மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.5.12

மதிப்பிற்குரிய கவிஞர் மருதகாசியார்

 மாணவர் மலர்

இன்றைய  மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன! படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
1

      
மதிப்பிற்குரிய  கவிஞர் மருதகாசியார்
ஆக்கம்: தேமொழி

கவிஞர் மருதகாசி அவர்கள் பிப்ரவரி 13, 1920 அன்று திருச்சி மாவட்டத்தில் மேலக்குடிகாடு என்ற கொள்ளிடக்கரையில் உள்ள சிற்றூரில்,  கிராம அதிகாரியாக இருந்த அய்யம்பெருமாள் உடையாருக்கும், அவர் மனைவி மிளகாயி அம்மாளுக்கும் பிறந்தவர், பரம்பரை விவசாயக் குடும்ப வழி வந்தவர்.  கவிஞர் A. மருதகாசி திரையிசைப் பாடல்களில் மெட்டுக்கு பாட்டெழுதிய கவிஞர்களில்  குறிப்பிடத் தக்கவர்.  1959 ஆம் ஆண்டு "திரைக்கவி திலகம்" என்று குடந்தை வாணி விலாச சபாவும், 1969 ஆம் ஆண்டு "கலைமாமணி" என்று இயல் இசை நாடக மன்றமும் இவருக்கு பட்டங்கள் சூட்டி தம்மைப் பெருமைப் படுத்திக் கொண்டன.  குறைந்தது ஒரு 4,000 பாடல்கள் இவரால் இயற்றப் பட்டிருக்கும் என்று கருதப் படுகிறது.  கவிஞர் கண்ணதாசனுக்கும் முன்பே இவர் இந்த சாதனையை செய்துவிட்டிருந்தார்.

கவிஞர் மருதகாசி அவர்கள் முதல் முதலில் மெட்டுக்கு பாட்டு எழுதியது M.S. சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடி இசைத்தட்டுகளில் வெளியிடப்பட்டு பிரபலமான "குக சரவணா சிவபாலா" என்ற பாட்டின் மெட்டைத் தழுவியது.  அந்தப் பாடலின் மெட்டில் "கலைமகள் உறைந்திடும் கலாசாலை"  என்றப் பாடலை எழுதினார்.  கும்பகோணம் கல்லூரியில் படித்த காலத்தில் நாடகம் எழுதி கல்லூரியில் அரங்கேற்றியதன் மூலம் கலையுலக தொடர்பு இவரைத் தொடர்ந்தது.  குடும்பத் தொழிலான விவசாயத்தை தொடர ஊருக்கு திரும்பிச் சென்றாலும், இவரது கலையுலக நட்புகள் இவரது திறமையை உபயோகித்துக்கொள்ள ஆர்வம் காட்டி மீண்டும் கும்பகோணத்திற்கு வரவழைத்தனர்.

கும்பகோணத்தில் நண்பர் அறிமுகப்படுத்திய K.N. ரத்தினத்தின் தேவி நாடக சபைக்கு பாடலாசிரியர் ஆனார்.   A.K. வேலனின் சூறாவளி என்ற நாடத்திற்கு முதன் முதலாக பாடல் எழுதி தன் கலைப் பயணத்தை தொடக்கினார்.  தேவி நாடக சபை அந்நேரத்தில் மு. கருணாநிதியின் "மந்திரிகுமாரி" என்ற நாடகத்தையும் நடத்திக் கொண்டிருந்ததார்கள். அங்கு அவருக்கு கிடைத்த கலையுலக நட்புகள் கா.மு. ஷெரீப் போன்றவர்கள்.  தொடர்ந்து நாடக சபையின் "ஒரே முத்தம்", "பராசக்தி" போன்ற நாடகங்களுக்கும் பாடல் எழுதிக்கொடுத்து அந்த நாடகங்களில் நடிக்கவும் செய்தார்.

நாடகங்களில் திருச்சி லோகநாதனின் இசைக்கு இவர் எழுதிய பாடல்களை கேட்ட சேலம் மார்டன் தியேட்டர்ஸ் இவரை வரவழைத்து அவர்களது மாயாவதி படத்தில் பாடலெழுத வாய்ப்பளித்தனர்.  T.R. மகாலிங்கம், அஞ்சலிதேவி நடித்து 1949 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில்
G. ராமநாதன் இசையமைப்பில் "பெண் எனும் மாயப்பேயாம்" என்ற பாடலே இவர் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல்.  மெட்டுக்கு சிறப்பாக பாட்டெழுதும் இவரது திறமையினால் வாய்புகள் இவரை நாடிவர திரையுலகில் இவரது கலைப் பயணம் தொடர்ந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்த இவரது திரைத்துறை கலைப் பயணத்தில் 1970 களின் இறுதியில்  தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப  தேவரின் படங்களில் இவர் பாடல்களே பெரும்பாலும் இடம் பெற்றன.

"ஆண்டியும் எங்கே? அரசனும் எங்கே?
அறிஞனும் எங்கே? அசடனும் எங்கே?
ஆவி போனபின் கூடுவாரிங்கே!
ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே"
என்ற இவரது தத்துவப் பாடல் 1950 களில் எப்படி மக்களைக் கவர்ந்ததோ அதே போன்று

"கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது!
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்!
அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது!
என்ற  தத்துவப்பாடலும் 1970 களில் மக்களைக் கவர்ந்தது.

இவர் திருக்குறளைப் பற்றி எழுதிய திரையிசைப் பாடலும் தமிழ்நாடு கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  எதிர்காலத்தில் இந்த எண்ணம் கல்வித்திட்ட குழுவிற்கும் ஏற்பட்டு இதை பரிந்துரை செய்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

திருக்குறள்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே!
பயிருக்கு மழை போலே! பைந்தமிழ் மொழியாலே!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெரும் நினைப்பாலே!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!
மனம்மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது!
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது! - எம்
மதத்திற்கும் போதுவேன்னும் பாராட்டைக்கண்டது!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
-அறிவாளி (1963)

இவர் சிறப்பை மற்றவர் சொல்லித் தெரிவதைவிட கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்ற மொழிக்கேற்ப கவிஞர். திரு. வாலி அவரைப் பற்றி இயற்றிய கவிதை மூலம் அறிவதே மிகவும் பொருத்தம்.

கவிஞர் வாழ கந்தன் அருள்க!
மதிப்பிற்குரிய மருத காசியார்
மூதறிவாளர்; முத்தமிழ்க் கவிஞர்!
நதிப்புன லொழுக்காய் நற்றமிழ் நடையில்
நல்ல பனுவல்கள் நாளும் யாதவர்!

எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல் இவரது பாடல்;
எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல்
எழுதுவதற் கிவரே இலக்கண மானார்!

பணமும் புகழும் படைத்த நாட்களில்
பொறையைப்  பேணும் நிறைகுட மானவர்;
குணத்தில் சிறிதும் கோதிலாச் செம்மல்;
குழந்தை மனத்தைக் கொண்ட இப் பெரியார்!

படத்துறை இவரால் பயன்கள் பெற்றது;
பழந்தமிழ் இவரால் புதுத்தமி ழானது!
அடக்கம் இவரது அணிகலம் என்பேன்;
அகந்தை யாதென அறியாப் பெம்மான்!....

பாக்களின் மேன்மை படித்தால் புரியும்;
பாமரன் என்னால் புகலத் தரமோ?
செய்யநற் றமிழின்  சீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம் செப்பிய மேதை!
- கவிஞர் வாலி
பிப்ரவரி 2, 1986

"நல்லவன் வாழ்வான்" என்ற படத்தில் "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" என்ற பாடலை வாலி எழுதினாலும், அதைவிடுத்து மருதகாசி அவர்களை வைத்து வேறொரு பாடலை உருவாக்க முயன்ற பொழுது, வாலியின் கவிதையின் தரம் கண்டு புதுக்கவிஞர் வாலியின் பாடலையே வைத்துக்கொள்ளுமாறு கூறி மறுத்துவிட்டாராம் மருதகாசி.  இதை வாலி தன் வாழ்கை குறிப்பு நூலோன்றிலும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.   கவிஞர் வைரமுத்து மருதகாசியை "இந்தக் கலைக்களஞ்சியம் திரைபாட்டுத் துறைக்கு காலத்தால் அழியாத கல்வெட்டு" என்று  குறிப்பிடுகிறார்.

தன் 69 வது வயதில் (1989 ஆம் ஆண்டு) மறைந்த கவிஞர் மருதகாசியின் படைப்புகள் மக்களை எளிதில் அடையும் வண்ணம் 2007 ஆம் ஆண்டு அவற்றை  தமிழக அரசு நாட்டுடமையாக்கியுள்ளது.

கவிஞர் மருதகாசியின் திரையிசைப் பாடல்களில் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பாடல்களில் 50 பாடல்கள் "மட்டுமே" கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. (இந்த 50 பாடல்களையும் உங்களால் நினைவுகூற முடிந்தால் உங்கள் வயது 50 அல்லது அதற்கு மேலிருக்கலாம், இல்லாவிட்டால் திருவிளையாடல் தருமி போல தகுதிக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு எத்தனை பாடல் தெரிகிறதோ அதுதான் உங்கள் வயது என்று வைத்துக்கொள்ளலாம், (ஆனால் வயதைக் குறைத்து சொல்ல எண்ணி பல பாடல்களை தெரியாது என்று சொல்லக் கூடாது):

"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணங் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே" (மந்திரி குமாரி, 1950) 
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960) 
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950) 
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960) 
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!"  (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி"      (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?"      (தூக்கு தூக்கி, 1954) 
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்"        (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960) 
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜகத்திலே" (வண்ணக்கிளி, 1959)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)     
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"சின்ன சின்ன ரோஜா! சிங்கார ரோஜா! அன்ன நடை நடந்து அழகாய் ஆடி வரும் ரோஜா" (அழகு நிலா, 1962)
"சின்ன பாப்பா! எங்க செல்ல பாப்பா! சொன்ன பேச்சைக் கேட்டாதான் நல்ல பாப்பா!" (வண்ணக்கிளி, 1959)
"சுந்தரி சவுந்தரி நிரந்தரியே!" (தூக்கு தூக்கி, 1954)
"செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து பாடித்திரியும் பூங்குயிலே"                 (சுகம் எங்கே? 1954)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்"                                        (பெற்ற மகனை விற்ற  அன்னை, 1958) 
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"தை பொறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்"                                                                   (தை பிறந்தால் வழி பிறக்கும், 1958)
"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, நீ இல்லாத துன்பம் பெருகுதே" (சதாரம், 1956)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!"                                       (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"பச்சைக் கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது" (அமரதீபம், 1956)
"படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா" (தாயில்லாப் பிள்ளை, 1961)
"பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்ன போல பாக்கலே!" (ஆயிரம் ரூபாய், 1964)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி"                                                              (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)    
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!"       (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி"  (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!"                                     (பாவை விளக்கு, 1960)            
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்"                                (மந்திரி குமாரி, 1950) 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு

மனிதன் தெய்வ நிலையை அடைவதற்காக, இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் அருளியிருக்கும் மகத்தான சக்தியே குண்டலினி.

மனித உடலில் ஆறு மகத்தான ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. சஹஸ்ராரத்தைச் சேர்த்து ஏழு சக்கரங்களாகக் கொள்வது வழக்கம். முதல் சக்கரமான,

மூலாதாரத்தில் நாக வடிவில் உறைந்திருக்கும் குண்டலினியை, முறையான யோகப்பயிற்சியின் மூலம் விழிப்புறச்செய்து, ஸ்வாதிஷ்டானம்,

மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆஜ்ஞா, முதலிய சக்கரங்களின் வழியாக மேலேற்றி, ஆயிரம் இதழ் கொண்ட தாமரை வடிவான சஹஸ்ராரக்

கமலத்தில் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபத்தினைக் கண்டவர்கள் மனிதனாகப் பிறந்து தெய்வநிலையை அடைந்தவர்களாவர்.

அம்பிகையின் ஆராதனைகளில், இந்த உள்முக ஆராதனையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இது வாமாசாரம் அல்லது ஸமயாசாரம் என்று
சொல்லப்படுகிறது.

சித்தர் பெருமக்கள் பாடல்கள் பலவும் குண்டலினியோகத்தைப் பற்றியும், ஆதாரச்சக்கரங்களைப் பற்றியும் ,யோகப்பயிற்சியைப் பற்றியும்
நேரடியாகவும்,மறைமுகமாகவும் எடுத்தியம்புகின்றன. யோகசித்தி அடைந்தவர்களுக்கு முதலில் கைவரப்பெறுவது அட்டமாசித்தி.

அட்டமாசித்திகளாவன : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. இந்த சித்திகள்

கைவரப்பெற்ற சித்தர்கள் அதனை,நற்செயல்களுக்கே உபயோகிப்பர். சித்திகள் கைவரப்பெற்று, சித்தத்தில் சிவனைக் கண்டதாலேயே சித்தர்கள் எனப்  பெயர் பெற்றனர்.

சித்தர்களில் ஒருவரான பட்டினத்தார் பெருமானின் சீடரும் ,சித்தருமான பத்திரகிரியாரின் பாடல்களில் இவை அனைத்தையும் நாம் காணலாம்.ஒரே
பாடலில் இவை அனைத்தையும் சொல்லி இருக்கிறார் பத்திரகிரியார்.

பாடல் துவக்கம் இது,

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்?

குண்டலினி யோகம் சித்தியடைதலே, தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுதலாகக் குறிக்கப்பட்டது. மனிதப் பிறவியின் நோக்கமான தெய்வ நிலை அடைதல், முதலிரு வரிகளிலேயே குறிக்கப்படுகிறது.

குருவின் அருளே யோகத்தின் முதல்படி. இதனை,

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்?
என்ற வரிகளில் தெரிவிக்கிறார் பத்திரகிரியார்.

ஆசை அடக்கி, ஐம்புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவருதலே யோகத்தின் இரண்டாம் படி, இதை,

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்?
ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?

என்ற வரிகளால் குறிக்கிறார். இதையே வள்ளுவரும்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. என்று குறிக்கிறார்.

ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்யும் மனநிலை, யோகசித்தி அடைவோருக்கு இன்றியமையாதது. அன்பே சிவம் அல்லவா? இதை,

ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்?
அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்?
கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?
என்ற வரிகளால் அறியலாம்.

முதற் சக்கரமாகிய மூலாதாரத்தில், அதன் அதிதேவதையான விநாயகர் அருள் பெற்று, அதன் மூலம் குண்டலினியை மேலேற்றுதலை, இவ்வாறு
குறிக்கிறார் பத்திரகிரியார்.

ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்?

மண் (பூமி) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மூலாதாரத்தில், வளைந்த‌நாக வடிவில் உள்ள குண்டலினியை விழிப்புறச் செய்தலையே
பின்வரும்வரிகளில்,குறிக்கிறார்.

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்?
அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?

அப்பு என்றால் நீர். நீர் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மணிபூரகம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  விட்டுணு என்பது இதன் அதிதேவதையான
மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்."உப்புக் குடுக்கை" நம் உடலைக் குறிக்கும்

மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?

பிறைச்சந்திரனை உள்ளடக்கிய வட்டவடிவம் கொண்ட, வெளிப்புறம் ஆறு இதழ் கொண்ட தாமரை வடிவான ஸ்வாதிஷ்டானம், மூன்று வளையம்
இட்டு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.

வாயுத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் அநாஹதச்சக்கரத்தின் வடிவம்,
வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத் தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம் என்ற வரிகளால் விளங்கும். இது அறுங்கோண
வடிவை உள்ளடக்கியது.அறுங்கோண வடிவத்தின் உள்ளே ஒரு சாம்பல் நிறப்படலம் வாயுவைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது.சக்கரங்களில் இது
நடுப்புள்ளியாகும். இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இதில் தான் ஆன்ம ஸ்வரூபியான இறைவன் உறைகிறார்.

வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்

மனித உடலில் தொண்டைப்பகுதியில் உள்ள விசுத்திச் சக்கரத்தின் அதிதேவதையான சதாசிவன் அருள் பெற்று அந்தச் சக்கரத்தில்
குண்டலினியை,அடைவித்தலையே இவ்வரிகளில் குறிப்பிடுகிறார்.

உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்?

ஆஜ்ஞா சக்கரம் மூன்றாவது கண், அல்லது நெற்றிக்கண் எனப்படுகிறது. இது நம் இரு புருவங்களும் கூடும் இடத்தில் அமைந்திருக்கிறது. நமது
இந்துதர்மத்தில், பொட்டு வைத்துக் கொள்வதும், திருநீறு/திருமண் தரித்துக் கொள்வதும், இந்தச் சக்கரம் வழியாக, புற‌ச்சலனங்கள் நம்மை
ஊடுருவாமல் தடுப்பதற்கே. குண்டலினி இதை,அடையும் போது, 'திரிகூடம்' எனப்படும் அப்பகுதி திறந்து, நம்மால் நம் ஆன்மா,ஒளிபெறுதலைக்
காண இயலும். அதுவே, நிச்சயித்துக்கொண்டு நேர்வதாகக் குறிக்கப்பட்டது.

பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்

பார் என்றால் உலகம். பாராகிப் பார்மீதில் என்றது பிரபஞ்ச வெளியை. ஸ‌ஹஸ்ராரக் கமலம் பிரபஞ்சவெளியோடு தொடர்புடையது. அதை
அடைந்தவர்கள் இறைத்தத்துவத்தை அறிந்து, படைப்பு ரகசியத்தை உணர்வர்.இது, நம் உச்சந்தலையில் இருக்கிறது. மஹான்கள் நம் தலைமீது
கைவைத்து ஆசீர்வதிக்கும் போது, நம்மால் பெரும் அதிர்வலைகளை உணர முடிவது இதனால் தான்.

ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்?

என்று ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் அப்பால் நின்ற இறைவனை, ஆனந்தப் பேரொளியை, யோகத்தில் சித்தி பெற்று காணுதலே பிறவிப் பேறு
என்பதை,உணர்த்துகிறார். மேலும் வாசியோகம், நாடிகள் பற்றிய பல செய்திகள் இப்பாடலில் உண்டு. அவற்றைச் சிலவரிகளில்,விளக்குவது
கடினம்.

ஆறு அறிவுடைய மனிதப்பிறவி எடுத்ததே, அதற்கு மேலான தெய்வ நிலையை அடைவதற்காகத்தான். சித்தர்கள், " யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையக‌ம்",என்ற திருமூலர் பெருமானின் வாக்குக்கிணங்க‌ நம்மை வாழ்விப்பதற்காகத் தான் இதுபோன்ற பல பாடல்களைத் தந்து சென்றுள்ளனர்.

அவர்கள் அருளிய இப்பாடல்களின் நோக்கத்தை ஈடேற்றுவது  இறையருளிலும், நமது முயற்சியிலுமிருக்கிறது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!'

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 3


புளியோதரையின் சுவையே தனி!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்

"அன்ன விசாரம் அதுவே விசாரம்...."என்பது ஒரு தத்துவக் கிண்டல்.

காஞ்சி வரதராஜ ஸ்வாமியை 'கஞ்சி வரதராஜர்' என்றும் சொவார்கள். காஞ்சிபுரம் என்பது, கச்சி, கஞ்சி, காஞ்சி என்றெல்லாம் சுட்டப்படும்.
விஷ்ணு காஞ்சியில் ஒரு சத்திரத்துத் திண்ணையில் சில நாமதாரிப் பண்டாரங்கள் பசியுடன் படுத்து இருந்தார்கள்.அதில் ஒருவர் "கஞ்சி வரதப்பா!"
என்று பக்தி மீதூறக் கூவினார்.

அருகில் இருந்த பண்டாரம், சிறிது அரைத் தூக்கத்தில் இருந்தவர், வாரிச் சுருட்டி எழுந்து  "எங்கப்பா?!"என்று பரபரத்தார்.

முதல் பண்டாரம் கூவியது காஞ்சி வரதராஜரின் திருப்பெய‌ரை.இரண்டாவது பண்டாரம் பொருள் கொண்டது சாப்பிடும் கஞ்சி வருகிறது என்று.
இல்லம் இல்லாத, மனைவி மக்களுடன் வாழாமல் பரதேசியாக இருந்தால் சுகம் என்று இல்லறத்தான் நினைக்கலாம். எந்தத் தொந்திரவும் இல்லாமல் இறைச் சிந்தனையிலேயே காலம் கழிக்கலாம் என்று வெளிப் பார்வைக்குத் தோன்றும்.உண்மையில் பரதேசிக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற கவலையே மேம்பட்டு, இறைச் சிந்தனை குறைந்து விடும். இறைவனைப் பற்றி தத்துவ விசாரங்களை மற‌ந்து, 'அன்ன விசாரம் அதுவே விசாரம்' என்று ஆகிவிடும்.

"பசியாத வரம் எல்லோருக்கும் பெற்றுத் த‌ருகிறேன். இப்போது என் முன் பசிக்குக் கொஞ்சம் கஞ்சி  ஊற்றுங்கள்" என்பதுதான் பண்டாரங்களின் நிலை அளவுக்கதிகமான உணவு எடுத்து கொண்ட ஒரு சிலரை,சில சந்தர்பங்களில் சந்தித்துள்ளேன்.ஆங்கிலத்தில் பெருந்தீனிக்காரனை 'கிளட்டன்' என்பார்கள். அப்படிப்பட்ட 'கிளட்டன்'களைச் சந்தித்துள்ளேன்.

ஒரு முறை ஓர் உறவினர் வீட்டில் உணவுண்ண அமர்ந்தோம்.அப்போது நான் சிறிய பையன்.அந்த உறவினர் என் தட்டில் அன்னம் வார்த்ததைப் பார்த்துவிட்டு "டேய்! 'கிளட்டன்' என்றால் என்ன பொருள் தெரியுமா?" என்று கேட்டார்.பொருள் அறிந்ததால் 'முணுக்' என்று கோபம் வந்து விட்டது. என்னைத் தான் 'கிளட்டன்' என்று சொல்கிறார் என்று தோன்றி விட்டதால் ரோஷத்துடன் கையை உதறிவிட்டு வெளியேறிவிட்டேன்.

ஒரு சமயம் ஒரு விசேஷத்திற்காக உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வந்தார். எல்லோருக்கும் முன்னதாக வந்து சேர்ந்தார். சுமார் 30 விருந்தினர்களுக்கு தலைக்கு நான்கு அல்லது ஐந்து இட்லி என்று கணக்குப் போட்டு ஒரே ஏட்டில் 48 இட்டிலி கொடுக்கக் கூடிய பானையில் இட்லி வெந்து கொண்டிருந்தது.

வந்தவர் நேராக இட்லிப் பானையிடம்தான் சென்றார். "ஹூம், ஹூம்! இட்லியா இட்லியா..?" என்று கேட்ட வண்ணம் பெரிய இலை ஒன்றைத் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டார்.

தட்ட முடியாமல் அங்கேயே இட்லி பறிமாற ஆரம்பித்தார்கள்.சொன்னால் நம்ப மாட்டீர்கள், மூன்று முறை எடுத்த அனைத்து இட்லிகளையும் அவர் ஒருவரே ஆற அமர உண்டு தீர்த்தார். மாவு காலி ஆனபிறகு அரைமனதுடன் எழுந்தார். இன்னும் கொடுத்திருந்தாலும் உண்டிருப்பார்.மற்ற விருந்தினர்களுக்கு அவசரம் அவசரமாக உப்புமா கிண்டப்பட்டது. அந்த உப்புமாவையும் ஒரு கை பார்த்தார் அந்தப் பெரு வயிறர். சிறு  வயதில் பார்த்தது இன்னும் மறக்கவில்லை. சளைக்காமல் இல்லை என்று சொல்லாமல் பரிமாறிய பெண்களை இன்றும் வ‌‌ணங்குகிறேன்.

அலுவலக நண்பர் (ஸ்ரீ வைஷ்ணவர்) ஒருவருடைய சொந்தக் கிராமத்தில்  ஆண்டு தோறும் பெருமாள் கோவிலில் உற்சவம் நடைபெறும். பெருமாள் கோவில்தான் சிவன் கோவில்களை விட பிராசதத்திற்கு உவப்பானது. விதம் விதமாகப் பிராசாதம் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வார்கள். பெருமாள் கோவில் என்றாலே புளியோதரையும், தத்தியோன்னமும் (தயிர்சாதம்), அக்காரவடிசலும்(பாயசம்), திருக்கண்ணமுதும் (சர்க்கரைப்பொங்கல்) மிகவும் பிரபலம். ஸ்ரீரங்கம், திருப்பதி, மன்னார்குடி போன்ற க்ஷேத்திரங்களில் தோசை போன்ற இன்னும் பல பிரசாதங்களும் கிடைக்கும்.

அந்த ஸ்ரீ வைஷ்ணவ நண்பர் உற்சவத்திற்கு வசூல் செய்துவிட்டு எல்லோருக்கும் அழைப்பும் விடுப்பார். பெரும்பானவர்கள் உற்சவத்திற்கு வரமுடியாதத்திற்குப் பலவித காரணங்களைச் சொல்லி  விலகிக் கொள்வார்கள்.ஒரு சிலர் பிரசாத ஆசையால் உற்சவத்திற்குச் செல்வார்கள்.

அப்படி உற்சவத்திற்குச் செல்பவர்களில் தும்பிக்கையான் பெயருடைய நண்பரும் ஒருவர்.நன்றாகச் சாப்பிடக்கூடியவர்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்த ஆனைமுகச்சாமி பெய‌ருடையவர்தான்.

இந்த நண்பரின் சாப்பாட்டு ஆசையை விளக்க ஒன்றை மட்டும் கூறினால் புரிந்து கொள்வீர்கள்.கத்தரிக்காய் மலிவான சீசனில் 5 கிலோ கத்தரிக்காய் வாங்கிச் செல்வார்.அப்படி 5 கிலோ கத்தரிக்காய் மூட்டையை அவர் சைக்கிள் கேரியரில் வைக்கும் போது,

"என்ன கத்தரிக்காயை வற்றல் போடுவீர்களோ?" என்று கேட்டு விட்டேன்.

என்னை ஒரு அற்பனைப் போலப் பார்த்தார்."பிஞ்சுக் கத்தரிக்காயை வற்றல் போட்டு யாராவது வீணடிப்பார்களோ? எல்லாவர்றையும் நாலாக வகிர்ந்து, பெரிய வடை சட்டியை அடுப்பில் ஏற்றி அரை லிட்டர்   எண்ணயை
ஊற்றி, எண்ணை சூட்டானவுடன் வகிர்ந்த கத்தரிக்காயை  அதிலே போட்டு வதக்கோ வதக்குன்னு வதக்கி..."

"என்ன, ஐந்து கிலோவையும் ஒரே வேளையிலா?"

"பின்ன? நல்ல பண்டத்தை மிச்சம் வைக்கலாமா? ஐந்து கிலோவில நாலு கிலோவை நான் ஒரே ஆளு சும்மா அப்படியே சாப்பிடுவேன்"

அவர் சொல்லும் போதே எனக்கு தோல் எல்லாம் அரிப்பு எடுப்பதைப் போல உணர்வு ஏற்பட்டது.

இந்த நண்பர் உற்சவத்திற்குச் சென்றார். ஸ்ரீ வைஷ்ணவ நண்பர் இவருடைய சாப்பாடு சாப்பிடும் பெருமையை நன்கு அறிந்தவர் ஆதலால்  நன்றகக் கவனித்தார்.

மேலே சொன்ன பிரசாத வகைகளையெல்லாம் ஒருகை பார்த்தார் ஆனைமுகச்சாமி.'திருப்தியா?' என்று கேட்டால் நேரான பதில் வரவில்லை.
ஏதோ குறை இருப்பது போலத் தோன்றியது.

"என்ன குறை? என்ன குறை?" என்று கேட்டுத் தவித்தார் ஸ்ரீவைஷ்ணவர்..

நீண்ட நேர விசாரிப்புக்குப் பின்னர் தன் திருவாய் மலர்ந்து அருளினார் விநாயகர்.

"இல்லை, இந்தப் புளியோதரை நேரம் கடக்கக் கடக்கத்தான் நன்றாக எண்ணை இறங்கிண்டு ஒரு தனி டேஸ்டாக இருக்கும்...."

'ஒஹோ! இதானா? சரி வேண்டுமட்டும் புளியோதரையைக் கட்டி டவுனுக்கு எடுத்துண்டு போமேன்! இரண்டு நாள் கூட வச்சுண்டு சாப்பிடுமேன்"

சரியென்று கூறிய ஆனைமுகச்சாமி எதில் புளியோதரைக் கட்டுவது என்று ஆலோசித்தார்.இலை போன்ற எதில் கட்டினாலும் அவருக்கு அது போதும் என்று தோன்றவில்லை. மூட்டையாகக் கட்ட வேண்டும் .

'அடாடா' ஒரு அங்க வஸ்திரம் இல்லாமல் வந்து விட்டோமே' என்று அங்கலாய்த்தார்.

சட்டென்று  ஒரு யோசனை அவருக்கு மின்னல் போல் மனதில் உதித்தது.போட்டிருந்த பெரிய சைஸ் பனியனைக் கழட்டினார். ஒரு பக்கததினை ஒரு கயிறு கொன்டு கட்டினார் மறு பக்கத்தில் அகன்ற‌ வாயில் புளியோதரையை அள்ளி அள்ளி வைத்து அந்தப் பக்கத்தையும் மீண்டும் கட்டி பெரிய மூட்டை ஆக்கினார். அந்த சோற்று மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்.

"அப்புறம் நாலு நாளைக்கு அந்தப் புளியோதரைதான் எனக்கு, தெரியுமோ? பழைய புளியோதரையுடைய டேஸ்டே தனி!"

'ஆமாம்!அதிலும் உம்முடைய வேர்வை மணத்துடன் சாப்பிட்டால் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்' என்று மனதில் நினைத்துக் கொண்டேன். வெளியில் சொல்ல முடியுமோ?

இந்த வகையில் இன்னும் பல சரக்குகள் கைவசம் உண்டு. பின்னர் ஒருமுறை சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

பஞ்சவர்ணப் பேரழகி
ஆக்கம்: தனுசு- 

(சென்ற வார மாணவர் மலரில் வந்த் சகோதரி தேமொழி  அவர்களின்
வரைபட நாயகிப் பார்த்து எழுதிய கவிதை)

தேர்போல் ஆடிவரும்
தோகையில்லா மயிலே
நீ தோளனைத்து கொண்டுவருவது
உன் தோட்டத்து குடிநீரா?

தேவதைபோல் நடந்துவரும்
புள்ளியில்லா மானே
நீ சுமந்து வருவது
தயிரா? மோரா?

தாமரைப் பூப்போல் மலர்ந்துவரும்
செந்தாமரைச் செடியே
நீ பிழிந்துக் கொண்டு வருவது
பக்கத்துமலை தேனா?

வனமோகினிப் போல் கைவீசி வரும்
வெண்கல சிலையே
நீ கட்டிக் கொண்டு வருவது
கானகத்து ஈச்சங்கள்ளா?

செங்கரும்புபோல் நிமிர்ந்து வரும்
மலைஜாதி வஞ்சியே
நீ தலையில் தூக்கி வருவது
பசியாறும் கஞ்சியா?

அன்னம்போல் மெல்லப் போகும்
படித்துறை அல்லிப்பூவே
நீ அள்ளிக் கொண்டு வருவது
கறந்த பசும்பாலா?

பச்சை உடுத்தி பகலில் செல்லும்
பஞ்சவர்னமே-உன்
உச்சந்தலையில் கொண்டு செல்வது-நம்
நிச்சயம் நடத்த சந்தன மஞ்சளா?
-தனுசு-
--------------------------------------------------------------------------------------

5



சித்ரா பௌர்ணமி
ஆக்கம்: தனுசு

தனிமையின் நள்ளிரவு
என்னை சீண்டி விடுகிறது
உன்னை பாண்டியாட!
ஆனால் நீ மட்டும்
உன் ஒர விழியை தவிர
வேறுமொழி தர தயங்குகிறாய்!

கும்மிருட்டின் குளிர்காற்று
என்னை தூண்டிவிடுகிறது
உன்னை தூண்டில்போட!
ஆனால் நீ மட்டும்
உன் எல்லை தாண்டி
வர மறுக்கிறாய்!

கிச்சுமுச்சு மூட்டும் பூச்சிகள்
என்னை கிளப்பிவிடுகிறது
என் பருவத்தை உன்னுடன் பங்குபோட!
ஆனால் நீ மட்டும்
உன் புருவத்தை மட்டும் காட்டி
பதுங்கிகொள்கிறாய்!

மரம் செடி கொடியின் தூக்கம்
என்னை உசுப்பிவிடுகிறது
உன்னைகொத்திக் கொண்டு போக!
ஆனால் நீ மட்டும்
முகம் பொத்திக் கொண்டு
வெட்கத்திலெயே விலகுகிறாய்! 

குளத்து மேட்டில் ஒத்தையாய் நானிருக்க
எனக்கு தாகம் தருகிறது
உன் குளுமை தேகம் !
ஆனால் நீ மட்டும்
காய்ந்துக் கொண்டு இருக்கிறாய்
கண்களுக்கு மட்டுமே விருந்தாகி!

ஓடி ஆடி மறைக்கும் மேகங்கள்
என்னோடு மல்லுக்கு வருகின்றன
உன்னை ரசிக்க விடாமல்,
ஆனால் நீ மட்டும்
மேகத்திடம் சொல்ல தயங்குகிறாய்
சிலமணித்துளிகள் விலகி இருக்க.

ஒய்ந்திருக்கும் தூதர்களே-இன்று
சித்திரை பௌர்ணமி எனும்
நிலாக் காதலியின் திருவிழா!
எழுந்து இங்கு வாருங்கள்
மேகங்களை விரட்டுங்கள்-என்
மேகலையை முழுமையாய் காட்டுங்கள்.
-தனுசு-
To add picture sent by thanusu
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
6

உங்கள் வேலைதான் கடினமா? இதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!!!!
 படங்களை அனுப்பி நம்மைக் கேட்பவர்: ஜி.ஆனந்தமுருகன்

மலைப்பாம்பைப் பிடிக்கும் தொழில் செய்பவர்கள்

 1



 2



 3



 4


 5

 6

 7

 8

 9

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7

True Love
By S.Sabari Narayanan, Chennai

Husband comes home drunk and breaks some crockery, vomits and falls down on the
floor

Wife pulls him up and cleans everything.Next day wen he gets up he expects her to be really angry with him....He prays that they should not have a fight

He finds a note near the table

"Honey..your favorite breakfast is ready on the table,i had to leave early to buy
grocery"

i will cum running back to you, my love.

I love you....!!!!!!

He gets surprised and asks his son..what happened last night?

Son told..."when mom pulled you to bed and tried removing your boots and shirt..you were dead drunk and you said: " Hey Lady ! Leave Me Alone...I M Married!!!"

That is true Love...!!!!!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி!

சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.
- புத்தர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
வாழ்க வளமுடன்!

76 comments:

  1. ஆக்கங்கள் மேற்பார்வைக்கே அசத்தலாக இருக்கின்றன. படித்துவிட்டுப்பின்னூட்டம் இடுகிறேன்.

    ஹி ஹி... வகுப்பறையில் முதல் பின்னூட்டம் இட்டு நாளாகிவிட்டதால் இன்று இப்படி.ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. கவிஞர் மருதகாசி தமிழ்த்திரையுலகில் அசத்திய முதல் கவிஞர். கண்ணதாசனுக்கும் மிக முந்தியவர். அவருடைய கவிதைகள் இசைக்கு மட்டுமல்லாமல், கவிதையின் தரத்துக்கும் பாராட்டுகள் பெற்றவை. கோவையில் எடுக்கப்பட்ட பல படங்களில் அவர் பாடல்கள்தான். "மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" பாடல் இன்றும் பிரபலமாக இருக்க அந்தப் பாட்டின் உட்கருத்துதான். நல்ல பதிவு. மேலும் பல பாடல்கள் விடுபட்டுவிட்டதாக நினைக்கிறேன். டி.ஏ.மதுரம் பாடிய "நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி" எனும் பாடல் என்றென்றும் படித்துப் பார்க்க வேண்டியது. கை சித்திரம் மட்டுமல்ல, சொற்சித்திரம் வரைவதிலும் வல்லவர் என்பதைக் காட்டிவிட்டார் தேமொழி. நண்பர் கே.எம்.ஆர் குறிப்பிட்டுள்ள அந்த புளியோதரைப் பிரியர் இப்போது உயிரோடு இல்லை. என் மகன் திருமணத்துக்கு முதல் நாளே வந்து விட்டார். மறு நாள் திருமணம் முழுதும் இருந்தார். மூன்றாம் நாள் பகல் உணவு முடிந்து நாங்கள் புறப்பட்டு விட்டோம். இவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். என்ன ஸ்வாமி நீங்கள் புறப்படவில்லையா என்றேன். இல்லப்பா! நாகையநல்லூர் சமையல்காரர்கள் சாப்பாடு மிகமிக அருமை. இன்றும் நான் மட்டும் இங்கே இருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தங்கி விட்டார். என் சம்பந்தியும், அவர் இருக்கட்டும் நாங்கள் நன்கு கவனித்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார். எத்தனை நாட்கள் அங்கு இருந்தாரோ? மரியாதைக்குரிய பார்வதி அவர்கள் வழக்கம் போல ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். பட்டினத்தார் போன்ற சித்தர் பெருமக்களின் படைப்புக்களை அவர் விரும்பிப் படித்திருப்பது புரிகிறது. வகுப்பறைக்குக் கிடைத்த அரியதோர் பொக்கிஷம் அவர் என்று நினைக்கிறேன். பயனுள்ள மிக உயர்ந்த கட்டுரை. ஓவியர் தேமொழி அவர்களின் படத்துக்கு சிறப்பான கவிதையைத் தந்துவிட்டார் கவிஞர் தனுசு. மிகவும் அற்புதமான கற்பனை, பொருத்தமான சொற்கள், நிறைவில் நம் திருமண நிச்சயத்துக்கு மஞ்சளும் சந்தனமுமா அதில் என்கிறார். மகாகவி பாரதி ஆசிரியர் சுப்புரத்தினத்தை அவர் எழுதிய கவிதையைக் கேட்டுச் சொன்னது "பலே! நீ கவிஞன்" என்று. அந்த வாக்கு பின்னாளில் அவரை பாரதிதாசனாக ஆக்கியது. தனுசு, "நீங்கள் கவிஞன்" என்று வகுப்பறையில் அனைவரும் சொல்வது என் காதுகளில் கேட்கிறது. கணவன் ஏகபத்தினி விரதன் என்பது தெரிந்ததும் மனைவி செய்யும் உபசாரங்கள் மிக அருமையான துணுக்கு. மலைப்பாம்பு பிடிக்கும் ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கை பிரமிக்கத் தக்கது என்றாலும் அவர்களது ஏழ்மை பரிதாபத்துக்குரியது. இந்த வார மலர் மிக உயர்ந்தது.

    ReplyDelete
  3. கவிஞர் மருதகாசியின் பாடல் பட்டியலில் உள்ள அத்தனை பாடல்களையும் அதனதன் 'ட்யுனு'டன் என்னால் நினைவு படுத்திக் கொள்ள முடிகிறது.அப்போ என் வயது....?

    "நாளும் யாதவர்" என்றால் 'எப்போதும் கோனார்' என்று பொருள் படும். அவர் உடையாரா? கோனாரா? அல்லது இரண்டுமே ஒன்றுதானோ?

    'யாத்தவர்' என்று இருக்க வேண்டியது ஒற்றை இழந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்தீர்களா?

    தொகுப்பு ஆக்கம் நல்ல முயற்சி. அளித்த அம்மணிக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. சமீப காலமாக வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் 'ஆப்செண்ட்'. காரணம் தெரியவில்லை. ஜப்பான் மைனரும், சிங்கப்பூர் ஆலாசியம் அவர்களும்தான் அவர்கள். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    ReplyDelete
  5. பார்வதி அம்மையை மேலும் மேம்பட்ட அறிவுள்ளவராக, இறை ஞானமுள்ளவராகக் காட்டுகிறது பத்திரிகிரியாருக்கு அவர் அளித்துள்ள விளக்க‌ம். நானெல்லாம் அவர் அருகில் கூட நெருங்க முடியாது.

    இவ்வளவு சிக்கலான‌ குண்டலினி, இன்று வட்டிக்கடை வைத்திருப்பவர் கூட சர்வ
    சாதாரண‌மாக குண்டலினி, ஓஜஸ் அது இது என்று டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேசக்கூடிய நிலை வந்துவிட்டது. நான் இன்னும் 10 பிறவிகளுக்குப் பின்னர் குண்டலினி யோகம் பழகுவேனோ என்னமோ? யார் கண்டார்கள், பத்து பிறவிக்கப்புறம் நான் மனிதப் பிறவியோ, புழுவோ?

    ReplyDelete
  6. என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி. உடனே படித்து சூட்டோடு பின்னூட்டம் இட்ட தஞ்சாவூராருக்கும் நன்றி. கோபாலன்ஜி வீட்டுத் திருமணம் போல எங்கள் வீட்டு மூன்று திருமணங்களிலும் ஆனைமுகச்சாமி நன்றாக அனுபவித்து நிறையச் சாப்பிட்டார். அவரை கவனிக்கும் பொறுப்பை ஒரு சிறப்பு உபசரிப்பாளரை நியமித்து நிறைவேற்றினேன்.'இவர் போதும் என்று சொல்லும் வரை நிறுத்தக்கூடாது' என்று ஆணை பிறப்பித்தேன். அசோகா, கேசரி போன்ற ஐயிட்டங்கள் மீண்டும் செய்ய வேண்டி இருந்தது என்று பரிசாரகர் கூறினார்.

    இந்த ஆக்கம்(உண்மைதான் என்றாலும்) நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யாரும் தவறாகப் பொருள் கொண்டு சண்டைக்கு வராதீர்கள்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. "மார்க் கச்சை இறுக்கிக் கட்டிய
    மரகதப் பச்சையே
    மண்பானை அமுதம் மட்டும் பருக
    எனக்கு இச்சையே!"

    இது எப்படி இருக்கு?! ஹி ஹி ஹி....

    தனுசுவின் கற்பனை வானம் போல, கடல் போல விரிகிறது! ஒரு கவிஞரை
    வகுப்பறை வளர்ப்பதை கண் முன் காண்கிறோம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நிலாக் காதலியைப்பற்றிய கவிதையும் நல்ல கற்பனை.வாழ்க கவிஞர் தனுசு!

    மலைப் பாம்பு பிடிக்க வளைக்குள் செல்லும் மனிதனும் அவனை வெளியே இழுக்கக் காத்திருக்கும் அவன் தோழனும் மனதைத் தொட்டனர்.தலைகுப்பற இழுத்தால் முகம் எல்லாம் சிராய்த்து விடாதோ? படங்களை அனுப்பிய நண்பர் ஆனந்தமுருகனுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. A good joke Sabari! Yes! a lady cherishes her husband's chastity ignoring his other weaknesses!

    ReplyDelete
  11. மருதகாசியின் வரலாறு எதிர்பார்க்காத ஒன்று.நல்ல தகவல்கள்.

    தலைவர் படப் பாடல் எல்லாம் எனக்கு தெரிந்த பாடல்களே. மேலும் வண்ணக்கிளி படப் பாடல்களும் மிகவும் பிரபலமான பாடல்கள், சித்தாடை கட்டிக்கிட்டு பாடல் என்றென்றும் காலத்தால் அழியாதது. சிதம்பரம் ஜெயராமன் குரலில் வந்த வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி பாடலும் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    அதுசரி தேமொழி வயதை குறைத்து சொல்லி இங்கே ஆகப்போவதென்ன.

    உங்களுக்கு எத்தனை பாட்டு பிடித்திருக்கிறதென்று சொல்லவில்லையே.

    ReplyDelete
  12. பார்வதி அவர்களே நான் குண்டலினியோகம் என்று முன்பு எங்கேயோ பாடிக்கும்போது இது தெய்வாம்சம் பெற ஜாதகத்தில் அமைந்திருக்கும் ஒரு யோகம் நினைத்துக் கொண்டேன்.

    "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" இதை நான் படித்துக் கொன்டு இருக்கிறேன், நீங்கள் செய்து காட்டிக் கொண்டு இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  13. குருவிற்கு வணக்கம் ,

    இன்றைய மாணவர் மலர் தேன்மொழியால் ஆலங்கரிக்கின்றன கவிஞர் மருதகாசி ஆவர்களின் பாடல்களை நினைவுபடுதிள்ளார் (விவசாயி ,பாகப்பிரிவினை) கடவுள் என்னும் முதலாளி.ஓயற்றுமையாய
    வாழ்வதாலே உண்டு நன்மையே
    தேன்மொழிக்கு நன்றி

    தேன்மொழி படத்துக்கு தனுசுவின் கவிதை அருமையானது
    நன்றி மனவமலரை அலங்கரித்தவர்களுக்கு

    மனிதன் தெய்வமாகலாம் குண்டலினி யோகம் பார்வதி ராமசந்திரன் ஆக்கம்
    பங்களுரிளிருது அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  14. கிருஷ்னன் சார்
    பூளியோதரை, நமக்கு மிகவும் பிடித்த சாப்படு. அதற்கு தொட்டுக் கொள்ள பகோடா, மசால்வடை,வாழைகாய் பொரியல், உருளைக்கிழங்கு பொரியல் போன்றவையும் இருந்தால் இன்னும் ஒரு வெட்டுதான்
    .

    அத்துடன் எனக்கு லெமன் ரைஸ், தயிர்சாதம் போன்றவையும் பிடிக்கும் இதற்கும் மேலேசொன்ன சைடு டிஷ்ஷுடன் .சிக்கன் மசால் இருந்தால் வண்டி இன்னும் இழுக்கும்.

    ReplyDelete
  15. எனது இரு ஆக்கங்களையும் வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. மலைப்பாம்பை பிடித்து
    மாலையாக போட்டுக் கொள்ளும்
    இந்த மலை ராஜாக்களின் தைரியம்
    அப்பப்பாதான் .

    இந்த டாக்குமென்ரி முன்பு பார்த்ததாக ஒரு நினைப்பு.

    படங்களை தந்த அனந்தமுருகனுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. சபரி இந்த வாரம் தப்பிச்சிட்டார்.கடசி வரி அவரை காப்பற்றிவிட்டது.

    போதையில் உள்மனதில் உள்ளதை தான் பேசுவார்கள் என்பது சரியாக உள்ளது.

    அதனால் தான் கள்ளாலானுலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் என்று அந்த பெண் காலை சாப்பாட்டை தயர் செய்து வைத்துவிட்டு கிராக்கரி வாங்க போய் உள்ளார்.

    தாய்குலத்திடம் வாராவாரம் திட்டு வாங்கிய சபரி இந்த வாரம் ஓட்டு வாங்கிவிட்டார்.

    ReplyDelete
  18. Thanjavooraan said...சமீப காலமாக வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் 'ஆப்செண்ட்'. காரணம் தெரியவில்லை. ஜப்பான் மைனரும், சிங்கப்பூர் ஆலாசியம் அவர்களும்தான் அவர்கள். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    மைனர் தன் பெற்றோர் மற்றும் தன் மனைவியின் பெற்றோர் ஜப்பான் வந்திருப்பதால் வகுப்பறைக்கு விடுமுறை என்று சொன்னார்.அதனை தேமொழி அவர்கள் பின்பு ஒருமுறை கீழ்கண்டவாரு சொன்னார்'

    "மைனர் தன் பெற்றோரின் இயக்கத்தில் உத்தமபுத்திரன் படம் நடிக்க போயுள்ளார்'

    ஆலாசியம் தெரியவில்லை, நானும் அவரை வாராவாரம் எதிர்பார்க்கிறேன்,

    ReplyDelete
  19. குண்டலினி யோகம்
    இன்று பலரால் உச்சரிக்கபடும்
    பெயராகும்
    பதஞ்சலி முனிவர்
    தன்னுடை பதஞ்சலி யோக
    சூத்திரத்தின் சமாதிபாதம்
    முதல் ஸ்லோகமாக
    அத யோகானுஶாஸனம் || 1 |
    என்று ஆரம்பிக்கிறார்'
    அதாவது இங்கு யோகம்
    ஆரம்பம்
    என்று பொருளாகும்
    கவனிக்கவும் யோகம்
    என்பது இறந்த
    காலத்திலோ எதிர்
    காலத்திலோ நிகழ்வது அல்ல
    நிகழ்காலத்தில்
    நிகழ்வதே யோகம்.
    யோகஶ்சித்தவ்றுத்தி னிரோதஃ
    || 2 ||
    சித்தவிருத்திகளை நிறுத்தி கர்மாக்களை அழித்து பிறவா பெரும்
    நிலை தருவதே யோகமாகும்.
    Om Saravanabavaya Namahaa

    ReplyDelete
  20. /////////thanusu said...
    Thanjavooraan said...சமீப காலமாக வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் 'ஆப்செண்ட்'. காரணம் தெரியவில்லை. ஜப்பான் மைனரும், சிங்கப்பூர் ஆலாசியம் அவர்களும்தான் அவர்கள். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    மைனர் தன் பெற்றோர் மற்றும் தன் மனைவியின் பெற்றோர் ஜப்பான் வந்திருப்பதால் வகுப்பறைக்கு விடுமுறை என்று சொன்னார்.அதனை தேமொழி அவர்கள் பின்பு ஒருமுறை கீழ்கண்டவாரு சொன்னார்'

    "மைனர் தன் பெற்றோரின் இயக்கத்தில் உத்தமபுத்திரன் படம் நடிக்க போயுள்ளார்'

    ஆலாசியம் தெரியவில்லை, நானும் அவரை வாராவாரம் எதிர்பார்க்கிறேன்,////////

    அன்புடன் நினைவு கூர்ந்த வகுப்பறையின் சக வாசகர்கள் அனைவருக்கும் நன்றி..வந்திருந்த நால்வரும் ஜப்பானின் நல்ல இதமான வசந்த காலத்தை அனுபவித்து சென்னைக்குத் திரும்பி ஒரு நாள்தான் ஆகிறது..அவ்வப்போது வகுப்பறைப் பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருந்தேன்..கமென்ட் அடிக்க நேரமில்லை..வாத்தியாரும் மீள்பதிவையே தொடர்ந்து கொண்டிருந்தமையாலும், நல்ல ஆக்கங்களாக இருந்தபோதிலும் ஆன்மீகவாதிகளின் ஆ(தி)க்கம் வாரமலரை ஆக்கிரமித்திருந்ததாலும் அடிப்படையில் மாற்றுக்கருத்துகள் மனதிலே எழுவதால் தொடர்ந்து லயித்து படித்து கமென்ட் அடிக்க முடியவில்லை..அதனாலேதான் அவைக்கு வெளியிலிருந்தே ஆதரவை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  21. நான் 'லைட் வையிட்' ஆக்கம் தான் கொடுத்து வருகிறேன். ஆன்மீகமெல்லாம் சொல்வதை பக்திமலர் நிறுத்தியவுடன் கூடியவரை தவிர்த்தே வந்துள்ளேன்.

    மைனர் என்னையும் ஆன்மீக ஆதிக்கவாதியாகக் காண்கிறாரோ என்று அறிய ஆவல். நீங்கள் வராததால் டெல்லியும் 'எஸ்கேப்' போல.

    எதிலும் மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தே வந்துள்ளோம். எனவே எதிர்கட்சித் தலைவரைப் போல அவைக்கு வருவதைத் தவிர்ப்பதைக் கைவிடவும், மைனர். நீங்கள் கண்ணை உருட்டவும், நாக்கைத் துருத்தவும், மேஜையைக் குத்தவும் உங்களூக்கு அனுமதி பெற்றுத் தருகிறோம். எனவே அவைக்கு வந்து உங்கள் ஜனநாயகக் கடைமையைச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

    ReplyDelete
  22. ///////// kmr.krishnan said...
    நான் 'லைட் வையிட்' ஆக்கம் தான் கொடுத்து வருகிறேன். ஆன்மீகமெல்லாம் சொல்வதை பக்திமலர் நிறுத்தியவுடன் கூடியவரை தவிர்த்தே வந்துள்ளேன்.

    மைனர் என்னையும் ஆன்மீக ஆதிக்கவாதியாகக் காண்கிறாரோ என்று அறிய ஆவல். நீங்கள் வராததால் டெல்லியும் 'எஸ்கேப்' போல.

    எதிலும் மாற்றுக் கருத்துக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தே வந்துள்ளோம். எனவே எதிர்கட்சித் தலைவரைப் போல அவைக்கு வருவதைத் தவிர்ப்பதைக் கைவிடவும், மைனர். நீங்கள் கண்ணை உருட்டவும், நாக்கைத் துருத்தவும், மேஜையைக் குத்தவும் உங்களூக்கு அனுமதி பெற்றுத் தருகிறோம். எனவே அவைக்கு வந்து உங்கள் ஜனநாயகக் கடைமையைச் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.////////
    what about 'mic on' rights?

    ReplyDelete
  23. என் கட்டுரையை வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றி. கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி. குறிப்பாக உதய குமார் அவர்களுக்கு நன்றிகள் பல. பொதுவாக மாணவர் மலர் எழுத்தாளர்களே ஒருவரை விமரிசிப்பதால் உங்கள் பாராட்டு மேலும் புத்துணர்வு அளிக்கிறது. நன்றி. தஞ்சாவூர் ஐயா, KMRK ஐயா, தனுசுவுக்கும் நன்றிகள் .
    பிழையைக் குறிப்பிட்ட KMRK ஐயா அவர்களுக்கு நன்றி. பிறகு மேலும் பல பிழைகள் கண்களில் பட்டது, திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.
    பிழை திருத்தி வாசிக்க வேண்டிய இடங்கள் ....
    வாய்புகள் இவரை நாடிவர ---> வாய்ப்புகள் இவரை நாடி வர
    எம்மதத்திற்கும் போதுவேன்னும் ---> பொதுவென்னும்
    நாளும் யாதவர் ---> யாத்தவர்
    குறிப்பு நூலோன்றிலும் --->நூலொன்றிலும்

    அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மைனரை பார்த்ததில் மகிழ்ச்சி. கடிதம் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வந்தவர் கருத்து தெரிவிக்காமல் சென்றது வருத்தம்தான்.

    ReplyDelete
  24. சுத்தம்..பார்வதி எனக்கும் குண்டலினிக்கும் உள்ள தூரம் அளவிட முடியாதது என்று தெரிந்துகொண்டேன். . படித்தேன், ரசித்தேன், புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் ஷோபி பார்த்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்காது. நீங்கள் மிகப் பெரிய ஆள் என்று மட்டும் தெரிகிறது.
    என்னால் ஒரு நிமிடம்கூட மனதை ஒரு நிலை நிறுத்த முடியாது. சிரமம். உங்கள் கட்டுரை முயற்சி செவிடி காதில் ஊதிய சங்கு போல ஆயிற்று. ஆனால் தனுசுவுக்கு நான் பரவாயில்லை, இது யோகிகள் செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறேன். உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப் பார்த்து நிம்மதி அடைகிறேன். நல்ல நேரம் நீங்கள் குறிப்பிட்ட "சித்திகள் கைவரப்பெற்று" என்பதை சித்தப்பாவின் சித்தி என்று தனுசு நினைக்காமல் இருந்தாரே. எப்படி இதெல்லாம் படித்து நினைவில் வைத்திருபீர்களோ ..ஆச்சர்யம். போகர் வேறு மேற்கோள் எல்லாம் காட்டுகிறார்.
    அப்பு என்றால் நீர்? எனக்குத் தெரிந்த அப்பு, ஏஷியாட் கேம் மஸ்காட் யானைக்குட்டிதான்.

    ReplyDelete
  25. வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா ....KMRK ஐயாவின் நகைச்சுவை கட்டுரையில் வரும் உணவுப் பிரியரின் உடல்வாகு எப்படி இருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆவல். உணவைக் கண்ணால் பார்த்தாலே எடை எகிறிவிடும் என்று சொல்லும் வகையை சேர்ந்த ஆள் நான் என்பதால் இந்த ஆர்வம். அவர் அம்மா நன்கு சமைத்திருப்பார் எனத் தெரிகிறது. மற்ற சரக்குகளுக்கும் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  26. ஆனந்தமுருகன் படங்கள் இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை, இதயமற்ற மனிதர்களுக்கு இதெல்லாம் வாடிக்கை ..என்ற வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. பாவம் பாம்பு, தரைக்கடியில் ஒளிந்து கொண்டாலும் விட மாட்டார்களா?
    சபரியின் நகைசுவை பெண்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள் என்பதை உறுதி படுத்துகிறது.
    ________________

    நீர், தயிர், மோர், பால், தேன், கஞ்சி, மஞ்சள் நீர் சரி...."நீ கட்டிக் கொண்டு வருவது கானகத்து ஈச்சங்கள்ளா?" இதை நான் எதிர்பார்க்கவில்லை தனுசு :))))))))
    என் படம் உங்களால் ஒரு கவிதையைத் தந்தது மகிழ்ச்சி.
    "ஓடி ஆடி மறைக்கும் மேகங்கள்
    என்னோடு மல்லுக்கு வருகின்றன
    உன்னை ரசிக்க விடாமல்"
    என்ற வரிகள் நன்றாக இருக்கிறது.

    ////thanusu said...அதுசரி தேமொழி வயதை குறைத்து சொல்லி இங்கே ஆகப்போவதென்ன.
    உங்களுக்கு எத்தனை பாட்டு பிடித்திருக்கிறதென்று சொல்லவில்லையே.///

    எதை எடுப்பது, எதை விடுப்பது தனுசு..."அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே" பாடலை மந்திரி குமாரியில் (1950) ஆரம்பித்து பெயர் தெரியாத யாரோ ஒரு மாடு ஓட்டுபவருக்கு டி.எம்.எஸ். முதன் முதலில் திரைப்படத்திற்காக பாடிய பாடலில் இருந்து "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு ட்ரியோ...ட்ரியோ..." பாடல்களில் எந்தப் பாடலை விடுவது. அந்த சிரமத்தினால்தான் 50 பாடல்களை பட்டியலிட்டேன். மற்ற பாடகர்கள் பாடியத்திலும் அருமையான பாடல்கள் இருக்கிறது. வாழ்வில் பாட்டுப் பைத்தியமாக இருப்பதால் ஏற்பட்ட இனிமையான இன்னல்.

    ReplyDelete
  27. கடைசி நிமிடத்தில் அனுப்ப நேர்ந்தாலும் எனது ஆக்கத்தை ஏற்றுக் கொண்டு வெளியிட்ட வாத்தியார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  28. சகோதரி தேமொழி கேட்ட விவரம் இதோ. கே.எம்.ஆர். குறிப்பிட்ட அந்த சாப்பாட்டுப் பிரியரின் உடல் விநாயகரை நினைவு படுத்தக் கூடியது. நிறமும் அப்படியே. பாவம் குழந்தை மனம் அவருக்கு. ஒரு முறை மாடியில் நின்று முருங்கைக்காய் பறிக்கும் போது தவறி கீழே விழுந்தார். விழுந்த இடம் குளியலறை ஆஸ்பெஸ்டாஸ் கூறையில் விழுந்து அதுவும் உடைந்து குளியலறையில் பொத்தென்று விழுந்தார். ஒரு அதிசயம் என்னவென்றால், அவர் உடலின் ஊளைச் சதையால் அவருக்கு எந்த அடியும் படாமல் எழுந்து நின்றதுதான். இதெல்லாம் குற்றம் காணாத பழைய நினைவுகள் தான்.

    ReplyDelete
  29. அடுத்ததாக, தேமொழி அவர்களுக்கும் என் நன்றி. இம்முறை நான் ஜி. மெயிலில் அனுப்பினேன். சரியாக வந்திருக்கிறது.

    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களை மீண்டும் பார்க்க முடிந்ததில் மட்டற்ற
    மகிழ்ச்சி. நெடுநாள் பழகிய நண்பரை மீண்டும் பார்த்த சந்தோஷம் ஏற்பட்டது. கமென்ட் அடிக்க விருப்பமில்லாவிட்டால், உங்கள் இருப்பையாவது உணர்த்தி விட்டுச் செல்லுங்கள். கருத்துக்களுக்குத் தான் மோதலே தவிர நட்புக்கல்லவே.
    ஆன்மீக சம்பந்தமாக ஆக்கங்கள் தருபவர்கள் ஆன்மீக வாதிகளே அன்றி ஆதிக்க வாதிகளல்ல. ஆகவே, வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  30. Thanjavooraan said..தனுசு, "நீங்கள் கவிஞன்"

    தாங்களின் ஆசிர்வாததிற்கு நன்றிகள் அய்யா

    .நீங்களும் வாத்தியாரும் கொடுக்கும் ஊக்கம் தான் இதற்கு அடிப்படை .

    ReplyDelete
  31. kmr.krishnan said...
    மார்க் கச்சை இறுக்கிக் கட்டிய
    மரகதப் பச்சையே
    மண்பானை அமுதம் மட்டும் பருக
    எனக்கு இச்சையே!"

    நான் நாற்பது வரிகளில் சொன்னதை நீங்கள் நாலே வரிகளில் சொல்லி செம "கிக்"கொடுத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  32. kmr.krishnan said...ஒரு கவிஞரை
    வகுப்பறை வளர்ப்பதை கண் முன் காண்கிறோம். பாராட்டுக்கள்.
    "நிலாக் காதலியைப்பற்றிய கவிதையும் நல்ல கற்பனை.வாழ்க கவிஞர் தனுசு!"//////

    உங்களின் பாராட்டுக்கள் தான் என்னை வளர்கிறது மெருகூட்டுகிறது. முன்பெல்லாம் ஓய்வான நேரத்தில் Facebook ,twitter, game என்று கழிப்பேன் . இப்போது அந்த பக்கம் போவதே இல்லை .மற்றும் நம் வகுப்பறை நண்பர்களின் பின்னூட்டங்களும் என்னை உற்சாகப் படுத்திகின்றன

    நன்றி கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  33. திரைக்கவித்திலகம் மருதகாசியை நினைவுகூர்ந்து, அவர் பாடல்களைத் தொகுத்துக் கொடுத்த தேமொழிக்கு நன்றி. பெரியவர் திரு.தஞ்சாவூரார் சொன்னதைப் போல், பல பாடல்கள் விடுபட்டிருந்தாலும், நாலாயிரம் பாடல்களில் மறக்க முடியாத சிலவற்றைத் தந்திருக்கிறீர்கள்.

    பட்டியலில் இல்லாத, எனக்குப் பிடித்த மேலும் சில பாடல்கள்,

    கண்ணாளன் வருவான் (சர்வாதிகாரி)
    இன்று போய் நாளை வாராய்.. (சம்பூர்ண ராமாயணம்)
    'நீயே கதி ஈஸ்வரி (அன்னையின் ஆணை)
    இது தான் உலகமடா (பாசவலை)
    சுயநலம் பெரிதா, பொது நலம் பெரிதா (யார் பையன்)
    அழகான பொண்ணுநான் அதுக்கேத்த கண்ணுதான் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்)
    கோடி கோடி இன்பம் பெறவே (ஆட வந்த தெய்வம்)
    ஆனாக்க அந்த மடம்… (ஆயிரம் ரூபாய்)
    ஆளை ஆளைப் பார்க்கிறாய் (ரத்தக்கண்ணீர்)
    சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு (ராஜா ராணி)

    //வாழ்வில் பாட்டுப் பைத்தியமாக இருப்பதால் ஏற்பட்ட இனிமையான இன்னல்.//

    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ( நான் பெற்ற செல்வம்), அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை (அன்னையின் ஆணை) போன்ற பல அருமையான பாடல்களைத் தந்த கவி கா.மு.ஷெரீப்,

    தண்ணிலவு தேனிறைக்க,(படித்தால் மட்டும் போதுமா), காகித ஓடம் கடலலை மீது (மறக்க முடியுமா), சித்திரப்பூவிழி வாசலிலே( இதயத்தில் நீ), நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ (பந்தபாசம்) போன்ற அற்புதப்பாடல்களைத் தந்த‌
    கவிஞர் மாயவநாதன்,

    யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி) போன்ற‌
    பல மறக்கமுடியாத பாடல்களைத் தந்த கவிஞர். கு. மா. பாலசுப்பிரமணியம் போன்றோரையும் நினைவு கூர்ந்தால் மகிழ்வேன்.

    அப்புறம் ஒரு விஷயம். தாங்கள் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள பாடல்கள் அனைத்தும் அறிவேன். பல பாடல்களுக்கு மேல், முழுவரிகளும் ஞாபகம் இருக்கிறது. நான் நாற்பதை நெருங்குகிறேன். சிறு வயதில், தொடர்ந்து கேட்டதாலேயே பல பாடல்கள் நினைவில் உள்ளன. நன்றி.

    ReplyDelete
  34. Udhaya Kumar said...
    தேன்மொழி படத்துக்கு தனுசுவின் கவிதை அருமையானது

    பாராட்டுக்கு நன்றிகள் உதயகுமார்.

    ReplyDelete
  35. minorwall said...அதனாலேதான் அவைக்கு வெளியிலிருந்தே ஆதரவை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

    உமாவும் இல்லாமல் அவைக்குள் kmrk தனி ஆளாக இருந்து கலகலப்பு தர திணறுகிறார் .தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  36. திரு.கே.எம். ஆர் அவர்களின் ஆக்கம் மிகுந்த ரசனையுடன் கூடியதாக இருந்தது.
    கத்தரிக்காய் வதக்க அரை லிட்டர் எண்ணெயா!!!!.
    அக்காலத்தில் சாப்பாட்டுப்பிரியர்கள் அதிகமாக இருந்ததற்கு விலைவாசியும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இப்போது போல், எண்ணெயை நினைத்தாலே, கொலஸ்ட்ரால் வராத உடல் தெம்பும் ஒரு காரணமாக இருக்க முடியும்.

    // ஸ்ரீரங்கம், திருப்பதி, மன்னார்குடி போன்ற க்ஷேத்திரங்களில் தோசை போன்ற இன்னும் பல பிரசாதங்களும் கிடைக்கும்.//

    இதில் அழகர் கோவில் ஆனையடி அப்பம் ( யானையின் தடம் அளவு பெரிய சைஸ்), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சர்க்கரை(முந்திரி)ப்பொங்கல் என
    லிஸ்ட் நீளும். மேலும் தங்களிடமிருந்து பல "சரக்குகளை" எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  37. தேமொழி said..சித்திகள் கைவரப்பெற்று" என்பதை சித்தப்பாவின் சித்தி என்று தனுசு நினைக்காமல் இருந்தாரே.

    ////ஆனால் தனுசுவுக்கு நான் பரவாயில்லை, /////

    நான்,ராமாயணம், மகாபாரதம் கூட பள்ளியில் பாடங்களாய் வந்த பகுதி மட்டும்தான் தெரிந்து வைத்திருக்கிறேன் .

    பார்வதியின் ஆக்கம் படிப்பதற்கு தலையில் ஏதாவது இருக்க வேண்டும் .அது எவ்வளவு என்றால் இன்று நீங்கள் குன்டலிக்காக இட்ட பின்னூட்டத்தை நானும் டிட்டோ செய்துக் கொள்ள வேடியதுதான்.

    ஆனால் பார்வதியின் ஆக்கத்தை படிக்கும் போது அவர்மீது மட்டற்ற மரியாதை தினம் தினம் கூடுகிறது.
    .

    ReplyDelete
  38. தனுசுவின் கவிதைகளைப் பற்றிச் சொல்ல இனி வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும். எத்தனை நாள் அருமை!!, அற்புதம் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது?!!!!.
    தேமொழியின் படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் வார்த்தையால்
    நிரப்பி இருக்கிறீர்கள்.

    நிலவுக்கவிதை, "என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்) பாடலை நினைவுபடுத்தியது. நீங்கள் பாடியதைக் கேட்டு வெட்கப்பட்டே, மேகங்களால் தன் முகத்தை மூடி மறைத்திருக்கும் நிலவு. ஆகவே, தூதர்களை மேகங்களை விலக்கக் கேட்பதை விட்டு விட்டு, மேகலையிடமே, திரை விலக்கக் கேளுங்கள்.

    //"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" இதை நான் படித்துக் கொன்டு இருக்கிறேன், நீங்கள் செய்து காட்டிக் கொண்டு இருக்கிறிர்கள்.//

    தெரிந்த ஆன்மீக விஷயங்களை பலரும் தெரிந்து கொள்ளவும்/பயன் பெறவும் எழுதி வருவதைப் பாராட்டிய மேன்மைக்கு நன்றி. உண்மையில் ஒரு குழுவாகச் சேர்ந்து பல நற்காரியங்களைப் பெங்களூரில் செய்தும் வருகிறோம்.

    //பார்வதி அவர்களே நான் குண்டலினியோகம் என்று முன்பு எங்கேயோ பாடிக்கும்போது இது தெய்வாம்சம் பெற ஜாதகத்தில் அமைந்திருக்கும் ஒரு யோகம் நினைத்துக் கொண்டேன்//

    அப்படி அல்ல. யோகக்கலையில் ஆர்வம் உள்ள பலர் , குறிப்பாக இல்லறத்தார் பலர் இதை முயற்சி செய்து வருகிறார்கள். நிறைய பேர் வெற்றி கண்டும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  39. பாம்பைப்பிடிக்கும் படங்கள் பார்க்கப் பயமாக இருந்தாலும் பிடித்தவர்களின் துணிச்சல் அசாத்தியம். ஆனால் பிடித்தபிறகு இதை என்ன செய்வார்களோ என்று நினைக்கவே வேதனையாக இருந்தது.

    சபரிக்கு இந்த முறை ஃபுல் மார்க் கொடுத்தாச்சு.

    ReplyDelete
  40. எனது ஆக்கத்தைப் பாராட்டிய திரு. உதயகுமார் அவர்களுக்கு நன்றி.

    //யோகஶ்சித்தவ்றுத்தி னிரோதஃ//

    மிகச்சிறந்த மேற்கோள்களுடன் பின்னூட்டமிட்ட திரு. போகர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.

    ReplyDelete
  41. தேமொழி said...நீ கட்டிக் கொண்டு வருவது கானகத்து ஈச்சங்கள்ளா?" இதை நான் எதிர்பார்க்கவில்லை தனுசு :))))))))

    இந்த ஈச்சங்கள்ளைப் பற்றி ஒரு தகவல் அதனை தெரிந்தவர் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆப்ரிக்க அரபு (சூடான்,மற்றும் அதற்கு பக்கத்து) நாடுகளில் இந்த கள் தான் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு வரவேற்று முதலில் கொடுக்கும் பானம்.(WELCOME DRINKS ). இதில் போதை இருக்காது. நம் ஊரில் வெயில் நேரத்தில் கொடுக்கும் மோரைப் போன்றது.

    பாராட்டுக்கு நன்றிகள் தேமொழி.

    ReplyDelete
  42. எனது ஆக்கத்தைப் படித்து, தங்களது மேலான கருத்துக்களை அளித்த பெரியவர் திரு. தஞ்சாவூரார் அவர்களுக்கும். திரு. கே.எம்.ஆர் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    //நான் இன்னும் 10 பிறவிகளுக்குப் பின்னர் குண்டலினி யோகம் பழகுவேனோ என்னமோ? யார் கண்டார்கள், பத்து பிறவிக்கப்புறம் நான் மனிதப் பிறவியோ, புழுவோ?//

    நேற்று ஹரித்வாரில் வசிஷ்டகுகையில் வசிக்கும் ஒரு மஹான் இங்கு வருகை தந்திருந்தார். காஞ்சி பரமாச்சாரியார் ஆணைப்படி, விரோதங்கள், மன வேறுபாடுகள் நீக்கும் சிவ சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதிய பெருந்தகை அவர்.

    அவர் முன்னிலையில், சிவ சஹஸ்ரநாமமும், ஸ்ரீகுருகீதையும் பாராயணம் செய்து சமர்ப்பித்தோம். அங்கு சென்றிருந்தபோது, நான் அவற்றைப் புத்தகம் பார்த்து வாசிக்க, அங்கு இருந்த என் வயதில் பாதி உள்ள பெண்கள் அவற்றை மனப்பாடமாக, அழுத்தந் திருத்தமான சப்த பேதங்களுடன் சொன்னதைக் கேட்ட போது எனக்கும் நீங்கள் எழுதியது தான் தோன்றியது.

    நேர்மையான விமர்சனம் தந்த தேமொழிக்கும் நன்றி.

    ReplyDelete
  43. Parvathy Ramachandran said...தனுசுவின் கவிதைகளைப் பற்றிச் சொல்ல இனி வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

    ///மேகங்களை விலக்கக் கேட்பதை விட்டு விட்டு, மேகலையிடமே, திரை விலக்கக் கேளுங்கள்.////

    உங்களின் பின்னூட்டத்தில் எனக்கு எப்போதும் எக்ஸ்ட்ரா ஊட்டச்சத்து இருக்கும் .இன்றைக்கும் அதை கொடுத்து என்னை உற்சாகப் படுத்தியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  44. அனைவருக்கும் வணக்கம்,

    திடீரென்று வந்தத் / தேடிக்கொண்ட சொந்த வேலை காரணமாக வகுப்பறைப் பக்கம் வரமுடியாமலே போனது... அதனாலே நம்ம மைனரைப் போல வெளியில் கூட வந்து நிற்க முடியாமல் இருந்தது.. எனினும் நேற்று நள்ளிரவில் எதேச்சையாக வந்த போது... என்னை வகுப்பறையில் காணவில்லை என்று கோபாலன் ஐயா அவர்கள் கேட்டதும், தனுசு அவர்களும் அதைப் பற்றிக் குறித்து இருந்ததும்... எப்படியும் வந்து பின்னூட்டம் இட வேண்டும் என்று வருகையை பதிவிடுகிறேன்...

    சகோதரி பாரவதியின் ஆக்கம் மிளிர்கிறது... அது என்னுள்ளும் இந்த ஆசையை மேலும் தூண்டுகிறது....

    ஆதாரசக்கரங்களை அதன் அருமையோடு
    அழகாய்ப் படைத்த அற்புதப் பதிவு..
    பாதார விந்தம் அறிந்தேன்,
    பாவி என் பிறப்பின் நோக்கம் அறிந்தேன்
    காவி வேண்டாமே! கடும் தவம் வேண்டாமே!
    ஆவி ஒடுங்க அம்மையப்பனே உம்மை
    தேவி அவளின் கருணையால் உய்வேனோ?

    நினைவது நெஞ்சோடு நிற்க - இருந்தும்
    திணையளவும் முயலாமல் தினமும் நான்
    தின்று கழிக்க? என்று தீருமிந்த கொண்டு
    வந்த பாவம்; எங்கும் நிறைந்தவனே எனக்கு
    இனியும் இரங்காயோ என்னுயிரானவனே!
    ஈசனே! நேசனே!! பரபிரம்மனே!!!
    ********************************************
    " கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
    அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?"

    ''பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
    வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்"

    இங்கே அருமையாக சொல்லி இருக்கிறார் நாம் வந்த கருவின் வழி, இடம்; எங்கிருந்து வந்தோம் என்பதை அறிந்து அதன் வழி கருத்தை (மனதை அல்ல) அறிவின் சொரூபமான ஆத்மாவை செலுத்து....... அருமை!! அருமை!!

    அடுத்ததாக பாராகி... பார்மீதில் இருக்கும் பஞ்ச பூதங்களின் வண்ணம் அதாவது அவ்வண்ணமே ஆகி அதுவே வேராகி நீ முளைத்த வித்தறிவது!!! இங்கே மீண்டும் அந்தக் கருத்தை அழகாக கூறி இருக்கிறார்... அருமை! அருமையிலும் அருமை!!!
    ரசித்து ருசித்து சிலிர்த்து விழிக்க முடியாமல் விழித்து அவனையே விளித்து நிற்கிறேன்...

    தொடருங்கள் சகோதரி அருமையான இன்னும் பல ஆக்கங்களை பக்தி என்னும் உளி கொண்டு செத்துக்குங்கள்...

    இதேப் போன்று நமது மகாகவியும் பரசிவ வெள்ளத்திலே, பாமரனுக்கும் புரிந்து தொடங்கும் படி மிக அருமையாக விடுதலைக்கு வழிகூறி பாடி சென்றிருக்கிறான்... யாவரும் ஒரு முறை சென்று மீண்டும் "பரசிவ வெள்ளம்" படித்து பயன் பெறலாம்.

    *******************************************************************

    ''பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
    விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? ''

    சரி தலையை அளவெடுத்து தங்க கிரீடமும்...........
    காவியை மட்டும் கட்டிக் கொண்டு தங்கத்தாலே தங்களை அலங்கரித்து ஆனத்தப் படும் ஆதீனங்களுக்கு இவ்வரிகளை வகுப்பறையிலே
    யாவரின் சாரிபிலே இந்த வரிகளை நமது ஐயரைப் போலவே சுழலவிடுகிறேன்...

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  45. கவிஞர் தனுசு அவர்கள் வெளுத்து வாங்குகிறார்
    பௌர்ணமி கவிதை முழுச் சந்திரனாய் பிரகாசிக்கிறது..

    அருமை அருமை... வாழ்த்துக்கள்.

    சகோதரி தேமொழி அவர்களின் மருதக் காசி பற்றிய ஆக்கம் தெரியாத பல விசயங்களை எனக்கு காண்பித்தது...
    தொகுப்பு அருமை... பெரும்பாலும் கவிஞரின் பெருமை பேசாமல் போனதும்... இருந்தும் ஆங்காங்கே பேசியவற்றை
    தொகுத்து இங்கே நீங்கள் தந்ததால் நாம் யாவரும் பேசுவதும்... அருமை.

    பதிவிற்கு நன்றிகள்...

    கிருஷ்ணன் சாரின் அனுபவக் கட்டுரை காட்சிகளாகவே இருந்தன... நன்றிகள் சார்.

    Son told..."when mom pulled you to bed and tried removing your boots and shirt..you were dead drunk and you said: " Hey Lady ! Leave Me Alone...I M Married!!!"

    அருமை... நன்றி...

    ReplyDelete
  46. ஹைய்யா!!!!!! ஆலாசியம் அண்ணா வந்தாச்சு!!!!!!!

    எத்தனை நாளாயிற்று அண்ணா உங்கள் பின்னூட்டம் பார்த்து!!!!!. அட்லீஸ்ட் வாரமலருக்காவது வருவீர்கள் என்று ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பேன். மீண்டும் தங்கள் வருகை குறித்து அளவற்ற மகிழ்ச்சி. பத்திரகிரியாரின் பாடல்களின் பொருள் குறித்து உங்களுக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை என்பது உங்கள் கருத்துக்களைப் பார்த்தாலே தெரிகிறது. என் ஆக்கம் குறித்த தங்கள் மேலான கருத்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.

    ReplyDelete
  47. miga arumayana pathivugal arumayana padangal especially life of snake catchers

    ReplyDelete
  48. தேமொழியின் ஆக்கத்தின் மூலம் கவிஞர் மருதகாசி அவர்களைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது, நன்றி!

    மனைவி மிளகாயி அம்மாளுக்கும் பிறந்தவர்,//

    வித்தியாசமான பெயர்!

    நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் இருபத்தைந்து பாடல்களை என்னால் நினைவுபடுத்த முடிந்தது, அப்போ என் வயதும் 25 (கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வருது!!!!!)

    ReplyDelete
  49. பார்வதி, ரொம்ப எங்கியோ போய்க்கிட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்! (தெரியாத விஷயத்தைப்பற்றி வேற என்ன கமெண்ட் போடறது???!!!!)

    ReplyDelete
  50. கிருஷ்ணன் சார் எழுதியது நமக்கு நன்கு தெரிந்த, பழக்கமான விஷயம்.

    உங்கள் ஆக்கத்தைப் படித்துவிட்டு சிரிச்சு முடியல! சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டிராத சுகர், கொலஸ்ட்ரால் பயம் இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் பிடித்துக்கொண்டு வாட்டுகிறது. நானும் முதலில் தாரளமாக எண்ணையை எடுத்துவிட்டு, கடாயில் ஊற்றும் முன் பாதிக்கும் குறைவாகக் குறைத்துவிடுவேன். இருந்தும் சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு (எண்ணெய் கத்திரிக்காய், புளியோதரை, வட இந்திய சப்ஜிகளுக்கு) எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தினால்தான் சுவையாக இருக்கும் என்பதால் அதற்கு மட்டும் விதிவிலக்கு.

    ReplyDelete
  51. முதலில் கவிதைக்குப் படம், இப்போது படத்துக்குக் கவிதை, நன்றாகவே இருக்கிறது.

    நம் நிச்சயம் நடத்த சந்தன மஞ்சளா?//

    தனுசு, அது என்னா எந்தப் படத்தைப் பார்த்தாலும் வில்லாளன் வரேன், நிச்சயம் நடத்த மஞ்சள்னு? வாட் மேட்டரு?
    போதாக்குறைக்கு நிலவுக்காதலி வேற!!!!

    இரண்டு காதலிகளையுமே சமமா வர்ணித்து பீலிங்கைக் கொட்டியதற்கு கிளாப்ஸ்!!!!

    ReplyDelete
  52. சபரி அனுப்பிய துணுக்கு சிரிக்க வைத்தது.

    ஆனந்தமுருகன் அனுப்பிய படங்களில் பாம்பு பிடிப்பவர்களைப்பார்த்து பரிதாபமே ஏற்பட்டது. கல்வியறிவு இல்லாமையும், வறுமையும் சேர்ந்து எப்படிப்பட்ட ரிஸ்க் ஆன வேலைகளைச் செய்கிறார்கள்.

    ReplyDelete
  53. "வந்தோனமய்யா வந்தோனம் வந்த சனத்துக்கு வந்தோனம்" என்று வந்தன்ம் கூறி மீண்டும் வகுப்பறைக்கு வந்த மைனர், ஹாலாஸ்யம்,உமாஜி ஆகியவர்களை வரவேற்கிறேன்.

    என் ஆக்கத்தைப் படித்து ரசித்துப் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. ///////தேமொழி said...
    அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மைனரை பார்த்ததில் மகிழ்ச்சி. கடிதம் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வந்தவர் கருத்து தெரிவிக்காமல் சென்றது வருத்தம்தான்.//////

    தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி தேமொழி அவர்களே..

    வருத்தமடைய வேண்டிய அவசியமில்லை..

    பொதுவாகவே கவிதை,கட்டுரைகளை விட கதைகளே என் கவனத்தைக் கவர்பவை..அந்த அடிப்படையில் தங்களின் கட்டுரையை விட கதைக்கு பெரிய ரசிகன் நான்..

    பழைய பதிவுகளில் வந்திருந்த கட்டுரைகளும் இந்தப்பதிவில் வந்த கட்டுரையும் படித்தேன்..

    பட்டியலிட்டு இருக்கும் பாடல்களில் பல பெரும் ஹிட் ஆன பாடல்களாக இருந்து இருந்தும் எனக்கென்னவோ இவர்தான் பாடலாசிரியர் என்று தெரிந்து வைத்திருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டு..கொஞ்சம் அந்தக் காலத்துப் பாடல்கள் என்று பட்டியலில் வந்துவிட்ட காரணமோ என்னவோ..ஆனாலும் 80 பெர்சென்ட்க்கு மேலே கேட்ட பாடல்கள்தான்..குறிப்பிட்டுச் சொன்னால் பட்டியலில் எனக்குப் பிடித்தவையாகப் பட்டியலிட்டால்

    "உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
    "காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?"
    "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்"
    "தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது"
    இப்படி பட்டியலிடலாம்..

    மிகவும் பிடித்தது என்றால் "தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" பாடல்தான்..

    மருதகாசியாருக்கு நன்றி..பாடலை நினைவுபடுத்தி பாடலாசிரியரைக் கவுரவித்த கட்டுரையாசிரியர் தேமொழி, வெளியிட்ட வகுப்பாசிரியர் என்று அனைவருக்கும் நன்றி..நன்றி..

    ReplyDelete
  56. ////////Parvathy Ramachandran said...
    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களை மீண்டும் பார்க்க முடிந்ததில் மட்டற்ற
    மகிழ்ச்சி. நெடுநாள் பழகிய நண்பரை மீண்டும் பார்த்த சந்தோஷம் ஏற்பட்டது. கமென்ட் அடிக்க விருப்பமில்லாவிட்டால், உங்கள் இருப்பையாவது உணர்த்தி விட்டுச் செல்லுங்கள். கருத்துக்களுக்குத் தான் மோதலே தவிர நட்புக்கல்லவே.
    ஆன்மீக சம்பந்தமாக ஆக்கங்கள் தருபவர்கள் ஆன்மீக வாதிகளே அன்றி ஆதிக்க வாதிகளல்ல. ஆகவே, வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.////////

    தங்களின் இயல்பான உணர்வுகளைப் பகர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..பார்வதி அவர்களே..
    உங்கள் கருத்தை ஏற்கிறேன்..

    மனதில் எழும் வினாக்களை மனதினுள்ளே புதைத்துவிடாமல், எனது இயல்பை கைவிடாமல் இருக்க இதே பதிவிலேயே முயற்சிக்கிறேன்..

    மீண்டும் நன்றி..

    ReplyDelete
  57. அன்பு பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு,
    தங்களின் கட்டுரை மிக அருமையாகக் கோர்வையாக விளக்கமாக அமைந்திருந்தது..பாராட்டுக்கள்..
    நான் ஏற்கனவே ஒருமுறை இதுகுறித்து தெரிந்தவர்கள் விளக்கமளிக்கும்படிக் கேட்டிருந்தேன்.
    சில இடங்களில் எழுந்த கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..

    //பார்வதி அவர்களே நான் குண்டலினியோகம் என்று முன்பு எங்கேயோ பாடிக்கும்போது இது தெய்வாம்சம் பெற ஜாதகத்தில் அமைந்திருக்கும் ஒரு யோகம் நினைத்துக் கொண்டேன்//

    ////அப்படி அல்ல. யோகக்கலையில் ஆர்வம் உள்ள பலர் , குறிப்பாக இல்லறத்தார் பலர் இதை முயற்சி செய்து வருகிறார்கள். நிறைய பேர் 'வெற்றி' கண்டும் இருக்கிறார்கள்.//////

    ////////சித்தர் பெருமக்கள் பாடல்கள் பலவும் குண்டலினியோகத்தைப் பற்றியும், ஆதாரச்சக்கரங்களைப் பற்றியும் ,யோகப்பயிற்சியைப் பற்றியும்
    நேரடியாகவும்,மறைமுகமாகவும் எடுத்தியம்புகின்றன. யோகசித்தி அடைந்தவர்களுக்கு முதலில் கைவரப்பெறுவது அட்டமாசித்தி.

    அட்டமாசித்திகளாவன : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. இந்த சித்திகள்

    கைவரப்பெற்ற சித்தர்கள் அதனை,நற்செயல்களுக்கே உபயோகிப்பர். சித்திகள் கைவரப்பெற்று, சித்தத்தில் சிவனைக் கண்டதாலேயே சித்தர்கள் எனப் பெயர் பெற்றனர்.//////

    அட்டமா சித்திகள் என்பவைகள் கைவரப் பெற்று 'வெற்றி' பெற்றவர்கள் என்ன என்ன விஷயங்களை சாதித்து சராசரி மனிதரிடமிருந்து வேறுபட்டுப் போகிறார்கள்?
    'வெற்றி' பெற்றவர்கள் யாராவது சிலரைக் குறிப்பிட்டு உதாரணம் சொல்லமுடியுமானால் புரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்..நன்றி..

    சித்தத்திலே சிவனைக் கண்டவர்களை சித்தப் பிரமை பிடித்தவர்கள் என்று சொல்லலாமா?
    யார் எந்த விதத்திலே இதற்கு சான்றிதழ் அளிக்கமுடியும்?நான் சிவனைக் கண்டு விட்டேன் என்று எனக்கு நானே பட்டம் சூட்டிக் கொள்ளலாமா?
    இல்லை..?எக்ஸ்-ரே ஸ்கேன்னிங் செய்து ஆக்ஞா சக்கரம் வரை குண்டலினி சக்தி மேலே வந்து விட்டது என்று certify பண்ண முடியுமா?சரித்திரம் உள்ளதா?

    சமீபத்திய மதுரை ஆதீனத்துச் சம்பவங்கள் அடாவடிகள்/காமெடிகள்/ட்ராஜெடிகள் ஆன்மீகவாதிகள் பற்றிய நகைப்புக்குரிய /கேலிக்குரிய தன்மைகளை மீண்டுமொருமுறை பிரதிபலிப்பதாக செய்துகொண்டு வரும் வேளையிலே குண்டலினி பற்றியும் அதனாலே 'வெற்றி' என்றொரு வார்த்தைப் பதமும் பிரயோகப் படுத்தப்பட்டிருப்பதால் இந்தக் கேள்விகள் எழுகின்றன?
    தாங்கள் பூர்வீகத்திலே மதுரைக்காரர் ஆதலால் உங்களுக்கும் இந்தச் செய்திகள் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது..ஆனால் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள் உங்களைக் குறித்து எழுப்பப்பட்டவை அல்ல..மேற்கண்ட விவரங்களில் ஆர்வலர்களில் கருத்துப் பூர்வமான விவரம் அளிக்க முற்படுபவர் யாராக இருந்தாலும் மாற்றுக்கருத்துக்கு உரிய விவரம் வேண்டுகிறேன்..

    ReplyDelete
  58. @KMRK
    பனியனிலே புளியோதரை கட்டி நாலுநாள் வைத்துச் சாப்பிடும் விஷயம் முகத்தைச் சுளிக்க வைத்தாலும்
    எண்ணெய்க் கத்தரிக்காய் வறுவல் எனக்கென்னமோ அரிப்பெடுக்க வைக்கவில்லை..
    என்னதான் டேஸ்ட்டாவே இருக்குமென்றாலும் நாலு கிலோவை ஒரே ஆள் ஒரே வேளையில்..
    ஆஹா..ஆச்சரியமூட்டியது..

    ReplyDelete
  59. நிலாவையும் பலானதையும் பாண்டியாட விழைந்த தனுசுவின் கவிதைகள் இரண்டுமே வழக்கம்போலே நன்று..

    ReplyDelete
  60. அன்பிற்க்கும் மதிப்பிற்கும் உரிய மைனர் அவர்களுக்கு.

    நான் உள்ளிட்ட வகுப்பறைத் தோழர்களின் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    தாங்கள் கேள்விகளைக் கேட்கும் விதம் குறித்தும் மகிழ்ச்சி. அடுத்தவர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தங்கள் பண்புக்குத் தலை வணங்குகிறேன். எனக்குத் தெரிந்த மற்றும் நான் புரிந்து கொண்டவற்றைத் தங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

    ReplyDelete
  61. //அட்டமா சித்திகள் என்பவைகள் கைவரப் பெற்று 'வெற்றி' பெற்றவர்கள் என்ன என்ன விஷயங்களை சாதித்து சராசரி மனிதரிடமிருந்து வேறுபட்டுப் போகிறார்கள்?//

    அட்டமாசித்திகள்: அணிமா: அணுவைக் காட்டிலும் மிகச் சிறிதான வடிவம் எடுக்கும் ஆற்றல்.

    லகிமா: காற்றைவிட மெல்லிய வடிவம் எடுக்கும் ஆற்றல்.

    கரிமா: கனமாக, உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும் ஆற்றல்.

    மகிமா: மலையைக் காட்டிலும் பெரிய வடிவு எடுக்கும் ஆற்றல்.

    ப்ராப்தி: நினைத்த பொருளை நினைத்தவாறு பெறும் ஆற்றல்.

    பிராகாமியம்: தமது எண்ணங்களின் வலிமையினால் பற்பல வடிவம் எடுத்து, மீண்டும் ஒன்று கூடும் ஆற்றல்.

    வசித்துவம்: கோள்களையும் தன்னைப் பார்ப்பவர் அனைவரையும் தன் வயப்படுத்தும் ஆற்றல்.

    ஈசத்துவம்: தேவர்களும் தன்னை வணங்கி வழிபடும் நிலைக்கு உயர்தல்.
    உண்மையில் அட்ட மாசித்திகள் கைவரப் பெற்றதை வெளிப்படுத்துவதை யோகிகள் முற்றிலும் தவிர்ப்பார்கள். மிகச்சில சந்தர்ப்பங்களிலேயே வெளிப்படுத்துவார்கள். சித்தர்கள் வெளிப்பார்வைக்குப் பகட்டாகவோ, தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டோ இருக்க மாட்டார்கள். பெரும்பாலான சித்தர்களைப் பற்றி உலகம் அறிந்து கொண்டதே, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கொண்டே.

    ReplyDelete
  62. //'வெற்றி' பெற்றவர்கள் யாராவது சிலரைக் குறிப்பிட்டு உதாரணம் சொல்லமுடியுமானால் புரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்..நன்றி..//

    நிறையப் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த சம்பவம் சாம்பிளுக்கு. என் தூரத்து உறவினர் ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்த போது, என் பதிவுகள் குறித்து நிறைய தகவல்கள் தந்தார். அவருக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிந்ததைக் குறித்த ஆச்சரியத்தைப் பகிர்ந்த போது, தானும் இந்த யோகம் பழகுவதாகவும், தன்னை விட சீனியர் மாணவர்கள், தரையிலிருந்து யோகநிலையில் மிதக்கும் தன்மை பெற்றவர்கள் என்றும் கூறினார்.

    இது குறித்த சில நிஜப் புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

    கோவை ஈஷா யோக மையத்தில் இது குறித்த தகவல்கள் அதிகமாகக் கிடைக்கும். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் புத்தகங்கள் இது குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கும்.

    ReplyDelete
  63. Uma said...தனுசு, அது என்னா எந்தப் படத்தைப் பார்த்தாலும் வில்லாளன் வரேன், நிச்சயம் நடத்த மஞ்சள்னு? வாட் மேட்டரு?

    போதாக்குறைக்கு நிலவுக்காதலி வேற!!!!

    இரண்டு காதலிகளையுமே சமமா வர்ணித்து பீலிங்கைக் கொட்டியதற்கு கிளாப்ஸ்!!!!

    வாத்தியார் பாலிசி தலைப்பை நன்றாக போடு
    தனுசு பாலிசி முடிவில் முத்திரை போடு.

    ReplyDelete
  64. மீண்டும் வந்த மைனர் ,ஆலாசியம் ஆகியோருக்கு வரவேற்பு கொடுக்கிறோம்.

    ReplyDelete
  65. //எக்ஸ்-ரே ஸ்கேன்னிங் செய்து ஆக்ஞா சக்கரம் வரை குண்டலினி சக்தி மேலே வந்து விட்டது என்று certify பண்ண முடியுமா?சரித்திரம் உள்ளதா? //

    குண்டலினி யோகம் சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு சக்கரத்தையும் கடக்கும் போது, உடல் கடுமையாகப் பாதிக்கப்படும். முறையான குருவின் மூலம் பயிற்சி செய்தாலும் இது நடக்கும். சிலருக்கு சில வருடங்களிலும், பலருக்குப் பல வருடங்களிலும் இது கைகூடப் பெறும். ஆன்மீகம் என்பதே, உணர்தல் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் போது, இதற்கு சான்றிதழ் தருவது கடினம்.

    இந்த விஷயத்தின் பலமும் பலவீனமும் இதுவே. ஆகவே, பல நிஜங்கள் அமைதியாக இருப்பதும், போலிகள் பகட்டோடு உலா வருவதும் நடக்கிறது.
    இது குறித்த மேலதிகத் தகவல்களை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    ReplyDelete
  66. Thanjavooraan said... சகோதரி தேமொழி கேட்ட விவரம் இதோ. கே.எம்.ஆர். குறிப்பிட்ட அந்த சாப்பாட்டுப் பிரியரின் உடல் விநாயகரை நினைவு படுத்தக் கூடியது. நிறமும் அப்படியே.

    தகவலுக்கு நன்றி ஐயா.
    எங்கே ஆளைக் காணோம் என்று கேட்டவுடன் காணாம போனவங்கள்லாம் அலறி அடிச்கிட்டு வகுப்புக்கு வந்திட்டாங்கல்ல....இப்ப சொல்லாமலே தெரியுது யார் தலைமை ஆசிரியர்னு

    ReplyDelete
  67. மைனரையும், ஆலாசியத்தையும் பார்த்து, அவர்கள் கருத்துக்களையும் படித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  68. /////Parvathy Ramachandran said...
    கோவை ஈஷா யோக மையத்தில் இது குறித்த தகவல்கள் அதிகமாகக் கிடைக்கும். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் புத்தகங்கள் இது குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கும்.////

    'ஆசையே துன்பத்துக்குக் காரணம்..
    ஆதலால் ஆசையை விட்டொழி'

    என்றார் அமைதி மார்க்கத்தைப் போதித்தார் புத்தர்..

    எதிர்மாறாக
    'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று தற்கால் மக்கள் மனநிலைக்குத் தூபம் போட்டு மார்க்கத்தைப்'போதித்த
    ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சேர்த்துதான் குண்டலினி -அக்ஞா -செக்கிங் பண்ணவேண்டும் என்று சொன்னேன்..

    பரமசிவன்,பார்வதி உத்தரவின் பேரிலேயே நித்தியானந்தரை ஆதீனமாக்கினேன் என்று சொல்லும் மதுரை ஆதீனத்தின் பேச்சு அவர் மேற்படி பரமசிவன்,பார்வதி
    ஹை கம்மாண்டுடன் நேரடித் தொடர்பில் இருந்து உத்தரவு பெற்று செயல் படுவதுபோல தோற்றமளிக்க, நித்தியானந்தரும் குண்டலினி யோகத்திலே 'வெற்றி' பெற்று அதன் காரணமாகவே இந்தப் பதவி இவருக்கு சிவபெருமானால் வழங்கப் பட்டிருக்கிறது என்றே எனக்குப் புரிகிறது..
    வாழ்க குண்டலினி யோகம் ..
    வாழ்க அதன் சக்தி..

    ReplyDelete
  69. அனைத்து ஆக்கங்களையும் படித்து பார்த்தேன். ஒன்றுக்கு இன்னொன்று குறைவில்லை. ஒவ்வொன்றும் அதனதன் விதத்தில் தனித் தன்மை வாய்ந்ததுதான்.

    ReplyDelete
  70. /////Parvathy Ramachandran said...இது குறித்த மேலதிகத் தகவல்களை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.///////

    மிக்க நன்றி..
    குண்டலினி யோகம் பற்றிய உண்மையான ஆர்வத்தின் அடிப்படையிலேதான் தொடர்ந்து எழுதுகிறேன்..

    அறிவியல் பூர்வமாக சில விஷயங்களை தெளிவுபடுத்த முடியுமானால் அதுவே அறிவார்ந்த இளைய தலைமுறைக்கு இத்தகைய அதீத சக்தி படைத்த யோகக் கலையின் பால் ஈர்ப்பு கொண்டு ஹதயோகம் பயில வரும்/வரப்போகும் எதிர்காலத் தலைமுறைக்கு தெளிந்து உணர்ந்தவர்கள் உண்மையில் காட்டும் வழியாக இருக்க முடியும்..

    இல்லையென்றால் ஏதோ கண்மூடித்தனம்...மூட நம்பிக்கை வழியிலே இப்படி விஷயங்களையும் தள்ளிவிட வாய்ப்பாகிப் போய்விடும்..
    ஆய்வறிக்கையின் ரிசல்ட்டைப் பொறுத்தே உண்மையோ என்னவோ என்றே புரியும்..

    யாராவது மருத்துவர்கள் முயற்சிக்க முன்வருவார்களேயானால் குண்டலினி சாதகரை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கும் முயற்சிக்கு உரிய பொருட்செலவில் ஏதோ என்னாலான பங்களிப்பை அளிக்க சித்தமாயிருக்கிறேன்..

    ReplyDelete
  71. மைனர் நீங்கள் சொல்வது சீனர்களின் "Acupuncture" பற்றிய ஒரு தகவலை நினைவு படுத்துகிறது. எங்கேயோ படித்தது.
    மேற்கத்தியர்கள் anatomy, physiology போன்றவற்றில் ஆதாரங்களை கொடுக்க முடியாத சிகிச்சை முறைகளை மாற்று மருத்துவம் , அறிவியல் அடிப்படையற்றது என்று தள்ளிவிடுவார்கள்.
    "Acupuncture" விவாதம் வந்த பொழுது சீன மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சையை மயக்க மருந்து கொடுக்காமல் நோயாளிக்கு ஊசிகளை குத்தி வலி தெரியாமல் இருக்க வைத்து செய்தார்களாம். பார்த்துக் கொண்டிருந்த அறிவியல் அடிப்படை மருத்துவர்கள் அசந்து போனாலும் இதற்கு அறிவியல் அடிப்படை ஆதாரம் இல்லையே என முணுமுணுத்தார்கள். சீன மருத்துவர்கள் , உங்கள் கண் முன்பே செய்து காட்டியிருக்கிறோம், இந்த முறை வேலை செய்கிறது என்று நீங்களும் ஒத்துக் கொண்டுவிட்டீர்கள் , பிறகு அறிவியல் பின்புலம் இல்லை என்று அங்கலாய்த்தால் எப்படி என்று மடக்கினாரகலாம்.

    புத்த பிக்குகளுக்கு யோகத்தினால் தரையில் இருந்து எழும்புவது, உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது போன்றவை கைவந்த கலை என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஜப்பானில் உள்ள புத்த பிக்குகளும் இதனை செய்தால் நீங்கள் ஆதாரம் திரட்டி சான்றிதழ் வழங்க சாத்தியப்படலாம்.
    ஏன் எப்படி என்று கேட்டு ஆராயும் உங்கள் பகுத்தறிவு வழி மெச்சத்தக்கது. நந்தகோபால் இந்நேரம் என் மைனரைப் போலுண்டா என மனம் மகிழ்ந்து கொண்டிருப்பார்.

    ReplyDelete
  72. நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்த ஒரு மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் உள்ளது அவருடையது.

    kundalini jagran/activation is a very big deep subject & is a long process which can take a life-time of even many life's ... for those interested in studying or knowing the basics of kundalini shakti & its activation process Here i recommend 2 very good books on this subject .... these books will provide you usefull insights into the big deep subject of kundalini shakti & its activation/jagran & enlighment ... PLEASE read these 2 books very carefully, i suggest reading 5 pages of each book daily so that you it helps you understand everything ...

    http://www.dlshq.org/download/kundalini.pdf

    http://www.light-weaver.com/vortex/pdfs/Kundalini.Tantra.by.Satyananda.Saraswati.pdf

    if you wish you can also download these pdf books to your computer & read it slowly page by page each day to help you get a better understanding ...


    Vikrant

    ReplyDelete
  73. வணக்கம் பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கு,

    தங்கலது பதிவு மிகவும் எனுக்கு பிடித்துருந்தது.இதை அனுபவ பூர்வமாக உண‌ர்ந்து வருகிரேன்.குரு எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.காரணம் நமது
    சூழ்னிலைதான்.மானசீக குருவாக திருசெந்தூர் முருகனை வணங்கி,அவரது
    அருளாலே எனக்கு கிடைத்து.இன்னும் எழுதுங்கள் வரவேர்க்கிரேன்.நன்றீ.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  74. ///// தேமொழி said.
    தரையில் இருந்து எழும்புவது, உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது //////
    ஃபிளைட், ஏ.சி. வசதிகள் உள்ள காலகட்டத்திலே இதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள்..
    யோகாவிலே பாலன்ஸ் பண்ண முடிந்த விஷயங்களை கழைக்கூத்தாடிகளும், மேஜிக் நிபுணர்களும் எவ்வளவோ செய்துகாட்டிவிட்டார்கள்..

    இப்போது விஷயம் என்னவென்றால் உண்மையிலே குண்டலினி சக்தியை எழுப்புதல் என்பது தன்னாலே உணர்தல் என்றால் ஆளாளுக்கு எனக்கு சக்தி ஆக்ஞாவை அடைந்து விட்டது என்று கிளம்பிவிட மாட்டார்களா?இப்படி சொல்லிக் கொண்டு இப்போதே சில கேசுகள் எக்காளச் சிரிப்புடன் அலைய, ஏமாந்த கோஷ்டிகள் தானம் என்ற பெயரிலே அவர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்துவிட, ஓசியிலே குளிர்காயும் சிஷ்யக்கூட்டங்கள் என்று நாகரிக சமுதாயத்திலே இப்படி அருவெருக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டங்களின் போலித் தன்மையை உலகுக்கு உணர்த்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற ஆர்வத்திலேதான் குண்டலினி விஷயத்திலே உண்மைகள் இருந்தால் மெடிக்கல் சான்றிதழ் வடிவிலே கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டேன்..

    ReplyDelete
  75. /////தேமொழி said.
    ஏன் எப்படி என்று கேட்டு ஆராயும் உங்கள் பகுத்தறிவு வழி மெச்சத்தக்கது. நந்தகோபால் இந்நேரம் என் மைனரைப் போலுண்டா என மனம் மகிழ்ந்து கொண்டிருப்பார்./////

    எனது ஆர்வம் எந்தவிதம் என்று தெளிவாக விளக்கிச் சொல்லிவிட்டேன்..பகுத்தறிவை இழுக்கவேண்டாமே..

    நந்தகோபால் அவர்களும் கண்மூடித்தனமான பக்திமான்..
    அவருக்கு நான் எழுப்பிய கேள்வி/கருத்து/பார்வை ஏற்புடையதாகாது என்பதே எனது அனுமானம்..

    ReplyDelete
  76. ஆனந்த் அவர்கள் தந்திருந்த இரண்டு லின்க்குகளிலும் பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் ஆக்கத்தை ஒட்டிய நிறைய விஷயங்கள்
    விலாவாரியாக ஆசிரியர்களின் பார்வைலே விரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..நேரம் கிடைக்கும்போது படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com