கொடுக்காது."//////

    என்ற வரிகள்.என்னை நிறையவே கிளறி விட்டன.

    //'அலையும், அந்தாதியும்'= தலைப்பே அருமை."தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்" என்ற பாரதியின் வரிகள் பட்டரை நினைந்து சொன்னதுதான்.//

    மிக்க நன்றி. தங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுதலால்தான் நாங்கள் வளர்கிறோம். தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  36. தனுசு சாரின் கவிதை,'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' யைப் பற்றித்
    தெளிவாக எடுத்துரைத்தது. மிக அருமை.

    தேமொழி அவர்களின் படம் அழகு. உபயோகித்திருக்கும் வண்ணச்சேர்க்கை, மனதிற்குள் இனம் புரியாத ஒரு அமைதியைக் கொண்டு தருகின்றன.

    //பார்வதியின் "அலையும் அந்தாதியும்" ஆராய்சிக் கட்டுரை பிரமாதம்//

    மிக்க நன்றி தேமொழி.

    ReplyDelete
  37. ஆனந்தமுருகனும், சபரி நாராயணனும் வழக்கம் போல் பிரமாதப்படுத்துகிறார்கள். ஆனால் பணம் மட்டும் போதுமா ஒரு பெண்ணைக் கவர?.

    ReplyDelete
  38. //ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்வதன்றால் மாணவர்களின் யதார்த்த பேச்சில் இருந்த உண்மை //

    அந்த சம்பவத்தில் மாணவர்கள் சொல்லிய சுட்டெரிக்கும் சொற்கள் மட்டுமே யதார்த்தமா?

    ஒரு மாற்றுத் திறனாளியை 'நொண்டி',அல்லது 'குருடு'என்று பொது இடத்தில் விளித்து விட்டு தட்டிக் கேட்டால் நான் 'யதார்த்ததைத்தானே சொன்னேன்'என்பது சரியா?

    'கடலை போடுவது' என்று சொன்னதை ,அது யதார்த்தமாகவே நடந்து கொண்டிருந்த போது, ஏன் மாணவர்களால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை?அப்போது அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது? ஏன் குழு சேர்ந்து கொண்டு கை ஓங்கினார்கள்?

    ஒருவருக்கு குழந்தைகள் அதிகம் பிறப்பதை ஏன் அவர்களால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை?ஆண் குழந்தை என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை ஏன் யதார்த்தம் என்று கொள்ள முடியவில்லை?

    யதார்த்தம் என்பதும் மனிதருக்கு மனிதர், சூழலுக்கு சூழல் மாறக் கூடியதே என்பதும் யதார்த்தமே.

    நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி,ஸ்ரீகணேஷ்!

    ReplyDelete
  39. //ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்வதன்றால் மாணவர்களின் யதார்த்த பேச்சில் இருந்த உண்மை //

    அந்த சம்பவத்தில் மாணவர்கள் சொல்லிய சுட்டெரிக்கும் சொற்கள் மட்டுமே யதார்த்தமா?

    ஒரு மாற்றுத் திறனாளியை 'நொண்டி',அல்லது 'குருடு'என்று பொது இடத்தில் விளித்து விட்டு தட்டிக் கேட்டால் நான் 'யதார்த்ததைத்தானே சொன்னேன்'என்பது சரியா?

    'கடலை போடுவது' என்று சொன்னதை ,அது யதார்த்தமாகவே நடந்து கொண்டிருந்த போது, ஏன் மாணவர்களால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை?அப்போது அவர்களுக்கு ஏன் கோபம் வந்தது? ஏன் குழு சேர்ந்து கொண்டு கை ஓங்கினார்கள்?

    ஒருவருக்கு குழந்தைகள் அதிகம் பிறப்பதை ஏன் அவர்களால் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை?ஆண் குழந்தை என்ற ஏக்கம் பலருக்கும் இருப்பதை ஏன் யதார்த்தம் என்று கொள்ள முடியவில்லை?

    யதார்த்தம் என்பதும் மனிதருக்கு மனிதர், சூழலுக்கு சூழல் மாறக் கூடியதே என்பதும் யதார்த்தமே.

    நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி,ஸ்ரீகணேஷ்!

    ReplyDelete
  40. sriganeshh said...
    \\ஆனந்தமுருகன்
    அனுப்பியதில் இரண்டாவது படத்தில் ஆட்டோவிற்கு பின்னால் உள்ள வாசகம் சூழ்நிலைக்கு பொருத்தமானது. "பொய் சொன்னால் காகம் கடிக்கும்"//

    தேமொழி said...
    \\\ஆனந்த முருகனுக்கும் நன்றி. பாபி படத்தில் வந்த "zoot bole kauwa kaate" பாடலை ஆட்டோவின் பின்னால் பார்த்ததும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று கூகிள் transliteration இல் ஹிந்திக்கு மாற்றி பிறகு translate செய்து முயற்சித்த தகிடு தித்தங்கள் உதவாமல் போக ஸ்ரீகணேஷ் வந்து உதவி செய்துவிட்டார், அவருக்கும் நன்றி.///

    காக்கையை நான் விட்டாலும் அது என்னை விடாது போல் தெரிகிறது!!ஏழரை சனி காலம்! போன வாரம் வாத்தியார் ரூபத்தில் வந்தது.இன்று ஸ்ரீகணேஷ் ரூபத்தில். போன வாரம் toilet ஆக நம்மை காகம் use செய்தால் என்ற வாதம் வந்தது.அதற்காக,காகத்தை,கொக்கை எரித்த கொங்கனர் போல் build up கொடுத்து முறைக்க போய் ,காகம் உடனே "நீ தான் கொங்கனரா??? இருடா!நான் போய் எங்கண்ணா கிட்ட சொல்றேன்" னிட்டு,சனி கிட்ட போட்டு தள்ளி விட்டா நான் என்ன பண்ணுவேன்.அதனாலே காக்காவை விட்டுரலாம்.

    thanks to temozi,srikanesh,minor,kmrk sir and all.

    ReplyDelete
  41. திரு.அய்யர் அவர்கள் சைவ &வைணவ பற்றி குறிப்பிட்டு இருந்தார்.தாத்தா பேர் கரந்தை சுப்பையா பிள்ளை அப்போ சைவ+வைணவ+அசைவம் சரிதானே for joke only.not serious!!!

    ReplyDelete
  42. Gopalan sir,parvathy,thanusu,themozi,alasiyam and sabari very good articals

    thanks

    ReplyDelete
  43. //// தேமொழி said...
    என்படத்தை வெளியிட்ட ஐயாவிற்கு நன்றி, அதை ரசித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி. ஆலாசியத்தின் கவிதைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படம் மிகவும் பிடித்துப்போய் தேடிப் போனதில் "oldindianphotos.in" தளத்தில் மேலும் அறிய பல படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஐயா எப்படி படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று ஒரு பதிவு போடக் கூடாதா?////

    கூகுள் காமாட்சி அக்காவின் இமேஜ் கோப்புக்களில் இருந்துதான் படங்களை எடுத்துப்போடுகிறேன். படங்களை தெரிவு செய்வதில் ரகசியம் ஒன்றுமில்லை.
    கோபாலன் சாரின் மனிதர்களின் எத்த்னை வண்ணங்கள் என்ற படைப்பிற்கு, people of india, indian crowd என்ற தலைப்புக்களில் தேடி பளிச் சென்று தோன்றிய படத்தை எடுத்துப் பதிவில் சேர்த்தேன். தனுசுவின் சினம்' என்ற கவிதைக்கு anger என்னும் தலைப்பில் படங்களைத் தேடி, ஒன்றைப் பதிவில் சேர்த்தேன். அவ்வளவுதான்.

    தலைப்புக்களுக்கு படைப்பாளிகள் கொடுக்கும் தலைப்பையே போட்டு விடுவேன். சில சமயம் தலைப்பை அதிரடியாக இருக்கும்படி நானே எழுதிப் பத்வில் சேர்த்தும் விடுவதுண்டு. உதாரணம்: இன்றைய கே.எம்.ஆர்க் கே யின் படைப்பிற்கு'உங்களுக்கும் கல்யாணம் ஆவும்டா - அப்போ வந்து பாருங்கடா - என்னும் தலைப்பு அவர் படைப்பில் இருந்து எழுதப்பெற்ற வரியையே சற்று மாற்றித் தலைப்பாகக் கொடுத்தேன்.

    கதை, கட்டுரை இன்னபிற ஆக்கங்களுக்கு தலைப்பு முக்கியம்

    தலைப்பை நன்றாகப் போடு
    தானே வருவார்கள்

    என்பதுதான் நான் வழக்கமாகச் சொல்லும் எழுத்தின் முதல் தாரகமந்திரம் ஆகும்! அது அனைவரையும் உள்ளே இழுத்துக்கொண்டு வரும். சும்மா சனிஷ்வரன் என்று தலைப்பைக் கொடுக்காமல், சாருக்கானும் சனீஷ்வரனும் என்று தலைப்பைக் கொடுத்துப்பாருங்கள். பதிவு ஹிட்'டாகிவிடும்:-)))

    ReplyDelete
  44. //// Thanjavooraan said...
    இன்றைய மலர் சிறப்பான மலர். ஒரேயொரு குறை, ஐயர் அவர்கள் மனதில் தோன்றிய கருத்தை, அது பாராட்டோ, எதிர்ப்போ எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுவது நல்லது. இதற்காக யாரும் மனவருத்தம் அடையப் போவது இல்லை. காரணம் அவரவர் உணர்வுகளை இங்கே வெளிக்காட்டுகிறோம். அவ்வளவே. நான் சரி என்பது அவருக்குத் தவறாகக்கூடத் தெரியலாம். மனதை உடைத்து வெளிக் கொணர்வதே சரி.////

    வெளியிடும் படைப்புக்கள் எனது மனதைக் கவர்ந்தால்தான் வெளியிடுகிறேன். இல்லை என்றால் வெளியிடுவதில்லை. ஆகவே வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் என்க்குப் பிடித்துள்ளது என்பது மட்டும் பொதுவான செய்தி. நிறைகுறைகளை விமர்சிக்கும் பொறுப்பை வாசிப்பவர்களிடம் வீட்டு விடுவதுதான் முறையாகும். ஒரு தாய் தன் குழந்தைகளை என்றுமே விமர்சிக்க மாட்டாள்! ஒரு வெளியீட்டாளனும் (publisher) அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்!
    இந்தப் பதிலுக்கு நீங்கள் உடன் படுவீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  45. படங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை விளக்கியதற்கு நன்றி ஐயா.
    நீங்கள் தேர்ந்தெடுப்பதில் திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
    வகுப்பின் தண்ணீர்ப் பானையானாலும், வம்பில் மாட்டிக்கொள்ளும் தந்தையானாலும் திரைப்பட கதாநாயகன் போல் பாய்ந்தோடி காப்பாற்றப் போகும் KMRK ஐயாவிற்கு "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்" பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்ததே சான்று. எனக்கும் நல்ல பாடலைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் (நானே கூட சொல்லிக்கலாம் ஹி. ஹி. ஹீ.. )

    ReplyDelete
  46. என்ன ஆனந்தமுருகன் நீங்க.... காக்கா பிடிக்கிறதே ஒரு கலை.
    காக்கா(வை) பிடிக்கலைன்னு அறிக்கை விட்டா எப்படி?
    மேற்கொண்டு சிரிக்க வச்சீங்கன்னா மூக்கை வெட்டி காக்காவுக்கு போட்டிடுவேன்னு உங்கள பயமுறுத்தலாம் போலிருக்கே

    ReplyDelete
  47. ///Thanjavooraan said...
    சகோதரி தேமொழியின் ஓவியக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்தால் நல்லது. அனுமதித்தால் நான் தஞ்சை பெசண்ட் அரங்கில் ஏற்பாடு செய்கிறேன். ஓவியங்களை அனுப்பி வைத்தால். ///

    ஐயா, இதுவே பெரிய பாராட்டு எனக்கு. நன்றி. சமயம் வரும்பொழுது மேலும் சில ஓவியங்களை வரைந்து கொண்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  48. @KMR krishnan sir,

    just for the sake of arguments and comment section going, am writing...it doesn't mean am supporting students...am supporting neither students nor the elders in the story..
    let us stick to the point expressed in the story alone ...if you see the first seed for anger has been sown by the elders only...if little bit respect has been shown from that side..definitely things wld've been not so much messy...these are the times where the elders need to change in tune with change in times... hope you understand the point...
    @ananthamurugan,
    O M G....

    ReplyDelete
  49. ////அதுவும் இன்று முகூர்த்த நாள் வேறு. பாச்சா உருண்டை மணம் வீசும் பட்டுப் புடவைகளை, அடிக்க வரும் நிறங்களில்அணிந்துகொண்டு, விளக்கண்ணெய் பூசி தலையை இறுக்கிப் பின்னிக் கொண்டு,கனகாம்பரம் அல்லது செவந்தியைச் சூடிக்கொண்டு பெண்கள் சாரி சாரியாக வண்டிக்குள் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர்.///

    ஹி...ஹி..ஹி..

    இப்படி நிறைய இடங்கள்... நன்றாக இருந்தது.....

    ////பாட்டியின் சொற்களில் இருந்த மந்திரம் என்ன? ஏன் மாணவர்கள் பாட்டிக்கு எதிர்வினை ஆற்றவில்லை? ஒரு பெரிய கூட்டத்தையே ஓடும்படி செய்த பாட்டியின் ஆன்ம பலம் என்ன? பாட்டி சொன்னது வாழ்த்தா? சாபமா?////

    சாபம் என்று கண்டாலும் எல்லா சாபத்திற்கும் ஒரு விமோச்சனத்திற்கும் இருக்கணும் இல்லையா அப்படி நல்ல வேலையாக எட்டாவதாக ஆண் பிள்ளை பிறக்குமே என்றதே...

    இப்படி முயற்சி செய்து பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மாத்திரம் உயிரோடு இருந்து இடை இடையே பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் மாத்திரம் ஒன்றிலிருந்து ஏழு நாட்கள் இடை வெளியில் இறந்து போய்... கடைசியாக எட்டாவதாக புதன் கிழமையே பனிக்குடம் உடைந்து மூன்றாவது நாளாக வெள்ளிக் கிழமை அன்று வளர் பிறை திதியில் எட்டாவதாக என்னைப் பெற்ற எனது பெற்றோர்களை காண்பித்து விட்டது...

    அந்த தம்பதியருக்கும் நிச்சயம் ஒரு எட்டாவதாக ஆண் குழந்தை பிறக்க பரந்தாமன் அருள்வான்.

    கதையின் ஆக்கம் நன்று கிருஷ்ணன் சார்.... ரசித்தேன் மிகவும் அருமை.

    ReplyDelete
  50. சூரியன் மறையுக் காட்சியில் உங்களின் பழைய ஞாபகங்கள் உதய மாகிக் கொண்டே இருக்கும்... படம் நன்றாக இருக்கிறது.

    "எனது பெயர் இருக்கிறது கடவுச் சொல்" உண்மைதான்

    அதைத் தானே எங்கே என்று எல்லோருமே தேடித் திரிகிறோம்...
    நன்றிகள் சகோதரியாரே!

    ReplyDelete
  51. தனுசுவின் இந்த வரிகள் என்னை இன்று கவர்ந்தது...

    ///இந்தசினம் கொண்ட ஜனங்கள்
    ஜெயம் கொண்டதில்லை- இதனை
    இனம் கண்ட மனங்கள்
    தோல்வி கண்டதில்லை////

    ReplyDelete
  52. என்ன minor சங்கரன் கோயில் தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெரும் போல தெரிகிறதே??(exit poll surve)
    minor:என்னோட கட்சியா?? ஆமாங்க!!அதான் mdmk !
    ! minor: mdmk என்னோட கட்சியா??
    என்னங்க நீங்க, போன ஆட்சியில் ஜெயா minoroda dmk sorry minority dmk inna உங்கள் கட்சி illaya.

    ReplyDelete
  53. ஒவ்வொன்றின் பெருமையும் எப்போது தெரியும் எனும் தமிழ் விரும்பியின் கருத்துக்கள் அபாரம். அவர் பெருமை இந்த வரிகளில் தெரிகிறது. அவர் தன் தந்தையின் மீது வைத்திருக்கும் பாசமும் அவர் பின்னூட்டத்தில் தெரிகிறது. தன் மக்களை நேசிக்கும் விதத்தில் அவரின் உயர்ந்த பண்பு நலன் தெரிகிறது. வாழ்க.

    ReplyDelete
  54. தஞ்சை கோபாலன் ஐயா அவர்களின் சிறப்பான் ஆக்கம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்ட நெகடிவ் அனுபவங்களை நினைவில் பார்த்து அதற்கேற்ற வகையில் சீர்திருத்தி கொள்ள உதவும்!
    நன்றி!

    அலையும் அந்தாதியும்! திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆக்கம்
    சௌந்தர்ய லஹரி மற்றும் அபிராமி அந்தாதி இரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமைகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது தேவி பக்தர்களுக்கு பயனுள்ளதக அமையும்,
    வாழ்த்துகள்! நன்றிகள்.


    கொடுத்தது வாழ்த்தா அல்லது சாபமா? சாபம் என்ற பயம்!
    கட்டுரை மிக அருமை. நன்றிகள் கிருஷ்ணண் ஐயா!



    தேமொழி அக்கா,தனுசு அண்ணன்,நண்பர் ஆலாசியம்,நகைச்சுவை நண்பர் ஜி.ஆனந்தமுருகன் மற்றும் திரு.சபரி அவர்களுடைய அக்கங்கள் மிக சிறப்பாக உள்ளது.

    வாழ்த்துகள்! நன்றி! நன்றி!

    ReplyDelete
  55. ////// SP.VR. SUBBAIYA said... வெளியிடும் படைப்புக்கள் எனது மனதைக் கவர்ந்தால்தான் வெளியிடுகிறேன். இல்லை என்றால் வெளியிடுவதில்லை. ஆகவே வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் என்க்குப் பிடித்துள்ளது என்பது மட்டும் பொதுவான செய்தி. நிறைகுறைகளை விமர்சிக்கும் பொறுப்பை வாசிப்பவர்களிடம் வீட்டு விடுவதுதான் முறையாகும். ஒரு தாய் தன் குழந்தைகளை என்றுமே விமர்சிக்க மாட்டாள்! ஒரு வெளியீட்டாளனும் (publisher) அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்!
    இந்தப் பதிலுக்கு நீங்கள் உடன் படுவீர்கள் என்று நம்புகிறேன்! //////////

    எனக்கு இந்தப் பதிலில் உடன்பாடில்லை..

    தாய் என்று சொல்லி தங்களை வேறொரு இடத்துக்கு பிரித்து படைப்புகளை எழுதுகிறவர்களை குழந்தைகள் என்று சிறுமைப்படுத்துகிற பொருளிலேயும் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதால் இந்தவகை அணுகுமுறை எனக்கென்னவோ சரியாகப் படவில்லை..

    இந்த வலைப்பதிவை/மலரை நேரத்தை செலவழித்து தாங்கள் வெளியிட்டு அனைவருக்கும் வாய்ப்பளித்து இதுநாள்வரை தொடர்ந்து செய்துவருவது வாழ்த்துக்குரியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்ற போதிலும் வலைப்பதிவின் ஆசிரியராகவே இருக்காமல் வாசகராகவும் தங்களின் விமர்சனங்களையும் வெளியிடுவதுதான் உங்களின் வலைப்பதிவிலே சிரத்தை எடுத்து எழுதுகிறவர்களுக்கு,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமையும் என்பதே என் பணிவான கருத்து என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்..

    ReplyDelete
  56. வணக்கம் ஐயா,
    தஞ்சை கோபாலன் ஐயா அவர்களின் கட்டுரை ஆக்கம் மிகவும் அருமை...வாழ்க்கையின் இருண்ட பக்கங்களின் மூலம் தான் நல்ல படிப்பினைகளை கற்றுக் கொள்ள முடியும் என்பதை மூன்று வெவ்வேறு சம்பவங்களின் மூலம் ஐயா வகுப்பறை மாணவர்கள் 'வாழ்க்கை பாடம்' தந்துள்ளார்...

    முதல் கதையில் சம்பவம் மிகவும் சோகத்தை தந்தது...உற்ற நேரத்தில் உதவாத உறவினர்களை காலதேவன் பதில் சொல்ல வைப்பார்...

    ஐயா,மூன்றாவது கதையில் இடம்பெற்ற சம்பவத்தை போன்ற அனுபவம் என் தந்தைக்கும் உண்டு,அதனால் கடவுள் நம்பிக்கையும் கொஞ்சம் குறைவு தான்...ஆன்மிகவாதிகளை பற்றி பேசினால் சொல்லவே தேவையில்லை...ஆயினும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம்,நிச்சயம் சாமியார்கள் மீது 'நம்பிக்கை' துளி கூட கிடையாது...கடவுளை மட்டும் நம்பினால் போதும்,கலியுகத்தில் ரிஷிகளையும் முனிவர்களையும் தேடுவது என்பது அறிவீனம் என்று நினைக்கின்றேன்...

    நல்ல அருமையான கட்டுரையின் மூலம் வாழ்வின் வெவ்வேறான நீரோட்டங்களில் பயணிக்க கற்றுக் கொடுத்துள்ளீர்கள்...நன்றி ஐயா...

    ReplyDelete
  57. பார்வதி அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை...ஆன்மிக பிரசங்கம் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்...அதை வகுப்பறைக்கே வந்து தரும் தங்களுக்கு நன்றிகள் பல...'தாலி' பெயர் தோன்றக் காரணம் இன்று தான் அறிந்து கொண்டேன்...நான் 'அபிராமி அந்தாதி' படிப்பேன்...எளிய நடையில் அமைந்திருக்கும் பாடல்கள் நன்றாக புரியும்...என் போன்றவர்கள் அறிந்திடாத 'சௌந்தர்ய லகரி' யில் இடம்வெற்ற ஒத்த பொருளைக் கொண்ட பாடல்களை எடுத்து தந்து விளக்கியமைக்கு மிக்க நன்றிகள்...

    யோகக் கலையில் பார்வதி தேவி நம் உடலில் அமர்ந்திருக்கும் இடம் 'விசுத்தி' என்று அழைக்கப்படும் தொண்டைக்குழியில் தான்...அதனால் தான் உமையவள் சிவபெருமானின் தொண்டைக்குழியை விட்டு ஆலகால விஷத்தை முறித்து அங்கேயே நிலைப்பெற செய்து விட்டார் என்றும் கூறுவார்கள்...

    ReplyDelete
  58. //// minorwall said...
    ////// SP.VR. SUBBAIYA said... வெளியிடும் படைப்புக்கள் எனது மனதைக் கவர்ந்தால்தான் வெளியிடுகிறேன். இல்லை என்றால் வெளியிடுவதில்லை. ஆகவே வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் என்க்குப் பிடித்துள்ளது என்பது மட்டும் பொதுவான செய்தி. நிறைகுறைகளை விமர்சிக்கும் பொறுப்பை வாசிப்பவர்களிடம் வீட்டு விடுவதுதான் முறையாகும். ஒரு தாய் தன் குழந்தைகளை என்றுமே விமர்சிக்க மாட்டாள்! ஒரு வெளியீட்டாளனும் (publisher) அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்!
    இந்தப் பதிலுக்கு நீங்கள் உடன் படுவீர்கள் என்று நம்புகிறேன்! //////////
    எனக்கு இந்தப் பதிலில் உடன்பாடில்லை..
    தாய் என்று சொல்லி தங்களை வேறொரு இடத்துக்கு பிரித்து படைப்புகளை எழுதுகிறவர்களை குழந்தைகள் என்று சிறுமைப்படுத்துகிற பொருளிலேயும் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதால் இந்தவகை அணுகுமுறை எனக்கென்னவோ சரியாகப் படவில்லை..
    இந்த வலைப்பதிவை/மலரை நேரத்தை செலவழித்து தாங்கள் வெளியிட்டு அனைவருக்கும் வாய்ப்பளித்து இதுநாள்வரை தொடர்ந்து செய்துவருவது வாழ்த்துக்குரியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்ற போதிலும் வலைப்பதிவின் ஆசிரியராகவே இருக்காமல் வாசகராகவும் தங்களின் விமர்சனங்களையும் வெளியிடுவதுதான் உங்களின் வலைப்பதிவிலே சிரத்தை எடுத்து எழுதுகிறவர்களுக்கு,அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமையும் என்பதே என் பணிவான கருத்து என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்../////

    வலைப்பதிவின் ஆசிரியராகவே இருக்காமல் வாசகராகவும் இருங்கள் என்று அறிவுறுத்துகிறீர்களே - அது இரட்டை வேடம் போடுவதில்லையா?
    முன்பு - நீண்டகாலம் குமுதம், ஆனந்த விகடன் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். அதன் ஆசிரிய்ரகள் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களோ அல்லது திரு. வாசன் பலசுப்பிரமணியன் அவர்களோ ஒரு நாளும் வாசகராகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தங்கள் பத்திரிக்கையில் வரும் ஆக்கங்களை விமர்சித்ததில்லை. இது உங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். திரு.வெ.கோபாலன் அவர்களுக்கு நன்கு தெரியும். அவரைக் கேட்டுப்பாருங்கள்!

    ReplyDelete
  59. //இதிலே KMRKவின் எழுத்துநடை இந்தவாரம் என்னை மிகவும் கவர்ந்தது..சுவாரஸ்யமாகத் தோன்றியது..//

    நன்றி மைனர்வாள். உங்களையும், உமாவையும் கலாய்த்து இன்னும் சுவாரஸ்யம் கூட்டி எழுதியிருந்தேன். வாத்தியாரின் கத்தரிக்கோல் விழுந்துவிட்டது.

    //'ரிஸெர்வ்' -கொட்டேஷன் போட்டு சட்டிலாகத் தாக்கி ரிசர்வேஷனை கிண்டலடிக்கும் போதும் //

    ஒரு எழுத்தாளனைவிட ரசிகன் இன்னும் ஆழமாகச் செய்திகளை நோக்குவான் என்பார்கள்.வியாக்கியான கர்த்தாக்களால்தான் ஒரு இலக்கியம் நிற்கும். உண்மையாகவே நான் 'சட்டிலா'க 'ரிசர்வேஷன்' பாலிசியைக் கிண்டல் அடித்துள்ளேன் என்பது நீங்கள் சொல்லித்தான் புரிகிறது. அப்படியும் இருக்கலாமோ, மனதில் இருப்பது சொற்களாகக் கொட்டி விட்டதோ?
    லாசரா சொல்லுவார்:"ரசிகன் ஒரு புலி. எழுத்தாளனைச் சாப்பிட்டு விடுவான்.
    நான் அந்தப் புலியின் வயிற்றிலிருந்து பார்க்கிறேன்'. அப்போது ஒன்றும் புரியவில்லை. இப்போது புரிகிறது.

    //தெய்வத்துக்கு ஏனிந்த ஓரவஞ்சனை?
    'வேணாம் வேணாம்' ங்குற ஆளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து 'வேணும் வேணு'ங்குற ஆளுக்கு 'இல்லை..போ..' என்று சொல்ல தெய்வத்துக்கு பயித்தியம் பிடித்துவிட்டதோ?//

    நீங்கள் கேட்டுள்ளது மிகப் பெரிய விஷயம். முடிவில்லாத விவாதக் கருப் பொருள்.'தெய்வம் கொடுக்கிறது' என்பது பக்தி மார்க்கக் கருத்து. அந்த பக்தி மர்க்கக் கதை ஒன்று.

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு 'ப்ராக்டிகலா'க தத்துவம் உபதேசம் சேய்ய உத்தேசித்து அழைத்துச் சென்றாராம்.

    முதலில் ஒரு பாபம் செய்து பொருள் சேர்த்த பணக்காரன் இல்லத்திற்குப் போனாராம். அவன் இவர்கள் யார் என்று தெரியாமல் பிச்சைக்காரர்கள் என்று விரட்டினானாம். கிருஷ்ணர் அவனுக்கு மேலும் பொருள் சேர ஆசீர்வதித்தாராம்.
    அடுத்து ஒரு பக்தையின் வீட்டுக்குப் போனாராம். அவள் இவர்களை நன்கு வரவேற்று உபசரித்து அமரச் செய்து, அவளிடமிருந்த ஒரே சொத்தான பசுவின் பாலைப் புதிதாகக் கற‌ந்து பக்தியுடன் பருகக் கொடுத்தாளாம். பாலை வாங்கிக் குடித்துவிட்டு 'உன் பசு இறக்க‌ட்டும்' என்றாராம்.பசு மரித்தது.

    "என்ன கிருஷ்ணா இது?"என்றார் அர்ஜுனர்.

    "அவன் மேலும் மேலும் பாவம் செய்ய ஏதுவாக அவனுக்கு அவன் விரும்பிய பொருள் கொடுக்கப்பட்டது.இவளோ முக்தியை விரும்புகிறாள்.இவளுடைய ஒரே பந்தம் அந்தப் பசுதான். அந்த பந்தத்தை அழித்து இவளுக்கு முக்தி அளித்தேன்."என்றார் கிருஷ்ணர்.

    விவிலியத்திலும் 'இருப்பவனுக்கு மேலும் கொடுப்பேன்.இல்லாதவர்களிடம் உள்ளதும் பிடுங்கப்படும்' என்று ஒரு வசனம் உண்டென்பர்.இங்கே உள்ள‌து என்பதும் இல்லாதது என்பதும் இறை ஏக்கம்.

    குழவி பாக்கியம் இல்லாதவர்கள் அனைத்து ஜீவராசிகளையும் தங்கள் குழந்தைகளாக, தாங்கள் சொல்வது போல குப்பைத்தொட்டியில் வீசப்படும் குழந்தைகளையும் தன் மகவாக நினைத்தால் இறை அருளால் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் கிடைக்கும்.

    என்னுடைய beliieve it or not ஆக்கத்தில் வரும் ஐயங்கார் குழந்தை பாக்கியம் இல்லாதவர். அவர் பள்ளியை உருவாக்கி ஊர் குழந்தகளைத் தன் குழந்தைகளாக பாவித்தார்.

    ஞானமார்க்கத்தில் இறைவன் இந்த வேலை எதையும் செய்வதில்லை.

    ReplyDelete
  60. தேமொழியின் ஓவிய அஸ்தமனத்தை காட்டினாலும் , அவர் ஓவிய உலகுக்கு வந்திருக்கும் புதிய உதயம்.

    ஜிங்குசா ஜிங்குசா
    பச்சகலரு ஜிங்குசா
    மஞ்ச கலரு ஜிங்குசா
    தொடங்கிச்சா தொடங்கிச்சா
    தூவானம் தொடங்கிச்சா .........

    ReplyDelete
  61. எனது கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  62. kmrk ஐயா அவர்களின் ஆக்கத்தைப் பற்றி என்ன சொல்வது...நான் மூன்று முறை ரசித்து படித்தேன்...ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்,இனிமையாக இருக்கும்...அதை விட இனிமையான பயணத்தை தந்துள்ளீர்கள் இன்று...

    ஒவ்வொரு வரிகளும் படிப்பதற்கே விருந்தாய் அமைந்திருந்தது...

    // அதுவும் இன்று முகூர்த்த நாள் வேறு. பாச்சா உருண்டை மணம் வீசும் பட்டுப் புடவைகளை, அடிக்க வரும் நிறங்களில்அணிந்துகொண்டு, விளக்கண்ணெய் பூசி தலையை இறுக்கிப் பின்னிக் கொண்டு,கனகாம்பரம் அல்லது செவந்தியைச் சூடிக்கொண்டு பெண்கள் சாரி சாரியாக வண்டிக்குள் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர்.//

    இதில் 'சாரை சாரையாக' என்பதை 'சாரி சாரியாக' என்று கையாண்ட விதம் அருமை...இப்படி எல்லாம் எழுதுவார்கள்(அ)கூறுவார்கள் என்பதற்காகவே என் அம்மாவை கூட 'கனகாம்பரம்' மலரை சூடாதீர்கள் என்று கூறுவேன்...ஹிஹிஹி...


    //"ஏ பாப்பாத்தி, எங்கன இருக்க?" என்று கிழவிகளின் குரலும்,
    "இங்கனதான் ஆயா!"என்று பேத்திகளின் குரலும் விதவிதமாக ஒலித்துக்கொண்டு இருந்தன.
    "பிள்ளைய பத்திரம்! கொலுசுமேல கண்ணு வைய்யி, அந்த சின்னப்புள்ளை கழுத்து சங்கிலி பத்திரம்" என்று அம்மாக்காரிகள் திருடர்களுக்கு 'க்ளூ' கொடுத்து உதவினார்கள்//

    பாட்டிகளின் பாசமும்,அம்மாக்களின் 'க்ளூ'வும் அழகான் யதார்த்த முத்துக்கள்...

    கம்சனை வதைக்க 8வதாக வந்து பிறந்த கிருஷ்ணரை சொல்லி பயமுறுத்தியதால் பாட்டியின் சாபம் பலிக்குமோ என்று எண்ணி பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன்...கலியுகத்திலும் 'விஷ்ணு' தன் அவதாரத்தால் அந்த குடும்பத் தலைவரை காப்பாற்றிவிட்டார் என்று நினைக்கின்றேன்...

    எனக்கென்னவோ பாட்டியின் வாக்கு சாபமாய் கொடுக்க எண்ணித் தரப்பட்ட வாழ்த்தாய் தான் தோன்றுகிறது...நல்ல அழகான நடையில் அருமையான கதையை பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  63. தேமொழியின் பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

    அந்த ஓவியம் எனக்கு சூரிய உதயமாகத்தான் பட்டது.தலைப்பு அஸ்தமனமாக
    இருந்துவிட்டதே நான் என்ன செய்யட்டும்?

    உதய சூரியன்தான் என்பதை மாற்றான் தோட்டத்துமல்லிகையில் காண்பித்துவிட்டீர்களே.:)))

    பச்சை சட்டைக்கார‌ர் பேட்டி கன ஜோர். இந்தப் பச்சை சட்டக்காரருக்கு முன்னர் ஒரு பெண்ணின் படம் வந்ததே அவரை யாருமே கண்டு கொள்ளவில்லையே.

    ReplyDelete
  64. அருமைகள் பலவிதம் ,ஆலாசியத்தின் அருமைகள் முதல் ரகம் .

    படத்தில் இருப்பவர்கள் தாங்களின் பெற்றோர்களா .

    ReplyDelete
  65. //கே.எம்.ஆரின் ரயில் பயணம் சுவையானது. தாய்மையைக் கேலி செய்யும் இழிகுணம் கண்டிக்கத் தக்கது. மாணவர்களின் பருவம் பிறரது உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளாத பருவம். மாஸ் சைகாலஜி என்பது மாணவர்கள் கூட்டமாகக் கூடி செய்யும் அராஜகம். //

    நன்றி கோபால்ஜி அவர்களே! நான் அந்த உண்மை நிகழ்வில் சொல்ல வந்தது அதுதான்.ஒரு தனி மாணவன் என்றால் அவன் செயல்பாடே தனிதான்.ஒரு அரை மாணவன் கூட்டு சேர்ந்துவிட்டால் அவர்கள் நடைமுறையே மாறி விடுகிறது.சமீபத்தில் சென்னையில் நடந்த 'பஸ் டே' அராஜகம் மறக்கக் கூடியதா?

    நீங்கள் 'ஐயரு'க்கு சொன்னதை 'ஐயா' தனக்கு என்று எடுத்துக்கொண்டு பதில் சொல்ல, மைனர் அதற்கு ஒரு 'செக்' வைக்க ஒரே தமாஷ்தான்! இனிமேல் அய்யர் என்று தெளிவாக எழுதுங்கள்.

    ReplyDelete
  66. //KMRK அவர்களின் கதை தந்த உரையாடல் யாவும் புகை வண்டியில் அமர்ந்து அந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதைப் போலவே இருந்தது.//

    //அமைதியாக இருப்பவர் பேச தொடங்கினால் அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.அதிலும் வயதில் மூத்தவர் அமைதியாய் இருந்து திடீரென்ரு வாய் திறந்தால் இன்னும் பெரிய அமைதிதான் .இதுதான் அங்கே நடந்துள்ளது.//

    நன்றி தனுசு அவர்களே.இது ஒரு கோணம் தான். ஒரு சிலராவது ஆகங்களைப் படிக்கிறார்கள் என்பது ஆறுதலாக இருக்கிறது.

    ReplyDelete
  67. வழக்கம் போல திரு ஆனந்த முருகனின் நகைச்சுவையும் திரு சபரி அவர்களின் நகைச்சுவைத் தேர்வும் சிரிக்கச் செய்தது.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  68. ஐயா! எனது கவிதையை வெளியிட்டமைக்கு தங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  69. என்னையும், எனது ஆக்கங்களைப் பாராட்டிய அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  70. தனுசு அவர்களின் 'சினம்',இனிமை...'சினம் கொண்ட சிங்கம் சீறும்' என்றெல்லாம் கூறும் 'ஹீரோக்களின்' வசனங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது...தனுசு அவர்களின் 'கவிதை கேட்டிடுவோம் சினத்தை விரட்டிடுவோம்'...

    இன்று நாடாளுபவர்களிடம் மக்களுக்கு இருப்பது "சினம்"
    ஆனால் மக்களிடையே மட்டும் என்றும் தேவை நல்ல "மனம்"
    இதைக் மனதில் கொண்டு கடைப்பிடிப்போம் "தினம்"
    அதனால் நாட்டில் கமழுமே மகிழ்ச்சி என்னும் "மணம்"

    நான் கிறுக்கிய கிறுக்கல்களை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்...ஹிஹிஹி...

    ஆலாசியம் அவர்களின் 'அருமை'யும் "அருமை"...பாடலில் அனைத்து வரிகளும் அருமை,அவற்றில் எனக்கு இறுதியில் வரும் இரண்டு "அருமைகள்", அருமையாய் தோன்றியது(குழம்பிவிட்டீர்களா?...இல்லையென்றால் இன்னும் 'அருமையாய்'...)ஹிஹிஹி...சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்...தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...மீண்டும் தங்களின் கவிதை "அருமையோ அருமை"...நன்றிகள் பல தங்களுக்கு...

    தேமொழி சகோதரி முன்பு கூறியதைப் போலவே படத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டே இருக்கின்றேன்...படத்தில் இருக்கும் தம்பதி யார் என்று தெரியவில்லை...தேமொழி சகோதரி அவர்கள் தன் 'தோழியிடம்' கேட்டு தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  71. என் ஆக்கத்தைப் பாராட்டிய திருமதி பார்வதி ராமச்சந்திரன் , ஆனந்தமுருகனுக்கும் நன்றிகள்.

    லலிதாம்பாள் சோபனம் படிக்கும் வழக்கம் அதிகமாக நெல்லை மாவட்ட்த்திலேயே காணப்படுகிறது. அதிலும் அதனை பிராமணப் பெண்கள் நவராத்திரி சமயத்தில் பாராயணம் செய்கிறார்கள். அதனை எழுதிய‌து யார் என்றும் தெரியவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் ஆவடையக்காள் என்று ஒரு பெண் வேதாந்தி இருந்து மறைந்து இருக்கிறார்கள். பாரதியாரின் வேதாந்தம் அந்த அம்மாளின் தாக்கம் என்று ஒரு பேச்சு உண்டு. திருக்கோவிலூர் ஞானான‌ந்த தபோவனம் ஆவடைக்காளின் வேதாந்தப் பாடல்களை புத்தகமாக்கி உள்ளார்களாம்.முடிந்தால் உங்களுக்கு இருக்கும் சமஸ்கிருத மொழியாற்றலுக்கு நீங்கள் ஆவடையக்காளைப் பற்றி ஓர் ஆய்வு செய்யலாம். என்னால் முடிந்த சேவையைச் செய்து தருகிறேன்

    ReplyDelete
  72. //if you see the first seed for anger has been sown by the elders only...if little bit respect has been shown from that side..definitely things wld've been not so much messy...these are the times where the elders need to change in tune with change in times... hope you understand the point...//

    It is clearly mentioned what was the urgency for the child. Any one
    in that situation will be in a hurry .The mass mentality of the students, and their 'sight' seeing did not care about the surroundings

    ReplyDelete
  73. என் ஆக்கத்தைப் பாராட்டிய ஹாலாஸ்யம்ஜி, முருகராஜன் ஆகியோருக்கு நன்றி!

    மைனர்வாள் நான் ஒருமுறை தனுசுவின் கவிதையை இறுதிவரை படிக்காமல்
    பின்னூட்டம் இட்டு அசடு வழிந்ததுபோல ஆயிற்று.நீங்க‌ளும் வாத்தியாரும்
    தஞ்சாவூரார் அய்யருக்குச் சொன்னதை ஐயாவுக்குச் சொன்னதாக வைத்து....
    ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  74. /////வலைப்பதிவின் ஆசிரியராகவே இருக்காமல் வாசகராகவும் இருங்கள் என்று அறிவுறுத்துகிறீர்களே - அது இரட்டை வேடம் போடுவதில்லையா?
    முன்பு - நீண்டகாலம் குமுதம், ஆனந்த விகடன் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். அதன் ஆசிரிய்ரகள் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களோ அல்லது திரு. வாசன் பலசுப்பிரமணியன் அவர்களோ ஒரு நாளும் வாசகராகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தங்கள் பத்திரிக்கையில் வரும் ஆக்கங்களை விமர்சித்ததில்லை. இது உங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். திரு.வெ.கோபாலன் அவர்களுக்கு நன்கு தெரியும். அவரைக் கேட்டுப்பாருங்கள்! /////

    இந்த மலரின் வாசகர் எண்ணிக்கை பற்றி தங்களுக்குத் தெரியாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்..

    குமுதம்,ஆனந்தவிகடனுடன் ஒப்பிட்டிருப்பதால் சொல்ல நேர்ந்தது..

    mutual admiration society என்று மலரின் வாசகர் பற்றி KMRKஅவர்களால் ஏற்கனவே குறிக்கப்பட்ட விஷயம்தான் இது..எழுதுபவர்கள் தவிர மற்ற வாசகர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலே இருக்கிறதே தவிர எழுதுபவர்கள் தங்களுக்குள்ளே உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகவே இருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது..

    பத்து பேர் பங்கு கொள்ளும் ஒரு வலைப்பதிவில் தனது கருத்துக்களை/விமர்சனங்களை வெளியிடுதல் சாத்தியம்..

    பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள்/வாசகர்கள் என்று வட்டம் விரிவாகும் போது அது இயலாத காரியமாகும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்..

    அப்படியாவது இன்னொரு வாசகர் கூடுவாரா என்ற விருப்பத்தின் பேரிலேயே இதை எழுதுகிறேன்..

    இந்த பின்னூட்டத்தை பகிரங்கப்படுத்துவதும் தங்களுக்கான செய்தியாக எடுத்துக்கொண்டு வெளியிடாமல் மட்டுறுத்துவதும் தங்கள் விருப்பத்திற்கே..

    நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  75. சகோதரியாரே சோபனா.. இது தான் கவிதை
    இது இதே தான் கவிதை அருமை....அருமை

    ////இன்று நாடாளுபவர்களிடம் மக்களுக்கு இருப்பது "சினம்"
    ஆனால் மக்களிடையே மட்டும் என்றும் தேவை நல்ல "மனம்"
    இதைக் மனதில் கொண்டு கடைப்பிடிப்போம் "தினம்"
    அதனால் நாட்டில் கமழுமே மகிழ்ச்சி என்னும் "மணம்"////

    இது தங்களின் ஆக்கம் அதை லேசாக சில மாற்றம் செய்துள்ளேன் பாருங்கள்!

    நாடு ஆள்பவர்களிடம் மக்களுக்கோ சினம்
    நாட்டு மக்களுக்கு வேண்டும் நல்லகுணம்
    மனதில் நிறுத்தி கடைபிடிப்போம் தினம்
    மாநாடெங்கும் கமழுமே மகிழ்ச்சிமணம்.

    கவிதையிலே பெரும்பாலும் இணைப்பு வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்
    ,மேலும் ஒரு வார்த்தையிலே ஒட்டிக் கொள்ளாமல் அதே பொருளுக்கு வேறொரு
    பதம் இருக்கிறதா என்று யோசியுங்கள்..

    எதுகை மோனைக்கு தகுந்தாற் போல் எழுவாய் செயப்படு
    பொருள் பயனிலை இவைகளை மாற்றி அமையுங்கள்.

    முயன்று பாருங்கள் நிச்சயம் கவிதை வரும்...
    சில நேரங்களில் உங்கள் போக்கிற்கு வராது போனால்
    அதனின் போக்கிற்கே செல்லுங்கள்...
    பெரும்பாலும் அப்படியே நடக்கும்..
    வழியியக்க வார்த்தைகளைத் திணித்தால்
    அதன் இனிமைப் போய் விடும்...

    "செந்தமிழும் நா பழக்கம்"

    தங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  76. ஆனந்த முருகன் மற்றும் சபரி அவர்களின் நகைச்சுவை நன்றாக இருந்தது..."குண்டு" குழந்தையின் ஆட்டம் 'துள்ளல்'...

    ஐயா,இன்று படத்தில் இருப்பவர் பின்னணி பாடகர் 'ராகுல் நம்பியார்' என்று நினைக்கின்றேன்...சரி தானா?

    ReplyDelete
  77. தேமொழி யின் நகைசுவை எதிகாலத்தில் உண்மை ஆனாலும் ஆகும் .பிரசவ நிலைகள் பரிமாணம் பெற்றுக் கொண்டே வருகிறது. இது நடந்தாலும் நடக்கலாம் .

    என் மகளிடம் அவரின் சின்னம்மாவின்இரண்டு வயது மகன் கேட்ட கேள்வி ஒன்று நகைசுவையை போல் இருக்கும் .அதை என் மகள் என்னிடம் சொன்ன போது எனக்கு சிரிப்பாக இருந்தது.

    எப்போதும் தோட்டத்தில் உலா வரும் குரங்கை காட்டியே சோறூட்டி பழக்கப் படுத்திய அவனுக்கு அன்றும் சோறூட்ட தோட்டத்திற்கு கொண்டு செல்கிறார்அவனின் தாய் .

    தாய்; சாப்பிடு செல்லம் .
    மகன்; குரங்கு வந்தால் தான் சாப்பிடுவேன்
    தாய் ; எல்லா குரங்கும் போயிடிச்சி இப்போ சாப்பிடு நாளைக்கு வந்தால் பார்க்கலாம்
    மகன் ; இப்பவே கூப்பிடு
    தாய் ; அது வராதுடா , இப்போ சாப்பிடு , வந்தால் பார்க்கலாம்,
    மகன்; நீ போன் பண்ணி கூப்பிடு அது வரும் .

    ReplyDelete
  78. அடியே...
    குட்டி சில்க்
    உன்னை அப்படியே சாப்பிடவா
    என்
    டையரி மில்க்

    ReplyDelete
  79. இரண்டு லட்டு திங்கத்தான் இன்றும் ஆசைப் பட்டேன் , ஆனால் அய்யா அவர்கள் ஒரு கவிதையை பதிவேற்றவில்லை.

    சென்ற வாரம் நான் பின்னூட்டத்தில் எழுதிய" அவரும் இவரும் "கவிதையின் கடைசி இரண்டு வரிகளை பார்த்தப் பின் மதிப்பிற்குரிய உமா மற்றும் தேமொழி ஆகியோர் மேல் கொண்டு எழுதுங்கள் என்று பின்னூட்டம் இட்டிருந்தார்கள் .நானும்

    அவர்
    புகழ்ந்து பாடிய பெயர் காஞ்சித் தலைவன்
    இவர்
    போற்றி பாடும் பெயர் பழனி முருகன்

    என்று முழு கவிதையை எழுதி அனுப்பினேன் ஆனால் அய்யா அவர்கள்;

    "அன்புள்ள தனுசு, உங்கள் ஆக்கம் நன்று.புரட்ச்சிதலைவருடன் ஒப்பிட்டு எழுதும் அளவிற்கு,எனக்கு என்னுடைய எழுத்தை தவிர வேறெந்த தகுதியும் கிடையாது,ஆகவே இக்கவிதையை வெளியிட என் மனம் ஒப்பவில்லை -வாத்தியார்." என்று மெயில் தந்து விட்டார்கள்.

    ReplyDelete
  80. நன்றி ஸ்ரீஷோபனா! என் ஆக்கத்தை ரசித்துத்தான் படித்து உள்ளீர்கள்.நானும் கூட அந்த பெண்களின் அலங்காரத்தை எழுதும் போது மிகவும் ரசித்துத்தான் எழுதினேன்.நகர நாகரீகம் என்ற மயக்கத்தில் விழுந்து விடாத கிராமத்துப்பெண்களின் வெள்ளந்தியான அலங்காரம்மும் ஓர் அழகுதான்.

    ReplyDelete
  81. தேமொழி said..தனுசு சினத்தை பற்றிய காலத்திற்கு ஏற்ற உங்கள் புதிய உவமைகள் தூள்...சுனாமி, பூகம்பம், விலைவாசி, வைரஸ், அனுஉலை, எரிமலை. சினத்தின் தீமையைப் பற்றி கவிதைகள் படித்ததுண்டு உன்கள் கவிதை அவற்றில் இருந்து வேறுபட்டது.

    நன்றிகள் தோழி அவர்களே

    Parvathy Ramachandran said...தனுசு சாரின் கவிதை,'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' யைப் பற்றித்
    தெளிவாக எடுத்துரைத்தது. மிக அருமை.

    பாராட்டுக்கு நன்றிகள் பார்வதி அவர்களே,

    தமிழ் விரும்பி ஆலாசியம் said...தனுசுவின் இந்த வரிகள் என்னை இன்று கவர்ந்தது...

    ///இந்தசினம் கொண்ட ஜனங்கள்
    ஜெயம் கொண்டதில்லை- இதனை
    இனம் கண்ட மனங்கள்
    தோல்வி கண்டதில்லை////

    மகிஷ்ச்சி அடைந்தேன் ஆலாசியம் அவர்களே..

    ReplyDelete
  82. Thanjavooraan said...நண்பர் தனுசுவின் கவிதை அருமை. பொதுவாகச் சொல்லுவார்கள், சிலர் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மாற்றுவார்கள், வேறு சிலர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் சொல்லுவார்கள். தனுசு கவிதையாகவே சிந்திக்கிறார், ஆகவே கருத்துக்கள் கவிதைகளாக வெளிவருகின்றன.

    நன்றிகள் அய்யா . தாங்களின் ஊக்குவிப்புதான் இவ்வளவுக்கும் அடிப்படை.

    ReplyDelete
  83. R.Srishobana said...தனுசு அவர்களின் 'சினம்',இனிமை...'சினம் கொண்ட சிங்கம் சீறும்' என்றெல்லாம் கூறும் 'ஹீரோக்களின்' வசனங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது...தனுசு அவர்களின் 'கவிதை கேட்டிடுவோம் சினத்தை விரட்டிடுவோம்'...

    இன்று நாடாளுபவர்களிடம் மக்களுக்கு இருப்பது "சினம்"
    ஆனால் மக்களிடையே மட்டும் என்றும் தேவை நல்ல "மனம்"
    இதைக் மனதில் கொண்டு கடைப்பிடிப்போம் "தினம்"
    அதனால் நாட்டில் கமழுமே மகிழ்ச்சி என்னும் "மணம்"

    நான் கிறுக்கிய கிறுக்கல்களை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்...ஹிஹிஹி...

    கிறுக்கலா? யார் சொன்னது . இதுதான் கவிதை .நானும் முதலில் இப்படித்தான் எழுதினேன் . அடுத்த வாரம் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள் .

    ReplyDelete
  84. ///// R.Srishobana said...
    ஆனந்த முருகன் மற்றும் சபரி அவர்களின் நகைச்சுவை நன்றாக இருந்தது..."குண்டு" குழந்தையின் ஆட்டம் 'துள்ளல்'...
    ஐயா,இன்று படத்தில் இருப்பவர் பின்னணி பாடகர் 'ராகுல் நம்பியார்' என்று நினைக்கின்றேன்...சரி தானா?////

    கரெக்ட். அவர் ராகுல் நம்பியார்தான்!

    ReplyDelete
  85. kmr.krishnan said...சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி..'பற்றிய தனுசுவின் ஆக்கம் நன்று.
    படித்துரசித்தேன்.

    நன்றி kmrk அவர்களே.

    மற்றும் மைனர், முருக ராஜன்,ஸ்ரீ கணேஷ் மற்றும் படிப்போருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  86. //// minorwall said...
    /////வலைப்பதிவின் ஆசிரியராகவே இருக்காமல் வாசகராகவும் இருங்கள் என்று அறிவுறுத்துகிறீர்களே - அது இரட்டை வேடம் போடுவதில்லையா?
    முன்பு - நீண்டகாலம் குமுதம், ஆனந்த விகடன் வாசகனாக நான் இருந்திருக்கிறேன். அதன் ஆசிரிய்ரகள் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களோ அல்லது திரு. வாசன் பலசுப்பிரமணியன் அவர்களோ ஒரு நாளும் வாசகராகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தங்கள் பத்திரிக்கையில் வரும் ஆக்கங்களை விமர்சித்ததில்லை. இது உங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். திரு.வெ.கோபாலன் அவர்களுக்கு நன்கு தெரியும். அவரைக் கேட்டுப்பாருங்கள்! /////
    இந்த மலரின் வாசகர் எண்ணிக்கை பற்றி தங்களுக்குத் தெரியாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்..
    குமுதம்,ஆனந்தவிகடனுடன் ஒப்பிட்டிருப்பதால் சொல்ல நேர்ந்தது..
    mutual admiration society என்று மலரின் வாசகர் பற்றி KMRKஅவர்களால் ஏற்கனவே குறிக்கப்பட்ட விஷயம்தான் இது..எழுதுபவர்கள் தவிர மற்ற வாசகர் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலே இருக்கிறதே தவிர எழுதுபவர்கள் தங்களுக்குள்ளே உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகவே இருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது..//////

    மலரின் வாசகர் ஒன்றிரண்டு என்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலே இருக்கிறதே என்று எழுதியுள்ளீர்கள். அது தவறு, பதிவில் இடைச்சேர்க்கையாக படம் (screen shot) வெளியிட்டுள்ளேன். வந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  87. ///// R.Srishobana said..
    படத்தில் இருக்கும் தம்பதி யார் என்று தெரியவில்லை...தேமொழி சகோதரி அவர்கள் தன் 'தோழியிடம்' கேட்டு தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்..///

    அந்தப் படம் இந்தத் தளத்தில் உள்ளது ஷோபனா ....
    http://www.oldindianphotos.in/2012/03/indian-husband-and-wife-vintage.html
    ஆனால் யார் என்று குறிப்பிடவில்லை.
    இந்த மர்ம தம்பதியினரைப் பற்றி நீங்கள் ஒரு கவிதை எழுதக்கூடாதா?

    ReplyDelete
  88. Dear All,

    A kind request to all the people who are contributing to the sunday magazine.Just because our Sir is considerate in publishing without editing do not write lines and lines of content.writing has to be short and meaningful.for each writer his contribution is valuable.But be your own critic and try to review and edit so that the piece is short and sweet.Hope you take this in the right sense.

    ReplyDelete
  89. Thank you. Mr. Subramaniyam for your advice.

    But Sir is making cuts, additions and edting.Some times whole article had been rejected.

    Your request for short articles shows the present trend of modern youth.They want information in crude form,with out any artistic touch. Understanding that trend, Kumudam publishes half page stories.

    I do not stretch my articles just to fill pages. At the same time do not hesitate to add a paragraph if I feel it is necessary to convey the inner content clearly.

    We the contributors would have felt happy if you had added a word of appeciation instead of mere advice. Advice is the last thing people like. It may be the easiest thing to do also.

    ReplyDelete
  90. //மகன்; நீ போன் பண்ணி கூப்பிடு அது வரும் //

    அம்மா போனை எடுத்துப் பேசுகிறாள்.

    "ஏங்க, உங்க மகன் இப்படிச்சொல்றாங்க"

    மறுமுனையில் இருந்து பதில்: "அவன் போன் போடச்சொன்னது குரங்குக்குத்தானே,எனக்கு ஏன் போடறே போனை?"

    ReplyDelete
  91. அன்பார்ந்த வாத்தியார் அவர்களுக்கு,

    தாங்கள் என் ஆக்கத்துடன் என் வலைப்பூவின் சுட்டியையும் சேர்த்து வெளியிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் கடந்த பிப்ரவரி மாதம் என் வலைப்பூவைத் தொடங்கினேன். 'வகுப்பறையில்' நான் இட்ட‌ பின்னூட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே அதற்கு உந்துதல். ஒரு கையின் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் (தாங்கள் சுட்டியையும் சேர்த்து வெளியிட்ட பிறகு), வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து, கணிசமான அளவில் கூடியுள்ளது. 'வகுப்பறையின்' மூலமாக, வந்து சென்றவர்களே அதிகம். மற்றவர்கள் வளர்ச்சியில் தாங்கள் காட்டும் அக்கறையைச் சொல்ல வார்த்தைகளில்லை. மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  92. //// Parvathy Ramachandran said...
    அன்பார்ந்த வாத்தியார் அவர்களுக்கு,
    தாங்கள் என் ஆக்கத்துடன் என் வலைப்பூவின் சுட்டியையும் சேர்த்து வெளியிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் கடந்த பிப்ரவரி மாதம் என் வலைப்பூவைத் தொடங்கினேன். 'வகுப்பறையில்' நான் இட்ட‌ பின்னூட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே அதற்கு உந்துதல். ஒரு கையின் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் (தாங்கள் சுட்டியையும் சேர்த்து வெளியிட்ட பிறகு), வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து, கணிசமான அளவில் கூடியுள்ளது. 'வகுப்பறையின்' மூலமாக, வந்து சென்றவர்களே அதிகம். மற்றவர்கள் வளர்ச்சியில் தாங்கள் காட்டும் அக்கறையைச் சொல்ல வார்த்தைகளில்லை. மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.////

    நல்லது. பார்வையாளர்கள் நிறைய இருந்தால்தான் விளையாடும் வீரர்களுக்கு உற்சாகமாக இருக்கும். அதுபோல வாசகர்கள் நிறைய இருந்தால்தான் எழுதுவதற்கு உற்சாகம் இருக்கும். வலைப்பதிவுகளில் கடந்த ஏழு ஆண்டுக்ளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் ஆண்டு சராசரியாக தினமும் வந்து போவோரின் எண்ணிக்கை 30ற்கும் குறைவாகவே இருந்தது. இன்று சராசரியாக 4,000 page viewக்கள் என்ற எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறது. பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3,117 என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. பொறுப்பும் கூடி உள்ளது. பலதரப்பட்டவர்களையும் கவரும் விதத்தில் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் பட்டதில்லை. எனது சிந்தனைகளையும், அனுப்வங்களையும், நான் படித்துக் கற்றுணர்ந்தவைகளையும் ஆவணப்படுத்துகிறோம் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டுமே எழுதுகிறேன்.

    தலைப்பை நன்றாகப் போடு
    தானே வருவார்கள்
    எழுதுவதை நன்றாக எழுது
    எல்லோரும் படிப்பார்கள்
    என்பதுதான் எழுத்தின் தாரக மந்திரம்!

    James Hadley Chase, Jeffery Archer, கண்ணதாசன், சுவாமிஜி தயானந்த சரஸ்வதி, எழுத்தாளர் சுஜாதா, கல்கி, பாலகுமாரன், அனுராதா ரமணன் போன்றவர்களின் நூல்கள் பலவற்றையும் படித்துள்ளேன். அந்த வாசிப்பு எனக்கு எழுத்தை வசப் படுத்திக்கொடுத்துள்ளது. எதையும் சுவாரசியமாக எழுதும் கலையைக் கற்றுக்கொடுத்துள்ளது. நான் அவர்களைத்தான் என் ஆசான்களாகக் கருதுகிறேன்

    நன்றாக எழுதுங்கள். உற்சாகமாக எழுதுங்கள். எழுத்துலகில் நீங்கள் புகழ்பெற பழநிஅப்பன் துணையிருப்பான்! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  93. Super! All stories are interesting! மனிதரில் எத்தனை வண்ணங்கள்? -story help us to how judge the peope. கொடுத்தது வாழ்த்தா அல்லது சாபமா?-I think that granma give sabam and also i think the 6 child is male only. Once again i thanks to our subbaiya ji for giving nice stories. The child dance superb!!! Oh OH......

    ReplyDelete
  94. மனிதரில் எத்தனை வண்ணங்கள்?
    அலையும் அந்தாதியும்
    கொடுத்தது வாழ்த்தா அல்லது சாபமா?

    3 things - 3 dimensions...
    Really good.
    Cheers up.


    With Regards,
    Prasanna Venkatesh.

    ReplyDelete
  95. வணக்கம் ஐயா,
    //தமிழ் விரும்பி ஆலாசியம்said...
    சகோதரியாரே சோபனா.. இது தான் கவிதை
    இது இதே தான் கவிதை அருமை....அருமை///

    நான் சும்மா அந்த‌ நேர‌த்தில் என் மன‌தில் தோன்றிய‌தை அப்ப‌டியே எழுதிவிட்டேன்...அதை 'குழ‌ந்தை பாட்டு' என்று கூறுவீர்க‌ள் என்று நினைத்தேன்...பாராட்டிய‌மைக்கு மிக்க‌ ந‌ன்றிக‌ள் ஆலாசிய‌ம் அவ‌ர்க‌ளே...த‌ங்க‌ள‌து குறிப்புக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி,இனி க‌விதை எழுதுவ‌து என்ற‌ விப‌ரீத‌ விளையாட்டில் இற‌ங்கினால் தாங்கள் அளித்துள்ள குறிப்புகளை நிச்சயம் ப‌ய‌ன்ப‌டுத்துக் கொள்கிறேன்...ஹிஹிஹி...மீண்டும் என் நன்றிகள்...


    // thanusu said...
    கிறுக்கலா? யார் சொன்னது . இதுதான் கவிதை .நானும் முதலில் இப்படித்தான் எழுதினேன் . அடுத்த வாரம் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள்//

    அச்சோ...சும்மா விளையாட்டாக தோன்றியதை எழுதிவிட்டேன்...அதற்காக உங்களை போன்றோ ஆலாசியம் அவர்களை போன்றோ 'நல்ல கவிதை'யெல்லாம் எனக்கு வராது...முயற்சி செய்கிறேன்,ஆயினும் வாசகர்கள் தலையை பிய்த்துக் கொண்டால்...ஹிஹிஹி...தங்களின் வாழ்த்துக்கு நன்றி...

    ReplyDelete
  96. தேமொழிsaid...
    ///// R.Srishobana said..
    படத்தில் இருக்கும் தம்பதி யார் என்று தெரியவில்லை...தேமொழி சகோதரி அவர்கள் தன் 'தோழியிடம்' கேட்டு தெளிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும்..///

    அந்தப் படம் இந்தத் தளத்தில் உள்ளது ஷோபனா ....
    http://www.oldindianphotos.in/2012/03/indian-husband-and-wife-vintage.html
    ஆனால் யார் என்று குறிப்பிடவில்லை.
    இந்த மர்ம தம்பதியினரைப் பற்றி நீங்கள் ஒரு கவிதை எழுதக்கூடாதா?/////

    ஆஹா...மிக்க நன்றி சகோதரி தாங்கள் தந்துள்ள வலைதளத்தில் இப்படத்தை போலவே இன்னும் ஏராளமான அரிய புகைப்படங்கள் உள்ளன...நன்றி...
    என் கவிதையை படித்துவிட்டு படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் பயந்துவிட்டால் என்னவாவது என்று தான் யோசிக்கின்றேன்...முயற்சி செய்கிறேன்...அதற்கு இந்த அழகான தம்பதியை வருந்த செய்ய வைக்க...என் அளவிற்கு ஒரு நாய்க்குட்டி,பூனைக்குட்டியை வைத்து ஒரு 'குழந்தை பாடல் ' வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றேன்...ஹிஹிஹி...தங்களது ஆர்வத்திற்கு மிக்க நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  97. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    இன்றைய மாணவர் மலர் ஆக்கங்கள்
    யாவும் சிறப்புடன் கொடுக்கப் பட்டுள்ளது.
    தயாரித்தவர்களுக்கும்,வெளியிட்டுள்ள
    ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  98. நெல்லை மாவட்டத்தில் ஆவடையக்காள் என்று ஒரு பெண் வேதாந்தி இருந்து மறைந்து இருக்கிறார்கள். பாரதியாரின் வேதாந்தம் அந்த அம்மாளின் தாக்கம் என்று ஒரு பேச்சு உண்டு. திருக்கோவிலூர் ஞானான‌ந்த தபோவனம் ஆவடைக்காளின் வேதாந்தப் பாடல்களை புத்தகமாக்கி உள்ளார்களாம்.முடிந்தால் உங்களுக்கு இருக்கும் சமஸ்கிருத மொழியாற்றலுக்கு நீங்கள் ஆவடையக்காளைப் பற்றி ஓர் ஆய்வு செய்யலாம். என்னால் முடிந்த சேவையைச் செய்து தருகிறேன்

    ReplyDelete
  99. புள்ளிவிவரத் தகவல்களுடன் விளக்கிப் பதிலளித்தமைக்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி..
    pageviews today 2055 என்று இருக்கிறது..சாதனைதான்..

    மென்மேலும் சிகரங்கள் எட்ட வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

    published comments 39688 என்று மொத்த அளவு இருக்கிறது..

    pageviews today 2055 என்பது 2055 இன்று வாசகர்கள் வந்தார்கள் என்று பொருள் கொண்டால் அது சரியாகுமா?
    நான் மட்டுமே எப்படியும் 25 தடவைக்குக் குறையாமல் க்ளிக் பண்ணி pageview பண்ணியிருப்பேன்..

    அதுதவிர எனக்கு வேறு ஒரு சந்தேகம்.. வந்தவர்கள் வலைப்பதிவின் 1070 போஸ்ட் களின் பக்கங்களிலே எந்தப் பக்கத்தை இன்றைய தினம் வாசித்தார்கள் என்று இந்த புள்ளிவிவர அடிப்படையிலே அறிந்துகொள்ள வசதி இருக்கிறதா?
    வாரமலருக்கு என்று தனிக்கவனம் செலுத்தி இந்தத் தகவலை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்..
    படித்திருந்தால் பின்னூட்டமிட வேண்டும்..
    அதுதான் படித்த வாசகனுக்கு அழகு..
    பின்னூட்டமிடுகிற வாசகர்களை கணக்கில் கொண்டே நான் 'விரல்விட்டு' என்கிற வார்த்தையைப் பிரயோகித்தேன்..
    வார மலருக்கு என பத்துபேர் படைப்பாளிகள் உருவாகியுள்ளதுபோலே பெயரிட்டு சொல்லும் அளவுக்கு பத்துப் பேராவது வாசகர்கள் இருக்கிறார்களா?என்பதுதான் எனது கேள்வி..
    தொடர்ந்து இந்த வலைப்பதிவைத் தொடர்வதன் காரணத்தால் எழுந்த ஆர்வமே இதற்குக்காரணம் என்பதை சொல்லிக்கொண்டு வேறு எவரும் வாத்தியாருக்கும் எனக்கும் இடையிலே சிண்டு முடியலாம் என்று நினைத்திருந்தால் அந்த எண்ணத்தைத் தவிர்க்கவே இதைத் தெளிவுபடுத்துகிறேன்..

    ReplyDelete
  100. //நெல்லை மாவட்டத்தில் ஆவடையக்காள் என்று ஒரு பெண் வேதாந்தி இருந்து மறைந்து இருக்கிறார்கள். பாரதியாரின் வேதாந்தம் அந்த அம்மாளின் தாக்கம் என்று ஒரு பேச்சு உண்டு. திருக்கோவிலூர் ஞானான‌ந்த தபோவனம் ஆவடைக்காளின் வேதாந்தப் பாடல்களை புத்தகமாக்கி உள்ளார்களாம்.முடிந்தால் உங்களுக்கு இருக்கும் சமஸ்கிருத மொழியாற்றலுக்கு நீங்கள் ஆவடையக்காளைப் பற்றி ஓர் ஆய்வு செய்யலாம். என்னால் முடிந்த சேவையைச் செய்து தருகிறேன்//

    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி திரு.கே.எம்.ஆர். அவர்களே, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. இருப்பினும் முயற்சி செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  101. ///kmr.krishnan said... மனிதரில் எத்தனை வண்ணங்கள் என்று தலைப்புக் கொடுத்து அதனை பளிச்சென்று விளக்கும் வண்ணம் ஒரு கூட்டத்தினரின் புகைப்படத்தையும் அழகுற வெளியிட்டுள்ளீர்கள்.அதில் ஒரு பெண் பளிச்சோ பளிச்.///

    அந்த "பளிச்சோ பளிச்"சின் பெயர் ரைமா சென் (Raima Sen). வங்காள கலைக்குடும்பதைச் சேர்ந்தவர். இவர் பாட்டி புகழ் பெற்ற சுசீத்ரா சென் ஆவார். ஹந்தி தேவதாஸ் (1955) படத்தில் திலிப் குமாருடன் நடித்தவர். சிறந்த நடிகை பட்டமெல்லாம் வாங்கியவர். ரைமாவின் அம்மா மூன்மூன்சென். இவரும் நடிகையே, தமிழிலும் கூட 12B படத்தில் அம்மா பாத்திரத்தில் நடித்துள்ளாராம். ரைமாவின் தங்கை ரியாவும் நடிகையே. இந்தக் கூட்டம் படம் "Chased by Dreams" என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி என நினைக்கிறேன்.

    ReplyDelete
  102. கோபாலன் சாரின் அனுபவப்பகிர்வு இளைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும். என் உறவினர்களிலும்
    இப்படி சிலர் இருக்கிறார்கள்.

    பார்வதியின் ஆக்கம் அருமை.

    கிருஷ்ணன் சாரின் ஆக்கம் வழக்கமான கலகலப்புடன் இருந்தது.

    தேமொழியின் ஓவியம், தனுசுவின் கவிதை வழக்கம்போல் நன்றாகவே இருந்தன.

    ஆலாசியத்தின் கவிதை 'அருமை'.

    மற்றவையும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  103. 'நான் மவுனம்,நான் மவுனம்' என்று சாலையோடு ஒரு பண்டாரம் சொல்லிக் கொண்டே போனாராம். "அதை ஏன் இப்படி சத்தமா சொல்ற?" என்று கேடாளாம் ஒரு குசும்புப் பாட்டி.இந்த ஜோக் எப்பூடீ?//

    சூப்பரு!

    ReplyDelete
  104. அம்மா போனை எடுத்துப் பேசுகிறாள்.

    "ஏங்க, உங்க மகன் இப்படிச்சொல்றாங்க"

    மறுமுனையில் இருந்து பதில்: "அவன் போன் போடச்சொன்னது குரங்குக்குத்தானே,எனக்கு ஏன் போடறே போனை?"//

    ஹா ஹா நல்ல ஜோக்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com