மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.3.11

Short Story உண்மைக்கு ஒரே வடிவம்

=========================================================
Short Story உண்மைக்கு ஒரே வடிவம்

"இன்றைய தேதியில் என்னோட சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா?" என்று ஏகப்பசெட்டியார் கேட்கவும், அவரது மனைவி மீனாட்சி ஆச்சி சுவாரசியமேயில்லாமல் "ம்ம்..." என்று பதில் சொன்னார்கள்.

காலையில் வந்த நாளிதழை வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னார்.

"அண்ணா நகரில் வாங்கிப்போட்ட நாற்பது சென்ட்டும் எட்டு வருடத்தில் நான்கு மடங்கு உயர்ந்து விட்டது. திருநகரில் உள்ள கிரவுண்டு வீட்டுமனை முப்பது வருடங்களில் இருபது மடங்கு ஏறிவிட்டது. பத்து சென்ட் இடத்துடன் டி.வி.எஸ் நகரில் வாங்கிய வீடு பத்து மடங்கு ஏறிவிட்டது.கையில் இருக்கும் ·புளூ சிப் ஷேர்களின் இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி நான்கு கோடி ரூபாய். ஆக மொத்தம் எட்டு கோடி ரூபாய். உனக்கு வாங்கிக் கொடுத்த நூற்றைம்பது பவுன் நகைகளும், சொக்கிகுளம் பொது வீடும் நீங்கலாக இந்தப் பணம் அதைத் தெரிந்து கொள்!"

"அதைத் தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆகப்போகிறது? நாளைக்கே நான் என்ன பன்னீரிலா குளிக்கப் போகிறேன்? அதே அடுப்படியில், அதே பழைய கேஸ் அடுப்போடும், தேய்ந்து போன குக்கரோடும், ஓடாய் நானும் கிடக்க வேண்டியதுதான். ஒன்று கேட்கட்டுமா? கோபித்துக் கொள்ள மாட்டேன் என்றால் கேட்கிறேன்"

"ஆகா, தாராளமாகக் கேள்!"

"நீங்கள் செத்துப்போனால் அழுவதற்கு ஆள் இருக்கிறதா?"

செட்டியாருக்குச் சுரீர் என்றது. கடப்பாரையால் மண்டையில் அடித்தது போன்று இருந்தது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மெதுவாகக் கேட்டார்.

"ஏன் அப்படிக் கேட்கிறாய்?"

"உங்களோடு பிறந்தவர்கள் மூன்று பேர்கள். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்கள். நமக்குப் பிறந்தவள் ஒருத்தி. அவளுக்குக் கல்யாணமாகி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை, ஆக, யாருடனாவது உங்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா? இந்தப் பாழாகப் போகிற பணத்தை வைத்து அத்தனை பேர்களுடனும் சண்டை. யாருட னாவது பேச்சு வார்த்தை இருக்கிறதா? யார் வீட்டிற்காவது போய் வர முடிகிறதா?"

ஆச்சி சொல்வதில் உள்ள உண்மையை மறுத்துச் சொல்லத் திரானி இல்லாமல், வழக்கம் போல நக்கலடித்துப் பதில் சொன்னார்.

"அதான், நான் செத்துப்போனா அழுவதற்கு உன்னைக் கட்டி வைத்திருக்கிறதல்லவா?"

"சிகப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார். உங்களுக்கு முன்னாடி நான் போயிருவேனாம். அதனால்தான் கேட்டேன், அழுக ஆள் இருக்கான்னு!"

"செத்துப்போன பிறகு அழுதா என்ன அழுகாட்டீன்னா என்ன? நான் என்ன உக்கார்ந்தா பார்க்கப் போகிறேன்? நல்லா அன்போடு இருந்தவனையே எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்கள் சொல். ஊர் கூடி உரக்க அழுதிட்டு, பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிட்டு, சூரியன் காட்டிடையே கொண்டு போய்ச் சுட்டு விட்டு,  நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்ன்னு திருமூலரே சொல்லியிருக்காரு"

"மனித வாழ்க்கையைக் கொண்டாடி கோலம் போடுறவனுக்காகத் திருமூலர் சொன்னது அது. ரெம்ப ஆடாதே அதான் முடிவுங்கிறதுக்காக அவர் சொன்னது. எப்படி வாழணும் - செத்தா என்ன கூட வரும்னு பட்டினத்தார் சொல்லியிருக்காரே - அது உங்கள் கண்ணில் படலியா?"

"என்ன சொல்லியிருக்காரு பட்டினத்தார்?"

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, கைப்பற்றிய மாந்தரும் வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு மட்டே, பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே' ன்னாரு. அதைத்தான் எல்லாருக்கும் புரியும்படியா கண்ணதாசன் எளிமைப் படுத்தி எழுதினாரு. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ'ன்னு எழுதினார். பாவ, புண்ணியத்தை உங்களை மாதிரிப் பாதிப்பேர் ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் யாரோன்னு போட்டாரு. அதோடு இல்லாமல் ஏன் அப்படிப்போட்டீர்கள்ன்னு கேட்டபோது சொன்னாராம் - புரிஞ்சுக்கிறவன் புரிஞ்சிக்கட்டும், புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்னாராம்!"

"அதே கண்ணதாசன்தான் சொன்னாரு 'கையிலே காசிருந்தா கழுதைகூட அரசனடின்னாரு' கையில காசில்லைன்னா ஒருத்தன்கூட மதிக்க மாட்டான் தெரிஞ்சுக்க!"

"சட்டில வேணும்னா சின்னது பெரிசு இருக்கலாம், செட்டியில சின்னது பெரிசெல்லாம் கிடையாது செட்டியார்கள்ல யாருமே ஒருத்தரை ஒருத்தர் பணத்தை வச்செல்லாம் மதிப்புக்கொடுக்கிறதில்லே அவுகவுக பழகுகிற தன்மையை வச்சும், செய்யிற சேவையை வச்சும், பண்ணுகிற தர்மத்தை வச்சும்தான் மதிப்பே தவிர நீங்க சொல்ற பணத்தை வைத்தல்ல. இன்னைக்கும் வைநாகரம் செட்டியாரையும், அண்ணாமலை செட்டியாரையும், அழகப்ப செட்டியா ரையும், பாடுவார் முத்தப்ப செட்டியாரையும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரையும், எல்லாரும் மனசார நினைக்கிறாங்கன்னா, அதுக்கு அவர்கள் செய்த இறைப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி இதுபோல ஏதாவது ஒரு பணிதான் காரணமே தவிர, நீங்க சொல்ற பணம் காரணமல்ல - அதைத் தெரிஞ்சுகிட்டுப் பேசுங்க!"

"இப்ப என்ன பண்ணனும்கிற?"

"ஊறவுகளை யாரும் உண்டாக்க முடியாது. அத்தனை உறவுகளுமே இறைவனால் கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த உறவுகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளாவிட்டாலும், நோகவைத்து நொங்கெடுக்காமல்  இருக்கலா மில்லையா? கட்டித்தழுவும் படியாக இல்லாவிட்டாலும், உட்கார வைத்துப் பேசும்படியாவது இருக்க வேண்டாமா? ஆகவே உற்றார் உறவினர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் கடுப்பைப் போக்குங்கள் - கசப்பைப் போக்குங்கள்
- அது போதும்!"

ஆச்சியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒங்கிச் செவிட்டில் அறைவைதைப் போன்றிருந்தது. அதற்குப் பிறகு அவர் மெளனமாகி விட்டார்.

ஆனால் அதே நேரம் வேறு ஒரு இடத்தில் அவருடைய தம்பிகள் மூவரும் அவரைப் பற்றி சிலாக்கியமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதுவும் யாரிடம்? சொக்கிகுளம் ராமசாமி அண்ணனிடம்.

ராமசாமி அண்ணன் எவ்வளவு பெரிய மனிதர்? செல்வாக்கு, சொல்வாக்கு மிக்கவர் என்பதோடு பல பொது சேவைகளை முன்னின்று செய்பவர். செல்வந்தர். பிறந்த ஊரிலும், வசிக்கும் மதுரையிலும் பிரபலமானவர். அரசியல் மற்றும் சமூக செல்வாக்கு உள்ளவர். அதோடு மிக்க தர்ம சிந்தனை உள்ளவர். உதவி என்று வருபவர்களுக்கும், பாகப்பிரிவினை, பஞ்சாயத்து என்று வருபவர்களுக்கும் வேண்டியதைச் செய்து கொடுப்பார் அவர். அதனால் சென்றிருக்கலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காலை ஏழு மணிக்கே, தன் ஊரைச் சேர்ந்த தேனா ஆனா குடும்பச் சகோதரர்கள் நால்வரில், பெரியவர் - அதாவது நம் கதாநாயகர் ஏகப்ப செட்டியாரை விடுத்து, மற்ற மூன்று சகோதரர்களும் வந்து தங்களுடைய குறையைச் சொன்னபோது, ராமசாமி அண்ணன் பொறுமையாகக் கேட்க ஆரம்பித்தார்.

வந்தவர்களுடைய தந்தையார், தான் இருந்த காலத்திலேயே தன்னுடைய சொத்துக்களையெல்லாம் ஊரில் இருந்த பொது வீடு உட்பட அனைத்தையும் பங்கு வைத்துக் கொடுத்து விட்டார். மதுரை சொக்கி குளத்தில் தான் வசித்துவந்த பெரிய வீட்டை மட்டும் தனக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்.

அதில்தான் சிக்கல் இப்போது. நான்கு கிரவுண்ட் இடத்தில் அம்சமான வீடு. இன்றைய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்க்குப் போகும். அவர் இறந்து பத்து வருடமாகிவிட்டது.அதை விற்றுக் காசாக்குவதில் சகோதரர்களிடையே ஒற்றுமையில்லை. வீடு பூட்டிக் கிடக்கிறது.

“நீங்கள்தான் அவரோடு பேசி, அந்த வீட்டை விற்பதற்கு எங்களோடு அவரை ஒத்துழைக்கச் சொல்ல வேண்டும். இல்லை விற்கக்கூடாது என்று அவர் நினைத்தால் அவரையே அதைக் கிரயம் செய்து கொண்டு எங்களுக்குப் பணத்தைக் கொடுத்து விடச் சொல்லுங்கள். அது உங்களால்தான் முடியும்” என்று வந்தவர்களில் மூத்தவரான உலகப்பன் சொல்ல, மற்ற இருவரும் ஒத்தூதுவதைப்போல ஆமாம் என்றார்கள்.

ராமசாமி அண்ணன் புன்னகைத்துவிட்டுப் பதில் சொன்னார், “நீங்கள் உங்கள் பங்காளிகளில் ஒருவரைவைத்துப் பேசுங்கள். உடன்படாவிட்டால் நான் பேசுகிறேன். அதுதான் முறையும்கூட!”

உலகப்பன் விடுகிற மாதிரித் தெரியவில்லை, தொடர்ந்து சொன்னார், ”அவரோடு வேறு யாரும் பேச முடியாது. கோண வழக்குப் பேசுவார். எங்கள் ஆத்தாவிடம் அவர் பால் குடித்த காலத்துக் கதையில் இருந்து
ஆரம்பித்துப் பேசுவார். யாரும் உட்கார்ந்து கேட்க முடியாது.”

“பால் குடித்த கதையா? அது என்ன கதை?”

“அவர் கைப்பிள்ளையாக இருந்த காலத்தில் எங்கள் தாயாருக்கு பால் ஊறல் இல்லாததால் - எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குடியிருந்த பெண்மணி அவருக்கு ஆறுமாதம் தாய்ப்பால் கொடுத்தாளாம்!”

“அது எப்படி அவருக்குத் தெரியும்?”

“அதை மட்டுமல்ல, அதைப் போன்ற வேறு சில சம்பவங்களையும் வாய்மொழியாகக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் சொல்லி எப்போது பார்த்தாலும் இடக்காகப் பேசுவார். எங்கள் அப்பச்சி அவரை அண்ணாமலை அரசர் கல்லூரிக்கு அனுப்பிப் பொறியியல் படிக்க வைத்ததையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுவார். தான் என்னமோ சுயம்பாகப்பிறந்து வளர்ந்ததைப் போல அடாவடியாகப் பேசுவார். இப்போது அது அதிகமாகி விட்டது. அவர் ஒர வஞ்சனையாக வளர்க்கப் பெற்றாராம். அவருக்குக் குடும்பத்தில் பெரியவன் என்ற மரியாதை இல்லையாம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மதிப்பும், மரியாதையும் என்ன கேட்டு வாங்குகிற அல்லது காசு கொடுத்து வாங்குகிற கடைச் சரக்கா? தானாக அல்லவா அது வர வேண்டும்! அதனால்தான் நாங்கள் உங்கள் உதவியை நாடி வந்தோம்.”

ராமசாமி அண்ணன் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார், ”சரி பேசிப் பார்க்கிறேன்”

“இல்லை பேசி, முடித்துக் கொடுங்கள். நல்ல தகவலாகச் சொல்லுங்கள். நாங்கள் மீண்டும் வந்து பார்க்கிறோம்” என்று சொல்லி எழுந்தவர்கள், விடை பெற்றுக் கொண்டு திரும்பிச்சென்று விட்டார்கள்,

அதிசயத்தக்க சம்பவம் ஒன்று மூன்று நாட்களில் நிகழவிருப்பதை எதிர்பார்க்காதவர்களாய்!

+++++++++++++++++++++++++++++++++++++++++

மதுரை வெய்யிலோடு போராடியதில் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. மூன்றம் நாள் மாலை ஆறு மணி அளவில் ராமசாமி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் உலகப்பனும் அவருடைய தம்பிகள் முருவரும் பரபரப்பாகி விட்டதோடு, உடனே அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரைப் பார்த்தார்கள்.

அங்கே, அவர் பேசப் பேச அவர்கள் மூவரும் வியப்பின் எல்லைக்கே போய் விட்டார்கள்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்கானதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது குரங்கு பிடிக்கபோய் அது பிள்ளையாராகி விட்டதே என்றும் அதிசயத்தார்கள்.

ராமசாமி அண்ணன் சொன்ன செய்தி அப்படி!

இவர்கள் வந்துவிட்டுப் போனதும், அவர் ஏகப்ப செட்டியாரை தொலைபேசியில் அழைத்து, உங்களைப் பார்க்க வேண்டும், எப்போது வரலாம் என்று கேட்க, பதிலுக்கு அவர், உங்களைப் பார்க்க எத்தனைபேர் காத்துக் கிடக்கிறார்கள் - அப்படியிருக்கும் போது நீங்கள் வரலாமா? நானே வருகிறேன் என்று சொல்லி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவரை வந்து பார்த்ததாகவும், வந்தவரிடம் இவர் வீட்டுப் பிரச்சினையைச் சுருக்கமாகச் சொல்லி சுமூகமாக  என்று கூற, உடனே அவர் பதிலுக்கு எந்தவித சர்ச்சையும் செய்யாமல் நீங்கள் சொல்கிறபடி செய்ய நான் தயாராயிருக்கிறேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், கடவுள்  புண்ணியத்தில்  நான்  நன்றாக  இருக்கிறேன். என் தம்பிகள் மூவருக்கும் வியாபாரத்தில் நஷ்டம்,கடன்கள், திருமணம் செய்து வைக்க வேண்டிய  மகள்கள் என்று பணப்பிரச்சினையிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் அந்த வீட்டை விற்று வரும் ஒரு பைசாக்கூட எனக்கு வேண்டாம். அவர்களையே எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதை உறுதிசெய்யும் விதமாக அடுத்த நாளே தன் தம்பிகள், பொது வீட்டை விற்று முழுப் பணத்தை எடுத்துக் கொள்ளும்படியாக அவர்களின் பெயருக்குப் பவர் ஆஃப் அட்டார்னி எழுதிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப்போய் விட்டதாகவும் சொல்லி அந்தப் பத்திரத்தை எடுத்து அவர்கள் கையில் கொடுக்கவும் செய்தார்.

சகோதரர்கள் மூவருக்கும் மயக்கம் வராத குறை. இதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்க வில்லை. உலகப்பன் தான் சுதாகரித்துக் கொண்டு முதலில் பேசினார். “எங்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கண்ணே!”

ராமசாமி அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,  “எனக்கும்தான். அவரைப் பற்றிய பலரது எண்ணங்களையும் அவர் தகர்த்துவிட்டார். அதைவிட ஆச்சரியம் ஒன்று இருக்கிறது. கேட்டால் அசந்து போவீர்கள். நேற்று இந்தப் பத்திரத்தைக் கொடுக்க வந்தவர், நீங்கள் ஊருக்குப் பல உபகாரம் செய்கிறீர்கள் அண்ணே. நானும் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். நம்ஊர்ப் பொதுநல நிதியில் இந்தத் தொகையைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி  ஒரு செக்கைக் கொடுத்து விட்டுப்போனார்...தொகை எவ்வளவு தெரியுமா?”

ஊகம் செய்ய முடியாத சகோதரர்கள் மூவரும் மெளனமாக இருந்தார்கள்.

அவரே தொடர்ந்து சொன்னார். “ஐம்பது லட்ச ரூபாய்!”

அதோடு விடாமல் தன் மேஜை அறையில் இருந்து அந்தச் செக்கை எடுத்து அவர்களிடம் காட்டவும் செய்தார். சகோதரர்கள் மூவரும் ஆடிப்போய் விட்டார்கள். தங்கள் மூத்த சகோதரனின் மன மாற்றத்திற்கான என்னவாக இருக்கும் என்று மின்னலாக யோசித்துப் பார்த்தபோது ஒன்றும் பிடி படவில்லை!

எப்படிப் பிடிபடும்? எல்லாம் ஆச்சி போட்ட போடுதான் என்பது யாருக்குத் தெரியும்? அல்லது யாரால் ஊகம் செய்ய முடியும்?

சுயநலமில்லாமல் ஒரு பெண் பேசும் சத்தியமான வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்! கல்லையும் கரைக்கக் கூடியது அது!

”அழுவதற்கு ஆள் இருக்கிறதா? மதிப்பெல்லாம் பணத்தைவைத்தல்ல! கடைசியில் வருவது செய்த பாவமும் புண்ணியமுமே” என்று ஆச்சி அவர்கள் போட்ட போட்டில் தான் ஏகப்ப செட்டியாரின் கல்மனமும் கரைந்தது என்றால் அது மிகையல்ல! அதுதான் உண்மை!

உண்மைக்கு ஏது மிகை?

உண்மைக்கு ஒரே வடிவம்தான் - பழநி அப்பன் கையில் இருக்கும் வேலைப் போல!

+++++++++++++++++++++++++++++++++++
ஒரு குறு இதழில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை 72 சிறுகதைகள் எழுதியுள்ளேன். இது 16.3.2008 இதழில் வெளி வந்த சிறுகதை. நீங்கள் படித்து மகிழ வேண்டும்
என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.

மகிழ்ந்தீர்களா - இல்லையா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18 comments:

  1. ஐயா,
    அருமையான கருத்தாக்கம் மிக்க நல்ல கதை. மனசை மாற்ற வைக்கும் கதை.
    வணக்கம் ஐயா.

    ReplyDelete
  2. செட்டியும் ஆச்சியும் பணப்
    பெட்டியை பத்திரமாய் பிடித்த போதும்


    உறவுகளை உற்சாகப்படுத்தி வாழும்
    திறவுகோளை வெளிக்காட்டியதருமை


    கதையில்லை இது.. வாழ்க்கையின்
    சதை என்றே சொல்லலாம்..


    எழுபதைத் தாண்டி இன்னும்
    எழுதும் உங்கள்விரல்களுக்கு கைமாறு

    என்ன செய்வதோ..
    என யோசித்தபடி

    சிந்தனைக்கு இந்த குறளினை தருகிறேன்

    இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து

    அத்துடன் எனது ஒலிப்பெட்டியில் இருந்து இந்த பாடலும்..
    பாடிக் கொண்டே இந்த பின் ஊட்டம்


    "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

    ReplyDelete
  3. ////நீங்க சொல்ற பணத்தை வைத்தல்ல. இன்னைக்கும் வைநாகரம் செட்டியாரையும், அண்ணாமலை செட்டியாரையும், அழகப்ப செட்டியா ரையும், பாடுவார் முத்தப்ப செட்டியாரையும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரையும், எல்லாரும் மனசார நினைக்கிறாங்கன்னா, அதுக்கு அவர்கள் செய்த இறைப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி இதுபோல ஏதாவது ஒரு பணிதான் காரணமே தவிர, நீங்க சொல்ற பணம் காரணமல்ல/////
    முற்றிலும் உண்மை....

    /////ராமசாமி அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார், “எனக்கும்தான். அவரைப் பற்றிய பலரது எண்ணங்களையும் அவர் தகர்த்துவிட்டார்.///
    கரும் பாறைக்குள்ளும் நீர் உண்டு அதை இடம் பார்த்து சரியாக தட்டி பொத்தலிட்டதால் பொங்கி வடிகிறது தர்ம சிந்தனை.

    ////சுயநலமில்லாமல் ஒரு பெண் பேசும் சத்தியமான வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்! கல்லையும் கரைக்கக் கூடியது அது!/////

    இப்படித் தானே சத்தியவதிகள் சாதித்தார்கள்....

    உண்மையில் அற்புத சிறுகதை நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
  4. //////Rathnavel said...
    ஐயா,
    அருமையான கருத்தாக்கம் மிக்க நல்ல கதை. மனசை மாற்ற வைக்கும் கதை.
    வணக்கம் ஐயா.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////iyer said...
    செட்டியும் ஆச்சியும் பணப்பெட்டியை பத்திரமாய் பிடித்த போதும்
    உறவுகளை உற்சாகப்படுத்தி வாழும் திறவுகோளை வெளிக்காட்டியதருமை
    கதையில்லை இது.. வாழ்க்கையின் சதை என்றே சொல்லலாம்..
    எழுபதைத் தாண்டி இன்னும் எழுதும் உங்கள்விரல்களுக்கு கைமாறு/////////

    என் வயதை அநியாயத்திற்குக் குறைத்துச் சொல்கிறீரே? நூறைத்தாண்டி இரண்டு வருடம் ஆகிறது விசுவநாத சுவாமி:-))))))

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ////நீங்க சொல்ற பணத்தை வைத்தல்ல. இன்னைக்கும் வைநாகரம் செட்டியாரையும், அண்ணாமலை செட்டியாரையும், அழகப்ப செட்டியா ரையும், பாடுவார் முத்தப்ப செட்டியாரையும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரையும், எல்லாரும் மனசார நினைக்கிறாங்கன்னா, அதுக்கு அவர்கள் செய்த இறைப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி இதுபோல ஏதாவது ஒரு பணிதான் காரணமே தவிர, நீங்க சொல்ற பணம் காரணமல்ல/////
    முற்றிலும் உண்மை....
    /////ராமசாமி அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார், “எனக்கும்தான். அவரைப் பற்றிய பலரது எண்ணங்களையும் அவர் தகர்த்துவிட்டார்.///
    கரும் பாறைக்குள்ளும் நீர் உண்டு அதை இடம் பார்த்து சரியாக தட்டி பொத்தலிட்டதால் பொங்கி வடிகிறது தர்ம சிந்தனை.
    ////சுயநலமில்லாமல் ஒரு பெண் பேசும் சத்தியமான வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்! கல்லையும் கரைக்கக் கூடியது அது!/////
    இப்படித் தானே சத்தியவதிகள் சாதித்தார்கள்....
    உண்மையில் அற்புத சிறுகதை நன்றி ஆசிரியரே.//////

    உள்ளம் நெகிழ்ந்து வெளிப்பட்டுள்ள உங்களின் விமர்சன வரிகளுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. சத்தியமாய் மகிழ்ந்தோம் ஐயா ..

    செல்வத்தின் பயனே ஈதல் தான் என்பதை இந்த கதை அற்புதமாக காட்டுகிறது ,,,


    உண்மைக்கு ஏது மிகை?

    உண்மைக்கு ஒரே வடிவம்தான் -
    பழநி அப்பன் கையில் இருக்கும் வேலைப் போல!

    ஆம் ஐயா ...
    ஆழ்ந்து அகன்று நுண்ணிய வேலாய்
    இருப்பது உண்மை மட்டுமே ..

    ReplyDelete
  8. ///என் வயதை அநியாயத்திற்குக் குறைத்துச் சொல்கிறீரே?///


    ///இதுவரை 72 சிறுகதைகள் எழுதியுள்ளேன்.///

    மன்னிக்க..

    சொன்னது வயதை அல்ல..
    சொல்லால் வடித்த சிறுகதையினை..

    எண்ணிக்கையில்லை வாழ்த்துக்கள்
    எண்ணங்களில் என்பது தெரியும் தானே

    நாரால்முடிந்த பின்னரும் மாலையில்
    நமக்காக சிரிக்கும் மலர்போல - இந்த

    காலையில் அமைதி கொள்கிறேன்
    காலமேஎதற்கும்சிறந்தமருந்தேன்பதால்

    ReplyDelete
  9. அருமை அய்யா..

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    ReplyDelete
  10. காய்ந்து உலர்ந்து போன மனத்தையும், கருணை எனும் நீர் வார்த்து, நியாய அ நியாயங்களை உணர்த்தி, மனிதனுக்குத் தேவை உறவுகளும், உணர்வுகளும் மட்டுமே என்றும் செல்வம் மட்டுமல்ல, அது போகும் வழிக்கு உதவாது, இறந்த பின் கூட இருந்தவர் சொல்லும் நல்ல சொற்களே நாம் செல்லும் பாதையில் ஒளிவிளக்காகத் திகழும் என்பதை அந்த ஆச்சி சொன்னதாகத் தாங்கள் எழுதியிருப்பது உலகோர் அனைவருக்கும் நல்ல பாடம். எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறார்கள். நமது பாரம்பரியம், நமது பண்பாடு இவையெல்லாம் இன்னமும் கிராமப் புறங்களில்தான் இருக்கின்றன. நகர வாழ்க்கை மரத்துப் போன சத்து அற்ற வாழ்க்கையாகப் போய்விட்டது. அடுத்த வீட்டு நல்லது கெட்டது கூட தெரிந்து கொள்ளாமல் தனித்த வாழ்க்கையாகப் போய்விட்டது. தங்கள் கதை சொல்வது போல நாம் இறந்த பின், ஐயோ பாவம், நல்ல மனிதன், உபகாரி, நல்ல காரியங்கள் பல செய்தவன் என்று சொல்லும் சொல்தான் போகுமிடத்தில் பயன்படும். நாம் விட்டுச் செல்கின்ற பணமோ, சொத்துக்களோ அல்ல. நல்ல கதை. நீதிகளைக் கேட்க மக்கள் விரும்ப வேண்டும். நம் பிள்ளைகளுக்கு இவற்றைப் படிக்கக் கொடுக்க வேண்டும். வாழ்க நீவிர்!

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம்
    அருமையான கதை தொகுப்பு !!! இன்றைய மக்களுக்கு தேவையானது!! . ஆனாலும் என உறவினர் இதெல்லாம் தெரியும்!! இருந்தாலும் அறுத்த கைக்கு உப்பு வைக்காத ஆள் ??அவர் அண்ணன் நல்ல வசதி மிக்கவர் இருந்தாலும் அவரது இறுதிகாலத்தில் வந்த நபர்கள்
    13....என்னையும் சேர்த்து ??? சில பேருக்கு எவ்வளுவு சொன்னாலும் புரியாது... துட்டு தான் பெரிசாக தெரியும்?? ஆசிரியர் இது போன்ற நீதி கதைகள் தொடர்ந்து வெளிட வேண்டும்...!!! நன்றி !!!

    ReplyDelete
  12. இம்மண் சொந்தம், மனை மாடி எனக்கே சொந்தம் என்றான், அவனே அவனுக்கு சொந்தமில்லாத பொழுது.. என்ற நான் முன்பு எழுதுய வரிகள் நினைவிற்கு வருகின்றது. - த.முரளி. செலந்தம்பள்ளி.

    ReplyDelete
  13. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    மிகவும் மகிழ்ந்தோம், உண்மையிலேயே மனம் நெகிழச்செய்து விட்ட
    சிறுகதை. இது போன்ற நீதிக்கதைகளை ஆரம்பப்பள்ளிகளில் பாடப்புத்தகத்தில்
    சேர்த்தால் வளரும் பிள்ளைகள் நியாயமானவர்களாகவும் பெருந்தன்மையாக‌
    வும் நடந்து கொள்வார்கள். நன்றி அய்யா.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  14. அருமையான கதை. படிக்கும்போது தொய்வில்லாமல் செல்கிறது.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா வணக்கம்.

    ReplyDelete
  16. அய்யா வணக்கம்
    பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு புரிய வைக்கும்
    மிக அருமையான கதை

    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  17. அருமையான கதை sir

    ReplyDelete
  18. ஆசிரியர் அய்யா,
    கதை மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com