மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.11

சேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை!

---------------------------------------------------------------------------------------
சேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை!

காலையில் கதவைத்திறந்த மாணிக்கவாசகம் முதலியார் அய்யாவுக்கு இப்படி ஒரு காட்சி காத்திருக்கிறது என்பதே  தெரியாது.வீட்டுத் தலைவாசலுக்கு எதிப்புறம் கசாப்புக்கடை புதிதாக முளைத்து இருந்தது.இரண்டு நாட்களுக்கு
முன்னரே ஒரு மரத்தின் அகலமான அடிப்பகுதியை மாட்டு வண்டியில் கொண்டு வந்து அங்கே உருட்டிவிட்டுப் போனதைப் பார்த்திருந்தார். அப்போது அது மண்டையில் உறைக்கவில்லை.இரத்தமும் சதையுமாக ஓர் ஆடு
தோல் உரிக்கப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளதையும், மற்றொரு ஆடு கழுத்து அறுபடத் தயாராக நிற்பதையும்  வாசலில் நின்று பார்த்தார்.

" உங்கள் கழுத்தை யாராவது இப்படி அறுத்தால் தேவலையே!" என்று முணுமுணுத்தது அவர் உதடு.

"சைவ‌முதலி, சைவமுதலி என்று இதுநாள் வரையும் பீற்றிக் கொண்டோமே. நாம் அசைவம் சாப்பிடாமல் மட்டும்  இருந்தால் போதுமா? இந்தக் கொலை பாதகத்தைத் தடுக்க வேண்டாமா? அதுவும் தின‌ச‌ரி இந்த‌க் கொலையை
க‌ண்ணுக்கு நேராக‌ வேறு பார்க்க‌வேண்டுமா?என் வீட்டுவாச‌ல்தான் கிடைத்த‌தா?" ம‌ன‌ம் கிட‌ந்து அடித்துக்  கொண்ட‌து முத‌லியாருக்கு. என்ன‌ செய்வ‌து என்றுதான் புரிய‌வில்லை.

அப்போதுதான் அடுத்த‌ வீட்டு ரா‌க‌வேந்திர‌ ராவ் த‌லையை நீட்டி காம்ப‌வுண்ட் சுவ‌ர் அருகில் வ‌ந்து நின்று  'முத‌லியார்' என்று விளித்தார்.அருகில் சென்ற‌ முத‌லியாரிட‌ம், "என்ன‌ க‌ர்ம‌ம் சுவாமி இது!? யார‌வ‌ன் ?

யாரைக்கேட்டுண்டு க‌சாப்புக் க‌டையை இங்கே போட்டான்? நீர் 'அப்ஜெக்ஷ‌ன்' செய்ய‌லையா‌?" என்றார்.

"என்னை பெர்மிஷ‌ன் கேட்டாதானே நான் அப்ஜெக்ஷ‌ன் ப‌ண்ண‌?அவ‌னா கொண்டு போட்டிருக்கான் திடீர்னு  காலைல‌ க‌த‌வைத் திற‌ந்தா‌ இப்ப‌டி ஒரு க‌ண்றாவி? என்னை என்ன‌ ப‌ண்ண‌ச் சொல்கிறீர்?"

"நாலு பேரைக் கூட்டிண்டுபோய் அவ‌னைக் கேளுமேன்!"

"ச‌ரி! நீரும் ஒரு ஆளா வ‌ரீரா?" என்று முத‌லியார் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் ராவ் ஜூட் விட்டாயிற்று.

அப்போதுத‌ன் அந்த‌ இளைஞ‌ர் முத‌லியார் விட்டு வாயிலைக் க‌ட‌ந்து சென்றார். நெற்றி நிறைய‌ திருநீறு! தூய‌  வெள்ளை வேஷ்டி, மேலே உத்த‌ரீய‌ம்! கையில் பூக்குட‌லை,அது நிறை‌ய‌ வ‌ண்ண‌ வ‌ண்ண‌ பூக்க‌ள்.மைதா‌ன‌த்திற்கு
எதிர் வீட்டில் சிறிய‌ ஆசிர‌ம‌ம் போல‌ அமைத்து குருமார்க‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு காலை மாலையிலும் எளிய‌  வ‌ழிபாடு செய்து கொண்டு, மாலை நேர‌த்தில் ஒரு ம‌ருந்த‌க‌ம் ந‌ட‌த்திக் கொண்டு, த‌ன் ஜீவ‌ன‌த்திற்காக‌ அலுவ‌ல‌க‌
வேலைக்குச்  சென்று கொண்டு, ம‌னைவி ம‌க்க‌ளுட‌ன் வாழ்ந்தாலும் துற‌வியைப்போல‌ ஒரு தோற்ற‌ம் அளித்துக் கொண்டு..அந்த‌ இளைஞ‌ர் ச‌ற்று வித்தியாச‌மான‌வ‌ர்தான். அந்த‌ப் ப‌குதியில் உள்ள‌ ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர் "ஒரு ரூபாய் டாக்ட‌ர்!"

இப்போது முத‌லியாரும் அவ‌ரை அந்த‌ப் பெய‌ராலேயே கூப்பிட்டார்!

"ஒரு ரூபாய் டாக்ட‌ர் சார்! பா‌ருங்க‌ள் இந்த‌ அநியாய‌த்தை..!" என்று க‌சாப்புக் க‌டையை சுட்டிக்காட்டினார்.

இளைஞ‌ர் க‌சா‌ப்புக் க‌டையை அணுகி "என்ன‌ப்பா இது? ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் க‌சாப்புக்க‌டையை போட்டு  இருக்கியே!? வேறு ஒதுக்குபுற‌மா போட்டுக்கோயேன்!" என்றார்.

க‌சாப்புக்க‌டை பாய் க‌த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டிக் கொண்டே உறுமினான்: "யோவ் அய்ய‌ரே!  உன் வேலையைப் பாத்துட்டு போய்யா!"

"முத‌லியார்வாள்! இர‌ண்‌டு நாள் பொறுத்துக் கொள்ளுங்க‌ள்.க‌ட்டாய‌ம் இந்த‌க் க‌டையைத் தூக்க‌வைப்போம்.எதுவும் ச‌ண்டைக்குப்போய் விடாதீர்க‌ள். முறையா போய் காரிய‌த்தை முடிப்போம். சாதார‌ண‌மா பேசின‌த்துக்கே க‌த்தியை  ஆட்டிப் பேச‌றான்.கோப‌தாப‌த்தோட‌ பேசினா எல்லாத்தையும் திசை திருப்பி  விட்டு விடுவான்! என‌வே கொஞ்ச‌ம் அமைதியா இருங்கோ. நான் இதே காரிய‌மா எப்ப‌டி செய்ய‌ணுமோ அப்ப‌டி செய்வேன். பொறுமைதான் முக்கிய‌ம் ச‌ரியா?" என்றான் ஒத்த‌ரூபா டாக்ட‌ர். 'ச‌ரி' என்றார் முத‌லியார்.

நேராக‌ப்போய் சானிட‌ரி இன்ஸ்பெக்ட‌ரை ச‌ந்திதான் ஒரு ரூபா‌ய்.விஷ‌ய‌த்தை ஆர‌ம்பிக்குமுன்ன‌ரே "அந்த‌  க‌சாப்புதானேசார்! அவ‌ங்‌க‌ளுக்கெல்லாம் ஒரு பைனான்சிய‌ர் இருக்கான் சார்! அந்த‌ ஆள் எம் எல் ஏக்கு  கையாள். எம் எல் ஏ அவ‌ர்க‌ள் க‌ம்யூனிடி சார்! நான் சாதார‌ண‌ அர‌சு ஊழிய‌ன்! என்னால் ஒன்றும் செய்ய‌  முடியாது சார்" என்றார் சானிட‌ரி.

"வெளிப்ப‌டையா சொன்ன‌துக்கு ந‌ன்றி!" என்றான் ஒரு ரூபாய். சா‌னிட‌ரியிட‌ம் கொஞ்ச‌ம் பேசி அந்த‌  பைனான்சிய‌ரின் பெய‌ர் விலாச‌த்தைத் தெரிந்து கொண்டான்.

பைனான்சிய‌ரைத் தேடிப்போனான்.அது ஒரு சைக்கிள் ரிப்பேர் க‌டை. அத‌ன் பின்னே இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌  குடியிருப்பு, தைக்கால்.இவ‌ன் போன‌ச‌ம‌ய‌ம்  அந்த‌ ஆள் க‌டையில் இல்லை.க‌டைவாச‌லில் எப்போதுவ‌ருவார்  என்றெல்லாம்  விசாரித்துக் கொண்டு இருந்த‌ ச‌ம‌ய‌ம் தைக்காலில் இருந்து ஒரு வ‌ய‌தான‌ இஸ்லாமிய‌ மூதாட்டி  வெளிப்ப‌ட்டு இவ‌ன் பேசிக்கொண்டு இருந்த‌தையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"அடேய்!மொம்ம‌து! சாமிக்கு ஒரு நாக்காலிய‌ப் போடுடா! நிக்க‌ வெச்சிப் பேச‌றியே சைத்தான்! போய் நிஜாமை  கூட்டியாடா! டூரிங் டாக்கீஸு வ‌சூலுக்குப் போயிருப்பான்!" என்று மூதாட்டி குர‌ல் கொடுத்தாள்.

க‌டைப்பைய‌ன் ஒரு நாற்காலியை போட்டுவிட்டு  சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

ப‌த்து நிமிட‌த்தில் நிஜாம் என்ற‌ பைனான்சிய‌ரும், க‌டைப்பைய‌னும் திரும்பினார்க‌ள்.

நிஜாமின் தோற்ற‌மே யாருக்கும் ப‌ய‌ம் கொடுக்கும். ஆஜானுபாஹு! சிவ‌ந்த‌ க‌ண்க‌ள்.கைலியின் மேல் க‌ட்டிய‌  ப‌ச்சை பெல்ட் ம‌ஸ்லின் ஜுப்பா!

வ‌ந்த‌வுட‌னேயே,"என்னா?" என்றான் நிஜாம்.

ஒருரூபாய் க‌சாப்புக்க‌டையைப் ப‌ற்றிச் சொன்னான்.

"அது உங்க‌ சொந்த‌ இட‌மா?"

"இல்லை"

"உங்க‌ வீட்டுக்கு எதிர்ல‌ இருக்கா க‌டை?"

"இல்லை"

"அப்ப‌ நீங்க‌ ஏன் த‌லையிட‌றீங்க‌?"

"எந்த‌ வீட்டுக்கு எதிர்ல‌ இருக்கோ அந்த‌ வீட்டுக்கார‌ர் சார்பாக‌ வ‌ந்துள்ளேன். மேலும் எங்க‌‌ள் ஆஸ்ர‌ம‌த்திற்கு  அருகிலும் இந்த‌க் க‌சாப்புக்க‌டை அமைந்துள்ள‌து.மாலைநேர‌த்தில் ஆஸ்ர‌ம‌த்திற்கு ம‌ருந்துக்காக‌ ம‌க்க‌ள் கூடும்
இட‌ம் அது. இந்த‌க்க‌டையால் சுகாதார‌‌க் கேடு ஏற்ப‌டும் என்று நினைக்கிறேன்...."

"ச‌ரிதாங்க‌!உங்க‌ நியா‌ய‌ம் உங்க‌ளுக்கு... எங்க‌‌ நியாய‌ம் எங்க‌ளுக்கு...க‌டையை எடுக்க‌ முடியாது. ஆன‌தைப்  பார்த்துக்கொள்ளுங்க‌...."

"நிஜாம்" என்று ஒரு இடிக்குர‌ல் கேட்ட‌து. திரும்பிப் பார்த்தால் அந்த‌ மூதாட்டி நின்று கொண்டிருந்தார்க‌ள்.

"யாரிட‌ம் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று தெரியுமா? டாக‌ட‌ர் ஐயா யார் தெரியுமா? நீயெல்லாம் காசைத்  துற‌த்திக் கொண்டு வ‌சூலுக்கு மாலை பூரா ‌சுத்த‌ற‌ நேர‌த்தில‌ ஐயா தான் இந்த‌ எட்டுப்ப‌ட்டி கிராம‌த்துக்கும் ம‌ருந்து
கொடுக்கிறார்க‌ள். இந்த‌த் தைக்கால்ல‌ இருக்கிற‌ நாங்க‌ எல்லாம் காய்ச்ச‌ல் க‌ருப்புன்னா குழ‌ந்தையைத்  தூக்கிக்கிட்டு சாமிக்கிட்டாதான் ஓடுதோம். நீயா நின்னு பாக்க‌ற‌? த‌ன் குழ‌ந்தையா நினைச்சி ஊர் குழ‌ந்தைக‌ளை  வைத்திய‌ம் பாக்கும் சாமியையா எதுத்துப் பேச‌றே‌? அவ‌ங்க‌ சொல்ற‌தைச் செஞ்சு கொடு.ஆமா!" என்றாள் மூதாட்டி.

நிஜாம் பெட்டிப் பாம்பாய் அட‌ங்கிப் போனான். "நீங்க‌ போங்க‌ சார்! ரா‌வுக்கெல்லாம் க‌டையிருக்காது.எடுக்க‌ச்  சொல்லிட‌றேன்" என்றான்.

"பெரிய‌ம்மா‌ உன‌க்கு என்ன‌ உற‌வு?" என்றார் ஒரு ரூபாய். "என்‌ பாட்டி சார்!வாப்பாவைப் பெத்த‌வ‌ங்க‌‌" என்றான் நிஜாம்.

சொன்ன‌தைப் போல‌வே ம‌றுநாள் காலை அங்கே க‌சாப்புக்க‌டை இல்லை.

ச‌ட்ட‌ம், நியாய‌ம், த‌ர்ம‌ம் எல்லாமும் ஓர் எல்லையுட‌ன் நின்றுவிடும். அன்புட‌ன் செய்யும் சேவைக்கு என்ன‌ ச‌க்தி  என்ப‌தை ஒருரூபா‌ய் புரிந்துகொண்ட‌ நிக‌ழ்ச்சி இது! அன்பும் ந‌ல்லெண்ண‌மும்தான் உல‌கை வெல்லும் ச‌ற்று  தாம‌த‌ம் ஆனாலும்..!

பிகு: இந்த‌ உண்மை நிக‌ழ்ச்சியில் வ‌ரும் ஒரு ரூபாய் டாக்‌ட‌ர் அடியேன்தான்

கே. முத்துராம‌கிருஷ்ண‌ன், லால்குடி.
முகாம்: இல‌ண்ட‌ன் மாந‌க‌ர்


வாழ்க வளமுடன்!

13 comments:

  1. உண்மை நிகழ்வு இது ஒரு மனம் நெகிழும் நிகழ்வே...
    ///அவ‌ங்க‌ சொல்ற‌தைச் செஞ்சு கொடு.ஆமா!" என்றாள் மூதாட்டி.

    நிஜாம் பெட்டிப் பாம்பாய் அட‌ங்கிப் போனான். "நீங்க‌ போங்க‌ சார்! ரா‌வுக்கெல்லாம் க‌டையிருக்காது.எடுக்க‌ச் சொல்லிட‌றேன்" என்றான்.

    "பெரிய‌ம்மா‌ உன‌க்கு என்ன‌ உற‌வு?" என்றார் ஒரு ரூபாய். "என்‌ பாட்டி சார்!வாப்பாவைப் பெத்த‌வ‌ங்க‌‌" என்றான் நிஜாம்.////
    இதில் இந்த இருவரும் அவர்கள் இருவருக்குள்ளும் உள்ள அன்பு, நன்றியுணர்வு, இந்த உலகத்தில் வாழ நிஜாம் நடந்துச் செல்லும் பாதை எதுவானாலும். அவனும் ஒரு நல்ல மனிதன் என்பதை நிரூபித்து விட்டான். தனது பாட்டியின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட பாங்கு... அருமை.... அருமை.
    அடுத்தவர்களுக்காக வாழும் போது தான் மனம் துணிவு பெறுகிறது.... முகத்தில் ஒளி பிறக்கிறது... பிறருக்கு செய்த நன்றி சமூகத்தில் மதிப்பை பெற்றுத் தருகிறது என்பது நிரூபணம். என்ன? உரிமையோடு ஒத்த ரூபாய் டாக்டர் கதையில் விளிக்கப் படுகிறார் என்று யோசித்ததற்கு விடை கடைசியாக கிடைத்தது. அவர் தான் உண்மைக் கதையை கதைத்தது... என்பது... உண்மையில் சூப்பர். நல்ல நினைவு. பாட்டிச் சொல்லைத் தட்டாத பேரன் அருமை.

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம் கிருஷ்ணன் ஐயா,

    //அன்புட‌ன் செய்யும் சேவைக்கு என்ன‌ ச‌க்தி என்ப‌தை //

    மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்..

    புலால் மறுத்தல் என்பது அனைவரும்
    கைக்கொள்ள வேண்டிய ஒரு அருமையான நெறி..

    தன் ஊண் பெருக்கற்கு தான் பிறிது
    ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

    என்று வான்புகழ் வள்ளுவன் அழகாக
    சொல்லியிருக்கிறானே ?

    நன்றி..

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் .
    அய்யா அவர்களின் சேவை தொடர வேண்டும்.
    இந்த காலத்தில் உங்களை போன்ற மனிதரை பார்ப்பது அரிதாகிவிட்டது

    நீங்கள் கூறிய "அன்பும் ந‌ல்லெண்ண‌மும்தான் உல‌கை வெல்லும் ச‌ற்று தாம‌த‌ம் ஆனாலும்"
    என்பது தான் முற்றிலும் உண்மை
    நன்றி.

    ReplyDelete
  4. உண்மைக்கதையை வெளியிட்டு ஆதரவு அளித்த ஐயாவுக்கும்,பின்னூட்டம் இட உள்ள அன்பர்களுக்கும் என் வந்தனங்கள்.


    துணிந்து அந்தப் படத்தை வெளியிட்டு உள்ளீர்கள் ஐயா!சிலராவது முகம் சுளிக்கக்கூடும்.பார்ப்போம்.

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் திரு ஒரு ரூபாய் டாக்டர்
    லண்டனில் நலமாக இருக்ரீர்கள்.. சந்தோசம்.. எப்போதுமே ஒரு தன்னலம் கருதா சேவையல் பலவிதமான நன்மைகள் நம்மை அறியாமல் வரும்..
    பதிவு அருமை.

    ReplyDelete
  6. முதல் மாணவன்..
    உள்ளேன் ஐயா!
    அட அந்த டாக்டர் நீங்க தானா...அப்போ ஆசிரியர் வேலைய ராஜினமாவா?
    //அன்பும் ந‌ல்லெண்ண‌மும்தான் உல‌கை வெல்லும் ச‌ற்று தாம‌த‌ம் ஆனாலும்..!//

    தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்
    என்பதினை அழகாக சொல்லியுள்ளீர்கள்..

    ReplyDelete
  7. அய்யா..

    தங்களைப் பற்றி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு..

    உங்களுக்கு நன்றிகள்..

    கடவுள் உங்களுக்கு மேன்மேலும் சிறப்பையும், வளத்தையும், நலத்தையும் கொடுப்பாராக.

    ReplyDelete
  8. நல்ல அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட KMRK க்கு நன்றி..
    ராவ் ஜூட் விட்டவுடன் தொடரும் பாராவிலே ஒரு ரூபா டாக்டருக்குக் கொடுக்கப்பட்ட
    இன்ட்ரோ பில்ட்-அப் ரொம்ப தூக்கலா இருக்கேன்னு நினைச்சேன்..ஆனா அடுத்தடுத்து
    அந்த டாக்டரை அவன் இவன் ன்னு ஏக வசனத்தில் தூக்கி போட்டு இமேஜை செம டேமேஜ்
    பண்ணிட்டாரேன்னு நினைச்சேன்..தலைவர் KMRK தான் அதுன்னு கடைசிலேதான் தெரிஞ்சுது..
    நல்ல narration ..

    ReplyDelete
  9. வணக்கம் வாத்தியார் ஐயா!

    நீண்ட நெடு நாளைக்கு அப்புறம் வகுப்பிற்கு வந்துள்ளேன் என்று கூறு வதை காட்டிலும்
    மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளேன் என்று கூறுவது தான்நூத்துக்கு நூறு உண்மை ஐயா .

    ReplyDelete
  10. ஐயா!

    சூரிய திசை ஆரம்பமே சும்மா பட்டையை கிளப்புது!

    பிறந்தது முதல் பெரிய அளவில் ஆஸ்பத்திரியில் படுக்காதவன்
    சூரிய திசையின் ஆரம்பத்தில் ஒன்றிற்கு மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டது ஐயா,

    இன்னும் எங்கு எங்கு எல்லாம் படுக்க வைக்க போகின்றதோ இன்னும் என்ன என்னலாமோ நடக்க போகின்றது தெரிய வில்லை ஐயா.

    படைத்தவனுக்கே வெளிச்சம் ஐயா.

    ReplyDelete
  11. நலம் பெற்று தோழர் கண்ணன்
    வலம் வரும் இந்த வகுப்பறையில்

    பிரார்த்தனை செய்கிறோம்
    பிறர் நலம் விரும்பம்நல்லுள்ளத்திற்கு

    பாண்டிய நாட்டை சேர்ந்ததினாலல்ல
    பாரதம் கடந்தாலும் நல்ல

    பண்பை கொண்டவர் என்பதினால்..
    பாசமுடன் வாழ்த்துக்களும்வணக்கமும்

    வழக்கம் போல் குறள் சிந்தனை இந்த
    வகுப்பறையில் தோழர்களுடன் நாமும்

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனி இருப்ப காய்கவர்ந்தற்று

    ReplyDelete
  12. /////Blogger kannan said...
    வணக்கம் வாத்தியார் ஐயா!
    நீண்ட நாளைக்கு அப்புறம் வகுப்பிற்கு வந்துள்ளேன் என்று கூறுவதைக் காட்டிலும்
    மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளேன் என்று கூறுவதுதான் நூத்துக்கு நூறு உண்மை ஐயா /////.

    முருகப்பெருமான் தன் பக்தர்களைக் கைவிட மாட்டார். அவருக்கு நன்றி சொல்லுங்கள்

    ReplyDelete
  13. Blogger kannan said...
    ஐயா!
    சூரிய திசை ஆரம்பமே சும்மா பட்டையை கிளப்புது!
    பிறந்தது முதல் பெரிய அளவில் ஆஸ்பத்திரியில் படுக்காதவன்
    சூரிய திசையின் ஆரம்பத்தில் ஒன்றிற்கு மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டது ஐயா,
    இன்னும் எங்கு எங்கு எல்லாம் படுக்க வைக்க போகின்றதோ இன்னும் என்ன என்னலாமோ நடக்க போகின்றது தெரிய வில்லை ஐயா.
    படைத்தவனுக்கே வெளிச்சம் ஐயா./////

    தண்டாயுதபாணியின் பக்தர்களுக்கு அவன் துணை உண்டு. துணிவோடு இருங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com