மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.12

அனைவருக்கும் பொதுவானது எது?

 மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.

இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணத்தில் இருந்து திரும்பியவுடன், முதல் வேலையாக மாணவர் மலரை வலைஎற்றியுள்ளேன். சற்றுத் தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ++++++++++++++++++++++++++++++++++++++



வழிபடும் முறை எத்தனை வகைப்படும்?
ஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.

முற்காலத்தில் நமது இந்து தர்மத்தில் ஏராளமான வழிபாட்டு முறைகள் இருந்தன. ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்,  அவை எல்லாவற்றையும் முறைப்படுத்தி, ஆறு விதமான வழிபாட்டு முறைகளாகத் (ஷண்மத ஸ்தாபனம்) தொகுத்தார். அவை,
 1.விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபத்யம்.
 2.சிவபெருமானை பிரதான தெய்வமாக வழிபடும் சைவம்.
 3. திருமாலை முக்கியக் கடவுளாக வழிபடும் வைணவம்.
 4. முருகப் பெருமானை முதல்வனாக வழிபடும் கௌமாரம்.
 5.அம்பிகையைப் போற்றி வழிபடும் சாக்தம்.
 6. சூரிய பகவானை  முக்கிய தெய்வமாக‌ வழிபடும் சௌரம்.
என்பன.
அன்பே சிவம். எல்லாம் சிவமயம் என்னும்  உன்ன‌தக் கொள்கையை உள்ளடக்கியது சைவம்.  சைவ சமயம் அநாதியானது (ஆதி= தொடக்கம், தொடங்கிய காலம் அறிய இயலாதது)  சைவ சமயத்தினர், சிவபெருமானை, முக்கியக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
(திருமந்திரம் : -270)

அனத்துயிரினிடத்தும் ஈசன் உறைவதால், ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும் என்பது, சைவம் காட்டும் உயரிய நெறி.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே (திருமந்திரம் : -1857) என்று திருமூலர், மன்னுயிர்க்குச் செய்தல் மகேசனைச் சென்று சேரும் என வலியுறுத்துகிறார்.
 
சைவசித்தாந்தம் என்னும்  அற்புத நெறி, சைவ சமயத்தின்உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

இறைவன், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறான். என்பதே சைவசித்தாந்தக் கொள்கையாகும்.
இது, பசு ( ஆன்மா), 

பதி (இறைவன்), 

பாசம் (ஆணவம், கன்மம்,மாயை எனப்படுகிற‌ மும்மலங்கள் அதாவது குறைபாடுகள்) என்கின்ற முப்பெரும்  உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.
இதில், நான், எனது எனும் கருத்தே ஆணவம். 

கன்மம் என்பது செயல்கள்(வினை) மற்றும் அவற்றின் விளைவுகள்,(வினைப்பயன்கள்).வினைகளில் மூவகை உண்டு. அவை.

1.சஞ்சிதம் (பழ வினை), 2. ஆகாமியம் (வினைப்பயனை அனுபவிக்கும் பொழுதுஏற்படும் வினைப்பயன்கள்) 3.பிராரத்தம் (இப்பிறவியில் செய்யும் செயல்களின் வினைப்
பதிவுகள் )ஆகும்.

மாயை ‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது. சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்ற‌ன.


ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.  (திருமந்திரம்-எட்டாம் ந்திரம்)


 அரிசியைதவிடுஉமிமுளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவைஆணவம்

கன்மம்மாயையாகிய முக்குற்றங்களும்சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.
சிவனார் ,ஆன்மாக்களின் முக்குற்றங்களை நீக்கி, சிவ சாயுஜ்ய நிலையை அடையச் செய்வதற்காகச் செய்யும்,தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ,அருளல் என்று ஐவகைப்படும்

படைத்தல்: முழு முதல் பிரம்ம நிலையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தல். (தனு ‍= உடல் ,கரணம் ‍= மனம் முதலிய கருவி, புவனம்= நாம் காணும் இந்த உலகம்,  போகம் அனுபவிக்கப்படும் பொருள்).
காத்தல்: படைத்தவற்றைக் காத்தல்.
அழித்தல்: படைத்தவற்றை,முழு முதல் பிரம்ம நிலையில் ஒடுக்குதல்,
மறைத்தல்: ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல்.
அருளல்: ஆன்மாக்களின் பாசத்தினை நீக்கி, சிவதத்துவத்தை உணர்த்துதல்.

சித்தம் சிவமாகி செய்வதெல்லம் தவமாகிய சிவனடியார்கள் எண்ணற்றோர். சிவனடியார்கள் சிலரைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

மெய்கண்டார்.:

சைவ சித்தாந்த நூல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது சிவஞான போதம். இந்த ஒப்பற்ற நூலை உலகுக்குத் தந்தவர் மெய்கண்ட தேவர். புறச்சந்தானக் குரவர்கள் நால்வருள் (மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார்)  முதன்மையானவர் இவர். சைவ சமயத்துக்கான குரு மரபையும், சைவ சித்தாந்த சாத்திரத்தையும் உருவாக்கியவர் இவரே. இவரது காலம் கி.பி. 13ம் நூற்றாண்டின் முற்பகுதி.

(சந்தானக் குரவர்கள், ஒருவருக்கொருவர், குரு சீட உறவு கொண்டோர். மடங்களை ஸ்தாபித்து, அதன் மூலம் சைவ சமயம் தழைக்கச் செய்த பெருமையுடையவர்கள்)

திருவெண்ணெய் நல்லூரில், அச்சுதக் களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். குழந்தைப் பேறின்மையால் வருந்திய அவர், அவர்தம் குருவாகிய சகலாகமப் பண்டிதரை சென்று பணிந்தார். பண்டிதர், திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார். அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய 'கண்காட்டும் நுதலானும்' என்று தொடங்கும் திருவெண்காட்டுப் பதிகத்தில், இரண்டாம் பாடலான, "பேயடையா பிரிவெய்தும்;" எனத் தொடங்கும் பாடல் வந்தது. ஆகவே, அவர், அச்சுதக் களப்பாளரையும், அவர் மனைவியையும், திருவெண்காட்டுக்குச் சென்று, அங்குள்ள மூன்று குளங்களில் நீராடி, இறைவனாரைப் பூசித்து வரச் சொன்னார்.

'இப்பிறவியில் உங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லையாயினும், சம்பந்தனின், பதிகத்தின் மேல் கொண்ட நம்பிக்கைக்காக, ஞானக்குழந்தை ஒன்றை அருளுவோம்' என்று கனவில் சிவனார் உரைக்க, அதன்படி, இறையருளால், ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றார் அச்சுதக் களப்பாளர். இறைவன் திருநாமத்தையே, சுவேதவனப் பெருமாள் என்று குழந்தைக்குச் சூட்டினார். ஒருநாள், தன் தாய் மாமனின் இல்லத்தின் வெளியே, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாளை, ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த, அகச் சந்தானக் குரவர்கள் நால்வருள் (திருநந்திதேவர், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர்) ஒருவரான‌ பரஞ்சோதி முனிவர் கண்டு, கீழிறங்கி வந்து, அவருக்குச் சிவஞான சூத்திரங்களையும் மெய்ஞ்ஞானத்தையும் அருளிச் செய்தார். அவருக்குத் தம் குருவின் பெயரான சத்திய ஞான தரிசினி (''மெய்கண்டார்' ) என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

மெய்கண்டார், தம் குரு அருளிய சிவஞானசூத்திரங்களைத் தமிழில் 'சிவஞான போதம்' என்ற பெயரில் அருளினார். 

தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்'
பின்னை மறத்தல் பிழையல் அது -------முன்னவனே
தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே 
மானே தொழுகை வலி. (மெய்கண்டார், சிவஞான போதம்)

இந்தப் பாடலில், ' தன்னுள் இருந்து, தன் அம்சமாகவே அனைத்தையும் படைத்த சிவனாரை, மறவாது ஏத்துதல் பிறவிக் கடன்' என்பதைத் தெள்ளென உணர்த்துகிறார் மெய்கண்டார்.

ஒரு நாள், மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார் மெய்கண்டார். அவரது குல குருவாகிய சகலாகமப் பண்டிதர் அதைக் கண்டு, மனம் பொறாது, அவரிடம் சென்று, 'ஆணவமாவது யாது?' என்று கேட்க, அதற்கு அவர், எதுவும் பேசாமல், விரல்களால் பண்டிதரைச் சுட்டிக் காட்டினார்.

உண்மை உணர்ந்த பண்டிதர், மெய்கண்டாரின் கால்களில், வீழ்ந்து பணிந்தார். மெய்கண்டார்,அவருக்கு 'அருணந்தி சிவம்' எனும் தீக்ஷா நாமம் தந்து சீடராக ஏற்றுக் கொண்டார்.  அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, சிவஞான சித்தியார் எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார்.


வாழ்வியல் நெறிகளில் ஒழுகுவதோடு, இறைவனைப் பூசை செய்யும் அவசியத்தை, சிவஞான சித்தியாரில் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.



காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
 மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
 வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
 பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே" (சிவஞான சித்தியார்)

அதிபத்த நாயனார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அதிபத்த நாயனார். இவர், நாகையின் கடலோரப் பகுதியான, நுளைப்பாடியில் பரதவர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானிடத்தில் மாறாத பக்தி கொண்ட சிறந்த சிவனடியாரான இவர் அக்குலத்துத் தலைவரும் ஆவார். 

அனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்.  (சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், அதிபத்த நாயனார் புராணம்)

அவர், தினந்தோறும் பிடிக்கப்பட்டு வரும் மீன்களில் சிறந்த மீனொன்றை, "இது தில்லைக் கூத்தாடும் இறைவனுக்காக" என்று மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதைப் பலகாலம் செய்து வந்தார். ஒரு நாள் ஒரு மீன் மட்டுமே அகப்படினும், அதையும் இறைவனுக்கே என்று கடலில் விட்டுவிடுவார்.

இவ்வாறிருக்க, இறைவன், அடியவர் பெருமையை உணர்த்தத் திருவுளம் கொண்டு, பலநாட்கள் ஒரு மீன் மட்டுமே கிடைக்கச் செய்தார். அதையும் அதிபத்தர், கொள்கை மாறாது, மீண்டும் கடலிலேயே விட்டு வந்தார். தன் பெருஞ்செல்வம் சுருங்கி வறியவர் ஆன போதும் அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. 

மீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார். (திருத்தொண்டர் புராணம்)

ஒரு நாள், இறைவன், பொன்னும் மணியும் பதித்த, விலை மிகுந்த அற்புதத்தன்மையுள்ள ஒரு மீன் மட்டும், அதிபத்தருக்குக் கிடைக்கச் செய்தார். ஆயினும் , அதிபத்தர், கொண்ட உறுதி தவறாது, அதனையும் கடலிலேயே விட்டு விட்டார். அவ்வாறு அவர் செய்ததும், பொன்னாசை இல்லா, கொண்ட கொள்கையிலே தளராத உறுதிப்பாட்டுடைய அதிபத்தர் முன், இறைவன், நந்திதேவர் மேல் எழுந்தருளினார்.

அப்போது,  ஐந்து விதமான தேவ‌ வாத்தியங்கள் ஒலித்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். எம்பெருமானார்,பக்தியிற்ச் சிறந்த‌ அடியவருக்கு, சிவ சாயுஜ்ய பதவி அருளினார்.

பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார். (திருத்தொண்டர் புராணம்)

சிவனாரின் மற்றொரு திருவிளையாடலைப் பார்க்கலாம்.

குசேல வழுதிப் பாண்டியன, இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த பாண்டிய மன்னன். அதன் காரணமாக ஆணவம் மிகக் கொண்டிருந்தான். அச்சமயம், இடைக்காடர் எனும் புலவர், தான் இயற்றிய பிரபந்த நூலை, மன்னன் முன் படித்துக் காட்ட வந்தர். மன்னன், நூலை வாசிக்கச் சொன்னாலும் அவன் மனம் அதில் இல்லை. தேவையற்ற இடங்களில் 'மிக நன்றாக இருக்கிறது' என்று ஒப்புக்குச் சொன்னான். இடைக்காடர், மனம் நொந்தார். அவையிலிருந்து, நேரே, சோமசுந்தரக்கடவுள் உறையும் ஆலயத்திற்குச் சென்று,அவரிடம் மனம் பொறாது, தன் வேதனைகளைக் கொட்டினார். 

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே  தன்னைச் சார்ந்தோர் 
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார்   வேம்பன் 
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன்  என்று புகலக் கேட்டுச் 
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி  
(பரஞ்சோதி முனிவர், திருவிளையாடற்புராணம், இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்)

பக்தரை மதிக்காத மன்னனைத் திருத்த, மறைகாணா திருவடிகளுடையோன் திருவுளம் கொண்டான். மறுநாள், திருச்சன்னதி திறந்தபோது அனைவரும் அதிர்ந்தனர். இறையனார், மீனாட்சி அம்மை இருவரது விக்கிரகங்களையும் காணவில்லை. மன்னனுக்குச் செய்தி போயிற்று. அவன் பதறி, அழுது, தொழுதான். அப்போது, வைகையின் தென்கரையில் புதிதாக ஒரு மண்டபம் தோன்றி அதில் சிவலிங்கம் இருக்கும் செய்தி மன்னனிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அசரீரி மூலமாக, சிவனார்."குசேலவழுதி, என் பக்தனை அவமதித்துப் பெரும்பிழை செய்தாய். பக்தர்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். இந்த மதுரையில் உள்ள பல சுயம்புலிங்கங்களுள், வட திசை அதிபனான குபேரன் பூஜித்த இந்த லிங்கத்தைத் தேர்ந்தெடுத்து நான் ஐக்கியமாகியுள்ளேன்." என்றார்.
ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ தேனும் 
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு 
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே 
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் 
                              வந்தேம் என்னா. (திருவிளையாடற்புராணம்)

 உண்மை உணர்ந்த பாண்டியன், இடைக்காடருக்கு விழா எடுப்பதாக வாக்களித்து, மன்னிப்பு வேண்டினான். இறைவன் மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளுவதாகவும், குபேரலிங்கம் உள்ள இடம் வடதிருவாலவாயாக விளங்கும் எனவும் வரமளித்தார். 

ஈசன் அனைத்துயிர்க்கும் நேசன். புராணங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம், மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி, நல்வழி நடக்கச் செய்வதே. நிஜமென்று போற்றினாலும், கதையென்று கருதினாலும் அவை கூறும் உட்பொருள் உணர்தல் உலக வாழ்வுக்கு நலம் பயக்கும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 






அனைவருக்கும் பொதுவானது எது?
ஆக்கம்: கே முத்துராமகிருஷ்ணன், லால்குடி
கலியுகம் வந்துவிட்டதற்கு அடையாளம் சொல்லும் போது பல அடையாளங்களில் ஒன்றாக 'கலியுகத்தில் உணவு காசுக்கு விற்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதாம்.

உணவை விற்பது என்பது நமது நாட்டு வழக்கம் அல்ல.உணவு என்பது பசியுள்ள அனைவருக்கும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல், கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் நாட்டு மரபு.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்பது நமது அடிநாதம்.

'அற்றார் அழிபசி தீர்த்தல்', 'வறியார்க்கு ஈதல்', 'விருந்து எதிர் கோடல்' என்பவையெல்லாம்  நமது பண்பாடு.

இவை மதம் நமக்கு இட்டுள்ள கடமையோ அல்லது கட்டுப்பாடோ அல்ல.
'இவற்றை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை' என்பது போன்ற
பயம் காட்டுதல் எதுவும் இல்லாமலேயே நமது மக்கள் இயல்பாக, இவற்றைச் செய்கிறார்கள்.அவர்களுக்கு இப்படிச் செய்வதால் தங்களுக்குப் புண்ணிய்ம் கிடைக்கும் என்ற 'குறிஎதிர்ப்பு',எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

மற்றவர்கள் காணத் தான் மட்டும் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என்று குழந்தையில் இருந்து கற்பிப்பது நமது வழக்கம்.

காக்காக்கடி கடித்து கம்மர் கட்டைப் பங்கு போடுவது நமது விளையாட்டு.

நமது நாட்டில் பேச்சு துவங்கும் முறையே 'சாப்பிட்டாச்சா?' 'என்ன சாப்பாடு?''என்ன சமையல்?'என்பதாகவே இருக்கும்.

இதுவே வெளிநாட்டுக்காரரகள் தட்ப வெப்ப நிலை பற்றிப் பேசி பேச்சைத் துவக்குவார்கள்.

ஐந்து பிள்ளைகளை வளர்க்கும் விதவை ஏழை அன்னை, ஆறாவதாக குப்பைத் தொட்டிக் குழந்தையையும் தன் குடிசையில் சேர்த்துக் கொள்வது இங்கேதான் நடக்கும்.

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்பது தான் நமது லட்சியம்.

"தனி மனிதனுக்கு உணவு இல்லயெனில்...." என்று சிந்திப்பதும் நாம் தான்.

"வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்?" என்று சொல்லக் கொதிப்பதும் நாம் தான்.

மாதுளங் காய்களை அணில் கடிக்காமல் இருக்கத் துணி கட்டப்பட்டது.எல்லாக் காய்களிலும் கட்டியாச்சா என்று இளம் பண்ணையார் வந்து மேற்பார்வை பார்த்தார்.அந்த வாலிபப் பண்ணையாரின் கொள்ளுப் பாட்டியார் அங்கே வந்தார்.

"என்னடா!எல்லாக் காயிலும் துணி சுத்திப் போட்டீங்க?!  பத்து காய சும்மா உடுங்கடா" என்றார்.

"ஏன்? எதுக்கு?"

"எதுக்கு? அணில் கடிக்க‌த்தான்" என்றார்.

பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அன்னமிடுதலே நமது  இயல்பு.

இதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.

உங்களுக்குப் பசி வந்திட்டால் எப்படி இயல்பாக உணவை நாடுவீர்களோ
அதுபோலவே பிறருக்கும் பசிவரும் என்று உணர்ந்து அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வது 'தன்ன்னுயிர் போல் மன்னுயிரையும்' கருதுதல் ஆகும்.

'எல்லோரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், அன்னத்தை இலவசமாகக் கொடுக்கக் கூடாது' என்பது வியாபாரக் கண்ணோட்டம்.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது நாகரீகம் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதால்தான்
மத மாற்றத்திற்காக உணவும்,உடையும், பண்டமாற்றாக அளிக்கப்படுகின்றன‌.

இங்கே செய்யப்படும் எந்த நற்செயலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.

ஹோட்டல், ரெஸ்டாரென்ட் என்பவை மேற்கத்திய வடிவம்.நமது நாட்டில் உணவளிக்க சத்திரங்கள் உண்டு. சத்திரத்தில் எல்லாம் இலவச உணவுதான்.

"சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பண்ண ஐயாங்கார் உத்தரவா?" என்பது ஒரு சொல்லடை.அதாவது அங்கே நிர்வாகம் ஒன்றும் தேவையற்றது என்பது கிடைக்கும் பொருள்.அப்பண்ண ஐயங்காரின் சொந்தச் சொத்துக்களை வேண்டுமானால் அவர் நிர்வகித்துக்கொள்ளலாம். பொது விஷயத்தில் தனி மனிதருக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருத்தல் என்பது நமது நாட்டு நடப்பு.

ஒரு பாரதவாசி தன் வாழ்நாளில் சஹஸ்ர போஜனம்(ஆயிரம் உணவு) செய்விக்க வேண்டும் என்பது  எழுதப் படாத எதிர்பார்ப்பு. அதனால்தான் திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.

"படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு இங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக்கோயில்  பகவர்க்கு அது ஆமே" என்பது திருமந்திரம்.

ஆண்டவனுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்தைக் காட்டிலும், அடியவர்க்கு அளித்தல் உகந்தது என்பது பெறப்படுகிறது.

அதாவது ஆண்டவனும் அடியவரும் ஒருவரே என்பதான பாவம் நமக்கு வர வேண்டும்.

"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே."

இதுவும் திருமூல நாயனார் அருளியதுதான். ஒரு விலவதளம் ஆண்டவனுக்கு, பசுவுக்கு ஒரு பிடி அகத்திக்கீரை,தான் உண்ணும் போது ஒரு கைப்பிடி அன்னமோ, அரிசியோ தானம் செய்வது எல்லோருக்கும் எளிதானது.இம்மூன்றையும் செய்யமுடியாதவர்கள் பிறருக்கு இனிமையான சொற்களையாவது சொல்லலாம். குறைந்த அளவாக நமது மரபுகளின் உட்பொருளை அறிந்து கொள்ளாமலே அவற்றை விமர்சிப்பதையாவது தவிர்க்கலாம்.

"ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின்..."

பசி அனைவருக்கும் பொது. இதில் ஏழை பணக்காரன், உடல் ஊன முற்றவன் என்ற பாகுபாடு இல்லாமல் உணவு இடுவோம்.

நாம் உணவளிப்பதால் எல்லோரும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்பதெல்லாம் அதீத கற்பனை. அந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பது ஒரு கடவுள் சேவை. அதனை செய்ய முற்படுவோம்.

(சென்ற மலரின் தஞ்சாவூராரின் இடுகையின் தாக்க‌த்தல எழுந்த எண்ணங்கள்)

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(லாலகுடி)

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

நாட்டுப்பாடல்
எடுத்துக்கொடுப்பவர்: தேமொழி

[புலிகட் தனுசு அவர்கள் சென்றவார மாணவர் மலரில் கொல்லிமலை அழகி ஒருத்தி தன் வில்லாளன் வருகைக்கு காத்திருப்பதை "காத்திருப்பில் கலங்காதே" என்று கவிதையாக வடித்திருந்தார்.  அதைப் படித்த எனக்கு ஒரு நாட்டுப்புற பாடல் நினைவில் வந்தது.  இந்தப் பாடல் அந்தப் பெண் வில்லாளனுக்கு பாடும் 'எசப்பாட்டு' போன்று அமைந்த பாடல்.  நீங்களும் அதன் பொருத்தத்தை உணர்ந்து வியப்பீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.]

விளக்கம்:
அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான்.  அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.

பெண் :    
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?

சந்தனவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே

உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நின்னு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து

வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை

போலீசு வேட்டி கட்டி
புதுமலைக்குப் போறவரு
போலீசு வேட்டியில
போட்டு விட்டேன் மேவிலாசம்
கோடாலிக் கொண்டைக்காரா
குளத்தூருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்

துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம் பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?


வட்டார வழக்கு:
வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்;
கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?;
மேவிலாசம்-மேல்விலாசம்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி
சேகரித்த இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
பக்கம் 113

பேராசிரியர் நா. வானமாமலை,எம் ஏ.,எல்.டி. யின்
"தமிழர் நாட்டுப்பாடல்கள்"
(மூன்றாம் பதிப்பு, 1976)
இது ஒரு நாட்டுடமையாகப்பட்ட நூல் 
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 4
வரைபடம்: கிராமத்துப்பெண்
ஆக்கம்: தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

படத்திற்கான கவிதை
ஆக்கம்: தனுசு


 படம்: நன்றி-தினமலர்-27-04-2012

கண்ணாபுரம் காளி
ஆக்கம்: தனுசு
---------------------
சூரக்கோட்டை
சிங்கம் வாராடா
சிதறி ஓடு
சிறுத்தை வாராடா
விலகி நில்லு
வேங்கை வாராடா-இவள்
வரிப்புலி வம்சம் தானடா.

ஆடிச்சி புடிச்சி
ஆட வராடா
அடங்காத காளையை
மடக்கி புட்டாடா
உறிச்சி மேய
கொண்டு போராடா
உறுமி அடிச்சி
அனுப்பி வையடா

திமிலை பெறுத்து
ஒன்னும் இல்லைடா-இவள்
திமிருக்கிட்ட
தோத்து போகுண்டா
கொம்பு சீவி
கொண்டு வந்தாண்டா-இவள்
தெம்பு முன்னே
மூட்டி போடும்டா.

சூடம் ஏற்றி
கொளுத்தி கொண்டாடா
திருஷ்டி சுற்றி
பொட்டு வையடா
குத்து விளக்கு
பரிசு கொண்டாடா
கொட்டமடிக்க
ஊரைக்கூட்டடா

காங்கேயம்
அடக்கி வாராடா
தில்லிருந்தா
துணிந்து நில்லடா
பல்லெகிரும்
பார்த்து நில்லுடா-நம்ம
கண்ணாபுரம் காளி இவடா
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

ஏன் உதிர்ந்தாய் பூவே
ஆக்கம்: தனுசு

நான் ரசித்த பூவே
விழியால் ருசித்த பூவே-என்
மனதில் வேர்விட்ட செம்பருத்திப் பூவே!
ஏன் உதிர்ந்தாய் இன்று.!

உன் ஜோடிப்பூவை யாரும் பறித்தாரா?-உன்
நாடிப்பிடித்து முகர்ந்தாரா?
கண்வைத்து பெண் பூக்கள்
திருஷ்டி போட்டாரா!

வாடை காற்று தொட்டதா?
கோடை வெயில் சுட்டதா?
மழைச்சாரல்  பட்டதா?
மிண்ணல் உன்னை கண்டதா?

பட்டாம் பூச்சி முறைத்ததா?
பச்சை இலை மறைத்ததா?
வண்டு உன்னை மொய்த்ததா?
தேன் குடித்து சென்றதா?

நிலவு கோபம் கொண்டதா?
இரவு துணை போனதா?
பனியும் விழ மறுத்ததா?
மழலை கைகள் கிள்ளியதா?

உன் மரக்கிளையில்
குடியிருந்த குருவி
குடிபெயர்ந்து சென்றதா?-நீ
மணம் உடைந்து விழுந்தாயா?

உன்னைவிட அழகாய்
என்னோடு வரும் என் காதலியின் அழகை பார்த்து
வெட்கப்பட்டாயா?-அதனால் நீ
உன்னையே சிதைத்துக் கொண்டாயா?

-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
 நகைச்சுவை
அலுவலகம் புதுப்பிக்கப்படுகிறது
ஜி.ஆனந்தமுருகன்



இன்றைய நிலையில் வழிபாடு
ஜி.ஆனந்தமுருகன் 


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

80 comments:

  1. 7. b
    வழிபாட்டுடன்
    விழிப்புடன் இருக்க

    வரைந்தது ஓவியமா....?
    வளைத்து வந்த காவியமா.....?

    கிருத்துவ பிரார்த்தனை தலங்களில்
    காலணிகளுடன் செல்லலாம்

    இந்து தலங்களில் இது
    இல்லை என்பதற்கு 1,2 விளக்கம் வருமா?

    7. a
    அலுவலக மாற்றம்
    அவருக்கு ஏமாற்றமோ..

    ஆடவருக்கெல்லாம்
    பெண்டீர் என்பது என்னவோ போலில்லை?

    6.
    உதிரிப் பூக்களை எண்ணி
    உருகிப் பாடிய அந்த மலரே

    அய்யருக்கு காலை உணவு
    அப்படியே எடுத்து சாப்பிடுவோம்

    கவிதை புலி வடித்த ரத்தக் கண்ணீர்
    கரையே அப்பூவில் நிறத்தை (மாற்றியதோ?) காட்டியதோ?

    ஆனாலும் விடுவதாக இல்லை
    அய்யரின் காலை உணவு செம்பருத்தியே
    ....

    கண்ணபுரம் காளை (காளி)யை
    காட்டுத்தனமாய் புகழ்ந்தது ஆகா..

    தில்லிருந்தா
    துணிந்து நில்லடா

    என்ற வரிகளை
    தில்லியிலிருந்தா(லும்)
    துணிந்து நில்லடா
    என்று படித்து திருத்திக் கொண்டோம்

    வண்ணம் தீட்டும் துரிகை தோழியிடம்
    எண்ணம் பூட்டும் துரிகை தனுசிடம்

    உமது பெயர் "R" என்ற எழுத்தில் எனில்
    உள்ளபடியே சொல்லுங்கள் "ஆம்" என்று

    வாழ்த்துக்கள்..
    வளமான சொல்லோட்டத்திற்கு

    3.
    வருசநாட்டை விளக்கி காட்டி
    வந்த எசப்பாட்டு தொகுப்பு ரசிப்பினை தொட்டுக் காட்டியது..

    "பூங்காற்று திரும்புமா....?" என்ற
    முதல்மரியாதை எசப்பாட்டை சுழல விட விரும்பினாலும்
    நீங்களே கேட்டு ரசித்துக் கொள்ளுங்கள்.. (இன்று வேறு பாட்டை சுழல விடுகிறோம்)

    வரைந்த வண்ண ஓவியமும்
    வரவழைத்தது கிராமத்து உணர்வுகளை

    பட்டம் உங்களுக்கு
    திட்டவட்டமாக உண்டு

    2.
    ///இதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.///

    சபாஷ்...அருமை... அருமை..

    பசிக்குணவிடுதல் ... தானம்...
    பக்குவமாய் விளக்கியது அருமை..

    "பொதி சோறு தந்த இறைவனார்"

    "அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்று சம்பந்தரும்

    "அடியலாருக்கு அமுது செய்வித்தல்"
    என சேக்கிழாரும் சொல்வதை எடுத்துக்காட்டியமையை

    உளம் உருகி படித்து மகிழ்தோம்
    மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறோம்..

    நல்விருந்து படைத்த
    நாயகமே நாளும் வாழ்க...

    1.

    "சித்தாந்தம்" என்ற சொல்லாட்சியை பயன் படுத்தியவர் திருமூலரே அவரை மேற்கோள் காட்டியே வந்த

    "படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில்நடமாடக் கோயில் நம்பர்க்கு இங்கு ஆகாநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே" என்ற திருமந்திரம்.

    இதே மேற்கொள் அடுத்த பதிப்பிலும்
    இடம் பெற்றுள்ளது இயல்பே வியப்பே

    முதல் வரி மட்டும்
    முறைக்க வைத்த பதிவு

    முற்காலத்தில்
    "ஏராளமான வழிபாட்டு முறை" என்பதில் எதனை முற்காலம் என்கின்றீர் தோழி..
    (13ம் நுற்றாண்டிற்கு முன்னரா-.?)
    வள்ளுவர் காலத்தை பழக்கத்தில்
    வரையறுத்து சொல்லும் காலத்தில் இருந்த வழிபாட்டு முறை ஒன்று தானே..

    "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
    என்பது திருமந்திரமல்லவா
    (முன்னாள் தமிழக முதல்வர் பயன்படுத்துவதும் இதைத்தானே)

    ஒன்றே குலமென்ற பாடுவோம் என்றே
    கவிஞரும் பல்லாண்டு வாழ்க என்ற வாத்தியார் படத்தில் காட்டியிருப்பார்
    (இந்த சீனில் சில வினாடி நம் வணக்கத்திற்குரிய எம்ஜிஆர் தியானத்தில் இருப்பது போல் நடித்து இருப்பார்)

    வெண்ணெய்யை உருக்கினால்
    வாசம் தரும் நெய்கிடைக்கும்

    உருகியநிலையில் முருங்கை இலையையும் சேர்ப்பர் .. ஆனாலும் கடைசியில் கசண்டு கொஞ்சம் தேங்கிவிடும் தானே.. அதற்காக நெய்யை விளக்கியா விடுவோம்..

    வினை கொள்கைகளை படிக்கும் போது மூல கன்மம் பற்றி சொல்வீர் என நினைத்தோம்.. அது SILENT

    பின் பதியில் நாயன்மார் ஒருவரை சேர்த்தது ஏனோ தெரியவில்லை

    சிவஞான சித்தியாரின் இந்த பாடலினை சிந்தனைக்கு தந்து

    வாழ்வு எனும் மையல் விட்டு
    வறுமையெனும் சிறுமை தப்பித்
    தாழ்வு எனும் தன்மை யோடும்
    "சைவமாம் சமயம்" சாரும்
    ஊழ் பெறல் அரிழது சால
    உயர் சிவஞானத் தாலே
    போழ் இளமதியினானைப்
    போற்றுவார் அருள் பெற்றாரே.

    இன்னமும் நீங்கள்..
    இந்தப் பக்கம் வரவில்லை என்றாலும்

    அன்பான வணக்கங்களையும்
    அளவற்ற வாழ்த்துக்களையும்

    பாசமுடன் தருகிறோம்
    பெங்களுரு தோழியருக்கு..

    ReplyDelete
  2. இன்றை வகுப்பில்
    இந்தத பாடடிலினை சுழல விடுகிறோம்

    ஒன்றே குலம் என்று பாடுவோம்
    ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

    அன்னை இதயமாக அன்பு வடிவமாக
    வந்து வழிகாட்ட வேண்டுமென வணங்ககுவோம்

    கடவுளிலே கருளன தனை காணலாம்
    அந்த கருனையிலே கடவுளையும் காணலாம்

    நல்ல மனசாட்சியே
    தேவன் அரசாட்சியாம்
    அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

    பாவம் என்ற கல்லறைக்கு பல வழி
    என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி

    இந்த வழி ஒன்று தான் எங்கள் வழிஎன்ற நாம் நேர்மை ஒரு நாளும் தவறாமல் நடை போடுவோம்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினால் அவர்
    என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

    அந்த ஒளிகாணலாம் சொன்ன வழி போகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

    (இந்த பாடலில் கருணையை காட்ட திருமுருக பெருமான காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர்)

    ரசித்துப் பாருங்கள்
    ருசித்துக் கேளுங்கள்..

    ReplyDelete
  3. பார்வதி அம்மையாரின் ஆக்கம் மிகவும் உயர் தரமானது.

    'படமாடக்கோவில்.. ' திருமந்திரம் என்னுடைய ஆக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.ஒரு முறைக்கு இருமுறை அச்செய்யுள் இன்று இடம் பெறவேண்டும் என்பதும் சிவனருள் தான்.

    சந்தானக் குரவர்கள் பற்றிய செய்திகள் எல்லாம் நன்கு தொகுத்துள்ளீர்கள். உங்க‌ள் வாசிப்பின் வீச்சும், புரிதலும் வியக்க வைக்கின்றன‌.இங்கு சைவ சிந்தாந்திகள் அதிகம் பேர் உண்டு. அவர்கள் எப்படி உங்கள் கட்டுரைகளை முன்
    எடுக்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.இது 92 வது ஆக்க‌ம்.
    படிக்கப்போகும் தோழர்ககளுக்கும் சகோதரிகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  6. நாட்டுப் புறப் பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள்,ஒப்பாரிப்பாடலகள் ஆகியவற்றை ஆராய்ந்தால் நம் மக்களின் வாழ்க்கை முறை தெரியவரும்.

    tamilvu ல் இருந்து பாடலை எடுத்துக் கொடுத்த தேமொழிக்கு நன்றி!
    ஓவியமும் அழகு!

    ReplyDelete
  7. தனுசு கவிதைகள் இரண்டுமே அருமை. முதல் கவிதையைப் படித்து முடித்ததும்
    'சரிடா 'என்று மனதில் சொல்லிக்கொண்டு தள்ளி நின்று கொண்டேன்.

    செம்பருத்திப்பூ 'ஹை பிஸ்கஸ்' என்ற பொதுப் பெயருடன் பல வண்ணங்களில்
    கிடைக்கிறது. இந்த வகைப்ப் பூக்களை இந்தியா முழுதும் பரப்பியதில் ஸ்ரீராம கிருஷ்ண மடத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

    இப் பூ பல மருத்துவ குணங்கள் உடையது.நந்தியாவட்டையும் செம்பருத்தியும்தான் ஆண்டு முழுதும் பூத்து நம் கோவில்களில் தெய்வ வடிவங்களின் மீது செலவில்லாமல் அலங்கரிக்கின்றன.கவிதையைப் படித்து மகிழ்ந்தேன் கவிஞர் தனுசு அவர்களே!நன்றி!

    ReplyDelete
  8. ஆனந்தமுருகனின் தொகுப்பு நகைச்சுவைகள் வண்டுமுருகனின் நகைச் சுவைகளைத் தூக்கிச் சாப்பிடுகின்றன. கணினி பல முந்தைய தலைமுறை ஆட்களை 'டம்மி பீஸ்' ஆக்கியுள்ளது என்பது உண்மை.
    செருப்புப் பாதுகாப்பு இலவசம் என்று போட்டார்களே தவிர நடைமுறைப் படுத்தவில்லை.நகைச்சுவைக்கு நன்றி வண்டு முருகா.. சீ ..ஆனந்த முருகா!

    ReplyDelete
  9. பார்வதி அவர்களே "பசுபதி" என்பதன் விளக்கம் மிக அருமை.

    "மனித ஆன்மாவுக்கு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள் மீது ஏற்படுவதுதான் மாயை"

    மனதை நெறிபடுத்தும் நல்ல வரிகள்.

    உள்ளம் உரைப்பதை உணர்ந்து செய்தாலே ஈசனை நெருங்கிவிடலாம்.அந்த ஈசனை வழிபடும் முறை எத்தனையானாலும் வழிபடும் இறைவன் ஒருவனே.
    மத நம்பிக்கையைவிட மன நம்பிக்கை தான் இறைவனை நம்மிடம் கொண்டுவரும்.

    நல்லதொரு ஆக்கம்.
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    கிருஷ்னன் சார் அவர்களே,
    வரிக்கு வரி என்னை நிமிர்ந்து உட்கார வைத்த ஆக்கம் இன்று உங்களுடையது.

    "இவை மதம் நமக்கு இட்டுள்ள கடமையோ கட்டுப்பாடோ அல்ல"

    "மற்றவர்கள் காண நாம் மட்டும் சாப்பிட்டால் வயிறுவலிக்கும்,- குழைந்தையில் கற்பிப்பது நமது வழக்கம்"

    'காக்காகடி கடித்து கம்மர்கட்டை பங்கு போடுவது நமது விளையாட்டு"

    "ஐந்து பிள்ளைகள் வளற்கும் விதவை தாய் ஆறாவதாக குப்பை தொட்டி குழைந்தையையும் தத்தெடுத்துக் கொள்வது இங்கே மட்டும் நடக்கும்"

    "தனி மனிதனுக்கு உணவில்லையெனில்....சிந்திப்பதும் நாம் தான்"

    "வெறும் சோற்றுக்கா வந்தது இந்த பஞ்சம் கொதிப்பதும் நாம் தான்"

    "பத்துக்காயை துனி கட்டாம அணிலுக்கு விடுங்கடா"

    பசி அணைவருக்கும் பொதுவானது மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் பொதுவானது கிருஷ்னன் சார். அருமையான ஆக்கம்.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    எசப்பாட்டை எடுத்துவிட்ட தேமொழியின் ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்.

    நன்றாக இருந்தது நாட்டுப் பாட்டு.அதை படிக்கும் போது எனக்கு நானே அரைக்கால் சட்டை-துப்பாக்கி வைத்து பார்த்தேன், செந்தில் அளவுக்கு மோசம் இல்லை.


    நாட்டுப்புற பாடல்களையோ, தெம்மாங்கு பாடல்களையோ நான் படித்ததில்லை, தேடி பிடிக்க நேரமும் இல்லை.

    உங்களின் ஒவியம் அருமை.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    எனது கவிதைகளை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    ஆனந்தமுருகன் அவர்களே;

    1)பழசையும் கிழடையும் தூக்கி குப்பையில் போடு
    புதுசையும் எளசையும் தூக்கி பந்தியில் வை.
    =================================================
    2)கடவுளே என் செருப்பை நான் காப்பாத்திக்கிறேன்
    என் சிறப்பை நீ காப்பாத்து.

    ReplyDelete
  10. வாத்தியார் ஐயா வணக்கம்.

    திருவாளர் உயர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களின் படைப்பு ஏற்கனவே வெந்து , நொந்து நூலாகி போன மனதை மேலும் நோக வைப்பது போல இருக்கு . ஐயா அவர்கள் கூற வருவது இன்றைய மனித இனத்தின் அளலத்தையா அல்லது நமது முன்னோர்கள் செய்த அல்லது செய்வித்த நற்பன்புகலையா என்பது மட்டும் இந்த மர மண்டைக்கு சிறிது அளவுக்கு கூட ஏறவில்லை . ஐயா தாங்கள் தான் இதற்க்கு தக்க பதில் கூற வேண்டும் .

    இன்றைய நிலைமைக்கு நமது ஊரில் ஒரு லிட்டர் பாலின் விலை குளிர் பானங்களின் விலையை விட குறைவு. . MIT , IIT & IIM ( MADRAS INSTITUTE OF TECHNOLOGY, INDIAN INSTITUTE OF TECHNOLOGY & INDIAN INSTITUTE OF MANAGEMENT ) என்ற கல்வி நிருபனத்தில் படிக்கும் பெரும் மேதாவி மாணவர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் கிலே குறிப்பிட்ட அனைத்தும் உடலுக்கு நல்லது அல்ல செயற்கை என்ற உண்மை . ஆனால் பாருங்கோ MAKDONALD , KFC, PETRA என்று அடிக்கி கொண்டே போகலாம் அந்த அளவிற்கு உடலுக்கு நல்லது அல்லாதைவைகளை வியாபாரம் செய்யும் நிருபனத்தின் உணவி வகைகளைத்தான் தான் அனைவரும் விருப்பி சாப்பிடுகின்றனர் இதனில் யானும் ஒருவன். பஞ்சம் புழைக்க வந்த இடத்தில இதனை விட்டால் வேறு ஒரு வழியும் தெரியவில்லை அவசர காலங்களில் .

    மேலும் கிராமத்தில்உள்ள அனைத்து பெற்றோர்களும் மிகவும் பெருமையாக கூறுகின்றனர் எனது பிள்ளை முழுவதும் A/C போட்ட இடத்தில தான் வேலை பார்க்கின்றான், வந்து போகும் CAR A/C, தங்கும் இடம் A/C என்று ஆனால் உண்மை நிலவரம் என்ன எனில் இவைகள் அனைத்தும் ஸ்லொவ் பாய்சன்.


    கிராமத்தில் இயற்க்கை " அன்னை "! மடியில் உருண்டு, புரண்டு, தவழ்ந்து, மரம் மட்டையில் இருந்து விழுந்து கை கால்களில் காயம் பட்டு வளர்த்த பிள்ளைகள் படித்து நகரத்தில் அல்லது அயல் நாட்டில் வேலை பார்கின்றனர் இவ்வாறு வரும் மனிதர்களுக்கு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி ஆனது பிறந்தது முதல் சாகும் வரை A/C வளர்ந்த பிள்ளைக்கு உண்டா என்றால் இல்லை என்பது தான் ஆராட்சி மூலம் நிருபிக்க பட்ட உண்மை .

    குடிக்கும் தண்ணிரில் இருந்து toilet போக பயன்படுத்தும் தன்னிற் வரைக்கு முழுவதும் விஷம் தான்
    இதனில் கைநிறைய பணம், இன்னும் அடிக்கி கொண்டே போகலாம் அந்த அளவிற்கு எதனையோ பெறுவதற்கு எதனை எல்லாம் இழக்கின்றோம் என்பது மட்டும் உண்மைளையும் மேலான உண்மை.

    Life is beautiful !!!

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,
    பார்வதி அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை...தாங்கள் கூறிய மாயை பற்றிய கருத்துக்கள் மிக அருமை...அதிபத்த நாயனாரின் பக்தி கண்ணப்ப நாயனாரின் பக்தி மேன்மையினை நினைவூட்டுகிறது...ஆக்கத்தின் இறுதியில் தாங்கள் கூறியவை முத்தான உண்மை வரிகள்...நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி...

    kmrk ஐயா அவர்களின் ஆக்கத்தில் பஞ்சாப் பொற்கோவிலை மட்டும் தான் குறிப்பிட மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...பல பழமொழிகள்,திருமந்திரம் மேற்கோள்களுடன் அருமையான பதிவை தந்துள்ளீர்கள்...பசிக்கு உணவை அளிப்பதைவிட பணத்தை கொடுப்பதினால் தான் சோம்பேறித்தனம் வளரும் என்பது என் கருத்து...இன்றைய அவசர உலகத்தில் அன்னதானம் செய்பவர்களை கூட 'செலவாளிகள்' என்றோ 'மதவாதிகள்' என்பது போலவோ மக்கள் பார்ப்பது தங்கள் ஆக்கத்தின் முதல் வரியில் மீண்டும் கொண்டு போய் நிறுத்துகிறது...

    தேமொழி அவர்களின் கவிதை தொகுப்பு பகிர்வு நன்றாகயிருந்தது...கவிதையின் ஆரம்ப மற்றும் இறுதி வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...இது போன்ற கவிதை தொகுப்பினை படித்து அதில் தேர்ந்ததொரு பகுதியை எடுத்து அதற்கு விளக்கவுரையினையும் இணைத்து தந்து பகிர்ந்திட்ட தங்களின் மேன்மைக்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  12. தேமொழி அவர்களின் ஓவியம் 'அழகே அழகு'...தங்கள் ஓவியங்களில் வரும் பெண்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவராகவே எனக்கு தோன்றுகிறது...ஒரு வேளை ஓவியங்களில் ஆடை,ஆபரணங்களின் அழகை தீட்ட பொருத்தமானவர்களாய் இருப்பார்கள் என்பதற்காகவா?...

    தனுசு அவர்களின் கவிதைக்கு ஏற்ற படம் வாத்தியார் ஐயா தந்துள்ளார்...இப்படியொரு வீர மங்கையை நான் தங்கள் கவிதை வரிகளில் தான் அறிகிறேன்...ஒரு வேளை கோவில்பட்டி வீரலட்சுமி மாதிரியான வீரமங்கையோ?...நல்ல,வித்தியாசமான கவிதை தந்த தனுசு அவர்களுக்கு மிக்க நன்றி...

    தங்களின் இரண்டாவது கவிதை,பூவினை விட அழகான காதலியின் அழகை போலவே 'அழகு'...கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அம்மலரை போலவே இனிமை...

    ஆனந்தமுருகன் அவர்களின் இரு நகைச்சுவையும் நல்ல கற்பனை...முதல் நகைச்சுவை 'சூப்பர்'...இரண்டாவது நகைச்சுவையில் 'தீமையிலும் நன்மை' என்பதை போலவே,அந்நபர் தன் சொத்தை(???) காப்பாற்றும் முனைப்பில் முக்கியமான யோக நிலையில் இருந்தபடியே இறைவனை வணங்குகிறார்...

    ReplyDelete
  13. ///இதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.///

    சபாஷ்...அருமை... அருமை..///

    என் ஆக்கத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு,'தன்யனானேன்'
    என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், அய்யர் அவர்களே!

    ReplyDelete
  14. முழுதும் அனுபவித்துப் படித்து மனம் திறந்து பாராட்டிய 'வில்லாளன்'(தனுசு)
    அவர்களுக்கு நன்றி! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  15. மாயக்கண்ணா அவர்களே! பாரதத்தின் மக்கட்தொகையுடன் ஒப்பிடும் போது
    நீங்கள் சொல்லும் பணம் என்னும் மாய மானை வெளிநாட்டில் துரத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

    நான் அறம் சார்ந்த நம் எளிய மக்களை அருகில் இருந்து பார்க்கிறேன்.இந்த அதிதி உப‌சாரம் என்பது இன்னும் மாறாமல் இருக்கிறது.காகத்திற்கு உணவிடுவது, எறும்புக்கு சர்க்கரை தூவுவது,ஏன் பாம்புக்கு முட்டை பால் வைப்பது, கஞ்சி காய்ச்சி ஊற்றுவது என்று இந்த எளிய பாமர‌ மக்களின்
    நடைமுறை அனைத்துமே பசி அரக்கனை வீழ்த்துவதிலேயே முனைப்பாக‌ இருக்கிறது.
    பின்னூட்டத்திற்கு நன்றி மாயக்கண்ணா!

    ReplyDelete
  16. //.பல பழமொழிகள்,திருமந்திரம் மேற்கோள்களுடன் அருமையான பதிவை தந்துள்ளீர்கள்...பசிக்கு உணவை அளிப்பதைவிட பணத்தை கொடுப்பதினால் தான் சோம்பேறித்தனம் வளரும் என்பது என் கருத்து...//

    தங்கள் பின்னூட்டத்திற்கும் புரிதலுக்கும் நன்றி ஸ்ரீ ஷோபனா அவர்களே!

    ReplyDelete
  17. அய்யர் said...உமது பெயர் "R" என்ற எழுத்தில் எனில்
    உள்ளபடியே சொல்லுங்கள் "ஆம்" என்று

    மன்னிக்கவும் 'அ"என்பதே சரி.

    ReplyDelete
  18. நான் எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்து, வாராவாரம் என் கட்டுரைகளை, வெளியிட்டு என் எழுத்தின் வளர்ச்சிக்குக் காரணமாயிருக்கும் வாத்தியாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  19. அய்யர் said...
    கண்ணபுரம் காளை (காளி)யை
    காட்டுத்தனமாய் புகழ்ந்தது ஆகா..

    kmr.krishnan said..முதல் கவிதையைப் படித்து முடித்ததும்
    'சரிடா 'என்று மனதில் சொல்லிக்கொண்டு தள்ளி நின்று கொண்டேன்.

    R.Srishobana said...இப்படியொரு வீர மங்கையை நான் தங்கள் கவிதை வரிகளில் தான் அறிகிறேன்...ஒரு வேளை கோவில்பட்டி வீரலட்சுமி மாதிரியான வீரமங்கையோ?...நல்ல,வித்தியாசமான கவிதை தந்த தனுசு அவர்களுக்கு மிக்க நன்றி...

    ரசித்து பின்னூட்டமிட்ட அய்யர் அவர்கள், கிருஷ்னன் அவர்கள்,ஷோபனா அவ்ர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பறைத் தோழர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். நான் எனது ஆக்கங்களைத் தமிழ் எழுதியில் எழுதி, பின் மின்னஞ்சலில் அனுப்புகிறேன். என்ன காரணமோ, என் ஆக்கத்தில் எழுத்துவடிவம் மாறி மாறி வருகிறது. நான் அனுப்பியது ஒரே எழுத்துவடிவத்தில் தான். நான் என் கைவசம் உள்ள நூல்களில் இருந்தும் பிற குறிப்புகளில் இருந்தும் எனது ஆக்கங்களை எழுதுகிறேன். முன்பு ஒரு முறை, என் மச்சாவதாரப் புராணம் பற்றிய ஆக்கத்திலும் இவ்வாறு இருந்ததை சகோதரி தேமொழி அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இது எந்த வகை தொழில்நுட்பக் கோளாறு எனத் தெரியவில்லை. இது என் ஆக்கத்தின் நம்பகத் தன்மையைச் சந்தேகிக்கும் வாய்ப்பைப் படிப்பவருக்குத் தரக்கூடும். ஆகவே, இனிமேல் இது போல் ஆகாமல் இருக்க, நான் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையைத் தந்து உதவி செய்தால், மிக்க நன்றியுடையவளாவேன்.

    ReplyDelete
  21. அய்யர் said...ஒன்றே குலம் என்று பாடுவோம்
    ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

    தலைவரின் பாட்டை சுழல விட்ட அய்யர் அவர்களுக்கு நன்றிகள்

    "பாவம் என்ற கல்லறைக்கு பலவழி-என்றும்
    தர்ம தேவன் கோயிலுக்கு ஒரு வழி"

    இந்த இரண்டே வரிகளில் இருப்பது தான் உலக வாழ்வியலின் விளக்கம்.

    இதைபோண்ற கொள்கை பாடல்களை தலைவரின் படத்தில் மட்டுமே கேட்கமுடியும்.

    ReplyDelete
  22. திரு. கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கம் மிக அருமை. அவரது எழுத்தின் உணர்ச்சி வேகம் கண்முன் தெரிகிறது. ஒரு மனிதன் வாழும் காலத்தில் மட்டுமின்றி, இறந்த பிறகும் அவன் பெயரின் நடைபெறும் எல்லாக் காரியங்களிலும் நீங்கள் கூறும் உண்மை தெரிவது கண்கூடு. சிரார்த்த காரியங்களிலும், புல் போன்ற தாவரங்களுக்குப் பயன்படும் என்று எள்ளும் தண்ணீரும் இறைப்பது, காக்கைக்கு சாத உருண்டை வைப்பது, என்று தொடங்கி, மனிதருக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிர்களுக்கும் உணவிட வேண்டிய கடமையை வலியுறுத்துகின்றன நம் சாஸ்திரங்கள். நல்லதொரு ஆக்கம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  23. Parvathy Ramachandran said...நான் என்ன செய்ய வேண்டும்

    தொழில் நுட்பக் கோளாறு தமிழ் எழுதியில் இருக்கலாம்.என்னுடைய முதல் சாய்ஸ் கூகுள் தமிழ் எழுதி, இரண்டாவது அழகி. முயற்ச்சித்து பாருங்களேன்

    ReplyDelete
  24. //பார்வதி அம்மையாரின் ஆக்கம் மிகவும் உயர் தரமானது.

    'படமாடக்கோவில்.. ' திருமந்திரம் என்னுடைய ஆக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.ஒரு முறைக்கு இருமுறை அச்செய்யுள் இன்று இடம் பெறவேண்டும் என்பதும் சிவனருள் தான்.//

    உங்களின் மேலான பாராட்டுகளுக்கு நன்றி. தங்களின் தூண்டுதலும் என் வகுப்பறைத் தோழர்கள் தரும் ஊக்கமுமே, என் ஆக்கங்களுக்குக் காரணம்.
    உண்மையில், சைவசித்தாந்தத்தில் ஒரு மிகச் சிறு துளியை மட்டுமே தந்து, பின் திருமிகு மெய்கண்ட சிவனார் அவர்களைப் பற்றியும் சொல்லிப் பின் இரு புராண நிகழ்வுகளைப் பற்றித் தருவதே நோக்கம். ஒரு ஆன்மா, தான் பிறப்பெடுக்கும் போது அடைகின்ற தனு கரண புவன போகங்களுக்குக் காரணமாக இருக்கும் மூலகன்மம், மலபரிபாகம் என சைவசித்தாந்தக் கடலில் எடுக்க வேண்டிய முத்துக்கள் ஏராளம் ஏராளம்.
    //இங்கு சைவ சிந்தாந்திகள் அதிகம் பேர் உண்டு. அவர்கள் எப்படி உங்கள் கட்டுரைகளை முன்
    எடுக்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.//

    நானும் அதன் காரணமாகவே அமைதி காக்கிறேன். அதைப் பற்றிப் பின்னொரு சந்தர்ப்பம் ஈசனருளால் கிடைக்குமாயின் நான் எழுத ஆவலாக உள்ளேன்.
    அறிந்தவரையில் எழுத ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  25. தனுசுவின் கவிதையைப் படிக்கும் போது, காதுகளில், தப்பு, பறை போன்ற இசைக்கருவிகளின் தாளமும் காதோடு கேட்டது.

    மக்கள் இசையின் மகத்தான சக்திக்கு மற்றுமொரு உதாரணம் இந்தப் பாடல், ம் எழுதுபவர் எந்த உணர்ச்சியால் உந்தப்பட்டு எழுதினாரோ, அதே உணர்ச்சி வேகம் படிப்பவருக்கும் வருவது சந்தேகமில்லாமல் படைப்பாளியின் படைப்பாற்றலினால் தான்.

    //சூடம் ஏற்றி
    கொளுத்தி கொண்டாடா
    திருஷ்டி சுற்றி
    பொட்டு வையடா
    குத்து விளக்கு
    பரிசு கொண்டாடா
    கொட்டமடிக்க
    ஊரைக்கூட்டடா//

    பெண்மையின் வெற்றியைக் கொண்டாடும் அழகு மிகுந்த வரிகளை நான் ரசித்தேன், குறிப்பாக, குத்துவிளக்குப் பரிசை. மிக அருமையான ஆக்கம் தனுசு. மிக்க நன்றி.

    ReplyDelete
  26. ஏன் உதிர்ந்தாய் பூவே ஆக்கம், எனக்கு ஏனோ,

    மாமன் அடித்தாரோ மல்லிக‌ப்பூ செண்டாலே,
    அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே,
    அடித்தாரைச் சொல்லி அழு,
    ஆக்கினைகள் செய்திடுவோம்

    என்ற தாலாட்டுப் பாடலை நினைவுபடுத்தியது. ஒரு குழந்தையின் அழுகைக்கு, தாய் என்னென்ன காரணங்கள் சொல்லித் தேற்றுவாளோ, அதைப்போல், ஒரு பூவிடம் அது உதிர்ந்த காரணங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்கிறார் தனுசு.
    கடைசியில் வரும்

    //உன்னைவிட அழகாய்
    என்னோடு வரும் என் காதலியின் அழகை பார்த்து
    வெட்கப்பட்டாயா?‍//
    வரிகள், பல சங்கப்பாடல்களை நினைவுபடுத்தின. கவிதையின் எல்லாத் தளங்களிலும் இயங்கும் தங்களின் ஆளுமை என்னைப் பிரமிக்க வைக்கிறது தனுசு அவர்களே. என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  27. //உள்ளம் உரைப்பதை உணர்ந்து செய்தாலே ஈசனை நெருங்கிவிடலாம்.அந்த ஈசனை வழிபடும் முறை எத்தனையானாலும் வழிபடும் இறைவன் ஒருவனே.//

    நிச்சயமான உண்மை. அன்பு உறையும் உள்ளம் எல்லாம் ஆண்டவன் வாழும் இல்லம். ஆறுகள் எல்லாம் கடலைச் சென்று சேர்வது போல், மதங்கள் காட்டும் மார்க்கங்கள் எல்லாம் ஒரே இறைவனைச் சென்று சேர்கின்றன. பெயரிலே பேதங்கள் இருக்கலாம். ஆனால் அவை குறிக்கும் இறைவன் ஒருவனே. தங்கள் பாராட்டுக்கு என் நன்றி.

    //தொழில் நுட்பக் கோளாறு தமிழ் எழுதியில் இருக்கலாம்.என்னுடைய முதல் சாய்ஸ் கூகுள் தமிழ் எழுதி, இரண்டாவது அழகி. //

    தங்கள் மேலான அறிவுரைக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  28. வாத்தியார் அய்யா அவர்களுக்கு,

    எனது ஆக்கம் வெளியான ஆர்வத்தில் தாங்களின் வார்த்தைகளை கவனிக்கவில்லை.

    வகுப்பறைக்கு தாங்களின் அர்ப்பனிப்பு அளவிடமுடியாதது.எங்களால் ஒரு மணி நேரம் ஒதுக்கவே முடியாத போது தாங்கள் எங்களுக்காக நாளின் பெரும் பகுதியை ஒதுக்கி பல தகவல்கள் கொடுத்து பாடங்கள் நடத்துவதுடன் என் போன்றோரை வளர்த்தும் விடுகிறீர்கள்.இறைவன் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும்.

    வெளியூர் பயணம் முடித்து வந்தவுடன் மாணவர் மலரை வெளியிட்டமைக்கு நன்றிகள்.

    இருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டு தாங்களுக்கு அமையும் நேரத்தை பொறுத்து மாணவர் மலரை வெளியிட்டால் போதுமைய்யா.

    ReplyDelete
  29. தேமொழியின் ஓவியம் வழக்கம் போல் அருமை. உங்கள் ஓவியங்களில் வண்ணச் சேர்ப்புகள் மிக அழகாக இருக்கும். இதிலும் அப்படியே. மூக்கின் கூர்மையும்,காதளவோடிய கண்களும் அழகு.

    ReplyDelete
  30. எதிர்பாட்டில் கொடிகட்டிய தேமொழியின் எசப்பாட்டுத் தொகுப்பு அழகு. உழைக்கும் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த மக்களிசையின் அழகு ஒவ்வொரு வரிகளிலும் தெரிக்கிறது.

    //குறுக்குச் சவளுறது
    கூப்பிட்டது கேட்கலையோ?//
    என்ன அழகான வரிகள்.

    //வில்லு முறுவல் காரா//

    வில்லை இது வரையில் புருவத்துக்குத் தான் உவமைப்படுத்திக் கேட்டிருக்கிறேன். முறுவலுக்கு உவமையாகும் வில்லு புதுசு. கவிதையை எடுத்துக் கொடுத்த மேன்மைக்கு நன்றி.

    ReplyDelete
  31. ஆனந்த முருகனின் ஓவியத் தொகுப்பு அருமை. கடைசி ஓவியம் இக்கால நிதர்சனம். கவியரசரின் வரிகளில்,

    "அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
    ஆலய வழிபாடில்லை."

    ஆனால் இப்போது இவ்வாறுதான் பெரும்பாலும் நிகழ்கிறது.

    ReplyDelete
  32. //க்கத்தின் இறுதியில் தாங்கள் கூறியவை முத்தான உண்மை வரிகள்...நல்ல பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி...//

    தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி ஸ்ரீ ஷோபனா.

    ReplyDelete
  33. //திரு. கே.எம்.ஆர் அவர்களின் ஆக்கம் மிக அருமை. அவரது எழுத்தின் உணர்ச்சி வேகம் கண்முன் தெரிகிறது.//

    பாராட்டுகளுக்கு நன்றி பார்வதி அம்மையாரே!

    ReplyDelete
  34. //அன்பான வணக்கங்களையும்
    அளவற்ற வாழ்த்துக்களையும்

    பாசமுடன் தருகிறோம்
    பெங்களுரு தோழியருக்கு//

    தங்கள் மனமுவந்த, பெருந்தன்மை மிகுந்த பாராட்டுக்கு நன்றி. தங்களுக்கு ஓரிரு விளக்கங்கள் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தவறேனின் மன்னிக்கக் கோருகிறேன்.

    ஸ்ரீ ஆதிசங்கரர், சமயங்களைத் தொகுப்பித்தார் என்று கூறியிருக்கிறேனே அன்றி உருவாக்கினார் என்றில்லை. சைவம் அநாதியானது என்பதை அடுத்த வரிகளில் கூறியிருக்கிறேன். ஆதிசங்கரர் காலம் கி.பி. 800ஐ ஒட்டியது என்பதை அறிவேன். ஸ்ரீ ஆதிசங்கரர் காலத்தில் எண்ணிலடங்கா வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருந்தன, அவற்றை அவர் மீண்டும் ஒழுங்குபடுத்தினார் என்பதைச் சொல்லும் தகவலே அது.

    //உருகியநிலையில் முருங்கை இலையையும் சேர்ப்பர் .. ஆனாலும் கடைசியில் கசண்டு கொஞ்சம் தேங்கிவிடும் தானே.. அதற்காக நெய்யை விளக்கியா விடுவோம்..//

    தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

    வள்ளுவர் காலத்தில் மட்டுமின்றி எக்காலத்திலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையே நிலைத்திருக்கிறது. ஈசன் என்ற சொல், எல்லாவிதமான வழிபாட்டு முறைகளிலும் இறைவனைக் குறிக்கக் கையாளப்
    படுவதே இதற்குச் சிறந்த சான்று. நன்றி.

    ReplyDelete
  35. Parvathy Ramachandran said...
    ////எக்காலத்திலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையே நிலைத்திருக்கிறது. ஈசன் என்ற சொல், எல்லாவிதமான வழிபாட்டு முறைகளிலும் இறைவனைக் குறிக்கக் கையாளப்
    படுவதே இதற்குச் சிறந்த சான்று.///

    அப்படி (குறிப்பதை) குறிக்கப் பட வேண்டும் என்பதற்காகவே சுட்டினோம்..
    (பொற்றாமரை குளத்தில் இருந்து
    நக்கீரர் நலமுடன் எழுந்து வருவார்)

    "ஓம் என்று உரைத்திடின் போதுமோ அதில்
    உண்மை பொருள் அறியலாகுமோ? "
    - இது பாரதியின் வாக்கு

    பிறவாயாக்கை பெரியோன் என
    சமண காப்பியத்திலும்

    கிருத்துவ, இஸ்லாத்திலும் இறைவனை
    இப்படி சொல்லுவதுண்டு..

    அதனாலே அந்த முண்டாசு கவி

    தெய்வம் பலபல சொல்லிப் பகைத்
    தீயை வளர்ப்வர் மூடர்
    என்று முரசு கொட்டுகிறான்.

    சொல்வது அவர்களானாலும் அதை
    பிரமானமாக கொள்வது சரியாமோ..?

    புள்ளி வைத்த கோலங்கள்
    அழகு பெறட்டும்

    வண்ணப் பொடிகளால் அல்ல - நல்
    எண்ணக் கொடிகளால்

    "பணியுமாம் என்றும் பெருமை "
    என்ற திருக்குறளை பாடி

    உம்மை வாழ்த்துகிறோம்
    உளமாற நலம் பெறுக என...

    ReplyDelete
  36. thanusu said...
    ///மன்னிக்கவும் 'அ"என்பதே சரி.///

    A என்று எடுத்துக் கொள்கிறோம்
    7 எழுத்துக்களால் ஆனாதோ உமது பெயர் (initialயை தவிர்த்து)

    ReplyDelete
  37. kmr.krishnan said...
    ///என் ஆக்கத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு///

    நன்றிகள்.. தொடரட்டும்
    நன்றிகளும் நட்பும்..

    வணக்கமும் வாழ்த்துக்களும்..
    வழக்கம் போல் எப்போதும்..

    ReplyDelete
  38. ஐயா வணக்கம்.

    ஐயா திருவாளர் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு தாங்கள் கூரவந்தவற்றை சிறிது அளவிற்கு கூட விமர்சனம் பண்ணும் அளவிற்கு எமக்கு தகுதி உண்டோ அல்லது இல்லையோ என்பது தங்களுக்கும் மற்றும் வாத்தியார் ஐயா விற்கும் , மற்ற பெரியவர்க்களுக்கு தான் தெரியும் . யானோ தங்களுடைய பிள்ளை வயதை விட சிறியவன் ஆனால் தாங்கள் கூறி உள்ள மரியாதை வார்த்தையோ மிகவும் பெரிது ஐயா. வாட! போடா! கண்ணா! என்று கூறினாலே எமக்கு ஆத்ம திருப்தி ஐயா.

    எதோ கூறனும் என்று தோன்றியது கூறினேன் . தவறுகள் இருப்பின் தங்களின் மகனை போல மனதில் நினைத்து மன்னிக்கவும் ஐயா.!

    ReplyDelete
  39. //தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்ப‌வர் மூடர் என்று முரசு கொட்டுகிறான்.//

    அப்படிச் சொன்ன பாரதிதான் கணபதி, முருகன், சிவன், பராசக்தி, கண்ணன், சூரியன், மாரியம்மன்,அல்லா, கிறிஸ்து என்று எல்லாத் தெய்வங்களையும் பாடியுள்ளார்.

    பல தெய்வங்கள் இருப்பதால் தவறு இல்லை.என் தெய்வம் தன் தெய்வம் என்று எதிர் வழக்காடி, தெய்வத்துக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து பகைத் தீயை வளர்த்தல் கூடாது.

    என் வழிமுறை, பாதை சரியென்று நம்புவது ஒருவரின் உரிமை. மற்றவர்களின் பாதை தவறு என்று கூறும் போதுதான் பகைத்தீ வளர்கிறது.

    சனாதன மதம் அனைத்து வழிமுறைகளையும் ஒத்துக் கொள்கிற‌து.ஏனையோர் தங்கள் வழிமுறைகளை ஏற்காதவர்களுக்கு நரகம்தான் என்கின்றனர்.

    ReplyDelete
  40. //எதோ கூறனும் என்று தோன்றியது கூறினேன் . தவறுகள் இருப்பின் தங்களின் மகனை போல மனதில் நினைத்து மன்னிக்கவும் ஐயா.!//

    வாதப் பிரதிவாதங்களை நான் என்றுமே வரவேற்பவன். தங்களுடைய பின்னூட்டமே மேலும் சிந்திக்க வைத்தது.மனக்கசப்பு இல்லாமல், கேள்விகள் எழுப்புவதன் மூலமே சிந்தனைகள் விரியும். நமது மரபே கேள்வி பதில் மரபுதான். வேதத்தில் பல கேள்விகளைத் தாமாகவே எழுப்பிக் கொண்டு, பதில் கொடுக்கப்பட்டுள்ளது.பகவத்கீதை அர்ஜுனனின் கேள்விகளுக்குப் பகவானின் பதில்களாகவே அமைந்துள்ளது.

    எனவே நீங்கள் இட்ட பின்னூட்டத்தினால் மனம் மகிழ்ந்தேன். பின்னூட்டம் இடுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, விமர்சனமாகப் பின்னூட்டம் இடுபவர்கள், பின்னூட்டமே இடாதவர்களைவிட மேலானவர்கள்.

    விதண்டாவாதம், விவாதம், சம்வாதம் என்று வாதத்தில் மூன்று நிலைகள்.

    விதண்டாவாதம் செய்பவர்கள் வாதத்தில் வெல்ல எந்த நிலைக்கும் கீழ் இறங்குவார்கள். தனிப்பட்ட முறையில் சொற்களால் தாக்குவார்கள்.

    விவாதம் செய்பவர்கள் தனிப்பட்ட தாக்குதல் செய்யாவிட்டாலும், வாதத்தில் வெல்லும் ஆசை உடையவர்களே.

    சம்வாதம் செய்பவர்கள் மனதில் எள்ளள‌வும் காழ்ப்பு கிடையாது. விவாதத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் தகவல் பரிமாற்றமாகவே
    வாதத்தை முன்னெடுப்பார்கள்.

    நான் சம்வாதத்தியே விரும்புகிறேன்.தயக்கம் இன்றி மனதில் பட்டதைச் சொல்லுங்கள். நான் அறிந்தவரை பதில் கூறுவேன்.இட்டு நிரப்ப ஐயா, பார்வதி என்று பெரிய கூட்டமே உள்ளது.

    ReplyDelete
  41. என்னுடைய தகவலுக்கும் படத்திற்கும் வாரமலரில் இடமளித்த வாத்தியாருக்கு மனமார்ந்த நன்றி.
    முன்பெல்லாம் ஏதாவது படித்தால் வீட்டில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் பகிர்ந்து கொள்வேன். இப்பொழுது மாணவர் மலருக்கு அனுப்பினால் பலரும் படிப்பார்கள் என்று தோன்றுகிறது. இவைகளைப் படிப்பவர்களுக்கும், ஒரு படி மேலே சென்று தங்கள் கருத்தை பகிர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் நன்றி.

    அன்பே சிவம், அன்பே சிவம் என்று ஆரம்பிக்கும் திருமந்திர வரிகளைப் பார்த்த பின்பும் கமல் நினைவு வராமல் வாத்தியாருக்கு மட்டும் எப்படியோ ரஜினி நினைவு வருகிறது.

    ஐயா இனி மிகவும் முக்கியமான வேலைகளில் இருந்தால் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். mobile phone மூலம் blog பதிவிட வசதி செய்து கொண்டு, I am busy...will get back soon என்று ஒரு வரி செய்தியை அலைபேசி வழியாக பதிவிட்டு விட்டு, பிறகு நேரம் கிடைக்கும்பொழுது தொடருங்கள்.

    அதுகூட தேவையில்லைதான், உங்கள் பதிவைக் காணாவிட்டால் என்னாயிற்றோ என்ற கவலை வந்து விடுகிறது. அதைத் தவிர்க்கத்தான் இந்த வேண்டுகோள்.

    ReplyDelete
  42. KMRK அவர்களின் கட்டுரை பசி அனைவருக்கும் பொது என்று நினைவு படுத்துகிறது. பசியோ பிற உணர்வுகளுக்கோ அனைத்துயிர்களுக்கும் பொதுதான். "தனி மனிதனுக்கு உணவு இல்லயெனில்...." என்று சிந்திப்பதும் நாம் தான். வயதான தாத்தா இறந்ததும் அவரது தட்டை எடுத்து தன் தந்தையின் வயதான காலத்தில் உணவு கொடுக்க உதவும் என்று பத்திரப் படுத்திய பேரனின் கதை சொல்வதும் நாம்தான். ஏற்பது இகழ்ச்சி என்று சொல்லிவிட்டு உடனே ஐயம் இட்டு உண் என்றும் சொல்லிவிடுவதும் நாம்தானே. ஒரு புறம் ஆன்மீகம் நிறைந்த நாடு மற்றொருபுறம் மரணதண்டனையை நீக்காத நாடு. ஆனால் மாறுபட்ட எண்ணங்களை மதிக்காவிட்டாலும் சகித்துக் கொள்கிறோம் என்பதே மிகிழ்சியைத் தருகிறது.

    ///என் வழிமுறை, பாதை சரியென்று நம்புவது ஒருவரின் உரிமை.///

    உண்மை, உண்மை.
    மீன்குழம்பு செய்து அன்னதானம் போட விரும்புபவர்கள் ஒரு வகை என்றால்,
    சாப்பிட கற்றுக்கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறப்பு என்று அந்த வகையில் உதவி செய்பவர் ஒரு வகை,
    அவசரத்திற்கு முதலில் சாப்பாடு போட்ட பின் பிறகு கற்றுக் கொடுத்தாலும் சரியே, தன்னால் முடிந்ததை எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வதே சரி.

    ReplyDelete
  43. பார்வதி இறை வழிபாட்டு முறைகளின் வகைகளை கொடுத்து சைவம் பற்றியும் விவரித்துள்ளீர்கள். காணபத்யம், வைணவம், கௌமாரம், சாக்தம், சௌரம் என்ற மற்றவைகளையும் பிறகு இது போல விளக்க வேண்டும். சக்தியையும், முருகனையும் பற்றி நீங்கள் எழுதியவைகளை உங்கள் பதிவிலும் படித்துள்ளேன். "கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போல" என்று ஒரு பாடல் நினைவிற்கு வந்தது. அதில் கவிஞர் நன்றாக தன் வாதத் திறமையை காட்டியிருப்பார்.

    உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு கடவுள் நினைவு வருவது சோதனை காலங்களில்தான். அப்பொழுது விவேக் ஒரு படத்தில் செய்வது போல நினைவுக்கு வரும் சாமிகள் எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் மக்கள் வழக்கம். எனக்கு தெரிந்த ஒரு அம்மா குடியினால் ஈரல் கெட்டு இறக்கும் தருவாயில் இருந்த கணவரைக் காப்பாற்ற சொல்லி வேளாங்கண்ணிக்கும், நாகூராண்டவருக்கும் தங்கத்தில் தாலிகளை காணிக்கை தருவதாக வேண்டிக் கொண்டார்கள்.

    திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்ப்பது என்ற முறையை விளக்கமுடியுமா?

    ReplyDelete
  44. "அஞ்சாத சிங்கம் என் காளை, இது பஞ்சா பறக்கவிடும் ஆளை" என்று பாடும் வெள்ளையம்மா அல்லது அன்னலட்சுமி போன்ற பெண்ணை மாடு பிடிப்பவராக வித்தியாசமாக் கற்பனை செய்த தனுசுவின் கவிதை பிடித்திருந்தது. படையப்பாவில் சிவப்பு சேலை என்று மாடை துரத்த விட்டிருப்பார்கள் ஆனால் இந்தப் பெண் சிவப்பு வண்ண ஆடை அணிந்து பொமரேனியன் நாயுடன் வாக்கிங் போவது போல மாட்டுடன் போகிறார். "வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வந்தேண்டா" என்ற சடு குடு பாட்டு மெட்டில் பாடலாம் போலிருக்கிறது.

    அடுத்து வந்த உதிர்ந்த மலர் கவிதையில் அழகியின் அழகுடன் தன் அழகை ஒப்பிட்டு அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டது செம்பருத்தி என்று நன்றாகவே தற்குறிப்பேற்ற அணியில் ஒரு போடு போட்டுள்ளீர்கள். இந்த முறை கற்பனைகள் கருத்தைக் கவர்ந்தது.

    உங்கள் உண்மைப் பெயரையும் மின்னஞ்சலில் அய்யர் ஐயாவிற்கு அனுப்பிவிடலாமே:)))))))

    ReplyDelete
  45. ஆனந்தமுருகன் படத்தைப் பார்த்ததும் தோன்றியது, இவ்வளவு கவலை உள்ளவர்கள் வீட்டிலேயே சாமி கும்பிடுவதே சரி என்றுதான். கோவிலுக்கு போனால் இவர் போன்றவர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகுமே தவிர குறைய வழியில்லை.

    அலுவலக நகைச்சுவையில் ...
    ஒரு முறை இது போன்ற அலுவலகத்தில் உள்ள முந்தய தலைமுறையினருக்கு தொழில் நுட்ப பயிற்சி தரும் பயிற்சியாளரான நண்பர் சொன்னது. தட்டச்சை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி, அடுத்தடுத்து இரண்டு வாக்கியம் கொடுத்தாராம். "enter" செய்து அடுத்த வாக்கியத்தை அடிக்க வேண்டிய நிலை. தட்டச்சில் "enter" எங்கே என்று தெரியாமல் கூப்பிட்டு உதவி கேட்டாராம் ஒருவர்.
    மற்றொருவருக்கு "print" எப்படி செய்வது என்பது தெரியவில்லையாம்.

    ReplyDelete
  46. எழுத்துருக்கள் பல உருக்களில் தோன்றுவதை நீக்க மிக எளிய வழி...

    கட்டுரை எழுதி பிழை திருத்தி முடித்தவுடன் அதை காப்பி செய்து text editor/notepad இல் ஒரு முறை பேஸ்ட் செய்யுங்கள். இதனால் எழுத்துக்கள் தங்களுடன் கொண்ட format அனைத்தையும் இழந்துவிடும். மீண்டும் அதை notepad இல் இருந்து வாத்தியாருக்கு அனுப்பும் மின்னஞ்சலில் பேஸ்ட் செய்து அலங்காரம் (bold, italic, color fonts etc. etc) செய்யுங்கள். இதன் பிறகு பிழையைத் திருத்த வேண்டியிருந்தால் மீண்டும் அந்த வார்த்தைகளை முழுவதும் தட்டச்சு செய்யும் நிலை ஏற்படலாம்.

    பார்வதி நீங்கள் yahoo mail, உபயோகிப்பவர் எனத் தெரியம். ஆனால் இதற்காக ஒரு தனி gmail வைத்துக் கொள்ளுங்கள்.

    Gmail-->settings-->under General tab --> Language check "Enable Transliteration" and select Tamil as "Default transliteration language"--> save the changes made

    இவ்வாறு செய்தால் gmail லேயே தமிழில் தட்டச்சு செய்ய இயலும். tool bar இல் முதலில் இருக்கும் "அ" வை ஒருமுறை கிளிக் செய்த பின்பு தட்டச்சு செய்யுங்கள். save draft என அவ்வப்பொழுது save செய்து கொள்ளுங்கள். எழுதி முடித்த பின்பு, அனுப்பும் நேரத்தில் "மட்டும்" முன்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டு அனுப்புங்கள்.

    எனக்குத் தெரிந்த வரை gmail transliteration தான் தமிழில் தட்டச்சு செய்ய வசதியானது.

    ReplyDelete
  47. அய்யர் said...A என்று எடுத்துக் கொள்கிறோம்
    7 எழுத்துக்களால் ஆனாதோ உமது பெயர் (initialயை தவிர்த்து)

    8 ஆங்கில எழுத்துக்கள்

    ReplyDelete
  48. ம்ரியாதைக்குரிய பார்வதி அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய அபார ஞானம் எட்டாத உயரத்தில் இருப்பது தெரிய வருகிறது. சாதாரணமானவர்கள் எட்டமுடியாத இடத்தில் அவர் இருக்கிறார். அவரை வாழ்த்த முடியாது; வணங்குகிறேன். தனுசு அவர்கள் கவிதை மழை பொழியத் தொடங்கிவிட்டார். இது எங்கள் தஞ்சைக்கு வடகிழக்குப் பருவக் காற்றின் விளைவு. தேமொழி அவர்கள் கொடுத்திருக்கும் நாட்டுப்புறப் பாடலைப் படிக்கும்போது அதனை அதற்குரிய மெட்டில் பாடுவது போன்று உணர்ந்தேன். வட்டாரச் சொற்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அருமை. வானமாமலை போன்ற நாட்டுப்புறக் கலை ஆய்வாளர்களின் படைப்புகளை அவர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அத்தகைய இலக்கியங்களில் சகோதரி தேமொழி ஆழங்கால் பட்டிருப்பது தெரியவருகிறது. அவற்றைப் படிக்காதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவருடைய ஓவியம் அதைவிட சிறப்பு. வாழ்க! டைப் இயந்திரம் போய், கம்ப்யூட்டர் வருகிறது. அது 'மாடர்னாக' மாறிய பிறகு பழைய டைப்பிஸ்டுக்கு என்ன வேலை? நல்ல கார்ட்டூன். கே.எம்.ஆருக்கு அன்னதானம் உயிர்நாடி. 1955இல் திருச்சியில் ஒரு தங்கும் விடுதியில் மாத வாடகையில் நண்பர்களோடு தங்கியிருந்தேன். அந்த விடுதியிலேயே உணவும் கிடைத்து வந்தது. மற்ற இடங்களில் சோற்றுப் பட்டைதான் கிடைக்கும். அப்போது அரிசிப் பஞ்சம். ஆனால் இவரோ அளவில்லாமல் கேட்ட வரைக்கும் சோறு படைப்பார். முதலாளி வைத்தியநாத ஐயர் என்பார். ஏன் அப்படி என்று அவரைக் கேட்டதற்கு அவர் சொன்னார், "அன்னத்தை விற்பது பாவம். நான் இதை ஒரு தொழிலாகச் செய்கிறேன். தொழிலில் கிடைக்கும் பாவத்தைப் போக்க சாப்பிடுபவர்கள் தேவைப்படும் அளவுக்குச் சாப்பிடட்டும் என்றுதான் 'அளவில்லாத' சாப்பாடு போடுகிறேன் என்றார். தொழில் தர்மம் அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இப்போது? இந்த வாரம் மலர் அருமை.

    ReplyDelete
  49. Parvathy Ramachandran said...காதுகளில், தப்பு, பறை போன்ற இசைக்கருவிகளின் தாளமும் காதோடு கேட்டது.

    நான் எழுதும் போதும் அப்படி ஒரு கற்பனையை அந்த பெண்ணுக்கு பின் நின்று அடிப்பதாக நினைத்துக் கொண்டேன். நான் தினமும் தினமலர் இனையத்தளத்தில் தான் செய்திகள் படிப்பேன்.

    அந்த படத்தை பார்ப்பதற்கு முன்பாக "ஏன் உதிர்ந்தாய் பூவே" மாணவர் மலருக்கு அனுப்பிவிட்டேன். அந்த படம் 27 ந்தேதி தினமலரில் வெளியானது.பார்த்தவுடன் என் காதுகளிள் தாரை, தப்பட்டை அடித்தது, அந்த நேரம் கொஞ்சம் ஓய்வாகவும் இருந்தேன். சுமார் முப்பது நிமிடத்தில் அதை எழுதினேன். உடனே வாத்தியாருக்கு அணுப்பிவிட்டேன்.கரெக்ஷன் கூட செய்யவில்லை. நான் எழுதிய கவிதைகளிலேயே இதுதான் மிக விரைவாக எழுதியது.

    ரசித்து பின்னூட்டமிட்ட தாங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  50. அய்யர் said... உதிரிப் பூக்களை எண்ணி
    உருகிப் பாடிய அந்த மலரே.....

    அய்யர் அவர்களே கவிதையாய் வந்த தாங்களின் பின்னூட்டத்தையும் நான் ரசித்தேண்.
    +++++++++++++++++++++++
    kmr.krishnan said...கவிதையைப் படித்து மகிழ்ந்தேன் கவிஞர் தனுசு

    நன்றி கிருஷ்ணன் சார். அத்துடன் செம்பருத்தி பூ வைப் பற்றிய மேலாதிக்க தகவல்களுக்கும் நன்றிகள்.
    +++++++++++++++++++++++++++++++
    R.Srishobana said...பூவினை விட அழகான காதலியின் அழகை போலவே 'அழகு'...கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அம்மலரை போலவே இனிமை...

    ரசித்து வெளியிட்ட தாங்களின் இனிமையான பின்னூட்டம் எனக்கு மகிழ்சி தந்தது, ஷோபனா அவர்களே,

    Parvathy Ramachandran said...சங்கப்பாடல்களை நினைவுபடுத்தின.......

    செம்மையான உங்களின் இந்த பின்னூட்டம் சங்கபாடல்களை படிக்க தூடுகிற்து, நேர்ம் இல்லை, அதுதான் பிரச்சினை.

    தாங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பார்வதி அவர்களே.

    ReplyDelete
  51. தேமொழி said..."அஞ்சாத சிங்கம் என் காளை, இது பஞ்சா பறக்கவிடும் ஆளை" என்று பாடும் வெள்ளையம்மா

    பாடுங்கள் காசா பணமா

    தேமொழி said..."ஒரு போடு போட்டுள்ளீர்கள். இந்த முறை கற்பனைகள் கருத்தைக் கவர்ந்தது.

    ரசனயான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள் தேமொழி.

    ReplyDelete
  52. தேமொழி said...உங்கள் உண்மைப் பெயரையும் மின்னஞ்சலில் அய்யர் ஐயாவிற்கு அனுப்பிவிடலாமே:)))))))

    அய்யர் அவகள் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார் .முயற்சி திருவினையாக்கும் இல்லை என்றால் நீங்கள் சொன்னது போல் செய்து விடுவோம் .

    ReplyDelete
  53. //சம்வாதம் செய்பவர்கள் மனதில் எள்ளள‌வும் காழ்ப்பு கிடையாது. விவாதத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் தகவல் பரிமாற்றமாகவே
    வாதத்தை முன்னெடுப்பார்கள்.//

    தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நான் சொல்வது/செய்வதே சரி, என்று வாதிடாமல், சம்வாதம் செய்பவர்களே, மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பவர்கள். எல்லோரும் சமம் என்று மதிப்பவர்களால் தான் சம்வாதம் செய்ய முடியும். வாதத்தின் வகைகளை விளக்கிய தங்கள் மிக அருமையான பின்னூட்டத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி, நன்றி.

    ReplyDelete
  54. //திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்ப்பது என்ற முறையை விளக்கமுடியுமா?//

    நான் அதைப்பற்றி எழுதும் போதே இவ்வாறு தான் இருக்கும் என ஊகித்திருந்தேன். எனினும் தங்கள் கேள்விக்குப் பிறகு, தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டி, ஒரு சிவாச்சாரியாரை அணுகிக் கேட்டபோது, அவர் அளித்த விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

    " ஒருவருக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருக்கும் போது, குடும்பத்தின் குருவாக இருப்பவரிடத்தில் சென்று தெரிவித்தால், அவர், தனது பூஜையில் திருமுறைப் பதிகங்களின் சுவடிகளையும் ஒரு பட்டு நூல் கயிறையும் வைத்துப் பூஜித்துப் பின், கயிறை கைகளில் வைத்துக் கொண்டு, இறைவன் திருவுருவை நினைத்துத் தியானிப்பார். பின், அந்த தியான நிலையிலேயே, ஏதேனும் ஒரு சுவடியை கைகளில் எடுத்து, கயிறை நுழைத்துப் (புக் மார்க் கயிறு போல) பார்ப்பார். கயிறு இருக்கும் பக்கத்தில் எந்தப் பதிகம் வருகிறதோ, அந்தப் பதிகத்தின் வாயிலாக, இறைவன் நம் கோரிக்கைக்குப் பதிலளிப்பதாக நம்பிக்கை"

    நான் உடனே, "ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிகங்கள் இருந்தால்?" என்று கேட்டேன். அவர், திரு.கே.எம்.ஆர் அவர்களைப் போல் சம்வாதத்தை
    விரும்புபவர். எனவே, கோபிக்காமல், "ஓலைச் சுவடிகளில் பெரும்பாலும் ஒரு
    ஓலை நறுக்கில் ஒரு பதிகமே இருக்கும்" என்று விடையளித்தார்.

    இப்போதும் ஸ்ரீ ஷீரடி சாயி பாபா, ஸ்ரீ அரவிந்தர் அன்னை போன்ற குருமார்களிடம் பக்தி கொண்டவர்கள், சாயி சரிதத்திலோ, அன்னையின் அருள்
    மொழிகள் தொகுப்பிலோ, கண்களை மூடி, ஏதேனும் ஒரு பக்கத்தைப் பிரித்து
    கைகளில் வைத்துக் கொண்டு,விரலால், அந்தப் பக்கத்தில் ஏதாவது ஒரு பகுதியைத் தொட்டு, பின் கண்களைத் திறந்து பார்த்து, விரல் தொட்ட பகுதியின் மூலம் தமது கோரிக்கைகளுக்கு விடை பெறுவதை அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  55. //எனக்குத் தெரிந்த வரை gmail transliteration தான் தமிழில் தட்டச்சு செய்ய வசதியானது.//

    உங்களின் மேலான உதவிக்கு நன்றி. நான் gmail ஐ.டியும் வைத்திருக்கிறேன். அடுத்த முறை நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  56. //ம்ரியாதைக்குரிய பார்வதி அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய அபார ஞானம் எட்டாத உயரத்தில் இருப்பது தெரிய வருகிறது. //

    தங்களைப் போன்றவர்களின் ஆசியும் இறையருளுமே என்னை எழுத வைக்கிறது.
    ""என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை .." என்பதைத் தெளிவாக இறைகருணையால் அறிந்திருக்கிறேன். தங்களின் மேலான ஆசியே எங்களைப் போன்றவர்களை எந்நாளும் வழிநடத்துகிறது. தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

    வாத்தியாரைப் போலவே, தாங்களும் எங்கள் அனைவருக்கும் குருஸ்தானத்தில் இருப்பவர்.தங்களைப் போன்றவர்கள் வாழும் காலத்தில் வாழக் கொடுத்துவைத்துள்ளோம்.தங்களின் வாழ்த்துக்களை என்றென்றும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  57. தஞ்சாவூராரின் பாராட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.

    தஞ்சையில் ஆனந்தா லாட்ஜ் ஆரம்பித்தபோது காஞ்சிப்பெரியவரிடம் ஆசி கேட்டார்களாம். 'ஓட்டல் போல நடத்தாதே! சத்திரத்தைப் போல நடத்து'என்று கூறினாராம்.பல ஆண்டுகள் ஆனந்தாலாட்ஜ் ஒரு தர்ம சத்திரம் போல நடந்ததாம். கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொள்வார்களாம்.எண்ணைக் குளியலுக்கெல்லாம் அங்கே ஏற்பாடு உண்டாம்.பின்னர் மற்ற வியாபார நோக்கம் உடையவர்கள் தொழிலுக்குள் வந்த பின்னரே மாற்றங்கள் நிகழ்ந்தனவாம்.

    தஞ்சையில் நடார் முத்தையர் என்று ஒருவர் கணக்குப் பார்க்காமல் தன் சாப்பாட்டுக் கூடத்தில் பரிமாறுவாராம்.

    விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட கதையினை படித்தால் என் கருத்தின் நோக்கம் புரியும்.

    http://jyeshtan.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%Aஃப்%88

    சிறுகதை "அன்னதாதா" 1 ஆகஸ்டு 2011

    ஆக்கம்:பிரகாஷ் தென்கரை

    ReplyDelete
  58. ///Parvathy Ramachandran said... தங்கள் கேள்விக்குப் பிறகு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டி, ஒரு சிவாச்சாரியாரை அணுகிக் கேட்டபோது, அவர் அளித்த விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.///

    நன்றி பார்வதி. சிரமத்திற்கு மன்னிக்கவும். நானும்யூகித்தேன், ஆனால் உறுதி செய்து கொள்ளவே கேட்டேன். என் தோழியரில் ஒருவர் பைபிளில் இந்த முறையை உபயோகப் படுத்தி கடவுளிடம் "அருள் வாக்கு" பெற்றுக் கொள்வதாக சொன்னதுண்டு. இதில் அடுத்த வகை தான் கிளி ஜோசியம் போலிருக்கிறது. பறவை எடுத்தால் என்ன, அல்லது பக்தர் எடுத்தால் என்ன? நம்பிகைதான் நம்புபவர்களுக்கு அடிப்படை உதவி.

    ReplyDelete
  59. thanusu said...
    ///8 ஆங்கில எழுத்துக்கள்///

    ஆகா..
    அதில் ஒரே எழுத்து 3 முறை வருகிறது
    சரிதானே

    ReplyDelete
  60. kmr.krishnan said...
    ////பல தெய்வங்கள் இருப்பதால் தவறு இல்லை.என் தெய்வம் தன் தெய்வம் என்று எதிர் வழக்காடி, தெய்வத்துக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து பகைத் தீயை வளர்த்தல் கூடாது.//

    மிகச் சரியே..
    தெய்வம் வேறு
    கடவுள் வேறு
    இறைவன் வேறு

    வேறுபாடு தானேஅறிந்து கொள்ளவே
    முன்னர் சொன்னதையே சொல்கிறோம்.

    வாழ்க..நலமுடன்

    ReplyDelete
  61. தேமொழி said...
    ///என் தோழியரில் ஒருவர் பைபிளில் இந்த முறையை உபயோகப் படுத்தி கடவுளிடம் "அருள் வாக்கு" பெற்றுக் கொள்வதாக சொன்னதுண்டு...///

    இப்போது ஓலைச்சுவடிகள்
    இருக்கிறதா தெரியாது..

    ஆனால்..

    புத்தகவடிவில் உள்ள திருமுறைகளில் பட்டு சார்த்தும் போது இடது புறம் உள்ள பக்கத்தில் உள்ள கடைசி பாடல் திருமுறை ஒப்பந்தம் என சொல்லும் பழக்கமுண்டு..

    ஏன் இடது பக்கம்
    ஏன் கடைசி பாடல்

    இதற்கும் விளக்கம் உண்டு
    இதனை விரும்புபவர்களுக்கும்

    நம்பிக்கை உள்ளவர்களுக்கும்
    நயமாக சொல்ல வேண்டும்

    ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்
    மிக்கு சோதிக்க வேண்டா
    என்பது ஆளுடைபிள்ளையாரின் வாக்கு

    ReplyDelete
  62. thanusu said...
    ///தேமொழி said...உங்கள் உண்மைப் பெயரையும் மின்னஞ்சலில் அய்யர் ஐயாவிற்கு அனுப்பிவிடலாமே:)))))))

    அய்யர் அவகள் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார் .முயற்சி திருவினையாக்கும் இல்லை என்றால் நீங்கள் சொன்னது போல் செய்து விடுவோம் ///

    இது என்ன சோதிடம் என
    கேட்காதவகையில் மகிழ்ச்சியே..

    தனுசுக்காரரே உமது பெயரை
    மனசு இறங்கி மின்னஞ்சல் செய்ய வேண்டா

    அய்யர் கண்டுபிடித்தாலும்
    அவசியம் சொல்ல மாட்டார்

    ReplyDelete
  63. செம்பருத்தி...
    சிங்கையின் தேசியமலராச்சே..

    சிங்கை செல்வர்
    ஏதும் சொல்லுவார் என காத்திருந்தோம்

    ஹலோ...ஹலோ...
    நெட்வொர்க் கிடைக்கலையே..

    ReplyDelete
  64. kmr.krishnan said...
    ///.என் வழிமுறை, பாதை சரியென்று நம்புவது ஒருவரின் உரிமை. மற்றவர்களின் பாதை தவறு என்று கூறும் போதுதான் பகைத்தீ வளர்கிறது.///

    வேறுபாட்டை தானே அறிய சொன்னோம்
    வேதனையையா வாங்க சொன்னோம்

    தீக்கை வேண்டும் சரி..
    தீ... கையா வேண்டும்...

    பாதையில் வெல்வது சரி..
    தை .. தை ...என பாதையை உருவாக்கி செல்வது சரியோ..

    மாசில்லா அன்பினை
    மனமுவந்து தருகிறோம்...

    கைகோர்த்து படி நடப்போம் (மன)ல்
    கடற்கரையிலே காற்று(கேட்டு) வாங்கியபடி

    ReplyDelete
  65. தனுசு,
    ஐயர் ஐயா உங்கள் பெயரை சரியாகக் கண்டுபிடித்து விட்டாரா?
    முடிவைத் தெரிவிக்கவும். எனக்கு தலை வெடித்துவிடும் போலிருக்கிறது.
    நானும் முயற்சித்தேன்..
    இன்ஷா அல்லா..
    உங்கள் பெயர்
    ....Abubakar
    பெயரில் எட்டு எழுத்து
    "அ"/ "A" இல் ஆரம்பிக்கிறது
    "a " மூன்று முறை வருகிறது
    சரியா ? :)))))

    ReplyDelete
  66. பார்வதியின் ஆக்கம் இந்த முறை சைவ சித்தாந்தம் பற்றியது. கற்கும் ஆர்வம் அவருக்கு நிறைய இருக்கிறது என்பதை அவரது ஒவ்வொரு
    ஆக்கங்களும் உணர்த்துகின்றன.

    அன்னதானம் பற்றிய கிருஷ்ணன் சாரின் ஆக்கம் நிறைய சிந்திக்கத்தூண்டியது, குறிப்பாக இந்த வரிகள்:

    மேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதால்தான்
    மத மாற்றத்திற்காக உணவும்,உடையும், பண்டமாற்றாக அளிக்கப்படுகின்றன‌.//

    தான் ரசித்த நாட்டுப்பாடலை சக மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட தேமொழிக்கு நன்றி.

    தனுசுவின் இரண்டு கவிதைகளும் அருமை என்றாலும் முதலாவதைவிட இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

    ஆனந்தமுருகனின் நகைச்சுவை இரண்டுமே சிரிக்கவைத்தன.

    ReplyDelete
  67. அய்யர் said....ஆகா..
    அதில் ஒரே எழுத்து 3 முறை வருகிறது
    சரிதானே

    தேமொழி said......Abubakar
    பெயரில் எட்டு எழுத்து
    "அ"/ "A" இல் ஆரம்பிக்கிறது
    "a " மூன்று முறை வருகிறது
    சரியா ? :)))))

    அய்யரும் தவறு, தேமொழியும் தவறு.

    அய்யர் அவர்களே ஒரு யோசனை இன்னும் இரண்டு வாரத்தில் ஊர் வருவேன்.நேரம் இருப்பின் நாம் சந்திக்கலாம்.ஆனால் .
    திட்டமிட்டபடி உடணே குளுமை பிரதேசத்த்ற்கு குடும்பத்துடன் சென்று விடுவேன்.ஜூன் இரண்டாம் வாரத்தில் தான் சந்திக்கலாம்.

    ReplyDelete
  68. என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.இது 92 வது ஆக்க‌ம். //

    விரைவில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  69. சாரி, தேமொழியின் ஓவியத்தைக் குறிப்பிட விட்டுப்போய்விட்டது. ரொம்ப கலர்புல்லா இருக்கு.

    ReplyDelete
  70. உமாவுக்கு இன்னும் துருஷ்டி முறியவில்லையா

    ReplyDelete
  71. இப்போதும் ஸ்ரீ ஷீரடி சாயி பாபா, ஸ்ரீ அரவிந்தர் அன்னை போன்ற குருமார்களிடம் பக்தி கொண்டவர்கள், சாயி சரிதத்திலோ, அன்னையின் அருள்
    மொழிகள் தொகுப்பிலோ, கண்களை மூடி, ஏதேனும் ஒரு பக்கத்தைப் பிரித்து
    கைகளில் வைத்துக் கொண்டு,விரலால், அந்தப் பக்கத்தில் ஏதாவது ஒரு பகுதியைத் தொட்டு, பின் கண்களைத் திறந்து பார்த்து, விரல் தொட்ட பகுதியின் மூலம் தமது கோரிக்கைகளுக்கு விடை பெறுவதை அறிந்திருக்கிறேன்.//

    பஞ்சாங்கத்திலும் இதே போல் ராமர் / சீதை சக்கரத்தில் உள்ள எண்களை கண்களை மூடிக்கொண்டு தொட்டு அந்த எண்ணிற்கு உரிய பலனைப்பார்க்கும் வழக்கமிருக்கிறது.

    ReplyDelete
  72. Uma said...தனுசுவின் இரண்டு கவிதைகளும் அருமை என்றாலும் முதலாவதைவிட இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

    நன்றி உமா.

    ReplyDelete
  73. உங்கள் பெயர்
    ....Abubakar
    பெயரில் எட்டு எழுத்து
    "அ"/ "A" இல் ஆரம்பிக்கிறது//

    இவர் பெயரைக் கண்டுபிடிப்பது சிரமம், அதனால் யாரும் முயற்சி செய்யவேண்டாம். இவரே ஒருமுறை சென்னையில் உள்ள en
    ஜோதிட நிபுணரிடம் ஆலோசனை கேட்டு தன் பெயரில் சில மாற்றங்கள் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒரே எழுத்து மூன்றுமுறை இவர் பெயரில் வருவதில் வியப்பில்லை. (தனுசு, உங்கள் பெயரை எனக்கு மட்டும் மின்னஞ்சல் செய்யவும்)

    ReplyDelete
  74. உமாவுக்கு இன்னும் துருஷ்டி முறியவில்லையா//

    வாங்க சார், உங்கமேலதான் 'கொலவெறியோட' இருக்கேன்.

    ReplyDelete
  75. Uma said...
    வாங்க சார், உங்கமேலதான் 'கொலவெறியோட' இருக்கேன்.

    தப்பி தவறி ஒன்னு ரெண்டு கூட இனிமேல் என்னமாட்டேன்.போதுமா!

    ReplyDelete
  76. தப்பி தவறி ஒன்னு ரெண்டு கூட இனிமேல் என்னமாட்டேன்.போதுமா!//

    கூல், கூல்! இதுக்காக கோவிச்சுகிட்டு எண்ணலேன்னா, ஒண்ணு ரெண்டு மறந்து போயிடும். (நான் எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன்)

    ReplyDelete
  77. தப்பி தவறி ஒன்னு ரெண்டு கூட இனிமேல் என்னமாட்டேன்.போதுமா!//

    கூல், கூல்! இதுக்காக கோவிச்சுகிட்டு எண்ணலேன்னா, ஒண்ணு ரெண்டு மறந்து போயிடும். (நான் எழுதியதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என நம்புகிறேன்)

    ReplyDelete
  78. Uma said...கூல், கூல்!......

    சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

    சீரியசுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். வேலையில் மட்டும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். மற்றப்படி ஜாலி டைப்.

    ReplyDelete
  79. சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.//

    thanks!

    ReplyDelete
  80. Hello sir,

    Could you please clarify on DASA sandhipu which has to be given importance while marriage porutham?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com