மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.11.11

நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?

மாணவர் மலர்!

இன்றைய மாணவர் மலரை ஐந்து ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++
 வீழ்வதை உணராத மாக்கள்
-------------------------------------------
கவிதை: தனூர் ராசிக்காரன், ப்ருனெய்!



காலச்சக்ரமே  சுழலும் உன் கால்களை
கட்டுபடுத்த ஆளில்லை என்பதால்
கட்டுப்பாடு இன்றிச் சுழலாதே - எமது
கலாச் சாரத்தையும் மாற்றாதே!

காதல் நெறி மாறி விட்டது
கற்பு நெறியும் கரைந்து விட்டது
கன்னியருக்கும் காளையருக்கும்
கட்டுப்பாடு குலைந்து விட்டது!

அன்னையருக்கும் தந்தையருக்கும்
தம்மக்கள் நலம் முதலாய் பட்டது - அவர்
தம் அன்னையருக்கும் தந்தையருக்கும்
காப்பகங்கள் அடைக்கலம் தந்தது.
 .
காசுக்கும் பணத்துக்கும் கஷ்டமில்லை -அதனை
முறையாய் தேட இஷ்டமில்லை
சந்தையிலும் மந்தையிலும் ஒரேவிலை
உடன் பிறந்த பந்தத்திடம் அதே நிலை
 
வாய்மொழிச் சொல்லில்  நிறையும் குளுமை
மெய் மொழி அசைவில் குறையா  இனிமை
ஈவிற்கும்  ஈகைக்கும் வந்ததொரு பஞ்சமே;
இரக்கதிற்கு இப்போது இல்லை இடமே.

வேர்களை வெறுக்கும் விழுதுகள்
தாம் வீழ்வதை உணராத எருதுகள்
வழிவழி வந்த வாழ்க்கையைத் தொடர
காலச்சக்ரமே கட்டுப்பாடோடு சுழல்க!

- தனூர்ராசிக்காரன்,  Brunei 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
குன்றக்குடி அடிகளார்
இவர்களைத் தெரிந்து கொள்வோம்
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர் 



வகுப்பறையில் பல தரப் பட்ட பதிவுகள், இந்தக் கணணி உலகில் தேடிக் கிடைக்காத, அதற்கு நேரமில்லாத போது புதுப் புது தகவல்களை அறியமுடிகிறது அந்த வரிசையிலே இதுவும் ஓன்று. என்னை கவர்ந்த நான் வாசித்த சில விசயங்களையும் இங்கே கூறிக் கொள்ள விளைகிறேன்...

அறிவாளி=> இலக்கியவாதி=> நேர்மையாளி=>கல்விமான்=>அரசியல்வாதி=>சமூகத் தொண்டு செய்யும் நல்லக் குடிமகன். இவைகள் தாம் அந்தக் கால அரசியல் வாதிகளின் லட்சணங்கள்...

அதில் ஒரு சிலரே இன்றும் இன்றையச் சூழலில் வேறு வழியில்லாமல் சமூகத் தொண்டு என்னும் உயரிய செயலை விடவும் முடியாமல் இன்றைய அரசியலில் அவதிப் பட்டுக் கொண்டு /உழன்று கொண்டு இருக்கிறார்கள். காரணம் என்ன? அவர்களின் பதில் என்ன? அவர்களை சந்திக்க நேர்ந்தால் கேட்கலாம்.

கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்கள் என்ற ஒரு அபிப்ராயம் என்றும் இருக்கிறது. நான் பார்த்த கம்யூனிச அரசியல் வாதிகள் காந்தியத்தை / இந்தியத்தை காயப் படுத்தாது, கடமை புரிந்தவர்களே. அதை வரலாறு ஒரு போதும் மாற்றி எழுத முடியாது.

தாடி வைத்துக் கொண்டு, கெண்டைக் காலுக்கு மேலே கைலியை கட்டி இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதும், காவி உடை உடுத்திய யாவரையும் களவாணிகளாகப் பார்ப்பதும் காலக் கொடுமை.

வன்முறையாளர்களும், தீவிரவாதிகளும், களவாணிகளும் தங்களுக்கு அரணாக இருக்க நுழைந்துக் கொள்ளும் கோட்டைகள் இவை.

தன்னை காப்பாற்றிக் கொள்ள கயவர்கள் கொள்ளும் வேஷம்.

நான் அறிந்தவரை, சுதந்திர இந்தியாவின் சோசலிஸ்டுகள் வன்முறையால், தீவிரவாதத்தால் அல்லது கோவில்களையோ, ஆலங்கலையோ, தர்காக்கலையோ இடித்து விட்டு நீதி மன்றங்களில் வாய்தா வாங்கித் திரிவதாக இல்லை. காந்தியை, இந்திராவை சுட்டதும் அவர்கள் இல்லை. நானும் வேறு பாதைக்கு போக விரும்பாமல் இத்தோடு நிறுத்துகிறேன்.

செக்கிழுத்தும், கல்லுடைத்தும் கொண்ட கொள்கை மாறாது நாட்டுக்கு உழைத்த நல்லோர்களை நினைவில் நிறுத்துவோம். எதுவாயினும், இருந்தும் சற்றே யோசித்து முடிவு செய்வதே  கற்றோனின் கடமை.

இங்கே, கொள்கைகளை விவாதம் செய்ய விரும்பவில்லை. இருந்தும் சில கொள்கை வாதிகளின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான செய்தியை தர விளைகிறேன்.

நான் ஓராண்டுகளுக்கு முன் வாசித்த இந்த புத்தகத்தின் சில பக்கங்களை நமது வகுப்பறையில் அனைவரும் வாசிக்க கிடைத்த இந்தத் தருணத்தில் (ஓராண்டாகவே வகுப்பறையில் வெளியிட எண்ணியும் இப்போது நிறை வருகிறது)…

"நினைத்துப் பார்கிறேன்" என்ற அந்தப் புத்தகத்தை எழுதி வெளியிட்ட கல்வியாளர், இலக்கியவாதி, வழக்கறிஞர், சமூகச் சேவகர், அரசியல்வாதி என்று பலரால் அறியப் பட்ட தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கும், நமது வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

ஆசிரியரையும், உண்மைக் கதையில் வரும் நாயகரையும் எனது பதின்ம வயதில் நேராகக் கண்டும், அவர்களின் சொற்பொழிவுகளில் மூழ்கி யும் இருக்கிறேன்.

அதிலும் அடிகளாருக்கு எங்கள் ஊர் பாரதி மன்றத்தின் சார்பாக பொன்னாடைப் போர்த்தி மகிழ்ந்திருக்கிறேன். அதற்கும் மேல், அதே மேடையில் பாரதி பற்றிய எனது சொற்பொழிவையும் நடத்தி இருக்கிறேன்.

ஆனால், அது அடிகளார் அவர்கள் மேடைக்கு வரும் முன்னமே அமைந்தது என்றாலும் அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மேதைகளின் பெயர்களுக்கு இடையே எனது பெயரும் இருந்தது என்பதை நினைத்து என் குழந்தைகளிடம் இன்றும் கூறி சந்தோசப் பட்டும் கொள்கிறேன்.

நான் சிறுவனாக இருந்தபோது வானொலி தான். தொலைக் காட்சிகள் நகரங்களிலும், செல்வந்தர்கள் வீட்டிலும் தான் (பஞ்சாயத்து தொலைக் காட்சிக்கு முந்தியது). ஆக, எனது இலக்கிய அறிவு ஓரளவேனும் மேம்பட காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய பட்டி மன்றங்களும், எங்கள் ஊரில், பள்ளியில் நடந்த இலக்கியக் கூட்டங்கள் தான்.

இதிலே குறிப்பிட்டு சொல்ல நிறைய பேர் இருந்தும். காரைக்குடி கம்பன் கழகத்தாரும்; சரஸ்வதி ராமநாதன், சத்திய சீலன், தா.பா. போன்றோர்களே என்னைக் கவர்ந்தவர்கள் எனலாம். அதிலே தா.பா வின் குரல் கணீரென்று வெண்கலத்தை போன்று ஒலிக்கும். இன்றும் அந்தக் குரலை பேட்டிகளில் காணொளிகளில் கேட்க முடிகிறது. சிங்கம் கிழடானாலும் கர்ஜனை ஒலி மட்டும்  குறையவில்லை.

இது போன்ற பலத் தருணங்கள் உண்டு. அதில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தொடர்புடையது என்னால் மறக்கவே முடியாது. சமீபத்தில் நாமக்கல் வெ. ராமலிங்கம் அவர்களின் குடும்பத்தார் அவரின் பேத்தியின் திருமணம் தொடர்பாக எங்களைத் தொடர்பு கொண்டு உரையாடியதும் அந்த வகையிலே சாரும். பெரிய மனிதர்களின் தொடர்பு பேரானந்தம் தரும்.

ஆக, வாழ்வின் சிறந்த தருணங்கள் என்று பலருக்கும் பல உண்டு... இப்போது நமது தா. பா. அவர்களின் "நினைத்துப் பார்கிறேன்" ல் இருந்து சிலப் பக்கங்கள்.

தொடர்ந்து படியுங்கள்.

குன்றக்குடி அடிகளார்

ஜீவாவுடன் இருந்த உறவு, நடந்த சம்பவங்களை "ஜீவாவும்-நானும்" என்ற நூலில், ஒரு பகுதியை எழுதியுள்ளேன்.

நான் பட்டப் படிப்பை முடித்தவுடன், அதே கல்லூரியில் துணை ஆசிரியராக, ஆங்கில மொழித் துறையில் சார்ந்தேன். காரைக்குடி தமிழ் இலக்கியச் சிந்தனை ஆறு ஓடும் பூமியாக அப்போது இருந்தது. புகழ்மிக்க கம்பன் விழாவை மிகச் சிறப்பாக சா.கணேசன் நடத்தி வந்தார். அங்கு வந்த தமிழ்ச் சான்றோர், புலவர்களைக் காணும், அவர்களது பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அப்போதுதான் குன்றக்குடியில் புதிதாக ஆதீனப் பட்டம் சூட்டப் பெற்று அருணாச்சல தேசிக சுவாமிகள் பொறுப்பு ஏற்றிருந்தார். பிற்காலத்தில் அவரைப் பார்த்த பலர் இருக்கலாம் அவர் பதவி ஏற்ற போது மிகவும் இளவயதினராக இருந்தார். சரீரம் கட்டுடன் இருந்தது. பருமன் தெரியாதிருந்த நல்ல உடல் வாகு. வளையல் மாதிரி இரு காதுகளிலும் தங்கக் குண்டலம் ஆடும்... கருந்தாடி, முடி இது தோற்றம்.

பேச்சின் குரல் ஈர்ப்பதாக இருந்தது. தமிழ்ச் சொற்கள் அழகுபட ஒலித்தன. கேட்க கேட்க இனிமையாக இருந்தது.

நல்ல மேடைத் தோற்றம். நல்ல தமிழ்ப் பேச்சு... ஆனால், ஆன்மீக விளக்கம் தான்... பல பெரிய ஆதீனங்களின் சம்பிரதாய பேச்சு நடையிலிருந்து இவரது பேச்சு மாறுபட்டு ஒலித்தது. நேரடியாக அல்லாமல் சாடை மாடையாக சில சீர்திருத்தக் கருத்துக்களையும் அடுக்குவார். அவரது பேச்சில் தமிழின் அழகே மேலோங்கி நின்றது.

அழகப்பா கல்லூரியில், தமிழ் துறையில் புகழ்மிக்க பேராசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்களில் வ.சு.ப. மாணிக்கனாரும் ஒருவர். அவருடன் ப.நமசிவாயம், குழந்தை நாதன் ஆகிய தமிழ் விரிவுரையாளர்களும் இருந்தனர்.

நாங்கள் பெரும்பாலும் அடிகளாரைக் கிண்டலடித்து, விமர்சனம் செய்பவர்களாகத் தான் இருந்தோம். காரைக்குடியில் ஒரு இலக்கிய விழா நடந்தது. அதில் தமிழ்கடல் ராய.சொ., சொ.முருகப்பா, சா.கணேசன், அடிகளார், வாரியார் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ராய.சொ. பேசும்போது மடாதிபதிகள் தங்க அணிகலன்கள் அணிவதைக் கடுமையாகக் கண்டித்து, "ஊனைச் சுருக்கி, உள்ஒளி பேருக்கும் அழகா இது?" எனக் கடுமையாகப் பொழிந்து தள்ளினார். மறுவாரம் மேடையில் குன்றக்குடி அடிகளாரின் காதுகளில் தொங்கிய தங்க வளையல்களைக் காணோம்... ராய.சொ. சொன்னதாலோ? அடிகளாரே முடிவு எடுத்தாரா? தெரியவில்லை...

சில மாதங்கட்குப் பிறகு காரைக்குடி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவிற்கு அடிகளார் தலைமை தாங்கி பரிசுகள் வாங்குவதாக இருந்தது. கூட்டம் தொடங்கும் நேரம் நெருங்கியும் அவரைக் காணோம்... வாயிலில் பிரமுகர்கள், பெரும் வணிகர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். அவர் கார் கண்ணில் தென்படவே இல்லை... லேசான முணுமுணுப்பு இருந்தது.

சைக்கிளை ஓட்டிக் கொண்டு திடீரென்று வது சேர்ந்தார் அடிகளார். வரும் வழியில் கார் பழுதுபட்டதால், வாடகைச் சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு வந்ததாகச் சொன்னார். "ஒரு மனிதன் காலம் தாழ்த்தி வருவதால் பல நூறு பேரின் மதிப்பிட முடியாத நேரத்தைப் பாழடிக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டார் கைவிடவேண்டும்" என்ற முன்னுரையை பலத்தக் கைத் தட்டலுக்கு இடையே தொடங்கியவர், பாரதியின் புதுமைப் பெண்ணைப் படம்பிடித்துக் காட்டிவிட்டு விடை பெற்றார்.

நாங்கள் எங்கள் விமர்சனக் கருத்தை மாற்றிக் கொண்டு, அவரை மதிக்க, புரிந்துக் கொள்ளத் தொடங்கினோம். "இவர் புதுமைச் சாமியார்... இவருடன் பழகுங்கள்" என ஜீவாவும் சொன்னார். "அவர் இருக்கும் இடம், தரித்துள்ள உடை, அவரது தனிப்பட்ட அக வாழ்க்கைப் பற்றி எதுவும் பேசாதீர்கள். அவர் வெளியிடும் கருத்துக்களை மட்டும் வைத்து அவரோடு உறவாடுங்கள்" என ஜீவா அறிவுரை கூறினார். அதை நான் பின்பற்றினேன்.

முதல் சந்திப்பு.

அடிகளார் பேசியதைக் கேட்பவர்களில் ஒருவனாக மட்டுமே இருந்து கேட்டு வந்த என்னை ஒரு இலக்கிய விழாவில், பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கூட்டம் நடக்கும் நாளன்று அவரது காரே நமசிவாயம், குழந்தை நாதன் ஆகியோருடன் என்னையும் அழைத்துச் செல்ல வந்தது. குன்றக்குடி போனவுடன் அடிகளார் காரில் முன்வரிசை இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.

மறுநிமிடமே எங்களுடன் நெடுநாட்கள் பழகியவர் மாதிரி எங்கள் பெயரைச் சொல்லி, ஒவ்வொருவரிடமும் பேசத் தொடங்கினார்.

பொதுவாக மடாதிபதிகள் சமமாகப் பேசவும் மாட்டார்கள், தங்களது வண்டியில் பிறரை ஏற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்.

இவரது நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

என் பக்கம் திரும்பியவர், "நீங்கள் எப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தீர்கள்?" எனக் கேட்டார். பின்னர், "எதற்காகச் சேர்ந்தீர்கள்?" என்றவர், பொதுவுடமைச் சிந்தனை சைவ சித்தாந்தத்திற்கு முரண்பட்டது அல்ல" என்றவர், "தமிழர் சிந்தனையில் இது ஆதிமுதல் இருந்து வந்துள்ளது. நடக்கத்தான் இல்லை" என்றார். அன்றையக் கூட்டத்தில் அவரது உரை அது பற்றியதாகவே இருந்தது...

மரியாதையும் கூடியது, நெருக்கமும் வளர்ந்தது...

அவரது மடத்தில் அவர் தங்கியிருக்கும் அறைக்கருகில், அவர் படிக்கும் நூலகம் அமைந்திருக்கிறது. ஒருநாள் அங்கு சென்று நூலகத்திற்குள் நுழைந்தேன்... ஆச்சரியம்.

ஏராளமான மார்க்சீய - லெனினீய நூல்கள் ஒரு வரிசையில்...

தமிழ் இலக்கிய மூல நூல்கள் பலவும், திரு.வி.க. வின் நூல்கள் தனி வரிசை. பாரதியார், பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் கதைத் தொகுதிகள் என வரிசை வரிசையாக இருப்பதையும், பல நூல்களில் அவர் படித்துக் கோடு போட்டு, குரிஎஈடுகள் போட்டிருப்பதையும் பார்த்து வியந்தேன்.

அவர் இருந்த இடம், தரித்த ஆடையை மட்டும் வைத்து மதிப்பிட்டு இருந்தால் தவறு செய்திருப்போம். ஆகா, ஒன்றை மறந்துவிட்டேன் அந்தச் சிவப்பழம், சைவ மடத் தலைவர், பெரியாரின் எழுத்துக்களையும், அவரது படத்தையும், 'மடத்தில்' வைத்திருந்தார்.  

"இவரது படம் எப்படி... மடத்தில்?" என்று ஒருமுறை நான் இழுத்தபோது,

"எங்களது மடத்துக்கே, இழந்த மரியாதையை மீட்டுத் தந்தவர் அவர்" என்றவுடன் சிரித்து அங்கீகரித்து மகிழ்ந்தேன்.

அதேபோலப் பெரியாரும் அடிகளாரைப் பாராட்டுவதோடு, அவர் மேடைக்கு வந்தால், எழுந்து வணக்கம் தெரிவிப்பார். இதைக் கண்ட சில தி.க. நண்பர்கள் பெரியாரிடம், "நீங்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க வேண்டுமா?" எனக் கேட்டபோது, "அவர்கள்தான் அவரை மதிப்பதில்லை. நாமும் மதிக்காவிட்டால், அது சரியாகுமா?" என்றார்.

நாளொரு வண்ணமாக இந்த உறவு வளர்ந்து வந்தது.

எட்டயபுரம் பாரதி விழா.

'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்' நடத்தி வரும் பாரதி விழாவிற்கு அடிகளார் தவறாமல் பங்கேற்று வந்ததை நாடறியும். ஒருமுறை அவர் வந்திருந்த போது, வேறு ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

"இந்த நிகழ்ச்சி முடிந்து, நமது நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரம் ஆகும். அதற்குள் போய் சாப்பிட்டுவிட்டு வந்து விடலாம்" என்றார்... அவருடன் காரில் போர்ப்பட்டேன். எட்டயபுரத்தை விட்டு காட்டு வழியில் வண்டி வெகு தூரம் போய்க் கொண்டிருந்தது. 'இங்கே எங்கே சாப்பிட?' என வியந்து கொண்டிருந்தேன்.

ஒரு வெட்டவெளிக் காட்டருகில் கார் நின்றது, ஒரு விரிப்பை கட்டாந்தரையில் பரப்பிய பின்னர் அவர் உட்கார்ந்தார். அவரது துணையாளர்கள் சாப்பிட்டுப் பாத்திரங்களை இறக்கி பண்க்டத் தொடங்கினார். அவருக்கு அவரது சாப்பாடு" என்றார்... அவருக்கு வழங்கிய உணவில் புளிப்பு, உறைப்பு, இனிப்பு எதுவும் இருக்காதாம். எனக்கு வேறுவகை என்று வாங்கியிருக்கிறார்கள்...

"உங்கள் உணவில் என்ன வித்தியாசம்?" என்று கேட்ட போது, "அதில் காரம், புளிப்பு சேர்ப்பதில்லை" என்றார். "கொஞ்சம் கொடுங்கள்" என்று ஒரு கரண்டி வாங்கிச் சாப்பிட்டேன்... மழுமழு என்றிருந்தது. நான் முகத்தைச் சுளிப்பதைக் கண்டவர்.

"சுவைக்கு அடிமை ஆகலாமா?" என்றார்.

"இல்லாமல் சாப்பிடுவது எப்படி?" என்றவன், "அப்படி இயற்கை தரும் சுவைகளையும் நிராகரித்து ஏன் வாழ வேண்டும்?" என்றேன். "இது பல நூற்றாண்டாக நடக்கும் விவாதம். நாம் வேலைக்குப் போகலாம்" என எழுந்து விட்டார்.

குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் பல.

அரசமரம் பிள்ளையார் கோவில்.

மதுரை அரசமரம் பிள்ளையார் கோவிலில் ஆண்டு தோறும் இரவு முழுக்க ஒரு இலக்கிய விழா, பட்டிமன்றம் நடப்பது வழக்கம்.

ஒருமுறை "மனிதகுலச் சிக்கல்களைத் தீர்க்கப் பெரிதும் வழி காட்டுவது மார்க்சீயமா? வள்ளுவமா? காந்தீயமா?" என்ற மூன்று அணிகளைக் கொண்ட பட்டிமண்டபத்திற்கு அடிகளார் தயார் செய்து, கலந்து கொள்வோர் பட்டியலையும் த்யாரித்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரை ஆற்றியவர் மார்க்சிஸ்டுக் கட்சியின் தலைவர் என். சங்கரையா. நடுவர் அடிகளார்... மார்க்சீய அணிகுழுவிற்கு என் தலைமை... இன்னொரு அணிக்கு புலவர் கீரன் என்றும், இன்னுமொரு அணிக்கு பேராசிரியர் பாலுச்சாமி என்றும் நினைக்கிறேன். பல்லாண்டுகள் கழிந்ததால் பெயர்கள் சரிவர வரவில்லை.

அன்று திரண்டிருந்த மாபெரும் மக்கள் திரளை, வேறு எங்கும் நான் கண்டதே இல்லை. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி காலை ஆறு மணிக்கு முடிந்தது.

"காந்தீய நெறிகளில், குறள் அமுதம் கலந்த மார்க்சீயமே மனிதகுலச் சிக்கலைத் தீர்க்கும்" என்று தீர்ப்புக் கூறியவர், மார்க்சீயத்தின் கூறுகளைத் திறம்பட, அழகு தமிழில் விளக்கினார். "இது தான் நடைமுறைக்கு உகந்தது" என்றும் கூறினார். திருக்குறள் நீதிபோதனை நூலாகவே நின்றுவிட்டதே என்றக் கவலையைத் தெரிவித்தார், காந்தீயம் - காந்தியடிகளுடன் எரியூட்டப் பட்டுவிட்டதோ? என்ற ஐயத்தையும் எழுப்பினார். இருப்பினும் இது உயிர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கூறி நிறைவுரை செய்தார்.

மறக்க முடியாத நிகழ்ச்சி; மறக்க கூடாத நல்லுரை.   
ஆக்கம்
ஆலாசியம்,
சிங்கப்பூர்
---------------------------------------------------
3

சிறுகதையும் தொடர்கதையும்

உணர்வுகள் தொடர்கதையாக ஆகலாம்
உறவுகள் சிறுகதையாக ஆகலாம்
----------------------------------------------
ஆக்கம்: தேமொழி

 சமீபத்தில் படித்த இந்த செய்தி மனதைத் தொட்டது.  இந்த சம்பவம் ரஷ்யாவில் நடந்ததாக படித்தேன். அது உறவுகளைப் பற்றி நாம் பொதுவாக கொண்டுள்ள எண்ணங்களை மாற்றுகிறது.  திருமண வாழ்வைத் தொடர முடியாத தம்பதியினர் விவாகத்தை ரத்து செய்ய முடிவெடுக்கின்றனர்.  அப்பொழுது தன் மகள் வளர்ப்பிற்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று கணவன் மறுக்கிறான்.  அவன் கூறிய காரணம், அந்த மகள் தன் சாயலில் இல்லை, அவள் அவன் மகளாக இருக்க வாய்ப்பில்லை, அதனால் உதவ முடியாது என்பதே.  முன்னாள் மனைவி நீதி மன்றத்தில் முறையிடுகிறாள்.  நீதிபதி வழக்கை விசாரித்து மரபணு சோதனைக்கு ஆணையிடுகிறார்.  வந்த முடிவுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

அந்த மகள் தாய், தந்தை இருவருக்குமே மகள் அல்ல என்பதை உறுதிப் படித்தியது மரபணு சோதனை.  தாய் குழம்பினாள், நினைவுகளை பின்னோக்கி செலுத்தி அவள் காரணம் தேடிய பொழுது, மகள் பிறந்த நாளில் அதே மருத்துவமனையில் இன்னொரு பெண்ணுக்கும் மகள் பிறந்தது நினைவுக்கு வந்தது.  மருத்துவமனைக்கு படையெடுத்து தகவல்களை சேகரித்து துப்பு துலக்கினாள்.  அந்த குடும்பம் அவள் வீட்டிற்கு அருகாமையில்தான் வசித்தனர், குழந்தை மாற்றம் சந்தேகத்தின் பேரில் மீண்டும் மரபணு சோதனை நடத்தப் பட்டது.  சோதனை முடிவு தாயின் சந்தேகத்தை நீக்கியது, பிறந்தபோதே குழந்தைகள் மாற்றப் பட்டு விட்டனர்.  சிறுமிகள் வெவ்வேறு தாய் தந்தையுடன் இதுநாள் வரை வளர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இதன் பின் நடந்ததுதான் என் மனதை நெகிழ வைத்தது.  முடிவைக் கேட்ட சிறுமி பதறினாள்.  என்னை அனுப்பிவிடாதீர்கள் என்று அழுதாள்.  தாய் சொன்னாள், அழாதே என்றும் நீ என் மகள்தான், உன் முடிவுக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டேன் என்று ஆறுதல் சொன்னாள்.  மற்ற குடும்பமும் அவர்கள் சிறுமியின் முடிவுக்கே விட்டு விட்டனர்.  அந்த சிறுமியும் வளர்த்தவர்களையே தாய் தந்தை என தேர்ந்தெடுத்து விட்டாள்.  சிறுமிகளின் முடிவுக்கு கட்டுப் பட்டனர் பெற்றோர்கள்.  வளர்த்தாலும் உணர்வில் தான் தாய்தான் என நிரூபித்தாள் அந்த தாய்.  ஆனால் வளர்த்த தந்தைக்கோ குழந்தை வளர்ப்பிற்கு உதவ மனமில்லை.

குடும்பம் என்பது நாம் மனதில் வளர்க்கும் உறவுகள்.  ரத்த சம்பந்தம் மட்டும்தான் என்பது இல்லை.  ஜெயகாந்தன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.  ஜெயகாந்தனின்  "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" கதையும், அதில் வந்த ஹென்றியின் குடும்பமும் மிகவும் உன்னதமானது.  துரோகம் செய்த மனைவியை விட்டுப் பிரிந்த ஆண், வெள்ளைக்கார தம்பதியருக்கு நண்பனாகிறார்.  போர் காலத்தில்  உயிர்  துறக்கும் வெள்ளையர் மனைவியை தன் நண்பர் வசம் ஒப்படைத்து துணையாய் இருக்க வேண்டிக்கொண்டு உயிர் துறக்கிறார்.  நெஞ்சில் ஓர் ஆலயம் முத்துராமன் போன்ற மனம் அவருக்கு.  வெள்ளைக்காரப் பெண்ணும், இந்த மனிதரும் சேர்ந்து போர் காலத்தில் அனாதையாகிவிட்ட வெள்ளைக்கார சிறுவன் ஹென்றியை மகனாக்குகிறார்கள்.  இதில் இருப்பது காந்தி சொன்ன மனித நேயம்.  தந்தை இழந்த குழந்தைக்கு வாழ்வளி, கைம்பெண் ஆனவளை மணந்து கொள் என்பதைப் போன்ற அறிவுரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  இந்த குடும்பம் மத, ஜாதி, மொழி, இனம் எதையும் தாண்டியது.  உணர்வுகளின் அடிப்படையில் உருவான குடும்பம் இது.

வேளாங்கண்ணியில் சுனாமியில் மனைவி மக்களைப் பறிகொடுத்த ஒருவர், அடுத்த ஆண்டே திருமணம் செய்து ஒரு பேட்டி வெளியிட்டார்; தன் இறந்த மனைவியின் பெயரில் சமூகப் பணி செய்வதாக.  அவர் மணந்ததோ தன்னைப்போல் அந்த பேரிடியில் கணவனைப் பறிகொடுத்த பெண்ணை அல்ல, சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளையும்  தத்தெடுக்கவில்லை.  முன்னே  திருமணமாகாத பெண்ணை மணமுடித்தது அவர் சொந்த விருப்பம்.  அந்த துன்பத்தை அனுபவித்தவரே அது போன்ற துன்பத்தை அனுபவிப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில்லை, அவர்கள் துயர் துடைக்க நினைப்பதில்லை  என்பதுதான் என் மனதில் ஓடிய எண்ணம்.

எழுத்தாளர் சாவியின் மகள் திருமணம் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும்.  அந்த இளவயதுப் பெண்ணின் கணவர் விமான விபத்தில் மரணம். அது போல அதே விமான விபத்தில் மனைவியைப் பறி கொடுத்தவர் சாவியின் மகளை மணந்து கொண்டார்.  அந்த திருமணத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடிய மணமகனின் தாயை இழந்த மகன், விபத்தே ஆகாத விமானம் கண்டு பிடிக்கப்  போவதாக சொல்லிக்கொண்டிருந்தான்.  அந்த திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மனம் எவ்வளவு நிறைந்திருக்கும்.  துணையை இழந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை.  தாயை இழந்த சிறுவனுக்குத் தாய்.  இந்த நிகழ்சியை நான் ஒரு வாரப் பத்திரிக்கையில் பல ஆண்டுகளுக்கு முன் படித்தேன், சிறு வயதில் மனதில் பசுமரத்தாணியாக இறங்கிவிட்டது.

இப்படித்தான் மறுமணங்கள் நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.  காதல் என்று வந்தால் மனதிற்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்வதே சரி.  ஆனால் நம் சமுதாயத்தில் நடக்கும் தீர்மானிக்கப் பட்ட திருமணங்களில் இது போன்று நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  அதிலும் துயர சம்பவங்களில் மனைவியை இழந்து மறு திருமணத்திற்கு தயாராகும் எத்தனை பேருக்கு அதே துயர சம்பவத்தில் கணவனை இழந்த கைம்பெண்ணை மணக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.  ரிதம் என்ற படத்தில் அர்ஜுன், மீனா, அவர்கள் மகன் என்று காண்பிக்கப் படும் குடும்பம் ஜெயகாந்தனின் ஹென்றியின் குடும்பம் போன்றது.  வாழ்வளிப்பது என்ற பதம் எனக்கு உடன்பாடில்லாததால், பெற்றோரைத் தவிர யாரும் யாருக்கும் வாழ்வளிப்பது என்ற செயலுக்கு அருகைதையற்றாதல், அந்த சொல்லைத் தவிர்த்திருக்கிறேன்.  கைகொடுத்த தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம்  காலத்தில் வளர்ந்தவர்களுக்கு இது உடன்பாடில்லை என்பதற்கு நான் பொறுப்பல்ல.

எந்த வயதிலும் திருமணம் செய்வது, அல்லது மறுமணம் செய்வது அவரவர் சொந்த விருப்பம்.  வாழ்க்கைத் துணை இழந்த சிலருக்கு தன் வாழ்க்கைத் துணை இருந்த இடத்தில மற்ற ஒருவரை இருத்திப் பார்க்க முடியாது.  சிலர் அதை மறைந்த துணைக்கு செய்யும் துரோகமாகவோ, அல்லது தங்கள் இருவருக்கும் இருந்த அன்பு பிணைப்பில் தான் மட்டும் தரம் குறைந்து போகும் செயலாகவோ எண்ணுவார்கள்.  இது ஆண் பெண் இருவருக்கும் பொது.  பெண் என்ற முறையில் என் போல் இருப்பவர்கள் நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆண்களின் மனநிலை எனக்குப்  புரிவதாக காட்டிக் கொள்ள நான் தயாராக இல்லை.  எனவே, என்னை முன்னிறுத்தி சொல்கிறேன்...என் மகன் வயது உள்ள அவன் தோழர்களைப் பார்த்தால் அவர்களையும் என் மகனாகவே நினைக்கத் தோன்றுகிறது.   ஆனால், ஆண்களுக்கு ஏனோ அந்த மனப்பாண்மை இல்லை என்பதும் புரிகிறது.  அதை வயதானபின் மறுமணம் செய்யும் பொழுது அவர்கள்  வெளிப்படுத்துகிறார்கள்.  மறுமணம் செய்ய விரும்பும் வயோதிக ஆண்களுக்கு தன் வயதை ஒத்த பெண்களையோ, அல்லது தன் போன்றே துணையை இழந்த பெண்களோ ஏன் கண்ணிற்கு தெரிவதில்லை என்பது இதற்கு ஆதாரம்.  அந்த பெண்ணிற்கும் தன் மேல் காதல் அதனால் தவறில்லை என்பது தன்னை ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்தனம்.  அந்த இளம்மனைவி விரும்புவது அவர் செல்வம் என்பதை உணராத அறியாமை அல்லது அதைப் பொருட்படுத்தாத போக்கு.

வயதான ஆணிடம் ஒரு பெண்ணிற்கு காதல் ஏற்படும் என்பது இயற்கைக்கு மாறானது.  முதிர்ந்த வயதில் உள்ளவர்கள் ஆராய்ந்து பார்க்கும் அறிவை உபயோகப் படுத்த வேண்டும்.  பதிவர் ஒருவர் குறிப்பிடிருந்தார் தனது பதிவில், ஒரு பள்ளி வயது பெண்ணின் புத்தகத்தில் "களவாணி" பட கதாநாயகனின் படம் இருந்ததாக.  அவள் தோழிகளுக்கும் அந்த நாயகனைப் பிடிக்குமாம்.  பதின்ம வயதுப் பெண்கள் ஏன் கமல், ரஜினி படங்களை வைத்துக் கொள்ளவில்லை? அதை விட ஏன் அஜீத், விஜய் படங்களை வைத்துக் கொள்ளவில்லை?  அட ...நம்ம சிம்பு, தனுஷ் படங்கள் கூட வைத்துக் கொள்ளவில்லை.  பாசாங்கற்ற வயதுக் கோளாறு அந்த வயதில் யார் மீது நாட்டம் வரும் என்பதைக் காண்பிக்கிறது.  மறுமணம் செய்ய எண்ணும் வயதான ஆண்கள் இதை உணரவேண்டும்.  வாழ வழியற்ற பெண்கள் நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது தவறு.  இது மணவாழ்க்கை இல்லை, இது வெறும் வாழ்க்கைத் துணை என்பது பசப்பு வார்த்தை.  தனக்கு உதவியதற்கு ஈடாக குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போவது தன் கடமை, தன்னால் இயன்ற செயல் என அந்தப் பெண் எண்ணலாம்.  குடும்ப வாழ்கைக்கு இணங்காதது நன்றி கெட்ட செயல் என்ற குற்ற உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டு தானே முன்வரவும் செய்யலாம்.

தங்களை "வாழ்வளிக்கும்" தியாகச் செம்மல்களாக நினைத்து இளவயது பெண்களை மணப்பதற்கு முன், அந்த பெண்ணை மகளாக தத்தெடுத்து தன் செல்வத்தை அவள் அனுபவிக்க வழி செய்யலாம்.  அத்துடன் சுய சம்பாத்தியத்தை யாரும் யாருக்கும் எழுதி வைக்கலாம்.  தன் பிள்ளைகள் மேல் கோபம் கொண்ட சிலர் கோவில்களுக்கு சொத்தை எழுதி வைப்பதும் உண்டு.  இந்த செயல்கள் அவர்கள் உண்மையான தியாகிகள் என்பதைக் காண்பிக்கும். அவர்களை மேன்மையானவர்கள் என்றும் சமுதாயம் போற்றும்.  அதைத் தவிர்த்து இவ்வளவு பணம் கொடுக்கிறேனே, அதில் எனக்கு என்ன பயன்? what is in for me? என்பவர்கள் மனசாட்சியை விற்றுவிட்டு திருமணமும் செய்து கொள்ளலாம், அதற்கு பெண்ணே சம்மதிக்கும் பொழுது வேறு என்ன செய்ய முடியும்?  சுருக்கமாக சொன்னால் வியாபார நோக்கத்தில் உள்ள உறவு இது, முறையான அங்கீகாரம் இல்லாவிட்டால் சமூகத்தில் இந்த உறவுக்கு வேறு பெயர்.  இந்த உறவுகள் தொடர்கதையாகப் போகாமல் இனி சிறுகதையாகப் போக வேண்டும்.
- தேமொழி
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

 நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?
 
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
------------------------------------------------------------------------


"நிங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கீ"என்று ஒரு மலையாள நாடகமோ, நாவலோ, என்னமோ ஒன்று. பெயர்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாள மொழி தெரியாதலால் படிக்கவில்லை.

அந்தத் தலைப்பு தமிழில் "நீங்கள்தான் என்னை கம்யூனிஸ்டாக மாற்றினீர்கள்!"

அதில் வரும் 'நீங்கள்' அந்தக் கதாசிரியர் வளர்ந்த சமூகததைக்குறிக்கும்.அவர் கம்யூனிஸ்டு ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு கம்யூனிஸ்டு
ஆனவரில்லை என்று தோன்றுகிறது. சமூகமோ அல்லது ஒரு தனி மனித எதிரியோ செய்த அக்கிரமத்தால் இவர் கம்யூனிஸ்டு ஆகி விட்டாராம்.

கம்யூனிஸ்டு ஆனால் சமூகக் கொடுமைகளைத் தீர்த்து விட முடியுமா? கம்யூனிசம் அப்படியென்ன துஷ்ட நிக்ரஹம் செய்ய வந்த பகவானேவா?

அந்தத் தலைப்புக்கு எதிர்வினை:

"நீங்கள்தான் என்னை கம்யூனிஸ்டு ஆக்கவில்லை!"

'என்னை' என்றால்? என்னையேதான். கே எம் ஆர் கே தான்.

நல்ல மனிதாபிமானம் இருந்தும், ஓரளவு கம்யூனிசம் படித்தும் நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?

ஒரு பிற்போக்குப் பழமொழி: 'இருபது வயதில் நீ பொதுவுடமை பேசாவிட்டால் உனக்கு இதயம் இல்லை.அறுபது வயதில் நீ பொதுவுடமை பேசினால் உனக்கு மூளையில்லை."
=========================
என் தந்தையார் சுதந்திரப் போராட்டக்காரக் காலத்தில் இருந்த அனைத்துத் தரப்பு மக்களுடனும் , சமூகத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். கம்யூனிஸ்டுகளும் அப்பாவிடம் வருவார்கள்.

சிவப்புத் துண்டும் கசங்கிய சட்டையுமாக அவர்கள் அப்பாவிடம் கையைக் காலை ஆட்டிப் பேசுவார்கள். அப்பா பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு,"நீங்கள் சொல்வதெல்லாம் சரி. இலட்சியவாதிக்கு நீங்கள் சொல்வது எல்லாம் பொருந்தும்.மக்கள் எல்லோரையும் லட்சிய வாதிகளாக‌ இருக்க வைக்க முடியாது. நாம் நினைப்பதைவிட மிக நுண்ணிய உணர்வுகளால் இந்த சமுதாயம் பிணைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் சொல்லும் ஒரே பாதைதான் புரட்சிக்கு என்பதை என் பூர்சுவா மூளை ஏற்க முடியவில்லை. நீங்கள் வாசித்துள்ள சமூக விஞ்ஞானம் மாற்றம் பெறும் என்றே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.எந்த ஒரு கொள்கை மாற்றம் அடையாமல் தேங்கி நிற்கிறதோ அது அழுகி அழியும். இந்திய பொதுபுத்தி மாற்றங்களை உள் வாங்கி எப்போதும் முன் நகரும் திறன் படைத்தது.இது ஒரு வெளி நாட்டுக்காரர் எழுதிய கொள்கை பிர‌கடனத்தால் அனுமானிக்கப் பட முடியாத‌து." அப்பா பேசுவதை அவர்களைப்போலவே வாய்திறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். ஒன்றும் புரியாது.
=====================
கொஞ்சம் வயது கூடின பின்னர் நானாகத் தனியாக ஊர் சுற்ற ஆரம்பித்தபோது சேல‌ம் ரோட்டரி சங்கத்தில் சி பி எம் தலைவர் பி.ராமமூர்த்தி பேசுவதைக் கேட்கப் போனேன். "மக்கள் அனைவரும் தியாக புத்தி உள்ளவர்கள் என்றும்,அவர்கள் மற்றவர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தங்கள் உயிரையும் கூட பொது நன்மைக்காக விடுவார்கள்" என்றும் பேசினார்.பேச்சின் ஊடே,"பெண் விஷயத்தில் தான் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆனால் அதிலும் கூட ஐந்து பேர் ஒரே பெண்ணுடன் பகிர்ந்து வாழ்ந்தது நம் நாடு அல்லவா?" என்றார்.

அப்போது அது கவர்ச்சியாக இருந்தது. அது கம்யூனிசம் பற்றி எல்லாவற்றையும் தெளிவு படுத்தி விட்டடதாக எண்ணி எல்லாம் அறிந்தது போல கதைக்க ஆரம்பித்தேன். அப்பா ஒன்றும் பேசாமல் மஹாபாரதத்தில் இருந்தே ஆதாரம் காண்பித்து, அந்த வழக்கம் அந்த ஐவர் மட்டுமே கடைப் பிடித்தினர். மற்றவர்கள் அவ்வாறு அல்ல என்பதைத் தெளிவு படுத்தினார்.
========================
எனக்கு நிரந்தர‌ வேலை உறுதி செய்யப்பட்டு அதற்கான கடிதம் கொடுத்தார்க‌ள். கொடுத்தது ஒரு காம்ரேட். அவர் அந்த செக்ஷன் எழுத்தர். Received with thanks என்று எழுதி கையெழுத்திட்டேன்.

"இது என்ன காம்ரேட் புது வழக்கம்? இப்படியெல்லாம் எழுதக்கூடாது..."

"ஏன்?"

"ஏன்னா? நாம ரிலாக்சா இருக்கிற மாதிரி நிர்வாகத்திற்கு ஒரு எண்ணம் வந்துடும் அதனால் எப்பவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொள்ளனும்."

"என்னால 'ரிலாக்ஸா'தான் இருக்க முடியும்''

"அப்ப சங்க வேலைல ஆர்வம் காட்ட மாட்டிங்க?'

"சங்க வேலையை சிரித்துக் கொண்டே செய்யக்கூடாது என்று எங்கே சொல்லி இருக்கிறது?"

"காம்ரேட்! நாம சீரியசா பேசினால்தான் தொழிலாளியும் சீரியசா இருப்பான்.கொஞ்சம் லூசுல விட்டாலும் இங்கே தொழிற்சங்கம் கைவிடப்ப‌ட்டு,
மன மகிழ் மன்றம் ஆகிவிடும்."

"எனக்கு அப்ப சங்கம் சரியா வரும் என்று தோணலையே. நா எப்பமும் இளிசுச்க்கிட்டு இருக்கிற டைப்பு..."

"அன்று சிகாகோ வீதியில் ரத்த‌ம் சிந்திய தொழிலாளியினை எண்ணிப் பார்த்துமா உங்க‌ளுக்கு சிரிப்பு வருகிறது, தோழரே? கைகள் எல்லாம் காய்ச்சுப்போகும்வரை கனமான சுத்தியலால் ஓங்கி ஓங்கி அடிக்கிறானே அந்தத் தொழிலாளியின் புடைத்த‌ நரம்பைப் பார்த்துமா உங்களுக்கு சிரிப்பு வருகிறது..."

அவருடைய ஆவேசப் பேச்சும் அவர் அற்புதமான நடிப்பும் மிகவும் பிடித்து இருந்தது.சிரிக்கலாம என்று யோசித்தேன்.அவர்முன்னால் சிரித்தால் அவர் அழுது விடுவார் போல இருந்தது.உடனே அங்கிருந்து அகன்றேன்..முகம் மறைந்தவுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
========================
என்னுடைய பணி நிரந்தரம் ஆனதற்காக எல்லோருக்கும் ஏதாவது இனிப்புக் கொடுக்க முடிவு செய்தேன். என்ன செய்யலாம் என்று அடுத்த இருக்கை காம்ரேட்களைக் கேட்டபோது வழ்க்கமாக கேன்டீனில் சொல்லி சேமியா பால்பாயசம் தருவார்கள் என்றார்கள்.நானும் அவ்வாறே அலுவலகம் முழுமைக்கும் 350 பால்பாயசம் ஆர்டர் கொடுத்துவிட்டேன்.

பாயசம் தயாரித்துக் கொண்டு வந்து வைத்து விட்டு கேன்டீன் நாயர், "எந்தா சாரே!பிரதமன் சப்ளை ஆரம்பிக்கலாமா?' என்றார். நான் 'சரி' யென்று சொல்லுமுன், 'நிறுத்து' என்று குரல் கேட்டது. தாலி கட்டும் நேரத்தில் சினிமாவில் வருமல்லவா அதே போன்ற அதிகாரமான குரல்.

திரும்பிப் பார்த்தேன்.காம்ரேட் விவாஹ சுந்தரமும், காம்ரேட் ராகவாச்சாரியும்!

"காம்ரேட் கொறைச்சு இவ்விட வரி!"

சென்றேன்.

காம்.ராகவாச்சாரி தோழமை உணர்வுடன் தோளின் மீது கை போட்டுக் கொண்டார்.

"அந்த ஆபீசர் வேலாயுதம் யூனியனுக்கு எப்பவும் எதிராவே இருக்கான். இப்போ நம்ம 'ஓ டி' விஷயத்தில ரொம்ப கடுமையா இருக்கான். அதனாலெ அவனை 'சோஷல் பாய்காட்' செய்துள்ளோம்.அவனுக்கு மட்டும் பாயசம் கொடுக்கக் கூடாது"

"அதெப்படி நான் ஒருவரை மட்டும் ஓரங்கட்ட முடியும்? என்னால அப்படியெல்லாம் செய்ய முடியாது! நாயர் எல்லோருக்கும் சப்ளை பண்ணுங்க!"

நாயர் 'சுருசுரு'ப்பாக சப்ளையை ஆரம்பித்தார். ஒரு 60 டம்ப்ள‌ர் சப்ளை ஆகியிருக்கும். அவர்கள் சொன்ன அதிகாரி வேலாயுதத்திற்கும் ஒரு டம்ப்ளர் வைக்கப்பட்டது.அதற்காகவே காத்து இருந்தது போல எல்லா காம்ரேடுகளும் கையில் டம்ப்ளருடன் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். வரிசையாக என் மேசைக்கு ஊர்வலம் போல் வந்து என் மேசையின் மீது பாயசக் கோப்பைகளை 'ட்க் டக்' என்ற ஒலியுடன் வைத்துவிட்டு திரும்பிப் போயினர் மேசை நிரம்பி வழிய, இடமில்லாதவர்கள் என் மேசையைச் சுற்றி பாயசத்தினை அடுக்கினர். நான் மேசையை விட்டு எழுந்து வரமுடியாதபடி பாயசத்தால் 'கெரோ' செய்யப் பட்டேன்.

இதுதான் தொழிலாளர் ஒற்றுமையா? இதுதான் தொழிற்சங்க ஒற்றுமையா?

இந்த சோஷியல் பாய்காட் தானே அந்தக் கால சேரிகளை உருவாக்கியிருக்க வேண்டும்? மார்க்ஸீயமும் ஒரு வகை மதமா?

ஏன் இவர்களால் தனிமனித நட்பையும் அலுவலக நடைமுறையையும் பிரித்துப்பார்க்க முடியவில்லை?

தனிமனிதனின் எல்லா உணர்வுகளும் பொதுக்கருத்து என்ற ராட்சனின் கோரப்பல்லில் மாட்டி அரை படத்தான் வேண்டுமா?

மனதில் கேள்விகளோடு நீண்ட நேரம் அமர்ந்து இருந்தேன்.
==================================
'சிந்தாபாத்' அடிச்சா பெரியகோவில் கோபுரம் கீழே விழுந்துவிடுமோ என்று eல்லோரும் பதரும் குரலில் கோஷம் போடும் காம்ரேட் ஒருவர்
இருந்தார். பிறப்பால் பிராமணர்தான். நான் ஒரு நாள் விடுப்பு எடுத்து இருந்தேன்.

மறுநாள் அலுவலகம் சென்றபோது "என்ன நேற்று வரலை?" என்று ஆரம்பித்தார்.

நான் என் வாக்கில் சனீஸ்வரன் இருக்கிறர் என்று உணர்ந்து ஆதியில் இருந்தே கூடியவரை நானாகப் பேசுவதைத் தவிர்த்து விடுவேன்.  ஆனால் விடாது கருப்பு என்று என்னை யாராவது பேச இழுத்து விடுவார்கள்.அப்படித்தான் ஆயிற்று அன்று.

"பாட்டிக்கு அப்பா திவசம் கொடுத்தார்.அவர் வயதானவராகையால் அவர் அருகில் இருந்து சேவை செய்தேன். அதனால் வரவில்லை" என்றேன்

"இந்த பத்தாம் பசலித்தனம் நம்ம சமுதாயத்தில் இருந்து எப்போதுதான் ஒழியுமோ?!"

"ஏன், நீங்கள் திவசம் கொடுப்பதில்லையா?"

"ஒரு 'கார்ட் ஹோல்ட'ராக்கும் நான். அந்த தப்பல்லாம் பண்ணினா கட்சி சும்மா இருக்காது"

"அப்போ உங்களுக்கு திவசம் கொடுக்கணும்னு ஆசை மனசுல இருக்கு. கட்சிதான் தடை. இல்லையா?"

"அதெப்படி நானே அந்த மூடப்பழக்கத்தை எதிர்க்கிறேன்"

"காரணம்?"

"காரணங்கள் பல உண்டு. ஆனாலும் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது என்னவென்றால், திவசம் அன்று பிராமணர்கள் சாப்பிடும் வரை மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது; வெறும் பிச்சை கூடப் போடக் கூடாது என்பதுதான். இது அவர்கள் தந்திரமாகச் செய்த சுயநல‌ விதி"

"சரி அது சுய நல விதியாகவே இருக்கட்டும்.அதன் பின்னணியெல்லாம் விளக்கப் புகுந்தால் வெற்றுக் கூச்சல் ஆகிவிடும்.உம்முடைய வயதுக்கு நீர் ஒரு 20 திவசமாவது கொடுத்து இருக்கணும்.கொடுத்துள்ளீரா?"

"இல்லை.எனக்கு செய்யும் விருப்பமும் இல்லை; வசதியும் இல்லை"

"வசதி இல்லை என்று சொல்லாதேயும். மனம் இல்லை என்பதே சரி! என் தகப்பனார் தன் 50 வயது வரை முறையாக திவசம் கொடுக்காமல், சாஸ்திரியை அழைக்காமல் மந்திரம் இல்லாமல், திதி அன்று சாதி, மத, அந்தஸ்து வித்தியாசம் இன்றி அனைவரையும் அழைத்தது உணவிட்டு இருக்கிறார்..கடந்த‌ 10 ஆண்டுகளாகதான் வைதீகரைக் கூப்பீட்டு செய்கிறார். நீரும் அதுபோலவே செய்து இருக்கலாமே!"

"அதெல்லாம் கூட புரட்சியைத் தள்ளிப்போட 'பூர்சுவா'க்கள் செய்யும் தந்திரம். ஒரு வேளை சோறு போட்டவனை, சோற்றுக்கு உப்பு கொடுத்தவனை மறக்கக்கூடாது என்றெலாம் எழுதி வைத்து மக்களைப் புரட்சிப்பாதையில் இருந்து திசை திருப்புவது."

"சரி .என் அப்பாவுக்கெல்லாம் முன்பே, சிறந்த வைதீகப் பிராமணனாக விளங்கிய ஒருவரே திவசத்து அன்று தானம் கொடுத்துள்ளார் தெரியுமா?"

"யார் அது?"

"திருவிசை நல்லூர் கேள்விப்பட்டுள்ளீரா? கும்பகோணம் அருகில் உள்ளது. அங்கே அக்கிரஹாரத்தில் ஸ்ரீதர ஐயா என்று ஒருவர் வாழ்ந்துள்ளார். பெரிய வேத விற்பன்னர். வேதம் படித்துள்ளோம் என்ற செருக்கு சற்றும் இல்லாதவர்.பகவானிடம் பக்தியானவர்.கவிதா ஞானம் மிக்கவர். அவர் இல்லத்தில் திதி வருகிறது. வேத பண்டிதர்களை அழைத்து திவசம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அவர்களும் வந்து, 'காவேரியில் சென்று ஸ்நானம் செய்து வருகிறோம்' என்று சென்று இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் புழக்கடையில் இருந்து குரல் கேட்கிறது.'ஐயா! சாப்பாடு கொடுங்கள்.ரொம்பப்பசி' ஏழையின் குரல் கேட்டு நெஞ்சம் பதைத்த ஸ்ரீதர ஐயர் திவசத்திற்காகத் தயார் நிலையில் இருந்த உணவுப் பண்டங்களை எடுத்து அந்தப் பரம ஏழைக்கு அளிக்கிறார்.

அதைப்பார்த்துக் கொண்டே வந்த வைதீகர்கள்,'அபசாரம்!பாவம் செய்துவிட்டீர்.திவசம் செய்ய முடியாதே!' என்கிறார்கள்.

'இது பாவம் என்றால், நான் என்ன செய்தால் இந்தப் பாவம் போகும்?" என்று கேட்டார் ஸ்ரீதரர். கங்கையில் குளிக்க வேண்டும் என்றனர். அவர் மனமுருகி கங்காஷ்டகம் பாட அவர் வீட்டிலேயெ கங்கை பெருகி ஊரெல்லாம் ஓடியதாம். இதில் கங்கை பெருகியது என்பதை நீர் நம்பாவிட்டாலும், உணர்ச்சி வயப்பட்டு சாஸ்திர விதிமீறல்  உமக்கு வெகு காலத்திற்கு முன்பே நடந்துள்ளது. உமக்கும் ஐயாவாளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் நீர் ஏதோ பெரிய புரட்சி செய்வதாக நினைத்து விதியை மீறுகிறீர். அவர் தானம் பண்ணிவிட்டு, அகங்காரம் இல்லாமல் பேசுகிறார். நீர் தானம் செய்யாமலயே பெரிய சாதனை செய்ததுபோல் ,புரட்சிக்காக முற்போக்காக நடந்து கொள்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்.

சரி நீர் நினைத்தபடி சாஸ்திரியைக் கூப்பிடாமல், என் அப்பாவைப்போல அந்த நினைவு நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமேன் என்றால் அதற்கும் புரட்சியை அது ஒத்திபோடும் என்று சித்தாந்தம் பேசுகிறீர்." நான் வெடிப்புறப் பேசியதை பல ஊழியர்களும் செவி மடுத்தனர்.சிலர் வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.

காம்ரேடுக்கு அவமானமாகப் போய்விட்டது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் போய்விட்டார்.

என்னை விட மூத்தவரான ஒரு நண்பர் "வீணா சங்கத்தின் பகையை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்.பாரும் வேடிக்கையை இனிமேல்" என்றார்.

அவர் சொன்னது சரிதான் என்று தொடர்ந்து நடந்த சம்பவங்கள் உறுதி செய்தன.
===================================
அச்சுதன் நாயர் எங்கள் நிறுவனத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் காவலர்.

 நான் முதன் முதலில் சந்திக்கும் போதே அவருக்கு 75 வயது இருக்கும்.முதுமை முகத்தில் மட்டும்தான் தெரியும்.அதுவும் வெள்ளிக் கம்பிகளாய் முளைத்து இருக்கும் தாடிதான் அவருடைய முதுமையைப் பறை சாற்றும்.அப்புறம் பொடிப் பழக்கத்தால் பெரிதாக வீங்கிப் போன 'பல்பஸ்' மூக்கு.

ஒரு பெரிய பித்தளை தூக்குச் சட்டி முழுதும் சாதமும் குழம்பும் சுமந்துகொண்டு சைக்கிள் ஸ்டாண்டுக்குள் காலை 8.30 மணிக்கு
நுழைந்துவிட்டால்  மாலை 6.30 வரை தன்னுடைய போஸ்டை விட்டு அகலாத ராணுவ வீரனைப் போல அங்கேயே இருப்பார். தினமும் ஸ்டாண்டைக் கூட்டி சுத்தமாக வைப்பார்.

அவரெல்லாம் நிறுவனம்  தேசியமயமாவதற்கு முன்பே ஓய்வு பெற்றவர்.

'நானெல்லாம் ஓரியென்டல் பென்ஜினராக்கும்மே! இம்பேரியல் பாங்க் மாதிரியல்லோ ஓரியென்டலும்; அத்தரை வலிய மானேஜ்மென்டு. இப்பம் மாதிரியா? யூனியன் கொடி பிடிச்சு சிந்தாபாத் அடிச்சு,  சுலபமாயிட்டு சம்பளம் எடுக்க...?'

தீபாவளிக்கு எல்லோரிடமும் இனாம் வசூல் செய்வார். ஒரு நோட்டுப் புத்தகத்தினையும் பேனாவையும் கையில் வைத்துக் கொண்டு தீபாவளி மாததிற்கு முதல் மாத‌ சம்பள சமயத்திலேயே ஆரம்பித்து விடுவார்.

சென்ற வருடத்தில் யார் அதிகம் எழுதியுள்ளார்களோ அந்த வரிசைப்படி ஆட்களை அணுகுவார். அப்படி அவர் கணிப்பில் நான் தான் முதல் ஆளாக நோட்டை ஆரம்பித்து வைக்க வேண்டும்.

"என்ன நாயர்!நானோ சாதாரண குமாஸ்தா! எத்தனை பெரிய ஆபீசர்மாரெல்லாம் இருக்கா. அவாளை முதலில் கேட்கப்படாதோ" என்றால்

"எந்தா சாரே! எந்தா பெரிய ஆபீசர்மார்!? பெரிசு சிறிசு என்னுவ‌தெல்லாம் பதவில இல்ல சாரே!இங்க இருக்கணும், கேட்டோ!" என்று  இதயத்தைச் சுட்டிக் காண்பிப்பார்.

"சரி! சங்கத் தலைவர்களிடம் முதலில் காட்டுமேன் நாயர்! அவர்கள்தானே எது ஒன்று  என்றாலும் ஓடி வந்து ந‌ம்மைக் காப்பாறுபவர்கள்?"

"ஆரு? ஆரு காப்பாதரதுன்னு பறையரது சாரே! அந்த சங்கத்துக்காரனையும் என்டே குருவாயுரப்பன் அல்லோ ரக்ஷிக்குன்னு சாரே!"

அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது.

என்னுடைய சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகத் துவங்கியது.சேர்ந்தார் போல ஓரிரு முறை மாலையில் வந்து பார்க்கும் போது சைக்கிள் டயர் ஃப்ளாட் ஆகியிருந்தது. மூன்று முறை பஞ்சர் ஒட்டியும் நானகவது நாளும் அப்படியே ஆயிற்று. பஞ்சர் போடும் கடைக்காரர், இந்த முறை "சார் இது யாரோ வேணும்னு உங்க சைக்கிளை பஞ்சர் செய்யராப்புல இருக்குது" என்றார்.

நாயரிடம் விஷயத்தை சொன்னேன். "என்னைக் குறி வைத்து யாரோ ஒருவர் தினமும் ஊசியால் குத்தி என் சைக்கிளைப் பஞ்சராக்குவது போலத் தோன்றுகிறது."

"நான் கவனம் வைக்குறேன் சாரே!"

அதன் படியே இரண்டாம் நாள் மாலை என‌க்காகவே என் சைக்கிள் அருகிலேயே காத்து
இருந்தார் நாயர்.

"எல்லாம் அந்தக் கரடிதான் சாரே!"

எனக்கு உடனே புரிந்துவிட்டது. கரடி என்ற 'நிக்நேம்' உடையவர் யூனியனில் இரண்டாம் வளையத்தில் உள்ள ஒரு குட்டித் தலைவர்.

எதற்காக இது? 'பின் ப்ரிக்ஸ்'என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, அதாவது சிறு குடைச்சல் அது இதுதானோ?

ஏன்? ஏன் ? ஏன்?

நாயரை சாட்சிக்கு அழைத்து பஞ்சாயத்து வைக்க‌  முடியாது.  நாயர் உண்மையைச் சொல்லக் கூடியவர்தான். உண்மையைச் சொன்னதற்காக அவருடைய போஸ்டிங் ஆட்டம் காணலாம்.

அவரை உண்மையைப் பேச வைத்து இந்தக் கண்ணாமூச்சி ஆட்டதில் நான் வெற்றி பெற்று ஆகப் போவது என்ன?

நாயருக்கும் சேர்ந்து குடைச்சல் கொடுப்பார்கள். தள்ளாத வயதில் இவர்களுடைய நரித் ததிரங்களையெல்லாம் அவரால் தாங்க முடியுமா?

சைக்கிள் நிறுத்த வேறு ஏற்பாடு செய்து கொண்டேன்.

தன் கருத்துடன் ஒத்துப் போகாதவர்களுக்கு, நடைமுறையில் சங்கம் செய்யும் காரியம் இப்படித்தான் இருக்கும்.பலருக்கும் அப்படி நட்ந்துள்ளது.

கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள மாட்டார்கள்.

கூண்டில் அடைக்கப்பட்டுப் படியாத யானையையோ, சிங்கத்தயோ, புலியையோ எப்படித் தண்டனைகளால் படிய வைக்கிறார்களோ அதுபோன்ற நடவடிக்கைதான் சங்கம் செய்யும்.

வயதில் மூத்தவர்களிடம் கலந்து ஆலோசித்தேன்.

"நீ நேரடியாக அவர்களைப் பகைக்கிறாய். அவர்களுக்கு எப்போதும் சுற்றி புகழ் பாடுபவர்களையே பார்த்துப் பழகி விட்டது.கேள்வி கேட்காமல் லாயலாக இருப்பவர்களே யூனியனில் வெற்றி பெற முடியும்"

தொழிற் சங்கமும், கம்யூனிசமும் என்னைவிட்டு நன்கு விலகிப்போவதை உணர்ந்தேன்.

ஆக்கம்.
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5
 
இந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடல்:
நமக்கு அதை எடுத்து வழங்குபவர்
தேமொழி


ஏ.... ஆராரோ....ஆரிரரோ
என் கண்ணே ஆராரோ ஆரிரரோ
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே
சரிஞ்சு படுத்திருக்கும் செண்பகமே கண்ணுறங்கு

ஆ....ஆ ....ஆ...ஆ ...ஆ...ஆ

நிலவே தூங்கும் வேளை, நீயேன் தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேளை, நீயேன் தூங்கவில்லை
ஆத்தங்கரை காற்றினிலே அன்பே கண்ணுறங்கு
ஆத்தங்கரை காற்றினிலே அன்பே கண்ணுறங்கு

காணொளியாக இங்கே காண்க:
http://youtu.be/iZqD_-vydfw
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவர் மலரில் உள்ள ஆக்கங்களுக்கான உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. படித்தவர்கள், மனதைத் தொடுபவற்றைப் பற்றி ஒரு வரி எழுதுங்கள். படைப்பாளிகளுக்கு அதுதான் டானிக்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

82 comments:

  1. இன்றைய மலரில் வெளியாகியிருக்கிற அனைத்தும் மிகவும் சிறப்பானவை. புருனே கவிஞரின் கவிதை மிக நன்றாக இருக்கிறது. தேமொழியின் ஆக்கம், சிங்கப்பூர் ஆலாசியத்தின் கட்டுரை, கே.எம்.ஆரின் "காம்ரேடிசம்" பற்றிய அனுபவ விளக்கம் அனைத்துமே அருமை! அவருக்கு சைக்கிள் பஞ்சர். எனக்கு ஸ்கூட்டரின் சீட் பிளேடால் கிழிப்பு, அதுதான் வித்தியாசம்.'நரி' 'கரடி'யாகியிருக்கிறது. காம்ரேடிசம் பற்றி சொல்ல என்னிடமும் ஏராளமான செய்திகள் உண்டு. கே.எம்.ஆரின் கட்டுரை ஓரளவு அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டதால் நான் அமைதி கொள்கிறேன். அனைவரும் மிக நல்ல தமிழ் நடையில் எழுதுகிறார்கள். வாழ்க!

    ReplyDelete
  2. தனுர்ராசிக்காரரின் காலச்சக்கரக் கவிதை அருமை..

    வாத்தியார் பதிவிட்டிருக்கும் காலச்சக்கரப் படத்தில் சுழற்சியை நிறுத்துவதற்கான கைப்பிடி விசை இல்லாது இருப்பதைக் கவனிக்காமல் அல்லது அப்படி ஒன்று இருந்தால் நல்லா இருக்காதா என்ற ஒரு ஏக்கத்தில் வந்து விழுந்திருக்கும் கவிதை..

    ReplyDelete
  3. நண்பர் ஆலாசியம் அவர்கள் கட்டுரை வழக்கத்தைவிட ஒருபடிக் கூடுதலாக சிறப்புடன் அமைந்திருந்தது..

    தா.பாண்டியன் அவர்களின் வெண்கலக் குரல் கேட்கும் யாரையும் சுண்டி இழுத்து நிற்கவைக்கும்..பாயின்ட் பாயின்ட் டாகப் புட்டுப் புட்டு வைக்கும்,எதிராளியை பேச்சிலேயே தூக்கில் தொங்கவிட்டுவிடும் பிரசங்கசக்தி படைத்தவர்..அவர் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்றே நான் எண்ணிக்கொண்டுள்ளேன்..

    அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் ஏதோ ஒரு வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லாமல் வேகத்துடன் அன்றிலிருந்து கறுப்புக் கோட்டை அணிவதில்லை..கோர்ட்டில் வாதிடுவதில்லை என்று தீர்மானம் எடுத்தார் என்று கேள்விப்பட்டதாக ஞாபகம்..மேலதிகத் தகவல்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்..

    யாரை மக்கள் சேவைக்கு முன்னிறுத்தவேண்டும் என்று தேர்தலுக்கு முன் தீர்மானம் எடுத்து அடையாளம் காட்டாமல் தவறாகிப் போன தங்கள் முடிவை நினைத்து உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையுமே பெரும்பாலும் செய்துகொண்டு பல தடவை அடுத்த ஐந்தாண்டு காலத்தையும் வீணடிக்கும் பல அரசியல் தலைவர்களுக்குள் அடக்கமாகிப் போனவர்..மக்களைப் பாவம் என்பதா?இவர்களைப் பாவம் என்பதா? புரியவில்லை..

    ReplyDelete
  4. தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் எனக்கு பத்தாம் வகுப்புக்கான பள்ளிப் பொதுத்தேர்வில் முதல் மாணவன் என்பதற்காக வழக்கமாக வழங்கப்படும் வெள்ளிப் பதக்கத்தை வழங்கினார்..அப்போதைய அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் தாளாளர் ஒரு தீவிர ஹிந்துத்துவவாதியாக இருந்தார் என்பதையும் அதுகாரணமாக அடிகளாரை அழைத்திருந்தார் என்பதும் நினைவுக்கு வருகிறது..புரியாத சமஸ்கிருதத்திலே மனப்பாடமாக ஏகாத்மதா ஸ்தோத்திரம் சொல்லி சமஸ்கிருதத்திலே கமான்ட் செய்யும் வார்த்தைகளுடன் RSS ஷாக்கா நடத்துகின்ற ஷாக்கா லீடராக தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்ட அனுபவமும் அதையொட்டிய காவிரிக்கரையிலே நடந்த ஒரு கேம்ப்பிலே RSS மாநிலப் பொறுப்பாளராக இருந்த சண்முகநாதன்ஜியைச் சந்தித்து உரையாடியதும் நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  5. சமீபத்து ஆக்கமொன்றிற்கான கமெண்ட்டை நீளமாகிப் போனதால் தனிக் கட்டுரையாகவே சமைத்திருக்கிறார் தேமொழி அவர்கள்..முற்போக்குக் கறிவேப்பிலை மொத்துமல்லி வாசம் தூக்கலாகவே இருக்கிறது..சாப்பிடுபவர்கள் தூக்கிப் போடாமல் சேர்த்துக் கொள்வது உடலுக்கும் நல்லது என்பதே சமைத்தவரின் நோக்கமாகத் தெரிகிறது..

    நான் இன்று வெளிவரக்கூடும் என்று நினைத்து அனுப்பியிருந்த ஒரு நகைச்சுவை ஆக்கம் வெளிவந்திருந்தால் இந்தக் கட்டுரைக்கு மாற்றான விஷயமாக அது இருந்திருக்கும்..அகமதாபாத்தில் நடக்கின்ற ஒரு வயதானோர் சுயம்வர விழாவுக்கு நமது வகுப்பறை சீனியர்கள் சென்றிருந்ததாக

    எனது கதை,கருவாக்கத்தில் வசனகர்த்தாவாக

    தனது ஊர்ப் பெயரிலே குடிகாரகாக விளங்கும் ஒருவரும் இணைவிலே உருவான நல்ல ரசிக்கத்தகுந்த கற்பனை..

    ஆனால் தனிமனிதத் தாக்கம் என்று நினைத்தாரோ என்னவோ ஆசிரியர் அதைத் தவிர்த்துவிட்டார்..(தொடரும்)

    ReplyDelete
  6. தேமொழி அவர்களின் கட்டுரை சிறுகதையா தொடர்கதையா என்றில்லாமல் நடைமுறையில் தனிமனிதசுயவிருப்பத்தையே சார்ந்ததாக அமைந்துவிடுகிறது..

    ஆண்பெண் உறவுநிலை என்பது ஒருவிதக் காந்த ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதே என் கணிப்பு..மனவுடல் ஒருங்கிணைப்பில்(body mind coordination ) இந்தக் கவர்ச்சிக் கணக்கில் வயது வித்தியாசங்களைத் தாண்டி கவருகிற அம்சம் புறவய அழகோ இல்லை அகவய அழகோ இல்லை இரண்டிலும் வேறுபட்ட விகிதங்களில் கலையாகவோ என்று எதுவாகவோ ஒன்றாகவே இருக்கும்..அதைத் தாண்டி நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 3 + 3 = 6 என்ற அடிப்படையில் துணையைப் பறிகொடுத்தோருடனே துணையாகிப் போதல் நலம் என்பதெல்லாம் கணக்கீட்டு முறைகளில் சமப்படுத்தும் ஒரு நோக்குதான்..

    காந்தக் கவர்ச்சி ஈர்ப்பு நிலை இல்லை எனும்போது அந்த உறவிலே உயிர்ப்பு இல்லை..ஜீவனில்லை..ஒரு சக்தியுமே இல்லை..நடைமுறை நிகழ்வுகள் பிரதிபலிப்பவை இதைத்தான்..இது எல்லாக் காதலுக்குமே பொதுவானது.. அதனால்தான் பல சமீபத்திய நிகழ்வுகளில் கள்ளக்காதல்கள் கூட சக்திபெற்று ஜெயித்துவிடுகின்றன..கணக்கீடு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட திருமணங்கள் கூடத் தோல்வியைத் தழுவுவதும் இதனால்தான்..இயல்பாக நடக்கும் திருமணங்களே இந்த வகையில் அடங்கும் என்றால் கடைசியில் சொல்லப்பட்டிருக்கும் முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடனேயே உறவில் இணையும் ஆண்பெண்களின் உறவைச் சமூகம் வேறுபெயர் கொண்டு அழைப்பதில் விசித்திரம் என்ன இருக்கமுடியும்?

    ReplyDelete
  7. KMRK அனுபவக்கதை அருமை..காம்ரேடுகள் என்றில்லாமல் கொள்கை அடிப்படை என்று சிலவிஷயங்களை முன்வைத்து செயல்படும் யாருக்குமே நடைமுறையில் செயலாக்கத்தில் கொள்கைஎன்பது கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதே நிதர்சனம்..

    இதற்கு வலுவாக ஒரு "பிற்போக்குப் பழமொழி: 'இருபது வயதில் நீ பொதுவுடமை பேசாவிட்டால் உனக்கு இதயம் இல்லை.அறுபது வயதில் நீ பொதுவுடமை பேசினால் உனக்கு மூளையில்லை.' " என்று அவர் தொடர்ந்து சொல்லிவரும் பழமொழியை சொல்லலாம்..

    இந்தவகையிலே நான் ஒரு இதயமுள்ளவனாகவே இருந்திருக்கிறேன்..மூளையுள்ளவனாகவும் இருக்கப் போகிறேன்..என்றே என்னைப் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது..

    பூர்ஷ்வாத்தனம் நிறைந்தபார்வையே பலரின் கனவுகளுக்கு விடைகொடுத்திருக்கிறது..
    மனிதாபிமானத்தைக் கலக்கவேண்டியதும் வெறியைத் தவிர்க்க வேண்டியதும்தான் அவர்களுக்கு நடைமுறையில் செய்துகொள்ளவேண்டிய சமரசங்களாக இருக்கும்..

    உரிமைக்குரலை ஓங்கி எழுப்புவது எங்கே?நிர்மாணித்த, தோற்றுவித்த இயக்கிக்கொண்டிருக்கிற முதலாளியிடம்தான் என்பதை உணராது தன் உடல்வளுவில்தான்

    இந்த இயக்கமே நடக்கிறது எனவே சமஉரிமை என்று போர்க்கொடி தூக்குபவர்கள் தன்னால் ஒன்றை நிறுவி செயலாக்கிப் பார்க்கும்போதுதான் நடைமுறை எதார்த்தம் அவர்களுக்கு உறைக்கும்..

    அதுவரை போராளிகள் போராடிக்கொண்டேதான் இருப்பார்கள்..அடக்குமுறையும் தொடர்ந்து ஏவப் பட்டுக்கொண்டுதான் இருக்கும்..

    காலத்தின் கோலம்..

    ReplyDelete
  8. //வேர்களை வெறுக்கும்
    விழுதுகள்
    தாம் வீழ்வதை உணராத
    எருதுகள்
    வழிவழி வந்த
    வாழ்க்கையைத் தொடர
    காலச்சக்ரமே கட்டுப்பாடோடு சுழல்க!
    - தனூர்ராசிக்காரன்,
    Brunei//

    நல்ல ஆக்கம். நன்றி Brunei அவர்களே.

    தா.பாண்டியன் சிறந்த பேச்சாளர். கழக வேற்றுமை இன்றி அனைவரும் அவரை ரசிக்க இது தான் காரணம் என்பது என் எண்ணம்.
    அவருடைய புத்தகம் பற்றிய தகவலுக்கும் நன்றி திரு ஆலாசியம் அவர்களே.

    //உணர்வுகள்
    தொடர்கதையாக ஆகலாம்
    உறவுகள் சிறுகதையாக
    ஆகலாம்.//

    சூழ்நிலை கைதிகளாக உள்ள பெண்கள் தான் இந்த மாதிரி வயதானவர்களின் மறுமணத்திற்கு இரையாகி விடும் அவலம் நேர்கிறது. இப்பொழுதெல்லாம் சற்று நிலைமை பரவாயில்லை என்று தோன்றுகிறது.

    நன்றி தேமொழி அவர்களே.

    //"ஏன்னா? நாம
    ரிலாக்சா இருக்கிற
    மாதிரி நிர்வாகத்திற்கு ஒரு எண்ணம்
    வந்துடும் அதனால்
    எப்பவும் சீரியசாக
    முகத்தை வைத்துக்
    கொள்ளனும்."//
    இப்பத்தான் உண்மை தெரியுது. நன்றி திரு.முத்துராமகிருஷ்ணன்.

    இந்த ஆண்டின் சிறந்த பாடலை youtube-ல் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். நன்றி.

    அன்புள்ள வாத்தியார் ஐயா,
    நான் New admission. வகுப்பறை சீனியர்கள் அசத்துகிறார்கள். பல்சுவை மிகுந்த ஞாயிற்றுக் கிழமைப் பதிவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு வணக்கம்,
    இவர்களையும் அறிந்து கொள்வோம் என்றக் கட்டுரையை வகுப்பறை மாணவர்கள் யாவரும் அறிய பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  10. காலச்சக்கரத்தின் கோலத்தை சாடியும் -அக்
    காலச்சக்கரத்தை கட்டுபடு என்றே தனது
    உள்ளக் குமுறலை தெள்ளத் தெளிவாய்
    இயம்பிய இனிய நண்பர் தனூர் ராசிக் காரருக்கு..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமை... அருமை... அருமை...
    என் அருமை சகோதிரி பாரதி கண்ட புதுமைப்பெண்
    தெள்ளு தமிழ் தேமொழி அவர்களின் ஆக்கம் அருமை...
    புதுமைக் கருத்துக்கள் (ஆம் இவைகள் எங்கும் நீக்கமற அமையும் வரை இவை புதுமையே) பொங்கி வழியும் ஊற்று
    உண்மையில் சொன்னால் உங்கள் பின்னூட்டம் ஒவ்வொன்றும்... உங்களின் சமூகப் பார்வையை தனிமனித உணர்வுகளில் கொள்ளும் அக்கறையை... இந்த சமூகத்தில் கண்மூடித் தனமாக நடக்கும் அவலங்களை அடியோடு பெயர்த்தெடுக்கு துடிக்கும் தங்களின் மேலான முதிர்ந்த அறிவு, சமூகப் பொதுநோக்கு, நல்ல எண்ணத்தை பிரதி பலிக்கிறது... இதை கூறும் போது நானும் பெருமிதம் கொள்கிறேன்... நன்றி.

    ReplyDelete
  12. //// என் மகன் வயது உள்ள அவன் தோழர்களைப் பார்த்தால் அவர்களையும் என் மகனாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், ஆண்களுக்கு ஏனோ அந்த மனப்பாண்மை இல்லை என்பதும் புரிகிறது. அதை வயதானபின் மறுமணம் செய்யும் பொழுது அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். /////

    இந்தக் கருத்தில் தாங்கள் பின்னர் கூறிய வரிகளோடு தொடர்பு கொண்டால் நானும் அப்படியே ஏற்கிறேன்... நல்ல மக்கட்கு.... அந்தந்த வயதில் தனக்கு ஒத்த வயதில் காண்பவரை அதற்கு சமமாக உள்ள உறவை எண்ணிப் பார்க்க வேண்டும்... அப்படி ஒருவன் தன்னை மனம் கவரும் வகையில் தனது இளம் வயதில் கண்டால் அவளை தனது மனைவியாக்கிக் கொள்ள ஏதுகள் இருக்கிறதா அல்லது அப்படிப் பட்டவளை நாம் தனது மனைவியாக்க வேண்டும் என்று யோசிப்பதில் தவறில்லை.. அதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

    மணம் முடிந்த பின்பும்.. அதன் பிறகும் பார்க்கும் பெண்களையெல்லாம்.. அப்படியே பார்க்கும் மனோ பாவம் இருக்குமானால் அது அந்த தனிப்பட்ட ஆணின் குறை மட்டுமே.. எல்லா ஆண்களும் அப்படி இருப்பதில்லை. இதை நான் ஒரு ஆணாக இருந்து சொல்கிறேன். என் மகளை ஒத்த வயதில் இருப்பவர்களையும், என் மனைவி, சகோதரிகள் ஒத்தவர்களையும், என் தாயின் வயது ஒத்தவர்களையும் பார்ப்பவர்களையும்... முறையே எனது மகளாக, சகோதிரியாக, தாயாகவே பார்க்கத் தோன்றுகிறது.. அந்த வகையில் எனக்கு எந்த மனநோயும் இல்லை என்றும் நான் நம்புகிறேன்.

    ஒருவேளை எனது மகளை ஒத்த பெண்ணைப் பார்த்து இவளைப் போன்ற ஒரு பெண் என் மகனுக்கு (அவனுக்கு பத்து வயது தான் ஆகிறது) பெண்ணாக வரலாமே என்று வேண்டுமானால் கொஞ்சம் அதிகமாக சிந்திக்கலாம் .

    ஆகவே நல்ல ஆரோக்கியமான மனநிலைக் கொண்ட எந்த ஆண்மகனும் தாங்கள் கூறிய அந்த அந்தப் பெண்களைப் போலவே இருப்பான் என்பது எனது அனுபவப் பூர்வமான தாழ்மையானக் கருத்து.

    உங்களை ஆக்கத்தை நான் படிக்கும் போது நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் எனது தாயாரிடமும், சகொதிரிகளிடமும் பேசி... ஏன்? என் தாயார் கண்கலங்க வைத்தது ஞாபகம் வருகிறது... அது நான்கு சகொதிரிகளுடன் பிறந்த ஒரு ஆண் பிள்ளை எனக்கு சாத்தியப் படுமா? என்பது வேறு இருந்தும் நான் பெரியவனாக வந்த போது ஏன் வயது ஒத்த விதவைப் பெண்ணைத் தான் மணந்துக் கொள்வேன் என்பது தான் அவ்விசயம்.. தாங்கள் கூறியது போல் மறுமணம் செய்து கொள்ள வழி இல்லாமல் தவிக்கும் இளம் பெண்களைப் பார்த்து இன்றும் வேதனைப் படுவது உண்டு அது சாதாரண மனித உணர்வு தானே.. ஆகவே அந்த விசயத்தில் தங்களின் கருத்தே எனதும்.

    தொள்ளாயிரத்திலே "தி ஹிந்து" நிறுவனர் சுப்ரமணிய ஐயர் தனது மகளுக்கு மறுமணம் செய்து புரட்சி அல்ல புத்தியால் புதிய பாதை அமைத்திருக்கிறார் என்பது வரலாறு...

    தங்களின் ஆக்கம்.. மிக மிக நன்று... வாழ்த்துக்கள் சகோதிரி....

    ReplyDelete
  13. ///அவர் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்றே நான் எண்ணிக்கொண்டுள்ளேன்..///
    இல்லை மைனர் அவர் மதுரைக் காரர்..

    ReplyDelete
  14. --தனூர்ராசிக்காரன், Brunei
    /-வேர்களை வெறுக்கும் விழுதுகள்
    தாம் வீழ்வதை உணராத எருதுகள்-/

    நல்ல கருத்து. அருமையான கவிதை.

    ReplyDelete
  15. தேமொழியின் கட்டுரையில் அவருடைய நல்ல உள்ளம் வெளிப்படுகிறது. ஆனால் திருமணம் (அது எத்தனையாவதாக இருந்தாலும் சரி)என்பது 90% நினைப்பது மாதிரி நடப்பதில்லை. மனைவியைப் பறி கொடுத்த என் நண்பர் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டார். சும்மா இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனம் நொந்து கிடக்கிறார்.

    ReplyDelete
  16. " இவர்களைத் தெரிந்து கொள்வோம்
    ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி"
    எங்கு ஆலாசியம் முடிக்கிறார், எங்கு தா.பா ஆரம்பிக்கிறார் என்பது சட்டென்று புரியவில்லை. தா.பா கருத்துக்களை Italic எழுத்து நடையில் இட்டால் இந்தக் குழப்பம் தீரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. //////// கைகாட்டி said...
    " இவர்களைத் தெரிந்து கொள்வோம்
    ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி"
    எங்கு ஆலாசியம் முடிக்கிறார், எங்கு தா.பா ஆரம்பிக்கிறார் என்பது சட்டென்று புரியவில்லை. தா.பா கருத்துக்களை Italic எழுத்து நடையில் இட்டால் இந்தக் குழப்பம் தீரும் என்று நினைக்கிறேன்.///////

    நானும் இதனால் இரண்டு முறை வாசித்தேன்..

    ReplyDelete
  18. //////////தமிழ் விரும்பி said...
    ///அவர் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்றே நான் எண்ணிக்கொண்டுள்ளேன்..///
    இல்லை மைனர் அவர் மதுரைக் காரர்..//////////

    நன்றி..அவர் பேச்சிலே கொஞ்சம்கூட மதுரை ஸ்லாங் இல்லை..தஞ்சையைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகள் தனக்குரிய ஸ்லாங்கை கொஞ்சம் அதிகமாகவே கொண்டுள்ளன..

    ReplyDelete
  19. "எந்த ஒரு கொள்கை மாற்றம் அடையாமல் தேங்கி நிற்கிறதோ அது அழுகி அழியும். இந்திய பொதுபுத்தி மாற்றங்களை உள் வாங்கி எப்போதும் முன் நகரும் திறன் படைத்தது.இது ஒரு வெளி நாட்டுக்காரர் எழுதிய கொள்கை பிர‌கடனத்தால் அனுமானிக்கப் பட முடியாத‌து."

    மிகவும் அற்புதமான வார்த்தைகள் என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

    அப்படி என்றால் கே எம் ஆர் கே ஐயா அவர்களே ஜன நாயக கொள்கையிலும் நிறைய மாற்றம் வேண்டுமே உடனடியாக.

    இல்லையென்றால் நமது இந்திய ஜன நாயகம் இன்றைய உலகில் போட்டிப்போட்டு வல்லரசாகுமா?

    இதை எங்கு எப்பொழுது யார் மூலமாக இறைவன் செயல் படுத்த போகிறானோ?

    இதுதான் இன்றைய இளைய சமூகத்தின் மிகப்பெரிய மனக்கேள்வி?

    இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க இப்பொழுதே ஒவ்வொரு இளைஞனும் முயல வேண்டும்.

    இதற்க்கு இது போன்ற வலைதளத்தில் அனைவரும் முயல வேண்டும்.

    வாழ்க பாரதம் வாழ்க வையகம்!!!

    இப்படிக்கு பொது நலம் விரும்பி

    பா மதுரைவீரன்

    ReplyDelete
  20. புருனை மன்னரின் கவிதை தவிர மற்ற மூன்று ஆக்கங்களுமே போன இரு பதிவுகளின் நீட்சியகவோ, விளக்கங்களாகவோ விமரசனமோகவோ, எதோ ஒன்றை நோக்கமாகக் கொண்டவை.

    நண்பர் ஹாலாஸ்யம் தமது மத,இலக்கிய, பொருளாதாரக் கொள்கைகளை
    இக் கருத் தோட்டத்தின் மூலம் நன்றாகவே நிறுவியிருக்கிறார்.தவத்திரு குன்ற‌க்குடி அடிகளார் தஞ்சைக்கு ஒவ்வொரு சுதந்திர தினத்து அன்றும் மாலையில் ஒரு சர்வோதயத் தொண்டர், கத்தோலிக்க கிறிஸ்துவப் பாதிரியார், ஒரு முஸ்லிம் அன்பர் சேர்ந்து நடத்தும் ஓர் அமைப்பில் கலந்து கொண்டு
    சிறப்புச் செய்வார். உரை ஆற்றுவார். குழந்தைகளுக்கான போட்டிகளுக்குப் பரிசு அளித்து மகிழ்வார்.
    பல ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கும் பணி செய்துள்ளேன்.
    அப்போது அடிகளாரை ஒரு நாள் முழுதும் அருகிலிருந்து பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறேன்.என் அண்ணன்னும் அவ்வாறே.

    என் அபிப்பிராயத்தில் அடிகளார் முதலில் ஒரு காந்திய வாதி. மற்றவை எல்லாம் அதன் பின்னர்தான்.

    பெரியாரிடம் அவர் நட்புப் பூண்டிருந்தார் என்பதால் அவர் ஒரு பிராமண விரோதி என்று தவறாக அவதானிக்கக் கூடாது.அவர் 'நம்மவர்' என்று யாரும் சொந்தம் கொண்டாடி விட முடியாது.குன்றக்குடியில் இருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் ஏதாவது ஒரு வேலையாவது அளிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல் பட்டார். அப்போது வேதியல் தொடர்புடைய சந்தேகங்களை என் அண்ணனிடம் கேட்டுத் தெளிவார்.அவருக்கு சாதியைப் பற்றிய குறுகிய பார்வை ஏதும் இல்லை என்றே எண்ணுகிறேன்.

    தா.பாண்டியன் நல்லதொரு பேச்சாளர்.கொஞ்சம் சுய சிந்தனையாளர்.சுய சிந்தனை கம்யூனிஸ்டுகளுக்கு உதவாது. சுயத்தை, அகங்காரத்தை அழித்தவனே கம்யூனிஸ்டாக முடியும். பொதுமை/பனமை என்ற பலிபீடத்தில் தனிமை அல்ல‌து ஒருமை தலையை நிவேதனமாகக் கொடுத்தால் தான்
    கம்யூனிசம் நிற்கும். தா பா சில ஆண்டுகள் கட்சியை விட்டு வெளியேறினார்.இப்போது மீண்டும் இணைந்துள்ளார்.ஒரு சில நாணயமான அரசியல்வாதிகளில் ஒருவர்.

    பெரியார் அடிகளாரை 'நம்ம ஆளூ ஒருவர் நல்ல சாமியாரா இருக்காருன்னா நாமதான மரியாத காட்டணும்?பார்ப்பான் அவங்க‌ ஆளை பெரியவா பெரியவான்னு எப்படி தூக்கிட்டு ஆடுறான்!"என்று பேசிய கூட்டத்தில் நானும் நின்று பெரியார் பேச்சைக் கேட்டேன்.

    நண்பர் ஹாலாஸ்யத்தின் எழுத்தில் நல்ல மெருகு ஏறியுள்ளது.இக்கட்டுரைக்கு தா.பாண்டியனின் ஆக்கமே பிரதானம்.ஹாலாஸ்யத்தின் முன்னுரை அழகாயுள்ளது.பாராட்டுக்கள்.

    தேமொழியின் சிந்தனைகள், அய்யாவின் முதியவர் தன் வயதுக்கு ஒவ்வாத பெண்ணை மணமுடித்த செய்தியை ஒட்டி எழுந்தவை.அதில் நான் கொடுத்த் கரு என்று போட்டதால் த‌ஞ்சாவூர் பெரியவர், அவரைத் தொடர்ந்து பலரும்
    கண்டிக்கும் தொனியில் எழுதியிருந்தனர்.அங்கேயே நான் அந்த உண்மை நிகழ்ச்சியின் சரியான கோணத்தைக் கொடுத்து இருந்தேன். ஐயா அது நிகழ்ந்தபடியே சொல்லாமல் சிறிது கதைக்காக மாற்றியதால் சில எதிர் கருத்துக்கள் தோன்றின‌.

    எப்போதும் அந்த மாதிரி நிகழ்ச்சிகளே நடந்து கொண்டே இருப்பதில்லை.அது வித்தியாசமானது என்பதால் தான் செய்தி ஆகிறது. பெரியாரின் பொருந்தாத் திருமணம் தான் தமிழகத்துக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியைக் கொடுத்தது.
    இதெல்லாம் ஃப்ரீக்ஸ் வகையை சார்ந்தவை.நடக்கும் போது நமது பொது விதிகள், நியாயங்கள் என்ற சட்டத்துக்குள் கொண்டு வரக் கூடாது.

    திவச மந்திரங்களில் ஒரு மந்திரம், 'இந்த எள்ளும் தண்ணீரும் எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கு அல்ல, எனக்குத் தந்தையாகவே இருந்து என்னுடனேயே வாழ்ந்து எனக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்து, நல்வழிப்படுத்தி வளர்த்தாரே அந்த தந்தைக்காக...'என்று உள்ளதாம்.தேமொழி சொன்ன அந்த குழந்தை மாற்றம் காரணமாகவோ, அல்லது தத்து காரணமாகவோ, அல்லது சொல்ல முடியாத சோகங்கள், அசிங்கங்கள் காரணாமாகவோ பிறந்து வளர்ந்த
    குழந்தைகள் இருக்கலாம்.அவர்களுக்கு பயலாஜிகல் தந்தை அல்ல தந்தை.
    வளர்த்தவரே தந்தை. தந்தை என்ற பொருப்பினை, கடமையைச் செய்தவரே தந்தை.பயலாஜிகல்,நர்சரிங் தந்தை ஒருவராகவே இருப்பது தான் அதிகம் சில சமயம் அவர்கள் வேறு வேறு ஆக இருப்பதும் உண்டு.

    Motherhood is certain.Fatherhood is only a possibility/probabilty
    சத்ய‌காம ஜாபாலி கதையினைப் புராணத்தில் படிக்கவும்.

    தேமொழியின் நடை நன்கு உள்ளது.பாராட்டுக்கள்.

    புருனை அரசரின் கவிதையும் ,காணொளியும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  21. எனது கவிதையை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா.

    கவிதைக்கு ஏற்றாற்போல்தாங்கள் வெளியிட்டிற்கும் படம் அந்த கவிதையை தூக்கி நிறுத்துகிறது. படத்திற்கு கவிதையா கவிதைக்கு படமா என்று என்ன தோன்றுகிறது . பாம்பு அது தன்னையே விழுங்குவதை அறியாமல் தன் வாலை விழுங்குகிறது. நவீன உலகத்தில் நாமும் நம்மை அழித்துகொள்வதை தெரியாமல் அழிந்துகொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கிறோம்.

    ஆலாசியம் அவர்களே "தாடிவைத்தவன் திவீரவாதியுமல்ல காவிகட்டியவன் களவானியுமல்ல கள்ளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கட்டும் வேஷம்" நூற்றுக்கு நூறு சரியாக சொன்னிர்கள். ஆடை பாதி ஆள்பாதி என்று ஆகி விட்ட உலகில் ஆடையையும் அணிகலன்களையும் வைத்து மனிதர்களை எடை போட கூடாது மிக நல்ல வரிகள் அவை..

    ReplyDelete
  22. மறைந்த கருப்பையா மூப்பனாரிடம் ஒரு வயசாளி உதவியாளர் இருந்தார்.மூப்பனாருடன் எவ்வளவு பெரியவர்கள் வந்து பேசிக்கொண்டு இருந்தாலும் கவலைப்படாமல் மூப்பனாரை அறையை சுத்தமாக வைக்காமல் குப்பை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று 'ஓபனா'கக்க் கண்டிப்பாராம். மூப்பானார் அவருடைய அன்பைப் புரிந்தவாராகையால் சிரித்துக்கொண்டே இருப்பாராம். விசிடர்களிடம், "என்னைதான் விரட்டுவாரு. வீட்டுல பொண்டாடிக்கிட்ட அடி வாங்கறது தெரியாதாக்கும்" என்று மூப்பனார் சிரித்துக்கொண்டே கூறுவார்.

    "ஆமா!அது என் குழந்தை. குழந்தை அடிக்கிறதில்லையா அப்படிதான்!'என்று அந்த முதியவர் சொல்வாராம்.ஆம்! சிறு குழந்தையில் இருந்து வள‌ர்த்து, அது அந்த முதியவரை விட்டுப் போகாமல் அவரையே விரும்பித் திருமணம் செய்ததாம். யாரும் அப் பெண்ணை கட்டாயப் படுத்தவில்லை.

    ஒரு முதியோர் இல்ல விளம்பரம் வருகிறது:"சுத்தமான பழக்க வழக்கங்கள் உள்ள(க்ளீன் ஹேபிட்ஸ்) வசதியுள்ள, அமைதி விரும்பும் முதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்"அந்த க்ளீன் ஹேபிட்ஸ்க்கு என்ன பொருள்?

    வாழ்க்கை நாம் பார்க்கும் ஒரு கோணத்தில் மட்டும் இல்லை. இவற்றை நாம் கடந்து போக வேண்டும் என்பதே என் பக்கத்து வாதம்.நான் பொருந்தாத் திருமணங்களை ஆதரிக்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
  23. //புரியாத சமஸ்கிருதத்திலே மனப்பாடமாக ஏகாத்மதா ஸ்தோத்திரம் சொல்லி சமஸ்கிருதத்திலே கமான்ட் செய்யும் வார்த்தைகளுடன் RSS ஷாக்கா நடத்துகின்ற ஷாக்கா லீடராக தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்ட அனுபவமும் அதையொட்டிய காவிரிக்கரையிலே நடந்த ஒரு கேம்ப்பிலே RSS மாநிலப் பொறுப்பாளராக இருந்த சண்முகநாதன்ஜியைச் சந்தித்து உரையாடியதும் நினைவுக்கு வருகிறது..//

    இது ஒரு செய்திதான்.ஆனால் ஆச்சரியமான செய்தி அல்ல.ஒரு சமயத்தில்
    தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் ஆர் எஸ் எஸ் முழு நேர, குடும்பமற்ற ஊழியர்கள்(கார்யவாஹ்) இருந்தனர். அவர்களுடைய செயலூக்கத்தில் எல்லா சிறுவர்களும் ஒரு ஷாகாவுக்காவது போயிருப்ப‌ர்.

    அவர்களுடைய சேவை பாராட்டுக்குரியது.சுனாமியின் போது பார்த்தோம்.இப்போது திருப்பூரில் பார்த்தோம்.காந்திஜியே ஒருமுறை அவர்களுடைய முகாமுக்குப் போய்ப் பேசியிருக்கிறார்.

    ஒரு திராவிடக்கட்சி நண்பர் வீட்டின் அருகில் இருந்த புறம்போக்கில் ஒரு திட்டி மோடு வந்துவிட்டது. ஒரு முஸ்லிம் வந்து தொழுகை நடத்துவதையும் பார்த்தார்.என்னிடம் வந்து, "அது முஸ்லிம் புதைகாடாகவோ,தர்காவாகவோ
    மாறும் வாய்ப்புள்ளது. யாரவது உங்களுக்குத் தெரிந்த ஆர் ஆர் எஸ் காரரின் காதில் போடுங்கள்" என்று காதோடு சொன்னார்.

    எனக்கு யாரையும் தெரியாதே என்று பொய் சொல்லி எஸ்கேப்.
    பொய்மையும் வாய்மை உடைத்த .....

    ReplyDelete
  24. தேமொழியின் ஆக்கத்தில் அவரின் மனம் தெரிந்தது.வியாபார நோக்கில் உள்ள திருமணம் அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் தான். சாதரணமாகவே ஆரம்பித்து சரசரவென சரவெடியாக வெடித்து இப்படிப்பட்ட உறவுகள் தொடர்கதையாகாமல் சிறுகதையாக வேண்டும் என்று முடித்து இருந்திர்கள் , எனக்கென்னவோ அவை போன்றவை சிறுகதையாக அல்ல சிதைந்தே போகவேண்டும். ஆனால் அணைத்து ஆண்களையும் நான் அவ்வாறாக நினைக்கவில்லை . இன்றும் மனைவியை இழந்த சில ஆண்கள் தன் பிள்ளைகளுக்காக திருமணமே செய்யாமல் இருக்கிறார்கள்.

    இளம் பெண்களை கண்களால் மேயும் வயதானவர்களும் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் தன் மகள் வயது ஒத்த பெண்களை தங்கள் மகள் போல் நினைபவர்களும் இருக்கிறார்கள்.ஹெர்னிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த என் தந்தை அங்குள்ள செவிலியர்கள் தன் உடம்பை தொட்டு ஊசி போடுவது பிடிக்காமல் என் மகள் மருமகள் வயதுடைய பெண்கள் என் உடம்பை பிடிப்பது பிடிக்கவில்லை என்று கூறி மருந்து மாத்திரையிலேயே காலம் தள்ளி இறைவடி சேர்ந்தார். ஆனால் நீங்கள் சொல்வதுபோலும் நடக்கத்தான் செய்கிறது.வயோதிக திருமணம் வியாபார நோக்காககூடாது என்கிற உங்களின் மன உணர்வை மதிக்கிறேன் .

    ReplyDelete
  25. என் ஆக்கத்தையும் வெளியிட்ட மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சிறுகதை பதிவிற்கு பின்னூட்டம் இட்டுவிட்டு கையோடு எழுதி அனுப்பிவிட்ட கட்டுரையது. இரண்டு நாட்கள் கழித்து எதேச்சையாக மீண்டும் பதிவிற்கு திரும்பிய பொழுது சக மாணவர்கள் சிலர் என் கருத்திற்கிணைந்த பின்னூட்டம் எழுதியிருப்பதைக் கண்டேன். குறிப்பாக சகோதரர் ஆலாசியமும் (தன் குழந்தைகள் வயதொத்தவர்களை நோக்கும் பண்பு), தஞ்சாவூரார் ஐயா அவர்களும் (சொத்தை எழுதி வைப்பது) தெரிவித்த கருத்துகள்; அவர்களது சிந்தனை அலை வரிசையிலேயே நானும் எண்ணியிருப்பதை உணர்ந்தேன். அதே கருத்துக்கள் பதிவான பின்னும், என் கருத்திற்கும் மதிப்பளித்து அவற்றை நீக்காமல் என் ஆக்கத்தை வெளியிட்டது சந்தேகமற உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. நன்றி, நன்றி.

    ReplyDelete
  26. ///வழிவழி வந்த வாழ்க்கையைத் தொடர
    காலச்சக்ரமே கட்டுப்பாடோடு சுழல்க!///

    நமது தனுர் ராசிக்காரர் யாராயிருந்தாலும் கட்டளையிட்டு விடுகிறார், முன்பு மழைக்கு எப்படி பெய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி ஆணை இட்டார், இப்பொழுது காலச் சக்கரத்திற்கே கட்டளை. இவருடையது புதிய அணுகுமுறைகள். நல்ல கவிதைகளை தொடர்ந்து அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.

    ReplyDelete
  27. ///அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மேதைகளின் பெயர்களுக்கு இடையே எனது பெயரும் இருந்தது///

    சகோதரர் ஆலாசியம் அவர்களின் "இவர்களைத் தெரிந்து கொள்வோம்" பதிவின் மூலம் நான் அவரைப் பற்றி அறிந்து கொண்டதே அதிகம்.
    சகோதரரே, பெரிய இலக்கியவாதிகள் என நான் செய்திதாள்களின் வழியே அறிந்து கொண்ட பெரும் புள்ளிகளுடன் கைகோர்த்து இலக்கிய சொற்பொழிவு செய்திருக்கிறீர்கள். யம்மாடியோவ், இவ்வளவு பெரிய ஆளா நீங்க, உங்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு போங்க.

    ReplyDelete
  28. இன்று நடந்திருக்கும் ஒரு விஷயம் என் கண்ணில் பட்டது..ஆலாசியம் கம்யூனிஸ்ட் தலைவரின் படைப்பை வெளியிட்டிருக்க,
    கம்யுனிசம் எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டை KMRK தன் படைப்பில் சொல்லத்தலைப்பட்டிருந்தார்..எதிர்பாராமல் இருவரும் அனுப்பி வைத்திருந்த ஆக்கங்கள் கம்யூனிஸ்ட் சம்பந்தப் பட்டவை..

    ReplyDelete
  29. ///இந்த சோஷியல் பாய்காட் தானே அந்தக் கால சேரிகளை உருவாக்கியிருக்க வேண்டும்? மார்க்ஸீயமும் ஒரு வகை மதமா?///

    மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொள்ளாத கொள்கைகள் (மதக் கோட்பாடுகள் கூட..உயிருடன் இல்லாத ஒருவருக்கு கொடுக்கும் திதியின் சமயம் உயிருடன் இருக்கும் ஏழையின் பசியை புறக்கணிப்பது என்பதொத்த வழக்கங்கள்) எப்பொழுது கொள்கைகள் கொள்கையின் அடிப்படை சாரம்சத்தை விட்டு விலகி அடக்குமுறை போக்கினை கைபிடிக்கிறதோ, அப்பொழுதே அது மக்களின் மனதில் அந்நியப்பட்டு விடுகிறது. KMRK ஐயா இதை எளிமையாக வாழ்வு நிகழ்சிகள் மூலம் புரிய வைத்துவிட்டார், நன்றி.

    ReplyDelete
  30. என் கட்டுரையை பொறுமையுடன் படித்தவர்களுக்கும், அதற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்....

    ///Thanjavooraan said... தேமொழியின் ஆக்கம், சிங்கப்பூர் ஆலாசியத்தின் கட்டுரை, கே.எம்.ஆரின் "காம்ரேடிசம்" பற்றிய அனுபவ விளக்கம் அனைத்துமே அருமை!///

    நன்றி ஐயா.
    _____________
    ///minorwall said...
    நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 3 + 3 = 6 என்ற அடிப்படையில் துணையைப் பறிகொடுத்தோருடனே துணையாகிப் போதல் நலம் என்பதெல்லாம் கணக்கீட்டு முறைகளில் சமப்படுத்தும் ஒரு நோக்குதான்..///

    ஹூம்..."கணக்கு பார்த்து காதல் வந்தது, கச்சிதமா ஜோடி சேர்த்தது. ஒன்னும் ஒன்னும் இரண்டு, ரெண்டும் ஒன்னும் மூணு, மனசு போலவே வாழ்க்கை அமைந்தது" ...அப்படின்னு ஒரு பழைய பாட்டு இருக்கே அது மாதிரி நடக்க கூடாதான்னு ஒரு நப்பாசைதான்; மாண்புமிகு மைனர்வாள், உங்கள் கருத்திற்கு நன்றி.
    _____________
    ///Sathish K said...
    சூழ்நிலை கைதிகளாக உள்ள பெண்கள் தான் இந்த மாதிரி வயதானவர்களின் மறுமணத்திற்கு இரையாகி விடும் அவலம் நேர்கிறது. இப்பொழுதெல்லாம் சற்று நிலைமை பரவாயில்லை என்று தோன்றுகிறது.///

    உங்கள் கருத்திற்கு நன்றி சதீஷ்
    _____________
    ///தமிழ் விரும்பி said...
    தெள்ளு தமிழ் தேமொழி அவர்களின் ஆக்கம் அருமை.........
    .....தங்களின் ஆக்கம்.. மிக மிக நன்று... வாழ்த்துக்கள் சகோதிரி.... ///

    நன்றி சகோதரரே, இரண்டு பின்னூட்ட கருத்துகள் எழுதி பெருமை படுத்திவிட்டீர்கள், நன்றி
    _____________
    ///Duraisamy N said...
    ஆனால் திருமணம் (அது எத்தனையாவதாக இருந்தாலும் சரி)என்பது 90% நினைப்பது மாதிரி நடப்பதில்லை. ///

    ஆமாம், இதுதான் மாறாத உண்மை, காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருந்தாலும் எதிர்பாராத திருப்பங்களை வாழ்கையில் கொடுத்துவிடும், கருத்திற்கு நன்றி நண்பரே.
    _____________
    ///kmr.krishnan said...
    தேமொழியின் நடை நன்கு உள்ளது.பாராட்டுக்கள்.////

    பாராட்டுக்கு நன்றி ஐயா.
    _____________
    ///thanusu said... இன்றும் மனைவியை இழந்த சில ஆண்கள் தன் பிள்ளைகளுக்காக திருமணமே செய்யாமல் இருக்கிறார்கள்.///

    உண்மைதான் நண்பரே. என் தாய் வழி தாத்தா அது போன்று சிறு வயதில் (40 வயதிற்குள்) மனைவியை இழந்தும், ஐந்து சிறு குழந்தைகளுடன், பெரிய செல்வந்தராக இருந்தும், தன் குழந்தைகள் நலன் எண்ணி மறு மணம் செய்யாமல் வாழ்ந்ததாக என் அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் ஊரில் பல பெரியவர்கள் அவருடைய செல்வாக்கை அறிந்து தங்கள் பெண்களை இரண்டாம் தாரமாக தரவும் வலிய முன்வந்ததாக கேள்விப் பட்டுள்ளேன். உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
    _____________

    ReplyDelete
  31. இன்றைய மாணவர் மலரில் அனைத்து ஆக்கங்களும் அருமையாக் இருந்த‌து.
    தனூர் ராசிக்காரன் அவர்களின் கவிதை இன்றைய சமூகத்தின் அவலநிலையை ஆதங்கத்துடன் "அழகான" கவிதையால் சாடுவது அருமை!

    //சைக்கிளை ஓட்டிக் கொண்டு திடீரென்று வது சேர்ந்தார் அடிகளார். வரும் வழியில் கார் பழுதுபட்டதால், வாடகைச் சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டு வந்ததாகச் சொன்னார்//
    குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் வாழ்க்கையை படித்தே இன்று இருக்கும் பல போலிகளை இனங்காணலாம்!
    தேமொழி அவர்களின் கட்டுரை மிகவும் உணர்வுபூர்வமாகயிருந்தது.

    ReplyDelete
  32. \\\\\\\\\\\\\\
    ///தேமொழி said...
    minorwall said...
    நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 3 + 3 = 6 என்ற அடிப்படையில் துணையைப் பறிகொடுத்தோருடனே துணையாகிப் போதல் நலம் என்பதெல்லாம் கணக்கீட்டு முறைகளில் சமப்படுத்தும் ஒரு நோக்குதான்..///

    ஹூம்..."கணக்கு பார்த்து காதல் வந்தது, கச்சிதமா ஜோடி சேர்த்தது. ஒன்னும் ஒன்னும் இரண்டு, ரெண்டும் ஒன்னும் மூணு, மனசு போலவே வாழ்க்கை அமைந்தது" ...அப்படின்னு ஒரு பழைய பாட்டு இருக்கே அது மாதிரி நடக்க கூடாதான்னு ஒரு நப்பாசைதான்; மாண்புமிகு மைனர்வாள், உங்கள் கருத்திற்கு நன்றி.///////

    எப்டி? எப்டி?
    நினைக்கிறதெல்லாம் அப்புடியே நடந்துட்டா அப்புறம் நாம ரெண்டுபேரும் மீட் பண்ணியிருக்கவே முடியாதுல்லே?
    என்ன?ஒண்ணுமே புரியலே? நடக்காததுக்கு காரணம் தேடித்தான் அஸ்ட்ராலஜி சைட்லே நெட்டுலே சந்திச்சுருக்கோம்..
    அதத்தான் சொன்னேன்..
    ஒருத்தரா..ரெண்டுபேரா...எத்தினி பேரு பழக்கம்..எவ்ளோ ரிலாக்ஸ்ஸா ப்ளாகிங் என்ட்டர்டெயின் பண்ணுது..
    அதுனாலே ரொம்பநாளா எதிர்பார்த்து இருந்து இனிமே லேட்டஸ்ட்டா நடக்கப் போகிற விஷயங்களுக்கும்(லேட்டா நடக்கிறதத்தான் இப்புடி சொன்னேன்)நாம தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்.

    ReplyDelete
  33. ///தேமொழி said...
    ///அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மேதைகளின் பெயர்களுக்கு இடையே எனது பெயரும் இருந்தது///

    சகோதரர் ஆலாசியம் அவர்களின் "இவர்களைத் தெரிந்து கொள்வோம்" பதிவின் மூலம் நான் அவரைப் பற்றி அறிந்து கொண்டதே அதிகம்.
    சகோதரரே, பெரிய இலக்கியவாதிகள் என நான் செய்திதாள்களின் வழியே அறிந்து கொண்ட பெரும் புள்ளிகளுடன் கைகோர்த்து இலக்கிய சொற்பொழிவு செய்திருக்கிறீர்கள். யம்மாடியோவ், இவ்வளவு பெரிய ஆளா நீங்க, உங்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு போங்க.////



    முதலில் பாராட்டியதற்கு நன்றிகள் சகோதிரி...

    அதோடு, அப்போது நான் சின்னப் பையன் தான்... வெறும் பதினைத்து வயது தான்... ஆகவே வீட்டிற்கு வந்திருக்கும் பெரிய மனிதர்களோடு எப்படி சிறு குழந்தைகள் அவர்களின் அருகே சென்று அமருமோ.. அல்லது சமயத்தில் வாய்ப்பு இருந்தால் அவர்கள் மடியில் அமர்ந்துக் கொள்ளுமோ அப்படியாகவும் சொல்லலாம்... இருந்தும் சிறுவயதிலிருந்தே இலக்கிய வாதிகளின் பக்கம் கவனம் இருந்தது என்பதை மட்டும் அடக்கத்துடன் தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்... தங்களின் அன்பிற்கும், பாராட்டிற்கும் மீண்டும் நன்றிகள் சகோதிரி...



    இன்னொரு உண்மையையும் நான் இங்கே கூறவேண்டும்... வகுப்பறையில் வரும் பின்னூட்டங்களில் என்னை அதிகம் சற்று புருவம் உயர்த்தி படிக்கச் செய்வது உங்களின் பின்னூட்டம் என்பதே அது... ஏன்? முதலில் நான் இவர் புனைப் பெயரில் வரும் ஒரு ஆண்மகனோ? என்றோக் கூட எண்ணியதுண்டு... பெண்ணால் முடியாது என்பதல்ல எனது கருத்தின் நோக்கம் (அப்படி என்றால் அவர் தேமொழி என்றப் பெண் என்பது தானே உண்மை!!!) எதற்காகச் சொல்கிறேன் என்றால் உங்களின் எழுத்தில், கருத்தில், ஆழ்ந்த சிந்தனை சுழல்கிறது அதில் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அச்சக்கரத்தின் அச்சு மனித நேயமும் உலகின் எதார்த்தப் போக்குமே...



    ஆகவே, தாங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று நான் சக மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் வேண்டிக் கொள்கிறேன்... உண்மையில் ஏதோ பாராட்டக் கூறுவதாக எண்ண வேண்டாம்... உண்மையில் வெளிப்படையான எனது கருத்து... தொடர்ந்து எழுங்கள். உங்களால் இன்னும் நிறைய நல்ல பலவைகளை தரமுடியும்... ஒருவேளை முப்பே செய்திருந்தால் அவைகளையும் வெளியிடுங்கள்... நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  34. என்னுடைய முன்னுரையையும், தா.பா. அவர்களின் கட்டுரையையும்.... குன்றக்குடி அடிகாளாரின் மேன்மையையும் பார்த்து பாராட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  35. KMRK அவர்களின் ஆக்கம் கம்யூனிச கொள்கையின் மீது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அழகாக விவரித்திருக்கின்றார்.ஐயா,உண்மையில் இன்றைய சூழலில் கொள்கையில்லாதவர்களே கட்சி நடத்துகிறார்கள்;தேசபற்று இல்லாதவர்களே நாடு ஆள்கிறார்கள்.இது நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்க்கும் பொருந்தும்!
    தேமொழி அவர்களின் காணொளி "தூள்"!

    ReplyDelete
  36. kmrk அவர்களே உங்களின் ஆரம்பகால வாழ்கையோடு கலந்த கம்யுனிசமும் அதன் விளக்கமும் நன்றாகவே இருந்தது. இன்றைய காலகட்டத்தில் கம்யுனிசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் அது விவாதத்திற்கு உரியதுதான்.அன்று இருந்த கம்யுனிசம் இன்று இல்லை.இன்றைய நிலை கையூட்டு கொடுக்கவும் செய்கிறார்கள் கையூட்டு வாங்கவும் செய்கிறார்கள் ஆதாரம் சமிபத்திய தேர்தலும் அதற்கு முன் நடந்த சில பாராளுமன்ற காட்சிகளும்.இன்றைய இளைங்கர்கள் கம்யுனிசத்தை விரும்புவதில்லை. காரணம் பலவகையான படிப்புகள். படித்த படிப்புக்கு அவர்கள் வேலைதேடி பல இடங்களுக்கும் செல்கிறார்கள் அங்கு பலமொழி பேசுபவர்கள் பலமாநில அல்லது பலநாட்டவர்களுடன் சேருகிறார்கள் அங்கே அந்தகூட்டத்தில் சேர்ந்து கோவிந்தா போட இவர்கள் தயாரில்லை.தன் தனி தன்மையை காட்டி மேலே வர பார்கிறான் சகஊழியரை மிஞ்சி மேலே வர முயற்சிக்கும் போது சமம் என்ற கம்யுனிசம் காணாமல் போய் விடுகிறது. படித்த அனைவரும் தேடுவது பன்னாட்டு நிருவனங்களைதான் பன்னாட்டு நிறுவனத்தில் இவன் கம்யுனிசம் பேசினால் பெட்டி படுக்கையை கையில் கொடுத்து அனுப்பி விடுவார்கள். கொள்கை தான் முக்கியம் என்றால் குடிசைக்கு வரவேண்டியதுதான் . இது நடைமுறை உண்மை/பணம் மட்டுமே வாழ்கை இல்லை என்று சொல்பவர்களுக்கு வேறு விளக்கங்கள் இருக்கிறது. இந்திய சுதந்திர கால கட்டத்திற்கு பொதுவுடைமை பொருத்தமாக இருந்து இருக்கும் இன்றைய தேதிக்கு நடைமுறைக்கு சற்றே சிரமம் தான். இன்று நம் வீடுகளில் கூட பொதுவுடைமை இல்லை அண்ணனை விட தம்பி அதிகம் சம்பாதித்தால் முதலில் தனி குடித்தனம் போவது தம்பி தான்.தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி ஏன் கம்யுனிச தாய்நாட்டிலும் சரி பொறுத்து பொறுத்து பார்த்த பொதுவுடமை சிதைந்துவிட்டது இதில் நீங்கள் விலகியதும் ஆச்சிரியமில்லை. ஆனால் பொதுவுடைமை கடை பிடிக்கவேண்டிய ஒன்று .அது வளர்க்க பட வேண்டும்.

    அதிகாரிகளும் மூத்த ஊழியர்களும் தனக்கு கிழே பனி புரிபவர்களிடம் சிரித்து பேசாமல் சீரியசாக இருப்பதும்.ஒரு வகையான புரிந்துணர்வுதான்.நானே அப்படிதான் இருக்கிறேன் எனக்கு கிழே பனிபுரிபவர்களிடம் சற்றே சீரியசாகவே இருப்பேன் அந்நிய மண்ணில் அந்நிய நிறுவனத்தில் இப்படி இருந்தால் தான் என்வண்டிஓடும். தட்டி கொடுத்து வேலை வாங்குவது சிரித்து பேசி வேலை வாங்குவது என்பதெல்லாம் சொந்த வியாபாரத்திலும் சொந்த தொழிலிலும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.முகத்தை மறைத்தே பனி செய்ய வேண்டி இருக்கிறது உங்களைப்போலவே நானும் வெட்கபடுகிறேன்.இதைபோல் இன்னும் எழுதுங்கள் எனக்கு மிகவும் பிடித்த உங்களுக்கு இஷ்டமான M.G.R மற்றும் M.R ராதா(மைனர் சார் அவர்களை அல்ல ) இவர்களை பற்றி எல்லாம் எழுதுங்கள்.

    ReplyDelete
  37. //R.Srishobana said...
    KMRK அவர்களின் ஆக்கம் கம்யூனிச கொள்கையின் மீது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அழகாக விவரித்திருக்கின்றார்//

    நன்றி ஸ்ரீஷோபனா அவர்களே

    ReplyDelete
  38. // thanusu said...
    kmrk அவர்களே உங்களின் ஆரம்பகால வாழ்கையோடு கலந்த கம்யுனிசமும் அதன் விளக்கமும் நன்றாகவே இருந்தது.//

    நன்றி தனுசு அவர்களே!

    ReplyDelete
  39. //கே.எம்.ஆரின் "காம்ரேடிசம்" பற்றிய அனுபவ விளக்கம் அனைத்துமே அருமை! //
    ந்ன்றி தஞ்சாவூர் பெரியவர் அவர்களே!

    ReplyDelete
  40. //எனது கதை,கருவாக்கத்தில் வசனகர்த்தாவாக தனது ஊர்ப் பெயரிலே குடிகாரகாக விளங்கும் ஒருவரும் இணைவிலே உருவான நல்ல ரசிக்கத்தகுந்த கற்பனை..//

    மைனர்வாள்!

    லால்=சிவப்பு. குடி(gudi)=கோவில்.

    கோவிலைக் 'குடி'யாக்கிவிட்டீரே!

    ReplyDelete
  41. /KMRK அனுபவக்கதை அருமை..காம்ரேடுகள் என்றில்லாமல் கொள்கை அடிப்படை என்று சிலவிஷயங்களை முன்வைத்து செயல்படும் யாருக்குமே நடைமுறையில் செயலாக்கத்தில் கொள்கைஎன்பது கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதே நிதர்சனம்..//

    பாராட்டுக்களுக்கு நன்றி மைனர்வாள்!

    ReplyDelete
  42. ஞாயிறு மலருக்கு வந்த எல்லா பின்னூட்டங்களையும் ஊன்றிப் படித்தேன். சில கருத்துக்களுக்கு மறுமொழி சொல்ல விருப்பம். நீண்ட மறுமொழி அல்ல. குறிப்பாக ஜப்பான் மைனருக்கு:‍ தா.பா. ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்த காலத்தில் கல்லூரி மாணவர் அவைத் தலைவராக இருந்தவர். அவர் குடும்பத்தார் ஆசிரியர்கள். அண்ணன் தா.செல்லப்பா ஒரு கல்லூரி முதல்வர். அவர் கல்லூரியில் பாஸ் மார்க்குக்கு மேல் நாற்பது வரை மார்க் வாங்கியவர்களுக்கு முன்னுரிமை. அப்படிப்பட்டவர்களை சிறந்த மாணவர்களாக ஆக்குவது அவரது நோக்கம். தா.பா. ஒரு சிறந்த மனிதாபிமானி. எந்தவொரு சிக்கலான பிரச்சினையையும் எடுத்து அவர் விவாதிக்கும் அழகு, அதற்கு அவர் கூறும் தீர்வு வேறு யாராலும் அத்தனை திறமையாகக் கையாள முடியாது. தொழிற்சங்க முறையில் அவரோடு எனக்குத் தொடர்பு இருந்தது. எங்கள் பாரதி இயக்கம் வெள்ளிவிழா மாநாட்டுக்கு அவரை அழைத்துப் பேச வைத்தோம். கார் அனுப்பி அழைத்து வருகிறோம் என்று சொன்னோம். தேவையில்லை நான் பேருந்தில் வருகிறேன் என்று வந்து சேர்ந்தார். பேச்சாளர்கள் பணம் வாங்கிக் கொள்வார்கள். இவர் பேசி முடித்தவுடன் அரியலூர் சென்று இரவு ரயிலைப் பிடிக்கவேண்டுமென்று அவசரமாகக் கிளம்பினார். இவருக்கும் பணம் கொடுக்க ஓடிச்சென்று நீட்டிய போது அவர் சொன்னார், "எந்த கம்யூனிஸ்ட் பணம் வாங்கிக்கொண்டு பேச வருகிறான்" என்று. நல்ல பண்பாளர்.

    ReplyDelete
  43. வாத்தியார் ஐயா!

    எல்லா புண்ணியமும் தங்களை தான் சேரும்.

    ReplyDelete
  44. தனூராரின் காலச்சக்கரத்தில்
    செத்துக்கொண்டிருக்கும் மனிதாபிமானமும்,
    ஆலாசியத்தின் அலசலில்
    "காந்தீய நெறிகளில், குறள் அமுதம் கலந்த மார்க்சீயமே மனிதகுலச் சிக்கலைத் தீர்க்கும்"
    என்ற குன்றகுடியரின் ஆன்மீக தீர்ப்பும்
    தேமொழியின்
    உணர்வுகளுக்கு வணக்கங்கள்!
    கே எம் ஆர் கேயின்
    சங்க அசிங்கங்கள் ....
    ஆகா ! ஆன்மீகம், மனிதாபிமானம், மர்க்ஸ்சியம் எல்லாம் ஒரே நாளில்
    திகட்டுகிறது !

    ReplyDelete
  45. //இன்று நடந்திருக்கும் ஒரு விஷயம் என் கண்ணில் பட்டது..ஆலாசியம் கம்யூனிஸ்ட் தலைவரின் படைப்பை வெளியிட்டிருக்க,
    கம்யுனிசம் எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டை KMRK தன் படைப்பில் சொல்லத்தலைப்பட்டிருந்தார்..எதிர்பாராமல் இருவரும் அனுப்பி வைத்திருந்த ஆக்கங்கள் கம்யூனிஸ்ட் சம்பந்தப் பட்டவை..//

    எதிர்பாராம்ல் அல்ல‌. நான் என் கட்டுரை வெளியான பின் 'செங்க‌ட்சீயோன் ஊர்'க்காரரின் எதிர்வினை வரும் என்று எண்ணினேன். என்ன ஆயிற்று என்றால் நான் இங்கும் அவர் அங்கும் சத்தியமூர்த்தி vs அய்யாமுத்து ரோலை எடுத்துவிட்டோம்.

    உண்மையில் கம்யூனிஸ்டாக அந்த அரியூர்காரர் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.ஏனெனில் அவருக்கு இருக்கும் ரோசமும்,உடனுக்கு உடன் எதிர்வினை ஆற்றும் போக்கும்(என்னைப் போலவே)

    ஒரு கம்யூனிஸ்டு ஆழ்ந்த பொருள் பொதிந்த மெள‌னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிரியை தவறுமேல் தவறு செய்ய அனுமதிக்க வேண்டும்.
    முடிந்தால் எதிரியை, ஐந்தாம் படையை நிறுவி, அதன் மூலம் தவறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் அத்தனைக்கும் சாட்சியஙளைத் தயாரித்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். எதிரியை நேருக்கு நேர் சந்திக்கும் போது, எதிரி மறைவாகச்செய்த தவறுகளை வெளியில் சொல்லிவிடுவோம் என்று மிரட்ட வேண்டும்.(பிளாக்மெயில் என்ற சொல்லைத் தவிர்த்துள்ளேன்)
    இப்படியெல்லாம் செய்ய தொழிற்சங்கப் பயிற்சி கட்சி அளிக்கும்.அந்தப்
    பட்டறைகளில் கலந்து கொள்ள வேண்டும்.இங்கே எதிரி என்பது முதலாளி அல்லது நிர்வாகம்/நிர்வாகி.

    அந்தப் பயிற்சி வகுப்பிலேயே பல எடக்கு மடக்கான கேள்விகளை கடுமையான‌
    சொற்களால் நமது நரசிம்மர் கேட்பார். அவ்வளவுதான். கட்சி அவரை தூக்கி வெளியில் கடாசிவிடும். இன்னும் மோசமாக அவர் தீவிரவாத கம்யூனிஸ்டாக (ந‌க்சலைட்)மாறிவிட்டார் என்று சி ஐ டி போலீசில் சொல்லி அவருக்கு வேண்டாத குடைச்சலைக் கொடுக்கும்.

    உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? என் கம்யூனிஸ்டுக் கதை இன்னும் முடியவில்லை .இன்னும் ஒரு 50 பக்கத்துக்கு மேட்டர் உள்ளது.

    ReplyDelete
  46. //ஹெர்னிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த என் தந்தை அங்குள்ள செவிலியர்கள் தன் உடம்பை தொட்டு ஊசி போடுவது பிடிக்காமல்//

    என்ன மைனர்வாள்! இதை எப்படி மிஸ் பண்ணினீர்? இதுக்கு சூப்பர் பஞ்ச் பின்னூட்டம் போடலாமே,நம்ம சார்புக்குச் சாதகமாக!

    ReplyDelete
  47. //யாரை மக்கள் சேவைக்கு முன்னிறுத்தவேண்டும் என்று தேர்தலுக்கு முன் தீர்மானம் எடுத்து அடையாளம் காட்டாமல் தவறாகிப் போன தங்கள் முடிவை நினைத்து உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையுமே பெரும்பாலும் செய்துகொண்டு பல தடவை அடுத்த ஐந்தாண்டு காலத்தையும் வீணடிக்கும் பல அரசியல் தலைவர்களுக்குள் அடக்கமாகிப் போனவர்..மக்களைப் பாவம் என்பதா?இவர்களைப் பாவம் என்பதா? புரியவில்லை..//

    ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா!
    கட்சி சார்பு கம்யூனிஸ்டுகளை இதைவிட மேலாக விமர்சிக்க வேறு யாராலும் முடியாது.சூப்...பர்!

    தீர்மானம் எல்லாம் எடுக்கத் தெரியாமல் இல்லை. ஜெயிக்கிற கட்சியில் சேர்ந்து
    சில எம் எல் ஏ பதவிகளை அடைய வேண்டும். அவ்வளவுதான் லட்சியம்.
    அதனால்தான் இவர்களுடைய பங்காளிகள் 'ஓட்டுப்பொறுக்கி' என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

    ReplyDelete
  48. //இந்தக் கவர்ச்சிக் கணக்கில் வயது வித்தியாசங்களைத் தாண்டி கவருகிற அம்சம் புறவய அழகோ இல்லை அகவய அழகோ இல்லை இரண்டிலும் வேறுபட்ட விகிதங்களில் கலையாகவோ என்று எதுவாகவோ ஒன்றாகவே இருக்கும்..அதைத் தாண்டி நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 3 + 3 = 6 என்ற அடிப்படையில் துணையைப் பறிகொடுத்தோருடனே துணையாகிப் போதல் நலம் என்பதெல்லாம் கணக்கீட்டு முறைகளில் சமப்படுத்தும் ஒரு நோக்குதான்..//

    எங்கிருந்து சாமி இப்படியெல்லாம் வளைச்சி, சுத்தி, ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல எழுதக் கற்றீர், மைனர் வாள்?!!

    'பிளேஜியாரிஸம்' ஒன்றும் இல்லையே? 'ஒரிஜினல்' தானே? ஏன் சொல்ரேன்னா எழுத்தாளர் மாலனே ஒரு தரம் அப்படி மாட்டினார்.

    ReplyDelete
  49. //அருமை... அருமை... அருமை...
    என் அருமை சகோதிரி பாரதி கண்ட புதுமைப்பெண்
    தெள்ளு தமிழ் தேமொழி //

    உமாஜிதான் பாவம்.அவருக்கு ஆபீசில் போட்ட தடை உத்தரவால இங்க‌ அடிக்கடி வர முடியவில்லை.அவருக்குப் போக வேண்டிய பாராட்டெல்லாம் இப்போ தேமொழிக்கு.

    பெண்களுடைய ஆகப் பெரிய 'நல்ல' குணம் பொறாமை.

    அரியூர்காரர் கம்யூனிஸ்டு வேறா! ரொம்ப ஸ்டிராட்டஜி, டாக்டிக்ஸ் எல்லாம் ரூம் போட்டு யோசித்து ரெண்டு 'பாரதி கண்ட புதுமைப் பெண்'களூக்கு நடுவில் ஒரு 'புதுமை'ப் போட்டியை ஏற்படுத்துகிறார். எதுக்கும் ஜாக்கிரதை தேமொழி.எதோ
    எனக்குத் தெரிந்தவரை சொல்லிட்டேன்.

    ReplyDelete
  50. //தொள்ளாயிரத்திலே "தி ஹிந்து" நிறுவனர் சுப்ரமணிய ஐயர் தனது மகளுக்கு மறுமணம் செய்து புரட்சி அல்ல புத்தியால் புதிய பாதை அமைத்திருக்கிறார் என்பது வரலாறு...//

    இதற்கு மேல் அதிகத் தகவல் தட்சிணமேரு சுவாமிகள் சொன்னால் தேவலை.

    ReplyDelete
  51. //எங்கு ஆலாசியம் முடிக்கிறார், எங்கு தா.பா ஆரம்பிக்கிறார் என்பது சட்டென்று புரியவில்லை.//

    அதானே. இது எங்களுக்கு ரொம்ப நாள் குழப்பம். இப்போ நீங்க. நீங்க‌ ஏன் வேணுமின்னே ஆம்பளை போட்டோ மீசையெலாம் வச்சி, ஒண்ணுக்கு ரண்டா போட்டு வச்சிரிக்கீங்க. நீங்களும் கயல்விழி, மொழிக்கனி என்று பெயர் வச்சிருந்தா புதுமைப்பெண் பட்டம் கிடைக்குமில்ல? புதுமைப்பெண் பட்டம் ஸ்டாக் தீரப்போகுதாம். சீக்கிரம் பெண்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்.

    ஹிட் லிஸ்டுல சேர்ந்துட்டீங்க. எப்போ கடல் கடந்து ஏவுகணை வருமோ. உஷார்.

    ReplyDelete
  52. //இருந்தும் சிறுவயதிலிருந்தே இலக்கிய வாதிகளின் பக்கம் கவனம் இருந்தது என்பதை மட்டும் அடக்கத்துடன் தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்..//

    அவரோடு மட்டும் பகிர்ந்து கொண்டதை நாங்களும் பார்க்கிறமாதிரி இருக்கிறதாலே சொல்றேன். இதுக்கு போய் அடக்கம் எல்லாம் தேவையில்லை.
    எப்போ அடங்கணும் எப்போ வெளிப‌டணும்னு கொஞ்சம் ஆராயலாம்.

    ReplyDelete
  53. //மிகவும் அற்புதமான வார்த்தைகள் என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

    அப்படி என்றால் கே எம் ஆர் கே ஐயா அவர்களே ஜன நாயக கொள்கையிலும் நிறைய மாற்றம் வேண்டுமே உடனடியாக.

    இல்லையென்றால் நமது இந்திய ஜன நாயகம் இன்றைய உலகில் போட்டிப்போட்டு வல்லரசாகுமா?//

    ஆம்!மதுஸ்ரீகாந்த்!அவர்களே."இந்தியா உலகுக்கு அளிக்கும்"என்ற பாரதியின் வரிகள் பொய்க்காது.

    ReplyDelete
  54. //ஹூம்..."கணக்கு பார்த்து காதல் வந்தது, கச்சிதமா ஜோடி சேர்த்தது. ஒன்னும் ஒன்னும் இரண்டு, ரெண்டும் ஒன்னும் மூணு, மனசு போலவே வாழ்க்கை அமைந்தது" ...அப்படின்னு ஒரு பழைய பாட்டு இருக்கே அது மாதிரி நடக்க கூடாதான்னு ஒரு நப்பாசைதான்; மாண்புமிகு மைனர்வாள், உங்கள் கருத்திற்கு நன்றி.//

    உங்களுடைய இந்த 'ஸ்போர்டிவ் ஸ்பிரிட்' நரசிம்மருக்கும் வரணும்னு பிரார்த்த்னை பண்ணிக்கிறேன் தேமொழி.

    ReplyDelete
  55. //அப்படி என்றால் அவர் தேமொழி என்றப் பெண் என்பது தானே உண்மை!!!) எதற்காகச் சொல்கிறேன் என்றால் உங்களின் எழுத்தில், கருத்தில், ஆழ்ந்த சிந்தனை சுழல்கிறது //

    இது நல்ல ஜோக். சிந்தனை ஒளிவிடுகிறது,சிந்தனை மிளிர்கிறது என்றால் சரியாக இருக்காதோ?

    சிந்த‌னை சுழல்கிறது என்றால்? குழம்புகிறது என்று பொருளோ? அல்லது புய‌ல் போல அடிக்கிறது என்றோ?

    தேமொழி இது சிங்கையாரின் வஞ்சப் புகழ்ச்சியா அல்லது பாராட்டா என்று அவரையே ஒரு மின் அஞ்ச‌ல் அனுப்பிக் கேளுங்கள்.

    ReplyDelete
  56. என் பல பின்னூடங்களும் சிரிக்க சிந்திக்க எழுதப்ப‌ட்டவை. யாரையும் புண்படுத்தும் நோக்க்ம் கொண்டவை அல்ல.படித்து ரசிக்க மட்டுமே. சண்டைக்கு யாராவது முஸ்தீபு பண்ணினால், இப்போதே இங்கேயே வெள்ளைக் கொடி பறக்க விட்டாச்சு.

    ReplyDelete
  57. இதன் மூலம் வகுப்பறை வாத்தியாருக்கும் மாணவர்களுக்கும்,சகல பொதுமகா ஜனங்களுக்கும்,

    குறிப்பாக சிங்கைச் சிங்கம், அரியூர் ஆலன்,செஙட்சீயோன் நகர்காரர்,தமிழ் விரும்பி, நரசிம்மர் என்றெலாம் அறியப்படும் சிங்கப்பூர் கம்யூனிஸ்டுத் தலைவர்,புதுமைப்பெண் காவலர்,முதுமை விஷமத் தாத்தாக்களின் சிம்ம சொப்பனம் ஆகிய உயர்திரு ஹாலாஸ்ய‌ம் அவர்களுக்கும்

    தெரிவித்துக்கொள்வது என்னெவென்றால்

    லால்குடி முத்துராமகிருஷ்ணன் என்கிற நானும்,

    வகுப்பறையில் ஐயர் என்றும், மற்றப்படி விசு ஐயர் என்றும், விஸ்வநாத‌ ஐயர் என்றும் அறியப்படும், திருக்கைலாய‌ யாத்திரை மேற்கொண்டவரும் மேலும் பல அறச் செயல்களைச் செய்து வருபவரும் துறவுக்கேற்ற உணவு சாப்பிட்டு வருபவருமான உயர்திரு ஐயர் அவர்களும்

    ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோம்.

    எங்களுக்குள் இருந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஐயர் தன்னை சரியாக வெளிப்படுத்திக் கொண்ட‌தே காரணம்.அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்வதுடன், இனி தங்களுடைய இரட்டை வரிகளை ஒரு புதிய நேர்மறை நோக்கில் காண்பேன் என்று உறுதி கூறி வகுப்பறையின் கவுரவத்தை காப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

    ஒப்பம்: கே எம் ஆர் கே(லால்குடி)

    ReplyDelete
  58. //"எந்த கம்யூனிஸ்ட் பணம் வாங்கிக்கொண்டு பேச வருகிறான்"//

    சினிமாப்படம் எடுக்கப்போன கம்யூனிஸ்ட்,தன் சொந்த வீட்டுக்கு வாடகை வாங்க முழுநேர ஊழியரான, கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் லட்சியவாதியான‌
    பெரியவரை ஏவும் தொழிற்சங்கத் தலைவர் இவர்களையெல்லாம் தா.பா அறிய மாட்டார என்ன? டெல்லியில் நிருபர்களுக்குக் காரில் அமர்ந்து பேட்டி அளிக்கும்
    கம்யூனிஸ்டு இளந்தலைவர் இவர்களெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?

    தா பா அவர் அளவில் சரி.

    ReplyDelete
  59. //ஆன்மீகம், மனிதாபிமானம், மர்க்ஸ்சியம் எல்லாம் ஒரே நாளில்
    திகட்டுகிறது !//

    உங்கள் கருத்து ஐயா கண்களில் பட வேண்டும் திரு ஜடம் அவர்களே!

    பகதிமலர்,வரமலர் , இளைஞர் மலர் என்று 3 நாட்கள் ஐயா நமக்கு ஒதுக்கினார்
    அப்புறம் பாசந்தி பக்கடா ஃபில்டர் காபின்னு ஒரு நாள் ஆரம்பித்தார்.எல்லாவற்றையும் ஏரக்கட்டிவிட்டு மாணவர்களுக்கு ஒரே நாள் என்று ஞாயிறு மட்டும் ஒதுக்கியதால் கொஞ்சம் ஓவர் டோஸ்.

    ஐயா எப்போதுமே புதுமை செய்து கொண்டே இருப்பார்.அதனால் சீக்கிரம் திகட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்.

    அது சரி! அதென்ன ஜடம்? எழுத்து என்னமோ கடம் வாசிக்கிறாப் போல அல்லவா இருக்கு?

    ReplyDelete
  60. //அவரது தனிப்பட்ட அக வாழ்வைப்பற்றி எதுவும் பேசாதீர்கள்...//

    மேற்கண்ட ஆலோசனை தா பா வுக்கு ஜீவா வழங்கியதாகக் காண்கிறது.

    அந்தக் காலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கம்பரசம் என்றும், ஆதீனங்களில் நடப்பதாக சில அவதூறுச் செய்திகளை இந்து மததிற்கு எதிராகச் சொல்லி வந்த காலம்.அதெல்லாம் 'மைல்ட் போர்னோ'வகையில் புராணங்களையும், இதிகாசங்களையும் இழிவுபடுத்த திட்டமிட்ட நாத்திகப் பிரசாரம்.மேடையில் கைத்த‌ட்டு பெற நல்ல சப்ஜெக்ட். ராமனோ, கிருஷ்ணனோ மான நஷ்ட வழக்குப் போட மாட்டார்கள் என்ற உறுதியில் எழுந்த வீரம்.மண் பிள்ள‌யாரை உடைத்து விட்டு, 'என் பிள்ளயாரைத்தானே உடைத்தேன்;அவர்கள் வைத்து வழிபடும் பிள்ளையாரை உடைக்கவில்லையே' என்று குயுக்திச் சட்டம் பேசிய காலம்.

    அதனால் ஜீவா 'அடிகளாரின் அக வாழ்வை திராவிடக் கட்சிகளைப் போலப் பேசிக் கேவலப்படுத்த வேண்டாம்' என்று அந்தரங்கமாகக் கூறிய அறிவுரையை
    தா பா வெளிப்படையாக வைத்ததனால் அவரும் ஒரு 'கம்யூனிஸ்டு ஸ்ட்ரடெஜிஸ்டு'தான் என்று நிரூபித்துவிட்டார்.

    படிப்பவர் மனதில் அடிகளாருக்கு ஏதோ ஒரு 'அக' வாழ்வு, 'அந்தரங்கம்' இருந்தது போல எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்.

    ஒரு கம்யூனிஸ்டின் முதல் ஆயுதமே எதிராளியினை 'கேர‌க்டெர் அஸ்ஸாஸினேஷன்' செய்வதுதான்.

    காந்திஜியை கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில் இல்லாமல் அவருடைய புத்தகங்களை வைத்து, அவர் சொல்லியதையே, ஏதோ இவர்கள் துப்பறிந்து கண்டுபிடித்தது போல பிரசாரமும், 'கிசு கிசு'வும் செய்தார்கள்.

    மார்க்ஸின் அக வாழ்வைப்பற்றிப் பேசினால் வரும் கோவம் அவர்களுக்கு. அப்போது மட்டும், "தனிப் பட்ட வாழ்கை பற்றிப் பேசாதே"என்பார்கள்.

    தா பாவும் அந்த கம்யூனிஸ்டு புத்தியைத்தான் காட்டியுள்ளார். ஜாதி புத்தி போல கம்யூனிஸ்டு புத்தியும் உண்டுபோல?

    ReplyDelete
  61. இது என் அண்ணன் டாகடர் கண்ணன் பி ஹெச் டி(கெமிஸ்டிரி) அவர்கள் ஞாயிறு அன்று வெளியான 3 ஆக்கங்களையும் படித்துவிட்டு கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார்கள். நான் வகுப்பறையில் எழுதத் துவங்கிய பின்னர் இதுவே முதல் முறையாக இவ்வளவு நீளமான மேல் அதிகத் தகவல் அவர் அளித்தது. அதற்காக அவருக்கு என் நன்றி.

    அவருடைய மின் அஞ்சல்:

    ///"அதேபோலப் பெரியாரும் அடிகளாரைப் பாராட்டுவதோடு, அவர் மேடைக்கு வந்தால், எழுந்து வணக்கம் தெரிவிப்பார். இதைக் கண்ட சில தி.க. நண்பர்கள் பெரியாரிடம், "நீங்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க வேண்டுமா?" எனக் கேட்ட போது, "அவர்கள்தான் அவரை மதிப்பதில்லை. நாமும் மதிக்காவிட்டால், அது சரியாகுமா?" என்றார்."///

    இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்குப் பரிச்ச‌யமான சில பெரியார் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    சுமார் நாற்ப‌தாண்டுகளுக்கும் முன்னால் நான் தஞ்சைப் பூண்டி கல்லூரியில் பணி புரிந்து வந்தபோது ஒரு முறை தந்தை பெரியாரை ஒரு கல்லூரிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள். அப்போதே அவர் சிறுநீர் கழிக்க குழாய் பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்.

    "தொண்டு செய்து பழுத்த பழமாக" தன் பக்கெட் ச‌கிதமாக மேடையில் அவர் அமர்ந்தார். கல்லூரி வழக்கப்படி கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது சிரமப்பட்டு எழுந்து நின்று மரியாதை செய்தார்.

    இதைப்பற்றி என் தந்தையிடம் கூறிய போது என் தந்தை 'பெரியார் சிறந்த பண்பாளர்' எனப் பல நிகழ்வுகளைக் கூறினார்.

    1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி, இந்தியக் குடியரசின் அன்றைய பிரதமர் நேரு காலமானார். சேலத்தில் என் தந்தை பொதுமக்கள் சார்பாக ஒரு இரங்க‌ல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.அன்று பெரியார் ஏற்காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர், என் தந்தையைத் தொடர்பு கொண்டு அன்றைய இரங்கல் கூட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி கேட்டாராம்.என் தந்தையோ "நாங்கள் கூட்டத்தில் சர்வ சமய ப்ரார்த்தனை செய்து விட்டு இரஙகல் தீர்மானம் நிறைவேற்றி விட்டு க‌லைவதாக எண்ணியுள்ளோம். தாஙக‌ள் இதில் எந்த அளவு பங்கேற்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார். அதற்குப் பெரியார் "நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க. நான் வரேன்" என்று சொல்லி வந்திருந்து, ப்ரார்த்தனைக்கூட்டம் முழுவ‌தும் அமைதியாகப் பங்கேற்று கடைசியில் தான் சில வார்த்தைகள் பேச அனுமதி பெற்றுக்கொண்டு, நேருப் பெருமகனாரின் பெருமைகளைப் பேசி,அவரை இழந்து நிற்கும் நாட்டைக் காக்க எல்லொரும் காமராஜரின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லி முடித்தாராம்.

    கவியோகி சுத்தானந்த பாரதி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். பிராம்மண சன்னியாசி. பெரியாரின் நண்பர். அவர் எப்போது ஈரோடு சென்றலும் பெரியார் வீட்டில்தான் தங்குவார். பெரியாரும் அவருடைய பூஜை முறைகளில் எந்தக் குறையும் இல்லாத வகையில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வீட்டிலுள்ளவர்களுக்குக் கட்டளை இடுவாராம்.

    இவற்றைச் சொன்ன என் தந்தை, பெரியார் தன் கழகத்துக்கு வெளியே இருப்பவர்களோடு பழகும் போதும், அவர்களுக்கு எழுதும் போதும், சமூகம் வகுத்த எந்தப் பண்பாட்டுக்கும் முரண்படாமல் தன் பேச்சு, எழுத்தைக்க் கட்டிக் காப்பார் எனவும் , ஆனால் தன் கழகம் சார்ந்த கூட்டஙக‌ளிலோ, அல்லது தன் தொண்டர்களிடமோ பேசும் பொது, மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன் செய்வார் எனவும் கூறினார்.அதற்கு உதாரணமாக ஒரு தி.க. தொண்டர் வீட்டுத் திருமணத்திற்குத் தலைமை ஏற்க வந்தபோது அங்கு சில மங்கல ஏற்பாடுகள் (அடுக்குப்பானை, வாழை மரம், தோரணம் போன்றவை) இருக்கக் கண்டு வெகுண்டு, "யாரை ஏமாற்ற இந்த சீர்திருத்தத் திருமணம்?" என்று அவரைச் சாடினார் என்றும், அந்த மணப் பெண்ணை நோக்கி அந்த மண மேடையிலேயே, அவள் எந்த வகையிலும் மணமகனுக்குக் குறைந்தவளில்லை என்பதை நினைவு கூறும் விதமாக, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அவன் முன் தகவல் கொடுக்காமல் வீடு திரும்பினால் கதவைத் திறக்க வேண்டாமெனவும்,முரண்டு செய்தால் அவனை வன்முறையால் தாக்கவும் தயங்கக்கூடாது என்பது போலவும் கூறியதோடு, விதவை என்றே சமுதாயத்தில் யாரும் இருக்கக்கூடாது ,மறுமணம் செய்யப்
    பெண்கள் தயங்கக் கூடாது என்றும் அறிவுரை கூறினாராம்.

    அண்ணல் காந்தியடிகள் இறந்தபோது, கோட்சே ஒரு பிராமணன் என்று தெரிந்த போது,பெரியார் தன் பத்திரிகையில் அந்த சாதி விவரம் வெளியிட வேண்டாமென்றும், அது தேவையில்லாமல், எங்கோ மூலையில் உள்ள ஏழை பிராமணனுக்கு கேடு செய்யக் கூடுமென்றும் என்றும் அறிவுறுத்தினாராம்.

    ReplyDelete
  62. Uma S umas1234@gmail.com
    to [Offline] "SP.VR.SUBBIAH"
    date 28 November 2011 16:56
    subject நான் ஏன் கம்யூனிஸ்டு ஆகவில்லை?"

    வாரமலரில் இடம்பெற்ற அனைத்து ஆக்கங்களுமே அருமை !

    தேமொழி சொல்வதுபோல் வரவர தனுசு எல்லாவற்றிற்கும் கட்டளையிடுகிறார். எளிமையான மனதைக்கவரும் கவிதைகளை மட்டுமே படிப்பது வழக்கம். அந்த வகையில் தனுசுவின் கவிதையை விரும்பிப்படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ஆலாசியத்தின் கட்டுரை மூலம் தா. பாண்டியன் பற்றி அதிக தகவல்கள் தெரிந்துகொண்டேன். அவரின் பேச்சை இவ்வளவு பேர் சிலாகித்து எழுதியதைப்படித்ததும் நான் ஒருமுறை கூட கேட்டதில்லையே என்று தோன்றியது. குன்றக்குடி அடிகளார் பற்றியும் அதிகம் அறிந்ததில்லை.

    தேமொழி கலக்குகிறார். அவரது சிந்தனை ஓட்டத்தை ஒட்டியே என்னுடையதும் இருப்பதால் நிறைய கருத்துக்கள் ஏற்புடையதாகவே இருந்தது (ஒரு சிலவற்றைத் தவிர). அதை எழுத ஆரம்பித்தால் ஒரு பதிவாகிவிடும் அபாயம் இருப்பதால் எழுதவில்லை. நல்ல தமிழ்நடை இருக்கிறது உங்களுக்கு, தொடர்ந்து ஆக்கங்களைக்கொடுங்கள். மேலும் என் சார்பாக மைனரைக் கலாய்க்கும் ஒரு பெரிய பொறுப்பையும் நான் சொல்லாமலேயே விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, ஹி ஹி.

    கிருஷ்ணன் சாரின் தொழிற்ச் சங்கத்துடனான அனுபவங்கள் இப்படியும் இருப்பார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இன்னும் வேற ஐம்பது பக்கம் எழுதப்போகிறாராமே!!!!!

    இந்த காணோளியைக்கான இயலாமல் அலுவலகத்தில் சதி செய்துவிட்டார்களே???? என்ன கொடுமை சார்?
    -------------------------------------------------------
    கார் அனுப்பி அழைத்து வருகிறோம் என்று சொன்னோம். தேவையில்லை நான் பேருந்தில் வருகிறேன் என்று வந்து சேர்ந்தார். பேச்சாளர்கள் பணம் வாங்கிக் கொள்வார்கள். இவர் பேசி முடித்தவுடன் அரியலூர் சென்று இரவு ரயிலைப் பிடிக்கவேண்டுமென்று அவசரமாகக் கிளம்பினார். இவருக்கும் பணம் கொடுக்க ஓடிச்சென்று நீட்டிய போது அவர் சொன்னார், "எந்த கம்யூனிஸ்ட் பணம் வாங்கிக்கொண்டு பேச வருகிறான்" என்று//

    படித்து வியந்தேன், உண்மையில் சிறந்த மனிதர்தான்!

    S.உமா, தில்லி

    ReplyDelete
  63. //மேலும் என் சார்பாக மைனரைக் கலாய்க்கும் ஒரு பெரிய பொறுப்பையும் நான் சொல்லாமலேயே விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, ஹி ஹி.

    கிருஷ்ணன் சாரின் தொழிற்ச் சங்கத்துடனான அனுபவங்கள் இப்படியும் இருப்பார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இன்னும் வேற ஐம்பது பக்கம் எழுதப்போகிறாராமே!!!!!//

    சந்தடி சாக்குல கந்தப்பொடி துவினாளாம்னு கெடச்ச கேப்புல வந்த செங்கோட்டை அம்மையாரே!வருக.

    தேமொழிக்கு போர்ட்ஃபோலியோ மாற்றிக் கொடுத்தது முன்னரே நாங்க தெரிஞ்ண்டுட்டோம்.

    இன்னும் 50 பக்கம் எழுதவா வேண்டாமா? இதுவே போர் அடிக்கற‌தா?

    ReplyDelete
  64. ///////////kmr.krishnan said...
    //இந்தக் கவர்ச்சிக் கணக்கில் வயது வித்தியாசங்களைத் தாண்டி கவருகிற அம்சம் புறவய அழகோ இல்லை அகவய அழகோ இல்லை இரண்டிலும் வேறுபட்ட விகிதங்களில் கலையாகவோ என்று எதுவாகவோ ஒன்றாகவே இருக்கும்..அதைத் தாண்டி நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 3 + 3 = 6 என்ற அடிப்படையில் துணையைப் பறிகொடுத்தோருடனே துணையாகிப் போதல் நலம் என்பதெல்லாம் கணக்கீட்டு முறைகளில் சமப்படுத்தும் ஒரு நோக்குதான்..//

    எங்கிருந்து சாமி இப்படியெல்லாம் வளைச்சி, சுத்தி, ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல எழுதக் கற்றீர், மைனர் வாள்?!!

    'பிளேஜியாரிஸம்' ஒன்றும் இல்லையே? 'ஒரிஜினல்' தானே? ஏன் சொல்ரேன்னா எழுத்தாளர் மாலனே ஒரு தரம் அப்படி மாட்டினார்./////////////

    எவனெழுத்தையும் காப்பி அடிக்கும் வழக்கமோ அவசியமோ எனக்கு இல்லை..
    சுய சிந்தனைகளையும் அனுபவங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்..
    ஆகையால் KMRK மாலன் காலன் என்றும் ப்லேகியாரிசம் கிலேகியாரிசம் என்றெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம்..
    தேர்ந்த எழுத்தாளர் ஆவதோ அல்லது சான்றிதழ் பெறுவதோ என் நோக்கமல்ல..எனினும் நீங்கள் அப்படி சொல்லியிருப்பதற்கு நன்றி..வலைத்தளங்களில் சுற்றுவது பொழுதுபோக்குக்காக மட்டுமே..நான் இன்னும் எனது சொந்த ப்ளாக்கில் கூட
    இன்னும் பதிவிடவில்லை..எனவே ஹிட் கவுண்ட்டிங் எதிர்பார்ப்பு இல்லை என்பதும் சொல்லாமலே விளங்கும்..
    நெட்டிலே யாருக்கும் எந்தப் பக்கத்துக்கும் ஓட்டுப் போட்டு கட்சிகட்டும் வழக்கமும் இல்லை..நிறைய பதிவுகள் எழுதி அப்புறமா தொகுத்து புத்தகமாக்கும் கம்மர்சியல் கண்ணோட்டமும் இல்லை..
    இதிலும் இதே கருத்தை ஏற்கனவே நான் பலமுறை சொல்லியும் உள்ளேன்..இளமை வயதுடன் சம்பந்தப்படுகிறதா என்கிற விஷயத்தில் சென்சிடிவ் ஆன பாலியல் உணர்வுகள் குறித்த விவாதகளத்துக்கு இட்டுச் செல்லும் வகையிலே அவரவர் தன் கருத்துக்களை சுயசார்புடன் 'என்றும் பதினாறு' கட்சியினரை சமூகப் பகிஷ்கரிப்புக்கு உள்ளாக்கும் முயற்சியுடன் ஆங்காங்கே வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் என்ற போதிலும் பாலியல் உணர்வுகளைப் பற்றிய சிக்மன் ஃபிராய்டு போன்ற முன்னோடிகளின் விளக்கங்களைப் படித்துத் தெளிவது அவர்களுக்கு நலம் பயக்கும்....சமீபத்தில் நாராயண ரெட்டி வெகுஜனப் பத்திரிகைகள் மூலமும்..முன்பு ஷர்மிளாவுடன் மாத்ருபூதம் டிவியிலே செய்த இதே வேலையை சமீபத்தில் ஆகாஷ் பெர்டிலிட்டி கிளினிக் நிறுவனர் டாக்டர்.காமராஜ் தற்போதுமாக செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்....சுய விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவிட்டு அறிவியல் பூர்வ விளக்கங்களை அறிந்து தெளிதல் அடல்ட்டுகள் மட்டுமின்றி வளரும், வளரப்போகும் அடல்ட்டுகளுக்கும் அவசியம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்..

    ReplyDelete
  65. //////uma said

    மேலும் என் சார்பாக மைனரைக் கலாய்க்கும் ஒரு பெரிய பொறுப்பையும் நான் சொல்லாமலேயே விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி, ஹி ஹி.///////

    'பில்லி, சூனியம்'லாம் உங்களுக்கு கைவந்தகலை ன்னு எனக்குத் தெரியும்..

    'ஏவல்' கூட பண்ணுவீங்கன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்..

    ReplyDelete
  66. ///////Thanjavooraan said...
    ஞாயிறு மலருக்கு வந்த எல்லா பின்னூட்டங்களையும் ஊன்றிப் படித்தேன். சில கருத்துக்களுக்கு மறுமொழி சொல்ல விருப்பம். நீண்ட மறுமொழி அல்ல. குறிப்பாக ஜப்பான் மைனருக்கு:‍
    ////////

    தஞ்சாவூராரின் தா.பா..பற்றிய தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
  67. //நிறைய பதிவுகள் எழுதி அப்புறமா தொகுத்து புத்தகமாக்கும் கம்மர்சியல் கண்ணோட்டமும் இல்லை..//

    ஹிஹிஹி... எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்குதான். அதை கமெர்சியலாக எல்லாம் செய்ய முடியாது. இதைவிட உபயோகமான விஷயமெல்லாம் அச்சில் கொண்டு வந்து விட்டு புத்தகம் விலை போகாமல் வீட்டில் அடுக்கி வைத்துக் கொண்டு மனைவி பிள்ளைகளிடம் அர்ச்சனை வாங்கும் எழுத்தாளர்கள்தான் அதிகம்.

    நான் கிட்டத்தட்ட ஒரு தன் வரலாறு எழுதிவருகிறேன் தன்வரலாறு எழுதுவதில் இது ஒரு பாணி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையணும் என்ற விருப்பம்.யாரும் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். நூலகங்களுக்கும்,
    உறவினர் நண்பர்களுக்கும் இலவசமாகக் கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதான்.

    மனிதனால் வெல்ல முடியாத ஒரே ஆசை புகழ் ஆசைதான்.நான் மட்டும் விதிவிலக்கா?

    ReplyDelete
  68. Mr.Alasiam, Very good Article. Write more. Share what you have read. Thanks to our vathiyar.

    ReplyDelete
  69. /பில்லி, சூனியம்'லாம் உங்களுக்கு கைவந்தகலை ன்னு எனக்குத் தெரியும்..
    'ஏவல்' கூட பண்ணுவீங்கன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்..///

    அது மைனர் அது.

    ReplyDelete
  70. //சுய விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவிட்டு அறிவியல் பூர்வ விளக்கங்களை அறிந்து தெளிதல் //

    ஆம்! மைனர்வாள்.இங்கே எல்லோருமே அறிவியலைத் தவிர மற்ற எல்லாக் கோணங்களிலும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    என்ற குற‌ட்பாக்களை ஏனோ மறந்துவிடுகின்றனர்.

    'கதைக்கான கரு அளித்தவர் இன்னாரா, அவருக்கு முன்னால் மனப்பிறழ்வு ஏற்பட்ட வரலாறு என‌க்குத் தெரியும்;ஆகவே அவர் கூறியது இப்போதும் அதேபோலத்தான் இருக்கும்' என்ற எண்ணத்தில் பெருவுடையார் ஆரம்பித்து வைத்த இந்த 'மூத்தோரின் உடலாசை' என்ற விவாதம், நீர் எவ்வளவுதான் அறிவியல் பேசினாலும் இங்கே எடுபடாது.

    'நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை'யின் தன் வரலாற்றின் முடிவுரை நான்
    3 வது முறையாக எப்படி மனநோய்க்கு சிகிச்சை பெற வேண்டியது வந்தது
    என்பதுதான்.அப்போது தெரியும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே என் மன நோய்க்குக்காரணமல்ல என்பது.இப்போது நான் நன்றாக குணமடைந்துவிட்டேன் என்றாலும் யாரும் நம்பப் போவதில்லை.

    இங்கே,

    ஒருமுறை மனநோயாளி என்றால் எப்போதும் மனநோயாளிதான்.
    ஒருமுறை கற்பு இழந்துவிட்டால் நிரந்தரமாகவே எப்போதுமே அதேதான்.
    ஒருமுறை திருட்டுப்பட்டம் கட்டப்பட்டால் எப்போதுமே அதேதான்.

    நமது சமூகத்திற்கு அறிவியல் பார்வை கிடையாது.குருட்டு சமூகம். செவிட்டு சமூகம்.யாரவது வெள்ளைத் தோல்காரன் வந்து 'தஸ்புஸ்'னு ஆங்கிலத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வர்கள்.தமிழில் பேச வேண்டிய சப்ஜெக்டு இல்லை இது.

    ReplyDelete
  71. //நெட்டிலே யாருக்கும் எந்தப் பக்கத்துக்கும் ஓட்டுப் போட்டு கட்சிகட்டும் வழக்கமும் இல்லை..//

    இதுக்கும் நான் பதில் சொல்லத்தான் வேண்டும்.

    செங்கோவியில் நானாக விரும்பிப் போய் கட்சி கட்டவில்லை.

    'பிராமண நண்பர்களுக்கு வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு......'என்ற தலைப்பிட்டு முதல் கட்டுரையை வெளியிட்டு விட்டு செங்கோவி எனக்கு மின் அஞ்சல் அனுப்பி அதற்கு ஏதாவது எதிர்வினை இருந்தால் சொல்லுங்கள் என்று
    கேட்டு கொண்டார்.

    அதற்கு முன்னர் அவருடைய பிராமண ஜாதியைக் காய்தலை கேள்வி கேட்டு, 'அதற்கான காரணங்களை நான் அரியத்தாருங்கள்' என்று கேட்டு இருந்தேன்.அது ஓரீரு மின் அஞ்சலாக இருந்தது. அதனை பொது விவாதத்தில் வைக்கத் தயக்கத்துடனேயே இருந்தார்.

    'யார் பிராமணன்?' என்ற கட்டுரை சிங்கையில் எழுதப்பட்டு,தஞ்சையில் பதிவேற்றப்பட்டு,டெல்லியிலிருந்து செங்கோவிக்கு சுட்டப்பட்டதால் அக் கட்டுரையின் தாக்கத்தால்,அக்கட்டுரை ஒரு பிராமணர் எழுதியிருக்கக்கூடும்
    என்ற அனுமானத்தால், செங்கோவி அதனை பொது விவாதமாக்கி,'இப்ப என்ன சொல்லுரே?' என்று கேட்டதால் நான் ஒரு வக்கீல் ரோல் எடுத்து 'கட்சி கட்டும்' வேலை செய்ய வேண்டி வந்தது.

    ஒரு வக்கீல் என்னும் போது என் கட்சிக்காரரின் பக்கத்தைதான் சொல்ல முடியும். அதைத்தான் நான் அங்கே செய்தேன்.ஓரளவு நன்றாகவெ செய்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது.

    நான் பிராமணர்களுக்காக வக்கீலாக இருந்தேன். நானும் ஒரு பிராமணனாகவே அமைந்தது தற்செயலே.என் விருப்பம் அல்ல்.

    ReplyDelete
  72. //மனிதனால் வெல்ல முடியாத ஒரே ஆசை புகழ் ஆசைதான்.நான் மட்டும் விதிவிலக்கா?//

    என் கேள்விக்கு நானே பதில் அளிக்கிறேன்.

    "இப்போது நீங்கள் எழுதி வருவதெல்லாம் உங்களுடைய 'பாசிடிவ்' பக்கம் மட்டும்தான்.சும்மா 'இமேஜ் பில்டிங்'தான். உங்களுடனே 1975 முதல் வாழ்ந்து வரும் எனக்கு உங்களுடைய 'நெகடிவ்ஸ்' எல்லாம் தெரியும். அதனை நீங்கள் வெளிப் படுத்தத் துணிய மாட்டீர்கள். வெளிப்படுத்தினால் உங்க 'இமேஜ்' கறுப்பாகிவிடுமே என்ற சிந்தனைதான்"

    இதை யார் கூறியிருப்பார்கள்? வேறு யார்? என் இனிய பாதி அம்மையார்தான்.

    என் மனசாட்சியை உலுக்கிய கேள்வி இது.என் மகளிடம் கூறியுள்ளேன்

    "நான் இறந்தபிறகு என் தன் வரலாற்றினை வெளியிடு.நான் என் 'நெகடிவ்ஸை'க்கூட எழுதிக் கொடுத்து விடுகிறேன்.உங்கள் மூவருடைய குடும்ப வாழ்வில் என் அந்தரங்கத்தால் பிரச்சனை வருமா என்று சீர்தூக்கிப் பார்த்து, நீயே ஒரு 'எடிடர் ரோலை' எடுத்துக் கொண்டு புத்தகமாக வெளியிட்டு என் நினைவாகக் கொடு."

    ReplyDelete
  73. //எனக்கு மிகவும் பிடித்த உங்களுக்கு இஷ்டமான M.G.R மற்றும் M.R ராதா(மைனர் சார் அவர்களை அல்ல ) இவர்களை பற்றி எல்லாம் எழுதுங்கள்.//

    எம் ஜீ ஆர் ,எம் ஆர் பற்றியெல்லாம் எழுதலாம் தனுசு அவர்களே.

    'மைனரின் குணாதிசயங்கள்' என்று ஒரு ஆய்வுக் கட்டுரை தயாராகி வருகிறது.
    என்னுடைய எம் பில் ப்ராஜெடாகப் பயன்படுத்த நினைக்கிறேன்.

    வாத்தியாரிடம் வெளியிடக் கொடுத்தால் 'மைனரின் விளையாட்டுக்கள்' என்று தலைப்புக் கொடுத்துக் கலக்கி விடுவாரில்ல.

    ReplyDelete
  74. ////Ganesan said...
    Mr.Alasiam, Very good Article. Write more. Share what you have read. Thanks to our vathiyar.

    Monday, November 28, 2011 9:37:00 PM////

    ஓ! நிச்சயம் செய்கிறேன் நண்பரே!
    சுவாரஸ்ய மானவற்றை / அறிந்திடாதவற்றை நான் வாசித்த என்னை வாசித்த விசயங்களை எழுதி நமது வாத்தியாருக்கு அனுப்பி வகுப்பறையில் வெளியிட வேண்டிக் கொள்வோம்.
    இது வகுப்பறை அதனாலே பெரும்பாலும் இவைகள் சாத்தியமாகும் என நம்புகிறேன்.
    நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  75. ////kmr.krishnan said...
    //எனக்கு மிகவும் பிடித்த உங்களுக்கு இஷ்டமான M.G.R மற்றும் M.R ராதா(மைனர் சார் அவர்களை அல்ல ) இவர்களை பற்றி எல்லாம் எழுதுங்கள்.//

    எம் ஜீ ஆர் ,எம் ஆர் பற்றியெல்லாம் எழுதலாம் தனுசு அவர்களே.

    'மைனரின் குணாதிசயங்கள்' என்று ஒரு ஆய்வுக் கட்டுரை தயாராகி வருகிறது.
    என்னுடைய எம் பில் ப்ராஜெடாகப் பயன்படுத்த நினைக்கிறேன்.

    வாத்தியாரிடம் வெளியிடக் கொடுத்தால் 'மைனரின் விளையாட்டுக்கள்' என்று தலைப்புக் கொடுத்துக் கலக்கி விடுவாரில்ல.////


    தனுசு அதிலே தெளிவா (நம்ம மைனரைப் பத்தி இல்லை)ன்னு சொல்லியும் நீங்க இத எழுதியிருக்கீங்க..மைனரோ ஃபோபியா லெவல் செக் பண்ணி டேபிலேட் எடுத்துக்கிறது நல்லது..

    'மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர்'ன்னு எதாவுது புரளியைக் கிளப்பி விடாம இருந்தா சரிதான்..

    ReplyDelete
  76. ///////////kmr.krishnan said...
    //மனிதனால் வெல்ல முடியாத ஒரே ஆசை புகழ் ஆசைதான்.நான் மட்டும் விதிவிலக்கா?//
    என் கேள்விக்கு நானே பதில் அளிக்கிறேன்.
    "இப்போது நீங்கள் எழுதி வருவதெல்லாம் உங்களுடைய 'பாசிடிவ்' பக்கம் மட்டும்தான்.சும்மா 'இமேஜ் பில்டிங்'தான். உங்களுடனே 1975 முதல் வாழ்ந்து வரும் எனக்கு உங்களுடைய 'நெகடிவ்ஸ்' எல்லாம் தெரியும். அதனை நீங்கள் வெளிப் படுத்தத் துணிய மாட்டீர்கள். வெளிப்படுத்தினால் உங்க 'இமேஜ்' கறுப்பாகிவிடுமே என்ற சிந்தனைதான்"
    ... இதை யார் கூறியிருப்பார்கள்? வேறு யார்? என் இனிய பாதி அம்மையார்தான்.////////////

    இதுக்குத்தான் மாமிக்குத் தெரியாம எதையுமே செய்யுங்கன்னு நான் தலையில அடிச்சுக்கிட்டேன்..
    இப்பவே பாதி ப்ளாக் கலரா தெரியுதே..

    ReplyDelete
  77. /////// kmr.krishnan said...
    //நெட்டிலே யாருக்கும் எந்தப் பக்கத்துக்கும் ஓட்டுப் போட்டு கட்சிகட்டும் வழக்கமும் இல்லை..//

    இதுக்கும் நான் பதில் சொல்லத்தான் வேண்டும்.

    செங்கோவியில் நானாக விரும்பிப் போய் கட்சி கட்டவில்லை./////////

    தமிழ்மணம் போன்ற ரேட்டிங் நடக்கும் இடங்களைக் குறித்தான ஒட்டெடுப்பைப் பற்றித்தான் குறிப்பிட்டேன்..

    ReplyDelete
  78. //////kmr.krishnan said...
    //சுய விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவிட்டு அறிவியல் பூர்வ விளக்கங்களை அறிந்து தெளிதல் //

    ஆம்! மைனர்வாள்.இங்கே எல்லோருமே அறிவியலைத் தவிர மற்ற எல்லாக் கோணங்களிலும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    என்ற குற‌ட்பாக்களை ஏனோ மறந்துவிடுகின்றனர்.

    'கதைக்கான கரு அளித்தவர் இன்னாரா, அவருக்கு முன்னால் மனப்பிறழ்வு ஏற்பட்ட வரலாறு என‌க்குத் தெரியும்;ஆகவே அவர் கூறியது இப்போதும் அதேபோலத்தான் இருக்கும்' என்ற எண்ணத்தில் பெருவுடையார் ஆரம்பித்து வைத்த இந்த 'மூத்தோரின் உடலாசை' என்ற விவாதம், நீர் எவ்வளவுதான் அறிவியல் பேசினாலும் இங்கே எடுபடாது.

    'நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை'யின் தன் வரலாற்றின் முடிவுரை நான்
    3 வது முறையாக எப்படி மனநோய்க்கு சிகிச்சை பெற வேண்டியது வந்தது
    என்பதுதான்.அப்போது தெரியும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே என் மன நோய்க்குக்காரணமல்ல என்பது.இப்போது நான் நன்றாக குணமடைந்துவிட்டேன் என்றாலும் யாரும் நம்பப் போவதில்லை.

    இங்கே,

    ஒருமுறை மனநோயாளி என்றால் எப்போதும் மனநோயாளிதான்.
    ஒருமுறை கற்பு இழந்துவிட்டால் நிரந்தரமாகவே எப்போதுமே அதேதான்.
    ஒருமுறை திருட்டுப்பட்டம் கட்டப்பட்டால் எப்போதுமே அதேதான்.

    நமது சமூகத்திற்கு அறிவியல் பார்வை கிடையாது.குருட்டு சமூகம். செவிட்டு சமூகம்.யாரவது வெள்ளைத் தோல்காரன் வந்து 'தஸ்புஸ்'னு ஆங்கிலத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வர்கள்.தமிழில் பேச வேண்டிய சப்ஜெக்டு இல்லை இது.//////

    தமிழிலும் பேசலாம்..

    சிலரின் போர்வைகளை விலக்கிவிட்டு,ஆக்கிரமிப்புக்களை அகற்றிவிட்டு..
    தமிழிலும் பேசலாம்..

    உதாரணத்திற்கு...
    குணா படத்து கமல் கேரக்ட்டர் மனப் பிறழ்வு அல்லது ஸீஜோஃபெர்னியா அடைந்த ஒரு ஆள் என்றே நான் ஒத்துக் கொண்டதில்லை..

    நீங்கலெல்லாம் இப்படி விஷயங்களை பொதுவில் எழுதுவது தவறு..

    குணா படத்து வசனங்களைத் தெளிவாக கேட்டால் படத்தைக் கூர்ந்து கவனித்தால் படத்தில் எங்குமே அப்படிச் சொல்லப்படவில்லை..மனப் பிறழ்வு அடைந்த மக்கள் அந்த கேரக்டரை பயித்தியம் என்றார்கள்..'சித்தப் பிரமை பிடித்தவன் என்றும் சுத்தி உள்ளவங்கலெல்லாம் பயித்தியம் என்றார்கள்' என்றும் பாலகுமாரன் வசனத்தில் அந்தக் கேரக்டரை எஸ்டப்ளிஷ் பண்ணி இருப்பார்கள்..'கண்மணி..அன்போடு காதலன்' பாட்டு சீனுக்கு முன் சீனில் இதனை வெளிப்படையாக சொல்லி ஹீரோயின் அந்தக் கேறேக்டேரை ஹீரோ ஆக்கிவிடுவாள்..அஜைரத்தினம் 'எதிரி ஆர்ம்ட்..கேர்புல்லா டீல் பண்ணுங்க' என்று போலிஸ் டீமுக்கு ஆர்டர் பண்ணும் அந்த கிளைமாக்ஸ் சீனில் கூட அஜைரத்தினத்தின் டென்ஷன்தான் அவரைத்தான் காமெடியனாக்கி இருக்கும்..தெனாலியும் அப்படியே..கிட்டத்தட்ட எக்ஸ்சென்ற்றிக் எல்லோருமே ஒரு வகையில் சராசரிகளால் இப்படி அழைக்கப் படுகிறவர்களாகத்தான் இருப்பார்கள்..

    தெனாலி பெற்ற வெற்றியை யார் கொடுத்தது..மக்கள்...தமிழ் மக்கள்..

    சில சமயங்களில் தெரியாமலேயே சரியானவற்றை சரியென்று தேர்ந்தெடுத்துவிடவும் செய்வார்கள்..

    ReplyDelete
  79. //நீங்கலெல்லாம் இப்படி விஷயங்களை பொதுவில் எழுதுவது தவறு..//

    காந்திஜி செய்த தவறை,ஸ்ரீ ராமகிருஷ்ணர் செய்த தவறை,தந்தைப் பெரியார்,செய்த தவறை நானும் செய்து பார்க்கிறேனே.

    உடனே அந்த 'ரேஞ்சு'க்குத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார் என்று 'லயன் மார்க் பட்டாஸு' வெடிக்கும்.பாவம், அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே புரியவில்லை.விட்டுவிட்டு நான் என்போக்கில் போகிறேன்.அவர் அவர் போக்கில் போகட்டும்.

    சரி. பெரியார் எப்படி அந்தக் கூட்டத்தில் சேர்ந்தார்? அந்த இரண்டு பேருடைய வாழ்க்கையைப் போலவே பெரியாரின் வாழ்க்கையும் ஒரு திறந்த புத்தகம்.

    பெரியார் எப்படி மக்களின் மனதில் இப்பவும் வாழ்கிறார்? அவர் பிராமண‌ரைப் பழித்ததாலா?இந்து மதத்தினை இழிவு படித்தியதாலா? நாத்திகம் பேசியதாலா?
    இந்த விஷயங்களில் அவருடைய வேலைகளின் 'ரிசல்டு' கண்ணுக்குத் தெரியவில்லை. வெளிப்பார்வைக்கு மக்களிடம் அவருடைய அந்த மூன்றுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.அப்படியிருந்தும் பெரியார் மக்கள் மனதில் வாழ்வதேன்?

    அதற்கான பதில் அவர் ஒரு வெளிப்படையான மனிதர். அவர் மடியில் ஒன்றும் இல்லை. அதனால் அவருக்கு வழிப்பயம் இல்லை.

    அவர் வேசியிடம் போய் 'நீ ஏன் வேசி ஆனாய்?' என்று கேட்கவில்லை.'நீ செய்வது தவறு' என்று உபதேசம் செய்யவில்லை.

    'உன் தொழிலின் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?' என்று கேட்கிறார். 'உன்னுடைய செலவு எவ்வளவு?' என்று கேட்டு, 'வரவுக்கும் செலவுக்கும்
    ஒத்துக் கொள்ள்வில்லை.உன் வியாபாரம் நஷ்டத்தில் ஓடுகிறது'என்கிறார்.

    அவ்வளவு யதார்த்தம் பெரியார்.அதனால்தான் அவருkகு இன்றும் ரசிகர் பட்டாளம் எல்லா தளத்திலும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  80. //////kmr.krishnan said...
    அவர் வேசியிடம் போய் 'நீ ஏன் வேசி ஆனாய்?' என்று கேட்கவில்லை.'நீ செய்வது தவறு' என்று உபதேசம் செய்யவில்லை.

    'உன் தொழிலின் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?' என்று கேட்கிறார். 'உன்னுடைய செலவு எவ்வளவு?' என்று கேட்டு, 'வரவுக்கும் செலவுக்கும்
    ஒத்துக் கொள்ள்வில்லை.உன் வியாபாரம் நஷ்டத்தில் ஓடுகிறது'என்கிறார்.

    அவ்வளவு யதார்த்தம் பெரியார்.அதனால்தான் அவருkகு இன்றும் ரசிகர் பட்டாளம் எல்லா தளத்திலும் இருக்கிறார்கள்./////

    இது கேள்விப்பட்டிறாத செய்தி..

    'விளக்கெண்ணையை உடலில் தேய்த்துக் கொண்டு மணலிலே பிரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்' என்று ஒரு பழமொழி உண்டு..அது பாலியல் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்..

    ReplyDelete
  81. //இதுக்குத்தான் மாமிக்குத் தெரியாம எதையுமே செய்யுங்கன்னு நான் தலையில அடிச்சுக்கிட்டேன்..
    இப்பவே பாதி ப்ளாக் கலரா தெரியுதே..//

    மாமியிடமும் மறைக்கலாம்.உங்களிடமும் மறைக்கலாம்.இந்த உலகத்திடமிருந்தும் மறைக்கலாம்.ஆனால் என்னிடமிருந்து நானே எப்படி மறைப்பது மைனர்? அதுக்கு வழி சொல்லுமேன் உமக்குத்தெரிந்தால்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com