மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.1.09

ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்!


அந்த இளைஞனுக்கு அப்போது இருபது வயது. துள்ளும் வயது.
மிடுக்கான வயது. ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற வயது. பல கனவுகளோடு
வாழ்க்கையை எதிர் நோக்குகின்ற வயது. எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக் கொள்ளூங்கள்.

இன்றையக் கதையின் நாயகன் அவன்தான்.

பெயர்?

பெயரெல்லாம் முக்கியமில்லை. நாயகன் என்று வைத்துக்கொள்ளுங்கள்

செட்டிநாட்டுப் பகுதியில் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவன் அவன்
அவன் பிறந்தபோது அவன் குடும்பத்தினருக்கு 3,000 ஏக்கர்கள் விளை
நிலங்கள் சொந்தமாக இருந்தன. அதில் அவன் பங்கு மட்டும் ஆயிரம்
ஏக்கர்

அவன் வாழ்க்கையில் கிரகங்கள் எப்படி சதிராட்டம் ஆடின என்பதுதான்
இன்றையக் கதை. சுவாரசியமாக இருக்கும். சுவாரசியத்தை மட்டும்
இப்போது பார்ப்போம்.

காலம்: 1941ஆம் ஆண்டு! ஏ.வி.எம்மின் சபாபதி திரைப்படம் வெளிவந்து
சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம். அந்த சபாபதி படத்தில்
வரும் நாயகன் T.R. ராமச்சந்திரனைப் போலவே நமது நாயகனும் எந்தக்
கவலையும் இல்லாமல் வளர்ந்தான்.

வளர்ந்தான் என்பதைவிட, வளர்க்கப்பட்டான் என்று சொல்ல வேண்டும்

சீமான் வீட்டுப்பிள்ளைகள் எல்லோரும் அந்தக் காலகட்டத்தில் எப்படி
வளர்க்கப் பட்டார்களோ அப்படி அவனும் வளர்க்கப்பட்டான்.

காலை, மாலை நேரங்களில் டென்னிஸ் கோர்ட்டில் இருப்பான். மற்ற
நேரங்களில் சீட்டாட்டம். அவனைச் சுற்றிலும் பெரிய நண்பர்கள் வட்டம்.

டென்னிஸ் ராக்கெட் எல்லாம் அப்போது லண்டனில் இருந்து வரும்.
அதற்கான பிரத்தியேகக் கடை ஒன்று சென்னை மவுண்ட் ரோட்டில்,
P.R.R & Sons அருகே இருந்தது.

அவன் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை அவன் உணர்ந்து
வருந்தாமல் இருக்கும்படியாக வளர்க்கப்பட்டான்.

ஆமாம் அவனுக்குத் தந்தை இல்லை.தன் தாயின் கருவறையில் அவன்
இருக்கும்போதே அவனுடைய தந்தை காலமாகிவிட்டார். கார் விபத்தில்
இறந்து விட்டார்.

அவன் தாயாரின் பெயர் லக்ஷ்மி ஆச்சி. சிவந்த மேனி. சுருள் சுருளாகக்
கற்றை முடி. மிகவும் அழகாக இருப்பார்கள். அவன் தந்தையாரோ அதற்கு
நேர் மாறாக வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் P.S. வீரப்பா
வைப் போல கறுப்பாக இருப்பார்.

அவன் தந்தையார் கார் விபத்தில் இறந்தபோது அவருடைய வயது 25 தான்.

அவனுடைய தாயாரின் வயது 23. இளம் வயதிலேயே கணவனைப் பறி
கொடுத்த அந்த மாதரசியைக் கட்டிக்கொண்டு, அவளுடைய உறவினர்கள்
எல்லாம் ஓ'வென்று கதறி அழுதார்கள்.

அவர்கள் அழுகையின் சத்தம் கேட்டுக் காலன் பயப்படவில்லை. அதோடு
இறந்த மனிதனையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அந்த அபலைக்கு அப்போது கையில் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை.
அதோடு வயிற்றில் இரண்டு மாதக் கர்ப்பத்தில் ஒரு குழந்தை. கர்ப்பத்தில்
இருந்த அந்தக் குழந்தைதான் நம் நாயகன்.

அந்தக்காலத்து செட்டிநாட்டு வழக்கப்படி, கணவன் இறந்த மூன்றாம் நாள்
அவளை முழு விதைவையாக்கும் சடங்கு நடக்க இருந்தது.

அவளிடம் திருமாங்கல்யத்தைக் கழற்றி வாங்க வேண்டும். வெண்ணிற
ஆடைகளைக் கொடுத்து அவளை அணிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
அப்படிப் பட்ட சூழ்நிலைக்கு ஆளாகும் இளம்பெண்கள் தரையில் விழுந்து
புரண்டு கதறி விடுவார்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்த சமயத்தில்
வீட்டிற்குள் ஆடவர்களும், இளகிய மனம் படைத்த பெண்களும் இருக்க
மாட்டார்கள். வெளியேறிவிடுவார்கள். சடங்கு முடிந்து எல்லாம் சரியான
பிறகு திரும்பி வருவார்கள்.

உறவினர்களில் வயதில்மூத்த விவதைப்பெண் ஒருத்திதான் அதைச் செய்வார்

வந்தவர், லக்ஷ்மி ஆச்சியைக் கேட்டார்.

"ஏன்டி, நாள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா?"

புரிந்து கொண்ட லக்ஷ்மி ஆச்சி மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

"இல்லை, இரண்டுமாதமாக முழுகாமல் (முழுக்கு இல்லாமல்) இருக்கிறேன்!"

சடங்கு நிறுத்தப்பட்டது. வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு
விதவைக் கோலத்தைக் கொடுப்பதில்லை. அப்படி ஒரு தள்ளுபடி!
(concession)

அன்றிலிருந்து சுமார் எட்டு மாதகாலம் கழித்து நமது நாயகன் பிறந்தான்

14.8.1921ஆம் ஆண்டு மாலை 5:52 மணிக்கு மூல நட்சத்திரத்தில் நமது
நாயகன் ஜனனம் ஆனான். லக்கினம் மகரம். (ஜாதகம் கீழே உள்ளது)
===================================================================
முதலில் சுப நிகழ்ச்சியாக, பிறந்த குழந்தையை, அதன் ஆயா வீட்டில்
(பாட்டி வீட்டில்) இருந்து அழைத்து வரும் வைபவம் நடந்தது. பாட்டி
வீட்டில் தங்கத்தாலும் வைரத்தாலும் குழந்தைக்கு மெருகேற்றியிருந்தார்கள்.

"பாவம் லக்ஷ்மி. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது இறைவனின்
கருணை!" என்று பலரும் மகிழும் வண்ணம் அந்த வைபவம் நடந்தது.
ஆடம்பரமில்லாமல், வந்தவர்களுக்கு விருந்து பறிமாறப்பெற்றது.

அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, நமது நாயகனின் தாயாருக்கு விதவைச்
சடங்கு நடந்தேறியது.

பதினெட்டாயிரம் சதுர அடியில் பெரிய வீடு. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
மாமனார், மாமியார், மூன்று கொழுதனார்கள், அவர்களின் மனைவி மக்கள்
ஆறு பணியாட்கள் என்று வீடு கலகலப்பாக இருந்ததால் லக்ஷ்மி ஆச்சியும்
தன் தலைவிதியை நொந்து நூலாகாமல், ஒதுக்கி வைத்துவிட்டு, சவாலை
ஏற்றுக் கொண்டு தன் குழந்தைகளுக்காக வாழ்க்கையை எதிர் கொண்டார்.

அபரிதமான செல்வம் அதற்குத் துணையாக நின்றது.

தன்பிள்ளைகள் இரண்டையும் செல்லமாக வளர்த்தார். காலைப் பலகாரமாக
இட்லி, தோசை இருக்காது. தினமும் நெய் அல்லது எண்ணெயில் செய்த
வடை, வெள்ளைப் பணியாரம், அரிசி உப்புமா, பூரிமசால் என்று விதம்
விதமான பலகாரங்களைச் செய்து கொடுப்பார்.

ஆச்சியின் மகளூக்குப் பதினான்கு வயதில் திருமணம் நடந்தது.

அதற்குப் பிறகு இரண்டு வருடத்தில் மகனின் திருமணத்தில் மகிழ்ந்தார்

31.3.1931ஆம் ஆண்டு நமது நாயகனுக்குத் திருமணம். மாப்பிள்ளைக்
கோலத்தில், ஷெர்வானி ஆடை, தலையில் டர்பன் என்று கன ஜோராகக்
காட்சியளித்தான். அப்போது அவனுக்கு வயது பத்து!

உறவுப் பெண்ணைத்தான் மணந்து கொண்டான்.

அக்காலத்தில் பத்து வயது, பன்னிரெண்டு வயதுக் குழந்தைத் திருமணம்
என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்.

ஒவ்வொரு வீட்டிலும் திருமணமான குழந்தை ஜோடிகள், மூன்று அல்லது
நான்கு ஜோடிகள் இருக்கும். வீட்டிற்குப் பின்புறம் அல்லது பக்கவசத்தில்
இருக்கின்ற தோட்டத்தில் அக்குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள்.

பையன்கள் எல்லாம் மரம் ஏறி அல்லது சுவற்றில் ஏறி அல்லது ஓடிபிடித்து
விளையாடுவார்கள். பெண் குழந்தைகள் எல்லாம் தரையில் கோடு கிழித்துப்
பாண்டி ஆட்டம் ஆடுவார்கள்.

அப்படி ஆடும் போது கழுத்தில் அணிந்திருக்கும் ஆறு பவுன் அல்லது
பத்துப் பவுன் அளவு திருமாங்கல்யச் சங்கிலிகள் இடைஞ்சலாக இருக்கும்
என்பதால், அவற்றைக் கழற்றி அருகில் இருக்கும் மரக் கிளைகளின்
கொம்புகளில் மாட்டி வைத்துவிட்டு, வெறும் கழுத்தோடு விளையாடுவார்கள்.

ஆட்டம் முடிந்து, வீட்டிற்குள் திரும்பும்போது, அவற்றை எடுத்து மீண்டும்
கழுத்தில் அணிந்து கொள்வார்கள். சமயத்தில் மறந்து விட்டுப்போய், உள்ளே
திட்டு வாங்கிய கதைகளும் உண்டு.

அதெல்லாம் உப கதைகள். அது போன்ற உபகதைகள் பல உள்ளன!
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை விவரிக்கிறேன். இப்போது மெயின்
கதைக்குப் போவோம்!
------------------------------------------------------------------------------------------------
ஜாதகன் பிறந்தபோது அவனுடைய தசா இருப்பு. கேது திசையில் 29 நாட்கள்
மட்டுமே. அதற்குப் பிறகு சுக்கிர திசை.

20 வருடம் முழுமையாக சுக்கிர திசை.

குட்டிச்சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பார்கள்.அதாவது சிறுவயதில் வரும்
சுக்கிரன் ஜாதகனைக் கெடுத்துவிட்டுப் போய்விடுவான் என்பார்கள்

நமது நாயகனின் வாழ்க்கையில் முதலில் சுக்கிரன் விளையாடினான். நாயகனை
வெறும் சுகவாசியாக்கி, விளையாட்டுக்களில் ஈடுபாட்டை உண்டாக்கியவன்-
(சீட்டாடத்தையும் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்) படிப்பில்
ஆர்வமில்லாமல் செய்துவிட்டான்.

ஆனாலும் 7ல் நின்ற புதன் (சுயவர்கத்தில் ஆறு பரல்கள்) பேச்சு, செயல்,
நினைவாற்றல், வித்தைகள் முதலிவற்றில் கெட்டிக்காரனாக அவனை ஆக்கினான்.
அந்தக் காலத்து இளைஞர்களின் அதிக பட்சப் படிப்பான பத்தாம் வகுப்புவரை,
அவன் ஜாதகனைக் கொண்டுபோய் உட்காரவைத்து தன் கடமையைச் செய்து
விட்டான். நமது நாயகனும் தத்தித்தத்திப் பள்ளி இறுதியாண்டு வரை எட்டிப்
பார்த்துவிட்டு வந்தான்.

நாயகனுக்கு, தமிழிலும், கணிதத்திலும், கணக்கு வழக்குகளிலும் நல்ல பாண்டியத்யம்
ஏற்பட்டது. அது அவனுடைய பிற்காலத்து வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.
அதற்குக் காரணம் புதனும், குருவும். இருவரும் சுய வர்க்கத்தில் தலா
ஆறு பரல்களுடன் ஜம்மென்று இருந்தார்கள்.
......................................................................................................................
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். செட்டிநாடு மிகவும்
வறண்ட பூமி. வானத்தைப் பார்த்துக் கெஞ்சும் பூமி. பாண்டிய மன்னன், நகரத்தார்
களுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்த போது, இன்றைய திருப்பத்தூருக்கு கிழக்கே
தொண்டி கடற்கரை வரை அகலத்தில் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தையும்,
புதுக்கோட்டைக்குத் தெற்கே சிவகங்கை வரை நீளத்தில் சுமார் 60 கிலோ மீட்டர்
தூரத்தையும் அடக்கிய மொத்த பகுதியையும் கொடுத்திருந்தான்.
(அதைத்தான் இப்போது செட்டிநாடு என்கிறார்கள்).

நெடுங்காலமாக கடல் வணிகம் செய்து பழக்கப்பட்ட அவர்கள், நாயகன் காலத்தில்
இலங்கை, பர்மா, மலேசியா, தாய்லாந்து, வீயட்நாம் வரை பல நாடுகளில் வணிகம்
செய்துகொண்டிருந்தார்கள். அந்தந்த நாட்டில் ஏராளமான சொத்துக்களையும்
வாங்கிக் குவித்திருந்தார்கள்!

அன்றைய காலகட்டத்தில் இந்தக் குறிப்பிட்ட எல்லா நாடுகளுமே பிரிட்டீஷ்
சாமராஜ்யத்தின் கீழ் இருந்தது. அன்றைய பிரிட்டீஷ் சாமராஜ்யத்தின் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதைப் போல சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக
அது திகழ்ந்தது. (Winston Churchill said: "The sun never sets in our empire!")

பாஸ்போர்ட், விசா, அந்நியச் செலவாணிக் கணக்கில் பணம், செக்யூரிட்டி செக்
குண்டு வெடிப்பு, இத்யாதிகள் போன்ற புண்ணாக்குகள் எதுவும் இல்லாத காலம்
அது. யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்குள் சென்று வரலாம். முன் அனுமதி, பின் அனுமதி என்று
எதுவும் கிடையாது.

வணிகத்திற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்தவர்களுக்கு சில கொள்கைகள்,
கட்டுப்பாடுகள் இருந்தன. யாரும் தங்கள் வீட்டுப் பெண்களையும், குழந்தை
களையும், வயது முதிர்ந்தவர்களையும் கூட்டிச் செல்வதில்லை. (அதற்காகத்தான்
பெரிய பெரிய வீடுகளை இங்கே கட்டி அதில் அனைவரையும் கூட்டாக,
ஒருவருக்கொருவர் துணையாக, சச்சரவுகள் இன்றி வாழ்வதற்குப் பழக்கியிருந்தார்கள்)

15 வயதிற்கு மேல் 50 வயது வரை உள்ளவர்களே அதிகமாகச் சென்று வந்தார்கள்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பெரிய ஊர்களிலும், தங்கும் விடுதிகளைக் கட்டி
அல்லது வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள். சமையல் வேலைகளுக்கும்
தத்தம் ஊர்களில் இருந்து ஆட்களைக் கொண்டுபோய் அங்கே வேலைக்கு அமர்த்தி
யிருந்தார்கள். அதனால் இங்கே இருந்து அங்கே செல்பவர்களுக்கு எந்த வசதிக்
குறைவும் இல்லாமல் இருந்தது.

இங்கே இருந்து அங்கே செல்பவர்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு
ஒரு முறை தாய் நாட்டிற்கு வந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இங்கே
இருந்து விட்டு மீண்டும் அங்கே செல்வார்கள். வியாபாரமும் கூட்டுக் குடும்பமாகச்
செய்ததால் அங்கே அண்ணன் தம்பிகளில் ஒருவர் மாற்றி ஒருவர் இருந்து வணிகத்
தைக் கவனித்துக் கொண்டார்கள்

எல்லாம் ஒரு அற்புதமான set upல் ஓடிக்கொண்டிருந்தது.

நமது நாயகனின் குடும்பத்திற்குப் பர்மாவில் வணிகம். நாயகனின் தந்தையாரும்,
அவருடைய மற்ற இரண்டு சகோதரர்களும் சேர்ந்து ஆரம்பித்து வளர்த்து
வைத்தது. நாயகனின் பெரியப்பா மகன், நாயகனை விட பதினெட்டு வயது மூத்தவர்.
நாயகனுக்குப் பதினேழு வயதாகும்போது, அவர்தான் பர்மாவில் நிர்வாகம் செய்து
கொண்டிருந்தார்.

படித்து முடித்தவுடன் நாயகனும் பர்மாவிற்குச் சென்று ஆறுமாத காலம் தங்கி வேலை
களைக் கற்றுக்கொண்டான்.

அந்தக் காலத்தில் சென்னையில் இருந்து பர்மா செல்லும் கப்பல் பயணமெல்லாம்
சுவாரசியமாக இருக்கும். அதே போல பர்மா மக்களின் நடைமுறை வாழ்க்கையெல்லாம்
சுவாரசியமாக இருக்கும். அவற்றை எல்லாம் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்
இங்கே எழுதினால் பதிவு அனுமார் வாலைப் போல நீண்டு விடும். அதோடு நமது
சட்டாம் பிள்ளை சண்டைக்கு வந்து விடும் அபாயமும் இருக்கிறது. 40 பக்கப்
பதிவுகள் போடும் உரிமை அவர் ஒருவருக்குதான் வழங்கப் பெற்றிருக்கிறது!

God's own land என்று இங்கே கேரளாக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்களே! அதைவிட
அற்புதமாக இருக்குமாம் பர்மா! மலைகளும், அடர்ந்த காடுகளும், சமவெளிகளும்,
ஆறுகளும், வயல்வெளிகளும், தோட்டங்களும் அவற்றையெல்லாம் விட நீண்ட
தலைமுடிகளைக் கொண்ட (மைனஸ் வேல்விழிகள்) மாதர்களும் என்று அனைத்தும்
அசத்தும்படியாக இருக்குமாம்.

க்யோன்பாவ் (Kyonpyaw - பழைய பெயர் சூம்பியோ) என்கின்ற சிற்றூர்தான்
நாயகனின் குடும்பத்தினர் வணிகம் செய்து வந்த ஊர். பர்மாவின் தலைநகரமான
ரங்கூனில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் பாஸியன் மாவட்டத்தில்
அது இருக்கிறது.

சென்னையில் இருந்து கப்பலில் பயணித்து (சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம்),
ரங்கூன் சென்று அங்கிருந்து சூம்பியோவிற்குச் செல்ல வேண்டும். பிரம்மாண்டமான
ஐராவதி நதியின் டெல்டா பகுதி அது. Rice Bowl of Burma என்பார்கள்.
வழியெங்கும் ஆறுகளும் கால்வாய்களும் தோட்டங்களும், அதில் வேலை செய்யும்
பெண்களும் என்று ரம்மியமாக இருக்குமாம். பாதி தூரத்தைப் படகில் சென்றுதான்
கடக்க வேண்டும். அப்போது நெடுஞ்சாலைகள், பாலங்கள் எல்லாம் கிடையாது.

என்ன வணிகம்? எல்லோருக்குமே Money Lending & Finance Business மற்றும்
விவசாயம், நெல் வணிகம்.

செட்டிநாட்டுக்காரர்கள் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து நூறு பேர்கள் பர்மாவின்
பல பிரதேசங்களில் பரவி இருந்து வணிகம் செய்து கொண்டிருந்தார்கள். சுமார்
பத்து லட்சம் ஏக்கர்களுக்குமேல் அவர்களுக்குச் சொந்தமாக விளை நிலங்கள்
இருந்தன.(Fertile Lands)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் திரு.M.CT.M. பெத்தாச்சி செட்டியார்
அவர்களுடைய குடும்பத்திற்கும், அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் ராஜாசர்
திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம்
ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தனவாம்.

சென்றவர்கள் யாரும் வயல்களில் இறங்கி வேலை செய்யவில்லை. எல்லா நிலங்களுமே
அந்த நாட்டு விவசாய மக்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. வருடம் மூன்று
போகம். குத்தகைப் பணம் நெல்லாக வந்துவிடும். நெல் சந்தையில் விற்கப்பட்டுப்
பணமாகி விடும்.

1885ஆம் ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை சுமார் 60 ஆண்டு காலம் பறந்து
விரிந்த, செழித்துச் சிறந்த அவர்களுடைய வணிகம். 1945ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

1942ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் உச்ச நிலையை அடைந்த போது
ஜப்பானியப் படையெடுப்பால் பர்மா கடுமையான பாதிப்பிற்குள்ளானது. அதுசமயம்
உயிரைக் காத்துக் கொள்ளும் முகமாக அங்கே இருந்த நகரத்தார்கள் அனைவரும்
போட்டது போட்டபடி தாயகம் திரும்பி விட்டார்கள்.

யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், பெரும் பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளான
ஆங்கிலேய அரசு, வரிசையாகத் தான்கைப்பற்றி வைத்திருந்த காலனி நாடுகள்
அனைத்திற்கும் அடுத்தடுத்து சுதந்தரத்தை வழங்கியதோடு தன் வல்லரசு
மகுடத்தையும் கழற்றிக் கீழே வைத்தது.

பல நாடுகளில் அதிரடியாக ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. பர்மாவிலும் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டது. 4.1.1948ல் பர்மா சுதந்திர நாடானது. அப்போதைய ஜனத்தொகை
சுமார் இரண்டு கோடி. திரு. யூ நூ (U Nu) என்பவர் பிரதமாரகப் பதவி ஏற்றார்.

சட்ட திட்டங்கள் மாறின. சம்பிரதாயங்கள் மாறின. இந்தியர்கள் வெளியேற்றப்
பட்டார்கள். வெளியில் இருந்து உள்ளே வரும் நபருக்கான சட்டங்கள் கடுமையாகின!
மொத்தத்தில் அடித்து விரட்டாத குறை. பலர் அகதிகளைப் போல ஓடிவந்தார்கள்.

அந்தச் சமயத்தில் அங்கே இருந்த நமது நாயகன் முன் எச்சரிக்கையாகக்
கப்பலில் பயணச் சீட்டைப் பதிவு செய்து வைத்திருந்தமையால் சொகுசாகத் திரும்பி
வந்து சேர்ந்தான். (அப்போதைய கப்பல் கட்டணம் முதல் வகுப்பிற்கு வெறும்
100 ரூபாய் மட்டுமே! மூன்றாம் வகுப்பிற்கு ஐம்பது ரூபாய் கட்டணம்)

அவன் கையில் கொண்டு வந்தது வெறும் 20 ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே! அது
இன்றைய மதிப்பில் சுமார் 10 லட்சங்களுக்குச் சமம்.

அங்கே இருந்த நிலங்கள், வீடு வாசல்கள் எல்லாம் போனது போனதுதான்.
கொள்ளையில் பறிபோனது போல பறிபோயிற்று

நமது நாயகனாவது சொகுசாகத் திரும்பி வந்தான். நமது நாயகனின் ஒன்றுவிட்ட
சகோதரன் (அதாவது நாயகனின் பெரியப்பா மகன்) மேலும் மூன்று மாதங்கள்
இருந்து பார்த்துவிட்டுக் கடைசியில் கப்பல் போக்குவரத்தும் நின்றுவிட்ட நிலையில்,
உயிர் தப்பி, வனாந்திரக்காடுகள் வழியாக கல்கத்தா வரை நடைப்பயணம் மேற்
கொண்ட மக்களோடு மக்களாகப் பொடி நடையாக கல்கத்தாவிற்கு வந்து, பிறகு
கல்கத்தாவிலிருந்து ரயில் மார்க்கமாக ஊருக்கு வந்து சேர்ந்தார்.

திரும்பி வந்தவர்கள் அனவரும் ஒரு குழு அமைத்து முன்னாள் பாரதப் பிரதமர்
பண்டிட் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் மூலமாக அங்கே திரும்பிச் சென்று
வணிகத்தைத் தொடர முயன்றார்கள் முடியவில்லை. நிலங்களை விற்றுவிட்டுத்
திரும்பிவிடுகிறோம் அனுமதி கொடுங்கள் என்றாரகள். அதுவும் நடக்கவில்லை.
நஷ்ட ஈடு கேட்டுப்பார்த்தார்கள். அதற்கும் நோ என்று பதில் வந்தது.
அன்றைய பர்மா அரசு அனைவருக்கும் நாமக்கட்டியை அரைத்து நன்றாக
நெற்றியில் பட்டை நாமம் போட்டு விட்டது. சல்லிக் காசுகூட பணம் கொடுக்கவில்லை.

நகரத்தார்கள் என்று இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் குஜராத்திகளும் அதிக
அளவில் இருந்தார்கள். அவர்களும் தங்களுடைய நிலங்களுக்காகத் தாவா செய்து
பார்த்தார்கள். ஒன்றும் பெயரவில்லை

இவ்வளவு பேரின் வயிற்றெரிச்சலும் சும்மா போகுமா? பர்மா இன்றளவும்
முடங்கிப்போய்க் கிடக்கிறது. ஆண்டுகள் அறுபதானாலும் பர்மாவால் எழுந்து
நிற்க முடியவில்லை! சாபம் என்பது அதுதான்!

அதே நேரத்தில் மலேசியா அரசு, யுத்தத்திற்குப் பிறகு அனைவருக்கும் வேண்டிய
உதவிகளைச் செய்தது. வந்தவர்கள் எல்லாம் ஆங்கே மீண்டும் திரும்பிச் சென்றார்
கள். அவர்களும் இன்று நன்றாக இருக்கிறார்கள். அந்த நாடும் நன்றாக இருக்கிறது!

பட்டினத்தார் பாடல்களைச் சின்ன வயதிலேயே கற்றுத் தேறியிருந்ததால்,
பர்மாவில் பறி கொடுத்துவிட்டுத் திரும்பியவர்கள் அனைவரும் தலையை
முழுகி விட்டு, வாழ்க்கையின் அடுத்த பாய்ச்சலுக்கு அல்லது அடுத்த போராட்டத்
திற்குத் தங்களைத் தயார் செய்தார்கள்
------------------------------------------------------------------------------------------------------
நமது நாயகனுக்கு, 27 வயதோடு ஆட்டம் எல்லாம் முடிந்து விட்டது. ஆனாலும்
எதற்கும் கலங்காமல் மனத் துணிவோடு இருந்தான்.

அதற்குக் காரணம் அவனுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் 39 பரல்கள்.
திடமான மனது. அதோடு அந்த வீடு குழந்தை பாக்கியத்திற்கான இடம். அதனால்
நாயகனுக்கு வஞ்சனை இல்லாமல் குரு பகவான் பத்துக் குழந்தைகளைக் கொடுத்தார்
முதலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு வயதிற்குள்ளாகவே நோய்
வாய்ப்பட்டு இறந்துவிட்டன. மிச்சம் எட்டுக் குழந்தைகள்.

வரவுக் கணக்கில் 4 குழந்தைகள். செலவுக் கணக்கில் 4 குழந்தைகள். அதாவது
நான்கு ஆண் குழந்தைகள். நான்கு பெண் குழந்தைகள். எல்லாம் நாயகனின்
17 ஆவது வயது முதல் 42 ஆவது வரை பிறந்தவைகள்.

எதாவது ஒரு குழந்தையைக் காணோமே என்று நாயகனின் துணைவியார்
தேடினால், நாயகன் சொவானாம், "எதற்குக் கவலைப் படுகிறாய்? எட்டில்
ஒன்றுபோனால் ஏழு!" :-)))))))
----------------------------------------------------------------------------------------------------------
அதேபோல நாயகனின் சுக ஸ்தானத்தில் 35 பரல்கள். சின்ன வயதில் B.S.A
மோட்டார் சைக்கிள் வைத்திருந்தான். கார் வாங்க ஆசைப்பட்டபோது உலக
மகா யுத்தம் வந்து தொலைத்தது. அதோடு. கெரசின் ரேசன், பெட்ரோல்
தட்டுப்பாடு என்று படுத்தவே, கார் வாங்கும் ஆசையைத் தள்ளி வைத்தான்.
யுத்தம் முடிந்து பர்மாவும் ஊற்றிக் கொண்டு விட்டதால் கார்வாங்கும் ஆசை
நிறைவேறவில்லை. ஆனாலும் அவனுடைய நண்பர்களுடைய காரெல்லாம்
அவனுடைய கார்கள்தான்.Fiat, Willys Jeep, Pontiac, Buick, Cadillac
Ambassador, French Gimca, Race car Railey,Bug Fiat, Benz என்று அவன் ஓட்டாத
கார்களே இல்லை என்னும் அளவிற்கு கார்கள் தொடர்ந்து கிடைத்தன.
வெளியூர் செல்லும் நண்பர்கள் அவனைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு
செல்வார்கள்.

உணவு, உடை என்று சில்லரைத் தேவைகளுக்கு அவன் என்றுமே கஷ்டப்
பட்டதில்லை. அந்த அளவிற்கு நான்காம் இடம் அவனுக்குக் கை கொடுத்தது.
--------------------------------------------------------------------------------------------------------
அவனுடைய ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிகவும் நலிந்துபோய் இருந்தது.
அங்கே இரண்டரை வில்லன்கள் டென்ட் அடித்துத் தங்கியிருந்தார்கள்.
ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம். தந்தைக்கு உரிய ஸ்தானம், பூர்வீகச்
சொத்துக்களுக்கு உரிய ஸ்தானம். அங்கே இருக்கும் சனியும், ராகுவும்
(இரண்டரை வில்லன்கள் கணக்கில் ராகுவிற்கு ஒன்றரை மதிப்பு) கூட்டணி
போட்டு, அவனுடைய தந்தையையும் காலி செய்தார்கள். பூர்விகச் சொத்தான
ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் காலி செய்தார்கள்.

சனி அவனுடைய லக்கினநாதன். அவன் திரிகோணத்தில் இருந்ததால் சில
பாகியங்களைப் பெற்றுத்தந்தான். இருந்தாலும் தன்னுடைய சுய வர்க்கத்தில்
ஒரு பரலுடன் மட்டுமே அங்கே நின்றதால், ஜாதகனின் தந்தையையோ
அல்லது பூர்வீகச் சொத்துக்களையோ அவனால் காப்பாற்றிக் கொடுக்க
முடியவில்லை!

ராகு குண்டாந்தடியுடன் நின்று, இரக்கமில்லாமல் அவற்றைச் செய்தான்.
ஜாதகனின் தந்தை இல்லாத நிலைமைக்கும், சொத்துக்களைப் பறி கொடுத்த
நிலைமைக்கும் அவனே காரணம்
----------------------------------------------------------------------------------------------------
அதோடு சஷ்டம அதிபதி (6th lord) புதனும், அஷ்டம அதிபதி சூரியனும்
(8th lord) ஒன்று சேர்ந்து லக்கினத்திற்கு 7ல் அமர்ந்து, தங்களது பார்வையால்
சில் கஷ்டங்களையும் கொடுத்தார்கள்.

நான் ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கிய நேரம். ஜாதகனின்
ஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவனைப் பற்றிய முழு விவரமும் அறிந்திருந்ததால்
ஜாதகனின் இழப்புக்களுக்குக் காரணம் 9ஆம் இடத்து ராகுதான் என்ற முடிவிற்கு
வந்தேன்.
.............................................................................................................................
ஒருநாள் ஜாதகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன்:

"ஒரு நூறு ரூபாய் நோட்டு தொலைந்தால் கூட மனித மனம் பதறுமே?
ஆயிரம் ஏக்கர்களை இழந்த செய்தி கிடைத்த அன்று உன் மனநிலை எப்படி
இருந்தது?"

புன்னகைத்துவிட்டு அவன் சொன்னான்:

"ஒருநாள் கூட என் தந்தையின் கரங்களில் தவழ முடியாமல் பிறக்கும் முன்பாகவே
என் தந்தையை இழந்தேனே, அதைவிட இது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல!
தனது 23 வயதில் எனது தாய் தனது கணவனைப் பறிகொடுத்தாளே, அதைவிட
இது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல!"

நிதர்சனமான உண்மை!

அதுதான் ஞானம் என்பது! அந்த உணர்வு நிலைதான் ஞானம் என்பது!
-------------------------------------------------------------------------------------------------------
அந்த இளைஞனின் பெயரை இப்பொது சொல்கிறேன். அவன் பெயர்
SP.வீரப்பன். சர்வ நிச்சயமாக உங்களுக்கு அவனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

அவன் பெயர் SP.VR.சுப்பையா.

ஆமாம் அவன்...மன்னிக்கவும் என்னுடைய தந்தையார்தான் அந்த நாயகர்!

அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்!
.......................................................................................................................


நாயகரின் 36 வது வயதில் எடுக்கப்பெற்ற புகைப்படம்!

நாயகரின் 20 வயதுப் புகைப்படம்.
வலது பக்கம் கடைசில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சபாரி உடையில் இருப்பவர்தான் நாயகர்.
இடது கோடியில் இருப்பவர் நாயகரின் ஒன்று விட்ட சகோதரர். (பெரியப்பா மகன்)
மற்றவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவினர்கள்

நாயகரின் குடும்பத்தினர் மற்றும் பங்காளிகளுக்குச் சொந்தமான கோவிலில் விழா.
கழுத்தில் மாலை, மற்றும் கையில் தட்டுடன் இருப்பவர் நாயகரின் அண்ணன்.
அவரின் இடப்பக்கம், முண்டா பனியன் மற்றும் மூக்குக் கண்ணாடியுடன் நிற்பவர்தான் நாயகர்.
உடன் இருப்பவர்கள் உறவினர்கள்.
நாயகரின் சகோதரர் முருகனுக்கு சாத்துவதற்காக வைரவேலைக் கையில்
எடுத்துச் செல்லும் நிகழ்வு. தேதி 8.9.1969
==============================================================
"வாத்தியார்?"

"என்ன ராசா?"

"இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் உள்ள தொடர்பைச் சொல்லுங்கள்!"

"தீய கிரகங்கள் மனிதனை நிற்க வைத்து அடிக்கும். ஆனால் ராகு மனிதனைத்
தொங்கவிட்டு அடிக்கும். அடுத்த பாடம் ராகுவைப் பற்றியது. அதற்கான
முன்னோட்டம்தான் இது!

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்
-----------------------------------------------------------------------------

1

2

இந்த ஒன்று, மற்று் இரண்டு படங்கள் நிலங்களின் குத்தகைதாரர்களிடம் இருந்து
வரும் நெல்லை வரவு வைக்கும் ஏடாகும்.

அதில் அனத்து விவரங்களும் இருக்கும்
.
குத்தகைக்கு எடுத்த பர்மாக்காரரின் பெயர், நிலத்தின் அளவு,
அவர் கொண்டுவந்து கொடுத்த நெல்லின் அளவு
ஆகியவை போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்
இந்தப் புத்தகம் எழுதப்பெற்ற ஆண்டு 1937

முன் மாதிரிக்காக அதைக் கொடுத்துள்ளேன்!

May 1934 ஆம் ஆண்டில் - நாயகனின் 13 வது வயதில்
அவன் மைனர் என்ற காரணத்தால்

சொத்துக்களைப் பாதுகாக்க பாஸ்ஸியன் ஜில்லா
நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.


3.5.1956ஆம் ஆண்டு இறுதியாக வந்த கடிதம்.
அதில் உங்கள் நிலங்கள் யாவும் தேசியமயமாக்கப்பட்டுள்ளன
என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது சுவாஹா செய்யப்பெற்ற
விவரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்


Bassein என்னும் ஊரைக் காட்டும் வரைபடம்


ஆங்கிலப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்.
இந்தக் கலரில் உள்ள நாடுகள் அனைத்தும் அவர்களின் வசம் இருந்தது.
2வது உலக யுத்தம் முடிந்தவுடன் (1945ற்குப் பிறகு) ஒவ்வொரு நாடாக
அத்தனை நாடுகளையும் கழற்றி விட்டு விட்டார்கள்.
அதாவது சுதந்திரம் அளித்து மங்களம் பாடினார்கள்

தலைநகர் ரங்கூனுக்கு அருகில் உள்ள
பாஸியன் மாவட்டத்தைக் காட்டும் வரை படம்!

வளம் மிக்க பர்மாவின் எழில் மிக்க தோற்றம்
---------------------------------------------------------------------------------------------
1
உபரித் தகவல்கள்:
Colonial era (1886-1948)
Date September 1, 1939 – September 2, 1945
Location Europe, Pacific, South-East Asia, China, Middle East,
Mediterranean and Africa
Result Allied victory. Creation of the United Nations. Emergence
of the United States and the Soviet Union as superpowers.
சுட்டி இங்கே!
----------------------------------------------------------------------------
2
பர்மாவின் (இன்றைய மியான்மாரின்) மிகப் பெரிய நதியான
ஐராவதியைப் பற்றிய தகவல்

The Ayeyarwady River, Burma's longest river, nearly 2,170 kilo meters
(1,348 mi) long, flows into the Gulf of Martaban. Fertile plains
exist in the valleys between the mountain chains.
The majority of Burma's population lives in the Ayeyarwady valley,
which is situated between the Rakhine Yoma and the Shan Plateau.
.........................................................................................................
3.
பாஸ்ஸெயின் (Bassein) மாவட்டத்தைப் பற்றிய தகவல்:
(இன்றையப் பெயர் Pathein)

Capital city of the delta region and the gate way to Chaungtha and
Ngwe Saung beach. This port of call is easily reached by road or
by cruise through the complex Ayeyarwady river. As Ayeyarwady
Division is known as the rice bowl of the country the landscapes
are predominately rice fields with other colorful crops such as
sesames, groundnuts, jute, maze, pulses, tobacco, chilies etc.
Pathein is well known by it production of unique parasol locally
call "Pathein Hti". Pathein - situated in the Ayeyawadd y Delta
about 190 km west of Yangon (Rangoon) is the capital of the
Ayeyarwaddy Division and the port of Pathein is noted for the taste
of its speciality Pathein Halawar. It is well-known for its Pathein
umbrella and pottery. Chaung-tha Beach is only 40 km west of
Pathein.
.........................................................................................................
4

பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான்
சுட்டி இங்கே உள்ளது.
British History

=============================================

வாழ்க வளமுடன்!

65 comments:

  1. ஆசிரியர் ஐயா,

    காலைவணக்கம்.

    கதையை படித்து கொண்டு வரும் போது சுவையும், எதிர் பார்ப்பும் கூடி கொண்டே வந்தது.அதிலும் கிளைமேக்ஸ் சூப்பர்.


    ஜாதகம்,ஜோதடம்,மற்றும் ஒருவர் பிறந்த இடம்,நேரம் தான் ஒருவனுடைய கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இதை விடச் சான்று உலகில் வேறு உண்டோ!

    கார்த்திக்.

    ReplyDelete
  2. 1.கெடுவான் கெடு நினைப்பான்...பர்மா
    2.நல்லவன் வாழ்வாங்கு வாழ்வான்-மலேசியா
    3.திரைகடலோடி திரவியம் தேடு-நகரத்தார்
    4.விதியின் கை வலியது-நாயகன் அவர்களது வாழ்க்கை
    5.நடப்பது எல்லாம் நாறயணன் செயல்
    6.12 கட்டங்களும்-9 கிரகங்களும் வாழ்வை நிர்ணயம் செய்கிறது.
    7.ஊக்கமது கைவிடேல்-நகரத்தாரின் தொடர் முயற்சி.
    8.எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்.-கதையில் உள்ள அனைவரும்.
    9.பகவத் கீதை சொல்லும் நீதிகள்
    10.ஆசிரியரின் மேலான பண்பு


    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
    ஆசிரியர் ஐயாவின் சொந்தக் கதை சொல்லும் வாழ்வியல் நீதிகள்
    அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்,வழிகாட்டி,நல்ல ஆசான்.


    அருமையான பதிவுக்கு நன்றி.

    இதை படித்ததும் விவாதம் செய்யும் மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

    ReplyDelete
  3. ஐயா,

    ஒரு சின்ன சந்தேகம். தங்கள் தந்தைக்கு 31.3.1931அன்று திருமணம் என்று சொல்லியிருந்தீர்கள். அன்று செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் திருமணம் அந்த காலத்தி்ல் செய்வார்களா?

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. I appriciate the way in which your father took the loss of material wealth. The lesson on Ragu begins with the advise to accept whatever the Ragu gives with fortitute.

    ReplyDelete
  5. //அதோடு சஷ்டம அதிபதி(6th lord)புதனும்,அஷ்டம அதிபதி குருவும்(8th lord)ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கு 7ல் அமர்ந்து//

    8வது அதிபதி சூரியன் இல்லையா?

    ReplyDelete
  6. ரொம்ப பயமுறுத்தறீங்களே?எனக்கு இப்போ கேது தசையில், ராகு புத்தி...ரொம்ப படுத்தி எடுக்குது..இதுதான் அப்படின்னா, அடுத்து வரப்போற சுக்கிர தசைய(மேஷ லக்னம்,சுக்கிரன் மாரகன்) நெனச்சா பயமா இருக்கு:-(

    ReplyDelete
  7. Story is good, but this is really scary...ragu lesson will be more scary!

    -Shankar

    ReplyDelete
  8. ////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியர் ஐயா,
    காலைவணக்கம்.
    கதையை படித்து கொண்டு வரும் போது சுவையும், எதிர் பார்ப்பும் கூடி கொண்டே வந்தது.அதிலும் கிளைமேக்ஸ் சூப்பர்.
    ஜாதகம்,ஜோதடம்,மற்றும் ஒருவர் பிறந்த இடம்,நேரம் தான் ஒருவனுடைய கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இதை விடச் சான்று உலகில் வேறு உண்டோ!
    கார்த்திக்.////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    1.கெடுவான் கெடு நினைப்பான்...பர்மா
    2.நல்லவன் வாழ்வாங்கு வாழ்வான்-மலேசியா
    3.திரைகடலோடி திரவியம் தேடு-நகரத்தார்
    4.விதியின் கை வலியது-நாயகன் அவர்களது வாழ்க்கை
    5.நடப்பது எல்லாம் நாறயணன் செயல்
    6.12 கட்டங்களும்-9 கிரகங்களும் வாழ்வை நிர்ணயம் செய்கிறது.
    7.ஊக்கமது கைவிடேல்-நகரத்தாரின் தொடர் முயற்சி.
    8.எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்.-கதையில் உள்ள அனைவரும்.
    9.பகவத் கீதை சொல்லும் நீதிகள்
    10.ஆசிரியரின் மேலான பண்பு
    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
    ஆசிரியர் ஐயாவின் சொந்தக் கதை சொல்லும் வாழ்வியல் நீதிகள்
    அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்,வழிகாட்டி,நல்ல ஆசான்.
    அருமையான பதிவுக்கு நன்றி.
    இதை படித்ததும் விவாதம் செய்யும் மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.//////

    அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சந்தோஷமே! யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை!

    ReplyDelete
  10. Blogger வேலன். said...
    ஐயா,
    ஒரு சின்ன சந்தேகம். தங்கள் தந்தைக்கு 31.3.1931அன்று திருமணம் என்று சொல்லியிருந்தீர்கள். அன்று செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் திருமணம் அந்த காலத்தி்ல் செய்வார்களா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    உங்கள் சந்தேகம் நியாமானது. என் தாய் வழிப் பாட்டனாரின் குறிப்புக்களில் இருந்து அந்தத்தேதி கிடைத்தது
    அவர் 'பிமோதூத வருடம் பங்குனி மாதம் 17ஆம் தெதி என்று எழுதிவைத்திருந்தார். அந்தத் தேதியை ஆங்கிலத் தேதிக்கு மாற்றியதில் தவறு நேர்ந்திருக்கலாம். 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்பது சரியானதுதான். என் தந்தையாரும் தனக்குப் பத்து வயதில் பாலய விவாகம் நடந்ததாகக் கூறியுள்ளார்! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger krish said...
    I appriciate the way in which your father took the loss of material wealth. The lesson on Ragu begins with the advise to accept whatever the Ragu gives with fortitute./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. Blogger ராவணன் said...
    //அதோடு சஷ்டம அதிபதி(6th lord)புதனும்,அஷ்டம அதிபதி குருவும்(8th lord)ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கு 7ல் அமர்ந்து//
    8வது அதிபதி சூரியன் இல்லையா?/////

    மகர லக்கினத்திற்கு எட்டாம் அதிபன் சூரியன்தான். இரவில் கண் விழித்து தட்டச்சு செய்ததில் வந்த கவனக்குறைவு. பதிவில் திருத்திவிட்டேன். சுற்றிக்காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  13. Blogger தங்ஸ் said...
    ரொம்ப பயமுறுத்தறீங்களே?எனக்கு இப்போ கேது தசையில், ராகு புத்தி...ரொம்ப படுத்தி எடுக்குது..இதுதான் அப்படின்னா, அடுத்து வரப்போற சுக்கிர தசைய(மேஷ லக்னம்,சுக்கிரன் மாரகன்) நெனச்சா பயமா இருக்கு:-(/////

    அதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. அதன் பெயர் இறையருள்.God will give you standing power to face any situation! Don't worry!

    ReplyDelete
  14. Blogger hotcat said...
    Story is good, but this is really scary...ragu lesson will be more scary!
    -Shankar

    அதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. அதன் பெயர் இறையருள்.God will give you standing power to face any situation! Don't worry Shankar!

    ReplyDelete
  15. Story is nice but emotional, whereas the concept is good.

    ஒரு கேள்வி ஐயா,

    குட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பது உண்மையே, நானும் முறையே தனுசு (பூராடம்) ராசியே

    தனுசு ராசிக்கு சந்திர திசை (எட்டாம் இடம்) எப்படி வேலை செய்தது பற்றி தெரிந்து கொள்ள ஆவல்!

    என்றும் அன்புடன்
    Sanjai

    ReplyDelete
  16. அய்யா,
    பாடத்தை அருமையாக கொண்டு போய் பின் அது தங்களின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சொல்ல, சற்று ஆடிப்போய் விட்டேன்.

    உங்கள் analysis style என் மனதை தொட்டது.

    அந்த காலத்தில் பலர் பர்மா மற்றும் மலேசியாவில் சேர்த்த மற்றும் இழந்த சொத்துக்களும் உண்டு. என் தந்தையின் நண்பர்கள் (நகரத்தார்) தஞ்சை நகரில் செட்டில் ஆனவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

    குட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பதை முன் ஒரு பாடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  17. உங்களை இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.

    பக்தியுடன்

    காவேரி கணேஷ்

    ReplyDelete
  18. இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.

    பக்தியுடன்

    காவேரி கணேஷ்

    kaveriganesh.blogspot.com

    ReplyDelete
  19. ////Blogger SP Sanjay said...
    Story is nice but emotional, whereas the concept is good.
    ஒரு கேள்வி ஐயா,
    குட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பது உண்மையே, நானும் முறையே தனுசு (பூராடம்) ராசியே
    தனுசு ராசிக்கு சந்திர திசை (எட்டாம் இடம்) எப்படி வேலை செய்தது பற்றி தெரிந்து கொள்ள ஆவல்!
    என்றும் அன்புடன்
    Sanjai//////

    லக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  20. Blogger Sridhar said...
    அய்யா,
    பாடத்தை அருமையாக கொண்டு போய் பின் அது தங்களின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சொல்ல, சற்று ஆடிப்போய் விட்டேன்.
    உங்கள் analysis style என் மனதை தொட்டது.
    அந்த காலத்தில் பலர் பர்மா மற்றும் மலேசியாவில் சேர்த்த மற்றும் இழந்த சொத்துக்களும் உண்டு. என் தந்தையின் நண்பர்கள் (நகரத்தார்) தஞ்சை நகரில் செட்டில் ஆனவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.
    குட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பதை முன் ஒரு பாடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    துவக்கித்திலே யாரைப் பற்றிய கதை என்று சொல்லிவிட்டுத் துவங்கியிருந்தால் கதையை உங்களால் ரசித்துப் படித்திருக்க முடியாது. கதை சொல்லும் டெக்னிக்கே அதுதான். Punch ஐக் க்ளைமாக்ஸில்தான் கொடுக்க வேண்டும். okay யா?

    ReplyDelete
  21. ////Blogger KaveriGanesh said...
    உங்களை இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.
    பக்தியுடன்
    காவேரி கணேஷ்//////

    பக்தியைவிட அன்புதான் பெரியது!
    அன்பிற்கு உகந்தது நட்பு!
    நீங்கள் என்னை நண்பரே என்று கூட அழைக்கலாம்
    சாமி என்றால் நான் அந்நியோன்யம் ஆகிவிடுவேன்:-)))))))

    Mentally I am only 25 :-)))))))
    You can sense it in my Palsuvai Blog!

    ReplyDelete
  22. //லக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்!//

    என்னுடைய லக்கினம் கும்பம், மற்றும் லக்கினத்தில் குரூ.

    ReplyDelete
  23. very nice story the way of story telling is intersting historical and astrological incident thank u sir

    ReplyDelete
  24. ஹலோ சார்,

    அப்பபா எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் சொந்த தந்தையின் ஜாதகத்தையே இவ்வளவு அழகா அலசி அதையும் அழகா சொல்லிட்டீங்க. உங்கள் மேல மதிப்பு தான் கூடுதே ஒழிய, ஆனாலும் ஒரு சந்தேகம், நேற்று விஜய் டிவியில் நீயா நானா வில் இந்த காதகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில கூட இந்த அளவுக்கு யாரும் சொல்ற மாதிரி தெரியலை. அதாவது நான் சொல்றது ஜாதகத்தையும் கூட ஒரு பனம் பண்ணும் தொழிலாவே தான் பண்றாங்களே ஒழிய நியாயமா யாரும் சொல்றதேயில்லையே னு நிரைய்ய பேரு சொல்லியிருந்தாங்க. அப்படிப் பாக்கும் போது உங்கலை மாதிரி சிலர் தான் நியாயமாவும் நேர்மையாகவும் இருக்கறதால் இன்றளவும் கொஞ்சமாவது இந்த தொழிலுக்கு மதிப்பு இருக்கிறதா நினைக்கிறேன்.அப்போது நான் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  25. ////Blogger SP Sanjay said...
    //லக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்!//
    என்னுடைய லக்கினம் கும்பம், மற்றும் லக்கினத்தில் குரு./////


    தனுசு ராசியில் சந்திரன் இருந்தால்:
    இது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல
    குணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும்
    ஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல்
    ஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே
    அடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய
    லட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும்.
    குடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான்.
    தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான்
    இது பொதுப்பலன்.

    லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)

    கும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்
    வரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்!

    ReplyDelete
  26. ////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    very nice story the way of story telling is intersting historical and astrological incident thank u sir////

    அடைப்படையில் நான் ஒரு தீவிர வாசகன். ஆகவே ஒரு விஷயத்தை எப்படிச் சொதப்பக்கூடாது என்பது நன்றாகத் தெரியும், வாசிப்பு அனுபவத்தால்!

    ReplyDelete
  27. ////Blogger sumathi said...
    ஹலோ சார்,
    அப்பபா எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் சொந்த தந்தையின் ஜாதகத்தையே இவ்வளவு அழகா அலசி அதையும் அழகா சொல்லிட்டீங்க. உங்கள் மேல மதிப்பு தான் கூடுதே ஒழிய, ஆனாலும் ஒரு சந்தேகம், நேற்று விஜய் டிவியில் நீயா நானா வில் இந்த காதகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில கூட இந்த அளவுக்கு யாரும் சொல்ற மாதிரி தெரியலை. அதாவது நான் சொல்றது ஜாதகத்தையும் கூட ஒரு பனம் பண்ணும் தொழிலாவே தான் பண்றாங்களே ஒழிய நியாயமா யாரும் சொல்றதேயில்லையே னு நிரைய்ய பேரு சொல்லியிருந்தாங்க. அப்படிப் பாக்கும் போது உங்களை மாதிரி சிலர் தான் நியாயமாவும் நேர்மையாகவும் இருக்கறதால் இன்றளவும் கொஞ்சமாவது இந்த தொழிலுக்கு மதிப்பு இருக்கிறதா நினைக்கிறேன்.அப்போது நான் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.////

    ஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல சகோதரி! It is only a hobby!
    பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  28. Blogger sundara kannan said...
    Ayya,
    Morning wishes to u .
    Again I am SundaraKannan who is silent student from classroom.
    Now I am with sukra disa with guru putti(kadaka rasi , mesa laknam) running from 16 age to now 28.
    For the gift of Mercury in the 7th house,I did M.Tech in computers with distinction.
    But Still now i am living with the shadow of my father.
    When will i live with my own? Now i am searching the software job for the last 3 years(after resignation of lect job)
    Any special effect from sukra disa for the remaining years?
    Advance Thanks for ur reply,
    SundaraKannan///

    The details are insufficient to say anything!

    ReplyDelete
  29. நல்ல பதிவு.

    சஸ்பென்ஸ் கதை போல இருந்தது. கடைசியில் படித்தவுடன் மனது கனத்தது.

    ReplyDelete
  30. அண்ணா!
    தங்கள் சொந்தக் கதை; அதைக் கூறிய பாணி; தந்த படங்கள்; மற்றும் பழைய கணக்கு வழக்குப் புத்தகம்
    பர்மா பற்றிய தகவல்கள். அருமை
    செட்டிநாட்டு மக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும்; நீங்களே தகுந்த ஆதாரங்களுடன் தரும்போது
    அதன் மதிப்பே தனி.
    பர்மா என்றாலே அந்த தேக்கும்...அந்த தேக்கில் அமைத்த வீடுகள்; தளபாடங்கள் ஞாபகம் வரும்.

    ReplyDelete
  31. Sir,

    nice blog...

    One question IF SAYA Graha(Rahu,Kethu) gets vargothama will it do good to the native of that horoscope or not?

    Regards
    Vinodh.K

    ReplyDelete
  32. ஐயா , பதிவு super !!
    ராகுவுக்காக தான் இவ்லொ நாள் waiting !!
    பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  33. ஒரு விஷயத்தை எழுதும்போது அதனை முழுமையாக கொண்டுவர உங்களது உழைப்பு ? அயர்ந்துவிட்டேன்...

    ஒரு பதிவையே ஒரு புத்தகமா போடலாம் போலிருக்கு...

    அவ்வளவு தகவல்கள் விக்கிபீடியாபோல கொட்டித்தருகிறீர்கள்...

    இது தான் தலைவாழை இலை சாப்பாடு என்பதோ ?

    ReplyDelete
  34. ////Blogger வண்ணத்துபூச்சியார் said..
    நல்ல பதிவு.
    சஸ்பென்ஸ் கதை போல இருந்தது. கடைசியில் படித்தவுடன் மனது கனத்தது.//////

    மனதில் இருந்த பாரத்தில் ஒரு சிறுபகுதியை இறக்கிவைத்து விட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அண்ணா!
    தங்கள் சொந்தக் கதை; அதைக் கூறிய பாணி; தந்த படங்கள்; மற்றும் பழைய கணக்கு வழக்குப் புத்தகம்
    பர்மா பற்றிய தகவல்கள். அருமை
    செட்டிநாட்டு மக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும்; நீங்களே தகுந்த ஆதாரங்களுடன் தரும்போது
    அதன் மதிப்பே தனி.
    பர்மா என்றாலே அந்த தேக்கும்...அந்த தேக்கில் அமைத்த வீடுகள்; தளவாடங்கள் ஞாபகம் வரும்./////

    உங்கள் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யோகன்.
    உங்கள் பின்னூட்டம் எல்லாம் எனக்கு உற்சாகத்தைத் தரும் Tonic.
    அந்த டானிக்தான் என்னைத் தொடர்ந்து பதிவுகளை எழுத வைக்கிறது!

    ReplyDelete
  36. ////Blogger Vinodh said...
    Sir,
    nice blog...
    One question IF SAYA Graha(Rahu,Kethu) gets vargothama will it do good to the native of that horoscope or not?
    Regards
    Vinodh.K///////

    லக்கினத்தில் இருந்து 3,6,11 ஆகிய வீடுகளில் வர்கோத்தமம் பெறும் ராகு இரண்டு மடங்கு நன்மைகளைச் செய்வான்
    மற்ற இடங்களில் அவன் வர்கோத்தமம் பெறுவது அவ்வளவு நல்லது அல்ல!

    ReplyDelete
  37. Blogger DevikaArul said...
    ஐயா , பதிவு super !!
    ராகுவுக்காக தான் இவ்லொ நாள் waiting !!
    பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்../////

    உங்கள் பராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  38. Blogger செந்தழல் ரவி said...
    ஒரு விஷயத்தை எழுதும்போது அதனை முழுமையாக கொண்டுவர உங்களது உழைப்பு ? அயர்ந்துவிட்டேன்...
    ஒரு பதிவையே ஒரு புத்தகமா போடலாம் போலிருக்கு...
    அவ்வளவு தகவல்கள் விக்கிபீடியாபோல கொட்டித்தருகிறீர்கள்...
    இது தான் தலைவாழை இலை சாப்பாடு என்பதோ ?//////

    உங்கள் (உங்களைப்போன்ற நண்பர்களின்/ வாசகர்களின்) அன்புதான் என்னை வியக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது.
    அதைவிட என்னுடைய உழைப்பு ஒன்றும் பெரிதல்ல. ரசிகர்கள் இல்லாத அல்லது பார்வையாளர்கள் இல்லாத மைதானத்தில்
    ஒருவன் சிறப்பாக விளையாட முடியாது. இங்கே எனது எழுத்துக்கள் சிறக்க நீங்கள் அனைவருமே காரணம்.

    முழுமையாகத் தருவதில் எனக்கு ஒரு பயன் இருக்கிறது. அதன் பெயர் மனத்திருப்தி!

    உங்களுகெல்லாம் தங்கத் தட்டில் சாப்பாடு தரவேண்டும். என்னால் முடிந்தது வாழை இலை மட்டுமே!

    ReplyDelete
  39. //லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)

    கும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்
    வரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்!//

    உங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை
    தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  40. ஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய‌)கணக்கு உண்டோ?

    ReplyDelete
  41. /////Blogger SP Sanjay said...
    //லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)
    கும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்
    வரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்!//
    உங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை
    தெரிவித்துக்கொள்கிறேன்.///

    It is all right Sanjay!
    மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது எனது கடமை அல்லவா!

    ReplyDelete
  42. Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய‌)கணக்கு உண்டோ?/////

    ராகு & கேது விற்கு சொந்த வீடு இல்லை. அதனால் அஷ்டகவர்க்கமும் இல்லை!
    அது பற்றிய விவரம் அடுத்த பதிவில் வரும்!

    ReplyDelete
  43. Sir,

    your narrating style is amazing. juz curious to know whats your educational background (I know you are involved in textile -Marketing side as profession) which motivates to present idea very clear and crisp.

    To be honest, yesterday my emotional level was high after I read your blog.

    I pray God to give your good health.

    -Shankar

    ReplyDelete
  44. பாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்
    31.03.2007
    "ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது "

    ஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது
    நல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை ?

    ReplyDelete
  45. /////Blogger hotcat said...
    Sir,
    your narrating style is amazing. juz curious to know whats your educational background (I know you are involved in textile -Marketing side as profession) which motivates to present idea very clear and crisp.
    To be honest, yesterday my emotional level was high after I read your blog.
    I pray God to give your good health.
    -Shankar/////

    என்னுடைய மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரையே படித்தார். அவரைவிட 4 ஆண்டுகள் அதிகமாகப் படித்தேன் நான். ஆனாலும் அவர் அளவில் பாதிகூட என்னால் எழுத முடியவில்லை.

    கல்லூரியில் ஒரு ஆண்டு மட்டும் படித்தேன். நல்ல வேலை ஒன்று கிடைக்கவே படிப்பைத் தலை முழுகிவிட்டு அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்கள் இரண்டு வருடம் எனக்கு அசத்தலாகப் பயிற்சி அளித்தார்கள். நான்காண்டு பட்டப்படிப்பிற்கு அது சமம்.

    நான் ஒரு சிறந்த வாசகன். படித்த புத்தகங்களுக்கு அளவில்லை. எண்ணிக்கையில்லை!

    எழுத வந்தது விபத்து. ஐந்து வருடமாக எழுதுகிறேன். ஒரு பத்திரிக்கையில் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுகிறேன்
    இதுவரை 52 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்று கவிதைகளைப் பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பு - என் மொழியில்! (எனக்கு அங்கே சுமார் 20,000 வாசகர்கள் இருக்கிறார்கள்)

    பதிவுலகிற்கு வந்து 3 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். மொத்தம் இதுவரை 643 பதிவுகளை எழுதியிருக்கிறேன்
    பல்சுவையில் 393 பதிவுகள். வகுப்பறையில் 250 பதிவுகள்

    விவரம் போதுமா நண்பரே?

    ReplyDelete
  46. ////Blogger dubai saravanan said...
    பாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்
    31.03.2007
    "ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது "
    ஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது
    நல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை?/////

    யாருக்கு நல்ல பலனைக் கொடுக்கவில்லை என்கிறீர்கள்?
    எம்.ஜி.ஆருக்கா?
    அரசனைப் போலவே வாழ்ந்தாரே அவர்! அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கிற்கு நிகருண்டா?

    ReplyDelete
  47. மாஸ்டர் பதிவு...
    really great sir..

    ReplyDelete
  48. /////Blogger ஈர வெங்காயம் said...
    மாஸ்டர் பதிவு...
    really great sir../////

    இடுகை உங்கள் மனம் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  49. உங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...

    நேர்முக வகுப்பு நடத்துகிறீர்களா..?

    ReplyDelete
  50. /////Blogger ஈர வெங்காயம் said...
    உங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...
    நேர்முக வகுப்பு நடத்துகிறீர்களா?/////

    நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!
    எனக்கு வேறு தொழில் இருக்கிறது.

    நிறைய ஜோதிட நூல்களைக் கற்றுத் தேறியவன். அவ்வளவுதான்.

    படிப்பதும், எழுதுவதும் எனது பொழுதுபோக்கு!
    நான் கற்றுணர்ந்தவைகள் அடுத்த தலைமுறைக்கு அறியத் தருவோம்
    என்கின்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

    அதுவும் என் அரிய நேரத்தைச் செலவு செய்து!:-))))))

    ReplyDelete
  51. ஐயா
    இன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)
    தானே உள்ளது
    என்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை ?
    ஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  52. I agree you are only 25:-))) thanks for sharing your background....

    -Shankar

    ReplyDelete
  53. அருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா? மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்?

    இன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி.

    ReplyDelete
  54. Blogger dubai saravanan said...
    ஐயா
    இன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)
    தானே உள்ளது
    என்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை ?
    ஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்///////

    தவறு எதுவும் இல்லை! நீங்கள் கேட்டது புரட்சித் தலைவரைப் பற்றியது போன்று தோற்றம் அளித்தது.
    இந்தப் பதிவின் நாயகரின் லக்கின அதிபன் சனியைப் பற்றித்தான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே!
    சனி தன் சுயவர்க்கத்தில் ஒரு பரலை மட்டும் பெற்று வீக்காக இருக்கிறானே! அதனால்தான் சரிவை
    அவனால் சரிக் கட்டமுடியவில்லை. சரிய வைத்த ராகுவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை!

    ReplyDelete
  55. ////Blogger hotcat said...
    I agree you are only 25:-))) thanks for sharing your background....
    -Shankar////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  56. Blogger முகவை மைந்தன் said...
    அருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா? மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்?
    இன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி./////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    எல்லாம் இறைவனின் சித்தம் என்று நகரத்தார்கள் இழப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

    உழும் நிலம் உழைப்பவனுக்கே சொந்தம். கட்டும் வீடு மேஸ்திரிக்கே சொந்தம் போன்ற சித்தந்தங்கள் எல்லாம்
    அங்கே ஆட்சி செய்யும் மிலிட்டரிக்காரர்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. அந்த நிலங்களின் கதி என்ன ஆயிற்று என்பது இன்று வரை தெரியாத புதிர். அங்கே நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவன் வைத்துக் கொண்டானா அல்லது
    அந்த நிலத்தில் கூலி வேலை செய்த மக்கள் எடுத்துக் கொண்டார்களா என்பது போன்ற தகவல் இன்று வரை இல்லை!

    அதை விடுங்கள். பல ஆயிரக்கணக்கான (நகரத்தார் அல்லாத) தமிழர்கள் அங்கே சென்று உழைத்து, பாடுபட்டு, சேர்த்து, கட்டிய சிறு சிறு வீடுகளை, உடைமைகளை எல்லாம் இழந்திருக்கிறார்கள். சென்றதும் கட்டிய வேட்டியோடு, திரும்பியதும் கட்டிய வேட்டியோடு. அவர்கள் உழைத்துச் சேர்த்த பணமெல்லாம், உடைமைகளாக பர்மாவில் பறி போயிற்று.

    அதுதான் சோகம்! அதுதான் கொடுமை!

    ReplyDelete
  57. அன்புடைய ஐயா அவர்களுக்கு,
    வணக்கம்.
    இந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
    தங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.
    தங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.
    நான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.
    தமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.
    கதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.
    மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்
    கதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.
    //ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///
    இந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.

    உதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.
    அன்பன்
    தியாகராஜன்.

    ReplyDelete
  58. Blogger தியாகராஜன் said...
    அன்புடைய ஐயா அவர்களுக்கு,
    வணக்கம்.
    இந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
    தங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.
    தங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.
    நான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.
    தமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.
    கதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.
    மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்
    கதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.
    //ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///
    இந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.
    உதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.
    அன்பன்
    தியாகராஜன்.////

    உங்கள் ஆத்மார்ந்தமான விமர்சனத்தால் என்னை நெகிழ வைத்து விட்டீர்கள். எழுதிய பயனை நான் அடைந்தேன்.
    கரங்கூப்பி நன்றி சொல்கிறேன். நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  59. ////Blogger கூடுதுறை said...
    WAAVVVV.....
    SUPER IYA.../////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  60. arumaiyana pathivu aiyya. nenjaarntha nandri aiyya. kathaiyai solliya vitham suvarasyam. super.

    ReplyDelete
  61. suvarasyam kundramal kathai solliya vitham thangal yezhuthukku adimai aakki vittathu. nandri aiyya.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com