மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.2.14

Short Story - சிறுகதை: இரண்டுமுகமும் ஆறுமுகமும்!

 

Short Story - சிறுகதை: இரண்டுமுகமும் ஆறுமுகமும்!

சிக்கலான காதல் கதை. சிக்கலில் முடிந்த காதல் கதை. கடைசிவரிவரை படியுங்கள். முடிவு எப்படியென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்
-------------------------------------------------------------------
அடியேன் எழுதி ஒரு மாத இதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற எனது 49 வது சிறுகதை. வகுப்பறை வாசகர்களும் படித்து மகிழ
அதை இங்கே இன்று பதிவிடுகிறேன்
-------------------------------------------------------------------
முத்துராமன் செட்டியார் கலங்கிப்போயிருந்தார். அவரென்றில்லை,அவர் நிலைமையில் எந்தப்பெற்றோர்களாக இருந்தாலும் அப்படித்தான்
இருப்பார்கள். பிரச்சினை அப்படிப்பட்டது.

சமூகத்தில் அது ஒன்றும் புதிதில்லை. காலம் காலமாக நடப்பதுதான். என்ன, இப்போது பரவலாக நடக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும்
தன் வீட்டில் அது நடக்கும்போது, யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும். சுருங்கச்சொன்னால் அவர் நொறுங்கிப் போயிருந்தார்.

முடிந்தவரை சமாதானப் படுத்திப் பார்த்தேன். ஒரு நிலையில் மனிதர் குலுங்கிக் குலுங்கி அழுக ஆரம்பித்தவுடன் எனக்கும் திகைப்பாகி விட்டது.

என்ன பிரச்சினை?

வேறொன்றுமில்லை, அவருடைய மகள் சாலா, தன்னுடன் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனைத் தான் விரும்புவதாகவும், மணந்தால் அவனைத்தான் மணப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாளாம்.

சரி, தொலைந்து போ, ஆசை, ஆசையாக வளர்த்த எங்களை அசிங்கப்படுத்தாதே - என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாளாம். நீங்கள் முன்னின்று நடத்திவையுங்கள்.இல்லை யென்றால் எனக்குத் திருமணமே வேண்டாம். வேலையை உதறிவிட்டு வந்து வீட்டோடு இருக்கிறேன் என்கிறாளாம்.

சாலா திரைப்பட நாயகிகள் போல அழகாக இருப்பாள். செடியில் இருந்து பறித்த ரோஜாவைப்போல வசீகரமாக இருப்பாள். முத்துராமண்ணன்
அவளைப் போற்றிப் போற்றி வளர்த்தது எனக்குத் தெரியும்.

அவள் விரும்பினாள் என்பதற்காக அவள் விரும்பிய கல்லூரியிலேயே பொறியியல் படிக்க வைத்தார். கட் ஆஃப் மார்க்கில் இரண்டு குறைவு,
இடம் இல்லை என்று சொன்னபோது, கவலைப் படாமல் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, பெரும் பணச்செலவில் படிக்க வைத்தார். படித்து முடிக்க முடிக்க கல்லூரி வளாக நேர்காணலில் அவளுக்கு மிகப் பெரிய கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கை நிறைக்கும் சம்பளத்துடன் வேலைக்கான உத்தரவு கிடைத்தபோது - அதுவும் அவள் முதல் தேர்வாகத் தெரிவு செய்யப்பெற்ற போது அவரைப் போல மகிழ்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

எல்லாவற்றிற்கும் சேர்த்துக் காலதேவன் இப்போது அவரைப் புரட்டிக் கொண்டிருக்கிறான்.

"உன்னைப் படிக்க வைத்ததோடு நிறுத்தியிருக்கவேண்டும். வேலைக் கனுப்பியது என் தவறு. அந்த ஒரு தவறோடு போகட்டும். இரண்டாவது தவறை நான் செய்ய மாட்டேன். நீ யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள். நான் வந்து நின்று நடத்திவைக்க மாட்டேன். என்னை இழுக்காதே. விட்டுவிடு" என்று அண்ணன் வெட்டிப் பேசினாலும் விட மாட்டேன் என்கிறாளாம்.

நீ வந்து பேசி அவள் மனதை மாற்று என்று சொல்லி அவர் என்னை அழைத்தபோது, நான் சொன்னேன்,"அண்ணே, யார் மனதையும் யாரும் மாற்ற முடியாது. அவர்களாக உணர்ந்து மாறினால்தான் உண்டு. நீங்கள் சொல்வதற்காக வருகிறேன். பேசிப் பார்க்கிறேன்" என்று சொல்லி அவரோடு புறப்பட்டேன்.
-----------------------------------------------------------------
மதுரை கே.கே நகரில், இந்து நாளிதழ் அலவலகத்திற்கு எதிரே உள்ள தெருவில் முத்துராமண்ணனின் வீடு. நாங்கள் இருவரும்போய்ச் சேர்ந்தபோது காலை மணி பதினொன்று இருக்கும். அண்ணனின் மனைவி லெட்சுமி ஆச்சியும், சின்ன மகளும் வந்து வாருங்கள் என்று சொன்னதோடு. உள்ளே போய்விட்டார்கள்.

கைத்தொலைபேசியில் தகவல் சொல்லியிருந்ததால், சாலாவும் என்னுடன் பேசுவதற்கு உரிய மனநிலையோடு தயாராக இருந்தாள். பரஸ்பரம் விசாரிப்புக்களுக்குப் பிறகு நான் பேசத்துவங்கியதும், அண்ணன் எழுந்து வீட்டின் மேல் தளத்தில் உள்ள தன்னுடைய அறைக்குப் போய்விட்டார்.

சின்ன வயதில் இருந்தே அவளுக்கு என்னைத் தெரியும் என்பதால், சாலாவும் தயக்கமின்றிப் பேசத்துவங்கினாள்.

"நம் சமூகம் மட்டும் ஏன் மாமா இன்னும் மாறாமல் இருக்கிறது?"

"எந்த சமூகத்தைச் சொல்கிறாய்?"

"நகரத்தார்களைத்தான் சொல்கிறேன்!"

"நகரத்தார்கள் என்று இல்லை சாலா, ஒவ்வொரு சமூகமும் அதனதன் பாரம்பரியத்தோடு இருப்பதால்தான், தனித்தனித் தன்மைகளோடு ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் சிறப்பாக இருக்கிறது. யாரையும் உயர்த்திச் சொல்லவும் முடியாது. யாரையும் தாழ்த்திச் சொல்லவும் முடியாது."

"சரி, மாமா கேள்வியை மாற்றிக் கேட்கிறேன். காதலிப்பது தவறா?"

"காதலிப்பதில் தவறில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் காதலிக்க வேண்டும். கணவன் மனனவியையும், மனைவி கணவனையும் காதலிக்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நான் ஆசானாக மதிக்கும் கவியரசர் கண்ணதாசன் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் பெண்ணே! காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள். கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார். நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய அவருக்குத் தெரியாத காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

"சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் மாமா"

"ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஒரு முகம்தான் பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும். அதுபோல அவனுடைய குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண் நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக இருக்கும்."

''நீங்கள் சொல்லும் இந்தப் பிரச்சினை பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணங்களில் இல்லையா?"

"இருக்காது என்பதை வலியுறுத்தித்தான் கவியரசர் இப்படிச் சொன்னார் பெண்ணே:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

மற்றது என்று சொன்னதன் அர்த்தம் புரிகிறதா பெண்ணே! சரி, இப்போது சொல் அந்த இளைஞனோடு உனக்கு எத்தனை நாட்களாகப் பழக்கம்?"

"தனிப்பட்ட பழக்கம் எல்லாம் இல்லை மாமா, அலுவலகக் கேன்ட்டீனில் சந்தித்துப் பேசுவதோடு சரி. அதுவும் கடந்த இரண்டு மாதங்களாகத்தான். அவர் எங்கள் நிறுவனத்தின் மும்பைக் கிளையில் இருந்து மாற்றலாகி மூன்று மாதங்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். வந்த சில நாட்களிலேயே அவரிடம் எனக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அவருடைய தோற்றம், உயரம், சரளமான பேச்சு ஆகியவற்றைப் பார்த்தால் யாருக்குமே அவரைப் பிடித்துவிடும்."

"தோற்றத்தையும், பேச்சையும் வைத்து யாரையும் எடை போடக்கூடாது சாலா! பெருந்தன்மையான குணம்தான் முக்கியம்"

"தீய பழக்கங்கள் எதுவும் இல்லாதவர் மாமா. சிகரெட் பழக்கம்கூட இல்லை?"

"சிகரெட் குடிப்பது போன்ற பழக்கங்கள் இல்லையென்பதால் மட்டுமே ஒருவர் எப்படியம்மா நல்ல குணமுடையவர் என்றாகிவிடும். சொல்!"

"நெருங்கிப் பழகினால்தானே குணத்தைத் தெரிந்து கொள்ளமுடியும். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. என் உண்மையான குணம் தெரியாமல் அவர் என்னை மணக்க விரும்பும்போது. நானும் யதார்த்தமாக இருக்க விரும்புகிறேன். அவர்தான் என்னிடம், 'நான் உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன். உனக்கும் விருப்பம் இருந்தால் சொல். அதோடு உன் பெற்றோர்களிடமும் கேட்டு விடு. அவர்கள் சம்மதத்தோடுதான் நாம் மணந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். அதிலிருந்து அவருடைய நல்ல குணம் தெரியவில்லையா மாமா?"

"அவன் அவர்களுடைய வீட்டில் கேட்டு விட்டானா?"

"இல்லை! நீ கேட்டுச் சொல். எங்கள் வீட்டில் சொடுக்குப்போடும் நேரத்தில் நான் அனுமதி பெற்று விடுவேன் என்றார். அவருடைய அண்ணனுக்கும் கலப்புத் திருமணம்தான் நடந்துள்ளதாம்!"

"ஆகா, வாழ்க அவர்கள் குடும்பம். இப்போது அதெல்லாம் முக்கியமில்லை. அவனுடைய உண்மையான குணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வழி இருக்கிறது!"

அவள் சற்று ஆர்வமாகக் கேட்டாள்,"என்ன வழி என்று சொல்லுங்கள் மாமா, செய்து பார்த்துவிடுவோம்!"

"அவனை ஒரு சோதனைக்கு உள்ளாக்குவோம். அவனிடம் மூன்று கேள்விகளைக் கேள். அதற்கு அவன் சொல்லும் பதிலில் அவனுடைய உண்மையான குணம் தெரிந்து விடும். என் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அவர்களை உதறிவிட்டு வந்துதான் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் - சம்மதமா? திருமணத்திற்குப் பிறகு நான் வேலைக்குச் செல்லமாட்டேன். வீட்டோடு ஹோம் மேக்கராகத்தான் இருப்பேன் - சம்மதமா? இதுவரை சம்பாதித்ததை எல்லாம் என் பெற்றோர்களிடம் கொடுத்து விட்டேன். என்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய செலவுகளுக்கு அது ஈடாகட்டும். அவர்களை உதறிவிட்டு வருவதால் ஒரு பைசாக்கூட அவர்களிடம் கேட்டு வாங்கி வரமாட்டேன். போட்டிருக்கின்ற சுடிதாரோடு மட்டும்தான் வருவேன் - ஆக இந்த மூன்று நிலைப்பாடு களையும் வைத்து என்னை மணந்து கொள்ளச் சம்மதமா? என்று கேள்"

"அதிசயமாக இருக்கிறதே! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வைத்து அவருடைய குணம் எப்படி மாமா தெரியும்?"

"தெரியும்! கேட்டு விட்டுச் சொல்!"

"மூன்றிற்குமே சம்மதம் என்று சொல்லி விட்டால்......?"

"மனிதனுடைய குணங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் இந்த நிபந்தனைகளில் நிச்சயம் ஒன்றிற்காவது ஒப்புக் கொள்ள மாட்டான்."

"ஏன்?"

"அழகு நிலையில்லாதது. சில வருடங்களில் அது மாறக்கூடியது. அவன் உன்னுடைய அழகு ஒன்றை வைத்து மட்டும் விரும்பியிருக்க சான்சே இல்லை! உன்னுடைய அறிவு, படிப்பு, வேலை, சம்பளம் போன்றவற்றிற்கும் சேர்த்துத்தான் உன்னை விரும்பியிருப்பான். அவனுடைய பதிலில் அது தெரிந்து விடும். அதுதான் உண்மையென்றால் அவனுடைய காதல் உண்மையான காதல் இல்லை!"

"உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது மாமா! இப்போதே போனில் கேட்டுச் சொல்லி விடவா?"

"போனில் வேண்டாம். நேரில் அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது இந்தக் கேள்விகளை வைத்து அவனோடு உரையாடிப்பார். உண்மை தெரிந்து விடும்!"

"ஒரு வேளை இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் அவர் ஒப்புக்கொண்டால்...."

"ஒப்புக்கொண்டால் அவன் உத்தமன். அதில் சந்தேகமில்லை. கவலைப் படாதே! நானே வந்து முன் நின்று உன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சாட்சிக் கையெழுத்துப் போடுகிறேன்."

"நன்றாகச் சொன்னீர்கள் மாமா! நன்றி. நான் இன்றிரவே சென்னைக்குப் போய் நீங்கள் சொல்லியபடி பேசிப் பார்த்துவிட்டு வருகிறேன்."

நான் எழுந்து விட்டேன். ஆனால் கடைசியாக கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் எழுந்தேன்.

"சோதனையில் அவன் சறுக்கி விட்டால் என்ன செய்வாய்?"

"சறுக்கி விட்டால் வேறு பேச்சே இல்லை! அவரை விட்டு விடுகிறேன். எனக்கு இப்போது எங்கள் வீட்டில் வற்புறுத்தி சொல்லிக் கொண்டிருக்கும் வரனிற்கு கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை நீட்டுகிறேன்."

அதற்குப் பிறகு அவளுடைய பெற்றோர்களுடன் இருபது நிமிடங்கள் பேசிவிட்டு நான் கிளம்பினேன்.
--------------------------------------------------------------------------------

நான் சாலாவிடம் பேசிவிட்டு வந்த நான்காவது நாள். காலை எட்டு மணி இருக்கும். முத்துராமண்ணனும், அவரது மனைவியும் என் வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார்கள்

ஆச்சியின் கையில் கட்டை போட்டுத் தூக்கும் பெரிய பை இருந்தது. அது நிறையப் பழங்கள்.

"வாருங்கள், வாருங்கள்" என்று சொல்லி அவர்களை வரவேற்றுக் கொண்டிருக்கும் பொதே நான் சற்றும் எதிர்பார்க்காத செயலை அண்ணன் செய்து விட்டார்.

சாஷ்டாங்கமாக என் காலில் விழுந்து கும்பிட்டு விட்டார். நான் பதறிவிட்டேன்.

"அண்ணே என்ன காரியம் செய்து விட்டீர்கள்? நான் உங்களைவிடப் பத்து வயது சிறியவன் என் காலில் நீங்கள் விழுந்து வணங்கலாமா? எந்த விதத்தில் நியாயம் இது?"

"என் குடும்ப கெளரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றியவன் நீ. உன் காலில் விழுந்து வணங்குவதில் தவறில்லை முருகப்பா!"

"என்ன சொல்கிறீர்கள் அண்ணே? உங்கள் மகள் சென்னையில் இருந்து திரும்பி வந்து விட்டாளா? மனம் மாறிவிட்டாளா?"

"ஆமாம் முருகப்பா! நீ சொல்லிக் கொடுத்த டெஸ்ட்டில் அவன் ஃபெயிலாகி விட்டான். சாலா அவனை மட்டுமல்ல தன் வேலையையும் உதறி விட்டு விட்டு பத்திரமாக வந்து விட்டாளப்பா!"

"கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது, அண்ணே!"

"அதை விடச் சந்தோஷம் ஒன்று இருக்கிறது.என் மூத்த சகோதரி, தன் மகனுக்கு இவளைக் கட்டிக் கொடுக்கும்படி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். முன்பு, வரட்டும், வரட்டும் என்று தாக்காட்டிக் கொண்டிருந்த சாலா, இப்போது அத்தை மகனையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்."

"எல்லாம் பழநியில் இருக்கும் அந்த ஆண்டியின் கருணை. பழத்தை நழுவிப் பாலில் விழுக வைத்து விட்டான். பேசி முடித்து சீக்கிரம் தேதியை வையுங்கள்"

"வருகின்ற திங்கட்கிழமை நிச்சயதார்த்தம். அதைச் சொல்லி விட்டுப்போகத்தான் நாங்கள் வந்தோம். முதல் அழைப்பு உனக்குத்தான்"

"ஆகா, சாலாவைப் பார்த்து முதல் ஆளாக நான் வாழ்த்த வேண்டும்"

"நிச்சயம் அந்த உரிமை உனக்குத்தான். எப்போது வேண்டு மென்றாலும் வா" என்றார்.

பிறகு நடந்தவற்றைச் சொன்னார். அந்த இளைஞன் மூன்றில் இரண்டு நிபந்தனைகளுக்கு முடியாது என்று சொல்லி விட்டானாம். என் பெற்றோர்கள் மறுக்கமாட்டார்கள். அவர்களை ஏன் விடவேண்டும் என்கிறானாம். இரண்டாவது நிபந்தனைக்கு, நீ வீட்டில் இருந்து என்ன செய்யப்போகிறாய்? வேலையை எதற்காக விட வேண்டும் என்கிறானாம். ஆகவே இப்போழுதே இப்படித் தர்க்கம் செய்கிறவன் வாழ்க்கையில் எப்படி நமக்கு அனுசரனை யாக இருப்பான் என்று நினைத்து, அவனுடைய நட்பை முறித்துக் கொண்டு இவள் திரும்பி விட்டாளாம்.அதோடு தன்னுடைய வேலைக்கும் ஒரு கும்பிடைப் போட்டு விட்டு வந்து விட்டாளாம். பின்னால் தேவைப்பட்டால் வேறு இடத்தில் சேர்வது ஒன்றும் சிரமமில்லை என்றும் கூறிவிட்டாளாம்.

சின்னப் பெண்ணாக இருந்தாலும் அருமையாகச் செய்துவிட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.
-----------------------------------------------------------------
முத்துராமண்ணன் நான் விசாரித்ததைச் சொன்னவுடன் அன்று மாலையே சாலா என்னைப் பார்க்க வந்துவிட்டாள். வந்ததும் வராததுமாக அவளும் என் காலைத் தொட்டு வணங்கினாள்.

நான் புன்னகையுடன் சொன்னேன்,"என் காலைத் தொட்டு வணங்கும் அளவிற்கு நான் என்ன உனக்குப் பெரிதாகச் செய்து விட்டேன் சாலா?"

"என் கண்ணைத் திறந்துவிட்டவர் நீங்கள்தான். நீங்கள் சொல்லிக் கொடுத்த அந்த சோதனை ஓட்டத்தினால்தான் நடக்க இருந்த ஒரு விபத்தில் இருந்து நான் தப்பித்தேன்."

"தவறு! சோதனையில் அவன் ஃபெயிலானதினால் நீ தப்பித்தாய் என்று சொல்ல வேண்டும்"

அப்போதுதான், அவள் மெல்லிய குரலில் சற்றுப் புன்னகையுடன் சொன்னாள்:

"இல்லை மாமா சோதனைக் கேள்விகள் மூன்றுக்குமே சரியான பதிலைக் கொடுத்து அவர் பாஸாகியிருந்தார்!"

எனக்குத் திக்'கென்று இருந்தது!

"என்ன சொல்கிறாய் சாலா, உன் தந்தையார் இப்படிச் சொல்லவில்லையே!"

"நடந்தது முழுவதும் என் தந்தையாருக்குத் தெரியாது. அவருடைய மகிழ்ச்சியை ஏன் குறைக்க வேண்டுமென்று நானும் சொல்லவில்லை!"

"என்னதான் நடந்தது? சஸ்பென்ஸை வளர்க்காமல் சுருக்கமாக அதைச் சொல்!"

"நான் நிபந்தனைகளை சொன்ன மறு நிமிடமே அவர் அனைத்திற்கும் சரி என்று சொல்லிவிட்டார். பிறகு அரை மணி நேரம் விலாவரியாகப் பேசிய போது, வாய்தவறி வார்த்தை களைக்கொட்டிவிட்டார். அவற்றை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டேன்."

"எதைக் கொட்டினான் அப்படி?"

"திருமணத்திற்குப் பிறகு உன்னை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று நானே என் மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்பொது நீயே, நான் போக மாட்டேன் என்று சொல்வது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா என்றார்! ஏன் அப்படியொரு முடிவு என்று கேட்டபோது, ஆண்கள் சற்று மோசமானவர்கள் - அழகான பெண் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் ஜொள் விடுவார்கள். பக்கத்தில் நின்று கடலை போடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு நீ எனக்கு மட்டுமே ரசனைக்கு உரியவளாக இருக்க வேண்டும் என்றுதான் அப்படி முடிவு செய்து வைத்திருக்கிறேன் என்றார். எனக்கு மனதில் ஒரு பொறி தட்டியது. இப்படிப் பட்டவர், நாளை அக்கம் பக்கத்தில் கூட பேசாதே என்பார். சந்தேகப் பேர்வழியாக மாறி பின்னால் என்னென்ன சைக்கோ வேலைகளைச் செய்வாரோ தெரியாது. இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்
என்று பட்டென்று முடிவு செய்து, சட்டென்று அதை போட்டு உடைத்து விட்டேன்"

"வெல்டன்டா, ராஜாத்தி" என்று அவளை மனதாரப் பாராட்டினேன்.

"மாமா நீங்கள் சொல்வது போல மனிதர்களுக்கு இரண்டு முகங்கள் என்பது உண்மை! உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் அதைக் கண்டு பிடித்து விடுவீர்கள். என்னைப் போன்ற இளவட்டங்கள் என்ன செய்வது? சொல்லுங்கள்"

"அதற்கும் ஒரு வழியிருக்கிறது சாலா!"

"எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிறீர்களே. ரியலி யு ஆர் கிரேட்!. என்ன வழி சொல்லுங்கள்!"

ஆறுமுகத்தானை அனுதினமும் வணங்கினால், இரண்டு முகத்தானின் முகங்களை அவன் காட்டிவிடுவான் சாலா!
===========================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

  1. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    அறுமுகத்தானை வணங்கினால் இருமுகம் என்ன !!!இருக்கும் முகத்தை??? எல்லாம் காட்டி நம்மை காத்து விடுவான் ....அருமையான நீதி கதை ..நன்றி
    s.n.ganapathi.

    ReplyDelete
  2. அருமையான கதை ஐயா. இந்தக் கால கட்டத்தில் இது போன்ற கதைகள் மிகவும் தேவை. காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு, மணமுறிவுடன், பெற்றவர்களுக்குத் தீராத அவமானத்தையும் இக்காலப் பெண்கள் தருகிறார்கள்! 'இரு முகங்கள்'. எத்தனை அழகாகச் சொல்லி விட்டீர்?

    ReplyDelete
  3. அருமையான கதை.
    இப்பொழுது இருக்கும் கால நாகரீகத்திருக்கு தேவையான உபதேசம்

    ReplyDelete
  4. //////////////"திருமணத்திற்குப் பிறகு உன்னை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று நானே என் மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்பொது நீயே, நான் போக மாட்டேன் என்று சொல்வது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா என்றார்! ஏன் அப்படியொரு முடிவு என்று கேட்டபோது, ஆண்கள் சற்று மோசமானவர்கள் - அழகான பெண் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் ஜொள் விடுவார்கள். பக்கத்தில் நின்று கடலை போடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு நீ எனக்கு மட்டுமே ரசனைக்கு உரியவளாக இருக்க வேண்டும் என்றுதான் அப்படி முடிவு செய்து வைத்திருக்கிறேன் என்றார். எனக்கு மனதில் ஒரு பொறி தட்டியது. இப்படிப் பட்டவர், நாளை அக்கம் பக்கத்தில் கூட பேசாதே என்பார். சந்தேகப் பேர்வழியாக மாறி பின்னால் என்னென்ன சைக்கோ வேலைகளைச் செய்வாரோ தெரியாது. இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்
    என்று பட்டென்று முடிவு செய்து, சட்டென்று அதை போட்டு உடைத்து விட்டேன்"/////////////////////////

    த்ரில்லிங் கதையில் மட்டுமல்ல... இது போன்ற குடும்பக்கதைகளிலும் திடுக்கிடும் திருப்பங்கள் வைத்து எழுதலாம் என்று நிரூபித்த கதை.

    கதையின் முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை.

    -திருவாரூர் சரவணன்

    ReplyDelete
  5. அய்யா
    கதை அருமை நான் ரசித்து படித்தேன். இந்த காலத்து யுவதிகளும்,இளைஞர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய கதை.

    ReplyDelete
  6. கருத்துடன் கூடிய அருமையான கதை ஐயா .

    என் உண்மையான குணம் தெரியாமல் அவர் என்னை மணக்க விரும்பும்போது. நானும் யதார்த்தமாக இருக்க விரும்புகிறேன்.

    என்று முட்டாள் தனமாக முடிவு எடுத்த பெண்ணை சிந்திக்க வைத்து சரியான முடிவு எடுக்க வைத்த விதம் அருமை ஐயா

    நன்றி
    ரமேஷ்

    ReplyDelete
  7. ஐயா, அருமையான கதை

    ReplyDelete
  8. மிகவும் நல்ல கருத்துல்ல கதை...நன்றீ

    ReplyDelete
  9. Respected Sir
    Loved the story. I wish all parents will have the same happiness.
    I am not a fan of Love before Marriage.
    I used to hate it as all I seen is the suffering of the couple when I was in India. Now I seen more than 5 love marriage couples who are live good live for more than 10 years, I changed my mind. I am still not a fan, but I am ok with them. Also astrology wise, if they have to go through it and it is their vidhi who can stop it?
    I do change kandar shati kavasam everyday. Hope he gives the wisdom to me as well.

    ReplyDelete
  10. பெற்றோர் பார்த்து அமைவது
    பெருமைக்குரியதாக இருக்கிறதா?

    கண்ணதாசன் சொன்னவைகள் அவர்
    காலத்துக்கு பொருந்தலாம் ஆனால்...

    பெற்றோரின் அணுகுமுறையும் தவறு
    பெண்ணின் அனுகுமுறையும் சரியல்ல

    கதை என்பதினால்
    கருத்தேதும் சொல்லவில்லை

    இது கதை தானே; உண்மையில்
    இப்போது நடந்த சம்பவமில்லையே

    ReplyDelete
  11. அறிவுரைகள் சொல்லப்படும் முறைகளிலேயே பல நேரம் தோற்றுவிடுகிறது. இடமறிந்து காலமறிந்து பேசுவது அறிவுரைகளுக்கும் பொருந்தும்.
    அருமையான விழிப்புணர்வுக் கதை

    ReplyDelete
  12. நல்ல கதை. எழுத்து நடை ரசிக்கும் தன்மையுடன் மிகவும் நன்றாக இருந்தது.

    முதலில் அந்த பெண் சாலா மாமா சொன்னதை நம்பினாள்.மாமா மேல் நம்பிக்கைவைத்தாள். தன‌க்கு மாமா ஒரு வழிகாட்டி என்பதை தன் மனதில் நிலை நிறுத்தினாள். மாமா சொன்ன மூன்று கேள்விகள் தான் அவளுக்கு இறைவன் கொடுத்த வரமாக கருதினாள். அவளுக்கு தைரியம் வந்தது.அதை வைத்துக்கொண்டு தன் அறிவினால் தன் காதலனை ச‌ரியாக சோதிக்க தயாராகி அதில் வெற்றியும் அடைந்தாள்.

    சிறு கதை. பல விஷயங்கள் பிடித்திருந்தது.
    நிச்சயமாக எல்லோரும் பாராட்டுவார்கள்.

    நிறைய கதைகளை படிக்கும் என் மனைவி இந்த கதையை படித்து விட்டு மிகவும் பாராட்டினார்கள்.அவர்களுடய கருத்தை தான் மேலே எழுதியுள்ளேன்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  13. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    அறுமுகத்தானை வணங்கினால் இருமுகம் என்ன !!!இருக்கும் முகத்தை??? எல்லாம் காட்டி நம்மை காத்து விடுவான் ....அருமையான நீதி கதை ..நன்றி
    s.n.ganapathi.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதி சார்!

    ReplyDelete
  14. Blogger Bala M said...
    Miha Arumai!

    நல்லது. நன்றி பாலா!

    ReplyDelete
  15. ////Blogger Kamala said...
    அருமையான கதை ஐயா. இந்தக் கால கட்டத்தில் இது போன்ற கதைகள் மிகவும் தேவை. காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு, மணமுறிவுடன், பெற்றவர்களுக்குத் தீராத அவமானத்தையும் இக்காலப் பெண்கள் தருகிறார்கள்! 'இரு முகங்கள்'. எத்தனை அழகாகச் சொல்லி விட்டீர்?///

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
    எழுதுபவர்களுக்கு பாராட்டுக்கள் ஊக்க மருந்தாகும் (Tonic)

    ReplyDelete
  16. ////Blogger Kodai said...
    அருமையான கதை.
    இப்பொழுது இருக்கும் கால நாகரீகத்திருக்கு தேவையான உபதேசம்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger சரண் said...
    //////////////"திருமணத்திற்குப் பிறகு உன்னை வேலைக்கு அனுப்பக் கூடாது என்று நானே என் மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இப்பொது நீயே, நான் போக மாட்டேன் என்று சொல்வது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா என்றார்! ஏன் அப்படியொரு முடிவு என்று கேட்டபோது, ஆண்கள் சற்று மோசமானவர்கள் - அழகான பெண் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் ஜொள் விடுவார்கள். பக்கத்தில் நின்று கடலை போடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு நீ எனக்கு மட்டுமே ரசனைக்கு உரியவளாக இருக்க வேண்டும் என்றுதான் அப்படி முடிவு செய்து வைத்திருக்கிறேன் என்றார். எனக்கு மனதில் ஒரு பொறி தட்டியது. இப்படிப் பட்டவர், நாளை அக்கம் பக்கத்தில் கூட பேசாதே என்பார். சந்தேகப் பேர்வழியாக மாறி பின்னால் என்னென்ன சைக்கோ வேலைகளைச் செய்வாரோ தெரியாது. இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்
    என்று பட்டென்று முடிவு செய்து, சட்டென்று அதை போட்டு உடைத்து விட்டேன்"/////////////////////////
    த்ரில்லிங் கதையில் மட்டுமல்ல... இது போன்ற குடும்பக்கதைகளிலும் திடுக்கிடும் திருப்பங்கள் வைத்து எழுதலாம் என்று நிரூபித்த கதை.
    கதையின் முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை.
    -திருவாரூர் சரவணன்/////

    உங்களுடைய மனம் உவந்த விமர்சனத்திற்கு நன்றி சரவணன்!

    ReplyDelete
  18. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    கதை அருமை நான் ரசித்து படித்தேன். இந்த காலத்து யுவதிகளும்,இளைஞர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய கதை./////

    படிக்க வேண்டியது மட்டுமல்ல. படித்து உணர வேண்டிய கதை! நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger M.R said...
    கருத்துடன் கூடிய அருமையான கதை ஐயா .
    என் உண்மையான குணம் தெரியாமல் அவர் என்னை மணக்க விரும்பும்போது. நானும் யதார்த்தமாக இருக்க விரும்புகிறேன்.
    என்று முட்டாள் தனமாக முடிவு எடுத்த பெண்ணை சிந்திக்க வைத்து சரியான முடிவு எடுக்க வைத்த விதம் அருமை ஐயா
    நன்றி
    ரமேஷ்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger Thiyagarajan.N said...
    ஐயா, அருமையான கதை/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தியாகராஜன்!

    ReplyDelete
  21. ////Blogger Ramki said...
    மிகவும் நல்ல கருத்துல்ல கதை...நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Loved the story. I wish all parents will have the same happiness.
    I am not a fan of Love before Marriage.
    I used to hate it as all I seen is the suffering of the couple when I was in India. Now I seen more than 5 love marriage couples who are live good live for more than 10 years, I changed my mind. I am still not a fan, but I am ok with them. Also astrology wise, if they have to go through it and it is their vidhi who can stop it?
    I do change kandar shati kavasam everyday. Hope he gives the wisdom to me as well.

    உங்களின் விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger வேப்பிலை said...
    பெற்றோர் பார்த்து அமைவது
    பெருமைக்குரியதாக இருக்கிறதா?
    கண்ணதாசன் சொன்னவைகள் அவர்
    காலத்துக்கு பொருந்தலாம் ஆனால்...
    பெற்றோரின் அணுகுமுறையும் தவறு
    பெண்ணின் அனுகுமுறையும் சரியல்ல
    கதை என்பதினால்
    கருத்தேதும் சொல்லவில்லை
    இது கதை தானே; உண்மையில்
    இப்போது நடந்த சம்பவமில்லையே/////

    கண்ணதாசன் சொன்னது தற்கால நடைமுறைக்கும் பொருந்துமே சுவாமி!

    ReplyDelete
  24. ////Blogger விசயக்குமார் said...
    அறிவுரைகள் சொல்லப்படும் முறைகளிலேயே பல நேரம் தோற்றுவிடுகிறது. இடமறிந்து காலமறிந்து பேசுவது அறிவுரைகளுக்கும் பொருந்தும்.
    அருமையான விழிப்புணர்வுக் கதை/////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    நல்ல கதை. எழுத்து நடை ரசிக்கும் தன்மையுடன் மிகவும் நன்றாக இருந்தது.
    முதலில் அந்த பெண் சாலா மாமா சொன்னதை நம்பினாள்.மாமா மேல் நம்பிக்கைவைத்தாள். தன‌க்கு மாமா ஒரு வழிகாட்டி என்பதை தன் மனதில் நிலை நிறுத்தினாள். மாமா சொன்ன மூன்று கேள்விகள் தான் அவளுக்கு இறைவன் கொடுத்த வரமாக கருதினாள். அவளுக்கு தைரியம் வந்தது.அதை வைத்துக்கொண்டு தன் அறிவினால் தன் காதலனை ச‌ரியாக சோதிக்க தயாராகி அதில் வெற்றியும் அடைந்தாள்.
    சிறு கதை. பல விஷயங்கள் பிடித்திருந்தது.
    நிச்சயமாக எல்லோரும் பாராட்டுவார்கள்.
    நிறைய கதைகளை படிக்கும் என் மனைவி இந்த கதையை படித்து விட்டு மிகவும் பாராட்டினார்கள்.அவர்களுடய கருத்தை தான் மேலே எழுதியுள்ளேன்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்//////

    நல்லது. உங்களுக்கும், கதையைப் படித்துவிட்டுப் பாராட்டிய உங்கள் துணைவியாருக்கும் நன்றி!

    ReplyDelete
  26. Sir,
    Thanks for saving the life of that girl and their parents, who would have to face lot of tensions if she would have gone for that love marriage. Even though trend has changed it is difficult to digest love marriages, as the parents see the difficulties beyond and the mentality of their children who have the capacity to face it or not. But children don't think anything except to love and their life with lover.

    Regards
    Rukumani Gururaj.

    ReplyDelete
  27. அன்புள்ள அய்யா வணக்கம்,
    அருமையான கதை என் உறவினர் குடும்பத்தில் இது போல் தக்க அறிவுரை
    வழங்க யாரும் இன்மையால் பெண்னைத்தொலைத்து விட்டு நித்த்ம் வருந்திக்கொண்டுள்ளோம். கதை என்பதைவிட வாழ்வியலை புரியவைக்கும் பாடம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com