மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.5.12

அம்மா சொன்ன கதை!

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 8 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன
படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++=
 1

பிடித்து வைத்தால் பிள்ளையார்
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன்.பெங்களூரு.

அல்லல் போம் வல்வினைபோம்-அன்னை
வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் நல்ல மாமதுரை
கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக்கால்.

"பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்ற சொல்வழக்குப் பிரபலமானது. விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள் கூம்பு, சாணி உருண்டை, களிமண் பிம்பம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம். பிரத்யேகமான ஆவாஹன மந்திரங்கள் இருந்தாலும், ஒரு மஞ்சள் உருண்டையைக் கூம்பாகப் பிடித்து, "இது பிள்ளையார்" என்றால் அங்கே உடனே ஆவாஹனமாகி விடுகிறார். எந்த எளிய பூஜையையும் நிவேதனத்தையும் மனமார ஏற்று அருள் செய்பவர். கோவிலிலும் கொலுவிருப்பார். ஆற்றங்கரை அரசமரத்தடியிலும்
அருள்புரிவார்.

தனக்கு மேல் நாயகன் இல்லாததால் "விநாயகர்" என்று பெயர் பெற்ற ஸ்ரீ மஹாகணபதியின் பெருமை பேசும் "காணபத்யம்" பற்றிய சில விவரங்களை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்ரீ மஹாகணபதியை நிர்க்குண நிராகார பரப்பிரம்மமாகக் கருதும் காணபத்யம், அவரே முழுமுதற்கடவுள் என்று உபதேசிக்கிறது. உலகத்தின் தோற்றமும், நிலைபெறுதலும்  விநாயகராலேயே நிகழ்கிறது. முடிவில் பிரளய காலத்தில் ஒடுங்குதலும் விநாயகரிடமே. மும்மூர்த்திகளுக்கும் மேலான நாயகராய் விநாயகரே இருந்து இவ்வுலக இயக்கத்தைச்
செயல்படுத்துகிறார். காணபத்யம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபலமாக இருக்கிறது. காணபத்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் 'காணபதர்கள்" என அழைக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகர் வடநாட்டில், சித்தி, புத்தி எனும் இரு மனைவியரோடு கூடியவராக வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ வேதவியாச மஹரிஷி அருளிச் செய்த ஸ்ரீ விநாயக புராணம், விநாயகரின் தோற்றம், அவதாரங்கள், விநாயகரின் மகிமைகள் முதலிய பல செய்திகளை விரிவாக எடுத்துரைக்கிறது.

“கணபதி" என்னும் திருநாமத்தில், 'க' என்பது ஞானத்தையும் 'ண' என்பது மோட்சத்தையும் குறிக்கும். 'பதி' என்பது ஜீவாத்மாக்களின் தலைவனாக, பரப்பிரும்ம சொரூபமாக  இருப்பதைக் குறிக்கும்.

"கணாநாம் த்வா" என்று துவங்கும் கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள‌ மந்திரமே, வேதங்கள் ஓதத் துவங்குமுன் உச்சரிக்கப்படுகிறது.

ஸ்ரீ கணபதி அதர்வ ஸீர்ஷம் என்னும் உபநிஷதம், "கணபதியே முழுமுதற்கடவுள்" என்று பற்பல ஸ்லோகங்களால் நிறுவுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் விநாயகரின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்படுகிறது. பார்க்கவ புராணமாகிய‌ விநாயக‌ புராணத்தின் படி, வக்ரதுண்ட விநாயகர், பிரளயம் முடிந்ததும்  மும்மூர்த்திகளையும் படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு ஆணையிட்டு மறைந்தருளுகிறார். பின் உலக நன்மைக்காக, மீண்டும் தோற்றமாகிறார்.

பார்வதிதேவி நீராடும் போது, மஞ்சள் பொடியைப் பிசைந்து ஒரு உருவம் செய்து ,அதற்கு உயிரூட்ட, விநாயகர் தோற்றமானார் என்பதே பொதுவாக விநாயகரின் தோற்றம் குறித்து  வழங்கப் பெறும் புராணக் கதை.

கயிலாய மலையில், மந்திர ரூபமான ஒரு மணிமண்டபத்தில், மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற இரு பிரணவங்களை  இறைவனும் இறைவியும் கருணையுடன் நோக்க, அவை ஒன்றிணைந்து பிரணவ ஸ்வரூபமான விநாயகர் தோற்றமானார் என்கிறது ஸ்ரீ விநாயக புராணம்.

வேதாந்தகன், நராந்தகன் என்னும் இரு அசுரர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காக்க, தேவர்களின் தாயான அதிதி, தன் கணவர் காஷ்யப மஹரிஷியின் ஆணைப்படி, விநாயகரை  குழந்தையாகப் பெற வேண்டித் தவமிருந்தாள். விநாயகரும், "மகோற்கடர்" என்ற பெயரில் அதிதிக்குக் குழந்தையாக அவதரித்தார்.

ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகிய மூவரும் கயிலையில் சிவபெருமானை இசையால் மகிழ்விப்பவர்கள். மகோற்கடர் சிறு வயதாயிருக்கும் போது, அவர்கள் மூவரும் கயிலைக்குச் செல்லும்  வழியில் காஷ்யப முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தனர். நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த,விநாயகர்,சிவன், பார்வதி, விஷ்ணு, ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குப் பூஜை  செய்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தனர். தியானம் முடிந்து பார்க்கும் போது, விக்கிரகங்களைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், மகோற்கடரைக் கேட்ட போது, அவர் புன்சிரிப்புடன், தன் வாயைத் திறந்து காண்பிக்க, அவர் வயிற்றுக்குள் ஈரேழு உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன பஞ்சமூர்த்திகளும்அவர் வயிற்றுக்குள் இருப்பதைப்
பார்த்து அதிசயித்து, விநாயகரே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்தனர்.

விநாயகர் யானை முகத்தவர். ஒற்றைத் தந்தம், இரு பெரும் செவிகள், மூன்று கண்கள் (விரூபாக்ஷர்), நான்கு புஜங்கள் கொண்ட ஐங்கரன் அவர். "கணேசாய நம:" என்ற ஆறு அக்ஷரங்களுக்கு உரியவர். விநாயகரின் ரூப பேதங்களில், வலம்புரி விநாயகரே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார். இதன் காரணம், விநாயகரின் முகம் ஓங்கார பிரணவ ஸ்வரூபமானது.

வலப்புறம் துதிக்கை சுழித்திருக்கும் விநாயகர் உருவத்திலேயே ஓங்கார ரூபம் கிடைக்கும். விநாயகரின் செவிகளும் தலையும் பெரிதாக இருக்கும் காரணம், நாம் மற்றவர்கள் சொல்வதைச்  செவிமடுத்துக் கேட்கும் திறனும், நமது சிந்திக்கும் திறனும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கே.
அவருடைய ஐந்து திருக்கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கும். எழுத்தாணி ஏந்திய வலக்கரம் படைத்தலையும், வரத முத்திரை தாங்கிய இடக்கரம் காத்தலையும், பாசம் ஏந்திய கரம்  மறைத்தலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், அமுதகலசம் ஏந்திய துதிக்கை பிறவாப் பெருநிலை அருளலையும் குறிக்கும். அவரது பெரிய வயிறு, உலகங்களனைத்தும்
அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. இச்சாசக்தி மற்றும் க்ரியாசக்திகளைத் தன் திருவடிகளாகக் கொண்ட ஞானசக்தியே விநாயகப் பெருமான்.

தணிகைப்புராணத்தில், 'கவிராட்சசர்' என்று அழைக்கப்படும் கச்சியப்பமுனிவர், விநாயகரின் ஐந்து கரங்களை, ‘ஒரு கை தனக்கு, ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,  இரு கைகள் நம் போன்ற அடியார்களைக் காக்க' என்று அழகுற வர்ணிக்கிறார்.

விநாயகர், நவக்கிரகங்களில் முறையே, நெற்றியில் சூரியனையும், நாபியில் சந்திரனையும், வலது தொடையில் அங்காரகனையும், வலது முழங்கைப்பகுதியில் புதனையும், வலது கையின் மேல்பகுதியில் சனீஸ்வரனையும், தலையில் குருபகவானையும், இடது முழங்கைப் பகுதியில் சுக்கிரனையும், இடது கையின் மேல் பகுதியில் ராகுவையும், இடது தொடையில்  கேதுவையும் தரித்திருக்கிறார். ஆகவே விநாயகர் வழிபாடு நவக்கிரக தோஷங்களை அகற்றும் சக்தி வாய்ந்தது என்கிறது விநாயக புராணம். மேலும், அங்காரக பகவான, கணபதியைத்  தொழுதே, கிரக பதவி பெற்று, "மங்களன்" என்ற பெயரும் பெற்றார். ஆகவே, செவ்வாய்க்கிழமை களில் வரும் சங்கடஹர சதுர்த்தி, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் பெறுகிறது.

அன்று விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்வோரது திருமணத்தடை அகலும். எதிலும் தடங்கல் என்ற நிலை மாறி வெற்றி கிட்டும்.

முருகனைப்போல், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை, திருவண்ணாமலை (செந்தூர விநாயகர்), திருக்கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்), மதுரை (முக்குறுணி விநாயகர்), திருநாரையூர் (பொல்லாப்பிள்ளையார்), விருத்தாசலம் (ஆழத்து விநாயகர்), காசி (துண்டி விநாயகர்) ஆகியவை ஆகும்.

விநாயகருக்கு விருப்பமான நிவேதனம் மோதகம். இதை முதன்முதலில் செய்து நிவேதனம் செய்தவர் வசிஷ்டரின் பத்தினி அருந்ததிதேவி. மோதகத்தில், வெளியே வெண்ணிற  மேல்மாவின் உள்ளே இனிப்பான பூரணம் நிறைந்திருப்பது போல், இவ்வுலகமனைத்திலும் பூரணனான விநாயகர் நிறைந்திருக்கிறார் என்பது தத்துவம்.

ஒரு சமயம் விநாயகர் அனலாசுரன் என்ற அசுரனை, அவனை அழிப்பதற்காக, விழுங்கிவிட்டார். அந்த வெப்பத்தைத் தணிக்க, தேவர்கள், விநாயகரின் ஆணைப்படி, அருகம்புல்லால்  அவரை அர்ச்சிக்க, அவருள் இருந்த அனலாசுரன் அழிந்து போனான். ஆகவே, அருகம்புல் அவருக்குப் பிடித்தமானதாயிற்று. மனிதர்கள் எதற்கும் பயன்படுத்தாத எருக்கம்பூவையே அவர்,  மாலையாக‌ விரும்பி ஏற்கிறார்.

ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி,  "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, 'பாலசந்திரன்' என்ற
பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். ஆனாலும், 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை உலகுக்கு உணர்த்த, விநாயக சதுர்த்தியன்று, சந்திரனைப்  பார்த்தால் தீராத அபவாதம் ஏற்படும் என்று அருளினார். அது நீங்க, சங்கடஹரசதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க வேண்டும்.

விநாயகருக்குப் பிடித்தமான இலை வன்னி இலை. இதன் பெருமையை விநாயக புராணத்தில் விநாயகரே கூறுகிறார். "வீமன் என்ற கொள்ளையனும் ஒரு ராட்சதனும் சண்டையிட்டுக் கொண்டு வரும் வேளையில், வீமன் ஒரு வன்னிமரத்தின் மேல் ஏறிவிட்டான். அவனை இறக்க, ராட்சதன் அந்த மரத்தை பலம் கொண்ட மட்டும் உலுக்க, வீமன் கிளையை இறுகப் பிடித்துக் கொண்டான். அந்தப் போராட்டத்தில், மரத்தின் கீழிருந்த என் மேல் சில வன்னி இலைகள் உதிர்ந்தன. அது வன்னி இலைகளால் என்னை அர்ச்சித்த பலனைக் கொடுக்கவே,  அவர்கள் எமலோகத்தில் அவர்கள் செய்த பாவச் செயல் களுக்கான தண்டனைக்காலம் முடிந்ததும் கருப்பஞ்சாற்றுக்கடலில் இருக்கும் என் வசிப்பிடமான ஆனந்தலோகம் வந்தடைந்தனர்"
என்று கூறுகிறார்.

விநாயகப் பெருமானுக்கு சூரிய பகவானே குரு. ஆகவே கணபதிக்குரிய பூஜைகளை காலை நேரத்தில் செய்கிறோம்.

விநாயகருக்குரிய வழிபாடுகளில் முதன்மையானது 'விநாயகசதுர்த்தி' ஆகும். பாத்ரபத (ஆவணி) மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியில் கொண்டாடப்படும் இது "ஆத்ம வைபவம்" என்று  புகழப்படுகிறது. இது நம் ஆத்மாவுக்கு நாமே செய்து கொள்ளும் ஆராதனை அதாவது நம் அனைவருள்ளும் ஆத்மஸ்வரூபமாகிய விநாயகரே உறைகிறார். மழை, வெயில், என மாறி மாறி வரும் கால கட்டத்தில் அமையும் இந்தப் பண்டிகையின் போது, மற்ற பூஜைகளிலிருந்து வேறுபட்ட வகையில், ஏக த்விம்சதி பத்ர (மூலிகைக்குணம் கொண்ட இலைகள்) பூஜை, ஏக த்விம்சதி புஷ்ப (மலர்) பூஜை, ஏக த்விம்சதி தூர்வாயுக்ம (இரண்டிரண்டு அருகம்புல்) பூஜை முதலிய பூஜைகள் கட்டாயம். "ஏக த்விம்சதி" என்றால் '21' என்று பொருள்.

மருத்துவகுணம் கொண்ட 21 வகையான மூலிகை இலைகள், மற்றும் அருகம்புல்லால் பூஜை செய்யும் போது அவற்றின் மணம் நம் நாசியில் படுவதால் இயற்கையாகவே, அந்தத்  தட்பவெப்ப நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.

ஸூமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷோ! பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

என்னும் விநாயகரின் பதினாறு நாமாவளிகளை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் தீர்க்க முடியாத துன்பமோ வருத்தமோ வாராது.

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணி லொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே
(மஹாகவி பாரதி, விநாயகர் நான்மணி மாலை).

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

அம்மா சொன்ன "கதை"
ஆக்கம்: தேமொழி

வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம்.  அம்மா பரிமாறுவார்கள்.  ஏதாவது கதை பேசியவண்ணம் சாப்பாடு நடக்கும்.  சிலசமயம் பேச்சு எங்கு அராம்பித்தது எங்கு முடிகிறது என்று தெரியாத அளவிற்கு எங்கெங்கோ சென்று எங்கேயோ முடிந்திருக்கும்.  வழக்கமாக அப்பாவிற்கு விரைவில் சாப்பிட்டு முடித்துவிடும் பழக்கம் (அம்மா அதை விவரிப்பது, "சாப்பாட்ட அள்ளி வீசிட்டு போறாங்க").  கையில் கிடைக்கும் அந்த வாரம் வெளிவந்த வார இதழ்களில், குமுதமோ ஆனந்த விகடனோ ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குப் போய் விடுவார்கள்.

அங்கு சென்றவுடன் பத்திரிக்கையில் வந்த தலையங்கத்தைப் படித்துக்கொண்டு வானொலி கேட்பார்கள்.  யாராவது ஒருவர் தனனா...தனனா...தன... தன ..னானனா....ஆ...ஆ...னானா... என்று பத்து நிமிடத்திற்கு தனனா...தனனா...தன... மட்டுமே பாடிக்கொண்டிருப்பார்.  ஒருவழியாக அவர் முடித்ததும் வயலின்காரர் வந்து அவர் பாடிய தனனா...தனனா...தனவையே மீண்டும் வயலினில் வாசிப்பார்.  இப்படியே ஒரு பாட்டை அரைமணி நேரம் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றிப் பாடியும் வாசித்தும் கொள்(ல்)வார்கள்.  எங்களுக்கு அறுவை தாங்காது.

அப்பா படுக்கை அறைக்குக் கிளம்பியதும் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.  சாப்பாட்டு மேஜைக்கு அருகில் மற்றொரு சிறிய மேஜை இருக்கும். அதில் தோசைப்பொடி, சர்க்கரை, ஊறுகாய் போன்றவை இருக்கும்.  அதில்நாங்கள்  ஒரு சிறிய ட்ரான்சிஸ்டரை வைத்து தேன்கிண்ணம் கேட்டவாறு பேசியபடியே இன்னமும் அரைமணி நேரம் தொடர்ந்து கொறித்துக் கொண்டிருப்போம்.  இந்த நேரங்கள் வாழ்க்கையில் மிகவும் இனிமையான, அருமையான   நேரங்கள் என்பது அப்பொழுது எங்களுக்குத் தெரியாது.  அம்மா ஏதாவது ஒரு  கதை, வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சமீபத்தில் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது  தங்கை இதைப் பற்றி சொன்னது .."அம்மா சொன்னெதெல்லாம் கதையில்லை...அவை வாழ்க்கைப் பாடங்கள்".

நான் சொல்லும் காலம் சென்னையைத் தவிர தொலைக்காட்சி என்னும் நோய் தமிழகத்தில் மற்ற ஊர்களுக்குப் பரவி இன்னமும் மக்களை  பாதித்திருக்காத நேரம்.  மற்ற ஊர்களில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்களும்  வீடியோ டெக் வாங்கி அதில் ஏதாவது ஒரு கேசட்டை   வாடகைக்கு எடுத்து போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த காலம்.  பிள்ளைகள்  யாருக்காவது முக்கிய தேர்வுகள் நடக்கும் ஆண்டு என்றால் படிப்பைக் காரணம் காட்டி இந்த தொல்லையே வேண்டாம் என்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்காமல் தவிர்த்துவிட்ட வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று.  டேப் ரெகார்டரில் பாட்டு போட்டுக் கேட்பதைவிட வானொலியே வசதியானது என்று கருதி வானொலியே  நடைமுறை வாழ்க்கையில் கோலோச்சிக் கொண்டிருந்தது.

அன்று தேன்கிண்ணத்தில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சி.  கேள்வி பதில் நேரம் போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.  அறிவிப்பாளர் நேயர்களிடம் மூன்று பாடல்களை ஒலிபரப்பப் போவதாகவும், அந்த மூன்று பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை நேயர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சொன்னார்.  விடை தெரியாவிட்டாலும் பரவாயில்லை, பாடல்களை விளம்பரங்களுக்கிடையே ஒலி பரப்பிய பின்பு "என்ன கண்டு பிடித்துவிட்டீர்களா நேயர்களே?" என்று ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலையும் அவரே சொல்லி விடுவார்.  இப்பொழுது போல விடை சொல்ல நிலையத்தை தொலைபேசியில் அழைப்பது, குறுஞ்செய்தி அனுப்பி குலுக்கல் போட்டியில் கலந்து கொள்வது போன்ற கலாச்சாராம் இல்லாத நேரம்.

முதல் பாடலாக கர்ணன் படத்தில் இருந்து "இரவும் நிலவும் வளரட்டுமே" ஒளிபரப்பானது.  நாங்களும் உணவு, அரட்டை இவைகளுக்கிடையில் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  இது போன்று பாடல்கள் ஒலிக்கும் பொழுது அம்மா அதனுடன் சம்பந்தப் பட்ட செய்தி ஏதாவது நினைவிற்கு வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.  அப்பொழுதெல்லாம் பாடல்களை வானொலியில் கேட்க வேண்டும். இல்லை படத்தில் பார்த்திருக்க வேண்டும். இவை இரண்டும்தான் அப்பொழுது இருந்த நிலைமை.  அதனால் படம் பார்க்காதவர்கள் பாடல் காட்சியைப் பற்றி நாமே ஒரு கற்பனையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும் பழைய பாடல்களின் கதி இதுதான்.

இது போல நான் கற்பனை செய்து வைத்திருந்த சில பாடல்களை முதன் முதலில் திரையில் பார்த்த பின்பு அது என் கற்பனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஏமாற்றம் தந்ததும் உண்டு.  அது போல ஏமாற்றம் தந்த பாடல்களில் ஒன்று "கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி" என்ற பாடல்.  சில சமயம் ஒரு சில பாடல்களின் வரிகளைக் கேட்டபின்பு அம்மாவிடம் அது பற்றி மேலும் விசாரித்து தெரிந்து கொள்வதும் உண்டு.  "வளர்ந்த கலை மறந்து விட்டாள்" போன்ற கதையைப் பின்னணியாக உள்ள பாடல்கள் இது போன்று ஆர்வத்தை வளர்த்து அம்மாவை நச்சரிக்க வைக்கும்.

கர்ணன் படப்பாடல் முடிந்து "பாலும் பழமும்" படத்தில் இருந்து "தென்றல் வரும்" என்ற பாடல் ஆரம்பமானது (பாடலைப் பற்றித் தெரியாதவர்களுக்காக பாடலின் வரிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது).  உடனே அம்மாவிற்கு அதைப்பற்றி ஒரு செய்தி நினைவுக்கு வர எங்களுக்கு அந்தப் பாடல் காட்சியை விவரித்து சொல்ல ஆரம்பித்தார்கள். அந்தப் பாடல் காட்சியின் விளக்கம் இதுதான்.  கதாநாயகிக்கு அடுத்த நாள் திருமணம்.  முதல் நாள் இரவு பால்கனியில் விடிந்தால் வரப் போகும் திருமண நாளை நினைத்து மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருக்கிறாள்.

உடனே என் கற்பனையும் விரிந்தது.  கனவு போன்ற கருப்புவெள்ளை படக் காட்சி, இரவு நேரம், முழு நிலவு, மொட்டை மாடி, சிலு சிலு வென்று வீசும் காற்றில் கதாநாயகியின் புடவை பட பட எனத் துடிக்கிறது. தென்னங் கீற்று ஒன்றனைப் பிடித்துக் கொண்டு புன்னகையுடன் பாடுகிறாள் கதாநாயகி.  பின்பு அங்கிருந்து ஓடி மலர்க்கொடி  ஒன்று படர்ந்திருந்த தூணைப் பிடித்துக் கொண்டு பாடுகிறாள், பிறகு அங்கிருக்கும் ஒரு ஊஞ்சலில் ஆடியவாறு பாடுகிறாள்....

அம்மா கதையைத் தொடர்ந்தார்கள்.  கதாநாயகி பாடி முடித்ததும், இருட்டில் ஒரு உருவம், முகத்தைக் கைக்குட்டை போன்ற துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு பால்கனியின் கைப்பிடி சுவர் ஏறிக் குதிக்கிறது.  கத்தியுடன் கதாநாயகியின் அறைக்குள் நுழைகிறது.  அந்த உருவத்தைப் பார்த்து கதாநாயகி வீரிட்டு அலறுகிறாள்.  இதை சொல்லி முடித்து விட்டு, சாப்பிட்டு முடித்திருந்த அம்மா மேஜையை விட்டு சாப்பிட்ட தட்டு, கரண்டி முதலியவற்றை சேகரித்துக் கொண்டு சமையலறைக்கு கிளம்பினார்கள்.  இப்படி உச்ச கட்டத்தில் அம்மா நடையைக் கட்டவும், நாங்கள் ஆர்வம் மேலிட அம்மாவிடம்  "பிறகு என்ன ஆச்சும்மா?" என்றோம்.  அம்மா விட்டேத்தியாய், "அது யாருக்கு நினைவிருக்கு. சின்ன வயசுல பார்த்த படம்.  ரொம்ப நாள் ஆச்சா மறந்து போச்சு" அசட்டையாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

நொந்து போன நாங்களும் வேறு வழி இல்லாததால், அரட்டையைத் தொடர்ந்தோம்.  அறிவிப்பாளர் இதற்குள் வேறு ஏதோ ஒரு பாடலை மூன்றாவதாக ஒலி பரப்பி முடித்துவிட்டு, என்ன நேயர்களே பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கண்டு பிடிக்க முடிந்ததா?  என்று கேட்டார்.  நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.  எல்லா பாடலும் சுசீலா பாடிய பாடல்களாக  இருக்குமோ? சிவாஜி நடித்த பட பாடல்களாக இருக்குமோ? யார் இசை அமைத்தது, யார் இயற்றியது? போன்ற கேள்விகள் மனதில் ஓடியது.

அறிவிப்பாளர் தொடர்ந்தார்.  ஒலிபரப்பிய இந்த மூன்று பாடல்களுமே படத்தில் இடம் பெறாத பாடல்கள் என்பது உங்கள் விடையாக இருந்தால் உங்கள் விடை சரியான விடை.

சமீபத்தில் அறிந்துகொண்ட மேலதிகத் தகவல்:  பாலும் பழமும் படத்தின் கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி அவர்கள் அந்தப் படத்தின் மற்றொரு நாயகியான சவுகார் ஜானகிக்கு இந்தப் பாடல் காட்சி கொடுக்கப் பட்டதை கேள்விப்பட்டு கோபம் கொண்டதால் திரையிடுவதற்கு முன் சவுகார் ஜானகி நடித்த இந்தப் பாடல் காட்சி படத்திலிருந்து நீக்கப் பட்டதாம்.

*********************************************
தாய்க்குலம் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
 ********************************************
தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் சேலை வரும்
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்
(தென்றல்)

கண்ணழகும் பெண்ணழகும்
முன்னழகும் பின்னழகும்
காதல் வார்த்தை பழகும் - அதைக்
கண்டிருக்கும் பெண்டிருக்கும்
வண்டிருக்கும் மங்கையர்க்கும்
உள்ளம் தானே மலரும்
எண்ணம் தொடரும்  இன்பம் வளரும் - அங்கு
திரு நாள் கோலம் திகழும்..
ஆ..ஆ...ஆ..ஓ...ஓ...ஓ...
(தென்றல்)

பட்டிருக்கும் பெண்ணுடலைத்
தொட்டிருக்கும் பொட்டிருக்கும்
பந்தலில் கூட்டம் திரளும்  - கோலம்
இட்டிருக்கும் மேடைதன்னில்
விட்டிருக்கும் பெண் கழுத்தில்
மாப்பிள்ளை கைகள் தவழும்
மலர் குவியும் மனம் நிறையும் - அங்கு
மங்கல தீபம் திகழும்
ஆ..ஆ...ஆ..ஓ...ஓ...ஓ...
(தென்றல்)

படம் : பாலும் பழமும்
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3


பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொள்ளூமடா!
ஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி

பாதி மனதில் தெயவமும், மீதி மனதில் மிருகமும் இருப்பவன் தான் மனிதன்.

மனிதன் முற்றிலும் பிறர் நலம் பேணும் பெற்றியான் என்பதும் சரியல்ல.அது போலவே முற்றிலும் சுயநல‌வாதி  என்பதும் சரியல்ல.பொது நலமும், சுய நலமும் கலந்த மன இயல்பு  கொண்டவனே மனிதன்.

மனிதன் எப்போது சுய நலமாக நடந்து கொள்கிறான், எப்போது பொது நலம் பேணுகிறான் என்பதை யாராலும் கணித்துச் சொல்ல முடியாது.

சொல்லப் போனால் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஒரு செயலே சிறிது காலத்திற்குப் பின்னர் பொது நலமாக மாறிப் போவதும் உண்டு.

பொது நலம் என்று சொல்லித் துவங்கிவிட்டு, சுய லாபம் அடையும் மனப் போக்கும் உண்டு.

மனிதன் ஒரு கூட்டமாக இருக்கும் போது சரியான தலைமைப் பண்புடன் கூடிய தலைவன் அல்லது அதிகாரி  இல்லாவிடில் சுய நலத்தின் உச்சத்திற்கே போய்விடுவான்.

கூட்டத்தில் ஒவ்வொருவனும் முண்டியடித்து தன்  பங்குக்காகாக/ இடத்திற்காக ஆலாய்ப் பறப்பான்.

சமீபத்தில் இந்த 'மாஸ் சைகாலஜி',கூட்ட மனவியல், வெளிப்பட்ட ஒரு சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒரு வயதான பாட்டியம்மாவும், அவருடைய மகளும், பேரனும் கேரளா செல்ல ரயில் ஏற வேண்டும். முன் பதிவு செய்யவில்லை.முன் பதிவு இல்லாத பெட்டியில் ஏறுவதற்குக் காத்து  இருந்திருக்கிறார்கள். அங்கே வலுவுள்ளவன் வெற்றி பெறலாம் என்பதுதான் சூழல். காட்டு நீதி. 'சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்', தகுதியுள்ளதற்கே இடம்!

பெட்டிகள் வந்தவுடன் பெண் குதித்து ஏறி இடம் பிடிக்க வண்டிக்குள் சென்று விட்டாள். பாட்டியும் பேரனும் வெளியில் தங்கி விட்டார்கள்.பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு வண்டியேற  பாட்டி முயற்சித்த போது வண்டிக்கும் நடைமேடைக்கும் இடையில்  இருக்கும் இடைவெளியில் எக்குத்தப்பாக விழுந்து விட்டாள். நல்ல வேளையாகப் பேரன் பாட்டியுடன் விழவில்லை.

பாட்டியின் கழுத்து வண்டியின் படிக்கட்டில் இருந்துள்ளது. தள்ளு முள்ளுக் கூட்டம்  பாட்டியின் கழுத்தை மிதித்துக் கொண்டே வண்டியேறி உள்ளது. என்னவாயிருக்கும் என்று சொல்லவும்  வேண்டுமா? பாட்டி 'ஸ்பாட் அவுட்'.

அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்கைக் கொண்டு வர அவர்களுக் குள்ளேயே ஒருவர் இல்லை. அல்லது அதிகாரம் செலுத்தக்கூடிய காவல்துறையும் அங்கு இல்லை. விளைவு  விபரீதமானது.

வண்டியில் இடம் பிடித்த பின்னர் பாட்டியின் கழுத்தை மிதித்துக்கொண்டு வண்டியேறிய ஒவ்வொரு தனிமனிதனும் வருத்தப்பட்டிருப்பான்.பரிதாபமாக 'உச்' கொட்டியிருப்பான். அதனால் என்ன பயன்? ஒரு நல்ல ஆத்மா கூட அவர்களில் இல்லையே! அந்தக் கொலை பாதகத்தை நிறுத்த யாருக்கும் தோன்றவில்லையே!

வனத்துறைக் காவலர் ஒருவர். அடுத்த ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறவ‌ர்.அவருக்கு ஒரு மகன். பத்தாவது தேர்ச்சி பெறாதவன்.அவனுக்கு வயதாகிவிட்டது. ஆனால் தகுதியின்மையால் வேலை கிடைக்கவில்லை.

அப்போது யாரோ போகிற போக்கில் " உன் அப்பா இறந்தால் உனக்கு அரசாங்க வேலை வாரிசு என்ற முறையில் கிடைக்கும்" என்று கூறிவிட்டார்கள்.அந்த விஷ வாக்கியம் பேயாக மகனைப் பிடித்துக் கொண்டது.அப்பனின் சாவுக்கு மகனே காரணமானான்.ஆம்! காத்திருந்து அப்பனைக் கொன்று போட்டான் மகன்! சுய நலத்தின் எல்லை இதுவல்லவா? இதை விடக் குரூரம் ஒன்று உண்டா?

பல்லாண்டுகளுக்கு முன்னர்  செய்தித்தாளில் படித்தது நினைவுக்கு வருகிறது.

ரிஷிகேஷில் கங்கையைக் கடக்கப் பரிசில் அல்லது 25 பேர் பயணம் செய்யக் கூடிய சிறிய படகுகள் உண்டு.நதியில் எண்ணிலடங்கா முத‌லைகளும் உண்டு.

படகு முழுமையும் ஆட்களை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. அந்தப் படகில் ஒரு பெண் குழந்தையும், தந்தையும் பயணம் செய்கிறார்கள். குழந்தைக்குக் காதில் தங்க நகை  அணிவித்து இருந்தது.

குழந்தை விளையாட்டாக தண்ணீரைக் கைகளால் அளைந்து கொண்டே வருகிறது. படகுக்காரன் கையை உள்ளே வைக்கச் சொல்லியும், மீண்டும் மீண்டும் அதே போல தண்ணீரில் விளையாடிக்கொண்டே வருகிறது குழந்தை.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.குழந்தையின் கையை 'லபக்' என்று ஒரு முதலை கவ்வி விட்டது. குழந்தையை தண்ணீருக்குள் முதலை இழுக்கிறது. தகப்பன் குழந்தையை  படகுக்குள் இழுக்கிறான்.படகு ஆட்டம் காண்கிறது. பயணிகள் படகு கவிழ்ந்துவிடுமோ என்று அலறுகிறார்கள்.

"குழந்தையை விட்டு விடு. படகு கவிழ்ந்தால் அனைவரும் பல முதலைகளிடம் சிக்கிக் கொள்வோம்" என்று படகுக்காரனும், மொத்தப் பயணிகளும் கத்துகிறார்கள்.

தகப்பனும் குழந்தையை விடத் தயார் ஆனான். அதற்கு முன்னர் அவன் செய்த ஒரு செயல் தான் அதிர்ச்சி அளிக்கிறது.ஆம்! தன் ஜிப்பா பையில் இருந்து ஒரு பேனா கத்தியை எடுத்து

குழந்தையின் காதுகளை நறுக்கி எடுத்துக் கொண்டான். காதில் போட்டு இருந்த தங்கக் கம்மலைக் காப்பாற்றிவிட்டான்! குழந்தையை முதலைக்கு உணவாக விட்டுவிட்டான்.

பலருடைய உயிரைக் காப்பதற்காகத் தன் குழந்தையைத் தியாகம் செய்த அவன் தியாகிதான்.அதே நேரத்தில் அந்த இக்கட்டான சூழலிலும், உல‌காயத வாதியாக மாறித் தங்கத்தை  மீட்டதில், அதற்காகக் குழந்தையின் காதை அறுத்ததில், அவன் கடைந்தெடுத்த சுய நலவாதியாகிறான். அவனுள் இருந்த‌து இறைவனா,பிசாசா?

இப்படி எதிர் மறை ஒருபக்கம் என்றால் நல்லவைகளும் ஒரு பக்கம்.

சமீபத்தில் ஆட்டோவில் விட்டுச்சென்ற ஒன்றரை லட்சம் ரூபாயை காவல்துறையில் ஒப்படைத்து, இழந்தவரைக் கண்டுபிடித்து மீட்டுக்கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்;

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கரை சேர்த்த சிறுவன்;

கரடியிடம் சிக்கிய சிறுவனைத் தன் உயிரைத் திரண‌மாக மதித்துக் காபாற்றிய ஆதிவாசிப்பெண்; இப்படிப் பலதும் உண்டு.

இப்போது சொல்லுங்கள் மனிதன் நல்லவனா, கெட்டவனா?

எல்லாம் இடம், பொருள், ஏவல், காலத்தைப் பொறுத்தது.

மனிதன் நல்லவன்தான். பொல்லாதவனும்தான். ஒரே மனிதனுக்குள் இரண்டும் உண்டு.

பார்வதி அம்மை நல்லதை மேம்படுத்த ஆன்மீகத்தை வழியாகச்சொல்கிறார்.
மைனர் அதற்கே வேறு பாதையைச் சொல்லலாம்.ஆனால் இருவருடைய‌ நோக்கமும் என்னவோ மானுடம் வெல்ல வேண்டும் என்பதே!
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

ஆறுபடை வீடு கொண்ட அழகன்
ஆக்கம்: கவிஞர் ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்

மாணவர் மலருக்காக எனது ஆறுபடைகொண்ட அழகனின், தமிழமுதனின், ஞானக் கடலின் படை வீட்டு வரலாற்றை சுருக்கமாக கவிதையில் படைத்துள்ளேன்.

இந்த கவிதைகள் நமது சகோதரி தேமொழியின் விருப்பத்தால் விளைந்ததால் அவர்களின் மூலமாக இப்பாடல்களை தந்து அப்பன் முருகனின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்.

ஆவினன்குடி வந்து நின்ற தமிழ் அழகா!
பாவி என்வினை யறுப்பாய் பால முருகா!
காவி உடுத்தியும், பால் காவடி தூக்கியும்
ஆவி ஒடுங்க உன் சேவடி பணிந்தோம்;
தேவி குமரா! தேடியே வந்தோம் நாதா!

நாரதன் கொணர்ந்த ஞானப் பழம் வேண்டி;
நீரதன் பொருட்டே பாரதை வலம் வந்தே;
தீரனாய் வந்தி றங்கிய போதிலே - உந்தன்
(சோ)தரன் கணபதி ஞானப் பழமதை; கண
நேரத்தில் சுலபமாய் பெற்றக் காரணக் கோபத்தில்;
தரணிவந்தே தனிநாடு படைத்த, தமிழமுதே!

பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே!

சூரனை அழிக்க வீரனாய்வந்தே - கெட்டப்
போரினை துவங்குமுன் கொட்டம்போடும் - அசுரகுல
வேரினை அடியோடு அறுக்குமுன் - நற்
காரியமொன்றை செய்தாய்; சமாதானம் பேசக்
கூறியே வீரபாகுவை அனுப்பினாய் - கொடும் பாவி
சூரனும் பணியாது உனைத் துணியவே -வெற்றி
வீரனே! ஆதிசக்திவேலதைப் பெற்றே; ஷண்முகா!
அரக்கனைப் பிளந்தே தேவராருயிர் ஆனாயே!

திருசெந்தில் வேலனாய் வில்லேந்திய வீரனாய்
திருச்சீர் அலைவாய் நின்றருளும் வெற்றிவேலா!
திருதேசிக மூர்த்தி போற்றிய தேவாதி தேவா!
திருநீற்றுமுடியை பணமுடியாக்கி அதிசயத்
திருவிளையாடல் புரிந்த செல்வக்குமரனே! செந்திலாண்டவனே!!
திருவே! தெற்கே அமர்ந்து அருளும் ஞானகுருவே!!

தணிகை மலைவாழும் முருகா; தவமுனிவர்
பணிந்து போற்றும் திருமால் மருகா - ஜெகப்
பிணியானஅசுரப்  பத்மனை அடியோடழித்து -செறு
தணிக்க சீர்படையுடன் வந்தமர்ந்த இடத்திலே;
முனியவர் நாரதர் முனைப்பிலே; விளைந்தக்காதல்-
இனிய நினைப்பிலே; வள்ளிமரத்தடியே வந்துதித்த நனிச்சிறந்த
புனிதவதி நம்பிராஜன் வளர்த்த அமிர்த வல்லிபால்!
கனிந்தக் காதலால், குஞ்சரப்பாதம் பணிந்தே கண்ணியால்
ந(ண்)ணி,  அன்னைக்குற வள்ளியவள் இதயம்புகுந்தே;
அணிசீர் இச்சாசக்தியின் கரம்பிடித்த ஞானசக்தியே!

மாலும் மருகனும் குடிகொண்டச் சோலை;
வேலும் மயிலும் வந்து விளையாடும் காலை
பாலும் பாகும் பருப்பும் தெளிதேனும் தந்தே
வேழமுகத் தானிடம் முத்தமிழ் வேண்டிப் பெற்ற!
ஞாலம் முழுவதும் தமிழ்கவிபாடி நாதனைப் பணிந்து!
தாளாவெயிலில் தாகத்தோடு வந்தமர்ந்த கவியூற்றை;
வேலனென காட்டாது; நாவற் மரம்மீது நின்றே;
பழம்வேண்டுமா? பாட்டியுனக்கு சுட்டப்பழம் வேண்டுமா - யென
பழந்தமிழ் அரசியைப் பாங்குடனேகேட்டு பரவசப் படுத்திய
பாலகனே! அறிவிலுயர்ந்த தமிழ் புரட்சித்தலைவி, ஒளவை
ஆழ அகந்தை போக்கியே ஆயிரம்பா பாடசெய்த;
கோளம் வலம்வந்து கோபமுடன் அமர்ந்தக் குமரனே!
அழகனே! பழமுதிர்ச்சோலை உறை திருக்குமரனே!- தமிழ்ச்சங்க
தலைமைநற் கீரர்வியந்துப்போற்றி; ஆற்றுப்படுத்திய அமுதே!


சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே!
சுந்தரஅமிர்த வல்லிகளாகிய மகாவிஷ்ணு புத்திரிகள்
கந்தனை மணக்கவே கடுந்தவம்புரிந்தே; சுந்தரவல்லி
இந்திரனுக்கும், இளையாள் நம்பியின் மகளுமாகினரே;
விந்தை புரிந்த சூரசம்காரனே -அதனாலே இந்திரனும்
சிந்தைகுளிர்ந்து, நினக்குப் பரிசளிக்க விரும்பியே;
முந்தைநாளில், நீயளித்த வரம்போலே; காமதேனுவளர்த்த கன்னியமுதை
உந்தன்மாமனிடம், இந்திரன் பிரமனோடு சென்று வேண்டியதால்!
எந்தையுனை திருப்பரங் குன்றத்திலே மணந்த - நிந்தன்
சிந்தைநிறை தெய்வயானை அன்னையோடுனையும் -மனப்
பொந்தையில் வைத்தே போற்று கிறேன் - எங்கும்
நிறைப் பரம்பொருளே ஏழையெனக்கு அருள்வாயே!

அறிவே அழகே ஞான ஒளியே - நரியைப்
பரியாக்கியே தனது பெரும் அடியாரைக் காத்த;
அரியின் ஒரு பகுதியான அரனின் மகனே!
விரிகடலென பரந்து ஆழ்ந்த அறிவுத் திறலே
கரியின் மீதேறி அசுரப் படையொழித்த மாவீரனே!
வரிபுலித் தோல் உடுத்தும் நாதனை காணவந்த
அரியின் உந்தியில் உதித்த பிரம்மனை - உனைத்
தெரியாது போல் சென்ற நான்முகன; இடை
மறித்து, 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின்
செறிந்த பொருள் தனை விளக்கப் பணித்து;
தெரியாது விழித்த படைப்பாளனை  வேதப்பித்து
தெறிக்க  அவன்சிரம் கொட்டி சிறைபிடித்த செயலால்;
பரிந்து பயந்து தேவரோடு யாவரும் - ஊழிநீறு
தரித்த ஈசனிடம் முறையிடவே -ஈசன் தானும்
அறியாத மந்திரப் பொருளென, அழகாக அருமையாக
அறியாதது போல உன்னிடம் நடித்திட; அதுபொருட்டு
அறிவிக்க வேண்டினால், எனையே குருவாய்; இங்கே
தெரிவித்து செவிமடிப்பீரென! ஆணையிட்டு அப்பனுக்கே பாடம்
புரிவித்த சுப்பனே! சுவாமிநாதனே! எல்லாமான என்குருவே
உரிமையோடு ஊனுருக்கிப் பணிகிறேன் என்னுயிரே – மயில்
ஏறிவந்தென்னைக் காவாய்! கந்தா!! கதிர்வேலா!!!
-ஆக்கம்: ஆலாசியம்.கோ, சிங்கப்பூர்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

வெய்யில் 
கவிதை ஆக்கம்: கவிஞர் தனுசு

(ஊரில் கடுமையான கோடை. அதை நான் சின்ன வயதில் தினத்தந்தி பத்திரிகையில் படித்த சிந்துபாத் படக் கதை யோடு சேர்த்து கவிதையாக எழுதி உள்ளேன் .இந்த படக் கதை இன்னும் வெளிவந்துக் கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்)

உள்ளதை
உள்ளபடியே காட்டும்
மந்திரவாதி மூசாவின்
மாயக் கண்ணாடியே
எனக்கோர்
அலாவுதீனின் அற்புதவிளக்கு வேண்டும்
எங்கே இருக்கு காட்டு.

எனக்கு பொன் வேண்டாம்.
பொருள் வெண்டாம்.
ஆள் வேண்டாம்.
அடிமை வேண்டாம்-அந்த
அலிபாபா குகையும் வேண்டாம்                                                                   
விளக்கை மட்டும் காட்டிக்கொடு -அதைக்கொண்டு ,
எரிக்கும் கோடையை அனைக்க விடு!

சூட்டை கிளப்பி
கூட்டை குலைக்கும்
வெய்யில் விடைபெற வேண்டும்!
வியர்வை கொட்டி
வெக்கை கூட்டும்
அக்னிதனல் அடங்கிட வேண்டும்.!நான்
குளுமையில் உறைந்திட வேண்டும்.!

புழுக்கத்தில் பழுத்து
புழுபோல் அழுகிவிட்டேன்!
மெழுகைப்போல் இளகி
உருவின்றி உருகிவிட்டேன்!.
நீர் வற்றி வதங்கிவிட்டேன்
உயிர் காய்ந்து
சிதைந்துவிட்டேன்!.

சூரியன் சுருங்கி
நிலவென மாறிடவேண்டும்!-என்
நாளெல்லாம் குளிர்ந்திட வேண்டும்!
அந்த அற்புத விளக்கை
நான் தேய்த்திட- இவையாவும்
அந்த பூதம் செய்திட வேண்டும்!.இப்படியே
என் காலம் ஓடிடவேண்டும்.!

கண்ணித்தீவு மூசா-நான்
இந்த வெய்யிலோடு  போராடி
நாறிவிட்ட சிந்துபாத்.
குட்டி லைலாவை நீயே
எடுத்துக் கொள்-அந்த
அற்புத விளக்கை தேடிக்கொடு!
அனலாம் வெய்யிலை நான் மறைக்கவிடு!.
-தனுசு-


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6



மலமென்ன, மகனே!
கவிதையாக்கம்: கவிஞர் கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
===============================
அடைத்துக் கொண்டது கழிவுநீர்த் தொட்டி!
அள்ளிக்    கொட்டினர் கரிசல் நிலத்தில்!
ஆறு நாள் சென்று அங்கே போனால்,
ஆறு செடிகள் துளிர்த்து இருந்தன!

கொட்டிய மலமோ கருகிக் கிடந்தது.
துளிர்த்த செடிகள் பசுமை கொண‌டன.
மலர்ந்த நயனத்தில் பட்டன மலர்கள்.
மாசில்லாத தும்பை மலர்கள்!

அதுவோ மலம், அத்தனையும் கறுப்பு!
இதுவோ மலர்,  அத்தனையும் வெண்மை!
இதில் எது மலர்? எது மலம்?
பதில் அறியாமல் குழம்பியது மனம்!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க‌
கூடல் அழகன் வந்து அமர்ந்தான்.

"மலரென்ன, மல‌மென்ன மகனே? 
மேலிருந்து பார்,மலமும் ஒன்றுதான் மலரும் ஒன்றுதான்.
கீழிறங்கினால் மலம் வேறுதான், மலரும் வேறுதான்!
பேத புத்தியை விட்டால் எல்லாம் ஒன்றுதான்
பேத புத்தியைக் கொண்டால் எல்லாம் வேறுதான்.

மலமே மலர்,மலரே மலம்! அறிந்தாயா மகனே?"
அறிந்தேன் என்றான்.
=================================================================
(எழுத்தாளர் ஜெயமோகனின் ஒஷோ பற்றிய கட்டுரையில் படித்த ஒரு சம்பவத்தை தழுவி எழுதிய கவிதை)

வாழ்க வளமுடன்!
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
நான் பைத்தியம்தான் முட்டாளில்லை
ஆக்கம்:ஜி.ஆனந்தமுருகன்

One truck driver was doing his usual delivery to IMH (Institute of mental health).

He discovered a flat tyre when he was about to go home. He jacked up the truck and took the flat tyre down.

When he was about to fix the spare tyre, he accidentally dropped all the bolts into the drain.. As he can't fish the bolts out, he started to panic.

One patient happened to walk past and asked the driver what happened. The driver thought to himself, since there's nothing much he can do; he told the patient the whole incident.

The patient laughed at him & said "can't even fix such a simple problem.... no wonder you are destined to be a truck driver..."

Here's what you can do, take one bolt each from the other 3 tyres and fix it onto this tyre. Then drive to the nearest workshop and replace the missing ones, easy as that" The driver was very impressed and asked "You're so smart but why are you here at the IMH?" 

Patient replied: "Hello, I stay here because I'm crazy not STUPID!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8

சிறுவன் அப்படியே பால் குடிக்கின்றான் - அவன்
சிந்தனையில் பசுவும் அவனுக்கு அம்மாதான்!
-S.சபரி நாராயணன். சென்னை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி!

பக்தி என்பது தனிச் சொத்து.
ஒழுக்கம் என்பது பொது சொத்து.
- பெரியார் ஈ.வெ.ரா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

47 comments:

  1. எனது ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்து தர்மத்த்தின் ஒரு பிரிவான 'காணபத்ய மதத்தை'ப் பற்றி, என்னை எழுதத் தூண்டிய சகோதரி தேமொழிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். படிக்கின்ற என் வகுப்பறைத் தோழர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. 'மால்குடி டேஸ்' போல் தேமொழியின் சிறுவயது அனுபவங்களையும் ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன். படிப்பவரையும் தன்னுடன் கூட கால எந்திரத்தில் ஏற்றிப் பயணிக்க வைக்கிறார்.

    அந்தக்காலத்தில், குழந்தைகளுக்கு உணவிடும் போது, யாராவது பெரியவர்கள் கூட இருந்து கதை சொல்லியபடி சாப்பாடு போடுவார்கள். கதையின் ருசி உணவின் ருசியையும் மறக்கச் செய்து நினைவில் தங்கிவிடும். இதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    'தென்றல் வரும் சேதிவரும்' பாடலுக்கு தங்கள் அம்மாவின் திரைக்கதை அருமை. தங்கள் 'க்ரியேட்டிவிடி' எங்கிருந்து வந்தது என்று தெரிந்துகொண்டேன்.

    //அது போல ஏமாற்றம் தந்த பாடல்களில் ஒன்று "கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி" என்ற பாடல். //

    நிஜம் தான். 'அவன் பித்தனா' படத்தில் வரும் 'கிழக்கு வெளுத்ததடி' பாடலுக்கு மலை, ஆறு இவற்றின் பின்னணியில் பாடும் பாடலாக்கும் என்று கற்பனை செய்து வைத்திருக்க, அது மேடையில் நாயகி பாடி ஆடும் பாடல் என்பதைப்
    பார்த்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது.

    தாங்கள் 'தென்றல் வரும் சேதி வரும்' பாட்டைப் பற்றிக் கூறிய மேலதிகத்
    தகவல் உண்மையே. திருமதி. சௌகார் ஜானகி, 'கல்கி' பத்திரிகையில் தொடராக‌
    எழுதிய அவரது சுய சரிதையில், நடனம் தெரியாத அவர், சிரமப்பட்டு நடனம்
    ஆடிய பாடல்களில் இதுவும் ஒன்று எனவும், 'என்ன காரணத்தாலோ' அந்தப் பாடல் நீக்கப்பட்டது எனவும் நாசூக்காகக் குறிப்பிட்டு இருந்தார்.

    ஒரு சின்னத் தகவலைச் சரிபார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். கர்ணன் படத்தில் வரும் 'இரவும் நிலவும்' பாடல் 'கொனார்க்' சூரியனார் கோவில் பின்னணியில் படமாக்கப்பட்டு படத்தில் வெளியாகியிருந்தது. தாங்கள் குறிப்பிடும் பாடல், 'மகாராஜன் உலகை ஆளலாம், இந்த மகாராணி அவனை ஆளுவாள்' என்ற பாடல் என்று நினைக்கிறேன். அந்தப் பாடலே கர்ணன் படத்தில் இடம் பெறவில்லை.

    அருமையான மலரும் நினைவுகளைத் தந்த அன்னையர் தினச் சிறப்புக்கட்டுரையை அளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. திரு. கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கம் நெஞ்சம் நடுங்க வைத்தது. இப்படியும் மனிதர்கள். கடவுளே, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனிதர்களின் இருவிதக் குணங்களையும் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றாலும் நல்லதன்மைகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக விவரித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மானுடம் வெல்ல வேண்டும் என்ற நம் அனைவருடைய ஆசையையும் விரைவில் நிறைவேற்ற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அறுபடைவீடுகளின் வழியாகக் கந்தபுராணத்தைக் கச்சிதமாக, அழகான வரிகளில் சொல்லி இருக்கிறார், திரு. ஆலாசியம் அவர்கள்.

    ஆறுமுகனின் அழகான வரலாற்றை, ஆவினன் குடியில் தொடங்கி, சூரனைச் சம்ஹரித்த திருச்செந்தூர், சினம் தணிந்து அமர்ந்த தணிகை மலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை என வரிசைப்படுத்தியது அற்புதம்.

    இம்மையில் பெற வேண்டிய இன்பங்களுக்கு வள்ளியையும் மறுமையில் பெற வேண்டிய இன்பங்களுக்கு தெய்வானை அம்மையையும் வழிபட வேண்டும் என்று சொல்வதுண்டு. அதன்படி, பாடல் வரிசையில் முதலில் வள்ளிதிருமணத்தையும் பின், தெய்வானையை மணந்ததையும் கொண்டு வந்ததோடு, மனிதப்பிறவியின் நோக்கம் ஞானம் பெறுதலே என்பதை உணர்த்தும் வகையில் ஞானகுருவாக முருகன் அமர்ந்த சுவாமிமலையை இறுதியாகக் கொண்டு வந்த திறம் அருமை.

    சந்தம் நிறைந்த இந்தக் கவிதையில் எதுகையும் மோனையும் அழகுக்கு அழகு.

    //பாலகனே! அறிவிலுயர்ந்த தமிழ் புரட்சித்தலைவி, ஒளவை//

    இந்தப் பட்டத்தை ஔவையார் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

    அருமையான கவிதை தந்த சகோதரருக்கு நன்றி.

    ReplyDelete
  5. வெயிலின் கொடுமையைச் சொல்லும் தனுசுவின் கவிதை அருமை. அலாவுதீனின் அற்புத விளக்கிருந்தால், வெயிலை மட்டுமா, எத்தனையோ சமூகக் கொடுமைகளையும் நீக்கி விடலாம்.

    வெம்மையின் கொடுமைகளை, அதன் விதங்களை உயிர் உருக்கும் வரிகளால் விவரித்திருக்கிறீர்கள். பாலைவன நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும்,
    //புழுக்கத்தில் பழுத்து
    புழுபோல் அழுகிவிட்டேன்!
    மெழுகைப்போல் இளகி
    உருவின்றி உருகிவிட்டேன்!.
    நீர் வற்றி வதங்கிவிட்டேன்
    உயிர் காய்ந்து
    சிதைந்துவிட்டேன்!.//

    என்றே சொல்வர். பாடலைப் படிக்கும்போது, இங்கு பொழியும் மழையையும் மீறி கவிதையின் வெம்மை சுட்டது.

    //குட்டி லைலாவை நீயே
    எடுத்துக் கொள்-அந்த
    அற்புத விளக்கை தேடிக்கொடு!
    அனலாம் வெய்யிலை நான் மறைக்கவிடு!.//

    ஏன்!!! ஏதாவது ஒரு கொடுமை போதும்னா?!!!. சும்மா ஜாலிக்காகச் சொன்னேன்.
    வெம்மையின் கடுமையைச் சொன்னாலும், ஆழமாக மனதில் பாயும் வரிகள்
    அருமை. நன்றி தனுசு.

    ReplyDelete
  6. //பேத புத்தியை விட்டால் எல்லாம் ஒன்றுதான்
    பேத புத்தியைக் கொண்டால் எல்லாம் வேறுதான்.//

    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் திரு. கே.எம்.ஆர் அவர்களே. 'சேற்றில் பிறந்த செந்தாமரை' என்று சொல்வது ஞாபகம் வந்தது. அருமையான கவிதை. நன்றி.

    ஆனந்த முருகனின் துணுக்கு அருமை. சபரியின் புகைப்படமும், வரிகளும் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருந்தது. தாய்மை என்னும் மகத்துவமிக்க உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. சிறுவன் மட்டுமல்ல, பசுவும் பேதம் பார்க்கவில்லை. அற்புதமான புகைப்படம்.

    இன்றைய பொன்மொழியும் சூப்பர்.

    ReplyDelete
  7. வகுப்பறை அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! இன்றைய மலரின் அனைத்து அம்சங்களும் நிறைவாக இருந்தன..அந்த பாட்டியின் முடிவைத் தவிர!

    ReplyDelete
  8. ஆஹா! கிருஷ்ணன் சாரின் கவிதை அருமை...

    ///கொட்டிய மலமோ கருகிக் கிடந்தது.
    துளிர்த்த செடிகள் பசுமை கொண‌டன.
    மலர்ந்த நயனத்தில் பட்டன மலர்கள்.
    மாசில்லாத தும்பை மலர்கள்!////

    /////குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க‌
    கூடல் அழகன் வந்து அமர்ந்தான்.////

    இந்த வரிகள் மிகவும் அருமை...

    "சாதி சலக்கைகள் விட்டேன் அருள் சோதியைக் கண்டேனடி"
    என்ற மகாகவியின் வரிகள் நினைவிற்கு வருகிறது.
    அருமையானதொரு கருவை கொண்டு பிறந்தக் கவிதை!
    அருமை... தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    ReplyDelete
  9. சகோதரி பார்வதி அவர்களின் ஆக்கம் அருமை.
    கணநாதன் அவன் பரபிரம்மம் என்றக் கருத்தை நிறுவிய
    அருமையானா ஆக்கம்...

    கோவில், வழிபடு, பூஜை அதில் பயன்படுத்தும் பொருள்கள் யாவும்... பொதுவாக உடல் மன இவைகளின் பிணியை நீக்கும் அருமருந்து என்பதே இங்கே மறை பொருள். பொதுவாக புராண இதிகாசங்களை படிக்கும் பொது இது போன்றப் பொருள்களைத் தேடுவது... கற்பனை... அழகுணர்ச்சி... கதை கோர்வை என்ற பல காப்பிய இலக்கணங்களை மீறிய விசயங்களை காணலாம். அதைக் காண்பதற்கே இவைகள் மீண்டும் மீண்டும் கூறப் படுகிறது. அந்த வகையில் மிகவும் எளிமையாக வழிபாடு செய்வது விநாயகர் வழிபாடு. அதனால் பெறும் பலன்களை மெஞ்ஞான, விஞ்ஞான ரீதியிலே கொன்னர்ந்த அருமையான ஆக்கம்.

    பகிர்வுக்கு நன்றிகள் சகொதரியாரே!

    ReplyDelete
  10. இப்போது தெரிகிறது சகோதரி தேமொழி எப்படி இப்படி அருமையாக கதைகளைப் புனைகிறார்கள் என்பது....
    பட்டு நூலிழை பருத்திப் புடவைகளையாத் தரும்!...
    மலரும் நினைவுகளை மனம் பரப்பியதற்கு நன்றிகள் சகொதரியாரே!

    ReplyDelete
  11. கிருஷ்ணன் சாரின் ஆக்கம் எதார்த்த வாழ்வின் சங்கடங்களையும்...
    மனிதனுள் இருக்கும் மிருகம் மனிதனை கொள்ளும் தருணம்
    அப்பிணிதனை வெல்ல பக்தி மனதில் எப்போதும் வரணும்.

    சிந்தனைக்குரிய கருவோடு பிறந்தக் கதை பகிர்வுக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  12. கவிஞர் தனுசு அவசர வேளையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்...
    கவிதை பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!

    ReplyDelete
  13. நண்பர் ஆனத முருகனின் பகிர்வு.. அருமை:):):
    புத்திசாலிகள் (பைத்தியக்காரர்கள்) உள்ளே!!!
    முட்டாள்கள் சுதந்திரமாக வெளியே???

    ReplyDelete
  14. எனது வசனக் கவிதையை பதிவிட்ட ஆசிரியர அவர்களுக்கு நன்றிகள் பல.
    நன்றிகள் ஐயா

    ReplyDelete
  15. கடல் அலை சத்தம் மட்டும்
    காதில் ஒலிக்கட்டுமென

    குமரிக் கரையின் குன்றில்
    குத்த வைத்திருந்தோம்

    இந்தியாவிற்கு இங்கே
    இன்னொரு விவேகானந்தன் வேண்டாமென

    வந்த விட்டோம்
    வகுப்பறைக்கு..

    ஆக்கங்களை படித்து
    அப்புறம் கருத்து தருகிறோம்

    ReplyDelete
  16. இன்றைய புலம்பல்...

    நினைக்கும் நினைவுதோரும் நிறைந்த பரிபூரணத்தை
    முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்கலாம் ?..

    ReplyDelete
  17. குருவிற்கு வணக்கம்
    பொன்மொழி நம் சொத்து
    மாணவர் மலர் அம்மா சொன்ன கதை
    முதல் ஆக்கம் அற்புதமாய்
    ஸ்ரீமஹகணபதிக்கு
    அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் என்று ஆரம்பிது
    விநாயகர் துதிபாடயுள்ளர் பெங்களுர் பார்வதி இராமச்சந்திரன் நன்றி

    இரண்டாவது: உணவு உட்கொளும் போது அம்மா பரிமாறிக்கொண்டே கதை சொல்லுவார்கள் ,அம்மா சொன்னது எல்லாம் கதை அல்ல அவை வாழக்கைப் பாடங்கள்
    தேமொழி அவர்கள் பழையதை நினைவுபடுதிள்ளர். அன்னையர் தின சிறப்பு ஆக்கம் மிகவும் நன்றி.

    முன்றாவது :மனிதன் சுயநலவாதி ஆகிறான், பொதுநலமும் சுயநலம்மும
    கொண்டவன்தான் மனிதன் என்பதை அறிவுபடித்திள்ளர் கே.முத்துராம
    கிரூஷண்ன் லால்குடி அவர்கள் நன்றி.

    நான்காவது : அறுபடை வீடுகளின் பாடல்கள் விருபதிர்க்கு விளைந்து அற்புதமாய் மலர்ந்து காணிக்கையாக படைத்தது முருகன் அருள் எல்லோருக்கும் கிட்டிடசெய்திர்கள் நன்றி.

    மெமென்ன மகனே க்விதையாக்கம் அருமை

    ஐந்தாவதாக:வெயயில்ன் தாகத்தின் தணிக்க முசா மாயக்கண்ணாடியிடம்
    கவிதை நடடைமுரியல் அழகாக எழுதிள்ளர் மிகவும் அருமை நன்றி தனுசு அவர்களுக்கு.

    sixth: an ordinary man doesn't know anything than what the (extraordinary) Stupid knows...
    Excellent Mr.G.Anandhamurugan.

    ஏழாவது: அன்னையின் பாசத்தை நன்கு காட்டுகிறது. நன்றி S.சபரி நாராயணன்

    அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்

    நன்றி குருவே.

    ReplyDelete
  18. இந்த வாரம் வெளியாகியிருக்கும் வாரமலர் பதிவுகள் அனைத்தும் அருமை. மரியாதைக்குரிய பார்வதி அவர்கள் வழக்கம் போல் விநாயகப் பெருமானைப் பற்றிய அரிய செய்திகளைத் தந்திருக்கிறார்கள். ஆன்மீக விஷயங்களில் இவரது ஆழ்ந்த ஞானம் வெளிப்படுகிறது. சகோதரி தேமொழி அந்த நாளைய குடும்ப நிகழ்ச்சிகளைத் தந்திருப்பது எதார்த்தமாக இருக்கிறது. ஆனால் வானொலியில் கேட்ட அந்த கர்நாடக சங்கீதம், பாடகரின் பாட்டும், வயலினில் வித்வான் செய்த ஆலாபனையும் இவரது காதில் நாராசமாக விழுந்திருக்கிறது போலும். ஆம்! சின்ன வயதில் அந்த கர்நாடக சங்கீதம் என்றால், அதிலும் ராக ஆலாபனை என்றால் கொட்டாவி விட்டு எழுதிருக்கும் பழக்கம் அனேகமாக எல்லோருக்கும் இருந்திருக்கும்; கர்நாடக சங்கீத பிறவி மேதைகளைத் தவிர. நல்ல ரசனை. கவிஞர்கள் வகுப்பறையில் பெருகிவிட்டார்கள். கோ.ஆலாசியம் அவர்களின் பக்திரசமான கவிதை; புருனெய் தனுசுவின் பாலைவனக் கவிதை; கே.எம்.ஆரின் தத்துவக் கவிதை அனைத்தும் அருமை. கே.எம்.ஆர் விரித்துரைத்த சில நிகழ்ச்சிகள், அதிலும் கங்கையில் குழந்தையின் காதை அறுத்து உடலை முதலைக்குக் கொடுத்த அப்பனின் செயல் கொடுமையிலும் கொடுமை. நகைச்சுவை பகுதி, கனத்த விஷயங்களைப் படித்தபின் மனதை லேசாக்கிடும் நல்ல பகுதி. இந்த வாரமலர் இனிய மலர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவிற்கு நன்றி, படிப்பவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    பக்தி என்பது தனிச் சொத்து.
    ஒழுக்கம் என்பது பொது சொத்து.
    - பெரியார் ஈ.வெ.ரா
    பொன்மொழி பிடித்திருக்கிறது.

    இன்று என் நேயர் விருப்பம் நிகழ்ச்சியா ஹி. ஹி. ஹீ
    கர்ணன் படப் பாடல் "மகாராஜன் உலகை ஆளுவான்" என்றுதான் இருந்திருக்க வேண்டும், என் அம்மாவைத் தொடர்ந்து நானும் கப்சாவில் இறங்கிவிட்டேன் போலிருக்கிறது. சுட்டிக் காட்டிய பார்வதிக்கு நன்றி.

    ReplyDelete
  20. வழக்கம்போல பார்வதி பலப்பல செய்திகளை கோர்வையாக அழகாக கொடுத்துள்ளார். மீண்டும் எனக்குத் தெரியாத செய்திகள் பல தெரிந்துகொண்டேன். ஒரு பாடலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவது என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது. அது இந்த ஆஹா, ஊஹூ, தும்புரு வழக்கத்திற்கு வழங்கியதாக இருக்குமோ? காணபத்யம் பற்றி விரிவாக எழுதியதற்கு நன்றி.
    கோலஞ் செய் துங்கக்
    கரிமுகத்து தூமணியே -நீ எனக்கு
    சங்கத் தமிழ் மூன்றும் தா
    என்று ஒளவை பாடியதாக படித்ததுண்டு.
    கீழே உள்ள மேலதிகத் தகவலை நா.வானமாமலைஅவர்களின் நூலில் படித்தேன்....
    ***************
    பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார். மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில், பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும், இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறி விட்டார்.

    வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம். வங்காள ராஜ்யத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும், அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார். விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக, விநாயகரை வேண்டி பெண்கள் விரதம் இருக்கிறார்கள்.

    பொதுவாக, செழிப்பைக் குறிக்கும் தெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே, செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலும், மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்,

    இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.

    பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.

    *******************************

    ReplyDelete
  21. ஆலாசியத்தின் அறுபடைவீடுகள் கவிதை "அறுபடை வீடு கொண்ட திருமுருகா"விற்கு இணையான பாடல். பழமுதிர்சோலை பாவில்
    "அறிவிலுயர்ந்த தமிழ் புரட்சித்தலைவி, ஒளவை ஆழ அகந்தை போக்கியே " என்று குறிப்பிடும்பொழுது "ஒளவை" என்று நடுவில் ஒரு வார்த்தையைப் போட்டதால் பிழைத்தீர்கள். :)))) ஆனால் எதிர் பாராத இந்த வரி என்னை சிரிக்க வைத்துவிட்டது. சுவாமிமலை பாவில் வல்லின மெல்லின றி... ரி ...வார்த்தைகளைப் போட்டு அசத்திவிட்டீர்கள். நல்ல பாடலுக்கு நன்றி.

    கன்னித்தீவு மூசாவிடம் லைலாவை பண்டமாற்று(?) செய்து அற்புத விளக்கிற்கு பேரம் பேசும் சிந்துபாத் தனுசு அவர்களே இது புதுமையான கற்பனை. கவிதை வெய்யிலின் கொடுமையில் நீங்கள் திண்டாடுவதை நன்றாகவே விளக்குகிறது. வெய்யிலின் கொடுமையில் எனக்கெல்லாம் ஃபேன் போடலாம், மின்சாரம் இல்லாவிட்டால் திட்டலாம் என்று தோன்றுமே தவிர கவிதை எழுத நிச்சயம் தோன்றாது. எழுதினால்அது சாபமாகத்தான் வரும். அழகிய கவிதைக்கு நன்றி. இதுபோன்று எப்படி எழுதுகிறார்கள் என்று தோன்றியது வைரமுத்து அவர்களின் பாடல்களில்தான் (கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க, அலை வந்து அழித்ததனால் கன்னி மனம்தான் துடிக்க, கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ). நீங்களும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டீர்கள்.

    ஆனால் இந்த முறை மரபுக் கவிதை கவிஞர் ஆலாசியத்தையும், புதுமைக் கவிஞர் தனுசுவையும் கூடத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் KMRK ஐயாவாதான் இருக்க முடியும்.
    "பேத புத்தியை விட்டால் எல்லாம் ஒன்றுதான்
    பேத புத்தியைக் கொண்டால் எல்லாம் வேறுதான்"
    எங்கேயோ போய்டீங்க ஐயா இந்தக் கவிதையினால்.
    ஐயா அவர்களின் கட்டுரையும் சிந்திக்க வைப்பதே.
    "மனிதன் நல்லவன்தான். பொல்லாதவனும்தான். ஒரே மனிதனுக்குள் இரண்டும் உண்டு". அவர்கள் மேம்படுவதற்கு வேறு வேறு வழிகளில் சிந்திக்க வைக்கும் பார்வதி, மைனர் போன்றவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று முடித்து முத்து முத்தான கருத்துக்களை கவிதை கட்டுரைகளில் வழங்கியதன் மூலம் படைப்புத் திலகமாகிவிட்டீர்கள்.

    ஆனந்தமுருகனின் படைப்பும் மனம் பேதலித்த நிலையில் உள்ளவர்களை முட்டாள்கள் என்று கருதுவதை சாடுகிறது. மனித நேயத்தை மையக் கருதாக்கிய பதிவினால் இவரும் KMRK ஐயாவுடன் கை கோர்த்துவிட்டார். ஆனால் இதனை முன்பே படித்துள்ளேன், நன்றி ஆனந்த முருகன்.

    சபரியின் படமும் அதில் பால் குடிக்கும் சிறுவனை அன்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் பசுவும் மனத்தைக் கவர்ந்தது.

    ReplyDelete
  22. தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி தேமொழி. தங்களது மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி.

    //ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. //

    ஸ்ரீ வித்யா மார்க்கத்தில், விநாயகரை 'விநாயகி' யாக வழிபடும் வழக்கம் உள்ளது.
    பெண் உருவ விநாயகர் விக்கிரகங்களை, சில உபாசகர்கள் இல்லத்தில் கண்டிருக்கிறேன்.

    எனது ஆக்கத்தைப் பாராட்டிய திரு. உதயகுமார், சகோதரர் திரு. ஆலாசியம் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  23. // Thanjavooraan said...
    பார்வதி அவர்கள் வழக்கம் போல் விநாயகப் பெருமானைப் பற்றிய அரிய செய்திகளைத் தந்திருக்கிறார்கள்//

    தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி. தங்களைப் போன்றோரது பாராட்டுக்களும் வாழ்த்துக்களுமே மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  24. /////தேமொழி said...
    ஆலாசியத்தின் அறுபடைவீடுகள் கவிதை "அறுபடை வீடு கொண்ட திருமுருகா"விற்கு இணையான பாடல். பழமுதிர்சோலை பாவில்
    "அறிவிலுயர்ந்த தமிழ் புரட்சித்தலைவி, ஒளவை ஆழ அகந்தை போக்கியே " என்று குறிப்பிடும்பொழுது "ஒளவை" என்று நடுவில் ஒரு வார்த்தையைப் போட்டதால் பிழைத்தீர்கள். :)))) ஆனால் எதிர் பாராத இந்த வரி என்னை சிரிக்க வைத்துவிட்டது. சுவாமிமலை பாவில் வல்லின மெல்லின றி... ரி ...வார்த்தைகளைப் போட்டு அசத்திவிட்டீர்கள். நல்ல பாடலுக்கு நன்றி. /////

    நன்றி.. தாங்கள் கூறுவதும்...

    உண்மைதான் தமிழுக்குத் தலைவி என்றால் அது வழக்கமாகி விடும்..இருந்தும் அன்னையவளின் கருத்துக்கள் அக்காலத்திலே, அந்த சூழலிலே ஒருப் புரட்சியானக் கருத்தாகவே படிப்பவருக்குத் தோன்றும்.... அவர் காலத்திற்கு அப்பாற் பட்டக் கருத்துக்ளளை பாடி இருப்பதால் அவர் சமூகப் புரட்சி செய்ததாகவே எனக்கு அவரின் பாடல்களைப் படிக்கும் போது தோன்றும் அதனாலே அவளைப் பற்றி சிந்திக்கும் போது.. இப்படியே எண்ணத் தோன்றும். தான் பெண் என்பதை மறந்து (அதாவது பெனுக்குகாக வாதட வேண்டும் என்ற ஒரு ஆண் வெறுப்பு புரட்சிப் பெண்ணாக இல்லாமல்) சமநிலையில் இருந்து சமூக இயல்பின் அன்றைய அவசிய மாற்றத்தை அழகைச் சொன்னவள்.

    தங்களுக்கும் பாராட்டிய யாவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  25. விநாயகர் பற்றிய பார்வதி அம்மையின் ஆக்கம் படித்து மகிழ்ந்தேன். புராண,தத்துவ விளக்கமாக அமைந்தது.விநாயகர் வழிபாட்டினை அவ்வையே நம் தமிழ்நாட்டில் முன்னெடுத்தவர்.அவ‌ரைப் பற்றிச் சிறிது கூறியிருக்கலாம். அகவலுக்கு இணையான யோக நூல் நான் காணவில்லை. ஒரு வேளை 'அவ்வையும் அகவலும்' என்று தனிப்பதிவு எழுத பார்வதி அம்மை நினைத்து இருக்கலாம்.

    ReplyDelete
  26. தேமொழியின் அம்மா சொன்ன கதை தேன் மொழி! சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு உணவு அருந்தும் வழக்கம் இப்போது அருகிவிட்டது.எங்கள் வீட்டில் என் இடது கைப்பக்கம் குழந்தைகள் அமர மாட்டார்கள். ஒரு முறை இடக்கையால் ஒரு சாத்து சாத்திவிட்டேன். அதனால் தற்காப்பு. என் பெண்கள் மூவருக்கும் என் கதை சொல்லும் நேரமே இரவு உணவு நேரத்தில்தான்.இன்றும் அந்த அனுபவத்தை சிலாகித்துச் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  27. பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் எங்கிருந்துதான் இப்படித் தகவல்களை சேகரிக்கிறாரோ தெரியவில்லை..

    அவரை 'ஆன்மிக விக்கிப்பீடியா' என்று தாராளமாக சொல்லலாம்..

    விநாயகருக்கே தன்னைப் பற்றிய செய்திகள் இவ்வளவு இருக்கிறதா என்பதே தெரியாமல் இருக்கலாம்..

    ஆன்மீக சரக்காகிப் போனதால் எனக்குத்தான் படிக்கப் பொறுமைதான் இல்லை..நல்ல வேளை.கட்டுரை வடிவிலே இருந்ததால் முழுவதையுமே படித்தேன்..ஆலாசியம் அவர்களின் கவிதை/பாடல் வடிவிலே இருந்தால் சுத்தம்..ரொம்பப் பொறுமை தேவையோ என்றே தோன்றுகிறது..

    ஆங்காங்கே இந்தந்தப் புராணப் பாடல்களில் இருந்து எடுத்த விவரங்கள் என்று மேற்கோள் வேறு சொல்கிறார் பார்வதி..இப்படி நூல்கள் கேள்விப்பட்டதே இல்லையே என்று தோன்றுகிறது.

    ஆன்மிகக் கடலிலே திளைத்து மூழ்கி முத்தெடுக்கும் பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. // ஒரு வேளை 'அவ்வையும் அகவலும்' என்று தனிப்பதிவு எழுத பார்வதி அம்மை நினைத்து இருக்கலாம்.//

    திரு.கே.எம்.ஆர் அவர்களின் தீர்க்க தரிசனம் திகைக்க வைக்கிறது. தாங்கள் கூறியது உண்மையே. "மூலாதாரத்தில் மூண்டெழு கனலை' என்று ஆரம்பித்து, துரியம், துரியாதீதம் என யோகத்தைப் பற்றி எல்லா செய்திகளும் மிகச் சிறிய வரிகளில் அளப்பரிய பொருள் விரிவுடன் அமைந்த விநாயகர் அகவல் பற்றி, முன்பே, என் வலைப்பூவில், 'ஆறாதாரமும் மூலாதாரமும்' பதிவில் மிகச் சில வரிகளில் கூறியிருந்தேன். அதையே வரிக்குவரி விரித்து, வகுப்பறைக்காக ஒரு பதிவு எழுதி வைத்திருந்த வேளையில், என் சென்ற வார ஆக்கம் மிகப்பலருக்குப் புரியவில்லை என தெரிந்தது. நான் விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால், நாம் எழுதுவது படிப்பவரைச் சென்று சேர்வது அதிமுக்கியம் அல்லவா. ஆகவே, எழுதி வைத்திருந்ததை அப்படியே வைத்து விட்டு, 'காணபத்ய'த்தை எழுதினேன். பார்க்கவ புராணத்தைப் படித்ததே, அகவலின் மூலத்தைப் பற்றி அறிந்து கொள்ளவே. தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி, திரு. கே. எம். ஆர் அவர்களே. இந்த ஆக்கத்தில் அகவலைச் சேர்ப்பது, 'மறுபடியும் குண்டலினி' ஆகிவிடுமோ என்றே தவிர்த்தேன். நன்றி.

    ReplyDelete
  29. தேமொழி அவர்களின் எழுத்தும் நடையும் சம்பவங்களை விவரிப்பதில் அவரது தனிப்பாணி முத்திரையை இந்த முறையும் பதித்தே உள்ளார்..இப்படிச் சம்பவங்கள் அப்போதைய குடும்பச் சூழல்களில் இருந்த சமயங்கள் பல எனக்குள்ளும் நினைவலைகளை எழுப்பியது..நினைவலைகளை எழுத்திலே நிறுத்த தொடர்ந்து முயற்சிக்கும் தேமொழிக்கு பாராட்டுக்கள்..அப்போதைய வானொலி நிகழ்ச்சி பற்றி நல்ல சுவாரஸ்யமான ஆக்கம் ..இதிலே நான் புரிந்து கொண்டது சரியா என்று புரியவில்லை..படத்திலே வெளியாகாத ஒரு பாடல் காட்சியை தேமொழியின் அம்மா படமாக்கி விளக்கி தேமொழி அதற்கு கற்பனை வடிவமும் தந்து பதித்த விஷயங்கள் எதுவுமே படத்திலே வெளியிடப் படாத விஷயங்கள் என்றும் "அம்மா சொன்ன 'கதை'" என்ற தலைப்பு பூரணமாகப் பொருந்தி இருந்தாலும் 'அம்மா விட்ட கதை' என்று இருந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்றே தோன்றியது..

    ReplyDelete
  30. என் 94வது ஆக்கம் இது.பொறுமையாக வெளியிட்டுவரும் ஐயாவுக்கு நன்றி.

    இப்போது பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்று வெளியாகி வந்தாலும், பல வாரங்கள் என் ஆக்கம் மட்டுமே தனியாக வந்துள்ளது.ஐயாவின் ஆதரவுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? என்னுள் இருந்த படைப்பாளியை ஐயாதான் பட்டை தீட்டினார்கள்.

    ஆக்கத்தைப் படித்துவிட்டு பின்னூட்டம் இட்ட பார்வதி அம்மையார், ஹாலாஸ்யம்ஜி, தேமொழி, தஞ்சாவூர் பெரிய‌வர், ரமேஷ் வெங்கடபதி, உதயகுமர் அனிவருக்கும் நன்றி. ரமேஷ் வெங்கடபதியின் மனதில் பாட்டியின் முடிவு ஆழமாகப் படிந்துவிட்டது போல.

    ReplyDelete
  31. // minorwall said...
    பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..//

    தங்கள் மேலான விமர்சனத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. KMRK அவர்களின் படைப்பிலே வந்த ரயில் பயணத்துக்கு ஆயத்தமான பொது நடந்த சம்பவம், படகுப் பயணத்து சம்பவ மனிதர்களை மனிதர்கள்தானா என்றே நினைக்கத்த்தோன்றியது..

    மிருகங்களுக்கு இப்படிக் குணங்கள் இருக்குமா என்று தெரியாமல் இந்த ஜென்மங்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு அவற்றுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டாமே என்றே தோன்றிய்து..

    மானுடம் வெல்லுவது என்பது மனிதன் மனிதனாக இருந்தாலே சாத்தியம்..

    'குலத் தாழ்ச்சி உயர்ச்சி' எனப் பாவத்தை ஏற்படுத்தும் மனிதனைத் தெய்வமாக்கும் ஆகாத
    கற்பனைகளை விடுத்து
    ஆரோக்கிய மானுட வாழ்வுக்குரிய சிந்தனைகளை முன்னெடுப்போம்..

    நன்றி..

    ReplyDelete
  33. தனுசு வெயிலுக்கு முன் மண்டியிட்டு லைலாவைத் தர ஒப்புக்கொண்டது நியாயமா?
    தமிழகத்து ஆட்சி நிர்வாகத்து ஆட்களை அல்லவா தாரை வார்த்திருக்க வேண்டும்?
    நல்ல கவிதை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  34. ஆலாசியம் அவர்களின் ஆறுமுகன் பற்றிய பக்திப் பா முழுவதும் படிக்கவில்லை..
    இப்படிப் பாடல்களை சலிக்காமல் இயற்றித் துதிபாடும்
    அவருக்காவது அவரது பிரார்த்தனைகளை அந்த ஆறுமுகன் நிறைவேற்றிவைக்கட்டும்..

    ReplyDelete
  35. சபரி தேர்ந்தேடுத்து அனுப்பிய படம் மனதைக் கவர்ந்தது..
    எட்டி உதைத்து விடாமல் திரும்பிப் பார்த்தபடி பாலூட்டும் பசுவைப் பார்த்தாவது திருந்த மாட்டார்களா
    குப்பைத் தொட்டியிலே குழந்தைகளை வீசும் நாய்கள்..

    ReplyDelete
  36. "Hello, I stay here because
    I'm crazy not STUPID!"
    வகுப்பறைக்கு ஆக்கங்களைத் தொடர்ந்து அனுப்பி கமென்ட் அடித்து கலந்து கொள்வோரைப் பற்றிய சபரியின் கமெண்ட்டாக எடுத்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  37. ///kmr.krishnan said...
    என் 94வது ஆக்கம் இது.பொறுமையாக வெளியிட்டுவரும் ஐயாவுக்கு நன்றி.///

    இன்னமும்
    ஆறுக்காக காத்திருக்கின்றோம்; அன்புடன்
    ஆராதிக்க ஆவலுடன்.. (ஒரு)பட்டத்துடன்

    பட்டமும் பாராட்டும்
    பற்றி வாத்தியிடம் முன்னர் பகிர்ந்ததுண்டு

    புத்தக வெளியீடு
    மாணவர் சந்திப்பு என்ற கோலாகலத்தில்
    பட்டமளிப்பும் பாராட்டும் ..ம்.. ம்..

    வாழ்த்துச் சொல்ல எங்களுக்கு
    வாய்ப்பளித்தமைக்கு வாழ்த்து சொல்கிறோம்,

    ReplyDelete
  38. அம்மா பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை மிக மிக அருமை.

    ReplyDelete
  39. அறுபடை வீடமர்ந்த திருமுருகனுக்குப் பாமாலை சூட்டிய ஹாலாஸ்யத்திற்கு அவருடைய அருள் நிச்சயம் உண்டு.

    சூரியன் சுருங்கி நிலவென மாறிவிட்டால் இங்கே பயிர் பச்சை இருக்காது கவிஞர்வில்லாளன் அவர்களே! சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி உங்களுக்குக் கவிதை வருகிறது? எனக்கு வியர்வைதான் வருகிறது.

    நாள்தொறும் உங்கள் இருவருடைய கவிதா விலாசம் பெருகி வருகிறது.

    ஆனந்த முருகனின் ஆங்கில ஜோக் ரசிக்கும் தன்மையாக உள்ளது.ஆம்! சில சமயம் பெரிய அறிவாளிகளுக்குச் சிறிய விஷயங்கள் தெரியாது.பூனைக்கு கூண்டு செய்யும் போது தாய்ப் பூனைக்கு ஒரு வாசலும் குட்டிப்பூனைக்கு ஒரு வாசலும் வைக்கச்சொன்னாராம் ஒரு விஞ்ஞானி!

    பசுவிடம் பால் குடிக்கும் குழந்தைப் படம் அருமை சபரி!பால கோபால கிருஷ்ணன் இப்படிசெய்ததாகப் புராணம் உண்டு. அதை இப்போது நேரடியாகப் பார்க்கிறோம்.பசுவின் முகபாவம்தான் அருமை. குழந்தை காலைக் கட்டிக்கொண்டுள்ளது. மாடு காலை மாற்றினால் குழந்தை விழுந்துவிடும் அசையாமல் நின்று அனுமதிக்கும் பசுதான் தாய்மையின் உச்சம்.கோமாதா என்று சும்மாவா சொல்கிறார்கள்? "பாலைப் பொழிந்து தரும் பாப்பா, அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா"

    ReplyDelete
  40. ஐயா விற்கு முதற்க்கண் வணக்கம்.

    படைப்புகள் அனைத்தும் arumaiyilum மிகவும் அருமை.
    திருவாளர் முத்து கிருஷ்ணன் ஐயா விற்கு எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் ஐயா!.

    ReplyDelete
  41. ////minorwall said...
    ஆலாசியம் அவர்களின் ஆறுமுகன் பற்றிய பக்திப் பா முழுவதும் படிக்கவில்லை..
    இப்படிப் பாடல்களை சலிக்காமல் இயற்றித் துதிபாடும்
    அவருக்காவது அவரது பிரார்த்தனைகளை அந்த ஆறுமுகன் நிறைவேற்றிவைக்கட்டும்..////

    நன்றி சகோதரரே! எனக்கும் மாத்திரம் அல்ல... நாம் யாவருக்கும் அவன் நிச்சயம் அருள்வான்.

    நான் முழுவதும் நம்புகிறேன்... நான் சாமி கும்பிடும் போதெல்லாம் உங்களுக்கும் சேர்த்து வேண்டுவதை மறப்பதில்லை.

    நீங்களும் வழக்கமாகச் சொல்வது போல் (அவன் மேல்) முழு நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் அருள் உண்டு.

    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள். சகோதரரே!

    கிருஷ்ணன் சார் தங்களின் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  42. //பட்டமும் பாராட்டும்
    பற்றி வாத்தியிடம் முன்னர் பகிர்ந்ததுண்டு//

    நன்றி அய்யர் அவர்களே! பட்டம் பாராட்டுக் கொடுத்தால் 'முடித்துக்கொள்' என்ற பொருளாகி விடக் கூடாது அல்லாவா? கல்லூரியில் மேடையில் இருப்போரைக் கீழே இறக்கக் கைத்தட்டலை பலமாகப் பயன் படுத்துவார்கள். அதுபோல ஆகிவிடக்கூடாது... ஹிஹிஹி...

    பட்டம் வேண்டாம். அனைவரின் அன்பும் இருந்தாலே போதும். நல்லதொரு குடும்பமான வகுப்பறை மேலும் மேலும் வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  43. ///பட்டம் வேண்டாம். அனைவரின் அன்பும் இருந்தாலே போதும்///

    அன்பு அது தான்
    அதிகம் இருக்கிறதே

    அதனால் தானே
    அள்ளி அள்ளி தருகிறோம்..

    அது சரி...
    அந்த பட்டம் உங்களுக்கா,,?(,,!!??!!)

    ReplyDelete
  44. //அது சரி...
    அந்த பட்டம் உங்களுக்கா,,?(,,!!??!!)//

    எனக்கில்லையா? அப்ப சரி! நான் தான் எனக்கென்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டேனோ?

    ReplyDelete
  45. பார்வதியின் ஆக்கத்தின் மூலம் காணபத்யம் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன், நன்றி!

    அம்மா விட்ட கப்சாவை தேமொழி விளக்கிய விதம் அருமை!

    கிருஷ்ணன் சாரின் இரண்டு ஆக்கங்களுமே நன்றாக இருந்தன. முக்கியமாக கவிதை, முதல் கவிதை போன்று தோன்றவேயில்லை.

    கவிஞர்கள் ஆலாசியம் மற்றும் தனுசுவின் கவிதைகள் வழக்கம்போல் அருமை.

    சபரி அனுப்பிய படமும், ஆனந்தமுருகன் அனுப்பிய துணுக்கும் மனத்தைக் கவர்ந்தன.

    ReplyDelete
  46. மிருகங்களுக்கு இப்படிக் குணங்கள் இருக்குமா என்று தெரியாமல் இந்த ஜென்மங்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு அவற்றுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டாமே என்றே தோன்றிய்து..//
    எட்டி உதைத்து விடாமல் திரும்பிப் பார்த்தபடி பாலூட்டும் பசுவைப் பார்த்தாவது திருந்த மாட்டார்களா
    குப்பைத் தொட்டியிலே குழந்தைகளை வீசும் நாய்கள்..//

    நாய்களின் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  47. கிரேட்.நீங்க வந்துடுவீங்கன்னு நினைக்கலை..அதான்..
    தெரியாம தப்புப் பண்ணிட்டேன்..நான் சொன்ன தத்துவத்துக்கு எதிர்மாறா நானே விலங்குகளை இழுத்துப் பேசிட்டேன்..

    இருந்தாலும் நீங்க ஏன் நாய்கள் சார்பா இப்படி 'வள்ள்'ன்னு குலைக்குறீங்க?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com