மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.12.10

எதைப் போற்ற வேண்டும் என்பதைத் தெரிந்த பெண்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 எதைப் போற்ற வேண்டும் என்பதைத் தெரிந்த பெண்கள்!

இன்றைய இளைஞர் மலரை, இரண்டு இளம் பெண்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. இரண்டுமே உள்ளத்தைத் தொடும்விதமாக உள்ளது. உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங்காக உள்ளது. படித்துப்பாருங்கள். படித்துவிட்டு, உங்கள் எண்ணத்தைப் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
     1

     போற்றி பாடடி பெண்ணே !!!!

     முஸ்கி: அசையும் சொத்துகளான நாம் குழந்தைகளிடம் வைக்கும் பாசமே பொய்த்து போகும் இந்த கலி யுகத்தில் யாரும் அசையா சொத்துகளான வீடு , தோட்டம் போன்றவற்றில் அன்பு வைக்க வேண்டாம்.
--------------------------------------------------------------------------------
    என் தந்தை திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் மணியகாரர் குடும்பத்தில் முதல் வாரிசாக பிறந்தவர். மனைவி இரு மகள்களை விட ஊரையும், வீட்டையும் நேசிக்கும் மண் வாசனை மிகுந்தவர். அதுவும் வீட்டின் மேல் உயிர். அழகாக பராமரிப்பார்.

    ஏற்ற தாழ்வு பாராமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார். பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்
.
    ஆண் வாரிசு இல்லாததை பற்றி கவலை பட மாட்டார். இன்று நான் பொறியாளராக அவரே காரணம். அவரும் என் சித்தப்பாவும் சில விசயங்களில் எதிர்மறையாக இருந்தாலும் ஒருவரைஒருவர் விட்டு கொடுக்கமாட்டார்கள்.

    வேலை காரணமாக சில வருடங்கள் வெளியூரில் வாழ்ந்தாலும் ,கடந்த பத்து ஆண்டுகளாக சொந்த ஊரில் வாழ்ந்து வந்தார்.வீட்டின் நடு கூடத்தில் போட்டு இருந்த ஊஞ்சலில் தான் பெரும்பாலும் அமர்ந்து இருப்பார். அந்த ஊஞ்சல் மற்றும் வீட்டில் உள்ள அவர் பாட்டி காலத்து மரச்சாமான்கள் தான் அவருக்கு பொக்கிஷம்.

    நான் கோவையில் புதிதாய் வீடு கட்டிய போது அந்த ஊஞ்சலை எடுத்துகொள்ள சொன்னார்.சித்தப்பாவும் அப்பாவுக்கும் பொதுவாய் உள்ள வீட்டில் இருந்து ஊஞ்சலை எடுப்பது சரியாகாது என கூறி மறுத்து விட்டேன். அதுவுமில்லாமல் என் சித்தப்பாவுக்கும் அந்த ஊஞ்சல் மேல் அலாதி பிரியம்.

    எல்லார் வீட்டிலும் நடப்பது போல் எங்க வீட்டிலும் பாகம் பிரிக்கும் நேரம் வந்தது. அப்பா வீட்டை தம்பி கேட்க மாட்டான் தனக்கு பின் தம்பி மகனுக்கு வீட்டை குடுத்து விடலாம் என நினைத்தார். நாங்களும் கோவையில் சித்தப்பாவிற்கு சொந்த வீடு இருந்ததால் கிராமத்திற்கு வர மாட்டார் என நினைத்தோம்.

    நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏது?

    சித்தப்பா கண்டிப்பாக தனக்கு வீடு வேண்டும் என கூறி விட்டார். அந்த ஒரு வார்த்தையில் என் தந்தை உடைந்து விட்டார். வாழ்ந்த வீட்டை இரண்டாக பிரிப்பது என்னால் முடியாது என கூறி தம்பிக்கு வீட்டை கொடுத்து விட்டார். ஐந்து தலைமுறை சொத்து ஆண் வாரிசுக்கே இருக்கட்டும் என நினைத்தார்.

    ஆனால் வீட்டை காலி செய்து விட்டு வரும் போது அவர் மனம் பட்ட பாட்டை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மிகவும் ஆசை பட்ட சில மரச் சாமான்களை எடுத்துவந்து விட்டார். ஊஞ்சலை எடுக்க வேண்டும் என அவர் கூறிய போது என் கணவர் வேண்டாம் வீட்டிற்கு அழகான அந்த ஊஞ்சலை நாம் எடுத்துவந்து விட்டால் அவர்களுக்கு வீட்டை குடுத்து பலனில்லை மிகவும் சங்கடபடுவார்கள் என கூறி தடுத்து விட்டார்.

    வீட்டை விட்டு வந்த பின் அவர் வாழ்ந்த நாட்கள் நாற்பது மட்டுமே. உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவ மனையில் இருந்த அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் " இருப்பது வாடகை வீடு . எனக்கு ஏதாவது ஆகி விட்டால் எங்கே எடுத்து செல்வது என கஷ்டப்பட வேண்டாம் நேராக மின் மயானம் எடுத்து செல்லுங்கள்" என்பது தான். அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    வீட்டை வாங்கி கொண்டு கிராமத்திற்கு சென்ற என் சித்தப்பாவும் இந்த ஆண்டு இறந்து விட்டார் . சொந்த ஊரில் வாழ்ந்தவர் கோவையிலும் கோவையில் வாழ்ந்தவர் சொந்த ஊரிலும் இறுதி நாட்களை கழித்தது இறைவனின் செயல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.

    சித்தப்பா மகன் வீட்டை காலி செய்து கொண்டு கோவை வந்து விட்டான்.மிகவும் தயக்கத்துடன் தான் நான் என் தம்பியிடம் அப்பா நினைவாக அந்த ஊஞ்சல் எனக்கு வேண்டும் என கேட்டேன்.அவனும் சரி என கூறி எனக்கு அதை மிகவும் சந்தோசதுடனே கொடுத்தான்.

    இன்று அந்த ஊஞ்சல் எங்கள் வீட்டு போர்ட்டிகோவை அலங்கரிக்கிறது. ரசித்து பார்க்க நினைத்தவர் இன்று இல்லை. அவர் ஆசைப்பட்ட ஊஞ்சல் தாய்வழி சொத்தாக என் மகனுக்கு கிடைத்ததில் தான் எனக்கு மகிழ்ச்சியே.இதற்கு இணை வேறு இல்லை.

ஆக்கம்: ஸ்ரீதேவி என்ற கல்பனா செல்வராஜ், பொறியாளர், கோவை
கட்டுரையாளரின் மனதிலும், 
வீட்டிலும் ஆடிக்கொண்டிருக்கும் 
ஊஞ்சல் இதுதான்

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
எனக்கு அவர் எனர்ஜி பூஸ்டர்!

பெரியப்பா, என் வாழ்க்கையில் நான் மறக்காத / மறக்க முடியாத நபர்களில் ஒருவர்.  வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு சோகம் இருக்கும்.  ஆனால் சோகமே வாழ்க்கையாகிப் போன ஒரு ஜீவன்.  இருந்தபோதிலும், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற மனிதர்.

பெரியப்பாவிற்கு கறுப்பான (அம்மைத் தழும்புகளுடன் கூடிய) களையான முகம்.  நடக்க முடியாது.  உட்கார்ந்து கொண்டே ஒரு கையால் ஒரு காலைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் தரையில் அழுத்திக்கொண்டு தரையில் நகர்ந்து போவார்.

நாங்கள் இருந்த வீட்டில் அவர் தனியாக ஒரு அறையில் இருந்தார்.  அந்த வீட்டின் வாசலின் பக்கத்தில் இருந்த அறையிலிருந்து பின்பக்கம் போவதற்கு எங்களுக்கே 1 நிமிடம் ஆகும்.  அவருக்கு மெதுவாக நகர்ந்து போக 10 நிமிடம் ஆகும்.  அவர் கட்டியிருக்கும் வேஷ்டி முழுதும் செங்கல் / மண் கரையாக இருக்கும்.  நகரும்போது முகத்தை ஒரு மாதிரி கோணலாக வைத்திருப்பார் (ஒருவேளை வலியினால் இருக்கும்).
பார்க்கவே கஷ்டமாக இருக்கும். 

ஆனால் சின்ன வயதில் அவரை மாதிரியே நடந்து காட்டுகிறேன்  என்று(முகத்தையும் அவர் மாதிரியே வைத்துக்கொண்டு)  எல்லாரிடமும் (அவர் இருக்கும்போது கூட) செய்து காட்டியிருக்கிறேன்.  சிரித்துக்கொண்டே இருப்பார்.  எங்களை அவர் எதற்கும் திட்டிய மாதிரி ஞாபகம் இல்லை.


பெரியப்பாவின் கால்கள் செயலிழந்து போகக் காரணம் போலியோ இல்லை.  சிறு வயதில் வாட்டசாட்டமாக இருப்பார் என்று கேட்டிருக்கிறேன்.  அவரும், அவரின் நண்பர்கள் / சகோதரர்களும் தினமும் அரசலற்றில்தான் குளிப்பார்கள்.  பாலத்தின் கைப்பிடிச்சுவற்றில் இருந்து ஆற்றில் குதித்து 1 - 2 மணி நேரம் நீச்சல் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது வழக்கம்.  அதிலும் யார் குதிக்கும்போது தண்ணீர் அதிக உயரத்திற்கு மேலே எழும்புகிறது என்று போட்டி வேறு. 

(என் வீட்டில் நீச்சல் தெரியாத ஒரே ஆள் நான்தான்.  சின்ன வயதில் பாலாரிஷ்டம் இருக்கிறது என்று தாத்தா சொல்லி வைக்க பாட்டி (அம்மாவின் அம்மா)   பயந்துகொண்டு ஐயன்குளம் பக்கம் கூட விட மாட்டார்.  அதிலும் எட்டிக்கூடப் பார்க்ககூடாது என்று கட்டளை.  (அதை நிறைய தடவை டிமிக்கி கொடுத்துவிட்டு மீறியிருக்கிறேன்)  எப்போது ஆற்றுக்குப் போனாலும் கடைசிப் படி வரைக்குமோ அல்லது முழங்கால் அளவு தண்ணீர் போகும்போது இறங்குவதோடு சரி.    ஒரே ஒரு தடவை ரிஸ்க் எடுக்கப்போய் balance தவறி ஒரு பெண்மணியின் பாவாடையைப் பிடித்துக்கொண்டு கரையேறி வந்தது தனிக்கதை).


சரி பெரியப்பாவிடம் திரும்புவோம்.  ஒரு தடவை அது மாதிரி குதிக்கும்போது இடுப்பில் அடிபட்டு, ஜுரம் வந்து கால்கள் செயலிழந்துவிட்டன என்று பாட்டி (அப்பாவின் அம்மா) சொல்லியிருக்கிறார்.  ரொம்ப நாள் வரை அதுதான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  பிறகுதான் சித்தப்பா சொல்லித் தெரிந்தது அது இல்லை என்று.

இவர்கள் குளிக்கப்போகும்போது சில சமயம் ஆற்றங்கரையோரமாக இருக்கும் வாழை மரத்தை வெட்டி அதன் மேல் படுத்துக்கொண்டு ஆற்றில் நெடுந்தூரம் சென்று திரும்புவார்களாம்.  ஒரு நாள் பெரியப்பா மரத்தை வெட்டும்போது பின்பக்கம் ஒரு தலை ரத்தம் சொட்டச் சொட்டக் கட்டப்பட்டிருந்தது.  அதைப்பார்த்து பயந்து வீட்டிற்கு வந்தவர்தான்.  ஜுரம் வந்து கால்கள் அவுட்.

அதன்பின் பெரியப்பாவின் வாழ்க்கை ஒரே அறையில் முடங்கிப்போனது.  எப்போதாவது வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.

ஆனாலும் யாரையும் சார்ந்து / எதிர்பார்த்து வாழ அவர் விரும்பவில்லை.  தன் வேலைகளைத்தானே செய்து கொள்வார்.  தன் அம்மாவைக்கூட எதற்கும் எதிர்பார்க்கமாட்டார்.  சமையலும் அவரேதான்.  இதில் எங்களுக்கு வேறு எதாவது ஸ்வீட் செய்து தருவார்.  அதிலும் வேலை மெனக்கெட்டு கோதுமை அல்வா (கோதுமையை கல்லுரலில்  அரைத்து, பால் எடுத்துக் கிளறி) மாதிரி ஐட்டங்கள்.  டீ / காபி மட்டும் பக்கத்துக்கடையில்.  அவர் வாங்கும்போதெல்லாம் எங்களுக்கும் சேர்த்து.

தன் வேலைகளை ஒரு சுமையாக ஒருபோதும் நினைத்ததில்லை.  தன் குறையைப் பற்றி எதுவும் சொல்லிக் கேட்டதில்லை.  கண் கலங்கியது இல்லை. 'முடியாது' என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததே இல்லை.

தினமும் என் தங்கை / தம்பிக்கு பாக்கெட் money வேற (எவ்வளவு என்று ஞாபகமில்லை).  ஒவ்வொரு முறை ஊருக்குப்போகும்போதும் நாள் கணக்கு செய்து அவ்வளவு காசையும் அவரிடமிருந்து வாங்கிவிட்டுத்தான் அடுத்த வேலை.  நான் ஒரு பைசா விடாமல் கணக்குப் பார்ப்பதைப் பார்த்து சிரித்துக்கொள்வார்.  உட்கார வைத்து ஸ்கூல் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பார்.

இவை எல்லாவற்றிற்கும் பணம்?  அவரின் ஒரு நண்பர் மூலம் சில கடைகளைப்பிடித்து கணக்கு எழுதித்தருவார்.  (நான் ஊருக்குப்போகும்போதேல்லாம் சில சமயம் உட்கார்ந்து எழுதித்தந்திருக்கிறேன்).  சாக்பீஸ் செய்வார்.  இப்படிச் சின்னச்சின்ன வேலைகள் மூலம் அவர் ஈட்டிய வருமானம் அவரின் தேவைகளைவிட அதிகமாகவே இருந்தது.  மீறும் தொகை அவர் அம்மா பெயரில் போஸ்ட் ஆபீசில் சேமிப்பாக இருந்தது.

இந்த இடத்தில் அவரின் நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.  அவர் என்ன வேலை பார்த்தார் என்று தெரியாது.  ஆனால் தினமும் சாயங்காலம் பெரியப்பாவைப் பார்க்க வருவார்.  எழுதிய கணக்குகளை எடுத்துக்கொண்டு போவார்.  அதிலும் முக்கியமாக இருவரும் 2 மணி நேரம் பேசிக்கொண்டே செஸ் விளையாடுவார்கள்.  பெரியப்பாவின் ஒரே பொழுதுபோக்கு அதுதான்.  விடுமுறை நாட்களில்  மணித்துளிகள் அதிகமாக இருக்கும்.  பெரியப்பாவை முழுமையாகப் புரிந்து கொண்ட / ஆதரவாக இருந்த ஒரே ஜீவன். 

இப்படியே போன அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  இறந்த அன்று பாட்டி என்னை விட்டுவிட்டுத் தான் மட்டும் சென்று பார்த்து விட்டு வந்தார்.  அன்றைக்கு முழுக்க அவரிடம் 'என்னை விட்டுட்டு எதுக்குப் போன' என்று சண்டை போட்டு அழுதது நினைவில் இருக்கிறது.  அதன்பின் 'கிரேக்கியம்' அன்று அழைத்துப்போனார்கள். 

இறந்தவர்களுக்காக முதலும் / கடைசியுமாக நான் அழுதது அன்றுதான்.  அதன்பின் இன்று வரை யாராவது இறந்தால் அழுகை வருவதே இல்லை.  என்னை வளர்த்த தாத்தா / பாட்டி இறந்தபோது கூட அழவில்லை.  என் வீட்டில் என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  (புகுந்த வீட்டில் 2 சூழ்நிலைகளில் வந்த சில பேர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  நான் நானாகவே இருக்க விரும்பியதால் நானும் அதைப் பொருட்படுத்தவில்லை).  இதைப்படித்துவிட்டு நான் ரொம்ப strong  என்று யாரும் நினைக்க வேண்டாம்.  அழுத தருணங்கள் நிறைய.

பொதுவாக, நமக்கு யாராவது அறிவுரை கூறினால் பிடிக்காது.  அதை நாம் பின்பற்றவும் மாட்டோம்.  அப்படியே பின்பற்றினாலும் அது சில காலத்திற்குத்தான் இருக்கும்.  ஆனால், நம் கண் முன்னால் வாழ்ந்து காட்டிய மனிதர்கள் நமக்குத் தெரியாமலே நம்முள் புகுத்திய அறிவுரைகளை, தன்னம்பிக்கையை, அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் உணராவிட்டாலும், அவர்கள் மறைவுக்குப் பின் உணர்வது / நம் வாழ்க்கையில் பின்பற்றுவது உறுதி.

இப்போது யோசித்துப் பார்த்தால் பெரியப்பா உயிருடன் இருந்தபோது நான் அவரைப் புரிந்து கொண்டதை விட, இறந்தபின் உணர்ந்ததுதான் அதிகம் என்று தோன்றுகிறது.  இறந்தபோது கூட  இனிமேல் நமக்கு பெரியப்பா பாக்கெட் money தர மாட்டார் என்ற வருத்தமே மேலோங்கி இருந்தது.  ஓரளவு விவரம் தெரிந்தவுடன், அவர் இறந்தது நல்லதுதான் என்று தோன்றியது.

ஒவ்வொரு முறை பெரியப்பாவைப் பற்றி நினைக்கும்போதும் எனக்கு ஒரு புதிய விஷயம் புரிபடும்.  புதிய கோணம் தென்படும்.  ஒவ்வொரு கஷ்டத்தின் போதும் அவர் எனக்கு ஒரு energy booster என்று சொன்னால் மிகையாகாது.  ஒரு வேளை பரம்பரையாக இந்த குணங்களெல்லாம் என் ரத்தத்திலும் கலந்திருக்கிறதோ?

இப்போது கூட கை / கால்கள் நன்றாக இருந்தும் திருடி / பிச்சை எடுத்துப் பிழைப்பவர்களைப் பார்த்தால் ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறும்.  எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு வியாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு புலம்புவர்களைப் பார்த்தால் எரிச்சலாக வரும்.    தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வைப் பார்த்து பயப்படுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.

சிறு வயதில் வேலைக்குப் போய் பெரியப்பாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்.  என் நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்று.

இப்போது என்னால் செய்ய முடிவதெல்லாம் மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பெரியப்பா நல்லதொரு பிறப்பை எடுத்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.

ஆக்கம்: S.உமா, தில்லி
========================================================



வாழ்க வளமுடன்!

65 comments:

  1. சார், என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி.

    //இரண்டுமே உள்ளத்தைத் தொடும்விதமாக உள்ளது. உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங்காக உள்ளது.//

    இதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  2. ஸ்ரீதேவி, உங்கள் ஆக்கம் நன்றாக இருந்தது. என்ன செய்வது? பணம் / சொத்தினால்தான் இன்றைக்கு நிறைய பிரச்சனைகள். இருந்தாலும் உங்கள் தந்தை விட்டுக்கொடுத்து உயர்ந்து விட்டார்.

    ReplyDelete
  3. ஆஆஆஆஆ நாந்தான் இன்னிக்கு முதல்ல வந்துருக்கேனா?

    ReplyDelete
  4. ////Uma said...
    சார், என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி.
    //இரண்டுமே உள்ளத்தைத் தொடும்விதமாக உள்ளது. உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங்காக உள்ளது.//
    இதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.////

    நல்லது. தொடர்ந்து எழுதுங்கள். வகுப்பறை வாரமலரிலும், இளைஞர் மலரிலும் வரும் ஆக்கங்கள் தேர்வு செய்யப்பெற்று, (உங்கள் அனைவரின் விருப்பத்துடன்) பின்னால் புத்தகமாக வரவுள்ளது.

    தலைப்பு: “முதல்வரிசைக் கண்மணிகளின் முத்தான பாடங்கள்”

    தலைப்பு ஓக்கேயா?

    அதுபற்றிய விவரம் பின்னால் வெளியிடப்பெறும்.

    ReplyDelete
  5. //////Uma said...
    ஸ்ரீதேவி, உங்கள் ஆக்கம் நன்றாக இருந்தது. என்ன செய்வது? பணம் / சொத்தினால்தான் இன்றைக்கு நிறைய பிரச்சனைகள். இருந்தாலும் உங்கள் தந்தை விட்டுக்கொடுத்து உயர்ந்து விட்டார்.////

    உண்மை! உண்மை! உண்மை!

    ReplyDelete
  6. பின்னால் புத்தகமாக வரவுள்ளது.//

    வாவ் சார், இது நான் எதிர்பார்க்காதது. உண்மையில் எழுதுபவர்களுக்கு ரொம்பவே ஊக்கம் கொடுக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. ////Uma said...
    ஆஆஆஆஆ நாந்தான் இன்னிக்கு முதல்ல வந்துருக்கேனா?/////

    மின்வெட்டினால் பதிவை வலை ஏற்றத் தாமதமாகிவிட்டது. அதனால் நீங்கள் முதலில்...ஹி..ஹி!

    ReplyDelete
  8. ஸ்ரீதேவி அவர்களின் ஆக்கம் அருமை.
    முதலில் மாமனார் இப்போது தந்தை.
    நல்ல மனிதர்களுடன் வாழ்ந்ததற்கு ஸ்ரீதேவி அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
    எப்போதும் யாரிடமாவது ஏதாவது குற்றம் காணும் இன்றைய உலகத்தில் ஸ்ரீதேவி அவர்களின்
    எல்லோரிடமும் உள்ள நல்ல குணங்களை ஆராதிக்கும் பண்பு என்னை நெகிழ வைத்து விட்டது.
    அதைவிட, மாமனார் வீட்டிலிருந்த ஊஞ்சலை சித்தப்பா பொருட்டு வேண்டாம் எனச்சொன்ன
    ஸ்ரீதேவி அவர்களின் கணவர் என் மதிப்பில் உயர்ந்து நிற்கிறார்.
    வாழ்த்துக்கள்
    நந்தகோபால்

    ReplyDelete
  9. "இப்போது என்னால் செய்ய முடிவதெல்லாம் மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பெரியப்பா நல்லதொரு பிறப்பை எடுத்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வதுதான்."/////////////////

    எனெக்கென்னமோ பெரியப்பா அவர்கள் மறு ஜென்மம் எடுத்தால் உமா அவர்கள் அவருக்கு மகளாக பிறந்து
    வளர்ந்து சம்பாதித்து பெரியப்பாவிடம் வாங்கிய பணத்தையெல்லாம் அவருக்கு திருப்பிக் கொடுத்து அவரை மகிழவைக்க
    வேண்டும் என் தீர்ப்பு.
    ஆனால் அவரோ ' அதெல்லாம் வேண்டாம்மா நீ என்னை ஞாபகம் வச்சிருக்கறதே பெரிய விஷயம்' என்று சொல்லக்கூடிய
    பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளமும் உள்ளவர் என்று படுகிறது.
    உமா அவர்களே நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.
    நந்தகோபால்

    ReplyDelete
  10. உமா அவர்கள் அவருக்கு மகளாக பிறந்து//

    நந்தகோபால் அப்படி நடந்தால் அது எனக்கு சந்தோஷம் தரக்கூடியதே. என் அப்பா குடும்பத்தில் என்னைக் கவர்ந்தவர்கள் என் தாத்தாவும் பெரியப்பாவும்தான்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  11. உள்ளேன் ஐயா!

    அன்பு சகோதரி ஸ்ரீதேவி என்ற கல்பனா செல்வராஜ் க்கு தங்களுடைய ஆக்கம் நெஞ்சை வருடுவதாக இருந்தது.

    எமது கருத்தை கூறுகின்றேன் இதில் மின்னியது என்னவோ "ஆண்வாரிசு" மற்றும் "அப்பா இடம் பெயர்ந்து இடத்தில் வைத்து தெய்வத்திடம் சென்றது".

    தங்களுடைய மன ஆறுதலுக்காக கூறுகின்றேன்.

    சம்பவம் ஒன்று
    ஒன்றுக்கு இரண்டு ஊர்களில் 4 வீடுகள் இருந்த தந்தையோ இறந்தது என்னவோ மருத்துவமனையில்

    சம்பவம் இரண்டு
    பல பெண்குழந்தைகளுக்கு பின்னர் தவம் இருந்து பெற்ற "மகனின் ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது!" என்ற ஒரே காரணம் கொண்டு அற்ப தொகைக்காக வீட்டை உறவுகளிடம் கைகழுவி விட்டு தான் புகுந்த ஊரே வேண்டாம் என்று இன்றுவரை வாழும் தாயை பற்றி என்னத்த சொல்ல சகோதரி!

    மேலே உள்ளவனின் திருவிளையாடல்
    என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
  12. Anbu Aiyya,
    Irandu aakkangalaiyum padikkum pothu Kangal paniththuvittana.

    Anbudan,
    Sara
    CMB

    ReplyDelete
  13. உள்ளேன் ஐயா!

    சகோதரி! உமாவிற்கு
    தங்களுடைய கட்டுரையை படிக்கும் பொழுது தன்னறியாமல் நரம்பு நாளங்கள் எல்லாம் "தன்னபிக்கை!" கொண்டு முறுக்கு ஏறுகின்றன. அற்புதமான படைப்பாக இருந்தது. சோகத்தை கூட தன்னபிக்கை தரும் மருந்தாக தந்து இருந்தீர்கள்.

    ReplyDelete
  14. சோகத்தை கூட தன்னபிக்கை தரும் மருந்தாக தந்து இருந்தீர்கள்.//

    கண்ணன் உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் இன்றைக்கும் நினைத்து ஆச்சரியப்படும் விஷயம் அவரின் தன்னம்பிக்கை / வைராக்கியம்தான்.

    ReplyDelete
  15. சரவணகுமார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  16. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தமக்கையின் பாசத்துக்காக ஊஞ்சலை விட்டுக்கொடுத்த தம்பியின் பாசம்
    பாராட்டத்தக்கதே, ஆயினும் எனர்ஜி பூஸ்டராக விளங்கிய கால்கள் செயலிழந்த‌
    பெரியப்பா கேரக்டர் தன்னம்பிக்கையின் சின்னமல்லவா!
    இரண்டு ஆக்கங்களுமே சூப்பர்.
    அன்புடன் , அரசு.

    ReplyDelete
  17. /////Uma said...
    பின்னால் புத்தகமாக வரவுள்ளது.//
    வாவ் சார், இது நான் எதிர்பார்க்காதது. உண்மையில் எழுதுபவர்களுக்கு ரொம்பவே ஊக்கம் கொடுக்கிறீர்கள்.//////

    நான் எழுதுவதை வெளியிடுட்டு சில பத்திரிக்கைக்காரர்கள் ஊக்கம் கொடுக்கிறார்கள். அதுபோல என் பதிவில் எழுதுபவர்களுக்கு நானும் ஊக்கம் கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  18. அரசு, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. /////kannan said...
    உள்ளேன் ஐயா!
    அன்பு சகோதரி ஸ்ரீதேவி என்ற கல்பனா செல்வராஜ் க்கு தங்களுடைய ஆக்கம் நெஞ்சை வருடுவதாக இருந்தது.
    எமது கருத்தை கூறுகின்றேன் இதில் மின்னியது என்னவோ "ஆண்வாரிசு" மற்றும் "அப்பா இடம் பெயர்ந்து இடத்தில் வைத்து தெய்வத்திடம் சென்றது".
    தங்களுடைய மன ஆறுதலுக்காக கூறுகின்றேன்.
    சம்பவம் ஒன்று
    ஒன்றுக்கு இரண்டு ஊர்களில் 4 வீடுகள் இருந்த தந்தையோ இறந்தது என்னவோ மருத்துவமனையில்
    சம்பவம் இரண்டு
    பல பெண்குழந்தைகளுக்கு பின்னர் தவம் இருந்து பெற்ற "மகனின் ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது!" என்ற ஒரே காரணம் கொண்டு அற்ப தொகைக்காக வீட்டை உறவுகளிடம் கைகழுவி விட்டு தான் புகுந்த ஊரே வேண்டாம் என்று இன்றுவரை வாழும் தாயை பற்றி என்னத்த சொல்ல சகோதரி!
    மேலே உள்ளவனின் திருவிளையாடல்
    என்பது மட்டும் உண்மை.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன். உங்களைப்போல பின்னூட்டங்களை எழுதிய அனைவருக்கும் (கொழும்பு சரவணகுமார், அரசு ஆகியோருக்கும்) அச்சகோதரிகளின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  20. அதுபோல என் பதிவில் எழுதுபவர்களுக்கு நானும் ஊக்கம் கொடுக்க வேண்டாமா//

    ரொம்ப நன்றி சார்!

    ReplyDelete
  21. கண்ணன், நீங்களும் நீங்கள் பார்த்த சம்பவங்கள் பற்றி எழுதி அனுப்புங்களேன்.

    ReplyDelete
  22. அன்புடன் வணக்கம்
    /// நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏது?///
    நிதர்சனமான உண்மை 5.. வயது வரை அண்ணன் தம்பி 10 ..வயதுக்கு மேல் பங்காளி பரவாஇல்லை கொஞ்சம் கூடுதலான வயது வரை சகோதர ஒற்றுமை இருந்திருக்கிறதே
    நன்றி சொல்லுங்கள் இறைவனுக்கு.
    உங்கள் பதிவு இளைஞர் இளைஞி களுக்கு ஒரு பாடம்!!! எப்பிடி இருக்கணும் என்று!!wish you all the best

    ReplyDelete
  23. இந்த இரு படைப்புகளும் அருமை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  24. அன்புடன் வணக்கம்
    // நம் கண் முன்னால் வாழ்ந்து காட்டிய மனிதர்கள் நமக்குத் தெரியாமலே நம்முள் புகுத்திய அறிவுரைகளை, தன்னம்பிக்கையை, அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் உணராவிட்டாலும், அவர்கள் மறைவுக்குப் பின் உணர்வது / நம் வாழ்க்கையில் பின்பற்றுவது உறுதி//மிக மிக அருமையான ஒரு சிந்தனை. பெரும்பாலான பெரிய மனிதர்கள் அறிவாளிகள் அனைவரின் மறைவுக்கு பின்னர்தான் அவர்களின் கருத்துக்கள் உலகம் போற்றி கொண்டாடுகிறது .. நீங்கள் உங்களதுபெரியப்பவின் சுய உழைப்பை பிறரை சார்ந்து இல்லாமல் தன தேவைகளை தானே பூர்த்தி செய்து வாழ்ந்து.... நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள் அடுத்த ஜென்மம் இருந்தால் உங்களுக்கு அவர் மகனாக பிறக்கட்டும்
    வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  25. //"முஸ்கி: அசையும் சொத்துகளான நாம் குழந்தைகளிடம் வைக்கும் பாசமே பொய்த்து போகும் இந்த கலி யுகத்தில் யாரும் அசையா சொத்துகளான வீடு , தோட்டம் போன்றவற்றில் அன்பு வைக்க வேண்டாம்."///

    இந்த‌ வ‌ரிக‌ள் நீங்க‌ள் எடுத்து எழுதிய‌தா அல்ல‌து வாத்தியாருடைய‌ கைவண்ண‌மா என்று தெரியவில்லை.எப்படியிருந்தாலும் அதுதான் ய‌தார்த்தம்.வீட்டைப் பிரிந்து 40 நாட்களில் அப்பா இறந்துவிட்டார் என்றால்
    அந்த வீட்டின் மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்திருப்பார் பாருங்கள்!சித்தப்பவின் மீதும் தவறில்லை. அவருக்கும் அந்த வீட்டின் மீது பாசம் இருந்திருக்கிறது. என்ன, அண்ணனோடு வந்து சேர்ந்து இருந்து அண்ணனை வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டு இருந்து இருக்கலாம். அவருக்கு என்ன பின்புலமோ? எப்படியோ அப்பாவும் சித்தப்பாவும் உஙளை நல்லதொரு ஆக்கத்தை அளிக்கச் செய்து விட்டார்கள்.வளர்க உங்க‌ள் எழுத்துப்பணி கல்பனா மேடம்!‌

    ReplyDelete
  26. ///"இப்போது கூட கை / கால்கள் நன்றாக இருந்தும் திருடி / பிச்சை எடுத்துப் பிழைப்பவர்களைப் பார்த்தால் ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறும். எப்போது பார்த்தாலும் எதாவது ஒரு வியாதியின் பெயரைச் சொல்லிக்கொண்டு புலம்புவர்களைப் பார்த்தால் எரிச்சலாக வரும். தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வைப் பார்த்து பயப்படுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்."///


    பெரிய‌ப்பாவின் த‌ன்ன‌ம்பிக்கையைப் ப‌ற்றி நன்கு ம‌ன‌தில் ப‌தியும்ப‌டி எழுதியுள்ளீர்கள் டெல்லிக்கார அம்மா!.அவ‌ருடைய‌ ஆத்மார்த்த‌மான‌ ந‌ண்ப‌ர்தான் என்னை அதிக‌ம் க‌வ‌ர்ந்தார். பெரிய‌ப்பாவின் ஊன‌த்தை ம‌ற‌க்க‌ச் செய்த‌வ‌ரே அந்த‌ ந‌ண்ப‌ர்தான்!பெரிய‌பப்பாவின் கால்க‌ளாக மாறி விட்ட‌ அந்த‌ ந‌ண்ப‌ரின் நினைவை ம‌ற‌க்காம‌ல் ப‌திவுசெய்த‌ நீங்க‌ள் பாராட்டுக்குரிய‌வ‌ர்.

    ஊன‌முற்ற‌வ‌ர்க‌ளிலேயே மிகுந்த‌ த‌ன்ன‌ம்பிக்கை உள்ள‌வ‌ரை ச‌ந்திக்க‌ ஆர்வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்கண்ட‌ வ‌லைத‌ள‌த்தினைப் பார்க்க‌வும்.

    https://www.amarseva.org/

    ReplyDelete
  27. உள்ளேன் ஐயா!

    அன்பு சகோதரி உமாவிற்கு மாலைவேளை வணக்கம்.
    வாத்தியார் ஐயா துணை இருப்பின் உமா சகோதரியின் அறிவுரைப்படி எழுத யாம் தயாராக உள்ளேன்.

    பொதுவாக, உண்மையை கூட மற்றவருக்கு பிடிக்கும் அளவிற்கு எழுதும் ஆற்றலை இது வரைக்கும் வளர்க்காமல் இருந்து விட்டேன்.
    ஆதலால் தான் ஐயாவின் துணை தேவை.

    துணை இல்லாமல் எழுதினால் அவ்வளவிற்கு (சாத்தியபடுவது) நன்றாக இருக்காது என்பது எமது கருத்து சகோதரி!

    யாம் உள்ள துறை
    "மருத்துவ மனை!" என்பதனாலும்
    மேலும் விஞ்ஞானம் மற்றும் மெஞ்ஞானம் ஏற்றுகொள்ளும் அளவிற்கு நிருபிக்க பட்ட
    விஞ்ஞான உண்மையை,
    அறிவியல் உண்மை படி
    "ஜீவனின் (மனிதனின்) முதல் போராட்டம்!" என்ற ஒரு சுயநம்பிக்கை கட்டுரையை தரலாம் என்று உள்ளேன்.

    ஐயாவின் அன்பான
    பதிலுக்காக மாணவ கண்மணி
    கண்ணா ஆ!ஆ!!ஆ!!1ஆ!!!!ஆ!!!!!

    ReplyDelete
  28. எனது ஆக்கத்தை பதிவேற்றிய வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி. கருத்து மற்றும் பாராட்டு கூறிய அனைவர்க்கும் எனது நன்றி.

    ReplyDelete
  29. அன்புடன் வணக்கம்
    திரு கண்ணன்... வாத்தியார் ((இனி இப்படி அழைக்க வேண்டும் என கூறிவிட்டார்கள் )))துணையுடன் எழுதுங்கள் .. மருதுவதுறைய்ல் இருப்பதால் அதிகமான் இயர்கைக்கும் செயற்கைக்கும் உண்டான போராட்டங்கள் இருக்கும் பார்த்து இருப்பீர்கள்""எழுதுங்கள் உங்கள் அனுபவத்தை ..என்னுடைய பதிவும் சில திருத்தங்களுடன் தான் வாத்தியார்..வெளி இட்டார்கள்

    ReplyDelete
  30. அன்புடன் வணக்கம்
    2000 மாணாக்கர்கள் உடைய ஒரு வாத்தியார் என்றால் லேசுபட்ட விஷயமா?? அதுவும் ஒவ்வொரு மாணவரும் கேட்கும் கேள்விகள் ??அதற்க்கு வாத்தியார் லாவகமாக சொல்லும் பதில் '''பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு"''.((இந்த இடத்தில அறிவு பிச்சை )). அது போல்
    இன்ன லஷணத்தில் உள்ளவர் ஆசிரியனாக தகுதி உள்ளவர் ஆசிரியர் தகுதி அறிந்து பாடம் கேள் ""மனு சாஸ்திரத்தின் கூற்று""" ..வகுப்பில் இருக்கும் மாணாக்கர்கள் அனைவரும் எப்பிடி பட்டவர்கள் என்று வாத்தியாருக்கே தெரியும்... ஆகவே களவு போனது ஒரு வகை நன்மைக்கே இனி கவனமாக தகுதியான மாணவர்களுக்கு மட்டும் நடதுவீர்கள்தானே !!!

    ReplyDelete
  31. சகோதரி உமா அவர்களின் படைப்பு அருமை !.

    ////////பொதுவாக, நமக்கு யாராவது அறிவுரை கூறினால் பிடிக்காது. அதை நாம் பின்பற்றவும் மாட்டோம். அப்படியே பின்பற்றினாலும் அது சில காலத்திற்குத்தான் இருக்கும். ஆனால், நம் கண் முன்னால் வாழ்ந்து காட்டிய மனிதர்கள் நமக்குத் தெரியாமலே நம்முள் புகுத்திய அறிவுரைகளை, தன்னம்பிக்கையை, அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் உணராவிட்டாலும், அவர்கள் மறைவுக்குப் பின் உணர்வது / நம் வாழ்க்கையில் பின்பற்றுவது உறுதி. ////////
    தங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை அப்படியே சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.இத்தகைய அனுபவம் பெரும்பா லா னவர்களுக்கு ஏற்ப்பட்டு இருக்கும் ,இது நடைமுறையில் உள்ள யதார்த்தமான உண்மை.
    நன்றி!

    ReplyDelete
  32. ///////அசையும் சொத்துகளான நாம் குழந்தைகளிடம் வைக்கும் பாசமே பொய்த்து போகும் இந்த கலி யுகத்தில் யாரும் அசையா சொத்துகளான வீடு , தோட்டம் போன்றவற்றில் அன்பு வைக்க வேண்டாம்.//////////
    பாசமும்,அன்பும் அளவோடு இருப்பின்; பிற்காலத்தில் சங்கடம் இல்லை. ஸ்ரீதேவி அவர்களின் படைப்பு பங்காளிகளின் நடை முறையினை தெளிவாக்கி உள்ளது..
    நன்றி!

    ReplyDelete
  33. /////////////நல்லது. தொடர்ந்து எழுதுங்கள். வகுப்பறை வாரமலரிலும், இளைஞர் மலரிலும் வரும் ஆக்கங்கள் தேர்வு செய்யப்பெற்று, (உங்கள் அனைவரின் விருப்பத்துடன்) பின்னால் புத்தகமாக வரவுள்ளது.//////////////

    வகுப்பறையின் வாரமலரிலும், இளைஞர் மலரிலும் ஆக்கங்கள் படைப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்பினை அளித்துள்ள ஆசிரியர் அவர்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  34. '////" பாலாரிஷ்டம் இருக்கிறது என்று தாத்தா சொல்லி வைக்க பாட்டி (அம்மாவின் அம்மா) பயந்துகொண்டு ஐயன்குளம் பக்கம் கூட விட மாட்டார்."/////

    தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் "அய்யன்" என்ற பெயரில் குளம்,கடைவீதி,சந்தைப்பேட்டை,என்று பல ஆக்கங்கள் உண்டு.இந்தப் பெயருக்கு உரியவர் கோவிந்த தீட்சதர் என்ற பெரியவர். அவர் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அமைச்சராக இருந்து, பல நல்ல‌ திட்டங்களைத் தீட்டி மக்களுக்குப் பல நன்மைகள் செய்துள்ளார்.தஞ்சையில் அய்யன் குளமும், அய்யன் கடைத் தெருவும் உண்டு.பெரியகோயிலின் நந்தவனமான சிவகங்கைப் பூங்காவின் உள்ளே அமைந்துள்ள குளத்தில் மழைநீர் நிரம்பினால், அங்கிருந்து பாதாளக்குழாய் மூலம் அய்யன் குளத்thuக்கு
    நீர் சென்று அந்தக்குளமும் நிரம்பிவிடும்.அய்யன் குளத்திர்க்கு அருகில் உள்ள வீட்டுக்கிணறுகளும் நிரம்பிவிடும்.அக்காலத்திலேயே எப்படிப்பட்ட நீர் மேலாண்மை செய்துள்ளார்கள்.இது ஒரு சரித்திரம்!
    இப்போது அக் குள‌த்தில் குப்பை கொட்டுவ‌து ச‌ஹ‌ஜ‌மாக‌ உள்ள‌து.
    ச‌ரித்திர‌த்தைத் தெரிந்துகொண்டால்தானே இது போன்ற‌ த‌வ‌றுக‌ளைத் த‌விர்க்க‌லாம்?.‌

    ReplyDelete
  35. ///"பொதுவாக, நமக்கு யாராவது அறிவுரை கூறினால் பிடிக்காது. அதை நாம் பின்பற்றவும் மாட்டோம். அப்படியே பின்பற்றினாலும் அது சில காலத்திற்குத்தான் இருக்கும். ஆனால், நம் கண் முன்னால் வாழ்ந்து காட்டிய மனிதர்கள் நமக்குத் தெரியாமலே நம்முள் புகுத்திய அறிவுரைகளை, தன்னம்பிக்கையை, அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் உணராவிட்டாலும், அவர்கள் மறைவுக்குப் பின் உணர்வது / நம் வாழ்க்கையில் பின்பற்றுவது உறுதி.'///

    எனக்கு அறிவுரை கூறினால் பிடிக்கும். காது கொடுத்துக் கேட்பேன்.சில சமயங்களில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்றாலும் கூட,வயதில் மூத்தவர்கள் சொன்ன‌தற்காக பொது மன்னிப்புக் கூடக் கேட்டு இருக்கிறேன்.

    நம் முன்னால் வழ்ந்து காட்டிய மகான்களிடம் பக்தி வைத்துள்ளேன்.எப்படி உங்கள் பெரியப்பாவைப்பற்றி ஒரு சிறு மைனஸ் கூட நீங்கள் சொல்லவில்லையோ அதுபோலவே மகான்களிடம் பக்தி வைத்துள்ள நாங்களும் மைன‌ஸ் ப‌ற்றி அக்க‌றை காட்டுவ‌தில்லை.

    ReplyDelete
  36. "சரி பெரியப்பாவிடம் திரும்புவோம்."//

    இப்படித் திரும்பிப் பார்ப்பதுதான் சரித்திரம்.உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சரித்திரம் இருந்துகொண்டுதான் இருக்கும்.மகான்களின் சரித்திரம் பிடிக்காவிட்டாலும், பெரியப்பா சரித்திரமாவது உங்களுக்குப் பிடித்த‌தே!

    ReplyDelete
  37. மைனர் நல்ல பிள்ளையாக ஒதுங்கிக் கொண்ட காரணம் என்னவோ?உமா என்றால் நல்லா கலாய்க்கிற மைனர் ஏன் இப்படி?(இப்புடி?)அந்த
    வகுப்பறையில் முன்பு சூடு கண்டதாக இருக்குமோ?(ஜாலியாகத்தான் எழுதியுள்ளேன்.)

    ReplyDelete
  38. Haalasiyam,Sir! Where are you? Why silent? We are missing you!

    ReplyDelete
  39. அய்யா காலை வனக்கம்

    ReplyDelete
  40. இந்த இரு படைப்புகளும் அருமை..வாழ்த்துக்கள்..//

    என்ன சுருக்கமா முடிச்சிட்டீங்க?

    ReplyDelete
  41. கணபதி சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  42. கிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    அவர் நண்பரைப் பற்றி நான் நினைப்பதும் அதுதான். அவரை நாங்கள் எல்லாம் கூப்பிடுவதே 'செஸ் மாமா' என்றுதான். அவருடைய நிஜப்பெயர் இன்றுவரை எனக்குத் தெரியாது.

    ReplyDelete
  43. கண்ணன், தயங்காமல் எழுத ஆரம்பிங்கோ. எழுத எழுதத் தானாகவே பழகிவிடும்.

    ReplyDelete
  44. பெருமாள் சுந்தரம், பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  45. தட்சிணாமூர்த்தி தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  46. எனக்கு அறிவுரை கூறினால் பிடிக்கும். காது கொடுத்துக் கேட்பேன்.சில சமயங்களில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்றாலும் கூட,வயதில் மூத்தவர்கள் சொன்ன‌தற்காக பொது மன்னிப்புக் கூடக் கேட்டு இருக்கிறேன்//

    இங்கே நான் பொதுவாக என்று ஒரு வார்த்தை எழுதியிருந்தேன். அதைக் கவனித்தீர்களா? என் மேல் உண்மையான அக்கறை / பாசம் உடையவர்கள் அறிவுரை சொன்னால் நானும் கேட்பது வழக்கம்தான். இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களைப் பார்த்து நல்ல விஷயங்கள் என்று நான் நினைப்பதை நானாகவே கற்றுக்கொண்டிருக்கிறேன். வயதில் பெரியவர்கள் எனும்போது அவர்கள் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கொள்கை எனக்கும் உண்டு. அந்த ஒரு காரணத்துக்காகவே நிறைய வார்த்தைப் பிரயோகங்களை சகித்துக்கொண்டு இருந்த காலமும் உண்டு.

    ReplyDelete
  47. எப்படி உங்கள் பெரியப்பாவைப்பற்றி ஒரு சிறு மைனஸ் கூட நீங்கள் சொல்லவில்லையோ //

    என் பெரியப்பாவிடம் ஏதாவது மைனஸ் இருந்திருந்தால் கண்டிப்பாக அதையும் குறிப்பிட்டு எழுதியிருப்பேன். நான் 5 வது படிக்கும்போது அவர் இறந்துவிட்டார். அந்த வயதிற்குள் நான் பார்த்தது, மற்றவர்கள் அவரைப்பற்றி சொல்லிக் கேட்டதை வைத்துதான் இதை எழுதினேன். அவரைப்பற்றி நன்கு தெரிந்தவர்களும் ஒரு குறை கூட சொல்லவில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  48. அதுபோலவே மகான்களிடம் பக்தி வைத்துள்ள நாங்களும் மைன‌ஸ் ப‌ற்றி அக்க‌றை காட்டுவ‌தில்லை.//

    மகான்களிடம் பக்தி வைத்திருப்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நான் தவறாக எங்கேயும் ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை. என் தனிப்பட்ட கருத்தாக, இதுமாதிரி மகான்களின் போதனைகளைப் படிக்கும் அளவு எனக்கு இப்போதைக்கு பொறுமை கிடையாது என்றுதான் எழுதினேன்.

    உலகத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒரே மாதிரி சிந்திக்கவும் மாட்டார்கள். அவரவர்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலை பொறுத்து எல்லாமே மாறும். உலகத்தில் யாருமே முழுமையான மனிதர் கிடையாது. மைனஸ் இருக்கும் பட்சத்தில் இருக்கிறது என்று சொல்வது தவறாகாது. உங்களுக்கு ராமக்ரிஷ்ணரையும் / விவேகானந்தரையும் பிடித்திருக்கிறது. எனக்கு சந்திரசேகரேந்திர சுவாமிகளைப் பிடிக்கும் என்றால் உங்களுக்கு அவரைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லையே?

    மற்றபடி ஏதாவது ஒரு நல்ல விஷயம் கற்க வேண்டுமானால் இது மாதிரி படித்துதான் கற்க வேண்டும் என்று அவசியமில்லை. சில பேர் இது மாதிரி படித்துத் தெளிவுருவார்கள். சில பேர் யாரையாவது பார்த்துக் கற்றுக்கொள்வார்கள் (அது 2 வயது குழந்தையிடமிருந்து கூட இருக்கலாம்). மற்றபடி மகான்களின் போதனைகளைப் படிக்காதவர்கள் அனைவருமே வீண் என்பது இல்லை.

    ReplyDelete
  49. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சரித்திரம் இருந்துகொண்டுதான் இருக்கும்.மகான்களின் சரித்திரம் பிடிக்காவிட்டாலும், பெரியப்பா சரித்திரமாவது உங்களுக்குப் பிடித்த‌தே!//

    இதை நீங்கள் எப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரியாது. நானும் வருத்தப்படவில்லை.

    'எனக்கு வரலாற்றில் நம்பிக்கை கிடையாது' என்று எழுதிய ஒரு வாக்கியத்தை வைத்து இவ்வளவு கமெண்ட்ஸ் போட்டிருக்கிறீர்கள். பொதுவாக ஒரு வார்த்தையை வைத்து ஓர் ஆயிரம் அர்த்தம் எடுக்கலாம். நான் எழுத விரும்பியதை நானும் தெளிவாக எழுதவில்லை. தெளிவாக எழுத வேண்டுமென்றால் விவரமாக எழுதவேண்டும் என்றுதான் பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லியிருந்தேன். சிறிய உதாரணம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். அதில் எத்தனை தலைவர்களைப் பற்றி உண்மையான தகவல்கள் அனைத்தும் சொல்லப்பட்டிருக்கின்றன? இதை நான் எழுதுவதால் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் கிடையாது. அவர்களால்தான் சுதந்திரம் சாத்தியப்பட்டது என்பதை மறுக்கவும் முடியாது.

    வரலாற்றுக்கதைகள் / மகான்களின் சரித்திரம் எனக்குப் பிடிக்காது என்று நான் எங்கேயுமே சொல்லவில்லையே? வேங்கையின் மைந்தன் முன்னுரையில் கூட அகிலன் அவர்கள் எனக்குச் சரியான சான்றுகள் கிடைக்காத இடங்களை என் கற்பனையால் நிரப்பியிருக்கிறேன் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னர் ஆண்ட அரசர்கள் இப்போது ஆள்பவர்களை விட பல இலட்சக்கணக்கான மடங்கு உயர்ந்தவர்கள் / தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது எனக்கும் தெரியும். ராஜராஜ சோழனையும் / ராஜேந்திர சோழனையும் படிக்கும்போது நான் வியந்த விஷயங்கள் அதிகம். ஒவ்வொருமுறை பெரிய கோவிலுக்குப் போகும்போதும் என் மனம் எங்கெங்கோ போய்விட்டுத் திரும்பும்.

    ReplyDelete
  50. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சரித்திரம் இருந்துகொண்டுதான் இருக்கும்.மகான்களின் சரித்திரம் பிடிக்காவிட்டாலும், பெரியப்பா சரித்திரமாவது உங்களுக்குப் பிடித்த‌தே!//

    இதை நீங்கள் எப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரியாது. நானும் வருத்தப்படவில்லை.

    'எனக்கு வரலாற்றில் நம்பிக்கை கிடையாது' என்று எழுதிய ஒரு வாக்கியத்தை வைத்து இவ்வளவு கமெண்ட்ஸ் போட்டிருக்கிறீர்கள். பொதுவாக ஒரு வார்த்தையை வைத்து ஓர் ஆயிரம் அர்த்தம் எடுக்கலாம். நான் எழுத விரும்பியதை நானும் தெளிவாக எழுதவில்லை. தெளிவாக எழுத வேண்டுமென்றால் விவரமாக எழுதவேண்டும் என்றுதான் பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லியிருந்தேன். சிறிய உதாரணம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். அதில் எத்தனை தலைவர்களைப் பற்றி உண்மையான தகவல்கள் அனைத்தும் சொல்லப்பட்டிருக்கின்றன? இதை நான் எழுதுவதால் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் கிடையாது. அவர்களால்தான் சுதந்திரம் சாத்தியப்பட்டது என்பதை மறுக்கவும் முடியாது.

    ReplyDelete
  51. ///இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையே எடுத்துக்கொள்வோம். அதில் எத்தனை தலைவர்களைப் பற்றி உண்மையான தகவல்கள் அனைத்தும் சொல்லப்பட்டிருக்கின்றன?///

    எந்தக் காலத்திலும் விமர்சனத்துக்கு ஆளாகாத பொது நபர் கிடையாது.சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களில் பலரும் உயிருடன் இருந்த போதும் சரி, மறைந்த பின்னரும் சரி இன்றுவரை விமர்சிக்கப்ப்ட்டே வரப்படுகிறார்கள்.ஜான் மதாய் என்பவர் நேருவின்
    தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவருடைய காலத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துப் புத்தகம் எழுதினார். பரபரப்பாக விற்பனை ஆயிற்று.
    மஹாத்மா காந்திஜியைப் பற்றிக்கூட சமீபத்தில் "காந்தியின் காதலி" என்று
    சினிமா பாடலாசிரியர் வைரமுத்து ராணி வார இதழில் பர‌பர‌ப்பைக் கிளப்பினார்.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,உண்மையோ பொய்யோ, மைனஸ் செய்திகள் விரும்பிகளுக்கு எப்போதும் அவல் கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

    ReplyDelete
  52. ///"மைனஸ் இருக்கும் பட்சத்தில் இருக்கிறது என்று சொல்வது தவறாகாது"///

    இங்கேதான் நாம் மாறுபடுகிறோம்.ந‌மக்கு ஈடுபாடு யாரிடம் இல்லையோ அவர்களுடைய மைனசை பூதக் கண்ணாடிகொண்டும், மைக்குரோஸ்கோப்
    கொண்டும் பார்ப்பதும், நம்பகம் அற்றவர் இட்டுக் கட்டிச் சொலவதைக்கூட
    "உண்மை "என்று எடுத்துக்கொள்வதும் செய்தல் தகாது.நம்மைக்காட்டிலும்
    சமூகத்திற்குப் பல விதத்திலும் நன்மை புரிந்தவர்களுடைய நல்ல பக்கத்தை மட்டும் பார்த்தால் போதுமானது என்பது என் கருத்து.

    ReplyDelete
  53. //"உங்களுக்கு ராமக்ரிஷ்ணரையும் / விவேகானந்தரையும் பிடித்திருக்கிறது. எனக்கு சந்திரசேகரேந்திர சுவாமிகளைப் பிடிக்கும் என்றால் உங்களுக்கு அவரைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லையே?"///

    இந்த உஙக‌ளுடைய சொற்றொடர் மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு எனக்கு மஹாப் பெரியவாளைப் பிடிக்காது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.எனக்கு அவர் பெயரை சொல்ல‌ அல்ல எழுதக்கூடத் தகுதி கிடையாது.

    ஸ்ரீராமகிருஷ்ணர் /சுவாமி விவேகானந்தர் மட்டுமல்ல "எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு"! எத்தனை மஹான்களோ அத்தனை பேரையும் எனக்குப்பிடிக்கும்(அவர்களுடைய மைனஸ் யாராவது சொன்னால்,என் காது செவிடாகட்டும் என்று பகவானை வேண்டிக் கொள்வேன்)

    ReplyDelete
  54. //"மகான்களிடம் பக்தி வைத்திருப்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நான் தவறாக எங்கேயும் ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை. என் தனிப்பட்ட கருத்தாக, இதுமாதிரி மகான்களின் போதனைகளைப் படிக்கும் அளவு எனக்கு இப்போதைக்கு பொறுமை கிடையாது என்றுதான் எழுதினேன்.//

    தாங்க‌ள் என்னுடைய "இசைந்தபடி பேசுவது எப்படி?" என்ற கட்டுரைக்கு இட்டுள்ள பின்னூட்டதை மீள் வாசிப்புச் செய்து பார்க்கும் படி பணிந்து வேண்டுகிறேன்.அது போன்ற‌ எழுத்துக்கள் மிகைப்படுத்தி எழுதப்படுவதால் நான் அவ‌ற்றைப் படிப்பதில்லை என்று தொனிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள்.அது ஒரு பக்காவான விமர்சனம்.விமர்சனம் செய்ய வந்துவிட்டால் அதற்கு பதில் விமர்சனத்திற்கும் தயாராக‌ இருக்க வேண்டும்.

    ReplyDelete
  55. //"மற்றபடி மகான்களின் போதனைகளைப் படிக்காதவர்கள் அனைவருமே வீண் என்பது இல்லை.//
    உங்கள் பாணியிலேயே சொன்னால் 'நான் அப்படி எங்கேயும் சொல்லவில்லையே!'
    படிக்க வேண்டும் என்று யாரும் உங்க‌ளைக் கேட்கவில்லை. படிக்காமலேயே
    'எல்லாம் மிகைப்படுத்துவார்கள். உண்மையை மறைப்பார்கள். ஆண்டவன் ரேஞ்சுக்கு உயர்த்துவார்கள்' என்றெல்லாம் சொல்வது சரியா?

    என்னுடைய அந்தக்கட்டுரையில் கூட,படகில் வருபவர்கள் ஸ்ரீராம‌கிருஷ்ணரைப் பற்றி அவதூறு பேசினாவர்களை ஒரு சீடர் கண்டித்தார்,
    இன்னொரு சீடர் பயத்தால் கண்டிக்கவில்லை என்று எழுதியுள்ளேன்.ஆகவே அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றி அவதூறு பேசியவர்களும் இருந்திருக்கிறார்கள், அவர்களுடைய வெறும் வாய்க்கு மெல்ல‌ சிறிது அவல் கிடைக்கும்படியும் இருந்துள்ளது என்பதையும் கண்ணியமாகத் தெரிவித்துள்ளேன்.

    ReplyDelete
  56. //"என் மேல் உண்மையான அக்கறை / பாசம் உடையவர்கள் அறிவுரை சொன்னால் நானும் கேட்பது வழக்கம்தான்... வயதில் பெரியவர்கள் எனும்போது அவர்கள் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கொள்கை எனக்கும் உண்டு"///

    நல்ல வேளையாக என்னை வயதானவன் என்ற காரணத்திற்காக மட்டும் ஒதுக்கிவிடாமல் சரிக்கு சரி பதிலடி கொடுப்ப‌து உங்கள் வயதுக்காரர்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.அதற்காக மகிழ்ச்சி. நன்றியும் கூட.

    முகமறிந்து பழகாததால் உங்கள் மேல் பாசம் என்று சொல்லி டிரமா போடமாட்டேன்.நிச்சயமாக அக்கறை கொண்டுள்ளேன்.உங்கள் அறிவு,எழுத்தாற்றல்,துணிவு, தன்னம்பிக்கை, எல்லாம் கூர்மைப்பட வேண்டுமே என்ற அக்கறை கொண்டுள்ளேன். ஒரு விவாததிதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்.நாம் என்பதைக் குறித்துக் கொள்க.என்னையும் சேர்த்துத்தான்.

    ReplyDelete
  57. Aano bhadra krtavo yantu vishwatah.(- RIG VEDA)
    "Let noble thoughts come to me from all directions"

    ReplyDelete
  58. நம்மைக்காட்டிலும் சமூகத்திற்குப் பல விதத்திலும் நன்மை புரிந்தவர்களுடைய நல்ல பக்கத்தை மட்டும் பார்த்தால் போதுமானது என்பது என் கருத்து.//
    அது போன்ற‌ எழுத்துக்கள் மிகைப்படுத்தி எழுதப்படுவதால் நான் அவ‌ற்றைப் படிப்பதில்லை என்று தொனிக்கும் படியாக//

    இப்போதும் அதுதான் சொல்கிறேன். ஒருவரைப் பற்றி பிளஸ் / மைனஸ் இரண்டையுமே வரலாற்றில் கண்டிப்பாக எழுத வேண்டும் என்பதுதான் என்னோட பாயிண்ட். படிக்கிறவர்கள் அவரைப்பற்றி நல்லவரா / கெட்டவரா என்று முடிவு செய்து கொள்வார்கள். அதை விட்டுவிட்டு ஒருவரின் நல்ல குணங்களை மட்டும் பட்டியல் போடுவது படிப்பவருக்கு அவரைப் பற்றிய முழுமையான புரிதலைக்கொடுக்காது என்ற அர்த்தத்தில்தான் நான் ஜால்ரா அடித்து எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று எழுதினேன்.

    ReplyDelete
  59. விமர்சனம் செய்ய வந்துவிட்டால் அதற்கு பதில் விமர்சனத்திற்கும் தயாராக‌ இருக்க வேண்டும்.//

    கண்டிப்பாகத் தயாராக இருக்கிறேன்.

    ஏன்னா argue பண்றதுன்னா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி (ரஜினி ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  60. 'எல்லாம் மிகைப்படுத்துவார்கள். உண்மையை மறைப்பார்கள். ஆண்டவன் ரேஞ்சுக்கு உயர்த்துவார்கள்' என்றெல்லாம் சொல்வது சரியா?//

    இது ராமக்ரிஷ்ணரைப் பற்றிய கருத்து இல்லைன்னுதான் தெளிவா சொல்லியிருந்தேனே? மேலும் இப்போதைக்கு இதையெல்லாம் படிக்கும் பொறுமை இல்லைன்னுதான் சொன்னேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே. நான் படிக்க நினைத்திருக்கும் புத்தக லிஸ்ட் முடிஞ்சதும் இதைப்பத்தி திரும்ப எழுதறேன்.

    ReplyDelete
  61. காரணத்திற்காக மட்டும் ஒதுக்கிவிடாமல் சரிக்கு சரி பதிலடி கொடுப்ப‌து//

    இதுவும் நீங்கள் எந்த அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. வயதானவர்களுடன் விவாதம் செய்வதால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.

    ReplyDelete
  62. நிச்சயமாக அக்கறை கொண்டுள்ளேன்.//

    இதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  63. ஒரு விவாததிதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்.//

    கண்டிப்பாக அந்த மனோபாவம் இல்லை. ஒருவேளை தவறு என்று தெரிந்தால் ஒத்துக்கொள்ள என்றுமே நான் தயங்கியது கிடையாது. நான் எந்த பின்னூட்டமுமே சீரியஸ் ஆக எழுதுவதில்லை. நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதும் புரியவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com