மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.15

Short story: சிறுகதை: அப்பச்சியின் உயில்


Short story: சிறுகதை: அப்பச்சியின் உயில்

will of a father

அமைப்பு ஒன்றின் பொன்விழா மலருக்காக அடியவன் எழுதிக்
கொடுத்த சிறப்புச சிறுகதை. மலரில் வெளியாகி பலரது பாராட்டையும்
பெற்ற கதை! அதை இன்று உங்களுக்கு அறியத்தகும் முகமாகப்
பதிவில் ஏற்றியிருக்கிறேன்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------
சிறுகதை: அப்பச்சியின் உயில்

தர்மத்தின் சிறப்பைச் சொல்வதுதான் மகாபாரதத்தின் மகத்துவம்.
இன்று நம் வீடுகளில் நடப்பதைதான் அன்று மகாபாரதத்தில் நெடுங்கதையாகச் சொல்லி வைத்தார்கள். சொத்துச் சண்டைகள்,
சொத்தை வைத்து உறவுகளில் விரிசல்கள் இல்லாத வீடுகளைக்
காட்டுங்கள் பார்க்கலாம்.அன்று கிருஷ்ண பகவான் மனித வடிவில்
வந்து  தர்மத்தைக் காப்பதற்காக பல வழிகளலும் செயல்பட்டு,
தர்மம் என்றும் தோற்பதில்லை என்பதை வலியுறுத்திச்
சொன்னார்."தர்மத்தை அதர்மம், சூது கவ்வும் இறுதியில் தர்மம்
வெல்லும்" என்பதுதான் மகாபாரதத்தின் கதைச் சுருக்கம்

காலம் காலமாக தர்மமும் அதர்மமும் இருந்திருக்கிறது. இன்றும்
இருக்கிறது. ஆனால் இறையுணர்வு மிக்கவர்கள்  அதர்மத்தைச்
செய்யப் பயப்படுவார்கள். நகரத்தார்களிடம் இறையுணர்வு அதிகம் இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் தர்மத்தைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். தர்ம சிந்தனையுடன்தான் இருக்கிறார்கள்.

தர்மம் ஒன்றுதான். ஆனால் தர்மத்தை நாம் இரண்டு விதமாகப்
பகுத்துப் பார்க்கலாம். ஒன்று பொருள் தர்மம். செல்வத்தை,
பணத்தைப் பிறருக்குத் தானமாகக் கொடுப்பது பொருள் தர்மம்.
மற்றொன்று செயல் தர்மம்.செய்கையில் தர்மம் பிறழாமல் நடப்பது
செயல் தர்மம்.

பொருள் தர்மத்திற்கு எல்லோரும் கர்ணனைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். கர்ணன் பொருள் தர்மம் செய்தான்.யார் எது
கேட்டாலும் கொடுத்துவிடும் வள்ளலாக இருந்தான். ஆனால்
செயல் தர்மம் செய்யவில்லை.

செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறேன் என்று சொல்லி தன் நண்பன்
துரியோதனின் அக்கிரமச் செயல்களுக்கு, நியாயமற்ற
செயல்களுக்குத் துணை போனான். தாயாதிகளின் சொத்தைக்
கொடு என்று ஒரு தடவை கூட அவன் தன் நண்பன் துரியோதனிடம் சொன்னதில்லை!

பஞ்சபாண்டவர்களுக்கு உரிய பங்கைப் பிரித்துக்கொடு. அதர்மமாக
யுத்தம் செய்யாதே என்று சொன்னதில்லை. அத்துடன்  தன்
நண்பனுக்காக அவனும் பஞ்சபாண்டவர்களுக்கு எதிராக யுத்தத்தில்
கலந்து கொண்டு போரிட்டான். இறுதியில் என்ன ஆயிற்று? அவன்
செய்த தர்மங்கள் எதுவும் அவனைக் காக்கவில்லை. இறுதியில்
அவன் வெற்றி பெறவில்லை. யுத்தகளத்தில் உயிரைவிட்டான்.

ஆனால் தர்மன், செயல் தர்மத்தினால் புகழ் பெற்றான். இறுதியில் வெற்றியையும் அடைந்தான்.தர்மனின் செயல் தர்மத்திற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொன்னால் போதும். நச்சுப் பொய்கைப் படலத்தில்,
அசரீரியாக வந்த தர்ம தேவதை அவனுக்கொரு சோதனையை
வைத்த போது, தர்மத்தை மீறாமல் அதற்குப் பதில் சொன்னான்.

பொய்கையின் கரையில் மயங்கிக் கிடந்த அவனுடைய நான்கு சகோதரர்களில் ஒருவனை மட்டுமே திருப்பித் தர உள்ளேன். யார்
வேண்டும் கேள் என்று தர்மதேவதை சோதனையாகக் கேட்ட போது,
அவன் தயங்காமல் பதில் சொன்னான்:

”நகுலனைத் திருப்பிக் கொடுங்கள்”

”உன் உடன் பிறந்தவர்களில், ஆயிரம் யானைகளின் வலிமைக்குச்
சமமான பீமனையோ அல்லது ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவனும், வில்வித்தையில் தன்னிகரில்லாதவனுமான அர்ஜுனனும் இருக்க,
நகுலனை ஏன் கேட்கிறாய்?”

”நீங்கள் கேட்பது நியாயமானதுதான். வனவாசம் முடிந்து திரும்பிச் செல்லும்போது, அவர்கள் இருவரில் ஒருவர் இருந்தால்தான் நான் துரியோதனனை எதிர்கொள்ள முடியும். ஆனால் நாட்டைத் திரும்பப்
பெறுவது இப்போது முக்கியமில்லை. திரும்ப வீட்டிற்குச் சென்றவுடன்,
என் அன்னைக்கு நான் ஒருவனாவது மகனாக மிச்சமாகச்
செல்வதைப் போல, என் சிற்றன்னைக்கும், இரண்டுமகன்களில்
ஒருவனாவது திரும்பக் கிடைக்க வேண்டாமா? என் சிற்றன்னை
கேட்டால் நான் என்ன சொல்வேன்? ஆகவேதான் அவருடைய
மகன்கள் இருவரில் மூத்தவனான  நகுலனைக் கேட்கிறேன்”

அவனுடைய தர்மமான பதிலில் மகிழ்ந்த தர்ம தேவதை நான்கு பேர்களையுமே உயிர்ப்பித்து அவனுடன் அனுப்பி வைத்தாள்.

இதுபோல தர்மனின் பல தர்மச் செயல்களை மகாபாரதத்தில் நீங்கள்
காண முடியும். அதுபற்றி இன்னொரு சமயம் விவாதிப்போம்.
இப்போது சொல்ல வந்த கதைக்குப் போவோம். வாருங்கள்
                   
                                   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ராமசாமி செட்டியாரின் கோபம் பிரசித்தமானது. 550 புள்ளிகளைக்
கொண்ட செட்டிநாட்டுக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் அவர். எந்த
 ஒரு பொதுக்கருத்திற்குமே ஒத்துப் போகாதவர் அவர். உறவினர்
வீடுகள், பங்காளி வீடுகள், ஊர்ப் புள்ளிகளுக்கான பொதுக்கூட்டம்,
உள்ளூர் சிவன் கோவில் நிகழ்வுகள் என்று ஒன்றை விடாமல்
எல்லா நிகழ்வுகளிலுமே, தலையை நுழைத்து, மற்றவர்களின்
கருத்தைக் காது கொடுத்துக் கேளாமல், மாற்றுக்கருத்தாக தன்
கருத்தைச் சொல்லி, அது எடுபடாத போது, சட்டென்று கோபமுற்று,
சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவார்.

அவர்களும் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். வயதாகிவிட்டது.
புத்தி வறண்டுவிட்டது என்று  பேசிக்கொள்வார்கள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, கோபம் தணிந்த பிறகு, அவராகவே சம்பந்தப்பட்டவர்களிடம் வந்து  சமாதானமாகப் பேசி விட்டுப்போவார். அதனால் அவருடைய வண்டி உள்ளூருக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரே ஒரு சம்பவத்தைச் சொன்னால், அவரைப் பற்றி நீங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற ஆண்டு உள்ளூர் சிவன் கோவிலுக்குத் திருப்பணி நடந்த போது, திருப்பணிக்குழுவில் தன் பெயர் இல்லை என்று தெரிந்தவுடன்,
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, காரியக்காரர்களுடன்
சண்டைக்குப் போய்விட்டார் அவர்.

“திருப்பணிக் குழுவை எப்படித் தேர்வு செய்தீர்கள்?”

“திருப்பணியில் நாட்டமுள்ளவர்களைத் தேர்வு செய்து குழுவை அமைத்துள்ளோம்!”

“நாட்டம் என்றால் எந்த அடிப்படையில் நாட்டம் உடையவர்கள்?”

காரியக்காரர்களில் இளையவனும், ராமசாமி செட்டியாரின் பங்காளி
வீட்டைச் சேர்ந்தவனுமான சின்னய்யா இடைமறித்துச் சொன்னான்.

”பணம் இல்லாமல் என்ன பணி செய்யமுடியும் சொல்லுங்கள்
பெரியப்பச்சி? திருப்பணிக்கு நிதி கொடுத்தவர்களில், அதிகத்
தொகை கொடுத்த பத்துப் பேர்களைத் திருப்பணிக் கமிட்டியில் போட்டிருக்கிறோம்”

"பணம்தான் பிரதானமா? அனுபவம் முக்கியமில்லையா?”

“ஆஹா, அனுபவத்தை யார் குறைத்து மதிப்பிட முடியும்? உங்கள் அனுபவத்தை வைத்து, கோவில் திருப்பணிக்கு ஒரு பத்து லட்ச
ரூபாய் நிதி திரட்டித் தரமுடியுமா - சொல்லுங்கள்?’

”யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற சிறப்பு வேலைகள் எல்லாம் யாருக்குத் தெரியும்? உள்ளூர்க் கோயில்
களுக்கும் சரி பக்கத்து ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் சரி,
அந்த வேலைகளுக்கு, அனுபவஸ்தன் என்ற முறையில் என்னைத்
தானே கூப்பிடுகிறார்கள்?”

“இங்கேயும் உங்களைத்தான் கூப்பிட்டுச் செய்யச் சொல்வதாக
இருக்கிறோம். அதற்காகத் திருப்பணிக் குழுவில் இருந்தால்தான்
நான் அதைச் செய்வேன் என்று நீங்கள் சொல்வீர்களா?” என்று எதிர்க்
கேள்வி எழுந்ததும், ராமசாமி செட்டியார் கோபமாக எழுந்து வெளியேறிவிட்டார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

”ஆம்பிளை இல்லாத சொத்தும், பொம்பிளை இல்லாத வீடும்
உருப்படாது” என்று ராமசாமி செட்டியார் அடிக்கடி  சொல்வார்.
அவரது வாழ்க்கையிலே அது நடந்துவிட்டது.

அவருக்கு ஐம்பத்தியெட்டு வயது நடக்கும்போது, அவரைவிட
ஐந்து வயது  சிறியவரான ஆச்சி அவர்கள் அதாவது அவருடைய
மனைவி சீதை ஆச்சி அவர்கள் உலகின் மிகப் பெரிய மற்றும்
உயர்ந்த பதவியான சிவபதவியை  அடைந்துவிட்டார். செட்டியாருக்கு
வகை வகையாகப் பொங்கிப் போட ஆள் இல்லாமல் போய்விட்டது.

வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கி, பஜ்ஜி மாவில் போட்டு பஜ்ஜி
போல நிறையப் பூப் பஜ்ஜிகளைத் தயார் செய்து, பிறகு அதைவைத்து
கெட்டிக் குழம்பு செய்வார் பாருங்கள் அசத்தலாக இருக்கும். பிஞ்சுக் கத்திரிக்காய் புளிக்குழம்பு, கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பு,
சின்ன வெங்காய சாம்பார், அரைத்து வைத்த சீனி அவரைக்காய்
சாம்பார், பாசிப்பயறு இளங்குழம்பு, எழும்பிச்சை ரசம், தக்காளி ரசம்,
தேங்காய் பொட்டுக்கடலைத் துவையல், பொதினாச் சட்னி,
இஞ்சிப்புளி சட்னி என்று எதுவைத்தாலும் சாப்பிடும்போது
தட்டை விட்டு எழுந்திருக்க மனம் வராது.

அது மட்டுமா சாயந்திர வேளைகளில் இடைப்பலகாரமாக பச்சைத் தேன்குழல், வெள்ளைப் பணியாரம், கும்மாயம், சின்னச்சின்ன ரவா
தோசை என்று விதம் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்து அசத்தி
விடுவார்.

ஆச்சி இறந்த பிறகு, செட்டியாருக்கு வகை செய்ய ஆளில்லாமல் போய்விட்டது. “அவ போன அன்னைக்கே என் நாக்கும் செத்துப்
போய் விட்டதப்பா” என்று வருத்தத்தோடு சொல்வார்.

செட்டியார் படித்து வளர்ந்ததெல்லாம் உள்ளூரில்தான். படிக்கிற
காலத்திலும் அவருடைய  கோபம் பிரசித்தமானது.

“ஏன் சார், அந்தக்காலத்தில் ஏட்டுப் பள்ளிக்கூடங்களில் மொழியையும், கணக்கையும் மட்டும்தானே சொல்லிக் கொடுப்பார்களாம். அது போல இன்றைக்கும் ஏன் பாடத் திட்டங்கள் இருக்கக்கூடாது? சிந்து சமவெளி
நாகரீகத்தையும், பானிப்பட்டு யுத்தத்தையும் படித்து என்ன ஆகப்
போகிறது? நியூட்டனின் விதிகளையும், பிதாகரஸ் தியரியையும், அல்ஜீப்ராவையும் படித்து எதை வெட்டிக் கொண்டு வரப் போகிறோம்? கடைசியில் ஒரு வங்கியிலோ அல்லது ரயில்வேயிலோ அல்லது இன்சூரன்ஸ் கம்பெனிகளிலோ குமாஸ்தா வேலைக்குச் சேரப்போகிறவனுக்கு இந்தக் கருமம் எல்லாம் எதற்கு? எதற்காக அவைகளைக் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்யச் சொல்கிறார்கள்?”
என்று வாத்தியாருடன் மல்லுக்கு நிற்பார்.

வாத்தியார் சொல்வார்.”நீ செல்வந்தர் வீட்டுப் பிள்ளையப்பா. எதற்காக பள்ளிக்கு வருகிறாய்? சாப்பிட்டுவிட்டுப் பேசாமல்  வீட்டிலேயே இருக்கலாமே? உன் அப்பச்சியிடம் சொல்லி இந்தக் கஷ்டங்களுக்கு
ஒரு முடிவு கட்டு!”

பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது இதை ஒருமுறை தன்
தந்தையாரிடம் சொல்லிப் பார்த்தார். உடனே அவர் புன்னகைத்த
வாறே இப்படிப் பதில் சொன்னார்:

“போடா முட்டாப் பயலே! நமக்கு என்ன தேனா.சேயன்னா.ஆனா
வீடு மாதிரி கோடிக் கணக்கிலேயா பணம் இருக்கு? உட்கார்ந்து
திண்பதற்கு? இந்த வீடும் மேலூர்ல இருக்கிற அறுபது ஏக்கர்
பூமியும்தான் நமக்குன்னு உள்ள சொத்து. நிலத்திலே இருந்து வர்ற
குத்தகைப் பணத்திலேதான் இப்ப சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.
நீ படிச்சு நல்ல வேலைக்குப் போனாத்தான் உனக்கு செட்டியவீட்டுல
யாராவது பொண்ணைக் கட்டுவாக. இல்லைன்னா, இப்படியே
நீ விதண்டாவாதம் பேசிக்கிட்டே தனி ஆளாத் திரிய வேண்டியதுதான்.
கீழக் குடியிருப்பு குடியானவன்கூட உனக்குப் பொண்ணைக் கொடுக்க மாட்டான்”

பெண்ணைப் பற்றியும் எதிர்கொள்ள இருக்கும் மண வாழ்க்கையைப்
பற்றியும் தன் தந்தையார் சொல்லியவுடன்  அந்த வயதில் ராமசாமிக்கு
அது நன்றாக உரைத்தது.

அந்தக் காலத்தில் பொறியியற் கல்லூரிகளே மொத்தம் ஒன்பதுதான்.
 பள்ளி இறுதித் தேர்வில் ராமசாமி வாங்கிய குறைவான மதிப்
பெண்களுக்கு அங்கே எல்லாம் உள்ளேயே விடமாட்டார்கள். அது தெரிந்ததால், தொழிற்கல்வியொன்றைக் கற்றுக்கொள்ள விரும்பிய
ராமசாமி ஒரு பாலிடெக்னிக் பள்ளியில் சேர்ந்து, LTM
(Diplomo in Textile Technology) படித்துத் தேறி, கோவில்பட்டியில் உள்ள
நூற்பாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே ராமசாமிக்குத் திருமணம் ஆயிற்று. சீதை என்ற அன்பான, சமர்த்தான பெண் வந்து கழுத்தை
நீட்டினாள்.அவளுடைய அனுசரணையால் கோவில்பட்டியில் ஐந்து
வருட வாழ்க்கை ஓடியது. அடுத்தடுத்து இரண்டு ஆண் மகவுகளும்
பிறந்து மகிழ்ச்சியைக் கொடுத்தன.

அதுவரை கஷ்டப்பட்டு ராமசாமி அடக்கி வைத்திருந்த கோபம் ஒரு
நாள் வெளிப்பட்டு விட்டது. ஷிப்ட் சூப்பர் வைசராக வேலை பார்த்த
ராமசாமி, தனக்கு மேலதிகாரியான ஸ்பின்னிங் மாஸ்டரை, ஏதோ
ஒரு வாக்குவாதத்தில், ஆலைக்குள்ளேயே கோபமாக அறைந்துவிட,
அது பெரிய பிரச்சினையாகி, ராமசாமியை வேலையை விட்டே
தூக்கிவிட்டார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
அதற்குப் பிறகு பகீரதப் பிரயத்தனம் செய்து எங்கேயும் அவருக்கு
வேலை கிடைக்கவில்லை.

அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், அவருக்கு  நாக்கில்
சனி (அதாவது 2ல் சனி) அத்துடன் கோள்சாரப்படி ஏழரைச் சனியும்
நடந்து கொண்டிருப்பதால் கஷ்டப்பட வேண்டிய நேரம் என்று கூறிவிட்டார்கள்.

ராமசாமி செட்டியார் சனிக்கும் கவலைப்படவில்லை. ராகு, கேது
விற்கும் கவலைப்படவில்லை. வீட்டின் முன்பக்கம் இருந்த பெரிய பத்தியிலும் வெளியில் இருந்த வேப்பமரக் காற்றிலுமாக ஆறுமாதம்
காலம் சுகமாகக் கழிந்தது.

அப்படியே நிலைமை நீடிக்கக்கூடாது என்று நினைத்தவர்,
காரைக்குடியில் இருந்த பங்குச் சந்தைத் தரகர்  அலுவலகத்தில்
வேலைக்குச் சேர்ந்து அந்தத் தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்துத் தன் குணத்திற்கு யாரிடமும் வேலை
பார்க்க முடியாது என்பதை உணர்ந்தவர், அந்தத் தொழிலையே
செய்யத் துவங்கினார். கையில் காசு புரளத் துவங்கியது. துரந்தோ
எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல இருபத்தைந்து ஆண்டு காலம் ஓடி
மறைந்தது.

அந்தகாலகட்டத்தில், முதலில் அருகில் உள்ள கோனாபட்டு,
உயர்நிலைப் பள்ளியிலும், பிறகு அழகப்பா பொறியியற் கல்லூரி
யிலும் படித்துப் பொறியாளர்களான ராமசாமி செட்டியாரின்
மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள பாரத் கனரகத் தொழிற்சாலை
யில் வேலைக்குச் சேர்ந்து பணி செய்யத் துவங்கினார்கள்.
இருவருக்கும் திருமணமும் ஆயிற்று. சீதை ஆச்சியின் அன்பான அரவனைப்பினால் இதுவெல்லாம் நடந்தது.

மேலூரில் இருந்த நிலத்தை ஒரு கிரானைட் வியாபாரி ஒருவர்
விலைக்குக் கேட்க, ராமசாமி செட்டியார் தொண்ணூறு லட்ச ரூபாய்க்கு
அந்த நிலத்தை விற்றுவிட்டு, வந்த தொகையை மூன்று பங்காக்கி தன் மகன்கள் இருவருக்கும் ஆளுக்கு முப்பது லட்ச ரூபாய் பணத்தைக்
கொடுத்து, பூர்வீகச் சொத்தின் கணக்கை முடித்துவிட்டார். தன்
பங்குத் தொகையை, வயதான காலத்தில் வேண்டும் என்பதற்காக,
வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு வைத்தார். பையன்கள்
இருவரும் தங்கள் தொழிற்சாலையின் பக்கத்தில் உள்ள குடியிருப்புப்
பகுதியில் ஆளுக்கொரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டிலாகி
விட்டார்கள்.

எல்லாம் இப்படியே சுமூகமாக நடந்து கொண்டிருந்தால், கதையில்
என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

சீதை ஆச்சியின் மரணம்தான் கதையில் ஒரு திருப்பத்தை
ஏற்படுத்தியது?

என்ன திருப்பம்?

தொடர்ந்து படியுங்கள்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சீதை ஆச்சிக்கு இரத்த அழுத்த நோய் உண்டாகி, அதை அவர்
வெளியே சொல்லாமல் வைத்திருந்து ஒரு நாள் அதிகாலை
தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. வந்து பார்த்த
மருத்துவர் மாஸிவ் ஹார்ட் அட்டாக் என்று மூன்று வார்த்தைகளில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப்போய் விட்டார்.

ராமசாமி செட்டியார் ஆடிப் போய் விட்டார். தன்னைப் பார்த்துக்கொள்ள, தனக்கு சவரட்ணை செய்ய ஆளில்லை என்ற கவலை வாட்டத்து
வங்கியது. பத்து நாட்கள் கேதத்திற்குப் பிறகு, இத்தனை பெரிய வீட்டில்
நீங்கள் தனியாக இருக்க வேண்டாம், எங்களோடு  வாருங்கள் என்று பையன்கள் கூப்பிட்டார்கள். செட்டியார் மறுத்துவிட்டார்.

மகன்களோடு ஒட்டுதல் இல்லாமல் போனதும், மருமக்களைப்
பிடிக்காமல் போனதும் அதற்கு முக்கியமான காரணமாகும்

“விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத்தான். நான் யார் வீட்டிலும்
வந்து தங்கவில்லை.” என்று கூறி தனியாளாகவே வீட்டில் இருக்கத் துவங்கிவிட்டார். சமையல் வேலைக்கு மட்டும் ஒரு ஆளைச்
சேர்த்துக்கொண்டார். வந்து சேர்ந்த சமையற்காரர் ஒரு மாதம் கூட நிலைக்கவில்லை. அடிக்கடி வரும் செட்டியாரின் கோபத்தைத் தாக்குப்
பிடிக்க முடியாமல், ஒரு நாள் வேலையைவிட்டு நின்று கொண்டு
விட்டார்.

அதற்குப் பிறகு அடுத்தடுத்து வந்தவர்களும் நிலைக்கவில்லை. ஒரு வருடத்திற்குள் வந்து போனவர்களின் எண்ணிக்கை எட்டு என்றால்
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக ஊருக்குள் மெஸ் வைத்து நடத்திக்கொண்டிருந்த ஒரு
அந்தனர் வீட்டில் இருந்து வேளா வேலைக்கு  உணவு வர ஆரம்பித்தது. அவர்கள் கேட்கின்ற பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பிரச்சினை எதுவும் எழாமல் அது ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் ஒரு விசேடக்கார வீட்டில், பாங்காளிச் செட்டியார் ஒருவர்
இவர் வாயைக் கிளர ராமசாமி அண்ணனுக்கு கோபம் வந்து சத்தம் போட்டுவிட்டார்.

“நான் தனியாக இருப்பதில் என்ன தப்பு? எதற்காக மகன்கள் வீடுகளில்
போய் ஒட்டில் தங்க வேண்டும்? இங்கே நான் ராஜா மாதிரி இருக்கிறேன்.
வயதான காலத்தில் கையில் காசில்லாமல் தட்டைத் தூக்கிக் கொண்டு
போய் ஒருத்தர் வீட்டில் தங்கினால்தான் அவலம். அது மகன் வீடாக இருந்தாலும் அவலம்தான். மருமகள் வேறு வீட்டிலிருந்து வந்தவள். என்னுடைய அருமை, பெருமை அவளுக்கு எப்படித் தெரியும்? அல்லது அவளுக்கு எப்படி அதை விளங்க வைக்க முடியும்?  அதனால்தான்
நான் யார் வீட்டிற்கும் போகவில்லை.”

“இப்போது நடை உடையோடு இருக்கிறீர்கள். இன்னும் வயதாகி உடல்
நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அதனால்தான்
சொன்னேன்”

“அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். விதிப்படி என்ன நடக்குமோ,
அது நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள்.”

உடனே இன்னொரு பங்காளிச் செட்டியார் சமாதானப் படுத்திச்
சொன்னார்:

“அண்ணே, டேக் இட் ஈஸி. உங்கள் மேல் உள்ள அக்கறையில்தான்
அவர் அறிவுரை சொல்கிறார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். உங்கள் மகன்கள் இருவரும் திருச்சி திருவாக்குடியில் அருகருகே  உள்ள வீடுகளில்தான் இருக்கிறார்கள். மகன்கள், மருமக்கள், பேரன் பேத்திகள் என்று நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.
இளமையில் வறுமையும், வயதான காலத்தில் தனிமையும் கொடுமையானது. சிக்கலானது. அதனால்தான் எல்லோரும்
சொல்கிறோம். அதை எடுத்துக்கொள்வதும் அல்லது எடுத்துக்
கொள்ளாததும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நன்றாக யோசித்து
முடிவு செய்யுங்கள்”

“மற்றவர்கள் எல்லாம் யோசிப்பதற்கு நாள் கணக்காகும். நான் ஒரு
நொடியில் யோசித்து முடிவிற்கு வந்துவிடுவேன்.” என்று பதில்
சொன்னவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்
நாக்கில் குடியிருந்த சனி அவரைத் தொடர்ந்து பேச வைத்துவிட்டது.

“என் மருமக்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. எல்லோர்
வீடுகளுக்கும், கன்றுக்குட்டி, பசுக்களைப் போன்ற பெண்கள்தான்
மருமகளாக வருவார்கள். எங்கள் வீட்டிற்கு ஒரு குதிரையும்,
ஒரு கழுதையும் வாழ்க்கைப்பட்டு வந்திருக்கிறது. அதுகளை வைத்துக்கொண்டு என் மகன்கள் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்
கிறார்கள். அந்தச் சுழலில் நானும் போய் ஏன் சிக்க வேண்டும்?
அதனால்தான் போகவில்லை” என்று சொல்லி முடித்தவர்
விருட்டென்று எழுந்து போய்விட்டார்.

இந்தச் செய்தி அந்த விசேடக்கார வீடு முழுவதும் பரவி, பிறகு ஊர்
முழுக்கப் பரவி, பிறகு சம்பந்தப்பட்ட மருமக்களின் காதுகளுக்கும்
போய்ச் சேர்ந்தது.

அவர்கள் தங்கள் கணவர்களிடம் அதைச் சொல்லி நியாயம் கேட்கச் சொன்னார்கள். அப்பச்சியின் குணம் தெரிந்த அவர்கள் இருவரும்
தங்கள் துணைவிகளைச் சமாதானப் படுத்தியதோடு, அந்த
விஷயத்தைப் பெரிது பண்ணவில்லை. ஆனால் அவர்கள் மனைவிகள் இருவரும் கூட்டணி போட்டு, இனி ஊருக்குப் போனால் பெரிய
வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பதில்லை என்று முடிவு செய்ததோடு,
அதைச் செயல் படுத்தவும் செய்தார்கள்.

அடுத்த மாதம் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கும், மணிவிழா
நிகழ்வு ஒன்றிற்கும் வந்தவர்கள், காரைக்குடியில் உள்ள காசி
நகரத்தார் விடுதியில் தங்கி, அங்கே இருந்து தங்கள் ஊருக்குக்
காரில் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பி
விட்டார்கள். வீட்டிற்கும் செல்லவில்லை. விழாக்களில் சந்தித்த
தங்கள் மாமனாருடனும் பேசவில்லை. மூத்த மகன் மட்டும்
நிகழ்ச்சியில் சந்தித்த தன் தந்தையாரிடம் நலம் விசாரித்ததோடு, இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றான்.

இந்தச் செயல்கள் ராமசாமி அண்ணனுக்கு மன உளைச்சளைக் கொடுத்ததோடு, அவருடைய கோபத்தையும் அதிகப்படுத்தின.

அதீத கோபத்தில் யாரும் செய்யாத ஒரு செயலை ராமசாமி
அண்ணன் செய்தார்.

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“நன்றி கெட்ட மாந்தரடா; நானறிந்த பாடமடா” என்ற கவியரசரின்
பாடல் வரிகள்தான் அவருடைய காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

மருமக்கள் சீதனமாகக் கொண்டுவந்த பணத்தில் ஒரு பைசாவைக்
கூட எடுக்காமல் அப்படியே வைப்பு நிதியாகப் போட்டு அவர்கள்
கையில் கொடுத்தது நினைவிற்கு வந்தது. அவர்கள் இருவரின் திருமணத்தைச் கூட பெரும்போக்காகத் தன்னுடைய பணத்தில்
தடபுடலாகத்  செய்து வைத்தது நினைவிற்கு வந்தது. மேலூர் இடம்
விற்றுவந்த பணத்தில் ஆளுக்கு முப்பது லட்ச ரூபாய் கொடுத்து
வசிக்கும் ஊர்களில் வாடகை வீட்டில் வசிக்காமல் சொந்த வீடு
வாங்கிக்கச் சொல்லிப் பணம் கொடுத்ததும் நினைவிற்கு வந்தது.
பத்து வருடங்களுக்கும் மேலாக அவர்களின் சுய சம்பாத்தியத்தில்
தனக்கோ, தன் மனைவிக்கோ ஒத்த ரூபாயைக் கூட கை நீட்டி
வாங்காதது நினைவிற்கு வந்தது. அவர்கள் ஒரு தடவை கூட கேட்டுக்கொடுக்காததும் நினைவிற்கு வந்தது. இப்படிப் பல
நினைவுகள் வந்து வந்து அவருடைய மனதைப் பிழிந்தன.

ஒரு முடிவிற்கு வந்தார். இனி தன்னிடம் உள்ள பணம் எல்லாம்,
தனக்குப் பிறகு அவர்களுக்குச் சேரக்கூடாது, எல்லாம் உள்ளூர் சிவன்கோவிலுக்குத்தான் சேரவேண்டும் என்று எண்ணியவர்
அதைச் செயல் படுத்த முனைந்தார்.

தன் மனைவியின் வைரத்தோடு, பூச்சரம், கழுத்திரு, தான் செய்து கொடுத்திருந்த வைரத்தாலி, மேலும் ஐம்பது பவுன் தங்க நகைகள்
என்று எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கினார். 51 உருப்படிகள்
வெள்ளிச் சாமான்களையும் விற்றுக் காசாக்கினார். வீட்டில் இருந்த
3 தோதகத்தி பீரோக்களையும், இதர சாமான்களையும் விற்றுக்
காசாக்கினார்.

தன்னுடைய சம்பாத்தியத்தில், மற்றும் மேலூர் இடம் விற்று வந்த
தன் பங்குப் பணம் என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைப்பு
நிதியாக தன் பெயரில் போட்டு வைத்தார். தன்னுடைய ஆடிட்டரிடம்
விற்று வந்த காசிற்கெல்லாம் கணக்கைக் கொடுத்து கட்ட வேண்டிய
வருமான வரியையும்  செலுத்தினார்.

எல்லாம் போக இரண்டு கோடி ரூபாய் வைப்பு நிதியாக மாறியது.
எல்லா வைப்பு நிதி ரசீதுகளுக்கும் நகரச் சிவன்கோவில் டிரஸ்ட்டின்
பெயரை நாமினேசன் செய்தார். தனது வக்கீலை வைத்து உயில்
ஒன்றைப் பக்காவாக எழுதி சார்பதிவாளர் அலுவலத்தில் பதிவும்
செய்தார். அத்தனைக்கும் பிரதிகள் மற்றும், சான்றுகளை எடுத்து
சிவன் கோவில் நடப்புக் காரியக்காரர்களிடம் கொடுத்தார்.

கொடுத்தவர் சொன்னார்.”இத்தனை நாட்கள் என்னை இந்த ஊரில்
நன்றாக வாழவைத்த சிவனுக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன். இன்னும் எத்தனை
நாட்கள் நான் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது. என் காலத்திற்குப்
பிறகு, இந்த வைப்புத் தொகையும் , அதன் மூலம்  கிடைக்கும் வட்டித் தொகையும் நகரச் சிவன் கோவிலுக்குத்தான் சேர வேண்டும். நான்
மதுரை விசாலாட்சி நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒரு பெரும் தொகையைக் கட்டிச் சேர்ந்துவிட்டேன். அங்கே எல்லா வசதிகளும்
உள்ளன. 300 பெருமக்கள் உள்ளார்கள். அவர்கள்தான் இனி எனக்குத்
துணை. அங்கேதான் இனி நான் வசிக்கப்போகிறேன். ஒரே ஒரு
வேண்டுகோள். நான் இறந்துவிட்டால், அவர்கள் கோயில் நிர்வகத்திற்குத்தான், அதாவது உங்களுக்குத்தான் தகவல்
கொடுப்பார்கள். நீங்கள் தான் என்னுடைய இறுதி யாத்திரைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும். என் மகன்கள் எனக்குக் கொள்ளிவைக்கக்
கூடாது. எங்கள் பங்காளி வீட்டுப் பையன்களில் ஒருவனைக் கொள்ளிவைக்கச் சொல்லுங்கள். என் மகன்களுக்காக யோசித்து
அவர்களில் யாரும் முன்வராவிட்டால், யோசிக்க வேண்டாம்.
உள்ளூர் தண்டக்காரனை வைத்து அதைச் செய்து விடுங்கள்.
அந்தச் செலவிற்காக தனியாக மூன்று லட்ச ரூபாய் வைப்பு நிதியாக
உள்ளது. அதையும் வாங்கிக்கொள்ளுங்கள்”

வாங்கிக் கொண்ட அவர்களுக்கு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாகியது. எல்லாம் இறைவனின் சித்தம். காலம் ராமசாமி
செட்டியாருக்கு ஆறுதலைத் தரட்டும் என்று அவரிடம் கோயில் காளாஞ்சியைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

திருக்குறளைக் கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவப் பெருந்தகை, அறத்துப்பாலின் இறுதி அதிகாரமாக ஊழ்வினையை எழுதினார்.
ஊழ்வினை வலியது என்று வலியுறுத்தியும் எழுதினார். அதை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாதிரியார் திரு.ஜி.யு. போப்
அவர்களும் அற்புதமாக எழுதினார். விதியைப் பற்றி குறளுக்கு
உரை எழுதியவர், Nothing is stronger than destiny' என்று ஒற்றைவரியில் அருமையாக உரை எழுதினார்.

கோயிலில் தன்னுடைய உயிலின் பிரதியையும் மற்ற ஆவணங்களின் பிரதிகளையும் கொடுத்த ராமசாமி செட்டியார், அன்று மாலையே ஊரைவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். கர்மகாரகன் சனீஷ்வரனும்
கூடவே சென்றான்.

பிறந்த ஊரில்தான் வசிக்க வேண்டும் என்பது அவருடைய விதி.
அதை வலுக்கட்டாயமாக அல்லது தெரியாமல் அவர் மாற்ற
முயன்றபோது விதி அவரை அனுமதிக்கவில்லை.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. கதையின் நீளம்
கருதி அதைச் சுருக்கமாகவே சொல்கிறேன்.

மதுரை விசாலாட்சி நகரில் இருந்த அந்த முதியோர் காப்பகம் பத்து
ஏக்கர் நிலப் பரப்பில் சூப்பராக இருந்தது. ராமசாமி செட்டியருக்கு
குளிர் சாதனம் பொறுத்தப்பெற்ற தனியறை கொடுத்திருந்தார்கள்.
அன்று இரவு நிம்மதியாக உறங்கினார்.

அடுத்த நாள் காலைதான் அது நடந்தது. அதிகாலை எழுந்து நடைப் பயிற்சிக்காக முதல் தளத்தில் இருந்த தன் அறையில் இருந்து
படிகளின் வழியாகக் கீழே இறங்கிவர், காலை மாற்றிவைத்துத் தடுமாற்றத்துடன் சாய்ந்தவர், கீழே விழுந்ததுடன், உருண்டு
படுவேகத்துடன் முன்புறம் வராந்தாவில் இருந்த தூண் ஒன்றில்
தலை அடிபட்டுக் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில், அதிர்ச்சியில்,
அடியின் பலத்தில் உயிர் பிரிந்துவிட்டது.

தகவல் அறிந்த கோயில் காரியக்காரர்கள் அவருடைய பூத உடலை
ஊருக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஊர் மொத்தமும் கூடிவிட்டது. மகன்கள் இருவரும் தகவல் அறிந்து தங்கள் குடும்பத்துடன் வந்து
விட்டார்கள். அடுத்த

நாள் காலை ஒன்பது மணிக்குக் கிரியைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதற்கு முன், ராமசாமி செட்டியாரின் மூத்தமகன், பங்காளிகள், காரியக்காரர்கள், மற்றும் பொது மக்களின் முன்னிலையில் பேசிய பேச்சுத்தான் உருக்கமாக இருந்தது.

“எங்கள் அப்பச்சியின் கோபம் நீங்கள் அனைவரும் அறிந்ததுதான். 
கோபத்தில் தலைகால் புரியாமல் அவர் ஒரு உயிலை எழுதிவைத்து
விட்டுப் போய் விட்டார். அவர் எழுதி வைத்துள்ளபடி அவர் வைத்து
விட்டுச் சென்ற பணம் முழுவதும் கோயிலுக்கு சேரட்டும். அதில் 
எங்களுக்கும் உடன்பாடுதான். நாங்கள் நன்றாக இருக்கிறோம். 
அவருடைய பணம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். ஆனால் 
எங்களைக் கொள்ளி வைக்கக்கூடாது என்று அவர் எழுதி வைத்துவிட்டுபோனதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர் 
எங்களைத் தன்னுடைய பிள்ளைகள் இல்லை என்று உயிலில் 
எழுதவில்லை. நாங்கள் அவருடைய பிள்ளைகள்தான். இந்த ஊரில் நாங்களும் புள்ளிகள்தான். எல்லா நகரத்தார்களுக்கும் உரிய தர்ம 
நியாயங்கள் எங்களுக்கும் உண்டு அல்லவா? நாங்கள்தான் 
கொள்ளிவைப்போம். பத்து நாட்கள் கேதத்தைச் சடங்குகளை 
நாங்கள்தான் முன்னின்று செய்வோம்.அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக கோயில் காரியக்காரர்கள் 
ஒத்துழைக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள்”

அமைதியாக இருந்த கூட்டத்தில் இதைச் சொல்லிவிட்டு
அனைவரையும் நோக்கிக் கைகூப்பினான் அவன்.

யார் மறுப்பார்கள்? அனைவருக்கும் நகரத்தார்களின் தர்ம நியாயங்கள் தெரியுமல்லவா?

உள்ளூர் சுடுகாட்டில் அவன்தான் தன்னுடைய தந்தை ராமசாமி
செட்டியாரின் சிதைக்கு எரியூட்டினான். ராமசாமி

செட்டியாரின் சிதை வெந்து சாம்பலானது. உடன் அவருடைய கோபமும் சாம்பலானது!

 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

39 comments:

  1. பிள்ளைகளையும் சமயத்தில் பெற்றோர்களையும் புரிந்து கொள்வது மிகக் கடினமான காரியமாகத்தான் இருக்கிறது.

    அழகான நடை. ரசித்தேன். நன்றி அய்யா.

    ReplyDelete
  2. ஆறாக் கோபம் போராய் முடியும் என்பார்கள்..

    ஏதோ ராமசாமி செட்டியார் செய்த புண்ணியம் - அவரது மகன் வடிவில் தென்றலாக வந்தது..

    செட்டியார் அவர்களின் கதையும் சுபமாக முடிந்தது..

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கதை. ஆனால் இது கதை போன்று தெரியவில்லை. சொந்த அனுபவங்கள் போல தோன்றுகிறது. நல்ல கருத்துக்கள். Nothing stronger than is destiny.. super lines. பாராட்டுகள் பல.

    ReplyDelete
  4. தங்களிடம் சிறு வேண்டுகோள்.என்னுடைய ஜாதகம் பார்த்து கணித்து கொடுக்க முடியுமா? முடியும் என்றால் அனுப்புகிறேன்.அல்லது ஆலோசனை பெற முடியுமா என அறிய வேண்டுகிறேன்..

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning...amazing explanation with your own style of writing regarding the answer for what is dharma and Excellant stories with your own circumstances...

    Please I request you onething, I wish to work with you. Then only i can learn many things. Will you give me an opportunity?

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  6. அழகான, இயல்பான நடை. ஆழமான ஒரு கருத்தை எளிமையாக சுவையுடன் அளித்த பாங்கு.இவை மனதைக் கவர்ந்தன. அருமையான கதை.

    உண‌வைப்பற்றிய விவரணை நம் பழைய நாட்க‌ளை நினைவுபடுத்தியது.செட்டி நாட்டு சமையல் பற்றியும்,சமையல் மேஸ்திரிகளின் சாமர்த்தியங்களையும் பற்றி பலமுறை உரையாடி இருக்கிறோம். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

    'இரண்டில் சனி இருந்தால் என்ன ஆகும்?'என்ற தலைப்பிட்டு என் கட்டுரை ஒன்றைக்கூட ஐயா பிரசுரம் செய்துள்ளீர்கள். இக்கதையில் வரும் செட்டியாருக்கு இரண்டில் சனி என்று வாசித்தபோது என் சுயபுராணம் நினைவுக்கு வந்தது.

    நல்ல் சிறுகதைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  7. அய்யா,

    //ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பதை போல கோவிலுக்கு எழுதி வைப்பதை விட ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்திருக்கலாம்.//

    நான் சின்ன வயதில் காலையில் எழுந்த உடனே சிறுவர் மலர் படிக்கும் பழக்கம் இருந்தது.அதை படிக்கும் சுவாரசியம் உங்கள் கதையை படிக்கும் போது ஏற்படுகிறது.

    உங்கள் மாணவன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  8. மகாபாரதமா...?
    ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  9. Life is short, very short. We try to learn, earn and live on illusion, ego for nothing.
    I have seen many people like him, had crores and end up in nothing. It just hurts sometimes when good people wasted life due to ego and anger.

    Differences are the strength of maya.

    A bless has its curse. A curse has its bless.

    In this story his bless and curse is wealth.


    Vaalga valamudan.

    ReplyDelete
  10. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மிக அருமையான கதை ..கடந்த காலத்தில் நடந்தவைதான் ..இன்று வாத்தியாரின் பேனா வண்ணத்தில் எங்கள் வாசிப்புக்கு வந்துள்ளது மிக்க நன்றி..
    ஒரு விஷயம் .!!!
    எனது போதக ஆசிரியர் சிவஸ்ரீ ரத்னவேலன் அவர்கள் கூறிய வார்த்தைகள் ..!!!!
    பெற்ற அன்னை ,,,,உடன்பிறந்த சகோதரி ..,, மனைவி ..,தனது மகள் ,இவர்கள் தவிர இல்லறத்தில் இருப்போர் வேறு யாரிடமும் உணவு உண்ண கூடாது என்று நமது தர்மம் சொல்லுகிறது ..!!!கடைகளில் உண்பது சத்திரத்தில் என்று வரும் !!!!
    தர்ம ஞாயம் சொல்லும் மஹா பாரதத்தில் ..ஓரிடத்தில் தர்மனா ?? அருஜுனனா ?? என்று தெரியவில்லை .[.திரு KMRK அல்லது திரு வேப்பிலை... சார் விளக்கலாம் ].*** மருமகள் கையால் உணவு உண்ட பாவத்திற்கு ஆளாவேன் *** என்று கூறுவார்கள் ..
    ஆக,,,, மருமகள் கையால் உணவு வாங்கி உண்பது பாவம் என்று அந்த யுகத்தில் இருந்திருக்கிறது..??? இப்போது..???..
    இதற்கு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க படாத ஒரு விளக்கம் உள்ளது வேண்டும் என்போர் தனியாக கேளுங்கள் ...!!
    நன்றி.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  11. எந்த பொதுக் கருத்துக்கும் ஒத்துப் போகாத விதண்டா வாதம் பேசுகிற நம் வகுப்பறை மாணவர் ஒருவர் இருக்கிறார். நான் கூட ஆரம்பத்தில் அவரைப் பற்றிய கதையோ என்று நினைத்து விட்டேன்.

    நல்ல வேளையாக எனக்கு நாக்கில் (வாக்குஸ்தானத்தில்) சனி இல்லை.

    நண்பர் சொன்னது போல் சொத்தை கோயில்களுக்கு எழுதி வைப்பதை விட அனாதை ஆசிரமங்கள், ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கு உதவுதல் போன்றவைகளுக்கு கொடுக்கலாம்.

    "அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
    பாரதியார்

    ReplyDelete
  12. ///Kirupanandan A said...
    எந்த பொதுக் கருத்துக்கும் ஒத்துப் போகாத விதண்டா வாதம் பேசுகிற நம் வகுப்பறை மாணவர் ஒருவர் இருக்கிறார். நான் கூட ஆரம்பத்தில் அவரைப் பற்றிய கதையோ என்று நினைத்து விட்டேன். ///

    ///நண்பர் சொன்னது போல் சொத்தை கோயில்களுக்கு எழுதி வைப்பதை விட அனாதை ஆசிரமங்கள், ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கு உதவுதல் போன்றவைகளுக்கு கொடுக்கலாம். ///

    அப்படியானால் ஏழைகளும் அனாதைகள் நிறைய இருக்க வேண்டும் என்று பிரியபடுகின்றீர்களா ஆடிட்டர் அய்யா..

    அது சரி
    படிப்பு என்று எதை சொல்கின்றீர்கள்
    ஏன் எனில் படிப்பு வேறு கல்வி வேறு..

    பாராதியார் சொன்ன எழுத்து அறிவித்தல் என்பது பொதுவாக நாம் நினைக்கும் இளங்கலை முதுகலை பட்டங்கள் அல்ல...

    அது என்ன என்று நமது வகுப்பறை தோழர் கேஎம்ஆர்கே சொல்லுவார்...

    அல்லது
    பாரதி பயிலரங்கம் நடத்தும் தஞ்சை தோழர் சொல்லுவார்...

    எழுத்து என்பது என்ன என்பதை வேப்பிலையார் பின்னர் சொல்லுவார்

    அது சரி..
    யார் அந்த வகுப்பறை நண்பர்...
    அவர் ஒத்துப் போகக் கூடிய கருத்தை சொல்லிப் பாருங்களேன்..

    ReplyDelete
  13. ஒரு தாய் தன் மகனுக்கு வேலை வாங்கி தரும் படி கேட்டுக் கொண்டார்..
    அறிமுகம் செய்யும் போது...
    இவன் பிகாம் படித்திருக்கின்றான் என்றார்..

    கொஞ்சம் நிறுத்துங்கள்..
    பிகாம் படித்து இருக்கின்றாரா அல்லது
    பாஸ் செய்து இருக்கின்றாரா என்றேன்..
    சில மணி துளி யோசித்து அமைதியாகிவிட்டார்...

    பாஸ் செய்து உள்ளார் என்று சொல்லுங்கள்... படிப்பு வேறு கல்வி வேறு என்று விளக்கம் சொன்ன பின் உண்மையை புரிந்து கொண்டு அவர் வெட்கப்பட்டார்... (மெல்ல சிரித்தபடி)

    ReplyDelete
  14. உங்களுடைய பதிவுகள் எல்லாமே விலை மதிப்பற்றது. "Nothing is stronger than Destiny" என்ற வரிகளை தினமும் ஒரு முறை சொல்லிக் கொள்ளவேண்டும். அருமையான கதை.

    ReplyDelete
  15. ////Blogger Govindasamy said...
    பிள்ளைகளையும் சமயத்தில் பெற்றோர்களையும் புரிந்து கொள்வது மிகக் கடினமான காரியமாகத்தான் இருக்கிறது.
    அழகான நடை. ரசித்தேன். நன்றி அய்யா.////

    உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே! பாராட்டுக்கள்தான் என்னை மேலும் மேலும் எழுத வைக்கின்றது!

    ReplyDelete
  16. ///Blogger துரை செல்வராஜூ said...
    ஆறாக் கோபம் போராய் முடியும் என்பார்கள்..
    ஏதோ ராமசாமி செட்டியார் செய்த புண்ணியம் - அவரது மகன் வடிவில் தென்றலாக வந்தது..
    செட்டியார் அவர்களின் கதையும் சுபமாக முடிந்தது../////

    எழுதுபவர்களுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது. positive ஆகத்தான் சொல்வதை முடிக்க வேண்டும். உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Venkat Venki said...
    மிகவும் அருமையான கதை. ஆனால் இது கதை போன்று தெரியவில்லை. சொந்த அனுபவங்கள் போல தோன்றுகிறது. நல்ல கருத்துக்கள். Nothing stronger than is destiny.. super lines. பாராட்டுகள் பல.////

    ஆமாம். பார்க்கின்றவற்றைத்தான். கேள்விப்படுவதைத்தான் சற்று மாற்றி, கற்பனையையும் கலந்து எழுதுகிறேன். அதனால் அவைகள் உண்மைபோலத் தோன்றுவதில் வியப்பில்லை. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ////Blogger Venkat Venki said...
    தங்களிடம் சிறு வேண்டுகோள்.என்னுடைய ஜாதகம் பார்த்து கணித்து கொடுக்க முடியுமா? முடியும் என்றால் அனுப்புகிறேன்.அல்லது ஆலோசனை பெற முடியுமா என அறிய வேண்டுகிறேன்..////

    மன்னிக்கவும். நேரமில்லை! நேரமின்மைதான் என்னுடைய பெரிய பிரச்சினை!

    ReplyDelete
  20. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...amazing explanation with your own style of writing regarding the answer for what is dharma and Excellant stories with your own circumstances...
    Please I request you onething, I wish to work with you. Then only i can learn many things. Will you give me an opportunity?
    With kind regards,
    Ravichandran M//////

    இதுவரை சுமார் 1,800 பதிவுகளைக் கடந்த 8 ஆண்டுகளில் எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் முழுமையாகப் படியுங்கள். என்னுடன் சேர்ந்து பணி செய்த அனுபவம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்!

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    அழகான, இயல்பான நடை. ஆழமான ஒரு கருத்தை எளிமையாக சுவையுடன் அளித்த பாங்கு.இவை மனதைக் கவர்ந்தன. அருமையான கதை.
    உண‌வைப்பற்றிய விவரணை நம் பழைய நாட்க‌ளை நினைவுபடுத்தியது.செட்டி நாட்டு சமையல் பற்றியும்,சமையல் மேஸ்திரிகளின் சாமர்த்தியங்களையும் பற்றி பலமுறை உரையாடி இருக்கிறோம். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.
    'இரண்டில் சனி இருந்தால் என்ன ஆகும்?'என்ற தலைப்பிட்டு என் கட்டுரை ஒன்றைக்கூட ஐயா பிரசுரம் செய்துள்ளீர்கள். இக்கதையில் வரும் செட்டியாருக்கு இரண்டில் சனி என்று வாசித்தபோது என் சுயபுராணம் நினைவுக்கு வந்தது.
    நல்ல சிறுகதைக்கு நன்றி ஐயா!//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார். உங்களைப் போன்ற ரசிக்கும் உள்ளங்களின் பாராட்டுக்கள்தான் எனக்கு ஊக்க மருந்து (டானிக்) என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கும் மருந்தும் அதுதான்!

    ReplyDelete
  23. ////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    //ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பதை போல கோவிலுக்கு எழுதி வைப்பதை விட ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்திருக்கலாம்.//
    நான் சின்ன வயதில் காலையில் எழுந்த உடனே சிறுவர் மலர் படிக்கும் பழக்கம் இருந்தது.அதை படிக்கும் சுவாரசியம் உங்கள் கதையை படிக்கும் போது ஏற்படுகிறது.
    உங்கள் மாணவன்,
    S .ரகுநாதன்/////

    சுவாரசியம் இல்லை என்றால் நானே படிக்க மாட்டேன். ஆகவே சுவாரசியம் குறையாமல் எழுதும் வாய்ப்பைப் பழநி அப்பன் எனக்கு நல்கிக் கொண்டிருக்கிறார். அவருக்குத்தான் நான் கடமைப் பட்டிருக்கிறேன். நான் அவருடைய தீவிர பக்தன். அவர்தான் என்னை எழுதப் பணிக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த நம்பிக்கைதான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது!

    ReplyDelete
  24. ////Blogger வேப்பிலை said...
    மகாபாரதமா...?
    ஹி..ஹி..ஹி.../////

    ஹி..ஹி..ஹி..எல்லாம் எதற்கு? சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  25. ////Blogger வேப்பிலை said...
    மகாபாரதமா...?
    ஹி..ஹி..ஹி.../////

    ஹி..ஹி..ஹி..எல்லாம் எதற்கு? சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. ////Blogger -'பரிவை' சே.குமார் said...
    அருமையான கதை ஐயா...////

    உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger selvaspk said...
    Life is short, very short. We try to learn, earn and live on illusion, ego for nothing.
    I have seen many people like him, had crores and end up in nothing. It just hurts sometimes when good people wasted life due to ego and anger.
    Differences are the strength of maya.
    A bless has its curse. A curse has its bless.
    In this story his bless and curse is wealth.Vaalga valamudan.////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////Blogger selvaspk said...
    Life is short, very short. We try to learn, earn and live on illusion, ego for nothing.
    I have seen many people like him, had crores and end up in nothing. It just hurts sometimes when good people wasted life due to ego and anger.
    Differences are the strength of maya.
    A bless has its curse. A curse has its bless.
    In this story his bless and curse is wealth.Vaalga valamudan.////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////Blogger PS said...
    Excellently naratted story./////

    உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. ///Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    மிக அருமையான கதை ..கடந்த காலத்தில் நடந்தவைதான் ..இன்று வாத்தியாரின் பேனா வண்ணத்தில் எங்கள் வாசிப்புக்கு வந்துள்ளது மிக்க நன்றி..ஒரு விஷயம் .!!!
    எனது போதக ஆசிரியர் சிவஸ்ரீ ரத்னவேலன் அவர்கள் கூறிய வார்த்தைகள் ..!!!!
    பெற்ற அன்னை ,,,,உடன்பிறந்த சகோதரி ..,, மனைவி ..,தனது மகள் ,இவர்கள் தவிர இல்லறத்தில் இருப்போர் வேறு யாரிடமும் உணவு உண்ண கூடாது என்று நமது தர்மம் சொல்லுகிறது ..!!!கடைகளில் உண்பது சத்திரத்தில் என்று வரும் !!!!
    தர்ம ஞாயம் சொல்லும் மஹா பாரதத்தில் ..ஓரிடத்தில் தர்மனா ?? அருஜுனனா ?? என்று தெரியவில்லை .[.திரு KMRK அல்லது திரு வேப்பிலை... சார் விளக்கலாம் ].*** மருமகள் கையால் உணவு உண்ட பாவத்திற்கு ஆளாவேன் *** என்று கூறுவார்கள் ..
    ஆக,,,, மருமகள் கையால் உணவு வாங்கி உண்பது பாவம் என்று அந்த யுகத்தில் இருந்திருக்கிறது..??? இப்போது..???..
    இதற்கு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்க படாத ஒரு விளக்கம் உள்ளது வேண்டும் என்போர் தனியாக கேளுங்கள் ...!!
    நன்றி.. நன்றி.. நன்றி..////

    விளக்கத்தை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன். நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. ////Blogger Kirupanandan A said...
    எந்த பொதுக் கருத்துக்கும் ஒத்துப் போகாத விதண்டா வாதம் பேசுகிற நம் வகுப்பறை மாணவர் ஒருவர் இருக்கிறார். நான் கூட ஆரம்பத்தில் அவரைப் பற்றிய கதையோ என்று நினைத்து விட்டேன்.
    நல்ல வேளையாக எனக்கு நாக்கில் (வாக்குஸ்தானத்தில்) சனி இல்லை.
    நண்பர் சொன்னது போல் சொத்தை கோயில்களுக்கு எழுதி வைப்பதை விட அனாதை ஆசிரமங்கள், ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கு உதவுதல் போன்றவைகளுக்கு கொடுக்கலாம்.
    "அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்,
    ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
    பாரதியார்//////

    சில அனாதை ஆசிரமங்களில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசிரமம் ஒன்றை நான் அறிவேன். நகரத்தார்கள் அறக்கட்டளை மூலம் படிப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ நிதி உதவி போய்ச் சேரும்படி செய்கிறார்கள்.

    ReplyDelete
  34. /////Blogger வேப்பிலை said...
    ///Kirupanandan A said...
    எந்த பொதுக் கருத்துக்கும் ஒத்துப் போகாத விதண்டா வாதம் பேசுகிற நம் வகுப்பறை மாணவர் ஒருவர் இருக்கிறார். நான் கூட ஆரம்பத்தில் அவரைப் பற்றிய கதையோ என்று நினைத்து விட்டேன். ///
    ///நண்பர் சொன்னது போல் சொத்தை கோயில்களுக்கு எழுதி வைப்பதை விட அனாதை ஆசிரமங்கள், ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கு உதவுதல் போன்றவைகளுக்கு கொடுக்கலாம். ///
    அப்படியானால் ஏழைகளும் அனாதைகள் நிறைய இருக்க வேண்டும் என்று பிரியபடுகின்றீர்களா ஆடிட்டர் அய்யா..
    அது சரி
    படிப்பு என்று எதை சொல்கின்றீர்கள்
    ஏன் எனில் படிப்பு வேறு கல்வி வேறு..
    பாராதியார் சொன்ன எழுத்து அறிவித்தல் என்பது பொதுவாக நாம் நினைக்கும் இளங்கலை முதுகலை பட்டங்கள் அல்ல...
    அது என்ன என்று நமது வகுப்பறை தோழர் கேஎம்ஆர்கே சொல்லுவார்...
    அல்லது
    பாரதி பயிலரங்கம் நடத்தும் தஞ்சை தோழர் சொல்லுவார்...
    எழுத்து என்பது என்ன என்பதை வேப்பிலையார் பின்னர் சொல்லுவார்
    அது சரி..
    யார் அந்த வகுப்பறை நண்பர்...
    அவர் ஒத்துப் போகக் கூடிய கருத்தை சொல்லிப் பாருங்களேன்..
    ////அவர் ஒத்துப் போகக் கூடிய கருத்தை சொல்லிப் பாருங்களேன்..///

    என்ன வம்பாயிருக்கிறது? எதெற்கு நீங்கள் ஒத்துப்போவீர்கள் என்பதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்புங்கள் வேப்பிலையாரே!
    நாங்கள் (நானும் சேர்ந்துதான்) தெரிந்து கொள்கிறோம்

    ReplyDelete
  35. ////Blogger Kamala said...
    உங்களுடைய பதிவுகள் எல்லாமே விலை மதிப்பற்றது. "Nothing is stronger than Destiny" என்ற வரிகளை தினமும் ஒரு முறை சொல்லிக் கொள்ளவேண்டும். அருமையான கதை.////

    நல்லது சகோதரி. உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி! அதைவிட அடியவன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி! உங்களைப் போன்றவர்களின் அன்பும் விலை மதிப்பற்றது!

    ReplyDelete
  36. //சில அனாதை ஆசிரமங்களில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசிரமம் ஒன்றை நான் அறிவேன். நகரத்தார்கள் அறக்கட்டளை மூலம் படிப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ நிதி உதவி போய்ச் சேரும்படி செய்கிறார்கள்.//

    எப்படியோ, யார் மூலமாக என்பதை விட உதவி தேவைப்படுபவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் சரி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com