மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.4.11

வேர்களைத் தேடி ஒரு பயணம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வேர்களைத் தேடி ஒரு பயணம்
=========================
இன்றைய வெள்ளி மலரை ஆன்மிகப் பயணக் கட்டுரை ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள். அப்படியே ஒரு ‘ஓ’ போட்டு அதை எழுதிய அன்பரைப் பாராட்டுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
சென்ற மாதம் மதுரையில் ஒரு 60 க்கு 60 கல்யாணத்தில் சந்தித்த போதே குல தெய்வம் கோயிலுக்கு  எல்லோரும் சேர்ந்து போவது என்ற யோசனை முன் வைக்கப்பட்டது.அன்று பலரும் ஏற்றுக் கொண்டாலும், பல  வேலைகளால் எல்லோரும் வரவில்லை. நானும் என் பெரியப்பா மகன் ஒருவரும் மட்டும் நெல்லையில் சந்தித்து  புனிதப் பயணத்தைத் தொடர்ந்தோம். என் மனைவியும், அவருடைய மனைவியும் மகனுமாக நாங்கள் ஐவர்  குழுவாக 24 மார்ச் அன்று காலையில் காரில் கிளம்பினோம்.

'குருவாரமாக இருப்பதால் முதலில் திருச்செந்தூர்' என்று சொன்னார் அண்ணன் ராமசுப்பிரமணியம் என்கிற  சுப்பாமணி.போகும் வழியில் கிருஷ்ணாபுரம் கோயிலில் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் சென்றோம்.

அரசிளங்குமரியைக் கடத்திச்செல்லும் குறவனும், இளவரசனைத் தோளில் சுமந்து செல்லும் குறத்தியும் அற்புதம்  போங்கள். ஓர் உருவத்திற்கு மேல் மற்றோர் உருவம்!ஆளைத் தூக்கினால் எப்படி குனிந்து செல்ல வேண்டுமோ

அது போலவே உடல் வளைந்தும் நெளிந்தும்,நிமிர்ந்தும், உடல் வலிமையைக் காண்பித்தும் ...அடடா, என்ன ஒரு நுட்பம்,திறமை! பளபள என்று எப்படிதான் கடைந்தார்களோ! வியப்பில் இருந்து வெளிவர நெடு நேரம் ஆகியது.

திருச்செந்தூர் கோவிலில் ஒரு சேவார்த்தியைப் பிடித்து வைத்திருந்தார் அண்ணா. அர்ச்சகர்கள் இல்லாமல்,  வெளியில் நம்மைப் பிடித்துக்
கொண்டு தரிசனம் செய்து வைத்துப் பிரசாதம்  தருகிறேன் என்று
நம்மை ஆட்டிவைப்ப‌வர்கள் முக்காணியர்கள். அவர்கள் முக்காணி
என்ற ஊரில் இருந்து வந்தவர்கள் ஆதலால் முக்காணியர்கள்.

பால் அபிஷேகம் மட்டும் அண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். சில
மணித் துளிகளில் அபிஷேகத்தை செய்து  பார்த்து மீண்டும் பிரசாதம் கொடுத்து  விரைவில் சன்னிதியை விட்டு வெளியில் கொண்டு வந்து
விட்டார். அதன்நடுவில் பஞ்சலிங்க தரிசனமும் செய்து வைத்து
விட்டார். திருச்செந்தூரில் சுவாமியின் சன்னிதிக்கு நேர் எதிரில்  கொடிமரத்தைத் தாண்டி மதில் சுவரில் ஒரு சதுரமான துவாரம்
உள்ளது அதன் வழியே பார்த்தால் கடல் தெரியும்.காதை வைத்துக்
கேட்டால் 'ஓம்' என்ற ஒலி கேட்கும்!

நெல்லைக்குத் திரும்பும் வழியில் புன்னைவனம் என்ற ஊருக்கு
அண்ணன் அழைத்துச் சென்றார். அங்கே  குக்கிராமத்தில் ஒரு வன வெங்கடாசலபதி கோவில்! ஹைடெக் கோவில்! திருப்பூர் திருப்பதி
மாடலில் நேர்த்தியாகபுதிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.கால்
சராய் அணிந்த காவலர்கள், அடிக்கடி சுத்தம் செய்ய நிறையப்
பணியாளர்கள், செல்வம் கொழிப்பதை எல்லாவகையிலும் பறை
சாற்றும் சூழல்!லட்டுப் பிரசாதம்! ஸ்பூன் போட்டு  ஒரு கப் தயிர்சாதம்."அமர்ந்து சாப்பிடுங்கள் ,மின் விசிறி போடுகிறோம்"
என்று அன்பான உபசரிப்பு.கோயில்  அலுவலகத்தில் கிருபானந்த
வாரியார் சுவாமிகளின் பெரிய படம்; கூடவே சரவணபவன்
உரிமையாளர்! காரில்வரும் போது வெங்கடாசலபதி மறந்து போய், ராஜகோபாலனே நினைவுக்கு வந்தார்.அதுவும் ஜீவஜோதி

தஞ்சையில் எங்க‌ள் வீட்டிற்கு அருகில் தையலகம் வைத்து இருந்ததால், அதிகம் அண்ணாச்சியைப் பற்றி  நினைக்கக்கூடிய சூழல்.பெரும் ஆளை சேவிக்கப்போய் வெறும் ஆளைப் பற்றிய நினைவுடன் திரும்பினேன்.

மாலையில் நெல்லைய‌ப்பரைக் காணக் கிளம்பினோம்.காலையிலேயே சாலைக்குமரனை தரிசித்துவிட்டதால்,  அவருக்குக் காரில் இருந்தே
ஒரு கும்பிடு போட்டு விட்டு, எங்க‌ள் தாத்தா வாழ்ந்து மறைந்த
சன்னியாசிக் கிராமம் வீட்டுக்குப் போனோம். எங்க‌ள் அத்தையின்
மருமகள் தன் மகன்களுடன் அங்கே இன்றும்  வாழ்கிறார்கள்.

நெல்லைத் திருப்பதி என்று அழைக்கப்படும்  எங்கள் தெருவில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்து  கொண்டோம்.ஒரு ரகசியம் என்னவென்றால் கல்கி அவதாரம் இந்த சன்னியாசிக் கிராமத்தில்தான் நடைபெறப் போகிறதாம். விஷ்ணு புராணத்தில் சொல்லி இருக்கிறதாம்.

நெல்லையப்பர் கோவிலில் தங்க‌த்தேர் ,காந்திமதி அம்பாளை வைத்து, இழுத்தார்கள்.என் மனைவியாருக்கும்,  அண்ணியாருக்கும் தங்க‌த்தேர் தரிசனம் ஏகப்பட்ட மகிழ்ச்சியைக் கொடுத்தது.

மறுநாள் காலையில், வெள்ளி 25 மார்ச் அன்று காலை எங்க‌ள் பூர்விக கிராமமான நாரணம்மாள்புரம் செல்ல  முடிவு. பாலமடையும், அறவன்
குளம் என்னும் நாரணம்மாள்புரமும் இக்கரையும் அக்கரையும் ஆகும்.

பாலமடையில் நீலகண்ட தீக்ஷதரின் சமாதிக்கோவில் உள்ளது.நீண்ட
நாளாக தரிசிக்க எண்ணியும் முடியாமல் போனது. இந்த முறை
கிடைத்தது. நீல‌கண்ட தீக்ஷதர் திருமலை நாயகரின் முதல்
மந்திரியாகப் பதவி வகித்தவர்.அப்பைய தீக்ஷதரின் தத்துப்பிள்ளை.
அவரும் பாரத்வாஜ கோத்திரம், சாமவேதம். நாங்களும் அஃதே!

அவர் நாரணம்மாள்புரத்தில் வாழ்ந்துள்ளார். எங்க‌ளுக்கும் பூர்வீகம் அதுதான்.என்ன சொல்ல வருகிறீர்கள்  என்கிறீர்களா? ஆம்!
நீலகண்டரின் ஒரு கதிர் எங்க‌ளில் இருக்கலாமோ என்று ஒரு
நப்பாசை! நீலகண்டர் ஒருவரகவி. தமிழில் அபிராமிப‌ட்டர் போல சமஸ்கிரத‌த்திற்கு நீலகண்டர்!அவரைப் பற்றிய சுவாரஸ்யமான
சம்பவம்  உண்டு. தனியாகப் பதிவு இடுகிறேன் . பொறுமையாக இருங்கள்.பாலமடையில் நீலகண்டரின் சமாதியைக் கண்
குளிர‌ தரிசித்தோம்.அங்கிருந்து சீவலப்பேரி போய் ஒரு துர்கை
அம்மனை தரிசித்தோம்.

அதன் பின்னர் எங்க‌ள் ஊர், அறவன் குளம் எல்லைக் காவல் தெய்வம்
"மூன்று யுகம் கொண்டாள்" கோவிலுக்கு வந்தோம். முன்பெல்லாம் வயக்காட்டில் வரப்பின் மீது நடந்துதான் கோவிலுக்குச் செல்ல
வேண்டும் . இப்போது தங்க நாற்கரச் சாலையை ஒட்டி கோவில்
இருப்பதால்,  காரிலேயே கோவிலில் போய் இறங்க முடிகிறது.

பூசை செய்பவர் கம்பர் குடும்பம். முப்புரி நூல் அணிந்து, ஒரு
குருக்களைக் காட்டிலும் அழகாகச் சங்கலபம்  செய்து அருமையாக அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தார்.அவசரப்படாமல் ஈடுபாட்டோடு  வழிபாடு செய்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அழைத்துப்போன அண்ணனும் வேண்டிய திரவியங்களை சிக்கனம்
பாராமல் வாங்கியிருந்தார்.பஞ்சாமிர்தப் பிராசதமும், சர்க்கரைப்
பொங்கலுமே மதிய உணவாகிப் போனது.

எங்க‌ளுடைய மூதாதையர்கள் மகிழ்ந்து குலாவி நடமாடிய இடம் அது என்பதால் மன நிறைவு ஏற்பட்டது.

வெள்ளி மாலை என்பதால் சங்கரன் கோவில் சென்று கோமதி
அம்பாளைத் தரிசிக்க முடிவாயிற்று.  சங்கர  ந‌யினாரையும், கோமதி அம்பாளையும் கண்குளிரத் தரிசித்தோம்.அம்பாளுக்குத் தங்கப்
பாவாடை சாத்தியிருந்தது மீண்டும் மகளிர் அணிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. புற்று மண் சேகரம் செய்து கொண்டு வந்தோம்.

வெளியில்  எங்கள் வாகனம் அருகில் காத்திருந்தது யார் தெரியுமா?  "ஹமாராகானா" (நமது சங்கீதம்) அவர்கள்! கூட வந்த  அண்ணன்
மகனும் 'நமது சங்கீதம்' அவர்களின் பையனும் அரபு நாட்டில் ஒரே கம்பெனியாம்! முதலில்தயக்கத்தோடு என் வலைப்பூ நண்பர் வீட்டிற்கு
வர சம்மதித்த அண்ணன் , இப்போ இரட்டிப்பு மகிழ்ச்சியாகி  விட்டார்.
ஒரே கோலகலம்தான். ஹமாராகானவின் மனைவியார், கேசரி,
இடியாப்பம், சொதிக்குழம்பு, வடை,சூடான தோசை ச‌ட்னி என்று
ருசிருசியாய் செய்து போட்டார்கள்.ஒரு கட்டு கட்டி விட்டு நெல்லை திரும்பினோம்.

சனிக்கிழமை 26 மார்ச் காலை அண்ணன் சொன்னார், "நமது குலதெய்வமான சித்தூர் சாஸ்தா கோவிலுக்குப்  போவோம்"

"என்ன சொன்னீர்கள்?! நமது குலதெய்வம் தென்க‌ரை மஹாராஜா அல்லவா?" இதுநான்.

"இல்லை இல்லை பெரிய பெரியப்பா சொன்னது சித்தூர் சாஸ்தாதான்"

"என் அப்பா சொன்னது தென்க‌ரை மஹாராஜாதான்"

எங்க‌ளுக்குள் பெரிய மனவேற்றுமையே தோன்றிவிடும் போல் ஆகிவிட்டது.

"சரி நீங்கள் சொல்லும் சித்தூருக்குப் போய் சாஸ்தாவை தரிசிப்போம்.
பின்னர் நான் சொல்லும் தென்கரை  மஹாராஜா கோவிலுக்கும் போகணும்" என்றேன். சரி என்று ஒப்புக்கொண்டார்.

சாஸ்தா கோவிலுக்குப் போகுமுன்னர் நாங்குனேரி சென்று தோதாத்ரி நாதரையும் ஸ்ரீவரமங்கைத் தாயாரையும்  தரிசித்தோம்.என் மாமாவுக்கு தோதாத்ரி என்று பெயர். அம்மாவுக்கு ஸ்ரீவரமங்கை என்று பெயர்.
அம்மாவின்அப்பா அந்த ஊரில் பள்ளி வாத்தியாராக இருத்துள்ளார்.
அம்மா துவக்க‌ப்பள்ளியை நாங்குனேரியில்  படித்துள்ளார்கள். பேச்சு
வழக்கில் "நாங்கணசேரி" என்பார்கள்.வானமாமலை ஜீயர் அங்குதான்
உள்ளார். முத‌ல் இந்திய குடியரசுத் தலைவர் பாபு ரஜேந்திரப் பிரசாதின் குடும்பத்திற்கு தோதாத்ரி குலதெய்வமாம்!

வள்ளியூர் வ‌ந்து சித்தூர் விரைந்தோம். கோவிலை நெருங்கும் போதுதான் தெரிந்தது அது நான் சொல்லும்  தென்கரை மஹாரஜா கோவில்தான் என்று.

அப்போதும் அண்ணன் சொல்கிறார் அது சித்தூர் சாஸ்தா கோவில்தான் என்று.

வெளியிலேயே போர்டு தொங்குகிறது: "தென்கரை ஸ்ரீமஹாராஜராஜேஸ்வர் திருக்கோவில்,சித்தூர்"  ஆக ஒரே கோவிலைத்தான் நான் 'தென்கரை மஹாராஜா கோவில்' என்றேன். அண்ணன் 'சித்தூர் சாஸ்தா'  என்றார். கரகாட்டக்காரனில் வரும் ஜோக் போல ஆகிவிட்டது."அந்த வாழைப்பழ்ம் தான் இந்த‌ வாழைப்பழம்..."

இங்கும் நல்ல முறையில் எல்லா தெய்வங்க‌ளுக்கும் ஆடை சார்த்தி அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது.ராகு  காலம் குறுக்கிட்டதால் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து இருந்து இறைச் சிந்தனையுடன் வழிபாடு செய்தோம்.

அங்கேயே உள்ள பேச்சி அம்மன் , தளவாய் சுவாமி, வன்னிய மஹாராஜா ஆகியவர்களுக்கும் மக்கள் கூட்டமாக  வந்து ஆடு பலி யெல்லாம் செய்து வழிபடுகிறார்கள்.சாதி ஒற்றுமை உள்ள ஒரு இடமாக அது காண்கிறது.

அதிமுக‌ முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பெரிய மண்டபம் அமைத்துள்ளார். அந்தக் கோவிலிலும் அண்ணன் அரபு நாட்டில் தன்னுடன் வேலை பார்த்த குடும்பத்தினரை சந்தித்து  உரையாடினார்.

அங்கிருந்து களக்காடு சென்றோம். அது என் தாய் வழித் தாத்தா பாட்டி ஊர். சத்தியவாகீஸ்வ‌ரரையும், கோமதி  அம்பாளையும் தரிசித்தோம்.என் ஒரு மாமாவுக்கு சத்தியவாகீஸ்வரன் என்று பெயர்.ஒரு பெரியம்மா கோமதி.

ஊரையும் எங்க‌ளுக்குப் பழக்கமில்லை. யாரையும் அறிமுகமில்லை. தாத்தாவின் இல்லத்தைக் கண்டுபிடித்து  விட்டோம். இப்போது
குடியிருக்கும் நகை ஆசாரி குடும்பத்தினர் எங்க‌ளை வீட்டுக்குள்
அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.

பக்கத்து இல்லத்தில் இருந்த இரண்டு முதிய விதவைகள் அன்போடு விசாரித்து மணக்க மணக்கக் காப்பி  கொடுத்து உபசரித்தார்கள்.
பூர்விகம் எல்லாம் விசாரித்து மகிழ்வுடன் உரையாடினார்கள்.
அக்கோவிலில் 63 நாயன்மார்களின்  திருநட்சத்திரங்களை எழுதிப்
போட்டு இருந்தது. என் நடசத்திரத்துக்கு ஏதாவது நாயன்மார்  உண்டா
என்று தேடினேன்.ஆம் இருக்கிறார்! செறுத்தலை நாயனாருக்கு
ஆவணிப் பூசம்! எனக்கும்தான்!

மறுநாள் தாய் வழிக்காணி சடைஉடையாரைக் காண அம்பை சென்றோம். அப்போதுதான் நாறும் பூ நாதரை  தரிசித்தது. அதைப்பற்றித் தனிப்பதிவு
போன வெள்ளி அனறு வெளியாகிவிட்டது.

சடை உடையார் கோவிலிலும் 5 குடும்பத்தார் வந்துவிட்டார்கள். வெகு விமர்சையாக அபிஷேக ஆராதனை  நடந்தது.

அன்று மாலை நான் விடை பெற்று மனைவியாருடன் லால்குடி வந்துவிட்டேன். அண்ணன் மறுநாளும் தங்கி  நவதிருப்பதி தரிசித்து சென்னை திரும்பிவிட்டார்.

புனிதப்பயணம் முற்றும்.

பொறுமையுடன் படித்தவர்களுக்குத் தனதான்யமும் புத்திர பெளத்திரமும், தீர்காயுளும், பெண்களுக்கு தீர்க்க சுமஙலித்துவமும், கொட்டில் நிறையப் பசுமாடும், வட்டில் நிறையப் பாலும் தங்க‌மும்,வெள்ளியும் கோடிப்
புண்ணியமும் கிடைக்கட்டும். ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி   




ஆமாம். நம் கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள்தான். 
(புதிதாக எடுக்கப்பெற்ற படம்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

16 comments:

  1. நன்றி ஐயா!என்னுடைய ஆக்கங்களை வெளியிட்டு ஆதரவு அளித்து வருவதற்கு
    எப்போதும் நன்றியுடையவனாவேன்.பலரும் இங்கு பின்னூட்டம் இடாமல், நேரடியாக மின் அஞ்சல் எழுதுகிறர்கள். அல்லது 'சாட்' செய்து பாராட்டுகிறார்கள். நான் சிறு வயது முதலே எழுத்து, பேச்சு, நடிப்பு, பாடுதல் ஆகிய திறன் பெற்று இருந்தும், என் சமூகப்பணியால் நேரம் இன்றி இவற்றைத்
    தள்ளி வைத்து இருந்தேன். இப்போது சமூகப்பணிகள் குறைந்து விட்ட நிலையில்
    தங்க‌ள் ஊக்குவிப்பால் எழுத்துப்பணி சிறக்கிறது. வாழ்க தங்க‌ளின் ஆதரவுக் கரம். வளர்க தங்க‌ள் தமிழ்ப்பணி. நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கிய்மும், மன மகிழ்ச்சியும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  2. பயணக்கட்டுரை ஒன்றை நம்
    பாசமிகு வாத்தியார் எழுத சொன்ன


    கனவை நினைவாக்கிய தன்மையை
    கடலளவு நன்றியுடன் பாராட்டுகிறோம்


    சொந்த ஊரின் பெருமையை
    சொல்லவும் வேண்டுமோ..


    எங்களையும் அந்த நினைவுகளுடன்
    எல்லாத்தையும் நினைக்க வைத்தது


    மலர்ந்தது நினைவுகள் மட்டுமல்ல..
    மனம் நிறைந்து நின்றது மண்வாசனை


    கடல்அலை மாறி எழுவது போல்
    கால அலைகளும் மாறிவிட்டது

    ஆனாலும்,

    நெல்லை என்று சொன்ன உடன்
    சொல்லை சொல்லாமலிருக்கமுடியுமா


    சொதி குழம்பு ருசியும்
    பொதிசோறு சுவையும் மறக்கலாகுமா


    உங்கள் நட்சத்திர நாயன்மார் போல
    அவர்கள் நட்சத்திரத்தில் அய்யரும்


    தொடரட்டும் பயணங்கள்..
    தொட்டு நிற்கட்டும் பயண கட்டுரைகள்

    ReplyDelete
  3. பொறுமையுடன் படித்தவர்களுக்குத் தனதான்யமும் புத்திர பெளத்திரமும், தீர்காயுளும், பெண்களுக்கு தீர்க்க சுமஙலித்துவமும், கொட்டில் நிறையப் பசுமாடும், வட்டில் நிறையப் பாலும் தங்க‌மும்,வெள்ளியும் கோடிப்
    புண்ணியமும் கிடைக்கட்டும். ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!

    ததாஸ்து...

    ReplyDelete
  4. அன்புடன்" நமது சங்கீதத்தின் வணக்கம்""...கிருஷ்ணன் கோவிலில் ஒருவன் ஒரு குழந்தயை இடுப்பில் வைத்து கொண்டு இருக்க அரச காவலன் அவனை இடுப்பில் சவுக்கால் அடித்தால் ஏற்படும் தழும்பு போல் சிவந்து காணப்படும் !!அந்த இடம் மட்டும் சிவந்து இருக்கும் மற்ற இடம் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும் !!தேர்நதெடுத்த கல்லில் பார்த்து செதுக்கப்பட்ட சிற்பம் --அர்ச்சுனன் வில்லில் மேல் பக்கத்தில் சிறய பொடி கல்லை போட்டால் கிழே வந்து விழும் நுணுபபமான வேலைபாடு.. !!!அடியேனின் குடிசைக்கு வந்து சிரம பரிகாரம் செய்து உணவு உண்டு சிறிதாக இருந்தாலும் பெரியோர்கள் ஆசீர்வதித்து சென்றீரகள்.. முன்பு ஒரு முறை நீங்கள் நன்றி என் கூறிய போது!! நன்றி கூறி என்னை பிறிக்ரீர்களே என்றேன் ??? இறைவன் சங்கல்பம்.. !!தொடரட்டும்..

    ReplyDelete
  5. Dear Sir,

    KMR sir article is great.I always read his article and usually comment on the chat.

    -Shankar

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம்
    பெரும் ஆளை சேவிக்க போய் வெறும் ஆளுடன்வந்தேன்... இந்த கொடுமை அடியேனுக்கும் நேர்ந்தது..???கற்புக்கரசி அனுசுய வரலாறில்-- ஒரு மனிதனை பற்றி இல்லாத-- செய்யாத-- விஷயங்களை சொன்னால் அவனின் பாவம் நமக்கு கொஞ்சம் வந்து சேரும் ..... அது போல வெறும் ஆள் !!தான் செய்த பாவத்தை இது போல் சோறு போட்டு கழிக்கிறார்???ஆனால் ?? கழிக்க முடிமா ???என்றால் கழியாது..??? அதன் முறைப்பாடு வேறு?? குரு.. லிங்க... சங்கம... வழிபாடு முறைகள் இருந்தால் கழிய வாய்ப்பு உண்டு .. அடியேனின் கருத்து??.. பொறுமையுடன் படித்தவர்களுக்குத் தனதான்யமும் புத்திர பெளத்திரமும், தீர்காயுளும், பெண்களுக்கு தீர்க்க சுமஙலித்துவமும், கொட்டில் நிறையப் பசுமாடும், வட்டில் நிறையப் பாலும் தங்க‌மும்,வெள்ளியும் கோடிப்
    புண்ணியமும் கிடைக்கட்டும். ததாஸ்து! அப்படியே ஆகட்டும்!

    ததாஸ்து!ததாஸ்து!ததாஸ்து

    ReplyDelete
  7. ஒரு ரகசியம் என்னவென்றால் கல்கி அவதாரம் இந்த சன்னியாசிக் கிராமத்தில்தான் நடைபெறப் போகிறதாம். விஷ்ணு புராணத்தில் சொல்லி இருக்கிறதாம்//

    இது நான் இதுவரையில் கேள்விப்படாத தகவல்.

    நீலகண்டர்!அவரைப் பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. தனியாகப் பதிவு இடுகிறேன் //

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அண்ணனும் வேண்டிய திரவியங்களை சிக்கனம் பாராமல் வாங்கியிருந்தார்//

    அப்ப நீங்க எதுவும் வாங்கலையா?

    கொட்டில் நிறையப் பசுமாடும்,//

    அப்படியாவது என் கணவரோட ஆசை நிறைவேறினா சரி.

    ReplyDelete
  8. ///அப்ப நீங்க எதுவும் வாங்கலையா?///

    வாங்கும் பொறுப்பு அவருடையது. மற்றபடி 'ஷேரிங்......"('அந்த ஜாம் விளமபரப் பையனைப் போலவா' என்று அடுத்தாப்பல கேப்பியளோ?)

    ReplyDelete
  9. கடைசி வரைக்கும் பொறுமையாகப் படித்தவர்கள் லிஸ்டில் நானும் இருந்ததால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்று ஒரு சந்தோஷம்..
    பாதிவரைக்கும் படிச்சவுங்கதான் பாவம்..லிஸ்டிலே முன்பாதியளவாவுது கிடைக்குமில்லே.?
    ஒரு வகையிலே பார்த்தால் நல்லதுதான்..
    (ஏன்னா பின்பாதி சில அயிட்டம் நெருடலா இருக்கே..)
    ஆடு மாடு மேய்க்குற தொல்லையிலேருந்து தப்பிச்சுடுவாங்க பாருங்க..
    ஆமா..அது என்னா? ததாஸ்து..இன்னிக்கு கமேன்ட்லே
    ரொம்ப இடத்துலே இந்த வார்த்தை இடறிச்சு..அதான் கேட்டேன்..

    ReplyDelete
  10. ///ஆமா..அது என்னா? ததாஸ்து..இன்னிக்கு கமேன்ட்லே
    ரொம்ப இடத்துலே இந்த வார்த்தை இடறிச்சு..அதான் கேட்டேன்..///

    கிறித்துவர்களின் amen!, இஸ்லாமியர்களின் ameen!, இந்துக்களின் ததாஸ்து எல்லாவற்றிற்கும் ஒரே பொருள்."let it be so" or "may it be so"

    "லோகாஸ்மஸ்தா சுகினோ பவந்து!"==="பாரிலுள்ள மக்கள் எல்லோரும் சுகமாக
    இருக்கட்டும்!" என்று தலைவர் கூற , தொண்டர்கள் அதை ஆமோதித்து, வழிமொழிந்து, 'அப்படியே ஆகட்டும்' என்று வாழ்த்துவார்கள்.

    நான் கூறீயுள்ளபடி வாழ்த்துரைக்கு வழி மொழிதலே "ததாஸ்து".

    "மைனர்வாளுடைய சந்தேகம் நிவர்த்தியாவதாக"

    "ததாஸ்து"

    ReplyDelete
  11. நல்ல பதிவு. ஊர் சுற்றிப் பார்த்தாலும் அது புண்ணியத் தல தரிசனம் என்ற வகையில் அந்த அனுபவித்த விதத்தை நல்ல முறையில் விளக்கியிருக்கிறார் திரு கே.எம்.ஆர். நான் தஞ்சையைச் சேர்ந்தவன். தென் மாவட்டங்களுக்கு அதிகம் போனதில்லை. முதன்முறையாக நண்பர் கே.எம்.ஆர். அவர்களுடைய குமாரிகள் அவர்களுடன் நான் தென் தமிழ் நாட்டுத் தலங்கள், கேரளத் தலங்கள் ஆகியவைகளுக்குப் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் நெல்லை, சங்கரன்கோயில், திருவைகுண்டம், சுசீந்திரம், பத்மனாபபுரம், திருவனந்தபுரம், காலடி, குருவாயூர் போன்ற இடங்களைக் காண்பித்தார். இப்போதைய அவரது பயணக் கட்டுரை அவருடன் நான் சென்ற நாட்களை நினைவு படுத்தியது. நல்ல கட்டுரை. நண்பர் மைனர் அவர்கள் "ததாஸ்து" என்றால் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு கே.எம்.ஆர். பதிலும் கொடுத்து விட்டார். இது குறித்த ஒரு தகவல் சொல்லலாம் என்றிருக்கிறேன். பூமியில் நாம் பேசிக் கொண்டோ அல்லது விவாதித்துக் கொண்டோ இருக்கும் போது, யக்ஷர்கள் எனப்படும் தேவகணத்தார் வான் வழியில் பயணம் செய்துகொண்டே நமது உரையாடல்களைக் கேட்டுக் கொண்டே போவார்களாம். அப்போது, நாம் எது சொன்னாலும் அது அங்ஙனமே ஆகட்டும் (ததாஸ்து) என்று சொல்லிக் கொண்டே போவார்களாம். ஆகையால் ஒரு நண்பர் நம்மிடம் கடன் கேட்டார் என்று வைத்துக் கொள்வோம், இல்லை என்று சொன்னால் யக்ஷர்கள் 'தாதாஸ்து' சொல்லிவிடுவார்களாம். நாம் நன்கு நலமாக இருக்கும்போதே பொய்யாக 'மிகவும் கஷ்டப் படுகிறேன்" என்று சொன்னால் அதற்கும் ததாஸ்து தான். ஆகவே பேசும் போது அதுபோன்ற 'எதிர்மறை"ப் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது என்பார்கள். உண்மையோ பொய்யோ, எதிர்மறைப் பேச்சுக்கள் இந்த நம்பிக்கையினால் நின்று போவதும் நல்லதுதானே.

    ReplyDelete
  12. ///// kmr.krishnan said...
    நான் கூறீயுள்ளபடி வாழ்த்துரைக்கு வழி மொழிதலே "ததாஸ்து"./////////////////

    "ததாஸ்து.... ததாஸ்து.."

    ReplyDelete
  13. ///// Thanjavooraan said... ...
    "ஆகவே பேசும் போது அதுபோன்ற 'எதிர்மறை"ப் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது என்பார்கள். உண்மையோ பொய்யோ, எதிர்மறைப் பேச்சுக்கள் இந்த நம்பிக்கையினால் நின்று போவதும் நல்லதுதானே."./////////////////

    "ததாஸ்து.... ததாஸ்து.."

    ReplyDelete
  14. ///"பூமியில் நாம் பேசிக் கொண்டோ அல்லது விவாதித்துக் கொண்டோ இருக்கும் போது, யக்ஷர்கள் எனப்படும் தேவகணத்தார் வான் வழியில் பயணம் செய்துகொண்டே நமது உரையாடல்களைக் கேட்டுக் கொண்டே போவார்களாம்."///
    அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் கோபால்ஜி! சுவாமி விவேகாநந்தர் சொல்லுவார்:"ஒரு குகையில் போய் அமர்ந்து கொண்டு நல்ல சிந்தனைகளை தியானம் செய்து விட்டு வா. அந்த சிந்த‌னையின் தாக்கம் வான் வெளியில் எப்போதும் நிலைத்து நிற்கும். நீ அந்த சிந்தனையின் மீது செயல் பட வில்லை எனினும் வேறு யாரையாவது அந்த சிந்தனை போய் தாக்கி அவர்களை அது இயங்க வைக்கும்"

    ஆகவே நற் சிந்தனை, நல்ல ஒலிகள் ஆகியவை தேவை என்பது கண்கூடு.

    ReplyDelete
  15. ஐயா, பதிவு அருமை..பெரும்பாலான சாஸ்தா அய்யனார் கோவில்களில் பேச்சி அம்மன் உண்டு..பேச்சி அம்மன் பற்றி எனக்குத் தெரியவில்லை..யார் இவர்? அய்யனாருக்கும் இவருக்கும் உள்ள உறவுமுறை யாது? யாருக்காவது தெரியுமா..

    ReplyDelete
  16. ஒரு யூகம் தான்! காஞ்சிப் பெரியவர் சொன்னதோ என்று ஒரு சம்ஸ‌யமும் உண்டு.

    பேச்சி அம்மன்,பேச்சாயி அம்மன் என்பது எல்லாம் சரஸ்வதியின் சொருபமாம்.

    "பேச்சு" அம்மன் என்பது மருவி பேச்சி அம்மன் ஆகியிருக்கலாம்.

    எங்கள் தாய் வழிக்காணி குலதெய்வம் சடைவுடையார் கோவிலில் ஸ்ரீராஜராஜேஸ்வரி, காளிகாம்பாள், துர்கை ஆகிய மூன்று பெண் தெய்வங்கள் சூழ‌
    பால சாஸ்தா காட்சி அளிக்கிறார்.இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவைகளுக்கு நடுவே சாஸ்தா! அங்கும் தனியாக பேச்சாயி! வெளியில் மாடன், பெரியகருப்பு, சின்னக்கருப்பு போன்ற‌ பரிவாரங்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com