மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.11.11

எதை ஊக்குவிக்க வேண்டும்?

----------------------------------------------------------------------------
மாணவர் மலர்

இன்றைய மாணவ மலரை எட்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 1
சிலேடை
By V.Gopalan, Thanjavur


இந்த ஒற்றைச் சொல்லை மட்டும் யாரிடமாவது சொன்னால், உடனடியாகப் புரிந்துகொள்வார்களா என்பது தெரியவில்லை. சிலேடைக்குக் கவி காளமேகம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. சங்கக் கூட்டமொன்று. அதில் நான் கோபமாக "கையாலாகாதத்தனம்" என்று எதிரணி மீது குற்றம் சாட்டிப் பேசினேன். ஒரே எதிர்ப்பு. Unparliamentary word என்று அதைத் திரும்பப் பெற்றுக் கொள் என்றனர். அது என்ன பொருளா, திரும்பப் பெறுவதற்கு 'சொன்ன சொல்லும், ..... செலவிட்ட பணமும் திரும்பப் பெறமுடியுமா?" என்றேன். தொடர்ந்து அந்தச் சொல்லுக்கு பதிலாக "இவர்களது செயலிழந்த தன்மை" என்று சொன்னேன். அமைதி நிலவியது. இரண்டும் ஒரே பொருள்தான், இருந்தாலும் சில சொற்கள் ஆழப் புதைந்து புண்படுத்தும், சில பழகிப் போனவை.

சிலேடைக்கு கி.வா.ஜ.வைக் குறிப்பிட்டிருந்தார் கே.எம்.ஆர். ஆம், அவர் சாதாரண பேச்சு வழக்கில் பல சிலேடைகளை உதிர்த்திருக்கிறார். ஒரு முறை இவர் கலைவாணர் இல்லத்துக்குப் போனாராம். அங்கு இவருக்கு காபியா, டீயா என்று கேட்டனர். இவர் சொன்னார் டீயே மதுரம் என்று. அப்படியொரு கதையைச் சொல்வார்கள். (கலைவாணரின் மனைவி பெயர் டி.ஏ.மதுரம்)

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஐம்பதுகளில் மூன்றாம் பிளாட்பாரத்தில் ஸ்ரீரங்கம் பால்பண்ணை பால் இரவு எட்டு மணிக்கு மேல் கிடைக்கும். நண்பர்களோடு அங்கு போவோம். ஒருநாள் ஒரு நண்பர் எனக்கு நிர்வாணப் பால்தான் வேண்டுமென்றார். அனைவரும் விழித்தனர். அவர் சொன்னார், எனக்கு ஆடை நீக்கிய பால் வேண்டுமென்பதைத்தான் அப்படிச்சொன்னேன் என்றார்.

இன்னொரு நிகழ்ச்சியும் சொல்வார்கள். ஒரு வீட்டு விருந்துப் பந்தியில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது ரசம் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுபவர் சொன்னாராம். அப்படியானால் கையைப் பிடியுங்கள் என்றாராம் பரிமாறிய பெண்மணி. கையை ஏந்தி அதில் ரசத்தைப் பிடியுங்கள் என்று சொன்னதை, இவர் அந்தப் பெண்ணின் கையை எப்படிப் பிடிப்பது என்று திகைத்துப் போய் கேட்டாராம்.

இரட்டைத் தெரு, ஒத்தைத்தெரு, நடுத்தெரு என்றெல்லாம் தெருக்களுக்குப் பெயர் உண்டு. நடுத்தெருவில் குடியிருந்த ஒருவர் புதிய வீடு கட்டிக் கொண்டு சென்றாராம். அவரை இவர் விசாரிக்கச் சென்றபோது சொன்னது, 'இதுவரை நடுத்தெருவில் இருந்தீர்கள், நல்ல காலம் இப்போது சொந்தமாக வீடுகட்டிக் கொண்டு போய்விட்டீர்கள் என்று.

ஒரு நண்பர் வீட்டுக்குப் போன இடத்தில் அவர் குழந்தைக்கு உடலில் பல கட்டிகள் இருப்பதை கவனித்தார். குழந்தையின் தந்தையிடம் இவனுக்குப் பால் வாங்கிக் கொடுங்களேன், இவைகள் உஷ்ணக் கட்டி என்றார். அதற்கு அவர் பால் வாங்கிக் கொடுத்தால் கட்டி வருமா? என்றார். தன் வருமானத்துக்கு இந்த செலவு கட்டி வருமா என்பது அவர் கேள்வி. இவர் சொன்னார், ஆமாம், கட்டி வராது அதனால்தான் பால் தரச் சொல்கிறேன் என்றார். இவர் சொன்னது பால் சாப்பிட்டால் குழந்தைக்கு கட்டி வராது என்று.

திருமண விருந்தொன்றில் உணவருந்தி கைகழுவச் சென்றவிடத்தில் ஒருவர் குவளையில் தண்ணீர் மொண்டு கொடுத்தார். கை கழுவும்போது இவர் சொன்னார், தண்ணீரில்தான் குவளை இருக்கும், இங்கு குவளையில் தண்ணீர் இருக்கிறதே என்று. குவளை என்பது மலரையும் குறிக்கும், நீர்மொள்ளும் குவளையையும் குறிக்கும்.

நான் தஞ்சாவூரான் என்பதால் தஞ்சாவூர் செய்தியொன்று. பெரிய கோயிலில் ராஜராஜன் சதயத் திருநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெருவுடையாருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் நடந்தது. அதனைப் பார்க்க வந்திருந்த வி.ஐ.பி.க்கள் அனைவரும் இரு வரிசையாக சந்நிதிக்கு எதிரில் அர்த்தமண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அபிஷேகமான சந்தனத்தை ஒரு பெரிய அண்டாவில் வைத்துத் தூக்கிக் கொண்டு இருவர் வந்தனர். வரும்போதே, கூட்டத்தை விலக்குவதற்காக 'வழி, வழி' என்று சத்தமிட்டபடி வந்தனர். அப்போது அங்கு உட்கார்ந்திருந்த இவர் அந்த அண்டாவின் விளிம்பில் இருந்த சந்தனத்தை வழித்து எடுத்தார். அருகில் இருந்தவர் ஏன் இப்படி எடுக்கிறீர்கள் என்று கேட்க, இவர் சொன்னார், அவர்கள்தான் வழி, வழி என்று சொன்னார்கள் நான் வழித்தேன் என்றார்.

இப்படி எத்தனையோ சொல்லலாம், இருந்தாலும் இது போதும். சிலேடை சிரிக்க வைப்பதுதான். இருந்தாலும் அதைக் கொண்டு யாரையும் புண்படுத்தக் கூடாது.
அன்புடன்
V. கோபாலன், தஞ்சாவூர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
 அக்காலத் தலைவர்களும், தொண்டர்களும்!
By KMRK, Lalgudi

அரசியல், கொள்கை வழி நடந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன‌. இப்போது அரசியலில் சித்தாந்தங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சாதீயம், பணபலம், ஆள் பலம்,என்று ஆகிவிட்டது.

இது நாள் வரை கம்யூனிஸ்டுகள் தான் தங்களுக்குள்ளாவது சிறிது கொள்கை பேசிக் கொள்வார்கள் என்று எண்ணி இருந்தேன்.

ஆனால் சுதந்திரப்போராட்ட காலத்தில் எப்படி ஒரு தொண்டன் கூட தலைவர்களுடன் கொள்கை பற்றிப் பேச முடிந்துள்ளது; முரண் பட முடிந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களைக் காண முடிந்தது. அதனை உங்க‌ளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(இதை அனுஷ்கா சர்மா கூடப் படிக்கப் போகிறார். எப்படி உனக்குத் தெரியும் என்கிறீர்களா?அது ரகசியம்.):):

தீரர் சத்திய மூர்த்தியை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியவில்லை.கர்மவீரர் காமராஜரின் அரசியல் வழிகாட்டிதான் மறைந்த சத்தியமூர்த்தி. தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் திருமயம் என்ற ஊர் வரும். அந்த ஊர்க்காரர்  சமயத்தில் தமிழ்நாட்டில் நல்ல அறிமுகமான தலைவர்.தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் அக்கால‌த்தில் முக்கியமானவர். பார்லிமெண்டேரியன். பல அரசியல் சபைகளைக் கணடவர்.

கோவை சி ஏ அய்யாமுத்து கதர் பணியில் மஹாத்மாவின் பாராட்டைப் பெற்றவர். அக்காலத்தில் காங்கிரசின் வேலைத் திட்டமான கதரை தமிழகத்தில் முன்னெடுத்துச் சென்றவர்.

தீரர் சத்தியமூர்த்தியுடன் ஒப்பிட்டால் ,அவர் தலைவர், அய்யாமுத்து தொண்டர் என்றே சொல்ல வேண்டும்.

இவர்களுக்குள் நடந்த கடிதப் பரிமாற்றம் இது.

இருவரும் தமிழ் அறிந்திருந்தும் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுள்ளனர். அது அக்கால வழக்கம்.

மொழி பெயர்த்து (சிறிது குறைத்துக்) கொடுத்துள்ளேன்.

தீரர் சத்தியமூர்த்தி சோசலிசத்தைப் பற்றி ஆங்கிலேயர் முன்னிலையில் இழிவாக ஏதோ கூறியிருக்கிறார். அப்போது ஜவஹர்லால் நேரு சோசலிசம் பேசி வந்துள்ள காலம். இளைஞர்களுக்கு நேருவின் சோசலிசம் பிடித்து இருந்தது. இளைஞரான அய்யாமுத்துவுக்கும் சோசலிசக் கருத்து பிடித்து இருந்தது.

எனவே சோசலிசத்தினைத் தாழ்வாகப் பேசிய சத்தியமூர்த்தியைக் கண்டித்து நாளிதழில் கடிதம் எழுதுகிறார் அய்யமுத்து.

அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார் தலைவர். பதிலுக்கு பதில் கொடுக்கிறார் தொண்டர். மேலே படியுங்கள்.

           அய்யமுத்துவுக்கு சத்தியமூர்த்தி எழுதிய கடிதம்
          =========================================
                                                                                                                                                                         1 மே 1936 
                                                                  
அன்புள்ள அய்யமுத்து! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் உங்கள் கடிதம் இன்று காலை வாசித்தேன்.இது போன்ற கடிதங்களைப்பற்றி எனக்கு எந்த முரணும் இல்லை. சோசலிசத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் புரிந்து கொண்டிருப்பதினை நான் அறிந்தே இருக்கிறேன்.சில சோசலிசக் கருத்துக்களுக்கு என்னுடைய 'சிம்பதி', அனுதாபம் கூட உண்டு. காங்கிரஸ் மனம் போனபடியெல்லாம் (லூசாக)ப் பேசுவதை நிறுத்தித் தன் கொள்கைகளை வரையரை செய்ய வேண்டிய கால க‌ட்டம் வந்துவிட்டது. காங்கிரஸ் சோசலிசத்தைக் கொள்கையாக ஏற்கவில்லை. பண்டித ஜவஹர்லால் அதனை பரப்பி வருகிறார்.அதனை எதிர்த்துச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இருப்பினும் உங்கள் கடிதத்தில் சொல்லும் சோசலிஸ்டுகளுக்கு என் ஆட்சேபம் ஏதுமில்லை.                                                                                                          
உங்கள் உண்மையுள்ள,
எஸ் சத்தியமூர்த்தி       
--------------------------------------------------------------------------------------------------------------                                                                                                            
                  சத்தியமூர்த்திக்கு அய்யாமுத்து எழுதிய கடிதம்
                 ==========================================
                                                                                                                  
                                                                                திருப்பூர், 2 ஜூன் 1936
அன்புள்ள சத்தியமூர்த்தி,

நான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் எழுதிய கடிதத்தை நீங்கள் கண்ணுற்று, அதனைப்பற்றி எனக்கு எழுதியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சோசலிசத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகப் புரிந்து வைத்து இருப்பது சோசலிசத்தின் தவறல்ல.  நீங்கள் சோசலிசத்தினை முழுமையாக எதிர்க்கவில்லை; சில கருத்துக்களைத்தான் எதிர்க்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் சோசலிசத்திப் பற்றி எதனை ஆதரிக்கிறீர்கள் எதனை எதிர்க்கிறீர்கள் என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும்படி காங்கிரஸ் ('லூஸ் டாக்')மனம் போனபடி ஒன்றும் பேசவில்லை. இந்தியாவிற்கு பூரண சுயராஜ்யம் வேண்டும் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கராச்சி காங்கிரஸ்ஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சோசலிசத்தின் பக்கமே சாய்ந்துள்ளது.   அந்தத் தீர்மானம், வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டு உரிமை,சொத்து வரி,முக்கியமான தொழில்கள், மற்றும் கனிமவளத்தின் பேரில் அரசுக் கட்டுப்பாடு, முதுமை, வேலையின்மை,நோய் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரப்
பின்னடைவுக்கான காப்பு ஆகியவற்றைப் பேசுகிறது.

மேற்கத்திய சோசலிசத்தின் பல கூறுகளை நீங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள்.

இந்திய சோசலிஸ்டுகள் மேற்கத்திய சோசலிசத்தினைக் காப்பியடிக்க விரும்பவில்லை. நாங்கள் ரஷ்ய சோசலிசத்தை மேற்கோள் காட்டினால் அதனை அப்படியே கைக் கொள்ள விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.

ஜவ‌ர்லால் சோசலிசத்தை ஆதரித்தால் நீங்கள் எதிர்க்க உரிமையுண்டு என்கிறீர்கள். நல்லது. அப்படியே எதிருங்கள்.ஆனால் சோசலிசத்தை எந்த இடத்தில் ஆதரிக்கிறீர்கள் எதில் எதிர்க்கிறீர்கள் என்று விள‌க்கமாக நிறுவுங்கள்.

இப்படிப்பட்ட கருத்து மோதல்கள் நல்ல புரிதலுக்கு வழி வகுக்கும். ஆன‌மலையில் நீங்கள் பேசியுள்ளது முற்றிலும் நீங்கள் சோசலிசத்திற்கு எதிரானவர் என்று காட்டுகிறது.

நான் கூறும் சோசலிசத்தினை நீங்கள் ஒப்புக் கொள்வதாகத் தெரிகிறது.என‌வே இன்னும் கொஞ்ச‌ம் அதனை நான் விவரிக்க அனுமதியுங்கள். அதன் மேல் உங்கள் அபிப்ராயத்தைத் தெரிவியுங்கள்.

சோசலிசம் என்பது சட்டத்தை உடைப்பதோ, வன்முறையோ,நுண்ணிய மன உணர்வுகளினை அழிப்பதோ அல்ல.

வரலாற்றுப் பின்னணியில் நிர்மாணிக்கப்பட்ட சமூக,பொருளாதாரக் கொள்கையாகும்.நடைமுறை வாழ்க்கைகாக அமைக்கப்பட்ட ஓர் அறிவியல் சோசலிசம்.  மானுட முன்னேற்றத்தினை வேகம் கொள்ளச் செய்யவும், இந்த பூமியை நல்லதோர் வாழ்விடமாக்கவும் சோசலிசம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவில் பயன் படும் அனைத்தையும் பொது உடமையாக்க சோசலிசம் நினைக்கிற‌து.   தனி நபர் தன் சுய‌ உழைப்பால் அடைந்ததை சோசலிசம் பொதுவில் வைக்கச் சொல்லவில்லை. ஆனால் நிலம்,ரயில்வே, பெரிய தொழில்கள், சுரங்கங்கள் ஆகியவை தனி உடமை ஆவதை சோசலிசம் அனுமதிக்காது.

ஒரு நெசாவாளி தானும் 6 பேர் உள்ள குடும்பமும் பட்டினியுடன் வேலையின்றி தெருவில் அலைகிறான். பண முதலை நடத்தும் ஒரு மில்லுக்குள் மற்றொரு தொழிலாளி தன் சக்திக்கு மீறிய வேலை செய்ய நிர்பந்திக்கப் படுகிறான்.வெளியில் வேலையின்றி இருப்பவனை முதலாளி உள்ளே அனுமதிக்க மாட்டான். பட்டினி கிடப்பவன் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதானா?அவனைப் பார்த்து நீங்கள் மனம் இறங்கவில்லையா?

ஒரு நூறு கூலித் தொழிலாளிகள் நிலத்தில் பாடுபடுகிறார்கள்.அவர்களுக்கு நான்கு மாத வேலையே கிடைக்கிறது. மீதி எட்டு மாதங்கள் அவர்கள் வேலையின்றித் தவிக்கிறார்கள். அவர்களின் முதலாளியோ அந்த உற்பத்தியின் மீது அழுத்தமாக அமர்ந்து அனுபவிக்கிறான். போலீசும் சட்டமும் அவர்களை த‌ற்கொலை செய்யவும் அனுமதிக்காது. திருடவும் அநுமதிக்காது எப்படித்தான் அவர்கள் உயிர் வாழ்வது? இதனைப் பார்த்தும் அது அவர்களுடைய கர்ம பலன், விதி, கடவுளின் இச்சை என்பீர்களா?

கிறித்துவக் கோட்பாட்டின் படி ஆதாமும் ஏவாளும் உழைத்தே உண்ண அவர்களின் கடவுள் விதித்துவிட்டார்.ஆனால் அந்த வெள்ளையர்களில் எல்லோரும் அவர்கள் கடவுள் சொன்ன படி உழைத்துச் சாப்பிடுகிறார்களா?

அவர்களுடைய அரசாங்கம் சொத்துள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாங்கம்; அவர்கள் முன்னிலையில் நீங்கள் சோசலிசத்தைக் குறை கூறி எவ்வாறு பேசலாம்? அது அவர்களை ஆதரிப்பது ஆகாதா?....

தங்கள் உண்மையுள்ள,
சி ஏ அய்யமுத்து.

========================================
இந்தப் பதிவு சோசலிசக் கருத்துக்களை எடுத்துச்சொல்ல நான் எழுதவில்லை. எப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு தொண்டன் கூடக் கொள்கைப் பிடிப்புடன் தலைவர்களுடன் உரையாட முடிந்துள்ளது என்பதைக் காட்டவே எழுதினேன்.

அந்த சமயத்தில் சத்தியமூர்த்தி காங்கிரஸ்ஸில் இல்லை என்று நினைக்கிறேன். அவர் சுயராஜயக் கட்சி என்பதில் இருந்து அரசு பதவியில் இருந்திருக்கலாம். சரியான வரலாறு தெரிந்தவர்கள் ,தஞ்சாவூர் பெரியவர் போல, கூறலாமே!
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                                                  

----------------------------------------------------------------------------
3
மழை
Short story by Srishobana

அடர்ந்த மேகங்களுக் கிடையில் மிதந்து வந்த ஈரக்காற்றில் லயித்துப்போனவளாய் நின்று ரசித்துக்கொண்டிருந்தாள் ஆறு வயது குட்டிப்பெண் லயா. ங்கும்,அங்கும் கலைந்தோடிக் கொண்டிருந்த மேகங்களைப்போன்றுஓடிக்கொண்டிருந்ததுஅவள் சிந்தனையும்.

"லயா குட்டி,என்ன பண்ற நீ இன்னும் கிளம்பலையா?" என்ற அப்பாவின் குரலில் நினைவலைகளில் இருந்து வந்தாள்.

"சரிப்பா" என்ற அவளது குரலில் தெரிந்த வாட்டத்தை லயாவின் அப்பா கவனிக்கத் தவறவில்லை.

மேகங்கள் இன்னும் ஒன்றை ஒன்று அருகில் நெருங்கிக் கொண்டே கறுத்துப்போயிருந்தது.

அம்மா லயாவைஅலங்கரித்து குட்டி தேவதையாக அழைத்து வந்தாள்.காற்றின் வேகம் இன்னும் அதிகரித்திருந்தது.

"அம்மா,மழை வந்திடுமாம்மா?"என்ற அவளது குரலில் சோகம் நிறைந்திருந்தது.

"ஆமாம்டா செல்லம், நாம சீக்கிரமா கிளம்பிட‌னும்"என்று அம்மா அவசரம் காட்டினாள்.

"அப்பா, வண்டி வந்துவிட்டது" என்று துள்ளியபடியே ஓடி வந்தான் லயாவின் அண்ணன் சரண்.

வீட்டின் வாசலில் புகையை கக்கியபடியே வந்து நின்ற ஆட்டோவைப் பார்த்த பின்னரே அனைவரும் நிம்மதியடைந்தனர், லயாவைத் தவிர.

வானம் இப்பொழுது முழுவதும் மூடி தூறல் விழ ஆரம்பித்தது.

சரணும் அம்மாவும் முதலில் ஏறி அமர்ந்தார்கள். லயாவை அப்பா மடியில் வைத்து அம்ர்ந்துகொண்டார்.

"அப்பாடா,ஒரு வழியாவண்டியிலே ஏறிட்டோம்.இன்னும் கொஞ்சதூரம்தான் தியேட்டருக்குப் போயிட‌லாம்" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார் அப்பா.

"எங்கே வராமல் இன்னிக்கும் ஏமாத்திவிடுவீங்களோன்னு நினைச்சேன், நல்ல வேளை வந்துடீங்க‌" என்றாள் அம்மா.

"நானும் அப்ப‌டித்தான் நினைச்சேன், மேன‌ஜ‌ர்கிட்டே அப்ப‌டி இப்ப‌டிச் சொல்லி பெர்மிஷ‌ன் வாங்கிட்டு வ‌ந்தேன். எல்லாம் லயாவிற்க்காகதான்" என்று கூறிக்கொண்டே லயாவிடம் "இப்போ சந்தோஷந்தானே" எனக் கேட்ட அப்பாவிற்குக் கிடைத்த பதில், "ம்" மட்டுமே.

"லயா என்ன ஆச்சு உனக்கு? உனக்காகத் தானே நான் இன்னிக்கு முதல் தடவையா உங்க எல்லோரையும் தியேட்டருக்குக் கூட்டிகிட்டுப் போகிறேன்!"

"அப்...ப்..பா" என தயக்கத்துடன் அவள் ஆரம்பிக்கையில் டிராஃப்க் சிக்னலில் சிகப்பு லைட் எரிய தொடங்கியது. ஆட்டோவின் சத்தம் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டது.

வண்டி நின்றவுடன்லயாவின் கண்கள் தெருவோரங்களில் எதையோ தேடி அலைந்து கொண்டேயிருந்தது. இப்பொழுது வானம் பொத்துக் கொண்டு மழை பெய்யத் தொடங்கியது.

"சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு" என அப்பா சற்று வாடிய குரலில் கேட்க, பேச ஆரம்பித்தாள் லயா,

"ப்பா,இன்னிக்கு சாயங்காலம் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும்போது இங்கே தானப்பா நாலு நாய்க் குட்டிங்களைப் பார்த்தேன், அது”என ஆரம்பிக்கும் போதே அப்பாவுக்கு லயாவின் வாடிய முகத்தின் காரணம் புரிந்தது.

அதற்குள் அம்மா குறுக்கிட்டு "ஆரம்பிச்சிட்டியா, நாய் பூனைன்னு.சாயங்காலமேஉங்கிட்டே என்ன சொன்னேன்,ஆங்" என அத‌ட்டினாள்.

"கொஞ்ச‌ம் அமைதியாயிரு. அவ‌ளை ஏன் திட்டுறே. அவ‌ சொல்ற‌தை கேட்போமே - நீ சொல்லுமா"

"அப்பா, நாலு நாய்க்குட்டிங்க இங்கே தான் இருந்துச்சுப்பா...அதுங்க‌ எல்லாம் குட்டியா ரொம்ப‌ அழ‌கா இருந்துச்சுப்பா...அம்மா அதை எடுக்க‌க் கூட‌ விட‌லை"

"ல‌யாம்மா,உன்னை பார்க்காம‌ நானும்,அம்மாவும் இருக்க‌ முடியுமா, அது மாதிரி தானே அந்த‌ குட்டிங்க‌ளோட‌ அம்மாவுக்கும்"

"ம்...சரிப்பா...ஆனா மழை பெய்யுதே...குட்டிங்க மழையில"

“ஒண்ணும் ஆகாது, இப்போ நீ சும்மா இருக்கியா இல்லையா" அம்மா சற்று எரிச்சலுடன் கத்தினாள்.

"ஏன் குழந்தையை திட்டுற...அந்த குட்டிங்க மழையில நனையிதுன்னு வாடி போயிருக்கிற அவளோட முகத்தைப் பாரு! அந்த வாயில்லாத ஜீவன்களுக் காக எப்படி இரக்கப்படறா பாரு ஹேமா, பிள்ளைங்களைஇன்னிக்கு இந்த வயசில்ல‌ நாம நல்லதை செய்ய‌ ஊக்கப்படுத்தினா தானே நாளைக்கு நல்லவங்களாஅவங்க‌வளர முடியும்"

"இப்படியே எதையாது சொல்லி என் வாயை அடைங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு"

"அ..ப்பா...அதோ அங்க‌ குட்டிங்க மழையில நனைஞ்சுட்டு இருக்குப்பா, பாவம்ப்பா"என்றுகூறிக்கொண்டே அவள்அப்பாவின் மடியில் இருந்து இறங்கி ஓட நினைத்தவளாய்எழுந்தாள்.சுதாரித்துக் கொண்ட அவளது தந்தை ஆட்டோவை ஓரமாக நிறுத்த சொல்லி, பின் தான் எடுத்து வந்திருந்த‌ குடையை விரித்து ஒரு கையில் வைத்து கொண்டும் மறு கையில் அவரது செல்லப்பிள்ளை லயாவை பிடித்துக் கொண்டும் வண்டியிலிருந்து அவள் கைக்காட்டிய இடத்தை நோக்கை நடந்தார்.

குட்டிகளின் தாய் மழைக்கு பயந்து ஒரு கடை வாசலில் ஒதுங்கி நின்று கொண்டு குட்டிகளையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்து என்ன செய்வது என்று சற்று யோசித்தபடியே இங்கும்,அங்கும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அப்பாவின் மூளையில் திடீரென எடிச‌னின் பல்ப் பிரகாசமாய் எரிந்தது.

"லயா,இந்தா நீ குடையைபிடிச்சுக்கோ அப்பா குட்டிங்களையெல்லாம்  தூக்குறேன், சரியா"

"ம்.சரிப்பா" குடையை லயா வாங்கிக் கொண்டாள்.

பின்பு, அப்பா முத‌லில் இரண்டு குட்டிகளை தூக்கி செல்ல,அப்பாவுக்கு குடை பிடித்துக்கொண்டே லயாவும் அப்பாவை பின்தொடர்ந்தாள் .அருகில்  இருந்த  நிழற் குடையை நோக்கி நடந்தார்.அங்கே பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை வியப்புடன்பார்த்தனர். நிழற்குடையில் ஒரு ஓரத்தில் இரண்டு குட்டிகளையும் வைத்தார். பின்னர் மற்ற இரண்டு குட்டிகளையும் அந்த குட்டிகளுடன் கொண்டு வந்து சேர்த்தார். குட்டிகள் எல்லாம் மழையில் நனைந்து போனதால்நடுங்கிக்கொண்டிருந்தன.

"அப்பா, மழையிலே குட்டிங்களுக்கு ஜுரம் வந்துடும், இந்த கர்சீஃபை வ‌ச்சு போர்த்தி விடுங்கப்பா" என்று தன் கைக்குட்டையை நீட்டினாள் லயா. அப்பா லயாவைப் புன்சிரிப்புடன் பார்த்தார்.

"ம்.சரி,கொடு"

கைக்குட்டையை வாங்கி தரையில் விரித்து அதன் மேல் குட்டிகளை படுக்க வைத்தார் லயாவின் அப்பா.

"ரொம்ப அழகா இருக்குதுப்பா" என்று குட்டிகளை தடவி கொடுத்தாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக நின்று பார்த்து கொண்டிருந்த குட்டிகளின் வயதான‌ தாய் குட்டிகளிடம் ஓடி வந்தது.குட்டிகளைஅணைத்துக் கொண்டு அவைகளுக்கு பாலூட்டத் தொடங்கியது.

"ஓகே,குட்டீஸ்...உங்க அம்மா வந்துட்டாங்க. உங்க புது வீட்ல நல்லா தூங்குங்க...பை...பாய்"

அவர்களை வியந்து பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்தில் வெட்கி மெளனமாகினர்.

"சென்னையிலேயும் எப்போதாவது அடைமழை எப்படி பெய்யுதுன்னு இப்போதான் புரியுதுப்பா" என ஒரு வயதான பெரியவர் கூறியபடியே சென்றார்.

நான்கு குட்டிகளையும் காப்பாற்றிய சந்தோஷத்தில் லயாவும், தன் மகளின் இரக்கக் குணத்தையும்,உதவும் பண்பையும் எண்ணி மகிழ்ந்தபடியே தன் மகளை தோளில் தூக்கிக் கொண்டு பெருமையுடன் ஆட்டோவை நோக்கி நடந்தார்கள்.

"இது நாள்வரை நான் தான் தவறு செய்துவிட்டேன்...என் குழந்தையின் நல்ல குணத்தை ஊக்குவிக்காமல் இருந்து விட்டேன்...என் பிள்ளை இன்னிக்கு எனக்கு நல்ல வாழ்க்கை பாடம் கற்று கொடுத்து இருக்கிறாள்"  அம்மாவின் மனம் சந்தோஷத்திலும் கலங்கியது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
 மழைக்காலம்

வருண பகவானே - உன்
ஆட்சி நடக்கிறது - இன்று
உனக்கோர் விண்ணப்பம்
உவந்து செவிமடுக்க!

படைத்தளபதி  புயலாரோடு - நீ
பயணித்து வருகையில் - உன்
வேகத்தில் சிக்கிச் சீரழிவது
வாழை மட்டுமல்ல - ஏழையும் தான்!

விளைச்சலை விட்டாயா?
விவசாயியை விட்டாயா?
மாணவனும் விலக்கில்லை
மீனவனும் விலக்கில்லை

விரல்பிடித்து விளையாடும்
சேய்மழையாய் வந்துசெல்!
வீட்டை இழந்து  ஓலமிடும்
பேய்மழையைப் பொழியாதே!  .

"கோடை’யில் விருந்தாய் வா
குளிர்காலத்தில் கணக்காய் வா.
எக்காலத்திலும் கன்னியாய் வா
எழில்கொஞ்சும் பெண்ணாய் வா!

உன்னை நேசிக்கின்றோம்
உளமாறச் சொல்கின்றோம்
நீரின்றி உலகில்லை
நீயின்றி வாழ்வில்லை
 
மழையாய் மட்டும்  வா!
மகிழ்ச்சியை மட்டும் தா!
பிழை  ஏதும்  செய்யாமல் - எங்களை
பிழைக்க விடு! கோடி வணக்கம்!

- தனூர்ராசிக்காரன்,  Brunei
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
 ஒரு தலைவரின் கதை!
By Minorwall alias Kailasam Gnanaprakasam Nepolean, Japan

கண்ணில் ஏதோ உறுத்தலாகத் தோன்ற கறுப்புக்கண்ணாடியை  கழட்டி டேபிளில் இருந்த செய்தித்தாளின் மீது மடித்து வைத்தவர், நிலைக்
கண்ணாடிக்கு முன் சென்று என்ன விழுந்தது கண்ணில் என்று கொஞ்சம் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்..அப்படி ஒன்றும் பெரிதாக பிரச்சினை
இல்லை என்று உறுத்தல் அடங்கியதால் உறுதி செய்துகொண்டவராக இருக்கைக்குத் திரும்ப எத்தனித்த பெரியவருக்கு கண்ணாடியில் தன்
உருவம் ஏதோ உறுத்தலாகப் படவே ஆழ்ந்து பார்த்தவருக்கு முகத்தில் ஆங்காங்கே கவலை ரேகைகள் ஆழமாக ஊடுருவி ஓடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது..வழக்கத்துக்கு மாறாக விழிகளில் பிரகாசம் குன்றிப்போய் நம்பிக்கை இழந்து நாடி தளர்ந்த முதியவனாக அவரை அந்தக் கோலத்தில் நீண்ட நேரம் பார்க்க அவருக்கே பிடிக்கவில்லை.

வீட்டில் எல்லோரையும் ' என்னைக் கொஞ்சம் தனிமையில் விடுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டபடியால் இன்னபிற பெரிசுகள்,பேரக் குழந்தைகளின் பேச்சுச் சத்தமின்றி ஆழ்ந்த மவுனம் மட்டுமே தலைவருடன் அங்கே குடிகொண்டிருந்தது..கனத்த இதயத்தோடு இருக்கைக்குத் திரும்பியவருக்கு மேசையில் இருந்த செய்தித்தாள் செய்தி கண்ணுக்குப் பட்டது..சில மாதங்களுக்கு முந்திய செய்தித்தாள் அது..மாதங்கள்தான் முடிந்திருந்ததே  தவிர அதிலே வந்திருந்த செய்திதான் தலைவரின் இந்த சலனத்துக்குக் காரணம்..ஆரம்பம்..அதன்பின் ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு செய்தி என்று தலைவருக்கு தொடர்ந்து தலைவலிதான்..தலைவலி என்ற நினைப்பு வந்ததுமே கோடாலித் தைல பாட்டில் எங்கே  என்று தேடி எடுத்து கொஞ்சம் நெத்தியிலே தடவிவிட்டுக் கொண்டார்..ஈசி சேரில் சாய்ந்து கண்ண யர்ந்தார்..உறக்கம் கொள்ளவில்லை..கண்கள்  மட்டுமே மூடியபடி..மனசுக்குள் ஒவ்வொன்றாக காட்சிகளும் கேள்விகளும் வந்து அலை மோதின..

ஏன்? ஏன் இப்படி நடந்தது? நடக்கத்தான் முடியுமா? இந்த மக்கள் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவேயில்லையே. இப்படி ஒரு மாபெரும்
தோல்வியை எனக்குக் கொடுக்க இவர்களுக்கு எப்படி மனசு வந்தது?அப்படி இவர்களுக்கு நான் என்ன கொடுமை செய்துவிட்டேன்?சென்ற  முறை ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு சராசரி ஆளையும் கணக்கில் வைத்து அரும்பாடுபட்டு ஒவ்வொன்றாய் நல்லநல்ல திட்டங்களாய்ப்  பார்த்துப் பார்த்து செய்து இதுவரையில் நாம் செய்திராதது, வரலாற்றில் யாருமே செய்திருக்க முடியாதது என்றெல்லாம் செய்தேனே..என்னைப்  போய் இப்படிக் கவிழ்த்துவிட்டார்களே?என்று ஆற்றாமையும் கோபமும் எழுந்தது.

எதிர்க்கட்சிகள் என்னதான் புரட்டுப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டாலும் இந்த மக்களுக்கு, எனது திட்டங்களை அனுபவித்த மக்களுக்கு  எங்கே போச்சு புத்தி?

'நான் ஏமாற்றுக்காரனாம்..ஊழல் பேர்வழியாம்..குடும்பத்துக்கே எல்லாவற் றையும் தாரை வார்த்துவிட்டேனாம்..’என்னவெல்லாம் புழுதிவாரித்
தூற்றுகின்றன இந்தப்பத்திரிகைகள்..இதை எழுதுபவனுக்கெல்லாம் இதயம் என்பதே இருக்காதோ? இவர்களுக்கு எதிர்கட்சியின் ஆட்சிகள் நடந்த போது இருந்த அடக்குமுறை, கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, ஃபாசிசப் போக்கு என்றெல்லாம் என்னிடம் வந்து கெஞ்சியவர்களாயிற்றே? அப்படியே மறந்துவிட்டு, துடைத்துப் போட்டுவிட்டு எதிர்க்கட்சியின் ஆட்சியைப் புகழவும், நம்மை இகழ்ந்து எழுதவும்  செய்கிறார்களே..என்ன ஆத்மாக்கள் இவர்கள் என்று மக்கள் மேலும் பத்திரிகையாளர்கள் மேலும் பொத்தாம் பொதுவிலே வேகமும் கோபமும்  தொடர்ந்தவண்ணமே இருக்க  BP வேறு எகிறுகிறதோ என்ன சொல்லப் போகிறாரோ வரவிருக்கிற டாக்டர் என்று அந்தக்கவலை வேறு  தொற்றிக்கொள்ள மேசையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து ஒரு மடக்குக் குடித்தார்..

தொண்டையில் கொஞ்சம் இறுக்கமாக இறங்க திடீர்வலி சுரீரென்று..அடுத்த மிடக்கைக் குடிக்க எத்தனித்தவர் அதைக் கைவிட்டு தொண்டையை  கைகளால் நீவிவிட்டவண்ணம் அங்கேயும் கொஞ்சம் கோடாலித் தைலத்தை தடவிக்கொண்டு சற்று வசதியான போஸில் சாய்ந்து படுத்தார்..
யோகா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மனஅமைதி..அதன்பின் தூக்கம் வரவழைக்கும் முயற்சியாக கண்களை இருக்க மூடி பின் இமைகளைத்
தளர்த்தி என்று நான்கைந்துமுறை செய்து கறுப்புத் திரையை மனதில் கொண்டுவந்து அப்படியே ஒண்ணு..ரெண்டு..மூணு..எண்ணிக்
கொண்டே..ஒரு இருபத்துநாலு வரை எண்ணியிருப்பார்..திடீரென்று காலைவாரிவிட்ட பேரூராட்சித் தலைவரு  கண்ணுக்குள் வந்தார்..ச்சே..என்ன

மனிதர்கள் இவர்கள்..இந்தாளைப் பத்தி நினைக்கவே கூடாது  என்றிருந்தேன். .நினைப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லையே..என்னவெல்லாம்
சொன்னாரு  இந்தாளு? இன்னிக்கு 'ஈ' ன்னு வாயெல்லாம் பல்லாக என்னை எதிர்த்து ஜெயித்திருக்கும் ஆளோட வெக்கமேயில்லாம போஸ்  வேறு..

கேட்டால் 'கர்ட்டெசி' யாம். கருமாந்திரம்..எல்லாம் பச்சோந்திக் கூட்டங்கள்..ஊரிலே என்னையும் எனக்கு எதிர்க்கட்சி நடத்துகிற ஆளையும்
தவிர வேறெல்லா கட்சிநடத்துகிற ஆட்களும் அங்குமிங்கும் அலை பாய்கிறார்களே தவிர நாங்களிருவரும் என்றாவது இதுபற்றி
யோசித்திருப்போமா? யோசிக்கத்தான் முடியுமா? எனக்கு நான்தான்..உனக்கு நீதான் என்று எதிரெதிர் துருவங்களாய் நின்று எந்தக் காலத்திலும்
கொஞ்சம் கூட சளைக்காது இந்த போரை மாற்றி மாற்றி நடத்தி வருகிறோமே?இதனால் என்ன பலன்? எங்களுக்கு பலன் இல்லேன்னு
சொல்லலை.. ரெண்டு பேருக்குமே இழப்புகள்,அவமானங்கள் மன உளைச்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா? இது புரியாம வெறும் பத்திரிக்கை
செய்தியைப் படிச்சிட்டு இந்த மக்களும் இந்த இடையிலே முளைத்துவிட்ட, நான் வளர்த்துவிட்ட ஆட்களுமல்லவா கிடந்து துள்ளுகிறார்கள்..
கொஞ்சம்கூட நாக்கில் நரம்பில்லாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்..? பக்கத்து ஊரு பிரச்சினையில் நான் தலையிட்டு சரிசெஞ்சு  வெக்கலையாம்..  ஏன்யா?..நடக்குற காரியமாய்யா அது? ஒரு தடவையா?ரெண்டு தடவையா.. எத்தினி தடவை இந்தப் பிரச்சினையிலே என் தலை  உருண்டது..?இங்க உள்ள பிரச்சினையே தலைக்கும்மேலே..இதுல பக்கத்து ஊரை நான் எப்புடி? எத்தினி காலம்தான் இந்தப் பிரச்சினையிலே  நான் அல்லாடுறது..?அந்த பக்கத்து ஊரு நம்ம இனத்துக்காகப் போராடின தலைவரு என்னதான் நம்மாளுங்கதான் என்றாலுமே சூதானமாப்  பார்த்துப் பண்ணாமே பொதுவுல வெச்சு நாம எல்லோருமே பழிகிடையா நம்பிக்  கிடக்குற முன்னாள் பேரூராட்சித் தலைவரை போட்டுத்  தள்ளிட்டாங்கன்னு எல்லோருக்குமே பகிரங்கமாயிப் போச்சேப்பா?..

மறைஞ்ச இந்த ஆளோட மனைவி கஸ்டடியிலேதானே பேரூராட்சியே நடக்குது..அட..இப்போ இருக்குற பேரூராட்சித் தலைவரு இந்தம்மா  சொல் பேச்சு கேட்டு ஆடுற வெறும் தஞ்சாவூரு தலயாட்டிப் பொம்மைதானே?   பக்கத்தூரு இப்போதைய வேற இனத்து தலைவரு  நம்மாளுங்களையே   பாதிப்பாதி இங்குமங்குமாப் பிரிச்சு ஒண்ணுக்கும் இல்லாமப் பண்ணிப் புட்டானே?..அவுரு உசுரோட இருந்து இந்தாளுக்கெதிராப் போராடுனப்போ நானும் எவ்வளவோ சொல்லியும் கேக்காம இந்தம்மா அடம் புடிச்சு அவரையும் அந்த ஊர்க்காரங்களையுமே  கங்கணம் கட்டிக்கிட்டு ஒண்ணுக்கும் ஆகாமப் பண்ணிடிச்சு..இந்த வேகத்தை என்கிட்டே காட்டினா நா என்னதான் பண்ணமுடியும்?  இந்தக் கோவத்தை மனசுலே வெச்சுகிட்டு இப்போ நம்மூருலே எதிர்க்கட்சி ஆளை ஆட்சியிலே உக்கார்த்தி வெச்சீங்கல்லே... அவுகதான் என்ன  பண்ணமுடியும்? பார்க்கத்தானே போறோம்..இந்தப் பேரூராட்சியிலேருந்து நாம தனியாப் பிரியாதவரைக்கும் இந்த பிரச்சினைக்கு ஒரு  விடிவுகாலமும் வரப்போறதில்லே..அது முடியவும் முடியாது..இதப் புரிஞ்சுக்காமே என்மேலே வெறுப்பைக் காமிச்சு தோற்கடிச்சு உங்க தலயிலே
நீங்களே மண்ண வாரிப் போட்டுக்கிட்டீங்க..வேறென்னத்தச்  சொல்றது. .குடும்பத்துக்கு தாரை வார்த்துக் குடுத்துட்டேனாம்..இதை யார்
யாரெல்லாம்  சொல்றாங்கன்னு கொஞ்சம் நிதானிச்சுப் பார்த்தா தெரியலே. .என்ன நடக்குது இங்கேன்னு?  ஒவ்வொரு குடும்பத்துலேயும் தேவை, விழா  எதாவுது செஞ்சுருப்பீங்க..மொய் எழுதுற பழக்கமும் எல்லோருக்குமே நம்மாளுங்களுக்கு  இருக்கும்..அங்க வரவு பண்ற இடத்துலே யாரை  வெப்பீங்க..ரோட்லே போற ஆளையா கூப்பிட்டு  வெப்பீங்க?உங்களுக்கு ஒரு நியாயம்  எனக்கு ஒரு நியாயமா?பேங்க் அக்கவுன்ட்டுலே பணம் போடச் சொல்லிப் பணத்தை குடுத்து வுட்டா தன் பேருலே போட்டுகிட்ட ஆளுங்க
எல்லோரடயும்தானே அரசியல் பண்ணவேண்டியிருக்கு?

அப்புறம்..இன்னொன்னு..ஆ..ன்னா..ஊ..ன்னா..சொக்கன், ராமராசர். வாழ்ந்தாரு, எப்புடி இருந்தாரு, தனக்குன்னு ஏதும் சொத்து சேர்த்து  வெச்சுட்டுப் போனாரா? ன்னு ஒரு கேள்வி.. அவுங்களுடைய குடும்பமெல்லாம் இப்போ எங்கே எப்பிடித் தத்தளிக்குதுன்னு தேடித் புடிச்சுப்  பார்த்தாத்தான் தெரியும்.. பாவம்.. அரசியல்லே ஈடுபட்ட ஒரே காரணத்துக்காக என் குடும்பத்தையும் இப்புடித் தவிக்கவுடணுமா? குடும்பம்  இருக்குறா ஆளுங்க எல்லோரும் கொஞ்சம் மானசீகமா யோசிக்கவேணாம்?  இதையெல்லாம் கேக்கக் கேக்க எனக்கு கொஞ்சம் கொஞ்சமாப்  பொறுமை எல்லை கடக்கிறது..பொது மனுஷன்.. ரொம்ப காலமா  ஊர்த் தலைவனா இருந்துட்டோம்..அப்பிடிங்குற காரணத்தாலேதான்  அடங்கிப்போறேன்..சாதாரண ஆளா..இருந்தா..என்ன ஆகும்ன்னு நினைச்சுப் பாருங்கையா..உங்க ஊரு ரவுடி ஆளுங்களோட கம்பேர்
பண்ணிப் பாருங்கையா..

உங்க குடும்பத்தை எல்லாம் பசி,பட்டினி, பொழுதுபோக்கு,மெடிகல் வசதின்னு செஞ்சு குடுக்காமலா என் குடும்பத்துக்கு செஞ்சுப்புட்டேன்? அட..என்னைய்யா  இப்புடி ஒரு பொறாமை புத்தி? கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவருக்கு கோபம் உச்சிமண்டைக்குப் போகிறது.. இன்னொரு மிடறு தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்..இன்னும் தாகம்..வேகம் எதுவுமே அடங்கவில்லை..

ஊழல் பண்ணிட்டேனாம்..என்னா? உங்க வூட்டு பீரோவிலே நீங்க கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சுருந்த பணம் நகையையா களவாடிட்டேன்? ஏன்யா..கொஞ்சம் கூட நாக்குலே நரம்பில்லாமேப் பேசுறீங்க..எழுதுறீங்க.. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..கட்சி நடத்தப் பணம்  வேணும்..பிரச்சாரம்..பண்ண  தெருக்கூத்து, நாடகம் எல்லாம் போடணும் அதுக்கெல்லாம்  பணம் வேணாமா?.. பணம்..பணம்..பணம்..எதை தொட்டாலும் பணம்.. பணம் வேணும்யா..பணம்.. பணம் இல்லேன்னா இன்னிக்குக் காலத்துலே பொணம்தான்..சாதாரண ஆளுக்குக் கூடப்  புரியுற இந்த விஷயம் உங்களுக்கு ஏன் புரியாமப் போச்சு?

பணம் வெச்சுருக்குற ஆளுங்க கடனாக் குடுத்தாங்க? திருப்பிக் கொடுத்து ட்டேன்..இதைக் காரணமா சொல்லி என் குடும்பத்துமேலே பழி போட்டா என்ன நியாயம்..? இன்னிக்கு என் கூடவும், எதிர்த்தும் அரசியல் பண்ற எல்லோருமே ஏதோ வகையிலே வேறு வழியில்லாமே இந்தத் தப்பை செஞ்சுக்கிட்டேதானே இருக்கோம்..உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்..எனக்கென்னமோ நான் இதுவரைக்கும் எந்த தப்பும் என்  மனசாட்சியறிய செய்யலேன்னுதான் தோணுது..அதுதான் உண்மை..எனக்குள்ள சூழ்நிலையிலே இருந்து பார்த்தா ஒருநாள் கூடத் தாங்க  மாட்டீங்க..நீங்களெல்லாம்..

அரசியல்னா..அவ்வளோ கேவலமாப் போச்சா?ஆளாளுக்கு வாயிலே அவல் மெல்லுற கதையா இஷ்ட்டத்துக்குப் பேசிக்கிட்டு.. எழுதிக்கிட்டு..  என்னை நம்பி வந்தவங்களை என்னாலே முடிஞ்ச அளவுக்கு கைவிடாம காப்பாத்த முயற்சி பண்றேன்..இது என் கடைசி மூச்சு உள்ளவரைக்கும் மாறாது..இதைச் சொன்னா, எழுதினாக் கூட அதுக்கும் ' நல்லா நாடகம், கதை வசனம் எழுதுவான்யா இந்தாளு'ன்னு கமென்ட் அடிப்பீங்க.. எல்லாம் என் ஜாதகம்..வேறென்னத்தைச் சொல்ல..

திட்டம் போட்டு திட்டம் போட்டு போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியானா நான் வேறென்னத்த சொல்ல? தாங்கவொண்ணாத சோகமும்  துக்கமும் கோபமும் ஆற்றாமையும் கலந்த ஒரு மோசமான உணர்வு மேலீட்டால் விடை தெரியாத யாரிடம் கேட்பது பதில் யார் சொல்வது  என்று புரியாத கேள்விகளின்,  எண்ணங்களின் அலை மோதலால் தலைவலி தாங்கமுடியாமல் டாக்டருக்குப் போன் போடலாமா என்றால் அவர்
வருவதாகச் சொல்லியிருந்த நேரம் சில நிமிடங்களுக்குக் குறைவாகவே இருந்ததால் எதுவும் செய்யமுடியாமல் கைகள் கட்டப்பட்டதைப்
போன்றுணர்ந்து அங்கலாய்த்தபடியே சோர்ந்துபோய் ஈசிசேரில்..களைத்து துவண்டு கிடக்கிறார் இந்தத் தலைவர்..

இவர் நமக்கு அவசியமா என்று நீங்களும் இவருக்கு நீங்களெல்லாம் இனி அவசியமா என்று அவரும் நினைத்திருக்க, எல்லோரையும் இந்தச்
சுழலில் தள்ளிய காலம்தான் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும்..

ஆக்கம்: மைனர்வாள் என்கிற கைலாசம் ஞானபிரகாசம் நெப்போலியன், ஜப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
சிறுகதை by தேமொழி

காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும் , குட்டித் தூக்கத் திற்காகவும் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம்.  இந்த ஊருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளில் மருத்துவமனையும், மருத்துவ தொழிலும் துவங்கி ஊரே அதிசயிக்கும் வண்ணம் நல்ல கைராசிக்காரர் எனப் பெயரும் புகழும் பெற்றுவிட்டார். அவர் மருத்துவமனையும்  நகரப் பேருந்து வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தும் என ஆகிவிட்டது.

களைப்புடன் உள்ளே வந்தவர் முன்னறையில் கூடை நாற்காலியில் அமர்ந்து ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருந்த சின்ன மைத்துனரின் மனைவி தமிழ்ச்செல்வியை  அப்பொழுதான் பார்த்தார். சின்ன மைத்துனரின் பெண் இவர் வீட்டில்தான் தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.  மைத்துனர் இருப்பது சிறிய ஊர், அத்துடன் கல்லூரி வசதியும் இல்லாததால் இந்த ஏற்பாடு. ஊர் பக்கத்தில்தான் என்பதால் வார இறுதியில் தன் பெண்ணைப் பார்க்க மைத்துனரோ அல்லது அவரது மனைவியோ தவறாது வருவார்கள்.

"என்னம்மா எப்ப வந்தீங்க? சின்னவர் நல்லா இருக்காரா?"

"பதினோரு மணி பஸ்ல வந்தேன், அவரும் சவுக்கியம்தாண்ணே"

"சரி சாப்பிட்டீங்களா?"

"நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்கண்ணே, நானும் ஜனனியும் அப்புறம் சாப்பிடறோம்"

சரி என்று சொல்லி சிவகுமார் உள்ளே சென்றதும் விகடனில் விரல் அடையாளம் வைத்திருந்த இடத்தில் இருந்து  சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை"யை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வி.

உடை மாற்றிக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த அவர் டிரான்சிஸ்டர் ரேடியோவை திருப்பினார் "வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி" என்ற அவருக்கு பிடித்த புதுப்பாடல் ஒலித்தது.  மனைவி ஜனனி கையில் சாம்பார் பாத்திரத்துடன் வந்த பொழுது அவர் முகம் சரியில்லாததைக் கண்டு பாடல் ஒலியைக் குறைத்தார்.

"சின்னண்ணி  என்ன சொல்றாங்க?" என்று பேச்சுக் கொடுத்தார்.

இதற்காகவே காத்திருந்தது போல் பொரிந்து தள்ளினார் ஜனனி.

சமீபத்தில் ஜனனியின் பெரியண்ணன்; அவர் குடும்பமும் சின்ன அண்ணன் இருக்கும் அதே ஊர்தான், தன் மாமனாருக்கு உடல் நலம் சரியில்லாததால் ஜனனியின் கணவரிடம் அழைத்து வந்து அவர் மருத்தவ மனையிலேயே சேர்த்து சிகிச்சை பெற வைத்தார்.  மீண்டும் அதே காரணம், இந்த ஊரில் மருத்துவ வசதி அதிகம் அத்துடன் மைத்துனர் மருத்துவமனையில் சிறப்பு கவனிப்பும் கிடைக்கும் என்பதால்.  நீரழிவு, இரத்த கொதிப்பு என ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருந்த அந்த மாமனாரும் மிகவும் வயோதிகர்.  இரண்டு வாரம் தீவிர சிகிச்சை.  ஊரில் இருந்து உறவினர் குடும்பம் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரிக்க என்று தங்கிச் சென்றவண்ணம் இருந்ததால் ஜனனி வீட்டில் எப்பொழுதும் ஒரே கூட்டம் அலை மோதியது, சளைக்காத தொடர்ந்த வேலை ஜனனிக்கு.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் நோயாளியை யாராலும் பார்க்க முடியாத வருத்தம் அனைவருக்கும்.   பெரிய அண்ணனின் மாமியார் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார்.  அதுவும் சில வேலைகளில் மட்டும்.  நோயாளியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

உறவினார்கள் விசாரணைகளுக்கு, அதெல்லாம் சரியாகி விடுவார் என்று சிவகுமார் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.  தேவையில்லாமல் யாரையும் கவலையடையச் செய்வது அவருக்குப் பழக்கமில்லை.  இரண்டு வாரம் தாண்டியபின் ஒரு நாள் அந்த வயோதிகர் கோமாவில் விழுந்ததுடன் நிலைமை மோசமானது.  உடனே சிவகுமார் பெரிய மைத்துனரை அழைத்து நிலைமையை விளக்கினார்.  பெரியவருக்கு இனிமேல் எந்த சிகிச்சையும் பலனளிக்காது.  உயிருடன் இருக்கும்பொழுதே ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று தன் மருத்துவமனை ஊர்தியில் செவிலியர் உட்பட சகல வசதிகளுடன் ஊருக்கும் அனுப்பி வைத்தார்.   அந்த மாமனாருக்கு சொந்த மகன்கள் ஊரிலேயே இருந்தாலும் பெரிய அண்ணி தன் தந்தையின் மீது உள்ள அதீத அன்பால் அவரைத் தன்னுடனையே வைத்து பராமரித்து வந்தவர் மீண்டும் பராமரிப்பைத் தொடர்ந்தார்.  ஆனால் அவரது வயோதிக தந்தை ஓரிரு நாட்களில் மரணமடைந்தார். ஜனனியும் குடும்பத்துடன் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தார்.  இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.

அந்த வயோதிகர் மறைந்த பின் குடும்பத்தில் ஒரு களேபரமே நடந்திருக்கிறது.  என்ன எல்லாம் சொத்து தகராறுதான், வேறென்ன?  பெரிய அண்ணியின் தந்தை உயில் எதுவும் எழுதவில்லை.  சொத்தில் ஆண் பெண் அணைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லாத காலம் அது.  பெரிய அண்ணி மற்ற மகன்களை விட அன்பும் பாசமும் வைத்து தன் தந்தையை பராமரிதிருந்தாலும், உயில் இல்லாததால் அவர் சகோதரர்கள் ஆண் வாரிசுகளுக்குள் சொத்தை பிரித்துக் கொண்டு சகோதரிக்கு பெரிய நாமம் போட்டு விட்டார்கள்.   ஆத்திரம் தாளாத பெரிய அண்ணிக்கு சிவகுமார் தன் தந்தையின் நிலையை முன்பே எச்சரித்திருந்தால் அப்பாவிடம் உயில் எழுதி வாங்கியிருக்கலாம் என ஆதங்கம்.   கோமாவில் இருந்தவரிடம் என்ன எழுதி வாங்க முடியும்.  வெறுப்பின் உச்சத்தில் இருந்தவர் ஊரில் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சிவகுமார்தான் தன் தந்தையை கொன்றுவிட்டார்(?) என்று பழி போட ஆரம்பித்தார்.  தன் நாத்தனாரின் கணவரின் மேல் வீண் பழி போடுகிறோம் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. ஜனனியின் பெரிய அண்ணனும் தன் மனைவியை கண்டித்தபாடில்லை.

இதனால் ஜனனியின் பிறந்த ஊரில் அவரையும், அவர் கணவரைப் பற்றியும், அவரது தொழில் திறமையைப் பற்றியும்  ஊரே ஒரேப் பேச்சாக வதந்தி உலாவ ஆரம்பித்திருந்தது.  சின்னஅண்ணி தமிழ்ச்செல்வியைப் பார்ப்பவர்கள் எல்லோரும் சிவகுமாரின் தொழில் திறமையை, கைராசியைப் பற்றி கேள்வி கேட்டுத் துளைக்க அவர் நிலைமை தர்ம சங்கடமானது. ஊரில் இருந்து வந்த தமிழ்ச்செல்வி முதல் வேலையாக இதை ஜனனியிடம் சொல்லி பெரியவர் குடும்பத்தின் பழிபோடும் படலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கச் சொன்னார்.  தன் கணவரின் புகழையும், திறமையையும் கண்டு பெருமையாக இருந்த ஜனனிக்கு இதைக் கேட்க சகிக்கவில்லை.  பெரிய அண்ணனிடமும், பெரிய அண்ணியின்மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.  யாரோ சொன்னால் பரவாயில்லை தன் சொந்த அண்ணன் குடும்பமேவா இதைச் செய்கிறது என்ற வேதனை ஜனனிக்கு.  கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைக்க, வார்த்தை தடுமாற சொல்லி முடித்தார்.  ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் மடை திறந்தது போல் அழுதுவிடும் நிலையில் இருந்த ஜனனியைப் பார்த்து, சரி, சரி விடு,  சொத்து கிடைக்காம போன  ஏமாற்றம் அவங்களுக்கு,  என்று சமாதானமாக சொல்லிவிட்டு ட்ரான்சிஸ்டருடன் படுக்கை அறைக்குப் போய்விட்டார் சிவகுமார்.  எதற்கும் அசராத குணம் அவருடையது.

அதன்பின் சாப்பிட அமர்ந்த ஜனனியும் தமிழ்செல்வியும் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.  மேலும் விபரம் கேட்க கேட்க வெறுப்பின் உச்சியில் இருந்த ஜனனி, தமிழ்செல்வியிடம், சின்னண்ணி, இப்படியெல்லாம் பேசறாங்களே, இவங்க கும்புடுற திருப்பதிசாமி இவங்கள என்னன்னு கேட்பாரு பாருங்க, என்று நொந்து போய்ச் சொன்னார்.  ஜனனியின் குடும்பம் தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பம்.  ஆனால் அதற்காக எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டும்,  நினைத்துக் கொண்டிருக்கும் தீவிர பக்தி வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை.  அவர்கள் வீட்டில் சிலருக்கு சாமி பெயர் இருக்கும், சிலருக்கு மத சார்பற்ற பெயரும் இருக்கும். கடவுள் பெயர்களில் சைவப் பெயர்களும் இருக்கும், வைணவப் பெயர்களும் இருக்கும்.  முக்கியமான நாட்களில் முடிந்தால் கோவிலுக்குப்  போவார்கள்.  சிவனோ, விஷ்ணுவோ, ஏசுவோ அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. போக முடியாவிட்டால் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். விரதம், நோன்பு  இது போன்ற எதையும் கடை பிடிப்பதில்லை.  அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள்.  கடவுள், மதம் இவற்றைப் பொறுத்தவரை மிதவாதிகள் எனக் கூறலாம்.

ஆனால் பெரிய அண்ணி ஊர்மிளாவின் குடும்பம் அதற்கு நேர் மாறானது.  பரம்பரை பரம்பரையாக அதி தீவிர வைணவர்கள்.  மருந்துக்கும் குடும்பத்தில் ஒருவருக்கும் வைணவப் பெயர் தவிர வேறு பெயர் இருக்காது.  திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள்.  பெரியண்ணன்  சிவநேசன் பெயரையும் சிவராமனாக்கி விட்டார்கள்.   ஒவ்வொரு சனிக்கிழமையும், விரதம் நோன்பு என அமர்களப் படுத்துவார்கள். புரட்டாசி ஆரம்பித்தால் வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷம்தான்.  ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி செல்லாமல் இருக்கமாட்டார்கள்.

இது நடந்து ஏறத்தாழ ஓராண்டு ஓடியிருக்கும்.  கணவரையிழந்த ஊர்மிளாவின் தாயாரும் அந்த சோகத்தை தாங்க முடியாமல் உடல் நலிவுற்றார்.  வழக்கம் போல் பெற்றோரின் மேல் பாசமுள்ள பெரிய அண்ணி ஊர்மிளா தன் தாயை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.  ஆனால் உறவு நலிவடைந்ததால் சிவகுமாரிடம் மருத்துவத்திற்கு அழைத்துவர விரும்பவில்லை.  வீட்டிலேயே மருத்துவ வசதி செய்துகொடுத்தார்கள். ஆனாலும் அந்த வயதான மூதாட்டியும் போகும் நேரம் வந்ததால் தன் கணவரைத்தேடி வைகுண்டப் பதவியடைந்தார்.  சிவகுமார் என்ன சொல்லியும் ஜனனி தன் பெரிய அண்ணனை துக்கம் விசாரிக்க செல்லவும் இல்லை, மரியாதை நிமித்தமாக செல்ல நினைத்த சிவகுமாரையும் போக விடவுமில்லை.  கோபமாக அவங்க உறவே நமக்கு வேண்டாம் என்று சொல்லித் தடுத்து விட்டார்.   சொத்திற்கு மதிப்பு கொடுத்து உறவுகளை இழித்துப் பேசிய பெரிய அண்ணன் குடும்பத்தை உறவினர் என்று ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை.

வழக்கம் போல் தன் பெண்ணைப் பார்க்க வந்த ஜனனியின் சின்ன அண்ணன் ஆனந்தனும், சின்ன அண்ணி தமிழ்செல்வியும் ஒருவித பரபரப்புடன் ஜனனியிடம் வந்தார்கள்.  காபியை கலந்து கொடுத்தவண்ணம் அவர்களை நலம் விசாரித்தார் ஜனனி.

"ஜனனி, இதக் கேட்டியா? உனக்கு ட்ரங்கால் போடாம நேராவே வந்து சொல்லனும்னு நினைச்சேன்"

"என்ன அண்ணி, என்ன ஆச்சு? உங்க பொண்ணுக்கு வரன் ஏதும் வந்திருக்கா?"

"அட, அதில்லைங்கறேன்,  நீ சொன்ன மாதிரியே திருப்பதிசாமி பாடம் கத்து கொடுத்திட்டாரு பெரியவர் வீட்டுக்கு."

பிறகு அண்ணனும் அண்ணியும் ஜனனியிடம் சொன்ன தகவல் இது.  பெரிய அண்ணி ஊர்மிளாவின் தாய் இறக்கும் முன் அவரிடம் கையிருப்பாக கணிசமான தொகை இருந்தது.  தன் கணவரின் நிதி நிர்வாகத்தில் குறிப்பிடக்கூடிய வகையில் பங்கு வகித்த அந்த மூதாட்டி தன் கைவசம் பல ஆயிரங்களுக்கு ஒரு நல்ல  தொகையைப்  பல ஆண்டுகளாகவே சேமித்து வைத்திருந்தார்.  பேரப்பிள்ளைகளுக்கு அந்த பணத்தில் பரிசுகளாகவும் வாங்கித் தரும் பணக்கார அன்பு பாட்டி அவர்.  மேலும் அவரும் பெரிய இடத்தில பிறந்து வளர்ந்ததால் கொத்து, கொத்தாக தங்க, வைர நகைகளும்; அத்துடன் அவர் கணவர் வருமான வரி காரணமாகவும், அவர் பெயரில் துவக்கினால் ராசி என்று நம்பிக்கையில் ஆரம்பித்த சில வியாபார நிறுவனங்களையும் சட்டபூர்வமாக அவர் வசத்தில் வைத்திருந்தார்.  இவை அனைத்தும் உயில் மூலம் பெரிய அண்ணி ஊர்மிளாவின் கைவசம் இப்பொழுது.  தாய்  இறந்த பின்பே  இதைத் தெரிந்து கொண்ட ஊர்மிளாவின் சகோதரர்கள் சொத்து கைவிட்டு போன கொதிப்பில் தன் சகோதரி மேல் பழி போட ஆரம்பித்துள்ளார்கள், அதுவும் எப்படி?

சொத்துக்காக அலைந்த ஊர்மிளா எப்படியும் தன் தாய் வசம் இருக்கும் சொத்தினைக் கைப்பற்ற எண்ணி, அவரை தன் வீட்டிலேயே பராமரிக்கிறேன் என இருத்திக் கொண்டு, உடல் நலமில்லாதவரிடம் உயில் எழுத நிர்பந்தித்து, உயில் கையில் கிடைத்தவுடன் மற்றவர்கள் உயில் எழுதிவிட்ட விபரம் அறியக் கூடாதென்று விஷம் வைத்து கொன்று விட்டார்.  மாறாக, அந்த தாயே தன் மகளுக்கு குடும்ப சொத்தில் ஒன்றும் இல்லாது போனதை எண்ணி வருந்தி உயில் எழுதி வைத்திருக்ககூடும்.  எது எப்படியோ, ஆனால், இப்பொழுது ஊர் முழுவதும் ஊர்மிளாவின் சகோதர்கள் பரப்பிவிடுவது சொத்துக்கு ஆசைப்பட்டு எங்கள் சகோதரியே எங்கள் அம்மாவிற்கு விஷம் வைத்து விட்டார் என்பதே.  ஊர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகப் போனது இது.

பின்குறிப்பு: இது கதையல்ல, உண்மைச் சம்பவம்.  எங்கள் குடும்பத்திற்கு எண்பதுகளில் நேர்ந்த அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தீதும், நன்றும், பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றனார்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் - பழமொழி

நன்றி, வணக்கத்துடன்
தேமொழி

++++++++++++++++++++++++++=
7

Jokes from.S.Sabari Narayanan, Chennai
1
Wife to Doctor: My Husband has the Habit of Talking in his Sleep
What Should I give to cure him?
Doctor: Give him an Opportunity to Speak when He is awake
++++++++++++++++++++++++++
2
common between clouds and wife !!!!!!!

When both are not around,
+
+
we call it a bright day.
++++++++++++++++++++++++++++++
8
Video clipping sent by Mrs.Themozhi
Nostradamus's Prediction of 2011 Japan Earthquake, Tsunami and Nuclear Disaster
http://youtu.be/8vpQ7pYvWjc



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படித்தவர்கள், தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

143 comments:

  1. அவன், இவன், தலைவன் என்றெல்லாம் ஏக வசனத்தில் குறிப்பிட்டிருந்த இடங்களை மட்டுமே எடிட் செய்து பிரசுரித்து இருக்கிறீர்கள்..
    மிக்க நன்றி..
    இதுவரை தங்களிடமிருந்து ஏதும் பதில் மெயிலில் வரவில்லையே என்று நினைத்து
    மாணவர் மலரைப் பார்த்தால் அங்கே ஆஜராகியிருந்தார் தலைவர்..
    இந்த ஆக்கம் குறித்தான தங்களின் தனிப்பட்ட கருத்து, பதில் எதிர்க்கட்சிக்கு ஆதரவான அம்சத்திலேதான் இருக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் எழுத்து, ஆக்கம்..என்ற ரீதியில் அங்கீகரித்து இதனை எனக்காக வெளியிட்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்..
    வாழ்க உங்கள் ஜனநாயகம்..
    மாணவர் மலர்..
    அதே காரணத்தால்தான் எனக்குப் பதிலை மெயிலில் அனுப்புவதையும்கூடத் தவிர்த்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்..

    எது எப்படியோ எனது மானசீகத் தலைவனின் உணர்ச்சிக்குரலாக என் ஆக்கம் அவன் பக்கமுள்ள நியாயங்களை தெரிவித்திருப்பதால் இந்தப்பார்வை வாசிப்போருக்குச் சென்றடைவதால் அது மட்டுமே எனது நோக்கம் என்பதால் அதற்கு வழிவிட்ட உங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் இரு கரங்களையும் இணைத்து தலைக்கு மேலே உயர்த்தி ஒரு பெரும் நன்றியை உரித்தாக்குகிறேன்..
    நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  2. அவன் இவன் தலைவன் என்றெல்லாம் ஏக வசனத்தில் குறிப்பிட்டிருந்த இடங்களை மட்டுமே எடிட் செய்து பிரசுரித்து இருக்கிறீர்கள்..
    மிக்க நன்றி..
    இதுவரை தங்களிடமிருந்து ஏதும் பதில் மெயிலில் வரவில்லையே என்று நினைத்து
    மாணவர் மலரைப் பார்த்தால் அங்கே ஆஜராகியிருந்தார் தலைவர்..
    இந்த ஆக்கம் குறித்தான தங்களின் தனிப்பட்ட கருத்து, பதில் எதிர்க்கட்சிக்கு ஆதரவான அம்சத்திலேதான் இருக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தாலும் எழுத்து, ஆக்கம்..என்ற ரீதியில் அங்கீகரித்து இதனை எனக்காக வெளியிட்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்..
    வாழ்க உங்கள் ஜனநாயகம்..மாணவர் மலர்..அதே காரணத்தால்தான் எனக்குப் பதிலை மெயிலில் அனுப்புவதையும்கூடத் தவிர்த்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்..எது எப்படியோ எனது மானசீகத் தலைவனின் உணர்ச்சிக்குரலாக என் ஆக்கம் அவன் பக்கமுள்ள நியாயங்களை தெரிவித்திருப்பதால் இந்தப்பார்வை வாசிப்போருக்குச் சென்றடைவதால் அது மட்டுமே எனது நோக்கம் என்பதால் அதற்கு வழிவிட்ட உங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் இரு கரங்களையும் இணைத்து தலைக்கு மேலே உயர்த்தி ஒரு பெரும் நன்றியை உரித்தாக்குகிறேன்..
    நன்றி..நன்றி..நன்றி..

    ReplyDelete
  3. மாணவர் மலர் களை கட்டி விட்டதே!அடேயப்பா! 8 ஆக்கங்கள்.

    'ஃபன்டாச்டிக் நான்சென்ஸ்' செய்த வேலையைப் பார்த்தீர்களா?பெரியவரை ஒரு பதிவை எழுத வைத்துவிட்டது.இதே சிலேடைகளை அடுத்த பதிவாக எழுத குறிப்பு எடுத்து வைத்து இருந்தேன். பெரியவர் முந்திக்கொண்டு விட்டார். அவர் எப்பவும் அப்படித்தான்.வயதில் மட்டும் அல்ல. எல்லாவற்றிலும் அவர் எனக்கு முன்னோடி.

    அடுத்து என் ஆக்கம் வெளியிட்டமைக்கு நன்றி அய்யா.8 ஆக்கங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறது.கடைசியில் கொஞ்சம் எடிட்டிங்.மைனர்வாளுக்கு பேசக் கிடைத்த சந்த‌ர்ப்பம் போச்சு.

    ஸ்ரீ ஷோபனா 'வாலைக்குழைத்துவரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா'வை நினைவுபடுத்தி விட்டாரே! அழகான பதிவு.

    மழைக்காலம் பார்த்து 'மழைக்காலம்' கவிதை எழுதிய ப்ரூனை மன்னரும் கவிஞர் பட்டத்தைப்பெறுகிறார்.கவிஞர் தனுசுக்கு ஜே!

    எனக்கும் மைனருக்கும் ஒரு 'இது'உண்டு. இதுன்னா?அதுதான். வேதியல். அப்படின்னா? கெமிஸ்டிரி!நான் அந்தக் கால அரசியல் தலைவர் பற்றி எழுதினா மைனர் இந்தக்கால அரசியல் தலைவர் பற்றி எழுதி அசத்திவிட்டார்.ஆனாலும் தாத்தாவை இப்படி புலம்பவிடக் கூடாது.பாவம் அன்பு கடைக்குட்டி வேறே 'ஜிஹாரிலே'! அவர் என்ன பண்ணுவார்?கிண்டல் வேண்டாம் மைனர்.

    தேமொழியின் வீட்டுக்கதை நல்ல படிப்பினை. நல்ல ஆக்கம். வாக்கியங்களின் நீளத்தைக் குறைக்கவும்.அப்போது விரு விருப்புக்கூடும். கொஞ்சம் நகைச்சுவை சேர்க்கணும். 'ஒபீனிய'னை தவறாக எண்ண வேண்டாம்.

    சபரி இந்த நகைசுவையையே தமிழ் செய்யப் பாருங்கள். 'காப்பி பேஸ்ட்' வேண்டாமே!முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    நமது பவிஷ்ய புராணம் போல நாஸ்டர்டாம்ஸ். ஒரு நிகழ்ச்சி ஆனவுடன் போஸ்ட் மார்ட்டம் அவற்றில் போய் தேடுவார்கள்.நல்ல காணொளிதான்.

    நன்றி!

    ReplyDelete
  4. என்னுடைய "சிலேடை"யை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா! கே.எம்.ஆர். தீரர் சத்தியமூர்த்தி, கோவை ஐயாமுத்து கடிதங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதுகுறித்த இரண்டு விளக்கம். தஞ்சை ‍ புதுக்கோட்டை வழியில் திருமயம் இருப்பதாக எழுதியிருக்கிறார். புதுக்கோட்டை திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கிறது திருமெய்யம். காங்கிரசில் ஒரு சாரார் சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்றனர், ராஜாஜி போன்றோர் சட்டசபை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்றனர். இவ்விரு சாராருக்குமிடையே நடந்த கருத்து மோதலில் சட்டசபைக்குப் போகவிரும்பியவர்கள் சுயராஜ்யக் கட்சி என்ற பெயரில் காங்கிரசைவிட்டு வெளிவந்தனர். இதற்கு தலைமை வகித்தவர் மோதிலால் நேரு. ஆம், ஜவஹரின் தந்தை. மகாகவி பாரதியின் பாடல்கள் சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சி அரசால் தடைசெய்யப்பட்ட போது, அதை எதிர்த்து சட்டசபையில் இரண்டு நாட்கள் முழக்கமிட்டுப் பேசியவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் சென்னை மேயராக இருந்த காலத்தில்தான் பூண்டி நீர்தேக்கம் அமைத்து சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்தார். பூண்டி நீர்தேக்கத்துக்கு 'சத்தியமூர்த்தி சாகர்' என்றே பெயர். மற்ற பதிவுகளை ஆழ்ந்து படித்து பின்னூட்டமிடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  5. ///////////////இந்தப் பதிவு சோசலிசக் கருத்துக்களை எடுத்துச்சொல்ல நான் எழுதவில்லை.

    ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
    ///////////

    கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைமை வகிக்கும் காக்கிரஸின் தற்போதைய கொள்கைத் திட்டங்களின் படி கட்டம் கட்டமாக பொதுத்துறைப் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக
    உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,
    தனியார்மயமாக்கல் என்ற கொள்கை அடித்தளத்துடன் புனையப்பட்ட 1991 ஆண்டில் துவங்கப்பட்ட
    தாராளப் பொருளாதாரக் கொள்கையின்
    தற்கால முயற்சிகளில் மின்சார உற்பத்தி, சுரங்கங்கள்,பெட்ரோலியத் துறை, என்று எல்லாமே தனியார்வசமாகிப் போகும் நிலை..ரியல் எஸ்டேட் துறைகூட நேரிடையாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்டிருப்பதும் இன்றைய நிலை..

    இதுதான் சோஷலிசத்தின் பரிணாம வளர்ச்சி..ஜவஹர்லால் வாரிசு காங்கிரசின் கொள்கை நிலைப்பாடு.. பொருளாதார வல்லரசாக்க வழி..

    ReplyDelete
  6. ஷோபனாவின் நாய்க்குட்டி கதை நமக்கெல்லாம் (நாய்க்குட்டிகளுக்கும் சேர்த்துதான்) நல்ல சுவையுடன் சமைத்து பரிமாறப்பட்ட ஒரு விருந்து..மாணவர் மலரின் கூந்தலுக்கு ஒரு வாடாத ரோஜாவைச் சூட்டியிருக்கும் ஷோபனாவுக்கு ஒரு 'ஒ'.......

    ReplyDelete
  7. தேமொழியின் கதை..'கதையல்ல நிஜம்' நிஜமாய்ச் சுட்டது..எதார்த்தமாக குடும்பங்களில் நடக்கும் சம்பவங்கள்தான்..

    எனினும் ஆழ்ந்து நிதானமாகப் படிக்கவேண்டிய அவசியம்..ஏதோ மேலோட்டமாகப் படித்தோம்..ரெண்டு வரி கமென்ட் அடிச்சோம்..போனோம்..
    என்று போய் விட முடியாது.. படைப்பின் தன்மை அப்படி..

    நல்ல தேர்ந்ததோர் எழுத்தாளராகிப் போன தேமொழி அம்மையாருக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ////// பெரிய அண்ணனிடமும், பெரிய அண்ணியின்மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. யாரோ சொன்னால் பரவாயில்லை தன் சொந்த அண்ணன் குடும்பமேவா இதைச் செய்கிறது என்ற வேதனை ஜனனிக்கு. //////////

    இறந்துபோனது ஜனனியின் பெரிய அண்ணனின் மாமனார்..அவர் குடும்பத்துச் சொத்தை பங்கு கேட்கும் உரிமை எள்ளளவும் ஜனனி குடும்பத்துக்கு இல்லை..அதிலும் அவரது கணவர் சிவகுமாருக்கு சற்றும் சம்பந்தமே இல்லை..

    உதவி செய்யப் போய் உபத்திரவாதம்..

    இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்து தன்மருத்துவமனையில் அனுமதிக்காதிருந்திருந்தால்அதையும்
    'ஆபத்தில் உதவாத மனுஷன்' என்று பழிபோட்டு வேறு வகையாகப் பேசுவார்கள்.. .

    அப்படியிருக்க'baseless..frivolous..'என்று அடித்தளமில்லாத, முகாந்திரமில்லாத குற்றச்சாட்டை முன்னிறுத்தி பெரிய அண்ணனின் மனைவி பழி போடுவதென்னவோ வடிகட்டின முட்டாள்தனம்..இதையும் நம்பிக் கேள்விகேட்கும் ஊர்க்கரார்கள் செயல் அதைவிட சல்லடையில் வடிகட்டியது..

    'யாரோ சொன்னால் பரவாயில்லை' என்று ஜனனி சொல்லும் இடத்தில் மேல்சொன்ன இந்த முட்டாள்தனத்தை அங்கீகரிக்கும் வகையிலான இந்த பாதிக்கப்பட்ட ஜனனியின் அங்கலாய்ப்பு
    சிந்தனைக் கோளாறிலே அவர் கோட்டை விட்டதா அல்லது தேமொழி தன எழுத்திலே கோட்டை விட்டாரா என்பது புரியவில்லை..இது ஒரு சிறு நெருடலைத் தவிர வேறெங்கும் லாஜிக் பிறழவில்லை..

    அதுவும் கூட நடைமுறையிலே ஏற்படும் மனக்கசப்புக்களைப் பாத்தால் காரணாகாரியம் எதுவுமே பொருந்துவதில்லை..மனம்போன போக்கிலே லாஜிக்கே இல்லாமல் நன்றிகெட்டு மரபுகெட்டு முடிவெடுக்கும் பலரும் உறவுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்..

    ReplyDelete
  9. /////// சிலேடைக்கு கி.வா.ஜ.வைக் குறிப்பிட்டிருந்தார் கே.எம்.ஆர். ஆம், அவர் சாதாரண பேச்சு வழக்கில் பல சிலேடைகளை உதிர்த்திருக்கிறார். ஒரு முறை இவர் கலைவாணர் இல்லத்துக்குப் போனாராம். அங்கு இவருக்கு காபியா, டீயா என்று கேட்டனர். இவர் சொன்னார் டீயே மதுரம் என்று. அப்படியொரு கதையைச் சொல்வார்கள். (கலைவாணரின் மனைவி பெயர் டி.ஏ.மதுரம்)//////////


    /////'இதுவரை நடுத்தெருவில் இருந்தீர்கள், நல்ல காலம் இப்போது சொந்தமாக வீடுகட்டிக் கொண்டு போய்விட்டீர்கள் என்று./////////

    தஞ்சாவூராரின் எழுத்துக்களில் வந்த இவை நகைச்சுவையுடன் ரசிக்கத் தகுந்ததாக இருந்தது..

    இதுபோன்று எனது பள்ளிக்காலத்தில் ஒரு சம்பவம்..பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலம்..ஒரு மாணவி ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு வந்திருந்தாள்..எங்களது வகுப்பாசிரியர் ஆங்கில வகுப்பாசிரியர்..திருவையாற்றைச் சேர்ந்தவர்..சற்று அழுத்தம் திருத்தமாகவே பேசுவது அவரது பாணி..

    அந்தப் பெண்ணைப் பார்த்து 'ஏன் நேற்று கிளாசுக்கு வரவில்லை'..என்று கேட்டார்..

    அவள் 'நேத்திக்கு நான் லீவு சார்' என்றாள்..

    ஆசியர் உடனே 'அதான் ஏங்குறேன்?' என்று விடாமல் தொடர்ந்து 'ஏன் என்கிறேன்' என்ற பதத்தை பேச்சுவாக்கிலே இப்படியாகக் காரணத்தைக் கேட்டார்..

    நான் அந்தக் கேள்வியிலிருந்த விகடமான பொருளைக் கண்டுகொண்டு முதலில் சிரிப்பைத் துவங்கிவைத்தேன்..வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆனது..

    அந்த மாணவி லீவு போட்டதற்காக 'ஏங்குறேன்' என்ற பொருளில் வாத்தியார் சொன்னதாக வேறுபொருள் கொண்டு நான் சிரித்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது..அந்த வாத்தியார் 24 காரட் பச்சைமாற்றுத் தங்கம்..இதிலே எந்த வகையிலும் அவரை தரம்குறித்து எழுதவில்லை..சிலேடையாக அவர் பேசமுனையவில்லை..நான்தான் சிலேடையாகப் பொருள் கொண்டேன் என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  10. சிலடை பற்றிய பதிவு
    சிறப்பாக இருந்தது.. இது போலவே

    அன்று நமது திருவாளர் KMRK அவர்களின்
    ஆரியபவன் பற்றிய பதிவு நினைவில்

    ஆனல் (பாருங்கள்,,,)

    நாம் புண்பட்டுக் கொண்டு
    நாமாகவே பிறரை குறை சொல்கிறோம்

    காய் நறுக்கும் போது
    கத்தியால் வெட்டிக் கொண்டு

    கத்தி வெட்டிடுச்சுன்னு சொல்வோம்
    கத்தியா வெட்டியது...?

    இரவு நேர ரயிலில் யாருக்கும்
    இருக்குமிடம் தெரியாமல் வந்தவர்

    திருட்டு ரயிலில் வந்ததாக சொல்வர்
    திருடியது ரயிலா...?

    கல்லில் தெரியாமல் இடித்துக்கொண்டு
    கல்லு இடிச்சுடுச்சுன்னு சொல்லுவோம்

    கல்லா இடித்தது... இப்படித்தான்
    கற்றவர்கள் நாமே பல சமயங்களில்

    தெரிந்தோ தெரியாமலோ
    தெளிவாகவே சொல்லியபடி இருக்கோம்

    எல்லாவற்றிக்கும் மதுரை சொக்கனே
    எமக்கு தலைவர் என சொல்லும்

    கவி காளமேக பாடலை இன்று
    களித்து மகிழ தருகிறோம்

    நூலாமம் நாலாயிர நூற்று நாற்பத்து ஒன்பான்
    பாலாம் நானுற்றம்பத்து ஒன்பான் மேலாம் நூற்பத்து ஒன்பான் சங்கம் அறுபத்தநூல் ஆடலுக்கும் கர்த்தன் மதுரையில் சொக்கன்

    ReplyDelete
  11. ///////
    படைத்தளபதி புயலாரோடு - நீபயணித்து வருகையில் - உன்வேகத்தில் சிக்கிச் சீரழிவது
    வாழை மட்டுமல்ல - ஏழையும் தான்

    தனூர்ராசிக்காரன், Brunei////////

    தனூர்ராசிக்காரரின் கவிதை வரிகளில் டச்சிங்கா இருந்த வரிகள் இவை..

    ஜப்பானிலும் தாய்லாந்திலும் சமீபத்து பேய் மழையின் தாக்கங்கள் அதிகம்..

    இந்த வருடம் தண்ணீரில் ஏகப்பட்ட அழிவுகள் என்று இதுகுறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டு இருந்ததாக பஞ்சாங்கத்தின் இமேஜ் பைல் உடன் தஞ்சாவூராரால் ஏற்கனவே ஒருமுறை இதுகுறித்த பதிவொன்று வகுப்பறையில் வெளிவந்ததை நினைவு கூர்கிறேன்..

    ReplyDelete
  12. நெசவாளி பற்றிய செய்தி
    நெஞ்சை நெகிழ்வித்தது...

    உழைப்பாளி இல்லாத நாடு என்ற
    உத்தமமான பாடல் தான் நிழலாடுகிறது.

    ரஜினி அவர்களின் அந்த பாடல்
    ரசிக்க சில வரிகள் மட்டும்

    பணக்காரன் குடி ஏற
    பாட்டாளி வீடு கட்டறான்

    ஆனாலும் அவனுக்கோர்
    வீடு இல்லை யாரு கேக்கறா

    பல பேரு தான் உடுத்த
    நெசவாளி நுல நெய்யறான்

    அட ஆனாலும் அவன் உடுத்த
    வேட்டி இல்ல யாரு கேக்கறா

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    வழக்கமான மாசில்லா அன்புடன்
    வளமுடன் நலமும் பெறவே

    ReplyDelete
  13. சபரியின் ஜோக்குகள் இரண்டுமே அருமை..முன்னது மிகவும் அருமை..

    /////என்னா சபரி சார்,

    டாக்டர் அட்வைஸ்பண்ணியும்கூட நீங்க பேசமுடியாதாலே ஜோக்கா இப்படி எழுத ஆரம்பிச்சுட்டீங்களே?

    எப்பிடியோ நைட்டு பேசாம இருந்தா சரிதான்..////////

    ReplyDelete
  14. மழை இயற்கையின் கொடையே,
    தழை திங்கும் ஆடுக்கும் மாட்டுக்கும் கூட

    வரப்பிரசாதம் தான் எத்தனை அடி
    வான் உயரத்திலிருந்து வரும்

    துளியாய் வரும் அந்நீர் அமுதல்லவா
    எளிமையாய் வடித்த மழை கதை timeல

    தலைப்பை பார்த்ததும்
    தன் இனத்தை காத்த கோவர்தனே

    கண் முன்னே கொஞ்சம்
    கதைத்தே மகிழ்ந்தோம்

    (கதைத்தல் என்பது சிலோன் மொழியில் பேசுதல் என பொருள் - தவறாக எண்ண வேண்டா)

    உங்களுக்கா ஓங்கி உலகலந்த
    உத்தமன் பாடும் பிரபந்ததில் இருந்து

    நம்மாழ்வார்

    பாடியருளிய இந்த பாசுரம் உங்களுக்கு
    பரிசாக பாடி தருகிறோம்


    அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்
    செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.

    பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்
    பற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.

    அடங்கெழில் சம்பத்து
    அடங்கக்கண்டு ஈசன்

    அடங்கெழி லஃதென்று
    அடங்குக உள்ளே.

    ReplyDelete
  15. ///விரல்பிடித்து விளையாடும்
    சேய்மழையாய் வந்துசெல்!
    உன்னை நேசிக்கின்றோம்உளமாறச் சொல்கின்றோம்நீரின்றி உலகில்லைநீயின்றி வாழ்வில்லை ///

    நெஞ்சை தொட்ட வரிகள்..
    நெதியடியாக ஒவ்வொன்றும்

    சபாஷ்..

    சற்றே உங்கள் கவியருவியில் நனைந்த
    சாரலுடன் ரசிக்கிறோம் மழையையும்

    மழைக்காக தந்த
    மனம் முகிழ்த்த கவிதையையும்..

    வாழ்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. திட்டம் போடும் தலைவர்களும்
    சட்டத்திற்குள்ளே... என்றே

    பட்டம் போல் பறக்குது
    பதவியிழந்ததும் மானமும் மரியாதையும்

    நாம் இந்த குடும்பத்திற்கு தேவையில்லை
    நாம் இதனை உணரவே 50க்கு மேல்

    இருந்தும் சில தலைவர்கள்
    இப்படியே.. என்ன செய்ய

    இப்படியோ அப்படியோ நம்
    கைப்பி(த)டியே அவர்களிடம் தான்..

    எடுத்து நடத்தத்ததான் ஆளில்லை
    எடுத்துச் சொன்ன மைனர்வாளுக்கு

    வாழ்த்துக்கள்.. அன்பு
    வணக்கங்கள்..

    ReplyDelete
  17. நகைச்சுவையினை
    நல்ல தமிழில் மொழியாக்கம் செய்தால்

    நீரில்லா மோராக இருக்கும்
    நிறைவாக தந்தவை எமக்கு

    ருசிக்கவில்லை..
    பசிக்காக வருபருக்கு பயன் தரட்டும்

    அடுத்த வாரம் வரும் பதிவு
    அழகு தமிழில் இருக்கட்டுமே..

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  18. காண் ஒளி-ஒலி
    கருத்தை கவர்ந்ததொன்று..

    குறிப்பாக கருத்தேதும் சொல்லாமல்
    குறித்துக் கொள்ள தருகிறோம்

    சுனாமி என்பது தமிழ்ச் சொல்லே
    சப்பான்னுக்கு சொந்தமாயிடுத்து இப்போ

    (சுனை மீதுர்தல் என்பதே சுனாமி
    தமிழ் ஆர்வலர்கள் கருத்து தரலாம்)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. கரு உண்மை
    உரு கற்பனை என வடித்த

    எண்பதுகளின் சம்பவமும்
    எழுதியமைத்த பதிவும் நன்று..

    உங்களின் வரிசையில்
    பூங்குன்றனார்,ஒளவையார், பழமொழியில்
    வள்ளுவம் வரவில்லேயே தோழி...

    அதனை
    அய்யர் சொல்லவே விட்டு வைத்ததாக

    எண்ணியே
    எண்ணத்தில் பதிந்த குறளை

    பரிசாக தருகிறோம்
    பெற்று படித்து மகிழுங்கள்

    பிறர்கு இன்னா முற்பகல் செய்யின்
    தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்..

    ReplyDelete
  20. ஆயிரம் பேரும் பதிவு தநத்தால் என
    அசத்திட்டீங்க சிந்திக்கும் படி...

    எட்டு ஆக்கங்கள் ஒரே நாளில்
    எட்டி விட்டது மாணவ்ர் எண்ணங்கள்

    தொட்டு சென்றதொவ்வொன்றும்மனசை
    விட்டுச் செல்ல முடியுமா வகுப்பை

    சுட்டியே காட்டினாலும்
    கட்டியே இழுக்கிறது எனலாம்

    ஆனாலும்

    எட்டு பின் ஊட்டங்கள் என்றதும்
    எடுத்துக்கொண்டன நேரத்தை

    பயணத்திற்கான ஓய்வு என்பதினால்
    பயன்படுத்திக்கொண்டோம் நேரத்தை

    தொடரும் பணிகளுக்கு
    தோள் கொடுக்கும் தோழனாய்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  21. திரு.வெ.கோ ஐயா அவர்களின் கட்டுரை அருமை...
    உண்மையில் அருமையாக இருந்தது.
    வீட்டில் உள்ள அனைவரும் ரசித்துப் படித்து சிரித்தோம்.
    குழந்தைகள் வெகுவாக சிரித்தார்கள்.

    நிர்வாண டீ என்று எண்பதுகளில் நாங்களும் பயன் படுத்தி இருக்கிறோம்.
    மடையன் (இளையவன் / முட்டாள்), பெரிய அகராதி (அறிவாளி / அராத்து), மேதாவி (குரங்கு) போன்ற வார்த்தைகளையும் கூட சௌகரியத்துக்கு பயன் படுத்துவது உண்டு.

    சமீபத்தில் திரைப் பட பெயர்களையும் சொல்வதும் உண்டு.... சிப்புக்குள் முத்து, குணா, புன்னகை மன்னன் (இளிச்சா வாயன்) என்றும்...

    சுவாரஸ்யம் மிகுந்தது....

    இது போன்று ஆகுபெயர்களும் உண்டு, அவைகள் பற்றித் தெரிந்தவர்கள் கூறுங்களேன்...

    நன்றி...
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  22. திருவாளர் கே.எம்.ஆர்.கே (லால்குடியார்) அவர்கள் கட்டுரை ஒரு விடாபிடியான கொள்கை வாதிக்கும்... காலமும், இடமும் மாறும் போது அது இந்த சமூகத்திற்கு அவசியமான வகையில் சில நெழிவு சுழிவோடு பாதை மாறாமல் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளதை உணர்ந்த கொள்கை வாதிக்கும் உள்ள விவாதம்.

    தொண்டரானாலும் தெளிவோடு இருந்தமையால் விவாதித்து இருக்கிறார். சமூகத்தில் சமநிலை பொதுவானவற்றை பொதுவிலே வைக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் கொண்ட யாவரும் கம்யூனிஸ்டுகளே... (இன்னும் சொன்னால் மெத்தப் படித்த பெரும்பாலானோரும் அப்படி இருப்பார்கள் என்றும் கூறலாம் என்ன வெளியில் பேசமாட்டார்கள்). அப்படித்தான் நேருவும் இருந்திருக்கிறார்!

    ////தனி நபர் தன் சுய‌ உழைப்பால் அடைந்ததை சோசலிசம் பொதுவில் வைக்கச் சொல்லவில்லை. ஆனால் நிலம்,ரயில்வே, பெரிய தொழில்கள், சுரங்கங்கள் ஆகியவை தனி உடமை ஆவதை சோசலிசம் அனுமதிக்காது////

    அமெரிக்காவில் இன்றைய அவலத்திற்கு காரணமே... இந்த முரண்பாடு தான்... நிர்வாககேட்டால், கடனில் அகப்பட்டு தவிக்கும் தனியார் நீருவனங்களுக்கு (முதலாளிகளுக்கு) மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பேருதவி செய்து காப்பாற்றும் போக்கே இன்றைய அவதிகளுக்கு காரணம்... வங்கிகள் கூட அப்படித்தான் செயல் படுகின்றன... தனியாரின் தவறு மக்களின் தலையில் இதில் ஏது/? நியாயம்...

    தோற்றுப் போன கம்யூனிஸ நாடுகளை கூறிக் கொண்டு வருவோருக்கு கூறுவது.. அதையும் விடாபிடியாக கொள்கையே (காலமும் இடமும் மாற்றம் செய்யாது) சரி என்று திரிந்ததால் வந்த வினை. ஜனநாயகமும், கம்யூனிசமும் இருக்கரைகலாக கொண்டு பயணித்தால் கரைத் தட்டாது என்பது எனது எண்ணம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை இருவரும் உணரவேண்டும்...

    ///இந்தப் பதிவு சோசலிசக் கருத்துக்களை எடுத்துச்சொல்ல நான் எழுதவில்லை. எப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு தொண்டன் கூடக் கொள்கைப் பிடிப்புடன் தலைவர்களுடன் உரையாட முடிந்துள்ளது என்பதைக் காட்டவே எழுதினேன்.////

    முன்ஜாக்கிரதையா? பயமா? வெறுப்பா? இந்த வரிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

    நல்ல சிந்தனையை தந்த பதிவு.
    நன்றி.

    (பி.கு. திருமயம் புதுக்கோட்டை , காரைக்குடி, திருப்பத்தூரை முக்கோணமாக இணைக்கும் மையம்.)

    ReplyDelete
  23. எனது ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி அய்யா .
    தஞ்சாவூர் அய்யா அவர்களே உங்களின் சிலேடை மொழிகள் பாலாடையாய் சுவைத்தது.

    சிலேடை மொழியில் பேசுவதற்கும், அதை புரிந்துகொள்ளவும் நல்ல தமிழ் அறிவு வேண்டும்.உங்களின் சிலேடையை .நான் நன்கு ரசித்து அனுபவித்தேன்.இதை படிக்கும் போது எனக்கும் சில சிலேடைகள் ஞாபகம் வந்தது.

    பள்ளியில் படிக்கும் காலத்தில் செய்யுளில் படித்தது'
    "எருமை கன்று மடிவதேன்-எருக்கம் பூ உதிர்வதேன் "
    இரண்டுக்கும் பதில் பால் குறைவு .

    அறிஞர் அண்ணா அவர்கள் . தனி தமிழ் நாடு, திராவிட நாடு பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது சட்டசபையில் காங்கிரசாருக்கும் அண்ணாவுக்கும் விவாதம் வந்தது. திராவிட நாடு பற்றி அப்போது காங்கிரசின் பெண் உறுப்பினர் காட்டமாக அண்ணாவை பார்த்து கேட்டார் ; "திராவிடநாடு, திராவிடநாடு என்று சொல்கிறிர்களே அதை காட்ட முடியுமா " என்றார் ;அதற்கு அண்ணா சொன்னார்,
    உன் வீட்டுக்கு போய் "பாவாடையின் நாடாவை அவிழ்த்து பார் அங்கெ தெரியும்" என் திராவிட நாடு.என்று சிலேடையில் பதில் சொன்னார்.பெண்ணிடம் இப்படி சொல்வது அநாகரிகம் தான்.அனால் இதன் அர்த்தம் வீட்டுக்கு போய் வரலாறு புத்தகத்தை பிரித்து படித்தால் தெரியும் என்பதுதான் அது.

    இன்னும் ஒன்று பாலச்சந்தரின் "அச்சமில்லை அச்சமில்லை"என்ற படத்தில் காதலன் காதலியை கோயிலில் சந்திக்க நேரம் குறிப்பான்.எப்போதும் அந்த சந்திப்பு தவறாமல் நடக்கும். திடீரென்று மூன்று நாட்கள் வரமாட்டாள். காதலன் தவித்து விடுவான். நான்காவது நாள் வருவாள். காதலன் கேட்பான் "ஏன் மூன்று நாட்களாய் வரவில்லை" காதலி பெண் அல்லவா தனக்கே உரிய வெட்கத்தில் சொல்வாள் ; வந்ததினால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்" - இது பெண்களுக்கு உரிய மூன்று நாட்களை மிக அழகாக சொல்லியிருப்பார்.பாலசந்தர்.

    ReplyDelete
  24. /////////kmr.krishnan said... எனக்கும் மைனருக்கும் ஒரு 'இது'உண்டு. இதுன்னா?அதுதான். வேதியல். அப்படின்னா? கெமிஸ்டிரி!நான் அந்தக் கால அரசியல் தலைவர் பற்றி எழுதினா மைனர் இந்தக்கால அரசியல் தலைவர் பற்றி எழுதி அசத்திவிட்டார்./////////

    தங்களின் பாராட்டுக்கு நன்றி..

    /////////ஆனாலும் தாத்தாவை இப்படி புலம்பவிடக் கூடாது.பாவம் அன்பு கடைக்குட்டி வேறே 'ஜிஹாரிலே'! அவர் என்ன பண்ணுவார்?கிண்டல் வேண்டாம் மைனர். /////////

    அரசியலிலே எல்லாம் அடக்கம்..

    அந்தக்காலத்து போருக்குச்செல்வதுபோலத்தான் இந்தக்காலத்து அரசியல் விவகாரங்களும்..

    வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு..
    வேடிக்கை மட்டுமே பார்ப்பவனுக்கு கிடாதவை..
    ஆட்சிக்கட்டில் என்பது வெற்றியின் பரிசானால்
    சிறைச்சாலைக் கதவுகள் தோல்வியின் பரிசாகும்..
    இந்தப் பரிணாம மாற்றம்தான் நடந்திருகிறது..
    நடைமுறை எதார்த்த அரசியலில் திளைத்ததால்தான் அந்தத் தலைவன் இன்றும் பேச்சுப் பொருளாகிறான்..

    எனது பார்வை..அந்தத் தலைவனின் உணர்வுகளைப் படம் பிடிக்கும் ஒரு சிறு முயற்சியே....
    அதைக் கிண்டலாக்கிப் பார்ப்பது உங்களின் பார்வை..
    மீள்வாசிப்பு செய்தால் அங்கு கொட்டிக்கிடக்கும்
    குவிந்த உணர்வலைகள் இதை உரத்து சொல்லும்..நன்றி..

    ReplyDelete
  25. kmrk அவர்களே .மைனர் அவர்களே கடந்த வாரம் முழுக்க நீங்கள் இருவரும் பின்னூட்டங்களில் மிகவும் பின் தங்கி இருந்தீர்கள்.எங்கேட இந்த புலிகளை காணவில்லையே என்று நினைத்தேன்.இப்போது தான் தெரிகிறது பதுங்கிய புலி பாய்ச்சலுக்கு என்று. அந்த காலத்து அரசியலை நேரில் காட்டினீர்கள் .இந்த காலத்து அரசியலை உரித்து காட்டுனீர்கள்.

    உங்கள் இருவரையும் இரட்டையர் என்று அழைகலாமா .
    இரண்டுமே சூப்பர்.

    ReplyDelete
  26. ///////// iyer said...

    திட்டம் போடும் தலைவர்களும்
    சட்டத்திற்குள்ளே... என்றே

    பட்டம் போல் பறக்குது
    பதவியிழந்ததும் மானமும் மரியாதையும்

    நாம் இந்த குடும்பத்திற்கு தேவையில்லை
    நாம் இதனை உணரவே 50க்கு மேல்

    இருந்தும் சில தலைவர்கள்
    இப்படியே.. என்ன செய்ய

    இப்படியோ அப்படியோ நம்
    கைப்பி(த)டியே அவர்களிடம் தான்..

    எடுத்து நடத்தத்ததான் ஆளில்லை
    எடுத்துச் சொன்ன மைனர்வாளுக்கு

    வாழ்த்துக்கள்.. அன்பு
    வணக்கங்கள்..////////


    நடைமுறை எதார்த்தத்திலே உழன்று கொண்டிருக்கும்


    எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் என்று ஆகிவிட்டிருக்கிறபோது


    இந்தச் சூழலுக்கு மக்களும் பழகி விட்டிருக்கிறபோது


    புதிதாய்ப் படைப்போம் என்கிற பேச்செல்லாம்


    ஒருவேளை 2012 லே உலகம் பேரழிவுக்கு உள்ளாகி


    தற்போதுள்ளோர் அனைவருமே காணாமல் போய்


    புதிதாய்ப் பூமியில் தோன்றும்


    உண்மையான அடுத்த தலைமுறைக்குத்தான் சாத்தியம்..

    ReplyDelete
  27. எட்டு ஆக்கங்களை ஒட்டு மொத்தமாய் வெளியிட்டு

    வகுப்பறையில் தீபாவளியை லேட்டாகக் கொண்டாடியிருக்கிறார் வாத்தியார்..

    ச்சும்மா அதிருதில்லே..

    ReplyDelete
  28. தேமொழியின் காணொளி நேரிலே டிவியிலே youtube option லே தேடிப்பார்த்தேன்..வரவில்லை..ஏனென்று தெரியவில்லை..வேறு வழியில்லாமல் எழுத்துக்களைப் பெரிதாக்கி லேப்டாப்பிலே பார்த்தேன்..திரும்பவும் அவரொன்று(nastradamous ) எழுத நாமொன்றை அர்த்தம் கொள்கிறோமோ இல்லை அவர் சொன்னதே அதுதானோ என்னவோ என்ற கேள்வி எழுகிறது..

    ReplyDelete
  29. kmrk அவர்களே உங்களின் . சத்யமூர்த்தி- அய்யாமுத்து கடித பரிமாற்றம் அந்த காலத்து தலைவர் தொண்டர் களிடையே பெரிய வித்தியாசம் இல்லாததையும் இருவரும் சமமே என்பதையுமே காட்டுகிறது. இந்த காலத்தில் இந்த காலத்தில் இதை பார்க்கமுடியாது .அய்யமுதுவின் சோசியலிச விளக்கம் புரிந்துகொள்ள எளிமையாகவே இருக்கிறது.

    ReplyDelete
  30. ஸ்ரீ சோபனவின் நாய்குட்டி கதை நல்ல உயிர்ப்பு உள்ள கதை . உணர்வு பூர்வமாக இருந்தது . நல்ல மொழிவளம். நல்ல நடை, சிறுகதை துறையில் தாராளமாக இறங்கலாம். குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.

    ReplyDelete
  31. சகோதிரி ஸ்ரீ சோபனாவின் கதை அருமை...
    இப்படி அம்மா இருந்தால் அப்படி அம்மா இருப்பார் போலும்.
    போலும் என்ன அப்படித்தான்...

    லக்னத்திற்கு எதிர் வீடு அல்லவா ஏழாம் வீடு!
    அம்மாவின் லக்னத்தில் செவ்வாய் இருந்திருப்பார் போலும்...(காரியத்தில் மட்டுமே வேகம் உணர்வுகளை பற்றிய சிந்தனை வராது)
    லயாவிற்கு லக்னத்தில் சந்திரன் போலும் குணவதி?! (வாத்தியார் சார் சரிதானே?)

    நல்லக் கதை தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  32. மைனர் வாள், தமிழ் விரும்பி இருவருமே நான் எதற்காக அந்தப் பதிவினை
    எழுதினேன் என்று கொடுத்த விளக்கத்தை 'சிக்' கென்று பிடித்து என்னை சிக்க வைக்கின்ற‌னர். அந்தப் பதிவின் stress
    தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் எப்படி கொள்கைகள் கூட
    பேசப்பட்டுள்ளன என்பதைக் காட்ட‌வே. நான் எதை அஞ்சினேனோ அதுவே நடந்தது. சோஷலிசம் பேசப்பட்டு,இக்கால அரசியலில் உள்ள கொள்கையற்ற போக்கு விமர்சனத்திற்கு ஆளகாமல் த‌ப்பிவிட்டது.

    காலம் மனிதனை மாற்றிப் போடும்.கொள்கைகளைக் கைவிடுவான்.திசையை மாற்றுவான்.

    நேருவினை எதிர்க்க வேண்டிய ஜனநாயகக் கடமையை ராஜாஜி முன் எடுத்தார். அப்போது எல்லா கட்சிகளுமே சோசலிசம் பேசின.சோசலிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட்,சம்யுக்த சோசலிஸ்ட்...இப்படிப்பல. கம்யூனிஸ்டுகளில் பல கட்சிகள்.காங்கிரஸ் ஜனநாயக சோசலிசம்....இன்னும் எல்லா உதிரிக் கட்சிகளும் சோசலிசம் பேசுவது ஒரு சம்பிரதாயம் என்று ஆகிப்போனது.எல்லா அரசியல் கட்சிகளும் உதட்டளவில் சோசலிஸம் பேசிக்கொண்டு,தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் பறிக்க பெர்மிட், லைசன்ஸ், கோட்டா என்று
    காங்கிரஸ் அரசியல் செய்தது.லஞ்சம் பெருகியது.

    மக்களுக்கு சோசலிசத்திற்கு மாற்றான பொருளாதரக் கொள்கை என்ன என்பதே
    தெரியாமல் இருந்தது. அப்போது ராஜாஜியின் தலைமையில் சுதந்திராக்கட்சி துவக்கப்படது.சுதந்திரப் பொருளாதாரம்,சந்தைப் பொருளாதாரம், போட்டி வர்த்தகம், உற்பத்தி சுதந்திரம்,அரசின் தளர்த்தப் பட்ட கட்டுப்பாடு ஆகியவை
    சுதந்திராக் கட்சியின் கொள்கையாக முன் வைக்கப்பட்டது. முதலாளிகளின் கட்சி என்று அது விமர்சிக்கப்ட்டது. உண்மையில் அன்றைய காங்கிரசுக்குத்தான்
    பண முதலைகள் ஆதரவும், பொருளும் கொடுத்தனர். அவர்களுக்குக் கொடுத்தால்தான் தங்கள் காரியம் நடக்கும். ஆட்சியில் இல்லாத சுதந்திராக் கட்சிக்கு யார் உதவி செய்வார்கள்?

    அன்று சத்தியமூர்த்திக்கு சோசலிசம் பற்றிய விளக்கங்களை அளித்த திரு.அய்யாமுத்து 'கேபிடலிசம்' பேசிய சுதந்திராக்கட்சியில் சேர்ந்து பணியாறினார்.அதாவது நேருவின் சோசலிசப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்த அணியில் சேர்ந்தார்.கொள்கையை மாற்றிக்கொண்டார்.

    மாற்றம் ஒன்றுதான் மாறுதல் இல்லாதது.

    ReplyDelete
  33. என்னைப் பற்றி எழுதிய இளங்கவியே!

    நான் என்ன செய்வேன் நாயகனே
    காடழித்தீர் கழனிகளில் வீடு
    சமைத்தீர், கால்வாய் அமைத்தீர்
    அதிலும் கண்டபடி குப்பை
    கூலம் நிரப்பினீர்?..

    சரி, அதோடுவிட்டீரா?!..
    காரிருலென கரும்
    புகை எழுப்பி ஒசோனை
    உடைத்து நொறுக்கி
    வெப்பத்தைப் பெருக்கியே
    துருவங்களையும் உருக்கியே நீர்த்
    துளிகளாய் நிரப்பினீர்!

    என்ன செய்வது உங்கள் நிலை
    எனக்கும் தெரிகிறது! இருந்தும்
    எனக்கு விதிக்கப் பட்ட
    விதியை நான் இஷ்டத்திற்கு
    மாத்திக் கொள்ள நான் நொன்றும்
    மானுடன் அல்லவே!

    ReplyDelete
  34. //அந்தத் தலைவனின் உணர்வுகளைப் படம் பிடிக்கும் ஒரு சிறு முயற்சியே....
    அதைக் கிண்டலாக்கிப் பார்ப்பது உங்களின் பார்வை..
    மீள்வாசிப்பு செய்தால் அங்கு கொட்டிக்கிடக்கும்
    குவிந்த உணர்வலைகள் இதை உரத்து சொல்லும்.//

    அப்பூடியா மைனர்? எனக்கெல்லாம் குதிரைப் படம் போட்டு கீழே குதிரை என்று எழுதினால் கூட அதைக் கழுதை என்றுதான் புரிந்து கொள்ள முடியும்.

    சாரி! சரியான புரிதல் இல்லாமல் உங்கள் தலைவரைப் பற்றிய பின்னூட்டம் இட்டதற்கு.

    ReplyDelete
  35. //தஞ்சை ‍ புதுக்கோட்டை வழியில் திருமயம் இருப்பதாக எழுதியிருக்கிறார். புதுக்கோட்டை திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கிறது திருமெய்யம்.//

    செட்டி நாட்டுக்காரரான அய்யாவே எடிடிங்கில் விட்டதை தஞ்சைப் பெரியவர்
    கண்டு பிடித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  36. //அவள் 'நேத்திக்கு நான் லீவு சார்' என்றாள்..
    ஆசியர் உடனே 'அதான் ஏங்குறேன்?' என்று விடாமல் தொடர்ந்து 'ஏன் என்கிறேன்' என்ற பதத்தை பேச்சுவாக்கிலே இப்படியாகக் காரணத்தைக் கேட்டார்..நான் அந்தக் கேள்வியிலிருந்த விகடமான பொருளைக் கண்டுகொண்டு முதலில் சிரிப்பைத் துவங்கிவைத்தேன்..வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆனது..//

    மைனர்வாள்! இவ்வள‌வு சரக்கை உள்ளே வைத்துக் கொண்டு ஏன் ஒன்றும் சொல்லாமல் உள்ளீர்கள்?

    அந்த ஆசிரியர் உங்களை 'வாங்கறேன்' என்று அழைத்துத் 'தாங்கறேன்' என்று என்று இரண்டு போடவில்லையா?

    ReplyDelete
  37. //"திராவிடநாடு, திராவிடநாடு என்று சொல்கிறிர்களே அதை காட்ட முடியுமா " என்றார் ;அதற்கு அண்ணா சொன்னார்,
    உன் வீட்டுக்கு போய் "பாவாடையின் நாடாவை அவிழ்த்து பார் அங்கெ தெரியும்" என் திராவிட நாடு.என்று சிலேடையில் பதில் சொன்னார்.பெண்ணிடம் இப்படி சொல்வது அநாகரிகம் தான்.அனால் இதன் அர்த்தம் வீட்டுக்கு போய் வரலாறு புத்தகத்தை பிரித்து படித்தால் தெரியும் என்பதுதான் அது.//

    தனுசு அவர்களே! இந்த விஷயத்தில் ஏதோ ஒரு மிஸ்ஸிங் லின்க் இருக்கு. அவ்வளவு கொச்சையாக முத‌லமைச்சர் ஆன பிறகு அறிஞர் அண்ணா பேச வாய்ப்புக் குறைவு.

    ஒரு நடிகையுடன் அவரை முடிச்சுப் போட்டு பேசிய போது அந்த நடிகையின் பெயரைச்சொல்லி'அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல;நானும் முற்றும் துறந்த முனிவன் அல்ல' என்று பேசியதாக அவருடைய சமத்காரப் பேச்சுக்கு திராவிடப் பாரம்பரியம் உதாரணம் கூறும்.

    நீங்கள் கூறிய பேச்சில் அந்த சமத்காரம் மிஸ்ஸிங். சரியாக மீண்டூம் சொல்லவும்.

    ReplyDelete
  38. //"திராவிடநாடு, திராவிடநாடு என்று சொல்கிறிர்களே அதை காட்ட முடியுமா " என்றார் ;அதற்கு அண்ணா சொன்னார்,
    உன் வீட்டுக்கு போய் "பாவாடையின் நாடாவை அவிழ்த்து பார் அங்கெ தெரியும்" என் திராவிட நாடு.என்று சிலேடையில் பதில் சொன்னார்.பெண்ணிடம் இப்படி சொல்வது அநாகரிகம் தான்.அனால் இதன் அர்த்தம் வீட்டுக்கு போய் வரலாறு புத்தகத்தை பிரித்து படித்தால் தெரியும் என்பதுதான் அது.//

    தனுசு அவர்களே! இந்த விஷயத்தில் ஏதோ ஒரு மிஸ்ஸிங் லின்க் இருக்கு. அவ்வளவு கொச்சையாக முத‌லமைச்சர் ஆன பிறகு அறிஞர் அண்ணா பேச வாய்ப்புக் குறைவு.

    ஒரு நடிகையுடன் அவரை முடிச்சுப் போட்டு பேசிய போது அந்த நடிகையின் பெயரைச்சொல்லி'அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல;நானும் முற்றும் துறந்த முனிவன் அல்ல' என்று பேசியதாக அவருடைய சமத்காரப் பேச்சுக்கு திராவிடப் பாரம்பரியம் உதாரணம் கூறும்.

    நீங்கள் கூறிய பேச்சில் அந்த சமத்காரம் மிஸ்ஸிங். சரியாக மீண்டூம் சொல்லவும்.

    ReplyDelete
  39. //kmrk அவர்களே .மைனர் அவர்களே கடந்த வாரம் முழுக்க நீங்கள் இருவரும் பின்னூட்டங்களில் மிகவும் பின் தங்கி இருந்தீர்கள்.எங்கேட இந்த புலிகளை காணவில்லையே என்று நினைத்தேன்.இப்போது தான் தெரிகிறது பதுங்கிய புலி பாய்ச்சலுக்கு என்று.//

    அய்யோ! என்னையுமா புலிகள் 'லிஸ்டு'ல போட்டுவிட்டீர்கள்?நான் என்னமோ 'கிருஷ்ணா ராமா'ன்னு ஜபம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்து இருக்கேன்.
    புலி அது இதுன்னு கிலி பிடிக்க வைக்கறீங்களே!

    இந்த முறை என் பதிவில் அய்யாவின் 'எடிடிங்' ரொம்ப அதிகம். அதைப் போட்டு இருந்தா மைனரும் நானும் 'ஜாலி'யாக ஒரு 'இது' பண்ணியிருப்போம். 'அது'வேண்டாம் என்று ஐயா ஒதுக்கிட்டார்.

    ஐ ஏ எஸ் கேள்விகள் பதிவிலேயே நிறைய சான்ஸ் பின்னூட்டத்தில் கொடுத்தேன் மைனருக்கு. அப்போ அந்த ஜப்பான் புலி பதுங்கிடிச்சி.இப்போ வந்து குதிக்குது.

    ReplyDelete
  40. சோஷலிசம் பற்றி நண்பர்கள் விவாதம் செய்வதைப் பார்த்தேன். நன்று! நேரு இந்தியாவுக்கு சோவியத் சார்ந்த சோஷலிச மார்க்கமே சிறந்தது என்று கனவு கண்டார். பலன்? அவர்களைப் போல ஐந்தாண்டு திட்டங்கள் கொணர்ந்தார். 1954இல் ஆவடியில் நடந்த காங்கிரசில் "சோஷலிச மாதிரியான சமுதாயம்" அமைக்கப் போவதாக தீர்மானம் போட்டார். அப்போது ம.பொ.சி. அவர்கள் "ஆவடியில் ஆண்டியப்பன்" என்றொரு கட்டுரைத் தொடரைத் தனது "செங்கோல்" பத்திரிகையில் எழுதினார். அதில் அவர் சொன்னதுதான் எதார்த்தம். உங்கள் சோஷலிசம் எல்லாம் மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் உயரவும், கீழ்மட்டத்து உழைப்பாளி, ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகவும் உதவும் என்றார். எங்கோ மூலையிலுள்ள கிராமத்து விவசாயி ஆண்டியப்பன், உங்கள் சோஷலிச கோஷத்தால் முன்னேறப் போவதில்லை என்பது அந்தக் கட்டுரை சொன்ன கருத்து. 1947க்குப் பிறகு இந்தியாவில் கோடீஸ்வரர்களாக ஆன சாமானியர்கள் எத்தனை பேர்? அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சாமானியர்களின் கதி/நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள். சோஷலிசம் யாருக்குப் பயன்படுகிறது. ஒரு பழமொழி உண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது. வாய்ப்பந்தல் சோஷலிசம் நடைமுறைக்கு ஒத்துவராது. இதில் தீரர் சத்தியமூர்த்தியின் சிந்தனையே சரி என்பது விளங்கும். கோவை ஐயாமுத்து நல்லவர், தியாக உள்ளம் கொண்டவர், கதர் தொழிலை வளர்த்தவர், பொருளாதார சிந்தனையாளர் அல்ல. ஆகவே, அவர் சத்தியமூர்த்திக்கு அவ்வாறு எழுதியது நேரு மீதிருந்த நம்பிக்கையினால்தான். கொள்கைகள் எல்லாம் ஊருக்குத்தான் தம்பி, உனக்கும் எனக்கும் இல்லை என்று ஒரு அரசியல்வாதி சொன்னார். அதுவே சத்திய வாக்கு!

    ReplyDelete
  41. "மழை" கதை மனிதாபிமானம் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் அதிகம் என்பதும், பெண்ணாக இருந்தும் அந்தத் தாய் தன் குழந்தையின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளாததும், தந்தையின் கருணை தன் புத்திர பாசத்தைப் போலவே நாய்க்குட்டிகள் மீதும் இருந்ததும் பாராட்டத் தகுந்தவை. அந்த ஆட்டோ புகையைக் கக்கிக் கொண்டு வந்தது என்றால், டீசல் விலை உயர்வைச் சரிக்கட்ட அந்த மனிதன் டீசலோடு எதைச் சேர்த்தானோ? நல்ல கதை. எழுதியவருக்கு இது புது முயற்சி என்றால், இனி தைரியமாக இதுபோல அதிகம் எழுத முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்து.

    தனுர் ராசிக்காரரின் கவிதை தரமானது. நல்ல கவிதை. உவமைகளும் சொற்பிரயோகங்களும் அவரது கவிதா சிந்தனைக்கு நல்ல எடுத்துக் காட்டு. அடுத்த டிசம்பர் 11இல் தஞ்சையில் மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழாவில் கவி அரங்கம் உண்டு. தனுர் ராசிக்காரர் தாய் நாட்டில் இருந்தால் அவருடைய கவிதை பாட அரங்கம் வரவேற்கிறது.

    ReplyDelete
  42. வணக்கம் ஐயா,
    இன்று மாணவர் மலரில் என்னுடைய ஆக்கத்தையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.நான் எழுதிய முதல் சிறுகதை என்பதால் சற்று பதற்றமாக இருந்தது.ஆனால் என் கதையை படித்து பார்த்து பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.எனக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.நான் சற்று பயந்த சுபாவம் உடையவள் தான் ஆனால் என் முன்னால் யாராவது விலங்குகளை துன்புறுத்தினால் தெறியாதவர்களாயினும் ஏன் இப்படி இரக்கமில்லாமல் நடந்து கொள்கின்றீர்கள் என்று கேட்பேன்.அந்த அளவுக்கு எனக்கு விலங்குகளை பிடிக்கும்.அதன் தாக்கம் தான் என் முதல் கதையில்.
    ஜோதிட ரீதியில் இவ்வாறான அமைப்புகளை அவயோகம் என ஒரு புத்தகக் குறிப்பில் படித்தேன்.ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை,காரணம்
    விலங்குகள் தான் மனிதர்களை விட மனதளவில் எந்த சூழலிலும் மாற்றமடையாதவை என்று எண்ணுகிறேன்.
    நாமும் முயற்சி செய்து பார்ப்போமே என்று தான் வாத்தியார் ஐயாவுக்கு எழுதி அனுப்பினேன்.என் கதையை வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள்.உங்களால் தான் சிறுகதையை எழுத முயற்சித்தேன்,இனி முடிந்த அளவு இன்னும் சிறப்பாக எழுதவும் முயற்சிக்கின்றேன்.நன்றி ஐயா.

    ReplyDelete
  43. ஜப்பான் நண்பர் எழுத்தில் நயம் காணப்படுகிறது. "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?" என்று ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் பாடல் என நினைவு. இவருடைய கதையில் வரும் பெரியவருக்கும் இந்தப் பாடல் பொருந்தும். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு, தண்டனை இவைகள் எல்லாம் செய்த குற்றத்துக்குத்தின் தொடர் விளைவுகள். தண்டனையின் நோக்கம் குற்றவாளளி திருந்த வேண்டும் என்பது. ஆனால் கடைசி வரை தான் செய்தது என்ன என்பதையே உணராமல் ஒருவன் இருந்தால், அவன் செய்த அடாவடி, குற்றம், ஊழல் எல்லாமே நியாயமான நடவடிக்கைகள்தான் என்று திரும்பத் திரும்ப கோயபல்ஸ் பாணியில் நிறுவ முயன்றால், என்ன பயன் விளையும்? தன்னுடைய மனம் திருந்தாமல் எவனும் பிறர் மனத்தைத் திருப்தி செய்துவிட முடியாது. 'தன் வினைத் தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்பார்கள். நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீஸரைக் கொன்றது எத்தனை நியாயம் என்று நிறுவ முயன்றவனின் வாசாலகத்தைப் படித்திருக்கிறோம். மெக்சிகோவில் வாழ்ந்த "விவா சப்பாட்டா" எனும் புரட்சி வீரனின் சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். செய்த வினைகள், திரும்பவும், செய்தவனுக்கே பரிசாக வந்ததாகத்தான் நமது புண்ணிய பூமியில் பெரியோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இல்லாவிட்டால் பெரும் தொகை பணத்தோடு நாம் தெருவில் செல்லும்போது அதைப் பிடுங்கிக்கொண்டு ஓட, கைதேர்ந்த வழிப்பறிக்காரர்களைத் தவிர, சாதாரண மக்கள் துணிவதில்லையே. ஏன்? தண்டனைக்கு பயந்தா? போலீசுக்கு பயந்தா? இல்லை, இந்த மண்ணின் தார்மீக உணர்வு அது குற்றச் செயல் என்கிற உணர்வு. அது இல்லையென்றால், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும். ஜப்பான் மைனரின் அருமையான உருவகக் கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  44. ஜப்பான் மைனரின் கதைக்குப் பின்னூட்டமிட்டுவிட்டு அடுத்து தேமொழி அவர்களின் கதையைப் படித்து முடித்தேன். நிறைவில் "தீதும் நன்மையும் பிறர் தர வாரா" என்று முந்தைய பின்னூட்டத்தில் நான் எழுதிய வாசகங்கள் அங்கு இருந்ததைப் பார்த்துத் திகைத்தேன். கதையைப் படித்துக் கொண்டு வரும்போதே அது நடந்த நிகழ்ச்சி என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. அதிலும் ஆனந்தவிகடனில் எண்பதுகளில் வந்த கதைப் பக்கத்தை அடையாளம் வைத்து மூடியபோதே, இத்தனை காலம் பின்னோக்கி இந்தக் கதை வளரக் காரணம் என்ன என்பதைப் பார்த்து புரிந்து கொண்டேன். மனத்தை வாட்டும் சில சம்பவங்களை மனம்விட்டுப் பேச முடியாவிட்டால், இப்படி உருவகங்களாக வெளியிட்டு நம் மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    இன்று நான் அதிகமாக பின்னூட்டத்தில் விளயாடி அதிக இடத்தைப் பறித்துக் கொண்டேனோ என்கிற குற்ற உணர்வு இருக்கிறது. மன்னித்து விடுங்கள் ஆசிரியர் ஐயா! அதிக எண்ணிக்கையில் பதிவுகள் ஆகையால் பின்னூட்டமும் தனித்தனியாக இடவேண்டி நேர்ந்தது. நன்றி.

    ReplyDelete
  45. இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் பூர்வாசிரமப் பெயர் "ஜனசங்கம்". அதற்கு பேராசிரியர் பால்ராஜ் மதோக் என்பவர் தலைவராக இருந்தார். அவர் காலத்தில் எல்லா கட்சிகளும் சோஷலிசம் பேசின. ஜனசங்கமும் சோஷலிசம் பேச முயற்சி செய்தது. தலைவர் கடுப்பானார். நாம் வலது சாரிகள். நமக்கும் சோஷலிசத்துக்கும் ஒத்துவராது என்றார். அரசியல் விளையாட்டில் ஜெயிப்பதுதானே நோக்கம், மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? பால்ராஜ் மதோக்கைக் கட்சியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள். மக்கள் ஆதரவைப் பெற சோஷலிசம் என்கிற கோஷத்தை அவர்களும் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

    ReplyDelete
  46. ///////Thanjavooraan said...
    ஜப்பான் நண்பர் எழுத்தில் நயம் காணப்படுகிறது. "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?" என்று ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் பாடல் என நினைவு. இவருடைய கதையில் வரும் பெரியவருக்கும் இந்தப் பாடல் பொருந்தும். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு, தண்டனை இவைகள் எல்லாம் செய்த குற்றத்துக்குத்தின் தொடர் விளைவுகள். தண்டனையின் நோக்கம் குற்றவாளளி திருந்த வேண்டும் என்பது. ஆனால் கடைசி வரை தான் செய்தது என்ன என்பதையே உணராமல் ஒருவன் இருந்தால், அவன் செய்த அடாவடி, குற்றம், ஊழல் எல்லாமே நியாயமான நடவடிக்கைகள்தான் என்று திரும்பத் திரும்ப கோயபல்ஸ் பாணியில் நிறுவ முயன்றால், என்ன பயன் விளையும்? தன்னுடைய மனம் திருந்தாமல் எவனும் பிறர் மனத்தைத் திருப்தி செய்துவிட முடியாது. 'தன் வினைத் தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்பார்கள். நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீஸரைக் கொன்றது எத்தனை நியாயம் என்று நிறுவ முயன்றவனின் வாசாலகத்தைப் படித்திருக்கிறோம். மெக்சிகோவில் வாழ்ந்த "விவா சப்பாட்டா" எனும் புரட்சி வீரனின் சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். செய்த வினைகள், திரும்பவும், செய்தவனுக்கே பரிசாக வந்ததாகத்தான் நமது புண்ணிய பூமியில் பெரியோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இல்லாவிட்டால் பெரும் தொகை பணத்தோடு நாம் தெருவில் செல்லும்போது அதைப் பிடுங்கிக்கொண்டு ஓட, கைதேர்ந்த வழிப்பறிக்காரர்களைத் தவிர, சாதாரண மக்கள் துணிவதில்லையே. ஏன்? தண்டனைக்கு பயந்தா? போலீசுக்கு பயந்தா? இல்லை, இந்த மண்ணின் தார்மீக உணர்வு அது குற்றச் செயல் என்கிற உணர்வு. அது இல்லையென்றால், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும். ஜப்பான் மைனரின் அருமையான உருவகக் கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்./////

    தங்களின் கருத்துப் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..
    தங்களின் கருத்துரையில் தனிமனித வாழ்வுக்கு என்று கூறப்பட்ட அறிவுரைகளை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்..
    வெற்றிபெற்றோர் பக்கமே நியாயம்..வல்லவன் வகுத்ததே வாய்க்கால்..என்றெல்லாம் பொது விஷயங்களுக்கு யார்பக்கம் உண்மையான நியாயம்..எந்த அடிப்படையில் வெற்றி என்பது இன்னும் புரியாமலே இருக்கிறது..
    துரியோதனன் இல்லாமல் அர்ஜுனன் இல்லை...பல சமயங்களில்..
    ஒரு வெற்றியை நிறுவ ஒரு தோல்வியாளன் தேவையாகிறான்..
    நாணயத்தின் இரண்டுபக்கங்களாக இது அமைகிறது..
    சதாம் ஹுஸ்செய்ன், கடாஃப்பி என்று சமீபத்திய தலைகளின் வீழ்ச்சியிலும்
    இதே வழியிலே வல்லவன் வகுத்ததால் வரலாறு மாறுகிறதோ என்றே தோன்றுகிறது..
    இலங்கையிலே இப்போது நடக்கும் ஆட்சி வெற்றிபெற்றவர்களால் செய்யப்படுவது என்ற அடிப்படையில் பார்த்தால்
    அவர்களின் செயல்கள் நியாயம் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை இயற்கை வழங்கியிருக்கிறது என்றே பொருள் கொள்ள நேரிடுகிறது..இயற்கையின் தீர்ப்பு அதுவானால் அதை ஏற்க மனம் ஒப்பவில்லை..மனிதர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விடுத்து இயற்கையும் கிரகங்களுமே தீர்மானிக்கின்றன என்றால் அந்தப் புதிரான விஷயம் எனக்கு இன்னும் விளங்கவில்லை..

    ReplyDelete
  47. ///kmr.krishnan said...
    அய்யோ! என்னையுமா புலிகள் 'லிஸ்டு'ல போட்டுவிட்டீர்கள்?நான் என்னமோ 'கிருஷ்ணா ராமா'ன்னு ஜபம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்து இருக்கேன்.
    புலி அது இதுன்னு கிலி பிடிக்க வைக்கறீங்களே!/////

    ஆமாம் சார். நேத்திக்கு கூட அமெரிகாவுக்குள்ளே நுழையவிடமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
    அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..
    இந்த வேளையில் நாமெல்லாம் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் நிகழ்த்த விடாமல் யாரும் நமக்கெதிராக காய் நகர்த்துகிறார்களோ என்றே நினைக்கிறேன்..எதுக்கும் ஜாக்ரதையாவே இருப்போம்..

    எதுக்கு நமக்கு இந்த வீண் வம்பெல்லாம்?..சிவசிவா..இதைச் சொன்னா நீங்க கோவிச்சுப்பீங்க..சரி..ஹரே கிருஷ்ணா..

    ReplyDelete
  48. ////////kmr.krishnan said... அந்த ஆசிரியர் உங்களை 'வாங்கறேன்' என்று அழைத்துத் 'தாங்கறேன்' என்று என்று இரண்டு போடவில்லையா?///////////

    இல்லை..இல்லை..இல்லை..கொஞ்சம் கவனிக்காதவரைப் போன்று இருந்துவிட்டார்..நான் கிளாஸ் ஃபர்ஸ்ட்..அவர் கிளாஸ் டீச்சர்..அவரோட பாடம் இங்கிலீஷ் லேயும் நான்தான் ஃபர்ஸ்ட்.. அந்த ஒரு இதுக்காக 'போறான் சின்னப்பையன்' என்று விட்டுவிட்டிருக்கலாம்..

    இதைவிட கணக்கு வாத்தியார் எப்போதும் போர்டில் தப்பான கணக்கு போட்டுவிட்டால் தப்பு பண்ணியவரைப் பாத்து என்ன தம்பி?தப்பு பண்ணிட்டீங்களா?இல்லை மறந்துட்டீங்க..இல்லை ஒரு அவசரத்துலே..என்றெல்லாம் எடுத்துக் கொடுப்பார்..இதில் ஏதாவதொன்றுக்கு ஆமாம் என்று தலையாட்டித்தான் ஆகவேண்டும்..அந்த நேரம் அவர் வேறு மாதிரியாக 'அப்புடின்னா ஒண்ணு பண்ணு..

    நாளைக்கு ஸ்கூல் க்கு வரும்போது சாதத்துக்குப் பதிலா வேற எதையாவுது எடுத்துட்டு வாயேன்..

    'ஒரு அவசரத்துலே..இல்லே மறதியிலே.. தப்பா..'என்று கேவலப்படுத்திவிடுவார்..

    இந்த வாத்தியார் தவறி போர்டில் சிலசமயம் தப்பான விடையை எழுதிய போது வாத்தியார் தவறி,மறதியிலே, அவசரத்துலே தப்பு பண்ணிட்டாருடா..என்று சவுண்டைக் கொடுத்ததும் உண்டு..'டேய்..' என்று பதிலுக்கு சவுண்ட் விடுவார்..அவ்வளவுதான்..

    ReplyDelete
  49. இன்றைக்கு சோஷலிசம்..இன்னும் பல வரலாற்று விஷயங்களை KMRK ,தஞ்சாவூரார் அவர்களிடம் இருந்து தெரிந்துகொண்டேன்..நன்றி..

    ReplyDelete
  50. /////////kmr.krishnan said... இந்த முறை என் பதிவில் அய்யாவின் 'எடிடிங்' ரொம்ப அதிகம். அதைப் போட்டு இருந்தா மைனரும் நானும் 'ஜாலி'யாக ஒரு 'இது' பண்ணியிருப்போம். 'அது'வேண்டாம் என்று ஐயா ஒதுக்கிட்டார்.///////////

    சென்சார் பண்ணாத காப்பியை மைனருக்கு தனி மெயிலில் அனுப்பி வெக்கலாமில்லே?

    எனக்கு எப்போதுமே சென்சார் பண்ணப்பட்ட மேட்டரை(!!)
    வேற எங்கிருந்தாவுது
    காப்பி கிடைச்சா
    முழுசா பாக்குறதுலேதான்(!!) இண்டரெஸ்ட்..

    ReplyDelete
  51. தஞ்சாவூர் பெரியவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.எல்லாப் ப்திவுகளையும் நுணுகி ஆராய்ந்து பெரிய பின்ன்னூட்டங்கள் இட்டுள்ளார் மாணவர் மலர் துவக்க விழாவில் ஐயா கொடுத்த பொறுப்பை இன்றுதான் நன்கு நிறை வேற்றியுள்ளார். வாரம் தோறும் இந்த ஊக்க டானிக்கை அவர் வழங்க வேண்டும்.அப்போதுதான் என்னைப் போன்ற 'இளைஞர்கள்'நம்பிக்கையுடன் படைபுக்களை உருவாக்க முடியும்..

    சோஷலிசம் பற்றிய அவர் கூறியுள்ள கருத்துக்களில் என் கவனத்தைக் கவர்ந்தது 'சோஷலிசம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல' என்பதுதான்.

    நான் காரல் மார்க்சின் மூலதனத்தை சும்மா நூலகத்தில் பார்த்ததோடு சரி.Das
    capital என்று தலைப்பில் போட்டிருக்கும். சிறுவயதில் இந்த 'தாஸை'
    ஏதோ ராமதாஸ் போல ஏதோ ஒன்று கூட நினைத்து இருந்தேன்.

    கொஞ்சம் வளர்ந்தபோது மார்க்சைப் போல தாடி, முடி எல்லாம் வளர்த்துப் பார்த்தேன்.இதனால் எல்லாம் மர்க்ஸ் ஆகமுடியாது என்று தினமும் க்ஷவரம் செய்து கொள்ளும் தோழர் அறிவுரை கூறி, அவரைப்போலவே என்னையும் தினசரி ரேசர்காரனாக மாற்றிவிட்டார்.சரி முடி போனால் என்ன? மார்கசைப் படிபோம் என்றால், சங்க கால இல‌க்கியம் கூட சில பாடல்கள் தெளிவுரை இல்லாமல் புரிகிறது. மார்க்ஸ் புரிய மாட்டேன் என்று அடம் பிடித்து விலகிக்கொண்டார்.

    அப்புறம் மார்க்ஸியத்தைக் கரைத்துக் குடித்த சில பேராசிரியர்கள் எழுதியதையும் பேசியதையும் வைத்து சில அனுமானங்க‌ளுக்கு வந்தேன்.

    அதில் முதலும் முடிவுமான கருத்து சோஷ‌லிசத்துக்கு அடிப்படையான‌த் தேவை தன்னலத்தைப் பின் தள்ளி சமூகப் பொது நலததை முன்னுக்குக்கொண்டு வ்ந்து செயல் படவேண்டும் ஒரு தோழர்.அதாவது தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேண வேண்டும்.ஒரு தனி மனிதனைவிட சமூகம் பெரியது. நான் ஒரு சமூக மனிதனே அன்றித் தனி மனிதன் அல்ல. என்னுடைய சுய நலம் வெளிப்பட்டு சமூகம் பாதிக்கப்படுமானால் நான் தேவைப்பட்டால் வன்முறையாலும் அகற்றப்படலாம்.

    இந்தக் கருத்து சரியா? இதன் மீது சோஷலிசவாதிகள் மேல் அதிகத்தகவல் தாருங்கள்.நன்றி!

    ReplyDelete
  52. //.நான் கிளாஸ் ஃபர்ஸ்ட்..அவர் கிளாஸ் டீச்சர்..அவரோட பாடம் இங்கிலீஷ் லேயும் நான்தான் ஃபர்ஸ்ட்.. //

    ஐயோ, இதைப் படிக்க டெல்லிக்காரவுக இல்லையே!என்ன சொல்லி கவுப்பாகன்னு புரியலையே!

    அப்பா! மைனர்வாள் கிட்ட இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்பாவ்!
    இன்கிலிபீசுல மாஸ்டரமுல்ல!

    நாம எதாவது சொல்லப் போய்'தாட் பூட் தஞ்சாவூர்'னு இன்கிலிபீசுல உட்டா என்னா பண்ற‌து?

    ReplyDelete
  53. எட்டும் ஒண்ணா இறங்கியதால் ஒன்னன்னனா வாரோம்னா!
    மைனர்வாளின் ஆக்கம், கதை அமைப்பு நன்றாக வந்துள்ளது...
    தர்மம் வேறு நியாயம் வேறு என்று சொல்வதாக இருக்கிறது...
    விதிமீறல்கள் இரு டீமும் செய்வதால் சரியா போச்சு என்று
    எண்ணிக் கொண்டு விளையாடினாலும் பார்வையாளர்களில்
    என்னைப் போல உள்ளவர்கள் அந்த விளையாட்டை தொலைக் காட்சியில்
    ஒளிபரப்பாகும் போது... பேசாம சானலை மாற்றி விடுகிறோம்.

    மைனர்வாள் நன்றாக கதை செய்வார் / செய்துள்ளார்கள் என்பதால் ஆக்கம் அருமை
    என்று வழக்கமாக சொல்லிக் கொள்கிறேன் நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  54. சிலேடையை படித்து சிரித்து முடித்தவுடன் நல்ல கருத்தையும் சொல்லி சுப முடிவுடன்,"சன்டே" காமெடி படம் "சூப்பர்" ஐயா!

    எனக்கு சத்தியமூர்த்தி அவர்களின் பெயர் காங்கிரஸின் தலைமை செயலகத்தின் பெயர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.KMRKஅவர்களின் ஆக்கத்திற்க்கு பிறகு கூகுளில் தேடி சில தகவல்களை தெரிந்து கொண்டேன்.நன்றி ஐயா.

    வருண பகவானே - உன்ஆட்சி நடக்கிறது - இன்றுஉனக்கோர் விண்ணப்பம்உவந்து செவிமடுக்க!படைத்தளபதி புயலாரோடு - நீபயணித்து வருகையில் - உன்வேகத்தில்

    இந்த ஆரம்ப வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நல்ல கவிதை.
    உண்மையில் எனக்கு தற்போதைய அரசியல் சுத்தமாக பிடிக்காது(யாருக்கு தான் பிடிக்கிறது)என்னை போன்று அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.ஆனால் மைனர் அவர்கள் எழுதிய கட்டுரையில் மொழி நடை மற்றும் யதார்த்தமான உணர்வுகள் மிக அருமை.அதற்காகவே முழுவதும் படித்தேன்.எனக்கு பிடித்த தற்கால தலைவர் "வாஜ்பேயி"அவர்கள் மட்டும் தான்.அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின் எனக்கு அரசியல் செய்தியை கேட்க கூட பிடிக்காது.ஏனெனில் ஆளும் கட்சியோ எதிர் கட்சியோ யார் ஆட்சியில் வந்தாலும்,மக்களுக்கு மகிழ்ச்சி மட்டும் வராது தானே!!!
    தேமொழி சகோதரியின் கதை மிகவும் அருமை.தமிழ் உரைநடை பாடத்தில் கட்டுரையை படித்ததை போன்று இருந்தது.ந‌ல்ல‌ எழுத்து வ‌ன்மை உங்க‌ளுக்கு.
    சபரி அவர்களின் ஜோக்ஸ் "சூப்பர்",அதிலும் முதலில் உள்ளது "சூப்பரோ சூப்பர்",இப்ப‌டி ஆண்க‌ளை ஜோக்ஸ்களில் பார்க்கிறேன்.

    காணொளியை நானும் சென்று பார்த்தேன்.KMRK ஐயா கூறியபடியே,ஏன் சம்பவங்களை நடைபெறும் முன்னரே நாஸ்ட்ரடாமஸ் எழுதிய குறிப்புகளில் இருந்து நம்மால் ஊகிக்க முடியவில்லை என்று தெரியவில்லை.ஆனால் அவரது குறிப்புகளில் இருந்து பல சம்பவங்ககள் உண்மையில் நடப்பதை நானும் நம்புகிறேன்.அதனால் அந்த குறிப்புகளிலிருந்து ஏதாவது கிடைக்குமா என்று தேடியும் புதிதாக எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை.இன்று தேமொழி சகோதரி "யூ ட்யூபில்" தேடி தந்துவிட்டார்.நன்றி.

    ReplyDelete
  55. அடுத்து சகோதிரி தேமொழி அவர்களின் ஆக்கம்,.
    உருக்கமான உண்மைக் கதை என்றாலும் உண்மையில்
    பெரும் நெருடலான ஒருக் கதை தான்...

    தங்களின் கதை ஆக்கம் நல்ல கோர்வையுடன் வந்துள்ளது... சிவசங்கரி சிறுகதை, சினிமாப் பாடல் என்றும்.. சில விசயங்களை சுவாரஸ்யத்திற்கு சேர்த்துள்ளீர்கள். மிக்க நன்று.

    இன்னொரு விஷயம் நன்கு விளங்குகிறது அந்த பெரிய அண்ணியின் பக்தியும், பெரியவர்களை கவனிப்பதும் பணத்திற்காகத் தான் என்பதை தெளிவாக இருக்கிறது.

    பணநோய் என்னும் மனநோய்... தான் இதன் காரணம் எல்லாம். "விதைத்ததைத் தானே அறுக்க முடியும்"
    அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றிகள் சகோதிரி.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  56. எஸ்.எஸ் நாராயணன் அவர்களின் சிரிப்புத் துணுக்குகளும் ரசித்தேன்.

    நான் இதுவரை மற்றவர்களின் பின்னூட்டங்களைப் படிக்காமலே எனது பின்னூட்டங்களை போட்டுள்ளேன்... இனி அவைகளைப் படிக்கப் போகிறேன்.. பை...............
    நன்றி.

    ReplyDelete
  57. @iyer said...
    ///காய் நறுக்கும் போது
    கத்தியால் வெட்டிக் கொண்டு
    கத்தி வெட்டிடுச்சுன்னு சொல்வோம்
    கத்தியா வெட்டியது...?
    இரவு நேர ரயிலில் யாருக்கும்
    இருக்குமிடம் தெரியாமல் வந்தவர்
    திருட்டு ரயிலில் வந்ததாக சொல்வர்
    திருடியது ரயிலா...?
    கல்லில் தெரியாமல் இடித்துக்கொண்டு
    கல்லு இடிச்சுடுச்சுன்னு சொல்லுவோம்
    கல்லா இடித்தது... இப்படித்தான்
    கற்றவர்கள் நாமே பல சமயங்களில்
    தெரிந்தோ தெரியாமலோ
    தெளிவாகவே சொல்லியபடி இருக்கோம்
    எல்லாவற்றிக்கும் மதுரை சொக்கனே
    எமக்கு தலைவர் என சொல்லும் ///

    கீழ் உள்ள தங்களின் வரிகளையும் மேலே சேர்கிறேன்..

    "ரஜினி அவர்களின் அந்த பாடல்
    ரசிக்க சில வரிகள் மட்டும்"

    இப்படித்தான் கவிஞரின் பாடலெல்லாம் எம்.ஜி.ஆரின்னு சொல்லிக் கொண்டும் இருக்கிறோம் இல்லையா?.....

    ReplyDelete
  58. Guru Vanakkam,

    Valla Sidharukku "POOKOODARAM" mudichitu, Meenakshi ammana darisanam pannindu, Tiruparankunram murugana parthutu appadiye Thirumohur "Kalamega perumal aasirvadhathoda" oru Madhrai trip a mudichitu vandhu, Relax panna - Indha Aakangal maturm pinnutathayum padicha adhu
    80's la vandha "Aanandha Vigadana" padicha pola irundhau.

    Superb.

    Thanks
    RAMADU.

    ReplyDelete
  59. iyer said...
    ///சுனாமி என்பது தமிழ்ச் சொல்லே
    சப்பான்னுக்கு சொந்தமாயிடுத்து இப்போ

    (சுனை மீதுர்தல் என்பதே சுனாமி
    தமிழ் ஆர்வலர்கள் கருத்து தரலாம்)///
    இது மட்டுமா இன்னும் நிறைய உண்டு என்றும் அறிகிறோம் ஐயரே!

    ReplyDelete
  60. கவிஞர் தனுசின்
    கவிதை அருமை
    வாழ்த்துக்கள் கூற விட்டுவிட்டேன்..

    சொற் பொருள் நிறைந்த
    சுகந்தமான வரிகள்..
    இன்னும் பலத் தலைப்பிகளில்
    தொடர்ந்து கவிதை வடித்து
    மாணவர் மலருக்கு அனுப்பவும்...
    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  61. மதிப்பிற்குரிய ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, என் ஆக்கத்தையும் மாணவர் மலருக்கு தேர்ந்தெடுத்தது வெளியிட்டமைக்கு நன்றி.
    ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளதற்கு நன்றி... உதாரணத்திற்கு, பழி போடா (பழி போட), தமிழ்செல்வி (தமிழ்ச்செல்வி) என்பவை.
    இன்னமும் இலக்கணப் பிழைகளையும் திருத்தியுள்ளீர்களா என கவனிக்க நினைத்து படிக்க ஆரம்பித்து முடிப்பதற்குள் நானே களைத்துப் போய்விட்டேன், பாவம் நீங்களும், வகுப்பு மாணவர்களும் .. ஹி..ஹி.. ஹீ...

    பிழைகளுக்கு என்று மதிப்பெண் குறையாது என்பதனால் முயற்சிக்க முடிந்தது. மீண்டும் நன்றி, நன்றி.
    எட்டு ஆக்கம் என்பது அதிகம் போலும், அனைவரும் படித்து, கருத்து தெரிவித்து, ஓய்வெடுத்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டு ....மீண்டும் படித்து... என சுழற்சியை தொடர்ந்து முழு வீச்சில் வேலை செய்தது போல் தெரிகிறது. நல்ல வேலை என்னுடையதை கொஞ்சம் இறுதியில் போட்டீர்கள், இல்லாவிட்டால் அனைவரும் பாதியிலேயே ஓட்டம் பிடித்திருக்கக் கூடும். :)

    ReplyDelete
  62. என் ஆக்கத்தை படித்து ரசித்தவர்களுக்கும், பின்னோட்டம் இட்டு கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

    kmr.krishnan said..
    தேமொழியின் வீட்டுக்கதை நல்ல படிப்பினை. நல்ல ஆக்கம். வாக்கியங்களின் நீளத்தைக் குறைக்கவும்.அப்போது விரு விருப்புக்கூடும். கொஞ்சம் நகைச்சுவை சேர்க்கணும். 'ஒபீனிய'னை தவறாக எண்ண வேண்டாம்.

    நன்றி ஐயா, உங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன். 'வாக்கியங்களின் நீளத்தைக் குறைக்கவும்' என்ற அறிவுரை எனக்கு படிக்கும் நாட்களிலேயே கிடைத்துள்ளது.
    ------

    minorwall said...

    ////நல்ல தேர்ந்ததோர் எழுத்தாளராகிப் போன தேமொழி அம்மையாருக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.///

    ///'யாரோ சொன்னால் பரவாயில்லை' என்று ஜனனி சொல்லும் இடத்தில் மேல்சொன்ன இந்த முட்டாள்தனத்தை அங்கீகரிக்கும் வகையிலான இந்த பாதிக்கப்பட்ட ஜனனியின் அங்கலாய்ப்பு சிந்தனைக் கோளாறிலே அவர் கோட்டை விட்டதா அல்லது தேமொழி தன எழுத்திலே கோட்டை விட்டாரா என்பது புரியவில்லை..இது ஒரு சிறு நெருடலைத் தவிர வேறெங்கும் லாஜிக் பிறழவில்லை..///

    வாழ்த்துகளுக்கு நன்றி மைனர்வாள். மற்றவர்கள் தன் கணவரின் தொழில் திறமையை காழ்ப்புணர்வினால் குறை சொன்னாலும், தன் அண்ணன் குடும்பம் அது போல தூற்றுவது எப்படி நியாயமாகும் என்று அந்த தங்கை குமுறியதை நான்தான் சரியாக பிரதிபலிக்க தவறியுள்ளேன் என்று தெரிகிறது. நன்றாகவே ஆராய்சிக் கட்டுரைகள் எழுதுவீர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

    ------

    iyer said...

    ///எண்பதுகளின் சம்பவமும்
    எழுதியமைத்த பதிவும் நன்று..
    உங்களின் வரிசையில்
    பூங்குன்றனார்,ஒளவையார், பழமொழியில்
    வள்ளுவம் வரவில்லேயே தோழி...

    அதனை அய்யர் சொல்லவே விட்டு வைத்ததாக
    எண்ணியே எண்ணத்தில் பதிந்த குறளை பரிசாக தருகிறோம் பெற்று படித்து மகிழுங்கள்



    பிறர்கு இன்னா முற்பகல் செய்யின்

    தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.. ///

    நன்றி ஐயா, நான் குறிப்பிடத் தவறிய திருக்குறளும் உங்கள் வழியாக கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
    ------

    Thanjavooraan said...

    ///மனத்தை வாட்டும் சில சம்பவங்களை மனம்விட்டுப் பேச முடியாவிட்டால், இப்படி உருவகங்களாக வெளியிட்டு நம் மனபாரத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.///

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
    ------

    R.Srishobana said...

    ///தேமொழி சகோதரியின் கதை மிகவும் அருமை.தமிழ் உரைநடை பாடத்தில் கட்டுரையை படித்ததை போன்று இருந்தது.ந‌ல்ல‌ எழுத்து வ‌ன்மை உங்க‌ளுக்கு.///

    ///இன்று தேமொழி சகோதரி "யூ ட்யூபில்" தேடி தந்துவிட்டார்.நன்றி.///

    அட ஆமாம், துணைப் பாடநூல் கதை சாயலில்தான் உள்ளது. நன்றி சகோதரி. என் எழுத்து நடை எந்த சாயலை ஒத்திருக்கிறது என்பது இப்பொழுது புரிகிறது.

    ------

    தமிழ் விரும்பி said...

    ///பணநோய் என்னும் மனநோய்... தான் இதன் காரணம் எல்லாம். "விதைத்ததைத் தானே அறுக்க முடியும்"

    அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றிகள் சகோதிரி.///

    பண நோய் என்பது மன நோய் என்பது உண்மைதான், கருத்துக்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  63. iyer said...

    ///நூலாமம் நாலாயிர நூற்று நாற்பத்து ஒன்பான்

    பாலாம் நானுற்றம்பத்து ஒன்பான் மேலாம் நூற்பத்து ஒன்பான்

    சங்கம் அறுபத்தநூல் ஆடலுக்கும் கர்த்தன் மதுரையில் சொக்கன்///

    ஐயா, எனக்கு மேலோட்டமாக ...மதுரை சொக்கநாதர் சங்க இலக்கியம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் நாயகர் என்பது புரிகிறது. ஆனால் அந்த எண்களின் முக்கியத்துவம் புரியவில்லையே. விளக்கம் தர முடியுமா? நன்றி.

    ReplyDelete
  64. சிலேடை எனக்கு பிடித்த ஒன்று, ஆனால் அதனை புரிந்து கொள்ள காலப் பின்னணியும் மொழிப் புலமையும் தேவைப்படும். இன்று ஒரு குவியலே கொடுத்துள்ளீர்கள், நன்றி தஞ்சாவூர் ஐயா. எல்லோருக்கும் காளமேகப் புலவரின்

    "முக்காலை கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே,

    இக்காலில் ஐந்து தலை நாகம் கடித்தது காண்!
    பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்

    பத்தினியின் கால் வாங்கி தேய்!"

    என்ற செய்யுள் பரிச்சயம். எனக்குத் தெரிந்த கி.வ .ஜ வின் சிலேடை: அவருக்கு பரிசாக பணத்தை தட்டில் வழங்கிய பொழுது, அதைப் பெற்றுக் கொள்ளும்முன் பணத்தட்டு யாருக்கு என்றாராம். வழங்கியவர் கி.வ .ஜ வின் சிலேடையைப் புரிந்து ரசித்த வண்ணம், "பணத்தட்டு" (பணத்திற்கு தட்டுப்பாடு) எனக்கில்லை என்று சிரித்துக் கொண்டே தட்டுடன் பணத்தை கி.வ .ஜ விடம் கொடுத்து விட்டாராம்.

    ReplyDelete
  65. "அக்காலத் தலைவர்களும், தொண்டர்களும்!" போன்ற KMRK ஐயாவின் கட்டுரைகள் எனக்குத் தெரியாத பல இந்தியத் தலைவர்களை அறிமுகப் படுத்துகிறது. நன்றி... இது போன்றும் தலைவர்கள் இருந்திருப்பார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நினைவு தெரிந்த நாட்களில் முதலில் அறிந்த தேர்தல் கோஷங்களே "பிள்ளை நடிப்பது பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை" என்பதுதான். நீங்கள் நேர்முகத் தேர்வில் பதில் அளித்தது போல் சிறந்த வழி நடத்தும் தலைவர்களின் பஞ்சம் நமக்கு.

    ReplyDelete
  66. ஸ்ரீஷோபனாவின் கதை அவரது முதல் முயற்சி என்பது ஆச்சர்யமான ஒன்று. மிகவும் இயல்பான நடையில் "பிள்ளைங்களை இன்னிக்கு இந்த வயசில்ல‌ நாம நல்லதை செய்ய‌ ஊக்கப்படுத்தினா தானே நாளைக்கு நல்லவங்களாஅவங்க‌ வளர முடியும்" என மிகச் சிறந்த கருத்தை கூறியுள்ளீர்கள் தோழி. ஆசிரியருக்கும் மிகவும் பிடித்துப் போய் உங்கள் கதையின் கருத்தையே மாணவர் மலர் தலைப்பாக தேர்வு செய்துள்ளார். ஆனாலும் அவரைப்போல் தலைப்பு போட யாரால் முடியும். என் ஆக்கத்தின் குழந்தைத்தனமான தலைப்பை மாற்றி மெருகேற்றியுள்ளார் இந்த முறை.

    ReplyDelete
  67. விரல்பிடித்து விளையாடும்
    சேய்மழையாய் வந்துசெல்!
    வீட்டை இழந்து ஓலமிடும்
    பேய்மழையைப் பொழியாதே!
    என வருணபகவானுக்கே உத்தரவு போடும் தனூர்ராசிக்காறரின் கவிதை சிறப்பு.

    ReplyDelete
  68. மைனர்வாள், பொதுவாக தலைவரே கேள்வியும் கேட்டு, தலைவரே பதிலும் சொல்லி, தினம் தினம் அறிக்கை வெளியிடுகிறார் என மக்கள், அதிலும் தினமலர் வாசகர்கள் சலித்துக் கொள்வார்கள். இப்பொழுது காலம் மாறிப் போய், உடன் பிறப்புகளே கேள்விகள் கேட்டு(உயிருனும் மேலான தலைவருக்கு : உடன்பிறப்பின் கடிதம் ), உடன் பிறப்புகளே பதில் அறிக்கையும் (உங்கள் ஆக்கம்தான் ) விடும் நிலை ஏற்பட்டுள்ளது போலிருக்கிறது. நல்ல பதிவு. அடுத்தவர் மன நிலையிலிருந்து அவர்கள் சிரமத்தையும் எண்ணிப் பார்ப்பது எல்லோராலும் முடியாது.

    படிக்கும் வயதில் நன்றாகவே லூட்டி அடித்திருப்பீர்கள் போலிருக்கிறது. இதுவரை குறைந்தது நான்கைந்து இளவயது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இதைத் தொடர்ந்து, "மைனர்வாளின் சின்ன வயது சில்மிஷங்கள் " என்ற தலைப்பில் ஒரு தொடர் துவக்கலாமே. அனைவருக்கும் உற்சாகமாக இருக்கும்.

    ReplyDelete
  69. காதலில் தோல்வியுற்றால் கவிஞர் ஆவார்கள் கவிதைகள் எழுதுவார்கள். காதலில் வெற்றி பெற்றால் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் என்பதற்கு சான்று சபரி நாராயணன்; இனிய இல்லற வாழ்வின் பிரதிபலிப்பாக சபரி நாராயணனின் நகைச்சுவை துணுக்குகள்.

    ReplyDelete
  70. //தமிழ் விரும்பி said...
    iyer said...
    ///சுனாமி என்பது தமிழ்ச் சொல்லே
    சப்பான்னுக்கு சொந்தமாயிடுத்து இப்போ

    (சுனை மீதுர்தல் என்பதே சுனாமி
    தமிழ் ஆர்வலர்கள் கருத்து தரலாம்)///
    இது மட்டுமா இன்னும் நிறைய உண்டு என்றும் அறிகிறோம் ஐயரே!//

    சுனையும் சமுத்திரமும் ஒன்றா? சமுத்திரம் சுனை அளவுதானா? சுனை பொங்கினால் மனித, பொருள் அழிவு ஆழிப்பேரலை(சுனாமி) அளவு இருக்குமா?

    நான் கூடச்சொல்லுவேன் ஜப்பான் என்ற பெயரே நாம் ஜபம் பண்ணச் சொல்லிக் கொடுத்ததை அவர்கள் நன்கு 'கற்றதால் கூன் பாண்டியன் வீர‌ சோழ குலசேகர சேரனின் காலத்தில்' அவன் அந்த நாட்டை வெற்றிக்கொண்ட போது சூட்டிய பெயர் ஜப்பான்.ஆதாரம்: கானா மானா கூனா சானாவின் "ஜப்பானின் தமிழ் வரலாறு" என்ற நூல்.ஹி ஹி ஹி ஹி!

    ReplyDelete
  71. வீட்டில் மேஜைக் கணினி அல்லது மடிக் கணினி இருந்தாலும், அகண்ட வரிசை இணைய இணைப்பு இல்லாத கண்மணிகள் பலர் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் திங்கட்கிழமை, தங்கள் அலுவலகத்தில் இருந்துதான் வகுப்பறைக்குள் எட்டிப் பார்ப்பார்கள். அவர்களின் வசதிக்காகவும், அவர்கள் கண்ணில் படவேண்டும் என்ற கட்டாயத்திற்காகவும் மாணவர் மலரை முகப்பிலேயே நிறுத்தியுள்ளேன். எனது ஆக்கத்தைப் போட்டு அதை உள்ளே தள்ள விரும்பவில்லை. எனது ஆக்கம் நாளை வெளியாகும்.
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  72. ///நீங்கள் நேர்முகத் தேர்வில் பதில் அளித்தது போல் சிறந்த வழி நடத்தும் தலைவர்களின் பஞ்சம் நமக்கு.///

    நன்றி தேமொழி! நம் ஆக்கத்தையும் படித்து நினைவில் வைத்து மீண்டும் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு பெரிய ஊக்கம் தெரியுமா! மீண்டும் மீண்டும் நன்றி!

    ReplyDelete
  73. //இதைத் தொடர்ந்து, "மைனர்வாளின் சின்ன வயது சில்மிஷங்கள் " என்ற தலைப்பில் ஒரு தொடர் துவக்கலாமே. அனைவருக்கும் உற்சாகமாக இருக்கும்.//

    தேமொழியை நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  74. //(சுனை மீதுர்தல் என்பதே சுனாமி
    தமிழ் ஆர்வலர்கள் கருத்து தரலாம்)///
    இது மட்டுமா இன்னும் நிறைய உண்டு //

    என் முந்தைய‌ பின்னூட்டத்தைப் படித்துவிட்டு ஈழகேசரி ஒருவர்," 'ஜ'னா வட எழுத்து; 'சப்பான்' என்பதே சரி; அவர்களுக்கு விரல் சூப்பத் தமிழன் சொல்லிக்கொடுத்ததால் தான் சப்பான் ஆயிற்றாம் என்று ஆதாரம் இருப்பதாக" மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். வாழ்க நம் தமிழ் ஆர்வம். !

    ReplyDelete
  75. ட்சுனாமி என்பதுதான் சரியான ஒலிவடிவம்..சுனாமி அல்ல..

    ஜப்பானிய மொழிப்படி 'tsu' என்ற மூன்று ஆங்கில எழுத்துக்களும் சேர்ந்து ஒரே 'ட்சு' என ஒலியெழுப்பும் ஓர் எழுத்தாகும்..
    இது 'காஞ்சி' எனப்படும் வரைபடக்குறியீட்டு எழுத்துமுறைப்படி 'tsunami' யிலே
    உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் 'tsu' என்ற ஒலிவடிவம் கொண்ட
    காஞ்சி எழுத்துக்கு 'கப்பல்களும் படகுகளும் வந்துசேரும் துறைமுகம்' என்று பொருள்..
    அதேபோல 'nami' என்பது அலை என்ற பொருள் கொண்ட சொல்..இந்த நான்கு ஆங்கில எழுத்துக்களும் சேர்ந்து எழுப்பும் இந்த 'னாமி' என்கிற இரண்டெழுத்து ஒலிவடிவத்துக்குச் சொந்தமான ஒரேழுத்துக்காஞ்சி அலை என்ற இந்த பொருளைத்தரும்..
    இப்போ நேரடியாக ஜப்பானிய மொழியிலே எழுத்துக் கூட்டிப் படித்தால்
    'கப்பல்களும் படகுகளும் வந்துசேரும் துறைமுகத்தை தாக்குகிற அலை' என்கிற ரீதியில் பொருள் கொள்ளவேண்டியதுதான்..

    தசாவதாரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் 'ட்சுனாமி டா' என்று என்று கத்திக் கொண்டே உயர்ந்த இடத்தை நோக்கித் தாவுவார் அந்த சண்டையிட்டுக் கொண்டிருந்த ஜப்பானியர்..
    அந்த வார்த்தை கூட அதுவரையிலே நம் தமிழர்களுக்குத் தெரிந்திராதது என்றும் அதைப் பார்த்ததுமே அனுபவப்பயத்தில் அதனை ட்சுனாமி பெயர்கொண்டு உரக்கக் கத்திக்கொண்டு ஓடும் முக்கியத்துவம் கொண்டதாகவே அந்த திரைக்கதையை அமைத்திருப்பார்கள்..

    ReplyDelete
  76. //////kmr.krishnan said...
    ///அய்யோ! என்னையுமா புலிகள் 'லிஸ்டு'ல போட்டுவிட்டீர்கள்?நான் என்னமோ 'கிருஷ்ணா ராமா'ன்னு ஜபம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்து இருக்கேன்.
    புலி அது இதுன்னு கிலி பிடிக்க வைக்கறீங்களே!///

    ///என் முந்தைய‌ பின்னூட்டத்தைப் படித்துவிட்டு ஈழகேசரி ஒருவர்," 'ஜ'னா வட எழுத்து; 'சப்பான்' என்பதே சரி; அவர்களுக்கு விரல் சூப்பத் தமிழன் சொல்லிக்கொடுத்ததால் தான் சப்பான் ஆயிற்றாம் என்று ஆதாரம் இருப்பதாக" மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். வாழ்க நம் தமிழ் ஆர்வம். !///////

    தங்களின் தமிழார்வம் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது..
    ஆங்கிலப் புலவர் என்றழைக்கப்படக்கூடிய அளவுக்குத் தகுதிபடைத்த தாங்கள்
    தமிழிலேயே ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழிலக்கியத்து தூணாக விளங்கி எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறீர்கள்..
    லண்டனிலே நடந்த சென்ற உலகத்தமிழர் மாநாட்டிலே கலந்துகொண்டு தாங்கள் வீர உரையாற்றிப் பேசியபோது ஈழத்தமிழர்களுக்கெல்லாம்
    சூடானைப் போல ஒரு தனித்தமிழீழம் என்றதொரு விடிவு கிடைக்கும் என்று வலியுறுத்தி சொல்லி
    இலங்கைத்தமிழர்களின் வழக்கத்திலேயே 'ஓமம்' என்று ஆமாம் போட்டு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக
    தாங்கள் ஏற்கனவே பின்னூட்டமிட்டதைப் படித்தபோது ஏற்பட்ட புல்லரிப்பு இன்னும் தொடர்கிறது..
    வாழ்க நீ எம்மான்..வாழ்க தமிழ்...

    ReplyDelete
  77. ////////////kmr.krishnan said...


    //இதைத் தொடர்ந்து, "மைனர்வாளின் சின்ன வயது சில்மிஷங்கள் " என்ற தலைப்பில் ஒரு தொடர் துவக்கலாமே. அனைவருக்கும் உற்சாகமாக இருக்கும்.//

    தேமொழியை நான் வழிமொழிகிறேன்!//////////


    இதையெல்லாம் வகுப்பறையில் பகிரங்கப்படுத்த முடியுமா?

    ReplyDelete
  78. /////தேமொழி said... நல்ல பதிவு. அடுத்தவர் மன நிலையிலிருந்து அவர்கள் சிரமத்தையும் எண்ணிப் பார்ப்பது எல்லோராலும் முடியாது.////


    என் சிரமத்தைப் புரிந்து கொண்டு பின்னூட்டமளித்தற்கு நன்றி..

    ReplyDelete
  79. ///////////தமிழ் விரும்பி said...

    எட்டும் ஒண்ணா இறங்கியதால் ஒன்னன்னனா வாரோம்னா!
    மைனர்வாளின் ஆக்கம், கதை அமைப்பு நன்றாக வந்துள்ளது...
    தர்மம் வேறு நியாயம் வேறு என்று சொல்வதாக இருக்கிறது...
    விதிமீறல்கள் இரு டீமும் செய்வதால் சரியா போச்சு என்று
    எண்ணிக் கொண்டு விளையாடினாலும் பார்வையாளர்களில்
    என்னைப் போல உள்ளவர்கள் அந்த விளையாட்டை தொலைக் காட்சியில்
    ஒளிபரப்பாகும் போது... பேசாம சானலை மாற்றி விடுகிறோம்.

    மைனர்வாள் நன்றாக கதை செய்வார் / செய்துள்ளார்கள் என்பதால் ஆக்கம் அருமை
    என்று வழக்கமாக சொல்லிக் கொள்கிறேன் நன்றிகள் நண்பரே! /////////

    தங்கள் பாராட்டுக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி தமிழ்விரும்பியாரே..

    ReplyDelete
  80. //////////R.Srishobana said... உண்மையில் எனக்கு தற்போதைய அரசியல் சுத்தமாக பிடிக்காது(யாருக்கு தான் பிடிக்கிறது)என்னை போன்று அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.ஆனால் மைனர் அவர்கள் எழுதிய கட்டுரையில் மொழி நடை மற்றும் யதார்த்தமான உணர்வுகள் மிக அருமை.அதற்காகவே முழுவதும் படித்தேன்./////////////

    உங்களைப்போலே யாராவது ஓரிருவர் வாசித்திருந்தாலும் அது போதும்..நான் எழுதிய நோக்கத்தை ஏற்கனவே என் முதல் பின்னூட்டத்திலே சொல்லிவிட்டேன்..பாராட்டுக்கு நன்றி..ஷோபனா..

    ReplyDelete
  81. ///////////kmr.krishnan said... அப்பூடியா மைனர்? எனக்கெல்லாம் குதிரைப் படம் போட்டு கீழே குதிரை என்று எழுதினால் கூட அதைக் கழுதை என்றுதான் புரிந்து கொள்ள முடியும்./////////////

    'எபோவ் செவென்ட்டி' ன்னாலே இந்தப் ப்ராப்ளம் இருக்கத்தான் சார் செய்யும்..

    ReplyDelete
  82. ///////////////kmr.krishnan said... நான் காரல் மார்க்சின் மூலதனத்தை சும்மா நூலகத்தில் பார்த்ததோடு சரி.Das
    capital என்று தலைப்பில் போட்டிருக்கும். சிறுவயதில் இந்த 'தாஸை'
    ஏதோ ராமதாஸ் போல ஏதோ ஒன்று கூட நினைத்து இருந்தேன்./////////

    என் வீட்டிலே இந்தப் புத்தகங்கள் பார்ட் பார்ட்டாக(மொத்தம் 4 என்று ஞாபகம்..) பரணியில் இருக்கின்றன..
    நேரம் கிடைக்கும் போது படித்ததுண்டு..ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு வேகத்தில் வாங்கிவந்துவிட்டேன்..
    நடைமுறை மூலதனத்தைத் தேடிய வாழ்க்கைப்பயணத்தில் இதெல்லாம் பரணிக்குப் பயணமாகிவிட்டது..
    இன்னமும் பழைய புத்தகக் கடையிலே போட்டுவிடவில்லை..
    மீண்டும் ஒரு வேளை வேலை வெட்டி இலாத நேரம் வரலாம்..எதுக்கும் ரிசெர்வில் இருக்கட்டுமே என்றுதான்..

    ReplyDelete
  83. /////// kmr.krishnan said...
    கானா மானா கூனா சானாவின் "ஜப்பானின் தமிழ் வரலாறு" என்ற நூல்.ஹி ஹி ஹி ஹி!////////

    அவுரு கண்டனூர் காரர்தானே? எனக்கு அவரை நல்லாத் தெரியும்..

    ReplyDelete
  84. ////////////kmr.krishnan said... கொஞ்சம் வளர்ந்தபோது மார்க்சைப் போல தாடி, முடி எல்லாம் வளர்த்துப் பார்த்தேன்.இதனால் எல்லாம் மர்க்ஸ் ஆகமுடியாது என்று தினமும் க்ஷவரம் செய்து கொள்ளும் தோழர் அறிவுரை கூறி, அவரைப்போலவே என்னையும் தினசரி ரேசர்காரனாக மாற்றிவிட்டார்.///////////

    25 வருஷமா தாடி வெச்சுருக்குற உங்க தாடிக்கார நண்பருக்கு உள்ள பொறுமை உங்களுக்கு இல்லை..

    ReplyDelete
  85. UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 7 November 2011 14:09
    subject comment on minor's story


    மைனரின் கதையை அட! (கதையை ஆரம்பித்த விதம், எழுத்து நடை வழக்கம் போல அருமை!) என்று படிக்க ஆரம்பித்த எனக்கு, படித்து முடித்ததும் உங்கள் தலைவருக்கு ஏறுமோ இல்லையோ, எனக்கு BP ஏறியதுதான் மிச்சம். இந்த சப்பைக்கட்டு கூறும் கதையை உங்களிடமிருந்து நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவரை உத்தமராகக்காட்ட நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை என்னென்பது! ரூம் போட்டு மூளையைக்கசக்கி எழுதியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. (இதைச் சொல்வதன் மூலம் நான் எதிர்க்கட்சி ஆதரவாளர் என்று அர்த்தம் கிடையாது).

    எதையுமே அவரவர் கோணத்திலிருந்து பார்க்கவேண்டும்தான் என்றாலும், உலகில் இருக்கும் எந்த குற்றவாளியும் தன் நிலையை நியாயப்படுத்தி இதுபோன்று கதை புனையமுடியும். நீங்கள் அரசியல்வாதியாக நிஜமாகவே ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே திகில் ஏற்படுகிறது.

    பார்த்துப்பார்த்து செய்த திட்டங்கள் இருக்கட்டும், அதிலிருந்து அவர் அடித்த கமிசன் எவ்வளவு? அதை யாருக்கு தாரைவார்த்தார்? ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமா? இவர் செய்த சாதனை இலவசம் என்று மக்களை பிச்சைக்காரர்கள் ரேஞ்சிற்கு கொண்டுவந்ததுதான். அடுத்து வந்தவர்களும் மற்ற ellaavatraiyum ஒழித்துக்கட்டிவிட்டு, இதைமட்டும் விடாமல், இன்னமும் மேம்படுத்தி பின்பற்றுகிறார்கள். சாராயத்தால் கிடைக்கும் வருமானத்தில் இந்த இலவசங்கள் கொடுப்பது தேவையா?

    திருட்டுன்னா உங்க / எங்க வீட்டு பீரோலேர்ந்து நேரடியா திருடினாதான், ம்ம், என்னமா யோசிக்கிறாரு உங்க தலைவர்? பிரச்சாரம் பண்ண பணம் வேணுமாம், அதனால மக்கள் பணத்துல கை வைப்பாங்களாம், நல்ல லாஜிக். மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு உங்க தலைவர்தான் யோசிக்கிறார்னா, நீங்க கூடவா?

    மொத்தத்தில் உங்கள் தலைவர் ஒருவேளை இதைப்படிக்க நேர்ந்தால் வேண்டுமானால் 'தொண்டேண்டா' என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

    S. உமா, தில்லி

    ReplyDelete
  86. from UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 7 November 2011 12:48
    subject comments

    கோபாலன் சாரின் ஆக்கம் அவரின் நகைச்சுவை உணர்வை அறியத்தருகிறது.

    கிருஷ்ணன் சாரின் ஆக்கங்கள் மூலம் பெயரை மட்டுமே அறிந்த தலைவர்களைப்பற்றிய தகவல்களைத் தருகிறது, நன்றி! இந்த காலத்தில் தொண்டனாவது, தலைவனோடு விவாதிப்பதாவது, ஜால்ரா அடிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.

    ஸ்ரீ ஷோபனா எழுதிய கதை அருமை! குழந்தைகளின் மெல்லிய உணர்வுகளைப்படம் பிடித்துக்காட்டுகிறது.

    மிகவும் ரசித்தது தனுசுவின் கவிதைதான். தொடர்ந்து எழுதுங்கள்!

    தேமொழியின் கதை நன்று! தொடர்ந்து எழுதுங்கள்!

    காணொளி என்னால் பார்க்க இயலவில்லை.

    சபரியின் ஜோக்கில் இரண்டாவது சிரிக்க வைத்தது.

    S. உமா, தில்லி

    ReplyDelete
  87. ////////////////UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 7 November 2011 14:09
    subject comment on minor's story

    மைனரின் கதையை அட! (கதையை ஆரம்பித்த விதம், எழுத்து நடை வழக்கம் போல அருமை!) என்று படிக்க ஆரம்பித்த எனக்கு, படித்து முடித்ததும் உங்கள் தலைவருக்கு ஏறுமோ இல்லையோ, எனக்கு BP ஏறியதுதான் மிச்சம்.///////////
    நல்லது..இதுதான், BP ஏறியதுதான் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி..நன்றி..

    /////////////ரூம் போட்டு மூளையைக்கசக்கி எழுதியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது./////////
    அனுப்புவதற்கு முன்னால் இரண்டு நாட்கள் வேலை முடிந்து வந்து ஒவ்வொரு நாளும் ரெண்டு மணிநேரம்..மொத்தம் நாலு மணிநேரம்..யோசனையே பண்ணாமல் டைரக்ட் டைபிங்..நோ..எடிட்டிங்..jz.
    செண்டிங்..தட் ஸ் ஆல்..

    ReplyDelete
  88. /////மொத்தத்தில் உங்கள் தலைவர் ஒருவேளை இதைப்படிக்க நேர்ந்தால் வேண்டுமானால் 'தொண்டேண்டா' என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
    ////
    முடிஞ்சா நீங்களே சம்பந்தப்பட்டவரா நீங்க நினைக்குற தலைவருக்கு மெயில் ஃபோர்வர்ட் பண்ணித் தெரிவிக்கலாம்..ஏன்னா நான் எந்தக் கட்சியிலயும் அடிப்படை உறுப்பினராக இல்லாதவன்..
    கொஞ்சகாலம் DYFI மெம்பர்ஷிப் இருந்துச்சு..அப்புறம் அதுவும் இல்லை..

    ReplyDelete
  89. //////எதையுமே அவரவர் கோணத்திலிருந்து பார்க்கவேண்டும்தான் என்றாலும், உலகில் இருக்கும் எந்த குற்றவாளியும் தன் நிலையை நியாயப்படுத்தி இதுபோன்று கதை புனையமுடியும். நீங்கள் அரசியல்வாதியாக நிஜமாகவே ஆகிவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே திகில் ஏற்படுகிறது. ///////

    பதிலை நீங்களே சொல்லி ஆரம்பித்திருக்கிறீர்கள் இந்த வரிகளை..

    ReplyDelete
  90. ///////அடுத்து வந்தவர்களும் மற்ற ellaavatraiyum ஒழித்துக்கட்டிவிட்டு, இதைமட்டும் விடாமல், இன்னமும் மேம்படுத்தி பின்பற்றுகிறார்கள்./////

    மற்ற ellaavatraiyum ன்னா அது என்னா?

    ReplyDelete
  91. ///மொத்தத்தில் உங்கள் தலைவர் ஒருவேளை இதைப்படிக்க நேர்ந்தால் வேண்டுமானால் 'தொண்டேண்டா' என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.///

    உமாஜி! என்ன வரும் போதே கலக்கலாக இருக்கிறதே! வலைத் தொடர்பு கிடைத்துவிட்டதா?

    தலைவருக்குத் தொண்டரின் அனுதாபப் பதிவினைப் படித்து கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாகவே சூடாக இருக்கிறாப் போல தோன்றுகிறது.

    சந்தானம் ரேஞ்சுல 'தொண்டேண்டா'வா?

    எதோ காமெடி கீமைடி பண்ணிக்கிட்டுத் திரிஞ்ச எங்க வைகைப் புயல பாலிடிக்ஸ்ல இழுத்து உட்டுட்டு, இப்போ இவரைப் போலவே கையறு நிலை பாடிக்கிட்டு வூட்ல ஒக்கார வைச்சூட்டு,நேத்து வந்த சுண்டைக்காயோட 'நண்பேண்டா'வப் பார்த்து 'தொண்டேண்டா'ன்னு தலைவரு சொன்னா, எங்க‌ வைகைப் புயல் மனசு என்ன பாடுபடும்?

    ReplyDelete
  92. //லண்டனிலே நடந்த சென்ற உலகத்தமிழர் மாநாட்டிலே கலந்துகொண்டு தாங்கள் வீர உரையாற்றிப் பேசியபோது ஈழத்தமிழர்களுக்கெல்லாம்
    சூடானைப் போல ஒரு தனித்தமிழீழம் என்றதொரு விடிவு கிடைக்கும் என்று வலியுறுத்தி சொல்லிஇலங்கைத்தமிழர்களின் வழக்கத்திலேயே 'ஓமம்' என்று ஆமாம் போட்டு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக
    தாங்கள் ஏற்கனவே பின்னூட்டமிட்டதைப் படித்தபோது ஏற்பட்ட புல்லரிப்பு இன்னும் தொடர்கிறது..வாழ்க நீ எம்மான்..வாழ்க தமிழ்...//

    சமீபத்தில் கந்த சஷ்டி அன்று ஒரு திருமணத்தில் "ஏறும‌யில் ஏறி விளையாடு முகம் ஒன்று.."திருப்புகழைச்சொல்லியிருக்கிறார் உங்கள் தலைவர்.அவர் மட்டும் இடத்திற்குத் தகுந்த 'மாதுரி'நேரத்திற்குத் தகுந்தது போலப் பேசலாம்.. நான் பேசினா ஆகாதோ?

    நானாக ஒரு கருத்தும் சொல்லவில்லை. 'சூடானைப்போல எங்களுக்கும் தாய் நாடு கிடைக்கும் ஓம்தானே?' என்ற கேள்விக்கு ஆறுதலாக 'ஓம்' என்றேன்.மனதிலும் அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணமும் உண்டு. ஆனால் அவர்கள் இன்று இருக்கும் நிலையில் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரு ஆயுதப் போரை அல்ல' ,காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தைக் கூட நடத்த முடியுமா?

    எல்லாம் தமிழிலிருந்துதான் போயிற்று என்பதற்கு அங்கதமாகச் சொல்லும் போது ஒரு மாறுதலுக்காக ஈழகேசரி என்று பெயர சொன்னேன்.அவர் தாய் தமிழக்க்காரர்தன். பெயர்தான் அப்படி. ஈழத்துக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    ReplyDelete
  93. ///25 வருஷமா தாடி வெச்சுருக்குற உங்க தாடிக்கார நண்பருக்கு உள்ள பொறுமை உங்களுக்கு இல்லை..///

    புரியலையே! நீங்கதானா அது?அல்லது நானே எதாவது தாடிக்கார நண்பனைப் பற்றி எதாவது பீலா உட்டிருக்கேனா? ERC PLEEASE. (EXPLAIN WITH REFERENCE TO THE CONTEXT)

    ReplyDelete
  94. //நேரடியாக ஜப்பானிய மொழியிலே எழுத்துக் கூட்டிப் படித்தால்
    'கப்பல்களும் படகுகளும் வந்துசேரும் துறைமுகத்தை தாக்குகிற அலை' என்கிற ரீதியில் பொருள் கொள்ளவேண்டியதுதான்..//

    அப்போ என்ன சொல்ல வரீங்க!? 'சுனைமீதூர்தல்' சுனாமி இல்லைதானே?

    ReplyDelete
  95. மிகவும் நீண்ட பதிவு. இருப்பதோ குறைந்த நேரம்.

    முன்பெல்லாம் அரசியல் நாகரிகம் இருந்தது. தொண்டர்களை மதிக்கும் தலைவர்கள் இருந்தார்கள். இப்போது எல்லாமே தலைகீழ்

    துக்ளக் தர்பாரை மிஞ்சும் அந்த அம்மாவின் தர்பாரை விட மைனர் சொன்ன தலைவர் எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக அவர் செய்த எல்லாவற்றையும் நியாயப் படுத்தி விட முடியாதுதான்.

    ஐயா அவர்களின் சிலேடையை ரசித்துப் படித்தேன். சிலேடையாக பேசுவது/பேச முடிவது என்பது சிறந்த கலை.

    ஸ்ரீ ஷோபனா அவர்களின் கதை உண்மையில் டச்சீங் ஆக இருந்தது. குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.

    தனுர்ராசிக்காரர் சொல்வது போல் இப்போதெல்லாம் மழை பெரும் துன்பத்தைக் கொடுப்பதாகதான் இருக்கிறது.

    ”மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
    நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
    மேல்நின்று தான் சுரத்த லான்” என்ற பாடலில் இருப்பது போல் இப்படி பட்ட மழை எப்படி போற்ற மனம் வரும்.

    ReplyDelete
  96. ஓரமாக ஒதுங்க நினைப்பவைகளையும்
    ஓடுகிற தண்ணி தள்ளிக் கொண்டு போக

    கிடைத்த வாய்ப்புகளுக்காகவே
    படைத்தது கிடைத்தது.. நன்றிகள்..

    இப்போ...
    இவருக்கு உதவ முடியுமா பாருங்கள்..

    கண் இல்லாத ஒருவர்
    கருப்பு பூனையை அது

    இல்லாத போது
    இருட்டு அறையில் தேடுகிறார்

    தேடி அதை காண்பாரா..
    தேடி கிடைத்ததையே பூனை என்பாரா?

    ReplyDelete
  97. //'எபோவ் செவென்ட்டி' ன்னாலே இந்தப் ப்ராப்ளம் இருக்கத்தான் சார் செய்யும்..//

    மைனர் அவர்களே! இப்படி வாரி விட்டீர்களே. எனக்கு வயது எழுபத்தைந்து. குதிரையைத்தான் நான் கழுதையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ என்கிற ஐயப்பாடு உங்கள் சொற்களைப் பார்த்ததும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்த வகுப்பறையில் உங்களைப் போன்ற இளம் சிங்கங்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு நான் என் வயதை மறந்து நானும் இளைஞன் என்ற உணர்வில் மிதந்து கொண்டிருக்கிறேன். கவிழ்த்து விடாதீர்கள்!

    ReplyDelete
  98. ///இப்போ...
    இவருக்கு உதவ முடியுமா பாருங்கள்..//

    இவர் என குறிப்பிட்டவர்
    இந்த வகுப்பறையில் உள்ளவர் எவரும்

    இல்லை என்பதனை சொல்ல
    இப்பவும் தேவையில்லை இருப்பினும்

    சொல்லி வைக்கின்றோம்
    சொந்தங்கள் தொடரவே..

    நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி
    நாளைய மறுநாள் பயணம்

    வாய்ப்பு கிடைக்கும் போது மட்டும்
    வகுப்பறையில் வருகை பதிவு வரும்

    வாத்தியாரின் அனுமதிக்காக இது
    வழக்கம் போல் 'அ' வில் தொடர்கிறோம்

    வாழ்த்துக்களுடன்
    வணக்கங்களும்..

    ReplyDelete
  99. //கொஞ்சகாலம் DYFI மெம்பர்ஷிப் இருந்துச்சு..அப்புறம் அதுவும் இல்லை.//

    அது இடதா, வலதா மைனர்?

    எங்களுக்கும் அது போல சொல்லிக்கிற 'மாதுரி' பெருமையெல்லாம் உண்டுல்ல!?

    'From RK Mutt to CPI and back to the pavillion'

    என்ற தலைப்பில் ஒரு பதிவு மனதில் ஊறிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  100. //எனக்கு வயது எழுபத்தைந்து. குதிரையைத்தான் நான் கழுதையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ என்கிற ஐயப்பாடு உங்கள் சொற்களைப் பார்த்ததும் ஏற்பட்டுவிட்டது.//

    மைனரின் 'அபெளவ் செவென்டி' பின்னூட்டம் எனக்கு 62 என்பதால், 'ஸ்லிப்'ல‌
    ஃபீல்டிங் பண்ணும் நான் பவுண்டரிக்கு அடித்த பந்தை விட்டுவிட்டேன். பவுண்டரியிலே தஞ்சாவூரார் 'காட்ச்' பிடித்துவிட்டார்.

    ReplyDelete
  101. ///iyer said...
    ///இப்போ...
    இவருக்கு உதவ முடியுமா பாருங்கள்..//

    இவர் என குறிப்பிட்டவர்
    இந்த வகுப்பறையில் உள்ளவர் எவரும்

    இல்லை என்பதனை சொல்ல
    இப்பவும் தேவையில்லை இருப்பினும்

    சொல்லி வைக்கின்றோம்
    சொந்தங்கள் தொடரவே..///

    முதல் பின்னூட்டத்தில் கருப்பூபூனை, விட்ட‌ம் அது இது என்று எதையோ
    சொல்லிவிட்டு அடுத்த பின்னூட்டத்தில் அதற்கு வியாக்யானமா?

    வகுப்பறையில் வந்து வெளியாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் அதற்குமே விளக்கம் வேண்டும்.

    தெளிவில்லாத பின்னூட்டங்களால் சொந்தங்கள் தொடரும் வாய்ப்புக் குறையும்.

    ReplyDelete
  102. சோஷலிசம் பற்றி விளக்கம் கேட்டேன். முதலில் என் பதிவின் நோக்கத்தை சொன்னதற்கு விமர்சித்த சோசலிஸ்டுகள் எதுவும் சொல்லவில்லை. மார்க்ஸின் மூலதனத்தைச் சமயம் கிடைத்த போது படித்தவர் கூட மேல் தகவல் அளிக்கவில்லை.

    சோஷலிசத்தின் தன்மையே அதுதான். அதனைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்பவர்களாலேயே அதன் இயல்பைப் புரிந்து கொள்ளமுடியாது.

    உலகில் நாம் அறிந்து கொள்ள முடியாதது முதலில் கடவுள் தத்துவம். அடுத்து புரிந்து கொள்ள முடியாதது சோஷலிச‌ சதத்துவம்.இரண்டையுமே கையைக் காலை ஆட்டி ஆட்டி விளக்கமாகப் பேசலாம்.நல்ல பேச்சாளர் என்ற பேர் எடுக்கலாம். ஆனால் பேச்சின் முடிவில் சொன்னவன் கேட்ட‌வன் இரண்டு பேரும் அறியாதவர்களாகவே மிஞ்சுவர்.

    ReplyDelete
  103. /////சோஷலிசம் பற்றி விளக்கம் கேட்டேன். முதலில் என் பதிவின் நோக்கத்தை சொன்னதற்கு விமர்சித்த சோசலிஸ்டுகள் எதுவும் சொல்லவில்லை. மார்க்ஸின் மூலதனத்தைச் சமயம் கிடைத்த போது படித்தவர் கூட மேல் தகவல் அளிக்கவில்லை.////

    எல்லாம் அறிந்தவர் நீவீர்!!!! அதன் விளக்கத்தை தான் சொல்லுங்களேன்....

    ReplyDelete
  104. /////சோஷலிசத்தின் தன்மையே அதுதான். அதனைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்பவர்களாலேயே அதன் இயல்பைப் புரிந்து கொள்ளமுடியாது.//////

    அப்படி புரிந்துக் கொள்ள முடியாததை... நீவீர் எப்படிப் புரிந்துக் கொண்டீர்?!!! அதனை மறுப்பதற்கு?!

    ReplyDelete
  105. /////உலகில் நாம் அறிந்து கொள்ள முடியாதது முதலில் கடவுள் தத்துவம். அடுத்து புரிந்து கொள்ள முடியாதது சோஷலிச‌ சதத்துவம்.இரண்டையுமே கையைக் காலை ஆட்டி ஆட்டி விளக்கமாகப் பேசலாம்.நல்ல பேச்சாளர் என்ற பேர் எடுக்கலாம். ஆனால் பேச்சின் முடிவில் சொன்னவன் கேட்ட‌வன் இரண்டு பேரும் அறியாதவர்களாகவே மிஞ்சுவர்.////

    இதிலே முதலில் கடவுள் தத்துவத்தை நீவீரும் அரித்துக் கொள்ள வில்லை என்றுக் கூறுகிறீர்! அப்படியானால் இவ்வளவு நாள் அதைப் பற்றிப் பேசிய... எழுதிய எல்லாம் என்ன புரியாத ஒன்றை புரியாமலே புரிந்த மாதிரி எழுதியர்தா?!!!!....

    தங்களின் பின்னூட்டம் வம்புக்கு இழுப்பதாகவே தெரிகிறது.....

    அதென்ன பொத்தாம் பொது யார் என்று சொல்ல வேண்டியது தானே.... அது நீர் இல்லை என்றால் நான் இத்தோடு முடித்துக் கொண்டு விடுகிறேன்.... பேச்சை வளர்க்க விரும்பவில்லை.... (சத்தியம் செய்து விட்டு மீண்டும் அதைப் பற்றி பேசமாட்டேன்)

    ReplyDelete
  106. ////அமெரிக்காவில் இன்றைய அவலத்திற்கு காரணமே... இந்த முரண்பாடு தான்... நிர்வாககேட்டால், கடனில் அகப்பட்டு தவிக்கும் தனியார் நீருவனங்களுக்கு (முதலாளிகளுக்கு) மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பேருதவி செய்து காப்பாற்றும் போக்கே இன்றைய அவதிகளுக்கு காரணம்... வங்கிகள் கூட அப்படித்தான் செயல் படுகின்றன... தனியாரின் தவறு மக்களின் தலையில் இதில் ஏது/? நியாயம்...////

    இதயுப் பற்றி எந்த பதிலுமே இல்லை... ஏன்? பேசவில்லை...

    தோற்றுப் போன கம்யூனிஸ நாடுகளை கூறிக் கொண்டு வருவோருக்கு கூறுவது.. அதையும் விடாபிடியாக கொள்கையே (காலமும் இடமும் மாற்றம் செய்யாது) சரி என்று திரிந்ததால் வந்த வினை. ஜனநாயகமும், கம்யூனிசமும் இருக்கரைகலாக கொண்டு பயணித்தால் கரைத் தட்டாது என்பது எனது எண்ணம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை இருவரும் உணரவேண்டும்...

    இங்கே பாருங்கள் கண்ணாடிப் போட்டுக் கொண்டு பாருங்கள்.... இங்கே கம்யூனிசம் / ஜனநாயகம் இதில் எது சரி அது மட்டும் தான் வேண்டும்? என்று எங்கேயாவது இருக்கா?... இரண்டிலும் உள்ள நல்ல சித்தாந்தங்களை காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தமாதிரி புதுமை செய்ய வேண்டும்..."வேதம் புதுமை செய்ய வேண்டும்" என்பதாகத் தான் இருக்கிறது!!!

    உமது பதிவில்... கடைசியில் போட்ட வரிக்கு.... வெறுப்பா? என்றேன் பதில் இல்லை... இப்போது வெறுப்புத் தான் என்பது புரிகிறது வெறுப்பானதற்கு பதில் கூறுங்களேன்... சொல்லத் தெரிந்தால்...

    அய்யா முத்து அவர்கள் திரும்பினார் என்பதை ஏன்? கட்டுரையில் ஒரு வரியில் குறிப்பிடவில்லை... (பெரும்பாலானோர் அறியாத தலைவரின் இடம் மாற்றம் தானே) வேண்டுமென்றே யாராவது வக்காலாத்து வாங்கிக் கொண்டு வருவார்கள் அவர்கள் முகத்தில் இதைக் கொண்டு குத்துவோம் என்ற எண்ணமே இல்லை என்று உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்...

    எல்லாம் தெரிந்தவர்... நீவீர் தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி... நீவீர் சொல்லித் தான் எல்லோரும் எதையும் ஆரம்பிப்பார்... நீவீர் தான் எல்லாவற்றிலும் சிறந்தவர் உமது ஆக்கத்தில் குறை சொன்னால் பிடிக்காது.... அல்லது நல்ல பாம்பைப் போல் ஞாபகம் வைத்துக் கொண்டு வேறெங்காவது வந்து படமெடுத்து ஆடுவீர்.... ரொம்பப் போனப் பிறகு எனக்கு இரண்டில் சனி... வார்த்தை மீறிவிட்டது... கொட்டிவிட்டது என்று அப்படியே நொறுங்கிப் போவீர்....

    இதை எல்லாம் எல்லோரும் அறிவர்... இவ்வளவு காலம் நானும் கண்டு கொள்வதில்லை... இது ரொம்ப ஓவராத் தெரியவில்லை...

    மெத்தப் படித்த பெரியவர்கள் இது போன்ற உயர்ந்த சித்தாந்தங்களைஎல்லாம் படித்தவர்கள்... கடைபிடித்தவர்கள் எல்லாம் மடையார் நீவீர் மாத்திரம் புத்திசாலி அதி புத்திசாலி..... ஒட்டுமொத்தமாக தவறு என்று சொல்லுமாறு பேச நீவீர் தான் என்ன அறிந்துள்ளீர் என்று தெரியவில்லை... ஒருவேளை தெரிந்து இருக்கலாம் நீவீர் தான் முன்னாள் இருந்த பெரியத் தலைவர்களை விட எல்லாம் பெரிய அறிவாளியாயிற்றே!

    கல்வித்துறைக்கும் எழுதுங்கள் மார்க்சின் பாடங்களை கற்பித்து கல்லூரிகளில் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டாம்... அடியோடு ஒழிக்கலாம் என்று....

    ஒருவேளை நீவீர் பெரிய அறிவாளி என்பதால் என்னைப் போன்ற சாதாரண அல்லது அரைகுறைகளுக்கு நீவீர் பேசுவது புரியவில்லை போலும்.... ஏனென்றால் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் முரண்பாடான... கருத்துக்களை (முன்னுக்குப் பின் முரண்பாடானக் கருத்தை) எழுதுவது வழக்கம்.. அதற்கு கடைசி பின்னூட்டம் ஒரு உதாரணம்.

    நன்று.... மிக்க நன்று.... நன்றி... வணக்கம்....

    ReplyDelete
  107. //இதிலே முதலில் கடவுள் தத்துவத்தை நீவீரும் அரித்துக் கொள்ள வில்லை என்றுக் கூறுகிறீர்! அப்படியானால் இவ்வளவு நாள் அதைப் பற்றிப் பேசிய... எழுதிய எல்லாம் என்ன புரியாத ஒன்றை புரியாமலே புரிந்த மாதிரி எழுதியர்தா?!!!!....//

    ஆம்!தமிழ்விரும்பி அவர்களே! கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்!
    நான் விண்டு கொண்டு இருப்பதால் இன்னும் கண்டிலேன். இதை ஒப்புக்கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை.

    //அப்படி புரிந்துக் கொள்ள முடியாததை... நீவீர் எப்படிப் புரிந்துக் கொண்டீர்?!!!//

    நான் புரிந்து கொண்டதைத்தான் எழுதி அது சரிதானா என்று விளக்கம் கேட்டேன்.

    //எல்லாம் அறிந்தவர் நீவீர்!!!! அதன் விளக்கத்தைத் தான் சொல்லுங்களேன்...//

    எல்லாம் அறிந்தவர் என்று யாரும் இல்லை.நானும் அப்படி நினைக்கவில்லை. நீங்களும் அப்படி என்னைப்பற்றி எண்ணுவதை அனுமதிக்க மாட்டேன்.


    //தங்களின் பின்னூட்டம் வம்புக்கு இழுப்பதாகவே தெரிகிறது.....//

    வம்புக்கு என்ற பதம் கொஞ்சம் ஸ்ட்ராங்.வாதத்துக்கு,சம்வாதத்துக்கு என்று சொல்லுங்கள். சம்வாதம் மூலம்தான் ஒருவருக்கொருவர் கருத்துப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம். நமது மரபே கேள்வி பதில் மரபுதான். உடனே கிடைக்கும் எடுத்துக்காட்டு பகவத் கீதை.

    //அதென்ன பொத்தாம் பொது யார் என்று சொல்ல வேண்டியது தானே...//

    பொதுவாகச் சொன்ன போதே இந்தப் போடு போட்டுவிட்டீர்கள்.குறிப்பிட்டுச்
    சொன்னால்.......?


    //(சத்தியம் செய்து விட்டு மீண்டும் அதைப் பற்றி பேசமாட்டேன்)//

    புரிகிறது.நான் தேவைப்பட்டல் மீண்டும் பேசுவேன்.

    //இதயுப் பற்றி எந்த பதிலுமே இல்லை... ஏன்? பேசவில்லை...//

    நீங்கள் ஒரு செய்தியைச்சொல்லி நான் அதைப் பற்றிப் பேசவில்லை என்றால்
    அதனை ஒன்று நான் ஒத்துக் கொண்டு இருக்க வேண்டும்;அல்லது அதனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும்.அதனால் பேசவில்லை.


    //ஜனநாயகமும், கம்யூனிசமும் இருக்கரைகளாக கொண்டு பயணித்தால் கரைத் தட்டாது என்பது எனது எண்ணம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மண‌ம் உண்டு என்பதை இருவரும் உணரவேண்டும்...//

    இந்த மாதிரி உறுதியான நிலைப்பாடு இருக்கும் போது ஏன் பத‌ட்டத்தோடு எதிர்வினை? அழகாக‌ச் சொல்லியிருக்கலாமே.

    //இரண்டிலும் உள்ள நல்ல சித்தாந்தங்களை காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தமாதிரி புதுமை செய்ய வேண்டும்..."வேதம் புதுமை செய்ய வேண்டும்" என்பதாகத் தான் இருக்கிறது!!!//

    இதுவும் நல்ல வாக்கியம். பாராட்டுகிறேன்.

    // வேண்டுமென்றே யாராவது வக்காலாத்து வாங்கிக் கொண்டு வருவார்கள் அவர்கள் முகத்தில் இதைக் கொண்டு குத்துவோம் என்ற எண்ணமே இல்லை என்று உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்...//

    இதையே இப்படிச் சொல்லிப் பாருங்கள்.யாராவது விவாதிக்க வருவார்கள் அவர்களோடு சம்வாதம் செய்யலாம் என்று...நான் சொலவதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்.ஆனால் கொஞ்சம் சூடாக.

    //எல்லாம் தெரிந்தவர்... நீவீர் தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி... நீவீர் சொல்லித் தான் எல்லோரும் எதையும் ஆரம்பிப்பார்... நீவீர் தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்//

    எல்லாம் தெரிந்தவன் என்று நான் என்னைப் பற்றி நினைக்கவில்லை. பலரும் நான் புதிய செய்திகளைச் சொன்னதை இங்கே குறிப்பிட்டுள்ளார்கள்.

    //உமது ஆக்கத்தில் குறை சொன்னால் பிடிக்காது.... அல்லது நல்ல பாம்பைப் போல் ஞாபகம் வைத்துக் கொண்டு வேறெங்காவது வந்து படமெடுத்து ஆடுவீர்....//

    அப்படி ஏதும் ஆடியதாக நினைவில்லை. குறை சொன்னாலும் அதற்குத் தக்க பதிலைச் சொல்லியிருக்கிறேன் என்றுதான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.
    குறிப்பிட்டுச் சொன்னால் தகுந்த விளக்கம் அளிகிறேன்.
    (தொடரும்)

    ReplyDelete
  108. //ரொம்பப் போனப் பிறகு எனக்கு இரண்டில் சனி... வார்த்தை மீறிவிட்டது... கொட்டிவிட்டது என்று அப்படியே நொறுங்கிப் போவீர்....//

    என்னுடைய ஆக்கம் ஒன்றே 'இரண்டில் சனி இருந்தால் என்ன ஆகும்?' என்று ஐயா தலைப்புக் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

    இதே போல உங்கள் ஆக்கத்தில் நான் அளித்த மேலதிகத் தகவலை என் மேட்டிமைத்தனம் என்று வேகப் பட்டீர்கள். அப்போது உடனே தயங்காமல் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்டேன். அது நொறுங்கிப் போனதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    வர்ண‌முறையில் உள்ள‌(பாசிடிவ்) நேர்மறைக் கூறுகளைச் சொன்னபோது,நான் என்னமோ வர்ண தர்மத்தை இப்போது கடைப்பிடிக்கச் சொன்னது போல தாங்களும் உமாஜியும் வேகப் பட்டீர்கள். அப்போது பிடிவாதம் ஏதுமின்றி பின் வாங்கினேன். அது நொறுங்கிப் போனதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    தங்க‌ளுடைய வர்ண முறை பற்றிய கட்டுரை பிரிதோர் இடத்தில் வாசித்தேன்.
    அங்கே அம்முறையை ஓரளவு அங்கீகரித்து சிலாகித்து, (பேருக்கு கொஞ்சம் குறை சொல்லி)எழுதியுள்ளீர்கள்.அந்தக் கட்டுரை இப்போது ஒரு பேசு பொருளாக வேறு ஒரு தளத்தில் ஆகியுள்ளது.

    ராஜாஜி பற்றித் தாங்கள் கூறிய செய்தி,அவரைப் பற்றித் தவறான அவதானிப்பைக் கொடுத்துவிடுமோ என்ற எண்ண‌த்தில் ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டேன்.என் பின்னூட்டத்தின் காரணமாக அவர் சம்பாத்தியத்தில் மகன் ஆடம்பரம் செய்ய வில்லை என்பதையே நிறுவினேன்.உங்க‌ளைப் ப‌ற்றியோ, உங்களுடைய செய்தி தவ‌று என்றோ எங்கும் கூறவில்லை.ராஜாஜியைப் பற்றி அவரது அரசியலைப் பற்றி எனக்குத் தனி விமர்சனம் உண்டு. அது வேறு.

    சுனாமி=சுனை மீதூர்தலைப் பகடி செய்தேன் சிரிப்பீர்கள் என்று! சோஷலிச சுனாமி வந்துவிட்டது..என்ன செய்ய? சுனை மீதுர்தலும் உங்கள் யோசனை அல்ல.

    //இதை எல்லாம் எல்லோரும் அறிவர்... இவ்வளவு காலம் நானும் கண்டு கொள்வதில்லை..//

    நீங்கள் கண்டு கொண்டு அவ்வப் போது மனம் விட்டுப் பேசியிருந்தால் இப்படி வெடித்திருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

    நீங்கள் தமிழ்விரும்பி என்ற பெயருக்கு மாறியதைக் கூட அறியாமல் ஒருமுறை 'என்ன ஒருவருமே வருவதில்லை.என்னுடைய ஆக்கங்களின் மீது உண்டான சலிப்பா?' என்று கூடக் கேட்டு இருக்கிறேன்.நீங்களும் தக்க பதிலைச் சொல்லி உள்ளீர்கள்.மனதில் இருப்பதை அப்போதே போட்டு உடைத்திருக்கலாமே!


    // ஒட்டுமொத்தமாக தவறு என்று சொல்லுமாறு பேச நீவீர் தான் என்ன அறிந்துள்ளீர் என்று தெரியவில்லை...//

    முற்றிலும் தவறு என்று எங்கும் சொல்லவில்லையே.எனக்கும் ஒன்றும் தெரியாது.அது அவ்வளவு கடினமான தத்துவம். எளிதில் புரியாது என்பதையே கூறினேன்.தெரிந்தவர்களோடு பேச விடுத்த அழைப்பே அது.அதற்கு அத‌னுடைய அடிப்படைக் கொள்கையான தன்னலம், பிறர் நலம் என்பதாகத் துவங்கினேன்.துவக்கமே தவக்கம் ஆகிவிட்டது.


    //கல்வித்துறைக்கும் எழுதுங்கள் மார்க்சின் பாடங்களை கற்பித்து கல்லூரிகளில் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டாம்... அடியோடு ஒழிக்கலாம் என்று....//

    நான் நாத்திகத்தையும் , பாலியல் கல்வியையும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கொள்கை உடையவன். பொருளாதரக் கொள்கையையா எடுக்கச் சொல்லுவேன்?

    //ஒருவேளை நீவீர் பெரிய அறிவாளி என்பதால் என்னைப் போன்ற சாதாரண அல்லது அரைகுறைகளுக்கு நீவீர் பேசுவது புரியவில்லை போலும்..//

    என்னைப் பற்றி அறிவாளி என்று நினைக்கவும் இல்லை.உங்களைப்பற்றி நீங்கள் சொல்வது போல் நினைக்கவும் இல்லை.

    //ஒவ்வொரு பின்னூட்டத்திலும் முரண்பாடான... கருத்துக்களை (முன்னுக்குப் பின் முரண்பாடானக் கருத்தை) எழுதுவது வழக்கம்.. அதற்கு கடைசி பின்னூட்டம் ஒரு உதாரணம்.//

    முரண் பாடுகளைச் சுட்டிக் காட்டுங்கள் அழகாகச் சம்வாதம் செய்வோம் பலருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். எனக்குமே என் முரண் பாடுகள் தெரியவரும்.

    மாற்றம் முரண்பாடு ஆகியவையே சிந்தனையை வளர்க்கும்.

    If you are not a communist at the age of 20 you do not have heart;
    If you are a communist at the age of 60, you do not have head

    என்று ஒரு 'பூர்சுவா' சொல்லாடல் உண்டு.எனக்கு இப்போது 62.அய்யாமுத்துவும் 60 வயதில் தான் மாறினார்.

    சரி நண்பர் ஹாலாஸ்யாம் ஜீ! ஏன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு விட்டீர்கள்?

    இன்றைய அரசியல் பொருளாதாரக் கருத்துக்களுடன் திகழ வேண்டும் என்பதற்காக ஆரம்பிதத விவாதம் அது. உங்களுக்கு மார்க்சீய சிந்தனை பிடிக்கும் எனில் அதனை எடுத்து முன் வைக்க அழைக்கிறேன்.

    கோவம் வேண்டாம். வெள்ளை புறாவை ஜனநாயக சோஷலிச சிற்பி நேரு மாமாவின் கைகளில் கொடுத்துப் பறக்க விடுகிறேன்.

    கோட்சேயின் கருத்துக்களையும் இங்கே வைத்தேன். காந்திஜியின் கருத்துக்களையும் வைத்துள்ளேன்.எல்லாமும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். நானும், என் எழுத்துக்களும் கூட.

    என்னை அகமுகமாகத் திருப்பியதற்கு நன்றி. உங்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை.

    ReplyDelete
  109. நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அதற்கு தள்ளப் பட்டுள்ளேன். உங்கள் ஆக்கத்திற்கு எனது பின்னூட்டத்தில் நான் கூறிய கருத்தில் உள்ளப் பத்திகளில் சில...

    /////அமெரிக்காவில் இன்றைய அவலத்திற்கு காரணமே... இந்த முரண்பாடு தான்... நிர்வாககேட்டால், கடனில் அகப்பட்டு தவிக்கும் தனியார் நீருவனங்களுக்கு (முதலாளிகளுக்கு) மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பேருதவி செய்து காப்பாற்றும் போக்கே இன்றைய அவதிகளுக்கு காரணம்... வங்கிகள் கூட அப்படித்தான் செயல் படுகின்றன... தனியாரின் தவறு மக்களின் தலையில் இதில் ஏது/? நியாயம்...

    தோற்றுப் போன கம்யூனிஸ நாடுகளை கூறிக் கொண்டு வருவோருக்கு கூறுவது.. அதையும் விடாபிடியாக கொள்கையே (காலமும் இடமும் மாற்றம் செய்யாது) சரி என்று திரிந்ததால் வந்த வினை. ஜனநாயகமும், கம்யூனிசமும் இருக்கரைகலாக கொண்டு பயணித்தால் கரைத் தட்டாது என்பது எனது எண்ணம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதை இருவரும் உணரவேண்டும்.../////

    இவைகள் உங்கள் கண்ணில் பட்டும் கருத்தில் நிற்கவில்லை.... (தொடரும்)...

    ReplyDelete
  110. ஆனால் தங்களின் கடைசி பின்னூட்டம் இப்படி இருந்தது...

    ***********************************************************************
    ////சோஷலிசம் பற்றி விளக்கம் கேட்டேன். முதலில் என் பதிவின் நோக்கத்தை சொன்னதற்கு விமர்சித்த சோசலிஸ்டுகள் எதுவும் சொல்லவில்லை. மார்க்ஸின் மூலதனத்தைச் சமயம் கிடைத்த போது படித்தவர் கூட மேல் தகவல் அளிக்கவில்லை.

    சோஷலிசத்தின் தன்மையே அதுதான். அதனைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்பவர்களாலேயே அதன் இயல்பைப் புரிந்து கொள்ளமுடியாது.

    உலகில் நாம் அறிந்து கொள்ள முடியாதது முதலில் கடவுள் தத்துவம். அடுத்து புரிந்து கொள்ள முடியாதது சோஷலிச‌ சதத்துவம்.இரண்டையுமே கையைக் காலை ஆட்டி ஆட்டி விளக்கமாகப் பேசலாம்.நல்ல பேச்சாளர் என்ற பேர் எடுக்கலாம். ஆனால் பேச்சின் முடிவில் சொன்னவன் கேட்ட‌வன் இரண்டு பேரும் அறியாதவர்களாகவே மிஞ்சுவர்.////
    ************************************************************************
    சரி இப்போது என்ன நினைப்பது... எனதுக் கருத்தை நான் எனது முதல் பின்னூட்டத்திலே கூறிவிட்டேன் மீண்டும் இப்படி ஒருப் பின்னூட்டம் என்றால் இதை எப்படிச் சொல்வது... அல்லது எடுத்துக் கொள்வது...

    மீண்டும் அந்தப் பத்தியைக் குரிபிட்டப் பின்பு தங்களின் பதில் இப்படி இருக்கிறது...


    //ஜனநாயகமும், கம்யூனிசமும் இருக்கரைகளாக கொண்டு பயணித்தால் கரைத் தட்டாது என்பது எனது எண்ணம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மண‌ம் உண்டு என்பதை இருவரும் உணரவேண்டும்...//

    இந்த மாதிரி உறுதியான நிலைப்பாடு இருக்கும் போது ஏன் பத‌ட்டத்தோடு எதிர்வினை? அழகாக‌ச் சொல்லியிருக்கலாமே.

    //இரண்டிலும் உள்ள நல்ல சித்தாந்தங்களை காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தமாதிரி புதுமை செய்ய வேண்டும்..."வேதம் புதுமை செய்ய வேண்டும்" என்பதாகத் தான் இருக்கிறது!!!//

    இதுவும் நல்ல வாக்கியம். பாராட்டுகிறேன்.
    ******************************************************************
    ஆக, நான் தனிப் பட்ட முறையில் எடுத்துக் கொண்டேனா? எடுத்துக் கொள்ள வைக்கப் பட்டேனா?
    சொல்லுங்கள் பார்ப்போம்.

    நான் ஒரு சோஷலிச கருத்தின் கொள்கையின் அபிமானி வெறியன் விடாபிடிக் காரன் அல்ல... அப்படி சோஷலிச சிந்தனையை என்னுள் தோற்றுவித்தது... என்னை மாற்றியது மகாகவி பாரதியும் / என் தந்தையும் அதில் பெரும் பங்கு பாரதிக்குத் தான் சேரும்...
    பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம் இவைகள்தாம் பாரதிப் பிரியர்களின் தாரக மந்திரம்.
    நான் படித்த விவேகானந்தர் அதை இன்னும் உறப்படுத்தி விழுது பெற வைத்து விட்டார்.!

    "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான்" உள் கருத்தை அறிய வேண்டும் ஜகத்தினை அழிப்போம் என்றால் அவ்வளவு கடுமையான விஷயம் என்றுப் பொருள் கொள்ள வேண்டும்.. அவனையுமே தீவிரவாதி என்றது இந்த சமூகம். அதை விவரிக்க பெரிதாக எழுத வேண்டும்..

    தாங்கள் கூறிய.... விஷயம் வேறு.. கூற நினைத்த விஷயம் வேறு... நான் நீங்கள் கூற நினைத்ததற்கு பதில் பின்னூட்டம் மிட்டேன்.... இதிலே அரசியல் சார்ந்த கருத்துக்கள் காலம் சென்றவை... சோசலிஷ கொள்கைகளை பரப்ப விவாதிக்க அவசியமும் இல்லை / இப்போது அவகாசமும் இல்லை... இதுவும் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர்களிடம் நான் விவாதிக்க விரும்பு வதில்லை போன்றதே... நான் ஆள் சேர்க்க விரும்ப வில்லை. அதையே நவீனமயமாக்க வேண்டும் என்பதே என்போன்றவரின் விருப்பம்... நான் வாழும் நாட்டில் அதைத் தான் செய்துள்ளார்கள்... ஒரு சோசலிஸ்ட் தான் முன்னோடியாக நின்று இன்றும் வழிநடத்துகிறார்!

    இன்னும் சொல்லப் போனால் இன்றைய சீனாவின் பொருளாதாரக் கொள்கைக்கு / மாற்றத்திற்கு மூலக் காரணமும் அவரே! அந்தப் பெருந்தகை. திருவாளர் லீ குவான் யூ.

    என்னுடைய எண்ணம் முன்பேக் கூறியது.... அவைகளை மறைத்து / மறந்து மறுபடியும் இழுத்தால் (அதனால் தான் என்னை குறி வைக்கவில்லை என்றால் இத்தோடு முடிக்கிறேன் என்றும் கூறி இருந்தேன்) அதை எதில் சேர்ப்பது...

    நான் கூறட்டுமா... விவாதம் செய்வதற்கு என்றே சிலக் கருத்துகளை / செய்தியை தனியே ஒதுக்கி வைத்துக் கொண்டு கட்டுரையை சமைத்ததால் வந்த கோளாறு...

    நீண்ட பின்னூட்டம்...

    அதைச் சொல்ல வேண்டியது தானே! ?????????? அதைத் தானே முன்பே சொன்னேன்.

    இத்தோடு முடித்தும் கொள்கிறேன்.

    ReplyDelete
  111. ////////// kmr.krishnan said...

    //எனக்கு வயது எழுபத்தைந்து. குதிரையைத்தான் நான் கழுதையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ என்கிற ஐயப்பாடு உங்கள் சொற்களைப் பார்த்ததும் ஏற்பட்டுவிட்டது.//

    மைனரின் 'அபெளவ் செவென்டி' பின்னூட்டம் எனக்கு 62 என்பதால், 'ஸ்லிப்'ல‌
    ஃபீல்டிங் பண்ணும் நான் பவுண்டரிக்கு அடித்த பந்தை விட்டுவிட்டேன். பவுண்டரியிலே தஞ்சாவூரார் 'காட்ச்' பிடித்துவிட்டார்.////////

    சாரி.. 'அரவுண்ட் சிக்ஸ்ட்டி'ன்னு நெக்ஸ்ட் பால் போட்டாப் போச்சு..

    ReplyDelete
  112. //////Thanjavooraan said...


    //'எபோவ் செவென்ட்டி' ன்னாலே இந்தப் ப்ராப்ளம் இருக்கத்தான் சார் செய்யும்..//

    மைனர் அவர்களே! இப்படி வாரி விட்டீர்களே. எனக்கு வயது எழுபத்தைந்து. குதிரையைத்தான் நான் கழுதையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனோ என்கிற ஐயப்பாடு உங்கள் சொற்களைப் பார்த்ததும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்த வகுப்பறையில் உங்களைப் போன்ற இளம் சிங்கங்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு நான் என் வயதை மறந்து நானும் இளைஞன் என்ற உணர்வில் மிதந்து கொண்டிருக்கிறேன். கவிழ்த்து விடாதீர்கள்!///////////


    தஞ்சாவூர்க் காரங்களுக்கெல்லாம் அது செட் ஆகாது சார்..தஞ்சாவூர்லே இருந்து சமீபத்துலே எஸ்கேப் ஆனா ஆளுங்களுக்கு மட்டும்தான் அது..நீங்க ரிலாக்ஸ் பண்ணி அம்பைரிங் பண்ணலாம்..அடுத்த ரவுண்ட்ஸ் இன்னிக்கு ஆரம்பிச்சுடுச்சு பார்த்தீங்களா?


    ஒரே பஞ்ச்தான்..ப்ளாக்கிங்தான்....
    இன்னிக்கு சிங்கப்பூர் காரர் களத்துலே குதிச்சிருக்கார்..ஒருத்தர் வெளியூர் கிளம்புறேன்னு 'அப்ஸ்கான்ட்'
    ஆகிட்டார்..இன்னா 'ஃபைட் மெதட்'ன்னுதான் ஒண்ணுமே புரியலே..

    ReplyDelete
  113. ///////////////kmr.krishnan said...


    //நேரடியாக ஜப்பானிய மொழியிலே எழுத்துக் கூட்டிப் படித்தால்
    'கப்பல்களும் படகுகளும் வந்துசேரும் துறைமுகத்தை தாக்குகிற அலை' என்கிற ரீதியில் பொருள் கொள்ளவேண்டியதுதான்..//

    அப்போ என்ன சொல்ல வரீங்க!? 'சுனைமீதூர்தல்' சுனாமி இல்லைதானே?///////////'

    அந்த வார்த்தை கூட அதுவரையிலே நம் தமிழர்களுக்குத் தெரிந்திராதது என்றும்' அதே பாராவிலே தெளிவா சொல்லியிருக்கேன்..
    நான் இங்க quote பண்ணிய மேட்டரை நீங்க படிக்காததாலேதான் இந்த கமென்ட்..'அரவுண்ட் சிக்ஸ்ட்டி கன்ஃபார்ம்' ஆறது..

    ReplyDelete
  114. /////////kmr.krishnan said... நானாக ஒரு கருத்தும் சொல்லவில்லை. 'சூடானைப்போல எங்களுக்கும் தாய் நாடு கிடைக்கும் ஓம்தானே?' என்ற கேள்விக்கு ஆறுதலாக 'ஓம்' என்றேன்.மனதிலும் அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணமும் உண்டு. ஆனால் அவர்கள் இன்று இருக்கும் நிலையில் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரு ஆயுதப் போரை அல்ல' ,காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தைக் கூட நடத்த முடியுமா?//////////

    நீங்கள் மிதவாதி.. புலிகள் தீவிரவாதிகள்..மற்றபடி நோக்கமெல்லாம் ஒன்றுதான்..உங்களுக்கு நல்லெண்ணமாகப் பட்டது ராஜபக்சேக்கு பெரும் ராஜதுரோகக் குற்றமாகப் பட்டது..எது நியாயம், எது தர்மம் என்று இப்போது நிறுவுங்கள்..

    ReplyDelete
  115. kmr.krishnan said...
    //கொஞ்சகாலம் DYFI மெம்பர்ஷிப் இருந்துச்சு..அப்புறம் அதுவும் இல்லை.//

    அது இடதா, வலதா மைனர்?

    yes.u r right..
    quite naturally I m @ left..

    இது எப்டி இருக்கு..?

    ச்சும்மா லெஃப்ட் ரைட் வாங்கிட்டோம்லே..

    ReplyDelete
  116. ///////////ananth said...


    மிகவும் நீண்ட பதிவு. இருப்பதோ குறைந்த நேரம்.

    முன்பெல்லாம் அரசியல் நாகரிகம் இருந்தது. தொண்டர்களை மதிக்கும் தலைவர்கள் இருந்தார்கள். இப்போது எல்லாமே தலைகீழ்

    துக்ளக் தர்பாரை மிஞ்சும் அந்த அம்மாவின் தர்பாரை விட மைனர் சொன்ன தலைவர் எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக அவர் செய்த எல்லாவற்றையும் நியாயப் படுத்தி விட முடியாதுதான்./////////////////



    திருவாசகத்துக்கு உருகார் இந்த ஆனந்த் வாசகத்துக்கு உருகிட்டார்..

    ReplyDelete
  117. /////////////kmr.krishnan said...


    ///25 வருஷமா தாடி வெச்சுருக்குற உங்க தாடிக்கார நண்பருக்கு உள்ள பொறுமை உங்களுக்கு இல்லை..///

    புரியலையே! நீங்கதானா அது?அல்லது நானே எதாவது தாடிக்கார நண்பனைப் பற்றி எதாவது பீலா உட்டிருக்கேனா? ERC PLEEASE. (EXPLAIN WITH REFERENCE TO THE CONTEXT)//////////
    ஒரே க்ளூ..
    அவா வெளியூருக்குக் கிளம்பிண்டுருக்காலோன்னோ....
    அவாளேதான்..

    ReplyDelete
  118. //இவைகள் உங்கள் கண்ணில் பட்டும் கருத்தில் நிற்கவில்லை....//

    ஆக்கத்திலேயே என் நோக்கத்தை அக்காலக் கொள்கை அரசியல் என்று சொல்லியிருந்தேன்.இக்காலத்தில் சாதீயம், பணபலம், ஆள்பலம் என்று ஆகிவிட்டது என்று கூறியிருந்தேன் உண்மையாகவே கொள்கை அரசியல் நோக்கித்தான் விவாதம் திரும்பும் என்று எண்ணியிருந்தேன்.வேறு திசையில் விவாதம் சென்றதால் நானும் அதற்குப் பதில் சொல்லத் தள்ளப் பட்டேன்.
    =======================================================================

    நான் இரண்டாவதாக ஒரு கருத்தை முன் வைத்து விவாதத்தைத் துவக்கினேன்.

    //"அதில் முதலும் முடிவுமான கருத்து சோஷ‌லிசத்துக்கு அடிப்படையான‌த் தேவை தன்னலத்தைப் பின் தள்ளி சமூகப் பொது நலததை முன்னுக்குக்கொண்டு வ்ந்து செயல் படவேண்டும் ஒரு தோழர்.அதாவது தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேண வேண்டும்.ஒரு தனி மனிதனைவிட சமூகம் பெரியது. நான் ஒரு சமூக மனிதனே அன்றித் தனி மனிதன் அல்ல. என்னுடைய சுய நலம் வெளிப்பட்டு சமூகம் பாதிக்கப்படுமானால் நான் தேவைப்பட்டால் வன்முறையாலும் அகற்றப்படலாம்.

    இந்தக் கருத்து சரியா? இதன் மீது சோஷலிசவாதிகள் மேல் அதிகத்தகவல் தாருங்கள்.நன்றி!"//

    இதற்கு நீங்கள் உங்கள் மேலான சிந்தனைகளைத் தெரிவித்து இருந்தால்
    சுயநலம், பிறர் நலம் பற்றியெல்லாம் நன்கு விவாதித்து இருக்கலாம். நான் இதற்கு பதில் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். பதில் வரவில்லை என்றபோதுதான் சோஷலிசம் புரிந்துகொள்ள முடியாத தத்துவம் என்று சொன்னேன்.
    ==================================================================

    //நான் ஒரு சோஷலிச கருத்தின் கொள்கையின் அபிமானி வெறியன் விடாபிடிக் காரன் அல்ல... அப்படி சோஷலிச சிந்தனையை என்னுள் தோற்றுவித்தது... என்னை மாற்றியது மகாகவி பாரதியும் / என் தந்தையும் அதில் பெரும் பங்கு பாரதிக்குத் தான் சேரும்... பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம் இவைகள்தாம் பாரதிப் பிரியர்களின் தாரக மந்திரம்.நான் படித்த விவேகானந்தர் அதை இன்னும் உறப்படுத்தி விழுது பெற வைத்து விட்டார்.!//

    நன்றி ஹாலாஸ்யம் ஜி!உங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வ‌ந்து விட்டீர்கள்.இப்போதுதான் விவாதத்துக்குள் நுழைந்து இருக்கிறீர்கள்.

    பாரதி ருஷ்யப்புரட்சி நடந்து 3 ஆண்டுகளுக்குள் மறைந்துவிட்டார்.புரட்சி என்ற சொல்லே தமிழுக்கு பாரதி கொடுத்ததுதான்.
    'இவ்வளவு உன்னதமான தத்துவத்தை உயிர்க்கொலை செய்துதான் கொண்டுவர வேண்டுமா?'என்பது பாரதியின் கேள்வி.

    விவேகானந்தர் ருஷ்யப் புரட்சிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே முக்தியாகிவிட்டார்.அவருமே வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.இந்தியா முழுதும் சுற்றி வந்து நாட்டின் ஏழை மக்கள் மீது தீராத பாசம் கொண்டார்.அவர்களுடைய வறுமைக்குத் தீர்வாக அவர் முன் வைத்தது அனைவருக்கும் கல்வி/அறிவு என்பதே.

    மேலும் ஆட்சி அதிகாரம் சுழல் முறையில் இயற்கையிலேயே அமைகிறது.
    பிராமணர்(மதத்தலைவர்கள்) ஆட்சியும்,அரசர்களின் ஆட்சியும் உலகில் நடந்து முடிந்து, ஆங்கிலேயரின் ஆட்சியை வணிகர்களின் ஆட்சியாக அவ்ர் பார்த்தார்.
    அது முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், சூத்திரர் ஆட்சி(லேபர் கிளாஸ்),
    தொழிலாளிகளின் ஆட்சி விரைவில் வரப்போவதாகவும் அவர் கூறினார்.
    அது ஒரு தீர்க்க தரிசனமே.

    ருஷ்யா, சீனா, சிங்கப்பூர் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சோஷலிசம் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கிறது. இவை பற்றியெல்லாம் நாம் விவாதித்தால் அனைவரும் பயனடைவர்.

    (தொடரும்)

    ReplyDelete
  119. வாக்குஸ்தானத்திலே சில வில்லங்கமான கிரகங்கள்(சனி, உச்ச செவ்வாய்) கிரகங்கள் இருக்குற ரெண்டு பேரும் நுமேரோலோஜி படி எட்டாம் தேதி பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது இன்று தெரிந்துகொண்டேன்..

    ReplyDelete
  120. ////kmr.krishnan said...
    மேலும் ஆட்சி அதிகாரம் சுழல் முறையில் இயற்கையிலேயே அமைகிறது.
    பிராமணர்(மதத்தலைவர்கள்) ஆட்சியும்,அரசர்களின் ஆட்சியும் உலகில் நடந்து முடிந்து, ஆங்கிலேயரின் ஆட்சியை வணிகர்களின் ஆட்சியாக அவ்ர் பார்த்தார்.
    அது முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், சூத்திரர் ஆட்சி(லேபர் கிளாஸ்),
    தொழிலாளிகளின் ஆட்சி விரைவில் வரப்போவதாகவும் அவர் கூறினார்.
    அது ஒரு தீர்க்க தரிசனமே.////////

    இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?

    ReplyDelete
  121. ///... இதிலே அரசியல் சார்ந்த கருத்துக்கள் காலம் சென்றவை... சோசலிஷ கொள்கைகளை பரப்ப விவாதிக்க அவசியமும் இல்லை / இப்போது அவகாசமும் இல்லை... இதுவும் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர்களிடம் நான் விவாதிக்க விரும்பு வதில்லை போன்றதே... நான் ஆள் சேர்க்க விரும்ப வில்லை.///

    விவாதிக்க விரும்பவில்லை எனில் அத்ற்கு மெளன‌மே சரியான வழி.
    =================================================================

    //அது நீர் இல்லை என்றால் நான் இத்தோடு முடித்துக் கொண்டு விடுகிறேன்.... பேச்சை வளர்க்க விரும்பவில்லை..//

    இதற்கு என் பின்னூட்டத்திற்காக‌ நீங்கள் காத்திருக்கவில்லை.

    இதற்குப் பின்ன்ர் உடனேயே ஒரு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.ராமர் அம்ப‌ரத்தூணியிலிருந்து எடுப்பதும் தெரியாதாம் தொடுப்பதும் தெரியாதாம்.அதுபோல 'சர சர' என்று....சொல்லம்புகள்.!
    ========================================================================நான் கூறட்டுமா... விவாதம் செய்வதற்கு என்றே சிலக் கருத்துகளை / செய்தியை தனியே ஒதுக்கி வைத்துக் கொண்டு கட்டுரையை சமைத்ததால் வந்த கோளாறு... //

    அப்படியெல்லாம் ஒரு உள் நோக்கத்தோடு எதையும் வைத்துக் கொண்டு
    கட்டுரையை சமைப்பதில்லை.அதனதன் போக்கிலேயே விட்டு பல கருத்துகளை பலருக்கும் சொல்வதுதான் வழக்கம்.

    பொதுவாக நான் புதிய புதிய செய்திகளை சொல்வதாகத்தான் ஒரு சிலராவது சொல்லியிருக்கிறார்கள்.

    'வகுப்பறையின் விக்கிப்பீடியா' என்று சொன்னதைக் கூட நான் விக்கல், பீடித்தல் பீடி என்று பகடி செய்தேன்.

    ஏற்கனவே தாங்கள் வேகப் பட்ட போதும் கூறியதுதான்: 'என் பின்னூட்டங்கள் மேல் அதிகத் தகவ‌ல் அளிப்பவை மட்டுமே. யாருடைய ஆற்றலையும் குறைத்து மதிப்பிடுபவை அல்ல'

    என் வயது,பட்டறிவு,சிறிது படிப்பு, தற்காலத் தொழில் நுட்பத்தால் கிடைத்த
    வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேண்டுபவ்ர்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்..

    அதிகம் படிக்கப்படுவது ஐயாவின் சோதிடக் கட்டுரைகள்தான். அதற்கு அடுத்தது ஐயாவின் பொது ஆக்கங்கள்.என்னுடையது எல்லாம் 2770 பேரில் 2000 பேர் சும்மா ச்ர்ஃப் செய்து வில‌கிவிடுவர்.என் உறவினர்களுக்கெல்லாம் சொல்லி படிக்கச் சொன்னாலும்'அதுக்கெல்லாம் எங்க‌ நேரம்' என்பதுதான் பதில்.எனவே
    கண்ணில் படக்கூடிய மிகச் சிலருக்கு ஏதாவது நல்ல கருத்துக்கள் போய்ச் சேரட்டும் என்பதுதான் நோக்கம். என்னுடைய ஒரு கணிப்புப்படி முழுதுமாகப்
    பின் தொடர்பவர்கள் என் ஆக்கத்திற்கு மட்டும் 50 பேர் இருந்தால் அதிகம். எனவே எந்தவித மயக்கமும் இல்லை.
    ========================================================

    லா ச‌ ரா யார் என்று உங்களுக்குச்சொன்னேன்.ஏதோ நீங்கள் ஒருவராவது அதனால் பலன் அடையலாம அல்லவா? அதுபோலத்தான் என் தகவல் பரிமாற்ற முயற்சி. எந்த உள் நோக்கமும் இல்லை.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=======================================================================
    எதார்த்ததைச் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும் என்றும் கூறினார்கள் என்னைப்பற்றி. நான் அப்ப்டிப்பட்ட துணிவு உள்ளவனா என்றும் அறியேன்.
    ========================================================================
    வேறு யாரோ சொன்ன கருத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு முறை இப்படித்தான் நாம் இருவரும் வார்த்தை ஆடினோம்.சொன்னவர் வெங்காயச்சருகு மூட்டையைப் போட்டு விட்டு போய்விட்டார் என்றீர்கள்.
    நீங்கள் செயித்தீர்கள் என்றபோதும் பாரதியின் கண்ணன் என் சீடனைக் கூறி முடித்தேன்.
    அதையே மீண்டும் எனக்கு நானே கூறிக்கொண்டு நிறைவு செய்கிறேன்.
    ‍‍‍‍‍‍‍‍========================================================================

    ReplyDelete
  122. //சாரி.. 'அரவுண்ட் சிக்ஸ்ட்டி'ன்னு நெக்ஸ்ட் பால் போட்டாப் போச்சு..//\

    இந்த 'பால்'ல நான் 'க்ளீன் போல்ட்'.உங்க கையில் அவுட்டான சந்தோஷம் தான்!

    ReplyDelete
  123. //தஞ்சாவூர்க் காரங்களுக்கெல்லாம் அது செட் ஆகாது சார்..தஞ்சாவூர்லே இருந்து சமீபத்துலே எஸ்கேப் ஆனா ஆளுங்களுக்கு மட்டும்தான் அது.//

    எனக்குத்தெரியாதா தஞ்சாவூர்காரங்க எல்லாம் எப்படி ஒண்ணா சேருவீங்கன்னு.
    நா வேற எதார்த்தமா எனக்கு ஆப்பு வைச்சவர் சொன்னத சொல்லப் போயி அதை என் கருத்தாவே எடுத்துக்கிட்டு எல்லாரும் காண்டாவே இருக்கீங்கன்னு! அதான் குதியங்கால் தலையில் பட எஸ்கேப் ஆயிட்டேன்.உங்க தலீவரு வேற ஆதீல ஒருங்கிணைந்த தஞ்சாவூர்ர் மாவட்டம்! அது கொடுகிற தெஹிரியம் வேற!டெல்லிக்காரவுகளும் 'கும்பகோணம்'தானே! ஆக்ஸ்ஃபோர்ட மறந்துடுங்க.

    ReplyDelete
  124. //திருவாசகத்துக்கு உருகார் இந்த ஆனந்த் வாசகத்துக்கு உருகிட்டார்..//

    யாரு மைனரா? தலைவரா? உருகியது யார்?

    ReplyDelete
  125. //கமென்ட்..'அரவுண்ட் சிக்ஸ்ட்டி கன்ஃபார்ம்' ஆறது.//

    ஓம்!ஓம்! 100% கன்ஃப்ர்ம்ட்!

    ReplyDelete
  126. //நீங்கள் மிதவாதி.. புலிகள் தீவிரவாதிகள்..மற்றபடி நோக்கமெல்லாம் ஒன்றுதான்..உங்களுக்கு நல்லெண்ணமாகப் பட்டது ராஜபக்சேக்கு பெரும் ராஜதுரோகக் குற்றமாகப் பட்டது..எது நியாயம், எது தர்மம் என்று இப்போது நிறுவுங்கள்..//

    கருடா கருடா செள‌க்கியமா கதைதான். முதல் முதலில் அந்தக் காலத்தில் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன்(அப்போது அவருக்கு வேறு ஏதோ பெயர்) தன் சக போராளிக் குழுவினரை கைத்துப்பாகியால் சுட்டாரே,அப்போது சொன்னேன் துப்பாக்கி எடுத்தவனுக்கு அதனாலேயே தான் முடிவு என்று. ஒரு மார்டின் லூதர் கிங், நெல்சன் மன்டேலா, டூ டூ, ஆங் சூயி எல்லோரையும் போல ஈழப்போராளிகளும் கொஞ்சம் நிதானமான போராட்ட முறைகளையெ கையில் எடுத்திருக்கலாம்.மலைத் தோட்டத் தொழிலாளர்கள், இஸ்லாமியர்களையெல்லாம் ஒருங்கிணைக்கப் பாடு பட்டிருக்கலாம்.ஆயுத சேகரிப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அறம் சாராத வழி முறைகளைக் கையாளாமல் இருந்திருக்கலாம்.இதெல்லாம் நடந்திருந்தால்
    ஒரு வேளை அந்த 'பாசிடிவ் கறண்ட்' சிங்களவ்ர்களிடமும் தொற்றியிருக்கும்.

    இங்கே வீரப்பனை இன்றும் வழிபடுபவர்கள் உள்ளார்கள்.

    இங்கே ஒரு காமெடி நடிகர் டர்ன்ட் சட்டமன்ற உறுப்பினர் 'ஆரிய முன்னேற்றக் கழகம்' ஆரம்பிக்கிறேன் என்றார். "இப்படியெல்லாம் ஸ்டன்ட் விட்டால்'கைபர் போலன் கணவாய் வழியாக‌ வந்தவர்களே அது வழியாகவே திரும்பிப்போங்கள்' என்றால் நாமெல்லாம் எங்கே போவது?" என்றேன்.

    1945க்கு முன் இஸ்ரேலியர்கள், அப்புறம் பாலஸ்தீனியர்கள் என்று நாடு இழந்தவர்கள் எத்தனை?இங்கேயும் போடோ, காஷ்மீர் என்று எத்தனை பிரிவினை கோஷம். உள்ளுருக்குள்ளேயே தெலுங்கனா, விதர்பா பிரிவினைகள்.

    பிரிவுக்கான காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், ஒற்றுமைக்கு சிறு பாதை கிடைத்தாலும் அதனையே விரும்புவேன்.

    ராஜபக்ஷே இன்று உலக நாடுகள் முன் தலை தாழ்ந்துதான் நிற்கிறார்.போர், வெற்றி, தோல்வி என்றால் எல்லாமும்தான் நடக்கும்.தோல்வியையும் ஈழத்தமிழன் எதிர்பார்த்துத்தான் களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதீத தன்னம்பிக்கையும் தவறு.அஞ்சுவது அஞ்சாமை பேதமை.

    ராஜபக்ஷே செய்தது அதர்மம். அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுத்த புலிகள் செய்தது விவேகமல்ல.

    ReplyDelete
  127. //அவா வெளியூருக்குக் கிளம்பிண்டுருக்காலோன்னோ....
    அவாளேதான்..//
    தாடி வரைக்கும் தெரியறதுன்னா, அவாளைப் பத்தி நன்னா உங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்கு. அவா எதுல இன்டெரெஸ்ட் உள்ளவா? ஏன் வகுப்பறையில ஒரு புதிராட்டமா இருக்கா? நா அவாகிட்ட என்ன சப்ஜெக்டு படிச்சுக்கலாம்?எல்லாம் சொல்லூங்கோ மைனர். ரெண்டு வரியா எழுதறது, தாடி, காபி சாப்பிடாதது, ப்ரெட் கூட அசைவம்கிறது முக்கியமா தாடி, அவா ஏதாவது சாமியாரோ?தெரியாம நா மாட்டுக்கு மோதிண்டிருக்கேனே. காதோடு சொல்ல்ங்களேன், ஊரிலிருந்து திரும்பரத்துக்குள்ள.ரகசியமா நானும் உங்கள‌ மாதிரி வைச்சுக்கறேன்.அப்பபோ வெள்ளித்திரையில் காண்க என்பார்கள். போய் பழகியிருக்கேள் போல.

    ReplyDelete
  128. //minorwall said...
    வாக்குஸ்தானத்திலே சில வில்லங்கமான கிரகங்கள்(சனி, உச்ச செவ்வாய்) கிரகங்கள் இருக்குற ரெண்டு பேரும் நுமேரோலோஜி படி எட்டாம் தேதி பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது இன்று தெரிந்துகொண்டேன்..//

    வாத்தியார் மகிழ்ச்சியடையும் பின்னூட்டம். சனி 2க்காரா எப்படி அடங்கிப் போனார் பாருங்கள். நிங்கள் சொல்வதைப் பார்த்தால் ராசியோ லக்னமோ இருவருக்கும் ஆறுக்கு எட்டு. சஷ்டாஷ்டகம். பொருத்தம் இருக்காது, சண்டைதான் மிஞ்சும். அப்புறம் சமாதானம் ஆகிடும். செவ்வய் சனி வேற் ஆறுக்கு எட்டு. வாழ்ந்தாப்பலதான்.

    ReplyDelete
  129. //இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?//

    விவேகனந்தர் இந்தியா என்று கூடப் பார்க்கவில்லை.உலக அளவில் அந்த நான்கு வகையான இயற்கையான சக்திகள் ஒரு சுழற்சி முறையில் இயங்குகின்றன என்றார்.உலக அளவில் காலனி ஆதிக்கம் முடிந்து பல நாடுகளும் கம்யூனிச ஆட்சிகளை தொழிலாளர்கள் ஆட்சிகளை அமைத்தன.

    இன்று அந்த ஆட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    அதிகப் பணம் சம்பாதித்து, பணம் மன அமைதி கொடுக்கவில்லை என்பது அறிந்து உலக மக்கள் அனைவருமே நிம்மதியைத் தேடத் துவங்கியுள்ளனர்.

    அற உணர்வு மேலோங்கி வருகிறது எனலாம். இளைஞர்கள் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தது ஏதோ ஒரு தனி நிகழ்வு அல்ல. மீண்டும் மீண்டூம்
    எதிரொலிக்கும்.அறிவு சார்ந்த அற உணர்வு உள்ளோரின் ஆட்சி அடுத்து வரலாம்.
    ஜெயெலலிதா பிறப்பால் பிராமண‌ர் என்பதால் அவரது ஆட்சி பிராமண ஆட்சி என்று சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்.

    சுவாமிஜியின் அந்தக் கருத்தோட்டம் மிகப் பரந்த அளவில் பார்க்க வேண்டும் குளோபல் அல்லது யுனிவர்சல் லெவெல்.

    ReplyDelete
  130. ///minorwall said...
    இப்போ தமிழ்நாட்டுலே நடக்குறது இதிலே எந்த வகை ஆட்சி?///

    என்ன மைனர்வாள் இப்படி கேட்டுட்டீங்க? கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் "கலைஞர்"கள் (கலை உலகைச் சார்ந்தோர்) ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் முதல்வர் அவர் விவசாயக் குடும்பம் என்று சொல்கிறார். தமிழகத்தில் நடப்பது உழைப்பாளிகள் ஆட்சிதான், ஆனால் ஆட்சி நடத்துபவர்களுக்கும்/ இது வரை நடத்தியவர்களுக்கும் உழைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

    ReplyDelete
  131. //////////kmr.krishnan said...
    சுவாமிஜியின் அந்தக் கருத்தோட்டம் மிகப் பரந்த அளவில் பார்க்க வேண்டும் குளோபல் அல்லது யுனிவர்சல் லெவெல்./////

    'கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம்..'என்று ஒரு பழமொழி உண்டு..அதனால் நான் கூரையளவிலே நின்று கொள்கிறேன்..

    ReplyDelete
  132. //////kmr.krishnan said...
    ஜெயெலலிதா பிறப்பால் பிராமண‌ர் என்பதால் அவரது ஆட்சி பிராமண ஆட்சி என்று சொல்வேன் என்று நினைக்க வேண்டாம்.//////

    பிறப்பால் என்றால் அதற்கப்புறம் வேறுபடுகிறாரா? வேறெதை எதை வைத்து வேறுபாடு அடைகிறார்கள்?..
    இது குறித்தான விளக்கங்கள் ஏதும் முந்தைய பழைய வேதகாலப் புத்தகங்களிலே விளக்கம் உண்டா?
    ஷத்திரியன் சூத்திரன் என்ற வகையில் இன்றைய அளவிலே BC யை ஷத்திரியனாக்கி SC /ST சூத்திரனாக்குவதா?(எப்படி இருந்தாலும் SC/ST க்கு விடிவுகாலம் சலுகையில் மட்டுமே..சமூக அங்கீகாரம் என்னவோ கேள்விக்குறிதான்?ஆனால் சலுகை கிடைக்குமென்றால் என்னையும் அதிலே சேர்..என்று ஊர்வலம் நடத்தும் பல சாதியர்களும் இங்கே உண்டு..அது வேறு ஒரு நகைப்புக்குரிய விஷயம்..இது 2011..)
    நடுவிலே இருக்கும் MBC எதிலே வைக்கலாம்?வைஷ்யன் பாதி BC..மீதி?
    ஷத்திரிய, சூத்திரனைத் துணைக்கோடாமல் (கூட்டணி) யாரும் இன்று ஆட்சியமைக்கமுடியுமா?இதெல்லாம் என்ன வறட்டு வேதாந்தம்?இப்படி ஒரு வர்க்க அமைப்பை இன்னும் கட்டிக்காக்கும் அமைப்பு எது?யார்?உலகம் நம்மைப் பார்த்து கேவலமாக சித்தரித்து கைகொட்டிச் சிரிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று..எத்தனையோ பேர் இங்கே ஜப்பானில் என்னை இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்..ஏனென்றால் பாடப் புத்தகத்திலேயே இந்தியாவைப் பற்றி இந்த விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்..

    ReplyDelete
  133. //////kmr.krishnan said...
    //அவா வெளியூருக்குக் கிளம்பிண்டுருக்காலோன்னோ....
    அவாளேதான்..//
    தாடி வரைக்கும் தெரியறதுன்னா, அவாளைப் பத்தி நன்னா உங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்கு. அவா எதுல இன்டெரெஸ்ட் உள்ளவா? ஏன் வகுப்பறையில ஒரு புதிராட்டமா இருக்கா? நா அவாகிட்ட என்ன சப்ஜெக்டு படிச்சுக்கலாம்?எல்லாம் சொல்லூங்கோ மைனர். ரெண்டு வரியா எழுதறது, தாடி, காபி சாப்பிடாதது, ப்ரெட் கூட அசைவம்கிறது முக்கியமா தாடி, அவா ஏதாவது சாமியாரோ?தெரியாம நா மாட்டுக்கு மோதிண்டிருக்கேனே. காதோடு சொல்ல்ங்களேன், ஊரிலிருந்து திரும்பரத்துக்குள்ள.ரகசியமா நானும் உங்கள‌ மாதிரி வைச்சுக்கறேன்.அப்பபோ வெள்ளித்திரையில் காண்க என்பார்கள். போய் பழகியிருக்கேள் போல.////////

    வாத்தியார் இது குறித்து வகுப்பறையில் வெளியிட்டிருந்த ஒரு பின்னூட்டம்தான் தகவல்..வேறேதும் யாமறியேன் பராபரமே..(அவாளைப் பத்திப் பேசினாலே இப்படி எதாவுது வந்து ஒட்டிக்கிடறது..

    ReplyDelete
  134. ///////kmr.krishnan said... முதல் முதலில் அந்தக் காலத்தில் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன்(அப்போது அவருக்கு வேறு ஏதோ பெயர்) தன் சக போராளிக் குழுவினரை கைத்துப்பாகியால் சுட்டாரே,///////

    நீங்கள் சொல்வது டக்ளஸ் தேவானந்தா பற்றியது..பிரபாகரனுக்கு வேறு பெயர் எப்போதும் கேள்விப்பட்டதில்லை..
    மேல்விளக்கம்

    வகுப்பறையில் யாருக்கும் தெரிந்திருந்தால் அளிக்கலாம்..

    ReplyDelete
  135. //இப்படி ஒரு வர்க்க அமைப்பை இன்னும் கட்டிக்காக்கும் அமைப்பு எது?யார்?//

    மைனர்வாள்! இது பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதம் செங்கோவியால் துவக்கப்பட்டு இப்போது 3 வாரமாக நடந்து வருகிறது. மிகவும் சென்சிடிவான இந்த விஷயம் பற்றி நல்ல மெச்சுரிடியுடன் அவர் பதிவிட்டு வருகிறார். அக்டோபரில் இரண்டும் இன்று ஒன்றுமாக 3 பதிவுகள் வந்துள்ளன. அதில் 2வது பதிவில் நமது தஞ்சாவூராரின் பிளாகில் வெளியிடப்ப‌ட்ட பிராமணன் யார் என்ற கட்டுரை சுட்டப் ப‌ட்டு 2 வது பதிவில் பேசு பொருளாகியிருக்கிறது.

    என் வாதங்கள் வேண்டிப் பெற்று பின்னூட்டமாக எடிடிங் இல்லாமல் வெளியிடப்படுகின்றன. தாங்களும் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.அங்கே எழுத விருப்பமில்லை எனில் தனிப்பட்ட மின் அஞ்சல் நீங்கள் எனக்கு அனுப்பலாம்.

    அங்கே எல்லாமும் வெளிப்படையாகவே நடப்பதாக இதுவரை எனக்குத் தோன்றுகிறது. மிகவும் ரிஸ்க் எடுத்து என் வாதங்களைச்சொல்லி வருகிறேன்.
    என்று கல் வீட்டின் மேல் விழுமோ தெரியவில்லை.நான் என் இரத்த‌ சாதிப் பிராமண வகுப்பின் தரப்பையே அங்கே நிறுவுகிறேன்.ஏன் எனில் அதுதான் எனக்கு இயல்பாக அருகில் இருக்கிறது. இரத்தசாதி, வர்ண வகுப்பு இவை பற்றிய தெளிவு கடைசியில் படிப்பவருக்குக் கிடைக்கலாம்.

    ப்ரெஜுடிஸ் இல்லாதவர்களுக்கு அந்த வாதம் உவப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

    "பிராமண நண்பர்களுக்கு வர்ணம்,சாதி, இடஒதுக்கீடு 1, 2 part(october); 3 part நவம்பெர் 2011"

    http://sengovi.blogspot.com/

    ReplyDelete
  136. UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 9 November 2011 09:55
    subject comments

    உமாஜி! என்ன வரும் போதே கலக்கலாக இருக்கிறதே! வலைத் தொடர்பு கிடைத்துவிட்டதா?//
    வலைத்தொடர்பு இருக்கிறது, பதிவைத்தான் வேறொரு வழியில் படித்துக்கொண்டிருக்கிறேன், கமெண்ட் போட முடிவதில்லை.

    உமாஜியும் வேகப் பட்டீர்கள். //

    வேகப்பட்டேனா? எதிர்க்கருத்துக்கள் இருந்து அதைச்சொன்னால் வேகப்படுகிறேன் என்று அர்த்தமா? நான் வகுப்பறை தவிர வேறு எந்த ப்ளாக்கிலும் அதிகமாக பின்னூட்டங்கள் போடுவதில்லை. அதன் காரணம் வகுப்பறையில் உள்ளவர்களைப்பற்றி ஓரளவு தெரியும் என்பதால்தான். அதனால்தான் ஒரு மாணவர் unnecessary என்று சில பின்னூட்டங்களைப்பற்றி குறிப்பிட்டபோது கூட வருத்தமாகவே இருந்தது. இங்கேயே புரிதல் பிரச்சனை எனும்போது, இனிமேல் எதிர்க்கருத்துக்கள் இருந்தாலும் எழுதுவதற்குமுன் யோசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் பின்னூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது, நன்றி!

    சாரி.. 'அரவுண்ட் சிக்ஸ்ட்டி'ன்னு நெக்ஸ்ட் பால் போட்டாப் போச்சு..//

    அப்ப அடுத்த பால் நம்ம வாத்தியாருக்கா? (ஹி ஹி, ஏதோ என்னால முடிஞ்சது!)

    திருவாசகத்துக்கு உருகார் இந்த ஆனந்த் வாசகத்துக்கு உருகிட்டார்..//

    ம்க்கும், இது வேறயா? ஏறின BP அவ்ளோ சீக்கிரம் இறங்காது போலிருக்கே!

    இருக்குற ரெண்டு பேரும் நுமேரோலோஜி படி எட்டாம் தேதி பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது இன்று //

    நல்ல டைமிங்!

    டெல்லிக்காரவுகளும் 'கும்பகோணம்'தானே//

    நான் பிறந்தது தஞ்சையில்தான்.

    S. உமா, தில்லி

    ReplyDelete
  137. From UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 9 November 2011 10:12
    subject comment
    தலைவருக்குத் தொண்டரின் அனுதாபப் பதிவினைப் படித்து கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாகவே சூடாக இருக்கிறாப் போல தோன்றுகிறது.//

    அப்படி ஏதுமில்லை, எனது வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன், நண்பர் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில். அவரது பின்னூட்டங்களும் அதையே உறுதிப்படுத்தியது.

    S. உமா, தில்லி

    ReplyDelete
  138. UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 9 November 2011 10:17
    subject comment

    சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..//

    உமக்கு ஒண்ணுமே புரியாது, சித்த சும்மா உட்கார்ந்து பாடத்தை கவனிங்கோ!

    S. உமா, தில்லி

    ReplyDelete
  139. //இனிமேல் எதிர்க் கருத்துக்கள் இருந்தாலும் எழுதுவதற்குமுன் யோசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் பின்னூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது, நன்றி!//

    சிங்கையாரின் தற்போதைய வேகத்தை வைத்து அப்போதும் அது போலத்தானோ என்று எண்ணி 'வேகப்பட்டீர்கள்' என்று சொல்லியிருக்கிறேன்.

    அதுபோல இல்லை என்று இப்போது புரிகிறது.எனவே எதிர் தரப்பு எனக்கு எப்போதும் வேண்டும். என் பதிலையும் எதிர்பார்த்து எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.

    வழக்கம் போல பின்னூட்டம் இடுங்கள். வரவேற்கிறேன்.

    செங்கோவியில் ஒரே ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தீர்கள் முதல் பகுதியில்.
    அப்புறம் காணவில்லையே.

    ReplyDelete
  140. //அப்படி ஏதுமில்லை, எனது வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன், நண்பர் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில். அவரது பின்னூட்டங்களும் அதையே உறுதிப்படுத்தியது.//

    எப்பவுமே உங்க‌ளுக்கு ஒரு கன்செஷன் வகுப்பறையில் உண்டு. அதுவும் ஜப்பான்
    சுனாமி டெல்லிக்கு வருவதற்கு முன்னர் 'ஸ்லோ' ஆகிவிடும்.

    ReplyDelete
  141. ///SP.VR. SUBBAIYA said...
    UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 9 November 2011 10:17
    subject comment

    சுப்பெரிம்போஸ் பண்ணனும்ன்னு சொல்லிட்டேள்..
    உதாரணமும் சொல்லிட்டேள்..எப்புடி பலன் நடக்கும் என்னா எதுன்னு ஒண்ணுமே புரியலை..//

    உமக்கு ஒண்ணுமே புரியாது, சித்த சும்மா உட்கார்ந்து பாடத்தை கவனிங்கோ!

    S. உமா, தில்லி///////

    நோக்கு எல்லாமே நன்னா புரியறதே..எந்த ஸ்கூல்லே படிச்சேள்.?
    தலைய சுத்தி அபிடியே ஒளிவட்டம் தெரியறது போங்கோ....

    ReplyDelete
  142. ////சாரி.. 'அரவுண்ட் சிக்ஸ்ட்டி'ன்னு நெக்ஸ்ட் பால் போட்டாப் போச்சு..//

    அப்ப அடுத்த பால் நம்ம வாத்தியாருக்கா? (ஹி ஹி, ஏதோ என்னால முடிஞ்சது!)

    திருவாசகத்துக்கு உருகார் இந்த ஆனந்த் வாசகத்துக்கு உருகிட்டார்..//

    ம்க்கும், இது வேறயா? ஏறின BP அவ்ளோ சீக்கிரம் இறங்காது போலிருக்கே!

    இருக்குற ரெண்டு பேரும் நுமேரோலோஜி படி எட்டாம் தேதி பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது இன்று //

    நல்ல டைமிங்!

    டெல்லிக்காரவுகளும் 'கும்பகோணம்'தானே//

    நான் பிறந்தது தஞ்சையில்தான்.

    S. உமா, தில்லி//////

    வளர்ந்த இடத்துக்குன்னு கொஞ்சம் எஃபக்ட் இல்லாமலா போயிடும்?

    நன்னாக் கவனிச்சு வரிக்குவரியா வாற முயற்சி பண்றேள்..உங்க கவனிப்புக்கு நன்றி..எதுக்கும் ஸ்பெஷல் கேர் எடுத்து BP செக் பண்ணிக்குங்கோ.

    ReplyDelete
  143. //////////kmr.krishnan said... இங்கே ஒரு காமெடி நடிகர் டர்ன்ட் சட்டமன்ற உறுப்பினர் 'ஆரிய முன்னேற்றக் கழகம்' ஆரம்பிக்கிறேன் என்றார். "இப்படியெல்லாம் ஸ்டன்ட் விட்டால்'கைபர் போலன் கணவாய் வழியாக‌ வந்தவர்களே அது வழியாகவே திரும்பிப்போங்கள்' என்றால் நாமெல்லாம் எங்கே போவது?" என்றேன். //////////

    'கைபர் போலன் கணவாய் வழியாக‌ வந்தவர்களே அது வழியாகவே திரும்பிப்போங்கள்' என்றால் அது முட்டாள்தனம்..

    ஏர்போர்ட் இருக்கும்போது ஏன் இப்புடி வந்தவழியாவே போகணும்? (ச்சும்மா..)

    வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாட்டுலே இருந்துகிட்டு இப்படியொரு நினைப்பு உங்களுக்கு எப்படி வந்தது?

    மலையாளி,கர்நாடகாக்கரர் என்றெல்லாம் மக்கள் பார்த்திருந்தா தமிழினத் தலைவர் என்ற பட்டமுடையவரை இப்புடி அலேக்கத் தூக்கி அப்புடி ஒரு ஓரமா உக்கார்த்தி வெச்சுருப்பாங்களா?

    அதுனாலே தமிழ்நாட்டுலே இருக்கும் வரைக்கும் நீங்க தகிரியமா எது வேணும்னாலும் எழுதலாம்..பேசலாம்..ஒரு பிரச்சினையும் வராது..அதுக்கு நான் கியாரண்ட்டி..(அதுக்காக வூட்டு மேல கல்லு வுழுந்தா மைனர் கேட்ச் புடிச்சுடுவாருன்னு நினைச்சுட்டு அசால்ட்டா இருக்கவேணாம்..மைனருக்கு பவுலிங் கம் பேட்டிங் மட்டுமே நல்லா வரும்..ஃபீல்டிங் வராது....)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com