மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.6.12

Manavar Malar லால்குடியார் அடித்த சதம்!

 மாணவர் மலர்

நமது வகுப்பறை மாணவர் லால்குடி கே முத்துராமகிருஷ்ணன் அவர்கள் இன்று எழுதியுள்ள கட்டுரையுடன்,  இதுவரை மொத்தம்  நூறு ஆக்கங்களை அவர் அனுப்பியுள்ளார். நமது வகுப்பறையின் சார்பில் அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு முன்னுரிமை தந்து முதல் ஆக்கமாக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். அத்துடன் வேறு ஏழு ஆக்கங்களும் உள்ளன. அனைவரும் படித்து மகிழுங்கள்,

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 லால்குடியார் அடித்த சதம்!

 'மக்கள் சேவையே மகேசன் சேவை’
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்
இது இவருடைய நூறாவது கட்டுரை.
-----------------------------------


'சதமானம் பவதி, சதாயுஷ்'என்று வாழ்த்துவார்கள். 'இன்னும் ஒரு  நூறாண்டு இரும்' என்பது அதற்குப் பொருள்.

அப்படிப் பட்ட‌ வாழ்த்து உண்மையாகவே நாம் அளிக்க வேண்டியவரைப் பற்றியும் அவர் பணிகளைப் பற்றியும் என் நூறாவது ஆக்கத்தில் கொடுப்பது என்று ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் முடிவு செய்தேன்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை', 'நர சேவையே நாராயண சேவை', 'ஜீவ சேவையே சிவ சேவை' என்பது எனக்கு மிக
வும் பிடித்த சொற்கள்.

எந்த ஊருக்குப்போனாலும் அந்த ஊரில் உள்ள நல்ல சேவை நிறுவனத்திற்குப் போவதும், அங்கே அவர்கள் செய்யும் பணிகளை அருகில் இருந்து பார்ப்பதும்,பாராட்டுவதும்,  முடிந்தால் அதனை என் பகுதியில் 'காப்பி'அடித்துத் தொண்டு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதுமாக என் பொழுது கழியும்.

பல தொண்டுகளைத் துவங்கித் தொடர முடியாமல் கை விட்டுள்ளேன். இதற்காக சமுதாயத்திலும், உறவு, நட்பு, குடும்பத்திலும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளேன்.அப்படித் தோல்விகளைச் சந்திக்கும் போதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருக்கும்.

"ஒரு நற்செயலைத் தோல்வி பயத்தினால் துவங்கத் தயங்குபவனைக் காட்டிலும் துவங்கித் தோல்வி அடைபவனை நான் அதிகம் நேசிக்கிறேன் " என்பார் சுவாமிஜி.(நினைவிலிருந்து எழுதியுள்ளேன். கருத்தில் மாற்றம் இல்லை. சொற்களில் மாற்றம் இருக்கலாம்)

மனித சேவை என்று வந்துவிட்டால் நான்'எண்ணித் துணிக கருமம்' என்பதை வசதியாக மறந்து விடுவேன்.

1975ல் எனக்குத் திருமணம். நான் புதுமனைவியுடன் இல்லறத்தின் இன்பங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த போது, அதே ஆண்டில், என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது குறைவான,  பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்  ஒரு விபத்தில் தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்.

நான்காம் ஆண்டு பொறியியல் மாணவருக்கு லட்சியக்கனவு, தான் ஒரு கப்பல்படை அதிகாரி ஆக வேண்டும் என்பதே. சின்னக் குழந்தையாக இருந்த போதே கடல் மேல் மிதக்க்கும் கனவில் அந்த மாண‌வன் மூழ்கிவிட்டான்.

அதற்காகவே தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்தான். ராணுவத்தில் நேவி பிரிவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டான்.  கல்லூரி இறுதியாண்டில் கப்பல் படையில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றிவாகை சூடிவிட்டான்.நேர்முகத் தேர்வு, உடற்பயிற்சி/தகுதித் தேர்வுகளிலும் தொண்ணூறு சதம் வெற்றியே. இறுதியாக ஓர் உடற்பயிற்சித் தேர்வின் போது கைதவறி மிக உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினான்.

நினைவு இழந்தவனை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பல நாட்கள் கவலைக்கிடம் பட்டியலில் இருந்தான். நீண்ட மாதங்கள் சிகிச்சை கிடைத்த பின்னர் உயிர் ஆபத்திலிருந்து தப்பினான் அந்த மாண‌வன்.

அப்போதுதான் அவனுக்கு அந்த அதிர்ச்சிச் செய்தி கூறப்பட்டது.

அவனுடைய கழுத்துக்குக் கீழ் எந்த அவயவமும் இயங்காது. பிறர் உதவியின்றி எந்தச் செயலும் செய்ய முடியாது.

"இப்படி உயிர் வாழ்வதற்கு நான் செத்தே போயிருக்கலாமே!"

மனத்திற்குள்ளும் , வெளியிலும் இந்தக் கேள்வியுடன் மருகினான்.

யாருக்கும் ஏற்படும் மன அழுத்தம் அவனுக்கும் ஏற்பட்டது.

அப்போதுதான்  ஆண்டவனின் குரல்,  பொறுமையுடன் அவனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் மூலமாகக் கிடைத்தது.

"கலங்காதே! நீ உயிர்பிழைத்தது தெய்வாதீனம்தான்.உன்னால் இந்த உலகிற்கு ஆக வேண்டிய நற்செயல் ஏதோ ஒன்று இருக்கிறது.துணிவு கொள்! "

சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு வந்து சேர்ந்தான்.ஆய்க்குடி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான்.பேச முடியுமே தவிர கைகால்களையோ, உடலையோ அசைக்கக் கூட முடியாது.

சிறிய அளவில் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் நடத்தினான்.

தன்னைப் போல உடல் ஊனம் உற்ற‌வர்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் துவங்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றிய நேரம் நல்ல நேரம்.

பள்ளிக்குப்பெயர் வைக்க வேண்டுமே!அவனுக்கு அதில் எந்தத் தயக்கமும் தோன்றவில்லை. தன் உயிரைக் காப்பாற்றி தனக்கு வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய டாக்டரின் பெயர்தான் முதலில் தோன்றியது.

அமர்சிங் என்ற மருத்துவருக்கு நன்றிக் கடனாக அவர் பெயரிலேயே "அமர் சேவா சங்கம்" 1981ல் துவங்கப்பட்டது.

ஐந்தே ஐந்து மாணவர்களுடன் தோன்றிய அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி இந்த 30 ஆண்டுகளில் ஆல விருட்சம் போல வளர்ந்து பாரத அளவில், ஏன் உலக அளவிலும் கூட‌ ஒரு 'மாடல்', மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.

அந்தப் பொறியியல் மாணவனின் பெயர் ராமகிருஷ்ணன்.இப்போது அவருக்கும் 57 வயது இருக்கும்.

1991ல் சங்கரராமன் என்ற ஆடிட்டர், அவரும் ஒரு சக்கர நாற்காலியில் வலம் வரவேண்டிய துர்பாக்கியத்திற்கு உள்ளானவர், அமர்சேவா சங்கத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணனையும், அந்தப் பள்ளியையும் கண்டதும் காதல் கொண்டார்.அங்கேயே ராமகிருஷ்ணனுக்குத் துணையாகத் தங்கிவிட்டார்.

இந்த இரட்டையர்களுக்கும், அமர்சேவா சங்கத்திற்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன.

மேதகு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ராமகிருஷ்ணனின் சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளார்.

www.amarseva.org

மேற்படி தளத்தில் முழு விவரங்களும் கிடைக்கும். அனபர்கள் அனைவரும் அந்த தளத்தினை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

உடல் நிலை ந‌ன்றாக இருக்கும் நம்மால் முடியாத நற்செயலை முற்றிலும் உடல் ஒத்துழைப்புக் கிடைக்காதவர்கள் செய்துள்ள சாதனைகளைப் படியுங்கள். தன்னம்பிக்கை தானாக வரும்.

அவர்களுடைய 2010‍‍‍‍=2011 ஆண்டறிக்கையைப் படியுங்கள். வரவு செலவு தணிக்கை அறிக்கையைப் பாருங்கள். இவ்வளவு துல்லியமான கணக்குக் கொடுக்கக் கூடிய பொது நிறுவனங்கள் இன்று பாரதத்தில் மிகச் சிலவே இருக்கின்றன.

இந்தக் காணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=fCajWROQp_M

உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் உதவ விருப்பம் உள்ளவர்கள் உதவுங்கள். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.

அறம் செய விரும்புங்கள்.'அற‌ம் செய்வோரை அந்த அறமே காக்கும்' என்பது வேதம்.

வாழ்க வளமுடன்.
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

பின் குறிப்பு:
இனி என் ஆக்கங்கள் வாரம் தோறும் வெளிவராது. எப்போதாவது மன எழுச்சி தோன்றுமானால் எழுதுவேன்.15 ஆகஸ்டு 2010 முதல் இது நாள் வரை ஒவ்வொரு வாரமும் எழுதியுள்ளேன். பொறுமையுடன் வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கும், படித்து ஊக்கமளித்த மாணவ நண்ப‌ர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


கண்ணை நம்பாதே!
ஆக்கம்: சதன்ராஜ் (திருநெல்வேலி) 
வகுப்பறை மாணவர் ( பதிவிற்குப் புது முகம்)
தொழில்: Used Cars Seller
------------------------------------    ‍‍‍‍‍‍    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍                                                         
        சில வாரங்களுக்கு முன்பு மாணவர் மலரில் சகோதரி தேமொழி அவர்கள் கவிஞர் மருதகாசியின் பாடல்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் முதன்மையாக கண்ணை நம்பாதே என்ற பாடலும் இருந்தது. அதைப்பற்றி எனக்கு தெரிந்த ஒரு விளக்கத்தை எழுதவேண்டும் என நினைத்து அதை இப்போதுதான் எழுதமுடிந்தது.(அவ்வளவு சோம்பேறி நான்)
    ‍‍‍‍‍‍    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍என் இளம்பிராயத்தில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு சந்தேகம் மனதில் வரும் நம் கண் நன்றாகத்தானே இருக்கிறது அது எப்படி நம்மை ஏமாற்றமுடியும்? நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளையோ, மனிதரையோ ,உள்ளது உள்ளபடிதானே காட்டுகிறது. ஊரில், கண் அளக்காததையா கை அளந்துவிடும் எனஒரு சொலவடை கூடஉண்டு .எனவே இந்தபாடலில் தவறு உள்ளது என நினப்பதுண்டு. ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையில் கிரகங்கள்  ஆடிய சதிராட்டத்தில்,பாடலில் தவறு இல்லை,நம் கண்ணில்தான் தவறு உள்ளது என பட்டுணர்ந்தபின்னே புரிந்ததுஎப்படி?
      கீழே கொடுத்துள்ள இரு விதமான அம்புகுறியிட்ட படத்தை பாருங்கள்.அதில் அம்புகுறிக்குள் இருக்கும் இரு நேர்கோடுகளை பாருங்கள்.
                
         நம் கண் எப்படி நமக்கு காட்டுகிறது? ஒன்று சிறியதாகவும்,மற்றது பெரியதாகவும் காட்டுகிறதல்லவா? உண்மையில் இரண்டும் சம கோடுகளே.எனக்கு ஸ்கிரீனில் அளவுகோலை கொண்டுவரும் வித்தை தெரியவில்லை.எனவே ஒருபேப்பரில் இரு சமகோடுகள் வரைந்து மேலும்,கீழும் அம்புகுறியிட் டு பாருங்கள் வேறுபாடகத்தான் நம்கண்கள் நமக்கு காட்டும்.    
     ஏன் மேலும்,கீழும் அம்புகுறிகளை போட்டாய் அதனால்தானே என் கண்கள் வித்தியாசமாக காட்டியது என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.ஆம் நண்பர்களே அதில்தான் நாம்படிக்கவேண்டிய வாழ்க்கைப்பாடம் உள்ளது.       
      மேல்நோக்கிய அம்புகுறிகள் நாம் தினமும் வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களின்,பொருட்களின் உயர்வான புறத்தோற்றம்.இந்த புறதோற்றத்தை கொண்டு,நல்லவன், நல்லது என நம்பி எத்தனைமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதுபோல் கீழான அம்புகுறிகளைப்போல் நல்ல புறத்தோற்றம் இல்லாத மனிதர்களின் அன்பு,நட்பை இழந்திருப்போம். இப்போது சொல்லுங்கள் நம்கண்கள் நம்மை  ஏமாற்றுகிறதா? இல்லையா?  
      சரி, இதைப்பற்றி அறிவியல்(மருத்துவம்) என்ன சொல்கிறது? அது அப்படித்தான்.எல்லோருடைய கண்களும் குறைபாடு உடையதே என.(என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன் மருத்துவம் தெரிந்தவர்கள் மேலும் விளக்கம் தரலாம்)   
       சரி, இதைப்பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது?
       நமது ஆன்மாவானது மனம் என்ற மாயையின் பிடிக்குள் உள்ளது.இந்த மாயமனதின் கட்டுப்பாட்டில் ஐம்புலன்களும் உள்ளன. கண் என்னும் புலன்வழியாக தெரியும் தோற்றத்தை மனமானது தன் நுட்பமான கபடத்தால் உண்மையை தெரியவிடாமல் சிறிது ஏற்றதாழ்வுடன் நம் அறிவை நம்பவைக்கிறது. நாம் ஏதாவது ஒரு மார்க்கம் மூலமாக (பக்திமார்க்கம்,தியானமார்க்கம்,இன்னபிற) தீவிர பயிற்சி மேற்கொண்டு, இந்த மனதைகடந்து ஆன்மாவை தரிசித்து,ஆன்மாவின் கட்டுப்பாட்டில் புலன்களை வைத்து,அப்போது பார்த்தால் இந்த உலகிலுள்ள அனைத்தின் உண்மை சொரூபம் தெரியவரும்.ஏன்,வானத்தில் உள்ள கோள்களே நம் கண்களுக்கு தெரியும்.(இதுவும் என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன்.ஆன்மீகம் தொடர்பான சிறப்பான கட்டுரைகள் எழுதும் சகோதரி பார்வதிஅவர்கள்.போன்றோர் இன்னும் விளக்கம் தரலாம்).

நன்றி வணக்கத்துடன்
சதன்ராஜ்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 3


சைவமும் தமிழும்
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன்

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
(திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்)

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)

பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன்.

மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம்.  . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும்   மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி.  இறைவன் எண்குணத்தான். எண்குணமாவன,  தன் வயம் உடைமை,  தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.

சைவ சித்தாந்தத்தின் படி,  உயிர்கள் அநாதியானவை.  அவை  அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன.  இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை.  இறைவன் கருணை வடிவானவர்.  நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து,  துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை.

ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும்  பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.

ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.
(திருமூலர், திருமந்திரம்)

தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே, தநு= உடல், கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன, புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.

சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும்.

“அவையே தானேயாய், இருவினையின்
 போக்கு வரவு புரிய ஆணையின்
 நீக்கமின்றி நிற்கும் அன்றே”       
(சிவஞானபோதம்)

சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.

பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 
(திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)

அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவைஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.

ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே. 
(திருமூலர், திருமந்திரம்)

 உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார்.  இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார்.  சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது.

கன்மம் என்பது,  ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).

ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும்.  மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.

ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.         
(அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார்  )

செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.
(சிவஞான சித்தியார்)

(பொருள்: “முற்பிறவியில் செய்யும் வினையெல்லாம், இப்பிறப்பிலேயே பயன் தருமென்றால், இப்பிறவி வினையெல்லாம், இப்பிறவியோடே கெடும். பிற்பிறப்புக்கு அவை சேருவது எவ்விதம்? இந்தத் தூலவுடல் கெட்டு, சூக்குமமாய்ப் பொருந்து முறை எப்படியென்னில், தீபத்தில் ஒளி, திரியை விட்டு நீங்கி வேறு இடத்தில் ஒளிரும் என்று கூறுதல் போலவாம்.”)

‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது.

அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
(இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)

சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.

மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
(திருமூலர், திருமந்திரம்)

வீடுபேறாகிய முத்தி நிலை:
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப்  பெற்று  சிவனாரின் திருவடிகளில்  கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும்   சிவனாரின் அடிமையாய்,  ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.

முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.

ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.

மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா 
(குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).

(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)
மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.
சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.

பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.
இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் 
(சிவஞான சித்தியார்)

சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை  சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.
தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.

சற்புத்திர மார்க்கம்(கிரியை):  இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.

சகமார்க்கம் (யோகம்)

இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. 
(திருமூலர், திருமந்திரம்)

இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.

சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும்.

ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை 
(சிவஞான சித்தியார்)

திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை  ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி'  எனவும் கூறப்படுகின்றன.

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை,  ஆண்டான் அடிமை போன்றதாகும். கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும். யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்.

ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.

மேற்கூறிய மார்க்கங்களில்,  உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார்.

தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.

தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.

இதில் சமய  தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண  தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.

சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.

சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர்.

சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.

சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


  
சான்றோனாக்குதல் தந்தையின் கடன் 
ஆக்கம்: தேமொழி

தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க.  நானும் திராவிட இயக்கம் அரசியல்ல, தேர்தல்ல ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன்.  நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு  பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க"  என்றார் பெரியார்.

பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை.  "சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க?  இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க" என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.

"வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க.  பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்"  என்கிறார் பெரியார்.

அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.  அப்பொழுது உற்சாகமாக பாடியவாறே வருகிறார் பாரதியார்.
"வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?" என்று முகம்மலர்கிறார் பெரியார்.

"தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்", என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.

அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, "நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி" என்று சிரிக்கிறார் காந்தி.

"இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் "சிந்துக்குத் தந்தை" என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.

"பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!..."
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது."

"சரி போகிறது...அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள்.  "தந்தை" என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது.  "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.

"தம்பி என்னமா யோசிக்கிறீங்க?" என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.

"தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள்,  38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து  20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்."

"சமீபத்தில் உங்களைப் பற்றிய  படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய  ..
..
"கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்."
[  காணொளி:   http://youtu.be/ScA2TJ-IUkU   ]

பாட்டைக் கேட்டு கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி.  நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு.  இப்படி அற்ப ஆயுசில போயிட்டாருன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி.  அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க" என்றார் பெரியார்.

"என்ன செய்யிறதுங்க ஐயா?
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"
என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன்.  சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்" என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி.

தொடர்ந்து "நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா.  எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே.  சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்" என்றார் பாரதி.

"உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள்.  என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன்.  என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்" என்றார் காந்தி.

பிறகு, "சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா  தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?" என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.

"இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது" மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.

"பரவாயில்லை, சொல்லுங்க தம்பி,  ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?" என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.

"ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும்.  அத்துடன்  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்."

"இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க"

"ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும்.  மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது.  கலப்பு மணத்தில்... ஜாதியோ, மதமோ, இனமோ... எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் "சான்றோர்" எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும்.  அதனால் சான்றோர் என்றால் "நற்பண்புகள் உள்ளவர்" என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்."

"இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள்  சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.  ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள்.  அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்" என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.

" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
  சான்றோன் எனக்கேட்ட தாய்."

என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள்.  எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும்.  நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள்.  வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள்  என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்."

"பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள்.  சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள்.  பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்" 

"அருமையான யோசனை பாரதி" எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.

"தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க" என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார்.  "தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார்.

"ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது" என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.

"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு.  உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்"  என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,

"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.

தந்தைகுலத்திற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!
காணொளி


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5
 

தோழருக்கு வாழ்த்துக்கள்
ஆக்கம்: தனுசு

என்
வகுப்பறை தோழர்.
அவர் பெயர் கிருஷ்ணர்-இன்று சொல்லி
அடித்தார் ஒரு நூறு-இனி
சொல்லாமல் படைப்பார் பல நூறு!

எழுத்தில்
எளிமை என்பது
இவரின் நோக்கம்-அந்த எளிமையை
நானும் எடுத்தாள உண்டாக்கினார்
என்னிடம் பெரும் தாக்கம்.

இவர் படைப்பில்
தாயின் பாசத்துக்கு சுசிலா!
தாய் மண்ணின் பாசத்துக்கு தஞ்சை!
தன் எளிமைக்கு புளியோதரை!-பாருங்கள்
இந்த
சமூகவாதியின் படைப்பிலக்கண தெரிவுமுறை.

என் பாட்டி சொன்னதோ
வடை சுட்ட கதை!- இவர் பாட்டி
புகைவண்டியில் புகட்டியதோ
மாணவருக்கு தர்மத்தை!

ரசனையான  எழுத்தில்
ரஜினிகாந்தின் வேகம்!
இன்னும் எழுதுவதில்
வயதை மறந்த
கஜினிமுஹம்மதுவின் தாகம்!

வகுப்பறையில்
இவரின் ஆக்கம்-அது ஒரு
தமிழின் துணைப்பாட பகுதி!
இதைவிட வேறென்ன வேண்டும்
இவரின் படைப்புக்கு தகுதி!

பாலகன் கிருஷ்ணன்
திருடியது வெண்ணை-இந்த
வயோதிக கிருஷ்ணன்
திருடியது அவரின் எழுத்தால் என்னை.!

ரசிப்புக்கு
சிரிப்புக்கு
சிந்தனைக்கு
போதனைக்கு
நீதிக்கு
பக்திக்கு-என நமக்கு படைத்தார்
பல விருந்து!
நாமும் அளிப்போம்
"செந்தமிழ் செல்வர்" எனும்
கௌரவ விருது.!

ஆயிரம் பழமொழிக்கு
அர்த்தம்  சொன்னார்.
"உன்னைச்சொல்ல
உன் நண்பனை காட்டு"-இந்த
பழமொழிக்கு
தன்னையே தந்தார்.

வகுப்பறை சுப்பையா
தஞ்சை கோபாலைய்யா
இவருக்கு தோஸ்த்தையா!
அப்படியெனில்
இவரைப்பற்றி சொல்ல வேண்டுமாய்யா?

இந்த
செம்பிறை சீடருக்கு
பால்குடியில்
வந்தது தொண்டாற்றும் எண்ணம்.
அது
லால்குடியில் கோலோச்சுது இன்னும்.

எழுத்துக்கும் ஏழைக்கும்
இவரின்
தொண்டுகள் மேலும் சிறக்க
வகுப்பறை சார்பாய்
இந்த
பூச் செண்டுகள் தருகிறோம்
வாழ்க! வளர்க!!.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


சக்திகொடு!
ஆக்கம்: தனுசு


(சென்ற வாரத்தில் "வரிகள்" பற்றிய ஒரு பதிவு  வெளியிட்ட போது அதற்கு தேமொழி அவர்கள் "சக்திகொடு சக்திகொடு சக்திகொடு......."என்று ஒரு பின்னூட்டமிட்டார். அந்த சக்திகொடு எனும் வார்தை உண்டாக்கிய கவிதை இது.)


சக்தியே
எனக்கொரு சக்திகொடு
பாராளும் சக்தியே
எனக்கொரு சக்திகொடு.

சுற்றும் பூமி நின்றுபோக
கடலின் நீரும் வற்றிப்போக
தீயும் தீர்ந்து சாம்பலாய் போக
நான்
யாகம் செய்ய சக்தி கேட்கவில்லை!

நானிலம் ஆளும் நாயகி!
இந்த
மா நிலம் மக்கிடவேண்டுமா?
கூனிக்குறுக வேண்டியதெல்லாம்
கோபுரம் ஏறி ளர்ந்திடலாமா?

அரிதாரம் முதல் அவதாரம் வரை
அத்தனையும் இங்கு வேஷம்!
அதை புரியாமல்
போடுது ஒரு கூட்டம்  தினந்தோரும் கோஷம்!

பக்தியில் முக்திக்கு
சம்போ சிவ சம்போ!
பத்திக்கும் காமத்தீயில்
அத்தனையும் இங்கு அம்போ!

ராத்திரி ரகசியம் மட்டும்
இங்கு
சாஸ்திரம் பார்ப்பதில்லை-அந்த
ரம்மி ஆட்டத்தில் ராஜா ராணி
தட்சனை ஏதும் கேட்பதில்லை!

பாலாறு என்றொரு நைல் ஆறு!
அதனை
பங்கு வைக்கும் நாடுகளோ ஆறு!
இங்கு இருப்பதோ அதுபோல பல ஆறு-பாவம்
அதனாலே பலநூறு தகறாரு!

பட்டம் முதல் பட்டயம் வரை
கொள்ளை போகுது காசில்!
விட்டகுறை தொட்டகுறையாக
சட்டமும் படுக்குது பாயில்!

பத்திரம் முதல் பக்தர்வரை
யாதும் போலி!
தொண்டன் முதல் தலைவன் வரை
மேயும் வேலி!

உழைத்து பிழைக்க மறுக்கும் ஜனம்!
அவரின்
கண்ணில் தெரிவதெல்லாம் பணம்!
நெஞ்சில் நிறைவது
சுயநலம் என்ற குணம்!

எங்கெங்கு கானினும்
பிழையான பிழைப்பு
சரிசெய்ய நானிங்கு
யாருக்கு வைப்பது அழைப்பு!

என்னோடு கூட்டமில்லை
கொடி பிடிக்க யாருமில்லை!
நான்
கொண்டாடும் கொள்கையை
என் குடிசையிலும் ஆதரிப்பாரில்லை!

உள்ளம் பொறுக்கவில்லை-இங்கு
தஞ்சம் அநீதியின் எல்லை!
யாரின் நெஞ்சிலும் நீதியில்லை
நெடும் ஆட்டத்திற்கும் அளவில்லை

ஆடுகின்ற ஆட்டத்தை
ஆடும்வரை ஆடவிட்டு-அவர்
அடங்கும்  முன்
வந்ததற்கு வரவு வைக்க
மிச்சம் உள்ள மனித நேயம்
புரியவைக்க  சக்திகொடு.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7


நகைச்சுவை
அனுப்பியவர். ஜி.ஆனந்தமுருகன்

DEFINITIONS
Sent by G Ananthamurugan
School:A place where Papa pays and Son plays.

 
Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.
Nurse:A person who wakes u up to give you sleeping pills.
Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..
Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.
Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"
Conference: The confusion of one man multiplied by the number present.
Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
Dictionary: A place where success comes before work.
Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.
Father: A banker provided by nature.
Boss:Someone who is early when you are late and late when you are early.
Politician: One who shakes your hand before elections and your Confidence after.
Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.
Smile:A curve that can set a lot of things straight.
Yawn:The only time some married men ever get to open their mouth.
Etc.: A sign to make others believe that you know more than you actually do.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Experience: The name men give to their mistakes. 

---------------------------------------------

School:A place where Papa pays and Son plays.

Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.

Nurse:A person who wakes u up to give you sleeping pills.

Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..

Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.

Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"

Conference: The confusion of one man multiplied by the number present.

Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.

Dictionary: A place where success comes before work.

Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.

Father: A banker provided by nature.

Boss:Someone who is early when you are late and late when you are early.

Politician: One who shakes your hand before elections and your Confidence after.

Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.

Smile:A curve that can set a lot of things straight.

Yawn:The only time some married men ever get to open their mouth.

Etc.: A sign to make others believe that you know more than you actually do.

Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

Experience: The name men give to their mistakes.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8


நகைச்சுவை
ஆக்கம்: எஸ்.சபரி நாராயணன், சென்னை

புதிதாகச் சேர்ந்த மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமான இயற்பியல் பாடம் ஒன்றை பேராசிரியர் ஒருவர் நடத்தத் துவங்கினார்.

இரண்டாம் நாள் பாடம் அதிக சிரமமாக இருந்தது.

ஒரு மாணவன் முரட்டுத்தனத்துடன் குறுக்கிட்டுக் கேட்டான்:

”இந்தக் கருமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?”

பேராசிரியர் அமைதியாகச் சொன்னார்,” பலருடைய வாழ்க்கையை இது காப்பாற்றும்!”

சில நிமிடங்களுக்குப் பிறகு அதே மாணவன் எழுந்து கேட்டான்,” இயற்பியல் எப்படி வாழ்க்கையைக் காப்பாற்றும்?”

”உன்னைப் போன்ற முட்டாள்கள் மருத்துவத்தில் பட்டம் பெறுவதை இது தடுத்து நிறுத்தும்!”
"It keeps idiots like you from graduating,"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

15.6.12

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

Astrology - Popcorn Posts மயக்கும் உலகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள்!

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி ஒன்று!

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான்.

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்!

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க!

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்?

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும்.

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!
------------------------------------------------------------------------------
உதாரணம்

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம்.

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்
பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!
இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“கண்ணா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

Devotional முன்வினை எப்போது தீரும்?


முன்வினை எப்போது தீரும்?

பக்திப்பாடல்

பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி
படம்: மகாநதி (1994)
இசை: இளையராஜா
பாடலாக்கம்: கவிஞர் வாலி
பாடியவர்கள்:  ஷோபனா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

பாடல் வரிகள்:

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

(ஸ்ரீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளூமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஸ்ரீரங்க  ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி  
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி
----------------------------------------------------
பாடலின் காணொளி:
Our sincere thanks to the person who uploaded the video clipping!




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!