மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.4.14

Short story சிறுகதை: வாங்கி வந்த வரம்

 
 Short story சிறுகதை: வாங்கி வந்த வரம்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில் வெளியாகி, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது.
உங்களுக்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------
எங்கள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். பாதிப் பேர் முதலில் நம்பவில்லை. உண்மையைத் தெரிந்து கொண்டவர்களுக்குத் திகைப்பாக இருந்தது.

இருக்காதா பின்னே?

இதுவரை ஒரு பத்து ரூபாய்கூட தான தர்மம் பண்ணித் தெரியாத கருப்பஞ் செட்டியார் திடீரென்று ஒரு கோடி ரூபாயை ஊர்ப் பொது நிதிக்குக்
கொடுத்திருக்கிறாறென்றால் அது சாதாரணமான விஷயமா என்ன?

சச்சின் டென்டூல்கர் ஓப்பனிங் பௌலராக மாறி முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கட்டுகளைச் சாய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது
அந்தச் செய்தி!

மாவன்னா வீட்டுக் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்திருந்தேன். திருமண மண்டபத்தில் எல்லோரும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு
மிகவும் வியப்பாக இருந்தது. இன்னும் எங்கள் வீட்டிற்குப் போகவில்லை. வீட்டிற்குப் போனால் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதை
சமாதானப்படுத்திக் கொண்டேன்.

கருப்பஞ் செட்டியாருக்கு அறுபத்தைந்து வயது. எங்கள் ஊர் நகரத்தார்  உயர்நிலைப் பள்ளியில் கருப்பஞ் செட்டியாரும் என் தந்தையாரும் ஒன்றாகப்
படித்தவர்கள். அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் பங்காளி வேறு. எங்கள் தந்தையார் கருப்பஞ் செட்டியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிக் கதை
கதையாகச் சொல்வார்கள் - நாங்கள் அப்படியிருக்கக் கூடாது என்பதற்காக!

‘கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?' என்று ஒருமுறை என் தந்தையாரிடம் நான் கேட்டபோது அவர்கள் இப்படி விளக்கம்  சொன்னார்கள்.

தன் வீட்டு மரத்தில் காய்க்கும் மாம்பழங்களைத் தன் வீட்டாரைத் தவிர வெளியாட்களுக்குக் கொடுக்காதவன்  கஞ்சன். அதே பழங்களைத் தன்
வீட்டாருக்கேகூடக் கொடுக்காமல் வெளியே விற்றுக் காசாக்கி மகிழ்பவன் கருமி!

கருப்பஞ் செட்டியார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வந்த போது கூட - சொந்த பந்தங்களுக்கெல்லாம் வேஷ்டி, சேலை வாங்க வேண்டும், வைதீகச் செலவு, விருந்துச் செலவு என்று பத்து லட்சம்வரை செலவாகுமே என்ற ஒரே காரணத்திற்காகச் சாந்தியே செய்து
கொள்ளவில்லை. சுவாமி மலைக்குப்போய் சுவாமி தரிசனம் பண்ணிவிட்டுத் திரும்பிவிட்டார்.

இன்றைக்குத் தேதியில் அவருக்குப் பத்துக் கோடி ரூபாய்க்குமேல் சொத்துத் தேறும். மதுரை, காரைக்குடி இரண்டு ஊர்களிலும் கட்டட வாடகையே
மாதம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குமேல் வந்து கொண்டிருக்கிறது. கொடுக்கல், வாங்கல் வியாபாரத்திலும் மாதாமாதம் அதைவிட அதிகமாகப் பணம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் மிகவும் சிக்கனமானவர். பார்வைக்குப் பழைய நடிகர் எஸ்.வி. சுப்பையா மாதிரி இருப்பார்.துவைத்துக் கட்டிய வேஷ்டி, சட்டை. கையில்
மஞ்சள் பை. காலில் ரப்பர் செருப்பு. அதிகம் பேச மாட்டார்.

எங்கள் ஊர் எல்லையில் ஒரு தோப்பு வீட்டில் குடியிருக்கிறார். தோப்பு வீடு என்பதனால் எல்லாம் வசதி. காய்கறி, பால் என்று எதற்குமே வெளியே
எட்டிப் பார்க்க வேண்டாம். ஊரின் மத்தியில் உள்ள வளவு வீட்டில் கால் பங்கு உள்ளது. அவர் வரமாட்டார். அவர் மனைவி சீதை ஆச்சி மட்டும் வாரம் ஒருமுறை அங்கே சென்று வீட்டில் விளக்கேற்றிக் கும்பிட்டு விட்டுத் திரும்புவார்கள்.

வெகு நாட்கள் வரை மாட்டு வண்டிதான் வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாகத்தான் - அதுவும் ஆடிட்டரின் கட்டாயத்தின் பேரில் கார் வாங்கி
வைத்திருக்கிறார். வருமானவரிச் சலுகைக்காக. அந்தக்காரையும் வாரம் ஒருநாள் எடுத்து ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் ஓட்டிவிட்டுக்
கொண்டு போய் நிறுத்திவிடுவார். காரைத் தொட்டில் கட்டிப் போட்டு வைக்காத குறைதான். துணி போட்டு மூடி வைத்திருப்பார்.

பெரிய அளவில் வைப்புத் தொகையெல்லாம் வைத்திருப்பதால் உள்ளூர் வங்கியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு. பாதி நாட்கள் காலைப் பொழுதை
அங்கேயே கழித்துவிடுவார். பேனா, பென்சில், பேப்பர், கவர், உள்ளூர் போன் அழைப்புக்கள் என்று எல்லாவற்றையும் வங்கி செலவிலேயே செய்து
முடித்து விடுவார்.

இப்படி அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.

அவர் மனைவி சீதை ஆச்சி ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போனார்கள். ஆச்சி தலைவலி, தலைவலியென்று ஆறு மாதங்களாகச் சிரமப்பட்டுக்
கொண்டிருந்தபோது செட்டியார் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஆஸ்ப்ரின், அனாஸின், பாரல்டிம், கோடாலித் தைலம், ஜண்டுபாம் என்று செலவைச்
சுருக்கியதோடு ஆச்சியின் உயிரையும் சுருக்கி விட்டார்.

ஒரு நாள் தலைவலிப் பிரச்சனை பூதாகரமாகி, ஆச்சியை மதுரைக்குக் கூட்டிக் கொண்டுபோய் நவீன மருத்துவ மனை ஒன்றில் சேர்த்தபோதுதான்,
மூளையில் கட்டி ஒன்று முற்றிய நிலையில் இருப்பதும், ஆபத்தான நிலைமையும் தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் ஆச்சி அதே மருத்துவமனையில் உயிரை விட்டு விட்டார்கள். ஆச்சியின் கதை மதுரை தத்தனேரி சுடுகாட்டில் முடிந்துவிட்டது.
.
ஆனால் அதையெல்லாம்விட முக்கியம்- அதிரடியாகக் கருப்பஞ்செட்டியாரின் மனம் மாறியது எப்படி?

அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!

                               $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சித்திரை வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து நான் எங்கள் வீட்டிற்குப் போன போது மணி 12.30 ஆகிவிட்டிருந்தது.

வீட்டிற்குள் வெட்கை தெரியவில்லை.

என் தந்தையார் மதிய உணவை முடித்துக்கொண்டு சற்று நேரம் கண் அயர்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் வா'வென்றார். புன்னகைத்தார். அவர் அருகில் சென்று அமர்ந்தேன். பர்மா பிரம்புப்பாயும், அதன் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டு
ஜமுக்காளமும் அமர்வதற்கு இதமாக இருந்தது.

வீட்டு விஷயங்களைப் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு கருப்பஞ் செட்டியாரின் விஷயத்திற்குத் தாவினேன்.

‘அவருக்கு என்ன ஆயிற்று?' என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

என் தந்தையார் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார்கள்.

மதுரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் போகும்முன்பு சீதை ஆச்சி அவர்கள் தன் கணவரிடம் பத்து நிமிடங்கள் வருத்தம் கலந்த
கோபத்தோடு பேசினார்களாம். தன் பேச்சால் கருப்பஞ் செட்டியாரை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் போட்டு விட்டார்களாம். அதுதான் ஆச்சி
கடைசியாகப் பேசிய பேச்சாம். செட்டியார் ஆடிப்போய் விட்டாராம். அதோடு சிகிச்சை பலனளிக்காமல் ஆச்சி இறந்தும்போய் விட்டதால் அதிர்ந்தும் போய் விட்டாராம்.

ஆச்சி பேசிய பேச்சை ஆச்சி பேசிய தொனியோடு என் தந்தையார் பின் வருமாறு சொன்னார்கள்.

“காசு காசென்று காசைக் கட்டிகொண்டு அழுகிறீர்களே- அந்தப் பெரிய டாக்டர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால்
குணப்படுத்தியிருக்கலாம் என்றாரா இல்லையா? சாவிற்கு நான் ஒன்றும் பயப்படவில்லை. விதி முடிந்தால் போய்ச்சேர வேண்டியதுதான். ஒன்றை
மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்-மனிதன் செத்துப்போனால்- பட்டினத்தார் சொன்ன மாதிரி காது ஒடிந்த ஊசி கூடக் கூட வராது. எல்லாம் இருக்கும்
வரைதான். உடன் வருவது அவனவன் செய்த பாவ, புண்ணியம் மட்டும்தான். மனிதனாகப் பிறந்தவனுக்குத் தர்ம சிந்தனை வேண்டும். அது உங்களிடம்
துளி அளவுகூட இல்லை. ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரணையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. கீரையும் சோறும்தான் என்றாலும் சொந்த வீட்டில் சாப்பிட்டீர்கள். ஆனால் இந்தப் பிறவியில் நகரத்தார்களுக்கே உரிய தர்ம சிந்தனையோடு எந்தக்காரியமும் நீங்கள் செய்யவில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே கிடைக்காது. வாங்கித்தான் குடிக்கவேண்டும்!”

இந்த ‘வாங்கித்தான் குடிக்கவேண்டும்' என்ற சொற்கள்தான் செட்டியாரின் மனதை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறதாம். திரும்பத் திரும்ப
எதிரொலித்துக் கொண்டிருக்கிறதாம். மன மாற்றத்திற்கும் அதுதான் காரணமாம்.

‘வாங்கிக்குடித்தல்' என்னும் சொல் செட்டிநாட்டிற்கே- செட்டிநாட்டிற்கு மட்டுமே தெரிந்த சொல். பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது அதன்
பொருள்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர் சொல்லும் சத்தியமான வார்த்தைகளுக்கு என்ன வலிமை உண்டு என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. கண்களில் நீர் மல்கி விட்டது!
                                                $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. Respected Sir
    Great Story... with your story we are learning Chettinad customs and words too.

    Thanks a lot.

    ReplyDelete
  2. மீள்வாசிப்புக்கும் கதை நன்றாகவே இருக்கிறது. நல்ல வேளையாக இக்கதையின் நாயகர் ஊர் பொது நிதிக்கு நன்கொடை அளித்தார். எனக்குத் தெரிந்த ஒருவர் 'தானமே செய்யவில்லை'என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலாக நாத்திகத் தலைவர் சிலை அமைக்கும் குழுவுக்கு ஒன்றரை லட்சம் நிதி அளித்தார்.இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  3. Respected Sir,

    Your way of writing always simple, easy to read, remember always.

    Helping others is one of the great character of human beings. this story emphasis about dhana...

    Have a nice day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. சுரீர்ன்னு சவுக்கால அடிச்சது போல இருந்தது ஐய்யா கதை.. நன்றி.

    ReplyDelete
  5. Good afternoon sir,

    Nice story, I need somany stories like this sir.

    ReplyDelete
  6. உண்மை எது என்று உணரும்வரை தவறுகள் திருத்தப்பட மாட்டாது.
    உண்மை உணருதல் ஒருநொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடும் . அது எப்படி வேண்டுமானாலும் நிகழும். அணைத்து தவறுகளும் ஒரு நாள் உணர்த்தப்படும் இதுவே நியதி. அதற்க்கு இந்த காவியம் ஒரு எடுத்துக்காட்டே

    ReplyDelete
  7. அன்புடன் வணக்கம்
    காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே..!!!

    ReplyDelete
  8. Very very super dharmam thalaikakum

    ReplyDelete
  9. மரணத்திலும் ஜனனம் உண்டு. மரணம் கற்றுத் தருகிறத பாடங்கள் ஏராளம். மரணம் இல்லையென்றால் மனிதன் மனிதனாக இருந்திருக்க மாட்டான்.

    ReplyDelete
  10. ////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Great Story... with your story we are learning Chettinad customs and words too.
    Thanks a lot.////

    வட்டார வழக்கில் எழுதும்போது ஒரு சுவைகூடும். அதனால்தான் என்னுடைய சிறுகதைகள் எல்லாம் எங்கள் வட்டகையில் பிரபலமாகின.
    எனது கதைகள் தொகுக்கப்பெற்று (மொத்தம் 75 சிறுகதைகள் நான்கு Volumeகள்) புத்தகங்களாக உள்ளன. வேண்டுமென்றால் நீங்கள் அவற்றை வாங்கிப் படிக்கலாம்!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    மீள்வாசிப்புக்கும் கதை நன்றாகவே இருக்கிறது. நல்ல வேளையாக இக்கதையின் நாயகர் ஊர் பொது நிதிக்கு நன்கொடை அளித்தார். எனக்குத் தெரிந்த ஒருவர் 'தானமே செய்யவில்லை'என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலாக நாத்திகத் தலைவர் சிலை அமைக்கும் குழுவுக்கு ஒன்றரை லட்சம் நிதி அளித்தார்.இது எப்படி இருக்கு?////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Your way of writing always simple, easy to read, remember always.
    Helping others is one of the great character of human beings. this story emphasis about dhana...
    Have a nice day.
    With kind regards,
    Ravichandran M./////

    உங்களின் பாராட்டிற்கும், பின்னூட்டத்தில் அதைத் தெரிவித்த மேன்மைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ///Blogger sivaradjane said...
    சுரீர்ன்னு சவுக்கால அடிச்சது போல இருந்தது ஐய்யா கதை.. நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger sundari said...
    Good afternoon sir,
    Nice story, I need somany stories like this sir.////

    எனது கதைகள் தொகுக்கப்பெற்று (மொத்தம் 75 சிறுகதைகள் நான்கு Volumeகள்) புத்தகங்களாக உள்ளன. வேண்டுமென்றால் நீங்கள் அவற்றை வாங்கிப் படிக்கலாம்!

    ReplyDelete
  15. ////Blogger SIVA said...
    உண்மை எது என்று உணரும்வரை தவறுகள் திருத்தப்பட மாட்டாது.
    உண்மை உணருதல் ஒருநொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடும் . அது எப்படி வேண்டுமானாலும் நிகழும். அணைத்து தவறுகளும் ஒரு நாள் உணர்த்தப்படும் இதுவே நியதி. அதற்க்கு இந்த காவியம் ஒரு எடுத்துக்காட்டே////

    உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. ////Blogger hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே..!!!/////

    அந்த நிலைமையை மனிதன் எப்போது உணர்கிறான் என்பதுதான் முக்கியம். நன்றி கணபதி சார்!

    ReplyDelete
  17. ////Blogger ramakrishnan jayalakshmi said...
    Very very super dharmam thalaikakum/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ////Blogger விசயக்குமார் said...
    மரணத்திலும் ஜனனம் உண்டு. மரணம் கற்றுத் தருகின்ற பாடங்கள் ஏராளம். மரணம் இல்லையென்றால் மனிதன் மனிதனாக இருந்திருக்க மாட்டான்./////

    உண்மைதான்.உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா !


    இது அவவர்களின் ஆசை! அனுபவம் முக்கியமாக அவர்கள் இருக்கும் சூழல்தான் காரணம்.

    நாம் தான் எல்லாத்தையும் மிகவும் டேக் இட் ஈஸி ஆக எடுத்து கொள்ள வேண்டும் இல்லையா ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com