மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.9.11

Short Story: பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது?

 செட்டிநாட்டிலுள்ள வீடு ஒன்றின் உட்புறத்தில் பெட்டக சாலை 
என்னும் பகுதியின் தோற்றம். பர்மா தேக்கு மரங்களால் கட்டமைக்கப்பெற்றவை. ஒவ்வொருவீடும் நூறு ஆண்டுகளுக்கு 
முன்பு கட்டப்பெற்றவை. 
அப்பகுதியில் இதுபோன்று சுமார் 6,000 வீடுகள் உள்ளன.
-----------------------------------------------------------------------------------------------
சிறுகதை: பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது?
-------------------------------------------------------------------------------------------------------
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்றாலும், சாத்தப்பனின் மனதில் இன்றைக்கும் அது பசுமையாக இருக்கிறது.

பெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை மறக்க முடியுமா என்ன?

பார்த்த முதல் பார்வையிலேயே, சாலாவைப் பிடித்துப் போய்விட, தன் தாயாரின் எதிர்ப்பிற்கிடையே, பிடிவாதமாக இருந்து, அவளையே மணந்து கொண்டான் சாத்தப்பன்.

“அப்பச்சி, பெண் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய நட்சத்திரம்தான் எனக்கு இசைவாக இல்லை” என்று தன் தாயார் விருப்ப மில்லாமல் பேசியபோது, அவர்களைச்சம்மதிக்க வைத்தது பெரும்பாடாகப் போய்விட்டது.

“பூராடம் நூலாடாது. அதாவது பெண்ணின் கழுத்தில் அதிக நாள் தாலி தங்காது” என்று எந்தப் பாவி சொன்னானோ, அதை அவன் தாயார் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைக் கசக்கினார்கள்.

சாத்தப்பன் அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டான்.” ஆத்தா, அவள் மகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள். அவளோடு ஒரு வாரம் வாழ்ந்தாலும் போதும். அதுதான் வாழ்க்கை. எனக்கு அவளையே பேசி முடியுங்கள். மணம் செய்து வையுங்கள். மற்றதையெல்லாம் நீங்கள் வணங்கும் குன்றக்குடி முருகன் பார்த்துக் கொள்வான்.”

அப்படியே நடந்தது. அதற்கு அவனுடைய அப்பச்சி சிங்காரம் செட்டியாரும் உடந்தையாக இருந்தார்.

“இஞ்சே, நாட்டு நடப்புத் தெரியாம பேசாதே! நம்ம சமூகம் சின்ன சமூகம், அதுல உன் விருப்பத்துக்கும், அவன் விருப்பத்துக்கும் சேர்த்துப் பொண்ணு பாக்கிறதுன்ன அது நடக்கிறசாமாச்சாரமா? அவன் நோக்கப்படியே விட்டுவிடு” என்று சொல்லி, ஆச்சியைச் சம்மதிக்க வைத்தது அவர்தான்!

சாலாவின் கழுத்தில் இன்றுவரை நூல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. அதோடு மட்டுமல்ல, சாத்தப்பன் - சாலா தம்பதியருக்கு இன்று 23 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும்  அதே நட்சத்திரம்.

அதுதான் காலதேவனின் திருவிளையாடல்!

பேத்தி பிறந்த சமயத்தில், சாத்தப்பனின் தாயார்தான் அதிகம் கவலைப் பட்டார்கள்.பிறந்த பிள்ளையின் நட்சத்திரம் பூராடமாக இருக்கிறதே என்று கண் கலங்கினார்கள்.

அப்போது சாத்தப்பன் தன் தாயாரிடம் இப்படிச் சொன்னான்.”ஆத்தா, சாலாவின் அப்பச்சிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைப்போல, எனக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். அதற்கு நீ  இப்போதிருந்தே கவலைப் படாதே!”

சாத்தப்பன் மகள் மீனாட்சிக்குத் தகுந்த வரன் கிடைத்ததா?

தொடர்ந்து படியுங்கள்!
                                  
                                            *******

சாத்தப்பனுக்குத் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ் ரோட்டில் பெரிய வீடு. பூர்வீகச்சொத்து. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பெரிய வணிகவளாகம். மாதம் நான்குலட்ச ரூபாய் வாடகையாக வந்து கொண்டிருக்கிறது. ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி அருகேயும் ஒரு பெரிய கட்டடம். அதிலிருந்தும் பெரும் தொகை வாடகையாக வந்து  கொண்டிருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற் காகச் சாத்தப்பனும் சும்மா இருக்காமல்,  இந்தியாவின் தலை சிறந்த, மருந்து உற்பத்தி செய்யும் பத்துக் கம்பெனிகளுக்கு சி & எஃப்  ஏஜென்ட்டாக வணிகம் செய்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய பெற்றோர்களையும் கூடவே வைத்திருக்கிறான். வைத்திருக்கிறான் என்று சொல்வதைவிட, தனக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளாகியும், தனிக்குடித்தனம் போகாமல்,

பெற்றோர்கள், மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாகவே அவன் இருந்து கொண்டிருக்கிறான். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

அவனுக்கு முன்பாகப் பிறந்த சகோதரிகள் மூவரின் குடும்பங்களும், மணப்பாறை, குளித்தலை, தொட்டியம் என்று திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் பத்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று பெரிய வீட்டிற்கு வந்து போவார்கள். உறவு முறைகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அன்பு மழையில் வளமாக இருந்தது.

ஆனால், அவர்கள் வீடுகளில் மீனாட்சிக்குத் தோதாக பையன்கள் இல்லாததால், சாத்தப்பனுக்கு வெளியே வரன் தேடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவனும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல், நல்ல தோதில் ஒரு வரனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

உடனே கிடைத்தால்தானே? ஒன்றிருந்தால் ஒன்றில்லை. சொந்த ஊரில் தேடி ஒன்றும் அமையவில்லை. வெளியூர் என்றாலும் பரவாயில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி, கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே, சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய ஆச்சி சொல்வார்கள்.

அப்போது சாத்தப்பன், இப்படிப் பதில் சொல்வான்: “ஆத்தா, செட்டி நாட்டில் உள்ள 75 ஊர்களும் ஒன்றுதான். ஊரில் என்ன இருக்கிறது? திருச்சி நகரத்தார், சென்னை நகரத்தார், கோவைவாழ் நகரத்தார் என்று இப்போது இருக்கும் ஊர்களை வைத்தும் நகரத்தார்கள் அறியப் படுகிறார்கள். நமக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும்!”

அப்படியே தேடவும் செய்தான்.
        
                                           *********************

திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்களைப் பொறுத்தவரை, முதல் நிபந்தனை, பெண் சிவந்த நிறமாக, அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும். மாநிறம் அல்லது  கறுப்பாக இருந்தாலும் களையான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால் தோற்றம் நன்றாக
இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக இருக்கவேண்டும். இளம்
பெண்களுக்கும்  அதே நிபந்தனைதான்.

அடுத்து இருசாராரும் படித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொறியியல் படித்த பெண்கள், பொறியியல் படித்த மாப்பிள்ளைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதே போல, இரட்டை இஞ்சின் இழுக்கும் வாழ்க்கையை (அதாவது
கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கும் வாழ்க்கையை) விரும்பும் இளைஞர்கள், படித்து வேலைக்குச் செல்லும் பெண்களை விரும்புவார்கள்.

யாரும் குணத்திற்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கேட்டால், திருமணத்திற்குப் பிறகு அல்லவா அது தெரியவரும் என்பார்கள்.

தாய்மார்களைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணத்தின் மேல் ஆசை
இல்லை. ஆனாலும் ஊர்ப்பெருமைக்காக, நல்ல தோதுடன் வரும்
பெண்தான் வேண்டும் என்பார்கள்.

தந்தைமார்களைப் பொறுத்தவரை, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்பார்கள். பாரம்பரியத்தில், பெயரில் சிறந்த குடும்பமாக இருக்க
வேண்டும் என்பார்கள். சொத்துள்ளவர்கள்,

சொத்துள்ள குடும்பமாகத் தேடுவார்கள். கேட்டால் எங்கள் பெண்ணையும், நாங்கள் கொடுக்கும் தோதையும் -அதாவது நகைகளையும் ஸ்ரீதனப் பணத்தையும் வைத்துக் காப்பாற்றக் கூடிய குடும்பமாக வேண்டும் என்பார்கள்.

அப்படித்தான் சில நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு, சாத்தப்பனும் தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம், அவனுடைய நண்பர் ஒருவர், இரண்டு வரன்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்ததோடு, உன் மனத்திருப்திக்கு, அவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு ஒரு முடிவிற்கு வா’ வென்றார்.

எப்படி விசாரிப்பது என்று இவன் கேட்டபோது, அவர் நல்ல யோசனை ஒன்றைச் சொன்னார்.

“நீ அவர்களுடைய செட்டிநாட்டுக் கிராமத்திற்குப் போ. அவர்கள் வீடு இருக்கும் தெருவில், அக்கம் பக்கத்தில், எதிரில் இருக்கும் வீடுகளில் அவர்களைப் பற்றி விசாரி. பெண்ணைப் பெற்றவன் அக்கறையுடன் வந்து விசாரிக்கிறான் என்கின்ற அனுதாபத்தில் அனைவரும் உதவி செய்வார்கள். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.”

அப்படியே செய்தான். ஆனால் அந்த இரண்டு இடங்களுமே பிடிக்காமல் போய்விட்டது.

முகவரிகளைக் கொடுத்த நண்பர் கேட்டபோது, சாத்தப்பன் இப்படிச் சொன்னான்.

”நீ கொடுத்த முதல் இடம் பிடிக்கவில்லை. அந்தப் பையனின் அப்பச்சிக்குத் தொடுப்பு இருக்கிறதாம்.”

“அப்பச்சி சீட்டாடுவார் என்பதற்காகப் பையனும் ஆடுவான் என்று சொல்ல முடியாது. அப்பச்சிக்குத் தொடுப்பு இருப்பதால், பையனும், அப்படியே ஆசா பாசங்களுடன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல முடியாது.”

“இல்லை எனக்கு நெருடலாக இருந்தது. அதை விட்டு விட்டேன்”

“சரி, அடுத்தது என்ன ஆயிற்று?”

“அவர்கள் வீட்டின் கழிப்பறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். முகப்பு, பெட்டகசாலையில் இருக்கும் மின்சார ஸ்விட்ச் போர்டுகளுக்கெல்லாம் மரப் பெட்டியடித்துப் பூட்டி  வைத்திருக்கிறார்கள்.”

“சில வீடுகளில் அப்படி இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது. கழிப்பறையை உபயோகிப்பவர்கள், வேண்டும் அளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டுப் போவதில்லை.

உடையவர்கள் உபயோகிப்பதற்கு, அது தகுதியில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால் பூட்டி வைத்திருப்பார்கள். அதனால் ஒன்றும் தவறில்லை. அதுபோல பவர் கட் ஆகும் சமயத்தில் அதைக் கவனத்தில் கொண்டு, மின் சாதனங்களை உபயோகிப்பவர்கள், சுவிட்சை அணைத்து விட்டுச் செல்வதில்லை. அவர்கள் போன பிறகு - கரண்ட் வந்தவுடன்
அவைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும். அதைத் தவிர்க்க உடையவர்கள் பெட்டியடித்து, பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலும் தவறில்லை. அதிலெல்லாம் குறை கண்டால் எப்படி சாத்தப்பா?”

“இல்லை. அதைக்கூட நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைவிடப் பெரிய கரைச்சல் ஒன்று இருக்கிறது.

“என்ன அது?”

“பொது வீட்டில் அவர்களுடைய பங்குப் பகுதிகள் மட்டும் பராமரிக்கப்படமல், பல்லை இளித்துக்கொண்டு இருக்கிறது. மற்ற பகுதிகள் பராமரிக்கப்பட்டு, பளபளப்புடன் இருக்கின்றன.

இவர்கள் ஒத்து வந்து அவர்களுடன் சேர்ந்து பராமரிப்பதில்லையாம். அதோடு, ஊருக்கு வந்து போனால், ஊருக்கு வெளியே இருக்கும், தங்கள் தனி பங்களாவில் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம். பொது வீட்டிற்கு வந்து போவதில்லையாம். யாருடனும் சுமூகமான உறவு இல்லையாம். அந்த வீட்டிற்குள் ளேயே போய், வளவில் எதிர்ப்பங்கில் இருக்கும் பெரிய
ஆச்சியைக் கேட்டு விட்டேன். அடுத்தடுத்த வீடுகளிலும் கேட்டுவிட்டேன். அவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் என் பெண்ணைக் கொடுத்தால், என் பெண்ணிற்கு,கணவன் வழி சொத்துக்கள் இருக்கும். ஆனால் சொந்தங்கள் இருக்காது. எது முக்கியம் - நீயே சொல் - சொத்தா? சொந்தங்களா?”

"என்னைக் கேட்டால் இரண்டும் வேண்டும். சொத்தில்லாத சொந்தங்களும் பயன்படாது. சொந்தங்களில்லா சொத்தும் பயன்படாது. கவியரசர் அதைத்தான் இப்படிப் பாடிவைத்து விட்டுப்போனார். பானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா: சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லலே, பந்தமில்லே!”

"இல்லை, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வில், எதை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்காகக் கவியரசர், அதை எழுதினார். ஆனால் உண்மையில் பெண்ணிற்கு என்ன வேண்டும் என்பதை இன்னொரு பாட்டில் எழுதிவைத்தார். தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா? அது மான அபிமானங்களைக் காக்குமா? என்றார்.

பெண்ணிற்கு அவளுடைய மான அபிமானங்களைக் காக்கக்கூடிய கணவனும், புகுந்த வீடும் அமைய வேண்டும். அதற்குத்தான் நானும் பாடுபட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பழநி அப்பன் உதவி செய்வான்.”

"ஆகா, உன் நம்பிக்கை வாழ்க! வளர்க!” என்று சொல்லிவிட்டு நண்பர் போய்விட்டார்.

                                  **********************
நேரம் வந்து விட்டால், “நான் வாரேன் தடுக்குப் போட, எங்க ஆத்தா வர்றா பிள்ளையை எடுக்கிக் கொள்ள” என்று எல்லாம் கூடி வரும் என்பார்கள்.

அப்படி சாத்தப்பனுக்கு எல்லாமே ஒரே வாரத்தில் கூடி வந்தது. ஒரு நல்ல மாப்பிள்ளை அமைந்தது. அடுத்து வந்த மாதத்திலேயே திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பங்காளிகள் 370 புள்ளிகள். அப்பச்சி வழி, ஆத்தாவழித் தாய பிள்ளைகள் 200 புள்ளிகள். நட்பு வட்டத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் என்று மொத்தம் 1,000 பேர்களுக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த வாழ்த்தரங்கத்தில் பலரும் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள்
குடும்பத்தின் பாச உணர்வை எடுத்துக்கூறிப் பேசினார்கள்.

மாப்பிள்ளையுடன் பிறந்த சகோதரிகள் மூவர், மாப்பிள்ளையின் அப்பச்சியுடன் பிறந்த சகோதரிகள் மூவர். ஆக மொத்தம் ஆறு பேர்களுக்கும், மாப்பிள்ளையின் தந்தையார்தான் முன்னின்று அவர்கள் அனைவரின் திருமணத்தை நடத்தி வைத்ததைச் சொன்னார்கள்.பந்த பாசங்களுக்கு அவர்களுடைய குடும்பம் ஒரு உதாரணக் குடும்பம் என்று புகழ்ந்து
பேசினார்கள்.

கதையின் நடுவில் வந்தாரே சாத்தப்பனின் நண்பர், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. மாப்பிள்ளையும், பெண்ணும் கும்பிட்டுக் கட்டிக்கொள்ளும்போது, சொந்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், மாலை, பெண் அழைப்பு நிகழ்ச்சிக்குக் காரில் செல்லும் போது, சாத்தப்பனிடம் மெல்லிய குரலில் சொன்னார்.

“உன் முயற்சி வீண் போகவில்லை, சாத்தப்பா, இறையருளால், அற்புதமான குடும்பம் உனக்கு சம்பந்தப்புரமாக அமைந்துள்ளது! இத்தனை சொந்தங்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அது ஒரு காரணத்திற்காகத்தான் இவர்களை நீ தெரிவு செய்தாயா?”

”இல்லை. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது!” இது சாத்தப்பன்.

“என்ன அது?”

“கல்யாணம் பேசும்போது, என் மகளின் புகைப் படத்துடன், ஜாதகத்தையும் கொடுத்தேன். படத்தை மட்டும் வாங்கிக் கொண்டவர்கள், ஜாதகத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற பொருத்தங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஜோதிடத்தை விடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். ”இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது?” என்றார்கள். நான் அசந்து போய்விட்டேன். அவர்களுடைய அசாத்திய இறை நம்பிக்கைக்குத் தலை வணங்குவத்தவிர வேறொன்றும் செய்யத் தெரிய வில்லை எனக்கு. ஆகவே என் மகளை அவர்கள் வீட்டில் கட்டுவதற்கு
எந்தவிதத் தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டேன்!”

தீவிர பக்தரான நண்பரின் கண்கள், உணர்ச்சிப் பிரவாகத்தில், பனித்துவிட்டன! அருணகிரியாரின் கந்தலங்காரப்பாடல் ஒன்று, அவர் மனதில் மின்னலாகத் தோன்றி நின்றது:

"நாளென் செயும்வினை தான்என் செயும்எனை நாடிவந்த
கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும் குமரேசன்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."


                       ++++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி, பத்திரிக்கையில் வந்து பலராலும் பாராட்ட பெற்ற சிறுகதை. நீங்களும் படித்து மகிழ இன்று வலையில் ஏற்றிள்ளேன்
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

34 comments:

  1. //”இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது?//

    உண்மைதான் ஐயா. கோளறு திருப்பதிகத்தைப் பாடும் முன் திருஞானசம்பந்தர் நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டுதான் அதைப் பாடினாராம். நவகிரகங்கள் தானாக தங்கள் இஷ்டத்திற்கு இயங்குவதில்லை. முற்பிறவியிலும் இப்பிறப்பிலும் நாம் செய்த நல் வினை தீவினைக்கேற்பதான் அவை செயல் படுகின்றன. ஏதோ என்னால் முடிந்த வரை, இறை வழிபாடு, நல் காரியங்களில் ஈடுபடுதல் என்று முன் பிறப்பின் கர்ம வினைகளின் கடுமையை குறைக்க முயற்சிக்கிறேன். ஓங்கி அடிப்பதை தாங்கி அடிக்கும் என்பார்கள். அது போல் நடந்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்.

    மிகவும் கொடுத்து வைத்தவர் மாப்பிள்ளையாக வந்தவர் ஏனெனில் வாழ்க்கை என்னும் பயணத்தில் எது எப்பம் நடக்கும் என்று மிகவும் சரியாக எவர் அறிவார் இறைவனை தவிர.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  4. கடவுளை நம்பினார் கைவிடபடுவது இல்லை என்பது தெளிவாகின்றது

    ReplyDelete
  5. மீள் வாசிப்புக்கும் கதை சுவாரஸ்யமகத்தான் இருந்தது.எனக்குத்தெரிந்த பூராடம் பெண்கள், மூலம் பெண்கள் பலர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் நம் மக்களின் மூட நம்பிக்கையால், ஒரு மூல நடசத்திர MD டாக்டர்
    பெண் திருமணம் மிகவும் தள்ளிப் போய் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.

    ReplyDelete
  6. Ayya,

    Super Explanation about Puradam Nachstra & Story as well.

    Sincere Student,
    Trichy Ravi

    ReplyDelete
  7. பூராடம் நூலாடாது,மூலம் நிர்மூலம் போன்ற மூட நம்பிக்கையினால் இந்த நட்சத்ரங்களில் பிறந்த சிறந்த பெண்களுக்கு வரன்கள் அமையமால் காலம் தாமதமாவதுடன் ஜோதிடத்தின் மீது தவறானா பரப்புதல் ஆகும்.

    இவையெல்லாதையும் விட தங்கள் எழுதியுள்ளதை போல் இறைவன் மிது அசத்தியமான நம்பிக்கை வைத்தால் கைவிடபடார்,

    நன்றி தங்களுடைய சிறுகதைக்கு,

    ReplyDelete
  8. mappillai veettarin irai nambikkai kandu enakkum kangal panithana

    ReplyDelete
  9. நல்ல சிறுகதை, மீண்டுமொருமுறை படித்தாலும் சுவாரசியமாகவே இருந்தது.

    ReplyDelete
  10. Vanakkam Ayya,
    Kadavulai vida oru periya Sakthi Ivulagil illai enbadhai oru siru kathayin moolam unarthiya thangalukku mikka Nanrigal

    ReplyDelete
  11. அளவில் சிறியது இந்த கதை..
    ஆழத்தில் பெரியது கருத்துசொல்வதில்

    முத்திரைபதிக்கும்வழக்கமானபாணியில்
    முத்தாய்ப்பாக அமைந்த கடைசிவரிகள்

    கறுப்புச் சட்டை காரர்களுக்கும்
    கடவுள் நம்பிக்கை ஏற்பட செய்தது..

    வழக்கமாக வரும்
    வள்ளுவ சிந்தனைக்கு மாற்றாக

    கவிதை வரிகளின்
    கருத்துக்களை தர விரும்பி இன்று..

    "எங்கே
    என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்

    ஓர் இரவினிலே முதுமையை
    நான் அடைந்து விட்டாலும்

    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், நான்

    மறுபடியும் பிறந்து வந்து
    மாலை சூடுவேன்"

    ReplyDelete
  12. /////Blogger ananth said...
    //”இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது?//
    உண்மைதான் ஐயா. கோளறு திருப்பதிகத்தைப் பாடும் முன் திருஞானசம்பந்தர் நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லிவிட்டுதான் அதைப் பாடினாராம். நவகிரகங்கள் தானாக தங்கள் இஷ்டத்திற்கு இயங்குவதில்லை. முற்பிறவியிலும் இப்பிறப்பிலும் நாம் செய்த நல்வினை தீவினைக்கேற்பதான் அவை செயல் படுகின்றன. ஏதோ என்னால் முடிந்த வரை, இறை வழிபாடு, நல் காரியங்களில் ஈடுபடுதல் என்று முன் பிறப்பின் கர்ம வினைகளின் கடுமையை குறைக்க முயற்சிக்கிறேன். ஓங்கி அடிப்பதை தாங்கி அடிக்கும் என்பார்கள். அது போல் நடந்துக் கொண்டிருக்கிறது.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  13. ////Blogger kannan said...
    ஐயா வணக்கம்.
    மிகவும் கொடுத்து வைத்தவர் மாப்பிள்ளையாக வந்தவர் ஏனெனில் வாழ்க்கை என்னும் பயணத்தில் எது எப்ப நடக்கும் என்று மிகவும் சரியாக எவர் அறிவார் இறைவனை தவிர.//////

    கரெக்ட் கண்ணன். நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger Rathnavel said...
    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ரத்தினவேல்

    ReplyDelete
  15. ////Blogger arul said...
    excellent story sir/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  16. ////Blogger sekar said...
    கடவுளை நம்பினார் கைவிடபடுவது இல்லை என்பது தெளிவாகின்றது////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger kmr.krishnan said...
    மீள் வாசிப்புக்கும் கதை சுவாரஸ்யமகத்தான் இருந்தது.எனக்குத்தெரிந்த பூராடம் பெண்கள், மூலம் பெண்கள் பலர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் நம் மக்களின் மூட நம்பிக்கையால், ஒரு மூல நடசத்திர MD டாக்டர் பெண் திருமணம் மிகவும் தள்ளிப் போய் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.//////

    அடடா, பாவமே! தகவல் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  18. //////Blogger Ravichandran said...
    Ayya,
    Super Explanation about Puradam Nachstra & Story as well.
    Sincere Student,
    Trichy Ravi////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  19. ///Blogger Rathinavel.C said...
    arumai ayya...
    Thanks
    Rathinavel.C/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger RMURUGARAJAN said...
    பூராடம் நூலாடாது,மூலம் நிர்மூலம் போன்ற மூட நம்பிக்கையினால் இந்த நட்சத்ரங்களில் பிறந்த சிறந்த பெண்களுக்கு வரன்கள் அமையமால் காலம் தாமதமாவதுடன் ஜோதிடத்தின் மீது தவறானா பரப்புதல் ஆகும். இவையெல்லாதையும் விட தங்கள் எழுதியுள்ளதை போல் இறைவன் மிது அசத்தியமான நம்பிக்கை வைத்தால் கைவிடபடார், நன்றி தங்களுடைய சிறுகதைக்கு,//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //////Blogger rajakala said...
    mappillai veettarin irai nambikkai kandu enakkum kangal panithana/////

    இதுதான் உண்மையான வாசிப்பின் வெளிப்பாடு. நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. ////Blogger Uma said...
    நல்ல சிறுகதை, மீண்டுமொருமுறை படித்தாலும் சுவாரசியமாகவே இருந்தது./////

    மீண்டும் ஒருமுறையா? முதல் முறை எங்கே படித்தீர்கள் சகோதரி?

    ReplyDelete
  23. ///Blogger gayathri said...
    vert nice/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. Blogger R.Srishobana said...
    Vanakkam Ayya,
    Kadavulai vida oru periya Sakthi Ivulagil illai enbadhai oru siru kathayin moolam unarthiya thangalukku mikka Nanrigal//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. //////Blogger iyer said...
    அளவில் சிறியது இந்த கதை..
    ஆழத்தில் பெரியது கருத்துசொல்வதில்
    முத்திரைபதிக்கும்வழக்கமானபாணியில்
    முத்தாய்ப்பாக அமைந்த கடைசிவரிகள்
    கறுப்புச் சட்டை காரர்களுக்கும்
    கடவுள் நம்பிக்கை ஏற்பட செய்தது..
    வழக்கமாக வரும்
    வள்ளுவ சிந்தனைக்கு மாற்றாக
    கவிதை வரிகளின்
    கருத்துக்களை தர விரும்பி இன்று..

    "எங்கே
    என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை
    நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், நான்
    மறுபடியும் பிறந்து வந்து
    மாலை சூடுவேன்"/////

    கொஞ்சம் நெருடுகிறதே விசுவநாதன். நீங்கள் மறுபடியும் பிறந்து வந்து, வளர்ந்து, ஆளாகி, அவளுக்கு மாலை சூடும்போது, அவளுக்கு ஒளவையார் வயதாகிவிடாதா?:-))))))

    ReplyDelete
  26. மீண்டும் ஒருமுறையா? முதல் முறை எங்கே படித்தீர்கள் சகோதரி?//

    முதலில் ஒருமுறை பதிவிட்டிருந்தீர்களே இந்த கதையை அப்போது படித்ததை சொன்னேன்.

    ReplyDelete
  27. ///கொஞ்சம் நெருடுகிறதே விசுவநாதன். நீங்கள் மறுபடியும் பிறந்து வந்து, வளர்ந்து, ஆளாகி, அவளுக்கு மாலை சூடும்போது, அவளுக்கு ஒளவையார் வயதாகிவிடாதா?///

    இதற்கு பதில்
    இனிய பாடல் தந்தகவிஞர்சொல்லுவார்

    நிச்சய தாம்பூலம் படத்தின்இப்பாடலை
    நிதானமான மெல்லோசையில்

    காதாருகே வைத்துக் கேட்டபடி..
    கண் துயில்கிறேன்...

    ReplyDelete
  28. நல்ல கதை..பழைய காலத்து நகரத்தார் வாழ்க்கை நடைமுறைகளில் தொனிக்கும் பண்பு நன்கு விளக்கப்பட்டிருகிறது..
    இப்பிடி வாத்தியார் கதை படித்து நொம்ப நாளாகிறது..

    ReplyDelete
  29. Excellent story
    thank you
    bhavani k.rajan

    ReplyDelete
  30. //ஜோதிட பாடம் எடுக்கும் வாத்தியார் சொல்லிக் கொடுத்த மிகச் சிறந்த பாடம் இதுதான்.//
    'ஜோதிட பாடம்' எடுக்கும் வாத்தியார் சொல்லிக் கொடுத்த மிகச் சிறந்த பாடம் இதுதான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com