மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.5.11

அனைத்தும் அரசியல், அவ்வளவுதான்!

----------------------------------------------------------------------------------------
அனைத்தும் அரசியல், அவ்வளவுதான்!

ஞாயிறு மலர்

செல்வி ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசு, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டடத்தில்  சட்ட மன்றத்தையோ, தலைமை செயலகத்தையோ வைத்திருக்கப் போவதில்லை என்ற செய்தி
வெளியாகியிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு சிலர் பலத்த எதிர்ப்பினையும் தெரிவித்திருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது  மக்களுடைய வரிப்பணத்தை ஏராளமாகச் செலவு செய்து கட்டிய இடத்தை வேண்டாமென்று ஒதுக்குவது 
தவறாகத்தான் இருக்கும்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டியது என்பதற்காக சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த  காங்கிரஸ் அரசு அந்த இடத்தை வேண்டாமென்று ஒதுக்கவில்லை. அதுபோலவே டெல்லியிலுள்ள பாராளுமன்ற  கட்டடம், கல்கத்தாவிலுள்ள ரைட்டர்ஸ் கட்டடம், சென்னை மாநகராட்சி மன்றம் இருக்கும் ரிப்பன் கட்டடம்  இவற்றையெல்லாம் அன்னியர் கட்டியது என்பதற்காக நாம் ஒதுக்கிவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னரும்  அங்கெல்லாம் அரசாங்க அலுவலகங்கள் நடைபெறத்தான் செய்கின்றன.

ஆனால், சென்னையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் அவைகளிலிருந்து சற்று  மாறுபட்டது. எப்படி? தலைமைச் செயலகத்துக்குப் புதிதாகக் கட்டடம் கட்டப்படவேண்டுமென்கிற எண்ணம்
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போதே தோன்றியதுதான். அப்போது அவர்கள் ராணி மேரி கல்லூரி  இருக்குமிடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டலாம் என்று திட்டமிட்டார்கள். அப்போது அதற்கு பலத்த  எதிர்ப்பு ஏற்பட்டது. ராணி மேரி கல்லூரி பழைமை வாய்ந்தது; அதனை இடமாற்றம் செய்வதோ, அந்த கல்லூரி  கட்டடங்களை இடிப்பதோ கூடாது என்று போராட்டம் நடந்தது. அதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து 
நடத்தினார். போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அழிக்கக்கூடாது என்பதை  யாரும் மறுப்பதற்கில்லை என்றாலும், தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் அ.தி.மு.கவினரின் முயற்சிக்கு
முட்டுக்கட்டைப் போடுவதாகத்தான் அமைந்தது. வேறு இடம் பார்த்து முடிவு செய்வதற்கு முன்பாக அந்த ஆட்சி  முடிவுக்கு வந்தது. தி.மு.க. அரசு அமைந்ததும் புதிய இடம் தேடி இறுதியில் ஓமாந்தூரார் தோட்டத்தை முடிவு
செய்தார்கள்.

அதுவரை நடவடிக்கைகள் சரிதான். பிறகு அங்கு புதிய தலைமைச் செயலகத்துக்குக் கட்டடம் கட்டும் முயற்சியில்,  கட்டட வடிவமைப்பு முதல் அதன் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு அவ்வப்போது ஆலோசனைகளை  வழங்கி, முதன் முதலாகப் புதிதாக வீடு கட்டும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரைப் போல முதலமைச்சர் தனது  நேரடி கண்காணிப்பில் நடத்தி வந்தார். இப்படி முதல்வர் அங்கு தினமும் போய், கட்டட வளர்ச்சியைப் பார்த்து  ஆலோசனைகளை வழங்கியதை தினந்தோறும் ஒரு செய்தியாகவே வெளியிட்டு வந்தனர்.

ஒரு மாநிலத்தின் மிக முக்கியமானதொரு கட்டடப் பணியில் முதல்வர் ஆர்வம் காட்டியதில் ஒன்றும் தவறு  கிடையாது. கருணாநிதி கேட்டாரல்லவா, ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து 'ராமசேது'வைக் கட்டினான்  என்று. அதே கேள்வியை இப்போது இவரைப் பார்த்து கேட்க முடியுமே! இவர் எந்த கல்லூரியில் ஆர்கிடெக்ட்  எனும் கட்டட வடிவமைப்புக் கலையைப் பயின்றார். எந்த பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்
என்று. ஒரு கட்டடம் கட்ட டெண்டர் விட்டு அதனைக் கட்ட ஒப்புக்கொண்ட ஒப்பந்ததாரரிடம் பொறுப்பை  ஒப்படைத்துவிட்டு, அவ்வப்போது அதன் வளர்ச்சி பற்றி கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே. இந்த  வேலைகளைச் செய்யத்தான் மேற்பார்வையிடவும், ஆலோசனைகளை வழங்கவும் பொறியியல் வல்லுனர்களும்,  கட்டடத்தைக் கட்டும் பொறுப்பில் ஒப்பந்தக்காரர்களும் இருக்கிறார்களே, இவர்களெல்லாம் இருக்கையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தினமும் அங்கு போய் மேற்பார்வையிடுவது என்பது சற்று பொறுத்தமில்லாமல்  இருக்கிறது.

ஆனால் அவர் நடந்து கொண்ட முறையிலும், இந்த கட்டட வளர்ச்சியில் காட்டிய அதீத ஆர்வமும், அது குறித்து  ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளும், இது ஏதோ, அவரது ஆயுட்கால சாதனை போலவும், அவர்
எண்ணத்தில் உதித்து உருவாக்கிய "அறிவாலயம்" போலவும் ஒரு பிரமையை ஏற்படுத்தினார்கள்.

இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஆர்வத்திற்கு பதில் வெறுப்பையே வளர்த்தது என்று  சொல்லலாம். தன்னுடைய காலத்தில் கட்டியது, தான் முன்னிருந்து கட்டியது, தான் அந்த கட்டடத்தில் சட்டசபையை நடத்தி  முதல்வராக இருந்து சாதனை புரிந்தது என்று உலகம் உணரவேண்டுமென்கிற தணியாத தாகம்தான் அவரது  ஆர்வத்தில் தென்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த கட்டடம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த சட்டசபையின்  ஆயுட்காலத்துக்குள் அங்கு சபையை நடத்தி விடவேண்டும், அங்கு தனது பெயர் பளிங்குக் கல்லில்  பொறிக்கப்பட வேண்டும் என்பதில்தான் இவர்களது ஆசை இருந்தது.

அந்த அவசரத்தின் காரணமாக அரைகுறையாக முடிந்திருந்த கட்டடத்தில் முக்கியமான கூரைப் பகுதி முடியாத  நிலையில் அங்கு திரைப்பட செட்டினை அமைத்து அவசர அவசரமாக டெல்லி தலைவர்களை அழைத்து திறப்பு
விழா நடத்திடத் துடித்தனர். இந்த அவசரக் கோலத்தின் காரணமாகத்தான் மக்கள் மனங்களில் இந்த கட்டடத்தின்  உறுதித்தன்மை குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுவிட்டன.

இத்தனை காலம் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் நடந்த புனித ஜார்ஜ் கோட்டையில் இனியும் தொடர்ந்து  நடப்பதில் தவறு ஒன்றுமில்லை. புதிய கட்டடத்தை உபயோகிக்காமலா விட்டுவிடுவார்கள். அங்கு அதிகம் மக்கட்
புழக்கம் இல்லாத அலுவலகங்கள் அல்லது வேறு காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.

இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? கி.வீரமணியும், மருத்துவர் இராமதாசும் எதிர்க்கிறார்கள் என்றால் புரிகிறது.

ஆனால் வைகோவுக்கு என்னவாயிற்று? அவருக்குத் தெரியாதா இந்த உண்மைகள் எல்லாம்? அனைத்தும் அரசியல். அவ்வளவுதான்.

நன்றி, வணக்கத்துடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ----------------------------------------------------------------------------------------
2
'என்னாளில் காண்போம் இனி!?'


ஆச்சாரிய வினொபாபவே பற்றி இந்தத் தலைமுறையில் அறிந்தவர்கள் மிகவும் குறைவு.மஹாத்மா காந்திஜியின்  நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர்.

காந்திஜியின் புனிதக் கரங்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் சத்யாகிரகி.உண்மையில் காந்திஜியின் மூத்த மகன் அளித்த ஏமாற்றத்தை வினொபாஜி ஓரளவு ஈடுகட்டி, மஹாத்மாவுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தார்  எனலாம்.ஆம்!காந்திஜியும் வினொபாஜியும் தந்தை மகன் உறவே கொண்டிருந்தனர்.

10 பிப்ரவரி 1918ல் காந்திஜியின் கைகளால் வினொபாஜிக்கு குஜராத்தியில் எழுதப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்  இது.ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து
மொழி மாற்றம் செய்துள்ளேன்.இக்கடிதத்தில் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி வினொபாஜி கேட்டதற்கு  மஹாத்மா அளித்த மறு மொழி இது!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍Gandhiji's letter to Vonobaji
------------------------------------------------
                                                                                       சபர்மதி                                                                                              

10 02 1918

உங்களை என்ன சொல்லி எவ்வாறு புகழ்வது என்பதை நான் அறியவில்லை.

உங்களுடைய அன்பு,நற்குணம்,மற்றும் ஆன்ம பரிசோதனை எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது.உங்கள்  மதிப்பை அளக்க நான் தகுதியானவன் அல்ல.
உங்க‌ளைப் பற்றி நீங்களே கூறும் மதிப்பீடுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களுக்கு நான் தந்தையைப் போல நடந்து கொள்ளும் பொறுப்பை  என்மீது சுமத்திக் கொள்கிறேன் . ஒரு  தந்தையாக நான் எதிர்பார்த்ததை/ ஆசைப்பட்டதை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள் என்றே தோன்றுகிறது.

என் நோக்கில் ஒரு தந்தை என்பவன் உண்மையில் எப்போது சிறப்பான தந்தை ஆகிறான் என்றால், அத்தந்தையின் மகன் தந்தையைக் காட்டிலும் ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்கும் போதுதான்.அதுபோலவே ஒரு
உண்மையான‌ மகன் எப்போது சிறந்த மகன் ஆகிறான் என்றால் , எப்போது அம்மகன் தன் தந்தையின்  செயல்பாடுகளை இன்னும் முனேற்றுகிறானோ அப்போது; அது போலவே தந்தை உண்மையானவர்,  உறுதியானவர்,இர‌க்க சிந்தனை உடையவர் என்றால், தந்தையின் இக்குணங்களை மகன் தானும் கைக்கொண்டு  மேலும் சிறக்கச் செய்ய வேண்டும்.இதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.ஆகவே நீங்கள் எனக்கு அளிக்கும்  தந்தை ஸ்தானத்தை எனக்கு  உஙளிடமிருந்து கிடைக்கும் அன்புப் பரிசு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களுடை ய  சாதனைகள் எதுவும் என்னுடைய தூண்டுதல் மூலமாக வந்தது என்பதற்கான எந்தக் காரணத்தையும் நான்  காணவில்லை. என் தந்தைப் பாத்திரத்தை நான் சரியாகச் செய்ய எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். அப்படி என் தந்தைப்  பாத்திரதைக் கையாளும்போது நான் எப்போதாவது இரணியகசிபு போல ஆகிவிட்டால், நீங்கள் கடவுள் பக்தி மிகுந்த பிரகலாதனாக மாறி என்னை எதிர்க்கவும் தயங்கக் கூடாது...."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட கடிதத்தை எழுதும் போது காந்திஜிக்கு 50 வயது இருக்கும். தன் மூத்த மகன் ஹரிலால் சரியாக இல்லாத குறை அவருக்கு இருந்து இருக்கிறது.

வினொபாவிற்கு 23 வயது. அவர் ஒழுக்கத்துடன் நடப்பது மட்டுமில்லாமல், தன்னுடைய செயல் திட்டங்களை   ஏற்று செவ்வனே நிறைவேற்றுதலைக் கண்டு மனம் நெகிழ்ந்து இக்கடிததை எழுதி உள்ளார். அதுவும் வினொபா
த‌ன்னை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டது மஹாதமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியும்  ஏற்படுத்தியது.

"இவன் தந்தை என்னோற்றான் கொல்" என்று திருவள்ளுவர் மகனைப்பற்றிச்சொல்லியது போலவே காந்திஜியும்  அதே கருத்தைச் சொல்லியுள்ளது, உன்னதமானவர்கள் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

தன் மகன்களையே ஒழுங்காக வளர்க்கத்தெரியாத இவர் எப்படி தேச பிதா என்று காந்திஜியின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது.4 சொந்த மகன்களில் மூவர் மிகவும் நன்கு வளர்ந்தனர்.பிற்காலத்தில் நல்ல சமூக
சேவர்களாக உருவானார்கள்.வினொபாவைப் போல எண்ணற்ற அவருக்குப் பிறக்காத‌ மகன்கள், அவருடைய உள்ளத்தை அறிந்து செயல்பட்டனர்.

'நான் தவறு செய்தால் தந்தையையே எதிர்த்த பிரகலாதனைப்போல என்னை எதிர்க்காத் துணிய வேண்டும்' என்று  வினொபாவை மஹாதமா  கேட்டுக் கொண்டது ஜனநாயகத்தின் உச்சம்.

வினொபா சர்வோதய இயக்கத்தை எடுத்துக்கொண்டு இந்தியா முழுதும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்தார்.பூமிதானம் மூலம் பல ஏழைகளுக்கு நிலம் கிடைக்கப் பாடுபட்டார். 87 வயது வாழ்ந்தார். 1982 வரை  வாழ்ந்து நாட்டுப்பணி செய்தார்.

அவர் ஒரு பன்மொழிப் புலவர்.மராட்டியைத் தாய் மொழியாகக்கொண்டவர். தமிழ் நன்கு அறிந்தவர்.தமிழ் எழுதப்  படிக்கத் தெரிந்தவர் மட்டுமல்ல. நமது நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் நன்கு கற்றவர்.அவர் எழுதிய‌
'கீதைப் பேருரை' இன்று வரை பல பதிப்புக்கள் கண்டுள்ளது.

ஒருமுறை தமிழகத்தில் நடைப் பயணத்தின் போது விடியற்காலை நேரத்தில் "ஓவின என்றால் என்ன" என்று புதிர்  போட்டாராம்.

கூட இருந்த தமிழர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

திருவெம்பாவையில் வரும் அச்சொற்றொடரைப் பாடியே காண்பித்தாராம்.

"ஓவின தாரகை ஒளி ஒளி உத‌யத்து....." 

இவர்களைப் போன்ற உத்தமர்களை 'என்னாளில் காண்போம் இனி!?'

நன்றி, வணக்கத்துடன்
முக்காலம்


 ==========================================================

வாழ்க வளமுடன்!

28 comments:

  1. /// புதிய கட்டடத்தை உபயோகிக்காமலா விட்டுவிடுவார்கள். அங்கு அதிகம் மக்கட்
    புழக்கம் இல்லாத அலுவலகங்கள் அல்லது வேறு காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்/////.

    "சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில், புதிய தலைமைச் செயலகப் பகுதியில் உள்ள அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது. இவ்வாறு நிர்வாக வசதியே இல்லாமல், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்பதால் தான் சட்டமன்றம் மற்றும் அரசுத் துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டையில் எனது பணியைத் தொடருவேன் என்று தேர்தலின் போதே நான் அறிவித்திருந்தேன்.
    எனவே, நிர்வாக நலன் கருதி நான் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன்" - முதலமைச்சர். (நன்றி மாலைமலர்)

    எல்லாம் புகழுக்காகத் தான் என்பது முற்றிலும் உண்மை... ஒரு தெளிவோடு (முடிவோடு) முதலமைச்சர் ஆகி இருக்கும் ஜெயலலிதாவின் கருத்தும் ஏற்கக் கூடியதே!
    இதைத்தான் 1989 . புதிதாக வளரும் போதே எதிர் பார்த்தோம்... கை கொடுத்தோம் காட்சி மாறியது.... இப்போது தோன்றும் மாற்றம் ஆரோக்கியமாகத் தெரிகிறது, பார்ப்போம்...

    ReplyDelete
  2. வணக்கம் கோபாலன் சார்,

    தேவையான தருணத்தில் தக்க ஆக்கத்தை தந்திருக்கிறீர்கள்..

    மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. வணக்கம் முக்காலம் அவர்களே,

    வினோபாவைப் பற்றிய அருமையான செய்திகள்..

    அவரது மொழிப் புலமை குறித்த தகவல்கள் யாவும் அருமை..

    ஒரே ஒரு திருத்தம் முக்காலம் அவர்களே,

    //திருவெம்பாவையில் வரும் அச்சொற்றொடரைப் பாடியே காண்பித்தாராம்.

    "ஓவின தாரகை ஒளி ஒளி உத‌யத்து....." //

    என்பது திருவெம்பாவை அல்ல.

    இந்த தொடர் திருவாசகத்தின் 20 ஆம் பகுதியாக வரக்கூடிய
    " திருப்பள்ளியெழுச்சியின் " - 3 வது பாடலில் வரும் தொடராகும்.

    " ஓவின " - என்றால் " மங்கின " என்பது பொருள்..

    திருப்பள்ளியெழுச்சியால் அதாவது சூரிய உதயத்தால் தாரகைகள் எனப்படும் விண்மீன்கள் மங்கின என்பது அப்பாடலின் பொருளாகும்..

    நன்றி முக்காலம் அவர்களே..

    நல்ல ஆக்கங்களைத் தொடர்நது தரும் தங்களை வாழ்த்துகிறோம்..

    சிவயசிவ

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் ..ஆச்சர்ய வினோபாவே காந்திஜிக்கு எழுதிய கடித தமிழாக்கம் அருமை. ஒரு தந்தை மகன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல கருத்தான கடிதம். நன்றி திரு முக்காலம்.... எக்காலத்திற்கும் பயன்படும் கருத்து. !!!!!

    ReplyDelete
  5. அம்மையாரின் ஆட்சியின்போது 'க்வீன் மேரிஸ் கல்லூரி வளாகத்தில் புதிய சட்டமன்றம் அமைக்கப்படும்' என்று 2003 ஏப்ரல் 4 ஆம் தேதி வழக்கம்போல் சட்டமன்ற விதி 110 இன் படி பொது விவாதத்துக்கு வாய்ப்பளிக்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
    இந்த வளாகம் 30 ஏக்கரில் அமைந்த 88 வருட பழமையான கடற்கரையில் இருக்கிற பழமை வாய்ந்த 12 கட்டிடங்களில் ஒன்று என்கிறரீதியில் கலை மற்றும் பழமைப் பண்பாட்டு இந்திய தேசிய டிரஸ்ட்(INTACH )ட்டும் கடலோரப் பகுதி சீரமைப்பு (CRZ )மற்றும் town and country planning act விதிகளுக்குப் புறம்பானது என்றெல்லாம் காரணங்களைக் காட்டி நுகர்வோர்
    சங்கம்(CAG கோர்ட்டுக்குப் போனது.. இதுதவிர தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம் என்று மொத்தம் ஒன்பது பொதுநலன் ஆர்வ அடிப்படையிலான வழக்குகள்(PIL) பதிவு செய்யப்பட்டன..பல்வேறு பொது அமைப்புக்களும் களத்தில் குதித்தன..
    எல்லாவற்றிக்கும் அடுத்தபடியாக அப்போதைய மத்திய அரசில் அங்கம் வகித்த தமிழக எதிர்க்கட்சி திமுகவின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மத்திய மந்திரி T .R .பாலு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த 1986 ஆம் ஆண்டு விதிகளை காரணம் காட்டி 2003 ஏப்ரல் 22 லே இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்..
    ஏற்கனவே பலமுறை இடப் பற்றாக்குறை காரணமாக 1980களிலிருந்தே சட்டமன்றத்தை வேறிடத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற பேச்சுக்கள் இருந்த நிலையில் இப்படி கடலோர விரிவாக்கப் பணிகள் தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர் அம்மையாரால் அறிவிக்கப்பட்டு மலேசிய அரசின் கட்டட தொழில் வளர்ச்சி வாரியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யது கொள்ளப்பட்டுவிட்ட நிலையில் அது நடைமுறைப்படுத்தமுடியாமல் போனது ஒரு காயம் ஆகியிருந்தது..
    அது இப்போது அய்யாவின் ஆட்சியில் அமைக்கப்பட்ட 'எண்ணெய்த்தொட்டி(?)' யிலே எங்கள் ஆட்சி நடைபெறாது என்ற ரீதியில் ஜார்ஜ் கோட்டைக்கே பயணித்திருப்பது எல்லோருக்குமே புரிந்த தங்கமலை ரகசியம்தான்..
    ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறும்..காங்கிரஸ் எப்படி மாறுமோ?

    ReplyDelete
  6. ஆச்சார்ய வினொபாஜி பற்றிய என் கட்டுரையை வெளியிட்ட ஐயாவுக்கு என் நன்றியும் வணக்கங்களும்.

    'திருப்ப‌ள்ளி எழுச்சி' என்பதே சரி. தவறாக எழுதிவிட்டோமே என்று திருத்தம் ஐயாவுக்கு எழுத முனைந்த போது, மின் தடை, இணையம் தொடர்பு அறுதல் என்று மாறி மாறி சிரமங்கள் ஏற்பட்டு விட்டது.தவற்றினை சுட்டிக்காட்டிய அன்பர் உயர்திரு ஜானகிராமன் ஐயாவுக்கு நனறி.இனி இதுபோல் பிழைகள் வராமல் இருக்க முயற்சிகளை எடுப்பேன்.

    ReplyDelete
  7. காட்சிகள் மாறுகின்றன..
    கட்சிகள் பதவி பெறுகின்றன.

    கருத்துக்களும் தெளிக்கின்றன..
    கடுமையான எதிர்ப்புகளும் வருகின்றது

    திறமைக்கு வேண்டும் ஒற்றுமை அது
    திறந்து வைத்த மன்றத்தில் இல்லை

    கோட்டையிலே புதிய நிர்வாக
    வேட்டை புனைந்துள்ள அம்மாவிற்கு

    வணக்கமும் வரவேற்பும் தந்து
    வழக்கமான ஊக்கம் தராமல்

    தவறான கண்ணோட்டத்துடன்
    தனியாக அமைந்(த்)த ஆட்சியாளரை

    குறை சொல்வது 'வீ.ரா'க்கு சரியோ?
    குறையொன்றுமில்லை என பழைய

    கோட்டையிலே பள்ளத்திலிருந்து
    மேட்டை நோக்கி தமிழகத்தை

    வழிநடத்த வந்த நம் முதல்வருக்கு
    வாக்குகளை தந்தது போலவே

    வளமான வாழ்த்துக்களை தருவோம்
    வணக்கங்களுடன் நலம் பெறவே..

    ReplyDelete
  8. கடிதங்களின் வரிசையில் ஓர்
    படிவம்.. இதனை எப்படிச் சொல்ல?

    முக்காலத்தின் பதிவுகளில் வேறோர்
    முகம் (வரிகளில்) தெரிகிறது..

    திரை மறைவில் சொல்லுவது
    திரவியமோ.. திரண்ட செல்வமோ.!

    திரை விலகும் வரை..
    மறைவாகவே ரசிப்போம்..

    "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் "

    என்ற
    திருக்குறளினை சிந்தனைக்கு
    தந்து வருகை பதிவு தருகிறோம்.

    ReplyDelete
  9. /// சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    நன்றி முக்காலம் அவர்களே..\\\

    திருவாசகத்தை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..அந்த குறிப்பிட்ட வரிகள் திருவெம்பாவையில் வராது என்று பகிரங்கமாக எழுத திருவெம்பாவை தெரியாவிட்டாலும் ஆழ்ந்து திருவாசகம் படித்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன்.. இல்லை? திருவெம்பாவையுமே கரைத்துக் குடிக்கப்பட்டுவிட்டதா சிவசிமஜா அவர்களே?உங்கள் புலமையை விளக்க வாய்ப்பளித்த முக்காலத்துக்குத்தான் நீங்கள் சொன்ன நன்றியாக எடுத்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  10. வணக்கம் மைனர்வாள்,

    //திருவாசகத்தை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..//

    தற்பெருமைக்காக சொல்லவில்லை,
    திருவாசகத்தின் மேன்மைக்காக சொல்லுகிறேன்..

    திருவாசகம் ஒரு பக்தி நூல்..
    கல்லையும் கனிவிக்கும் ஆற்றலுடைய
    நூல்..ஓதுவோருடைய உள்ளத்தை உருக்கி உள்ளொளி பெருக்கும் நூல்..

    ஆதலால் அதை அனுபவ பூர்வமாக உணர்ந்தமையால்,

    2000 ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து தினசரி ஒருமுறை திருவாசக்ம் முழுவதையும்
    ( 658 பாடல்கள் ) பாராயணம் செய்துவிடும் இயல்புடையவனாக இருந்தோம்..

    எனவே திருவாசகம் முழுவதும் மனனமாக அறிந்திருந்தோம்..

    இப்போது வேலைப்பளுவினாலும், வேறு பல சிந்தனைகளாலும் அது இயலுவதில்லை - எனினும் மனன சக்தி குறைந்திருக்கிறது என்ற போதினும் அடியெடுத்துக் கொடுத்தால் பாடிவிடும் ஞாபகம் இருக்கிறது..

    போற்றத்தக்க திருவாசக சொற்றொடைரை இங்கு கையாண்ட
    " முக்காலம் " அவர்களுக்கும்,

    திருவாசகப் பெருமையை சிந்திக்கத்
    தூண்டிய " மைனர்வாளுக்கும் "
    நெஞ்சார்ந்த நன்றிகள்..

    சிவயசிவ

    ReplyDelete
  11. ////"தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் "என்ற
    திருக்குறளினை சிந்தனைக்கு தந்து"////

    இது புகழ்ச்சியா?ந‌க்கலா?இகழ்ச்சியா? ஒன்றுமே புரியல‌ப்பா சாமியோவ்!

    ReplyDelete
  12. வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

    அற்புதமான படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள்.நன்றி.

    தஞ்சை கோபாலன் ஐயா,ஒரே வார்த்தையில் உலக நிகழ்வுகளையே அடக்கிவிட்டீர்கள்
    //அனைத்தும் அரசியல் அவ்வளவுதான்.//

    முக்காலம் அவர்களே காலம் மாறிவிட்டது.

    இது போன்ற தளங்களும் உங்களைப் போன்றோரும் இல்லை என்றால்,
    // இது போன்ற உத்தமர்களை எந்நாளில் காண்போம் இனி என்று சொல்லமுடியாது.இது போன்ற உத்தமர்களைப் பற்றி எந்நாளில் கேட்போம் இனி? // என்று எம் போன்றோர் புலம்ப வேண்டியதுதான்.

    ReplyDelete
  13. வணக்கம் கவிச் சூரியன் ஆலாசியம் அவர்களே!

    மகாகவியைப் பற்றிப் பாடிய மதுரகவிக்கு ஒரே ஒரு வார்த்தை,அதுவும் மகாகவியின் வாக்கிலிருந்து.

    "உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை"

    இதை அவர் எங்கு எதற்காகப் பயன்படுத்தினார் என்பதையும் அடியேன் இங்கு எதற்காக சொல்கிறேன் என்பதையும் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.நன்றி.

    ReplyDelete
  14. ///திருவெம்பாவை தெரியாவிட்டாலும் ஆழ்ந்து திருவாசகம் படித்ததுதான் காரணம் ///

    "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை" எனத் தொடங்கும்

    திருஎம்பாவையும்
    திருவாசகத்தில் தானே வருகிறது...

    மைனர்வால் என்ன சொல்கின்றீர்கள்..
    பயனாளிகள் என்னசொல்ப்போகிறார்கள்

    இதை அதுவாக நினைத்தால்
    அதை அப்படியே விட்டுவிடலாம்..

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் உங்களுக்கும்..

    ReplyDelete
  15. ////////// iyer said...
    ///திருவெம்பாவை தெரியாவிட்டாலும் ஆழ்ந்து திருவாசகம் படித்ததுதான் காரணம் ///
    "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை" எனத் தொடங்கும்
    திருஎம்பாவையும்
    திருவாசகத்தில் தானே வருகிறது...
    மைனர்வாள் என்ன சொல்கின்றீர்கள்..
    பயனாளிகள் என்னசொல்ப்போகிறார்கள்
    இதை அதுவாக நினைத்தால்
    அதை அப்படியே விட்டுவிடலாம்..
    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் உங்களுக்கும்..\\\\\\\\\\\


    'திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்ற ஒரு வாசகத்தைத் தவிர திருவாசகம் பற்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே..ஏதோ சிவசிமஜா இவ்வளோ ஸ்ட்ராங்கா சொல்றாரே..அதுக்குக் காரணம் இது நல்லாத் தெரிஞ்சதுனாலே இதுலே அது வராதுன்னு சொல்றாரோன்னு இதுவும் அதுவும் வேறவேறன்னு நினைச்சு ஒரு நூல் வுட்டுப் பார்த்தேன்..அவ்வளோதான்..


    நீங்க சொல்றதப் பார்த்தா ரெண்டுமே ஒண்ணுக்குள்ளே ஒண்ணு..இதுக்குல்லேதான் அது வருதுன்னுற மாதிரியில்லே இருக்கு..எது எபிடியோ சிவசிமஜாவுக்கே மேட்டரை forward பண்ணிவுட்டுர்றேன்..தெரியாத மேட்டர்லே தலைய நிழைச்சா இப்பிடித்தான்..இப்பிடியாவுது எது எதுக்குள்ளே வருதுன்னு தெரிஞ்சுக்க முடியுமான்னு பாக்குறேன்..வுட்டா என்னையும் திருவாசகம் திருவெம்பாவைன்னு ஃபீல்ட்லே இறக்கி வுட்ட்ருவீங்க போலேருக்கே..தாங்காது சாமியோவ்..நான் இப்பிடியே ஜூட் வுட்டுக்குறேன்..அப்புறம் 'சிவனே' ன்னு இருக்குற சிவனே ருத்ரதாண்டவம் ஆடிடப்போறார்..பார்த்துக்கோங்க..

    ReplyDelete
  16. //வுட்டா என்னையும் திருவாசகம் திருவெம்பாவைன்னு ஃபீல்ட்லே இறக்கி வுட்ட்ருவீங்க போலேருக்கே.//

    அதே தான் ...
    அதுக்கே தான்...
    அடியேனும் அய்யரும் ஐடியா பண்றோம் ..
    வலையிலே மாட்ட மாட்டேன் என்கிறீர்களே ...
    விடமாட்டோம் ஆமா...

    ReplyDelete
  17. //திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்ற ஒரு வாசகத்தைத் தவிர திருவாசகம் பற்றி வேறொன்றும் யாமறியேன் பராபரமே.//

    ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறதுலே
    உங்களுக்கு நடிகர் திலகம் பட்டமே
    குடுக்கலாம் னு இருக்கோம்

    அன்பன்,
    சிவ.சி.மா. ஜா

    ReplyDelete
  18. ஆங்..வேணாம்..அழுதுருவேன்..நான்தான் ஒண்ணுமே தெரியாது.. வுட்ட்ருங்கங்குறேனே..
    இனிமேல் நிச்சயமா இப்புடி ஆழம் தெரியாம காலை வுடமாட்டேன்..

    ReplyDelete
  19. திருப்பள்ளியெழுச்சியை திருவெம்பாவை என்று ஏன் குழம்பிப்போனேன் என்று
    என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன்.

    முன்பு திருப்பாவை, திருவெம்பாவை ஓதுதல் ஓர் இயக்கமாகவே கைக் கொள்ளப்பட்டது. மார்கழி மாதத்தில் 30 நாட்க‌ளும் இது ஒரு வேள்விபோலவே கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகளில் இதற்கான போட்டிகள் எல்லாம் நடைபெறும். பாவை மாநாடுகள் எல்லாம் நடக்கும்.

    திருப்பாவை 30 பாடல்கள்.ஒவ்வொரு நாளுக்கு ஒரு பாடலாக மாதம் முழுதும் பாடலாம். ஆனால் திருவெம்பாவையோ 20 பாடல்கள்தான்.மீதி 10 நாட்களுக்காக திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் திருவெம்பாவையுடன் சேர்த்து ஓதுவதற்குப் பயிற்சி எடுத்தோம். திரு ஜானகி ராமன் ஐயா அவர்களைப்போல திருவாசக ஈடுபாடு ஆண்டுக் கணக்கில் இல்லாததால், திருவெம்பாவை சொற்றொடரே என்று எண்ணி திருப்பள்ளியெழுச்சி சொற்களை எழுதிவிட்டேன். திருவாசக அன்பர்கள் மன்னிப்பார்களாக.

    திருவெம்பாவைப் பாடல்கள் திருப்பாவை போலவே மார்கழி நோன்பு நோற்கும்
    பெண்கள் காலையில் எழுந்து, ஒருவரை ஒருவர் துயில் எழுப்பிக்கொண்டு இறைவனைக் காணச் செல்லுதல்.அவ்வாறு சென்று இறைவனின் இல்லத்திற்கு முன் நின்று இறைவனையே துயில் எழப்பாடுவதே திருப்பள்ளியெழுச்சி!இரண்டும் ஒருசேர வாசிப்பதே சாலச்சிறந்தது.

    ReplyDelete
  20. நான்தான் ஒண்ணுமே தெரியாது.. வுட்ட்ருங்கங்குறேனே.. இனிமேல் நிச்சயமா இப்புடி ஆழம் தெரியாம காலை வுடமாட்டேன்..//

    ஜானகிராமன், ஏன் அவரைப்போட்டு படுத்தறீங்க? அதான் ஒண்ணும் தெரியாது விட்டுடுங்கன்னு கெஞ்சறார் இல்ல? அவர் இப்படிதான் நெட்லேர்ந்து தேடிப்பிடிச்சி ஜெனிடிக் கோட் அப்படி இப்படின்னு எதையாவது எழுதி தெரிஞ்ச மாதிரி பில்ட் அப் குடுப்பாரு. அதப்பார்த்துட்டு நீங்க அவருக்கு நிறைய விஷயம் தெரியும்னு தப்பா நினைச்சிட்டீங்க. உண்மையிலேயே அவருக்கு ஒண்ணுமே தெரியாது. நல்லவேளையா திருவாசகமா அப்படின்னா என்னன்னு கேட்காம விட்டாருன்னு சந்தோஷப்படுங்க. (பாருங்க மைனர், உங்களுக்காக நான் எப்படி சப்போர்ட் பண்ணிருக்கேன்னு).

    ReplyDelete
  21. மைனர்வாள் ! உமா நம்பளை இப்படி மொக்கையாக்கிட்டாங்களே ?
    முடியாது மைனர்வாள் முடியாது !
    சிங்கமே வீறு கொண்டு எழு ..
    வாத்தியார் சொல்ற மாதிரி - ஒரு 30 பக்க
    கட்டுரை ஒண்ணு கொடுங்க - நாம உமாவை கவனிச்சுக்கலாம்

    ReplyDelete
  22. உமா உங்களை மாதிரி ஒரு சகோதரி கிடைக்க மைனர்வாள் என்ன புண்யம் பண்ணாறோ ?

    இப்படி வஞ்சப் புகழ்ச்சியா மைனரை தாளிக்கறீகளே ...

    இருங்க இருங்க அவர் கூடிய சீக்கிரம் பதிலடி
    ( 30 பக்க கட்டுரை )
    தரப் போறாரு !

    அப்ப உங்களை கவனிச்சுக்கறோம்

    ReplyDelete
  23. Uma said...
    நான்தான் ஒண்ணுமே தெரியாது.. வுட்ட்ருங்கங்குறேனே.. இனிமேல் நிச்சயமா இப்புடி ஆழம் தெரியாம காலை வுடமாட்டேன்..//

    ஜானகிராமன், ஏன் அவரைப்போட்டு படுத்தறீங்க? அதான் ஒண்ணும் தெரியாது விட்டுடுங்கன்னு கெஞ்சறார் இல்ல? அவர் இப்படிதான் நெட்லேர்ந்து தேடிப்பிடிச்சி ஜெனிடிக் கோட் அப்படி இப்படின்னு எதையாவது எழுதி தெரிஞ்ச மாதிரி பில்ட் அப் குடுப்பாரு. அதப்பார்த்துட்டு நீங்க அவருக்கு நிறைய விஷயம் தெரியும்னு தப்பா நினைச்சிட்டீங்க. உண்மையிலேயே அவருக்கு ஒண்ணுமே தெரியாது. நல்லவேளையா திருவாசகமா அப்படின்னா என்னன்னு கேட்காம விட்டாருன்னு சந்தோஷப்படுங்க. (பாருங்க மைனர், உங்களுக்காக நான் எப்படி சப்போர்ட் பண்ணிருக்கேன்னு).

    என்னை தெளிவா புரிஞ்சு வெச்சுருக்கீங்கோ..நன்றி...இன்றைய நிலையில் நாம எதையுமே தெரிஞ்சு memory லே வெச்சுக்க வேண்டிய அவசியம் இல்லைங்குறது என் பாலிசி...மெமரி லே வெக்க வேண்டியது முக்கியமான பாஸ்வோர்ட் எல்லாம் டைப் பண்ணின பைலை எங்கே வெச்சோம் என்பது போன்ற விஷயங்களைத்தான்..
    செகண்டுகளில் refer பண்றதுக்கு கூகிள் ஆண்டவர் இருக்கும்போது நான் பெரிய அறிவாளின்னு சீன் போட யாருக்கும் தெம்பு வராது..
    நான் அந்தந்த இடத்துக்கு தகுந்த விஷயங்களை எனக்கு மூட் இருக்கும்போது கூகிளில் அலசி முடிந்தவரையில் சாராம்சம் கெடாமல் மொழிமாற்ற அவசியம் இருந்தால் செய்து நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்..ஒவ்வொரு தகவலும் எடுக்கப்பட்ட பக்கங்களை லிங்க் கொடுத்து courtesy போட்டு ஆரம்பத்தில் பண்ணினேன்..ஏற்கனவே மேட்டர் length அதிகமாகி பிளாக்கர் சொதப்புது..அப்லோட் ஆகமாட்டேங்குது..அதுனாலே நானும் எஸ்சென்ஸ் மட்டும் அங்கங்கே எடுத்துக்கிட்டு என் பாணியிலே கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி தகுந்த சமயத்துக்கு அதிக தகவலை பகிர்கிறேன்..அதுனால இதையே ஒரு வாய்ப்பா வெச்சு எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எனக்குப்பட்டம் கட்டி
    அதுலே ஒருத்தருக்கு சுகம் கிடைச்சா அதிலே எனக்கு மகிழ்ச்சிதான்..எபிடியோ இந்த திருவாசகம் மேட்டரிலிருந்து என்னை ரிலீஸ் பன்னவாவுது நீங்க எடுத்த இந்த ஆயுதம் உதவி செஞ்சா அதுவே இப்போதைக்கு போதுன்னு நினைக்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  24. ஒண்ணுமே தெரியாதுன்னு எனக்குப்பட்டம் கட்டி அதுலே ஒருத்தருக்கு சுகம் கிடைச்சா அதிலே எனக்கு மகிழ்ச்சிதான் //
    ச்சே ச்சே அப்படிலாம் இல்ல. ஆமா நீங்க இவ்ளோ பெரிய தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கறதைப்பார்த்தா ரொம்ப சீரியஸ் ஆகிட்டா மாதிரி இருக்கு? நீங்கள் வழக்கம்போல தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏதோ உங்க மூலமா என்னை மாதிரி ஆட்களும் கொஞ்சம் அறிவை வளர்த்துப்போம் (அட நிஜமாதாங்க சொல்றேன்).

    இந்த திருவாசகம் மேட்டரிலிருந்து என்னை ரிலீஸ் பன்னவாவுது நீங்க எடுத்த இந்த ஆயுதம் உதவி செஞ்சா அதுவே இப்போதைக்கு போதுன்னு நினைக்கிறேன்..நன்றி..//

    ஏதோ நம்மால முடிஞ்சது. உதவின்னா நாங்கள்லாம் ஓடி வந்துடுவோமில்ல.

    ReplyDelete
  25. மைனர், கேட்கணும்னு நினைச்சிகிட்டே இருந்தேன். தற்போது ஜப்பானில் என்ன நிலவரம்? நீங்க இருக்கும் பகுதியில் சேதம் இருந்ததா? வீடு, வேலைன்னு எல்லாம் செட் ஆயிருக்கும்னு நம்பறேன்.

    ReplyDelete
  26. ச்சே..ச்சே..சீரியஸா..நான் ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கலே..எனக்கு இப்பிடி விளக்கமளிக்க ஒரு சான்ஸ் கிடைச்சதுக்கு நன்றி..
    ஜப்பான் வழக்கம் போலே போகுது..நான் இருக்குற இடத்திலே ஒண்ணும் பெரிசா பாதிப்பு தெரியலே..(பாதிப்பு நடந்தப்பதான் நாம இடத்திலேயே இல்லியே)
    புது இடம் போறதா முடிவெடுத்து வேலைகள் ஆகிக்கொண்டிருக்கிறது..அதுதான் நியூஸ்..அதுனாலே அடுத்தவாரத்துக்கப்புரம் இடையிலே கொஞ்சநாள் கிளாஸ்ரூம் வர தாமதம் ஆகும்..
    இதுதான் லேட்டஸ்ட் தகவல்..
    இதெல்லாம் கூகிளில்லேருந்து எடுத்தது இல்லீங்க..என் சொந்த விஷயம் தொடர்பான தகவல்தான்..ஆமா..சொல்லிட்டேன்..

    ReplyDelete
  27. சொல்லிமுடிக்கவில்லை..ஒரு கடுமையான ஷேக்கிங்..அதாங்க quake ..feel பண்ணினேன்..

    Earthquake Information (Information on seismic intensity at each site)
    Issued at 20:12 JST 26 May 2011

    Occurred at (JST) Latitude
    (degree) Longitude
    (degree) Depth Magnitude Region Name
    20:07 JST 26 May 2011 36.7N 140.7E very shallow 3.0 Ibaraki-ken Hokubu


    Seismic Intensity at each station
    (* mark: Local Governments' or NIED's station)
    Prefecture JMA Seismic Intensity Station Name

    Ibaraki 1 Takahagi-shi Arakawa*

    This earthquake poses no tsunami risk.

    ReplyDelete
  28. ச்சே..ச்சே..சீரியஸா..நான் ஒண்ணும் சீரியஸா எடுத்துக்கலே// அதானே பார்த்தேன்!

    இதெல்லாம் கூகிளில்லேருந்து எடுத்தது இல்லீங்க..என் சொந்த விஷயம் தொடர்பான தகவல்தான்// ஹா ஹா. நான் விக்கிலீக்ஸ் லேர்ந்து எடுத்தீங்களோன்னு நினைச்சேன்.

    சொல்லிமுடிக்கவில்லை..ஒரு கடுமையான ஷேக்கிங்..அதாங்க quake ..feel பண்ணினேன்..// ஐயோ, படிக்கவே பயமா இருக்கு. வேற எந்த நாட்டிலாவது வேலைக்கு முயற்சி செய்யுங்களேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com