மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.11.10

கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!

இரவு மணி 2.30; 27 ஜனவரி 1977ம் நாள் பிறந்து 150 மணித் துளிகள்
ஆகிவிட்ட நேரம். அப்போதுதான் 'ம‌வுன்ட்டு ஹவுஸ்'( தஞ்சையில்
என் இரண்டாவது அண்ணன்) வீட்டு வாசலில் தந்தி பட்டுவாடா
செய்யும் ஊழிய‌ரின் குரல் கேட்டது. வேளை கெட்ட வேளையில்
வந்த அவரைப் பார்த்துத்  தெரு  நாய்கள் குரைக்கின்றன. கருப்பு
நாய் ஒன்று பெருங்குரல் எடுத்து ஊளையிடுகிறது. நேரம்,சகுனம்
ஒன்றுமே  சரியில்லை. தந்திக்காரரின்  குரல் கேட்டு நான் தான்
முதலில் துள்ளி எழுந்தேன். கையெழுத்து இட்டு விட்டு  தந்தியைப்
பிரித்தால், என் மூச்சு ஒருகணம் நின்றுவிட்டது.மயங்கி  விழுந்தேன். மற்றவர்களும் ஓசைகேட்டு எழுந்து  விட்டார்கள். ஒவ்வொருவராகத் தந்தியைப் படித்துவிட்டு திகைத்துப்  போய்  வாயடைத்து
நிற்கிறார்கள். அப்படி என்ன  செய்தி அந்தத் தந்தியில்?

என் மூத்த‌ அண்ண‌ன் அய்யாசா‌மி கோவையில் 26 ஜன‌வ்ரி 1977 இர‌வு 10.30 ம‌ணியள‌‌வில் மார‌டைப்பால்  கால‌மான‌ர் என்ற‌ பெரும் துக்கச் செய்தியைத் தாங்கி வ‌ந்திருந்த‌து அந்தத் த‌ந்தி. முத‌லில் த‌ன்னிலைக்கு வ‌ந்து சுதாரித்தது என் அப்பாதான்.தெருமுனை வ‌ரை சென்று விட்ட‌ தந்தி ஊழிய‌ரைக்  கூவி அழைத்து‌ அவ‌ரிடமே "கிளம்பிவிட்டோம்,காத்திருக்கவும்"என்ற‌ ப‌தில் த‌ந்தி வாச‌க‌த்தை எழுதிக் கொடுத்து,  த‌ந்திக்கு ஆகும் செல‌வுக்கு மேலேயே அவ‌ர் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். அக்க‌ம் ப‌க்க‌த்து வீட்டாரை  எழுப்பி அவ‌ர்க‌ள் மூல‌ம் வாட‌கைக் காருக்கு ஏற்பாடு செய்தார். விடிய‌ற் காலை சுமார் 4 ம‌ணிக்கெல்லாம் கோவையை நோக்கி எங்க‌‌ள் துக்க‌ப் ப‌ய‌ண‌ம் துவ‌ங்கிவிட்ட‌து.

26 ஜ‌ன‌வ‌ரி 1977 காலை வாஸ்து நாளாக‌ இருந்த‌து.அப்போது நான்
என் இர‌ண்டாவ‌து அண்ண‌ன் முனைவ‌ர்  க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளுட‌ன்
அவ‌ருடைய‌ இல்ல‌மான‌ 'ம‌வுன்ட் ஹ‌வுஸி'ல் என் ம‌னை‌வி,
முத‌ல் பெண் ஹ‌ம்ஸ‌புவ‌னாவுட‌ன் (அப்போது ஒரு வ‌ய‌து),
என் தாய் த‌ந்தைய‌ருட‌ன் கூட்டுக் குடித்த‌ன‌மாக‌ வா‌ழ்ந்து வ‌ந்தேன்.
என்  அண்ண‌ன் க‌ண்ண‌ன் அன்றும் இன்றும் சிக்க‌ன‌மாக‌வும்
செட்டாக‌வும்  குடும்ப‌ம் ந‌ட‌த்த‌க் கூடிய‌வ‌ர்.நான் அளித்து வ‌ந்த‌
சொற்ப‌ ச‌ம்ப‌ள‌த்தில்  மீத‌ம் வைத்து, என‌க்கும் அவ‌ர் வீட்டுக்கு அருகாமையிலேயே  11 சென்ட் நில‌ம் வாங்கி  வீடு க‌ட்ட‌ ஏற்பாடு
செய்தார்.

அந்த‌ வாஸ்து நாளில் விடிய‌ற்காலையிலேயே அண்ண‌ன் வாங்கிக்
கொடுத்த‌ அந்த‌ நில‌த்தில் வாஸ்து பூஜை  செய்தோம்.
த‌ஞ்சையிலேயே ஒஸ‌த்தியான‌, (உருவ‌ம், உய‌ர‌ம், வேத‌ அறிவு எல்லா‌வ‌ற்றிலும்தான்  ஒஸ‌த்தி)  சாஸ்திரிக‌ள் வ‌ந்திருந்து பூஜையை
ந‌ட‌த்திக் கொடுத்தார். பூஜை முடிந்த‌ பின்ன‌ர் அன்று குடிய‌ர‌சு தின‌ம்
ஆன‌தால்  அந்த‌க்  கால‌னி பொது இட‌த்தில் அப்பா கொடியேற்றி கொடி வ‌ண‌க்க‌ம்  செய்தார். வ‌ந்திருந்த‌  வாண்டுக‌ளுக்கெல்லாம் கைநிறைய‌
மிட்டாய் கொடுத்துவீட்டு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் வீடு திரும்பினார்.
அம்மாவும் அந்த‌ ம‌கிழ்ச்சியைக் கொண்டாட‌ வ‌டை பாய‌ச‌த்துட‌ன்
விருந்து ச‌மைத்து விட்டார்க‌ள்.வீடே விழாக்கால‌  ம‌கிழ்ச்சியில் திளை‌த்த‌து.எல்லாம் அந்த‌த் த‌ந்திவ‌ரும் வ‌ரைதான் நீடித்த‌து.
26 ஜ‌ன‌வ‌ரி முடிந்து 27 துவ‌ங்கும் போது ம‌கிழ்ச்சி எங்க‌ளை விட்டுப்
பிரிந்து வெகு தூர‌ம் போய்விட்ட‌து.

வாட‌கைக் கார் கோவையை நோக்கிப் போய் கொண்டு இருக்கும்
ச‌ம‌ய‌ம் ம‌றை‌ந்த‌ அண்ண‌ன் ப‌ற்றிய‌ "ஃப்ளேஷ்  பேக்" அவ‌ருடைய‌
பெய‌ர் அய்யாசாமி. வேறென்ன‌? முருக‌னின் திருநாம‌ம்தான்.
த‌க‌ப்ப‌ன்சாமி, சுவாமிநாத‌ன் என்ற‌ பெய‌ர்க‌ளின் ம‌ற்றோர் வ‌டிவ‌மே அய்யாசாமி.அது எங்க‌ள் அப்பா‌வின்  த‌ந்தை‌யாரின் பெய‌ர். அதாவ‌து
என் தா‌த்தாவின் பெய‌ர். மூத்த‌ அண்ண‌ன் என்ப‌தையே எங்க‌ள்
குடும்ப‌ங்க‌ளில் முத்த‌ண்ணா என்போம். என‌க்கு இர‌ண்‌டு
அண்ண‌ன்மார்க‌ள். எல்லோருக்கும் மூத்த‌வ‌ரான‌ அய்யாசாமி
அண்ண‌னை முத்த‌ண்ணா‌ என்ற‌  பெய‌ரில் இனி குறிப்பிடுகிறேன்.

முத்த‌ண்ணா 1942ல் பிறந்தார். நான் 1949. என‌க்கும் அவ‌ருக்கும்
7 வ‌ய‌து வித்தியாச‌ம்.என‌க்கு, என்னுடைய‌ 7,8  வ‌ய‌தில் ந‌ட‌ந்த‌
செய்திக‌ள் முத‌ல்தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. என‌க்கு 8 வ‌ய‌து
ஆகும் போது முத்த‌ண்ணாவுக்கு15 வ‌ய‌து ஆகி, அவ‌ர் ப‌ள்ளி
இறுதி வ‌குப்பு முடித்து விட்டார். முன்பே  சொன்ன‌து போல‌
அப்பாவுக்கு  வ‌ருமான‌ம் குறைவு. முத்தண்ணாவைக் க‌ல்லுரியில்
சேர்க்க்த் த‌ன்னா‌ல் இய‌லாது என்று அப்பா முடிவு  செய்து  விட்டார்.
என‌வே ஸ்ரீராம‌கிருஷ்ண‌‌ மிஷ‌ன் மாண‌வ‌ர் இல்ல‌ம் மைலாப்பூர்
சென்னையில் இல‌வ‌ச‌ மோட்டார் வாக‌ன‌ தொழிற் க‌ல்விப் ப‌டிப்பில்
ம‌ட‌த்து ச‌ந்நியாசிக‌ள் ப‌ரிந்துரை‌யின் பேரில்  சேர்க்க‌ப்ப‌ட்டார்.அந்த
மாணவர்  இல்லத்தில் இருந்தபோது ஸ்ரீம‌த் பகவத் கீதை 18 அத்தியாயஙளையும் மனப்பாடமாக ஒப்பிக்கவும், மேலும் பல
உபநிஷத் மந்திரங்களை பொருளுடன் கற்கவும், வேதத்தில் இருந்து
பல பகுதிகளைப் பிழையின்றி ஓதவும்  கற்றுக் கொண்டார். எப்போது கூப்பிட்டாலும் சேவை செய்ய முதன்மையாக அண்ணா நிற்பாராம்.
அதனால்  அவருக்கு "எவர் ரெடி" என்ற சிற‌ப்புப் பெயர் கொடுத்து பரிசு கொடுத்து மகிழ்ந்தது மிஷன் நிர்வாகம்.

முத்த‌ண்ணாவுக்கு மிக‌வும் பிடித்த‌து ஆங்கில‌மும் ஆங்கில‌  இல‌க்கிய‌மும். அவ‌ருடைய‌ ஆங்கில‌க் கையெழுத்து  அழ‌கு சொட்டும். ஆங்கில‌ப்பேச்சும் எழுத்தும் ஒரு க‌விஞ‌னை நினைவு ப‌டுத்தும். அவ‌ர் விருப்ப‌த்திற்கு விட்டு
இருந்தால் இன்று ந‌ம‌க்கு ஒரு சிற‌ப்பான‌ ஆங்கில‌ப் பேராசிரிய‌ர் கிடைத்து இருப்பார்.

ஆனால்,
  "குயிலைப் பிடித்துக் கூண்டில் அடைத்துப் 
    பாட‌ச் சொல்லுகின்ற‌ உல‌க‌ம்;
    ம‌யிலைப் பிடித்துக் காலை  ஒடித்து  

   ஆட‌ச் சொல்லுகின்ற‌ உல‌க‌ம்;
   அது எப்ப‌டிப் பாடும் அம்மா?

    இது எப்ப‌டி ஆடும் அம்மா?........"

அண்ணாவின் வாழ்க்கை ஆர‌ம்ப‌மே வேண்டா வெறுப்பாக‌த்
துவ‌ங்கிய‌து. அதிலும் அந்த‌ ஹாஸ்ட‌ல் வார்ட‌ன்  முத்த‌ண்ணாவின்
ம‌ன‌தைப் புண்ப‌டுத்துவ‌தையே தன் முழுநேர‌ வேலையாக‌க்
கொண்டு விட்டார்.

அது ஏன் எனில்  அப்பாவின் "உண்மை விள‌ம்பி"க் கொள்கையால்
விளைந்த‌து. அதாவ‌து அந்த‌க் க‌ல்வி நிறுவ‌ன‌த்தில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம்
ரூபாய் 100 க்குக் குறை‌வாக‌ உள்ள‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கே
இல‌வ‌ச‌ உண‌வு, உறைவிட‌ம், க‌ல்வி ஆகிய‌வை கிடைக்கும்.
அப்பாவுக்கு ரூபா‌ய் 103 ச‌ம்ப‌ள‌ம். அந்த‌த் த‌க‌வ‌லை ம‌றைக்காம‌ல்
அப்பா  விண்ண‌ப்ப‌த்தில் குறிப்பிட்டுள்ளார். ச‌ந்நியாசிக‌ள் விதியைத்
த‌ள‌ர்த்தி சேர்த்துக் கொண்டு விட்ட‌ன‌ர்.இது பிடிக்காத‌ வார்ட‌ன்,
முத்த‌‌ண்ணாவைக் காணும் போதெல்லாம் "103, 103" என்று கூப்பிட்டு க‌டுப்பேற்றி உள்ளார்.அந்த‌ விட‌லைப்  ப‌ருவ‌த்தில் ஏற்ப‌ட்ட‌
தா‌ழ்வுண‌ர்ச்சி முத்த‌ண்ணாவுக்கு அவ‌ர் ம‌றையும் வ‌ரை நீடித்த‌து.

முத்தண்ணா மோட்டார் வாகனத் தொழிற் கல்வியில் (டிப்ளமோ
இன் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்) நல்ல  மதிப்பெண்களுடன்
தேறி சென்னை ராயல் என்ஃபீல்டு கம்பெனியில் சேர்ந்துவிட்டார்.
இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் நடந்தது எல்லாம் எனக்கு
நினைவில் இருக்கிற‌து.

அண்ணா முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் 2,3 மாததிற்கு
ஒருமுறை நீலகிரி விரைவு வண்டியில் சேலம் வந்து  சேர்வார்
'அம்மா' என்று விடிவதற்கு முன்பாக வீட்டு வாசலில் குரல்
கேட்டால் அம்மா துள்ளி எழுந்து போய்மகிழ்ச்சியாக 'வா வா'என்று
கதவைத் திறந்து கூட்டிவருவார்கள்.அன்று  முத்தண்ணாவுக்கு
மிகவும் பிடித்த  பருப்பு உருண்டைக் குழம்பு கட்டாயம் சாப்பாட்டில் இருக்கும்.அம்மாவும் பிள்ளையும்  பேசுவார்கள் பேசுவார்கள்
அப்படி பேசுவார்கள்.தாயன்பு என்பதைப் பிரிந்து இருந்த தனயன்
நிரம்பப் பெறுவார்.அப்பாவும் பிள்ளையும்  சம்பிரதாய விசாரிப்புடன்
விலகிக் கொள்வார்கள்.அம்மாவிடம் தான் எல்லா பகிர்வுகளும்.
கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவின் பாசத்தை அம்மாவிடமும், பிரிந்த
தாயைகண்ட கன்றின் மனநிலையில் உள்ள தனயனையும் நாங்கள்
கண்டு ஆனந்திப்போம். எப்படி நாங்க‌ள் கண் விழிப்பதற்கு முன்னர்
வீட்டுக்குள் வந்தாரோ அது போலவே நாங்கள் இரவு கண்
அயர்ந்தவுடன் வெளியேறி விடுவார் அத‌னால் அவ‌ருட‌னான‌
இன்டெராக்ஷ‌ன் என‌க்கு மிகக்  குறைவு.

என்னைக் க‌ருவில் சும‌ந்த‌ போது அம்மாவுக்கு வைசூரியும் மிகுந்த‌
காய்ச்ச‌லும் இருந்துள்ள‌து. அப்போது த‌ன்  நினைவு இல்லாம‌ல்  உள‌றியுள்ளார்க‌ள். அடிக்க‌டி,"என‌க்குப் பிள்ள‌யார் ம‌க‌னாக‌ப் பிற‌க்க‌ப்
போகிறார்" என்று பித‌ற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்க‌ள். ஒருமுறை முத்த‌ண்ணா வீட்டுக்கு வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் நான் அவ‌ர்க‌ள் இருவ‌ரும்  பேசிக்கொண்டிருக்கும் இட‌த்தில் ந‌ட‌மாடினேன். அப்போது அம்மா‌வின்
அதீத‌ க‌வ‌னிப்பால் என் உட‌ல் ஊளைச்ச‌தை‌யும் தொந்தியும்
தொப்பையுமாக‌ இருக்கும்.என்னைக் க‌ண்ணுற்ற‌‌ முத்த‌ண்ணா,"
அம்மா! பிள்ளையார் பிற‌க்க‌ப்  போகிறார் என்று  சொல்லுவாயே! உண்மையாக‌வே இவ‌ன் பார்க்க‌ப் பிள்ளையார் போல‌த்தான் இருக்கிறான்"என்று  கூறிய‌து ந‌ன்றாக‌ நினைவு உள்ள‌து. அன்று
அதை  ந‌கைச்சுவை  உண‌ர்வுட‌ன் பார்க்க‌த் தெரிய‌வில்லை.

இப்போதுதான் அதில் உள்ள‌ ஆழ‌மான‌ ந‌கைச்சுவை புரிகிற‌து.
சோக‌த்துட‌ன் சிரித்துக் கொள்கிறேன். முத்த‌ண்ணாவுட‌ன் ந‌ன்கு
புரித‌லுட‌ன் வ‌ள‌ந்த‌வ‌ர். என் அக்கா ராம லக்ஷ்மி ம‌ட்டுமே.
அக்காவுக்கும் அவ‌ருக்கும் 2  வ‌ய‌து ம‌ட்டுமே வித்தியாச‌ம்.த‌ன்
த‌ங்கையை பாதுக்காக்க‌ எதுவும் செய்ய‌த் த‌ய‌ங்காத‌‌ ஒரு வீர‌ம்
செறிந்த‌ அண்ண‌னாக‌த் திக‌ழ்ந்து இருக்கிறார்.'‌ஜே' போட்டுக்
கொண்டு ஊர்வ‌ல‌ம் சென்ற‌ த‌ந்தைக்குப் பிற‌ந்த‌ இந்த‌க்  குழ‌ந்தை
க‌ளுக்கும் ஊர்வ‌ல‌ம் போவ‌து போல‌ விளையாடுவ‌து ஒரு பொழுது
போக்கு. அண்ண‌ன் த‌ல‌மை தாங்கிக்  கொடி பிடித்து முன்னால்
செல்ல‌ த‌ங்கை பின்னால் 'ஜே' போட்டு செல்வாராம்.

'பார‌த் மாதா‌க்கி'‍‍............ ..........   ஜே!
ம‌ஹாத்மா காந்திஜிக்கி.......   ஜே!
ஜ‌வ‌‌ஹ‌ர்லால் நேருஜிக்கி......ஜே!
நேதாஜி சுபாஷ் போஸ்க்கி...  ஜே!
எல்லா த‌லைவ‌ர்க‌ளின் பெய‌ரும் தீர்ந்துவிட்ட‌ நிலையில் அண்ண‌ன் கோஷ‌த்தை நிறுத்திவிடுவாராம். அக்கா

உட‌னே அழத் துவ‌ங்கி விடுவாராம்.
'ஜே' போட‌ பெய‌ர் இல்லாத‌ நிலையில்,
புளிய‌ ம‌ர‌த்துக்கு ......  ஜே!
வேப்ப‌ ம‌ர‌த்துக்கு......  ஜே!
மாம‌ரத்துக்கு........    ....ஜே!
வாழைம‌ர‌த்துக்கு..... ..ஜே
ஆட்டுக்குட்டிக்கு......  ஜே!
ப‌சு மாட்டுக்கு..........     ஜே!
அண்ணாச்சிக்கு.....     ஜே!
த‌ங்க‌‌ச்சிக்கு...............    ஜே!
இப்போதும் நிறுத்த‌ முடியாத‌ நிலையில் அண்ண‌னுக்குக் கோப‌ம் வ‌ந்து விடுமாம்!
ம‌ண்ணாங்க‌ட்டிக்கு ..... ஜே!
குப்பைத்தொட்டிக்கு....  ஜே!
விள‌க்குமாற்றுக்கு......   ஜே!

இந்த‌ச் செய்தியை அம்மாவும் அக்காவும் ப‌ல‌ த‌ட‌வை சொல்லி
இருக்கிறார்க‌ள். சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர்  நானும் அக்காவும்
சேர்ந்து அம‌ர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அதில் ஒரு சோப்புத்தூள் விள‌ம்ப‌ர‌ம் வ‌ந்த‌து.அண்ண‌னும்
த‌ங்கையுமாக‌ இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் ப‌ள்ளியில் இருந்து புத்த‌க‌ப்
பையுட‌ன்  திரும்பிக்கொண்டு இருப்பார்க‌ள். த‌ங்கை கால் இட‌றி
சேற்றில் விழுந்து விடுகிறாள்.உட‌னே அழத் துவ‌ங்கி  விடுகிறாள்.
அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ அண்ண‌ன் வீர‌த்துட‌ன் தானும் சேற்றில்
பாய்ந்து அந்த‌ சேறு நிறைந்த‌  நில‌த்தை த‌ன் கைக‌ளால் ஒங்கி ஓங்கித் தாக்குகிறான். "ஆ! என் த‌ங்கையையா த‌ள்ளி விட்டாய்?  இந்தா வாங்கிக்கொள்!" என்று நில‌த்துக்குக் குத்து விடுகிறான். த‌ங்கையின்
முக‌ம் ம‌ல‌ர்வ‌தைக் க‌ண்ட‌ அண்ண‌ன் த‌ன்  ந‌டிப்பை விட்டுத்
த‌ங்கையுட‌ன் சேர்ந்து சிரிப்பான். இதைக் க‌ண்ட‌ அக்காவின்
க‌ண்க‌ள் ப‌னித்த‌ன‌."என் அண்ண‌னும்  இப்ப‌டித்தான் என‌க்காக‌
எதையும் செய்வார்"என்று விம்ம‌த் துவ‌ங்கினார்க‌ள்.

முத்த‌ண்ணாவின் திரும‌ண‌ நாள் அன்று மாலை மூத‌றிஞ‌ர்
ராஜாஜியின் ஆசிக‌ளைப் பெற‌ அப்பா ம‌ண‌ம‌க்க‌ளைக்  க‌ல்கி
கார்ட‌னுக்கு அழைத்துச் சென்றார்க‌ள்.வ‌ண‌ங்கி எழுந்த‌
அண்ண‌னைப் பார்த்து ராஜாஜி கேட்டார்:

"என்ன‌  ச‌ம்ப‌ள‌‌ம் வாங்க‌ற‌‌?"

அண்ண‌ன்: "500 ரூபா‌ய்".

ராஜாஜி :"மெட்ராஸ் ஊரில‌ இருக்க‌ற‌ விலை வாசியில‌ எப்ப‌டி குடித்த‌ன‌ம் ந‌ட‌த்துவ‌? வாட‌கைக் கொடுத்து,  சாப்பாட்டுக்கு உன் ச‌ம்ப‌ள‌ம் ப‌த்தாது"

என்ன‌டா இப்ப‌டி ப‌ய‌ம் காட்டுகிறாரே என்று அண்ண‌னும் உட‌ன்
சென்ற‌வ‌ர் க‌ளும் திகைத்துவிட்டார்க‌ள்.சிறிது நேர‌ மெள‌ன‌த்துக்குக்ப்
பின்ன‌ர் ராஜாஜியே பேசினார்:  "நடைபாதை‌யில் குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர்
க‌ளைப் பார்! அவ்ர்க‌ளுக்கு   ச‌ரியான‌ ஆடை, உணவு, இருப்பிட‌ம்,வ‌ச‌தி இல்லை.ஆனால் அவ‌ர்க‌ள் ஆணும் பெண்ணும் எவ்வ‌ள‌வு காத‌லுட‌ன்  ப‌ழ‌குகிறார்க‌ள்! என‌வே உங்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் அன்பு
ம‌ல‌ர‌வும் நிலைக்க‌வும்,ப‌ண‌ம், ச‌ம்ப‌ள‌ம் ஒரு த‌டையாக‌ இருக்காம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.காத‌லுக்குப் ப‌ண‌ம் தேவையே இல்லை."

அறிவுரை சொல்வ‌தையும் ஓர் அதிர்ச்சி வைத்திய‌ம் செய்து சொன்னார் பாருங்க‌ள், அதுதான் ராஜாஜி!

ப‌ள்ளி இறுதித் தேர்வில் அண்ண‌ன் 412 ம‌திப்பெண் பெற்றுத் தேறினார்.
நான் எஸ் எஸ் எல் சி தேர்வு  எழுதும்போது என‌க்கு ஒரு போட்டி
வைத்தார். அதாவ‌து அவ‌ருடைய‌ 412ஐக் காட்டிலும் அதிக‌மாக‌ நான்
எடுக்கும்  ஒவ்வொரு ம‌திப் பெண்ணுக்கும் ரூபாய் ஒன்று ப‌ரிசு
அளிப்ப‌தாக‌ச் சொன்னார்.நான் 404ம‌திப்பெண்தான் எடுக்க‌ முடிந்த‌து.
ஒரு ப‌ரிசும் கிடைக்க‌வில்லை.எங்க‌ள் சுற்ற‌த்தார்க‌ளில் யாருமே
அண்ண‌ன்  வாங்கிய‌ ம‌திப்பெண்ணைத் தாண்ட‌ முடிய‌வில்லை.

ராய‌ல் என்ஃபீல்டில் ப‌த்து ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ சேவை செய்து
விட்டு, திருப்ப‌தியில் சுவேகா மொபெட்  உற்பத்தி செய்த‌ முத‌லாளி
க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் இருந்து ஆலோச‌க‌ராக‌ப் ப‌ணியாற்றினார்
.டி வி எஸ் மொபெட் த‌யாரிக்கும் வ‌ரை சுவேகாதான் சந்தை‌யில்
முன்னால் நின்ற‌து.ஆக‌, மொபெட் என்ற‌ ஆக்க‌த்தை இந்தியாவுக்கு
அறிமுக‌ப் படுத்திய‌வ‌ர்க‌ளில் முத்த‌ண்ணா வுக்கு முத‌ன்மையான‌
இட‌ம் உண்டு.

திருப்ப‌தி முத‌லாளிக‌ளின் ப‌ங்குதார‌ர்க‌ள் கோவையில் மொபெட்
தொழிற் சாலை  ஒன்று அமைக்க‌ நினைத்து  அண்ண‌‌னை
கோவைக்கு அழைத்து வ‌ந்து விட்டார்க‌ள்.அண்ண‌ன் கோவைக்கு
வ‌ந்து ஒரு சில‌ மாத‌ங்க‌‌ளில் அந்த‌ 26 ஜ‌ன‌வ‌ரியும் வ‌ந்த‌து. 26 ஜ‌ன‌வ‌ரி
1977 அன்று ம‌லையில் அவ‌ருக்கு மார்வ‌லி க‌ண்டிருக்கிற்து.அவ‌ரை ஒரு ஃபிய‌ட் காரில் பெரிய‌  ஆஸ்ப‌த்திரிக்கு அழைத்துச் சென்று இருக்கி றார்க‌ள்.உட‌ன் சென்ற‌வ‌ர் காரின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுகள் முழுதும் இற‌ங்கும்
என்று எண்ணி ஹாண்டிலை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்.
"ஃபிய‌ட் காரில் பாதிதான் க‌ண்ணாடி இற‌ங்கும்.  ஹாண்டில் உடைந்து
விடும். சுற்றுவ‌தை நிறுத்து"என்று ச‌த்த‌ம் போட்டு இருக்கிறார். ந‌ல்ல‌ நினைவுட‌ன் இருக்கும்  போதே இர‌வு 10.30க்கு மின்சார‌ம் நின்று
போவ‌தைப் போல‌ இத‌ய‌ம் துடிப்ப‌தை நிறுத்திக்கொண்டு விட்ட‌து.
     ‍‍‍‍‍‍‍‍================================================
வாட‌கைக்கார் சூலூர் அருகில் வ‌ரும் போது ம‌க்க‌ர் செய்து நின்று
விட்ட‌து. அப்போதுதான் ஓட்டுன‌ர் முக‌த்தைப்  பார்த்தேன். தீவிரமான‌‌
பெரு வியாதியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். கைகால் விர‌ல்க‌ள் எல்லாம்
சிதைந்த‌ நிலையில்  இருந்தார். எப்ப‌டித்தான் ஸ்டிய‌ரிங்கையும், ஆக்சிலேட்ட‌ரையும் ப‌ய‌ன் ப‌டுத்தினாரோ! எங்க‌ளை எப்ப்டித்தான்
விப‌த்துக்கு உள்ளாக்காம‌ல் சூலூர் வ‌ரை கொண்டு சேர்த்தாரோ! ஆண்ட‌வ‌ன்தான் காப்பாற்றினார். சூலூரில்  இருந்து மீண்டும் ஒரு
வாட‌கை வ‌ண்டிபிடித்து கோவைப்புதூர் வ‌ந்து சேரும்போது உச்சி
வேளை தாண்டிவிட்ட‌து.

200 பேர் முத்தண்ணா‌ வீட்டு வாச‌லில் நிற்கிறார்க‌ள்.

அண்ணன் உட‌ல் அருகில் அழுது அழுது க‌ண்ணீர் வ‌ற்றிய‌ நிலையில் க‌ர்பிணியான‌ அண்ணி, 5 வ‌ய‌து ம‌க‌ன்,3  வ‌ய‌து ம‌க‌ள். நாங்க‌ள்
எல்லோரும் க‌த‌றுகிறோம். அப்பா ம‌ன‌ம் த‌ளராமல்‌ க‌ல் போல‌
இருக்கிறார்."ச‌ரி ச‌ரி சீக்கிர‌ம் த‌க‌ன‌த்துக்கு ஏற்பாடு செய்யுங்க‌ள்.
போன‌வ‌ன் போய்ட்டான். அழுதால் திரும்ப‌ வ‌ரப் போகிறானா?"
என்கிறார். கூட்ட‌த்தின‌ரைப் பார்த்து, "என் ம‌க‌னுக்காக‌ யாராவ‌து
ப‌ண‌ம் காசு செல‌வு செய்திருந்தாலோ, என் ம‌க‌னுக்குக்  க‌ட‌ன் கொடுத்திருந்தாலோ என்னிட‌ம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்க‌ள்.
அவ‌ன் க‌ட‌னாளியாக‌ப் போக‌க்கூடாது!"  என்கிறார்.

முத்தண்ண்ணாவின் உட‌லை எரித்த‌தும், ம‌றுநாள் சாம்ப‌லை
எடுத்து வந்து, ஸ்ரீர‌ங்க‌த்தில் அம்மா மண்டபத்தில்  க‌ரைத்த‌தும்,
க‌ர்பிணியான‌ அண்ணியுட‌ன் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை த‌ஞ்சைக்கு
அழைத்து வ‌ந்த‌தும், அண்ணி  மேலும் ஒரு பெண்குழ‌ந்தையை
பெற்று அளித்துவிட்டு 1980ல் ம‌றைந்த‌தும், அப்பா 1985ல் இற‌ந்த‌தும்,

முத்தண்ணாவின் குழ‌ந்தைகளுக்குத் தாயும் த‌ந்தையுமாக‌ இருந்து
அம்மா தாய்க் கோழி த‌ன் குஞ்சுக‌ளை  சிற‌குக‌ளால் மூடிமூடிப்
பாதுகாப்பது போல் 2007 வ‌ரை ,த‌ன் 84 வ‌ய‌து வ‌ரை, காப்பாற்றிய‌தும்,
இன்று  அனைவ‌ரும் ந‌ல்ல‌ நிலையில் இருப்ப‌துவும் சொன்னால்
சீரிய‌ல் போல‌ 1000 எபிசோட் போகும்.

பின்ன‌ர் ஒருமுறை என்னால் சொல்ல‌ முடிந்தால் சொல்வேன்.
முடியும் என்று தோன்ற‌வில்லை.க‌ண்ணீர் க‌ண்‌க‌ளை  ம‌றைக்கும்
போது எப்ப‌டி த‌ட்ட‌ச்சு செய்வ‌து சொல்லுங்க‌‌ள்!
- ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)  தஞ்சாவூர்


நமது வகுப்பறையின் மூத்த  மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களின் எழில்மிகு தோற்றம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலரின் இரண்டாம் பகுதி

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பி தேடியபோது கிடைத்தது.

(இவைகளை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால்! எத்தனையோ மெஞ்ஞானிகள் அல்ல நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம். உலக மதங்களுக்கெல்லாம்; கருவும், கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடுப் படைத்திருக்கிறான் என்றால்.... கீழைநாடுகளையும் அம்மக்களை யும்  ... குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப்  படைத்திருக்கிறான் என்று சொல்லத் துணிகிறேன்).

வேதாந்தத் தத்துவம்

(ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்)

வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் அவரே  குறிப்பிடுகிறார்). எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்று கின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்)

வேதம் அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சிலவேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய  உபயோகத்தில் இல்லை.

பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்றுதான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப் படுகிறது. "வேதாந்தம்" என்பது "சுருதி" என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது. ("சுருதி" ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும்... அவரும் இதன் பொருட்டே தனது மகளுக்குப் பெயர் வைத்து இருக்கலாம் காரணம் அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக் களில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதை அவருடைய திரைப் படங்களும் அவரிடம் நேர்காணலின் பொது அவர் தரும் பதில்களும் நமக்கு உணர்த்தும். சரி சர்ச்சை வேண்டாம் விசயத்திற்கு வருவோம்).

நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகின்ற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட பெளத்தர்களும், சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.

இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவைகள் தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்திய சிலவைகள் இருந்தும்.. வியாசரின் நெறிதான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப் படுகிறது.

பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள் அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும் அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன. (வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகைகள் இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை  நிலைநாட்டும் முயற்சித்தது.)

மூன்று நெறிகள்:
முதலில் துவைதம் (இரண்டு என்பது அதன் பொருள் அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலை நிறுத்தும் தத்துவம்), இரண்டாவது விசிஷ்டாத்வைதம், மூன்றாவது அத்வைதம் (அத்வைதம் இரண்டல்ல ஒன்றே அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே  இருக்கிறதாக கொள்வது) ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு....

எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன....ஆனால் மூன்று விசயங்களில் ஒத்துப்  போகின் றன...

அவைகள்: கடவுள், வேதங்கள் (வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம் பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவைகள்...நமக்கு புரியும் படி  கூறினால்  அது ஒருத் திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம்.... அப்படியானால்.... அவைகள் எத்தனைனாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.... இதை விளக்க யோகி ஓசோ அவர்கள் அற்புதமான விளக்கத்தைக் கூறுவார்... பகவத் கீதையில் போர்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும்.... அர்சுனனும் அவ்வளவுப் பேசிக்கொண்டார்கள் அது நம்பும் படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்.... அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்றுத் தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ளவேண்டும் என்று.... எவ்வளவு அற்புதமான விளக்கம்....) மூன்றாவதாக படைப்புச் சுழற்சி- இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.

படைப்புச் சுழற்சிப்பற்றிய நம்பிக்கை பின்வருமாறு.......

ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்றப் பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும்  காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை. பிராணன் ஆகாசத்தின் மீது செயல் படுவதால் பிரபஞ்சம் படைக்கப் படுகிறது, அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல் பட்டு, அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள், விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்கள் படைத்தது.

அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூறுவோம்.......

கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூலநிலையில் இருந்து படிப் படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணணுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது......

பிறகு, மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிரானணுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய "மகத்" என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind ). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும், பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.

மேலும்....... மனம், ஆன்மா, இறைவன் பற்றிய நம்பிக்கைகளை பற்றி சுவாமி விவேகனந்தர் கூறியதன் சுருக்கத்தை தொடர்ந்து பிறகு பார்ப்போம்.

ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்.


 நமது வகுப்பறையின் சமர்த்தான
  மாணவர்களில் ஒருவரான
 ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் எழில்மிகு தோற்றம்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

38 comments:

  1. எங்க‌ள் மூத்த அண்ணன் கதையை வலையேற்றியதற்கு ந‌ன்றி அய்யா!
    3 புகைப்படங்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். அவற்றையும் பதிவேற்றினால் கட்டுரை இன்னும் ந‌னகு புரிந்து கொள்ள‌ப்படும்.முடிந்தால் அவற்றையும் பதிவு ஏற்றப் பணிந்து வேண்டுகிறேன்.மீண்டும் பலப்பல நன்றிகள்.

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா!

    வாழ்கையில் தாங்கள் கற்ற கற்றரிவிவையும் மற்றும் பட்டறிவையும் வகுப்பறையின் மூலம் எம்முடன் பகிர்ந்துகிட்ட திருவாளர்கள் ஐயா கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK), ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா!

    இன்றைய வகுப்பறையின் தலைப்பு நமது தமிழ் நாட்டில் உள்ள பாடத்திட்டங்களில் உள்ள அவலங்களை நியாபக படுத்தும் அளவிற்கு தலைப்பை தந்த ஆசிரியருக்கு நன்றி!

    தாய் மொழியாம் தங்க தமிழ்! தமிழ் என்று கூறியே பல வருங்களாக மற்ற மொழியின் வாசனையை தமிழ் நாட்டு மாணவ மணிகளுக்கு தராமல் தடைகற்களாக இருப்பவர்களின் ஞானக்கண் என்று தான் திறக்குமோ.?

    தமிழ் பாட திட்டத்தின் படி
    கல்வி கற்று விட்டு மேல்படிப்பிற்காக
    கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள்: அயல் மாநிலம் மற்றும் அயல்நாட்டில் உள்ளவர்கள்
    அன்பு உள்ளம் கொண்டவர்களிடம் கூட
    நன்றாக தமது கருத்தை பகிர்ந்து கொள்ள ஊடகமாக இருக்கும் பிற மொழியை அறியாமல் தவிர்ப்பவர்களின் கஷ்டம் இருக்கே, அதனை அனுபவித்தவருக்கே தெரியும்
    வேதனை எப்படி இருக்கும் என்று

    இவர்களில் ஆயல் நாட்டில் உள்ளவர்களின் பாடு ஒரு படிக்கு மேலே போகி மிகவும் தர்ம சங்கடத்தில் தான் கொண்டு போகி விடுகின்றது .

    சொந்த நாட்டில் அதிகபடியான மக்கள் பேசும் மொழியை கூட தெரியாமல்
    ( தெரிய விடாமல் செய்தவர்கள் மற்றும் இன்றும் செய்பர்கள் கவனிக்க வேண்டும், அயல் மொழி எவ்வளவிற்கு எவ்வளவி முக்கியம் என்று.வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எப்படியும் அறிவை வளர்த்து கொள்வார்கள் தாமும் தனது பரம்பரையும் ஆனால்,
    பாவபட்டவனின் பாடுதான் மிகவும் திண்டாட்டம். கஷ்ட படுகின்றவன் எங்கும் போகி எப்படியும் பிழைத்து கொள்ள முதலில் மொழி முக்கியம். கவனிக்க வேண்டும்
    "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!") அயல் நாட்டிற்கு வந்து விட்டு உறவினர்கள் போல உள்ள இடத்தில மற்றவர்களின் முன்னர் திறம் பட மொழி திறமை இல்லாமல் பேசமுடியாமல் தலை குனிவை ஏற்படுத்தும் பாடத்திட்டம் என்று தான் மாறுமோ இறைவனுக்கே வெளிச்சம்.

    எதோ யாம் பட்டத்தை,மற்றவர்கள் படும் மற்றும் இன்னும் படபோகின்றவர்களை வேதனையை பற்றி சொல்ல தோணியது
    அவ்வளவிதான் சங்கதி .

    ReplyDelete
  4. நண்பர் ஹாலாஸ்யத்தின் ஆக்கம் அருமை.மிகவும் கடினமான தத்துவ விசாரத்தை முடிந்தவரை எளிமையாகச்சொல்லியிருக்கிறார்.
    சுவாமிஜி வெறும் திண்ணை வேதாந்தியல்ல.செயல்முறை(அல்லது ந‌டைமுறை) வேதாந்தம் என்னும் புதிய பாதையை அறிமுகப்படுத்தினார்."எல்லாவற்றிலும்
    இறைவன் உறைகிறான் எனில் ஓர் ஏழை இறைவனுக்கு வசதிபடைத்த இறைவன் உதவ வேண்டாமா?பசித்தோர் முகத்தைப் பாராதிருக்கலாமோ?"என்று வினா எழுப்பினார்."ஏழைக‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் க‌ல்வி க‌ற்று வ‌சதியை‌ப் பெருக்கிக் கொண்ட‌ நீ, அவ‌ர்க‌ளுக்குச் சேவை செய்யாவிட்டால் உன்னை துரோகி என்று அழைப்பேன்" என்று ஆவேச‌ப்ப‌ட்டார்.
    "ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளாக‌ அடிமைக‌ளாக‌ அட‌க்க‌ப்பட்ட‌ இந்திய‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் சுய‌ அறிவை இழந்துவிட்ட‌ன‌ர். வெறும் திண்ணை வேதா‌ந்திக‌ளாக‌ ஆகி விட்ட‌ன‌ர்.பொருள் சேர்க்கும் வ‌கையான வியாப‌ர‌ த‌ந்திர‌ங்க‌ள்,விஞ்ஞா‌ன‌க் க‌ல்வி,இய‌ந்திர‌ங்க‌ள் ஆகிய‌வ‌ற்றை மேலை நாடுகள் இந்தியாவுக்கு அளிக்கட்டும். அத‌ற்குப் ப‌ண்ட‌ மாற்றாக‌ ந‌ம‌து த‌த்துவங்க‌ள், தியான‌ம்,யோக‌ம்,ம‌ன‌ அமைதிக்கான‌ நுட்ப‌ங்க‌ள் ஆகிய‌வ‌ற்றை மேலை நா‌ட்டின‌ர் அறிந்து கொள்ள‌‌ட்டும்" என்றார். உல‌க‌ ம‌ய‌மாக்க‌ல் ப‌ற்றி முத‌ன் முத‌லாக‌ப் பேசிய‌வ‌ர் ஸ்ரீசுவாமிஜி தான்!தா‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆகிய‌வ‌ர்க‌ளுக்காக‌ப் பேசிய‌ முத‌ல்வ‌ர் ஸ்ரீசுவாமிஜிதான்."பிராம‌ண‌ன் த‌ன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் திற‌மை உள்ள‌வ‌ன். ஏனை‌யோருக்குத்தான் பிடித்துக்கொள்ள‌ ஊன்று கோல் தேவைப்ப‌டுகிற‌து"என்றார் ஸ்ரீ சுவாமிஜி.

    ReplyDelete
  5. சத்தியத்திற்குத்தான் சோதனை, வேதனை எல்லாம் என்றாலும் கடைசியில் அது பல சாதனையோடு நிற்கிறது...
    ////"என் ம‌க‌னுக்காக‌ யாராவ‌து
    ப‌ண‌ம் காசு செல‌வு செய்திருந்தாலோ, என் ம‌க‌னுக்குக் க‌ட‌ன் கொடுத்திருந்தாலோ என்னிட‌ம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்க‌ள்.
    அவ‌ன் க‌ட‌னாளியாக‌ப் போக‌க்கூடாது!" //////
    இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு...... கொடும் துன்பநிளையிலும் புத்தியை சரியாக செலுத்திய உங்கள் தந்தையும் ஒரு யோகியாய் இருந்து இருக்கிறார்.

    இன்று எனது 42 வது பிறந்த நாள் ஆசிரியரும், சக மாணவப் பெரியவர்களும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.... சமர்த்து என்று பாராட்டியதற்கு நன்றிகள் ஐயா..... அதோடு எந்த நிலையிலும் அசடாக இருக்காமல் பார்த்துக் கொள்ள கூறிய அறிவுரையாகவும் எடுத்துக் கொள்கிறேன்....
    நன்றிகள் ஐயா.....

    ReplyDelete
  6. எனக்கு 'மூத்த' என்ற அடைமொழி கொடுத்ததும், நண்பர் ஹாலாலாஸ்யத்திற்கு'சமர்த்தான' என்ற அடைமொழி கொடுத்ததும் நல்ல நயம்.மூத்த என்றால் முதிர்வடைந்த,அனுபவம் உள்ள,வயதேறிய,தர வரிசையில் முத‌ன்மையான என்ற வகையில் பொருள் கொள்ளலாம். வயதேறிய என்ற பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு "ஏ!பெரிசு!ஆலோசனையெல்லாம் சொல்ல வேண்டாம். கம்முன்னு கெட!" என்றும், "வயது வளர்ந்தால் மட்டும் போதுமா?அறிவு வளர வேண்டாமா?"என்றும் கொக்கி போட்டு வாசலைக் காண்பித்துவிட்டார் ஒரு கோவக்கார சிறிசு.அவ‌ருடைய நாதம் மட்டுமே அங்கே ஒலிக்கட்டும் என்று ஓடி வந்து விட்டேன்.இது நடந்தது இன்னொரு வகுப்பறையில்.


    சமர்த்தான என்றால் ஆசிர்யர் சொல் கேட்டு நடக்கக் கூடிய, வம்பு தும்புக்குப் போகாமல் பாடமே குறியாக இருந்து கற்கக்கூடிய,அடக்கமான, அமைதியான,
    கற்ற கல்வியில்,வித்தையில் ஆற்றல் மிகுந்த,வெட்டிக் கொண்டுவா என்றால் கட்டிக் கொண்டே வரும் சாமர்த்தியம் உள்ள என்ற பொருள் கொள்ளலாம். நண்பர் ஹாலாஸ்யம் இந்த எல்லாத் தகுதிகளும் உள்ளவர். அவருக்கு என்னுடைய சிறப்புப் பாராட்டுக்கள்.எதற்கு?வாத்தியாரால் சமர்த்துப்பிள்ளை என்று பாராட்டப் பெற்றதற்கு!

    ReplyDelete
  7. 42 அகவை கண்ட நண்பர் ஹாலாஸ்யம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    "இன்னும் ஓர் நூற்றாண்டு இரும்"

    ReplyDelete
  8. அய்யா,
    தங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அணுப்பியுள்ளேன். அது நம் வகுப்பறையின் இணையதள வடிவமைப்பின் 'ஸ்க்ரீண் ஷாட்'. அதில், 'லாகின் பேஜ்' மற்றும் 'ஹோம் பேஜ்' உள்ளது. தஙளுடைய ஆலோசணைக்காக காத்திருக்கிறேன்.

    சஞ்சய் ராமநாதன்

    ReplyDelete
  9. நண்பர் கே.எம்.ஆர். வாழ்க்கை சோகம் அப்பியது. அதனால்தானோ என்னவோ உற்சாகமான சூழலிலும் சோகம் வடிய காட்சி அளிப்பார். உண்மையில் மனதை உருக்கும் சில சோகங்களை அவர் சந்தித்தார். பாவம்! நிகழ்ச்சியில் ப்ளாஷ் பேக் கொடுத்து நன்கு சொல்லியிருக்கிறார். ஹாலாஸ்யம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இன்றுதான் என் இரண்டாம் மகனுக்கும் பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துச் சொல்லி முடித்துவிட்டு இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு சந்தேகம். திரு ஹாலாஸ்யம் நின்று படிக்கும் இடம் பொது நூலகமா, அல்லது அவருடைய நூலகமா? நூலகங்களைக் கண்டால் என் கைகள் பறக்கின்றன. நல்ல பதிவுகள். நன்றி ஆசிரியர் ஐயா!

    ReplyDelete
  10. மின்னஞ்சலில் வந்த கடிதம்:

    Rajah
    date 21 November 2010 12:14
    subject அவர்களுடன் பிறக்காமல் போன அடியேன்
    ஐயா ,
    உளமார சொல்கிறேன் இன்றைய பதிவு மனதை நெகிழ வைத்திட்டது
    நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களுக்கு
    அடியேன் நமஸ்காரம் .
    இப்படிக்கு அடியன்
    இராஜா எம்

    ReplyDelete
  11. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    நமது வகுப்பறையின் சக மாணவரான திரு.ஆலாசியம் கோவிந்தசாமி
    அவர்கள் 42 ஆவது பிறந்த நாளான இன்று அவர் எல்லா நலன்களும் பெற்று
    நீடூழி வாழ இறைவனை வேண்டி,வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவதில்
    மகிழ்ச்சி கொள்கிறேன்.
    அன்புடன்,
    அரசு,திருப்பத்தூர்.

    ReplyDelete
  12. //"அதனால்தானோ என்னவோ உற்சாகமான சூழலிலும் சோகம் வடிய காட்சி அளிப்பார்."//

    முக அமைப்பே அப்படிதான் கோபால்ஜி!என்னசெய்வ்து?அதுவும் இல்லாமல் நீங்கள் என்னைக் காட்டிலும் வயதில் மிகவும் மூத்தவர்.என் வயது ஒத்தவர்களுடன் நான் பேசும்போது என் முக பாவமும்,உற்சாகமும் வேறு வகையில் அதற்குத் தகுந்ததைப் போல மாறிவிடும்.உங்களுடன் பேசும் போது மரியாதை நிமித்தம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். மனதுக்குள்
    நான் எல்லா சூழ‌லையும் ஆழமாக ரசிப்பவன்.என்னைப் பார்த்தே சிரித்துக் கொள்பவன்.இல்லாவிட்டால் என்னால் எப்படி கதை போல என் வாழ்க்கையைச் சொல்ல முடியும்? என் எழுத்தில் அடிநாதமாக ஒலிக்கும் நகைச்சுவையை நீங்கள் கவனிக்கவில்லையா?இந்த சோகக்கதையிலும் கூட சில சுவாரஸ்யமான செய்திகள் உங்க‌ளைப் புன்முறுவலுடன் படிக்க வைக்கவில்லையா?

    ‌ஒரு மனிதனின் பலவீனங்களே அவனை பிற மனிதர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுகின்ற்ன‌.எனவே மற்றவர்களின் பலத்தைக் காட்டிலும் பலவீனங்களை நான் அதிகம் மனதால் ரசித்துப் புரிதலுடன் இருந்தாலும், எழுத வரும் போது அவர்க்ளுடைய பலங்களை மட்டுமே சொல்லுவேன்.

    ReplyDelete
  13. //"உளமார சொல்கிறேன் இன்றைய பதிவு மனதை நெகிழ வைத்திட்டது"//

    மிகவும் நன்றி ராஜா அவ்ர்களே. முகம் தெரியாத ஒருவருக்கு மனதைத் தொடும்படி எழுத்து அமைந்தது என்பதில் என் முயற்சி ஒன்றும் இல்லை.அந்த நிகழ்வில் உள்ள ஆழமான சோகமே உங்கள் மனதை நெகிழச் செய்துள்ளது.சரியான உணர்ச்சிகளை வெளியிடும் வண்ணம் சொற்கோவை
    அமைந்தது இறை அருளே.ஒரு சிலரே சிரத்தையுடன் முழுதும் படித்து எழுதியவனின் அலை வரிசைக்கு வந்து அவனுடன் மனதால் கூடுகின்றனர்.
    அப்படிப் பட்ட புரிதலுடன் கூடிய வாசகன் கிடைப்பதே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சன்மானம்.சம்பவத்தில் நேரடியாக சம்பந்தம் உடைவர்களுக்குக் கூட, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று இருந்த அதே மன நிலை இருக்குமா என்பது சந்தேகமே.அப்படியிருக்கும் போது உங்கள் உணர்ச்சி கொப்பளிக்கும் சொற்கள் உண்மையான ஆறுதலை அளிக்கின்றன.மீண்டும் நன்றி! ‌

    ReplyDelete
  14. என் வாழ்க்கை மிகவும் அதிகமான சம்பவங்கள் கொண்டது கடக லக்னம், கடக ராசிக்காரன் நான். எனவே இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை என் சூழல் திரைப்படக் காட்சி போல மாறிவிடும்.அதில் நவரசங்க‌ளும் இருக்கும்.
    இந்த மாற்றங்களைக் கண்டு வெருளாமல், ரசிப்பது என் பிறவிக் குணம். அதனை இங்கு பதிவு செய்து வருகிறேன். எங்காவது யாராவது ஒரு வாசகரின் மனதில் ஆழமான தாக்கத்தை என் ஆக்கங்கள் எற்படுத்தும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.வாத்தியார் ஆதரவு தரும் வரை என் ஆக்கங்கள் தொடரும். பின்னர் என் வாழ்க்கை வரலாறு போல புத்தகமாக வெளீயிட விருப்பம். என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக அளித்து விட்டு மன நிறைவுடன் வடக்கிருப்பேன்!பொறுமையுடன் என் எழுத்துக்களைப் படிக்கும், படிக்கப்போகும் அனைவருக்கும் என் நன்றி!

    ReplyDelete
  15. /////'பார‌த் மாதா‌க்கி'‍‍..... ஜே!
    ம‌ஹாத்மா காந்திஜிக்கி....... ஜே!
    ஜ‌வ‌‌ஹ‌ர்லால் நேருஜிக்கி......ஜே!
    நேதாஜி சுபாஷ் போஸ்க்கி... ஜே!
    எல்லா த‌லைவ‌ர்க‌ளின் பெய‌ரும் தீர்ந்துவிட்ட‌ நிலையில் அண்ண‌ன் கோஷ‌த்தை நிறுத்திவிடுவாராம். அக்கா

    உட‌னே அழத் துவ‌ங்கி விடுவாராம்.
    'ஜே' போட‌ பெய‌ர் இல்லாத‌ நிலையில்,
    புளிய‌ ம‌ர‌த்துக்கு ...... ஜே!
    வேப்ப‌ ம‌ர‌த்துக்கு...... ஜே!
    மாம‌ரத்துக்கு........ ....ஜே!
    வாழைம‌ர‌த்துக்கு..... ..ஜே
    ஆட்டுக்குட்டிக்கு...... ஜே!
    ப‌சு மாட்டுக்கு.......... ஜே!
    அண்ணாச்சிக்கு..... ஜே!
    த‌ங்க‌‌ச்சிக்கு............... ஜே!
    இப்போதும் நிறுத்த‌ முடியாத‌ நிலையில் அண்ண‌னுக்குக் கோப‌ம் வ‌ந்து விடுமாம்!
    ம‌ண்ணாங்க‌ட்டிக்கு ..... ஜே!
    குப்பைத்தொட்டிக்கு.... ஜே!
    விள‌க்குமாற்றுக்கு....ஜே!////////

    'தலைவர்களின் தொடர்ச்சி வரிசைக்கும் 'ஜே' போட்டதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குறாப் போலே தெரியுதே?
    தங்கை முடித்தபின் அண்ணன் தொடரும் 'ஜே' இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறதோ?
    முத்தண்ணாவுக்கு நல்ல ஒரு தீர்க்க தரிசனம்..'

    ReplyDelete
  16. வேத விற்பன்னர் ஆலாசியம் அவர்களுக்குப் பிறந்த தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. //'தலைவர்களின் தொடர்ச்சி வரிசைக்கும் 'ஜே' போட்டதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குறாப் போலே தெரியுதே?
    தங்கை முடித்தபின் அண்ணன் தொடரும் 'ஜே' இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறதோ?
    முத்தண்ணாவுக்கு நல்ல ஒரு தீர்க்க தரிசனம்..'//


    மைன‌ர்வாள் இந்தக் குறும்புதானே வேண்டாங்கிற‌து. ப‌ச்சைக்குழந்தைக‌ள் விளையாட்டில் என்ன‌ தீர்க‌த‌ரிச‌ன‌ம் இருகுங்காணும்? புகைப்ப‌ட‌ம் அடையாளங்‌க‌ளுட‌ன் வெளியாகியுள்ள‌ ஆக்க‌த்தில், இப்படி ஒரு 'டிவிஸ்ட்'
    கொடுத்தால், நான் தஞ்சையில் முகமூடி போட்டுக் கொண்டுதான் நடமாட வேண்டும்.ஆனாலும் மாத்தி யோசிக்கும் உங்கள் ரசனையை நான் ர‌சிக்கிறேன்.

    பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  18. வாழ்த்துகளையும், பாராட்டையும் அளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
    திரு ராஜகோபாலன் சார், நான் நிற்பது பொது நூலகத்தில் தான்..... என்வீட்டில் உள்ள நூலகம் இன்னும் மிகச் சிறியதாக இருக்கும்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  19. கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் அவரைப் பற்றி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது. அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் மன்னியும் அவர் குழந்தைகளுமாகத்தான் இருக்கும் என்றாலும், உங்கள் தாயார் அவர்களை அரவணைத்தது கிரேட்.

    ReplyDelete
  20. அன்புடன் வணக்கம்
    ஒரு கூட்டு குடும்பத்தில் தகப்பன் எந்த மாதிரி தனது பிள்ளைகளை வளர்த்து அளாக வேண்டும் என்பதற்கு ஒரு உதாரண புருஷனாக இருந்திருக்கிறார் உங்களது தந்தை அத்துடன் தனக்கு கொள்ளிவைக்க வேண்டியவனுக்கு தான் நின்று காரியங்கள் செய்வது கடன் பாக்கி வாங்கிகொள்க?? என்ன ??? யோகி போன்று ஒரு சித்தரை போன்று துக்கத்தை எல்லாம் தனது மனதில் வைத்து எங்கே தான் வெளிபடுத்தினால் மற்றவர்கள் தேறுவது கடினம் என்பதால் அவ்வாறு இருந்திருகிரர்கள் இப்படியான ஒரு மகோன்னத மனிதருக்கு பிறந்த நீங்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டும் உங்களுடன் சம்பாஷிக்க எங்களுக்கு கொடுப்பினை... நன்றி இறைவனுக்கு
    திரு அல்சியம் வணக்கம் மிக பெரிய விஷயத்தை ((சாஸ்திர உண்மைகள் )) சொல்லுகிறீர்கள் ..பிரமிப்பாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்.. .

    ReplyDelete
  21. ஆலாசியம், நீங்க எழுதினத்துக்கு என்ன கமெண்ட் போடறதுன்னு ரொம்ப நேரமா மண்டையைக்குடைஞ்சுகிட்டு இருக்கேன். ஏன்னா படிச்சது எல்லாம் தலைக்கு மேல போய் ரொம்ப நேரமாச்சு. இவ்ளோ தூரம் எனக்கு பொறுமை / ஆர்வம் இல்லாததுனால எஸ்கேப். விவேகானந்தரோட புக் ஒண்ணு ரொம்ப நாளா வீட்டில கிடக்கு. புரட்டிக்கூட பார்த்தது கிடையாது. (என் மாமியார் அதை விழுந்து விழுந்து படிச்சும் பெரிசா ஒண்ணும் கத்துக்கலைங்கறது அடுத்த விஷயம்). பகவத் கீதையைக்கூட ஏதோ ஒரு ஆர்வக்கோளாருல எடுத்திட்டு திரும்பி பத்திரமா வெச்சுட்டேன்.

    சரி விடுங்க. உங்கள் ஆர்வம் வாழ்க! (நம்ம வாத்தியார் ஒரு பின்னூட்டத்தில சொன்னா மாதிரி அடுத்து பட்டினத்தார் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிங்கோ, ஹி ஹி)

    ReplyDelete
  22. thiru alasiyam avargal needuli vazha vazhthukkal..

    ReplyDelete
  23. ஒ சொல்ல விட்டுப்போச்சு. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் (wish பண்ணியாச்சு, treat எங்க?)

    ReplyDelete
  24. ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும்... அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக் களில் நம்பிக்கைக் கொண்டவர்//

    இல்லையே, அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றுதான் நினைக்கிறேன். அவரோட பேட்டிகளில் கூட அதான் சொல்லிருக்கார். அவரோட தீவிர ரசிகர்களுக்குத்தான் இன்னும் நல்லாத்தெரியும்.

    ReplyDelete
  25. Uma said...
    கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் அவரைப் பற்றி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது. அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் மன்னியும் அவர் குழந்தைகளுமாகத்தான் இருக்கும் என்றாலும், உங்கள் தாயார் அவர்களை அரவணைத்தது கிரேட்.//

    இதுவே மிகவும் நீளம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நீளமா?
    இழ‌ப்பு என்ன‌மோ ம‌ன்னிக்கும் குழ‌ந்தைகளுக்கும்தான்.ஆனால் ம‌ன்னி 1980ல் தானும் ம‌றைந்துவிட்ட‌ர்க‌ள்.தாய் தந்தையில்லாத‌ குழந்தைகளை என் அம்மா பொத்தி பொத்தி வளர்த்தாரகள்.வீட்டில் கலவையான மனோ ரீதியான சூழல்கள். எழுத்தில் எல்லாம் அடங்காது.விளக்க முடியாது.பின்னூட்டத்திற்கு நன்றி, உமாஜி!

    ReplyDelete
  26. //தனக்கு கொள்ளிவைக்க வேண்டியவனுக்கு தான் நின்று காரியங்கள் செய்வது கடன் பாக்கி வாங்கிகொள்க?? என்ன ??? யோகி போன்று ஒரு சித்தரை போன்று துக்கத்தை எல்லாம் தனது மனதில் வைத்து எங்கே தான் வெளிபடுத்தினால் மற்றவர்கள் தேறுவது கடினம் என்பதால் அவ்வாறு இருந்திருகிரர்கள் இப்படியான ஒரு மகோன்னத மனிதருக்கு பிறந்த நீங்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டும்//


    ஆம்!அவருடைய பரந்த மன‌மும், சிறந்த‌ குணமும் பார்த்துப் பார்த்து வியந்திருக்கிறேன்.அவரைப் பற்றித் தனியாக ஒரு பதிவு இட வேண்டும்.எதை எழுதுவது எதை விடுவது என்று குழம்பிப் போயுள்ளேன்.பின்னூட்டத்திற்கு நன்றி, நடராஜன் சார்! ‌

    ReplyDelete
  27. ////kmr.krishnan said...
    எங்க‌ள் மூத்த அண்ணன் கதையை வலையேற்றியதற்கு ந‌ன்றி அய்யா!
    3 புகைப்படங்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். அவற்றையும் பதிவேற்றினால் கட்டுரை இன்னும் ந‌னகு புரிந்து கொள்ள‌ப்படும்.முடிந்தால் அவற்றையும் பதிவு ஏற்றப் பணிந்து வேண்டுகிறேன்.மீண்டும் பலப்பல நன்றிகள்.////

    அதிக வேலைப்பளுவினால் விடுபட்டுவிட்டது. கவனிக்கவில்லை. மன்னிக்கவும். அடுத்துவரும் உங்களுடைய ஆக்கங்களில் நினைவுபடுத்துங்கள். பயன் படுத்திக்கொள்வோம்!

    ReplyDelete
  28. என் மாமியார் அதை விழுந்து விழுந்து படிச்சும் பெரிசா ஒண்ணும் கத்துக்கலைங்கறது அடுத்த விஷயம்)"//.

    இப்படி ஒரு ஆறுதலா?எனக்கு ஒரு கண்ணு போனாலும் மாற்றானுக்கு 2 கண்ணும் போகட்டும் என்பது போலல்லவோ உள்ளது!

    புரியாமல் படித்தாலும் மகான்களின் உபதேசங்கள் வீணாவதில்ல.மதில் மேல் விழுந்த விதையைப் போல திடீரென முளைக்கும். யாராவது ஒருவர் ஊருக்கு உபயோகமாக மாறிவிடுவார்கள்

    ReplyDelete
  29. ////////////////////
    kmr.krishnan said... மைன‌ர்வாள் இந்தக் குறும்புதானே வேண்டாங்கிற‌து. ப‌ச்சைக்குழந்தைக‌ள் விளையாட்டில் என்ன‌ தீர்க‌த‌ரிச‌ன‌ம் இருகுங்காணும்? புகைப்ப‌ட‌ம் அடையாளங்‌க‌ளுட‌ன் வெளியாகியுள்ள‌ ஆக்க‌த்தில், இப்படி ஒரு 'டிவிஸ்ட்'
    கொடுத்தால், நான் தஞ்சையில் முகமூடி போட்டுக் கொண்டுதான் நடமாட வேண்டும்.ஆனாலும் மாத்தி யோசிக்கும் உங்கள் ரசனையை நான் ர‌சிக்கிறேன்.
    பின்னூட்டத்திற்கு நன்றி! \\\\\\\\\\\\\\

    நீங்க 'ஷார்ப்' ன்னு நல்லாத் தெரியும்..
    அதுனாலேதான் இப்பிடி ஒரு கமென்ட் அடிச்சேன்..
    புரிந்து கொண்டதற்கு நன்றி..

    எழுதுறதுக்கு, படிக்குறதுக்கு, கமென்ட் அடிக்குறதுக்குன்னு சில தகுதிகள் வேணும்..அது இல்லாதவுங்களிடம் அதை எதிர்பார்த்து ஏமாறாமல் இருப்பதே எழுத்து ஆர்வமுள்ளவர்களுக்கு அடிப்படைத்தேவைன்னு நான் நினைக்கிறேன்..

    ReplyDelete
  30. தம்பி ஆலாச்சியத்துக்கு எனது மனம் கனிந்த அன்புப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அறிவில் அவர் எங்கோ பல காதம் நான் எட்டமுடியாத அளவிற்கு சென்றிருக்கின்றார். அவர் வழியில் பலதையும் மெதுவாகத்தன்னும் அறிய ஆவல்.இறைவன் அருளால் அவருக்கு நீண்ட சுபீட்சமான எதிர்காலம் அமைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. மைனர்வாள்,
    மகாபாரத யுத்தத்தில் எல்லோரையும் ஸ்ரீ கிருஷ்ணரின் தயவோடு வீழ்த்திவிட்ட
    அர்ஜுனனை எதிர்த்துப்போரிடத்தயாராகும் அஸ்வத்தாமாவை பார்த்து துரோணர்
    " மகனே! ஜாக்கிரதை! அளவுக்கு அதிகமாக அர்ஜுனனை நெருங்கிவிடாதே" என்பார்.
    அதற்கு அஸ்வத்தாமா "தந்தையே நான் அர்ஜுனனை கண்டு அஞ்சவில்லை" என்பான்.
    அதற்கு துரோணர் " நான் அர்ஜுனனை விட அவனுடைய தேரோட்டியைகண்டுதான்
    பயப்படுகிறேன்" என்பார்.
    அதே போலத்தான் நான் தங்களை எச்சரிக்கிறேன் " மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக
    அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை
    கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்"
    அருட் தந்தை KMRK அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
    நந்தகோபால்

    ReplyDelete
  32. " மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக
    அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை
    கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்"
    அருட் தந்தை KMRK அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
    நந்தகோபால்"//

    ந‌ன்றி ந‌ந்த‌கோபால்.அருட் த‌ந்தை என்று அழைப்ப‌த‌ற்கெல்லாம் எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. மிகவும் சாதாரணன்.அன்பினால் அப்படி என்னை அழைத்துவிட்டீர்கள்.அதற்குத் தகுதியாக என்னை மாற்றிக் கொள்ள இனிதான் முயற்சி செய்ய வேண்டும்.


    மைனர்வாள் இந்தமுறை சொன்னதில் நுட்பமான நகைச்சுவை(subtle joke) உள்ளது.எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ!கொஞ்சம் அரசியல் வாடை அடிப்பதால் நான் அதற்கான தற்காப்புச் சொற்களை சொல்லி வைத்தேன்.


    மைனருக்கும் எனக்கும் நடுவில் "நீ அடிப்பது போல‌ அடி,நான் அழுவதைப் போல‌ அழுகிறேன்"என்று ஒரு புரித‌ல். எல்லாம் ச்சும்மா! ஒரு இதுக்கு!

    ReplyDelete
  33. ////////////// G.Nandagopal said... " மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக
    அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை
    கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்" \\\\\\\\\\\\\\\\\\
    ////////////////// kmr.krishnan said... ஒரு சிலரே சிரத்தையுடன் முழுதும் படித்து எழுதியவனின் அலை வரிசைக்கு வந்து அவனுடன் மனதால் கூடுகின்றனர்.
    அப்படிப் பட்ட புரிதலுடன் கூடிய வாசகன் கிடைப்பதே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சன்மானம்.\\\\\\\\\\\\\\\\\\\\
    அப்பிடின்னு KMRK சாரின் அங்கலாய்ப்பை வைத்துதான் எழுதுவது, படிப்பது, கமென்ட் அடிப்பது பற்றி சொல்லியிருந்தேன்..அவரும் இதே அர்த்தத்தில்தான் புரிந்து கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்..நினைத்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது, அப்படி எழுதியதை எழுதியவரின் மனவோட்டத்திலேயே சென்று அப்படியே புரிந்துகொள்ளும் வகையிலான வாசிப்பு, அதனடிப்படையிலான கமென்ட் என்று தகுதிப் படுத்திதான் KMRK சொன்னதைப் போலே 'ஒரு சிலரே' என்ற வார்த்தையையும் கோர்த்து எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்றெல்லாம் நான் நீட்டி முழக்கியிருந்தேன்..நந்தா..சார்..நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பது புதிரே..
    மற்றபடி ஒரு துக்க சம்பவத்தை பற்றி கமென்ட் அடிப்பது வேண்டாமே என்றுதான் என் பாணியில் கலாய்க்க இடம் தேடி மாத்தி யோசித்து சின்னதா ஒரு கலாட்டா பண்ணினேன்..இதை kmrk மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலும் சொல்லியிருந்தார்..
    இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது..
    வாரமலர் கூட ரெகுலர் வாசகர், எழுத்தர் என்று ஒரு சிறு குறுகிய பத்துப் பதினைந்து பேர் கொண்ட வட்டத்துக்குள் முடிந்து போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு எழுத்து ஆர்வமிக்கவர்கள் இந்தப் பத்து பேருக்கும் மெயிலில் ஆக்கத்தை அனுப்பி கருத்தை கேட்டால் என்ன?எதற்கு கிளாஸ் ரூமிலே இதெல்லாம்?என்று கூட நினைக்கத்தோன்றுகிறது..

    ReplyDelete
  34. மைனர்வால் மற்றும் அருட்தந்தை அவர்களுக்கும்
    உங்களிடையே உள்ள புரிந்துணர்வு பற்றி எனக்கு நன்றாக தெரியும்
    மேலும் மைனர் மற்றும் அருட்தந்தை அவர்களும் மிகவும் பண்பாடுடையவர்கள்
    என்பதும் எனக்கு நன்றாக தெரியும்
    ஒரு கலந்துரையாடளுக்காகவே அப்பிடி எழுதினேன்
    பிழை இருந்தால் பொருத்தருள்க
    நந்தகோபால்

    ReplyDelete
  35. அன்புடன்வணக்க்ம்
    ////நினைத்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது, அப்படி எழுதியதை எழுதியவரின் மனவோட்டத்திலேயே சென்று அப்படியே புரிந்துகொள்ளும் வகையிலான வாசிப்பு, அதனடிப்படையிலான கமென்ட் என்று தகுதிப் படுத்திதான் KMRK சொன்னதைப் போலே 'ஒரு சிலரே' என்ற வார்த்தையையும் கோர்த்து எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்றெல்லாம் நான் நீட்டி முழக்கியிருந்தேன்..நந்தா..சார்..நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பது புதிரே..மற்றபடி ஒரு துக்க சம்பவத்தை பற்றி கமென்ட் அடிப்பது வேண்டாமே என்றுதான் என் பாணியில் கலாய்க்க இடம் தேடி மாத்தி யோசித்து சின்னதா ஒரு கலாட்டா பண்ணினேன்..இதை kmrk மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலும் சொல்லியிருந்தார்..
    ////இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ??? என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது./////
    திரு மைனர் வாள் நண்பருக்கு ...என்போன்ற சாதாரண ஆட்களுக்கு உங்களை போன்று உங்களது மன்வோட்டதிலே புரிந்து கொண்டு உங்கள் எழுத்துக்களை புரிவது கடினம் ..எங்களுக்காக நமது ஸ்ரீ குருநாதர் போல எளிமையாக எழுதுங்களேன்..நாங்களும் புரிந்து கொண்டு ரசிப்போமே!!!நான் சொல்வது சரிதானா நண்பரே . தவறு இருந்தால் பொருத்து கொள்க !!! .

    ReplyDelete
  36. இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது..
    வாரமலர் கூட ரெகுலர் வாசகர், எழுத்தர் என்று ஒரு சிறு குறுகிய பத்துப் பதினைந்து பேர் கொண்ட வட்டத்துக்குள் முடிந்து போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு எழுத்து ஆர்வமிக்கவர்கள் இந்தப் பத்து பேருக்கும் மெயிலில் ஆக்கத்தை அனுப்பி கருத்தை கேட்டால் என்ன?எதற்கு கிளாஸ் ரூமிலே இதெல்லாம்?என்று கூட நினைக்கத்தோன்றுகிறது.."//


    ஆம்! முன்பு சோதிடப் பாட‌ம் ம‌ட்டுமே ந‌ட‌ந்து போது வ‌ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும்
    இப்போது பின்னூட்ட‌த்தில் வ‌ருவ‌தில்லை. அதை வைத்து அவ‌ர்க‌ள் எல்லோரும் பாடங்களைப் படிப்பதில்லை என்றும் சொல்வதற்கில்லை. என் உறவினர்களும் நண்பர்களும் சுமார் 30 பேர் வகுப்பறையில் பதிவு செய்யாமல் படித்து வருகின்றனர். அது போல் ப‌ல‌ர் இருக்க‌லாம்.

    ReplyDelete
  37. //////////////hamaragana said... நண்பருக்கு ...என்போன்ற சாதாரண ஆட்களுக்கு உங்களை போன்று உங்களது மன்வோட்டதிலே புரிந்து கொண்டு உங்கள் எழுத்துக்களை புரிவது கடினம் ..எங்களுக்காக நமது ஸ்ரீ குருநாதர் போல எளிமையாக எழுதுங்களேன்..நாங்களும் புரிந்து கொண்டு ரசிப்போமே!!!நான் சொல்வது சரிதானா நண்பரே . தவறு இருந்தால் பொருத்து கொள்க !!!\\\\\\\\\\\

    அதெல்லாம் ஒண்ணுமில்லை..எப்படி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்களைப் படிப்பதில் தங்கள் சுய சார்பிலான கருத்துக்களுடன் கலந்து ஒரு புது வடிவமான புரிந்துணர்வு வருவது இயல்பான விஷயமே..அதனால்தான் திருக்குறளுக்கு பரிமேலழகரில் ஆரம்பித்து இன்று வரை அவரவர் மனதில் தோன்றியபடி விளக்கவுரைகளை எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..எழுத்து என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும் பலப்பல புதுப் புது அர்த்தங்களை உள்ளடக்கியதே..உதாரணத்துக்கு இந்த 'ஜே' விவகாரம்..நான் KMRK சாரின் வரிகளை என் பாணியில் கையிலெடுத்து அவரே முற்றிலும் எதிர்பார்த்திராத புதுக் கோணத்தில் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்து அதில் அவரின் கருத்தாக்கி தர்மசங்கடம் கொடுக்காமல் தனிப்பட்ட எந்த தலைவரையோ அரசியல் தலைவரையோ சங்கத் தலைகளையோ விமர்சிக்காமல் பொதுவாக இன்றைய நடப்பை விமர்சித்து அதையும் மறைந்த 'முத்தண்ணா' வின் தீர்க்கதரிசனம் என்று பழியையும் எழுத்தாளரின் மேல் போடாது அவர் வடித்த கதாபாத்திரத்தின் மேல் சுமத்தி கொஞ்சம் சுவாரஸ்யத்துக்காக இந்த எழுத்து விளையாட்டு..இது எனக்குப் பொழுதுபோக்கு..இதே wave length இல் இருப்போருக்கும் பொழுதுபோக்காகவே அமையலாம்..தவறு என்று ஒன்றும் இல்லை..ஏதோ படித்து உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com