மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.5.16

சிறுகதை: மாமனாரும் மாப்பிள்ளையும்


சிறுகதை: மாமனாரும் மாப்பிள்ளையும்

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 11

மாத இதழ் ஒன்றில் சென்ற மாதம் வெளியான அடியவன் எழுதிய சிறுகதை. நீங்கள் படிப்பதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்!              

   எங்கள் அப்பச்சி  சட் சட்டென்று நிறைய குட்டிக் கதைகளைச் சொல்வதில் வல்லவர். அவரை வைத்துத்தான் எனக்கு கதைகளில் ஆர்வம் வந்தது.

அவர் சொன்ன 10 வரி அல்லது 15 வரிக் கதைகளை விரிவு படுத்தி எனது நடையில் எழுதிக்கொண்டு வந்துள்ளேன். பல கதைகள் ஆச்சி வந்தாச்சு மாத இதழ்களில் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இது அடுத்த கதை. அனைவரும்  படித்து மகிழுங்கள்!
-----------------------------------------------------------------------
அது 1943ம் ஆண்டு. சுமார் 72 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

வதனமே சந்திர பிம்பமோ?
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல் ஒலித் தட்டுக்கள் மூலம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த காலம்.

ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் சாத்தப்ப செட்டியார் இல்லை. தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் அவர் இருந்தார். மகள் மீனாட்சிக்கு 20 வயது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு 18 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.வயது  ஏறிக்கொண்டே போகிறதே என்று சாத்தப்ப அண்ணனுக்குக் கவலை.

அவள் அவருக்கு ஒரே பெண். தாயில்லாத பெண். அவளுடைய தாயாருக்கு ஆஸ்த்மா நோய் வந்து, மதுரை பசுமலையில் வைத்து, சிரத்தையாக வைத்தியம் பார்த்தும் அவர் பிழைக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாத்தப்ப அண்ணன் தன் மகளின் நலன் கருதி மறுமணம் செய்து கொள்ளவில்லை.

அந்தக் காலத்து வழக்கப்படி தன் மகள் சடங்கானவுடன், 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தவளின் படிப்பை நிறுத்தி வீட்டோடு வைத்துக்கொண்டு விட்டார். மிகவும் அன்பானவள். வீட்டில் இருந்த மற்ற பங்குக்காரர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு சொல்லிக் கொடுக்க அவள் சமையலில் கெட்டிக்காரியாகி விட்டாள். கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பும், முழுக் கத்திரிக்காய் புளிக்குழம்பும் வைத்தாள் என்றால் இலையை
விட்டு எழுந்திரிக்க மனசு வராது. அத்தனை சுவையாக இருக்கும்.

அவளுக்குத்தான் தற்போது வரன் தேடிக்கொண்டிருந்தார். கடைசியில் உள்ளூரிலேயே இருந்த உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை சோமசுந்தரம் பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர். மதுரையில் இருந்த மொத்த மருந்து வணிகர் ஒருவரிடம் வேலையில் இருந்தார்.

திருமணம் ஆனவுடன் மதுரை வக்கீல் புதுத் தெருவில் ஒரு சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்ததுடன் மனைவியையும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

புறப்பட்டுப் போகும் போது மீனாட்சி அந்த அழுகை அழுதிருக்கிறாள். அப்பச்சி, இனி சாப்பாட்டிற்கு என்ன செய்வார் என்பதுதான் அவளுடைய கவலை மற்றும் சொல்லமுடியாத  வருத்தம் எல்லாம். சாத்தப்ப அண்ணனும் அவளைச் சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தார்.

திருமணமாகி முதல் 6 மாதங்கள் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மீனாட்சியும் உண்டாகியிருந்தாள். அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. மீனாட்சிக்கு அவளுடைய தந்தையார் ஸ்ரீதனமாகப் போட்டுக் கொடுத்திருந்த பத்தாயிரம் ரூபாய்களைக் கேட்டு மாப்பிள்ளை நச்சரிக்க ஆரம்பித்தார். பத்தாயிரம் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. பவுன் 43 ரூபாய் விற்ற காலம்.

வேலைக்குச் சென்றால் வருகின்ற சம்பளம் கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கிறது. ஒன்றும் மிஞ்சவில்லை. குழந்தை வேறு பிறந்தால் அதிகப் படியான செலவுக்கு என்ன செய்வது என்பது அவருடைய பிரச்சினை. அதனால் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து மதுரை சிம்மக்கல் பகுதியில் சில்லறை மருந்துக்கடை ஒன்றைத் துவங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதற்குத்தான் மீனாட்சியின் ஸ்ரீதனப் பணம்
அவருக்குத் தேவைப்பட்டது.

தன் தந்தையைக் கேட்டுவிட்டு, வைப்புத் தொகையாக இருந்த அந்தப் பணத்தைத் தருவதாகச் சொன்ன மீனாட்சி, தன் தந்தைக்குக் கடிதம் எழுதினாள். அவரும் புறப்பட்டு வந்துவிட்டார். ”ஸ்ரீதனப் பணம் என்பது பெண்ணின் தற்காப்புக்காகக் கொடுக்கப்படும் பணம், வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது. இல்லை என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே அவர் திரும்பிச் சென்று விட்டார்.

பெண்ணை நம்பிக் கொடுத்தவர், பணத்தை நம்பிக் கொடுக்க மறுத்துவிட்டாரே என்று மாப்பிள்ளைக்கு அதீதமான கோபம். மாமனாரைத் திட்டித் தீர்த்துவிட்டார். மீனாட்சியால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளே ஊருக்குக் கிளம்பிச் சென்றவர், தன் பெற்றோர்களிடம் பேசி,  மேலூரில் இருந்த தங்கள் குடும்ப நிலத்தில் தன் பங்கை மட்டும் விற்கச் சொல்லிப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து, நினைத்தபடி கடையைத் துவக்கிவிட்டார். அவருடைய நல்ல நேரம் கடையும் அமோகமாக
நடக்கத்துவங்கியது.

அதற்குப் பிறகு தன் மாமனாருடன் பேசுவதை நிறுத்தியதோடு, அவர் தங்கள் வீட்டிற்கு வந்தால் கூட மரியாதை கொடுப்பது இல்லை. வாருங்கள் என்று ஒப்புக்குக்கூடச் சொல்வதில்லை. தரக்குறைவாக விமரிசனம் செய்வார்.  அவரைப் பயல் என்பார். தன் மனைவியை பய மகளே என்பார்.

மீனாட்சிக்கு மிகுந்த வருத்தம். அவர் மாமனார் என்பதற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் வயதில் பெரியவர் என்பதற்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா என்பாள். மாப்பிள்ளை அதைக் காதிலே வாங்கிக் கொள்வதில்லை.

சாத்தப்ப அண்ணன் தன் மகளைப் பார்க்க வேண்டும் என்றால், நகர விடுதியில் வந்து தங்கி மாப்பிள்ளை இல்லாத நேரத்தில் வந்து மகளைப் பார்த்துவிட்டுபோவார்.

பழநி அப்பன்தான் அவரைத் திருத்த வேண்டும் என்று மீனாட்சி பழநியில் உறையும் பழநியாண்டவரை வேண்டிக்கொள்வாள்.

பழநி அப்பன் திருத்தினாரா?

திருத்தாமல் விடுவாரா? எப்படித் திருத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

                  *************************************************

காலம் வேகமாக ஓடியதில் 20 ஆண்டுகள் கடந்து போனதே தெரியவில்லை. மாப்பிள்ளை சோமசுந்தரம்  நன்றாக சம்பாதித்து மதுரை கோரிபாளையத்தில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி செட்டிலாகி இருந்தார். ஆனால் குணம் மட்டும் மாறவில்லை. அவருடைய மகளும் பள்ளி இறுதியாண்டில் நல்ல மதிப்பெண்களும் பெற்றுத் தேறி, திருமணத்திற்குத் தயாராக இருந்தாள்.

மும்மரமாக மாப்பிள்ளை தேடியதில் மதுரை கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் வரன் ஒன்றைத் தேடிப் பிடித்துவிட்டார். ஆனால் நெருக்கிப் பேசும்போதுதான், அவர்களுக்குத் தோது கொடுப்பதற்குத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து தலையைப்
பிடித்துக்கொண்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். ஐம்பதாயிரம் குறைந்தது. அது அந்தக் காலகட்டத்தில் பெரிய தொகை

விஷயத்தைக் கேள்விப்பட்ட சாத்தப்ப அண்ணன், தன் மகள் வீட்டிற்குச் சென்று, அது நல்ல சம்பந்தம், அதையே பேசி முடியுங்கள். என்ன பணம் பத்தவில்லையோ அதை நான் தருகிறேன் என்று வாக்குறுதி தந்தார். தன்னிடம் சேமிப்பில் உள்ள பணம் பேத்தியின் திருமணத்திற்குப் பயன் படுவதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் சொன்னார்.

அப்புறம் என்ன? கதையின் நீளம் கருதி நடந்ததை சுருக்கமாகவே செல்கிறேன்.

அடுத்து வந்த முகூர்த்த நாளில் இரு வீட்டாராலும் திருமணம் கெட்டி செய்யப்பெற்றது.

மாப்பிள்ளை சோமசுந்தரம் தன் மாமனாரின் மேன்மையை அப்போதுதான் உணர்ந்தார். தன் மனைவியிடம் சொல்லி நகரவிடுதியில் தங்கியிருந்த அவரை வரச் சொல்லி மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு,  விளக்குத்தூண் பகுதியில் உள்ள பெரிய ஜவுளிக் கடை ஒன்றில் தன்
மாமனாருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு ஃபின்லே மல் வேஷ்டி ஒன்றையும், அதே கம்பெனியின் மேல் துண்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு, வீட்டிற்குத் திரும்பினார்.

அவர் வீட்டிற்குள் வந்தது தெரியாமல், சாத்தப்பண்ணனும் அவர் மகளும் உற்சாகமாகப் பேசிக் கோண்டிருந்தார்கள்

“ஆத்தா நம் மாப்பிள்ளையும் பயலாகி விட்டார், தெரியுமா?”

“என்ன அப்பச்சி சொல்கிறீர்கள்?” இது மகள்

“ இத்தனை ஆண்டுகளாக என்னைப் பயல் பயல் என்று சொல்லிக்கொண்டிருந்தார் இல்லையா? இப்போது அவரைப் பயல் என்று சொல்ல ஒருத்தன் கிடைத்து விட்டான் பார்த்தாயா?”

மீனாட்சி களுக்கென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த சோமசுந்தரத்திற்கு செவிட்டில் அரைந்ததைப் போன்று இருந்தது.

பத்தடி முன்னால் வந்து, தன் மாமனாரின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு பேசத்துவங்கினார்.

“அம்மான் என்னை மன்னித்துவிடுங்கள். ஏதோ சின்ன வயதில் கோபத்தில் தவறாகப் பேசியது. பின்னால், நடுத்தர வயது வந்த பிறகாவது, மட்டு மரியாதை தெரிந்து உங்களை அப்படி அழைத்திருக்கக்கூடாது. என் மனைவி மீனாட்சியையும், பல ஆண்டுகளாக தரக்குறைவாக அழைத்ததும் தவறுதான். அவள் பொறுமையின் சிகரம். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு என்னோடு குடும்பம் நடத்தினாள். நீங்கள் இருவரும் என்னை
மன்னித்துவிடுங்கள்.....”

என்று சொல்லிக் கொண்டே வந்தவர், திடீரென்று தன் மாமனாரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு எழுந்து நின்றார். அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

மீனாட்சிக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. இப்போதாவது தன் கணவர் தன் தந்தையின் அருமை பெருமைகளை உணர்ந்து திருந்தினாரே என்ற மகிழ்ச்சி!

எல்லாம் பழநி அப்பனின் மகிமை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட அவள் மனமார பழநியாண்டவரை வணங்கி மகிழ்ந்தாள்!

                                        ***************************************************
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. வாத்தியார் அவர்கட்கு,

    எனது மரியாதைகள்.

    கதை அருமை. இனிய காலை வணக்கம் .

    மோ . ராம்சுதர்சன்

    ReplyDelete
  2. இதைக் கதை என்று சொன்னால் நம்ப முடியவில்லை. உண்மை நிகழ்ச்சிதான்.

    'வதனமே சந்திரபிம்பமோ' பாபநாசம் சிவன் எழுதியபாடல்.பாகவதரின் பிர்காவில் பாட்டு சோபித்தது.நான் பிறப்பதற்கு முன்னால் வந்த பாடல் என்றாலும்,எனக்கு நினைவு தெரிந்த காலத்திலும் பாட‌ல் பட்டி தொட்டிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

    பெண்ணைக் கொடுத்தவன் பாடு இன்றைய தேதி வரை சாத்தப்பண்ணன் அடைந்த அதே அநுபவம் தான்.மாப்பிள்ளையை அவருடைய தாய் தந்தையர் எப்படி பெற்று சீராட்டி வளர்த்தனரோ அதே போல்தான் பெண்ணைப் பெற்றவர்களும் வளர்த்திருப்பார்கள் என்ற எண்ணமே மாப்பிள்ளகளுக்கு இருப்பதில்லை.திருமணமான பெண் முற்றிலும் தன் பெற்றொர்களை மறந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    நல்ல கதைக்கு நன்றி.

    உடல் நலமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் 02/05/2016

    பல கலைகளில் நல்ல அனுபவம் உள்ள நீங்கள் செட்டிநாட்டு சிறுகதை எழுதுவதில் சிறந்த வித்தகர் . அதை படிக்கும் போதே மன திரையில் காட்சிகள் ஓடி கொண்டிருக்கும் . உங்கள் கதையின் சிறப்பே முருகன் வந்து மங்களமாக முடித்து வைத்து விடுவார் .
    முருகன் முன்னின்று காப்பான் . வேலும் மயிலும் சேவலும் துணை

    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    மிகவும் நல்ல கதை! இப்படிப்பட்ட மாப்பிள்ளைகள் திருந்திவிட்டால் எப்படிப்பட்ட எதிர்காலத்தைக் கொண்டு வருவார்கள்?!
    மன் திருந்திய மாப்பிள்ளையின் மகத்தான கதைக்கு நன்றி, ஐயா!

    ReplyDelete
  5. வணக்கம் குருஜி அவர்களே!.. என் தந்தையார் சொல்லூவார்கள் “பழுத்த பனைமட்டையை பார்த்து குருத்து மட்டைய் பல்லைக் காட்டி சிரிக்குமாம்” என்பார். குருத்து மட்டையும் ஒருநாள் பழுக்கும் என்பது புரியாமல் இருப்பவர்களுக்கு நறுக்கென்று கதை அருமை!. அருமையானதொரு பதிவு.. பாரட்டுக்கள்!!!!

    வெங்கடேஷ்.சி
    சென்னை.

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning. Hope all is well.

    Nice story. Thanks for sharing.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்
    தங்கள் வலைக்கு நான் புதியவர் சோதிடத்தில் (பஞ்சாங்கத்தில்) வாக்கியம் அல்லது என்கணிதம் எவை சிறந்தது



    நன்றி!!!


    இராஜேஷ் அந்தமான்

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா, தவறு செய்வது மனித குணம்.அதை திருத்திக் கொள்ள ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று உணர்த்தியது.நன்றி.

    ReplyDelete
  9. ////Blogger M RAMSUDARSAN said...
    வாத்தியார் அவர்கட்கு,
    எனது மரியாதைகள்.
    கதை அருமை. இனிய காலை வணக்கம் .
    மோ . ராம்சுதர்சன்/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    இதைக் கதை என்று சொன்னால் நம்ப முடியவில்லை. உண்மை நிகழ்ச்சிதான்.
    'வதனமே சந்திரபிம்பமோ' பாபநாசம் சிவன் எழுதியபாடல்.பாகவதரின் பிர்காவில் பாட்டு சோபித்தது.நான் பிறப்பதற்கு முன்னால் வந்த பாடல் என்றாலும்,எனக்கு நினைவு தெரிந்த காலத்திலும் பாட‌ல் பட்டி தொட்டிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.
    பெண்ணைக் கொடுத்தவன் பாடு இன்றைய தேதி வரை சாத்தப்பண்ணன் அடைந்த அதே அநுபவம் தான்.மாப்பிள்ளையை அவருடைய தாய் தந்தையர் எப்படி பெற்று சீராட்டி வளர்த்தனரோ அதே போல்தான் பெண்ணைப் பெற்றவர்களும் வளர்த்திருப்பார்கள் என்ற எண்ணமே மாப்பிள்ளகளுக்கு இருப்பதில்லை.திருமணமான பெண் முற்றிலும் தன் பெற்றொர்களை மறந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
    நல்ல கதைக்கு நன்றி.
    உடல் நலமாக இருக்கிறீர்களா?//////

    உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
    உடல் நலம் இப்போது தேறி வருகிறது!

    ReplyDelete
  11. /////Blogger Spalaniappan Palaniappan said...
    அய்யா வணக்கம் 02/05/2016
    பல கலைகளில் நல்ல அனுபவம் உள்ள நீங்கள் செட்டிநாட்டு சிறுகதை எழுதுவதில் சிறந்த வித்தகர் . அதை படிக்கும் போதே மனத் திரையில் காட்சிகள் ஓடி கொண்டிருக்கும் . உங்கள் கதையின் சிறப்பே முருகன் வந்து மங்களமாக முடித்து வைத்து விடுவார் .
    முருகன் முன்னின்று காப்பான் . வேலும் மயிலும் சேவலும் துணை
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிகவும் நல்ல கதை! இப்படிப்பட்ட மாப்பிள்ளைகள் திருந்திவிட்டால் எப்படிப்பட்ட எதிர்காலத்தைக் கொண்டு வருவார்கள்?!
    மனம் திருந்திய மாப்பிள்ளையின் மகத்தான கதைக்கு நன்றி, ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. ;;;;Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!.. என் தந்தையார் சொல்லூவார்கள் “பழுத்த பனைமட்டையை பார்த்து குருத்து மட்டைய் பல்லைக் காட்டி சிரிக்குமாம்” என்பார். குருத்து மட்டையும் ஒருநாள் பழுக்கும் என்பது புரியாமல் இருப்பவர்களுக்கு நறுக்கென்று கதை அருமை!. அருமையானதொரு பதிவு.. பாரட்டுக்கள்!!!!
    வெங்கடேஷ்.சி
    சென்னை./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. Hope all is well.
    Nice story. Thanks for sharing.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. //////Blogger rajesh kumar said...
    ஐயா வணக்கம்
    தங்கள் வலைக்கு நான் புதியவர் சோதிடத்தில் (பஞ்சாங்கத்தில்) வாக்கியம் அல்லது என்கணிதம் எவை சிறந்தது
    நன்றி!!!
    இராஜேஷ் அந்தமான்//////

    இரண்டுமே சிறந்ததுதான்! ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏதாவது ஒன்றைக் கடைப்பிடியுங்கள். இது பற்றி எனது பழைய பதிவுகளில் செய்திகள் உள்ளன!

    ReplyDelete
  16. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, தவறு செய்வது மனித குணம்.அதை திருத்திக் கொள்ள ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று உணர்த்தியது.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com