மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.4.11

அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

இளைஞர் மலர்

இளைஞர் ஒருவர் தான் கல்யாணத்திற்கு, அதாவது தன்னுடைய கல்யாணம் நடைபெறுவதற்காக  அலைந்த கதையைச் சுவையாகச் சொல்லியுள்ளார். என்ன, 36 ஆண்டுகள் கழித்துச் சொல்லியுள்ளார். ஆண்டுகள் போனால்  என்ன? சம்பவம் நேற்று நடந்ததுபோல சுவையாக உள்ளது. அத்துடன் தகப்பன் சாமி (அதான் நம்ம  சுவாமி நாதன்) தன் வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தையும் சொல்லியுள்ளார். அப்படியே கொடுத்துள்ளேன். படித்து  மகிழுங்கள். யார் அந்த இளைஞர்? பதிவின் முடிவில் அவர் பெயர், படத்துடன் உள்ளது!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
26 ஜனவரி 1975 அன்று தான் என்னவளை நான் பெண் பார்த்தது.தில்லகேணி என்று சென்னை நகரவாசிகளால்  செல்லமாக அழைக்கப்படும் திருவல்லிக் கேணி சிவராமன் தெருவில், என் தாய் மாமன் சத்யவாகீஸ்வரன்
அவர்கள்  இல்லத்தில் வைத்துத்தான் இந்த வைபவம் நடந்தது.என் துணைவியார் என் மாமாவின் மைத்துனி பெண் தான்.  ஆகவே மாமாவின் மகள் என்ற முறையும்தான்.

ஏற்கனவே என் தாய் தந்தையெல்லோரும் பெண்ணைப் பார்த்து இருப்பதால் என்னை மட்டும் தஞ்சையில் இருந்து  சென்னைக்கு வண்டி ஏற்றி அனுப்பி விட்ட‌னர்.

"எனக்கும் பெண்ணைப் பார்க்க வேண்டாம். எப்படி இருந்தாலும் கட்டிக்கொள்கிறேன்" என்றேன்.

"அது சரிதான். ஆனால் பெண் உன்னைப் பார்க்க வேண்டாமா? பெண்ணுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?  பெண் பார்ப்பது என்று பெயர்தானே தவிர அது ஆண் பார்ப்பதுமாகும்.உன் அக்காவை அழைத்துச் சென்று  பெண் பார்த்துவிட்டு வா!" என்றார் அப்பா.

சென்னையில் அக்காவையும், என் பெரியப்பா பையனான என் அண்ணன் ஸ்ரீநிவாஸனையும் துணைக்கு  அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் சென்றேன்.

என் மூத்தவருடைய திருமணம் முடிந்தவுடனேயே என் திருமணத்திற்கு அவசரப்படுத்தினேன்.'என்ன இப்படி கல்யாணம் கல்யாணம் என்று அலைகிறான்' என்று அப்பாவும் அம்மாவும் தனிமையில் பேசிக் கொண்டதையும்  ஒட்டுக் கேட்டும் கேளாதது போல் இருந்து கொண்டேன்.ஆனாலும் கல்யாணப் பேச்சை நிறுத்தவில்லை.

ஏன் அப்படி கல்யாணத்திற்கு அலைந்தேன்? ஏன் அவசரப்படுத்தினேன்? எல்லாம் ஒரு காரணமாகத்தான். அதென்ன காரணம்?

ஒருநாள் காலையில் எழுந்தவுடன் வழக்கமாக கர தரிசனம் செய்யும் போது வலது கை கட்ட விரலுக்குக் கீழே  சுக்கிர மேட்டில் பட்டாணி அளவில் ஒரு வெள்ளைத் தழும்பைக் கண்டேன்.முதல் நாள் இரவு வரை இல்லாத அந்தத் த‌ழும்பு திடீரெனத் தானாகத் தோன்றியிருந்தது.தேய்த்துப் பார்த்தாலும் போகவில்லை.

அன்று மாலையே ஒரு தோல் நோய் நிபுணரிடம் 1 1/2 மணிநேரம் காத்துக் கிடந்து ஆலோசனை கேட்டேன்.

"இது லூகோடெர்மா! உடல் முழுதும் பரவ வாய்ப்பு உண்டு.இது ஒரு தோல் நிலைப்பாடே தவிர, இது ஒரு நோய்  கிடையாது. தோலுக்கு நிறம் கொடுக்கும் 'பிக்மெண்ட்' இல்லாமல் போய் விடுவதால் இப்படி ஆகிறது. நம்  தமிழ்நாட்டில் இதற்கு 'வெண்குஷ்டம்' என்று பெயர் வைத்துவிட்டதால் மக்களிடம் நமக்குப் பரவுமோ என்ற  ஒரு  பீதி உள்ளது.அப்படிப் பரவாது.பார்க்கவும் விகாரமாக‌ உள்ளதால் இந்த 'ஸ்கின் கண்டிஷன்' வந்தவர்களுக்கு  சமூக அங்கீகாரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. திருமணத் தடை ஏற்படும். ஆன திருமணம் கூட விவாகரத்தில்  முடியும்.உஙளுக்குத் திருமணம் ஆகவில்லை என்கிறீர்கள். முடிந்தால் கூடிய விரைவில் திருமணம் செய்து  கொள்ளுங்கள். ஏனென்றால் உடல் முழுதும் பரவி விட்டால் பெண் கிடைப்பது அரிதாகிவிடும்...."

அந்த டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல் முழுதும் வெள்ளையாகப்  போய் கண்களைச் சுற்றிமட்டும் வளையமாக பழுப்பாக நிறம் மாறாமல் இருந்து, பார்க்க ஒரு பிசாசைப் போல  நடமாடுவது போலக் கனவெல்லாம் வர ஆரம்பித்து விட்டது.

அந்த டாக்டர் சொன்னது தப்பாக இருக்கலாமோ என்ற நப்பாசையில் வேறு ஒரு தோல் நிபுணரை அணுகினேன்.  அவரோ 'இது விடிலிகோ' என்று
புதுப் பெயரைச்சொன்னார்.'அப்பாடி!  அந்த டாக்டர் சொன்னது இல்லை போல
உள்ளதே' என்று சந்தோஷமாக மருத்துவ அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். விடிலிகோ என்பதற்குப் பொருள்  லூகோடெர்மா என்றும், லூகோடெர்மா விற்குப் பொருள் விடிலிகோ என்றும் கண்டிருந்தது.

இது அந்த மாதிரி இருக்கக்கூடாதே என்று வேண்டாத தெய்வமில்லை. எனக்கு சரியாகப் போய்விட்டல் உனக்குப்  பத்து தேங்காய் உடைக்கிறேன் என்று ஒரு பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த பிள்ளை

யாருக்கு அது 20 ஆக உயரும். இப்படி உயர்ந்து ஊரில் உள்ள எல்லா பிள்ளை யாருக்கும் வேண்டிக் கொண்ட  தேங்காய் எண்ணிக்கை 10000ஐத் தாண்டும். ஆனாலும் ஒரு பலனும் இல்லை.என்னைக் குணப்படுத்த வேண்டிய
பொறுப்பைத்  தன் தம்பியிடம் விட்டு விட்டதால் பிள்ளையார் என்னைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போது புரிகிறதா திருமணத்திற்கு ஏன் அலைந்தேன் என்று? உடல் பூராவும் வெண்மை பர‌வி விட்டால் பெண்  கிடைப்பது சிரமமாகிவிடுமே என்ற பக்காவான சுயநலம் தான் காரணம்.

சொஜ்ஜி பஜ்ஜி காப்பி ஆனவுடன், வழக்கமாகக் கேட்கும் "ஒரு பாட்டுப் பாடேன் கேட்போம்" என்றார் அக்கா. இதற்காகவே காத்து இருந்தது போல ஒரு கிராமபோன் பிளேட்டை முடுக்கிவிட்டதைப்போல அந்தப் பெண்
பாடினார்கள்.

      "மோஹம் கொண்டேன் முருகா
      முத்துக்குமாராஆஆஆஆஆ குஹா ஆஆஆஆஆ‍ உன்மேல்
      மோஹம் கொண்டேன் முருகா ஆஆஆஆஆ"


"முத்து"என்ற பெயர் வருகிறதாம் அந்தப்பாட்டில்! பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையின் பெயர் என்பதால்  அந்தப் பாட்டை தெரிவு செய்து மிகவும் சாமர்த்தியமாகப் பாடினார்களாம். திருமணம் முடிந்த பின் எடுத்துச்  சொன்னார்கள். அந்த அளவு கலை நுண்ணுணர்வு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்.?

கூட வந்த அண்ண்ன ஸ்ரீநிவாசன் எல்லோரும் கேட்க உரக்க அங்கேயே வைத்து, "டேய்! அம்பி! இவளையே கல்யாணம் பண்ணிக்கோ..ஆமாம்.. சொல்லிட்டேன்...உனக்கு இதை விட நல்ல பெண்  எல்லாம் கிடைக்காது ...என்ன கேட்டியா...சரின்னு இப்பவே சொல்லு...." என்கிறார்.

நானும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டி வைத்தேன்.எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ஆனாலும் மனதுக்குள் ஒரு குற்ற உணர்வு.

"நாம் அந்தப் பெண்ணை ஏமாற்றுகிறோமோ? நாளைக்கே இந்த வெள்ளை புள்ளி உடல் முழுதும் பரவி விட்டால்  என்னை வெறுப்பாளோ? கல்யாணத்திற்கு முன்பாகவே சொல்லுவதா வேண்டாமா? சொன்னால் கல்யாணம் நின்று  விடுமா?"

இரவு முழுதும் என் மனச்சாட்சி விழித்துக் கொண்டு ஆட்ட‌ம் போட்டது.

மறு நாள் விடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் திருவல்லிக்கேணி போய் மாமன் வீட்டுக் கதவைத்  தட்டினேன்.  மாமன் மனைவியிடம் (அம்மாமி என்போம்.சுந்தரி மாமி) விஷயத்தைப் புட்டு புட்டு வைத்தேன்.மாமி

எல்லோரிடமும் பேசி, பெண்ணிடமும் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்கள்.

திருமணத்திற்கு நாள் பார்த்து 24 ஏப்ரில் 1975 அன்று சுவாமிமலையில் வைத்துத் திருமணம் எளிமையாகவும்  இனிமையாகவும் நடந்தது. என் துணைவியார் கைத்தலம் பற்றும் போது கையில் உள்ள வெண்புள்ளி உருத்துவது போல ஒரு பிரமை.

மாலையும் கழுத்துமாக சுவாமிநாதனைத் தரிசிக்கும் போது மனமாற வேண்டிக் கொண்டேன், "அப்பனே!  என்னுடைய குறையைத் தீர்த்தருளும்"

தகப்பன் சுவாமி உண்மையாகவே என் குறையை நீக்கினார். அந்த அதிசயத்தைச் சொல்லவே இந்தப்பதிவு.

திருமணம் முடிந்து ஒருவருடம் கழிந்தபின்னர் என் அண்ணன் முனைவர் கண்ணன் அவர்கள் பங்களூருவில்  டாட்டா இன்ஸ்டிட்யூட்டில் பி ஹெச் டி படிக்கச் சென்றார். அங்கே அவருக்கு ஆய்வில் பல தடங்க‌ல் ஏற்பட்டது.
சோர்வு உற்றார்.அவரை உற்சாகப்படுத்தவும், வேண்டுதலாகவும் ஒரு ஆன்மீகச் சுற்றுலா போனோம்.

முன்னர் ஒருமுறை நான் திருச்செந்தூர் போன போது, அங்கே ஒருவர் ஒரு மண்டபத்தில் 20 பண்டாரங்களுக்கு, அவர்களுடைய திருவோடுகளில் ஒவ்வொரு சம்பா சாதக்கட்டி, பெரியது, வைத்து கூடவே சிறிது த‌ட்சணையும்
வைத்து விழுந்து கும்பிட்டார்.அந்தப் பண்டாரங்களும் தானம் கொடுத்தவருக்கு அழகு தமிழில் மந்திரம் போல  வாழ்த்துச் சொன்னார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த நான், 'நானும் அப்படிச் செய்வேன்' என்று வேண்டிக்  கொண்டேன்.

சுவாமிமலையில் 25 பண்டாரங்களை ஒரு சேரக் கண்டவுடன், திருச்செந்தூரில் கண்டது நினைவுக்கு வந்தது.உடனே  மடப்பள்ளியில் சொல்லி 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு சுவாமி
தரிசனம் செய்யச் சென்றோம். தரிசனம் முடிந்து வந்து பண்டாரங்களுக்கு அந்தப் பொங்கலை அளித்து விட்டு  சிறிது தட்சணையும் அளித்து சாஷ்டாங்க‌ நமஸ்காரம் செய்தேன்.

மறுநாள் காலை வழக்கம் போல படுக்கையை விட்டு எழுந்தவுடன் கர தரிசனம் செய்தேன். அதிசயம் காத்து  இருந்தது. ஆம்! அந்த வெண் புள்ளி காணவில்லை. என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.புள்ளி இருந்த  இடத்தைச் சுரண்டிப் பார்த்தேன். போயே போச்!

கண்களில் ஆனந்தக் க‌ண்ணீர் பெருகியது. எல்லாம் அந்த தகப்பன் சுவாமியின் அருளேதான். அவன்  சன்னதியிலேயே திருமணம் செய்வித்து, என் குறையயும் தீர்த்து வைத்தானே ,அவன் புகழை எப்படிப்பாடுவேன்?

என்ன சொல்லிப் போற்றுவேன்?

வருகின்ற 24 ஏப்ரல் 2011க்கு 36 வருட திருமண வாழ்க்கை முடிவுறுகிறது. குறை உள்ளவன் என்று தெரிந்தும்  என்னைத் ஏற்றுக் கொண்டு துணிவுடன் குடும்பம் நடத்திய என் துணைவியார் திருமதி ஜெயலக்ஷ்மி பி.எஸ்ஸி.,எம்
எட் அவர்களுக்கு என்றும் என் வந்தனம்.

ஸ்ரீசுவாமிநாத குருவே போற்றி! தகப்பன் சுவாமியே போற்றி! ஓம்காரப் பொருளே போற்றி! உள் நின்று  ஒளிர்வாய் போற்றி!

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

46 comments:

  1. நன்றி என்பதைத் தவிர வேறு சொல் இருக்கிறதா ஐயா!முன்னால் ஒரு முறை சனிக்கிழமை மலரில் என்னைப் போன்ற் "இளைஞனு"க்கு இடம் இல்லை என்றீர்கள். ஆனால் இப்போது சனிக்கிழமை இளைஞர் மலரில் இடம் அளித்து என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி ஐயா!

    ReplyDelete
  2. ///////kmr.krishnan said...
    நன்றி என்பதைத் தவிர வேறு சொல் இருக்கிறதா ஐயா!முன்னால் ஒரு முறை சனிக்கிழமை மலரில் என்னைப் போன்ற் "இளைஞனு"க்கு இடம் இல்லை என்றீர்கள். ஆனால் இப்போது சனிக்கிழமை இளைஞர் மலரில் இடம் அளித்து என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி ஐயா!///////

    கட்டுரையில் கொடுக்கப்பெற்றுள்ள செய்தி திருமணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கானது. அதனால் இளைஞர் மலரில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் இளம் வயதிலேயே இறைப்பற்று வேண்டும் என்பதும் உணர்த்தப்பெற்றுள்ளது. அதையும் கவனிக்க வேண்டும்!

    ReplyDelete
  3. Many happy returns of the marriage Day (24 April)
    K.Kannan, Coimbatore

    ReplyDelete
  4. அன்பருடைய முப்பத்தி ஆறாவது திருமண நாள் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பதாவது திருமண பொன்விழா கண்ட எனக்கு அவரை ஆசிகூர யோக்கியதை இருக்கிறது. இப்படி வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்ப்பதில் ஒரு இன்பம் இருக்கத்தான் இருக்கிறது. கடந்தகால துன்பங்கள்கூட இப்போது நினைக்கையில் ஒருவித இன்பம் தருவதை உணர்ந்திருக்கிறேன். புற நானூற்றுப் பாடலொன்று 'தொடித்தலை விழுத்தண்டூன்றினார்' எனும் புனைப்பெயரில் ஒரு கவிஞர் எழுதியுள்ள அந்தப் பாடல்கூட, ஒரு கிழவர் தன்னுடைய தள்ளாத வயதில், பார்வை குன்றிய நிலையில், எதிரில் ஆற்றோரம் விளையாடும் சிறார்களைக் கண்டு தன்னுடைய இளமை நினைவுகளை அசைபோடும் பாடல் அது. சுவையானது. படித்துப் பாருங்கள். அன்பருடைய கட்டுரையிலிருந்து ஒன்றைப் புரிந்து கொண்டேன். அவரது மாமன் மனைவியின் பெயர் சுந்தரி மாமி என்கிறார். 'ஸ்டெல்லா சுசீலாவான கதை'யில் அந்தக் காதலர்களுக்கு உதவிய நண்பரின் மனைவி பெயரையும் இவர் ஏன் சுந்தரி என்று எழுதினார் என்பது இப்போது புரிகிறது. அவருக்கு மீண்டும் திருமண நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம்
    திரு மதி &திரு KMR.K.... திருமண வாழ்த்துகள்!!!! இளைஞர்களுக்கு நீங்கள் செய்த இந்த செயல் மிகவும் பயனுள்ளது!! இறை நம்பிக்கை!! அத்துடன் நமது குறைகளை முன்னரே சொல்வது.!!. சில பெண்கள் இதை சகஜமாக கொள்வார்கள்!! சிலர் எப்படியோ ? இருந்தாலும் முன்கூட்டியே சொல்ல ஒரு மன தைரியம வேண்டும் ? இருக்கிறது உங்களிடம் இப்போதும் !
    தொடருங்கள் ..KMRK SIR. ""
    **என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி** மைனர்வாள்.. ஒத்து கொள்ள மாட்டாரே??

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 36 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!சொஜ்ஜி கரெக்ட்டு!
    பஜ்ஜி கொடுக்கவில்லையே. மிக்சர்னா வைத்தோம். ஏன் டூப் விடுகிறீர்கள்?

    ReplyDelete
  8. மணநாள் வாழ்த்தினை
    மனமகிழ சொல்ல ஒரு தமிழோடை..


    வள்ளுவர் வழியில் நின்று
    வாழ்ந்திட வந்த "லட்சுமி"


    தெள்ளமுதான நான்கு
    தெவிட்டாத பேறு பெற்றார்


    உள்ளத்தினால் உயர்ந்து வாழ்வில்
    உழைப்பினால் கல்வி கற்று


    வெள்ளம் போல் அள்ளித் தரும்
    விரும்பிய குணவதிகரம் பற்றிய இவர்


    அறிவும் ஆற்றலும் உடையவர்
    அழகுத் தமிழின் கொடை இவர் - நன்


    நெறியை மறவா நடையினர் புனித
    நெஞ்சம் போற்றும் படையினர்


    சிரித்து பழகும் மனத்தினர்
    சீதள நிலவின் குணத்தினர்


    பரிவும் பாசமும் பெற்றவர்
    பணிந்தே வாழக் கற்றவர்


    கதிரவன் கண் விழித்து எழுகையில்
    கூடவே பிரகாசம் பிறக்கும் - புது


    நாளைத் தொடங்கிடும் உயிருகளுக்கு
    நம்பிக்கை பாதை விரிக்கும் இன்று


    வாழ்வைத் தொடங்கிடும் மணநாளில்
    வார்த்தைகளாலே வாழ்த்துகிறோம்..


    அகவையை அறுபதை தொட்டபின்னும்
    அன்றுபோல் இன்றும் இளைஞராய்


    எண்ணிய முடிக்க வேண்டி நல்லன
    எண்ணியே இருப்பவரே - இப்


    புண்ணிய பூமியிலே இறையை பற்றி
    விண்ணிலே ஆதவன் போல்


    உம்வாழ்வும் பல்லாண்டு தொடரவே
    உள்ளன்போடு வணங்குகின்றோம்


    வளமான வாழ்த்துக்களுடன்
    நலம் சேர்க்கும் நற்றமிழால்..


    வகுப்பறை மாணவர்கள் சார்பில்..

    ReplyDelete
  9. அது அது தான்
    அதனால் அதனை அப்படி தந்தோம்..

    நடையை மாற்ற சொல்லியும் மாற்றவில்லை என எண்ண வேண்டாம்

    சுக்குப் பொடி இன்னமும் பையிலேயே..

    ReplyDelete
  10. இளம் வயதிலேயே இறைப்பற்று வேண்டும் என்பது சரியான பார்வை ஐயா!வகுப்பறையின் 2270க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களில் 20 பேர் உங்கள் செய்தியைப் படித்து வாழ்க்கையில் கடைப் பிடித்தால் கூட இந்த வலைப்பூ நடத்துவதற்கான பலன் கிடைத்துவிடும் ஐயா!

    நேற்று திரு.ஆனந்த் அளித்துள்ள தகவலைப் படித்துப் பார்த்து மேல் நடவடிக்கை எடுங்கள் ஐயா!

    ReplyDelete
  11. சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.

    யார் அந்த இளைஞர்? பதிவின் முடிவில் அவர் // ரொம்ப டூ மச்சா இருக்கே!

    26 ஜனவரி 1975 அன்று தான் என்னவளை நான் பெண் பார்த்தது.//

    எல்லாவற்றையும் விட எனக்கு ஆச்சரியமூட்டியது இதுதான். உங்க ஞாபக சக்திக்கு ஒரு அளவே கிடையாதா?

    ReplyDelete
  12. இது லூகோடெர்மா//

    அந்த மருத்துவர் இவ்ளோ நீண்ட விளக்கம் குடுத்திருக்கறதைப் படிச்சாலே தெரியறது, அவரை நீங்க துருவித் துருவி கேள்வி கேட்டது.

    என்னிடம் மாட்டிக்கொள்ளும் மருத்துவர் கதியும் இதேதான், அப்படி ஒழுங்காக பதில் சொல்லாத மருத்துவரிடம் போகவே மாட்டேன்.

    ReplyDelete
  13. எல்லா பிள்ளை யாருக்கும் வேண்டிக் கொண்ட தேங்காய் எண்ணிக்கை 10000ஐத் தாண்டும்//

    அதுல நீங்க ஐநூறு தேங்காய் கூட உடைக்கவில்லை அப்படின்னு பிள்ளையார்தான் சொன்னார்.

    ReplyDelete
  14. உடல் பூராவும் வெண்மை பர‌வி விட்டால் பெண் கிடைப்பது சிரமமாகிவிடுமே என்ற பக்காவான சுயநலம் தான் காரணம்//

    உங்கள் நேர்மை வாழ்க!

    ReplyDelete
  15. நன்றி அண்ணா கண்ணன் அவர்களே! என் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவந்தாலும் இதுவே தாங்கள் இடும் முதல் பின்னூட்டம்!மகிழ்ச்சியாக இருக்கிற்து.

    ReplyDelete
  16. அதிசயம் காத்து இருந்தது. ஆம்! அந்த வெண் புள்ளி காணவில்லை//

    நிஜமாவே அதிசயம்தான்.

    ReplyDelete
  17. வருகின்ற 24 ஏப்ரல் 2011க்கு 36 வருட திருமண வாழ்க்கை முடிவுறுகிறது.//

    இந்த மகிழ்ச்சி என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  18. ஆனால் இப்போது சனிக்கிழமை இளைஞர் மலரில் இடம் அளித்து என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி ஐயா!//

    ஹி ஹி வாத்தியார் ஏதோ உங்கள் கல்யாண நாளிற்கு ஒரு பரிசாக, இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமேன்னு இதை இளைஞர் மலரில் போட்டிருக்கார். அப்படித்தானே சார்?

    ReplyDelete
  19. சொஜ்ஜி கரெக்ட்டு! பஜ்ஜி கொடுக்கவில்லையே. மிக்சர்னா வைத்தோம். ஏன் டூப் விடுகிறீர்கள்?//

    ஆஹா முதல் கமேண்டிலேயே செம வாரு வாரிட்டாங்களே? நீங்களும் சாரைப்பத்தி ஏதாவது எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்களேன்.

    ReplyDelete
  20. இதற்காகவே காத்து இருந்தது போல ஒரு கிராமபோன் பிளேட்டை முடுக்கிவிட்டதைப்போல அந்தப் பெண்
    பாடினார்கள்//

    இத கவனிக்கலையா? (ஏதோ நம்மால முடிஞ்சது)

    ReplyDelete
  21. வாழ்த்துக்களுக்கு நன்றி கோபால்ஜி!ஆம்! ஒரு சிக்கலான நேரத்தில் நமக்கு உதவியவர்களை மறக்க முடியுமா? அப்படிதான் அந்த சுந்தரி என்ற பெயரும்!
    என் மாமியாரின் தங்கை அவர்கள். எனக்குச் சின்ன மாமியார். என் மனைவி தன் இளமைக் காலத்தில் இந்த மாமியுடனேயே(என் மனைவிக்கு சித்தி) கழித்துள்ளார்கள்.என் மாமியார் தன் 58வது வயதில் இறந்துவிட்டார்கள்.
    சுந்தரிமாமி இன்றளவும் தன் பெண்ணைப் போல
    என் மனைவியையும், என்னை மாப்பிள்ளை என்ற மரியாதை கொடுத்தும் வருகிறார்கள்.சுந்தரி மாமிக்கு 76 வயது இருக்கும் இப்போது.

    ReplyDelete
  22. வாழ்த்துக்களை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் நமது சங்கீதம், ஹமாரகானா
    அவர்களே!மைனர் வாள் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.என்னை அவ்ர்களுடைய பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பாரோ? பார்க்கலாம்!

    ReplyDelete
  23. நீங்களும் முதல் முறையாக வகுப்பறையில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என் இனிய பாதியே!தொடர்ந்து வாருங்கள்.!என் நினைவாற்றலை எல்லோரும் வகுப்பறையில் புகழ்ந்து வரும் நேரத்தில், 'பஜ்ஜி தவறு; மிக்சர்தான்' கொடுக்கப்பட்டது' என்று ஒரே போடாகப் போட்டு விட்டீர்களே! இனி நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.ஏனெனில் நான் எங்கே 'டூப்' விடுகிறேன் அல்லது கயிறு திரிக்கிறேன் என்ற கண்காணிப்பு
    அதிகமாகிவிட்டது.உஷார் kmrk உஷார்!

    ReplyDelete
  24. வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்க‌ள் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியுள்ளதாக நினைக்கிறேன். சரியா?

    அந்த "சுக்குப்பொடி" தான் புரியவில்லை.' சுக்குப்பொடி பையிலே' என்றால் என்ன பொருள்? சொக்குப் பொடியோ?

    கொஞ்சம் மந்த புத்தி சுவாமி!அதுவும் புதுக்கவிதை புரியவே மாட்டேன் என்கிறது. பழைய ஆசாமி அல்லவா?

    ReplyDelete
  25. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு மறை தீர்ப்பு. அதுவும் ஆறு படை
    வீடு முருகப்பெருமானை நம்பியவர்கள் என்றுமே கெட்டதில்லை. இன்றைய‌
    இளைஞர் மலர் சிறந்த உதாரணம். வகுப்பறை சக மாணவர் திரு.& திருமதி
    KMRK அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் . நாற்பதாவது திருமண நாளை வரும் ஜுன் மாதத்தில் எதிர் பார்த்திருக்கும்
    நான் அவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  26. ///வாழ்த்துப்பா அருமை ஐயர் அவர்களே!எங்க‌ள் இருவருக்கும் பொருந்தும்படி எழுதியுள்ளதாக நினைக்கிறேன். சரியா?///

    உண்மை ..
    உள்ளபடியே சரி.. சரி.. சரி..

    அப்படி வாழ்த்து வரைவது தானே
    அந்த மணநாள் வாழ்த்தாகும்..


    ///அந்த "சுக்குப்பொடி" தான் புரியவில்லை.'///

    புரியாமலிருப்பதாலே அது
    புதிய சுக்குப் பொடி

    ///புதுக்கவிதை புரியவே மாட்டேன் என்கிறது. பழைய ஆசாமி அல்லவா?///

    புரிய வேண்டுமென்பதற்காகவே
    வெண்பா பாடியவர்கள்

    வசன கவிதை வரை
    வந்து விட்டோம்..

    நாங்கள் மட்டும் என்ன புதுசா..
    எங்களை எந்தபக்கம் சேர்க்கின்றீர்கள்?

    ReplyDelete
  27. "//எல்லாவற்றையும் விட எனக்கு ஆச்சரியமூட்டியது இதுதான். உங்க ஞாபக சக்திக்கு ஒரு அளவே கிடையாதா?"//
    முக்கியமானவற்றை எல்லாம் மறந்து விடுவதாகப் புதிய பிளாகர் ஜெயலக்ஷ்மி முத்து அவர்கள் சொல்லி வருகிறார்கள் உமாஜி! அதற்கு உதாரணமாக'ப‌ஜ்ஜி இல்லை மிக்சர்' என்று ஆரம்பித்து வைத்துவிட்டார்.இனி இந்தப் புயல் வீசும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  28. "//என்னிடம் மாட்டிக்கொள்ளும் மருத்துவர் கதியும் இதேதான்//"

    மருத்துவர் மட்டும்தானா? நாங்கள் எல்லோரும் வகுப்பறையில் அதே பாடு தானே பட்டு வருகிறோம். அவ்விடடத்தில் மாமா பாடும் கஷ்டம் தான் இல்லையா உமாஜி?

    ReplyDelete
  29. "//அதுல நீங்க ஐநூறு தேங்காய் கூட உடைக்கவில்லை அப்படின்னு பிள்ளையார்தான் சொன்னார்/"/.

    பிள்ளையாரிடம் நேரில் கேட்டுக் குறி சொல்லப்படும் என்று அறிவித்தால் உங்கள் வீட்டில் கூட்டம் நெரியும் உமாஜி!

    ReplyDelete
  30. //உங்கள் நேர்மை வாழ்க!////நிஜமாவே அதிசயம்தான்.////இந்த மகிழ்ச்சி என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.//

    அப்பாடி கொஞ்சமாவது உங்கள் தஞ்சாவூர் நக்கலை விட்டு வெளியில் வந்து பாராட்டாக சிலது சொன்னீர்களே.சுவாமிநாதன் உங்களைக் காக்கட்டும்

    ReplyDelete
  31. //ஹி ஹி வாத்தியார் ஏதோ உங்கள் கல்யாண நாளிற்கு ஒரு பரிசாக, இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமேன்னு இதை இளைஞர் மலரில் போட்டிருக்கார். அப்படித்தானே சார்?//

    //ஆஹா முதல் கமேண்டிலேயே செம வாரு வாரிட்டாங்களே? நீங்களும் சாரைப்பத்தி ஏதாவது எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்களேன்///

    இப்போதான் கொஞ்சம் மகிழ்ச்சி கொடுத்தீர்கள் என்றால் அடுத்த பின்னூட்டத்திலேயேவா இப்படி?

    இவ்விடத்தில் மாமியெல்லாம் நீங்கள் போட்டுக் கொடுக்காமலேயே வாரத் தெரிந்தவர்கள்தான்.

    புதிதாக மாமி பிளாக் ஆரம்பித்துவிட்டார்கள்.இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. தினம் ஒரு பதிவு போடப் போறாங்களாம். அதில் என்னைப் பற்றிய வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறுமாம்.
    http://jeyalakshmi-anuradha.blogspot.com

    ReplyDelete
  32. //நம்பினார் கெடுவதில்லை , இது நான்கு மறை தீர்ப்பு. அதுவும் ஆறு படை
    வீடு முருகப்பெருமானை நம்பியவர்கள் என்றுமே கெட்டதில்லை.//

    ஆம் அரசு அவர்களே! நம்பிக்கயே எல்லாவற்றிற்கும் அடிப்படை.
    தாங்களும் மண வாழ்க்கையின் 50 ஆண்டுகளைக்காண ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. ///நாங்கள் மட்டும் என்ன புதுசா..எங்களை எந்த பக்கம் சேர்க்கின்றீர்கள்?///

    மைனர்வாள்&கோ போல வயதும் இல்லை. தஞ்சாவூரார் போலவோ இல்லை. ஒரு 45 மதிப்புப் போடுகிறேன்.

    ReplyDelete
  34. ஐயா வணக்கம்.

    ஸ்ரீ முத்து ராம கிருஷ்ணன் சார்!
    மீண்டும் மீண்டும் சும்மா அசத்திருங்க போங்க சார்.

    உங்களுக்கு ஈடு நீங்கள் தான் போங்க.

    தங்களுக்கு யாம் இங்கு நிறைய கடமை பட்டு உள்ளோம் ஐயா.

    அடுத்த மாதம் முதல் தமிழகம் வந்து பெண் பார்க்க போக உள்ளேன் ஐயா .

    இந்த தருணத்தில் தங்களின் கட்டுரை ஒரு வழி காட்டி போல எமக்கு அமைத்தது என்பதில் எள் அளவிலும் சந்தேகம் இல்லை ஐயா

    ReplyDelete
  35. ஐயா!


    யாம் பிறப்பதீக்கு சுமார் மூன்று வருடதீர்க்கு முன்னரே தாங்கள் இல்லறத்தில் அடி எடுத்து வைத்து விட்டீர்கள் ஐயா

    ReplyDelete
  36. ///அடுத்த மாதம் முதல் தமிழகம் வந்து பெண் பார்க்க போக உள்ளேன் ஐயா ///

    தங்கள் திருமணம் கூடிவரும் கண்ணன் ஜி! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. ///ஒரு 45 மதிப்புப் போடுகிறேன்.///

    நீங்கள் தரும் இந்த மதிப்பு அறிவுக்கா..? வயதுக்கா..?


    அறிவுக்கு என்றால் அது எத்தனைக்கு (50க்கா. 100க்கா. 200க்கா) என கேட்க போவதில்லை காரணம் அது உங்கள் கருத்து. அதில் கருத்துச் சொல்வது நாகரீகமற்றது..


    நீங்கள் தரும் மதிப்பு வயதுக்குஎன்றால்
    மன்னிக்க.. அய்யர் இங்கே மாறுபாடுகிறார்.

    உயிருக்கு வயதே கிடையாது ..
    "என்று நீ உளாய் அன்று யாம் உளோம்" என்பது தாயுமானார் வாக்கு..

    வயது உடலுக்குத் தான்..மேலும்
    உடலுக்கும் அறிவுக்கும் தொடர்பு படுத்தி பார்ப்பது சரி அல்ல..
    உடல் அறிவற்றது உயிர் அறிவுடையது

    சடப் பொருளை அறிவுடைய பொருளுடன் ஒப்புமை செய்வது எப்படி சரியாக இருக்க முடியும்?


    அறிவில் உயர்ந்த வயதில் குறைந்த பலரை பட்டியலிடலாம் உதாரணத்திற்கு கரிகால் சோழன், திரு ஞானசம்பந்தம் என..

    அறிவில் குறைந்த வயதில் நிறைந்த பலரை பட்டியலிடலாம், அது அவர்களுக்கு மரியாதையாக இருக்காது என இங்கு சொல்லவில்லை..

    3 வயது குழந்தை கூட I am 3 years "OLD" எனத் தான் சொல்கிறது ..

    ஆக எல்லோருமே புதுசு அல்ல என்பது தான் சரி..

    "அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலர்" என்ற வரிகளை மனதில் கொண்டு...


    சொன்னவை வாதமும் அல்ல ...
    விதண்டாவாதமும் அல்ல..
    கருத்து மோதலும் அல்ல..
    கருத்து சிறலும் அல்ல..

    என சொல்லி அமைகிறோம்
    எப்பவும் போல் அமைதியாகவே..

    ReplyDelete
  38. நல்ல சம்பவம்..நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..
    கடந்த சில நாட்களாக நெட் தகராறு செய்வதால் படித்துப் பின்னூட்டமிடவில்லை..
    "சின்னஞ்சிறு வயதில் எனக்கோ" பாடல் காட்சியைப் போல மாமி மாமாவைக் குறித்து "முத்துக்குமரா" பாட்டுப் பாடிய நிகழ்ச்சி இனிமை..
    முருகன் ஸ்தலத்தில் 25 பண்டாரங்களுக்கு , 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்தால் லுகோடெர்மா தீரும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்..பிரச்சினை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்..

    ReplyDelete
  39. /////////Blogger hamaragana said...
    **என்னையும் இளைஞர் பட்டியலில் சேர்த்துக் கொண்டதற்கு மீண்டும் நன்றி** மைனர்வாள்.. ஒத்து கொள்ள மாட்டாரே??////

    /////////kmr.krishnan said...மைனர் வாள் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.என்னை அவ்ர்களுடைய பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பாரோ? பார்க்கலாம்!//////

    சமீபமாக வெளிவரும் பதிவுகளில் பக்திமசாலா கொஞ்சம் தூக்கலாகத் தெரிவதாலும்,பெரியவர்களின் பாலிய வயது சம்பவங்கள் பற்றிய நினைவுகூர்தலாக அமைந்து வருவதாலும் இளைஞர்களில் சிலர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று என்னிடம் கருத்து தெரிவித்திருந்தார்கள்..
    ஆனால் என் பார்வையோ சற்று வேறு மாதிரியானது..தானும் படைப்புகளை எழுதமாட்டேன்(அல்லது எழுத வராதா என்பது தெரியவில்லை) இப்படி வெளிவரும் படைப்புகளையும் படிக்க மாட்டேன், அல்லது படித்தாலும் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவேன் என்னும் அணுகுமுறையுடன் ஒப்பிடும்பொழுது
    தொடர்ந்து ஊக்கம் தளராமல் எழுதுபவர்கள் இளைஞர்களே என்பதுதான் என் தீர்ப்பு..
    சம்பவங்கள் ஸ்டீரியோடைபிக் ஆக இல்லாமல் பார்த்துக்கொள்வது போரடிக்காமல் இருக்கும் என்பதையும் என் கருத்தாகச் சொல்லிக்கொள்கிறேன்..
    "இருபது வயதினால் மட்டுமே இளமை வந்துவிடாது..மனதில் இளமை இருப்பது மட்டுமே உடலில் இளமையைக் கொண்டுவரும்" என்பதை நாராயணரெட்டியைக் கேட்டால் நன்றாக விளக்குவார்..

    ReplyDelete
  40. //"அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலர்" ///
    இது மஹாகவி பாரதியார்.ஆம்!ஓர் ஆக்கத்தை அதன் உள்ளுறை உணர்வுடன் ஆக்கியவனைப் போன்றே புரிந்து கொள்ளும் வாசகன் கிடைப்பதே ஆக்கியோனுக்குக் கிடைக்கும் பரிசு.அப்படிப்பட்ட ரசிகர் ஆயிரத்தில் ஒருவர் தான் கிடைப்பர்.

    ReplyDelete
  41. ///முருகன் ஸ்தலத்தில் 25 பண்டாரங்களுக்கு , 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்தால் லுகோடெர்மா தீரும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறீர்கள்..பிரச்சினை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்..///

    உண்மையில் என் ஜாதகத்தில் 12வது வீட்டில் செவ்வாய். இப்படி 12ல் செவ்வாய்
    இருப்பவர்களுக்கு குஷ்டம் வரக்கூடும் என்பது ஜோதிட விதி. எனக்கு தோல் சம்பதப்பட்ட பிரச்சனை தலைகாட்டி மறைந்தது இதனால் தான் என்று தோன்றுகிறது.செவ்வாயுக்கான கடவுள் முருகன். அவர் க்ஷேத்திரத்தில் செய்யும் நற்செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு.

    ReplyDelete
  42. //"...ஊக்கம் தளராமல் எழுதுபவர்கள் இளைஞர்களே என்பதுதான் என் தீர்ப்பு..
    சம்பவங்கள் ஸ்டீரியோடைபிக் ஆக இல்லாமல் பார்த்துக்கொள்வது போரடிக்காமல் இருக்கும் என்பதையும் என் கருத்தாகச் சொல்லிக்கொள்கிறேன்..
    "இருபது வயதினால் மட்டுமே இளமை வந்துவிடாது..மனதில் இளமை இருப்பது மட்டுமே உடலில் இளமையைக் கொண்டுவரும்" என்பதை நாராயணரெட்டியைக் கேட்டால் நன்றாக விளக்குவார்..'//

    இளமை பற்றிய உங்கள் கருத்து டானிக் போல உள்ளது மைனர்வாள்.

    இதுவரை என் ஆக்கங்கள் 28 வெளி வந்துள்ளன.அவை ஒன்று இரண்டைத் தவிர மற்றவை என் இளமைக்கால நிகழ்வுகள்தான்.ஒவ்வொரு ஆக்கத்திலும் வெவ்வேறு'கேரக்டெர்ஸ்' பற்றித் தான் எழுதியுள்ளேன். 'ஸ்டீரியோடைப்' இல்லாமல்தான் எழுதியுள்ளேன் என்று தான் எண்ணியுள்ளேன்.

    பெரிய பத்திரிகைகளில் வெளியாரின் ஆக்கங்களை வெளியிடாமல் உதவி ஆசிரியர்களே பக்கங்களை நிரப்புவார்கள்.அவர்கள் செய்யும் ஒரு 'டிரிக்' என்னவெனில் ஒருவரே 10 புனைப் பெயர்களில் எழுதுவார்.அது போல நானும்
    பல்வேறு பெயர்களில் எழுதியிருந்தால் இந்த எண்ணம் வந்திருக்காது.

    நான் என் வாழ்க்கை அனுபவஙளை எழுதத் துவங்கிய பின்னர் இளைஞர்கள் பலரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த செயல்களை எழுதியுள்ளனர்.நான் ஒரு முன்னோடியாகத்தான் இருக்க விரும்பினேன்.

    பல பின்னூட்டங்களில் வாசகர்களுக்குச் சலிப்புத்தனமை ஏற்பட்டு விடப் போகிற்து என்ற அச்சத்தை நான் வெளிப்படையாகவே சொல்லியுள்ளேன்.
    ஐயாவிடம் ஒருசமயம் ஒரேநாளில் என்னுடைய 2 ஆக்கங்களை வெளியிட்டதற்கு 'ஓரவஞ்சனை' என்று சொல்லி விடப் போகிறார்கள் என்று கூடப் பின்னூட்டம் இட்டுள்ளேன்.

    இன்றைய தேதியில் வாத்தியார் புத்த‌க வெளீயீட்டில் மும்முரமாக உள்ளார்.மேலும் வலைதளம் ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வகுப்பறயில் நாம் எழுத வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். அதைப் பயன்படுத்தி நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லலாம். இளைஞர் படை உண்மையில் தமிழ்ச்சேவை செய்ய விருப்பம் இருப்பின், வாரம் ஒரு ஆக்கத்தைத் தர வேண்டும்.10 நல்ல சுவையான ஆக்கங்கள் ஆசிரியர் முன்னால் இருந்தால் யாரும் சொல்லாமலே என் ஆக்கங்கள் பின்னடைவு அடையும். ஆலை இல்லாவூருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்ற வகையில்தான் என் செய்தி ஓடிக் கொண்டு இருக்கிறது.

    நானும் பல வலைதளங்களுக்குப் போய் பார்க்கிறேன்.சினிமா, செக்ஸ், அரசியல், சாதிக் காழ்ப்புக்கள் என்று பல அரிய 'உபயோகமான' செய்திகள் மலிந்து கிடக்கின்றன.டிஸ்கி, புஸ்கி என்று ஏதேதோ சொல்கிறார்கள்.அதையெல்லாம் ரசிக்க நானும் 1980களில் பிறந்து இருக்க வேண்டும்.நானோ 1949லேயே பிறந்து விட்டேனே! யயாதியைப் போல மகனிடம் இளமையை வாங்கிக்கொள்ளும் வரம் சுக்கிராச்சாரியாரைப்போல யாரும் எனக்கு அளிக்கவில்லையே.

    இதையெல்லாம் மீறி வெளியில் சொல்ல முடியாத ஒரு காரணமும் உண்டு.அதை நான் உணர்கிறேன்.வார்த்தையில் சொல்ல முடியாது.சொல்லவும் கூடாது.

    ஒரு நல்ல ஊடகத்தை வெறும் 'டைம் பாஸ்' என்று மட்டும் எண்ணும் மனோபாவம் மாற அந்த சுவாமிநாதன் தான் அருள் புரிய‌ வேண்டும்.

    கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.வெளிப்படையாகக்கூறிய உஙகள் பண்புக்கு நன்றி!

    ReplyDelete
  43. கிருஷ்ணன் சார், உங்கள் இருவருக்கும் எங்களது திருமண நாள் வாழ்த்துக்களும் வணக்கமும்.
    அருமையான நினைவுகளுடன் வந்த ஆக்கம்... எதார்த்தமாக மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்
    முருகனின் அருளால் விழைந்த அற்புத நிகழ்வு அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி.

    ReplyDelete
  44. ///அருமையான நினைவுகளுடன் வந்த ஆக்கம்... எதார்த்தமாக மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்முருகனின் அருளால் விழைந்த அற்புத நிகழ்வு அருமை.... தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி.///

    பின்னூட்டத்திற்கு நன்றி ஹாலாஸ்யம்ஜி! ஒரே ஒரு பக்திமலர் ஆக்கம் வாத்தியார் கையில் உள்ளது. அதை வெளியிட்ட பின்னர் கொஞ்சம் இடைவெளி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
    http://jeyalakshmi-anuradha.blogspot.com
    என்ற வலைப்பூ என் மனவியார் துவங்கியுள்ளார்கள். அதிலும் நான் தொடர்ந்து எழுத வாய்ப்பு உள்ளது.பார்ப்போம் ஆண்டவன் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.

    ReplyDelete
  45. 4 நாட்களாக ஊரில் இல்லை எனவே வகுப்பறைக்கு வரமுடியவில்லை .. இன்று வந்ததும் ... மிக்க மகிழ்ச்சி ..

    நமது அன்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா அவர்களின் திருமண நாள் என்று அறிந்தோம் .. மிக்க மகிழ்ச்சி ...

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல் அக்துறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

    என்னும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்தின் துணை கொண்டு மணமக்களை வாழ்த்தி வணங்கி ஆசிர்வாதம் பெறுகிறோம்.

    நன்றி ...

    ReplyDelete
  46. ///..மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல் அக்துறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே..///

    நன்றி இடைப்பாடியாரே!எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் வரிகள். நல்ல வண்ணம்
    வாழ வேண்டும் என்ற எண்ணம் முதலில் வரவேண்டும். இப்படித்தான் வாழ்வேன் என்ற உறுதி எடுக்க வேண்டும் எப்படியும் வாழலாம் என்று இருப்போரை விட்டு விலகவேண்டும்.ஒரு பெண்ணின் நல்லாள் வந்து அமைய வேண்டும். அப்போது 'விண்மட்டும் தெய்வமன்று. இந்த மண்ணும் அஃதே' என்று சொல்லிய மஹாகவியைப் போல 'இந்த மாநிலம் பயன் உற் வாழலாம்' மீண்டும் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com