மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.12

நாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி!

மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 10 பேர்களின் ஆக்கக்ங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
1


நாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி!

திருவையாற்றில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்!
தொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்

கடந்த இரண்டு மாதங்களாக திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். சுமார் ஐம்பது குழுக்கள் இந்த ஆண்டு
நாட்டியாஞ்சலியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்காக முதல் நாளான 19-2-2012 க்கு 11 குழுக்களும், இரண்டாம் நாள் 14 குழுக்களும், நிறைவு நாளுக்கு 13 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவுக்கு மதிப்பியல் தலைவராக திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை, மெளன மடம் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் இருக்கிறார். கெளரவ ஆலோசகராக பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவனர், பரிசுத்தம் ஓட்டல் அதிபர், வழக்கறிஞர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி இருக்கிறார். தஞ்சை வெ.கோபாலன் விழா குழுவின் தலைவராகவும், வழக்கறிஞர் நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு தங்க. கலியமூர்த்தி செயலாளராகவும், திரு தி.ச.சந்திரசேகரன் பொருளாளராகவும், சின்னமனூர் சகோதரிகள் அ.சித்ரா, அ.சுஜாதா ஆகியோர் நாட்டியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செயலாளர்களாகவும் இருந்து விழாவை நடத்துகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திரு சி.நா.மி.உபையதுல்லா, இந்து பத்திரிகை சிறப்பு நிருபர் திரு கோ.ஸ்ரீநிவாசன், திரைப்பட நட்சத்திரம் ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோர் அறங்காவலர்கள். திரு டி.கே.ரவி, திரு புனல் வை.சிவசங்கரன், எம்.ஆர்.பி. காஸ் சர்வீஸ் அதிபர் காருகுடி இராமகிருஷ்ணன், பிளாக் டியுலிப் அதிபர், எல்.ஐ.சி. திரு கே.முத்துராமகிருஷ்ணன், திரு டி.கே.குருநாதன், பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர்
ப.உமாமகேஸ்வரி, இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள், தஞ்சை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் விழா குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பரிசுத்தம் ஓட்டல், பிளாக் டியுலிப், டெக்கான் மூர்த்தி அவர்கள், எடப்பாடி சுப்பிரமணியம் அவர்கள்
போன்றவர்கள் விழாவுக்கு போஷகர்களாக இருக்கின்றனர். விழாவில் பங்குபெற வேண்டிய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் வெளியிடும் வேலை முடிந்து விழா நாளும் நெருங்கி வந்தது.

19-2-2012 ஞாயிறு அன்று பிரதோஷம். அன்று மாலை ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழா
தொடங்கியது. முனைவர் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் ஆடல்வல்லான் விக்கிரகத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி
வைத்தார்.

19-2-2012 கோலாகல துவக்கம்

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் மூன்று நாட்கள் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை சரியாக 6.05 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை தம்பிரான் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் துவக்கி வைத்தார். தஞ்சை தொழிலதிபர் எஸ்.பி.அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி ப.உமாமகேஸ்வரி, முன்னாள் முதல்வர் முனைவர் இராம. கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து ஆடல்வல்லான் நாட்டியக் குழுவினர் க.வஜ்ரவேலுவின் தலைமையிலும், திருச்சி சகோதரிகள் ஜெயசுஜிதாவின் மோகினி ஆட்டமும், பண்ருட்டி கலைச்சோலை டி.சுரேஷ் குழுவினரின் பரதம், சின்னமனூர் அ.சுஜாதா ரமேஷ், விஜய் கார்த்திகேயன் குழுவினரின் நாதலய நடனம், மும்பை தானே நிருத்யாஞ்சலி கலைக் குழுமத்தின் இயக்குனர் லதா ராஜேஷ் குழுவினரின் பரதம், சென்னை முகப்பேர் இரா.காசிராமன் குழுவினர், நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி ராஜமீனாட்சி குழுவினர், தஞ்சை ஓம்சக்தி நடனப் பள்ளி பரமேஸ்வரி குழுவினர், நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குழுவினர் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மோஹினி ஆட்டம் மக்கள் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் மிகச் சிறப்பாக ஆடி
கூடியிருந்த வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழக்கம் போல் சின்னமனூர் சுஜாதாவும் அவரது சகோதரர் விஜய் கார்த்திகேயனும் மிகச் சிறப்பாக
உருவாக்கிய இளம் கலைஞர்கள் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆடி மக்கள் மனங்களைக் கவர்ந்தனர். மும்பை தாணேயிலிருந்து வந்திருந்த திருமதி லதா ராஜேஷ் குழுவினர் இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை புரிந்தார்கள். அவர்களது சிறப்பான நடனத்தை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துப் பாராட்டினர்.

திருத்தருமையாதீனத்துக்குட்பட்ட ஆலயங்களில் இன்று மகாசிவராத்திரி என்பதால் பொதுமக்கள் கூட்டம் திரளாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டியின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், காருகுடி இராமகிருஷ்ணன் ஆகியோர்
கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினரின் குச்சிப்புடி நடனம்

'நாட்டியாஞ்சலி' விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மகா சிவராத்திரி தினமான 20-2-2012 திங்களன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரண்டாம்
நாள் விழாவிற்கு திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமை ஏற்றார். இசைக் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன்
தொடங்கி தொடர்ந்து சென்னை வைஷ்ணவி கார்த்திகேயனின் நடனம், சென்னை சிறுமி பாலபிரியா, கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம்
எஸ்.விஜயமாலதி குழுவினர், நெல்லை இன்னிசை நாட்டியமணி இந்திரா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா அனுபமா ஜெயசிம்மா குழுவினர், சென்னை வேம்பட்டி ரவிஷங்கரின் மாணவியர் குச்சிப்புடி நடனம், சிதம்பரம் திரு அகிலனின் தகதிமிதா குழுவினர், குடந்தை ஸ்ரீ சிவசக்தி கவிதா விஜயகுமார், அவருடைய மாணவி அபிராமி ஜெயராமன், ஆர்.திவ்யா ஆகியோர் நடனமாடினர். சென்னை தமிழிசைச் சங்க இசை நாட்டியக் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி சுந்தரின் மாணவியர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இவ்வாண்டின் சிறப்பம்சமாக பெங்களூரிலிருந்து புகழ்பெற்ற நடனக் குழுவினர் அனுபமா ஜெயசிம்மா தலைமையில் வந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாக சென்னை வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினர் நடத்திய குச்சிப்புடி நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் குழுவில் அனுபவமிக்க குச்சிப்புடி கலைஞர்கள் பங்குகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.

நாட்டியாஞ்சலி நிறைவு

மூன்றாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ. உபையதுல்லா அவர்கள் தலைமை வகித்தார். முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு வீணையிசை நடந்தது. இதில் இருபத்தைந்து பேர் ஒருங்கிணைந்து வீணை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குடந்தை ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஜென்சி லாரன்ஸ் மாணவியர் நடனமும் நடந்தது.

கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர் குரு ம.சுகந்தபிரியாவின் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தினர். பராசக்தியின் பெருமைகளை விளக்கும் அந்த நாட்டிய நாடகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலியின் சார்பில் சுகந்தப்பிரியாவின் நாட்டியப் பணியைப் பாராட்டி பாராட்டு இதழை முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபையதுல்லா வழங்கினார்.

சிதம்பரம் சிவசக்தி இசை நாடனப் பள்ளியின் குரு வி.என்.கனகாம்புஜம் அவர்களின் மாணவிகளின் பரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாயூரம் பழைய கூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட்.பள்ளி மாணவியரின் பரதம் குரு வி.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர் பினேஷ் மகாதேவன் தலைமையில் நிகழ்ச்சியை நடத்தினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் காயத்ரி வைத்யநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயாவின் மாணவியர் குரு கலா ஸ்ரீநிவாசன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் கிராமியக் கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம், பாம்பு நடனம் ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குடந்தை நாட்டியக் கலாலயம் நடனப் பள்ளியின் கீதா அஷோக் மாணவியரின் பரதநாட்டியமும், தஞ்சை சக்தி நாட்டிய கலாலயம் மாணவியர் குரு அருணா சுப்பிரமணியம் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து வந்திருந்த தமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டியம் பரவசமூட்டுவதாக இருந்தது. நிறைவு நிகழ்ச்சியாக மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. வேத மந்திரம், அர்த்தநாரீஸ்வரர், தில்லானா ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

விழாவின் நிறைவில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன், விழாவில் பங்குகொண்ட நடனக் கலைஞர்களுக்கும், விழா சிறப்புற நடக்க ஒத்துழைத்த நிறுவனங்கள், இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். செயலர் தங்க கலியமூர்த்தி, தி.ச.சந்திரசேகரன், ப.இராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன், நீ.சீனிவாசன், முனைவர் இராம கெளசல்யா, பேராசிரியர் ப.உமாமகேஸ்வரி, டி.கே.ரவி, புனல் வை.சிவசங்கரன் ஆகியோர் விழாவின் வெற்றிக்கு இடைவிடாமல் உழைத்து வந்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்" எனும் பாரதி பாடலை மும்பை திருமதி பத்மினி இராதாகிருஷ்ணன் பாடி விழாவை நிறைவு செய்தார்.

செய்தியைத் தொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்
----------------------------------------------------------
இடைச் சேர்க்கை: திரு.வெ.கோபாலன் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் (மொத்தம் 12) உங்கள் பார்வைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் மற்றும் கட்டுரை குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க்ள்






























+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2




குட்டிக் கதைகளுடன் கெட்டிப் பழமொழிகள்
ஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்று சின்னம்மா பெங்களூர் கோர்ட்டில் ஒரு பழமொழியைச் சொல்லி இருக்கிறார்கள். வந்தது பாருங்கள் நீதிபதிக்குக் கோவம். 'நீதிமன்றத்தில் பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்தான் சொல்லணும்' என்று கண்டித்துள்ளார்.

நமது வகுப்பறையில் அப்படிப்பட்ட எந்த கண்டிப்பும் இலாததால் துணிந்து இந்த வாரமும் பழமொழிகள் பற்றி சிறிது சொல்கிறேன். ஏற்கனவே இரண்டுமுறை பழமொழிகள் பற்றி எழுதியுள்ளேன். சோதிடம் தவிர மேலதிகத் தகவல்கள் விரும்புவோர் ஒரு சிலராவது படித்திருக்காலாம் என்ற நம்பிக்கைதான், மீண்டும் எழுதத் தூண்டுகோலாக உள்ளது.

கதைகளைச் சொல்லி சில ப‌ழமொழிகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்.

ஒரு குரு இருந்தார்.குருகுலக் கல்வி முறை இருந்த காலம்.அவரிடம் அறிவுள்ள சில சீடர்களும், சுமாராகப் புரிதல் உள்ள சில சீடர்களும், சில
அறிவு சூன்யங்களும் சீடர்களாக இருந்தனர்.(முதல்,இடை,கடை)

ஒரு நாள் வகுப்பறையில் குரு,"எல்லா உயிர்களிலும் நாராயணனே உயிராக உள்ளார். மிருகங்களும் நாராயண வடிவமே. தாவரங்களும் அவ்வாறே.
தண்ணீரும் நாராயணனே!" என்றெல்லாம் பாடம் நடத்தினார்.

பாடம் முடிந்தவுடன் மாணவர்கள் குருகுலத் தேவைகளுக்கான பொருட்களைச் சேகரிக்க காட்டுக்குப் போனார்கள். சிலர் சுள்ளி பொறுக்கினர். சிலர் கிழங்கு முதலிய சாப்பிடும் தகுதியுள்ள பொருட்களைச் சேகரித்தனர்.

அப்போது ஒரு குரல் கேட்டது. அக்குரல் யானையின் மீது அமர்ந்து இருந்த பாகனின் குரல்."விலகுங்கள் விலகுங்கள் . யானைக்கு மதம் பிடித்துள்ள்து.வழியில் நிற்காதீர்கள்" என்று பாகன் எச்சரித்துக்கொண்டே வந்தான்.யானையும் தூரத்தில், ஒற்றையடிப் பாதையில் வேகமாக, ஆக்ரோஷமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

சீடர்களில் ஒருவனுக்கு குரு கூறியதில் "எல்லாவற்றிலும் இறைவனே இருக்கிறார் என்றால், யானையாகிய இறைவன் எனக்கு ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டார் அல்லவா? என‌வே அந்த யானை நாராயணனை வழிபட்டே வழிக்குக் கொண்டு வருகிறேன்" என்று கூறிக் கொண்டே கூப்பிய கைகளுடன் யானை வரும் வழியில் நின்று கைகூப்பிக் கொண்டு " ஓம் நமோ நாராயணாயா" என்று ஜபிக்கத் துவங்கினான்.

அருகில் வந்த மத யானை அந்த சீடனை துதிக்கையால் வ‌ளைத்துத் தூக்கிக்கடாசிவிட்டு விரைந்தது. படுகாயங்களுடன் ஆசிரமத்திற்கு தூக்கிவரப்பட்டான்.

குருவைப் பார்த்த‌வுடன்,"ஏன் யானை நாராயணன் என்னை இப்படி வதைத்தார்?" என்று கேட்டு அழுதான்.

அதற்கு குரு," அந்த நாராயணனே பாகனிலும் நாராயணனாக இருந்து விலகச் சொன்னாரே?! நீ பாகன் நாராயணன் சொன்னதைக் கேட்டு இருந்தால்
இந்த கதி வந்திருக்குமா?" என்றார்.

இது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக் கதை.

பழமொழி: "பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற் போலே"
(கதையில் யானை, பழமொழியில் ஜல்லிக்கட்டு காளை ஆகிவிட்டது.)
===========================================================
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. அவளும் குந்திதேவியும் ஓர்படியாள்கள்.(ஓர்+படி, அதாவது ஒரே படித்தரம், சம உரிமை) அல்லது ஓரகத்திகள், அதாவது

ஓர் +அகம், ஒரே இல்லத்தை,குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

குந்திதேவி கருவுற்று இருக்கிறாள் என்று கேட்டதும் அதுவரை கருத்தரிக்காத காந்தாரி உலக்கையை எடுத்து தன் அடிவயிற்றில் அடித்துக்கொண்டாளாம்.

அவளே அறியாமல் அப்போது அவள் கருவுற்று இருந்தாள். அவள் கருவறையில் இருந்த பிண்டம் 100 ஆகச் சிதறியதாம் அவர்கள் தான் 100 பிள்ளைகளாக க‌வுரவர்களாகப் பிறந்து வளர்ந்தனராம்.

பழமொழி:"அண்டைவீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அசல் வீட்டுக்காரி
இடித்துக் கொண்டதுபோல"

"ஓர்ப்படியா பிள்ளைப்பெற்றாள் என்று ஒக்க‌ப்பிள்ளை பெறமுடியுமோ?"
 ==================================================
"திண்டுக்கல் சாரதி" என்று கருணாஸ் நடித்த ஒரு படம்.கருப்பாக உள்ளவன் நல்ல அழகான சிவப்புப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தேகத்தால் அந்தப்பெண்ணைப் பாடாய்ப் படுத்துவான்.கோலம் போடும் போதுமற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று வேட்டியால் மறைத்து ஆட்டம் போடுவார் பாருங்கள்

கருணாஸ், வசனம் ஏதும் இன்றியே நகைப்புக்கிடமாகும் அக்காட்சி.

பழமொழி: "மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னயும் போகவிடமாட்டான், பின்னயும் போக விட மாட்டான்"   (மூக்கறையன்  என்பது சப்பை மூக்கன் என்று பொருள்படும்; பொதுவாக அழகற்றவன்)
==================================================
ஒரு ஊரில் ஒரு மாமா ஒரு மாமியிருந்தார்கள்.அந்த சமயத்திற்கு அந்த ஊரில் இருந்தார்களே தவிர அவர்கள் குணம் காரணமாக‌ அவர்களால் எந்த ஊரிலும்  நிரந்தரமாக இருக்க முடியவில்லை.அப்படி என்ன குணம்? மாமிக்கு எப்போதும் யாரிடமாவது சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அதனால் அவர்கள் எப்போதும் வீடு, ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

இப்போது இருக்கும் தெருவிலும் எல்லோருடனும் வம்பு வளர்த்து விட்டார்கள்.எல்லோருமே பேசாமல் ஒதுங்கிவிட்டார்கள்.சண்டை போட யாருமே இல்லைஎன்று

ஆனவுடன் ஊரைக் காலி செய்துவிட்டு மாமா,மாமி கிளம்பினார்கள்.மாமா கட்டுச் சோற்று மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டார்.மாமி தட்டுமுட்டு சாமான்களைத் தன் இடுப்பில் வைத்துக் கொண்டு தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்.

அப்போது அந்த ஊரின் போறாத காலமோ என்னவோ, கடைசி வீட்டுக்கார பாட்டியம்மா வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு,"அப்பாடி சண்டைக்காரி ஒருவழியா  கிளம்பிட்டாடி அம்மா "என்றாள்.மாமியின் காதில் இது விழுந்ததோ இல்லையோ,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் கீழே வைத்து விட்டு பிலு பிலு என்று ஒரு பாட்டம் சண்டை போட்டுவிட்டுத்தான் போனாளாம்.

பழமொழி:"அஞ்சு ஊர் சண்டை சிம்மாளம் அங்கலம் அரிசி ஒரு காவாளம்"

இந்தக்கதை போதுமா?இன்னும்கொஞ்சம் வேணுமா?

வாழ்க வளமுடன்!!
ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3


வம்ச விருத்திக்கு எது முக்கியம்?
கட்டுரையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வையே இங்கு எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, அருகாமையில் உள்ள ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் இறைவனடி சேர்ந்தார். வாரிசு இல்லாத அவர்,தன் உடன் பிறந்தவர் மகனை எடுத்து வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஆளாக்கினார் .பையன், தற்போது வெளிநாட்டில். செய்தி அறிந்ததும் அவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
       
இங்கே பையனின் 'ஒரிஜினல்' தாயார், வளர்ப்புத் தாயிடம் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கணவனை இழந்த வளர்ப்புத் தாயோ மிகுந்த மனத்துயருக்கு ஆளாகி,கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தார். விஷயம் இதுதான். தன் மகன், வெளிநாட்டில் வசிப்பதால்,அவனை இனிமேல் அடிக்கடி அழைத்து தொல்லை தரக் கூடாதெனவும்,மற்ற மாதந்திர, ஆறாம் மாதச் சடங்குகளை எல்லாம் தன் மகனை செய்யக் கட்டாயப்படுத்தக் கூடா தெனவும் 'ஒரிஜினல்' தாயார் சொல்ல,(கொள்ளி மட்டும் வைக்கலாமாம். இல்லையின்னா சொத்து கிடைக்காதுல்ல)

வளர்ப்புத்தாயோ,'இதை எல்லாம் செய்யாததுனால நாளைக்கு வீடு வாசல தர மாட்டோம்னா சும்மாவிடுவீங்களா?' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா?, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,சத்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா?.சொத்தை வாங்கின கையோட, உன்னை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொல்லுவா பாரேன்' என்று 'ஏற்றி'விட, மேடையில்லா நாடகம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
   
பணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்.

குளித்து விட்டு,கொதிக்கும் மனதை அமைதிப்படுத்த, தியானம் செய்ய உட்கார்ந்தேன். ஏனோ,எனக்கு என் தாத்தா சொன்ன, எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.
       
இந்த நிகழ்வில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் உண்மையே. இதை,என் தாத்தா சொன்னபடி தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நிகழ்வு கி.பி.1890 களில் துவங்குகிறது.

நாட்டரசன் கோட்டை எனும் ஊர், சிவகங்கை அருகே உள்ளது.அங்கே கிருஷ்ண தீக்ஷிதர் என்ற‌ புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி மகள் பெயர் பூரணி. பெயருக்கேற்றார் போல் அழகும் அறிவும் பூரணமாக நிரம்பியவள்.ஆனால் தலையெழுத்து?. குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார்? 'வகுத்தான் வகுத்த வகையில்'எல்லாம் நடக்கும் என திடம் கொண்டார். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தைக்கு மணம் செய்து வைத்தார். ஆனால் விதி வலியது. அவருடைய செல்ல மகள் மிகச்சிறு வயதிலேயே, வாழ்விழந்தாள்

பூரணியின் கணவன் வீட்டார்,'கன்னிகாதானம் ஆகி விட்டதால் அவள் எங்கள் வீட்டுப் பெண்,ஆகவே அவள் இங்கேயே இருக்கலாம்' எனக் கூறியும் கேட்காமல், தந்தை அவளைப் பிறந்தகம் அழைத்து வந்தார்.சில  வருடங்கள் கழிந்தபின், மதுரை,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராகத் தொண்டுபுரிந்து வந்த தீக்ஷிதரின் மூத்த மகனின் மனைவி,முருகனடி சேர்ந்தார்.  மறு மணத்திற்கு மறுத்துவிட்ட, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அவர்,தன் தங்கையை தனக்கு உதவியாக தன்னோடு அனுப்புமாறு தந்தையை வேண்டினார். தீக்ஷிதரும் சம்மதித்தார்.

இதற்கிடையில்,வறுமையில் வாடிய தீக்ஷிதரின் மற்றொரு பெண்ணின் குழந்தைகளை,தீக்ஷிதரின் மகன்கள் ஆளுக்கொருவராக பொறுப்பெடுத்து வளர்த்துக்கொடுப்பது என முடிவாயிற்று.அதன்படி,மூத்த மகனின் பொறுப்பில் வந்த குழந்தையை,பூரணி தன் சொந்த மகனே போல் வளர்த்து வந்தாள். மூத்த மகனின் வீட்டில் சகலமும் பூரணியின் பொறுப்பில் நடந்தது. அவர் குழந்தைகளுக்கு அத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு.

பூரணியின் கணவன் வீட்டாரும் பூரணியை அடிக்கடி வந்து பார்த்து நலம் விசாரித்து வந்தனர். குறிப்பாக, பூரணியின் கொழுந்தனாரும் அவர் மனைவியும் மதுரைக்கு வரும் போதெல்லாம், பூரணியை வந்து பார்க்கத் தவறுவதில்லை.

காலம் உருண்டோடியது.கால காலன், தன்னடியில் பூரணியைச் சேர்த்துக் கொண்டான். அவருக்கு யார் இறுதிச் சடங்குகள் செய்வதென்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஆனால் இது வேறுமாதிரியான பிரச்னை.'அத்தை எங்களைத் தாய்போல் வளர்த்தார். அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார்.ஆகவே நாங்கள்தான் செய்வோம் ' என்று பூரணியின் அண்ணன் மகன்கள் வாதிட,பூரணியின் சகோதரி மகனோ, 'நான் தான் அபிமான புத்திரன் [முறைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுக்காமல் வளர்த்தால் அக்குழந்தை வளர்த்தவரின் அபிமான புத்திரன்],ஆகவே எனக்குத்தான் உரிமை' என்று அடம் பிடித்தான். அத்தையின் கொழுந்தனாரோ,'எங்கள் அண்ணன் சிறு வயதில் மாண்டு போனதால் அவர் உங்கள் வீட்டுக்கு வந்தார். இல்லையென்றால் எங்களுடன் தான் இருந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்ணாகி விட்ட அவருக்கு நாங்கள் செய்வதுதான் முறை' என்றார்.

இத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும், அத்தை உள்பட ,டாடா,பிர்லா இல்லை. அத்தையில் பெயரில்,மதுரை பண்டாபீசில், அவள் தமையன்,தனக்குப் பின் தங்கைக்கு உதவும் என்று போட்டுவைத்திருந்த சொற்பத் தொகையும் ஓரிரண்டு பவுன் சங்கிலியுமே (அந்தக் காலத்தில் தங்கம் என்ன விலை?) அத்தையின் சொத்து.

கடைசியில் முடிவு என்ன ஆயிற்று?.அத்தையின்அபிமான புத்திரனுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அக்கால வழக்கப்படி மறுமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலை அப்போது. ஆகவே அவர் கர்மம் செய்தால்,அத்தையின் ஆசீர்வாதத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்,ஒரு பெண்ணின் வாழ்வை மனதில் வைத்து மற்றவர்கள் இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வயதில் மூத்த உறவினர் ஒருவர் எடுத்துக்கூற,அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவர் கூற்றுப்படியே, மறுவருடமே அத்தையின் அபிமான புத்திரனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இதை கூறிவிட்டு எங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ் ஆஃப் தி ஸ்டோரி'.

1. வம்ச விருத்திக்கு முன்னோர்களுக்கு நீத்தார் கடன்களை விடாமல் செய்வது முக்கியம்.

2. ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும். யாரும் செய்ய முன்வராவிட்டால், பிரஜைகளின் தந்தை என்ற முறையில்,ராஜாவே செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).

3.பணத்துக்காக இக்காரியங்கள் செய்யப்பட்டால்,இறந்தவரின் ஏழு தலைமுறைப் பாவம்,கர்மம் செய்தவரைச் சேரும்.

4.தர்ம சிந்தனையுடன், இம்மாதிரி காரியங்கள் நடைபெற பண உதவி செய்வது,சிவலோகப் பிராப்தியைப் பெற்றுத்தரும்.

இந்த விஷயங்களை யார் இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்வார்கள்?.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்?.

ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.

ஆ, சொல்ல மறந்துட்டேனே. எங்க தாத்தவும் இதில ஒரு சின்ன காரெக்டர் (மெயின் அல்ல). இன்னமும் பூரணியின் அபிமான புத்திரன் உயிரோடு இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன் சின்னம்மாவிற்கு திதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாக்கம்: அன்புடன், பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4



வரைபடம்
வரைந்தவர்: தேமொழி

இந்த ஓவியத்தை தன் மகள் பிறந்த பொழுது வந்த வாழ்த்து அட்டை ஒன்றினைப் பார்த்து வரைந்ததாகக் கூறுகின்றார்.
------------------------------------------------------------


காணொளி சுட்டி:


shampoo-word-origin-india-s-many-contributions-to-the-english-language
http://news.yahoo.com/who-knew/shampoo-word-origin-india-s-many-contributions-to-the-english-language-28213249.html

இந்தக் காணொளியை அனுப்பியவரும் தேமொழி அவர்கள்தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5


சிறுகதை: வாழும் இதயங்கள்
ஆக்கம்: ஸ்ரீஷோபனா

அழகான லண்டண் மாநகரில் அந்திப்பொழுது அப்பொழுது தான் சாய ஆரம்பித்திருந்தாலும் வானம் பார்ப்பதற்கு என்னவோ சாமத்தை நெருங்கி விட்டதைப் போன்று இருள் சூழ துவங்கியிருந்தது. அன்று பனிப்பொழிவு சற்று குறைவு தான் என்றாலும் குளிர் வதைப்பதில் பின்வாங்குவதாகயில்லை. அக்குளிர்ந்த காற்றிடம் மல்லுக்கு நிற்பதைப் போலவே சாலைகளில் அக்குளிரையும் பொருட்படுத்தாது சிலர் மெதுவாக ஊர்ந்தபடியே சென்று கொண்டுயிருந்தனர். நடுங்க வைக்கும் அக்குளிரின் நடுவில் மூன்று இளைஞர்கள் சற்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின்முகத்தோற்றமே அவர்கள் மூவரும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது.

"டேய்...சலீம்,சீக்கிரமா வாடா...இப்பவேலேட்ஆயிடுச்சு...ப்ரொஃபசர் அங்கே ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருப்பார்" அவசரப்படுத்தினான் பஞ்சாபியான ககன்தீப்சிங்

"கூல்..மேன்...உங்க இந்தியாகாரங்களுக்கு எப்பவும் அவசரம் தானா.. .ப்ரொஃபசர் என்ன வீட்டில் தானே இருக்கப்போறார்...எதுக்கு டென்ஷன் படுத்துற...அதோ பாரு...நாளைக்கு நான் பறந்துப்போகப்போகிற காரை கொஞ்சம் விளம்பரத்திலயாவது பார்க்க விடுப்பா"என்று விளம்பர பலகையை பார்த்தபடியே ஆமை நடை நடுந்து வந்தான் பாகிஸ்தானியனாகியச லீம்ஹுசைன்முகமது

"பீட்...இட்...பீட்இட்...ஹூ..." என்று திடீரென்று கத்திக்கொண்டே ஒரு விதமாக நடந்தான் மேற்கு வங்காளியான ரித்தீஷ் சாட்டர்ஜி

"ஆமா...நான் உங்களை லேட்ஆகுதுன்னு முன்னாடி வேகமா நடந்து வாங்கன்னு சொன்னால் நீ மட்டும் ஏன்டா ரித்தீஷ்பின்னாடியே போற...நான் முக்கியமான என் ஆராய்ச்சி கட்டுரையை ப்ரொஃபசரிடம் கொடுக்கனும்ன்னு அவசரப்படுத்தினால்...ப்ளீஸ்,ரித்தீஷ்...சீக்கிரமாவாடா"எரிச்சலடைந்தான் ககன்

"டேய்...ககன்...இது என்ன வாக்குன்னு இன்னுமாதெரியல...இதுக்கு பேர் தான் 'மூன்வாக்'" என்று கூறி மீண்டும் அந்த நடையை செய்து காட்டினான் ரித்தீஷ்

"என்ன மூன்வாக்கா...ஆர்ம்ஸ்ட்ராங்நிலாவில் கால் பதிச்சப்போதுகுதிச்சுட்டு தானே இருந்தார்...இப்படி பின்னாடி போகவேயில்லையே?..."என்றபடியே தலையை சொறிந்தான் ககன்

"அட...நீ எப்பவும் நாசா விஞ்ஞானி மாதிரி யோசிச்சிக்கிட்டே இருந்தால்,எப்படி உனக்கு இது மாதிரி பொது அறிவு வளரும்...லூசு...இது எம்ஜெ தெரியுமில்ல அவரோட'கிளாசி'ஸ்டெப்டா...இது தெரியல,உனக்கு ஆக்ஸ்ஃப்ர்டுல எவன் சீட்டை கொடுத்தான்?" ககனை சீண்டிப் பார்த்தான் ரித்தீஷ்

"என்னது எம்ஜேவா...ஓ மைக்கில்ஜாக்சனைசொல்கிறாயா" தெளிபடுத்திக் கொண்டான் ககன்

"ஹிஹிஹி நீ எம்ஜே மாதிரி நடந்தால் தானே தெரியும்; இப்படி கழுதை மாதிரி நடந்து காட்டினா...எப்படிப்பா நாங்களெல்லாம் தெரிஞ்சிக்க முடியும்..." என்று சலீம் கூறியது தான் தாமதம்,அதுவரை அமைதியாக வந்த ககன் தன்னையும் மறந்து சிரித்தான்.அவனது சிரிப்பு மட்டும் சில நிமிடங்கள் கழித்தே அடங்கியது.

"பார்த்தீயா,ரித்தீஷ்...கக‌ன் இப்படி சிரிக்கிறதை பார்த்தே எவ்வளவு நாளாச்சு..."என்று சலீம் மெதுவாக ரித்தீஷிடம் கூற அவ‌னும் த‌லையைஆட்டிய‌ப‌டியே ஆமோதித்தான்

அவ‌ர்க‌ள்பேசி‌க் கொண்டே பாதாள‌ இர‌யில் நிலைய‌த்தில் இருந்து மெட்ரோ புகைவண்டியில் ஏறி வேறொரு இடத்தைநோக்கி ப‌ய‌ண‌மாயின‌ர். புகைவண்டியில் ஏறி அம‌ர்ந்த‌ பிறகு தான் நிம்ம‌திய‌டைந்தான் க‌க‌ன்.

அவ‌னுக்கு சற்று அருகில் ஒரு தாய் த‌ன்குழ‌ந்தையுட‌ன் விளையாடுவ‌தை பார்த்து ர‌சித்த‌ப‌டியேசிந்த‌னையில் ஆழ்ந்து போனான் ககன்.சென்ற மாதம்  இந்தியாவில் ஒரு சாலை விபத்தில் இறந்த தன் தாயின் முகம் தான் நிழலாடியது கண்ணீரால் பனித்திருந்த அவனதுகண்களில்.இதைப் புரிந்து கொண்ட‌ அவனது தோழ‌ர்க‌ள்,மீண்டும் பேச்சை தொட‌ங்கினார்க‌ள்

"ககன்...நீ வேணும்னா நாளைக்கு போய் ப்ரொஃபெஸரிடம் உன் பேப்பர்ஸை கொடு...இன்னிக்கு நீயும் எங்க கூட "லேடி காகா"வோடகான் சர்ட்டுக்கு வாயேன்...இது மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் நமக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டா" என்று ககனின் சிந்தனைகளை திருப்பும் விதமாக பேசினான் சலீம்

"ம்...நானா...இல்லைடாசலீம்...இந்த ப்ராஜெக்ட் தான் என்னோட ட்ரீம்...யார் இந்த வருஷம் பெஸ்ட் ப்ராஜெக்ட் சப்மிட் பண்றாங்களோ அவங்களைத்தான் அவரோட ஆராய்ச்சியில் அஸிஸ்டென்டா ஏற்றுப்பேன்னு சொல்லிருக்கிறார் நம்மப்ரொஃபஸர்...இதை வச்சு தான் ப்ரொஃபஸரோட அஸிஸ்டென்டாக ஆக முடியும்...இந்த மாதிரி வாய்ப்பு தான் மறுபடியும் நமக்கு கிடைக்காது" சலீமின் பேச்சால் ககன் சற்றேத‌ன் சிந்தனையிலிருந்து விடுபட ஆரம்பித்தான்.

"என்னது நமக்கா...அது உன்னை மாதிரி கூண்டுக் கிளிகளுக்கு மட்டும்தான்ப்பா...எங்களை மாதிரி சுதந்திர பறவைகளுக்குதான் எம்ஜே, என்ரிக்கே, ஜஸ்டின்பைபர் மாதிரியான‌ பெரிய ப்ரொஃபெஸர்கள் இருக்கிறாங்களே..." என்று மீண்டும் ககனை வெறுப்பேற்றினான் ரித்தீஷ்

"ரித்தீஷ் கண்ணா...எம்ஜே தான் இப்போ இல்லையேப்பா..."என்று ரித்தீஷை இடறினான் சலீம்

"அவர் இல்லைன்னா என்ன...அந்த இடத்தை பிடிக்க தான் நான் வந்துவிட்டேனடா...வருங்காலத்தில் நீங்கள் என்னை 'ஆர்சி'ன்னு கூப்பிட வேண்டி வரும்...அதனால் அதை இப்பவே ப்ராக்டீஸ் பண்ணி வச்சுக்குறது நல்லது"என்று தன்னையே பெருமைப் படுத்திக்கொண்டான் ரித்தீஷ்

"நீயே தான் உனக்கு தம்பட்டம் அடிச்சக்கனும் சார்...ஆனால் நான் பாரு நாளைக்கு ஒரு ஷுமாக்கர் மாதிரியோ இல்லை லீவிஸ் ஹாமில்டன் மாதிரியோ வந்த பிறகு இருநூறுகிலோமீட்டர் வேகத்தில் போர்ஷ், லம்பார்கினி மாதிரி 'ஸ்போர்ட்ஸ்' காரில் எப்படி ட்ராவல் பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்க போறீங்க" என்று சலீமும் தன் பங்குக்கு கனவுலகில் மிதக்க தொடங்கினான்

"ஒ...வாவ்...என்னோட வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்...ஏனென்றால் நாளைக்கு உங்களை பார்க்க நான் இருப்பேனோ இல்லையோ"என்று ககன் கூறியதும் சற்று திகைத்து போய் நின்றனர் சலீமும் ரித்தீஷும்.

"என்ன சொல்ற...ககன்" என்று தயக்கம் கலந்த பதற்ற‌த்துடன் கேட்டான் ரித்தீஷ்

"அட...நீங்கள் ரெண்டு பேரும்மிகப் பெரிய‌'செலிபிரிட்டி'யான பிறகு எங்கே என்னை கண்டு கொள்வீங்கன்னு தான் சொல்றேன்..."என ககன் கூறியதும் தான் சலீமும் ரித்தீஷும் ஆசுவாச மடைந்தனர்

"ககன்ஜி...நம்ம ரெண்டு நாட்டுக்கு நடுவில் இருக்கிற வெறுப்பு என்றும் மாறாமல் போனாலும் நம்மளோட நட்பு என்றும் நிலைக்கும்" என்று உணர்ச்சி வசத்துடன்சலீம் பேசவே அவனை அணைத்துக்கொண்டனர் ககனும் ரித்தீஷும்

"டேய்...உண்மையை சொல்லு,எந்த இந்திப்படத்துலயிருந்து இந்த வசனத்தைத் திருடினே..."என்று ரித்தீஷ் கிண்டல் செய்யவே மீண்டும் சிரிப்பொலி புகைவண்டியில் ஒலிக்க தொடங்கியது

அவ‌ர்க‌ள் இந்தி மொழியில் பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்த‌தும் புகைவண்டியில் வ‌ந்த‌ ச‌க‌ப‌ய‌ணிக‌ள்,குறுந்தாடியுட‌ன் இருந்த‌ ச‌லீமையும் க‌க‌னையும் புகைவண்டியில் குண்டு வைப்பதற்கு வந்த‌ தீவிர‌வாதிக‌ளை பார்ப்ப‌து போல‌வே பார்த்து கொண்டிருந்தார்கள்.அதை புரிந்து கொண்ட‌ நண்பர்கள் தாங்க‌ள் இற‌ங்கும் இட‌ம் வந்த பிறகுதான் மீண்டும் பேச‌வே தொட‌ங்கினார்க‌ள்.

"சரிடா,ககன்...நீ ப்ரொஃபஸரை பார்த்துவிட்டு இங்கே ஸ்டேஷன்ல இரு...நாங்க வந்துவிடுவோம்...நாங்கள் வர அதிக‌ நேரமானால் நீ வீட்டுக்கு கிளப்பி விடு,சரியா"

"இல்லே...ரித்தீஷ் நாம எல்லோரும் சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்...பாய்டா"

ககன் புகைவண்டி நிலையத்தில் இருந்து சற்று தூரம் சாலையை கடந்து வந்து ஒரு வீட்டின் வாசலின் முன் நின்றான்.தான் குறித்த நேரத்தில் பேராசிரியரின் இல்லத்தை அடைந்த திருப்தியுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த எண்ணவும்,அவனுக்கு சற்று தொலைவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி திகைத்துபடியே பேராசிரியரின் வீட்டின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் ககன்.

*********************

"ச்சே...இந்த மாதிரி பாப் ஸ்டார்ஸ் எல்லாருமே ரொம்ப மோசம்டா...அதெப்படி சொல்லி வைத்ததைப் போலவே நிகழ்ச்சி நடக்குற அன்னிக்கு பார்த்துத்தான் இவங்களுக்கு காய்ச்சல் வருது, ஃப்லைட்டை தவறவிட்டு விடுறாங்க...நம்மள பார்த்தா பைத்தியக்காரங்க மாதிரி தெரியும் போல இவங்களுக்கு..." கோபத்தின் உச்சியிலிருந்தான் ரித்தீஷ்

"ம்...அதுக்கு தான் கஷ்டப்பட்டு பகுதி நேர வேலையெல்லாம் பார்த்து சம்பாதிச்ச பணத்தை வச்சு ஏதாவது "கிராண்ட் ப்ரிக்ஸ்" கார் பந்தயத்திற்காவது  போகலாம்ன்னு சொன்னேன்...இப்ப பாரு, நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு பலகையில்போட்டிருக்காங்க..." சலித்தபடியே சலீம்

"அதானே பார்த்தேன்...நம்ம நண்பனாச்சே, எங்கே திருந்தி தெளிஞ்சிட்டி யோன்னு நினைச்சு பயந்து விட்டேன்...டேய்,சலீம்...நாமளும் ககன் மாதிரி ப்ரொஃப்ஸரை வீட்டுக்கு போய் ஏதாவது படித்தாலாவது நம்ம மூளைக்குள் நல்ல விஷயங்கள் கொஞ்சமா சேர்த்து கொள்ளலாம்ன்னு சொல்றதை விட்டுட்டு..."

"ம்...அதுவும் சரிதான்...நமக்கெல்லாம் பட்டால்தான் புரிகின்றது...சரி அரைமணிநேரமா காவல்காரங்களிடம் சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை...பணம் கிடைக்க போவதில்லை...ககனை பார்க்க ப்ரொஃப்ஸர்வீட்டுக்காவது போவோம்..." என்று சமாதானமடைந்தபடியே நடக்கக் தொடங்கினார்கள் ரித்தீஷும், சலீமும்.

"அப்போ ப்ரொஃபஸரை பார்க்கப்போக வேண்டாமா?"என்று ரித்தீஷ் சந்தேகத்தை எழுப்ப, "ககனுக்குபோட்டியா நான் எப்படி ரித்தீஷ் வர முடியும்...என் நண்பனுக்காக இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?"

"அதானே,பார்த்தேன்...நீ திருந்திட்டியான்னு"

"உங்க இந்தியாகாரங்களுக்கு சந்தேகப்படுறதே வேலையாகி விட்டதுப்பா..."என்று சலீம்கூறவே சிரிப்பொலி ஆரம்பமானது

சலீமும், ரித்தீஷூம் நிகழ்ச்சி நடக்கவிருந்த மைதானத்தை விட்டு விலகி நடக்க தொடங்கவும் கூச்சல் சத்தம் விலகி மயான‌ அமைதி நிலை கொள்ளத் துவங்கியது. அப்பொழுது அங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் பதற்றத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.இருளில்அப்பெண்ணின் முகம் சரியாக தெரியாததால் உதவ எண்ணிய அவர்கள், இருவரின் முகத்திலும் இருள் சூழத் தொடங்கியது வெளிச்சத்தில் அவளைக்கண்டதும்.

"சலீம்,ரித்தீஷ்...தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்..."என்று ஆங்கிலத்தில் பதற்றத்துடன் கெஞ்சினாள்

"ச்சே...அங்கே என்னடான்னா அந்த "லேடி காகா" தொல்லை...இங்கே வந்தால் இந்த லேடி தொல்லை...இந்த லேடிஸ்களே இல்லாத உலகமே இருக்காதா?..."என்று ரித்தீஷ் கோபத்தில் கத்தினான்

"இங்கே பாரும்மா செலினா,உங்களுக்கு தான் எங்க'ஆசியர்களை' பார்த்தால் பிடிக்காதே,அப்புறம் எதுக்கு எங்ககிட்ட வந்து உதவி கேட்கிற...போ,அங்கே ஏதாவது வெள்ளைக்காரனுங்க இருப்பானுங்க,அவனுங்களை உதவ சொல்லி கேளு..."என்று தன் பங்குக்குவெறுப்பை காட்டினான் சலீம்

"போதும் வாடா,சலீம்...இவள் நம்ம ககனை வகுப்பறையிலே வைத்து அவ்வளவு மோசமாக அவமானப்படுத்தியதற்கு இவளிடம் இவ்வளவு நேரம் நின்று பேசுவதே பாவம்...வா,நாமககனைப் பார்க்க போகலாம்...இவளிடம் என்ன பேச்சு நமக்கு..."என்று ரித்தீஷ்சலீமின் தோளை பிடித்து இழுத்து நடக்கத் தொடங்கினான்.

"அட...கடவுளே...ஹையோ..."அதிர்ச்சியில் உறைந்திருந்த அவளின் நாவிலிருந்துவார்த்தைகளும் உறைந்து போய் வர மறுத்தன
"உன்னை பார்க்கவே எங்களுக்கு பிடிக்கலை...இனவெறி பிடித்த உன்னை மாதிரி இருக்கிறவங்க தான் உண்மையான 'சாத்தான்கள்'என்று மேலும் எரிந்து விழுந்தான் சலீம்

அதிர்ச்சியில் இருந்த செலீனா கதறி கதறிஅழத்தொடங்கினாள்.ஒரு பெண்ணை இந்த அளவிற்கு வேதனைப் படுத்தியதும்,அங்கே முகம் தெரியாத ஒருவரை ஆபத்திலிருந்து மீட்காமல் செல்வது நண்பர்கள் இருவருக்கும் குற்றவுணர்வை மேலெழச் செய்தது. சிலஅடிகளே நடந்து சென்ற நண்பர்கள் இருவரையும் அவளது கண்ணீர் மீண்டும் அவளை நோக்கி நடக்க செய்தது

"செலீனா...எங்கள் இருவரையும் மன்னித்து விடு...ஏதோ வெறுப்பில்... சரி...யாருக்கு உதவி வேண்டும்?...என்ன நடந்தது?" என்று தன் தவறை உணர்ந்தவனாய் படபடத்தான் ரித்தீஷ்

"ரித்தீஷ்...அங்கே...நான் வரும் வழியில் சில திருடர்கள் என்னை வழிமறித்து என் கைப்பையை பறித்துக் கொண்டு என்னை கொலை செய்ய முயன்றார்கள் ... அப்போ,நான் பயத்தில் அலறி கத்தவும்,அங்கே ஒருவர் என் அலறல் சத்தம் கேட்டு வந்து நின்றார்...அவர்" மீண்டும்அழத் தொடங்கினாள் செலீனா.

"சரி,செலீனா...உன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்...பிறகு என்னவாயிற்று?"பதற்றத்துடன் கேட்டான் சலீம்

"அது...ககன் தான்...நான் அவனை மோசமாக அவமானப்படுத்தினாலும் அவன் ஆபத்தில் இருந்த என்னை காப்பாற்ற ஓடி வந்தான்...பின்னர் அந்த திருடர்களிடமிருந்து என் கைப்பையை பிடுங்கிக் கொடுத்து விட்டு என்னை அங்கிருந்து ஓடிவிடுமாறு சொன்னான்..."என்று அவள் கூறி முடிக்கவும் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் தேம்பி தேம்பிஅழத் தொடங்கினாள் செலீனா.

செலீனாகூறியதும் அதிர்ந்து போய்விட்டார்கள் ரித்தீஷும்,சலீமும்.ஒரு நிமிடம் கூடதாமதிக்காது,நடப்பதற்கே சிரமமாயிருந்த அந்தப் பனியில் தங்களது நண்பனைத் தேடி ஓடத்தொடங்கினார்கள்.சாலையில் அங்கும் இங்கும் ககனைத் தேடியபடியே ஓடினார்கள்.செலீனா காட்டிய வழியில் சென்றும் ககனை கண்டுபிடிக்க முடியாததால் அருகில் இருந்த சில சாலைகளிலும் தேடியும் பயனில்லை.சோர்வடைந்திருந்த அவர்களில் ரித்தீஷுக்கு ஒரு யோசனை தோன்றியது

"...சலீம்...ஒரு வேளை,ககன் ப்ரொஃபஸர் வீட்டுக்கு போயிருக்கலா ம்...வா...அங்கே போய் தேடலாம்..."அந்த வாடைக் காற்றில் ஓடிய களைப்பில் மூச்சை வாங்கியபடியே பேசினான் ரித்தீஷ்

"ம்...சரியான யோசனை...அங்கே போய் தேடலாம்"என்று அனைவரும் பேராசிரியரின் வீட்டை நோக்கி ஓடினார்கள்

பேராசிரியரின் வீட்டை நெருங்கியதும்,ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது அங்கு குழுமியிருந்த போலீஸாரின் கூட்டத்தைப் பார்த்தே தெரிந்தது. மூவரும் தத்தமது தெய்வங்களை தாங்கள் நினைத்தபடி'அந்த' விபரீதம் நடந்திருக்க‌கூடாது என்று மனதிற்குள் வேண்டியபடியே அருகில் சென்றார்கள். சலீமும்,ரித்தீஷூம் போலீஸார் சுற்றிக்கட்டியிருந்த மஞ்சள் ரிப்பனை தாண்டி எத்தனிக்கவும்,அங்கே அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை அதிரச் செய்தது. வெண்மையான உறைபனியில் நெஞ்சிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் கிடந்த ககன் அருகில் நின்றுக் கொண்டிருந்த ப்ரொஃபஸரின் கையில் ககன் கொண்டு வந்திருந்த 'ப்ராஜெக்ட்'இருந்தது.

ககன் தான் இறப்பதற்கு முன்பு தனது பேராசிரியரிடம் தனது 'ஆய்வு கட்டுரை'யை அளித்த பிறகே அவனது உயிர் பிரிந்தது. இறக்கும் தருவாயிலும் தனது வாக்குக்கு மதிப்பளித்து தன்னை சந்திக்க வ‌ந்த தனது சிறந்த மாணவனை இழந்த துக்கத்தில் பேராசிரியரின் க‌ண்க‌ளும் க‌ண்ணிரீல் தோய்ந்திருந்த‌து. சலீமும்,ரித்தீஷூம் தங்களது ஆருயிர் நண்பன் பிணமாய் ஆனதை நம்ப முடியாமல் கதறி அழத்தொடங்கினார்கள்.

"ஹையோ...ககன் நாங்களும் உன் கூடவே வந்திருந்தால்,இன்னிக்கு நீ எங்கக் கூடவே இருந்திருப்பியேடா..."என்று தலையில் அடித்துக் கொண்டு சலீம் அழுவதைப் பார்த்த போலீஸார் சற்று திகைத்து போயினர்

"ககன்...உன்னை மாதிரி ஒரு நல்ல தோழனை கடவுள் எங்ககிட்டயிருந்து ஏன் பறித்துக் கொண்டார்..."என்ற ரித்தீஷின் உறுக்கமானகதறல் அதிர்ச்சியில் இருந்த செலீனாவை அருகில் வரசெய்தது.

"வகுப்பில் முதல் மாணவனாய் ஒரு 'ஆசிய' இளைஞன் இருப்பதை விரும்பாம‌ல்ககனை பலமுறை பலரின்முன்பும் அவமானப்படுத்தி வேதனைப் படுத்தினேன்...ஹையோ...இன்று என்னை காப்பாற்ற எண்ணி அவன் தன் உயிரையும் இழந்துவிட்டானே...கடவுளே,இது உண்மையாக இருக்கக் கூடாது...இல்லை...இது உண்மையில்லை" என்று தனக்குள் பேசிய‌ப‌டியேந‌ட‌ந்தாள்செலீனா.

இன்னும் அருகில் சென்று,நடுங்க‌ வைக்கும் அக்குளிரில் விறைத்துப் போயிருந்த ககனின்உடலைப் பார்த்ததும் விறைத்துப் போன‌வ‌ளாய் நின்று கொண்டிருந்தாள் செலீனா.

ஆக்கம்: ஸ்ரீஷோபனா
+++++++++++++++++++++++++++++++++++++++
6




மின்சாரக் கனவு 
கனவு காண்பவர்: தனுசு
--------------------------
மின்சாரப் பூவே  
நீ மொட்டாய் துளிர்கையில் 
துள்ளுகிறோம் முழுமையாய் பூப்பாய் என்று 
ஆனால் துவண்டு விடுகிறோம் நீ 
துண்டு படும்போது.


மின்சாரக் கண்ணா
உன் முழு அலங்காரத்தை காண துடிக்கிறோம் 
மாப்பிள்ளை அலங்காரம் போன்று 
ஆனால் மடிந்து விடுகிறோம் 
நீ இருள் அலங்காரம் ஏந்தி வரும்போது .


மின்சார தேவியே 
உன் ஓளி கடாச்சத்தை கொண்டாடவே நினைக்கிறோம்
அலிபாபா குகை போன்று 
ஆனால் இருட்டில் இருப்பதையும் திருட்டுக்கு வார்த்துவிட்டு 
விசும்பிகிறோம் ஏமாளிகள் போன்று . 


மின்சார வெட்டே 
உனக்கு ஒரு வெட்டு விழத்தான் வேண்டுகிறோம் 
பலி ஆடு போன்று 
ஆனால் நாம் தான் பலியாகிறோம் 
வெட்டே வேட்டையாடி வரும்போது .


மின்சாரக் குறைவே 
உனக்கு ஒருநிறைவு வரத்தான் விரும்புகிறோம் 
நிறைகுடம் போன்று  
ஆனால் நாம்தான் கோபத்தில் நிறைகிறோம்    
அலுவல் சமையல் நேரங்களில் குறையும்போது  


மின்சார அரசியலே 
நீ இனிக்கிறாய் அறிவிப்பு தீர்மானங்கள் என்று 
சாயம்பூசி வரும் போது  
ஆனால் ஏமாறுகிறோம் அவையாவும் 
இருட்டுக்கடை அல்வாவாக மாறும்போது.


மின்சாரத் தலைமையே 
உன்னை பாராட்டவே விரும்புகிறோம் 
கோப்பையை வென்ற அணியைப்போன்று 
ஆனால் திட்டுகள் மட்டுமே தருகிறோம் 
மதுக்கோப்பையைக் காலிசெய்தவர் போன்று!
-தனுசு- 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7

சமயபுரத்தாளே சரணம் அம்மா! 
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்

சமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே!
உமையவளே, உண்மைதோறும் உறைபவளே!
அம்மையே, எமையாதரிக்க  வேண்டியே - தேடிவந்தேன் 
உம்மையே ஏழைமுகம் பாராயோ! 


"எங்கெங்கு காணினும் சக்தியன்றோ" அவள்
எங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ 
தங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்  
மங்கலமுத்துமாரி வுன்சேவடி போற்றுகின்றேனே!

வயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை -அதனூடே  
முயலோட; நதிதனிலே கயலாட; கரைதனிலே
மயிலாட; யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா 
குயில்போலே நின்புகழ்பாட அருள்வாயே!

தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றோம் -மஞ்ச
நீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே -காவிரி
ஆறோடும் கரையினிலே தேடிவந்தேனம்மா -காட்டிடுவாய்
சீரோடு கனிமுகத்தை நேரில்வந்தே! 


பக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன் 
சக்தி உனையே யாவினிலும் காணுகிறேன் 
சத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே
நித்தியானந்தம் அருள்வாய் தாயே!


சக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே 
பக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்
புத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே
சித்தியினை தந்திடுவாய் சீக்கிரம்வந்திங்கே!


மஞ்சளாடை உடுத்தி மண்டலமும் விரதமிருந்தே
அஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு போட்டுவந்தேன்
தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே! 

ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8

காலி சோப்பு டப்பா!
ஆக்கம்: G.ஆனந்தமுருகன்.

Cause and effect.
எப்பொழுதும் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும். விளைவுகளுக்கு அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஜப்பான் நாட்டின் மேதை திரு. காரு இஷிகவா (Mr.Karu isihikawa.)கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் இந்த பதிவு

The Empty Soap Box


One of the most memorable case studies on Japanese management was the  case  of the  empty  soap  box,  which  happened  in  one  of Japan's  biggest  cosmetics companies.  The  company  received  a complaint that a consumer had bought a soap box that was empty.  
   
Immediately the authorities isolated the problem to the assembly line, which  transported all  the  packaged  boxes  of  soap  to  the  delivery department.  For  some  reason,  one soap  box  went  through  the assembly line empty.  
     
Management  asked  its  engineers  to  solve  the  problem.  Post-haste, the  engineers worked  hard  to  devise  an  X-ray  machine  with  high- resolution  monitors  manned  by two  people  to  watch  all  the  soap boxes that passed through the line to make sure they were not empty. 
    
No  doubt,  they  worked  hard  and  they  worked  fast  but  they  spent whoopee amount to do so. But when a workman was posed with the same problem, did not get into complications  of  X-rays,  etc  but  instead came  out  with  another solution.  
   
He  bought  a  strong  industrial  electric  fan  and  pointed  it  at  the assembly line. He switched the fan on, and as each soap box passed the fan, it simply blew the empty boxes out of the line.  
     
Moral of the story: Always look for simple solutions. Devise the simplest possible solution that solves the problem. So, learn to focus on solutions not on problems. "If you look at what you do not have in life, you don't have anything; if you look at what you have in life, you have everything.
+++++++++++++++++++++++++++++++++++++++++
9

மணமகளின் நடனம்!
திருமணத்தன்று மணமேடைக்கு வரும்போது, வந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்கும் முகமாக மணமகளே (தமிழ்ப் பெண்) நடனமாடி வரவேற்கின்றார். உங்கள் பார்வைக்காக இதை அனுப்பிவைத்திருப்பவர் நமது வகுப்பறை மாணவர் கே.ராம்குமார், சிங்கப்பூர். மணமகளின் பெயர் ஒகனா. மனமகனின் பெயர்.திலீப்
திருமனம் நடந்த தேதி 12.2.2012 இடம் சிங்கப்பூர்


http://www.youtube.com/watch?v=rWzkt1DVJYQ 




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10



காணக்கண் கோடி வேண்டும்!
விக்டோரியா நீர்வீழ்ச்சியின் படங்கள்
அனுப்பியவர்: S. சபரி நாராயணன்.,சென்னை

தென்னாப்பிரிக்காவில், ஜாம்பியா நாட்டிற்கும் ஜிம்பாப்வே நாட்டிற்கும் எல்லையைப் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி. ஜாம்பேஜி ஆற்றில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியின் உயரம் 355 அடிகள். சராசரியாக பாய்ந்து விழுகும் தண்ணீரின் அளவு நிமிடத்திற்கு 38,430 கன அடிகள் (அம்மாடியோவ்)

1

2


3


4

5

6

7

8


9

10

11.Natural Swimming Pool called 'Devils Pool' in the falls

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

88 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்....

    அற்புத நிகழ்ச்சிதனை நடத்தியே அதை
    சொற்பதம் நிறைந்து காட்சியாக விளக்கி
    விற்பன்னர் கூடி வேதநாதர் நடராசப்
    பொற்பாதம் பணிந்தே ஆடல் கலைஞரைப்
    போற்றி அரவணைத்து ஆண்டு தோறும்
    கற்பக தருவென வளரும் திருவையாற்று
    நற்நாட்டி யாஞ்சலி வாழியவே!

    திருவாளர் ஐயா வெ. கோபாலன் அவர்களின் திருப்பணிக்கு சிரம் தாழ்த்திய வணக்கம்..
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. கிருஷ்ணன் சார் வழக்கம் போல தூள் பறக்குது போங்க...

    ReplyDelete
  3. சகோதிரி பார்வதியாரின் கதை இரு துருவங்களைக் காண்பிக்கிறது...
    திரேதா யோகமும், கலியுகமுமாக இருந்தும்...
    இவை இரண்டும் கலியிலே தான் நடந்திருக்கிறது...
    ஓன்று அருமை மற்றொன்றுக் கொடுமை.
    எதுவானாலும் பலன் என்னமோ தெரியும் மறுமை????

    ////பணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு
    பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்./////

    சொர்க்கமும் நரகமும் இறக்கும் தருவாயில் தெரியும் என்பார்கள் ஆனால், அந்த பிள்ளையை வளர்த்த தாய் உயிரோடு இருக்கையிலேயேப் பார்த்து விட்டார்கள்... இதில் இன்னொரு கொடுமை... இறந்த உடலில் இருந்து வெளியான ஆத்மா ஒருமண்டலம் வரை மறு பிறவி எடுக்கும் வரை இங்கேயே இருப்பதாக கூறுவார்கள் அப்படியானால் அந்த இறந்தப் பெரியவரின் ஆத்மா தான் ஆறுதல் கூற ஆள் கூட இல்லாமல் எப்படித் துடிக்கும் மிகவும் கொடுமை என்ன செய்வது அங்கே பாவம் ஒரு பக்கம் செலவாகிறது இன்னொருப் பக்கம் அதேப பாவம் வரவாகிறது... ஆக மொத்தம், காலனின் கணக்கு மட்டும் தப்பாது..

    ReplyDelete
  4. சகொதிரியாரின் படம் அருமை...
    புனையா ஓவியம் புனைந்த தருணம்
    மலரும் நினைவுகளும் மனம் வீசுகிறது...
    அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீ சோபனா சகோதிரி அருமை.....
    பகையைத் தாண்டிய நட்பு
    புகைக்குள் தோன்றும் சோதியாய்
    நெஞ்சில் ஒளிர்கிறது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. கூடாரமாய்ப் போன கூடங்குளத்தில்
    கூடிய கூட்டங்களின் கொட்டமடக்க
    திராணி இருந்தும் பிராணிகளைப் போல
    தரணி சிரிக்க நடக்கும் அசிங்கத்தின்
    தாக்கமாய் தனுசாரின் கவிதை -வேறொரு
    மா(ர்)க்கமாய் மிசாரம் பாய்ச்சுகிறது...

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    ReplyDelete
  7. நோக்கம் சரியானால் நோக்கியதன் தாக்கமும்
    நோக்கியாரின் போக்கும் நன்றாகும்.

    நன்றி அனந்த முருகன் அவர்களே!

    ReplyDelete
  8. புதுவித திருமண விழா எங்கே தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணமாக (அதாவது பார்த்தவர்கள்) இருக்குமோ என்று முயன்றும் மணப்பெண்ணின் முகம் சரியாகத் தெரியாமல். அவரின் ஆனந்தத் தாண்டவம் கண்டு ஆச்சரியத்தோடு ஆசிகளையும் கூறினேன்...

    பகிர்ந்த நண்பருக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  9. கடைசியாக படங்கள் அருமை...

    பொதுவாக இந்தியத் தாயும், வெள்ளைக்கார மனைவியும் கிடைத்தால் முன்னும் பின்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் ஓசோ அவர்களின் புத்தகத்தில் படித்த ஒரு ஞாபகம்...

    வெள்ளைக் காரப்பெண்ணை மணந்துக் கொள் நல்ல மனைவி கிடைப்பாளோ இல்லையோ.. நல்ல ஆசிரியைக் கிடைப்பாள் என்பது தான் ஞாபகம் வந்தது...
    இத்தனை வயதிலும் ஜோடியாக ரோமன்ஸ் செய்கிறார்களே என்று எங்கும் இந்தியக் கணவன்களுக்கு இது...

    படங்கள் அருமை... அது என் இடைசெருகல்... இதிலேயும் இடைசெருகளை இந்தியன் விட மாட்டான் என்பதைக் காண்பிக்கவா:):):)
    பகிர்வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  10. ஐயா எனது கவிதைகளையும் வெளியிட்டதற்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  11. ப்டித்துவிட்டு, அடுத்தடுத்து 10 பின்னூட்ட்ங்கள் இட்ட ஆலாசியம் - உங்கள் சுறுசுறுப்பினை என்னவென்பது? உங்களுக்குப் போட்டியாக மைனரும், தில்லி அம்மையாரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்!

    ReplyDelete
  12. என் படத்தை வெளியிட்ட வாத்தியாருக்கு என் நன்றி. அதை ரசித்தவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  13. கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் ஆடிய நடனத்தின் மிக சொற்ப பகுதியை மட்டுமே என்னால் யுட்யுப்பில் பார்க்க முடிந்ததது (http://www.youtube.com/watch?v=c6z-MMZVTGk). தஞ்சையில் உள்ள வீடியோ தொழில் செய்பவர்கள் இலவசமாகமுழு நிகழ்ச்சியையும் படமெடுத்து யுட்யுப்பில் தங்கள் பெயருடன் வெளியிட்டால் அவர்கள் வியாபார ரீதியாக விளம்பரம் செய்து கொண்டது போலவும் இருக்கும், மற்றவர்களுக்கும் திருவையாறு போகாமலே பார்க்க வசதியாக இருக்கும்.

    அரிய கலைகளைக் கற்று ஆர்வத்துடன் பங்கேற்கும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவிக்க ரசிகர்கள் தேவையாயிருப்பது போல் புரவலர்களும் மிக முக்கியமே. அந்த வகையில் வயதைப் பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கவிதாஞ்சலி, நாட்டியாஞ்சலி எனத் தொடர்ந்து கலைவளர்க்கும் தஞ்சாவூர் ஐயா பாராட்டுக்குரியவர். இசை நடனக் கலைக்கு தொன்று தொட்டு கலைத் தொட்டிலாக விளங்கும் திருவையாறும் நாட்யாஞ்சலி நடத்த மிகப் பெருத்தமான இடம்.

    ReplyDelete
  14. "வந்ததடி சண்டை வரப்பில விரி கட்டு சோத்தை" என்று என் அம்மா எப்பொழுதும் வாய்ச்சண்டைக்கு தயாராக இருப்பவர்களைக் குறித்து சொல்வதைக் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால், "அஞ்சு ஊர் சண்டை சிம்மாளம் அங்கலம் அரிசி ஒரு காவாளம்"...ஊஹூம்.... கேள்விப் பட்டதில்லை. கதையுடன் பழமொழிகளை விளக்கும் KMRK ஐயாவின் பணி தொடரட்டும். அவர் பதிவுகளால் தெரிந்து கொள்வது அதிகம்.

    ReplyDelete
  15. ஒ...ஓ... ஒ.. பார்வதி
    உங்கள் முதல் பதிவே அபாரம்
    ஆஹா... பிரமாதம்.

    ReplyDelete
  16. ஸ்ரீஷோபனா, ....என்னவென்று சொல்வது..
    ////"....அவ‌ர்க‌ள் இந்தி மொழியில் பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்த‌தும் புகைவண்டியில் வ‌ந்த‌ ச‌க‌ப‌ய‌ணிக‌ள்,குறுந்தாடியுட‌ன் இருந்த‌ ச‌லீமையும் க‌க‌னையும் புகைவண்டியில் குண்டு வைப்பதற்கு வந்த‌ தீவிர‌வாதிக‌ளை பார்ப்ப‌து போல‌வே பார்த்து கொண்டிருந்தார்கள்.அதை புரிந்து கொண்ட‌ நண்பர்கள் தாங்க‌ள் இற‌ங்கும் இட‌ம் வந்த பிறகுதான் மீண்டும் பேச‌வே தொட‌ங்கினார்க‌ள்...." ////
    என்ற வரிகளின் மூலம் அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் இரட்டை கோபுர நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்படும் அனுபவங்களை நன்றாகவே அருமையாகப் படம் பிடித்து விட்டீர்கள். மிகவும் நல்ல கதைகளாகத் தொடர்ந்து தருகிறீர்கள். நன்றி.
    ...வாத்தியாரும் பொருத்தமான அருமையான படத்தைப் போட்டுள்ளார்.

    இந்த மாதிரி மைக்கேல் ஜாக்சன் நினைவாக இருந்தால்
    I'm gonna thrill ya tonight, oh darlin'
    Thriller night, baby, ooh!
    இரவில் கனவில் வந்துவிடப் போகிறார் கவனம் ...கவனம்...

    ReplyDelete
  17. மின்சாரக் கவிஞர் கண்ட மின்சாரக் கனவு ஒரு மின்சாரக் கவிதைதான். அடுத்து மின்சார வெட்டுக்கு யார் யார் காரணமோ அவர்கள் மேல் ஓர் கலம்பகம் பாடப்போகிறேன் என்று பயமுறுத்திப் பாருங்களேன். பிரச்சனைக்கு ஒரவேளை தீர்வு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

    ReplyDelete
  18. ஆலாசியத்தின் கவிதையை ஆதிபராசக்தி படத்தில் வந்த "ஆயிமகமாயி" பாட்டின் மெட்டில் பாடிப் பார்த்தேன். பாராக்களை மாற்றிப் போட்டு ஒரு சில வார்த்தைகளை அங்கும் இங்கும் சேர்த்தோ, தவிர்த்தோ அல்லது வேறாக மாற்றினால் நிச்சயம் இந்தப் பாடலையும் அந்த மெட்டிலேயே பாடமுடியும். இன்னொரு மகமாயி பாட்டும் கிடைத்ததுவிடும். நல்ல பாடலுக்கு நன்றி.

    ReplyDelete
  19. ஆனந்த முருகனின் காலி சோப்பு டப்பா மிகவும் பிரபலமான ஒன்று, இதே வரிசையில்....ராக்கெட்டில் பேனாவால் எழுத முடியாததால் அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் ஆன்ட்டி கிராவிட்டி பேனா கண்டுபிடித்ததும், ஆனால் ரஷ்யர்கள் அதைத் தவிர்த்து சுலபமாக பென்சிலில் எழுதி பிரச்சினையை தீர்த்துக் கொண்ட கதையும் இணையத்தில் உலா வரும்.

    ReplyDelete
  20. சபரியின் படங்களும் தகவல்களும் விக்டோரியா நீர் வீழ்ச்சியை நன்றாகவே விவரிக்கிறது.

    ReplyDelete
  21. அஹா ...டேக் இட் ஈசி பாலிசி கொண்ட மணமகளா, இவருடன் மணமகனும் சேர்ந்து
    "அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்குத் தரியாடி
    நீ பாதி நான் பாதி அட சேந்துபுட்டா சிவன்ஜாதி
    அரச்சமாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா "
    என்று பாடி ஆடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்தால் நாம் இந்தக் காட்சியை நேரில் காணாமல் தவற விட்டு விட்டோமே என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  22. ஆஹாங் ... நானுந்தான் சுறுசுறுப்பா நிறைய பின்னூட்டம் போடிருக்கேனாக்கும்....இதையும் அந்த வரிசையில் சேர்த்துக்கோங்க

    ReplyDelete
  23. ஆசிரியருக்கும் படைப்பாளிகளுக்கும் என் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    சங்கரன்கோவில் பகுதியிலே தீவிரவேட்டையிலே ஈடுபட வேண்டியிருந்ததால் வகுப்பறைக்கு வர இயலவில்லை..

    வாசகர்கள் பொறுத்துக் கொண்டு உங்கள் வாக்குகளை பின்னூட்டப் பெட்டியில் பதிவிட வேண்டுகிறேன்..

    ///// SP.VR. SUBBAIYA said...

    ப்டித்துவிட்டு, அடுத்தடுத்து 10 பின்னூட்ட்ங்கள் இட்ட ஆலாசியம் - உங்கள் சுறுசுறுப்பினை என்னவென்பது? உங்களுக்குப் போட்டியாக மைனரும், தில்லி அம்மையாரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்!/////

    'ஒரேயடியாகப் பத்து படைப்புகளைப் போட்டுத் தாக்கிவிட்டு எங்கள் மூவரையும் வேறு போட்டுத் தாக்குகிறீர்களாக்கும்?உங்கள் தாக்குதல் எங்கள் மூவரைத் தவிர மீதமிருக்கும் மூவாயிரம் பேரைச் சென்றடையுமா?' என்பதுதான் இந்தத் தேர்தலில்..ச்சே..இந்த மலரில்
    KMRK போன்ற தனக்குத் தானே
    ஓட்டுப் போட்டுக் கொல்லும் வேட்பாளர்..ச்சே.. வாசகர் கம் படைப்பாளி க்கு எழும் கேள்வி..

    தொடர்ந்து ஒன்பது முறை வாக்குகளைப் பதிவு செய்து அயராமல் கழகத்துக்குத் தொண்டாற்றித்
    துவங்கி வைத்திருக்கும்
    அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..

    ReplyDelete
  24. அன்புள்ள ஆசிரியர் ஐயா அவர்களுக்கும், சிங்கப்பூர் தமிழ் விரும்பி அவர்களுக்கும் என் வணக்கங்கள். திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழாவின் தாக்கம் இன்னமும் மனதில் எதிரொலிக்கிறது. அந்த விழா பற்றிய விவரங்களை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள். சங்கரா தொலைக் காட்சியினர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இசைந்துள்ளார்கள். அது விரைவில் ஒளிபரப்பாகும். தேதிகளையும், நேரத்தையும் பின்னர் அறிவிக்கிறேன். பாருங்கள். மற்ற பல கட்டுரைகளையும், கவிதைகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  25. நமது பெரியவர் தஞ்சாவூரார் தனுசு ராசிக்காரார். குரு ஆட்சியுடையவர். எனவே சிலசமயம்தான் நான் சொன்னபடிகேட்பார்.எனக்கும் அவருக்கும் சஷ்டாஷ்கடகம். நான் கடகராசி என்பது உலகப்பிரசித்தம். இந்தமுறை நான் சொன்னதைக்கேட்டு நாட்டியாஞ்சலி பற்றி ஒரு கட்டுரை கொடுத்ததற்கு நன்றிகள்.
    சி நா மி உபய‌துயுல்லா(முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர்), திரு அந்தோணிசாமி ஆகிய சகோதர மத்ததவரையும் அணைத்துக்கொண்டு இந்த விழாவை நடத்துவது மிகச்சிறப்பு.தஞ்சாவூராருக்கு வகுப்புறை சார்பில்
    'பரதநாட்டியக் காவலர்'என்ற ப‌ட்டம் அளிக்கலாம்.

    ReplyDelete
  26. 'வாரா வாரம் இதே ரோதனையாப் போச்சே' என்று சலிக்காமல் என் ஆக்க‌ங்களை வெளியிடும் வாத்தியார் ஐயாவுக்கும், வாசிக்கும் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  27. பார்வதி ராமச்சந்திரன் அவர்களின் முதல் ஆக்கமே 'டச்சிங்' ஆக உள்ளது. நிறைய எழுதுங்கள். மெருகேறும். ஒருவர் இறந்து விட்டால் முதல் கேள்வியே 'யார் கொள்ளி போடப்போகிறார்கள்? எப்போ எடுக்கப்போகிறார்கள்? என்ன ஏதாவது சேமிப்பு வைத்து இருக்கிறாரா?'

    துக்கம் எல்லாம் பேச்சுக்குத்தான்.உண்மையில் அந்த சவத்தை வைத்துக்கொண்டு மனக்கணக்குகள் போடுவதுதான் அதிகம்.

    ReplyDelete
  28. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    படங்கள் நன்றாக உள்ளது
    ஆக்கங்கள் சிறப்பாக உள்ளது.
    நன்றி!!

    ReplyDelete
  29. ரோஸ் பாப்பா உன் டிரஸ் ரொம்பா சூப்பர்ப்பா.

    ReplyDelete
  30. தஞ்சாவூர் அய்யா அவர்களின் நாட்டியஞ்சலி நேரலை காணொளி போல்தான் இருந்தது.

    நம் நாட்டிற்கு பெருமையும் புகழையும் பெற்றுத்தருவதில் நாட்டியமும் நடனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அவைகள் மேன்மேலும் வளர இதுபோன்ற நிகழ்சிகள் நடப்பதும் நல்லதுதான் நன்றிகள் அய்யா.

    நாட்டியாஞ்சலியும் நடத்தியோரும் வாழ்க வளர்க .

    அய்யா அவர்கள் எனக்கும் அழைப்பு வைத்தார்கள் .நேரம் இல்லாததால் நான் கலந்துக் கொள்ள முடியவில்லை வருத்தமாகத்தான் இருக்கிறது.

    பரதம்,மோகினி,நாதாலையா,போன்ற நடனங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது.

    ReplyDelete
  31. KMRK அவர்களே மேலதிக தகவல்கள் விரும்புவோர் சிலராவது படிக்கலாம் என்று சொல்கிறீர்கள் உண்மையில் பலரும் இதை படிக்கத்தான் விரும்புகிறார்கள் நம்பிக்கையோடு எழுதுங்கள்

    ஒர்படியாள் மருவி ஒப்படியாள்ஆகிவிட்டது எங்கள் பக்கத்தில்.

    பழமொழிகளை கதையோடு சொல்வது கலப்பாக பாக்யராஜ் பாணியில் உள்ளது .

    ReplyDelete
  32. அன்பார்ந்த‌ வாத்தியார் அவர்களுக்கு,
    எனது ஆக்கத்தை வெளியிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    திருவையாறு நாட்டியாஞ்சலி விழா சிறப்புக்கண்ணோட்டம் அருமை.ஐயாறப்பரும்,அறம் வளர்த்த நாயகியும்,மெய்யாய் நம்முன் தோன்றி நாட்டியாஞ்சலி விழா நடத்தியோருக்கு அருள் மழை பொழிவாராக.

    குட்டிக்கதைகளுடன் கெட்டிப்பழமொழிகள் கைகளைத்தட்டி மகிழ்வு கொள்ள வைத்தன.
    வண்டுக்கண்களும்,குண்டுக்கன்னமும் கொண்ட பாப்பா கொள்ளை அழகு.தேமொழியின் காணொளியும் அருமை.
    வாழும் இதயங்களில்,வாழ்ந்த மனிதர்கள் இருக்கும் வரை மரணம் வென்றதாக அர்த்தமில்லை.மனம் கனத்துப்போனது கதை முடிவில். சகோதரி ஷோபனாவிற்குப் பாராட்டுக்கள்.
    மின்சாரக் கனவு சகோதரர் தனுசின் கைவண்ணத்தில் ஒளிர்கிறது.

    மாசி மாதம் மக்களின் நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் இருந்து
    திருவிழாக் காணும் மகமாயியின் மகிமை போற்றிய சகோதரர் ஆலாசியத்தின்
    கவிதாஞ்சலி மிக மிக அருமை.
    காணொளியில் நடனம் கண்டு களிப்பு மிகக் கொண்டேன்.இதுவே நம்மூருன்னா,'இப்பவே ஆட ஆரம்பிச்சாச்சா' என்ற குரல்கள் தான் கேட்டிருக்கும்.சோப்பு டப்பா தத்துவம் சூப்பர்.நீர்வீழ்ச்சியின் அழகு,கவியரசர் எழுதி,'ஒரே வானம் ஒரே பூமி' படத்தில் இடம் பெற்ற 'மலை ராணி முந்தானை' பாடலை நினைவு படுத்தியது. மிக்க நன்றி

    ReplyDelete
  33. பார்வதி ராமச்சந்திரன் தந்தது பணமா-பாசமா

    பணத்தை நாம் எப்போது வேண்டுமென்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் மனிதர்களை சம்பாதிப்பதுதாம் கடினம். நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி கணவன் பிள்ளைகள் அழுவார்கள் ,ஆனால் இவர்களை தவிர வெளியில் இருந்து நமக்காக யாரேனும் அய்யோ போய் விட்டாரே என்று வருந்தி அழவேண்டும் .இப்படி சிலரையாவது நாம் சம்பாதிக்கவேண்டும் . அதற்க்கு அன்பே பிரதானம் .

    அதைதான் பூரணி செய்துள்ளார்.

    நல்லதை நாம் எடுத்துக் கொள்வோம் பூரணி போல் இருப்போம் .

    ReplyDelete
  34. ஓவிய ராணிக்கு ஒரு ஜே

    ReplyDelete
  35. ஷோபனாவின் கதைகள் என்றாலே அதில் மனித உணர்வுகளுக்கு ஒரு டச்சிங் இருக்கும் . அது இதிலும் நிறைந்து இருந்தது . கதையின் நடையில் ஒரு கட் செய்து வேறு இடத்தில் ஓபன் செய்து மீண்டும் முடிச்சு போட்டு திக் திக் என்று நகர்த்தி வெள்ளைகாரி பாகிஸ்தானி இந்தியன் கலப்பில் நல்லதொரு கதையை தெளிவான நடையில் மனித மனங்களை மையப் படுத்தி எழுதி இருந்ததீர்கள் .சபாஷ் .

    ReplyDelete
  36. எனது கவிதை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  37. ஆலாசியம் அவர்களின் பக்தி பாடல் அருமை.தொடரட்டும் பக்தி பரவசம் .

    ReplyDelete
  38. ஆனந்த முருகன் வெளியிட்ட காலி சோப்பு டப்பா ; அதில் எப்பொழுதும் காரணங்களுக்கு மட்டுமே தேர்வு காண வேண்டும் விளைவுகளுக்கு அல்ல என்ற இஷிகாவாவின் தத்துவம் மிக்க மிக்க அருமை .

    ReplyDelete
  39. விக்டோரியா நீர்வீழ்ச்சி உண்மையில் காண கண் கோடி தான் வேண்டும்.

    .அருமையான படங்கள் .அதில் குளிக்கும் தைரியசாலிகளுக்கு அந்த விக்டோரியா ராணி தான் பரிசு தரவேண்டும்.

    ReplyDelete
  40. கடல்வாசியான எனக்கு இணைய பிரச்சினை காரணமாக தேமொழி மற்றும் மணமகளின் காணொளிகள் காணமுடியவில்லை.

    ReplyDelete
  41. தேமொழியின் பார்பி டோல் ஓவியம், காணொளி, முக் ஆங்கரக்காடி அனைத்தும் நலம்.

    ReplyDelete
  42. ஸ்ரீ ஷோப்னாவின் சிறுகதை வித்தியாசமான பாத்திரங்கள், வேறுபட்ட சூழல்,
    விறு விறுப்பான கரு, கருத்தாழம் அனைத்தும் கலந்த ஒரு சூப்பர் பஜார் போல உள்ளது. வாழ்க, வளர்க. சிறிது தன்னளவிலேயே 'எடிடிங்' தேவை.

    ReplyDelete
  43. தனுசுவின் மின்சாரம் ஷாக் கொடுக்கவில்லை. மின்சார்ப்பூ, காண்ணன், அரசியல்,குறை, வெட்டு என்று வந்தது; மின்சாரம் சம்சாரம் என்று ஏதாவது வருமோ என்று பார்த்தேன். 'ஒன்னயும் காங்கலையே!'
    கவிதை சூப்பர் தனுசு அவர்களே!

    ReplyDelete
  44. ஐயா! திருவையாற்றில் நடந்த நாட்டியாஞ்சலியில் கலந்து கொண்ட பினேஷ் மகாதேவன் எனும் நடனக் கலைஞர் இந்திய நடனமணிகளின் தரவரிசைப் பட்டியல் ஆயிரத்தில் மிக முன்னிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர்களில் மும்பை காட்கோபர் பத்மினி இராதாகிருஷ்ணன் அவர்களும் சிறந்த கலைஞர். சில புகைப்படங்களையும் தனியே அனுப்பியுள்ளேன். நன்றி.

    ReplyDelete
  45. இடைச் சேர்க்கை: திரு.வெ.கோபாலன் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் (மொத்தம் 12) உங்கள் பார்வைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் மற்றும் கட்டுரை குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க்ள்

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  46. வணக்கம் ஐயா,
    ஆஹா...சூப்பராக இருக்கிறது அக்குழந்தையின் ஆடை...அதிலும் "ஃப்ங்ஷன்"க்கு போகும் முன் என்னிடம் காட்டிச் சென்றது...'வெரி டச்சிங்'...தொடர்ந்து குழந்தைகளின் படங்களாக தந்து வகுப்பறையை 'குழந்தைகளின் பூங்கா' போல மாற்றிவிட்டீர்கள்...நன்றி ஐயா...


    தஞ்சாவூரான் ஐயா அவர்களின் தொகுப்பு நன்றாகயிருந்தது...நான் மகாசிவராத்திரியன்று பொதிகையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியினை பார்த்தேன்,மிகவும் அருமையாக இருந்தது...மக்கள் கூட்டம் தான் மிகவும் குறைவாகயிருந்தது...எனக்கு பரத நாட்டியம் மிகவும் பிடிக்கும் என் தந்தை என்னை கற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை...ஆயினும் இது போன்று தொலைக்காட்சிகளில் கண்டு ரசிப்பேன்...இன்று அதை நம் வகுப்பறைக்கே கொண்டு வந்து அனைவரும் ரசிக்குபடி தந்த தஞ்சாவூரான் ஐயாவிற்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  47. kmrk அவர்களின் 'பழமொழி'கள் அருமையாகயிருந்தது...இதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது கடைசி மூன்று பழமொழிகள் தான்...இவை நான் அறிந்தது இல்லை என்பதலால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...கதைகளோடு தந்தமையால் எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது...வேண்டும்,வேண்டும்...கதை மீண்டும் வேண்டும் என் 'வேண்டும்'வகுப்பறை மாணவர்கள்...ஹிஹிஹி...


    பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆக்கம் உலகில் இன்றைய அவலங்களின் தாக்கம் என்று நினைக்கின்றேன்...தாங்கள் செய்பவை எத்தகைய கொடிய பாவம் என்று சிறிது கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் என்று புரியவில்லை...உங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ்' அனைத்தையும் கேட்க மாணவர்கள் இங்கே இருக்கின்றோம்...கவலையை விடுங்கள்...

    நாத்திகத்தை பேசியவர்கள் இன்று கோவில்களை தேடி ஓடவில்லையா?...அது போல துயரங்கள் எல்லை மீறும் போது கடவுளை தேடி வந்துவிடுவார்கள்...இது தானே மனிதர்களின் இயல்பே...நல்ல கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்...

    தேமொழி அவர்களின் ஓவியம்...மிகவும் அழகாகயிருந்தது...அக்குழந்தையின் கண்களை கண் இமைகளுடன் மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் வரைந்துள்ளீர்கள்...நன்றி சகோதரி...

    "ஷாம்பூ" வரலாற்றை ஆராய்ந்து 'இந்தியர்'களின் பங்கினை என்னை போன்றவர்கள் அறியும் பொருட்டு தந்த வகுப்பறையின் 'வரலாற்று ஆராய்ச்சியாள்ர்' தேமொழி அவர்களுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  48. தனுசு அவர்களின் "மின்சாரக் கனவு"...மின்னலாய் பாய்கிறது...மின்சார பற்றாக்குறையால் நகர்ப்புறங்களை காட்டிலும் அவதிப்படும் கிராமப்புற விவசாயிகளின் நிலைமை தான் மிகவும் வருத்ததிற்குரியவை...

    இதற்கு சிறந்த தீர்வாக வெப்ப மண்டல நாடான் நம் நாட்டில் ஏன் 'சூரியவொளி மின்சார"த்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்க யோசிக்கின்றார்கள் என்று புரியவில்லை...மத்திய,மாநில அரசுகள் வீட்டில் "சோலார்"உபகரன்களை பயன்படுத்த ஆலோசனை தருகிறார்கள்...அவற்றின் மூலம் "மின்சாரம்" உற்பத்தி செய்ய ஏன் இத்தனை யோசனை?அமெரிக்காவில் ஒரு பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் "மின்சார" உற்பத்தி நிலையம் அமைத்திருக்கிறார்கள்!!!இப்படி ஆட்சி செய்தாலும் "ஒபாமா"வை சாடுகிறார்கள்;"அம்மாவை"யும்,"சோனியா"வையும் நம்மவர்கள் போற்றுகிறார்கள்...என்ன கொடுமை?

    ReplyDelete
  49. காண கண் கோடி தேவை படும் நாட்டியத்தை பார்க்காமல் வந்ததை நினைத்து வருந்திக் கொண்டு இருந்த நேரத்தில் அதனை கண்ணுக்கு விருந்தாக்கிவிட்டர்கள் வாத்தியாரும் தஞ்சாவூர் அய்யா அவர்களும் .நன்றிகள் அய்யா இருவருக்கும்

    ReplyDelete
  50. ஆலாசியம் அவர்களின் ஆன்மிக கவிதை,பக்திமயமாய் இந்த வாரமும் நிறைந்திருந்தது...சமயபுரத்து அம்மன் பாட்டு மிகவும் அருமை...ஆன்மிக பாடல்களுக்கு உரிய நடையில் அழகாய் தந்தமைக்கு மிக்க நன்றிகள்...


    ஆனந்தமுருகன் அவர்களின் "காலி சோப் டப்பா"வில் நல்ல கருத்துக்கள் நிரம்பியிருந்தன..."simply" - the best...நல்ல ஆக்கத்திற்கு நன்றிகள்...


    ராம்குமார் அவர்கள் அனுப்பிய காணொளியை 'facebook' யில் என் தோழி அனுப்பியதை நானும் பார்த்தேன்...தலையை குனிந்து செல்லும் காலம் போய் ஆடி வரவேற்கும் விதம் வித்தியாசமாக இருந்தது...

    ReplyDelete
  51. இன்றைய எல்லா ஆக்கங்களும் நன்று.. இன்றைய மலரின் படைப்பாளிகள், கலை வளர்ப்போர்,கலை ஊக்குவிப்பாளர்கள் என்று அனைவருக்கும்
    நேரமின்மை காரணத்தால் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  52. சபரி நாராயணன்னின் "விக்டோரியா நீர்வீழ்ச்சி" புகைப்படங்கள் அனைத்தும் மிக மிக அருமை...இந்நீர்வீழ்ச்சி குறித்து "டிஸ்கவரி"சானலில் ஒரு தொகுப்பு பார்த்தேன்...அத்தொகுப்பில் காட்டிய காட்சிகளை பார்த்துவிட்டு இதைவிட ஒரு பிரம்மாண்டம் இருக்க முடியமா?என்று திகைக்கும்படியிருந்தது...உண்மையில் இதை காண கண் கோடி தான் வேண்டும்...இதை அளித்த கடவுளுக்கு தான் நன்றிகள் அனைத்தும் சேரும்...நல்ல பகிர்விற்கு நன்றிகள்...

    ReplyDelete
  53. \\இந்த மாதிரி மைக்கேல் ஜாக்சன் நினைவாக இருந்தால்
    I'm gonna thrill ya tonight, oh darlin'
    Thriller night, baby, ooh!
    இரவில் கனவில் வந்துவிடப் போகிறார் கவனம் ...கவனம்...\\

    தங்களது பாராட்டுகளுக்கு நன்றி தேமொழி அவர்களே...இதை நீங்கள் நிச்சயம் கூறுவீர்கள் என்று நினைத்தேன்...கூறிவிட்டீர்கள்...எனக்கு மிகவும் பிடித்த "பாப் ஸ்டார்" அவர்தான் என்பதால்,அவரை கதையில் சேர்த்து எனது அஞ்சலியை செலுத்த விரும்பினேன்...என்னால் முடிந்தது அவ்வளவு தான்...கனவில் வருவதற்கு சாத்தியமேயில்லை...ஒரு வேளை "ஆவி"யாக வரலாம்,அவர் இறந்த பிறகு கிளம்பிய 'புரளியை' போல...ஹிஹிஹி...

    ReplyDelete
  54. நேற்று இங்கு அருகில் உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் சென்று தரிசனம் செய்தேன். சமயபுரத்து அம்மனைப் போலவே தோற்றம் உள்ள அனபில் மாரியம்மன் இப்பகுதி மக்க‌ளால் பெரிதும் வணங்கப்படும் தெய்வமாகும்.
    இன்று நண்பர் ஹாலாஸ்யத்தின் கவிதை சமயபுரம் சென்று வந்த உணர்வை அளிக்கிறது. லால்குடியில் இருந்து திருச்சி நகரம் செல்லாமல் சமயபுரம் செல்ல சிற்றுந்துகள் உள்ளன.ஹாலாஸ்யத்திற்கு நன்றி.

    ReplyDelete
  55. வாத்தியார் ஐயா வணக்கம்.

    தச அவதாரம் போல பத்தும் மிகவும் அற்புதமாக இருக்கின்றது . இந்த பத்தினை அலங்கரித்தவருக்கும் வகுப்பறையில் போதித்தவருக்கும் எமது உளமான பாராட்டுகளுடம் சேர்ந்த நன்றிகள் .

    --

    ReplyDelete
  56. 'always look for simple solutions' என்பது காந்திஜியின் பொருளாதாரக் கொள்கையாகும்.மனிதனின் ஆற்றலுக்கு, மனிதன் சலிப்படையாமல் பணி ஆற்றுவதற்கு ஏற்ற சிறிய இயந்திரங்களை காந்திஜி எதிர்க்கவில்லை.அந்த இயந்திரங்கள் பழுதானால் அங்கேயே(locally available) இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு அதனைச் சீர் செய்யும் அளவிற்கு இயந்திரங்கள் இருந்தால் போதும் என்பதும், மனித ஆற்றலைப் பின்னடையச் செய்யும் இயந்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பது அவரது கொள்கையாகும்.ஆனந்தமுருகன் கொடுத்துள்ள ஆங்கிலச் செய்தி அருமை. இவற்றைத் துணை கொண்டு தமிழில் உங்கள் மொழியில் கட்டுரையாக எழுத முயலுங்கள் ஆனந்த முருகன் அவர்களே.

    ReplyDelete
  57. கே.ராம்குமார் அளித்துள்ள மணப் பெண்ணின் நடன 'என்ட்ரி' நிச்சயம் ஓர் புதுமைதான்.மணப்பெண் இதற்கு இசைந்ததுதான் பாராட்டுக்குரியது.

    விக்டோரியா நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தை நமக்கு அளித்த சபரிக்குப் பாராட்டுக்கள். வானவில்லுடன் கூடிய படமும், அந்திசாயும் வேளையில் எடுத்துள்ள படமும் முதல் பரிசு பெறுகின்றன.

    ReplyDelete
  58. தஞ்சாவூரார் படங்களை அனுப்பிய வேகமும், அதனை ஐயா பிரசுரித்த சூப்பர்
    ஃபாஸ்ட் வேகமும்!?!? இவர்கள் இருவரும் வயதானவர்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? வயதான இளைஞர்கள்தான்.

    படங்களின் மூலம் அங்கே சுவாமி சன்னிதியிலேயே நாட்டியாஞ்சலி நடைபெறுவதை எல்லோரும் உணரமுடியும்.இதுபோல சிதம்பரத்தில் கூடக்கிடையாது.அங்கெல்லாம் கோவில் வளாகத்தில் ஒரு மூலையில் நடைபெறும் இங்கே இறைவன் காண‌வே நடனம்.
    அக்கால தளிச்சேரிப் பெண்டுகள் ஆடியதைப்போலவே, இறைவனுக்கு அர்பணமாகவே நடனம். அதுவும் சிவராத்திரி அனறு. மிகவும் விசேஷம்.

    வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் சகோதரர் வேம்பட்டி சிவகுமார். வேம்பட்டி ஆந்திராவில் உள்ள கிராமம். வேப்பம்பட்டி அல்ல.

    இந்த நிகழ்ச்சியில் அடியேனும் சிறிது பங்களிப்புச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது
    இறையருளே.

    ReplyDelete
  59. வீணை வாசிப்பு படத்தில் மட்டும்தான் தஞ்சாவூரார் தெரிகிறார். புகைப்படத்தில் நிற்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர்ப்பதே பெரிய தியாகம் தான்.

    ReplyDelete
  60. \\ஸ்ரீ ஷோப்னாவின் சிறுகதை வித்தியாசமான பாத்திரங்கள், வேறுபட்ட சூழல்,
    விறு விறுப்பான கரு, கருத்தாழம் அனைத்தும் கலந்த ஒரு சூப்பர் பஜார் போல உள்ளது. வாழ்க, வளர்க. சிறிது தன்னளவிலேயே 'எடிடிங்' தேவை.\\
    தங்களது பாராட்டுகளுக்கும்,அறிவுரைகளுக்கும் ந‌ன்றி kmrk ஐயா...நானும் இதைத் தான் நினைத்தேன்...மகாசிவராத்திரி கழித்த மறுநாள் என்பதால் கொஞ்ச‌ம் தூக்க‌க் கலக்க‌த்தில் தான் இறுதி க‌தையை எழுதி முடித்தேன்...அத‌னால் தான் இறுதியில் 'மெஸ்' செய்துவிட்டேன் என்று நினைக்கின்றேன்...அடுத்த‌ முறை அளவைக் குறைக்க‌ முய‌ற்சி செய்கின்றேன்...ந‌ன்றி...

    \\ thanusu said...
    ஷோபனாவின் கதைகள் என்றாலே அதில் மனித உணர்வுகளுக்கு ஒரு டச்சிங் இருக்கும் . அது இதிலும் நிறைந்து இருந்தது . கதையின் நடையில் ஒரு கட் செய்து வேறு இடத்தில் ஓபன் செய்து மீண்டும் முடிச்சு போட்டு திக் திக் என்று நகர்த்தி வெள்ளைகாரி பாகிஸ்தானி இந்தியன் கலப்பில் நல்லதொரு கதையை தெளிவான நடையில் மனித மனங்களை மையப் படுத்தி எழுதி இருந்ததீர்கள் .சபாஷ் .\\
    தங்களது மேலான பாராட்டுகளுக்கு மிக்க ந‌ன்றி த‌னுசு அவ‌ர்க‌ளே...

    ReplyDelete
  61. நாட்டியாஞ்சலியைப் பற்றி ஐயா அவர்களின் கட்டுரையைப் படித்தும் புகைப்படங்களைப் பார்த்ததும் அங்கே நேரில் சென்று பார்த்து வந்தது போல் இருந்தது. அடுத்த சிவராத்திரியிலாவது நேரில் சென்று பார்க்கும் பாக்கியம் கிட்டுகிறதா என்று பார்ப்போம்.

    KMRK அவர்கள் சொன்ன பழமொழிகள் நான் இதற்கு முன் கேள்விப் படாதவை. புதிதாக ஒன்றை தெரிந்துக் கொண்ட திருப்தி ஏற்பட்டது. அதை அவர் உதாரணங்களுடன் விளக்கிய விதம் அருமை.

    ReplyDelete
  62. வம்ச விருத்திக்கு எது முக்கியம் என்ற ஆக்கமும் நன்று. இதில் பல உண்மைகள் அடங்கி இருக்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

    அடுத்து என்னை மிகவும் கவர்ந்தது தேமொழி அவர்கள் வரைந்த ஓவியமும் அந்த காணொளியும்தான். நல்ல ஓவியம் வரையும் திறமை தங்களிடம் இருக்கிறது.

    ReplyDelete
  63. இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகளைத் தனிதனியாக வெளியிட்டால் 10 பதிவுகளாக வெளியிடலாம். அந்த அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன.

    அவைகளை அனைவரும் படிக்க வேண்டும், நேற்று வகுப்பறைக்கு வராத கணமணிகளின் கண்ணில் அவைகள் இன்று பட வேண்டும் என்பதற்காக, அதை முகப்பிலேயே நிறுத்திவைத்திருக்கிறேன்.

    எனது பதிவு நாளை வெளிவரும். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்

    அன்புடன்
    வாத்தியார்
    27.2.2012
    6:50AM

    ReplyDelete
  64. இந்தப் பதிவில் 10 பேர்களின் ஆக்கங்கள் உள்ளன. அவைகளைத் தனிதனியாக வெளியிட்டால் 10 பதிவுகளாக வெளியிடலாம். அந்த அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன.

    அவைகளை அனைவரும் படிக்க வேண்டும், நேற்று வகுப்பறைக்கு வராத கணமணிகளின் கண்ணில் அவைகள் இன்று பட வேண்டும் என்பதற்காக, அதை முகப்பிலேயே நிறுத்திவைத்திருக்கிறேன்.

    எனது பதிவு நாளை வெளிவரும். அனைவரும் பொறுத்துக்கொள்ளூங்கள்

    அன்புடன்
    வாத்தியார்
    27.2.2012
    6:50AM

    ReplyDelete
  65. திரு அனந்த முருகன், கிருஷ்ணன் சார்,
    நம்ம மைனர் (சங்கரன் கோவிலில் கொஞ்சம் பிசி இப்போ! திருமங்கலம் உத்தியை செயலுக்கு கொண்டுவர முயற்சியில்) ,
    மேலும், சோபனா, தனுசு என்று... எனது கவிதையை பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் பல...

    ReplyDelete
  66. //// தேமொழி said...
    ஆலாசியத்தின் கவிதையை ஆதிபராசக்தி படத்தில் வந்த "ஆயிமகமாயி" பாட்டின் மெட்டில் பாடிப் பார்த்தேன். பாராக்களை மாற்றிப் போட்டு ஒரு சில வார்த்தைகளை அங்கும் இங்கும் சேர்த்தோ, தவிர்த்தோ அல்லது வேறாக மாற்றினால் நிச்சயம் இந்தப் பாடலையும் அந்த மெட்டிலேயே பாடமுடியும். இன்னொரு மகமாயி பாட்டும் கிடைத்ததுவிடும். நல்ல பாடலுக்கு நன்றி./////



    ஆஹா! அருமை... தங்களுக்கு இசைப் பயிற்சி இருப்பதால் தாங்களே அந்தப் பாடலைப் பாடி மியூசிக் ட்ராக்கை அங்கிருந்து (பழியைப் பாடலில் இருந்து) உபயம் பெற்று உங்கள் குரலோடு இசையையும் சேர்த்து வகுப்பறைக்கு அனுப்புநீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதிரியாரே!

    எனது முந்தய முருகன் பாடல்களில் சில பாடல்களை நமது வகுப்பறையிலே இருக்கும் உங்களைப் போன்றோர் யாராவது ராகத்தோடு பாடி வெளியிட்டாலும் நன்றாக இருக்கும்... அதை செய்ய உங்களை வேண்டிக் கேட்டு கொள்கிறேன்...

    தங்களின் விருப்பத்தை நன் இன்னும் ஒரு ஓரத்தில் ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன் சொகோதிரி...

    நன்றி.

    ReplyDelete
  67. Parvathy Ramachandran said...
    ////மாசி மாதம் மக்களின் நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் இருந்து
    திருவிழாக் காணும் மகமாயியின் மகிமை போற்றிய சகோதரர் ஆலாசியத்தின்
    கவிதாஞ்சலி மிக மிக அருமை.////

    மிக்க நன்றி சகோதிரியாரே!



    //////குட்டிக்கதைகளுடன் கெட்டிப்பழமொழிகள் கைகளைத்தட்டி மகிழ்வு கொள்ள வைத்தன.
    வண்டுக்கண்களும்,குண்டுக்கன்னமும் கொண்ட பாப்பா கொள்ளை அழகு.தேமொழியின் காணொளியும் அருமை.
    வாழும் இதயங்களில்,வாழ்ந்த மனிதர்கள் இருக்கும் வரை மரணம் வென்றதாக அர்த்தமில்லை.மனம் கனத்துப்போனது கதை முடிவில். சகோதரி ஷோபனாவிற்குப் பாராட்டுக்கள்.////

    என்ன நடக்குது சகோதிரியாரே!

    இன்னமும் மறைக்க வேண்டாம் உங்கள் கவிதைகளை நோட்டிலே வைத்துக் கொள்ளாமல் வகுப்பறைக்கு அனுப்புங்கள்...
    நீங்கள் நல்லப் பலக் கவிதைகளை எழுதி வைத்திருக்க வேண்டும் என்றே நான் தீர்க்கமாக நம்புகிறேன்.
    வகுப்பறைக்கு அனுப்புங்கள்...
    நன்றி.

    ReplyDelete
  68. எனது கவிதையை பாராட்டிய தமிழ் விரும்பி, kmrk, தேமொழி , பார்வதி,ஷோபனா, மைனர், கண்ணன் யாவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  69. இன்றைய வாரமலரில் நாட்டியாஞ்சலி விழா பற்றிய தொகுப்பும், புகைப்படங்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த
    நடனம் பரதநாட்டியம் மற்றும் கதக். சிறுவயதில் நானும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு இயலவில்லை. கோபாலன் சாரின் பணி வியக்கவைக்கிறது.

    ReplyDelete
  70. இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்புகளாக இல்லாமல் கதையோடு இணைத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. இதே போல் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் //
    இதை நீங்கள் முன்பே ஒருமுறை உங்கள் ஆக்கத்திலோ / பின்னூட்டத்திலோ குறிப்பிட்டிருந்த நினைவு இருக்கிறது. ('ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'. உங்கள் ஆக்கத்தைஎல்லாம் தவறாமல் முழுமையாகப் படிக்கிறேன் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்தானே? எப்பூடி?)

    ReplyDelete
  71. பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆக்கம் இன்றைய சூழலை படம்பிடித்துக் காட்டியது. உங்களின் முதல் ஆக்கமே தெளிவான எழுத்துநடையில் அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். இந்த காசுக்காக அடித்துக்கொள்வது எவ்வளவு கேவலம் என்பதைக்கூட மனிதர்கள் யோசிப்பதில்லை. நீங்கள் எழுதிய உண்மை நிகழ்வு மனதை நெகிழச்செய்யும் ஒன்று.

    ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும்.//

    இதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே டெல்லியில் நான் அடிக்கடி பார்த்து வியக்கும் நிகழ்ச்சி. இங்கே அலுவலகத்துக்கோ / வேறு அலுவலின் பொருட்டோ சென்று கொண்டிருக்கும் சர்தார்கள் ரோடில் எந்த இறந்தவர்களின் இறுதி யாத்திரை சென்று கொண்டிருந்தாலும், தன் வாகனத்தை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு தன் தோளில் வைத்து சிறிது தூரம் வரை

    தூக்கிப்போவார்கள். அப்படியே அலுவலகத்துக்கும் போய்விடுவார்கள். தீட்டு, குளிப்பது என்றெல்லாம் பார்ப்பதில்லை.

    ReplyDelete
  72. இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொள்ளை கொண்டது. இது எப்போது வரைந்தது தேமொழி?

    ReplyDelete
  73. சொல்ல மறந்துவிட்டேன். (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).

    செம பன்ச்

    ReplyDelete
  74. ஷோபனாவின் கதை இந்த முறை ஒரு வித்தியாசமான கரு, சூழலுடன் அருமை.

    ReplyDelete
  75. தனுசு மற்றும் ஆலாசியம் இருவரின் கவிதைகளும் அருமை. ஆனந்தமுருகனின் ஆக்கமும் சபரி அனுப்பிய புகைப்படங்களும் நன்று. காணொளி என்னால் காண இயலவில்லை.

    ReplyDelete
  76. வகுப்பறையில் புதிதாக நிறைய பேர் ஆர்வத்துடன் ஆக்கங்களைத் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது வாத்தியாரின் முயற்சி / ஊக்குவிப்புக்குக் கிடைத்த வெற்றி.

    ReplyDelete
  77. அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//

    ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?

    ReplyDelete
  78. நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //

    என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!

    ReplyDelete
  79. வெள்ளைக் காரப்பெண்ணை மணந்துக் கொள் நல்ல மனைவி கிடைப்பாளோ இல்லையோ.. நல்ல ஆசிரியைக் கிடைப்பாள் என்பது தான் ஞாபகம் வந்தது//

    என்று ஆலாசியம் குறிப்பிட்டதால் இந்திய மனைவியை தனுசு மாணவி என்று குறிப்பிட்டாரோ?

    ReplyDelete
  80. அட!!! இது நம்ம மாதுரி...
    ஜெனீலியாவின் திருமண வரவேற்பிற்கு மாதுரி தீஷித் வந்த பொழுது எடுத்த படம்
    http://bollywoodnewsstories.blogspot.com/2012/02/ritesh-deshmukh-genelia-wedding.html
    கூகிள் காமாட்சியே சரணம் :))))

    ReplyDelete
  81. ///தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ஆஹா! அருமை... தங்களுக்கு இசைப் பயிற்சி இருப்பதால் தாங்களே அந்தப் பாடலைப் பாடி மியூசிக் ட்ராக்கை அங்கிருந்து (பழியைப் பாடலில் இருந்து) உபயம் பெற்று உங்கள் குரலோடு இசையையும் சேர்த்து வகுப்பறைக்கு அனுப்புநீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதிரியாரே!////

    என்ன ஒரு விபரீத ஆசை!!! ....அப்படி நடந்துவிட்டால் நம் சகோதரரை தாயே மகமாயி நீதான் காப்பாத்த வேணும்.

    ReplyDelete
  82. ///Uma said...இந்த முறை தேமொழியின் ஓவியம் மனதைக்கொள்ளை கொண்டது. இது எப்போது வரைந்தது தேமொழி?///

    (மனதிற்குள்: ஹ்ம்ம்... வயதை சொல்ல வைக்க இது ஒரு புதிய யுக்தியோ? தேமொழி கவனம் மாட்டிக்காத)

    மாதவி பிறந்தபொழுது வரைந்த படம் இது ...உமா இந்த குறிப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete
  83. /////Uma said...
    அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//

    ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?////////

    இல்லை..இன்னும் கடும்குளிர் தொடர்கிறது..புதனன்று எங்கள் பகுதியிலும் பனிப் பொழிவு இருக்குமென்று வானிலைச் செய்திகள் தெரிவிக்கிறது...26 வருடங்களுக்குப் பின் இதுபோன்ற கடுங்குளிரைச் சந்திக்கிறதாம் ஜப்பான்..

    /// Uma said...
    நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //

    என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!///
    இது பரவாயில்லை..தமிழ்விரும்பி என்று பெயரிலே இருப்பதால் அவர்தான் ரொம்ப ஜாக்ரதையாக தட்டச்சு செய்யவேண்டும்..
    உதாரணத்துக்கு
    ' பழியைப் பாடலில் இருந்து' 'அனுப்புநீர்கள்'
    'சகோதிரியாரே'
    'சொகோதிரி..'
    (வேறு யாராவது எடுத்துக் காட்டிவிடும் முன் உரிமை அடிப்படையிலே நானே சொல்லிவிட்டிருக்கிறேன்..)

    ReplyDelete
  84. ////Uma said...
    இந்த முறை வெறும் பழமொழிக் குறிப்புகளாக இல்லாமல் கதையோடு இணைத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. இதே போல் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் //
    இதை நீங்கள் முன்பே ஒருமுறை உங்கள் ஆக்கத்திலோ / பின்னூட்டத்திலோ குறிப்பிட்டிருந்த நினைவு இருக்கிறது. ('ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'. உங்கள் ஆக்கத்தைஎல்லாம் தவறாமல் முழுமையாகப் படிக்கிறேன் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்தானே? எப்பூடி?)///

    /////'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.//////

    இந்தப் பழமொழி சமீபத்திலே கர்நாடகாக் கோர்ட்டில் தமிழிலே சொல்லப்பட்டபோது ஆங்கிலத்திலே மொழிபெயர்ப்பு செய்யப்பட முடியாது என்று சொல்லப்பட்டதாகப் படித்தேன்..முடிந்தால் KMRK (டெல்லிக் காரரின் உதவியுடன்) மொழிபெயர்த்து வழக்கறிஞருக்கு அனுப்பி வைக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.

    ReplyDelete
  85. ஸ்ரீ ஷோபனா அவர்களின் கதையில் ஒரு நல்ல படிப்பினை இருந்தது. கதை நன்று.

    உண்மையில் இந்த இயற்கைக் காட்சிகளைக் காண கண் கோடி வேண்டும்தான். அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் அழகாக இருக்கின்றன.

    ஆலாசியம் அவர்களின் கவிதையைப் படித்து சற்று பக்தி பரவசமானோம். உண்மையில் அவருக்கு நல்ல கவித்திறமை இருக்கிறது.

    சோபு டப்பா கதை நாம் ஒரே மாதிரி சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்தால் எவ்வளவோ சாதிக்கலாம் என்று சொல்வதாக இருந்தது.

    நேரமின்மையால் நேற்று சிலவற்ரையும் இன்று சிலவற்றையும் படித்தோம். வேறு யாருடைய ஆக்கத்தைப் பற்றி சொல்லாமல் விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். என்ன உமது கண்ணுக்கு எமது ஆக்கம் தெரியவில்லையா என்று யாராவது திட்டக் கூடும்.

    ReplyDelete
  86. //// minorwall said...
    /////Uma said...
    அண்ணன் ஆலாசியம் அவர்களை வாழ்த்தி வணங்கி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்..//

    ஜப்பானில் குளிர்காலம் முடிந்துவிட்டதா? அதாவது நான் கேட்கவந்தது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதா?////////

    இல்லை..இன்னும் கடும்குளிர் தொடர்கிறது..புதனன்று எங்கள் பகுதியிலும் பனிப் பொழிவு இருக்குமென்று வானிலைச் செய்திகள் தெரிவிக்கிறது...26 வருடங்களுக்குப் பின் இதுபோன்ற கடுங்குளிரைச் சந்திக்கிறதாம் ஜப்பான்..

    /// Uma said...
    நம்முடைய மரணத்திற்கு பின் நமக்காக நம் மாணவி //

    என்னாது மாணவியா? கவனம் கவனம் தனுசு அவர்களே!///
    இது பரவாயில்லை..தமிழ்விரும்பி என்று பெயரிலே இருப்பதால் அவர்தான் ரொம்ப ஜாக்ரதையாக தட்டச்சு செய்யவேண்டும்..
    உதாரணத்துக்கு
    ' பழியைப் பாடலில் இருந்து' 'அனுப்புநீர்கள்'
    'சகோதிரியாரே'
    'சொகோதிரி..'
    (வேறு யாராவது எடுத்துக் காட்டிவிடும் முன் உரிமை அடிப்படையிலே நானே சொல்லிவிட்டிருக்கிறேன்..)////

    ஹி...ஹி..ஹி..
    உங்களுக்கில்லா உரிமையா!:):)
    இருந்தும் பிழையை யார் வேண்டுமானாலும் திருத்தலாம்...
    அதில் வருத்தம் கொள்வதிலும் அர்த்தமில்லை இல்லையா!

    ஆமாம் மைனர், நீங்கள் சொல்வது உண்மை தான்,
    காந்தி என்ற பெயர் கொண்ட கொலை காரன்,
    பாரிவள்ளல் என்ற கருமி..,
    பிச்சை என்ற கோடீஸ்வரன்,
    ஆரோக்கியம் என்ற நிரந்தர நோயாளி போல்
    பிழைகளாய் எழுதும் தமிழ் விரும்பி என்றாகி விடுகிறது.!
    பிழைகள் திருத்த தவறி விடுகிறேன்...
    இனி முடிந்தளவு சரி செய்கிறேன்...

    எதற்கும் ஜாக்கிரதையாக பெயரில்
    உள்ள பிழையையும் திருத்தி விடுகிறேன்..:):):)

    ஆமாம், அதான் ஆச்சே.....
    நீங்கள் இன்னும் கண்ணாடி போடவில்லையா!
    இல்லை சும்மாத் தான் கேட்டேன்:):):)

    ReplyDelete
  87. ////ananth said...
    ஆலாசியம் அவர்களின் கவிதையைப் படித்து சற்று பக்தி பரவசமானோம். உண்மையில் அவருக்கு நல்ல கவித்திறமை இருக்கிறது. ///

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com