மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.12

Short Story நேர்மைக்குக் கிடைத்த பரிசு!

                                                        
தினமும் ஜோதிடம், எண் கணிதம் என்று படித்துக் கொண்டிருந்தால் அலுத்து விடாதா? உங்கள் மொழியில் சொன்னால் போரடிக்காதா? ஆகவே ஒரு
மாறுதலுக்காக அடியவன் எழுதிய சிறுகதை ஒன்றை பதிவிட்டிருக்கிறேன். சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியான கதை இது. நீங்களும் படித்து மகிழ அக்கதையை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++
Short Story நேர்மைக்குக் கிடைத்த பரிசு!
                                           
"வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே"

என்று பாடிக்கொண்டிருந்த பண்பலை வானொலியின் ஒலியை, வீட்டிற்குள் யாரோ வருவதை உணர்ந்த அண்ணாமலை செட்டியார் சற்றுக்குறைத்தார்.

வந்தவர், வில்லிவாக்கம் வேலாயுதம் செட்டியார். சில பேர் அவரை வேஸ்ட் வேலாயுதம் என்பார்கள். அவர் திருப்பூரில் இருந்து பனியன் கட்டிங் வேஸ்ட்
துணிகளைப் பெருமளவில் கொள்முதல் செய்து, சென்னையில் உள்ள பல தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருவதால், அந்த அடையாளப் பெயர்.

இருவரும் ஒருவருக்கொருவர் சைகையால் வரவேற்பு சொல்லிக் கொள்ள, அங்கே இருந்த நாற்காலியில் வேலாயுதம் செட்டியார் அமர்ந்தார்.

அதற்குள் பாடல் அடுத்த வரிகளைத் தொட்டிருந்தது.

"குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்"

பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று வானொலிப் பெட்டியை அண்ணாமலை அண்ணன்  அனைத்தார்.

"நான் வரும்போது தகுந்த மாதிரித்தான் பாடிக்கிட்டிருக்கு அண்ணாமலை" என்று சொல்லித் தன் பேச்சைத் துவங்கினார் வேலாயுதம் செட்டியார்.

"சொல்லுங்கண்ணே, அதிகாலை நேரத்திலேயே வந்திருக்கீக, ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஆமாப்பா, முக்கியமான விஷயம்தான். உன் மூத்த பொண்ணுக்கு ஒரு கல்யாணத் தாக்கலோட வந்திருக்கேன்."

"நல்லதண்ணே. அவளுக்கும் இருபத்திமூனு வயசாகுது. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஒருத்தர் வீட்ல ஒப்படைச்சா எனக்கும் கொஞ்சம் சுமை குறையும். நல்ல இடமாயிருந்தா சொல்லுங்கண்ணே!"

வரனைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார் வேலாயுதம். திருப்பணிச் செம்மல் தியாகராஜன் செட்டியாரின் மகனாம். ஒரே பையனாம். அமெரிக்காவில்  எம்.எஸ் படிப்பை முடித்துவிட்டானாம். அடுத்தமாதம் திரும்பி வருகிறானாம். வந்தவுடன் முதல் வேலையாக அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமாம். வண்டலூரில் உள்ள கார் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தங்களுடைய தொழிற்சாலையில் தன் தந்தைக்கு உதவியாகப் பணிபுரியப் போகின்றானாம். ஃபோர்டு, ஹூண்டாய், மாருதி போன்ற மிகச் சிறந்த கார் கம்பெனிகளுடன் பெரிய அளவில் வரவு செலவு உண்டாம். அடையார் க்ரீன்வேய்ஸ் சாலையில் பத்து மனை இடத்தில் பெரிய பங்களா உள்ளதாம். தேனாம்பேட்டையில் பெரிய நிதி நிறுவனம் ஒன்றும் உள்ளதாம். சென்னையில்; மட்டும் நான்கு இடங்களில் பெரிய அளவில் சொத்துக்கள் உள்ளதாம். மொத்தத்தில் இருநூறு கோடிக்குமேல் பணம் தேறுமாம். மிகவும் அழகான, படித்த, பெண் மருமகளாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்களாம். அந்தத் தகுதி அண்ணாமலையின் மகளுக்கு உள்ளதால் பேசி முடிக்கலாம் என்று வந்ததாகச் சொன்னார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டத்தில் முதற்த்தகுதி பெற்றுத் தேறியவள் என்பதாலும், அழகான, சற்று உயரமான, களையான
தோற்றத்துடன் கூடிய பெண் என்பதாலும் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்ற மேலதிகத்தகவலையும் சொல்லி வைத்தார்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணாமலை அண்ணன், அவர் பேசி முடித்தவுடன், ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்:

"அண்ணே, விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். அது பெரிய இடமாகத் தோன்றுகிறது. எனக்கு ஒத்து வராது. விட்டு விடுங்கள்"

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? சட்டியில் வேண்டுமென்றால் பெரியது, சின்னது என்ற பேதம் இருக்கலாம், செட்டியார்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் 
கிடையாது. எல்லோரும் சமமானவர்கள்தான். எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கும். எல்லோருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள்தான்.
காலப் போக்கில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்குமே தவிர, குடும்பப் பெருமைகளில், பாரம்பரியத்தில் ஒரு வித்தியாசமும் இருக்காது. ஊரில் உங்கள் வீட்டிற்கு சைகோன் சாத்தப்ப செட்டியார் வீடு என்ற பெருமை உண்டு தெரியுமல்லவா? ஒரு காலத்தில் உங்கள் அய்யா கொடிகட்டிப் பறந்தவர் அதை மறந்து  விடாதே!"

"அதெல்லாம் கவைக்கு உதவாதண்ணே! என்னுடைய இன்றைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். பத்து கடைகளுக்கு கணக்கு எழுதிக்கொடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறேன். கணக்கு எழுதுவதையும், கணினியில் வேலை செய்வதையும் நன்றாகக் கற்றுகொண்டு செய்வதால் ஜீவனம் நடக்கிறது. வாடகை
வீட்டில் குடியிருக்கிறேன். வாகனம் என்ற பெயரில் ஒரு பழைய டி.வி.எஸ் பிஃப்டி  வண்டியை மட்டும் வைத்திருக்கிறேன். வீட்டில் வேலைக்கு ஆள்
கிடையாது. எல்லா வேலைகளையும் என் மனைவிதான் செய்கிறாள். சேமிப்பும் பெரிய அளவில் கிடையாது. மொத்தம் 3 பெண் குழந்தைகள். வடபழநி ஆண்டவன் அருளால் மூன்று பெண்களும் நன்றாகப் படித்து விட்டார்கள். நல்ல பிள்ளைகள். குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள். அது ஒன்றை மட்டுமே  நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன். நடுத்தரக் குடும்பமாக இருந்தால் சொல்லுங்கள். பெரிய இடமெல்லாம் வேண்டாம். அவர்களுக்குத் தடுக்குப்போட  என்னால் முடியாது!"

'நீ ஒன்றும் தடுக்கெல்லாம் போட வேண்டாம். வந்தால் போனால் தங்குவதற்கு உன் வீட்டில் ரத்தினக் கம்பளம் விரிப்பதற்கு அவர்கள் தயார். செட்டியார் உன்  பெண்ணைப் பார்த்துவிட்டார். அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. மஹாலெக்ஷ்மி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னார். அவர் சொல்லித்தான் நான் திருமணம் பேச வந்துள்ளேன்.

"பெண்ணைப் பார்த்துவிட்டாரா? எங்கே வைத்துப் பார்த்தார்"

"மூன்று நாட்களுக்கு முன்பு, நான்தான் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பித்தேன். கேரளா பேக்கரி வாசலில். வேலை செய்யும் கம்பெனி பஸ்ஸிற்காக  அவள் காத்துக்கொண்டு நிற்கும்போது காண்பித்தேன்."

"மாப்பிள்ளைப் பையன் பார்க்க வேண்டாமா?

"அவனுக்குப் பெண்ணின் புகைப்படங்களை மின்னஞ்சலில்  அனுப்பினோம். பார்த்தவன், சம்மதத்தைச் சொல்லி விட்டான்."

"புகைப்படமா? புகைப்படம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?"

"திருப்பித் திருப்பிக் குடையாதே அண்ணாமலை. இன்றைக்கு உள்ள தொழில் நுட்பத்தில் புகைப்படம் எடுப்பதா சிரமம்? செட்டியாரோடு பத்து நிமிடம்
முன்பாகவே பஸ் நிறுத்தத்திற்கு நான் வந்து விட்டேன். பெண் வந்ததும், பஸ் வரும்வரை அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். வரும்போதே
செட்டியார் தங்கள் குடும்பப் புகைப்படக்காரனையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்.  நான் உன் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அவன் காரில்  இருந்தவாறே ஜூம் லென்ஸ் போட்டுப் படங்களை எடுத்துக் கொடுத்துவிட்டான்."

"நீங்கள் செய்தது எல்லாம் முறைதானா? வரம்பு மீறல் இல்லையா?"

"சில நல்ல காரியம் செய்யும்போது, அதை எல்லாம் பார்க்க முடியாது. இரண்டு குடும்பங்களுமே தெரிந்த குடும்பங்கள் என்பதால்தான் நான் அதைச்
செய்வதற்குத் துணிந்தேன். தவறென்றால் மன்னித்து விடப்பா!"

"மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அதை விடுங்கள். என்னால் மூன்று லட்ச ரூபாய் மட்டுமே மொத்தமாகக் கொடுக்க முடியும். இருபது பவுன் நகைகளை  மட்டும்தான் போட முடியும். அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்களா?

"அந்த மூன்று லட்சத்தையும் நீ கொடுக்க வேண்டாம். அதை வைத்துக் கல்யாணத்தை மட்டும் நன்றாக விமரிசையாக நடத்து. மற்றதை எல்லாம் அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள்"

"அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால்...?"

"செட்டியார் பிறந்தது எதவான வீட்டில்தான். சுவீகாரம் வந்த வீட்டில் கிடைத்ததை வைத்தும், அதை வைத்து அவர் சம்பாத்தித்துப் பெருக்கியதை
வைத்தும்தான் இன்றைக்கு இருக்கும் சொத்துக்கள் எல்லாம். பணத்தைப் பெரிதாக நினைக்கிறவர் இல்லை. தன் மகனின் நல்வாழ்விற்காக  எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் அவர். 100 பவுன் கெட்டிக் கழுத்திரு, வைரப் பூச்சரம், வைரத்தாலி போன்ற நகைகளை எல்லாம் திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அவர் உங்களிடம் சேர்த்துவிடுவார். அதை எல்லாம் போட்டு உன் பெண்ணை நீ கட்டிக்கொடுத்தால் போதும். அத்துடன் இருபது லட்ச ரூபாய்  ரூபாய் ரொக்கமும் அவர் தந்துவிடுவார். திருமணத்திற்கு முதல் நாள் அப்பணத்தைப் பெண்ணிற்கு ஸ்ரீதனமாக நீ தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டால்  போதும்."

"அது ஏமாற்று வேலை இல்லையா? அதை அவர்கள், பெண் தங்கள் வீட்டிற்கு வந்த பிறகு செய்யலாம் இல்லையா? எதற்காக முன்பே கொடுத்துப் பறிமாறிக்
கொள்ள வேண்டும்?"

"எல்லாம் ஒரு நாட்டு நடப்பிற்காகத்தான். ஊர்ப் பெருமைக்காகத்தான் என்று வைத்துக்கொள்ளேன்"

"அதில் எனக்கு உடன் பாடில்லை. என் சொந்தக்காரர்கள் தாயபிள்ளைகளுக்கு என் நிலைமை தெரியும். அவர்கள் யூகித்து விடமாட்டார்களா? அப்படியொரு
போலித் தனமான வேலையை நான் செய்ய மாட்டேன். ஆச்சிக்கு, அதாவது செட்டியாரின் மனைவிக்கு இதெல்லாம் தெரியுமா?"

"தெரியாது..!"

"தெரியாமல் போகுமா? அப்போது அந்த ஆச்சிக்கு என்ன பதில் சொல்வீர்கள்? நான்தான் அந்த ஆச்சியின் முகத்தில் எப்படி விழிப்பது? அந்த நிலைமை யெல்லாம் எனக்கு வேண்டாம். நேரான வழியில் செல்வதையே நான் விரும்புகிறேன். என்னை விட்டு விடுங்கள்"

"இதெல்லாம் ஒன்றும் புதிதில்லை அண்ணாமலை. காலம் காலமாக நகரத்தார்களில் கொடுத்துக் கட்டிக்கொள்கிறவர்களும் உண்டு. உனக்குத் தெரியாதா என்ன?"

"இல்லை அண்ணே ஆரம்பத்தில் இருந்தே - அதாவது பெண்ணைப் பார்த்ததில் இருந்தே எல்லாம் குளறுபடியாக உள்ளது. அத்துடன் அவர்களுடைய
ஸ்டேட்டஸ் ஒரு பெரும் தடையாக உள்ளது. அதை எப்படிச் சரி செய்வது? பெண்ணைக் கட்டிக்கொடுத்த பிறகு அவர்கள் வீட்டிற்குச் சென்று, என் பெண்ணை நான் பார்க்க வேண்டுமென்றால், அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில்தான் நான் போய்வர முடியும்? அது சரிப்பட்டு வருமா? வேண்டாம். வேண்டவே  வேண்டாம். வேறு ஒரு சமமான இடம் இருந்தால் சொல்லுங்கள்"

"இல்லை, அண்ணாமலை. திருமண சமயத்தில் உனக்கு அம்பத்தூரில் ஒரு சொந்த வீட்டையும், புதுக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து உன்
நிலைமையையும் உயர்த்திவிட அவர் உத்தேசித்துள்ளார். ஆகவே, வலிய வருகிற ஸ்ரீதேவியை வேண்டாம் என்று சொல்லாதே!"

"அது என் குடும்பத்தையே மொத்தமாக அவர்களிடம் அடமானம் வைப்பதுபோல ஆகிவிடும். அதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு நல்ல காலம்  வருகிறபோது, அதுவாகவே வரட்டும்"

என்று சொன்ன அண்ணாமலை சட்டென்று எழுந்துவிட்டார். அதற்குமேல் பேச விருப்பமில்லை என்றதற்குப் பொருள். அதைப் புரிந்து கொண்ட வேலாயுதமும்  எழுந்து விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். புறப்பட்டவர், முத்தாய்ப்பாய் இதைச் சொல்லிவிட்டுப் போனார்.

"அண்ணாமலை நாம் இருவருமே முருக பக்தர்கள். வடபழநி ஆண்டவனைக் கும்பிட்டுவிட்டுத்தான். நான் இந்தக் காரியத்தைத் துவங்கினேன். அதானால் நீ
சொல்கிறதுபோல குளறுபடிகள் எதுவும் இல்லை. நன்றாக யோசித்துவை. உன் மனைவியிடமும் கலந்து பார். இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன்"

அத்ற்குப் பிறகு என்ன ஆயிற்று?

தொடர்ந்து படியுங்கள்
                         ***************************************

அன்று காலை பதினோரு மணிக்கு, தேனாம்பேட்டையில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் தியாகராஜன் செட்டியாரைப் பார்த்து நடந்ததைச் சொன்னார்
வேலாயுதம். அத்துடன் இரண்டு நாள் பொறுத்திருந்து மீண்டும் பேசுவோம் என்றார்.

எல்லாவற்றையும் கேட்ட தியாகராஜன் செட்டியார் புன்னகை செய்து விட்டுச் சொன்னார், "வாங்கி வைத்துக் கொடுக்கும் போலியான செயல் வேண்டாம் என்று சொன்னார் பாருங்கள். அந்த நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகிறார். பிள்ளைகளையும் அப்படித்தான்  வளர்த்திருப்பார். அவரை விடக்கூடாது. அவர் வீட்டில்தான் சம்பந்தம் செய்கிறோம். மீண்டும் போய்ப் பேசுங்கள். அவர் மனைவியையும் வைத்துக்கொண்டு  பேசுங்கள். தேவையென்றால் சொல்லுங்கள். நானும் வருகிறேன்"

ஆனால் அதற்கு வேலையே இல்லாமல் வடபழநி முருகன் வேறு ஒரு வாசலைத் திறந்து விட்டார்

                         ******************************************

அன்று மதியம் இரண்டு மணி அளவில் தியாகராஜன் செட்டியாருக்கு உணவு பறிமாறும்போது, அவருடைய மனைவி வள்ளியம்மை ஆச்சி அவர்கள் பேச்சைத்  துவங்கினார்கள்

"அம்பத்தூர் பெண் வீட்டுத் தாக்கல் எந்த அள்வில் இருக்கிறது?"

ஆச்சி திடீரென்று கேட்டவுடன் செட்டியாருக்கு, தூக்கி வாரிப் போட்டது. நூறு சதவிகிதம் ரகசியமாகச் செய்த வேலை இவளுக்கு எப்படித் தெரிந்தது?

"எந்த அம்பத்தூர்ப் பெண்...?" செட்டியாரின் பேச்சில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது

"எத்தனை அம்பத்தூர் இருக்கிறது? ஒரு அம்பத்தூர்தான்..."

"உனக்கு எப்படித் தெரியும்?"

"வடபநிக்காரன் கனவில் வந்து சொன்னான்" சொல்லிவிட்டு ஆச்சி சிரித்தார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பு தன் மகனுக்குப் பெண்ணின் புகைப்படங்களையும், பெண்னைப் பற்றிய விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்பும்படி செட்டியார்  சொன்னபோது, அவருடைய செயலாளினி, தவறுதலாக, வழக்கம்போல் ஆச்சிக்கும் ஒரு பிரதி (copy mail) அனுப்பி வைத்திருந்தார். அதனால் ஆச்சிக்கும்  அது தெரியும். விட்டுப் பிடிப்போம் என்று இருந்தவர், இன்று பிடித்துக்கொண்டார். தகவல் வந்த வழியை ஆச்சி சொன்னவுடன், செட்டியார் சற்று  நிம்மதியடைந்தார்.பாதி நனைந்தாயிற்று, இனிமேல் மறைத்துப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த்வர். நடந்தவைகளை விவரமாகச் சொன்னார்.

மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆச்சியிடமே கேட்டார்.

"மீண்டும் வேலாயுதம் செட்டியாரை அனுப்பாதீர்கள். அவருடைய அனுகுமுறை தவறாகப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சொன்னால் எந்த  மனிதன் ஒப்புக்கொள்வான். அவரவருக்கு சுயகெள்ரவம், தன்மான உணர்வு இருக்காதா? முதலில் கலயாணத்தை மட்டும்தான் பேசியிருக்க வேண்டும். மற்றதை எல்லாம் கல்யாண சமய்த்தில் பேசியிருக்கலாம். சரி நடந்தது நடந்துவிட்டது. முகவரியை வாங்கிக் கொடுங்கள் நான் போய்ப்பேசி முடித்துகொண்டு  வருகிறேன்"

"நீ மட்டும் தனியாகப் போகிறேன் என்கிறாயா?"

"பெண் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? எங்களின் அனுகுமுறையே தனி. ஆண்கள் நீங்கள் அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள். நாங்கள் உணர்வு  பூர்வமாகப் பேசுவோம். அறிவைவிட, உணர்விற்கு வலிமை அதிகம். அத்துடன் வடபழநிக்காரனுக்கு ஆயிரம் ரூபாய் முடிந்து  வைத்துவிட்டுப் போகிறேன்.  அவன் முடித்துக்கொடுப்பான்"

செட்டியாருக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. தன் கைப்பைக் குறிப்பு ஏட்டில் இருந்து முகவரியை எடுத்து, தனியாக ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தார்.

                       ++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாலை நான்கு மணிக்கு. தங்கள் வீட்டிலிருந்த கார்கள் ஒன்றில், ஓட்டுனருடன் புறப்பட்ட வள்ளியம்மை ஆச்சி அவர்கள் முதலில் வடபழநி முருகன்  கோவிலுக்குச் சென்று, பிரார்த்தனை செய்து விட்டு அம்பத்தூர் அண்ணாமலை செட்டியார் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

போகிற வழியில் பத்து முழம் மல்லிகைப் பூவையும், மூன்று கிலோ ஆப்பிள் பழங்களையும் வாங்கி காரில் வைத்துக்கொண்டார்கள். மாலை ஆறு மணி
அளவில் அங்கே போய்ச் சேர்ந்தார்கள்.

ஆச்சியைப் பார்த்தவுடன், ஒரு யூகத்தில் அவர்களைத் தெரிந்து கொண்ட அண்ணாமலை செட்டியார் முதலில் சற்று திகைத்துப் போனாலும், பிற்கு
சுதாகரித்துக்கொண்டு, அவர்களை வரவேற்று தங்கள் வீட்டின் உள் அறையில் உட்கார வைத்தார்ர். அண்ணாமலை செட்டியாரின் அன்பு மனைவி
உண்ணாம்லை ஆச்சி அவர்களும், ஆச்சியை வாய் நிறைந்த சொற்களால் வரவேற்று விட்டு, உடன் அமர்ந்து கொண்டார்கள்.

முதலில் தன்னை அறிமுகம் செய்து கொண்ட வள்ளியம்மை ஆச்சி அவர்கள், மெல்லிய குரலில் தொடர்ந்து பேசினார்கள்.

"அண்ணே ஒரு வேண்டுகோள். என்னை செல்வந்தர் வீட்டுப் பெண்ணாகப் பார்க்காதீர்கள். என்னை உங்கள் தங்கை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
காலையில் வேலாயுதம் செட்டியார், எங்கள் வீட்டு சார்பாக உங்களிடம் பேசிய அனைத்தும் தவறு. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எல்லா மனிதர்களுக்குமே சுயகெளர்வம், தன்மான உணர்வு இருக்கும். அதற்குப் பங்கம் வராமல் பேசுவதுதான் மனித நேயம். எங்கள் வீட்டுச் செட்டியார் ஒரு எளிய  குடும்பத்தில் பிறந்து எங்கள் ஆயாவீட்டிற்கு சுவீகாரம் வந்ததால் பணக்காரர் ஆனார். அதனால் அவருக்கு எல்லாரையும் சமமாகப் பாவிக்கும் உயரிய குணம் உண்டு. ஆனால் நான் அப்படியில்லை. நான் பிறந்த்தும் பணக்கார வீடு, வாழ்க்கைப் பட்ட இடத்திலும் கட்டுக் கட்டாகப் பணத்தைப் பார்த்து எனக்கு பணத்தின்  மீதும், பணக்காரர்கள் மீதும் ஒரு சலிப்பு வந்துவிட்டது. பெரும்பாலான பணக்கார வீடுகளில் உண்மையான அன்பு, பாசம் இல்லை. அது என் அனுபவம். பணத்தை வைத்து ஏற்படும் உறவுகள் போலியானதாக இருக்கும். பணத்தை வைத்து சண்டை சசசரவுகள், வெளிப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக  இருக்கும். எனக்கு உங்களுடைய நேர்மை பிடித்துப்போய் விட்டது. வாங்கித் தட்டில் வைத்துக் கொடுப்பதற்கு உடன்பட் மாட்டேன் என்று சொன்ன  உங்களுடைய நேர்மையான மனசுதான் என்னை இங்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு அசாத்தியமான மனம் வேண்டும். அது உங்களிடம்
இருக்கிறது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். எந்த சூழ்நிலையிலும் உங்கள் சுய கெள்ரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம். ந்கரத்தார் பாரம்பரியத்தின் முதல் அடையாளம் அதுதான். ஆனால் ஸ்டேட்டஸைக் காரணம் காட்டி எங்கள் சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாழ்க்கையே ஒரு மாயை  (illusion). ஸ்டேட்டஸ் என்பதும் மாயைதான். ஒருவருக்கொருவர் அன்பாகப், புரிதலுடன் பழகும்போது, அதெல்லாம் இல்லாமல் போய்விடும். எனக்கு ஒரே  மகன்தான். நல்ல குணங்களுடையவனாக அவனை வளர்த்திருக்கிறேன். உங்கள் மூத்த பெண்ணை எங்கள் வீட்டு மருமகளாகக் கட்டிக் கொடுங்கள். அவளுடைய மனங்கோணாமல், அவளை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன். உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால், வாருங்கள்,  வடபழநிக்கோவிலில் பூக்கட்டி உத்தரவு கேட்போம். உத்தரவு வந்தால் திருமணத்தை நடத்துவோம். இல்லை என்றால் விட்டு விடுவோம்"

ஆச்சியின் தொடர் பேச்சால், அசந்து போன அண்ணாமலை செட்டியார், பத்து நொடிகள் மெளனமாக இருந்தவர், பதில் சொன்னார்.

"பூக்கட்டியெல்லாம் பார்க்க வேண்டாம். நீங்கள் நேரில் வந்து பேசியதால், எனக்கும் மனதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இந்தத் திருமணத்தில், நம்மை  விட வாழப்போகின்ற இரண்டு சின்னஞ்சிறுகள் முக்கியம். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சம்மதம் சொல்ல வேண்டும் அல்லவா?"

"ஆஹா, நிச்சயம் சொல்ல வேண்டும். நான் என் மகனை அமெரிக்காவில் இருந்து பெண் பார்ப்பதற்காகப் புறப்ப்ட்டு வரச் சொல்கிறேன். பெண் பார்க்கும்
நிகழ்ச்சியை வடபழநிக்கோவிலிலேயே வைத்துக் கொள்வோம். உங்கள் பெண்ணிற்கும் சம உரிமை, சம வாய்ப்பு உண்டு. இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துப் பேசி பிடித்திருக்கிறது என்று சொன்னால் மட்டுமே திருமணம். இல்லை என்றால் இல்லை....... என்ன சரிதானே?"

"நல்லது. அப்படியே செய்வோம்" என்று அண்ணாமலை அண்ணன் சொல்ல, வள்ளி ஆச்சி அவர்கள் எழுந்துவிட்டார்கள். தம்பதியரிடம் சொல்லிக்கொண்டு
புறப்பட்டு விட்டார்கள்

            ***************************************************************************

அதற்குப் பிறகு நடந்தவ்ற்றில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் முக்கியமில்லை. கதையின் நீளத்தையும், உங்களின் பொறுமையையும் கருதி அதை மட்டும்  சுருக்கமாக இப்போது சொல்கிறேன்.

சொன்னப்டி ஆச்சி தன் மகனை வரவ்ழைத்து விட்டார்கள். இரண்டு குடும்பத்தார்களும் வடபழநி முருகன் கோவிலில் சந்தித்துப் பேசினார்கள். பெண்ணும்  மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் பார்த்துப் பேசி பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டாகள். பெண்ணைப் போலவே பையனும் சிவந்த நிறத்தில் ராஜகளையோடு அம்சமாக இருந்தான்.

சன்னிதானத்துக்குப் பின்புறம் உள்ள மண்டபத்தில் பெண்ணுடன் இருபது நிமிடம் பேசிவிட்டு வந்த மாப்பிள்ளைப் பையன், யாரும் எதிர்பாராதவிதமாக,
கொடிமரத்திற்கு அருகே நின்ற அண்ணாமலை செட்டியாரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டான். அவர் பதறிப் போய்விட்டார்.

"அடடா, எதற்கு  இதெல்லாம்?" என்றவரிடம் பையன், நீங்கள் வயதில் பெரியவர்கள் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டேன் என்றான். அதேபோல  அண்ணாமலை செட்டியாரின் மகள் தேனம்மையும் தியாகராஜன் செட்டியார் தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கினாள்.

அப்போதுதான் இது நடந்தது.

தேனம்மையைத் தன் கைகளால் தூக்கிப் பிடித்து நிறுத்திய வள்ளியம்மை ஆச்சி அவர்கள், அவளைக் கட்டிப்பிடித்து அனைத்து உச்சி முகர்ந்தார்கள். அத்துடன்  தன்னுடைய கூடையில் இருந்த மல்லிகைச் சரத்தை அவள் தலையில் சூட்டிவிட முற்பட்டார்கள். தன் தந்தையாரின் கண்ணசைவைப் புரிந்து கொண்ட  தேனம்மை, திரும்பி நின்று, குனிந்து, ஆச்சி அவர்கள் பூச்சுடிவிடுவதற்கு ஏதுவாக நின்று கொண்டாள்.

பூவை அழகாகச் சூட்டி விட்ட ஆச்சி, யாரும் எதிர்பார்க்காத விதமாகத் தன் கைப் பையில் இருந்து, பளபளக்கும் வைரப் பூச்சரம் (Diamond Necklace) ஒன்றை எடுத்துத் தேனம்மையில் கழுத்தில் அணிவித்துவிட்டதோடு, அவளுடைய சிவந்த கரங்களுக்கு அணி சேர்க்கும் விதமாக நான்கு வைரக் காப்புகளையும் (Diamond Bangles) அணிவித்து  விட்டார்கள்.

அண்ணாமலை செட்டியார், எதோ சொல்வதற்கு முயன்றபோது ஆச்சி அவர்கள் சொன்னார்கள்.

"அண்ணே, கல்யாணத்துக் முன்னாடி தேனம்மைக்கு இதைப் போடறதினாலே, இது உங்க வீட்டு ஸ்ரீதனம்தான். என் அண்ணன் மகளுக்கு நான் கொடுக்கும்
திரும்ணப்பரிசாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். கல்யாணத்திற்கு பிறகு நான் போட உள்ளதுதான், மாமியார் வள்ளியம்மை ஆச்சி கணக்கில் வரும். அத்துடன்  இதை முருகன் சன்னிதானத்திலே வைத்துப் போடுவதால், என் மூலம் அவர் கொடுத்ததாகவே நினைத்துக்கொள்ளுங்க்ள்"

ஆச்சியின் பேச்சுத் திறமையில் தன்னை மறந்து நின்றார் அண்ணாமலை செட்டியார்.

தேனம்மையுடன் அவர் அருகில் வந்த வள்ளியம்மை ஆச்சி அவர்கள் மெல்லிய குரலில் சொன்னார்.

"அண்ணே, எங்கள் பக்திக்கு, முருகன் அளித்த பரிசு உங்கள் மகள் தேனம்மை. உங்கள் நேர்மைக்கு முருகன் அளித்த பரிசு இந்தச் சம்பந்தம்!"

அண்ணாமலை செட்டியாரின் கண்கள் பனித்துவிட்டன!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

53 comments:

  1. கதையை படிப்பதில் ஸ்வரசியமும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலும் கதையின் தொடக்க முதல் கடைசி வரை இருந்தது.

    சொற்களின் பதம், வசனங்களின் எதார்த்தமும் மிகவும் அருமை.

    கதையை படிக்கும் போது பாத்திரங்கள் கண்களின் முன் உயிர் உள்ள காட்சியாக தெரிகின்றது.

    நன்றி அய்யா.

    ReplyDelete
  2. நேற்று பென்சில்னா எப்படி இருக்கும்னு கேட்ட சிறுவன்.
    இன்று "Romeo and Juliet met online in a chat room. But their relationship ended tragically when Juliet's hard drive died" என்று bed time story சொல்லும் அம்மா.

    ஹ. ஹ.. ஹா. காலம் மாறிப்போச்சு ஐயா... காலம் மாறிப்போச்சு....

    chat room என்பது கதை சொல்லும் அந்த அம்மா வளர்ந்த காலம், இப்பொழுது ...
    "Romeo and Juliet met on Facebook. But their relationship ended tragically when Romeo's account has been deactivated because of his bullying nature, inappropriate behaviors and of his fake account details that were reported to the authorities" என்று இருக்க வேண்டும் ஐயா.

    ReplyDelete
  3. வள்ளியம்மை ஆச்சி: "பெண் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? எங்களின் அனுகுமுறையே தனி. ஆண்கள் நீங்கள் அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள். நாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசுவோம். அறிவைவிட, உணர்விற்கு வலிமை அதிகம்."

    இவங்கதான் புத்திசாலி, மனிதர்களை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆடிக் கறக்க வேண்டிய மாட்டையும், பாடிக் கறக்க வேண்டிய மாட்டையும் அதனதன் வழியிலேயே அணுகி மடக்கிவிட்டார்.

    செல்வந்தர் வீட்டு பெண்கள் என்று தமிழ்த் திரையுலகம் அவர்களை ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களாகவே சித்தரித்ததைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு உங்கள் ஆச்சி மகிழ்ச்சியைத் தருகிறார்.

    ReplyDelete
  4. ஐயா, கதை நன்றாக இருக்கிறது. உங்கள் கதை, நடை, வார்த்தைத் தேர்வுகள், முடிவு எல்லாம் எனாகு மிகவும் அதுப்படியாகிவிட்டது. நீங்கள் பாதிக் கதை எழுதினால் நான் உங்கள் நடையிலேயே, நீங்கள் எதிர்பார்த்த முடிவுடன் மீதிக் கதையை முடித்துவிடுவேன் என்று தீவிரமாக நம்புகிறேன் :))))))

    ReplyDelete
  5. இனிய முடிவுடன் நடந்து முடிந்த கதை! இதமோ இதம்! எல்லாம் அவன் செயல்!
    கதையின் மூலம் வாழ்வு சமன்பாட்டின் முக்கியத்துவம் புரிய வைக்கப்பட்டுள்ளது!
    இரு அதிர்ஷ்டக்காரர்களோ,பணக்காரர்களோ,படித்தவர்களோ இணைவதைக் காட்டிலும், ஏதேனும் சற்று தகுதி மட்டுப்பட்ட ஒருவர் இணைவது ஸ்வாரஸ்யம் தரும் அமைப்பு! இனிப்பில் க்ராம்பு சேர்ப்பது போல!

    வணக்கம் ஐயா!

    ReplyDelete
  6. நல்ல பிள்ளைகள். குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள்....அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டத்தில் முதற்த்தகுதி பெற்றுத் தேறியவள்....வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஒருத்தர் வீட்ல ஒப்படைச்சா எனக்கும் கொஞ்சம் சுமை குறையும்....

    நோ ..... நோ ..... நோ .....
    இது போன்ற தகுதிகளை உடைய பெண் ஒரு சுமை?? ?!!!???
    இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இதெல்லாம் அந்தக் காலத்து வசனங்கள்.
    சென்ற அரட்டை அரங்கத்தில் ராஜேந்தர் "ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண்" என்ற பழைய வழக்கத்தை மாற்றி
    "ஆசைக்கு ஒரு ஆண், அன்புக்கு ஒரு பெண்" என்று அருமையாக சொன்னாராக்கும்.

    ReplyDelete
  7. ப்ங்குனி உத்திர நாளில் முருகன் அருளோடு மெய் சிலிர்க்க வைத்த எதார்த்தமான கதை நடை.

    நன்றி அய்யா
    பவானி கே.ராஜன்

    ReplyDelete
  8. மிகவும் அற்புதமானக் கதை..
    இதுவரை தாங்கள் எழுதியக் கதைகளில்
    மிகவும் முதன்மையானதாக எனக்கு தோன்றுகிறது.

    பணத்தால் உயர்ந்தாலும் பண்பாலும்; உண்மையான வாழ்க்கையை வாழ்ந்ததாலும் சரியான பெண்ணைத் தேடி பெற்றிருக்கிறார்கள்.
    மகளுக்கு நல்ல வாழ்க்கைக் கிடைக்கப் போகிறது என்று அவசரப் படாமலும் தன்னுடைய தன்மானம், சுய கெளரவத்தை விட்டு விடாமல் பிறரின் பணத்திற்கு மயங்காமல் இருந்த அண்ணாமலை செட்டியாரின் நேர்மைக்கு கிடைத்தப் பரிசு என்பது.... உண்மையிலும் உண்மை. வள்ளி ஆச்சியின் வருகைக்குப் பிறகு கதையின் வேகம்... வரிகளில் காணும் உணர்ச்சிப் பிரதிபலிப்பு அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  9. கதை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் போய்விட்டால் எதுவாயிருந்தாலும் சலிப்புதான் ஏற்படும். அதை மனதில் வைத்துப் புனையப்பட்ட மிக அருமையான கதை. பக்திக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசுகள் அழகு. நன்றி.

    ReplyDelete
  10. கதையின் வேகம் ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்தது.

    "கல்யாண தாக்கலோடு வந்திருக்கேன் "

    சட்டியில் வேண்டுமானால் பெரியது சின்னது என்ற பேதம் இருக்கலாம் செட்டியார்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது .
    போன்ற ஏரியா வசனங்கள் இன்னும் சுவை சேர்த்தது.

    அய்யா அவர்களின் கதைகளில் "ஆச்சி' கேரக்டர் முக்கிய மானதாக இருக்கும். இதிலும் பல பாத்திரங்கள் வந்தாலும் வள்ளியம்மை ஆச்சி
    மட்டுமே மனதில் பதிகிறார், அவரின் வசனங்களால் .

    ReplyDelete
  11. முருகா... முருகா...

    இது தொடக்கம்...

    ReplyDelete
  12. ஐயா,
    அருமையான நீதிக்கதை. நேற்று பிளாக்குகளில் எழுதுவதை 1 ஆண்டுகளில் நிறுத்தப் போவதாகக் கூறியதைத் தயவுசெய்து திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.

    ReplyDelete
  13. வள்ளியம்மை ஆச்சி போல் நிறைய ஆச்சிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்ய , அண்ணாமலை செட்டியாரும் , பெண்ணை உயரமாக, அழகாக , கலையாக பெற்று உள்ளார். வெறும் புத்திசாலிதனம் மட்டும் இருந்து , இந்த மூன்றில் ஒன்று குறையாக இருந்தாலும் , வள்ளியம்மை ஆச்சி ஹீரோயின் ரோல் பண்ணி இருக்க முடியாது. எங்களுக்கு மிகவும் வேண்டிய காரைக்குடி நகரத்தார் வீடு பெண் , குண்டாக இருபதனால் மட்டுமே வரன் அமையாமல் தள்ளி போய் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஐந்து வீடுகளுக்கு சொந்தம், உதவும் குணத்தில் அப்படியொரு தங்கமான பெண், நல்ல படிப்பு அனைத்தும் இருந்தும் ஏனோ வரன் தள்ளி கொண்டே போகிறது. குடும்பத்தில் அனைவரும் மிக நல்லவர்கள். இருந்தும் அவர்கள் வீட்டுக்கு வள்ளியம்மை அச்சி போல் துணிந்து பெண் எடுக்க எப்போ வருவார்கள் என்று காத்து கிடக்கிறோம்.kalai seattle

    ReplyDelete
  14. Guru vanakkam,

    Very intersting. Neatly presented. I was in the family even after the story is finished.

    Regards
    Sri.

    ReplyDelete
  15. /////Blogger Balamurugan Jaganathan said...
    கதையை படிப்பதில் ஸ்வரசியமும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலும் கதையின் தொடக்க முதல் கடைசி வரை இருந்தது.
    சொற்களின் பதம், வசனங்களின் எதார்த்தமும் மிகவும் அருமை.
    கதையை படிக்கும் போது பாத்திரங்கள் கண்களின் முன் உயிர் உள்ள காட்சியாக தெரிகின்றது.
    நன்றி அய்யா.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger eswari sekar said...
    nalla story/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////Blogger தேமொழி said...
    நேற்று பென்சில்னா எப்படி இருக்கும்னு கேட்ட சிறுவன்.
    இன்று "Romeo and Juliet met online in a chat room. But their relationship ended tragically when Juliet's hard drive died" என்று bed time story சொல்லும் அம்மா.
    ஹ. ஹ.. ஹா. காலம் மாறிப்போச்சு ஐயா... காலம் மாறிப்போச்சு....
    chat room என்பது கதை சொல்லும் அந்த அம்மா வளர்ந்த காலம், இப்பொழுது ...
    "Romeo and Juliet met on Facebook. But their relationship ended tragically when Romeo's account has been deactivated because of his
    bullying nature, inappropriate behaviors and of his fake account details that were reported to the authorities" என்று இருக்க வேண்டும் ஐயா./////

    ஆமாம் Facebook காலம், எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger தேமொழி said...
    வள்ளியம்மை ஆச்சி: "பெண் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? எங்களின் அனுகுமுறையே தனி. ஆண்கள் நீங்கள் அறிவுபூர்வமாகப்
    பேசுவீர்கள். நாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசுவோம். அறிவைவிட, உணர்விற்கு வலிமை அதிகம்."
    இவங்கதான் புத்திசாலி, மனிதர்களை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆடிக் கறக்க வேண்டிய மாட்டையும், பாடிக் கறக்க வேண்டிய மாட்டையும் அதனதன்
    வழியிலேயே அணுகி மடக்கிவிட்டார்.
    செல்வந்தர் வீட்டு பெண்கள் என்று தமிழ்த் திரையுலகம் அவர்களை ஆணவம் அகம்பாவம் கொண்டவர்களாகவே சித்தரித்ததைப் பார்த்து வெறுத்துப்
    போயிருந்த எனக்கு உங்கள் ஆச்சி மகிழ்ச்சியைத் தருகிறார்.//////

    அதுபோன்ற அதி புத்திசாலித்தனம் உடைய ஆச்சிகள் சிலரை எனக்கு நன்கு தெரியும். சிலசமயம் அவர்கள் என் கதைக்குள் வந்துவிடுவார்கள் :-)))))

    ReplyDelete
  19. /////Blogger தேமொழி said...
    ஐயா, கதை நன்றாக இருக்கிறது. உங்கள் கதை, நடை, வார்த்தைத் தேர்வுகள், முடிவு எல்லாம் எனக்கு மிகவும் அதுப்படியாகிவிட்டது. நீங்கள் பாதிக்
    கதை எழுதினால் நான் உங்கள் நடையிலேயே, நீங்கள் எதிர்பார்த்த முடிவுடன் மீதிக் கதையை முடித்துவிடுவேன் என்று தீவிரமாக நம்புகிறேன் :))))))/////

    உங்கள் நம்பிக்கை வாழ்க! என் எழுத்திற்கும் உங்கள் வாசிப்பிற்கும் கிடைத்த வெற்றி அது. ஒரு சந்தர்ப்பம் வரட்டும் பாதிக்கதையை மட்டும் உங்களுக்கு அனுப்பி வைக்கிரேன். மீதிக்கதையை நீங்கள் எழுதுங்கள்!

    ReplyDelete
  20. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    இனிய முடிவுடன் நடந்து முடிந்த கதை! இதமோ இதம்! எல்லாம் அவன் செயல்!
    கதையின் மூலம் வாழ்வு சமன்பாட்டின் முக்கியத்துவம் புரிய வைக்கப்பட்டுள்ளது!
    இரு அதிர்ஷ்டக்காரர்களோ,பணக்காரர்களோ,படித்தவர்களோ இணைவதைக் காட்டிலும், ஏதேனும் சற்று தகுதி மட்டுப்பட்ட ஒருவர் இணைவது
    ஸ்வாரஸ்யம் தரும் அமைப்பு! இனிப்பில் க்ராம்பு சேர்ப்பது போல!
    வணக்கம் ஐயா!///////

    உண்மைதான். பள்ளமும் மேடும் இணந்து இடங்கள் சமமாக வேண்டும்! பணமும், குணமும் ஒன்று சேர வேண்டும்!

    ReplyDelete
  21. Blogger தேமொழி said...
    நல்ல பிள்ளைகள். குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளைகள்....அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டத்தில் முதற்த்தகுதி பெற்றுத்
    தேறியவள்....வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஒருத்தர் வீட்ல ஒப்படைச்சா எனக்கும் கொஞ்சம் சுமை குறையும்....
    நோ ..... நோ ..... நோ .....
    இது போன்ற தகுதிகளை உடைய பெண் ஒரு சுமை?? ?!!!???/////
    இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இதெல்லாம் அந்தக் காலத்து வசனங்கள்.
    சென்ற அரட்டை அரங்கத்தில் ராஜேந்தர் "ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண்" என்ற பழைய வழக்கத்தை மாற்றி
    "ஆசைக்கு ஒரு ஆண், அன்புக்கு ஒரு பெண்" என்று அருமையாக சொன்னாராக்கும்.//////

    மனைவி வந்து பங்குப்போடும் வரைக்கும்தான் மகன் உங்களுக்கு சொந்தம். அவனுடைய அன்பும் முழுமையாக இருக்கும். ஆனால் மகள் கடைசிவரைக்கும் பெற்றோர்கள் மீது அன்புடன் இருப்பாள். A sun is a sun till he gets a wife: But a daughter is always a daughter!

    ReplyDelete
  22. /////Blogger krajan said...
    ப்ங்குனி உத்திர நாளில் முருகன் அருளோடு மெய் சிலிர்க்க வைத்த எதார்த்தமான கதை நடை.
    நன்றி அய்யா
    பவானி கே.ராஜன்//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமானக் கதை..
    இதுவரை தாங்கள் எழுதியக் கதைகளில்
    மிகவும் முதன்மையானதாக எனக்கு தோன்றுகிறது.
    பணத்தால் உயர்ந்தாலும் பண்பாலும்; உண்மையான வாழ்க்கையை வாழ்ந்ததாலும் சரியான பெண்ணைத் தேடி பெற்றிருக்கிறார்கள்.
    மகளுக்கு நல்ல வாழ்க்கைக் கிடைக்கப் போகிறது என்று அவசரப் படாமலும் தன்னுடைய தன்மானம், சுய கெளரவத்தை விட்டு விடாமல் பிறரின் பணத்திற்கு மயங்காமல் இருந்த அண்ணாமலை செட்டியாரின் நேர்மைக்கு கிடைத்தப் பரிசு என்பது.... உண்மையிலும் உண்மை. வள்ளி ஆச்சியின்
    வருகைக்குப் பிறகு கதையின் வேகம்... வரிகளில் காணும் உணர்ச்சிப் பிரதிபலிப்பு அருமை..
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!//////

    நல்லது. உங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம். உங்களைப் போன்ற வாசகர்கள் இருப்பதால்தான் மேலும் மேலும் சிறுகதை எழுதுவது சாத்தியப் படுகிறது!

    ReplyDelete
  24. /////Blogger Parvathy Ramachandran said...
    கதை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் போய்விட்டால் எதுவாயிருந்தாலும் சலிப்புதான் ஏற்படும். அதை மனதில் வைத்துப் புனையப்பட்ட மிக அருமையான கதை. பக்திக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசுகள் அழகு. நன்றி.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  25. /////Blogger thanusu said...
    கதையின் வேகம் ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்தது.
    "கல்யாண தாக்கலோடு வந்திருக்கேன் "
    சட்டியில் வேண்டுமானால் பெரியது சின்னது என்ற பேதம் இருக்கலாம் செட்டியார்களில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் கிடையாது .
    போன்ற ஏரியா வசனங்கள் இன்னும் சுவை சேர்த்தது.
    அய்யா அவர்களின் கதைகளில் "ஆச்சி' கேரக்டர் முக்கிய மானதாக இருக்கும். இதிலும் பல பாத்திரங்கள் வந்தாலும் வள்ளியம்மை ஆச்சி
    மட்டுமே மனதில் பதிகிறார், அவரின் வசனங்களால் ./////

    நான் எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிக்கை மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் வாசகர்களில் எண்பது சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் பெண் வாசகர்கள்! ஆகவே பல கதைகளில் அவர்களே பிரதானப் படுத்தப்படுகிறார்கள்!

    ReplyDelete
  26. /////Blogger அய்யர் said...
    முருகா... முருகா...
    இது தொடக்கம்...//////

    ஆமாம்! நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  27. ////Blogger Rajaram said...
    ஐயா,
    அருமையான நீதிக்கதை. நேற்று பிளாக்குகளில் எழுதுவதை 1 ஆண்டுகளில் நிறுத்தப் போவதாகக் கூறியதைத் தயவுசெய்து திரும்பப்
    பெற்றுக்கொள்ளவும்./////

    நேரமின்மை காரணமாக தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து அவ்வாறு முடிவு செய்துள்ளேன். இறுதி முடிவு பழநிஅப்பன் உத்தரவுப்படிதான். அவன் தொடரச் சொன்னால் எல்லாம் தொடரும்! அதற்கு உரிய சூழ்நிலையை அவன் மாற்றித் தரவேண்டும்!

    ReplyDelete
  28. /////Blogger Kalai said...
    வள்ளியம்மை ஆச்சி போல் நிறைய ஆச்சிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்ய , அண்ணாமலை செட்டியாரும் , பெண்ணை உயரமாக, அழகாக , கலையாக பெற்று உள்ளார். வெறும் புத்திசாலிதனம் மட்டும் இருந்து , இந்த மூன்றில் ஒன்று குறையாக இருந்தாலும் , வள்ளியம்மை ஆச்சி
    ஹீரோயின் ரோல் பண்ணி இருக்க முடியாது. எங்களுக்கு மிகவும் வேண்டிய காரைக்குடி நகரத்தார் வீடு பெண் , குண்டாக இருபதனால் மட்டுமே வரன்
    அமையாமல் தள்ளி போய் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஐந்து வீடுகளுக்கு சொந்தம், உதவும் குணத்தில் அப்படியொரு தங்கமான பெண், நல்ல படிப்பு
    அனைத்தும் இருந்தும் ஏனோ வரன் தள்ளிக் கொண்டே போகிறது. குடும்பத்தில் அனைவரும் மிக நல்லவர்கள். இருந்தும் அவர்கள் வீட்டுக்கு வள்ளியம்மை
    ஆச்சி போல் துணிந்து பெண் எடுக்க எப்போ வருவார்கள் என்று காத்து கிடக்கிறோம்.kalai seattle/////

    பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். இறையருள் கூடி வந்தால் நொடியில் எல்லாம் நடக்கும்

    ReplyDelete
  29. /////Blogger RAMADU Family said...
    Guru vanakkam,
    Very interesting. Neatly presented. I was in the family even after the story is finished.
    Regards//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ராமுடு!!

    ReplyDelete
  30. ஆசிரியர் ஐயா! வணக்கம். கடந்த சில நாட்களாக எண் ஜோதிட‌ம் எழுதப் பட்டதால் எனக்கு அதில் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் இன்று உங்கள் சிறுகதை என்னை இழுத்து வந்துவிட்டது. நண்பர் தனுசு எழுதியதை நானும் அப்படியே வழிமொழிகிறேன். நான் எழுத வேண்டியதைச் சிந்தித்து விட்டு பின்னூட்டங்களைப் படிக்கத் தொடங்கினேன். நான் எழுத நினைத்ததை அப்படியே தனுசு எழுதியிருந்தார். "தாக்கல்" சொல்வது என்பது செட்டிநாட்டு வழக்குச் சொல். சட்டியில் பெரியது சிறியது உண்டு, செட்டியார்களில் கிடையாது என்பது சரியான கருத்து. கதை நல்ல சீரான ஓட்டத்தோடு அமைந்து, இனிமையான எதிர்பார்த்த முடிவை எட்டியது. இதில் வேலாயுதத்தின் முயற்சியைக் காட்டிலும் வேல் ஆயுதத்தைத் தன் கையில் ஏந்திய வடபழனி முருகனின் அருள் நல்ல முடிவுக்கு வழிகாட்டியிருக்கிறது. வள்ளியம்மை ஆச்சியைப் போன்ற நற்குண மங்கையரும், அண்ணாமலை செட்டியார் போன்ற தன்மானமுள்ள மனிதர்களும் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகள். நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  31. கதை துவக்கத்திலேயிருந்து மிக சீரான கோர்வையாக,எங்கேயும் தொய்வில்லாமல் நாட்டு நடப்புகளை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்!!!தங்கத்தின் தட்டுபாடு ஏன் என உணர்த்து கொள்ளும்படியான கதை.(100 to 1000 சவரன் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டாக் வைத்திருந்தால் என்னாவது???)
    ஆண்கள் எப்பொழுதும் rational mind (மனகணக்குகளையும் போடும், மூளைக்கு வேலை கொடுப்பவர்கள்,இது ஒரு சில இடங்களில் வெற்றி பெரும்,பெரும்பாலும் அலுவலகங்களில் ). பெண்கள் (Emotional mind இது இருதயத்தில் சில சமயம் கருணை கசிவு இருக்கும்.அதனால்,வெற்றிகள் பெற்றுவிடுகின்றனர்.ஆக,வாழ்க்கை எனும் ஆட்டத்தில் இருவரும் வெற்றி பெரும் அணியே சிறந்த அணி....! win win team .) என்பதை கூறி இங்கு கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெறுகிறேன்.

    ReplyDelete
  32. உங்களின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. அண்ணாமலை செட்டியாரின் தன்மானமும், வள்ளியம்மை ஆட்சியின்
    நயமான பேச்சும் படிக்கும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீரான வேகத்தில் சென்றது. உங்களின் எந்தக்கதையைப்படித்தாலும் யார்க்கும் மனது கனக்காது. ஏனெனில் எல்லாவற்றையுமே பாசிடிவ் ஆக

    முடிப்பதால்.

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா,
    படிப்பதற்கு ஒரு இடத்தில் தொய்வேயில்லாமல் யதார்த்தமான வசனங்களோடு ஆழமான உணர்வுகளை தொட்ட கதை...வ‌ள்ளிய‌ம்மை ஆச்சி போன்று ந‌ல்ல‌ ம‌ன‌மும்,பேச்சாற்ற‌லும் கொண்ட‌ பெண்க‌ள் இன்றைய‌ சூழ்லில் அரிதாகிக் கொண்டே போகின்ற‌ன‌ர்...சில‌ருக்கு ந‌ல்ல‌ ம‌ன‌மிருந்தாலும் பேச்சுத்திற‌மை குறைவாக‌யிருக்கும்,அத‌னால் வாழ்க்கை ஏணியில் ஏற‌ சிர‌ம‌ப்ப‌ட‌ நேர‌லாம்...இவை இர‌ண்டும் ஒரு சேர‌ அமைய‌ப் பெற்றிருக்கும் ஆச்சிக்கு முருக‌ப் பெருமானின் அருள் பூர‌ண‌மாக‌ கிடைத்துள்ளது...

    உண்மையில் ப‌ழனியாண்ட‌வ‌ர் இருவீட்டாருக்கும் விலை ம‌திப்பில்லா வெகும‌தியை அளித்துள்ளார்...இப்ப‌டி நாட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ மாறிவிட்டால் பல திரும‌ண‌ங்க‌ள் த‌டைப்ப‌டாது இனிதே ந‌ட‌ந்தேறிடுமே!!!

    பழனியாண்டவர் அண்ணாமலையாரின் மகளுக்கு அளித்த நல்ல வாழ்க்கையை அனைவருக்கும் வழங்கட்டும்...ந‌ல்ல‌ அருமையான‌ க‌தைக்கு மிக்க‌ ந‌ன்றி ஐயா...

    ReplyDelete
  34. ஐயா,நான் இணையத்தில் படித்த முதல் தமிழ் வலைதளம் தங்களுடைய வகுப்பறை தான்...ஜோதிடம் மீதிருந்த‌ ஆர்வத்தினை தாண்டி ஆழ்ந்து கற்கும் எண்ணத்தை நான் இங்கு தான் உணர்ந்து கொண்டேன்...என் போன்று இக்கலையை அறியும் பொருட்டும் ஆனால் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களது வருத்தங்களை தெரிவிக்காமல் இருப்பவர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள்...

    நேரமின்மையால் தான் தாங்கள் இம்முடிவை எடுக்க வேண்டிய நிலையினை எங்களால் உணரமுடிகிறது...உமா அவர்கள் குறிப்பிட்டுள்ளதை போல தங்களது ஆக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ளலாம் அல்லது ஓய்வு கிடைக்கும் பொழுது மட்டும் எழுதலாம்...அதைப் போலவே பின்னூட்டங்கள் இடுவதை கூட குறைத்தோ அல்லது இடாமலும் தவிர்க்கலாம்...

    தங்களுடைய மற்ற கடமைகளுக்கு முன்னுரிமை தந்து சற்று ஓய்வு நேரத்தில் வகுப்பறையில் "கௌரவ பேராசிரியராக" வகுப்பு எடுக்கலாம் என்பது எனது கருத்து...

    நம்முடைய சுயநலத்திற்கு பிறரின் நலத்தைப் பற்றியும் பாராமல் இருப்பது நியாயமில்லைதான்...நல்ல தெளிவான முடிவை பழனியாண்டவரும்,தாங்களும் தான் எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி ஐயா...

    ReplyDelete
  35. ////Blogger Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா! வணக்கம். கடந்த சில நாட்களாக எண் ஜோதிட‌ம் எழுதப் பட்டதால் எனக்கு அதில் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் இன்று உங்கள் சிறுகதை என்னை இழுத்து வந்துவிட்டது. நண்பர் தனுசு எழுதியதை நானும் அப்படியே வழிமொழிகிறேன். நான் எழுத வேண்டியதைச் சிந்தித்து விட்டு பின்னூட்டங்களைப் படிக்கத் தொடங்கினேன். நான் எழுத நினைத்ததை அப்படியே தனுசு எழுதியிருந்தார். "தாக்கல்" சொல்வது என்பது செட்டிநாட்டு வழக்குச் சொல். சட்டியில் பெரியது சிறியது உண்டு, செட்டியார்களில் கிடையாது என்பது சரியான கருத்து. கதை நல்ல சீரான ஓட்டத்தோடு அமைந்து, இனிமையான எதிர்பார்த்த முடிவை எட்டியது. இதில் வேலாயுதத்தின் முயற்சியைக் காட்டிலும் வேல் ஆயுதத்தைத் தன் கையில் ஏந்திய வடபழனி முருகனின் அருள் நல்ல முடிவுக்கு வழிகாட்டியிருக்கிறது. வள்ளியம்மை ஆச்சியைப் போன்ற நற்குண மங்கையரும், அண்ணாமலை செட்டியார் போன்ற தன்மானமுள்ள மனிதர்களும் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகள். நல்ல கதை. பாராட்டுகள்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஐயா! உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னைப்போன்று எழுதுபவர்களுக்கு ஒரு ஊக்க மருந்து. அந்த மருந்துதான் மேலும் மேலும் என்னை எழுதவைக்கிறது!

    ReplyDelete
  36. ////Blogger Ananthamurugan said...
    கதை துவக்கத்திலேயிருந்து மிக சீரான கோர்வையாக,எங்கேயும் தொய்வில்லாமல் நாட்டு நடப்புகளை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்!!!தங்கத்தின் தட்டுபாடு ஏன் என உணர்த்து கொள்ளும்படியான கதை.(100 to 1000 சவரன் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்டாக் வைத்திருந்தால் என்னாவது???)
    ஆண்கள் எப்பொழுதும் rational mind (மனகணக்குகளையும் போடும், மூளைக்கு வேலை கொடுப்பவர்கள்,இது ஒரு சில இடங்களில் வெற்றி பெரும்,பெரும்பாலும் அலுவலகங்களில் ). பெண்கள் (Emotional mind இது இருதயத்தில் சில சமயம் கருணை கசிவு இருக்கும்.அதனால்,வெற்றிகள் பெற்றுவிடுகின்றனர்.ஆக,வாழ்க்கை எனும் ஆட்டத்தில் இருவரும் வெற்றி பெரும் அணியே சிறந்த அணி....! win win team .) என்பதை கூறி இங்கு கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெறுகிறேன்.////

    நான் எழுதுவது எல்லாமே மனவளக் கட்டுரைகளைப் போன்றதுதான். மனதை நெறிப்படுத்தும் முயற்சியாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 80ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். கட்டுரையாகக் கொடுக்காமல் கதையாக எழுதுவதால் படிக்கும் அனைவரையும் அவைகள் சென்றடைகின்றன! நான் Jeffery Archer மற்றும் James Hadley Chaseன் தீவிர ரசிகன். கதை எழுதும் உத்திகள் எல்லாம அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்!

    ReplyDelete
  37. ////Blogger Uma said...
    உங்களின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. அண்ணாமலை செட்டியாரின் தன்மானமும், வள்ளியம்மை ஆட்சியின் நயமான பேச்சும் படிக்கும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
    கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீரான வேகத்தில் சென்றது. உங்களின் எந்தக்கதையைப்படித்தாலும் யார்க்கும் மனது கனக்காது. ஏனெனில் எல்லாவற்றையுமே பாசிடிவ் ஆக முடிப்பதால்./////

    எழுதுபவர்களுக்கு ஒரு சமுதாயக் கடமை உள்ளது. எல்லாவற்றையுமே பாசிடிவ் ஆகத்தான் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  38. ////Blogger arul said...
    superb story nice moral////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. ///Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    படிப்பதற்கு ஒரு இடத்தில் தொய்வேயில்லாமல் யதார்த்தமான வசனங்களோடு ஆழமான உணர்வுகளை தொட்ட கதை...வ‌ள்ளிய‌ம்மை ஆச்சி போன்று ந‌ல்ல‌ ம‌ன‌மும்,பேச்சாற்ற‌லும் கொண்ட‌ பெண்க‌ள் இன்றைய‌ சூழ்லில் அரிதாகிக் கொண்டே போகின்ற‌ன‌ர்...சில‌ருக்கு ந‌ல்ல‌ ம‌ன‌மிருந்தாலும் பேச்சுத்திற‌மை குறைவாக‌யிருக்கும்,அத‌னால் வாழ்க்கை ஏணியில் ஏற‌ சிர‌ம‌ப்ப‌ட‌ நேர‌லாம்...இவை இர‌ண்டும் ஒரு சேர‌ அமைய‌ப் பெற்றிருக்கும் ஆச்சிக்கு முருக‌ப் பெருமானின் அருள் பூர‌ண‌மாக‌ கிடைத்துள்ளது...
    உண்மையில் ப‌ழனியாண்ட‌வ‌ர் இருவீட்டாருக்கும் விலை ம‌திப்பில்லா வெகும‌தியை அளித்துள்ளார்...இப்ப‌டி நாட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ மாறிவிட்டால் பல திரும‌ண‌ங்க‌ள் த‌டைப்ப‌டாது இனிதே ந‌ட‌ந்தேறிடுமே!!!
    பழனியாண்டவர் அண்ணாமலையாரின் மகளுக்கு அளித்த நல்ல வாழ்க்கையை அனைவருக்கும் வழங்கட்டும்...ந‌ல்ல‌ அருமையான‌ க‌தைக்கு மிக்க‌ ந‌ன்றி ஐயா.../////

    வாழ்க்கை நெறிப்படுவதற்கு இறையுணர்வு அவசியமானது. அதானால்தான் என்னுடைய கதைகளில் பழநிஅப்பனும் ஒரு பாத்திரமாக வந்து நிற்பார்!

    ReplyDelete
  40. ////Blogger R.Srishobana said...
    ஐயா,நான் இணையத்தில் படித்த முதல் தமிழ் வலைதளம் தங்களுடைய வகுப்பறை தான்...ஜோதிடம் மீதிருந்த‌ ஆர்வத்தினை தாண்டி ஆழ்ந்து கற்கும் எண்ணத்தை நான் இங்கு தான் உணர்ந்து கொண்டேன்...என் போன்று இக்கலையை அறியும் பொருட்டும் ஆனால் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களது வருத்தங்களை தெரிவிக்காமல் இருப்பவர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள்...
    நேரமின்மையால் தான் தாங்கள் இம்முடிவை எடுக்க வேண்டிய நிலையினை எங்களால் உணரமுடிகிறது...உமா அவர்கள் குறிப்பிட்டுள்ளதை போல தங்களது ஆக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ளலாம் அல்லது ஓய்வு கிடைக்கும் பொழுது மட்டும் எழுதலாம்...அதைப் போலவே பின்னூட்டங்கள் இடுவதை கூட குறைத்தோ அல்லது இடாமலும் தவிர்க்கலாம்...
    தங்களுடைய மற்ற கடமைகளுக்கு முன்னுரிமை தந்து சற்று ஓய்வு நேரத்தில் வகுப்பறையில் "கௌரவ பேராசிரியராக" வகுப்பு எடுக்கலாம் என்பது எனது கருத்து...
    நம்முடைய சுயநலத்திற்கு பிறரின் நலத்தைப் பற்றியும் பாராமல் இருப்பது நியாயமில்லைதான்...நல்ல தெளிவான முடிவை பழனியாண்டவரும்,தாங்களும் தான் எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்...நன்றி ஐயா...////

    உங்களுடைய மேலான ஆலோசனைகளுக்கு நன்றி சகோதரி! உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. ஒரு தெளிவான முடிவு உண்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பொறுத்திருங்கள் எல்லாம் உங்கள் (வாசகர்கள்) விருப்பப்படிதான் நடக்கும்!

    ReplyDelete
  41. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    படிக்கும் போது நேரில் பார்ப்பதை போன்ற
    தங்களின் ஆக்கம் மிக மிக அருமை.
    நன்றி!!

    ReplyDelete
  42. தங்களுடைய நேர்மறை எண்ணங்கள் வெளிப்படும் அருமையான கதை. ரசித்துப்படித்தேன். இந்தக் கதையில் வருவது போலவே எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் உலகில் எந்தப் பிரச்சனையும் இருக்காது அல்லவா?

    ReplyDelete
  43. ரொம்பவும் பிடித்திருந்தது. உண்மை கதையோ. நல்ல கருத்து சுவரசியமான நடை.

    ReplyDelete
  44. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    படிக்கும் போது நேரில் பார்ப்பதை போன்ற
    தங்களின் ஆக்கம் மிக மிக அருமை.
    நன்றி!!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  45. ////Blogger kmr.krishnan said...
    தங்களுடைய நேர்மறை எண்ணங்கள் வெளிப்படும் அருமையான கதை. ரசித்துப்படித்தேன். இந்தக் கதையில் வருவது போலவே எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் உலகில் எந்தப் பிரச்சனையும் இருக்காது அல்லவா?////

    ஆமாம் ஜாதகத்தைக் கையில் எடுக்கும் வேலையும் இருக்காது!:-)))

    ReplyDelete
  46. ////Blogger செ. நாகராஜ் - C. Nagaraj said...
    ரொம்பவும் பிடித்திருந்தது. உண்மை கதையோ. நல்ல கருத்து சுவரசியமான நடை.////

    கற்பனைக்கதைதான். உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. வணக்கம் அய்யா,
    எத்தனை பேர் எழுதினாளும்,தங்கலது பதிவில் தனிதன்மை எனை மிகவும் கவர்ந்தது.உணர்வுபூர்வமான வரிகள் எப்பொலுதும் உயிரோட்டம் உள்ளதாகவே எருக்கும்.
    வாழ்க வளமுடன்.என்றும் அன்புடன் அரிபாய்.

    ReplyDelete
  48. Sir,I think such good things and good people happen only in stories.we rarely get to meet them in real life.

    ReplyDelete
  49. Dear Sir,

    Write when you have time.Actually no need to respond to reader comments unless you feel it is essential.If you stop writing it will be a great loss for readers like us.An occasional post even once a week will be a good option.

    ReplyDelete
  50. Sir ,
    I am not a regular browser of web sites and got introduced through my father "Thanjai Gopalan". Very good discussions are placed in the site which is very interesting and thaught provoking too. My respected uncle sri KMRK of Lalgudi is adding taste through his writings.

    I had an occasion to attend my friend's daughter marriage at Virachilai near Karaikudi. The magnitute of the marriage really made me frieghtened and hence I had an opinion about the Nagarathar's marriage.

    Your story ( perhaps a real story I presume) is excellent, neatly narrated and with happy ending which gives me a sense of happiness of reading the story.

    Sir kindly continue such writing and I shall try to read your other short stories also.

    G SRIDHARAN

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com