மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.7.11

காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

 சாகித்திய அகாடெமி விருதுபெற்றுச் சிறந்த 
எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன்
------------------------------------------------------------------------------------
காளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை!

வாரமலர்

1997 - 98ஆம் ஆண்டு ஜூனியர் போஸ்ட் இதழில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரையில், சிறுகதை என்பத‌ன் இலக்கணத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஒருமுறை அல்ல இரண்டு முறை வெளிநாட்டு அறிஞர்களின் கருத்தாக ஒவ்வொரு முறையும் 12க்கு குறையாத குறிப்புக்களைக் கொடுத்து இருந்தார். அவையெல்லாமும் இப்போது நினைவில் நிற்கவில்லை என்றாலும், ஒரு கருத்துமட்டும் ஆழமாக மனதில் பதிந்து உள்ளது.

"ஒரு நல்ல சிறுகதையின் கருவோ, ந‌டையோ, ஒருசில‌ சொற்களோ, சொற்றொடர்களோ வாசகனின் மனதில் நீங்காமல் பதிந்து விடுமானால் அது ஒரு நல்ல சிறுகதை எனலாம். தலைப்போ, அல்லது கதை முழுதுமோ வார்த்தைக்கு வார்த்தை நினைவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அவருக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் சுஜாதா கூறியிருந்தார்.

த‌ஞ்சை,லால்குடியில் இருக்கும் போது கிடைக்காத‌ ஓய்வும், ப‌ர‌ப‌ர‌ப்பு இல்லாத‌ சூழ‌லும் இல‌ண்ட‌னில் என‌க்குக் கிடைப்ப‌தால், அவ‌ச‌ர‌ம், அவ‌ச‌ர‌மாக‌ மேய்ச்ச‌ல் நில‌த்தில் புல்லை  மேய்ந்த‌‌ ப‌சுமாடு, மாலையில் கொட்டிலில் வ‌ந்து அம‌ர்ந்து அசைபோடுவ‌து போல‌ ப‌டித்த‌ ப‌ழைய‌ செய்திக‌ளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

அம‌ர‌ர் சுஜாதா கூறிய‌து போல நான்  ப‌டித்த‌ சிறுகதைகளில் ஏதாவது சிலதையாவது என்னால் நினைவு கூற‌ முடிகிற‌தா என்று எண்ணிப் பா‌ர்த்தேன்.

ச‌மீப‌கால‌மாக‌ வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ளில் சிறுக‌தை ஒருப‌க்க‌ம், அரைப்ப‌க்க‌ம் என்று குறுகிப் போய்விட்ட‌தால் ஒன்றும் சொல்லிக் கொள்வ‌தைப்போல‌ இல்லை. மேலும் வெகுஜ‌ன‌ப் ப‌த்திரிகைக‌ள் எல்லாமும்  பேசும்ப‌ட‌ம், பொம்மை, சினிமா எக்ஸ்பிர‌ஸ் போன்ற‌ சினிமா ப‌த்திரிகைக‌ளாக‌ மாறிவிட்ட சூழ‌லில், வார‌ப் ப‌த்திரிகைக‌ள் ப‌டிக்கும் ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டேன். என் வ‌ய‌தும் ஒரு கார‌ண‌ம். ஆன்மீக‌ப் ப‌த்திரிகை ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் திரும்பிவிட்ட‌து. போகிற‌ கால‌த்துக்கு புண்ணிய‌ம் தேடும்‌ ச‌மாச்சார‌ம்.

இல‌க்கிய‌ப்ப‌ணி ஆற்றுவ‌தாக‌ த‌ங்க‌ள் முதுகைத் தாங்க‌ளே த‌ட்டிக் கொள்ளும் சிறு ப‌த்திரிகைக‌ள் ப‌ல வ‌ந்தாலும், அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும்  நீள‌மான‌ சொற்றொட‌ர்க‌ளும், புரிய‌க் கூடவே கூடாது என்று நேர்ந்து கொண்ட‌து போல‌ எழுதும் அவ‌ர்க‌ள் ந‌டையும் திகைக்க‌ வைக்கின்ற‌‌ன‌.

ச‌மீப‌த்தில் ப‌டித்த‌து வாத்தியாரின் 'செட்டிநாட்டு ம‌ண் வாச‌னைக்க‌தைக‌ள்' 3 தொகுப்புக்க‌ளிலும் உள்ள‌ க‌தை‌க‌ள் 60ம் - கையில் இப்போது புத்த‌க‌ம் இல்லாவிடினும் 20 க‌தைக‌ளின் க‌ருவை என்னால் நினைவு ப‌டுத்திக் கொள்ள‌ முடிகிற‌து. அந்த‌ வ‌கையில் சுஜாதாவின் இல‌க்க‌ண‌ப்ப‌டி அவை ந‌ல்ல‌ சிறுக‌தைக‌ள் என்று சொல்ல‌லாம்.'ஆனால் அவை அனைத்தும் ச‌மீப‌மாக‌ப் ப‌டித்த‌வை. என‌வே நினைவில் உள்ள‌ன‌' என்ற‌ வாத‌ம் சில‌ர் முன் வைக்க‌லாம் என்ப‌தால் வாத்தியாரின் க‌தைக‌ளை இங்கு கூறுவ‌தை த‌விர்க்கிறேன்.

முத‌லில் என்னைக் க‌வ‌ர்ந்து ம‌ன‌தில் ப‌திந்த‌ க‌தை, க‌ரிச‌ல் ம‌ண் த‌ந்த‌, பாட்டாளி வ‌ர்க்க‌த்திலிருந்து முளைத்து வ‌ந்த‌ எழுத்தாள‌ர் கி.ராஜ‌நாராய‌ண‌ன் அவ‌ர்க‌ளுடைய‌து.

இதோ அந்த‌க்க‌தைச் சுருக்க‌ம்:

க‌ரிச‌ல்காட்டு கிரா‌ம‌ம் ஒன்றில் நாய‌க்க‌ர் ஒருவ‌ர் வா‌ழ்ந்து வ‌ருகிறார்.அந்த‌ ஊரில்  கோவில் காளை ஒன்று உண்டு. மினுமினுப்பான‌ க‌ரிய‌ தோலுட‌ன் த‌ன் உய‌ர்ந்த‌ திமிலுட‌ன் அது க‌ம்பீர‌மாக‌ ந‌ட‌ந்து‌ செல்வ‌தே ராஜ‌ க‌ம்பிர‌மாக‌ இருக்கும்.அந்த‌ வ‌ட்டார‌த்தில் இருக்கும் எல்லாக் க‌ன்றுக‌ளுக்கும் அந்த‌க் காளையே த‌ந்தை. ம‌க்க‌ளுக்கெல்லாம் அந்த‌ காளையிட‌ம் ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌க்தி. யாரும் அதை எதிர்த்துச் செல்ல‌ மாட்டார்க‌ள் அது வ‌ந்தால் வில‌கி வ‌ழிவிட்டு ஒதுங்கிக் கொள்வா‌ர்க‌ள்.

அதன் உரிமையாளரான நாய‌க்க‌ருக்கு அந்த‌க் காளையின் மீது அபார‌மான‌ பிரிய‌ம். காளை க‌ட‌ந்து செல்லும் போதெல்லாம் வாய் விட்டு அத‌னை வ‌ர்ணிப்பார்.

"அதோட‌ ந‌டைய‌ப் பாருடா, என்ன‌ ராஜ‌‌‌ க‌ம்பீர‌ம்! அத‌னுடைய‌ திமிலைப்பாரு, என்ன‌ உச‌ர‌ம‌ப்பா! தோலுல‌ என்ன‌ மினுமினுப்பு! ஆஹா என்ன‌ ஒரு அற்புத‌மான‌ ப‌டைப்புடா!" இதுபோல‌ வாய்விட்டுப் புக‌ழ்வார்.கேட்டுக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் புன்ன‌கையோடு க‌ட‌ந்து செல்வார்க‌ள். ம‌ன‌திற்குள் "என்ன‌ இந்த‌ நாய‌க்க‌ர், காளை மேல‌ பைத்திய‌மா இருக்காரே" என்று நினைத்துக் கொள்வார்க‌ள்.

இப்ப‌டி இருக்கும் போது, ஓர் இர‌வு  இருட்டில் காளை ப‌டுத்துள்ள‌து தெரியாம‌ல் நாய‌க்க‌ர் அத‌ன் மீது த‌டுக்கி விழுந்து விடுகிறார்.விருட்டென‌ எழுந்த‌ காளை நாய‌க்க‌ரை அல‌ட்சிய‌மாக‌க் கொம்பால் தூக்கி வீசி விடுகிற‌து . முட்புத‌ரில் போய் விழுந்த‌ நாய‌க்க‌ரை ஊர்ம‌க்க‌ள் வீட்டுக்குத் தூக்கி வ‌ந்து  ஆசுவாச‌ப் ப‌டுத்துகிறார்க‌ள். அவ‌ர் கொஞ்ச‌ம் ச‌ம‌நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஒருவ‌ன் கேட்கிறான்:

"இப்ப‌ம் என்ன‌ சொல்லுதீரு?"

சிர‌ம‌த்துட‌ன் எழுந்து அம‌ர்ந்து நாய‌க்க‌ர் சொல்கிறார்:

"அட‌டா!அதுக்கு என்ன‌ வ‌லிமய‌டா! நான் ஒரு 150 ப‌வுண்டு இருப்ப‌ன்ன‌ல்லோ? என்னையே தூசு மாதிரி தூக்கி எறிஞ்சுடுச்சே!"

அடிவாங்கியும் இப்ப‌டி அதைப் புக‌ழ்கிறாரே என்று ம‌க்க‌ள் உள்ளுக்குள் சிரிக்கிறார்க‌ள்.அப்போது கூட்ட‌த்தில் இருந்து ஒருவ‌ன் கூவுகிறான்:

"நாய‌க்க‌ருக்கு தான் ஒரு ப‌சுமாடாப் பொற‌க்க‌லையேன்னு இருக்கு!"

இத்தோடு க‌தை முடியும். அந்த‌க் க‌டைசி சொற்றொட‌ரை புரிந்து கொண்டால், ம‌ன‌திலும் உத‌ட்டிலும் சிரிப்போடு நிறைவு தோன்றும்.

இர‌ண்டாவ‌து க‌தை அம‌ர‌ர் கு.ப‌ ராஜ‌கோபால‌ன் எழுதிய‌து. கு ப‌ ர‌ 'ம‌ணிக்கொடி'க் கால‌ எழுத்தாள‌ர். ம‌னோத‌த்துவ‌த்தைப் பிர‌யோக‌ம் செய்து எழுதிய‌வ‌ர். க‌ண் பார்வை இல்லாத‌வ‌ர்.

அவ‌ருடைய‌ ஒரு க‌தை ஒன்று நினைவுக்கு வ‌ருகிற‌து. அத‌ன் சுருக்க‌ம்:

புதும‌ண‌த் த‌ம்ப‌திய‌ர் ஓர் ஒண்டுக் குடித்த‌ன‌ வீட்டில் குடியிருக்கிறார்க‌ள். எதிர் 'போர்ஷ‌'னில் ஒரு இள‌ம் வித‌வை குடியிருக்கிறாள்.இவ‌ர்க‌ள் இருவ‌ரும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து அவ‌ளுக்கு ம‌ன‌தில் பொறாமைத் தீயை வ‌ள‌ர்கிற‌து. புதும‌ணத் த‌ம்ப‌தியின‌ரின் போர்ஷ‌ன் வாச‌ல் க‌த‌வையே எப்போதும் நோட்ட‌ம் விட்டுக் கொண்டு அம‌ர்ந்திருப்பாள் கைம்பெண்.

உள்ளே க‌ட்டில் ச‌த்த‌ம், வ‌ளைய‌ல் ச‌த்த‌ம், முன‌க‌ல் ச‌த்த‌ம் எல்லாம் கைம்பெண்ணைப் பாடாய் ப‌டுத்தும்.இவ‌ர்க‌ளை 'அந்த‌' ச‌ம‌ய‌த்தில் ஒருத‌ர‌மாவ‌து  பிரிக்க‌ வேண்டும் என்று க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொள்கிறாள்.

அப்ப‌டி ஒரு ச‌ந்தர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. இர‌வு சீக்கிர‌மாக‌ த‌ம்ப‌திய‌ர் க‌ட்டிலில் ப‌டுத்துவிட்ட‌தையும், ஊதுப‌த்தி ம‌ண‌த்தையும் வைத்து அவ‌ர்க‌ள் தாம்ப‌த்திய‌த்தின் எந்த‌ நிலையில் உள்ளார்க‌ள் என்று இங்கிருந்தே அனுமானித்துக் கொள்கிறாள் கைம்பெண். அப்போது அந்த‌ புது மாப்பிள்ளையின் ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் அவ‌னைத் தேடி வ‌ருகிறான். அவ‌னிட‌ம் "அந்தப் போர்ஷ‌ன்தான் க‌த‌வை ப‌ல‌மாக‌த் த‌ட்டுங்கள்" என்று சொல்லிக் கொடுக்கிறாள். அவ‌னும் யோசிக்காம‌ல் த‌ட்டுகிறான். அந்த‌த் த‌ம்ப‌தியின‌ர் வாரிசுருட்டி எழுவ‌தையும், அவ‌ச‌ர‌மாக‌ ஆடை அணிவ‌தையும் , விள‌க்குப் போடுவ‌தையும்,அந்த‌ வெளிச்ச‌த்தில் அந்த‌ப் புதுப்பெண் க‌லைந்த‌ ஆடைக‌ளுட‌ன் ச‌மை‌ய‌ல் அறைக்குள் ஓடுவ‌தைப் பார்த்து ஆன‌ந்த‌ப்ப‌டுகிறாள் கைம்பெண்.

அன்று இர‌வு கைம்பெண் ந‌ன்றாக‌‌ நிம்ம‌தியாக‌த் தூங்கினாள்.

இன்னும் இர‌ண்டு க‌தைக‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. பதிவின் நீள‌ம் க‌ருதி இங்கே நிறுத்திக் கொள்கிறேன். அவ‌ற்றையும் சொல்லுங்க‌ள் என்று யாராவ‌து ஒருவ‌ர் கேட்டாலும் ச‌ர‌க்கை அவிழ்த்து விடுகிறேன், அடுத்த‌ப‌திவில்!

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

கே. முத்துராம‌கிருஷ்ண‌ன்,லால்குடி.
முகாம்:இல‌ண்ட‌ன் மாந‌க‌ர‌ம்.

----------------------------------------------
கி.ராஜராயணன் பற்றிய மேலதிகத்தகவல்களுக்குக் கீழே கொடுத்துள்ள சுட்டியை அழுத்திப்பார்க்கவும்

வாழ்க வளமுடன்!

15 comments:

  1. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என் ஆக்கத்தை வெளியிட்டு மீண்டும் ஆதரவு அளித்த ஐயாவுக்கு வந்தனம். தவறாமல் வாசித்து பின்னூட்டம் இடும் அனபர்களுக்கும் என் வந்தனங்கள்.


    கண்ணன் சீதாரமன் அவர்கள் மீண்டும் வகுப்பறைக்கு வந்து பின்னூட்டம் இட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.அவர் முற்றிலும் நலம் பெற வாழ்த்துகிறேன்;இறைவனை வேண்டுகிறேன்.


    ஐயர் அவர்களின் குறள் தேர்வுகள், பாராட்டா, விமர்சனமா அல்லது சும்மனாச்சுக்குமா..?

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா கும்பிடுதங்கோ !

    நலம் பெற பிராத்தனை செய்த
    ஐயா ஐயர் வாழ் ,

    பாசத்திற்கு உரிய ஐயா
    ஸ்ரீ முத்து ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் சகல ஜீவன்களுக்கும் முதற்கண் நன்றியுடன் கூடிய வணக்கம்.

    ReplyDelete
  4. உண்மை தான் இளங் காலை மற்றும் பசு மாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
    நல்லப் பதிவு.

    நன்றி...

    ReplyDelete
  5. ஐயா!

    நம்மலுடைய மதிப்பு நமக்கு தெரிய வில்லை எனலாம். கண்ணால் கண்ட காட்சியை கூறுகின்றேன் .

    திருச்சில் உள்ள 'ஆத்மா ஆஸ்பத்திரி' என்று கூறும் நரம்பியல் மற்றும் மனதத்துவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற லண்டன் மாநகரில் இருந்து ஒரு நோயாளி வந்து இருந்தார் .

    அவரிடம் விசாரித்த பொழுது சொன்னார் இளம் வயது ஆன நோயாளியை லண்டன் மாநகரில் நிறைய இடத்தில காண்பித்தும் குணம் ஆக வில்லை .

    மேற்கொண்டு சிகிச்சை பெற விசாரித்த பொழுது இங்கு நல்ல முறையில் சிகிச்சை தருவதாக கூறினார்கள் அதனால் இங்கு வந்தோம் என்றார்கள்.

    திருச்சியில் உலக தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை தந்து வெற்றியும் என்னில் அடங்கா வண்ணம் பெறுகின்றார்கள் என்பது தான் ஆட்சிரியதீர்க்கு உள்ள விசையம்.

    இந்தியா ஏழை நாடு என்கின்றனர்?

    அருள் மிகு ஸ்ரீ பத்மநாப கோவிலில் சமிபத்தில் நீண்ட நெடு நாளாக பூட்டி கிடந்த ஒரு அறையை திறந்து பார்த்த பொழுது ஒரு லட்சம் கோடி மதிப்பில் ஆன ஆபரணங்கள் இருப்பதாக செய்தி வந்தது .

    தற்பொழுது பாது காப்பை கூட பலபடுத்தி உள்ளார்கள்.

    ஒரு அறையில் மட்டும் இவ்வளவிகானம் என்றால் அனைத்து அறைகளையும் கணக்கிட்டால் எவ்வளவி கானம் வரும் என்று அந்த 'ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கு' தான் தெரியும்.

    ReplyDelete
  6. ஐயா

    இரண்டு கதையை படிக்கும் பொழுது கிராமம் மற்றும் நேரில் கண்ட ஒரு மனதிருப்தியை தந்தமைக்கு நன்றிகள் பல கோடி.

    ReplyDelete
  7. யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் கல்லூரியில் இருந்த பொழுது படித்தேன். கிரியா யோகம் பற்றி வியந்தேன். ட்ரென்ஷிடென்டல் மெடிடேசன் கோர்ஸ் விரும்பியவர்களுக்கு கல்லூரியில் சில ப்ரொபசர்கள் எடுத்தார்கள். அதனால் நன்மையோ தீமையோ கிடைத்ததாக தெரியலே. வாழ்க்கை எப்போதும் போல நிறைந்த டென்சன்களோடு போகிறது. நீங்கள் ஏன் மற்ற யோகங்களை பற்றி கம்பேர் செய்து எழுதவில்லை?

    ReplyDelete
  8. அன்பர் கே.எம்.ஆர்.அவர்களே! கதைகள் எல்லாம் சரிதான். ஆனால், நான் ஒன்று சொன்னால் வருத்தப்பட மாட்டீர்களே! நல்ல பல விஷயங்களை அறிந்தவர் நீங்கள்; இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் போன்றவர்களுடைய ஆன்மீக விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கக்கூடிய நீங்கள்; கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பாரத்தசாரதி, ர.சு.நல்லபெருமாள், தீபம் பார்த்தசாரதி அவ்வளவு ஏன், நீங்கள் புகழ்ந்திருக்கும் கி.ராஜநாராயணன், கு.ப.ரா. உட்பட பலரின் நல்ல பல கதைகள் இருக்கும் போது வக்கிர எண்ணங்களைக் கொண்ட இதுபோன்ற கதைகள் உங்கள் நினைவுக்கு வந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. எங்கோ, கடல்கடந்த ஊரில் இருக்கும் தாங்கள், தமிழ் கதைகளில் உன்னதமான பல கதைகள் இருக்கிறதல்லவா அவற்றை நினைவில் தாங்கிக்கொண்டு இருங்களேன். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டுவிட்டதாகத் தாங்கள் கூறியுள்ளதற்கு அவை உடன்பாடானவைகளாக இருக்குமே! தவறாக எண்ணாதீர்கள். உங்கள் மீதுள்ள நல்லெண்ணத்தாலும், உரிமையாலும் எழுதுகிறேன்.

    ReplyDelete
  9. ஒளவையாரின் குறுகத் த‌றித்த குறள் போல் இரு சிறு கதைகளை சுருக்கித் தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. குட்டென்றாலும் குட்டு மோதிரக் கையால் அல்லவா குட்டு!தங்கள் அறிவுறைப்படியே நடந்து கொள்கிறேன் தஞ்சாவூர் கனவானே!

    ReplyDelete
  11. Blogger தமிழ் விரும்பி said...
    உண்மை தான் இளங் காலை மற்றும் பசு மாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
    நல்லப் பதிவு.
    நன்றி...
    எழுதுகிறேன்.////

    சிறு திருத்தம் நண்பரே! காலை மாடல்ல - காளை மாடு!

    ReplyDelete
  12. //////Blogger krishnar said...
    ஒளவையாரின் குறுகத் த‌றித்த குறள் போல் இரு சிறு கதைகளை சுருக்கித் தந்தமைக்கு நன்றிகள்.//////

    ஒளவையாரின் குறுகத் த‌றித்த குறளா? வள்ளுவரின் குறுகத்தறித்த குறள் என்று மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே!

    ReplyDelete
  13. இரண்டு கதைகளும் கொஞ்சம் நாசூக்காதான் இருக்கு...அடுத்த ரெண்டு எப்போ?

    ReplyDelete
  14. உடம்பைப் பார்த்துக்கோங்க கண்ணன்..

    ReplyDelete
  15. அன்புடன் வாத்தியாருக்கு,
    எனது வசன அமைப்புத்தான் ஏற்பட்ட தவறுக்குக் காரணம்.
    வள்ளுவரின் குறளை சிலாகித்து ஒளவையார் தான்,"குறுகத் தறித்த குறள்"
    எனப் பாடினா.வசனங்களில் மயக்கம் இருக்கக் கூடாதென்பது என் எண்ணம்.
    இருந்தும் எனது வசன அமைப்பு சரியாக அமையவில்லை.
    எனது வசன அமைப்புத்தான் ஏற்பட்ட தவறுக்குக் காரணம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com