மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.6.16

Short Story சிறுகதை: மணமாலைக்கென்ன வழி?


Short Story சிறுகதை: மணமாலைக்கென்ன வழி?

மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிக் கொடுத்து சென்ற மாதம் வெளியான சிறுகதை ஒன்றை, உங்களுக்கு அறியத் தருவதற்காக இன்று வலையில் ஏற்றியுள்ளேன்!

அன்புடன் 
வாத்தியார்
------------------------------------

சிகப்பி ஆச்சி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். பரணி தரணி ஆளும் என்பார்கள். விட்டால் சிகப்பி ஆச்சி மொத்த இந்தியாவையும் ஆளக்கூடியவர். அந்த அளவிற்கு திறமையும் ஊக்கமும் உள்ளவர்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக முட்டி மோதிப் பார்க்கிறார். அவரால் அவருடைய ஒரே மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க முடியவில்லை. நொந்து போய் விட்டார்.

அவருடைய மகன் திரைப்பட நடிகர் ஆர்யாவைப் போல ஜம்மென்று இருப்பான்.பொறியாளர் பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றதோடு, மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலையிலும் சேர்ந்துவிட்டான். மூன்று ஆண்டுகளாகி விட்டன. வயது 25 ஆகிறது. ஆண்டிற்கு 18 லட்ச ரூபாய் சம்பளம். பெங்களூரில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றையும் வாங்கிவிட்டான். ஹுண்டாய் ஐ20 கார் ஒன்றையும் வைத்திருக்கிறான்.
தாயும் மகனும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். செட்டியார் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பில் காலமாகிவிட்டார். ஆச்சியிடம் கணிசமான அளவு பணம் இருக்கிறது. காரைக்குடி செக்காலைப் பகுதியில் வீடு ஒன்றும் இருக்கிறது.

இத்தனை இருந்தும் என்ன பயன்? பெண் மட்டும் கிடைக்கவில்லை.

நகரத்தார் திருமண சேவை இணைய தளத்தில் தெரிவு செய்து, ஜாதகம் பார்த்து, பொருந்தி வந்த 40 குடும்பத்தாருடன் பேசிப் பார்த்துவிட்டார். ஒருத்தர் கூடப் பிடி கொடுக்கவில்லை. பாதிப்பேர் பொருந்தவில்லை என்று சொல்லிவிட்டார்கள். மீதிப் பேர்கள் பதிலே சொல்லாமல் தட்டிக் கழித்துவிட்டார்கள்.

ஆச்சிக்கு வெறுப்பாகிவிட்டது.

ஒரு நாள் காலை, மகனைக் கூட்டி வைத்துப் பேசினார்:

”உனக்குப் பெண் பார்த்து மாளவில்லை. இனிமேல் பெண் கேட்டு எந்த செட்டிநாட்டு வீட்டையும் மிதிக்க மாட்டேன். ஆனால் உனக்கு மணம் முடித்து வைக்க வேண்டியது என் கடமை. உன் அலுவலகத்தில் 315 பெண்கள் வேலை பார்ப்பதாகச் சொல்வாயே.... அவர்களில் பத்து அல்லது இருபது பெண்களாவது உனக்குப் பழக்கமானவர்களாக  இருப்பார்களே. அவர்களில் உனக்குப் பிடித்த ஒருத்தியைக் காட்டு. அவள் கன்னடத்துக் கிளியாக இருந்தாலும் பரவாயில்லை அல்லது மலையாளத்து மயிலாக இருந்தாலும் பரவாயில்லை. அவள் வீட்டாருடன் பேசி, அவளையே உனக்கு மணம் முடித்து வைக்கிறேன்”

மகன் பாதிச் சிரிப்புடன் பதில் சொன்னான்:

”எனக்குக் கன்னடத்துக் கிளியும் வேண்டாம், மலையாளத்து மயிலும் வேண்டாம். செட்டிநாட்டுக் குயில்தான் வேண்டும்.”

“என்னடா, விளங்காமல் பேசுகிறாய்? செட்டிநாட்டில் ஏராளமான குயில்கள் திசைமாறிப் போய்விட்டன. இருக்கின்ற குயில்களும் வாங்குகின்ற சம்பளத்தால் இடக்குப் பேசுகின்றன. அவர்களைப் பெற்றவர்களும் ஊமைகளாக இருக்கிறார்கள். என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். நான் நொந்துபோய்த்தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன்.”

”எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களைப் பற்றித் தெரிந்தால் நீ மனம் தளரமாட்டாய். ஒருத்தியால் கூடக் குனிந்து தரையைத் தொட முடியாது. உடலைக் கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ் கால் சட்டை அணிந்திருப்பார்கள். சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும். எல்லாம் பணம் படுத்தும் பாடு. வாங்குகின்ற சம்பளமும், கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரமும் படுத்துகின்ற பாடு. ஒருத்தியும் நம்ம குடும்பங்களுக்கு லாயக்கில்லாதவள். மாலை நேரத்தில் இந்திரா நகர் பிரதான சாலையில் ஒரு ரெஸ்ட்டாரெண்ட் வாசலில் சிகரெட் பாக்கெட்டும் கையுமாக நின்று கொண்டிருப்பார்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு என்ன செய்வது?”

“என்னடா, இப்படிச் சொன்னால் எப்படி?”

“எங்கள் அலுவலகத்தில் ஒரு செட்டிநாட்டுப் பெண்கூடக் கிடையாது. அதனால்தான் சொல்கிறேன். முடிந்தால் ஒரு பெண்ணைப் பார்த்து எனக்குக் கல்யாணம் செய்து வை. இல்லையென்றால் நான் இப்படியே பிரம்மச்சாரியாக இருந்துவிட்டுப் போகிறேன்”

இதைச் சொன்னவன், சொன்னவுடன் எழுந்துபோய் விட்டான்.

ஆச்சி திகைத்துப் போய், என்ன செய்வது என்பது தெரியாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தார்கள்

அப்புறம் என்ன ஆயிற்று?

இறைவன் சாவியில்லாத எந்தப் பூட்டையும் செய்வதில்லை. அதுபோல தீர்வு இல்லாத எந்தப் பிரச்சினையையும் மனிதர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஆச்சியின் பிரச்சினைக்கும் அடுத்த மாதமே ஒரு தீர்வு கிடைத்தது.

என்ன அது? வாருங்கள் பார்ப்போம்!
                   
      ************************************************

வில்லிவாக்கம் வேலாயுதண்ணனின் நினைவு வந்ததும். சிகப்பி ஆச்சி உற்சாகமாகிவிட்டார்கள். அவரைப்போய்ப் பார்த்தால் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆச்சி அவர்களுக்கு அவர் உறவினரும் கூட.

வேலாயுதண்ணன் பரோபகாரி. செல்வந்தர். சென்னையில் உள்ள நகரத்தார்களில் பாதிப்பேர்களுக்கு அவரைத் தெரியும். உதவி என்று யார் வந்தாலும், உடன் சென்று அதை நிறைவேற்றிக் கொடுப்பவர்.

சிகப்பி ஆச்சி அடுத்த நாளே சென்னைக்குச் சென்று, அண்ணா நகரில் உள்ள தன் சகோதரியின் வீட்டில் இறங்கி, சிரம பரிகாரம் செய்து கொண்டு ஓலா கால் டாக்ஸி ஒன்றைப் பிடித்து, வில்லிவாக்கம் சென்று வேலாயுதண்ணனைப் பார்த்தார்.

இரண்டு வருடங்களாக தன் மகனுக்குப் பெண் தேடிய கதைகளை எல்லாம் சுருக்கமாகச் சொன்னதோடு, தன் மகனுடன் தான் வாதிட்டதையும் மறைக்காமல் கூறி முடித்தார்.

“நல்ல பையன். அவன் சொன்னது உண்மை. பல பெண்கள் மேல்போனதாக இருக்கின்றன. இன்றையத் தேதியில், செட்டிநாட்டுப் பெண்களைப் போல வேறு இனத்துப் பெண்களும் கட்டுப் பெட்டியானவர்கள்தான். நீ நினைப்பதுபோல அங்கேயும் பெண் பற்றாக்குறை உள்ளது. அந்தந்த இனங்களிலும் இந்தப் பிரச்சினை உள்ளது.ஆகவே நீ நினைப்பதுபோல அவ்வளவு சுலபமாக அங்கேயும் பெண்ணைப் பெற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கும் பல கண்டிஷன்கள் உள்ளன. ஆகவே கவலைப் படாதே!”

“என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்?”

“எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். நீ சம்மதித்தால், ஒரு மாதத்திற்குள், அவளையே உன் மகனுக்கு மணம் பேசி முடிக்க என்னால்முடியும். அவர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள்”

“உங்களுக்குத் தெரிந்த குடும்பம் என்றால் பிரச்சினையே இல்லை. பேசி முடித்துவையுங்கள் அண்ணே!”

“அந்தப் பெண்ணிடம் ஒரே ஒரு குறை மட்டும் உள்ளது. அதற்கு நீ சம்மதிக்க வேண்டும்”

“பெண் என்ன உள்ளதுப்போல இருப்பாளா?”

“இல்லை, பெண் தேவதைபோல இருப்பாள். வயது 23தான் ஆகிறது. பொறியியல் பட்டதாரி. அவள் தந்தை சென்னையின் பிரபலமான கம்பெனி ஒன்றின் தலைமை நிர்வாகி. நல்ல வசதி உள்ளவர்.ஆனால் அந்தப் பெண்ணிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் திருமணமாகி, கணவன் வீட்டில் பத்து நாள்கூட வாழவில்லை. திரும்பிவந்துவிட்டாள். அந்தப் பையனிடம் ஏதோ ஒரு உடற்குறைபாடு. அது தெரிந்தவுடன் இரண்டு வீட்டாருக்கும் பெரிய அதிர்ச்சி. அந்தப் பையன் வீட்டார், இவர்களை அழைத்து வருத்தத்துடன் தங்கள் தவறை ஒப்புக் கொண்டு, பரஸ்பர விவாகரத்திற்கும் ஒப்புக்கொண்டு, அவர்கள் வாங்கிய பணம், நகைகள், பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்ததோடு, நஷ்ட ஈடாக மேலும் பத்து லட்ச ரூபாய்களைக் கொடுத்து வெட்டிக் கொண்டு விட்டார்கள். சட்டப்படி விவாகரத்தும் ஆகிவிட்டது. பெண்ணின் தந்தை நொடித்துப் போய் விட்டார். நான்தான் பொறுங்கள். முருகப் பெருமான் இருக்கிறார். நல்ல வரனாகப் பார்த்துத் திருமணம் செய்வோம் என்று சமாதானப் படுத்தி வைத்துள்ளேன். பெண்ணைப் பார்த்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அப்படியொரு அம்சமான பெண். அவளுக்கு இப்படியொரு சோதனை!”

”என்ன, மறுமணத்திற்காக உள்ள பெண்ணை என் பையனுக்குச் செய்யலாம் என்கிறீர்களா?”

“மறுமணம் என்று ஏன் நினைக்கிறாய்? பெண் கார் ஷோ ரூமில் எடுத்த புதுக்கார் போன்றவள். இன்னும் யாரும் ஒட்டிப் பார்க்கவில்லை. நான் இதற்குமேல் உனக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. உன் பெண்ணாக இருந்தால் என்ன செய்வாய் சொல்!”

“அண்ணே எனக்குச் சம்மதம்தான் என் பையனையும் நான் சம்மதிக்க வைத்துவிடுவேன். ஊர் ஜனங்களுக்காகத்தான் பயப்படுகிறேன்”

“எதற்குப் பயப்பட வேண்டும்? இன்றைய பணத் தேடல் சூழ்நிலையில் யாருக்கும் நேரமில்லை. யாரும் பெரிதாகப் பேசமாட்டார்கள். இரண்டொருவர் பேசினால் பேசிவிட்டுப் போகிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான். எல்லாம் பத்து நாட்களில் அடங்கிவிடும். பிறகு மறைந்துவிடும்”

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?”

”முதலில் பெண்ணைப் பார். உன் விருப்பத்தைச் சொல். பிறகு ஆக வேண்டியதை நான் பார்த்துக்கொள்கிறேன்”

“ என் பையனையும் வரச் சொல்கிறேன். இருவரும் ஒன்றாகவே பார்த்துவிடுகிறோம்”

“நல்லது. உன் மகனை வரச் சொல். வடபழநி முருகன் கோயிலில் கொடி மரத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் வைத்து பெண்ணைப் பாருங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். மற்றதை எல்லாம் வடபழநி ஆண்டவர் பார்த்துக்கொள்வார்”

அடுத்து எல்லாம், மளமளவென்று நடந்தது. இரண்டாம் நாள் காலை பத்து மணிக்கு, இரண்டு குடும்பத்தார்களும் சந்திக்க வேலாயுதண்ணன் ஏற்பாடு செய்தார்.

வேலாயுதண்ணன் சொன்னதுபோல பெண் தேவதையைப் போல இருந்தாள். வேலாயுதண்ணன் சொன்னதுபோல பெண் குணவதியாக, புத்திசாலியாக இருக்கிறாளா என்று பார்ப்பதற்காக சிகப்பி ஆச்சி அவள் அருகே சென்று பேச்சுக் கொடுத்தார்.

“ஏம்மா, நீ வேலைக்குச் செல்கிறாயா?”

“படித்தவுடன் ஒரு நிறுவனத்தில் ஒரு ஆண்டு வேலை செய்தேன். பிறகு அவர்கள் நைட் ஷிப்ட் என்று வரச் சொன்னார்கள். என் தந்தையார் வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு நான் வேலைக்குச் செல்லவில்லை”

“திருமணத்திற்குப் பிறகு உனக்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் உள்ளதா?”

“திருமணத்திற்குப் பிறகு கணவரின் வீட்டார் சொற்படி நடப்பதுதான் முறை. ஆகவே நீங்கள் சொன்னால் வேலைக்குச் செல்வேன். இல்லை என்றால் வீட்டோடு ஹவுஸ் ஒய்ஃப்பாக இருந்துவிடுவேன்”

“எனக்கு என் மகன் ஒரே மகன். ஆகவே நானும் அவனோடுதான் இருப்பேன். அதில் உனக்கு ஒன்றும் சங்கடம் இருக்காதே?”

“அதில் சங்கடத்திற்கு ஏது இடம்? நான் உங்களை என் மாமியார் என்று நினைத்தால்தானே சங்கடம். உங்களையும் என் தாயார் போல நான் ஏற்றுக்கொண்டு விடுவேன்.”

“நன்றாகச் சமையல் செய்வாயா?”

“ஒரளவிற்கு ருசியாகச் செய்வேன். நீங்கள் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால், இன்னும் நன்றாகக் கற்றுக் கொள்வேன்”

இதுபோல இன்னும் இரண்டு மூன்று கேள்விகளை ஆச்சி கேட்க, அவளும் புன்னகையோடு, பொறுமையாகப் பதில் சொன்னாள். ஆச்சி அவர்கள் தன் மகனை அழைத்து பெண்ணோடு பேசிப்பார் என்று சொல்லிவிட்டு, கோயிலின் வாசலுக்கு விரைந்து சென்று அங்கே இருந்த பூக்கடை ஒன்றில் 4 முழம் மல்லிகைப் பூவை வாங்கிக் கொண்டதோடு, முருகப்பெருமானுக்காக பெரிய ரோஜா மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

ஆச்சியின் மகன் சமிக்கை மூலம் பெண்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்ல, ஆச்சி அவர்கள், பெண்ணில் கையில் மல்லிகைப்பூவைக் கொடுத்து வைத்துக்கொள். என்றார்கள். அவள் கெட்டிக்காரி,” நீங்களே வைத்துவிடுங்கள்” என்று சொல்லிக் குனிந்து தலையைக் காட்டினாள்.

ஆச்சி அந்தப்பெண்ணிற்கு பூவைச் சூட்டிவிட கல்யாணம் நிச்சயமானது.

வேலாயுதண்ணனுக்கும், பெண்ணின் பெற்றோர்களுக்கும் அளவிட முடியாத சந்தோஷம்.

அடுத்ததாக முருகப்பெருமாணின் சந்நிதிக்குள் நுழைந்து ரோஜாமாலையை வடபழநி ஆண்டவருக்கு சாத்தியதுடன், சாமி பெயருக்கு அர்ச்சனையையும் செய்துவிட்டு அனைவரும் திரும்பினார்கள்.

அருகில் இருந்த சரவணபவன் ஹொட்டலுக்கு இரண்டு குடும்பத்தாரையும் கூட்டிக் கொண்டு சென்ற வேலாயுதண்ணன், ரசமாலாய், வடை, ஃபில்டர் காப்பி என்று ஜமாய்த்துவிட்டார்.

வேலாயுதண்ணன் பேசத்துவங்கினார்.” திருமணத்தை அடுத்த மாதம் பொருத்தமான முகூர்த்த நாள் பார்த்துச் செய்வோம். எங்கே செய்யலாம்? பெண் வீட்டார் அவர்கள் ஊரில் வேண்டாம். செட்டிநாட்டிலுள்ள அவர்களுடைய கோயிலில் செய்யலாம் என்கிறார்கள். நீ என்ன சொல்கிறாய் சிகப்பி?”

”அப்படியே செய்யலாம். எங்கள் சொந்தக்காரர்கள், தாயபிள்ளைகள் 250 பேர்கள் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வருவார்கள்.
அவர்களுக்கெல்லாம் அவர்கள் கோயிலில் உள்ள விடுதியில் காலைப் பலகாரத்திற்கும், மதியச் சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிவிடுங்கள். மாலை 7 மணிக்கு எங்களூரில், எங்கள் வீட்டில் அனைவருக்கும் பெண் அழைக்கும் விருந்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.”

ஆச்சி தெளிவாகச் சொன்னார்கள்.

அப்படியே அடுத்துவந்த ஆவணி மாத முதல் முகூர்த்தத்தில் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. வந்திருந்த அனைவருக்கும் மணமக்களைப் பார்த்து மிக்க சந்தோஷம்.

பெண்ணின் பெற்றோர்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. ஸ்ரீதனமாக ரூபாய் ஐம்பது லட்சத்தைப் பெண்ணின் பெயரில் வைப்பு நிதியாகப் போட்டு வேலாயுதண்ணன் மூலம் மாப்பிள்ளையின் தாயாரிடம் கொடுத்துவிட்டார்கள்.

மற்றதெல்லாம் முக்கியமில்லை.

திருமணத்தின் போது ஆச்சி அவர்களின் காதில் அந்தப் பழைய பாடல் அசரீரியாக திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

என் கேள்விக்கென்ன பதில் 
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மெளனம் என்ன மொழி”

என்ற அந்தப் பழைய பாடலின் கடைசி இரண்டு வரிகள் மட்டும் இப்படி மாற்றத்துடன் ஒலித்தது.

மணமாலைக்கென்ன வழி
மலையோன் முருகன் சொன்ன வழி!”

மலையோன் முருகன் சொன்ன வழி என்ற வரிகள் மட்டும் திரும்பத் திரும்ப ஒலித்தது. திருமணத்தை முடித்துக் கொடுத்த வடபழநியாண்டவரை நினைக்க நினைக்க ஆச்சியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டுவிட்டது.

*********************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Respected sir,

    Thank q very much for your good story. Palani Murugan has done good things to good people. Edhu Nadakka vendumo adhu nadanthe theerum.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. ஆசிரியர் ஐயா வணக்கம்.
    யதார்த்தமான கதை.
    அருமை.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Touching story...

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. பலர் இப்படி யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை. அதனாலேயே பல பெண்களும் ஆண்களும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. வழக்கம் போல நல்ல கதை. "பெண் ஷோ ரூமில் எடுத்த புதுக்கார் போன்றவள். இன்னும் யாரும் ஓட்ட்ப்பார்க்கவில்லை"‍‍‍===== இதுதான் வாத்தியார் 'டச்' என்பது.

    ReplyDelete
  6. கதை உங்களின் கை வண்ணத்தில் நல்ல உதாரணத்தோடு (பூட்டுக்கேத்த சாவி, ஜாடிக்கேத்த மூடி, ஷோ ரூம் கார்) என்று ஜொலிக்கிறதைய்யா! ஓட்டிப் பார்க்காத கார்கள் விற்று விடுகின்றன. செகண்டு ஹேண்டு கார்களுக்கு மார்கட் கம்மிதான்.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,இந்த கதையில் ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை.மனப்பொருத்தமே முடிவு செய்திருக்கிறது.மனதிற்க்கு பிடித்திருந்தால்(நான் சொல்வது பணம்,நகை,கார்,பங்களா அல்ல)பண்ணலாமா?.அதாவது பார்த்தவுடன் மனதிலே ஒரு சாந்தி,ஒரு நிறைவு,ஒரு இனம் புரியாத திருப்தி,சந்தோசம் தோன்றினால் பண்ணலாமா?.நீங்கள் நடைமுறை வாழ்க்கை,ஜோதிடம் என்ற இரண்டு கரைகளையும் கண்டவர் எனவே உங்கள் மனதிற்க்கு பிடித்த இரண்டில் ஒன்றை ஜோதிடமா அல்லது மேலே குறிப்பிட்ட மனப்பொருத்தமா?எது போதும் என்று கூறினால் குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்.இரண்டுமே தேவையென்றால் மறுபடியும் குழப்பம்தான்.உங்கள் வழிகாட்டுதலுக்காக.அன்புடன் ஆதித்தன்.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா வணக்கம்.
    யதார்த்தமான கதை.
    அருமை./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Touching story...
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn///////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  10. //////Blogger ப.கந்தசாமி said...
    பலர் இப்படி யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை. அதனாலேயே பல பெண்களும் ஆண்களும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள்.//////

    உண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விர்க்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    வழக்கம் போல நல்ல கதை. "பெண் ஷோ ரூமில் எடுத்த புதுக்கார் போன்றவள். இன்னும் யாரும் ஓட்டிப்பார்க்கவில்லை"‍‍‍===== இதுதான் வாத்தியார் 'டச்' என்பது.//////

    கதையை ரசித்துப்படித்த மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger venkatesh r said...
    கதை உங்களின் கை வண்ணத்தில் நல்ல உதாரணத்தோடு (பூட்டுக்கேத்த சாவி, ஜாடிக்கேத்த மூடி, ஷோ ரூம் கார்) என்று ஜொலிக்கிறதைய்யா! ஓட்டிப் பார்க்காத கார்கள் விற்று விடுகின்றன. செகண்டு ஹேண்டு கார்களுக்கு மார்கட் கம்மிதான்.//////

    எல்லாவற்றிற்கும் ஒரு சந்தை உள்ளது. முயன்றால் அதையும் விற்றுவிடலாம்!

    ReplyDelete
  13. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இந்த கதையில் ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை.மனப்பொருத்தமே முடிவு செய்திருக்கிறது.மனதிற்க்கு பிடித்திருந்தால்(நான் சொல்வது பணம்,நகை,கார்,பங்களா அல்ல)பண்ணலாமா?.அதாவது பார்த்தவுடன் மனதிலே ஒரு சாந்தி,ஒரு நிறைவு,ஒரு இனம் புரியாத திருப்தி,சந்தோசம் தோன்றினால் பண்ணலாமா?.நீங்கள் நடைமுறை வாழ்க்கை,ஜோதிடம் என்ற இரண்டு கரைகளையும் கண்டவர் எனவே உங்கள் மனதிற்க்கு பிடித்த இரண்டில் ஒன்றை ஜோதிடமா அல்லது மேலே குறிப்பிட்ட மனப்பொருத்தமா?எது போதும் என்று கூறினால் குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்.இரண்டுமே தேவையென்றால் மறுபடியும் குழப்பம்தான்.உங்கள் வழிகாட்டுதலுக்காக.அன்புடன் ஆதித்தன்.நன்றி./////

    திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டாம் என்பது எனது அனுபவம்/கருத்து. ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணங்கள் எல்லாம் நன்றாக உள்ளதா? அதிலும் குளறுபடிகள் உள்ளன. ஜாதகம் பார்ப்பதால் விதிப்படி வரவுள்ளதைத் தடுக்க முடியுமா? முடியாது. ஆகவே ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் திருமணம் செய்வதுதான் நல்லது.
    ஜாதகம் பொருந்தினால் பெண்ணைப் பிடிக்காது.
    பெண்ணைப் படித்திருந்தால் ஜாதகம் பொருந்தாது.
    இதுதான் நடைமுறையில் நடப்பது. பலரையும் குழப்புவது!

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  15. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி.//////

    இதற்கெதற்கு நன்றி?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com