மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.11

எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

-------------------------------------------------------------------------------
எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
1.
நாளை புரட்டாசி சனிக்கிழமை. திருமலைவாசனை நினைப்பதற்கும், வணங்குதற்கும், போற்றி மகிழ்வதற்கும் உகந்தநாள். ஏழுமைலயானைப் போற்றிபாட கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான, அர்த்தும் பொதிந்த பாடலை உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி...

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

திருப்பதி...

- பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

  “உரைத்தது கீதை என்ற தத்துவமே, அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே” என்னும் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
2

--------------------------------------------------------------------------------
பேராசிரியன் ஆனபிறகு ஆரம்பப் பள்ளிகளை அழிக்கச் சொல்வார்களா என்ன?
 

யோகா, தியான, பிராணாயாம வகுப்புக்கள் இந்நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இன்று நகரத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வகுப்புக்கள் பற்றிக் கட்டாயம் கேள்விப் பட்டிருப்பார். ஆழ்நிலை தியானம்(ட்ரான்சிடென்டல் மெடிடேஷன்),வாழும் ‌கலைப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, குண்டலினியோகம் என்று இவற்றில் பலவிதம்.

தியானத்தின் போது எந்தவிதமான குறியீடுகளையும்(சிம்பல்) மனதில் நினைக்காமல், நிர்மலமான மனதற்ற வெளியில் உலாவுதல்தான் மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. குறியீடுகள்,அடையாளங்கள்,உருவங்கள்,ஏன் தீப ஒளி போன்ற தியானத்திற்கு உதவி செய்யும் கருவிகளனைத்தும் தவிர்க்கப்பட வேண்டுமென்பது ஒரு நிலைப்பாடு.

அவ்வாறு தியானத்திற்கு உதவியாக இருக்கும் உருவம் போன்றவைகளை மனதில் இருத்தி தியானம் செய்தல் 'கீழ்நிலை' தியானம் என்றும், உருவம் தவிர்த்த தியானமே 'மேல்நிலை' என்றும் பாகுபடுத்திச் சொல்வார்கள்.

 உருவ வழிபாடு பற்றிக் கடுமையான விமர்சனக்கள் உள்ள ஆப்ரஹாமிக் மதங்களிலும் கூட, அவர்களுடைய வழிபாட்டு முறைகளைக் கூர்ந்து நோக்கினால் உருவ வழிபாட்டுச் சாயல்களைக் காண முடியும். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமான வெட்ட வெளிக்கு திக்கு திசை உண்டா? ஒரு திக்கு நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் அதுவும் குறியீடு (சிம்பல்) தானே?

18 வயது இளைஞனாக என் குருநாதரிடம் மந்திர உபதேசம் பெற்றபோது அவர் என் வயதுக்கு ஏற்றபடி ஒரு தியான முறையை உபதேசித்தார்.

அது என்ன?

"உன் வயது உனக்குக் குறியீடு இல்லாத தியானம் செய்ய‌த் தடையாக இருக்கும்.எனவே நான் சொல்லும் முறைப்படி முதலில் தியானம் செய்து வா. பின்னர் தானாகவே உருவமற்ற தியானம் உனக்குக் கை கூடும். இப்போது என் முன் வந்து இந்த தீட்சை பெற இன்று காலை முதல் நீ செய்த செயல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து இங்கே என் முன் வந்து அமர்ந்தது வரை ஒவ்வொன்றாகக் கூறு பார்க்கலாம்" என்று பணித்தார்.

நானும், பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 4.30 மணி) எழுந்தது, குளித்து முடித்து புத்தாடை அணிந்தது, பூசைக்கான பொருட்களைச் சேகரம் செய்தது, குரு காணிக்கைப் பொருட்களை எடுத்து வைத்தது, கோவிலுக்குள் நுழைந்தது, மண்டபத்தில் குருவின் வரவுக்காகக் காத்திருந்தது, குருவைக் கண்டு வணங்கியது, இப்போது அவர் முன் உபதேசம் பெற அமர்ந்து இருப்பது,என்று வரிசையாகக் கூறினேன்.

ஒவ்வொரு செயலைக் கூறியவுடனும் 'அதனை இன்னும் கொஞ்சம் விவரி' என்பார். எடுத்துக்காட்டாக,'கோவிலுக்குள் நுழைந்தேன்' என்றவுடன்,'அதனை மேலும் விவரிக்கும் முகமாக,' கோவிலில் என்ன என்ன பார்த்தாய்?' என்று தூண்டுவார். நானும் மேலும் நுணுக்கமாக விவரிப்பேன்.

"நாள் தோறும் இதேபோல வெளியில் நடந்த செயல்களில் துவங்கி மெதுவாக ஆன்மீகச் சூழலுக்கு வந்து மனதாலேயே இறைவனைத் தரிசித்து தியானம் செய்" என்று உபதேசித்தார்.

உடனே எனக்கு மனதாலேயே கோவில் புனைந்த ஒரு நாயன்மார் நினைவுக்கு வந்தார். ஒரு கோவிலைக் கட்ட நடைமுறையில் எவ்வளவு மாதங்கள்  ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் மாதங்கள் அந்த நாயன்மார் கோவில் கட்டும் நினைவாகவே இருப்பாராம் அவர்தான் திருநின்றவூர் அருகில் வாழ்ந்த பூசலார் நாயனார். அரசன் கட்டிய கோவிலுக்கு முன்னரே பூசலாரின் இதயக் கோவிலுக்கு இறைவன் எழுந்தருளினார் என்பது வரலாறு. பூசலாரின் வழியைத்தான் என் குருநாதர் எனக்குக் காட்டி அருளினார்.

உங்களுக்குப் பிடித்தமான ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு நாள் முழுதும் அங்கேயே இருங்கள்.அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீப அலங்காரம், நாகஸ்வ‌ர ஓசை, மணியோசை அர்ச்சனை தீபாராதனை அனைத்தையும் மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.நந்தவனத்தில் உலாவி என்னென மலர்கள் பூக்கின்றன என மனதில் வாங்குங்கள்.சிலைகளை யெல்லாம் உற்று நோக்கி மனதில் பதியுங்கள்.

தியானம் செய்ய மறுநாள் அமரும் சமயம், அக்கோவிலில் கண்ட காட்சிகளையெல்லாம் மனத்திரையில் சினிமாப்படம் போல ஓட்டிப் பாருங்கள் மெதுவாக ஒவ்வொரு இடமாகக் கடந்து, அதாவது கொடிமரம், பலிபீடம்,அர்த்த மண்டபம், கருவறை,என்று மனதாலேயே பயணம் செய்யுங்கள்.கருவறையில் நடைபெறும் அர்ச்ச்னை முதலியைவைகளை மனக் காதால் கேளுங்கள்.நாதஸ்வர ஓசை,மணியோசையை
உணருங்கள். பெரிய தீபாராதனை நடைபெறுவதை மனக்காட்சியாகக் காணுங்கள்.

இந்த முறையில் உங்க‌ளுக்கு தியானம் உடனடியாகக் கைகூடாவிட்டாலும், மன ஒருமைப்பாடு ஓரிரு வாரங்களில் கிட்டிவிடும்.மன ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டாலே மன அமைதியும்,நிதானமும் கைகூடிவிடும். பின்னர் தியான நிலை வெகு சீக்கிரத்திலேயே கை கூடிவிடும்.

'மேல் நிலை' தியானக்காரர்கள் இதனை ஏளனம் செய்யலாம். செய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அயர்வுறாதீர்கள்.பெரிய பேராசிரியர்கள் எல்லாம் ஆரம்பக் கல்விக்கற்றுத்தான் பேராசான்கள் ஆனார்கள். தாங்கள் முன்னேறி விட்டதால் ஆரம்பப் பள்ளிகளை பேராசிரியர்கள் அழிக்கச் சொல்லமாட்டார்கள்தானே?

எனவே இந்த எளிய  தியான முறையைக் கைக்கொண்டு இறையருள் பெறுவீர்களாக!

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

16 comments:

  1. திருமலை தென்குமரி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இதைப் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் அவர்களே இந்த பாடலுக்கு வாயசைத்திருக்கிறார். இந்த படத்தை ஒரு முறைதான் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

    தியானம் செய்ய எத்தனிப்பவர்களுக்கு நல்ல ஆரம்பத்திற்க்கான (start from scratch) வழியை காண்பித்துள்ளீர்கள். யார் என்ன சொன்னாலும் இது அருமையான வழி என்பது என் கருத்து. நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. பரவசம் மூட்டும் பாடல், அருமை! நன்றி!!...

    சரியான முறையில் அதாவது...
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக
    என்பதொப்ப படித்தவர்கள் 'தாங்கள் சொல்வது போல்' அப்படி சொல்ல மாட்டார்கள்...
    ஏனென்றால் அவர்களின் வாரிசுகளும் படித்து வர வேண்டும் அல்லவா!
    கிருஷ்ணன் சாரின் அனுபவம் அருமையான ஒன்று! பதிவில் தந்தது அதனினும் நன்று.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. வித்தியாசமான தியான முறை. பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. //ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்! அதாவது திருட்டு வேலை எதையும் செய்ய வேண்டாம்!//

    அய்யா!

    இதனை படித்ததும் மன வேதனையுற்றேன். காரணம், தாங்களே திருட்டு வேலைதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். புரியவில்லையா? தங்கள் வலைதளத்தில் நாளுக்குநாள் வாரமலர் இதழ், மற்றும் கண்ணதாசன் புத்தகங்களில் வெளியானவற்றை சுட்டு தானே வெளியிட்டு வருகிறீர்கள். இதுவும் ஒரு பகல் கொள்ளைதானே. பண்றது பூரா அயோக்கியத்தனம். ஆனா ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது ஞாயமா?

    என்னுடைய கருத்தில் குறை இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. ....தியானம்...

    இஸ்லாமியருக்கு கேட்குமோ
    இந்த நாகஸ்வர ஓசை..

    பதினான்காவது அத்தியாயத்தில்
    படிக்க வேண்டிய 35வது வசனம்

    இப்ராஹிமலைகுசாலுத்து சலாம் தரும்
    இந்த துவாவை கேளுங்கள் ..

    "ரஜனுபினி வபனுபியன்னாபதுல் அஸ்லாம்"

    இந்த வகுப்பில் இதனை பதிவு செய்து இஸ்லாம் சொல்லும் தியானத்தை

    உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்..
    உண்மையிலேயே விளக்கம் வேண்டின்

    எழுதுங்கள்..இங்கு
    எழுத தொடங்கவில்லை

    வகுப்பறையின் போக்கை கொண்டு
    வழக்கம் போல கவிஞரின் வரிகளுடன்

    எல்லோரும் கொண்டாடுவோம்
    நல்லோர்கள் வாழ்வை எண்ணி

    அல்லாவின் பெயரை சொல்லி

    வந்தததை வரவில் வைப்போம்
    சென்றதை செலவில் வைப்போம்

    கறுப்பில்லே வெளுப்புமில்லே
    கனவுக்கு உருவமில்லே

    கடலுக்குள் பிரிவுமில்லே
    கடவுளில் பேதமில்லே

    இன்று போல் என்றும்
    இங்கே ஒன்றாய் கூடுவோம்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. //////Blogger ananth said...
    திருமலை தென்குமரி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இதைப் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் அவர்களே இந்த பாடலுக்கு வாயசைத்திருக்கிறார். இந்த படத்தை ஒரு முறைதான் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது இன்னொரு முறை பார்க்க வேண்டும்.
    தியானம் செய்ய எத்தனிப்பவர்களுக்கு நல்ல ஆரம்பத்திற்க்கான (start from scratch) வழியை காண்பித்துள்ளீர்கள். யார் என்ன சொன்னாலும் இது அருமையான வழி என்பது என் கருத்து. நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்./////

    நல்லது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  8. ////Blogger தமிழ் விரும்பி said...
    பரவசம் மூட்டும் பாடல், அருமை! நன்றி!!...
    சரியான முறையில் அதாவது...
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக
    என்பதொப்ப படித்தவர்கள் 'தாங்கள் சொல்வது போல்' அப்படி சொல்ல மாட்டார்கள்...
    ஏனென்றால் அவர்களின் வாரிசுகளும் படித்து வர வேண்டும் அல்லவா!
    கிருஷ்ணன் சாரின் அனுபவம் அருமையான ஒன்று! பதிவில் தந்தது அதனினும் நன்று.
    நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. ////Blogger Uma said...
    வித்தியாசமான தியான முறை. பகிர்ந்ததற்கு நன்றி./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger RAMADU Family said...
    Perumal Alangaram - Arumai////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Blogger சித்தூர்.எஸ்.முருகேசன் said...
    //ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்! அதாவது திருட்டு வேலை எதையும் செய்ய வேண்டாம்!//
    அய்யா!
    இதனை படித்ததும் மன வேதனையுற்றேன். காரணம், தாங்களே திருட்டு வேலைதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். புரியவில்லையா? தங்கள் வலைதளத்தில் நாளுக்குநாள் வாரமலர் இதழ், மற்றும் கண்ணதாசன் புத்தகங்களில் வெளியானவற்றை சுட்டு தானே வெளியிட்டு வருகிறீர்கள். இதுவும் ஒரு பகல் கொள்ளைதானே. பண்றது பூரா அயோக்கியத்தனம். ஆனா ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது ஞாயமா?
    என்னுடைய கருத்தில் குறை இருந்தால் மன்னிக்கவும்./////

    வாருங்கள் முருகேசன். ஞாயமா அல்ல நியாயமா?’ என்று கேளுங்கள்.

    நாளுக்கு நாள் அல்ல, வாரத்தில் ஒரிரு தினங்களில், நான் படித்தவற்றில் என்னை மிகவும் நெகிழவைத்த விஷயங்களை, செய்திகளை, பாடல் வரிகளை, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுடன் தான் என் பதிவில் உங்களைப் போன்ற நண்பர்களும் மகிழட்டும் என்று கொடுத்துவருகிறேன்/எழுதிவருகிறேன்.

    கவியரசரின் வரிகளை, அவர் பெயருடன்தான் தருகிறேன். நான் எழுதியதைப்போல எழுதினால் மட்டுமே அது திருட்டு. அவர் பெயருடன் அதைத் தரும்போது எப்படி அது திருட்டாகும்?

    Source of the matter அல்லது ஆக்கம் செய்தவரின் பெயருடன் கொடுக்கும்போது அது எப்படித் திருட்டாகும்? நியாயத்திற்கு அங்கே என்ன வேலை?

    நீங்கள் ஒரு பத்திரிக்கை நிருபராக இருந்து கொண்டு இப்படிக் குறை கூறுவது என்ன நியாயம்?

    அரக்கோணம் ரயில் விபத்தை நீங்கள் நேரில் சென்று பார்த்துவிட்டு அதைப் பற்றி எழுதினால் அது செய்தி. அதே விபத்தை உங்கள் சக பத்திரிக்கை நண்பர் எழுதியதை, நீங்கள் அவர் பெயருடன் சேர்த்து எடுத்து எழுதினால், அதுவும் செய்தி. ஆனால் நண்பருடைய செய்தியை, அவர் பெயரைக் குறிப்பிடாமல் நீங்கள் எடுத்து எழுதினால் அதற்குப் பெயர் என்ன?

    என்னுடைய கதைகள், கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை எடுத்துக்கொண்டுபோய் தங்கள் பதிவில் cut & paste செய்து வெளியிடுபவர்கள் அதனுடன் Source வகுப்பறை என்றோ அல்லது என் பெயரையோ குறிப்பிட்டு எழுதினால், நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அதையே தாங்கள் எழுதியதைப் போல வெளியிட்டு அற்ப சந்தோஷப்படுவதற்கு என்ன பெயர்? அதை நீங்களே சொல்லுங்கள்!

    அதைத்தான் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். என் பதிவில் எழுதுவதற்கு நான் யாரைக் கேட்க வேண்டும்? அதையும் நீங்களே சொல்லுங்கள்!

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பட்டினத்தாரின் பாடல் வரிகளிலும், கம்ப ராமாயண வரிகளிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் மெய் மறந்து நெகிழ்ந்து போய், அவற்றைத் தன் பாடல்களில் கையாண்டுள்ளார். பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதெல்லாம் எப்படித் திருட்டாகும்?

    (வீடுவரை உறவு, வீதிவரை மனைவி பாடல் வரிகளின் மூல வரிகள், பட்டினத்தாரின் அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே பாடலாகும். தோள் கண்டேன், தோளே கண்டேன் என்னும் பாடலின் வரிகள் ராமாயணத்திலிருந்து பெறப்பட்டதாகும். கண்ணன் பாடல்களில் சிலவற்றின் மூல வரிகள் குலசேகர ஆழ்வாரின் பாடல்கள். அதை அவரே பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவைகளை எல்லாம் எப்படி திருட்டு என்று சொல்ல முடியும்?)

    என்னுடைய பதிவுகளை (சுமார் 400 பதிவுகளை) ஒருவர் எடுத்துக்கொண்டுபோய், அப்படியே தன்னுடைய சொந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு என்ன பெயர்? அதையும் நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  12. //////Blogger iyer said...
    ....தியானம்...
    இஸ்லாமியருக்கு கேட்குமோ
    இந்த நாகஸ்வர ஓசை..
    பதினான்காவது அத்தியாயத்தில்
    படிக்க வேண்டிய 35வது வசனம்
    இப்ராஹிமலைகுசாலுத்து சலாம் தரும்
    இந்த துவாவை கேளுங்கள் .. "ரஜனுபினி வபனுபியன்னாபதுல் அஸ்லாம்"
    இந்த வகுப்பில் இதனை பதிவு செய்து இஸ்லாம் சொல்லும் தியானத்தை
    உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்..
    உண்மையிலேயே விளக்கம் வேண்டின்
    எழுதுங்கள்..இங்கு
    எழுத தொடங்கவில்லை
    வகுப்பறையின் போக்கை கொண்டு
    வழக்கம் போல கவிஞரின் வரிகளுடன்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    நல்லோர்கள் வாழ்வை எண்ணி
    அல்லாவின் பெயரை சொல்லி
    வந்தததை வரவில் வைப்போம்
    சென்றதை செலவில் வைப்போம்
    கறுப்பில்லே வெளுப்புமில்லே
    கனவுக்கு உருவமில்லே
    கடலுக்குள் பிரிவுமில்லே
    கடவுளில் பேதமில்லே
    இன்று போல் என்றும்
    இங்கே ஒன்றாய் கூடுவோம்//////

    அவர் எழுதியது தியானத்தைப் பற்றி! அது புரிந்தது. நீங்கள் அதற்குப் போட்டுள்ள பின்னூட்டத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது என்னுடைய சிற்றறிவிற்குப் புரியவில்லை!

    ReplyDelete
  13. Its completely a volunteer effort for the noble cause (Everyone has to understand the life and shape their character towards the best). This author has put more efforts by giving everything under one roof and we can't get these fruitful information anywhere in an order. Thanks Sir, keep posting for the interested folks.

    Thangal unmaiyulla Manavan (new joinee)
    Maya alis Mayavanathan.U

    ReplyDelete
  14. i'll should be try. thanks for easy way to meditation.

    ReplyDelete
  15. @வகுப்பறை மாணவர்களுக்கு,
    1 முதல் 400 ஜோதிட பாடங்கள் போஸ்டினை யாராவது டவுன்லோட் செய்திருந்தால், அதை குறுக்கி ஜிப் ஃஃபைலாக அனுப்ப முடியுமா? இது எனது வேண்டுகோள்.

    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com