மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.4.11

மைனருக்கு ஒரு மேஜர் விளக்கம்

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்

----------------------------------------------------------------------------------------
 மைனருக்கு ஒரு மேஜர் விளக்கம்

24.4.2011ம் தேதிப் பதிவில் நமது வகுப்பறை மாணவர் ஜப்பான்மைனர் அவர்கள் கீழ்க்கண்ட பின்னுட்டத்தை இட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து நமது வகுப்பறையின் மூத்த மாணவர் திருவாளர் வி.கோபாலன் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------
minorwall said...
    /////////Thanjavooraan said...
    அந்த சொல்லுக்கு பொருள் கிடையாது.
    'சும்மா' அன்போடு அழைக்கும் சொல்.///////////////
    ஆடவரைக் குறித்தோ சிறுவரைக் குறித்தோ விளையாட்டாக
சொல்லும் போது இந்த வார்த்தை பொருளில்லாததாகக் கொள்ளப்படும் வழக்கம் தஞ்சைப்பகுதியில் இருக்கின்றதென்றாலும் கணவனை
இழந்த பெண்மணியாரைக் குறிக்கும் அவப்பெயராகவே பொருள் பொதிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
-----------------------------------------------------------------------------------------
வி.கோபாலன் அவர்களின் விளக்கம்:

சில சொற்களின் பயன்பாடு.
                       
    நண்பர் திரு கே.முத்துராமகிருஷ்ணன் தனது அனுபவங்கள் சிலவற்றை ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதில் தனது பள்ளித் தலைமை ஆசிரியர் அவரை அன்போடு 'கம்மனாட்டி' என்று அழைப்பது வழக்கம் என்றும், இந்தச் சொல்லின் நேரடியான பொருள் அமங்கலமானது ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலும் பேச்சுவழக்கில் நண்பர்களை செல்லமாக இந்த சொல் கொண்டு அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது என்றும்
குறிப்பிட்டிருந்தார். ஜப்பான் 'மைனர்' அவர்கள் இந்தச் சொல் கணவனை இழந்த கைம்பெண்களைக் குறிக்கும் சொல் என்றும், அப்படி நண்பர்களை அல்லது நெருக்கமானவர்களை அழைப்பது சா¢யா என்பதுபோல எழுதியிருந்தார். இருவா¢ன் கருத்துக்களும் சா¢யென்றாலும், நடைமுறையில் இருக்கும் பழக்கத்தைப் பற்றி சற்று அறிந்து கொண்டால், இதில் எது சரியானது என்பதை ஓரளவு புரிந்துகொள்ளலாம் என்பதால் இதனை எழுதுகிறேன்.

    ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 'ரோஜுலு மாராயி' எனும் தெலுங்குத் திரைப்படத்தை தமிழில் "காலம் மாறிப்போச்சு' என்ற தலைப்பில் உருவாக்கினார்கள். அதில் ஒரு பாட்டு வரும். ஆண், பெண் ஜோடியாகப் பாடுகின்ற பாடல். ஆண் குரல் எஸ்.சி.கிருஷ்ணன் என்பவருடையது. பெண் குரல் நினைவில் இல்லை. அந்தப் பாடல் "பட்டணம் தான் போகலாமடி, பொம்பளை பணம் காசு சேக்கலாமடி" என்று தொடங்கும்.

அதில் கடைசி வா¢கள் "நீ உலகம் தொ¢ஞ்ச பொம்மனாட்டி, நான் ஒண்ணுமே அறியா கம்மனாட்டி" என்பது. இதனை உடுமலை நாராயணகவி எழுதியதாக நினைவு. மிகச் சாதாரணமான எளிய சொற்களைக் கொண்டு எழுதப் பட்டிருந்தாலும், அந்தக் காலத்தில் மக்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குக் குடிபுக எண்ணியிருந்த நிலை இருந்தது. அதனை தவறு என்று சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. ஆணுக்கு நகரத்துக்குப் போகவேண்டுமெங்கிற ஆசை. பணம் காசு சேர்க்க வேண்டுமெங்கிற ஆசை. ஆனால் அப்படி பட்டணம் போனால் வரக்கூடிய தீமைகளை அந்தப் பெண் பட்டியலிட்டு பயமுறுத்த, இறுதியில் ஆண் அவள் சொல்வதுதான் சரி, 'நீ உலகம் அறிந்தவள், நனோ, ஒண்ணுமே அறியாதவன்' என்று சொல்கையில் தன்னை 'கம்மனாட்டி' என்ற சொல்லால் குறிப்பிடுவதாக கவிஞர் எழுதியிருந்தார்.

    இதனை ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், இந்தச் சொல்லை விதவை என்ற பொருளில் மட்டுமல்ல, அறியாமையில் உழலுபவன் என்றும் பொருள் கொள்ளும்படியாக எழுதியிருப்பதால் இந்தச் சொல் 'தீண்டத்தகாதது' அல்ல என்பதைப் பு¡¢ந்து கொள்ளலாம். இது தவிர வேறொரு நிகழ்ச்சியையும் சொன்னால் மேற்சொன்ன எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்பதால் அதனையும் கூறுகிறேன்.

    பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களைத் தெரியாதவர்கள்
இருக்க முடியாது. அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
முதுநிலை படிப்புக்காகச் சேர்ந்தார். அப்போது அறிவியலைத்தான்
பாடமாக எடுத்துக்கொண்டார். ஆனால் தமிழ்த்துறைத் தலைவராக
அங்கு இருந்த நாவலர் திரு சோமசுந்தர பாரதியார்
திரு  அ.ச.ஞானசம்பந்தத்திடம், அவர் தந்தையாரைப் பற்றி
தெரிந்திருந்ததால், "அடேய்! நீயெல்லாம் தமிழ் படிக்காவிட்டால்,
வேறு யாரடா படிப்பார்கள், நீ அறிவியலில் சேர்ந்திருக்கிறாயே,
தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேர்ந்துகொள்" என்று உரிமையோடு சொன்னார்.

    அதற்கு அவர் யோசனையை மா¢யாதையுடன் தட்டிக்கழிக்க எண்ணிய அ.ச.ஞா. சொன்னார், "ஐயா! தமிழ் படிக்கிறேன், ஆனால் ரா.ராகவ ஐயங்கார், பாடம் எடுப்பதானால் நான் அவசியம் தமிழில் சேர்கிறேன்" என்றார்.

    இந்த ரா.ராகவ ஐயங்கார் ராமனாதபுரத்தைச் சேர்ந்த மிகப்பொ¢ய தமிழறிஞர். ராமனாதபுர சமஸ்தானத்தில் பெரும் புலவர். முதுபெரும் கிழவர். இவருடைய உறவினர்தான் மு.ராகவய்யங்கார் எனும் தமிழறிஞர். இவரது புலமையைக் கண்டு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் ரா.ராகவ ஐயங்காரை அண்ணாமலை பல்கலக்கழகத்தில் தமிழ்த்துறையில் ஆய்வுத்துறை தலைவராக நியமித்திருந்தார். இவர் வகுப்புக்குச் சென்று பாடம் எடுப்பதில்லை. ஆய்வு மட்டுமே இவரது பணி. அந்த நிலையில், இவர் பாடம் எடுத்தால், நான் தமிழ் படிக்கிறேன் என்று அ.ச.ஞா. சொன்னது "போகாத ஊருக்கு வழிசொல்வது" போல இருந்தது. அப்போதே தடியூன்றி நடக்கும்
பருவம் ஐயங்காருக்கு. அவராவது பாடம் எடுப்பதாவது என்ற எண்ணத்தில் இப்படியொரு நிபந்தனையை விதித்திருந்தார் அ.ச.ஞா.

    சோமசுந்தர பாரதி எப்பேற்பட்டவர்? விடுவாரா? அவர் ரா.ராகவ ஐயங்காரிடம் போய் நடந்ததைச் சொன்னார். அவர் சொன்னார், "இந்தப் பையனுடைய அப்பா பெரும் தமிழறிஞர் என்பதால், இவனும் அப்படியே இருக்க வேண்டுமா என்ன?. இருந்தாலும், அவன் விரும்பியபடி நான் எம்.ஏ.வகுப்புக்குப் பாடம் எடுக்கத்தயார்" என்றார். இதனை பாரதியார் அ.ச.ஞாவிடம் சொன்னதும் அவரும் வேறு வழியின்றி தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேர்ந்தார். அவரோடு மொத்தம் நான்கு பேர்தான் தமிழ் எம்.ஏ.வகுப்பில் படித்தார்கள்.

    அந்த நிலையில் தினமும் இந்த நான்கு பேருக்கும் பாடம் நடத்த அறிஞர் ரா.ராகவ ஐயங்கார் வகுப்புக்கு வருவார். அவர் வரும்போது அவர் ஊன்றி நடக்கும் கைத்தடியின் ஓசை இவர்களுக்குக் கேட்டவுடன் நான்கு பேரும் அமைதியாக உட்கார்ந்திருப்பர். ஒரு நாள் கைத்தடி ஓசை கேட்கவில்லை என்பதால் அ.ச.ஞா. பாடத் தொடங்கினார். அவை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள். நான்கு பாடல்களைப் பாடி முடிக்கும் வரை ஆசி¡¢யர் வரவில்லை என்று பாடிக் கொண்டிருந்தார். ஆனால் கைத்தடியின் அடியில் ரப்பர் பதித்திருந்ததால் கைத்தடி சத்தம் கேட்காமல் ஆசிரியர் வகுப்பறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்ததை இவர் அறியவில்லை.

    பின்பு ஆசி¡¢யர் உள்ளே வந்து, "அடேய்! முதலியார் மகனே! (அப்படித்தான் ஆசிரியர் அ.ச.ஞா.வை அழைப்பார்). இதுவரை பாடிக் கொண்டிருந்தாயே, அவை யாருடைய பாட்டுக்கள்?" என்றார்.

    அ.ச.ஞா. சொன்னார், "இவைகளெல்லாம் சுப்பிரமணிய பாரதியாருடைய பாடல்கள்" என்று.

    "அப்படியா, இப்படியெல்லாம் கூட அவன் பாட்டுக்கள் எழுதியிருக்கிறானா? தெரியாமல் போய்விட்டதே. அவன் ஏதோ, நாட்டுப் பாடல்கள் பாடுகிறான் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். அடடா! அந்தப் பாடலின் கருத்து உனக்கு விளங்குகிறதா. அப்படியே, நம்மாழ்வார் பாடிய பாடல்களின் சாரங்களை அல்லவா அவன் பிழிந்து கொடுத்திருக்கிறான். எப்பேற்பட்ட கவிஞன். இதுவரை புரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே" என்று
அவரை மீண்டுமொருமுறை பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு வகுப்பு நடத்தினார்.

    அன்று மாலை இவர் விடுதியில் தங்கி இருந்தபோது, துணைவேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியாரின்  கார் ஓட்டி வந்து, துணை வேந்தர் அழைப்பதாக அ.ச.ஞா.வை அழைத்தார். இவரும் காரில் சென்று அவர் வீட்டை அடைந்தார். அங்கு துணை வேந்தருடன் ரா.ராகவ ஐயங்காரும் இருந்தார். அ.ச.ஞாவைக் கண்டதும் துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரி, அவரை எப்போதும் அழைக்கும் விதத்தில் "அடே கம்மனாட்டி" வாடா.ஐயங்கார் சுவாமிக்கு ஏதோ பாட்டுக்களைப் பாடிக் காட்டினாயாமே! அவற்றை எனக்கும் பாடிக் காண்பிக்க மாட்டாயா?" என்றார்.

    உடனே அ.ச.ஞா. அந்தப் பாடல்களை துணை வேந்தருக்காகவும் பாடிக்காட்டினார். அப்போது முதியவர்களான அவ்விருவரும்,
அதாவது சீனிவாச சாஸ்திரியும் ரா.ராகவ ஐயங்காரும் கண்களில்
நீர் வடிய கேட்டுக் கொண்டிருந்தார்களாம். மகாகவியின் பாடல்கள்
இத்தனைத் தாக்கத்தைத் தந்தது கண்டு அ.ச.ஞா.வுக்கு பெருமையாக
இருந்தது.

    இந்த வரலாற்று உண்மையில் அத்தனை பெரிய பதவியில் இருந்த
சீனிவாச சாஸ்திரியார் "கம்மனாட்டி"  எனும் சொல்லால் அ.ச.ஞா.வை அழைத்தது அன்பினால் மட்டுமே, அந்தச் சொல்லின் 'பொருளை'
உணர்ந்து அல்ல என்பதற்காச் சொன்னேன்.

    இந்த வரலாற்றுச் செய்தியை திரு அ.ச.ஞா. எழுதிய "நான் கண்ட பெரியோர்கள்" எனும் நூலில் காணலாம். இதுபோன்று இந்த
'கம்மனாட்டி' எனும் சொல்லை கவியோகி சுத்தானந்த பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், புண்படுத்தும் பொருளில் அல்ல, அன்போடு
மிக அன்னியோன்னி யமான நண்பர்களை அப்படி விளித்திருக்கிறார் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

    நண்பர் கே.எம்.ஆர். கட்டுரையும், அதற்கு ஜப்பான் 'மைனர்வாள்'
எழுதிய பின்னூட்டமும் ஏற்படுத்திய விளைவால் விளைந்தது இந்தக்
கட்டுரை. சில சொற்களின் நேரடி பொருள் 'லிட்டரரி மீனிங்' என்பார்களே அவைசில இடங்களில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை பயன்படுத்தும் விதத்திலும் சூழ் நிலைகளையொட்டியும் அமையும் என்பது என் கருத்து.
என்ன நண்பர்களே, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்.

நன்றி, வணக்கத்துடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

------------------------------------------------------------------------------------------
வாத்தியாரின் கருத்து:

மைனர் சொல்வதும் சரிதான். அந்தச் சொல் தமிழகத்தின் வேறு
பகுதிகளில் அந்த அர்த்தத்துடன் பயன் படுத்தப்படுகிறது. கோபாலன் சார் சொல்வது போல் செல்லமாக விளிப்பதற்கும் பயன் படுத்தப்பெறுகிறது.

அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம் என்பார்கள். எங்கள் பகுதியில், விதவைத் தாயாரால் வளர்க்கப்பெற்ற குழந்தைகள் சரியாகப் படிக்காமல் பின்னாட்களில் உதவாக்கரையாகத் திரிந்துள்ளன. நானும்  சிலரைப் பார்த்துள்ளேன். அன்னையின் செல்ல வளர்ப்புத்தான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட குழந்தைகளை  ‘கம்மனாட்டி வளர்த்த கழிசடை’ என்று சொல்வார்கள்’

கழிசடை’ என்றால் ஒன்றிற்கும் உதவாத நபர் அல்லது ஒன்றிற்கும் உதவாதபொருள் என்று அர்த்தம். worthless person or thing

அது போல சில சொற்கள் இரண்டுவிதமான அர்த்ததைக் கொடுக்கும்.

எங்கள் பகுதியில் ஒருவனைச் சாடுவதற்கு (திட்டுவதற்கு) பலரும் சர்வசாதாரணமாகச் சொல்லும் சொல்: ‘பட்டுக்கிடப்பான்’ அல்லது ’பட்டுக்கெடப்பான்’

பட்டுக்கிடப்பான் என்றான் அடிபட்டுக்கிடப்பான் அல்லது நோய்வாய்ப்பட்டுக் கிடப்பான் என்று பொருள்.

அதே சொல்லைச் சில பெரிசுகள், தங்கள் வீட்டுப் பேரனைக் கொஞ்சும்போதும் சொல்வார்கள். “பட்டுக்கிடப்பான்  சுட்டியாக இருக்கானே! பட்டுக்கிடப்பான் அழகாக இருக்கானே!”

இங்கே அந்தச் சொல்லிற்கு, ‘பட்டில் கிடப்பவன்’ என்று பொருள்

செட்டி நாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் வளர்ந்த திரைப்பட நடிகை திருமதி மனோரமா அவர்கள் இந்தச்  சொல்லை செட்டிநாட்டுத் தொணியில் மிக அழகாகச் சொல்வார். (படம் தில்லானா மோகனாம்பாள்)
-------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியில் இருந்த பல மூத்த தமிழ் அறிஞர்களைப் பற்றியும், அவர்கள் செய்த அரிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் இன்றையத் தலைமுறை அறியாது. அவர்களில் சிலரைத் தன் கடிதத்தில் திரு.வி.கோபாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றிய மேல் விவரங்களை  நீங்கள் தெரிந்து கொள்வதற்காக விக்கி மகாராஜாவிடம் கேட்டு வாங்கிக் கீழ் கொடுத்துள்ளேன். விருப்பம்
உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்
1
Article about Scholar R.Raghava Iyengar http://en.wikipedia.org/wiki/R._Raghava_Iyengar
2.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் http://en.wikipedia.org/wiki/A._S._Gnanasambandan
3
Rt.Hon.Srinivasa Sastri http://en.wikipedia.org/wiki/V._S._Srinivasa_Sastri
---------------------------------------------------------------------------------------------------
மேலும் கோபாலன் அவர்கள் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தப் பாடல்  இடம் பெற்ற படத்தின் விவரம் மற்றும் அதற்குப் பங்களித்தவர்களின் விவரங்களை, அவருக்காகக் கீழே  கொடுத்துள்ளேன்
------------------------------------------------
பாடல்: பட்டணந்தான் போகலாமடி
திரைப்படம்: எங்கள் வீட்டு மஹாலட்சுமி
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
இசை: மாஸ்டர் வேணு
படம் வெளிவந்த ஆண்டு: 1957

------------------------------------------------------
விவரம் சரி, பாடல் வரிகள்?
அதையும் கொடுத்துள்ளேன்
----------------------------------
ஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க..
எதுக்கு?

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாட்டரியடிக்குதாம்

எப்படி?

ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா

ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

மேல இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு

அப்புறம்..

போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு

அப்படியா ஆஹா .. -

நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது

பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே
என்னைத் தனியா விட மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்

ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
-----------------------------------------------
பாடல் வரிகள் சரி, பாடலின் ஒலி வடிவம்?
அதையும் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டியையும் கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்
பாட்டின் ஒலி வடிவத்திற்கான சுட்டி:Song Link: http://www.in.com/music/enga-veettu-mahalakshmi/songs-55615.html
---------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

34 comments:

  1. ஐயா நன்றி. படத்தின் பெயரையும், பாடியவர் பெயரையும் தவறாக எழுதிவிட்டேன். நீண்ட நாட்கள் ஆயிற்று அல்லவா? முழு பாடலையும் தந்த உங்களுக்கு நன்றி. அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல் அது. சற்று கொச்சையாக இருந்தாலும் பொருள் பொதிந்தவை. நமது முந்தைய தலைமுறையில் வாழ்ந்த அரிய பெரிய தமிழறிஞர்களையும், அவர்களது அறிவுக் கூர்மையையும் பற்றி, சிறிதாவது தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் ரா.ராகவ ஐயங்கார் பற்றியும், பேரா.அ.ச.ஞானசம்பந்தன் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் இளைய தலைமுறையினருக்கு அதற்கான சுட்டிகளைத் தெரிவித்ததும் நல்லதே. உங்கள் பணி பாராட்டத் தகுந்தது. வாழ்க நீவிர்!

    ReplyDelete
  2. ஆகா ... கம்மனாட்டி என்ற ஒரு சொல்லுக்கு இப்படி ஒரு கட்டுரையா ?

    உண்மையிலேயே தமிழ் தமிழ் தான் ..

    "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்கிறார் அருணகிரிநாதர்.

    அதற்கான பொருளை இன்றைய கலியுகத்திலும் காண முடிந்தமையில் மகிழ்ச்சி ...

    ReplyDelete
  3. நன்றி கோபாலன் சார்.

    ReplyDelete
  4. ஆஹா அற்புதம்...
    முதலில் நண்பர் மைனர்வாளுக்கு நன்றி... அவரின் எதார்த்த வினாவிற்கு / கருத்திற்கு பொருள் தரும்படியாக அற்புத நிகழ்வுகளை இன்று பிரசவித்தது நமது வகுப்பறை...

    தஞ்சைப் பெரியவர் கோபாலன் சார், மிகவும் அற்புதம்... அறியத் தகவல் நான் அறுசுவை உணவை உண்டதைப் போன்ற உணர்வு... அதிலும் மகாகவியின் பாடலை அ.ச.ஞா அவர்கள் பாடக் கேட்டு......

    ///// உடனே அ.ச.ஞா. அந்தப் பாடல்களை துணை வேந்தருக்காகவும் பாடிக்காட்டினார். அப்போது முதியவர்களான அவ்விருவரும்,
    அதாவது சீனிவாச சாஸ்திரியும் ரா.ராகவ ஐயங்காரும் கண்களில்
    நீர் வடிய கேட்டுக் கொண்டிருந்தார்களாம். மகாகவியின் பாடல்கள்
    இத்தனைத் தாக்கத்தைத் தந்தது கண்டு அ.ச.ஞா.வுக்கு பெருமையாக
    இருந்தது.////

    அந்தப் தமிழ் சான்றோர்களின் கண்களில் நீர் வடிந்ததைப் போல் இந்த அறிய தகவலைப் படிக்கும் போது எனது கண்களும் பனிக்கின்றது... அற்புதம்...

    தாங்கள் தயவு செய்து வாரம் ஒருமுறை சிறப்புத் தமிழ் என்றத் தலைப்பிலே இந்த வகுப்பறையில் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும்... அந்த தமிழ்த் தேன் வந்து என்போன்றோர் காதுகளில் பாய வேண்டும்... இவைகளை எல்லாம் படிக்க என்போன்றோருக்கு
    நேரமும் வசதியும் வாய்ப்பும் இல்லை... அதனால் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.... வாத்தியாரும் சம்மதிக்க வேண்டும்.... செய்வீர்களா? ஐயா அறிவுப் பிச்சைகேட்கிறேன் இல்லை என்றுக் கூறாது அள்ளித் தரவேண்டும்....

    உங்கள் வயதில் நீங்கள் கற்ற அத்தனையும் கேட்க்க வேண்டும் என்பதே ஆசை.... தொடர்ந்து எழுதுங்கள் தஞ்சை தமிழ் இளைஞனாய் இங்கே தமிழ் தொன்றாட்டுங்கள்.... அதனை வழி மொழிய தமிழார்வம்/ தாகம் கொண்ட என் சகோதரப் படை வரும்...

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. பழைய காலத்து பாடல் பெற்ற "கம்மினாட்டி" பற்றியும், பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும் மேஜரின் விளக்கவுரையால் மைனருக்கு சில பழைய பெரிய மனிதர்களின் வாழக்கை அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..வாய்ப்பளித்த வாத்தியார் அய்யாவுக்கு நன்றி..
    நானும் தஞ்சை பகுதியைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த பதத்தை ஆரம்ப காலகட்டங்களில் அதிகம் விளையாட்டாக உபயோகித்த சமயங்கள் உண்டென்ற போதிலும் பின்னர் கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தமாக அறவே உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன்..தற்போதைய இளையதலைமுறையினரின் வழக்கில் இந்தச் சொல் கொஞ்சம்கொஞ்சமாக வழக்கொழிந்து வரும் நிலையில் பின்வரும் நாட்களில் தமிழ்ச்சொற்கள்பற்றிய ஆராய்ச்சியில் இந்த "கம்மினாட்டி" பற்றி தேடுபவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  6. அன்புடன அனைவருக்கும் வணக்கம் ..
    சில இடங்களில் சில வார்த்தைகள் [செல்லமாக] உச்சரிக்கும் போது இடம் பொருள் ஏவல் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. ! திரு வி .கோபாலன் அவர்கள் ,இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் !!பாடல் மூலம் தேடி கண்டுபிடித்து ஆதாரங்களுடன் கருத்து கூறியது .....சபாஷ்.!!( சபாஷ்.. என பாராட்ட தகுதி இருக்கிறதா எனக்கு?.} ஆங்கிலத்தில் ஹேட்ஸ் ஆப் சொல்லுவார்களே அதுபோல இருக்கட்டுமா!

    ReplyDelete
  7. ஒரு சிறிய பொறி பெருந் தீயாக எப்படி மாறும் என்பதற்கு இந்தக் கட்டுரையும், வாத்தியாரின் மேல் அதிகத் தகவல்களுமே சாட்சி.அந்த 'ஒரு சொல்' எப்படிப் பல அறியாத செய்திகளை வகுப்பறைக்குக் கொண்டு சேர்த்துவிட்டது!பெரியவர்கள்வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் வகுப்பறைக்கும் கூட எவ்வளவு அவசியம் என்பது இதனால் தெளிவாகிறது.

    ஐயா அளித்த இணைப்புக்கள் அனைத்துக்கும் சென்று வாசித்தேன்.

    வெள்ளி நாக்குக்காரர் முதல் முதலில் ஆசிரியர் வேலை பார்த்தது சேலம் முனிசிபல் கல்லூரியிலாம்.ஒரு செய்தி என்னவெனில், நான் என் பட்டப் படிப்பை அந்தக்கல்லூரியிலேயே படித்தேன்.ஐயாவும் அந்தக்கல்லூரி மாணவர்.ஆக சர்சிலாலும், உலகத்தையே கட்டி ஆண்ட ஆங்கிலேய அரசராலும் பாராட்டப் பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி நடந்த இடங்களில் நானும் நடந்துள்ளேன் என்பது மனத்தைப் பூரிக்கச் செய்கிறது.

    ஸ்ரீ சாஸ்திரி பாகிஸ்தான் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார் என்பதை
    இப்போதுதான் அறிகிறேன்.ஏனெனில் அவர் கோகலே, அன்னிபெசன்ட் போன்ற‌
    மிதவாதக் குழுக்களைச் சார்ந்தவர்.அவருக்குப் பாகிஸ்தான் பிரிவினையில் தீவிரமான எதிர்ப்புணர்வு இருந்தது எனக்குப் புதிய செய்தி.

    பேராசிரியர் அ.ச.ஞா அவர்கள் போர்ட் உயர் நிலைப்பள்ளி, லால்குடியில் படித்தாராம்.அந்த லால்குடியில் நான் இப்போது வாசம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    மஹாகவி பாரதியார் தமிழ் வித்வான் படிப்பு படிக்கவில்லை. அதனால் முறையாகத் தமிழ் பயின்ற அக்கால தமிழ்ப் புலவர்கள் 'பாரதிக்கு என்ன தமிழ் தெரியும்' என்ற உணர்விலேயே இருந்துள்ளார்கள்.அதற்குப் பெரியவர் ரா.ராகவ ஐயங்காரும் விதி விலக்கல்ல. அவரும் பாரதியை ஓரம் கட்டிய குழுவிலேயே இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் 'ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் ஓர்ந்த' பின், மனம் மாறித் தான் பாரதிப் பாட்டினைக் கேட்டது
    ம‌ட்டுமல்லாமல் ஸ்ரீ சாஸ்திரியையும் கேட்க‌ வைத்தது ஆச்சரியமே!அப்படி நெக்குருகிப் பாடிய அந்த 'முதலியார் மகனை'த் தான் பாராட்ட வேண்டும்.

    இந்தப் பதிவைத் தந்த, தங்க‌ளின் நினைவைப் போற்றிய பெரியவர் கோபால்ஜியையும்,மேல் அதிகத் தகவல்களுடன் வெளியிட்ட வாத்தியாரையும்
    அந்த 'ஸ்பெஷல் சொல்'லைக் கொண்டு ஸ்ரீசாஸ்திரி, உயர்திருவாளர்கள்
    ரர் ரா,மு ரா, அ ச ஞா ஆகிய பழம் பெரும் சிங்கங்கள் மேலுலகத்தில் 'வசை'பாடிப் பாராட்டுவார்கள் என்பது திண்ணம்.

    ReplyDelete
  8. இது வரை வந்த பதிவுகளில் முதல் வரிசையில் வைத்துப் போற்ற வேண்டிய
    பதிவு இது. அந்த பழைய பாடலைப் போட்டுக் கேட்டேன். இப்போது அதன் பொருளே வித்தியாசமாக ஒலித்தது.பெரியவர் கோபாலன் அவர்களுக்கும், தங்களுக்கும் என் வந்தனங்கள்.

    ஒரு படத்தில் மனோரமா அவர்கள் 'கம்முன்னா கம்மு கம்மனாட்டி கோவு"
    என்பார், அங்கேயும் இந்தக் கம்மனாட்டி என்ற சொல் வேடிக்கையாகத்தான் சொல்லப் பட்டுள்ளது.

    ஒரு விதவை ஆனவர்களை நேரடியாக அந்தச் சொல்லால் அழைக்க மாட்டார்கள்
    ஆனால் குழந்தையைக் கொஞ்சும் போது அந்தச் சொல்லால் நேரடியாக‌ அழைத்துக் கொஞ்சுவார்கள்

    ReplyDelete
  9. என் புதிய வலைபூவிலும் பெரியவர் கோபாலன் அவர்களின் பின்னூட்டத்தால் ஊக்கம் பெற்று "மது கைவிடேல்" என்ற கட்டுரை எழுதியுள்ளேன்.அதுவும் இதுபோல் ஒரு சொல்லாடலே. நகைசுவையாக எழுதப்பட்டுள்ளது. அன்பர்கள் படித்து பார்த்துப் பினூட்டம் இட வேண்டுகிறேன். பதிவர் உலகத்திற்குப் புதியவளான என்னை ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
    http;//jeyalakshmi-anuradha.blogspot.com

    ReplyDelete
  10. /////Blogger Thanjavooraan said..
    ஐயா நன்றி. படத்தின் பெயரையும், பாடியவர் பெயரையும் தவறாக எழுதிவிட்டேன். நீண்ட நாட்கள் ஆயிற்று அல்லவா? முழு பாடலையும் தந்த உங்களுக்கு நன்றி. அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல் அது. சற்று கொச்சையாக இருந்தாலும் பொருள் பொதிந்தவை. நமது முந்தைய தலைமுறையில் வாழ்ந்த அரிய பெரிய தமிழறிஞர்களையும், அவர்களது அறிவுக் கூர்மையையும் பற்றி, சிறிதாவது தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் ரா.ராகவ ஐயங்கார் பற்றியும், பேரா.அ.ச.ஞானசம்பந்தன் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் இளைய தலைமுறையினருக்கு அதற்கான சுட்டிகளைத் தெரிவித்ததும் நல்லதே. உங்கள் பணி பாராட்டத் தகுந்தது. வாழ்க நீவிர்!/////

    உங்களின் மேலான் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  11. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    ஆகா ... கம்மனாட்டி என்ற ஒரு சொல்லுக்கு இப்படி ஒரு கட்டுரையா ?
    உண்மையிலேயே தமிழ் தமிழ் தான் ..
    "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்கிறார் அருணகிரிநாதர்.
    அதற்கான பொருளை இன்றைய கலியுகத்திலும் காண முடிந்தமையில் மகிழ்ச்சி .../////

    நல்லது. நன்றி இடைப்பாடியாரே!

    ReplyDelete
  12. http://www.tamilhindu.com/author/thanjaigopalan/

    மேற்கண்ட இணைப்பில் பெரியவர் கோபாலனின் கட்டுரைகள் பல வெளியாகி உள்ளன.அரசியல்,வரலாறு, பண்பாடு பற்றிய அவருடைய கருத்துக்களை அங்கே காணலாம்.அவருடைய அரசியல் கருத்துக்களுடன் நாம் ஒத்துப்போக முடிந்தாலும், முடியாவிட்டாலும்,அவருடைய எழுத்து எவ்வளவு கோர்வையாக (marshalling of facts)உள்ளது என்பதற்கு அந்தக் கட்டுரைகள் உதாணமாக உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பெரியவருடைய எழுத்துக்களை அங்கேயும் படிக்கலாம்.அவருக்கு 75 அகவைகள் முடிந்துவிட்டன. எவ்வளவு ஆழ்ந்த படிப்பும், படித்ததை கணினியில் தட்டச்சு செய்யவும் ஆகக் கூடிய நேரத்தையும், அவருடைய வயதைக் கொண்டு பார்க்கும் போது அவரைவிடக் குறைந்த வயதுடைய என்னைப் போன்ற‌வர்கள் எங்கள் சோம்பலை நினைத்து வெட்கப்படத் தான் வேண்டும்.பெரியவர் கோபாலன்
    நிறைய ஆக்கங்களைத் தர வேண்டும், வகுப்பறையிலும், அனுராதாவிலும்!

    ReplyDelete
  13. ////Blogger Alasiam G said...
    ஆஹா அற்புதம்...
    முதலில் நண்பர் மைனர்வாளுக்கு நன்றி... அவரின் எதார்த்த வினாவிற்கு / கருத்திற்கு பொருள் தரும்படியாக அற்புத நிகழ்வுகளை இன்று பிரசவித்தது நமது வகுப்பறை...
    தஞ்சைப் பெரியவர் கோபாலன் சார், மிகவும் அற்புதம்... அறியத் தகவல் நான் அறுசுவை உணவை உண்டதைப் போன்ற உணர்வு... அதிலும் மகாகவியின் பாடலை அ.ச.ஞா அவர்கள் பாடக் கேட்டு......
    ///// உடனே அ.ச.ஞா. அந்தப் பாடல்களை துணை வேந்தருக்காகவும் பாடிக்காட்டினார். அப்போது முதியவர்களான அவ்விருவரும்,
    அதாவது சீனிவாச சாஸ்திரியும் ரா.ராகவ ஐயங்காரும் கண்களில்
    நீர் வடிய கேட்டுக் கொண்டிருந்தார்களாம். மகாகவியின் பாடல்கள்
    இத்தனைத் தாக்கத்தைத் தந்தது கண்டு அ.ச.ஞா.வுக்கு பெருமையாக
    இருந்தது.////
    அந்தப் தமிழ் சான்றோர்களின் கண்களில் நீர் வடிந்ததைப் போல் இந்த அறிய தகவலைப் படிக்கும் போது எனது கண்களும் பனிக்கின்றது... அற்புதம்...
    தாங்கள் தயவு செய்து வாரம் ஒருமுறை சிறப்புத் தமிழ் என்றத் தலைப்பிலே இந்த வகுப்பறையில் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும்... அந்த தமிழ்த் தேன் வந்து என்போன்றோர் காதுகளில் பாய வேண்டும்... இவைகளை எல்லாம் படிக்க என்போன்றோருக்கு
    நேரமும் வசதியும் வாய்ப்பும் இல்லை... அதனால் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.... வாத்தியாரும் சம்மதிக்க வேண்டும்.... செய்வீர்களா? ஐயா அறிவுப் பிச்சைகேட்கிறேன் இல்லை என்றுக் கூறாது அள்ளித் தரவேண்டும்....
    உங்கள் வயதில் நீங்கள் கற்ற அத்தனையும் கேட்க்க வேண்டும் என்பதே ஆசை.... தொடர்ந்து எழுதுங்கள் தஞ்சை தமிழ் இளைஞனாய் இங்கே தமிழ் தொன்றாட்டுங்கள்.... அதனை வழி மொழிய தமிழார்வம்/ தாகம் கொண்ட என் சகோதரப் படை வரும்...
    நன்றி வணக்கம்.//////

    உங்கள் வேண்டுகோளை மூத்தவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன், ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger minorwall said...
    பழைய காலத்து பாடல் பெற்ற "கம்மினாட்டி" பற்றியும், பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும் மேஜரின் விளக்கவுரையால் மைனருக்கு சில பழைய பெரிய மனிதர்களின் வாழக்கை அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..வாய்ப்பளித்த வாத்தியார் அய்யாவுக்கு நன்றி..
    நானும் தஞ்சை பகுதியைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த பதத்தை ஆரம்ப காலகட்டங்களில் அதிகம் விளையாட்டாக உபயோகித்த சமயங்கள் உண்டென்ற போதிலும் பின்னர் கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தமாக அறவே உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன்..தற்போதைய இளையதலைமுறையினரின் வழக்கில் இந்தச் சொல் கொஞ்சம்கொஞ்சமாக வழக்கொழிந்து வரும் நிலையில் பின்வரும் நாட்களில் தமிழ்ச்சொற்கள்பற்றிய ஆராய்ச்சியில் இந்த "கம்மினாட்டி" பற்றி தேடுபவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்..////

    உடன வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. ////Blogger hamaragana said...
    அன்புடன அனைவருக்கும் வணக்கம் ..
    சில இடங்களில் சில வார்த்தைகள் [செல்லமாக] உச்சரிக்கும் போது இடம் பொருள் ஏவல் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. ! திரு வி .கோபாலன் அவர்கள் ,இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் !!பாடல் மூலம் தேடி கண்டுபிடித்து ஆதாரங்களுடன் கருத்து கூறியது .....சபாஷ்.!!( சபாஷ்.. என பாராட்ட தகுதி இருக்கிறதா எனக்கு?.} ஆங்கிலத்தில் ஹேட்ஸ் ஆப் சொல்லுவார்களே அதுபோல இருக்கட்டுமா!/////

    பாராட்டுவதற்கு எல்லாம் த்குதி எதற்கு? நல்ல மனதிருந்தால் போதும்!

    ReplyDelete
  21. /////Blogger kmr.krishnan said...
    ஒரு சிறிய பொறி பெருந் தீயாக எப்படி மாறும் என்பதற்கு இந்தக் கட்டுரையும், வாத்தியாரின் மேல் அதிகத் தகவல்களுமே சாட்சி.அந்த 'ஒரு சொல்' எப்படிப் பல அறியாத செய்திகளை வகுப்பறைக்குக் கொண்டு சேர்த்துவிட்டது!பெரியவர்கள்வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் வகுப்பறைக்கும் கூட எவ்வளவு அவசியம் என்பது இதனால் தெளிவாகிறது.
    ஐயா அளித்த இணைப்புக்கள் அனைத்துக்கும் சென்று வாசித்தேன்.
    வெள்ளி நாக்குக்காரர் முதல் முதலில் ஆசிரியர் வேலை பார்த்தது சேலம் முனிசிபல் கல்லூரியிலாம்.ஒரு செய்தி என்னவெனில், நான் என் பட்டப் படிப்பை அந்தக்கல்லூரியிலேயே படித்தேன்.ஐயாவும் அந்தக்கல்லூரி மாணவர்.ஆக சர்சிலாலும், உலகத்தையே கட்டி ஆண்ட ஆங்கிலேய அரசராலும் பாராட்டப் பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி நடந்த இடங்களில் நானும் நடந்துள்ளேன் என்பது மனத்தைப் பூரிக்கச் செய்கிறது.
    ஸ்ரீ சாஸ்திரி பாகிஸ்தான் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார் என்பதை
    இப்போதுதான் அறிகிறேன்.ஏனெனில் அவர் கோகலே, அன்னிபெசன்ட் போன்ற‌
    மிதவாதக் குழுக்களைச் சார்ந்தவர்.அவருக்குப் பாகிஸ்தான் பிரிவினையில் தீவிரமான எதிர்ப்புணர்வு இருந்தது எனக்குப் புதிய செய்தி.
    பேராசிரியர் அ.ச.ஞா அவர்கள் போர்ட் உயர் நிலைப்பள்ளி, லால்குடியில் படித்தாராம்.அந்த லால்குடியில் நான் இப்போது வாசம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
    மஹாகவி பாரதியார் தமிழ் வித்வான் படிப்பு படிக்கவில்லை. அதனால் முறையாகத் தமிழ் பயின்ற அக்கால தமிழ்ப் புலவர்கள் 'பாரதிக்கு என்ன தமிழ் தெரியும்' என்ற உணர்விலேயே இருந்துள்ளார்கள்.அதற்குப் பெரியவர் ரா.ராகவ ஐயங்காரும் விதி விலக்கல்ல. அவரும் பாரதியை ஓரம் கட்டிய குழுவிலேயே இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் 'ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் ஓர்ந்த' பின், மனம் மாறித் தான் பாரதிப் பாட்டினைக் கேட்டது
    ம‌ட்டுமல்லாமல் ஸ்ரீ சாஸ்திரியையும் கேட்க‌ வைத்தது ஆச்சரியமே!அப்படி நெக்குருகிப் பாடிய அந்த 'முதலியார் மகனை'த் தான் பாராட்ட வேண்டும்.
    இந்தப் பதிவைத் தந்த, தங்க‌ளின் நினைவைப் போற்றிய பெரியவர் கோபால்ஜியையும்,மேல் அதிகத் தகவல்களுடன் வெளியிட்ட வாத்தியாரையும்
    அந்த 'ஸ்பெஷல் சொல்'லைக் கொண்டு ஸ்ரீசாஸ்திரி, உயர்திருவாளர்கள்
    ரர் ரா,மு ரா, அ ச ஞா ஆகிய பழம் பெரும் சிங்கங்கள் மேலுலகத்தில் 'வசை'பாடிப் பாராட்டுவார்கள் என்பது திண்ணம்.//////

    அவர்கள் வசை பாடிப் பாராட்டினால் எங்களுக்குக் கேட்காது. நீங்கள் பாடினால் போதும்!:-)))))

    ReplyDelete
  22. Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...
    இது வரை வந்த பதிவுகளில் முதல் வரிசையில் வைத்துப் போற்ற வேண்டிய பதிவு இது. அந்த பழைய பாடலைப் போட்டுக் கேட்டேன். இப்போது அதன் பொருளே வித்தியாசமாக ஒலித்தது.பெரியவர் கோபாலன் அவர்களுக்கும், தங்களுக்கும் என் வந்தனங்கள்.
    ஒரு படத்தில் மனோரமா அவர்கள் 'கம்முன்னா கம்மு கம்மனாட்டி கோவு"
    என்பார், அங்கேயும் இந்தக் கம்மனாட்டி என்ற சொல் வேடிக்கையாகத்தான் சொல்லப் பட்டுள்ளது.
    ஒரு விதவை ஆனவர்களை நேரடியாக அந்தச் சொல்லால் அழைக்க மாட்டார்கள்
    ஆனால் குழந்தையைக் கொஞ்சும் போது அந்தச் சொல்லால் நேரடியாக‌ அழைத்துக் கொஞ்சுவார்கள்//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...
    என் புதிய வலைபூவிலும் பெரியவர் கோபாலன் அவர்களின் பின்னூட்டத்தால் ஊக்கம் பெற்று "மது கைவிடேல்" என்ற கட்டுரை எழுதியுள்ளேன்.அதுவும் இதுபோல் ஒரு சொல்லாடலே. நகைசுவையாக எழுதப்பட்டுள்ளது. அன்பர்கள் படித்து பார்த்துப் பினூட்டம் இட வேண்டுகிறேன். பதிவர் உலகத்திற்குப் புதியவளான என்னை ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
    http;//jeyalakshmi-anuradha.blogspot.com//////

    நல்ல தமிழில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுப்பதற்கு இருப்பவன் ஒருவன்தான் அவன் பெயர் பழநிஅப்பன். நீங்கள் பின்னூட்ட்ங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருங்கள். உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும், அனுபவங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு எழுதுங்கள். மற்றவை தானாக நடக்கும். இது என் அனுபவம்!

    ”எழுதுவதை நன்றாக எழுதுங்கள்
    எல்லோரும் படிப்பார்கள்
    தலைப்பை நன்றாகப் போடுங்கள்
    தானே வருவார்கள்”

    இதுதான் எழுத்தின் தாரக மந்திரம்

    நன்றாக என்றால் சுவையாக என்று பொருள
    கல்கி, கண்ணதாசன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, சுஜாதா, பாலகுமாரன், Osho, Jeffery Archer, James Hadley Chase என்று நிறையப் படியுங்கள். எழுத்து வசப்படும். எழுதுவது வசப்படும்

    ReplyDelete
  24. அனைவருக்கும் வணக்கம்,
    இங்கே என்ன நடுக்குதுனே தெரியல. இருப்பினும் இது ஒரு சொல்லை உபயோகிப்பது பற்றி என்பது மட்டும் தெரிகிறது.

    நமக்கு தெரிந்தவர்களை அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தை பொறுத்து என்னவேண்டும் என்றாலும் சொல்லி கூப்பிடலாம் தப்பே இல்ல. ஆனா பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம்.

    அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது.
    அதைதான் இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்ய வேண்டும் என்பார்கள்.
    மூவர் கூற்றிலும் உண்மை இருப்பினும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டும் என்பதே அடியேனின் கருத்து

    ReplyDelete
  25. /////Blogger R said...
    அனைவருக்கும் வணக்கம்,
    இங்கே என்ன நடுக்குதுனே தெரியல. இருப்பினும் இது ஒரு சொல்லை உபயோகிப்பது பற்றி என்பது மட்டும் தெரிகிறது.
    நமக்கு தெரிந்தவர்களை அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தை பொறுத்து என்னவேண்டும் என்றாலும் சொல்லி கூப்பிடலாம் தப்பே இல்ல. ஆனா பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம்.
    அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது.
    அதைதான் இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்ய வேண்டும் என்பார்கள்.
    மூவர் கூற்றிலும் உண்மை இருப்பினும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டும் என்பதே அடியேனின் கருத்து//////

    இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டுமா? பிரியமானவளை ‘அடி கள்ளி’ என்பத்ற்கோ அல்லது பிரியமானவனை ‘கள்ளன்டா நீ’ என்பதற்கோ பொருள், ஏவல் எல்லாம் பார்க்க வேண்டாம். கணினியுக இள்வட்டங்கள் நெருங்கிப் பழகும் அத்தனை பேர்களையும், ‘டேய் மச்சி’ ‘ டேய் மாப்பு’ என்று அழைக்கிறார்களே - பொருள், ஏவல் பார்த்துத்தான் அழைக்கிறார்களா?

    ReplyDelete
  26. Blogger R said...
    Antha "R' enpathu R.Puratchimani//////

    சொல்லியதால், மண்டை வெடிப்பதில் இருந்து தப்பியது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒற்றை எழுத்தையெல்லாம் வைத்து பிளாக்கர் கணக்குத் துவங்க துணைபோகும் கூகுள் ஆண்டவரைத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆமாம் நீங்கள் எந்தப் புரட்சியில் கலந்து கொண்டீர்கள்? ஜார் மன்னர் கலத்து ரஷ்யப் புரட்சியிலா? அல்லது பிரெஞ்சுப் புரட்சியிலா?

    ReplyDelete
  27. //'பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம். அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது.'//

    பேருந்திலும், மற்ற பொது இடங்களிலும் முன் பின் அறிந்திராத‌ முதியவர்களை "ஏ!பெரிசு!" என்று'மரியாதையுடன்' அழைக்கும் இளவட்டஙளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் புரட்சியாளரே!

    இப்போது யாரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அதுபோலக் கூப்பிடச் சொல்லி எங்காவது கட்டுரையில் பரிந்துரை உள்ளதா?கட்டுரையில் உள்ள பல
    நயங்களைப் புறக்கணித்துவிட்டு, என்னத்தையோ சொல்கிறீர்களே!

    ReplyDelete
  28. //SP.VR. SUBBAIYA said...
    இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டுமா? பிரியமானவளை ‘அடி கள்ளி’ என்பத்ற்கோ அல்லது பிரியமானவனை ‘கள்ளன்டா நீ’ என்பதற்கோ பொருள், ஏவல் எல்லாம் பார்க்க வேண்டாம்.//

    ஐயா, பிரியமானவளை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை, அதே நேரத்தில் கட்டில் அறையில் உபயோகிக்கும் வார்த்தைகளை பெற்றோர் முன்போ அல்லாதோ குழந்தைகளின் முன்போ உபயோகிக்கக முடியாதல்லவா? :)


    // கணினியுக இள்வட்டங்கள் நெருங்கிப் பழகும் அத்தனை பேர்களையும், ‘டேய் மச்சி’ ‘ டேய் மாப்பு’ என்று அழைக்கிறார்களே - பொருள், ஏவல் பார்த்துத்தான் அழைக்கிறார்களா?//

    பார்த்து அழைப்பவர்களும் இருகிறார்கள் பார்க்காமல் அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.


    நான் பலரை மச்சி மாமு என்று அழைத்தாலும் பெற்றோர் முன்பு அந்த வார்த்தையை தவிர்க்கவே முயல்கிறேன். மேலும் நெருங்கிய நண்பர்களித்தன் அப்படி அழைப்பார்களே தவற அனைவரையும் அல்ல.

    உதாரனத்திற்க்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் அனைவரும் தங்களை ஐயா என்றுதானே அழைக்கிறோம். :)

    ReplyDelete
  29. SP.VR. SUBBAIYA said...

    //
    சொல்லியதால், மண்டை வெடிப்பதில் இருந்து தப்பியது//

    அப்படியெல்லாம் விட்ருவோமா ஐயா தங்களிடம் கறக்க வேண்டியது சாரி கற்க வேண்டியது நிறைய உள்ளது. :)

    ஆமாம் நீங்கள் எந்தப் புரட்சியில் கலந்து கொண்டீர்கள்? ஜார் மன்னர் கலத்து ரஷ்யப் புரட்சியிலா? அல்லது பிரெஞ்சுப் புரட்சியிலா?//

    ஐயா உண்மையை சொல்ல வேண்டுமெனில்
    ரஷ்யப் புரட்சி இல்லையெனில் இன்று "புரட்சி' என்ற வார்த்தையே இருக்காது. ரஷ்யாவின் எழுச்சியைத்தான் பாரதி முதன் முதலில் "புரட்சி" என்ற சொல்லால் குறித்தான்.

    ஆன்மீகப் புரட்சியும், அரசியல் புரட்சியும் செய்ய வேண்டும் என்பதே இந்த புரட்சிமனியின் பேராசை/நோக்கம்/லட்சியம். அதற்கு தங்கள் போன்ற பெரியவர்களின் ஆசி மற்றும் ஆதரவு எந்நாளும் தேவை.

    ReplyDelete
  30. kmr.krishnan said...
    //பேருந்திலும், மற்ற பொது இடங்களிலும் முன் பின் அறிந்திராத‌ முதியவர்களை "ஏ!பெரிசு!" என்று'மரியாதையுடன்' அழைக்கும் இளவட்டஙளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் புரட்சியாளரே!//


    இது கண்டிக்க தக்கதே ஐயா. இது முற்றிலும் தவறான செயல் எனபதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்களை தருதலை என்று அழைப்பதில் தவறில்லை. "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்"



    //இப்போது யாரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அதுபோலக் கூப்பிடச் சொல்லி எங்காவது கட்டுரையில் பரிந்துரை உள்ளதா?கட்டுரையில் உள்ள பல
    நயங்களைப் புறக்கணித்துவிட்டு, என்னத்தையோ சொல்கிறீர்களே!//

    தாங்கள் சொல்வது உண்மையே ஐயா. கட்டுரையாளர் அப்படி பரிந்துரைக்கவில்லை. அவர்கள் அனைவரது கருத்தையும் கேட்டதால் ஏதோ என்னுடைய கருத்தை சொன்னேன்.
    கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
    (குறிப்பு இப்ப வரப்போவது கட்டுரயைப்பற்றியோ கட்டுரையாளர் பற்றியோ அல்ல சும்மா ஒரு "பஞ்ச்"(அரசியல்) வசனம். ஊழல் செய்து விட்டு ஒருவன் நயமாக பேசினால் விட்டுவிட முடியுமா, நயத்தை தாண்டிய உண்மையைத்தான் பார்க்க வேண்டும்).

    ஐயா இளைங்கர்களுக்காக வக்காலத்து வாங்குவதோ பெரியவர்களை அவமதிப்பதோ என்னுடைய நோக்கமன்று. கருத்தில் பொருட்குற்றமோ அல்லது வெறும் உளறல்களோ அல்லது அது தங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் மன்னித்தருள்க.

    ReplyDelete
  31. இந்தக் கட்டுரையையும் அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களையும் படித்து விட்டு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பாரதி அன்னிபெசண்ட் அம்மையாரைக் கிண்டல் செய்து "பொன்வால் நரி" (A Fox with golden tail) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு நூறு பிரதிகள் வேண்டுமென்று சென்னையிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். பொதுவாகத் தன் நூல்களுக்கு வரவேற்பு இருப்பதறிந்து மகிழ்ச்சிதானே அடைவார்கள், ஆனால் பாரதிக்குக் கோபம் வந்தது. ஏன் தெரியுமா? அவர் சொன்னார், "கிடக்கிறாங்க விதவைப் பசங்க! நான் என் மூளையைக் கசக்கிப் பிழிந்து தமிழில் 'பாஞ்சாலி சபதம்' எழுதினேன்; அதை வாங்கிப்படிக்க நாதியில்லை. இங்கிலீஷில் எழுதின இந்தப் புத்தகத்துக்கு நூறு பிரதிகள் வேண்டுமாம்" என்றார். தமிழை மதிக்காமல் ஆங்கிலத்தில் இருந்ததால் புத்தகம் நூறு வாங்கினாலும் பாரதிக்கு கோபம் வந்தது என்பது அவன் தமிழ் உணர்வைக் காட்டுகிறது. மற்றொன்று 'கம்மனாட்டி' எனும் பொருளில் வரும் "விதவைப் பசங்க" எனும் சொற்களை அவர் பயன்படுத்தினார். என் விளக்கத்துக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஆசிரியருக்கு மறுபடியும் நன்றி.

    ReplyDelete
  32. /////////// minorwall said...பழைய காலத்து பாடல் பெற்ற "கம்மினாட்டி" பற்றியும், பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும் மேஜரின் விளக்கவுரையால் மைனருக்கு சில பழைய பெரிய மனிதர்களின் வாழக்கை அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது../////////
    இதிலே 'பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும்'
    என்ற வரியில் அ.ச.ஞானசம்பந்தனார் அவர்களை பற்றி நான் குறித்துச் சொன்னது குறித்து யாரேனும் ஆட்சேபம் தெரிவிப்பீர்கள் என்றே அவ்விதம் எழுதினேன்.யாருக்கும் அது கண்ணில் படாமல் போய்விட்டது..
    அ.ச.ஞா தனது சுயசரிதையில் தன்னைப்பற்றி தனக்கு அபிமானத்துக்குரிய துணைவேந்தர் வாயால் அப்படிச்சொல்லப்பட்டதை இனிமையான நிகழ்வாக எழுதியிருக்க, அதனை தஞ்சைப்பெரியவர் எடுத்து அவைக்கு வைத்திருக்க, நான் இதே பதத்தை வைத்து அவரை விமர்சித்திருப்பது எனக்கே நாகரிகக்குறைவாகவேபட்டது...படுகிறது..
    என்னதான் அ.ச.ஞா அப்படி வெளிப்படையாக எழுதியிருந்தாலும் அந்த ஒரே காரணத்துக்காக அதே வார்த்தையைக் கொண்டு அவரை அழைக்கும் பட்சத்தில் அது அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்ற அடிப்படையில் defamation suit file பண்ணுகிற அளவுக்கு அவரைச் சார்ந்தவர்கள் நினைத்தால் எடுத்துச்செல்லலாம் என்கிற உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன்..இவ்விதம் இடம், பொருள், ஏவல் என்று புரட்சியார் சொன்ன விவரங்களை இணைத்து நான் விமர்சனத்துக்கு எனது பின்னூட்டத்தில் அ.ச.ஞா அவர்களை இப்படிச் சொல்ல முழுக்காரணம் வார்த்தைப் பிரயோகம் எதுவரையிலும் இட்டுச்செல்லும் ஆயுதம் என்பதை சுட்டிக்காட்டமட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..மற்றபடி அ.ச.ஞா என்றொரு பெரியவர் இருந்தார் என்று கூட எனக்கு இன்று தஞ்சாவூரான் அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன்..

    ReplyDelete
  33. அது 'கைம்பெண்டாட்டி' என்ற சொல்லில் இருந்து மருவி இருக்கலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com