மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.4.10

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!

---------------------------------------------------------------------
படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!

கவியரசருக்கிருந்த அதீத ஞானம்!

உள்ளத்திலிருந்து வெளிப்படுவது கவிதை! உள்ளத்திலிருந்து அது வந்தாலும் அதைச் சிறந்த முறையில் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு மொழியாற்றல் வேண்டும்.

ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது என்பது சற்று வித்தியாசமானது. மேற்கூறிய இரண்டோடு மேலும் ஒன்று கூடுதலாக வேண்டும்.

அதுதான் ஞானம்!

விஷயஞானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சினிமா பாடல்களைப் பொதுவாக பக்திப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, தத்துவப் பாட்டு, பல்சுவைப் பாட்டு என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

ஒரு திரைப்படக் கவிஞருக்கு கற்றுணர்ந்த அனுபவமும், பட்டுத்தெளிந்த அல்லது பட்டுத்தேறிய அனுபவமும், மக்களின் நாடியைப் படித்துப் பார்த்த அனுபவமும் வேண்டும்.

அந்தக் கற்றுணர்ந்த அறிவும், பட்டுத்தேறிய அனுபவமும் கவியரசருக்கு அதீதமாக இருந்தது.

எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

கவியரசர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள ஒரு சமூகத்தில் பிறந்தவர். அதோடு பல புராணங்களும், இதிகாசங்களும் அவருக்குப் படித்துணர்வதற்கு இளம் வயதிலேயே கிடைத்தது.

அதேபோல அவர் பிறந்த மாவட்டத்தில் தாலாட்டுப் பாட்டிற்கும் பஞ்சமில்லை. அந்தக் காலத்து - அதாவது கவியரசர் காலத்துத் தாய்மார்களெல்லாம், தாய்ப்பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டினார்கள். தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைத்தார்கள்.

கவியரசர் இளைஞராக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்து, அது கைகூடாமற்போய் சோகத்தில் மிதந்தவர்.

அந்த காதலிக்காக அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணற்ற பாடல்களில் சில பாடல்கள்

பின்னாளில் திரையில் ஒலித்தன.

உதாரணத்திற்கு சில பாடல் வரிகள்:

"நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்"

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவளவாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி பெறுவாயே!"

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

அதேபோல அவர் சிறு வயதிலும், இளைஞராக இருந்தபோதும், கேட்ட, படித்த தாலாட்டுப் பாடல்கள் எண்ணற்றவை!

அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றின் வரிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

"வாரும்வாரும் தெய்வவடிவேல் முருகரே வரும்
வள்ளிமணாளரே வாரும், புள்ளிமயிலோரே வாரும்
சங்கும் ஒலித்தது, தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும், உண்மைவினோதரே வாரும்"

இப்படி அசத்தலாக 24 வரிகளோடு கூடிய பாடல் அது! தாய் ராகம் போட்டுப் பாடுகையில் குழந்தை பத்தாவது வரியிலேயே தூங்கிவிடும்.

அதே போல சிறுவயதில், தன் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தமையாலும், தங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையாலும், பல அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையின், ஏற்றத்தாழ்வுகளையும், தத்துவங் களையும் அப்போதே புரிந்து கொண்டு விட்டவர் அவர். அதனால்தான் எல்லாவிதமான பாடல்களையும் அவரால் எழுத முடிந்தது.

கவியரசர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் (1952 - 1960) பிரபலமாக இருந்த கவிஞர் ஒருவர் பக்திப்பாட்டு அல்லது தாலாட்டுப் பாட்டு என்றால், என்னால் முடியாது, நீங்கள் கண்ணதாசனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு இயக்குனர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் கூறிவிடுவாராம்.

அந்த நிகழ்வுகளெல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் விவரமாக வரும்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். கீழே உள்ள பாட்டைப் பாருங்கள்.
-------------------------------------------------
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தைமீது பாசம் கொண்ட தசரதராமன்,
வீரன்என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர்முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம், ராம், ராம்
ராம், ராம், ராம்

ராமன் எத்தனை ராமனடி!

படம் -லஷ்மி கல்யாணம்
பாடியவர்: பி..சுசீலா அவர்கள்
வருடம்: 1968
--------------------------------------------
இன்னொரு பாடல்:

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்.

காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்!

சிறையினிலேதான் அவன் பிறந்தான்
மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!

அடையாக் கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!

படம்: அனாதை ஆனந்தன் (வருடம் 1970)
பாடியவர்: சீர்காழி. எஸ்.கோவிந்தரஜன் அவர்கள்
-------------------------------------------
இப்படிப் பல பாடல்களைச் சொல்லாம் இடமும், நேரமும், கட்டுரையின் நீளமும் கருதி இரண்டோடு நிறைவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டாமா?

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!
அதுதான் ஞானம்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

32 comments:

  1. வணக்கம் அய்யா. வாழ நினைத்தால் வாழலாம்...இந்த வரிகள் வாழ்வின் விளிம்பை தொட்டவர்களை திரும்ப அழைத்து வந்த தெய்வீக வரிகள். வாழ்த்துக்கள் .தொடருங்கள்.

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையானதொரு தொகுப்பு,
    அத்தனையும் சிறப்பு! நன்றிகள் குருவே!
    கவிச்சக்கரவர்த்தி கம்பனையும்
    கவியரசர் கண்ணதாசனையும்
    ஒப்பீடுசெயதவர் இப்படி கூறுகிறார்:
    பாத்திரத்தை படம் பிடித்து கவிபடைத்தான் கம்பன்,
    கண்ணதாசனோ பாத்திரத்தையே கவிதையாய்ப் படம் பிடித்தார் என்பர்.
    இன்னும் பல ஒப்பீடுகள் செய்துள்ளார்கள்....
    படித்துத் தெளிந்து தேக்கிய அறிவை கவிஞர்
    உணர்ச்சி (Emotion) என்னும் அணையில் தேக்கி அதை சொல்,பொருள்
    என்னும் மடை கதவுகளை திறக்கும் போதே
    காலத்தால் அழியா கவிதை, ஜீவன் வளர்க்கும் நீராய் பீறிடுகிறது.

    இரண்டாம் கம்பர் என்றால் அது மிகையாகாது,
    இருவருக்கும் சோழநாடு தானே பூர்வீகம்....
    காழ்ப் புணர்ச்சியற்றோரும், கற்று உணர்ந்தோரும் ஏற்பார்.

    ReplyDelete
  3. காலை வணக்கம் ஐயா!

    ReplyDelete
  4. அருமை! கவியரசருக்கு இன்னொருவர் ஈடாகுமோ! நன்றி!

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    கவியரசர் அவர்கள் , இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, கட்டாயம் ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டும்.சந்தேகமே இல்லை.
    கவியரசருக்கு--மொழியாற்றல்,படிப்பது, படித்துத் தெளிவது, அதீத ஞானம்,ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு,தெய்வாம்சம் ஆகியன இருந்ததால் தான் மிகச் சிறந்த,ஈடு இணை இல்லாப் பாடல்களைத் தருவதற்கு முடிந்தது.அவரின் பாடல்களை யாராலும் மறக்க முடியாது.
    . . . . . . . . .
    அவர் சிறப்பான பாடல்களை எழுதி இருந்தாலும் தங்களின் எழுத்துத் திறமையால் மற்றும் ஞாபக சக்தியாலும் தகுந்தபடி பாடல்களை மேற்கோள் காட்டி இங்கு கொடுத்துள்ளது,குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிர்கிறது.

    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-15

    ReplyDelete
  6. >>படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!
    அதுதான் ஞானம்!>>

    இந்த ஞானம் உங்களிடமும் உண்டு அதனால் தான் உங்கள் எழுத்தும் எப்பொழுதும் சுவாரிசியமாக உள்ளது.

    ReplyDelete
  7. //////தாராபுரத்தான் said...
    வணக்கம் அய்யா. வாழ நினைத்தால் வாழலாம்...இந்த வரிகள் வாழ்வின் விளிம்பை தொட்டவர்களை திரும்ப அழைத்து வந்த தெய்வீக வரிகள். வாழ்த்துக்கள் .தொடருங்கள்./////

    உண்மைதான் நண்பரே! பலரின் தற்கொலைக்கு எண்ணத்தைக் கைவிடச் செய்த பாடல்வரிகள் அவை!

    ReplyDelete
  8. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையானதொரு தொகுப்பு, அத்தனையும் சிறப்பு! நன்றிகள் குருவே!
    கவிச்சக்கரவர்த்தி கம்பனையும் கவியரசர் கண்ணதாசனையும்
    ஒப்பீடுசெயதவர் இப்படி கூறுகிறார்:
    பாத்திரத்தை படம் பிடித்து கவிபடைத்தான் கம்பன்,கண்ணதாசனோ பாத்திரத்தையே கவிதையாய்ப் படம் பிடித்தார் என்பர். இன்னும் பல ஒப்பீடுகள் செய்துள்ளார்கள்....
    படித்துத் தெளிந்து தேக்கிய அறிவை கவிஞர்
    உணர்ச்சி (Emotion) என்னும் அணையில் தேக்கி அதை சொல்,பொருள்
    என்னும் மடை கதவுகளை திறக்கும் போதே
    காலத்தால் அழியா கவிதை, ஜீவன் வளர்க்கும் நீராய் பீறிடுகிறது.
    இரண்டாம் கம்பர் என்றால் அது மிகையாகாது,
    இருவருக்கும் சோழநாடு தானே பூர்வீகம்....
    காழ்ப் புணர்ச்சியற்றோரும், கற்று உணர்ந்தோரும் ஏற்பார்.///////

    ஒரு திருத்தம். கவியரசர் கண்ணதாசன் பாண்டிய மண்ணைச் சேர்ந்தவர். அவர் பிறந்த சிறுகூடற்பட்டியை உள்ளடக்கிய செட்டிநாட்டுப் பகுதி, நகரத்தார்களுக்குப் பாண்டியமன்னனால் பரிசாகக் கொடுக்கப்பெற்றவை!

    ReplyDelete
  9. /////DHANA said...
    காலை வணக்கம் ஐயா!//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////snkm said...
    அருமை! கவியரசருக்கு இன்னொருவர் ஈடாகுமோ! நன்றி!/////

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கவியரசர் அவர்கள் , இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, கட்டாயம் ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டும்.சந்தேகமே இல்லை.
    கவியரசருக்கு--மொழியாற்றல்,படிப்பது, படித்துத் தெளிவது, அதீத ஞானம்,ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு,தெய்வாம்சம் ஆகியன இருந்ததால் தான் மிகச் சிறந்த,ஈடு இணை இல்லாப் பாடல்களைத் தருவதற்கு முடிந்தது.அவரின் பாடல்களை யாராலும் மறக்க முடியாது. . . . . . . . . .
    அவர் சிறப்பான பாடல்களை எழுதி இருந்தாலும் தங்களின் எழுத்துத் திறமையால் மற்றும் ஞாபக சக்தியாலும் தகுந்தபடி பாடல்களை மேற்கோள் காட்டி இங்கு கொடுத்துள்ளது,குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிர்கிறது.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டுக்கள், கவியரசருக்கே உரியவை. அவர் எழுத்துக்களை யார் எடுத்து எழுதினாலும் அதில் இயற்கையாகவே ஒரு சுவை வந்துவிடும்!

    ReplyDelete
  12. வாத்தியார் ஐயா

    தாய் மண்ணில் இருந்து வணங்கும் வணக்கம்.

    "அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
    கீதையிலே கண்ணன்'!

    கூறியது அனைத்தும்
    உண்மை! உண்மை! உண்மை! உண்மையோ உண்மை!

    ReplyDelete
  13. மன்னிக்கவும், ஐயா! நான் பூர்வீகம் என்று குறிப்பிட்டிருந்தது, சோழநாடு.
    என் கருத்தில் தவறு இருக்கலாம்?. தாங்கள் தான் சொல்லவேண்டும்.....
    பூம்புகாருக்கு கிழக்கே நாகமலைத் தீவு என்றொன்று இருந்ததாகவும் (பின்னாளில் வெள்ளத்தில் அழிவுற்றதாகவும்) அதில் இருந்து வணிகர் குடும்பங்கள் சோழநாட்டிற்கு வந்தும் அதன் பிறகே சோழ மன்னரும் பாண்டியருடன் நட்பு கொண்டிருந்த காலத்தில்; தனது நாட்டு வணிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாண்டியனுடன் தொடர்பு கொண்டு, அதன் பொருட்டு; அவனின் நாட்டில் தங்கி வணிகம் செய்ய தனியாக இடம் அளித்ததாகவும் கேள்விப்பட்டேன். மேற்கூறிய வெள்ள அழிவின் அனுபவமும் கூட செட்டிநாட்டில் உள்ள வீடுகளின் தளங்கள் அதிக உயரமாகவும் இருக்கலாம் என்று நான் நினைத்ததுண்டு.

    ReplyDelete
  14. /////மதி said...
    >>படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!
    அதுதான் ஞானம்!>>
    இந்த ஞானம் உங்களிடமும் உண்டு அதனால் தான் உங்கள் எழுத்தும் எப்பொழுதும் சுவாரிசியமாக உள்ளது.
    எடுத்து எழுதினாலும் அதில் இயற்கையாகவே ஒரு சுவை வந்துவிடும்!/////

    ஓரளவிற்கு உண்டு! உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  15. ////kannan said...
    வாத்தியார் ஐயா
    தாய் மண்ணில் இருந்து வணங்கும் வணக்கம்.
    "அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
    கீதையிலே கண்ணன்'!
    கூறியது அனைத்தும்
    உண்மை! உண்மை! உண்மை! உண்மையோ உண்மை!//////

    நல்லது. நன்றியோ நன்றி!:-))))

    ReplyDelete
  16. /////Alasiam G said...
    மன்னிக்கவும், ஐயா! நான் பூர்வீகம் என்று குறிப்பிட்டிருந்தது, சோழநாடு.
    என் கருத்தில் தவறு இருக்கலாம்?. தாங்கள் தான் சொல்லவேண்டும்.....
    பூம்புகாருக்கு கிழக்கே நாகமலைத் தீவு என்றொன்று இருந்ததாகவும் (பின்னாளில் வெள்ளத்தில் அழிவுற்றதாகவும்) அதில் இருந்து வணிகர் குடும்பங்கள் சோழநாட்டிற்கு வந்தும் அதன் பிறகே சோழ மன்னரும் பாண்டியருடன் நட்பு கொண்டிருந்த காலத்தில்; தனது நாட்டு வணிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாண்டியனுடன் தொடர்பு கொண்டு, அதன் பொருட்டு; அவனின் நாட்டில் தங்கி வணிகம் செய்ய தனியாக இடம் அளித்ததாகவும் கேள்விப்பட்டேன். மேற்கூறிய வெள்ள அழிவின் அனுபவமும் கூட செட்டிநாட்டில் உள்ள வீடுகளின் தளங்கள் அதிக உயரமாகவும் இருக்கலாம் என்று நான் நினைத்ததுண்டு.//////

    மன்னிப்பெல்லாம் எதற்கு? இந்த அளவு விஷயம் தெரிந்துவைத்திருப்பதே பெரியகாரியம். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கம் காரணமாக பாண்டிய நாட்டிற்குக் குடிபெயர்ந்துவந்தார்கள் எனபது வரலாறு!

    ReplyDelete
  17. very nice. ayya mudindhal apadiye. Rudrakshathai patrium sollungal. thank u .

    ReplyDelete
  18. ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான தொகுப்புகள்
    வாழ்த்துக்கள்...
    நன்றி ஆசிரியருக்கு,

    ReplyDelete
  19. சமீபத்தில் ஒரு பெண் கவிஞர் எழுதிய கவிதையை வாசிக்க நேர்ந்தது!..மஞ்சள் பத்திரிக்கையில் எழுத வேண்டியது அது!...அவ்வளவு நாராசமான வரிகள்!..அவர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது அந்தக் கவிதைக்காக!...இதையெல்லாம் பார்க்கும் போது தான் எனக்குக் கவியரசரின் மீது அபிமானம் மேலும்,மேலும் அதிகரிக்கிறது!...முட்டாளுக்கும் புரியும் படி எழுதிய மாமேதை எங்கே?இவர்கள் எங்கே?......

    ReplyDelete
  20. படிப்பது வேறு தெளிவது வேறு என்று அழகாக ஒரே வரியில்
    ஞானம் என்றால் என்ன என விளங்கவைத்துவிட்டீர்கள்.

    தெரிவது எல்லாம் புரிவதும் இல்லை.
    புரிவது பலவும் நிலைப்பதும் இல்லை.
    நிலைப்பது எது எனத் தெளிவும் இல்லை.
    தெளிந்தவன் எவனும் சொன்னதும் இல்லை.

    வீடு வரை உறவு எனச்சொன்னான் கவிஞன்.

    சொன்னவன் சொல்தனைப் புரிந்தவன் இல்லை
    புரிந்தால் புவியில் தொல்லையும் இல்லை.

    அதுவே தெளிவு. அதுவே ஞானம்.

    சுப்பையா ஸார்! ஹாட்ஸ் ஆஃப் !! டு யூ.


    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  21. ////Vinodh said...
    wordings are not clear..../////

    எதைச் சொல்கிறீர்கள் சாமி?

    ReplyDelete
  22. /////ms torrent said...
    very nice. ayya mudindhal apadiye. Rudrakshathai patrium sollungal. thank u ./////

    சொல்கிறேன் நண்பரே. பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  23. /////raj said... ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான தொகுப்புகள்
    வாழ்த்துக்கள்...
    நன்றி ஆசிரியருக்கு,/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////நேசன்..., said...
    சமீபத்தில் ஒரு பெண் கவிஞர் எழுதிய கவிதையை வாசிக்க நேர்ந்தது!..மஞ்சள் பத்திரிக்கையில் எழுத வேண்டியது அது!...அவ்வளவு நாராசமான வரிகள்!..அவர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது அந்தக் கவிதைக்காக!...இதையெல்லாம் பார்க்கும் போது தான் எனக்குக் கவியரசரின் மீது அபிமானம் மேலும்,மேலும் அதிகரிக்கிறது!...முட்டாளுக்கும் புரியும் படி எழுதிய மாமேதை எங்கே?இவர்கள் எங்கே?......////

    இவர்கள் இப்படி இருப்பதால்தான், நமக்கு கவியரசரின் மேல் மேலும் மேலும் மரியாதை அதிகரிக்கிறது!
    அவரின் உயர்வு நன்றாகப் புலப்படுகிறது!

    ReplyDelete
  25. /////LK said...
    arumai/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////sury said...
    படிப்பது வேறு தெளிவது வேறு என்று அழகாக ஒரே வரியில்
    ஞானம் என்றால் என்ன என விளங்கவைத்துவிட்டீர்கள்.
    தெரிவது எல்லாம் புரிவதும் இல்லை.
    புரிவது பலவும் நிலைப்பதும் இல்லை.
    நிலைப்பது எது எனத் தெளிவும் இல்லை.
    தெளிந்தவன் எவனும் சொன்னதும் இல்லை.
    வீடு வரை உறவு எனச்சொன்னான் கவிஞன்.
    சொன்னவன் சொல்தனைப் புரிந்தவன் இல்லை
    புரிந்தால் புவியில் தொல்லையும் இல்லை.
    அதுவே தெளிவு. அதுவே ஞானம்.
    சுப்பையா ஸார்! ஹாட்ஸ் ஆஃப் !! டு யூ.
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com///////

    உங்களின் பாராட்டுக்கள், கவியரசருக்கே உரியவை. அவர் எழுத்துக்களை யார் எடுத்து எழுதினாலும் அதில் இயற்கையாகவே ஒரு சுவை வந்துவிடும்!

    ReplyDelete
  27. //படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு! அதுதான் ஞானம்!//

    வெறும் படிப்பிற்கு புதன் மட்டும் போதும். அடுத்ததிற்கு குருவின் அருளும் ஞானத்திற்கு கேது ஆகியோர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒன்றாக இருந்தால் ஞானம் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது. காரணம் மூவரும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்கள். இதற்காக சிரத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. இருப்பினும் ஜோதிடம் என்பது கடினமானதுதான்.

    நிற்க, கவியரசரின் பாடல்களில் உள்ள நவரசங்களில் மற்ற ரசங்களை விட பக்தி ரசத்தை நன்கு ரசித்திருக்கிறேன். அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்துகள் என்று சொல்லலாம்

    ReplyDelete
  28. அன்பு அய்யாவுக்கு வணக்கம், கவிஞர் கண்ணதாசன், வாழ்க்கையை
    முழுவதுமாக படித்தவர், மிகவும் அனுபவித்து கவிதையை எழுதியவர்.
    அவருடைய அனுபவ மொழிகளை பாருங்கள்,

    அனுபவ மொழி ‍‍1
    குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்,
    குற்றதிற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
    யாருக்கு அதை வழுங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது.

    அனுபவ மொழி 2
    மனிதர்கள் பெறும் புகழ் இருவகைப்படும் ஒன்று, பெற்று சாவது.
    இன்னொன்று செத்து பெருவது,சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள்
    பெற்றுச் செத்தவர்கள்;கோடிக் கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்!
    என்று சொல்கிறார் அடுத்து பாருங்கள்

    அனுபவ மொழி 3
    தேவைக்கு மேலே பொருளும்,
    திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால்
    பார்வையில் படுவதெல்லாம் சாதாரமாகத்தான் தோன்றும்!
    என்கிறார், இப்படி கண்ணதாசன் அவர்களின் அனுபவ மொழிகளைச்
    சொல்லிக்கொண்டே போகலாம்.

    அடுத்து அய்யாவிடம் ஒரு கேள்வி ஆண்டவன்,
    ஆண்டவர் என்று நாம் சொல்வது
    சரியா? கடவுள், இறைவன் என்பதுதான் சரி,ஆண்டவன்
    என்றால் ஆண்டு முடித்தவன் என்று பொருளாகிவிடும்.(இறந்தகால பதமாகிவிடும்)
    ஆண்டுக்கொண்டிருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது அதற்கு தங்களிடமிருந்து
    பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கும்
    உங்கள் அன்பு மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  29. ////ananth said...
    //படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு! அதுதான் ஞானம்!//
    வெறும் படிப்பிற்கு புதன் மட்டும் போதும். அடுத்ததிற்கு குருவின் அருளும் ஞானத்திற்கு கேது ஆகியோர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒன்றாக இருந்தால் ஞானம் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது. காரணம் மூவரும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்கள். இதற்காக சிரத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்ததில் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. இருப்பினும் ஜோதிடம் என்பது கடினமானதுதான்.
    நிற்க, கவியரசரின் பாடல்களில் உள்ள நவரசங்களில் மற்ற ரசங்களை விட பக்தி ரசத்தை நன்கு ரசித்திருக்கிறேன். அருமையான சிந்தனை, ஆழ்ந்த கருத்துகள் என்று சொல்லலாம்/////

    பக்திப் பாடல்களில் ஆழ்ந்த கருத்துக்களுடன், அவருடைய சொல் விளையாட்டும் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  30. ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், கவிஞர் கண்ணதாசன், வாழ்க்கையை
    முழுவதுமாக படித்தவர், மிகவும் அனுபவித்து கவிதையை எழுதியவர்.
    அவருடைய அனுபவ மொழிகளை பாருங்கள்,

    அனுபவ மொழி ‍‍1
    குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்,
    குற்றதிற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
    யாருக்கு அதை வழுங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது.

    அனுபவ மொழி 2
    மனிதர்கள் பெறும் புகழ் இருவகைப்படும் ஒன்று, பெற்று சாவது.
    இன்னொன்று செத்து பெருவது,சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள்
    பெற்றுச் செத்தவர்கள்;கோடிக் கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்!
    என்று சொல்கிறார் அடுத்து பாருங்கள்

    அனுபவ மொழி 3
    தேவைக்கு மேலே பொருளும்,
    திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால்
    பார்வையில் படுவதெல்லாம் சாதாரமாகத்தான் தோன்றும்!
    என்கிறார், இப்படி கண்ணதாசன் அவர்களின் அனுபவ மொழிகளைச்
    சொல்லிக்கொண்டே போகலாம்.

    அடுத்து அய்யாவிடம் ஒரு கேள்வி ஆண்டவன்,
    ஆண்டவர் என்று நாம் சொல்வது
    சரியா? கடவுள், இறைவன் என்பதுதான் சரி,ஆண்டவன்
    என்றால் ஆண்டு முடித்தவன் என்று பொருளாகிவிடும்.(இறந்தகால பதமாகிவிடும்)
    ஆண்டுக்கொண்டிருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது அதற்கு தங்களிடமிருந்து
    பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கும்
    உங்கள் அன்பு மாணவன்
    ஜீவா///////

    ஆண்டவன் என்றால் நம்மை ஆண்டுகொண்டிருப்பவன் என்று பொருள் கொள்ளுங்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com