மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.10

என்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய வாரமலரை நமது வகுப்பறையின் மூத்த மாணவர்கள்
இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அத்துடன் உங்களின் பின்னூட்டங்களை, அவர்கள் பதில் சொல்வதற்கு வசதியாகத் தனித்தனியாக இடும்படி கேட்டுக்கொள்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்?

இன்றைய வாரமலரை, கோமதியம்மனின் உறைவிடமான சங்கரன்கோவில் என்னும் திருத்தலத்தை சேர்ந்தவரும், 
நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான 
திருவாளர் எஸ்.என். கணபதி அவர்களின் ஆக்கம் கீழே உள்ளது. 
அதைத் தொடர்ந்து தஞ்சைப் பெரியவரின் ஆக்கம் உள்ளது,  
அனைவரும் படித்து மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Over to their postings!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

                                                 தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அம்மா, நீ பாஸ் பண்ணிட்டே! 1978 இல் எனது வாழ்க்கைத்
துணையிடம் நான் பேசிய முதல் வார்த்தை அது!

அவள் SSLC. பரீட்சை எழுதி இருந்தாள் .அவளுக்கு வயது16  எனக்கு
வயது 23.  அம்மா, அப்பா, அண்ணன், மதினி, குழந்தைகள் என்று
கூட்டுக் குடும்பம். அவள் ஏழு மாதக் கர்ப்பிணி!

எனது அப்பா, காசி, கயா என்று சென்றவர், தனது பிர்துர்க்களுக்குப்
பிண்டம் போட்டதோடு தானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டார்.
உடன் சென்ற எனது அம்மா அஸ்தியோடு திரும்பி வந்தார்கள்!

சுற்றி இருந்தவர்கள் “என்னம்மா ஜாதகம்? நல்லா பார்த்தீங்களா?
மருமகள் வந்து ஏழு மாதமே ஆகிறது. உங்கள்  தாலி கிழே இறங்கி
விட்டதே!” என்று குறை சொன்னார்கள்.

அம்மா சொன்ன பதில் வார்த்தை: “என் தாலி இறங்க விதி: அவ
என்ன செய்வா? உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க!!”

இரண்டு ஆண் குழந்தைகள். 14.வருஷம் கூட்டாக குடித்தனம். நல்ல
வசதியான வாழ்க்கை!!!! அண்ணன் தனி குடித்தனம் போக வேண்டும்
என்று கிளம்பி விட்டார். அடுத்த கட்டிடம் குடித்தனத்துக்கு  ஏற்றாற்
போல் சரி செய்து போயாச்சு. என உடன் பிறந்தோர்கள் என்னையும்
சேர்த்து மொத்தம் எட்டு பேர்கள். ஐந்து பெண் மூன்று ஆண் நான்
எட்டாவது எல்லோருக்கும் நல்ல மண வாழ்க்கை. அப்பா செய்து
வைத்தது!!

தொழில் விசைத்தறி துணி உற்பத்தி..1992 வரை சுலபமான வியாபாரம். அண்ணன் “சொத்தைப் பிரிப்போம்”  என்றார் ..!!! சொத்தைப் பிரிச்சாச்சு !!!!.

ஒரு சமயம் தொழில் நடத்த முடியவில்லை. “கவலைப் படாதீர்கள்
நான் இட்லி சுட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்!” என்றாள் என் மனைவி. அதற்கு அவசியமில்லாமல், சொத்து இருந்தது. வேறு
தொழில் செய்யத்துவங்கினேன். இருசக்கர வாகன நிதி நிறுவனம்.
வாழ்க்கை சீராக நடந்தது!.

சமய தீட்சை, சிவ தீட்சை இரண்டையும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு விட்டோம். மேலும் சிவ பூஜையையும்  ஏற்றாகி விட்டது. இரண்டு பேரும் தினமும் சிவ பூஜா செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையைச் செய்வோம்!

விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் வந்தால் அவர்கள் மனம் மற்றும் வயிற்றை நிறைவு செய்வதில் அவளுக்கு  நிகர் அவளே!

அதிலும் சிவனடியார்கள் என்று வந்தால் ரெண்டு பேருமாகச் சேர்ந்து
சுமார் 20. பேருக்கு சமைத்து மாகேஸ்வர  பூஜை செய்து விடுவோம்!

அம்மா என் வீட்டில் தங்கினார்கள். அண்ணன் வீட்டில் அவர்கள்
உணவை உண்டார்கள்! அம்மா இங்கேயே  சாப்பிடு. நீ சாப்பிடா
விட்டால் நானும் சாப்பிடுவதில்லை என்று உண்ணாவிரதம்
இருந்ததில், சரி ஒரு நேரம் சாப்பிடுகிறேன் என்று இரவு முதல்
காலை வரை டிபன் என்று கொஞ்ச காலம் சென்றது.

ஒருநாள் படியில் இறங்கும்போது கால் தவறி என் அம்மாவின் இடுப்பு
எலும்பு முறிந்து விட்டது.. மருத்துவம் செய்து, வீட்டுக்குத் திரும்பக்
கூட்டி வந்தோம்!! அப்புறம் ஒன்றரை வருடம். எனது அம்மாவுக்கு
எல்லாமே படுக்கையில்தான்  என்னும் நிலைமை ஏற்பட்டது.

நானும் அவளுமாக அள்ளிப்போடும் ஒரு வாய்ப்பை இறைவன்
கொடுத்தான்! 2006ல் அம்மா சிவனடியைச் சேர்ந்துவிட்டார்கள்.

இதில் ஒரு விசேடம் -- என அம்மாவுக்கு என்னவளைப் பிடிக்காது.
மதினியின் (என் சகோதரனின் மனைவி)  சொல்லே வேத வாக்கு.
ஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் என் அன்னைக்குப் பணி
விடைகள் செய்யவில்லை.

இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்தேனோ?

மூத்த மகன் ரிஷப லக்னம். சிம்மத்தில், ஆறு கிரகங்கள்!! இரு
சுபர்கள்: சுக்கிரன், குரு: இரண்டு வில்லன்கள் ராகுவும் சனியும்.
ஒரு பாவி:  சூரியன், ஒரு ரெஃபிரி:  புதன். அத்துடன் அவனுக்கு
அப்போது ராகு திசை வேறு

கிரஹயுத்தத்தால் என்ன நடந்தது, அதனால் எனக்கு ஏற்பட்ட
அனுபவம் என்ன என்பதைத் தனியாகக் கேளுங்கள்!

அவனையும் ஒரு மனிதனாக்கி, அரேபியாவில் வேலை வாங்கிக்
கொடுத்துத் திருமணமும் செய்த்கு வைத்தேன்.  வசதிகள்
குறைவான வீட்டுப் பெண் அவள். ஆனாலும் மகராசி. அவளைப் பெற்றவர்களுக்குக் கோவில்  கட்டிக் கும்பிடவேண்டும்

ஆமாம்! வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. அவளுடன் தன் மாமனாரின் வீட்டிற்கே அவனும்
சென்று விட்டான். தற்போது ஓமனில் வசித்து வருகிறான்.
அவனுடைய சேமிப்புக்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறன.

பேத்தி பிறந்தபோது, ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று பார்த்து
வந்தோம். அவ்வளவுதான். எங்கே  இருந்தாலும் நன்றாக 
இருக்கட்டும்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எல்லாம் பிராப்த கர்மம். வாங்கி வந்த வரம்!                             

ஒரே ஒரு ஆறுதலான விஷயம் சின்ன மகன் அமெரிக்காவில்
இருக்கிறான். “கவலை படாதீர்கள். எனக்கு பொண்ணு பார்த்து மணம் செய்வியுங்கள் அவளுடன் நீங்களும் இங்கேயே வந்து  தங்கி
இருங்கள்!” என்கிறான்.

எங்களுக்குத் திருமணம் முடிந்து 32 ஆண்டுகள் ஆகின்றது. இன்றுவரை எனக்கு சேலை வேணும் நகை வேணும்  என்று என் மனைவி என்னிடம் எதுவும் கேட்டதில்லை

ஒன்றே ஒன்றை மட்டும் அடிக்கடி சொல்வாள்:
“உங்களுக்கு முன்னால் நான் போகணும்.!"

அது உண்மையும் கூட என்னை விட்டு பிரிந்து இருப்பது அவளுக்கு சிரமம்!

தர்ம மகராஜா 2017 or 2023 ல் என்னைப் பார்த்துக் கூட்டிக்கொண்டு
போக வரலாம். அதற்கு முன் அவர் அவளைக் கூட்டிக் கொண்டு
போக வேண்டும்.! தற்சமயம் அது தான் என்னுடைய ஒரே ஆசை!

இதைப் படிக்கும் பெரியவர்கள் அசீர்வாதம் செய்யுங்கள்; 
மற்றவர்கள் வாழ்த்துங்கள்!

ஆக்கம்: கணபதி நடராஜா (S.N.கணபதி) வயது 56, சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்


படத்தில் இருப்பது திருவாளர் கணபதி நடராஜாவும், 
அவரது துணைவியாரும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம் எண் 2

நாமக்கல்லின் நடுவில் இருக்கும் குன்றின் எழில் மிகு தோற்றம். 
குன்றின் கிழக்குப்புறம் நாமகிரி அம்மனின் கோவிலும், 
மேற்குப்புறம் ஸ்ரீரெங்கநாதப் பெருமானின் கோவிலும் உள்ளன. ஸ்ரீரெங்கநாதப் பெருமான் கோவிலுக்கு எதிரில் 
சுமார் 200 அடிகள் தூரத்தில் 
ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானின் கோவில் உள்ளது. 
மூன்றுமே அற்புதமான கோவில்கள். 
வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமா

கடவுள் தானே நேராக வந்து வரமளிக்க மாட்டாராம்.
"மனுஷ்ய ரூபேண"-மனித வடிவத்தில் தன்னை மறைத்துக்
கொண்டு தன் பக்தரை பரிபாலிப்பாராம்!

இன்னும் சொல்வார்கள்."கடவுள் எல்லா இடத்திலும் தானே
இருப்பதற்குப் பதிலாக தாயார்களைப் படைத்தார்". "தாயின்
அன்பு கருணை,பாசம் பரிவு எல்லாம் ஒரு சேர அமைந்தவர்
தான் இறைவன்" என்றும் சொல்வார்கள்.

அப்படி ஒரு தெய்வம் போல எங்களுக்கு வந்து உதவியவர்
தான் 'மௌன்ட்ஹௌவுஸ்' மாமா என்று அழைக்கப்பட்ட
நாமக்கல் ராமசுவாமி அய்யர்!  இதுவரை என் 'நீங்காத
நினைவுகள்' நான்கு கட்டுரைகளாக வகுப்பறையில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன. இப்போது சொல்லப் போகும்
செய்தியும் நபரும் முதல் கட்டுரையாக வந்திருக்க வேண்டும்.
காரணம் எதுவும் இல்லாமலே மாமா பின் தங்கிவிட்டார்.
எப்போதுமே அவர் இப்படிதான்.

"அன் அஸ்யூமிங்க்" பூத உடலுடன் நடமாடிக்கொண்டு இருந்த
போதும் இப்படிதான். தன்னை நன்கு மறைத்துக்கொண்டு,
புகழுக்கெல்லாம் மயங்காமல் தன் போக்கில் தன் இயல்பான
உதவிகளைச் செய்து வந்தவர்.

நாமக்கல் பற்றி அறிந்தவர்கள் அங்குள்ள பிரம்மாண்டமான
ஆஞ்சனேயரைப் பற்றி சிலாகித்துக் கூறுவார்கள்.இன்னம்
கொஞ்சம் விவரம் அறிந்தவர்கள் யோக நரசிம்மரையும்
நாமகிரித் தாயரையும் நினைவு கூறுவார்கள்.இலக்கிய வாதிகள்,
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது..."என்று உப்பு
சத்யாகிரக அணிவகுப்புப் பாடலை எழுதிய ராமலிங்கம்
பிள்ளை அவர்களை நினைவு படுத்துவார்கள்.

வாணிபத்தில் ஆர்வம் உள்ளவர்கள், டேங்கர் லாரி கட்டும்
தொழில் நாமக்கல்லில் எப்படி படிப்படியாக வளர்ந்தது என்று
விவரிப்பார்கள்.சத்துணவில் போடப்படும் முட்டைக்கு தமிழக
அரசு நாமக்கல்லையே நம்பி உள்ளது என்ற தகவல் சிலர்
கூறக்கூடும்.நாமக்கல் லாரித் தொழிலில் சம்பந்தமுடைய
ஆண்களுக்குப் பெண் கொடுக்க அவர்கள் சார்ந்த சமூகம்
தயங்குவதால் கேரளப் பெண்களை தரகர் மூலம் திருமணம்
முடிப்பது பெருகி வருகிறது என்று சமூகவியல் வல்லுனர்
கூறுவார்.

எங்கள் இல்லத்திலோ நாமக்கல் என்ற பெயர் சொன்னாலே
'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமாதான்.எப்படி அந்த ஊர்
ஆஞ்சனேயர் தனியாக உயரமாக கம்பீரமாகக் காட்சி
அளிக்கிறாரோ, அதே போல மாமாவும் தனியாள்தான்.
குடும்பம் கிடையாது.தான் வைத்திருந்த புத்தக, நாளிதழ்,வார
மாதயிதழ், எழுது பொருள் அங்காடியிலேயே சமையல்,
சாப்பாடு, உறக்கம் எல்லாமும்.

மாமா நல்ல உயரம்.பளபள என்று மின்னும் தங்க நிறமும்
பிரௌனும் கலந்த, ஒரு விவரிக்க முடியாத, ஆனால் மிக
அழகான ஒரு நிறத்தில் ஜொலிப்பார்.இந்தியாவின் இரும்பு
மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவ்ர்களையும், 
ராமசாமி மாமாவையும் அருகருகே வைத்து ஒப்பிட்டால்
இருவரும் இரட்டையர்கள் அல்லது ஒரு தாய் வயிற்றுப்
பிள்ளைகள் என்று கூறத்தோன்றும்.அதுபோலவே
பெருந்தலைவர் காமராஜரை நினைவுபடுத்துவதுபோலக்
கதரில் தொள தொள அரைக்கை ஜிப்பாவும் நாலு முழ
வேட்டியும் அணிந்து கம்பீரமாக நடந்துவருவார் மாமா.

என் தந்தையார் உயரம் குறைவு.மாமா நல்ல உயரம்.
இருவரும் சேர்ந்து தெருவில் நடந்து வந்தால் லாரல்-
ஹார்டி மாதிரிதான் தோன்றும்.ஆனால் மாமா, என்
அப்பா இருவருமே சீரியஸ் டைப்.சிரிப்பு அவர்களிடம்
ரேஷன் கடை சீனி போல அளவோடும் எடை
குறைவாகவும் தான் கிடைக்கும்.

'மௌன்ட் ஹௌவுஸ்' மாமா என்று அவருக்கு ஏன் பெயர்?
அவர் வைத்து இருந்த கடையின் பெயர் 'மௌன்ட் ஹௌவுஸ்'.
அந்தப் பெயரே மாமாவுக்கும் வைத்துவிட்டோம்.தனித்தமிழ்
ஆர்வலர்களுக்காக "குன்று இல்லம்"என்று வேண்டுமானால்
மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.நாமக்கல் மலையைச் சுற்றியுள்ள
ஊர். அதனால் மாமாவின் கடைக்கு 'மௌன்ட் ஹௌவுஸ்'
என்ற பெயர் சரிதான்.

மாமாவை பற்றி என் முதல் நினைவு அவர் வரும்போதெல்லாம்
மறக்காமல் வாங்கிவரும் தின்பண்டங்கள்தான்.அதிலும்
குறிப்பாக சேலம் வில்வாத்ரிபவனில் இருந்து வாங்கிவரும்
ஜாங்கிரிக்காக நான் ஏங்கியது உண்டு.மாமாவுக்கு

எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை அதிகம்.எங்கள் குடும்பம் பெரிது.
வருவோரும் போவோருமாக எப்போதும் வீடு நிறைந்திருக்கும்.
அப்பாவின் வருமானம் வீட்டு வாடகை, உணவு, பள்ளிக் கட்டணம்
ஆகியவற்றுக்கே போதும் போதாமல் இருக்கும்.உடைத் தேவை என்
தாயார் பெட்டி ராட்டையில் நூற்கும் நூலால் நிறைவு பெறும்.

அப்பாவும் விடியற்காலையில் எழுந்து நூல் நூற்பார்.அவ்ர்கள்
இருவரும் தங்கள் கையால் நூற்ற நூலையே ஆடையாக்கிக்
கொள்வார்கள்.குழந்தைகளுக்கும் பெரும்பாலும் கதர்தான்.
சிலசமயம் கைத்தறிக் கண்காட்சியில் ஒரு சில கதரில் இல்லாத
வகைகளை வாங்குவார்கள்.எனவே புத்தகம் நோட்டு பென்சில்
பேனா ஆகியவை எங்களுக்கு எட்டாக்கனி.

நான்கு பிள்ளைகளுக்கு இவற்றை வாங்க அப்பா கடன்
வாங்கத்தான் வேண்டும்.இந்த நிலைமையை நன்கு அறிந்த
ராமசாமி மாமா, புத்தகம் பள்ளி எழுதுபொருள் அனைத்தையும்
தன் செலவில் எங்கள் இல்லத்தில் சேர்ப்பித்து விடுவார்.பள்ளி
ஆண்டு துவங்கும் முன்னரே எல்லா நோட்டு, பென்சில், பேனா,
ஜியாமெட்ரி பாக்ஸ், வாட்டர் கலர் பாக்ஸ், கலர் பென்சில்,
எரேஸர், அனைத்தும் 4 பேருக்கு தேவைக்கு அதிகமாகவே
வீடு தேடி வந்துவிடும்.

ஒருதரம் அப்பா அவற்றுக்கு பில் கொடுக்கும் படியும் தான்
தொகை அளித்து விடுவதாகவும் மாமாவிடம் கூறினார்.
அவ்வளவுதான். மாமா எரிமலை போல் ஆனார்.
"ஒஹோ!அவ்வளவு சம்பாதனை வருகிறதோ? சரிதான்!"
என்று உரக்கச் சொல்லிவிட்டு 'போய் வருகிறேன்' என்று
சொல்லிக்கொள்ளமல், சாப்பிட மறுத்துவிட்டு உச்சி வெய்யிலில்
தெருவில் இறங்கி நடக்கத் துவங்கி விட்டார். அப்பா தெரு
முனை வரை ஓடி மாமாவை சமாதானப்படுத்தி அழைத்து
வந்தார்.நாங்கள் நால்வரும் கற்ற கல்வி ராமசாமி மாமா
இட்ட பிச்சை என்றால் அது மிகையாகாது.

அப்போதெல்லாம் பள்ளிப்பாடப் புத்தகங்கள் தனியார்தான்
வெளியிடுவார்கள்.அரசுப் பள்ளிக் கல்வித்துறை 'சிலபஸ்'
என்னும் பொதுவான பாடத்திட்டத்தை மட்டும் அளிக்கும்.
அந்த சிலபஸ் அடிப்படையில் பல ஆசிரியர்கள் பாடப்
புத்தகம் எழுதி வெளியிடுவார்கள்.நாமக்கல் மாமா கடைக்கு
எல்லா வெளியீட்டார்களிடம் இருந்தும் மாதிரிப் புத்தக நகல்
முன் கூட்டியே வரும்.அவையெல்லாம் எங்கள் இல்லத்துக்குப்
படையெடுத்து வந்துவிடும். உதாரணமாக கணக்குப் புத்தகம்
என்றால் ஆறு ஆசிரியர்கள் எழுதியது எங்களுக்கு மாமா
அளித்துவிடுவார்.அதில் ஒன்று எங்கள் பள்ளியில் கடைப்
பிடிப்பதாக இருக்கும். மற்றவை வீட்டில் அதிகப்படியாக
நாங்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.


எனவே நாங்கள் மற்ற மாணவர்களை விடக் கல்வித் தரத்தில்
முன்னால் நிற்க ஏதுவாயிற்று.தப்பித்தவறி காசு கொடுத்து
புத்தகம் நோட்டு வாங்கியது மாமாவுக்குத் தெரிந்தால் நாங்கள்
ஒழிந்தோம்.மாமாவின் பொல்லாப்புக்குத் தயாராக இருக்க
வேண்டும்.

அப்பா எங்கள் மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்பட
மாட்டார்.மாதாந்திர கல்வி முன்னேற்ற அறிக்கையில் கேள்வி
கேட்காமல் கையெழுத்து இட்டு அளிப்பார்.நான் வேலைக்கு
வந்த பின்னர் அப்பாவிடம் காரணம் கேட்டேன். "என்னுடைய்
தகப்பனார் மதிப்பெண் குறைந்தால் அதிகமாகக் கவலைப்பட்டு
குழந்தைகளை அடித்துத் துவைத்து விடுவார்.என் மொட்டை
மண்டையை சுவற்றிலேயே வைத்து மோதுவார்.எனவே நான்
பட்ட துன்பம் என் குழந்தைகள் படக் கூடாது என்று
எண்ணினேன்"என்றார்.என் அப்பா கல்வி சம்பந்தமாகக்
குழந்தைகளைக் கண்டிக்காததைக் கண்ட அம்மா, "நாமக்கல்
மாமாவிடம் சொல்லிவிடுவேன்"என்றுதான் பயம் காட்டுவார்கள்.
நாங்களும் மாமா பெயரைக்கேட்டு உண்மையாகவே
பயப்படுவோம்.பயந்து படிப்போம்.

அப்பா தனி நபர் சத்தியாகிரஹத்தின் போது நாமக்கல்லில்
இருந்துதான் கைதி ஆனார்கள். அதனால் நாமக்கல் மாமாவுக்கு
அப்பாமீது ஒரு விதமான பாசப் பிணைப்பு ஏற்பட்டு
இருக்கலாம்.எங்கள் குடும்பத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட
அக்கறைக்கு எந்த ஒரு காரணத்தையும் என்னால் இன்று
வரை கண்டு பிடிக்க முடியவில்லை."கைமாறு கருதா
கடப்பாடு" என்பதற்கு நாமக்கல் மாமா ஒரு பொருத்தமான
எடுத்துக்காட்டு.

மாமா தெலுங்கு பிராமணர் என்று சொல்லிக் கேள்விப்பட்டு
இருக்கிறேன்.ஆனால் அவர் பூணூல் அணிந்து நான்
பார்த்ததில்லை.தன்னுடைய பிராமண வெளி அடையாளங்கள்
(நற்குணம் தவிர) அனைத்தையும் தொலைத்துத் தலை முழுகி
விட்டார்.யாரும் அவரிடம் காரணம் கேட்கமுடியாது. இதைப்
பற்றியெல்லாம் அவரிடம் பேச அவர் தோற்றத்தைக் கண்ட
யாருக்கும் துணிவு வராது.

அப்பாவுக்கு நாட்டம் உள்ள அனைத்தும் மாமாவுக்கு ஏற்புடையது.
அப்பா ராஜாஜி சீடர் என்றால் மாமாவும் அப்படியே! அப்பா
திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமிகளால் கவரப்பட்டால்
மாமாவும் அப்படியே! அவர்களுக்குள் நல்ல கெமிஸ்டிரி இருந்தது.
(நான் கெமிஸ்டிரி மாண‌வன்.பிஸிக்ஸ், மேத்ஸ் படித்தவர்கள் அப்படி
நினைத்துக்கொள்ளலாம்;மாற்றி வாசித்துக்கொள்ளலாம்.)கம்பரும்
சடையப்ப வள்ளல் போன்ற ஒரு உறவு.யாராலும் இது இப்படிதான்
என்று வரையறை செய்ய முடியாது.

மாமா ஏன் திருமணம் செய்யவில்லை? இந்தக் கேள்வியை சுமார் 40
ஆண்டு காலம் மனதில் சுமந்தேன்.மாமாவும் அப்பாவும் மறைந்த
பின்னர் என் அம்மாவும் 2007ல் படுத்த படுக்கையாக ஆன பின்னர்,
இனிமேலும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் இருக்கக் கூடாது
என்று கருதிஅம்மவிடம் கேட்டேன்.

"அம்மா, நாமக்கல் மாமா ஏன் கல்யாணமே கட்டவில்லை என்று
உங்களுக்குத் தெரியுமா?"

"யார் சொன்னா அவர் கல்யாணம் செய்யவில்லை என்று? செய்து
கொண்டாராம்.ஒரே நாளில் புது மனைவியைப் பிரிந்து விட்டாராம்.
யார் அவரிடம் காரணம் கேட்க முடியும்? அவர் கோபமும்
ஆவேசமும் உலகப் பிரசித்தம். அவர் முன்னால் நின்று யார்
நியாயம் கேட்கமுடியும்? அந்த முகம் தெரியாத பரிதாபகரமான
பெண்ணை நினைத்து அவரைப் பார்க்கும் போதெல்லம்
மனத்துக்குள் மருகியிருக்கேன்!" என்றார் அம்மா.

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. பல சொல்லக் காமுற
வில்லை. ஒரு சில சொல்லி முடிப்பேன். நாமக்கல் மாமாவின்
சொந்த ஊர் புட்டிரெட்டிப்பட்டி. இதுவரை நகைச்சுவையாக
எதுவும் சொல்ல மாமா அனுமதிக்கவில்லை. அவர் சொந்த
ஊர்ப் பெயர் அந்த வாய்ப்பை அளிக்கிற்து. "புட்டி"ரெட்டிப்பட்டி!

அங்குள்ளவர்கள் பலரும் புட்டியும்கையுமாக இருந்து
இருப்பார்களோ? யார் கண்டார்கள்?ஆனால் மாமா
தீவிர மது எதிர்ப்பாளர். ராஜாஜி, காந்திஜி சீடர் அல்லவா?

புட்டிரெட்டிப்பட்டியில் செல்வாக்கான மிராசுக் குடும்பமாம்.
பின்னர் மாமா தன் சொந்த முயற்சியில் போர்டு மெம்ப‌ர்
அல்லது தலைவர் பதவி வகித்தாராம்.அவருடைய கட்டுப்
பாட்டுக்குள் போர்டு பள்ளிகள் பலவும் இருந்ததாம். அப்போது,
பிற்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய இடத்தினைப்
பெற்ற, தமிழ்த்தாத்தாவின் மாணவரான, மயிலையில் இருந்து
இன்றளவும் வெளிவரும் தரம் வாய்ந்த இலக்கியப் பத்திரிகையின்
ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று மறைந்தும் விட்ட ஒரு பேர்
அறிஞர் (அவரும் அந்த மாவட்டக்காரர்தான்) தமிழ் படித்து
விட்டு வருமானம் குறைவாக சிரமத்தில் இருந்தாராம்.நமது
மாமா அந்தப் பேர் அறிஞர் சிறிது வருமானம் பெரும் வகையில்
போர்டு பள்ளிகளில் இலக்கியக் கூட்டங்கள் எற்பாடு செய்து
கொடுத்து சன்மானம் கொடுத்து அவர் வறுமையைப் போக்கினாராம்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மாமாவுக்கும் அந்தப் பேர்
அறிஞருக்கும் ஏற்பட்ட பிணக்கு பற்றிக் கூறி முடிக்கிறேன்.

மாமாவுக்கும் அப்பாவுக்கும் ஸ்ரீஞானான‌ந்த சுவாமிகளைப்
பற்றிய புத்தகங்கள் வெளியிட ஆவல் ஏற்பட்டது. முதலில்
ஸ்ரீ சுவாமிகளின் திவ்ய சரித்திரம் வெளியிட முடிவு செய்து
அதற்கு "பாப்புல"ரான எழுத்தாளரைத் தேடினார்கள். முன்னர்
சொன்ன தமிழ் அறிஞர்தான் இதற்குத் தகுதியானவர் என்று
முடிவு செய்து அவரை அணுகினர்கள். அவரும் பெருந்தன்மை
யுடன் அப்பணியை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீ சுவாமிகளை நேரில்
சந்தித்து ஒருவாரம் தபோவனத்தில் தங்கிப் பல செய்திகளையும்
சேகரித்துக் கொண்டார்.முடிவில் இந்தப்பணி தன்னால் இயலாது
என்று மாமாவிடம் சொல்லி விலகிக் கொண்டார்.
அதிர்ச்சிக்கு உள்ளான மாமா அறிஞரைக் காரணம் கேட்க,
அவர் கூறினாராம்:"ஸ்ரீ சுவாமிகள் பெரிய ஆன்மீக ஊற்று தான்.
ஆனால் சரித்திரம் எழுதத் தேவையான உறுதி செய்யப்பட்ட
தகவல்கள் ஒன்றும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. நான்
தற்போது உள்ள பதவியில் இருந்து கொண்டு எதை எழுதினாலும்
மக்கள் அப்படியே எற்றுக் கொள்வார்கள்.எனவே சரி பார்க்கக்
கூடிய உறுதியான தகவல் கிடைத்தாலே என்னால் எழுத முடியும்.
மன்னிக்கவும்  “அறிஞரின் தரப்பு நியாயத்தை மாமாவால் பார்க்க
முடியவில்லை. ஸ்ரீ சுவாமிகள் மீது கொண்ட பக்தி மாமாவின்
கண்ணை மறைத்தது."எப்படி இருந்த நீர் காலத்தின் மாற்றத்தால்
இப்படி மாறிவிட்டீரே!" என்று பொருமி விட்டார்.

அப்போது அங்கு வந்த அப்பாவிடம், அறிஞரைக்காட்டி,
" இவாள் ரொம்பப் பெரியவாள்!" என்று நக்கலாகச் சொன்னார் .
நக்கல் என்பது தஞ்சாவூர் பிரயோகம். கிண்டல் என்றால்
எல்லோருக்கும் புரியும். சிலேடைப் பேச்சில் வல்லவரான
அந்த அறிஞர் கூறினார்: "அந்த 'வாள்'தானே என்னை அறுக்கிறது!"
இறுக்கமான சூழல் கொஞ்சம் தளர்ந்தது.

என் மூத்த அண்ணன் தஞ்சையில் 1973ல் கட்டிய வீட்டுக்கு
மாமாவுக்குத் தெரிவிக்கும் நன்றியாக "மௌன்டு ஹௌவுஸ்"
என்றுபெயர் வைத்தார்.

1973 துவங்கி 2008 ல் அந்த வீட்டை அண்ணன் விற்கும் வரை
தினசரிஒரு நபருக்காவது பெயர் விளக்கம் அளிக்க வேண்டி
இருந்தது. ஏனெனில்தஞ்சைத் தரணியில் எங்குமே மலை
கிடையாது. அப்படி இருக்க'ஏன் இந்தப்பெயர்?' என்ற சந்தேகம்
பலருக்கும் எற்பட்டது.நாங்களும்விளக்கம் கூறி மாமாவை
நினைவில் வைத்து இருந்தோம். இப்போது அந்த வீடு அண்ணன்
வசம் இல்லை.எப்படி மாமாவை நினைவில் வைப்பது?
அதனால் தான் இந்தப்பதிவை எழுதினேன்.

பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி.

ஆக்கம்: K. முத்துராமகிருஷ்ணன் (KMRK) தஞ்சாவூர்
...................................................................
1968 ஆம் ஆண்டில் 
திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோபோவனத்தில் எடுக்கபெற்ற படம்.  படத்தில் சுவாமிகளின் அருகில் உயரமான தோற்றத்துடன் இருப்பவர்தான் மவுன்ட் ஹவுஸ் ராமசாமி மாமா. சட்டை அணியாமல், கண்ணாடி அணிந்தவாறு, கைகளைக் குறுக்காகக் கட்டியபடி நிற்பவர். சுவாமியின் இடது பக்கம் நிற்பவர்கள் 
திருவாளர் கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களின் 
அன்புப்பெற்றோர்கள்



ஒரு ஆண்டிற்கு முன்பு (அதாவது 31.8. 2009 அன்று) 
நமது KMRK அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அன்று 
அவருடைய அலுவலகத்தில் (Life Insurance Corporation of India)  
சிறப்புச் செய்யப்பெற்ற போது எடுக்கப்பெற்ற படம். 
அவருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அளிப்பது. 
திரு.மகேஷ்வரன் அவர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

36 comments:

  1. உயர்திரு கண‌பதி நடராஜா சார்! நல்ல அனுபவப் பகிர்வு!நன்றாக எழுதியுள்ளீர்க‌ள்!பாராட்டுக்கள்!

    காசிக்குப்போன இடத்தில் தந்தையார் மரித்தது விசேஷம்!30,40 வருடம் 'காசியிலே வாசம் கங்கையிலே ஸ்நானம்'என்று வாழ்பவர்களுக்குக் கூடக் கிடைக்காத பெரும்பேறு.ந‌ல்ல புஷ்பம் எடுத்து தந்தையார் அர்ச்சனை செய்துள்ளார்.அதுதான் அப்படி அமைந்தது.
    //அவள் ஏழு மாதக் கர்ப்பிணி!....சுற்றி இருந்தவர்கள் “என்னம்மா ஜாதகம்? நல்லா பார்த்தீங்களா? மருமகள் வந்து ஏழு மாதமே ஆகிறது. உங்கள் தாலி கிழே இறங்கிவிட்டதே!” என்று குறை சொன்னார்கள்.
    அம்மா சொன்ன பதில் வார்த்தை: “என் தாலி இறங்க விதி: அவ என்ன செய்வா? உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க!!”//

    (என் வாழ்க்கையிலும் இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் உண்டு. பின்ன‌ர் ஒரு ச‌ம‌ய‌ம் சொல்லுவேன்.)

    நீங்க‌ள் பின்னால் சொல்லிய‌ அம்மாவின் மாறுத‌லான‌ குண‌த்திற்கும்,மேலே உள்ள‌ அவ‌ர்க‌ளுடைய‌ அபிப்ராய‌த்திற்கும் எவ்வ‌ள‌வு முர‌ண்பாடு!அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் உங்கள் ம‌னைவிய‌ப் ப‌ற்றி எதிர் ம‌றைக்க‌ருத்து எதுவும் இருந்திருக்க வா‌ய்ப்பு இல்லை என்றே தோன்றுகிற‌து.

    ReplyDelete
  2. //ஒரு சமயம் தொழில் நடத்த முடியவில்லை. “கவலைப் படாதீர்கள் நான் இட்லி சுட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்!” என்றாள் என் மனைவி//


    கணவன் கலங்கும் நேரத்தில் இப்படிச் சொல்ல வேண்டும் ஒரு மனைவி!வாழ்க்கைத் துணை என்பதற்கு வேறு என்ன தான் பொருள்?"காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து..."என்று மாதரை அறம் காக்க‌ச் சொல்லுவார் மஹாகவி பாரதி.

    ReplyDelete
  3. //"வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. அவளுடன் தன் மாமனாரின் வீட்டிற்கே அவனும் சென்று விட்டான். தற்போது ஓமனில் வசித்து வருகிறான். அவனுடைய
    சேமிப்புக்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறன.
    பேத்தி பிறந்தபோது, ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று பார்த்து வந்தோம். அவ்வளவுதான். எங்கே இருந்தாலும் நன்றாக இருக்கட்டும்!
    தீதும் நன்றும் பிறர் தர வாரா!
    எல்லாம் பிராப்த கர்மம். வாங்கி வந்த வரம்!''//


    தங்க‌ளுக்கு மாமியிடம் ஏற்பட்டுள்ள தீராதா அன்பு(காதல்?) போல் உங்கள் மூத்த மகனுக்கும் எற்பட்டுள்ளது. தற்காலத்தில் நிறைய மண(மன) முறிவுகள் ஏற்பட்டுப் பலரும் நீதிமன்றப் படிகளை மிதித்து வரும் வேளையில், உங்கள் மகனும், மருமகளும் அந்நியோன்னியமாக இருப்பதைப் பார்த்து ஆனந்தப்படுங்கள்.ஆயாசப்படவேண்டாம்.இது போன்ற‌ மனக்குறைகள் எல்லா குடும்பங்களிலும் உண்டு.உங்களுக்கு ஒரு பெண் இருந்து மாப்பிள்ளை உங்கள் பெண் பேச்சுக் கேட்டு நடந்தால் மகிழ்ச்சி அடைய மாட்டீர்களா?அது போல எண்ணிக் கொள்ளுங்கள்.


    தற்போது வாழும் நபர்களைப் பற்றி எழுதும் போது, சர்ச்சைக்கு இடம் அளிக்காமல் எழுத வேண்டும் என்று மட்டும் பணிவுடன் கெட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அன்பு KMRK சார், எழுத்துப் பிசாசு உங்களை ஆட்கொண்டு விட்டது என்பது புரிகிறது..நல்ல தனித்துவம் நடையில் மிளிர்கிறது..

    //////////ஆனால் மாமா, என் அப்பா இருவருமே சீரியஸ் டைப்.
    சிரிப்பு அவர்களிடம் ரேஷன் கடை சீனி போல அளவோடும் எடை குறைவாகவும் தான் கிடைக்கும்.//////////////////

    நல்ல உவமானம்..
    நிறைய இடங்களில் சம்பவங்கள் மிக அழகாக வரிவமைக்கப்பட்டு சொல்ல நினைத்ததை பிசகாமல் சொல்லி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  5. /////////ஆமாம்! வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. .//////////////

    இப்படி வசியம் தெரியாதவர்கள் பாடல்லவா திண்டாட்டமாக இருக்கிறது..
    இந்த வார்த்தை கொஞ்சம் விவகாரமாதாக இருந்தாலும் சரியான சிறப்பாகப் பொருந்தும் வார்த்தை வேறு இல்லை..
    வசியப்படுவது ஒரு சுகம்தான்..ஆனால் அடிமையாகிப் போவது வரையா? சுகமே சோகமாகிப் போவதுதான் கொடுமை..
    S .N . கணபதி சாரின் ஆக்கம் இப்படி வசியப் பட்டவர்களுக்கு ஒரு செய்தி..
    தகப்பனாரின் இடத்திலிருந்து
    'எங்கே இருந்தாலும் நன்றாக
    இருக்கட்டும்! தீதும் நன்றும் பிறர் தர வாரா! '

    ReplyDelete
  6. /////"புட்டி"ரெட்டிப்பட்டி! அங்குள்ளவர்கள் பலரும் புட்டியும்
    கையுமாக இருந்து இருப்பார்களோ? யார் கண்டார்கள்?/////

    எனது தொழில் நிமித்தமாக ஆந்திராவில் உள்ள பல ஊர்களுக்கு பலமுறைகள் நான் சென்று வந்திருக்கிறேன். பல தெலுங்குக்காரர்கள் எனக்குப் பரீட்சயமானவர்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அடையாளப் பெயர் உண்டு. அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் அந்த அடையாளப் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துச் சொல்வார்கள். சேர்த்து எழுதுவார்கள். அதே பெயரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கும். அவர்கள் எல்லாம் பங்காளிகள்.

    உதாரணத்திற்கு ‘எர்ரம்’ சங்கரையா, ‘எர்ரம்’ வீரைய்யா, ‘எர்ரம்’ ராஜய்யா என்று எனக்கு மூன்று நண்பர்கள் வாரங்கல்லில் உள்ளார்கள். அவர்கள் பங்காளிகள். அதே போல கொத்த (புதிய என்று பொருள்) பென்ட்டையா,
    கொத்த மல்லையா, கொத்த ஸ்ரீனிவாசலு, என்று ஹைதராபாத்தில் எனக்கு நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் பங்காளிகள். இப்படி அந்த அடைமொழிக்கு ஒரு மேன்மை உண்டு.

    ஆகவே புட்டிரெட்டிப் பட்டியில் உள்ள அந்தப் புட்டி என்னும் சொல் அங்கே - அதாவது அந்தக் கிராமத்தில் பிரபலமாக இருந்த தெலுங்குக்காரரை வைத்து ஏற்பட்ட பெயராக இருக்கும். ரெட்டியாரின் முன்னால் உள்ள அந்தப் ‘புட்டி’ அவருடைய குடும்ப அடையாளப் பெயராக இருக்கும்!

    நீங்கள் நினைக்கும் புட்டி அல்ல அது கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. ////தற்போது வாழும் நபர்களைப் பற்றி எழுதும் போது, சர்ச்சைக்கு இடம் அளிக்காமல் எழுத வேண்டும் என்று மட்டும் பணிவுடன் கெட்டுக்கொள்கிறேன். //////

    எழுத்தின் வீச்சில் அது தலை தூக்கத்தான் செய்யும். ஒருமித்த கருத்து என்பது எதிலும் கிடையாது என்னும் போது சர்ச்சைக்குப் பயப்பட முடியுமா என்ன? மைனர் எழுதியுள்ளதையும் படியுங்கள் கிருஷ்ணன் சார்!

    //////வசியப்படுவது ஒரு சுகம்தான்..ஆனால் அடிமையாகிப் போவது வரையா? சுகமே சோகமாகிப் போவதுதான் கொடுமை..S .N . கணபதி சாரின் ஆக்கம் இப்படி வசியப் பட்டவர்களுக்கு ஒரு செய்தி..
    தகப்பனாரின் இடத்திலிருந்து 'எங்கே இருந்தாலும் நன்றாக இருக்கட்டும்! தீதும் நன்றும் பிறர் தர வாரா! ' //////

    வசியப்பட்டவர்களுக்கான செய்தியைப் படித்துவிட்டு மைனர் அளித்துள்ள பின்னூட்டம் பாராட்டிற்கு உரியது!

    ReplyDelete
  8. ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்த வாத்தியார் சாருக்கு என் மனமார்ந்த நன்றி!சூட்டோடு உடனே பாராட்டிய மைனர்வாளுக்கு டபுள் தேங்க்ஸ்!அதுவும் 'சட்ல் ஜோக்'கைப் புரிந்து கொண்டு குறிப்பிட்டதுதான் ஒரு எழுத்தாளனுக்கு வாசகன் அளிக்கும் பரிசு. எப்படி குழந்தை பிறந்தவுடன் கணவன் வந்து பார்த்துப் பாராட்ட வேண்டும் என்று ஒரு இளம் தாய் நினைப்பாளோ அந்த மன நிலையில் இருக்கும் எழுத்தாளன், வாசகன் புரிந்து பாராட்டும் போது புளகாங்கிதம் அடைகிறான். மீண்டும் ந‌ன்றி ஜப்பான் நாட்டு
    மைனர் நெப்போலியன் ஞானப்பிரகாசம் அவர்களே!


    "புட்டி" பற்றி வாத்தியார் சார் அளித்த விளக்கம் அவசியமானதும் அவசரமனதும் ஆகும்.அதை எழுதும் போதே 'இதுவரை மாமா ஜோக்கடிக்க எந்த சந்தர்ப்பமும் அளிக்கவில்லை. அவர் ஊர் பேர் அந்த வாய்ப்பபினை அளித்தது' என்று நான் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.எனவே அது வெறும் 'ஜோக்' தான். எந்த சமூகத்தையும் தாக்க எழுதப்பட்டதல்ல.அப்படி ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துமானல் என்னுடைய துடுக்குத்தனதையும்,
    சிறு பிள்ளைத்த‌ன‌த்தையும் அல‌ட்சிய‌ப்ப‌டுத்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'ஜோக்' சீரியஸ் ஆக மாறாமல் இருக்கட்டும்.

    'புடா'என்றால் இந்தியில் வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ன்(கிழ‌வ‌ன்) என்று பொருள்.மூத்தோன் என்றும் பொருள் கொள்ள‌லாம்.அந்த‌ப்ப‌டி தெலுங்கிலும்
    'புட்டிரெட்டி' என்றால் 'பெரிய‌ரெட்டி' அல்ல‌து 'மூத்த‌ரெட்டி' என்று பொருள்
    கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன்.தெலுங்கு ந‌ன்கு அறிந்த‌வ‌ர்க‌ள் கூற‌லாமே!


    ஒரு மொழியில் உள்ள‌ சொல் ம‌ற்றொறு மொழியில் ந‌கைச்சுவையாக‌ப் ப‌ய‌னாவ‌து தொன்றுதொட்டு வ்ரும் வ‌ழ‌க்க‌ம்தான்.
    திருமுருக‌ கிருபான‌ந்த வாரியார் சுவாமிக‌ள் அப்ப‌ர் பெருமானைப் ப‌ற்றிச் சொல்லும் போது "அவ‌ர் அப்ப‌ர்; நாமெல்லாம் லோய‌ர்" என்பார். சிரிப்ப‌லை எழும்.
    சுனில் க‌வாஸ்க‌ரின் சுய‌ச‌ரித‌ம் sunny days! இதை கொச்சைத் த‌மிழில் ப‌டித்து த‌மாஷ் செய்யாதவர்கள் இல்லை.

    எங்க‌‌ளூரில் ஒரு ப‌ட்டுப் புட‌வைக் க‌டையின் பெய‌ர் "ப‌ஜ்ஜி சில்க்ஸ்". ப‌ஜ்ஜிக்கும் சில்க்குக்கும் என்ன‌ய்யா தொட‌ர்பு? போய் அவ‌ர்க‌ளையே கேட்டேன்.
    அங்கிருந்த‌ செள‌ராஷ்ட்ர‌ப் பெரிய‌வ‌ர் கூறினார்,"அது எங்க‌ள் குடும்ப‌ப் ப‌ட்ட‌ப் பெய‌ர்"
    தஞ்சையில் வாழும் ஒரு ச‌மூக‌த்தில் ப‌ட்ட‌ப்பெய‌ர் உண்டு. "ஆர்சுக்குத்தியார்" " ஓந்திராய‌ர்"‌ "வான‌வ‌ராய‌ர்" "ம‌ண்கொண்டார்"
    "தென்கொண்டார்"!பொருள் என்ன‌ என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.
    ஆனா‌ல் திரும‌ண‌ அழைப்பில் ம‌ட்டும் ப‌ட்ட‌ப்பெய‌ர் போடாவிட்டால் விவ‌கார‌ம் ஆகிவிடும்.

    ReplyDelete
  9. ////ஒருநாள் படியில் இறங்கும்போது கால் தவறி என் அம்மாவின் இடுப்பு
    எலும்பு முறிந்து விட்டது.. மருத்துவம் செய்து, வீட்டுக்குத் திரும்பக்
    கூட்டி வந்தோம்!! அப்புறம் ஒன்றரை வருடம். எனது அம்மாவுக்கு
    எல்லாமே படுக்கையில்தான் என்னும் நிலைமை ஏற்பட்டது.

    நானும் அவளுமாக அள்ளிப்போடும் ஒரு வாய்ப்பை இறைவன்
    கொடுத்தான்! 2006ல் அம்மா சிவனடியைச் சேர்ந்துவிட்டார்கள்.//////
    நானும் பலநேரங்களில் என் வீட்டில் பேசுவதுண்டு. யாரொருவரை புரிந்தோ புரியாமலோ, உடல் நோக அல்ல, உடல் தாங்கிய ஆத்மா நோக நடந்தால், கடைசிநேரத்தில் துயரப் படுத்தப் பட்டவர்களின் தயவே அவர்களுக்குத் தண்டனையாகும் என்று.... தொடர்சங்கிலிப் போன்ற இந்த வாழ்வில் நமக்கு முன்பும் பின்பும் தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் உங்கள் தாயாரை கடைசியில் அப்படிப் பார்த்தது உங்களின் பேறு தான்.

    ReplyDelete
  10. /////ஆமாம்! வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. அவளுடன் தன் மாமனாரின் வீட்டிற்கே அவனும்
    சென்று விட்டான். தற்போது ஓமனில் வசித்து வருகிறான்.
    அவனுடைய சேமிப்புக்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறன.

    பேத்தி பிறந்தபோது, ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று பார்த்து
    வந்தோம். அவ்வளவுதான்./////

    வீட்டுக்கு வீடு வாசப் படி என்று சொல்வார்கள்... சொல்வது சுலபம்.... தங்களின் மனப் பாரம் இங்கு தெரிகிறது... இதற்காகவா பெற்று வளர்த்தோம் என்று... நீங்கள் எதிர்பார்பதெல்லாம் ஒரு வந்து போகும் அளவுக்கான சுமூக மான உறவும். தானே சுயமாகவாது தனது வரவு செலவை பத்திரமாக பார்த்துக் கொள்ளக் கூடாதா? என்ற நியாயமானக் கவலையும் தான். எங்கே இப்படி நல்ல சிந்தனை இல்லாக் குடும்பம் தனது மகனை கடைசியில் தவிக்க விட்டுவிடுமோ என்ற கவலை தான் அது....

    இன்னொன்றும் கூட... ஒருவேளை உங்கள் மகன் இந்த விசயத்தில் புத்திசாலித் தனமாக நடந்துக் கொள்வதாகக் கூட நினைக்கலாம். அவனின் நிலைமை அவன் மட்டுமே அறிவான். அடக்க முடியாத் நிலை இருந்தால்... சரி இவனும் எதிர்த்து முரண்டால் அதுவும் முறிவில் முடியலாம்.... எதுவானாலும் உணரும் நிலை வரும்.
    உங்களின் பேத்தியைக் கூட ஒருமுறை பார்த்து வந்தோம் என்பது தான் ஆறுதல் சொல்ல முடியாத வருத்தம். உங்கள் வீட்டு வாரிசு எங்கே இருந்தாலும்..... அது ஒரு நாள் அவர்கள் காது படவே எங்கள் வீட்டுக்கு போகிறேன் நீங்கள் இவ்வளவு காலம் செய்த உதவிக்கு நன்றி என்று நிச்சயம் கூறும்.

    எல்லாம் அறிந்த இறைவனுக்கு இதுவும் தெரியும். உங்கள் எல்லா விருப்பங்களும் இறைவனருளால் பரிபூர்ணமாக் நிறைவேறும் கவலைப் படவேண்டாம்.

    ReplyDelete
  11. /////நாங்கள் நால்வரும் கற்ற கல்வி ராமசாமி மாமா
    இட்ட பிச்சை என்றால் அது மிகையாகாது.//////

    ////என் மூத்த அண்ணன் தஞ்சையில் 1973ல் கட்டிய வீட்டுக்கு
    மாமாவுக்குத் தெரிவிக்கும் நன்றியாக "மௌன்டு ஹௌவுஸ்"
    என்றுபெயர் வைத்தார்./////

    கிருஷ்ணன் சார், மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள்...... இருந்தும் இந்த உயர்ந்த குணம் தான் உங்களை நல்ல மனிதராக ஜொலிக்க வைக்கிறது என்றால் அது மிகை யாகாது.
    இந்தக் காலத்தில் பெற்றப் பிள்ளைகளே இப்படி நன்றி பாராட்டுவதில்லை... மாறாக என்னை கேட்டாப் பெற்றார்கள் என்றும் அது அவர்களின் கடமை என்றும் விகண்டவாதம் பேசுவார்கள். அதிலும் மூன்றாவது மனிதர்கள் என்றால்.. எனது விதி இவர்கள் உதவியிருக்காவிட்டாலும் நான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பேன் என்பார்கள்....

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்உண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம் திரு .kmr.k .

    நீங்க‌ள் பின்னால் சொல்லிய‌ அம்மாவின் மாறுத‌லான‌ குண‌த்திற்கும்,மேலே உள்ள‌ அவ‌ர்க‌ளுடைய‌ அபிப்ராய‌த்திற்கும் எவ்வ‌ள‌வு முர‌ண்பாடு!அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் உங்கள் ம‌னைவிய‌ப் ப‌ற்றி எதிர் ம‌றைக்க‌ருத்து எதுவும் இருந்திருக்க வா‌ய்ப்பு இல்லை என்றே தோன்றுகிற‌து.

    உண்மையும் கூட கடைசில் மதினி வந்து பார்கவில்லை என்று பேச்சு குறைந்து விட்டது ..இதில் விசேடம் என்ன வெனில்.கடைசியல் இரண்டு நாள் ஐந்து மகள்களும் என்னை வைத்து குளிபாட்டினார்கள் இவள் பிடித்து கொண்டிருந்தாள் ..தர்ம மகாராஜா இவள் கையிலிருந்து என அம்மாவின் ஆன்மாவை எடுத்து சென்றான் .. எனது தந்தையின் தந்தை (தத்தா) சிவஸ்ரீ சுப்பையா முதலியார், தான் இன்ன தேதி கிழமை செல்வேன் என்று கூறி அதே நாள் எனது பெரிய அப்பா.... தர்மலிங்கம் என்னை மடியல வச்சுக்கோ.... உன் தம்பி தங்கைகளை பார்த்துக்கோ என்று கூறி சென்றவர்கள் (GRANDBA WAS NOT A ASTROLOGER) .அது மாதிரி என அன்னை எனது மனைவயின் கைகளிலேஇருந்து சென்று இருக்கிறார்கள்... தாங்கள் போன்ற பெரியவர்கள் எங்களை அசீர்வதிங்கள்... .

    ReplyDelete
  13. வாத்தியார் ஐயா வணக்கம்

    ஐயா திருவாளர் எஸ்.என். கணபதி அவர்களுக்கு தங்களுடைய ஆக்கம் அருமையிலும் அருமை.அதனிலும் தனக்கு உண்டாகும் மனகஷ்டத்தை கூட மிகவும் எளிதாக எடுத்து கொண்டு "எல்லாம் சிவனின் செயல்"
    என்ற பெரும் தன்மையோடு
    பெரிய மனிதருக்கு உரிய மனப்பான்மையுடன் எடுத்துகொண்டு வெளியில் சொல்லிய விதம் அதனிலும் மிகவும் அருமை ஐயா.

    அர்த்தநாரிஸ்வரர் போல வாழ்ந்து, நெல்லை மண்ணுக்கு உரிய மண்வாசனையை தரணி எங்கும் மணக்க செய்து, எம்மை போன்ற இளைய தலைமுறையினர் எப்படி
    வாழ வேண்டும் என்று முன்
    உதாரணமாக வாழ்ந்து காட்சிதரும்
    தாங்கள் இருவரையும் வணக்குகின்றேன் ஐயா.


    இதனில் ஒரு தனி பெருமையும் எமக்கு உண்டு எமது ஊர்காரர் என்பதனால்(அடியவனின் ஊர் வாசுதேவநல்லூர் தான் )

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம்

    """ எழுத்தின் வீச்சில் அது தலை தூக்கத்தான் செய்யும். ஒருமித்த கருத்து என்பது எதிலும் கிடையாது என்னும் போது சர்ச்சைக்குப் பயப்பட முடியுமா என்ன? மைனர் எழுதியுள்ளதையும் படியுங்கள் கிருஷ்ணன் சார்!"""

    கிருஷ்ணன் சார் நானோ எழுத்துலகிற்கு புதியவன் எனக்கு தெரிந்தவரை எழுதி உள்ளேன் மேலும் திருத்தியது ஸ்ரீ குருநாதர் (vp.vr.s.)

    பிழை இருந்தால் என்னுடையது ....நல்லவை இருப்பின் அது குருநாதருடையது..

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா

    திருவாளர் கே.முத்துராம கிருஷ்ணன் saar! thankaludaiya ovvoru padaippum ponpola milirukinrathu iyaa.

    ReplyDelete
  16. அன்புடன் வணக்கம்

    """தங்க‌ளுக்கு மாமியிடம் ஏற்பட்டுள்ள தீராதா அன்பு(காதல்?) போல் உங்கள் மூத்த மகனுக்கும் எற்பட்டுள்ளது. தற்காலத்தில் நிறைய மண(மன) முறிவுகள் ஏற்பட்டுப் பலரும் நீதிமன்றப் படிகளை மிதித்து வரும் வேளையில், உங்கள் மகனும், மருமகளும் அந்நியோன்னியமாக இருப்பதைப் பார்த்து ஆனந்தப்படுங்கள்.ஆயாசப்படவேண்டாம்.இது போன்ற‌ மனக்குறைகள் எல்லா குடும்பங்களிலும் உண்டு.உங்களுக்கு ஒரு பெண் இருந்து மாப்பிள்ளை உங்கள் பெண் பேச்சுக் கேட்டு நடந்தால் மகிழ்ச்சி அடைய மாட்டீர்களா?அது போல எண்ணிக் கொள்ளுங்கள்."""

    பெரியவங்க நீங்க "" நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  17. அன்புடன் வணக்கம் அலாசியம் சார் ,

    ."""தொடர்சங்கிலிப் போன்ற இந்த வாழ்வில் நமக்கு முன்பும் பின்பும் தெரிவதில்லை. நீங்கள் சொல்வது போல் உங்கள் தாயாரை கடைசியில் அப்படிப் பார்த்தது உங்களின் பேறு தான்"""

    எங்களின் மண ஓட்டத்தை புரிந்து எழுதி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  18. அன்புடன் வணக்கம்

    ஸ்ரீ குருநாதருக்கு. இந்த பதிவை வெளீட்டு எங்களை கௌரவித்தமைக்கு, நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  19. திரு அலாசியம் சார்

    எவ்வளவு பெரிய தத்துவார்த்தமான வார்த்தை மிக இலகுவாக வார்த்தை ஜாலமாக சொல்லிவிட்டீர்கள்

    '""எதை நாம் வேண்டாம் என்கிறோமோ அது தானாகவே வரும்""" கீதைய்ல் வரும் என எண்ணுகிறேன்.

    நன்றி..

    ReplyDelete
  20. அன்புடன் மைனர் சார் வணக்கம்///
    """ஆமாம்! வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. .
    இப்படி வசியம் தெரியாதவர்கள் பாடல்லவா திண்டாட்டமாக இருக்கிறது..
    இந்த வார்த்தை கொஞ்சம் விவகாரமாதாக இருந்தாலும் சரியான சிறப்பாகப் பொருந்தும் வார்த்தை வேறு இல்லை..
    வசியப்படுவது ஒரு சுகம்தான்..ஆனால் அடிமையாகிப் போவது வரையா? சுகமே சோகமாகிப் போவதுதான் கொடுமை..
    S .N . கணபதி சாரின் ஆக்கம் இப்படி வசியப் பட்டவர்களுக்கு ஒரு செய்தி..
    தகப்பனாரின் இடத்திலிருந்து
    'எங்கே இருந்தாலும் நன்றாக
    இருக்கட்டும்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!//////////////////// '
    """""""தங்களை போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் அவர்கள் நன்றாகவே இருக்கட்டும் எங்கிருந்தாலும்..

    நான் எழுத்துலகிற்கு புதியவன் சில பிழைகள் இருக்கும் பொருத்து கொள்ளுங்களேன் தயவு செய்து!""""""

    ReplyDelete
  21. அன்புடன் வணக்கம்
    என் மூத்த அண்ணன் தஞ்சையில் 1973ல் கட்டிய வீட்டுக்கு
    மாமாவுக்குத் தெரிவிக்கும் நன்றியாக "மௌன்டு ஹௌவுஸ்"
    என்றுபெயர் வைத்தார்.
    புட்டி"ரெட்டிப்பட்டி! அங்குள்ளவர்கள் பலரும் புட்டியும்
    கையுமாக இருந்து இருப்பார்களோ!!!!!NO NO NO NO ...
    எங்கள் குடும்பத்தின் பெயர் பண்டாரம் பேரன் &,தக்கார்
    அது போல அந்த குடும்பத்திற்கும் புட்டி என்று பெயர் இருந்திருக்கும்
    ((பண்டாரம் என்றால் அதிக நிதி உள்ளவன் என்று பொருள் தக்கார் என்றால்பொருத்தமான் நபர்))) உங்களின் அண்ணார் தனது வீடிற்கு பெயர் வைத்தார் பாருங்கள்!! அதுதான் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அவருக்கு செய்த நன்றி கடன்..இன்றும் சில நல்ல உள்ளங்கள் இது போன்ற தன்னை வளர்த்து ஆளக்கியவர்களை நன்றியுடன் நினைத்து தனது பிள்ளைகளுக்கு பெயர் வைப்பார்கள் ..அது சில நேரங்களில் பட்ட பெயர் வைத்து மறைந்து விடும்!! இது கல்வெட்டு போல!!வாழ்க

    ReplyDelete
  22. சங்கரன் கணபதி அவர்களே இந்தப் பிறவியில் இணைந்து வாழ்வது பற்றி மட்டும் சிந்திப்பது நல்லது. அதன் பிறகு யார் முன்னே யார் பின்னே என்பதெல்லாம் நமதி கைகளில் இல்லை. ஆண்டவனை துணை என்று ஏற்றுக் கொண்டபின் எல்லாம் அவன் செயல்தான். அதுவே நமக்கு நன்று. வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொண்டால், பின் அதனை நீங்க அவசரம் காட்ட மாட்டார்கள். அன்பு உள்ளங்களை மட்டுமல்ல, உலகத்து ஜீவன்களையெல்லாம் பிணைக்கும் திறன் படைத்தது. அடுத்து தஞ்சை கே.எம்.ஆர்.அவர்களின் அனுபவம் விரிவானது. அவர் வாழ்க்கையில் நவரசங்களையும் கண்டு அனுபவித்தவர். பிறருக்கு தீங்கு எண்ணாதவர். அது அவர் ரத்தத்தில் பரம்பரையாக வருவதோ என்னவோ. ஒரு முறை சென்னை செல்லும் பேருந்தில் தஞ்சையில் கிளம்பி ஒரு துக்கத்துக்குப் போகும் நிலையில் வழியில் சேத்தியாத்தோப்பு எனும் ஊரில் இறங்கி நள்ளிரவில் சிறுநீர் கழிக்க இடம் தேடி உட்கார அந்த கடைத்தெரு வாசிகள் இவரை நையப் புடைத்துவிட்டனர். இதுவும் விதிவசம், இறைவன் விதித்தது என்று ஒன்றும் பேசாமல் பேருந்துக்கு வந்து அமர்ந்துவிட்டார். துயரங்கள் இப்படிப் படிப்படியாகத் தனக்கு விதித்தது இறைவனே என்று இவரும் பயணத்தைத் தொடர்ந்தார். காந்தியக் கொள்கைகளை பேசலாம். ஆனால் அதனை செயலில் காண்பித்தவர் கே.எம்.ஆர்.

    ReplyDelete
  23. இதனில் ஒரு தனி பெருமையும் எமக்கு உண்டு எமது ஊர்காரர் என்பதனால்(அடியவனின் ஊர் வாசுதேவநல்லூர் தான் )//

    தஞ்சையில் 37 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்.பிறந்து வ‌ளர்ந்தது சேலம் நகரம், 20வயது வரை. மேட்டூர்,சென்னை, கோவை,ஆகிய ஊர்களில் 3,4 ஆண்டுகள்.நெல்லையில் நான் வாழ‌வே இல்லை என்றாலும் எங்கள் வேரும், வேர‌டி ம‌ண்ணும் நெல்லைதான்.அப்பாவுக்கு நெல்லை ஜ‌ங்ஷ‌னில் உள்ள‌ ச‌ன்யாசிக் கிராம‌ம்;அவ‌ர் அப்பா‌வுக்கு அற‌வ‌ன் குள‌ம் என்னும் நார‌ண‌ம்மாள்புரம் அந்தக் கிராமம் தாழையூத்துக்கு அருகில் உள்ள‌து.அம்மாவின் அப்பா அம்மா களக்காட்டுக்காரர்கள்.அம்மா பிற‌ந்து வளர்ந்தது நாங்குனேரி.எங்க‌ளுக்கு இரண்டு குலதெய்வம். ஒன்று சித்தூர் சாஸ்தா.வள்ளியூரில் இறங்கிப்போக வேண்டும். மற்றொன்று சடைஉடையார்.அம்பையில் இருந்து 5கிமீ தூரம்.

    கண்ணன் சார்வாள்!இப்பம் என்ன சொல்லுதீரு?நானும் நெல்லைச் சீமைக்காரந்தான்வே!ஏத்துக்கிடமாட்டியளோ? ‌

    ReplyDelete
  24. //////////////// hamaragana said... தங்களை போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் அவர்கள் நன்றாகவே இருக்கட்டும் எங்கிருந்தாலும்..\\\\\\\\\\\\\\\\\\

    உங்க அனுபவம் என் வயசுக்கு சமம்..வாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களை யாரும் அந்தந்த வயசைக் கடக்காமல் பெற முடியாது..
    எனவே நான் சொன்னது ஒரு தகப்பனாரின் இடத்திலிருந்து நீங்கள் எல்லோருக்கும் அறிவுறுத்தியதாக மட்டுமே..

    ////////////////// நான் எழுத்துலகிற்கு புதியவன் சில பிழைகள் இருக்கும் பொருத்து கொள்ளுங்களேன் தயவு செய்து! \\\\\\\\\\\\\\\\\\\

    நான் குறையாக ஒன்றுமே சொல்லவில்லை........
    சரியான வார்த்தை வேறு இல்லை என்றுதான் சொன்னேன்..அதனால் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று பொருள்..நன்றி..

    ReplyDelete
  25. அன்புடன் திரு தஞ்சாவூரான் அவர்களுக்கு வணக்கம் .தாங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  26. அன்புடன் திரு அலாசியம் அவர்களுக்கு வணக்கம்
    """வீட்டுக்கு வீடு வாசப் படி என்று சொல்வார்கள்... சொல்வது சுலபம்.... தங்களின் மனப் பாரம் இங்கு தெரிகிறது... இதற்காகவா பெற்று வளர்த்தோம் என்று... நீங்கள் எதிர்பார்பதெல்லாம்""" ..........

    மிக சரியான ஆறுதல் சொன்னீர்கள் எனது துணைவ்யாருக்கு... படித்து அவர்கள்
    விட்ட கண்ணீருக்கு கண்டிப்பாக இறைவன் இரங்குவான்(என்ன இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றவள.)அவள மனம் சமாதானம் ஆகவேண்டியே இந்த பதிவு போட்டேன்.. . இங்கு அது நிறைவேறி விட்டது.. உங்கள் போன்ற பெரியவர்கள் ஆசி அவள மனதை ஆற்றும்...நன்றி

    ReplyDelete
  27. அப்பாவிடம் கதை கேட்ட உனர்வ. மிக அருமையாக இருந்தது.

    ReplyDelete
  28. /////அன்புடன் திரு அலாசியம் அவர்களுக்கு வணக்கம்
    """வீட்டுக்கு வீடு வாசப் படி என்று சொல்வார்கள்... சொல்வது சுலபம்.... தங்களின் மனப் பாரம் இங்கு தெரிகிறது... இதற்காகவா பெற்று வளர்த்தோம் என்று... நீங்கள் எதிர்பார்பதெல்லாம்""" ..........

    மிக சரியான ஆறுதல் சொன்னீர்கள் எனது துணைவ்யாருக்கு... படித்து அவர்கள்
    விட்ட கண்ணீருக்கு கண்டிப்பாக இறைவன் இரங்குவான்(என்ன இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்றவள.)அவள மனம் சமாதானம் ஆகவேண்டியே இந்த பதிவு போட்டேன்.. . இங்கு அது நிறைவேறி விட்டது.. உங்கள் போன்ற பெரியவர்கள் ஆசி அவள மனதை ஆற்றும்...நன்றி////

    திருவாளர் கணபதி அவர்களுக்கு வணக்கம்.

    நான் உங்களைவிட சிறியவன் 1978 -ல் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தேன். உங்கள் இருவரின் ஆசி தான் எனக்கும் எனது மனைவி மக்களுக்கும் வேண்டும். இருந்தாலும் உங்கள் மனக் குறை நீங்கும் அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன். பத்து மாதம் சுமந்தாலும் அவர் முதல் குழந்தை அல்லவா ஆக அவரின் மீது ஒருத் தனிப் பாசம் பெற்றத் தாயிற்கு இருக்கும் என்பதே உண்மை. கவலைப் படாமல் இருக்கச் சொல்லுங்கள். மிக விரைவில் உங்களிடம் வருவார்கள், பழையதை பேசாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனோ, சொல்லத் தோன்றியது. நன்றி.... வேண்டும் உங்களின் ஆசி.

    ReplyDelete
  29. அம்மா, நீ பாஸ் பண்ணிட்டே! 1978 இல் எனது வாழ்க்கைத்
    துணையிடம் நான் பேசிய முதல் வார்த்தை அது! //

    அப்பா அதுக்கு முன்னாடி நீங்க பேசினதே இல்லையா?

    ReplyDelete
  30. இதில் ஒரு விசேடம் -- என அம்மாவுக்கு என்னவளைப் பிடிக்காது. ஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் என் அன்னைக்குப் பணி
    விடைகள் செய்யவில்லை//

    நான் பார்த்த / கேட்ட வரையில், இதுதான் நடக்கிறது.

    ReplyDelete
  31. கணபதி சார், நன்றாக எழுதியிருந்தீர்கள்.

    ReplyDelete
  32. கிருஷ்ணன் சார், மவுன்ட் ஹவுஸ் மாமாவை நினைவு கூர்ந்த விதம் அருமை.

    ன்னுடைய பிராமண வெளி அடையாளங்கள்
    (நற்குணம் தவிர) அனைத்தையும் தொலைத்துத் தலை முழுகி
    விட்டார்//

    இந்த வரியப் படிச்சா கொஞ்சம் வேற மாதிரி கருத்து வருது.

    ReplyDelete
  33. உயர் திருKmr.k சார் வணக்கம்
    """""கண்ணன் சார்வாள்!இப்பம் என்ன சொல்லுதீரு?நானும் நெல்லைச் சீமைக்காரந்தான்வே!ஏத்துக்கிடமாட்டியளோ?"""
    அதெப்பிடி இதனை வருடம் கழித்தும் """""நம்ம """"" ஊர் பேச்சு மொழி வழக்கு வார்த்தைகளில் வருகிறது..அபாரம்..
    திரு கண்ணன் சார் வலைத்தளத்தில் நமது ஊர் மக்கள் இல்லையே என ஏங்கியதுண்டு
    தீர்த்து வைத்தீர்கள்...திரு kmr.k சார் உங்களுக்கும் சேர்த்துதான் ... ((ஏற்றுகொண்டோம்)).. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.. ஊர் பக்கம் வந்தால் என்னை சந்தியுங்கள்..நன்றி நன்றி !!

    ReplyDelete
  34. திருமதி சாந்திஅன்புடன் வணக்கம் ..

    """ அப்பாவிடம் கதை கேட்ட உனர்வ. மிக அருமையாக இருந்தது""

    .இரத்தின சுருக்கமாக பின்னூட்டம் இட்டு விட்டீர்களே ?? ஒரு மகளிடம் மனபாரத்தை இறக்கியது போன்று உள்ளது நன்றி.

    ReplyDelete
  35. திருமதி உமா அன்புடன் வணக்கம்
    ""அப்பா அதுக்கு முன்னாடி நீங்க பேசினதே இல்லையா""கணபதி சார், நன்றாக எழுதியிருந்தீர்கள்"""நான் பார்த்த / கேட்ட வரையில், இதுதான் நடக்கிறது"""
    ..அதற்க்கு முன்பு அவளிடம் நான் பேசியதில்லை அவளின் தம்பி10 வயது அவன்தான் அவளின் நம்பர் வாங்கி கொடுத்தான் இப்போ மாதிரி கை பேசி,, ஏன் STD வசதி கூட இல்லை.எனது கல்யாணத்திற்கு பின்னார்தான் அவள வீட்டிலே தொலைபேசி அமைத்தார்கள்.. உங்களின் பாராட்டுக்கு நன்றி..
    உலக நடப்பு உமா தேவி க்கு ((இங்கே நான் சொல்வது எம்பிரானின் துணைவி ஸ்ரீ உமாதேவி )) தெரிகிறது நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  36. வாத்தியார் ஐயா வணக்கம்.

    திருவாளர் கே.முத்துராம கிருஷ்ணன் சார் தாங்கள் நெல்லை மண்ணுக்கு உரியவர் என்பதில் எல்லை இல்லாத மகிழ்ச்சி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com