மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.09

Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!

Nagapattinam - Kayaarohaneswarar, Neelayathatchi temple
படத்தின் மீது கர்சரை வத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்

++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!

தாயார் இறந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் தேனப்பனின் மனதில்
இன்னும் சோகம் போகவில்லை.

‘அப்பச்சி’ என்று ஆத்தாள் கூப்பிடுவது போன்று வீடு முழுக்க அவ்வப்போது
கேட்டுக் கொண்டிருந்தது.

அன்று சனிக்கிழமை. ஆத்தா பழக்கிவிட்டுப்போன பழக்கம். சுடவைத்த
எண்ணெயும், சிகைக்காய்த் தூளும், கின்னங்களுமாக தோட்டத்துக்
குளியலறைக்குப் போனவன், குளிக்காமல், கிணற்றடித் திட்டில் உட்கார்ந்து,
பலத்த யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அங்கே தற்செயலாக வந்த அவனுடைய மனைவி முத்துலெட்சுமி,
அருகில் வந்து, அவனுடைய தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்,
” ராசாவுக்கு என்ன கவலை? எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை?”

”நமக்கு எங்கே கப்பம் வரும்? அப்பம்தான் வரும், அதுவும் சொல்லிவிட்டால்
ராயர்கடை அப்பம்தான் வரும்”

“பிறகென்ன? சூடாக நாலு அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப்
பார்க்க வேண்டியதுதானே? எதற்காக நொடித்துப்போய் உட்கார்ந்திருக்கிறீர்கள்?”

”எங்க ஆத்தா, நான் அவதிப்படனும்னு, ஒன்றைப் பெற்று, வளர்த்துவைத்து
விட்டுப் போயிருக்கிறாளே, அதை நினைத்துத்தான் கவலைப் பட்டுக்
கொண்டிருக்கிறேன்.”

“நீங்க கவலைப்படுவதாலே, அவதி பரிதாபப்பட்டு, போய்விடப்போகிறதா என்ன?”

“போகாது. ஆனாலும் இப்படி ஈவு இரக்கமில்லாத மனிதன், என் ஆத்தாவிற்கு
எப்படி மகனாகப் பிறந்தான் என்பதை நினைக்கும்போது, கோபம் கோபமாக
வருகிறது?”

“எல்லா விரல்களும் ஒரு மாதிரியா இருக்கிறது? வலது, இடது என இரண்டு
கைகளும் ஒருமாதிரியாகவா பயன்படுகிறது? குடும்பம் என்றால், அண்ணன்,
தம்பி என்றால், இப்படிக் கலந்துகட்டிதான் இருப்பார்கள். எல்லோரும் உங்களைப்
போல ஆத்தாபிள்ளையாகவா இருப்பார்கள்? நீங்கள்தான் விடாப்பிடியாக உங்கள்
ஆத்தாவைக் கடைசிவரை கூடவே வைத்திருந்து, கண்ணைப் போல பார்த்துக்
கொண்டீர்கள். உங்கள் அண்ணன் படித்து முடித்து வேலைக்குப் போன
நாளிலிருந்து இன்றுவரை பெரிய குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் தன்னைப்
பேணியாகவே இருந்துவிட்டார். தான், தனது மனைவி, மக்கள் என்று குடும்ப
அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் யார் திருத்த முடியும்?
அல்லது யார் மாற்ற முடியும்?”

”அதெல்லாம் ஆண்டவன் மாற்றுவான்!”

“ஆண்டவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா? பிறகெதற்கு அவரைப்
பற்றிய பேச்சு?”

“ஆண்டவன் அவரைக் கேட்கட்டும். ஆனால் ஆத்தாவின் மருத்துவச்
செலவிற்காகவும், கேதச் செலவுகளுக்காகவும் சடையப்ப செட்டியாரிடம்,
கடனாக வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?”

”உங்கள் ஆத்தா, காதில் போட்டிருந்த வைரத்தோட்டையும், கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியையும், இதர நகைகளையும் விற்றால் கடனைக் கொடுத்து விடலாமே? அதைச் செய்யுங்கள்”

’ஆத்தாவின் நகைகளை விற்க எனக்கு விருப்பம் இல்லை. ஆத்தாவின் நினைவாக அதை வைத்துக் கொள்ளப்போகிறேன்”

’சரி, அவரிடம் தவணை கேட்டு வையுங்கள். யோசித்து ஏதாவது செய்து,
கடனைக் கட்டிவிடலாம்”

“என் அண்ணன் பைசாக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே?
சும்மா விட்டுவிடலாம் என்கிறாயா?”

“கேட்டால் என்ன சொல்லுவார்? ஆத்தாவைக் காத்த அருமை மகன் எனும்
பெயர் உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஊருக்குள் கொடிபிடிக்கும் யோகம்
உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. சொந்தக்காரர்களிடையே உனக்குத்தான்
மதிப்பு இருக்கிறது. அதோடுசேர்த்துக் கடனையும் நீயே வைத்துக் கொள்
என்று கூறிவிடுவார்”

“ஒகோ!”

“என்ன ஒகோ? அதையெல்லாம் நானாக கற்பனை செய்து சொன்னேன்.
அவரிடம் கேட்டால் சண்டைதான் மிஞ்சும். நீங்கள் அவரிடம் ஒன்றும் கேட்க
வேண்டாம். ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆத்தாவிற்கு ஒத்தை மகனாக
இருந்தால் என்ன செய்வீர்கள்? யாரிடம் போய்க் கேட்பீர்கள்? ஆகவே உங்கள்
ஆத்தாவிற்கு நீங்கள் ஒத்தைமகன் என்று நினைத்துக் கொண்டு, அவரை மறந்து
விடுங்கள். ஒரு தெளிவு வரும்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது தேனப்பனுக்கு.

அதோடு ஒரு தெளிவும் வந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++
மீனாட்சி ஆச்சி எனும் மீனியாச்சிக்கு இரண்டு மகன்கள் என்றாலும், இளைய
மகனான தேனப்பனைத்தான் அவர்கள் அப்பச்சி என்று கூப்பிடுவார்கள்.

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தப் பெயர், ஆச்சி அவர்களின்
மாமனாரின் திருப்பெயர். அதனால் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட
மாட்டர்கள். அதோடு, சின்ன வயதில் தேனப்பன் அழகாக, துறுதுறுவென்று
இருப்பான். அப்போது ஆச்சி, அவர்கள் என்னைபெத்த அப்பச்சி இவன்,
என் அப்பச்சியே எனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார்கள் என்று
வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி, இவனைக் கொஞ்சுவார்கள்.

நான் உன்னோடுதான்டா’ இருப்பேன் என்றும் சொல்வார்கள். அதன்படியே,
தனது எண்பது வயதுவரை அவனுடனேயே இருந்து விட்டு சென்ற மாதம்தான்
காலமானார்கள். ஆச்சியவர்களின் 55 வருட நாகபட்டிண வாழ்க்கை முடிவிற்கு
வந்துவிட்டது.

1954ஆம் ஆண்டு ஏகப்ப செட்டியாரைத் திருமணம் செய்துகொண்டு,
நாகபட்டிணத்திற்குக் குடிவந்த ஆச்சி, முதல் 5 வருட காலம் மஞ்சக்
கொள்ளைப் பகுதி கன்னாரத்தெருவில்தான் குடியிருந்தார்கள்.
அப்போது செட்டியாருக்கு, நகரத்தார் ஒருவரின் அடகுக்கடையில் வேலை.
சம்பளம் நூறு ரூபாய்.ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் செலவு
போக மாதம் இருபது ரூபாய் மிஞ்சும்.

முழுத்தேங்காய் இரண்டணாதான் விலை. கடைக்காரன் ஒரணாவை வாங்கிக்
கொண்டு அரைமூடி கேட்டால்கூடத் தருவான். காலணாவை வாங்கிக் கொண்டு
இரண்டு பற்றைகள் கீறியும் தருவான். காலைச் சட்டினிக்கு அது போதும்.

வாழ்க்கை எளிமையாக இருந்தது. விலைவாசி அத்தனை மலிவாக இருந்தது.

வேலைக்கு இருந்தால் முன்னுக்கு வரமுடியாது என்று தன் மாமனார் கொடுத்த
எட்டாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஐஸ்ஃப்ரூட், தயாரித்து விற்கும் கடை
யொன்றைச் செட்டியார் துவங்கினார்.

தினமும் பத்துப் பெட்டி அளவு ஐஸ் ஃப்ரூட்கள் தயாராகும். கூலியாட்கள்
சைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார்கள்.

நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து
சர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்
பள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில், அத்தனை பெட்டி ஐஸ்களும் விற்றுக்
காசாக வந்துவிடும்.

வடக்கு வீதியில் வீடும், ஐஸ் கடையும் ஒரே இடத்தில். வாடகைக் கட்டிடம்.
இன்றுவரை அங்கேதான் ஜீவனம் நட்ந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி ஐஸ்
பார்லர்’ என்றால் அனைவருக்கும் தெரியும். வேறுமனே மீனாட்சி ஐஸ் பார்லர்,
நாகபட்டிணம் என்று எழுதினால், கடிதங்கள் போய்ச் சேர்ந்துவிடும்.
அந்த அளவிற்குப் பெயருடன் விளங்கியது. ஆனால் வளர்ச்சிதான் இல்லை.
வருமானம் கைக்கும் வாய்க்குமாக இருந்தது. சேமிப்பு மூன்றாண்டுகளுக்கு
ஒரு முறை இத்துப்போன பெட்டிகளை, புதுப்பிக்கும் பணியில் கரைந்து விடும்.

மூத்தமகனை உள்ளூரிலும், பிறகு காரைக்காலில் உள்ள கல்லூரியிலும் படிக்க
வைத்த செட்டியார், அவனுக்கு தனியார் வங்கியொன்றில் வேலையும் வாங்கிக்
கொடுத்தார். அவன் விசுவாசமில்லாதவன். தன்னைப் பேணி, ஆரம்பத்தில்
வீட்டிற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன், திருமணமான பிறகு
ஒன்றும் செய்வதில்லை. பணத்தைக் கட்டிக்கொண்டு அழுவான்.
சும்மா அழுகமாட்டான். மூக்கால் அழுவான்.

இளையவன், அவனுக்குப் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தான்.
அது ஆச்சி அவர்களின் நச்சரிப்பால் ஏற்பட்டது. ”எனக்குப் பெண் குழந்தை
யென்றால் கொள்ளைப் பிரியம். எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.
அவளுக்கு நீலா என்று பெயர் வைக்க வேண்டும்.” என்று சொல்லிக்
கர்ப்பம் தரித்தார்கள் அவர்கள்.

விதி எப்போதுமே விருப்பத்திற்கு எதிராகத்தான் வேலை செய்யும்.

ஆச்சி அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. பெண் குழந்தை
பிறக்கவில்லை. மாறாக மீண்டும் ஆண் குழந்தையே பிறந்தது. ஒருவாரம்
வரை கண்கலங்கியவர்கள், பிறகு சமாதானமாகிவிட்டார்கள்.

தேனப்பன் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, செட்டியாருக்கு உடல்
நலமில்லாமல் போய்விட்டது. அவனை மேல் படிப்புப் படிக்க வைக்காமல்,
ஐஸ் கடைக்கு, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு விட்டார் செட்டியார்.
ஆச்சி இதற்கு வருத்தம் தெரிவித்தபோது. செட்டியார் சிலாக்கியமாகச்
சொன்னார். “அவனுக்கு நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும்
ஜாதகக்காரனல்ல அவன். பின்னால் நன்றாக இருப்பான். இப்போது நீ
தொணதொணக்காதே!”

தேனப்பனுக்கும், தண்ணீர், எசன்ஸ், சாக்ரின், சீனி என்று மூலப்பொருட்களைக்
கலக்கி நேர்த்தியாக ஐஸ்ப்ரூட் போடும் தொழில் சின்ன வயதிலிருந்தே
அத்துபடியானதால், வியாபாரம் களைகட்டியது. இன்னும் இரண்டு சில்லிங்
பெட்டிகளைப் போட்டுத் தொழிலை விரிவாக்கினார்கள். கையில் சேர்ந்த
காசில் தேசிய நெடுங்சாலையில் தாமரைக்குளத்திற்கு எதிரே
(தற்போது தேவி திரையரங்கம் இருக்கும் பகுதியில்) 25 செண்ட் இடத்தை
வாங்கினார்கள்.

ஆனால் யார் கண்பட்டதோ - வாங்கிய இடம் நிலைக்கவில்லை.
ஆறு மாத காலத்திலேயே அதை விற்கும்படியாகிவிட்டது. செட்டியாருக்குப்
புற்று நோய்வந்து, சென்னைக்குக் கூட்டிக் கொண்டுபோய் வைத்தியம்
பார்த்ததில் அந்தப் பணம் கரைந்தது போக, செட்டியாரும் காலமாகிவிட்டார்.

அப்போது தேனப்பனுக்கு 25 வயது. யாரும் பெண் சொல்லிவிடவில்லை.
ஐஸ்புரூட் மாப்பிள்ளை என்று எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு
சம்மதிக்கவில்லை. மீனாட்சி ஆச்சி, தன்தம்பி மகளை, பைசா கூட
வாங்கிக் கொள்ளாமல் தன் மகனுக்கு மணம் முடித்து, நாகபட்டிணத்திற்குக்
கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

காலச் சுழற்சியில், முத்துலெட்சுமி நாகைக்கு வந்து இருபது வருடங்கள்
ஓடி விட்டது. தனக்கு வாழ்வு கொடுத்த விசுவாசத்தில், முத்துலெட்சுமி, தன்
அத்தைக்கும், தேன்னப்பனுக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்தாள்.
தாம்பத்யமும் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு இன்று ப்ள்ஸ் டூ முடித்து விட்ட
நிலையில் ஒரு பையனும் இருக்கிறான். இதுதான் தேனப்பனின் பூர்வ கதை.

**************************
காலதேவன்தான் சிறந்த ஓட்டக்காரன். எதைப்பற்றியும் கவலைப்படாமல்
சீராக ஓடிக்கொண்டிருப்பவன். அவனுடைய ஓட்டத்தில், பலருடைய வாழ்க்கை
முன்னுக்கு வந்திருக்கிறது. பலருடைய வாழ்க்கை பின்னுக்குப் போயிருக்கிறது.

அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் தேனப்பனின் வாழ்க்கை பலரும் புருவத்தை
உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தது. எல்லாம் அவன்
தாயார் கும்பிட்ட தெய்வபலன். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று
அவர்கள் மனனம் செய்து அனுதினமும் பாடிய ‘ராஜேஷ்வரி கவசத்தின்’ மகிமை.
அதோடு தேனப்பனும், தன் தாயார் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடாமல் எந்தப்
பணியையும் செய்வதில்லை.

தன் தாயரின் நினைவாக, தாயாரின் ஜென்ம நட்சத்திரமான மக’ நட்சத்திரத்தன்று,
நீலாதயாட்சி திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ததோடு, பத்து ஏழைகளுக்கு
அன்னதானம் செய்தும் வந்தான்.

நீலாயதயாட்சியின் கருணையால், அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே
நாளில் நீங்கியது. அவனுடைய மகன் பள்ஸ் டூ தேர்வில், மாவட்டத்திலேயே
முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற, அவன் படித்த தனியார் பள்ளிக்கூட
நிரவாகம் மகிழ்ந்து, அவனுக்கு, பொறியியற் படிப்பிற்கு சீட் வாங்கிக்
கொடுத்ததோடு, அவனுடைய படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே
ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். திருவாரூரில் நிலம் நீச்சு,
நவீன அரிசியாலை என்று செல்வம் கொழித்துக் கொண்டிருந்த நகரத்தார்
ஒருவர், தேனப்பனை நிர்வாகப் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு,
நாகப்பட்டிணம் - வேளாங்கன்னி சாலையில், இரண்டு கோடி ரூபாய்
செலவில் மிகப் பெரிய ஒயிட் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைத்
துவக்கினார்.

அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலையும், இரண்டு மடங்கு
விரிவானது. தேனப்பனின் மகனும் படித்து முடித்து, இந்தியாவின் மிகப்
பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியிலமர்ந்தான்.

ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு. ஹுண்டாய்
சான்ட்ரோ கார் என்று தேனப்பனின் வாழ்க்கை அடையாளம் தெரியாமல்
மாறிவிட்டிருந்தது.

அதே நேரத்தில், தேனப்பனின் சகோதரர் வாழ்க்கை சிரம தசையில்
இருந்தது. திருமணமாகிச் சென்ற அவருடைய பெரிய மகள் திரும்பி
வந்து விட்டாள். சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு
நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் எனக்குத் திருமணம்
வேண்டாமென்று தகறாறு செய்து கொண்டிருக்கிறாள். அவர் வேலை
பார்த்த வங்கியில், தவறாக வழங்கப்பட்டு, வராமல் சிக்கலில் மாட்டிக்
கொண்டுவிட்ட பெரும் பணத்திற்காக, வங்கி நிர்வாகம், இவரைப் பணி
நீக்கம் செய்ததொடு, வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய
மனைவிக்கும் பலவிதமான உடற்கோளாறுகள். வைத்திய செலவில்,
பணம் திறந்துவிட்ட பைப் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கிறது.

**********************

அடுத்த நாள் சரஸ்வதி பூஜை. வழக்கம்போல ஆத்தாவின் தேக்குமரப்
பெட்டியடிப் பெட்டியை பூஜையில் வைத்துக் கும்பிட்டான் தேனப்பன்.
அது பழைய வீட்டில், ஆத்தாவின் அறையில், சுவற்று அலமாரியில்
முன்பு இருந்தது. இதுவரை அதைத் திறந்து ஒருமுறைகூடப் பாத்திராத
தேனப்பன், ஒரு குறுகுறுப்புடன் அதைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டான்.
சாவி கிடைக்கவில்லை.

ஸ்க்ரூ டிரைவர் ஒன்றைவைத்து, பூட்டை நெம்பித் திறந்துவிட்டான்.
உள்ளே இரண்டு ஓலைச் சுவடிகள் இருந்தன. ஐவரி எழுத்தாணி ஒன்று
இருந்தது. சிவப்பு பட்டுத் துணி ஒன்று இருந்தது. மாமப் பட்டு. அதையெல்லாம்
எடுத்துவைத்துவிட்டுப் பார்த்தபோது, கடைசியில் கனத்த கவர் ஒன்று இருந்தது.
அதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அத்துடன் முத்துமுத்தான
ஆத்தாவின் கையெழுத்தில் கடிதம் ஒன்றும் இருந்தது.

”அன்பு மகன் தேனப்பனுக்கு,
மீனாட்சி எழுதிக்கொண்டது.
இத்துடன் உள்ள பணத்தை என் அந்திமகாரியங்களுக்கு வைத்துக் கொள்.
ஊரில் உள்ள நம் வளவு வீட்டு அறையில், என்னுடைய தோதகத்தி பீரோவில்
பவுன் காசுகள் உள்ளன. கீழ்தட்டுப் பலகைக்கு அடியில் உள்ள தடுப்புப்
பகுதியில் உள்ளன. மொத்தம் 108 பவுன் காசுகள். எனக்குத் திருமணமாகிப்
பத்து வருடங்கள் கழித்து, என் தந்தையார் எனக்குக் கொடுத்தது. ஒரு
அவசரத்திற்கு, அது உதவும் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
அது உனக்குத்தான். நீ எடுத்துக்கொள். உன் விருப்பப்படி அதைப் பயன்
படுத்திக்கொள்.
வேணும்,
ஸ்ரீசண்முகநாதன் துணை!”

கடிதத்தை படித்த தேனப்பன் கண் கலங்கிவிட்டான். ஆத்தாவிற்குத்தான்
நம் மீது எத்தனை அன்பு! உடன் இருந்த முத்துலெட்சுமி, கடிதத்தை வாங்கிப்
படித்துவிட்டு இப்படிச் சொன்னாள்:

“அடி சக்கை! யோகம்தான் உங்களுக்கு!”

“என்னடி சொல்றே?” இது தேனப்பன்.

“108 பவுன்ல கெளரிசங்கம் ஒன்று செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
108 பவுனில் நகை போட்டுக்கொண்ட முதல் நகரத்தார் என்ற பெருமை
உங்களுக்குக் கிடைக்கட்டும்”

“இல்லை, இல்லை! அந்த 108 பவுனில் ஒரு கழுத்திரு செய்து, உன் கழுத்தில்
அணிவித்து அழகு பார்க்க வேண்டும்!”

“எனக்கு உள்ள அழகு போதும். புது அழகு எல்லாம் வேண்டாம்.”

”ஏன் வேண்டாம்? எங்கள் தாயாருக்கு நான் ஒத்தை மகனென்று நீதானே
சொல்லுவாய். நான் ஒத்தை மகனென்றால், நீதானே ஒத்தை மருமகள் தானே?
அதனால் நீ போட்டுக் கொள்வதுதான் நியாயம்! அதோடு நகைகள் என்றால்
பெண்களுக்குத்தான் என்பது எழுதப் படாத விதி. ஆண்களுக்கு வெறும்
வேஷ்டி சட்டை போதும்!”

“நியாயத்தை பற்றிப் பேசினால், அந்தப் பவுன் காசுகளில் பாதியை நீங்கள்
உங்கள் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டும்”

இந்த இடத்தில் சற்று திகைத்துவிட்ட தேனப்பன், மெல்லிய குரலில் கேட்டான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஒத்தை மகன் என்று முன்பு நான் சொன்னது செலவிற்குத்தான். வரவுக்கல்ல.
பூர்வீகவரவு எப்போதும் பொதுவானதுதான். உங்கள் ஆத்தா வைத்துவிட்டுப்
போனதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரும் உங்கள் ஆத்தாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். கூடப்பிறந்தவன் பங்கை எடுத்துக் கொண்டால், குடும்பம் விருத்தியாகாது என்று எங்கள் ஆயாவீட்டு அய்யா சொல்வார்கள். ஆகவே அவருடைய பங்கு நமக்கு வேண்டாம். கூப்பிட்டு உட்காரவைத்து, அவரிடம் கொடுத்துவிடுங்கள்.....”

முத்து லெட்சுமி சொல்லச் சொல்ல, தேனப்பனின் கண்கள் பனித்து விட்டன.

50 கிலோ பளிக்குச்சிலை - நடமாடும் தாஜ்மஹால் என்று பெண்ணை வர்ணித்து
ஒரு கவிஞன் பாட்டெழுதினானே, அதுபோல முத்து லெட்சுமி 60 கிலோ
எடையுடன், மனதுடன், நடமாடும் தங்கச் சிலை. அவளைவிட உயர்ந்த தங்கம்
எங்கே உள்ளது? அவளைவிட உயர்ந்ததாக தேனப்பனுக்கு வேறு என்ன
கிடைத்து விடப் போகிறது?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




வாழ்க வளமுடன்!

81 comments:

  1. அன்புள்ள ஆசிரியருக்கு,

    இது பின்னூட்டம் அல்ல
    என் மன ஓட்டம்,

    கதை அருமை
    கதையின் நீதி
    என்னுள் சில தெளிவுகளை
    தந்தது.

    இது அத்தனையும்
    எனக்காக சொன்னது போல் உள்ளது

    சென்ற வருடம் மறைந்த
    என் தாயையும்,
    என்னுடன் பிறந்தவர்களையும்

    என்மனதில் இருந்த சகோதர
    வருத்தத்தையும் அதனால் வந்த
    ரணத்திற்கு மருந்தையும் போட்டது.

    சற்று கண்ணீர் மல்க வைத்துவிட்டது.
    எனினும் இவைகள் எனக்காகவே
    எழுதியதாக தோன்றுகிறது.

    நன்றிகள்,

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. நல்ல கதைக்கு அடையாளம் அதை படித்தபின் தொடரும் நல்ல மனவோட்டங்கள் தான். அருமையாக உள்ளது.

    ReplyDelete
  3. மிகவும் அருமை, படிக்கும்போதே மனது இளகிவிட்டது. முத்துலட்சுமி மாதிரி பெண்களால் தான் இன்னமும் நமது சமுதாயமும், கலாச்சாரமும் இருக்கிறது. தற்போது உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான வகுப்பறை பாடம். இதுவரை தாங்கள் நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும்.

    ReplyDelete
  4. கதை அருமை,அதில் நாலாம் வீடு பற்றி குறிப்பு -Noted.

    ReplyDelete
  5. அய்யா, கதை நல்லா இருந்தது. மூத்த மகனாரைக் கேட்டால், "சின்னவன் தான் அம்மாவுக்கு செல்லம்" என்று வேறு நியாயம் சொல்லுவார்னு நினைக்கிறேன். யார் மேலயும் தப்பு இல்லை, இல்லியா?

    //நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும் ஜாதகக்காரனல்ல அவன்// நாலில் கேது என்றால் என்ன விசேஷம்?

    ReplyDelete
  6. Dear sir,

    வகுப்புக்கு ஆஜர் !!!

    Thanks
    Saravana

    ReplyDelete
  7. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு,
    இது பின்னூட்டம் அல்ல
    என் மன ஓட்டம்,
    கதை அருமை
    கதையின் நீதி
    என்னுள் சில தெளிவுகளை
    தந்தது.
    இது அத்தனையும்
    எனக்காக சொன்னது போல் உள்ளது
    சென்ற வருடம் மறைந்த
    என் தாயையும்,
    என்னுடன் பிறந்தவர்களையும்
    என்மனதில் இருந்த சகோதர
    வருத்தத்தையும் அதனால் வந்த
    ரணத்திற்கு மருந்தையும் போட்டது.
    சற்று கண்ணீர் மல்க வைத்துவிட்டது.
    எனினும் இவைகள் எனக்காகவே
    எழுதியதாக தோன்றுகிறது.
    நன்றிகள்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    இது பொது நீதிக்கதை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போது அல்லது கேள்விப்படும்போது, இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று மின்னலாகத் தோறும் கருத்தைக்
    கதையாக மாற்றி, சம்பவங்களைக் கற்பனையாகச் சேர்த்து, சுவையாகச் சொல்லி, கதையாக எழுதுவது என்னுடைய பழக்கம். இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது.

    உங்கள் உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////krish said...
    நல்ல கதைக்கு அடையாளம் அதை படித்தபின் தொடரும் நல்ல மனவோட்டங்கள் தான். அருமையாக உள்ளது.////

    உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  9. /////பித்தன் said...
    மிகவும் அருமை, படிக்கும்போதே மனது இளகிவிட்டது. முத்துலட்சுமி மாதிரி பெண்களால் தான் இன்னமும் நமது சமுதாயமும், கலாச்சாரமும் இருக்கிறது. தற்போது உள்ள பெண்கள், ஆண்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான வகுப்பறை பாடம். இதுவரை தாங்கள் நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும். நடத்திய பாடங்களில் இதுதான் பொக்கிஷம் ஆகும்.////

    உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி பித்தன்!

    ReplyDelete
  10. ////Blogger singaiSuri said...
    கதை அருமை,அதில் நாலாம் வீடு பற்றி குறிப்பு -Noted./////

    கதையிலுள்ள நீதியைக் குறித்துக் கொள்ளவில்லையா?
    கேது பற்றிய குறிப்பு மட்டும் போதுமா?

    ReplyDelete
  11. /////Blogger கெக்கே பிக்குணி said...
    அய்யா, கதை நல்லா இருந்தது. மூத்த மகனாரைக் கேட்டால், "சின்னவன் தான் அம்மாவுக்கு செல்லம்" என்று வேறு நியாயம் சொல்லுவார்னு நினைக்கிறேன். யார் மேலயும் தப்பு இல்லை, இல்லியா?
    //நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும் ஜாதகக்காரனல்ல அவன்// நாலில் கேது என்றால் என்ன விசேஷம்?/////

    நாலாம் வீடு கல்விக்கு உரிய இடம். அங்கே இருக்கும் கேதுவினால், கல்வி தடைப்படும் அபாயம் உண்டு!
    ஜாதகன் பள்ளி/கல்லூரி drop out ஆக இருப்பான். ஆனால் அந்தக் கேது அவனுக்கு வேறு வழியில் வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும்!

    ReplyDelete
  12. ///Blogger Saravana said...
    Dear sir,
    வகுப்புக்கு ஆஜர் !!!
    Thanks////

    வெறும் ஆஜர் மட்டுமா?

    ReplyDelete
  13. ஐயா,
    இது கதையல்ல
    நிஜம்.

    எனக்கு 4ல்கேது
    கல்வி தடை. உண்மை தான்.

    ReplyDelete
  14. வாத்தியார் ஐயா,

    நல்லதை நினைப்பவனுக்கு நல்லது நடக்கும் என்ற நீதி சரிதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ... அது முன் ஜென்ம வினை போலும்!

    படித்து முடித்ததும் மனம் நெகிழ்ந்தது உண்மை. எத்தனையோ விஷயங்கள் படிக்கிறோம். படித்து முடித்ததும் பல விஷயங்கள் கையில் அள்ளிய நீர் போல தேங்காமல் ஓடி விடும், ஆனால் இந்தக் கதை போன்ற சில எழுத்துக்கள்தான் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைத்த மாதிரி காலா காலத்துக்கும் மனசில் உட்கார்ந்து கொள்கிறது.


    இது போல இன்னும் நிறைய எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்,

    வாழ்த்துக்கள்!

    நன்றி

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  15. அய்யா,
    நான் வகுப்புக்கு ஆஜர் ஆகும் பொது கதையை படிக்க வில்லை. I just read,this is really excellent sir.

    என்னக்கும் தேனப்பனுக்கு இருந்ததை போலவே அம்மா இருக்கிறார். அதில் நன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    மேலும் தேனப்பனுக்கு கிடைத்ததை போலவே எனக்கும் மனைவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அய்யா.

    அன்பு மாணவன்
    சரவணா

    ReplyDelete
  16. Dear Sir,

    Please write these kind of blogs more frequently....this story is amazing!!!

    Thanks
    Shankar

    P.S. Will try to type in tamil.

    ReplyDelete
  17. ஐயா,
    எனக்கு இது கதையாக தெரியவில்லை. நடந்த சம்பவம் என்றே மனதுக்கு படுகிறது. உத்தமர்கள் இன்னும் உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது இந்தப் பதிவு.
    மனம் நெகிழ்கிறது.
    நன்றி உம்முடைய நல் ஆசிரிய சேவைக்கு.

    ReplyDelete
  18. /////DHANA said...
    ஐயா,
    இது கதையல்ல
    நிஜம்.
    எனக்கு 4ல்கேது
    கல்வி தடை. உண்மை தான்./////

    வேறு வழியில் உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்.
    எல்லோருக்கும் 337 தான்!

    ReplyDelete
  19. /////subbu said...
    வாத்தியார் ஐயா,
    நல்லதை நினைப்பவனுக்கு நல்லது நடக்கும் என்ற நீதி சரிதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ... அது முன் ஜென்ம வினை போலும்!
    படித்து முடித்ததும் மனம் நெகிழ்ந்தது உண்மை. எத்தனையோ விஷயங்கள் படிக்கிறோம். படித்து முடித்ததும் பல விஷயங்கள் கையில் அள்ளிய நீர் போல தேங்காமல் ஓடி விடும், ஆனால் இந்தக் கதை போன்ற சில எழுத்துக்கள்தான் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைத்த மாதிரி காலா காலத்துக்கும் மனசில் உட்கார்ந்து கொள்கிறது.
    இது போல இன்னும் நிறைய எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்,
    வாழ்த்துக்கள்!
    நன்றி
    அன்புடன்
    மதுரை சுப்பு////

    நன்றி நண்பரே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன் என்று பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்

    ReplyDelete
  20. /////Saravana said...
    அய்யா,
    நான் வகுப்புக்கு ஆஜர் ஆகும் பொது கதையை படிக்க வில்லை. I just read,this is really excellent sir.
    என்னக்கும் தேனப்பனுக்கு இருந்ததை போலவே அம்மா இருக்கிறார். அதில் நன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    மேலும் தேனப்பனுக்கு கிடைத்ததை போலவே எனக்கும் மனைவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அய்யா.
    அன்பு மாணவன்
    சரவணா/////

    உங்கள் கோரிக்கை நிறைவேற நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  21. /////hotcat said...
    Dear Sir,
    Please write these kind of blogs more frequently....this story is amazing!!!
    Thanks
    Shankar
    P.S. Will try to type in tamil.////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  22. /////prince said...
    ஐயா,
    எனக்கு இது கதையாக தெரியவில்லை. நடந்த சம்பவம் என்றே மனதுக்கு
    படுகிறது. உத்தமர்கள் இன்னும் உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது
    இந்தப் பதிவு. மனம் நெகிழ்கிறது.
    நன்றி உம்முடைய நல் ஆசிரிய சேவைக்கு./////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. Dear Sir,

    கதை படிக்க படிக்க மனதை நெகிழ வைத்துவிட்டது, இதுபோல் கதைகள் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நிங்களே.

    Rgds
    Nainar

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. I have posted what i feel about this story and about my family. But I have removed the same, 'cause if it was read by my elder brother, it may hurt him.

    thanks and best wishes

    ReplyDelete
  26. GOOD AFTERNOON SIR,

    A LOT OF THANKS FOR UR STORY. I WAS READING SO MANY TIMES. TEARS ARE ROLLING DOWN FROM MY EYES DUE TO SAD.
    I LOVE SO MUCH LIKE THIS STORY.

    YOUR LOVINGLY,
    SUNDARI.P

    ReplyDelete
  27. arumuga nainar said...
    Dear Sir,
    கதை படிக்க படிக்க மனதை நெகிழ வைத்துவிட்டது, இதுபோல் கதைகள் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நிங்களே.
    Rgds
    Nainar////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  28. ////T K Arumugam said...
    I have posted what i feel about this story and about my family. But I have removed the same, 'cause if it was read by my elder brother, it may hurt him.
    thanks and best wishes////

    இந்தப் பின்னூடமும் சரியில்லை. எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை என்பதை போல உள்ளது.
    மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  29. ////Indian said...
    Touching story.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////sundari said...
    GOOD AFTERNOON SIR,
    A LOT OF THANKS FOR UR STORY. I WAS READING SO MANY TIMES. TEARS ARE ROLLING DOWN FROM MY EYES DUE TO SAD.
    I LOVE SO MUCH LIKE THIS STORY.
    YOUR LOVINGLY,
    SUNDARI.P/////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!
    எதற்காக எதற்காக தலைப்பு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தட்டச்சுகிறீர்கள்?
    படிப்பதற்கு நெருடலாக உள்ளது!

    ReplyDelete
  31. A touching story.....expecting more stories like this...

    ReplyDelete
  32. கதையாக எண்ண முடியாத நடையும் அதில் வந்த தேனப்பன், அவர் தாயார், அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக உள்ளத்தை உருக வைத்து வாழ்க்கை தர்மத்தை சிறப்பாக புரிய வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  33. ஆசானே வணக்கம்.

    இதைப் படித்த போது என் வாழ்க்கைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

    கூடப் பிறந்தவர்கள் நால்வர் நல்ல நிலையில் இருந்தும், அம்மா உடல் நிலை சரியில்லாத போது, செலவு செய்து கவனித்துக் கொண்டோம். (ஆம் என் மனைவியும் சேர்த்துச் சொல்லுகின்றேன்) இன்று அன்னையின் அருளால் நல்ல நிலைமையில் இருக்கின்றேன்.

    இதைப் படித்த போது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது ஆசானே.

    ReplyDelete
  34. kathai pol illamal oru nigazhvaaga vivarithu ulleergal... aanal ennavarukku sagotharar evarum illaye... Thangai mattume..

    small request: Kolunthiyaalai maiyamaaga vaithu oru kadhaiyum karuthum thangal manathil irunthal pathividungal ayya... :)

    Nandri...

    ReplyDelete
  35. Priya said...
    A touching story.....expecting more stories like this...

    நன்றி சகோதரி! ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போது அல்லது கேள்விப்படும்போது, இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று மின்னலாகத் தோறும் கருத்தைக்கதையாக மாற்றி, சம்பவங்களைக் கற்பனையாகச் சேர்த்து, சுவையாகச் சொல்லி, கதையாக எழுதுவது என்னுடைய பழக்கம். இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது.

    உங்கள் உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  36. ////Sekar said...
    கதையாக எண்ண முடியாத நடையும் அதில் வந்த தேனப்பன், அவர் தாயார், அவர் மனைவி முத்துலட்சுமி மூலமாக உள்ளத்தை உருக வைத்து வாழ்க்கை தர்மத்தை சிறப்பாக புரிய வைத்தமைக்கு நன்றி./////

    சிறப்பான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே. இந்தப் பின்னூட்டங்கள் தான் எனக்கு டானிக்
    மீண்டும் மீண்டும் கதைகள் எழுத உற்சாகத்தைக் கொடுக்கும் டானிக்!

    ReplyDelete
  37. /////இராகவன் நைஜிரியா said...
    ஆசானே வணக்கம்.
    இதைப் படித்த போது என் வாழ்க்கைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
    கூடப் பிறந்தவர்கள் நால்வர் நல்ல நிலையில் இருந்தும், அம்மா உடல் நிலை சரியில்லாத போது, செலவு செய்து கவனித்துக் கொண்டோம். (ஆம் என் மனைவியும் சேர்த்துச் சொல்லுகின்றேன்) இன்று அன்னையின் அருளால் நல்ல நிலைமையில் இருக்கின்றேன்.
    இதைப் படித்த போது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது ஆசானே./////

    உங்கள் உள்ள உணர்வுகளைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள் ராகவன். நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  38. /////arivom said...
    kathai pol illamal oru nigazhvaaga vivarithu ulleergal... aanal ennavarukku sagotharar evarum illaye... Thangai mattume..
    small request: Kolunthiyaalai maiyamaaga vaithu oru kadhaiyum karuthum thangal manathil irunthal pathividungal ayya... :)
    Nandri.../////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி. இதுவரை, இப்படி 60 கதைகளை எழுதியுள்ளேன். 40 கதைகள் இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. மீதிக் (அடுத்த 20) கதைகள், நவம்பர் முதல் வாரம், புத்தகமாக வரவுள்ளது. மாமியார், மருமகள், நாத்தினார், கொழுந்தியாள் என்று அனைவரைப் பற்றியும் புனையப்பட்ட கதைகள் அவற்றில் உண்டு!

    ReplyDelete
  39. ம்னசாட்சி உள்ள் மனிதந்தான் உங்கள் கதைநாயகன். நாட்டில் மழை பொழிவது அவன் மனைவி போன்ற சிலரால்தான்.

    ReplyDelete
  40. Iyya

    My eyes were filled with tears, really believe me. Hats off to Muthulakshmi

    Marmayogi

    ReplyDelete
  41. முத்துலட்சுமி தி கிரேட்..!

    ReplyDelete
  42. ////vattukozhi said...
    மனசாட்சி உள்ள் மனிதன்தான் உங்கள் கதைநாயகன். நாட்டில் மழை பொழிவது அவன் மனைவி போன்ற சிலரால்தான்.////

    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. நன்றி!

    ReplyDelete
  43. /////MarmaYogi said...
    Iyya
    My eyes were filled with tears, really believe me. Hats off to Muthulakshmi
    Marmayogi////

    உங்கள் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி யோகியாரே!

    ReplyDelete
  44. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    முத்துலட்சுமி தி கிரேட்..!/////

    மூன்றே வார்த்தைகளில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். உனா தானா!
    உங்களைப் போன்ற கதை ரசிகர்களால் மட்டுமே அப்படியொரு விமர்சனம் எழுதமுடியும்.
    நன்றி!

    ReplyDelete
  45. அய்யா வணக்கம் .விடுமுறை என்றுவகுப்பு அறையை எட்டிபார்த்தால் காலை ஆறுமணிக்கே பாடம் வந்து விட்டுஇருக்கிறது .நல்ல கதை ஆனால்பலர் வீட்டிலும் ந்டக்கும் உண்மை சம்பவம் ,நல்லவர்கள் பணத்தை விட தன்னுடைய கடமையும் ,அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைபடாத குணமும் அவர்களை இறைவன் அருள் பார்வையால் கவனித்து கொள்வார்.முத்துலட்சுமி மாதிரி பெண்கள் இன்னமும் .இருக்கிறார்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கதை .கதையில் ஜோதிட சிறு குறிப்பு நாலில்கேது இருந்தால் கல்வி தடை என்று சரியாகத்தான் உள்ளது .கண்கள் பணிக்கும் சிறந்த கதைக்கும்,தங்கள் கடமை தவறாத ஆசிரியர் பணிக்கும் நன்றிபல கோடிகள்

    ReplyDelete
  46. இந்தக் கதைக்காக 108 பவுன் கௌரிசங்கம் தங்களுக்கு பரிசு அளிக்க ஆசை.
    அந்த அள‌வு பக‌வான் எனக்கு வருமான்ம் தர என் ஜாதகத்தில் வழி இருக்கிற‌தா? இதுவரை எழுதிய 60ல் இதுவே 'மாஸ்டெர் பீஸ்'அட்சர லட்சம்
    பெறும். நான் பெண்ணாகப் பிற‌ந்திருந்தால் எனக்கு என் தாயார் 'முத்துலெட்சுமி' என்று பெயர் வைப்பதாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டார்களாம்.உங்கள் கதை நாயகியின் பெயரைப் பார்த்து என் தாய் நினைவு வந்து கண் கலங்கினேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  47. good evening sir
    the story recalls a good memorable moments how to be a good normal human being in day to day life should be and more over that love which is missing in all over the world because of greedy to add money oneself with out thinking is it good for him that what he is doing for his future.one should be happy all the time even he is not having anything with his hand
    he is the happiest person in the world
    happy to share my feelings to you all
    thanks &regards
    ganesan

    ReplyDelete
  48. முத்துலட்சுமியின் முடிவு கதையில் நன்றாய் இருக்கிறது!நிஜத்தில் இப்படி நடக்குமா?..என்னைப் பொறுத்த வரை அந்தத் தன்னைப்பேணி அண்ணணுக்கு பூர்வீக சொத்தைப் பெறுவதற்கு எந்த அறுகதையுமில்லை!........

    ReplyDelete
  49. கதை அருமை
    கதையின் நீதி
    என்னுள் சில தெளிவுகளை
    தந்தது.
    இது அத்தனையும்
    எனக்காக/engal kudumbathukkaga சொன்னது போல் உள்ளது
    Enathu udan Pirantha anaivarum ithai padikka vendum ena ninaikkiren, avarkaludaya comments m therindhu kolla asai, Vathiyaaraiah anubavasthar avarukku en udan pirappukkal madhiri ullavargal enna comments eluthuvargal endru theriyum, antha guna nalan ullavargalukku oru nalla saattaiyadi kodithirukkalam.
    எனினும் இவைகள் Engalukkagave
    எழுதியதாக தோன்றுகிறது.

    நன்றிகள்,

    அன்புடன்,Sakthi Ganesh.

    ReplyDelete
  50. அய்யா,

    முத்துலக்ஷ்மியை போல இன்றும் நாட்டில் சில பேர்கள் உள்ளார்கள் அவர்களினால் தான் மழையே பெய்கிறது.

    என்ன செய்வது, எல்லாம் பிறப்பின் பயன் - சிலர் பெற்ற தாயை உதாசினப்படுத்தி சுய லாபம் காண்பதாக நினைத்து ஏமாந்து விடுகிறார்கள்

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என சொன்னார்கள் இல்லையா?

    அருமையான எழுத்து

    நன்றி
    ஸ்ரீதர்

    ReplyDelete
  51. Ayya,

    Arumaiyana Kathai.

    Ennakum 4 kil Kethu Ullathu..Kudavey Bhudanum Suriyanum...Bhudan kuda irupathalo ennavo Kethu en padipai keduka villai...

    ReplyDelete
  52. /////Meena said...
    அய்யா வணக்கம் .விடுமுறை என்றுவகுப்பு அறையை எட்டிபார்த்தால் காலை ஆறுமணிக்கே பாடம் வந்து விட்டுஇருக்கிறது .நல்ல கதை ஆனால்பலர் வீட்டிலும் ந்டக்கும் உண்மை சம்பவம் ,நல்லவர்கள் பணத்தை விட தன்னுடைய கடமையும் ,அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைபடாத குணமும் அவர்களை இறைவன் அருள் பார்வையால் கவனித்து கொள்வார்.முத்துலட்சுமி மாதிரி பெண்கள் இன்னமும் .இருக்கிறார்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கதை .கதையில் ஜோதிட சிறு குறிப்பு நாலில்கேது இருந்தால் கல்வி தடை என்று சரியாகத்தான் உள்ளது .கண்கள் பணிக்கும் சிறந்த கதைக்கும்,தங்கள் கடமை தவறாத ஆசிரியர் பணிக்கும் நன்றிபல கோடிகள்//////

    உங்கள் கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி சகோதரி!

    ReplyDelete
  53. //////kmr.krishnan said...
    இந்தக் கதைக்காக 108 பவுன் கௌரிசங்கம் தங்களுக்கு பரிசு அளிக்க ஆசை.
    அந்த அள‌வு பக‌வான் எனக்கு வருமான்ம் தர என் ஜாதகத்தில் வழி இருக்கிற‌தா? இதுவரை எழுதிய 60ல் இதுவே 'மாஸ்டெர் பீஸ்'அட்சர லட்சம்
    பெறும். நான் பெண்ணாகப் பிற‌ந்திருந்தால் எனக்கு என் தாயார் 'முத்துலெட்சுமி' என்று பெயர் வைப்பதாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டார்களாம்.உங்கள் கதை நாயகியின் பெயரைப் பார்த்து என் தாய் நினைவு வந்து கண் கலங்கினேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com//////

    நீங்கள் மனநிறைவோடு சொன்னதே, எனக்கு கெளரிசங்கம் பரிசளித்ததுபோல உள்ளது.
    இந்த மாதிரி, ’பெண்ணரசி’ என்று சொல்லும்படியான சில தாயார்களை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அதன் வெளிப்பாடு சில கதைகளில் தானாக வந்துள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  54. //////choli ganesan said...
    good evening sir
    the story recalls a good memorable moments how to be a good normal human being in day to day life should be and more over that love which is missing in all over the world because of greedy to add money oneself with out thinking is it good for him that what he is doing for his future.one should be happy all the time even he is not having anything with his hand
    he is the happiest person in the world
    happy to share my feelings to you all
    thanks &regards
    ganesan////////

    உண்மைதான் கணேசன். மகிழ்ச்சி என்பது நம் மனதில்தான் உள்ளது.வெளியில் இல்லை!
    நன்றி!

    ReplyDelete
  55. /////////////நேசன்..., said...
    முத்துலட்சுமியின் முடிவு கதையில் நன்றாய் இருக்கிறது!நிஜத்தில் இப்படி நடக்குமா?..என்னைப் பொறுத்த வரை அந்தத் தன்னைப்பேணி அண்ணணுக்கு பூர்வீக சொத்தைப் பெறுவதற்கு எந்த அறுகதையுமில்லை!......./////////////.

    அறுகதையில்லை என்பது உண்மை. ஆனால் தர்மக் கணக்கு என்று உள்ளது. நான்கு பிள்ளைகளில் ஒரு பிள்ளை ஊனம் என்பதற்காக, அதை வெளியே அனுப்பிவிடுவோமா?
    சொல்லுங்கள்!

    ReplyDelete
  56. ///////////Sakthi Ganesh said...
    கதை அருமை.கதையின் நீதி.என்னுள் சில தெளிவுகளைத் தந்தது.
    இது அத்தனையும், எனக்காக/engal kudumbathukkaga சொன்னது போல் உள்ளது
    Enathu udan Pirantha anaivarum ithai padikka vendum ena ninaikkiren, avarkaludaya comments m therindhu kolla asai, Vathiyaaraiah anubavasthar avarukku en udan pirappukkal madhiri ullavargal enna comments eluthuvargal endru theriyum, antha guna nalan ullavargalukku oru nalla saattaiyadi kodithirukkalam.
    எனினும் இவைகள் Engalukkagave, எழுதியதாக தோன்றுகிறது.
    நன்றிகள்,
    அன்புடன்,Sakthi Ganesh.//////

    இதை யாருக்காகவும், யாரையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை நண்பரே. கதைகளைப் படித்துவிட்டு, அனைவரும் திருந்திவிடும் வாய்ப்பு கிடையாது. திருந்துவதற்கும் இறைவன்தான் ஒரு சூழ்நிலையைக் கொடுக்கவேண்டும். கொடுப்பான். அதைத்தான் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பார்கள்

    ReplyDelete
  57. //////Sridhar Subramaniam said...
    அய்யா,
    முத்துலக்ஷ்மியை போல இன்றும் நாட்டில் சில பேர்கள் உள்ளார்கள் அவர்களினால் தான் மழையே பெய்கிறது.
    என்ன செய்வது, எல்லாம் பிறப்பின் பயன் - சிலர் பெற்ற தாயை உதாசினப்படுத்தி சுய லாபம் காண்பதாக நினைத்து ஏமாந்து விடுகிறார்கள்
    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என சொன்னார்கள் இல்லையா?
    அருமையான எழுத்து
    நன்றி
    ஸ்ரீதர்//////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீதர்

    ReplyDelete
  58. //////T.V.Radhakrishnan said...
    அருமையாக உள்ளது//////

    நன்றி டி.வி.ஆர் சார்!

    ReplyDelete
  59. /////Strider said...
    Ayya,
    Arumaiyana Kathai.
    Ennakum 4 kil Kethu Ullathu..Kudavey Bhudanum Suriyanum...Bhudan kuda irupathalo ennavo Kethu en padipai keduka villai...//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  60. வணக்கம்
    அய்யா

    அருமையான கதை.இது உண்மை சம்பவம் தானா?

    அப்பறம் ஒன்று, எனது ஊர் நாகப்பட்டினத்தை சார்ந்த ஆக்கத்தை வெளிஇட்டதற்கு நன்றி.நீங்கள் நாகப்பட்டினத்தைபற்றி இந்த அளவுக்கு முக்கிய இடங்களை குறிப்பிட்டு உள்ளீர்களே எப்படி?

    //நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து
    சர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்
    பள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில்//
    //ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு//

    அய்யா உங்களுக்கும்,நாகப்படினத்திருக்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் சொல்லுங்க...
    உங்களது பதிலை ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...
    நன்றி.

    ReplyDelete
  61. ஐயா,

    மனதை தொடும் ஒரு உண்மையான நிகழ்வு.முத்து லக்‌ஷ்மி அவர்கள் உண்மையிலே நடமாடும் தங்கம் தான்.நல்ல நீதிகள் கொண்ட கதை.

    அதோடு 4 இல் கேது கல்வி தடை...உங்கள் டச் கேட்கவே வேண்டாம்.அருமை!!!

    4 இல் கேது என் மேல் படிப்பை தடை செய்தார்.தனுசு லக்னத்தில் புதன் இருந்ததால் அவர் டிப்ளமோ படிக்க வைத்தார்.சனி திசையில் சனியானவர் என்னை பி.ஈ படிக்க விடாமல் மனதை கெடுத்தார்.அவறே 9 ல் இருந்து தன் திசையில் என்னை வெளிநாடு அனுப்பினார்.இதற்கு 7ல் இருந்து லக்னத்தை பார்த்த குரு அவர் புக்தியில் உதவினார்.அவருடன் சந்திரன் இருந்து காதல் திருமணம் கொடுத்தார்...இப்போது 10 ஆம் அதிபன் புதன் திசை என்பதால் 9 ல் இருந்த சனி எனக்கு தனிமை பட்ட வாழ்வை கொடுக்கிறார் தொழில் நிமித்தமாக...என் வாழ்வில் ஜோதிடம் பொய்க்கவே இல்லை.

    ReplyDelete
  62. ////Saravana said...
    Dear Sir,
    Presnt Sir!!!
    Thanks
    Saravana/////

    வருகைப் பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  63. //பாலாஜி.ச.இமலாதித்தன் said...
    வணக்கம் அய்யா.
    அருமையான கதை.இது உண்மை சம்பவம் தானா?
    அப்பறம் ஒன்று, எனது ஊர் நாகப்பட்டினத்தை சார்ந்த ஆக்கத்தை வெளிஇட்டதற்கு நன்றி.நீங்கள் நாகப்பட்டினத்தைபற்றி இந்த அளவுக்கு முக்கிய இடங்களை குறிப்பிட்டு உள்ளீர்களே எப்படி?
    //நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து
    சர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்
    பள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில்//
    //ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு//
    அய்யா உங்களுக்கும்,நாகப்படினத்திருக்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் சொல்லுங்க...
    உங்களது பதிலை ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...
    நன்றி./////

    எனக்குப் பிடித்த ஊர்களில் நாகபட்டிணமும் ஒன்று. அங்கே இருக்கும் நீலாயதாட்சி கோவில் மற்றும் கடற்கரையை ஒட்டி உள்ள ஊர். ஒரே ஒரு முறை சென்று வந்திருக்கிறேன். அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு ஊருக்குச் சென்றால், அந்த ஊரில் உள்ள முக்கியமான இடங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டுவருவது என் வழக்கம்.

    ஆனால் இந்தக் கதையில் குறிப்பிட்டுள்ள அத்தனை இடங்களையும் எனக்குச் சுட்டிக் காட்டியவர்/குறித்துக் கொள்ள உதவியவர் கூகுள் ஆண்டவர் ( I have taken them from Google Maps)

    ReplyDelete
  64. ////Arul said...
    ஐயா,
    மனதை தொடும் ஒரு உண்மையான நிகழ்வு.முத்து லக்‌ஷ்மி அவர்கள் உண்மையிலே நடமாடும் தங்கம் தான்.நல்ல நீதிகள் கொண்ட கதை.
    அதோடு 4 இல் கேது கல்வி தடை...உங்கள் டச் கேட்கவே வேண்டாம்.அருமை!!!
    4 இல் கேது என் மேல் படிப்பை தடை செய்தார்.தனுசு லக்னத்தில் புதன் இருந்ததால் அவர் டிப்ளமோ படிக்க வைத்தார்.சனி திசையில் சனியானவர் என்னை பி.ஈ படிக்க விடாமல் மனதை கெடுத்தார்.அவறே 9 ல் இருந்து தன் திசையில் என்னை வெளிநாடு அனுப்பினார்.இதற்கு 7ல் இருந்து லக்னத்தை பார்த்த குரு அவர் புக்தியில் உதவினார்.அவருடன் சந்திரன் இருந்து காதல் திருமணம் கொடுத்தார்...இப்போது 10 ஆம் அதிபன் புதன் திசை என்பதால் 9 ல் இருந்த சனி எனக்கு தனிமை பட்ட வாழ்வை கொடுக்கிறார் தொழில் நிமித்தமாக...என் வாழ்வில் ஜோதிடம் பொய்க்கவே இல்லை.////

    தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  65. வழக்கம் போலே கதை அருமை.உண்மைச் சம்பவம் போலே கதையை கொண்டுபோவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.(நாகப்பட்டினம் பற்றிய பின்நூட்டத்துக் கேள்வியும் பதிலும் இதனை உணர்த்தும்)
    தேனப்பனுக்குத்தான் 108காசுகள் போய் சேர வேண்டும் என்கிற அவனது அம்மாவின் ஆசையின் நியாயம் முத்துலச்சுமி சொல்லும் அச்சுபிச்சு விளக்கத்தினால் தடைப்படுமானால் அது கதையின் சூட்டைத் தணித்துவிடும்.எனவே படமாக்கும்போது கொஞ்சம் claimaxசை மாற்றி அமையுங்கள் வாத்தியாரே.

    ReplyDelete
  66. ////minorwall said...
    வழக்கம் போலே கதை அருமை.உண்மைச் சம்பவம் போலே கதையை கொண்டுபோவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.(நாகப்பட்டினம் பற்றிய பின்நூட்டத்துக் கேள்வியும் பதிலும் இதனை உணர்த்தும்)
    தேனப்பனுக்குத்தான் 108காசுகள் போய் சேர வேண்டும் என்கிற அவனது அம்மாவின் ஆசையின் நியாயம் முத்துலச்சுமி சொல்லும் அச்சுபிச்சு விளக்கத்தினால் தடைப்படுமானால் அது கதையின் சூட்டைத் தணித்துவிடும்.எனவே படமாக்கும்போது கொஞ்சம் claimaxசை மாற்றி அமையுங்கள் வாத்தியாரே./////

    கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் நான்
    படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்.
    ஆகவே தயாரிப்பாளர் சொல்கிறபடி, படம் எடுக்கும்போது க்ளைமாக்ஸை மாற்றிவிடுவோம்.
    சரிதானே மைனர்?

    ReplyDelete
  67. ஐயா,
    கதை அருமையாக உள்ளது.
    இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானதா இல்லை முழுக்க கற்பனையா?

    ReplyDelete
  68. மேலே உள்ள comment ல் சிலவற்றை பதிய விட்டுவிட்டேன்

    நமக்கு சொந்த ஊர் சிவகங்கைச் சீமை. சுற்றிலும் செட்டி நாட்டுக் கிராமங்கள்..
    என்ன ஒரு விஷயமென்றால் இப்பொழுது அந்த பெரிய நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை.
    நீங்கள் கேள்விப்பட்டீர்களா என்று தெரியவில்லை... சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய நகரத்தார் வீட்டில் ஒரு வயதான ஆச்சி மட்டும் வசித்து வந்தார்கள்....சில திருடர்கள் அந்த வீட்டில் வாடிக்கையாக திருடி வந்தார்கள்..
    வெகு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது , அவர்கள் அதே வீட்டில் உள்ள வேறொரு அறையில் பல மாதங்கள் தங்கி...அதே வீட்டிலேயே திருடி...அங்கேய சமைத்துச் சாப்பிட்டு கொண்டிருந்திருக்கிறார்கள் என்று......

    ReplyDelete
  69. எப்போதுமே கையை கட்டிக்கிட்டு இருக்கிற எல்லோருமே AVM சரவணன் ஆகிடமுடியாது.நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சுக்கிட்டீன்கந்னு நினைக்கிறேன்.(இந்த அளவு குறும்படம் என்றால் ட்ரை பன்னலாம்ன்னு நினைக்கிறேன்.but ஒரு கண்டிஷன்.ஹீரோயின் selection நம்மதுதான்..Anyhow நன்றி.)

    ReplyDelete
  70. ////கார்த்திகேயன் said...
    ஐயா,
    கதை அருமையாக உள்ளது.
    இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானதா இல்லை முழுக்க கற்பனையா?/////

    முழுக்கக் கற்பனையே!

    ReplyDelete
  71. /////கார்த்திகேயன் said...
    மேலே உள்ள comment ல் சிலவற்றை பதிய விட்டுவிட்டேன்
    நமக்கு சொந்த ஊர் சிவகங்கைச் சீமை. சுற்றிலும் செட்டி நாட்டுக் கிராமங்கள்..
    என்ன ஒரு விஷயமென்றால் இப்பொழுது அந்த பெரிய நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை./////

    அதற்குக் காரணம் தொழில், பொருள் ஈட்டல். நமது மாவட்டம் வானம் பார்த்த பூமி. எதற்கும் வழி இல்லை அங்கே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  72. minorwall said...
    எப்போதுமே கையை கட்டிக்கிட்டு இருக்கிற எல்லோருமே AVM சரவணன் ஆகிடமுடியாது.நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சுக்கிட்டீன்கந்னு நினைக்கிறேன்.(இந்த அளவு குறும்படம் என்றால் ட்ரை பன்னலாம்ன்னு நினைக்கிறேன்.but ஒரு கண்டிஷன்.ஹீரோயின் selection நம்மதுதான்..Anyhow நன்றி.)

    நான் புரிந்துதான் எழுதியிருக்கிறேன். நீங்கள் தயாரிப்பாளர் என்றால், யாரை வேண்டுமென்றாலும் கதாநாயகியாகப் போடலாம். காந்திமதி அல்லது மனோரமா அல்லது வடிவுக்கரசி என்று யாரை வேண்டுமென்றாலும் செலக்ட் செய்யுங்கள். திரைக்கதையை அவர்களுக்குத் தகுந்தாற்போல நான் மாற்றிக் கொள்கிறேன்!:-))))

    ReplyDelete
  73. இந்த லிஸ்ட் அம்மா charecterக்கு.ஹீரோயின் லிஸ்ட்டே வேற..முத்துலச்சுமி charecterக்கு ஒரு குத்துப்பாட்டு தேனப்பனோட வெச்சுடலாம்.அப்டியே வைட் ஐஸ்
    கம்பெனி opening ceremonyயோட கட் பண்ணி ஒரு ஜில் ஜில் snowfall locationலே ஜப்பான்லேயே முடிச்சுடலாம்.என்னா?குத்துப்பாட்டு முத்துலச்சுமிக்கு செட் ஆகுமான்னு ஆசிரியர்தான் முடிவு பண்ணனும்.நாம தமிழ்ப்படம்லே எடுக்குறோம்?

    ReplyDelete
  74. ////minorwall said...
    இந்த லிஸ்ட் அம்மா charecterக்கு.ஹீரோயின் லிஸ்ட்டே வேற..முத்துலச்சுமி charecterக்கு ஒரு குத்துப்பாட்டு தேனப்பனோட வெச்சுடலாம்.அப்டியே வைட் ஐஸ்
    கம்பெனி opening ceremonyயோட கட் பண்ணி ஒரு ஜில் ஜில் snowfall locationலே ஜப்பான்லேயே முடிச்சுடலாம்.என்னா?குத்துப்பாட்டு முத்துலச்சுமிக்கு செட் ஆகுமான்னு ஆசிரியர்தான் முடிவு பண்ணனும்.நாம தமிழ்ப்படம்லே எடுக்குறோம்?////

    கனவுக் காட்சியாகப் போட்டுவிட்டால் முத்துலட்சுமிக்கு எந்தக் கெட்ட பெயரும் வராது!
    தாயரிப்பாளர் செலவில் நானும் ஜப்பானைச் சுற்றிப் பார்த்துவிடலாம்!

    ReplyDelete
  75. சார்.நீங்க தெய்வத்திண்ட தெய்வம்.
    (நீங்க ஜெட் வேகத்தில் யோகபாடத்துக்கு திரும்பிட்டீங்க.என்னாலத்தான் follow பண்ண முடியலை.நான் புது வீடு மாற்றுவதால் சில தினங்கள் பிரிவைச்சந்திக்க வேண்டியுள்ளது.மீண்டும் சந்திப்போம்.நன்றி. வணக்கம்.)

    ReplyDelete
  76. கதை பூச்சுகள் இல்லாமல் சிறப்பாக இருக்குங்க வாத்தியாரே.

    எங்கள் ஊரைக் கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.

    முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிகவும் சிறப்பாகவே இருக்கு.

    நல்லோர் என்றும் நல்லதையே நினைப்பார்கள் செய்வார்கள் என்பதைக் கதையின் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்.

    தேனப்பன் சுப்பையா வாத்தியாராக இருந்தாலும் மகிழ்ச்சி தான்.
    :)

    ReplyDelete
  77. ////minorwall said...
    சார்.நீங்க தெய்வத்திண்ட தெய்வம்.
    (நீங்க ஜெட் வேகத்தில் யோகபாடத்துக்கு திரும்பிட்டீங்க.என்னாலத்தான் follow பண்ண முடியலை.நான் புது வீடு மாற்றுவதால் சில தினங்கள் பிரிவைச்சந்திக்க வேண்டியுள்ளது.மீண்டும் சந்திப்போம்.நன்றி. வணக்கம்.)////

    ஜப்பானில் சொந்த வீடு, வாடகை வீடு, விலை, வாடகை விவரங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டு பத்து வரியில் சொல்லுங்கள் மைனர். ஒரு சுவாரசியத்திற்காகத்தான் கேட்கிறேன்

    ReplyDelete
  78. ////கோவி.கண்ணன் said...
    கதை பூச்சுகள் இல்லாமல் சிறப்பாக இருக்குங்க வாத்தியாரே.
    எங்கள் ஊரைக் கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.
    முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிகவும் சிறப்பாகவே இருக்கு.
    நல்லோர் என்றும் நல்லதையே நினைப்பார்கள் செய்வார்கள் என்பதைக் கதையின் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன். தேனப்பன் சுப்பையா வாத்தியாராக இருந்தாலும் மகிழ்ச்சி தான்.:)/////

    உங்கள் ஊரைக் கண் முன் நிறுத்த கூகுள் ஆண்டவர் துணை செய்தார்!
    நன்றி கோவியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com