மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.12.11

ருத்திராட்சத்தில் என்ன(டா) மகிமை உள்ளது?

ருத்திராட்ச மரம்

ருத்திராட்சத்தில் என்ன(டா) மகிமை உள்ளது?

ருத்திராட்சம் அணிவது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன!

பின்னூட்டம் ஒன்றில் அன்பர் ஒருவர் அது பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

நான் சின்ன வயதில் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தேன். அது நடு நிலைப் பள்ளியில் படித்த காலம் வரைதான். அதற்குப் பிறகு பிரச்சாரக் கூட்டங்களுக்கெல்லாம் போகின்றகால கட்டத்தில் (என்ன பிரச்சாரக் கூட்டம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்) அவிழ்த்து வைத்து விட்டேன்.

வீட்டில் பெற்றோர்களும் கட்டாயப் படுத்தவில்லை!

செட்டிநாட்டில் (அந்தக் காலத்தில்) சின்னக்குழந்தைகளின் கழுத்தில் இரண்டு பக்கமும் தங்கப் பட்டி போட்ட ருத்திராட்சம் இருக்கும். செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியிலேயே ருத்திராட்சத்தைக் கோர்த்து அணிந்திருப்பார்கள்.

மூன்று மாதம் முடிந்த பிறகு, குலதெய்வக்கோவிலிலோ அல்லது உள்ளூர் அம்மன் கோவிலிலோ அல்லது பழநிக் கோவிலிலோ குழந்தைக்கு
முடியிறக்கிவிட்டு, முதல் வேலையாகக் கழுத்தில் ருத்திராட்சத்தைக் கட்டிவிட்டு விடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் அது!

குழந்தைகளுக்கு அணிவதற்கென்றே சிறிய அள்வில் ருத்திராட்சங்கள் கிடைக்கும். சில வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள்
வைத்திருப்பார்கள். வாரணாசிக்குச் சென்று திரும்புபவர்கள் நிறையக் கொண்டுவந்து உறவினர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள்.

ருத்திராட்சத்திற்கும் தங்கத்திற்கும் பஞ்சமில்லாத காலம் அது!

நாற்பது வயது தாண்டியவர்கள் அனைவரும் ருத்திராட்சம் அணிந்திருப் பார்கள்.(அந்தக்காலக் கதை என்பதை நினைவுபடுத்திக்கொண்டே
இவற்றைப் படிக்கவும்) வசதியானவர்கள் என்று இல்லாமல் பலரும் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார்கள். சின்ன ருத்திரட்சமாக இருந்தால்
108 ருத்திராட்சங்கள் மாலையில் இருக்கும். அதை இரண்டு சுற்றுக்களாக்கி கழுத்தில் அணிந்து கொண்டிருப்பார்கள். பெரிய ருத்திராட்சமாக இருந்தால் மாலையில் 54 ருத்திராட்சங்கள் இருக்கும். வசதியானவர்களின் ருத்திராட்ச மாலை தங்கத்தில் இணைக்கப்பட்டதாக இருக்கும். அல்லவென்றால் செம்புக்கம்பிகளால் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள். அதாவது தலை மொட்டை.
நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் (ருத்திராட்சக்) கொட்டை. காலில் கட்டை (மரக் கட்டையால் செய்த செருப்பு). மாட்டுத் தோலினால் செருப்புக்கள் செய்யப்படுவதால் தோல் செருப்பை அணியமாட்டார்கள். அப்படியொரு பக்தி.

உபதேசம் கேட்டுக்கொள்வார்கள். அதற்கென்று செட்டிநாட்டில் இரு ஊர்களில் குருமார்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.  அதற்கென்று அறக்கட்டளைகளும், விடுதிகளும் சொத்துக்களும் இருக்கின்றன. வழிவழியாக வந்த குருமார்களும் இருக்கின்றார்கள்.

அந்த ஊர்களின் பெயர்கள்: பாதரக்குடி, துலாவூர். அந்த இரண்டு கிராமங்களும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. நீங்கள் சென்றால் பார்க்கலாம்.

இந்த உபதேசம் கேட்டுக் கொண்டவர்கள், காலை, மாலை என இருவேளைகளும், குளித்து, சந்தியாவந்தனம் செய்வார்கள். 108 முறை சிவன்
நாமத்தைச் சொல்லி - பஞ்சாட்சரத்தைச் சொல்லி (அதாவது நமச்சிவாயா என்று சொல்லி) சிவனை வணங்குவார்கள். அதற்கு அவர்களுக்கு
நேரமும் இருந்தது. அந்த 108 எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்கு ருத்திராட்ச மாலையும் இருந்தது. மாலையின் மேல் பகுதிக் கொக்கியில்
ஆரம்பித்தால், மறுபக்கக் கொக்கி வருவதற்குள் 108 முறைகள் பஞ்சாட்சரம் சொல்லி முடிக்கப்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் ஒரு ருத்திராட்சம் கைவிரல்களைக் கடந்திருக்கும்.

இன்றையத் தலைமுறையினர் (என்னையும் சேர்த்து) அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. விட்டகுறை தொட்டகுறையாக ஒரு 20% அல்லது 25% அதைத் தொடர்கிறார்கள் (சரியான எண்ணிக்கையில்லை. உத்தேசம்தான்)

அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம்  ய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம்  இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!

நமக்கெல்லாம் ஆரோக்கியத்தைவிட பணமே பிதானமாகப் போய்விட்டது. பணத்தேடலிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதி கழன்று  கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை!

நேரம் கிடைத்தாலும் பலர் அதை டாஸ்மாக்கில் அல்லது தொலைகாட்சி அழுவாச்சி சீரியல்களில் அல்லது ஐ.பி.எல் ட்வென்டி ட்வெண்டி  போட்டிகளில் செலவழித்துவிடுகிறார்கள். கலியுகம். வேறென்னத்தைச் சொல்வது?

ஒரு ஆறுதலான செய்தி: மெடிக்ளைம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆகவே அவன் பார்த்துக் கொள்வான்!:-))))
---------------------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்) ருத்திராட்சத்தைப்பற்றிய செய்தி அதிகமில்லாமல் எல்லாம் உங்கள் கதையாகவே இருக்கிறதே? ருத்திராட்சத்தைப்பற்றிய முக்கியமான செய்திகள் எங்கே?”

 “நீ கேட்பாய் என்று தெரியும் கண்ணா! கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பார்!”
______________________________________________________________________

ருத்திராட்சத்தைப் பற்றி நான் சொல்ல வந்ததைவிட ஒரு இஸ்லாமிய அன்பர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். விடாமல் அவருடைய கட்டுரை
முழுவதையும் படியுங்கள். அதற்குப் பிறகு அதை அணிவதா அல்லது வேண்டாமா? என்பதை உங்கள் விருப்பப்படி முடிவு செய்யுங்கள்.
அந்தக் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது:
http://www.tamilvanan.com/content/2009/09/11/disease-relief-plants-akbar-kausar-25/
மேலதிகத் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நல்ல ருத்திராட்சமாக இருந்தால், அதைத் தண்ணீரில் போட்டால், அது நீருக்குள் மூழ்கிவிட வேண்டும்

2. ஐந்து முகம், ஆறுமுக முகம் கொண்ட ருத்திராட்சங்கள் அதிகமாகக் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். திருவண்ணாமலைக் கோபுரவாசலில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். விலை ஐந்து ரூபாய். அதே உத்திராட்சம் வாரணாசியில் ஒரு ரூபாய்

3. ஆறுமுகத்திற்கு மேல் ஏறுமுகம் என்பார்கள். அதாவது அதிக முகங்களைக் கொண்ட ருத்திராட்சம் நல்ல பலனைத் தரும் என்பார்கள். விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை அதன் தன்மையைவைத்தும் முகங்களை வைத்தும் மாறுபடும்.

4. ஒரு கடினமான நிபந்தனை உண்டு. ருத்திராட்சம் அணிந்தவர்கள் புலால் அருந்தக் கூடாது. அதாவது நான் வெஜ்ஜிற்குத் தடா போட்டுவிட வேண்டும்.

5. ருத்திராட்ச மரத்தைப்பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே உள்ளது!
http://cpreecenvis.nic.in/04_01_Sacred%20trees/rudraksha.htm

நட்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.12.11

Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!



Astrology உள்ளம் கவர் கள்வனின் நட்சத்திரம்!

என் நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டுத் (Boston, USA) திரும்பியவர் சொன்னார்:

“என் மகள் மிகவும் அவதிப்படுகிறாள்”

“ஏன், என்ன பிரச்சினை?”

“பிரச்சினை எல்லாம் அவளுடைய நான்கு வயது மகனைவைத்துத்தான். பயல் படுசுட்டி. அசாத்தியக் குறும்பு. தாங்கமுடியாத குறும்பு. எதை எப்போது கொட்டி மொழுகுவான் என்று தெரியாது. மொத்தத்தில் படு துஷ்டன்!”

நான் இடை மறித்துக் கேட்டேன்: “பையன் ரோஹிணி நட்சத்திரமா?”

தூக்கி வாரிப்போட்டது போல் ஆகிவிட்டது அவருக்கு, ஆதங்கத்துடன் கேட்டார், “எப்படிக் கரெக்டாகச் சொல்கிறீர்கள்?”

“அந்த நட்சத்திரக்காரர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். மாயக் கண்ணன், வெண்ணெய் திருடிக் கள்ளன் - உள்ளம் கவர் கள்வன்
கண்ணனின் நட்சத்திரம் அது!”

“கடைசிவரை அப்படித்தான் இருப்பார்களா?”

“பதினான்கு அல்லது பதினெட்டுவயதுவரை அப்படித்தான் இருப்பார்கள். அதற்குப்பிறகு சூப்பராக மாறிவிடுவார்கள்”

“ரோஹிணி நட்சத்திரத்தைப் பற்றி மேலும் சொல்லுங்கள்” 

“ரோகிணி நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவரும் விரும்புகின்ற தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊர் சுற்றிகள். இறை
நம்பிக்கை இருக்கும். எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருக்கும்.”

“அவ்வளவுதானா?”

“இன்னும் நிறைய இருக்கிறது. 
Rohini nakshatra is the birth nakshatra of Lord Krishna. Those born in the star Rohini are experts, well-behaved, handsome, good speakers and poets. They are stable minded, respected  and interested in lovemaking. They are of sweet-speech, intelligent, capable and bright. They are long-lived and perform accepted jobs, religious, truthful and help 
those who have helped them. Kings respect them.They respect gods They are able servants of their lords and determined. They are endowed with good looking and wide forehead, handsome, independent, loved by their children, experts, wealthy with respect 
to corns and money, have desire to wear new clothes,suffer from eye diseases and little feared”

“வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் இல்லாமல் இருப்பார்களா?”

“அதெப்படி? இரவு பகலைப் போல இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எந்த நட்சத்திரமும் விதிவிலக்கல்ல! ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு துவக்க திசை சந்திர திசை. அது சந்திரனின் நட்சத்திரம். ஆகவே  ஸ்டார்ட்டிங் திசை சந்திர திசை. அதில் கர்ப்பச்செல் இருப்பு எத்தனை ஆண்டுகள் உள்ளதோ அத்தனை ஆண்டுகளுடன் அடுத்து வரும்  செவ்வாய் மகாதிசையின் ஏழு ஆண்டு களையும் கூட்டிக்கொள்ளூங்கள் ப்ளஸ் அதற்கு அடுத்துவரும்
ராகுதிசையின் சுயபுத்திக்காலமான 2 ஆண்டுகள் 8 மாதங்கள்
12 நாட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதுவரை நன்றாக
இருப்பார்கள். அதற்குப்பிறகு சுமார் 15 ஆண்டு காலம்  கஷ்டம்தான்.
அது ஒருவருடைய இளமைக்காலம். அதாவது 15 வயது முதல்
30 வயது வரை அல்லது 20 வயது முதல் 35 வயதுவரைஉள்ளகாலம்.
அதில் அவர்கள் பல முட்டுக்கட்டைகளை அவர்கள் சந்திக்க
வேண்டியதாக இருக்கும்”

“அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?”
   
“இருக்கிறது. ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கான திருக்கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ளது. அதன் பெயர் அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில். அந்தக் கோவிலுக்கு தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சென்று அங்கே உறையும் பெருமாளை மனம் உருக  வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரம்”
---------------------------------------------------------------------------------------
அக்கோவிலைப் பற்றிய மேலதிகத்தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணிவரை; மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணிவரை!
இங்கே உறைந்திருக்கும் இறையனாரின் பெயர் பாண்டவ தூதர்
அம்மைகளின் பெயர்கள்: சத்யபாமா, ருக்மணி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதணக் கோவில்!
ஆழ்வார்கள் பலரின் பாடல் பெற்ற திருத்தலம் இது.
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, மார்கழித் திங்களில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகிய காலங்கள் இக்கோவிலின் திருவிழாக்காலமாகும்

கிருஷ்ண பகவான் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். அருள்பாலிக்கின்றார்.

வேறு எந்த வைணவத் தலங்களிலும் காணக்கிடைக்காத சிறப்பம்சம் இது!     

நீர் மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடும் திறமை வாய்ந்த அன்பர்களுக்காக இத்திருக்கோவிலின் முழு முகவரியை அடுத்துக்
கொடுத்துள்ளேன்.
  
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்,
திருப்பாடகம்,
எண். 28, பாண்டவதூதப் பெருமாள் கோயில் தெரு,
காஞ்சிபுரம் - 631 502.

பரந்தாமன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோகசக்திகளைக் கொண்டு அருளுகின்றார். ஆகவே இங்கே அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களுக்கு மிகுந்த நன்மைகள் உண்டாகும். எல்லாம் நம்பிக்கையின் அடைப்படையில்தான் நடக்கின்றது. நம்பிக்கையோடு வழிபடுங்கள். வக்கிரமான கேள்விகளைத் தவிர்க்கவும். புதன்கிழமைகள், சனிக்கிழமைகள், ரோகிணி நட்சத்திரநாட்கள், அஷ்டமி திதிகள், எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது நல்லது.

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக செயல்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து
தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். அதனால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப் படுகின்றார்.  பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள  கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப்பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை  கொண்டு அருளுகின்றார்.  இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி  என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.

ரோகிணி நட்சத்திர தேவி, இத்தலத்தில் உறையும் பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாளாம். சந்திரன் தனது 27 நட்சத்திர
தேவியர்களில் முதலில் ஞானசக்தியைக் கொண்ட ரோகிணியையும், அக்னி சக்தியைக் கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே மற்ற
நட்சத்திர தேவிகளையும் மணந்தாராம்.

(அக்காலத்தில் பலதார மணத் தடுப்புச் சட்டம் எல்லாம் இல்லை என்று தெரிகிறது. பல பெண்களை மணந்து கொள்வது தவறில்லை என்றும்
தெரிகிறது. அத்துடன் அக்காலத்துப் பெண்களும் தங்கள் கணவனை
முட்டிக்கு முட்டி தட்டி எடுக்கும் வழிமுறைகளை அறியாதவர்களாகவும் இருந்திருக் கிறார்கள் என்றும் தெரிகிறது. மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டு காலத்திற்குள் ஏற்பட்டவைதான்
அதையும் மனதில் கொள்க!)

ரோகிணி தேவியார் தனக்கு ஞானசக்தியைக் கொடுத்த பெருமாளை அருவ வடிவில் தினமும் வந்து வணங்குவதாக ஒரு நம்பிக்கை  உள்ளது.அதற்கு ஏதாவது காணொளி (Video) சான்று உள்ளதா என்று அசட்டுத் தனமாகக்
கேட்டுக் கொண்டிருக்காமல், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
புதன், சனிக் கிழமை, அஷ்டமி திதி, மற்றும் 8ஆம் தேதிகளில்
இத்தலத்திற்கு வந்து இங்கே உறையும் பெருமாளை  வழிபடுவது
நன்மை பயக்கும்!

பாண்டவர்கள் கவுரவர்களிடம் தங்கள் நாட்டை இழந்தார்கள். அட்லீஸ்ட் ஆளுக்கொரு வீடுகளையாவது கேட்டுப்பெற விரும்பினார்கள். அவர்களின் பொருட்டு பகவான் கிருஷ்ணர் துரியோதனனிடம் தூது சென்றார், அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை  போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரை சூப்பர் சுப்பராயன் குரூப்பைப் போன்ற பைட்டர்கள் மறைந்திருந்து தாக்கினார்கள். தாக்கியவர்களை துவம்சம் செய்ததுடன் தந்து விஸ்வரூப  தரிசனத்தையும் காட்டினார் பகவான். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூதப் பெருமாள் என்று அழைப்பார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிகொடுப்பது நீங்கள் வேறு எங்கும் காண முடியாத  காட்சியாகும்.

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பிறகு, ஜனமேஜயர் என்ற மன்னன், வைசம்பாயனர் என்னும் முனிவரிடம் பாரதக்கதையை முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஸ்ரீகிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும்  தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழியை அம்முனிவரிடம் கேட்க, அவரின் அறிவுரையின்படி காஞ்சிபுரம் வந்து இத்திருக்கோவிலில் தவம் செய்து பெருமாளை வணங்க, பெருமாளும் அவருக்காக ஒருமுறை விஸ்வரூப தரிசனம் காட்டி அருள்பாலித்தார்.

Janamejaya was a Kuru king. He was the son of Parikshit and Madravati. He was the grandson of Abhimanyu and the great - grandson of  Arjuna, the valiant warrior hero of the Mahābhārata. He was ascended to the Kuru throne following the death of his father. His significance  comes as the listener of the first narration of the Mahābhārata, narrated by Vaishampayana, pupil of Vyasa. மேலும் படிக்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Janamejaya
--------------------------------------------------------------------  
ரோகிணி நட்சத்திரக்காரர்களே உங்களுக்கான கோவில் இது. உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள், க‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்கு ஒருமுறை
சென்று அங்கே உறையும் பெருமாளை மனமுருக வழிபடுட்டுவிட்டு வாருங்கள்! பிறகு நடப்பதைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

11.12.11

பாரதி விழா - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்


 மாணவர் மலர் - பகுதி 2
 மலரின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் சுட்டி இங்கே. க்ளிக் செய்து படிக்கவும்
----------------------------------------------------------------------

பாரதி விழா - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

இன்று (11.12.2011) மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள். அதைக் கொண்டாடும் விதமாகத் தஞ்சையில் சென்ற வாரம் நடைபெற்ற விழா நிகழ்வுகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறார், நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி). அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்! படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
இந்திய ஒலிபரப்புக் கழகம்,அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி, பாரதி சங்கம், தஞ்சாவூர்,பாரதி இயக்கம், திருவையாறு இணைந்து நடத்திய "மகாகவி பாரதியாரின் 130 வது பிறந்த நாள் விழா"

நாள்; 4.12.2011 ஞாயிறு. இடம்:பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்.

லால்குடிக்கும் தஞ்சாவூருக்கும் திருக்காட்டுப்பள்ளி வழியாகப் பயணம் செய்தால் 55 கிமி தூரம்தான்.திருச்சி வழி என்றால் 80km  வீட்டை விட்டுக் கிளம்பி தஞ்சையில் பெசண்ட் அரங்கம் சென்று அடைய காலை 10:30 ஆகிவிட்டது. தொடக்க விழாத் தலைமை உரையை மூத்த வழக்கறிஞர்
வி சு ராமலிங்கம் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

அவர்தான் தஞ்சாவூர் பாரதி சங்கத்தின் அமைப்பாளர். கடந்த 26ஆண்டுகளுக்கும் மேலாக மாதம்தோறும் "பென‌ல்டிமேட் சண்டேயில்" மாலை 6 முதல் 8 வரை "தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும்"என்ற தொடர் சொற்பொழிவைப் பல அறிஞர் பெரு மக்க‌ளைக் கொண்டு நிகழத்திக் கொண்டு இருப்பவர்.

ஏ ஐ ஆரின் திருச்சி நிலைய இயக்குனர் வெ.ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையும்,திருவையாறு தருமை ஆதீனக் கட்டளை விசாரணைத் தம்பிரான முனைவர் (டாகடர்)குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சிறப்புரை ஆற்ற துவக்க விழா நிகழ்ச்சி காலை 11:45 மணிக்கு முடிவுற்றது.

உடனே துவங்கியது கருத்தரங்கம்.

கருத்தரங்கத் தலைப்பு "வான் புகழ் கொண்டபாரதி."

கருத்தரங்கத் தலைவர் முனைவர் இரா. கலியபெருமாள் தன் நீண்ட தலைமை உரையை வாசித்தார். எப்படி பாரதி நமது தமிழ்ச் சங்ககால மரபில் இருந்து முகிழ்த்தனன் என்பதைப் பரக்க நிறுவினார்.மரபில் இருந்து விலகாமல் புதுமையைப் புகுத்தினார் பாரதியார் என்பது அவர் உரையின் சாராம்சம். அவர் உரையே நீண்ட நேரம் ஆகிவிட்டதால் அடுத்துப் பேசவுள்ளவர்களுக்கு தலைவர் ஆகிய அவரே கால‌க்கெடு விதிக்க வேண்டியதாயிற்று.

"ஒவ்வொருவரும் 15 மணித்துளிகள் பேசுமாறு காலநிர்ண‌யம் செய்ய வேண்டிய கேடு காலம் எனக்கு"என்று நயம் பட உரைத்தார்.

கருத்த‌ரங்கத்தில் நமது தஞ்சை பெரியவர் திருவாளர் வெ.கோபாலன் ஐயா அவர்கள் 'பாரதியின் பாஞ்சாலி'என்ற தலைப்பில் உரையாற்றி னார்கள். பாஞ்சாலி சபத‌த்தையும், அபிராமி அந்தாதியையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் வாய்ந்தவர்.

'எரிதழல் கொண்டுவா தம்பி, அண்ணன் கையை எரித்திடுவோம்' என்று பெரியவர் முழங்கியபோது அந்த பார'தீ'கையில் தீப்பந்ததுடன்
அர‌ங்கினுள் நுழைந்ததை என் மனக் கண்ணால் கண்டேன்.அற்புதமான உரை. கேட்கக் கொடுத்து வைத்தேனே என்று மகிழ்ந்தேன்.

அடுத்து திரு குப்பு வீரமணி 'பாரதிவிரும்பிய சமுதாயம்' பற்றிப் பேசினார்.அருமையான உரை. ஒரே ஒரு நயத்தினை மட்டும் சொல்கிறேன். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவவோம்' என்ற பாரதி வரியில் "தம்மை" என்பதற்கு 'மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்ளும் மடமை' என்று பெண்கள் மேலேயே அதனைத் திருப்பிவிட்டு புது விளக்கம் கொடுத்தார். நன்றி:ஜெயகாந்தன்.

அடுத்து வந்தவர் முனைவர் ப. உமாமகேஸ்வரி(திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர்). அவர் 'பாட' வந்தது 'பாரதியும் தமிழிசையும் 'என்ற
தலைப்பில்.இசையைப் பற்றிப் பேசினால் போதுமா? பேச்சுக் குறைவாகவும் பாட்டு அதிகமாகவும் நல்ல முன் யோசனையுடன் பாரதியின் பாட்டைப் பாடிக் காண்பித்தார்.  பாரதியின் காவடிசிந்து, நொண்டிச்சிந்து எல்லாம் கேட்டு
உள்ளம் கொள்ளை போனது.

)'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா; அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா;
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேனடா'
என்பார் தேசிக விநாயகம் பிள்ளை. அப்படி ஒரு 'கிறு கிறுப்பு'த் தோன்றி மயங்கிவிட்டேன். உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

பாரதியின் தேசியம் என்ற பொருளில் பேச வந்தார் திரு.நா.விஸ்வநாதன்.கொஞ்சம் புதுக்கவிதை, கொஞ்சம் ஜேகே,ஜென் புத்திசம்,ஹைக்கூ என்று ஒரு சுற்று சுற்றி வந்தார். பாரதியை ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொண்டார்.

ஒரு ஜென் புத்தத் துறவிக்கு இறுதி நாள் நெருங்குகிறதாம் அப்போது செர்ரிமலர்கள் பூத்துக் குலுங்கும் காலம். ஒரு ஹைக்கூ:"செர்ரிப் பூக்கள்
பூத்துக் குலுங்கும் போதா என்சாவு?"

செவிக்குணவுடன் வயிற்றுக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.சூப்பர் சாம்பார் சாதம், ஒரு உருளைக் காரக்கறி, சிப்ஸ், மணமான தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாய் என்று பசி நேரத்து உணவு வேண்டும் அளவு 150 பேருக்கு அளிக்கப்பட்டது.

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பெரியவர் உயர்திரு கோபால்ஜி அருகில் வந்தார். "இந்த அன்னதாதா யார் என்று தெரியுமா?"என்று புதிர் போட்டார்."சொன்னால் தானே தெரியும்" என்றேன்.'அரியூர் ஆலன்தான்' என்றார். நான் ஆச்சரியப்படுவேன் என்று நினைத்திருப்பார் போலும்.நான் சிறிது கூட ஆச்சரியப் படவில்லை.

எனக்கு சிங்கப்பூர் திரு. ஹாலாஸ்யத்தப் பற்றி இப்படி நல்ல செயல்களுக்குப் பொருள் உதவி செய்பவர் என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை நான் தஞ்சையில் செய்துவந்த மன நலமற்ற‌ தெரு வாசிகளுக்கு மதிய உணவளித்தல் என்ற திட்டத்திற்கு பெரும் உதவி அளித்துள்ளார். இப்போது  இந்த விழா செலவுக்கு அளித்து பெருமை சேர்த்தார். மேலும் பெரியவர் வகுப்பறையில் கூறிய கடுவெளி ஆதரவற்றோர் இல்லத்திற்கும் கணிசமான‌ நன்கொடை அனுப்பியுள்ள தகவலையும் பெரியவர் கூறினார். மனம் மகிழ்ந்தேன்.சிங்கைச் சிங்கம்  நண்பர்
ஹாலாஸ்யத்திற்கு வகுப்பறை மாணவர்கள் சார்பில் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். அன்னதாதா சுகி பவ!(அன்னதானம் செய்தவர் சுகத்தை அடையட்டும்)

மீண்டும் பிற்பகல் நிகழ்ச்சி 2:30 மணிக்குத்துவங்கியது.

திருவையாறு இசைக்கல்லூரி முதல்வர், பேராசியர்கள், மாணவர் மாணவியர் சேர்ந்திசை விருந்து அளித்தனர்.சுமார் 2 மணி நேரம் கால‌ம் நின்று
விட்டது. பாரதியின் பாடல்களுக்கு 'மெட்'டமைத்துப் பாடினர்.'அல்லா அல்லா அல்லா' என்று  அவர்கள் பாடியது, இஸ்லாமியரின் 'ஆதான்' அழைப்புப் போலவே அமைந்தது. அதனை மீண்டும் பாடச் சொல்லிப் பெரியவர் கேட்டு ரசித்தார்.

காலை நிகழ்ச்சி முழுவதும் அகில இந்திய வானொலி பதிவு செய்தனர். ஏனோ இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அவர்கள் வரவில்லை. எனக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த அற்புதமான இசை குழுவுக்கும் அந்த மனக்குறை இருந்தது என்பதை அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததிலிருந்து கேட்டு உணர்ந்தேன்.அவர்களுக்கு ஆறுதல் கூற‌ நினைத்து  இசை நுணுக்கங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் என் இசை மேதாவித்த்னத்தையும் அப்படியே 'ஷோ கேஸ்' செய்து கொண்டேன்.

"அந்த பெஹாக் ராகத்தில் பாடிய பாரதி பாடல்,'ஆடும் சிதம்பரமோ... ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ' பாடலினை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்தது..அதுவும் பெஹாக்தானே...?" இப்படி பேசியவுடன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. ஒரு கலைஞனுக்கு வேண்டியது பாராட்டு. பண‌மல்ல.பாராட்டைக் கொடுத்தவுடன் அவர்களுடைய ஏமாற்றம் சற்றே குறைந்தது.

அடுத்துப் பட்டி மன்றம்.

"மகாகவியின் ஆன்மீகப்பாடல்களில் மேலோங்கியிருப்பது வேண்டுதலா? விடுதலையா?' என்பது தலைப்பு.

பட்டி மண்டபத்தில் கவிஞர் ந முத்துநிலவன்,தலமையில், திரு இரா மாது முனைவர் ந.தமிழரசி, திரு டி.இராமனாதன்,திரு. பாரதிநேசன், கவிஞர்
சாமி.ம‌ல்லிகா முனைவர் இரா.காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லோரும் நனகு பேசினர். சாதாரணமாகப் பட்டிமன்றம் இப்போதெல்லாம் கருத்துக்கள் இல்லாமல் நகைச்சுவைத் துணுக்குகளாக இருக்கும். இங்கே வித்தியாசமாக எல்லாம் கனமான கருத்துக்களோடு சிறந்து விளங்கியது. பட்டி மன்றம் முழுவதும் இங்கே எழுதினால் 4 கட்டுரைகளில் எழுத வேண்டும். காதில் விழுந்த  கருத்து நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.

"பாரதி : முண்டாசு கட்டிய பட்டாசு! சின்னசாமிக்குப் பிறந்த பெரிய சாமி! லட்சுமிக்குப் பிறந்த சரஸ்வதி".

"பறவைகளும், விலங்குகளும் எவ்வளவோ உயர்ந்தவை. சுய மரியாதை உடையவை. ம‌னிதனுக்குத்தான் தன்மானம், சுய மரியாதை,எதுவும் கிடையாது. இருக்கிறது என்று சொன்னால் மனிதன் கோவில் முன்னே அமர்ந்து பிச்சை எடுப்பானா? குருவியோ, பருந்தோ, அவ்வாறு பிச்சையெடுக்கிறதா? மனிதனோடு ஒத்துழைப்புக் கொடுபதற்காக யானையை மனிதன் பிச்சை எடுக்க வைக்கிறான்."

நிறைவு விழாதான் இந்த ஒரு நாள் விழாவில் முத்தாய்ப்பு.

தலைமை ஏற்றுச் சிறப்பித்தவர் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் உயர்திரு தி.ந.இராமச்சந்திரன்.சென்ற ஆண்டு தமிழக அரசின் பாரதி விருது பெற்ற பேரறிஞர். அவருடைய உரையை முற்றிலும் யாராலும்  அவ்வளவு சுலபமாக உள் வாங்கிக் கொள்ள முடியாது.'பல சொல்லக் காமுற மாட்டேன்'என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு ரத்தினச்சுருக்கமாக நிறைய புதுக் கருத்துக்களைச் சொல்வார்.இம்முறை சைவ சித்தாந்தக் கருத்துக்களை எப்படி பாரதி நன்கு புரிந்து கொண்டு தன் கவிதைகளை அதன் விளக்கங்களாக கூடச் செய்துள்ளமை பற்றிக் கூறினார்.

"அந்தநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
 நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
 நேர்மைவேதம் சொல்லும் வழி யீது."

இந்த பாரதி வரிகளுக்கு அவர் கூறும் பல விள‌க்கங்களைக் கேட்க இரு காதுகள் போதா.அந்த அறிஞரை நீண்ட நாட்கள், மாதங்கள் சென்று கண்டது மிக்க மகிழ்ச்சி அளித்தது. ஆலிவர் கோல்டுஸ்மித் எழுதிய கிராமப்பள்ளி ஆசிரியர் என்ற பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. கிராமத்தின் மக்கள் அந்த ஊர் ஆசிரியரைக் காணும் போது 'இந்தச் சிறிய தலைக்குள் எப்படி இவ்வள‌வு தகவல்கள் இருக்கின்றன. தலை கனக்குமே! எப்படி அந்த கனத்த தலையுடன் நடமாடுகிறார்!' என்று வியப்பார்களாம். அந்தப் பாமரர்கள் நிலைக்கு திரு டி என் ஆர் நம்மை ஆக்கி விடுவார்.

அவர் உரை ஒரு ஆய்வு நூல் வாசிப்புக் கேட்டதை போல் இருந்தது.

சிறப்புப் பேச்சாளர் அமுத சுரபி ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ண‌ன், 'எக்காலத்திற்கும் பாரதி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆர்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு. ஆனால் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் முக்கியமான செய்திகளை விட்டு விடுவோம். பாரதியைப் பற்றி அவர் கூறியவை நாம் பெரும்பாலும் அறிந்தவைதான். மற்ற துணுக்குகளை இங்கே தருகிறேன்.

"தமிழ் உணர்வு என்பதில் பயன் ஒன்றும் இல்லை."தமில் வால்க" என்ற கோஷம் போடச் சொல்லிக் கொடுத்து விட்டு தமிழை அம்போ என்று விட்டு விட்டார்கள் திராவிட மரபு பேசுபவர்கள்.தமிழைக் கற்றலே நாம் தமிழுக்குச் செய்யும் தொண்டு"

"மக்கள் தொலைக் காட்சியில் என் பெயரை 'கிருட்டிணன்' என்று கூறினார்கள். அதே முறையாக 'சுடாலின்' என்றல்ல‌வோ ஸ்டாலினைச் சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்லாமல் அவரை மட்டும் 'ஸ்டாலின்' என்றே சொல்கிறார்கள். அவர்கள் தமிழ்ப்படி குஷ்பு, 'குசுபு' ஆனால் ஊர் நாறிவிடாதா?"

" சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் ராமரைக் காட்டிலும் கிருஷ்ணர் மேலேயே பக்தி அதிகம். இது ஏனப்படி?"

"சுவாமியார் வாயிலிருந்து லிங்கம் எடுத்தார். பாராட்டினார்கள். கையிலிருந்து விபூதி எடுத்தார். இப்படி எதையெல்லோமோ எடுத்துக் காட்டும்
சுவாமியாரை ஜாமீனில் எடுக்க பக்தர்களால்தான் முடியும்."

"பாரதியின் சீடர் வ‌.ராமசாமி (அய்யங்கார்) நாத்திகம் பேசியவர். அக்கிரஹாரத்து அதிசயப்பிறவி என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டவர். அப்படிப்பட்டவர் தன் இறுதிக் காலத்தில் 'முருகா முருகா' என்று உருகுகிறார். மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது'என் நாடி தளர்ந்து,உடல் தளர்ந்து, கண் பார்வை மங்கி, பல்லும் சொல்லும் போய் இறுதிப் பயணத்திற்கு நான் வந்துவிட்ட போது இந்தக் கைத்தடி உடலுக்கும், உள்ளத்திற்கு முருக நாமமுமே ஊன்றுகோல்' என்றாராம். இதை கு.அழகிரிசாமி எழுதியுள்ளார்"

"நாத்திகம் பேசு. வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆத்திகம் பேசு. எல்லோரும் செய்வது அது. இர‌ண்டிலுமே உண்மையாக இருங்கள் போலித்தனம் வேண்டாம்."

"கபிர்தாசர் முக்தி அடைகிறார். அவருடைய உடலை வைத்துக்கொண்டு இந்துக்கள் எரிப்போம் என்கிறார்கள். முஸ்லிம்கள் புதைப்போம் என்கிறார்கள்.அந்த இறந்த உடல் விழித்து எழுந்து 'மத ஒற்றுமைக்காக நான் பாடுபட்டேன். நீங்களோ என் உடலை வைத்துக் கொண்டே சண்டை இடுகிறீர்களே' என்று சொல்லி விட்டு மீண்டும் விழுந்து இறந்துபட்டது.அந்த‌ உடல் மீது போர்வை போர்த்தினார்கள். மீண்டும் திறந்த போது உடலுக்கு பதில் ரோஜா மலர்கள் இருந்தன. அந்த ரோஜா மலர்களையும் பாதிப் பாதியாக எடுத்து ஒரு பகுதி எரியூட்டப்பட்டது மற்றொரு பகுதி புதைக்கப்பட்டது.இதுதான் நமது மத ஒற்றுமை"

"ஒரு தமிழ்ப்பணிக்காக எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன் வெளியூர் வந்துள்ளார்.அவ‌ர் மகன் இறந்த செய்தி அவருக்குத்தெரிவிக்கப்படுகிறது. உடனே அவர் கிளம்பவில்லை. தான் ஆற்ற வந்த தமிழ்ப் பணியினை முடித்துவிட்டே கிளம்புகிறார்."

"வாஞ்சிநாதன் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி நூல் எழுதிய எழுத்தாளர் ரகமி பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது உணர்ச்சி மேலிட்டு இறந்தார்."

"சம்பந்தம் என்ற எழுத்தாளர். நாத்திகர். தன் உடலை தானம் செய்ய எழுதி வைத்து இருந்தார்.அதன்படி அவர் இறந்தபின்னர் உடல் மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.அதே போல கண்ணதாசனின் உதவியாளராக இருந்த ஒரு எழுத்தாளர் இற்ந்தார். அவர் உடலும் தானம்
செய்யப்பட்டது. ஏனெனில் அவர் உடலை எடுத்துச் சென்று சாங்கியங்கள் செய்யப் பணம் இல்லை."

"எழுத்தாளர்களை ஆதரிப்பதே நாம் பாரதிக்குச் செய்யும் தொண்டு.பாரதி காலத்தில் இருந்த நிலைதான் முழு நேர எழுத்தாளர்களுக்கு
இன்றும். புத்தகங்கள் வாங்குவதன் மூலம் எழுத்தாளர் வறுமையை நீக்குங்கள்"

குழந்தைகளுக்குப் பரிசு அளிப்புடன் விழா நிறைவுற்ற‌து.அதற்கும் சிங்கைச் சிங்கம் ஹாலாஸ்யம் அவர்கள் அனுப்பிய தொகை பயன் ஆனது என்றார் தஞ்சாவூரார்.

இந்த நிகழ்ச்சிகளின் வானொலி ஒலிபரப்பு(திருச்சி அலைவரிசை கே ஹெச் 936) கீழ்க்க‌ண்ட அட்டவணைப்படி நடக்கும்.
========================================================================
பட்டிமன்றம்:18 12 2011 ஞாயிறு மாலை 3 மணி.
கருத்தரங்கம்: 07,14,21, 28 12 2011, 04 01 2012 காலை 7 மணி.
திருப்பூர் கிருஷ்ணன் உரை: 04 01 2012 புதன் இரவு 9 30 மணி.
தி ந. இராமச்சந்திரன் உரை: 11 01 2012 புதன் காலை 7 மணி.
========================================================================
மறு நாள் 5 12 2011 அன்று தஞ்சாவூரார் இல்லத்திற்குப் போனேன். அவர் கையாலேயே 'மடி'யாகச் சமைத்து உருளைக் கிழங்கு
கறி, பாகற்காய் சாம்பார், தக்காளி ரசம், கட்டித்தயிர் என்று உணவு அளித்தார். பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது.

வாழ்க வளமுடன்!
நிகழ்ச்சியை உங்களுக்காகத் தொகுத்து வழங்கியவர்: கே.முத்துராமகிருஷ்ண‌ன் (லால்குடி)



அகில இந்திய வானொலி நிலைய அன்பர்கள்
நம் கோபாலன் ஐயா உரை நிகழ்த்திய காட்சி
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இசைக்குழுவினர்
தம்பிரான் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி
முதுமுனைவர் உயர்திரு தி.ந.இராமச்சந்திரன் உரையாற்றும் காட்சி
அமுத சுரபி ஆசிரியர் உரை நிகழ்த்தும் காட்சி

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மீண்டும் வா மகாகவியே
----------------------------------------------
ஆக்கம்: தனூர்ராசிக்காரன்

புதுக் கவிதையைத்
தேரேற்றி  வந்த
முதல்  சாரதியே,
உயிர்  பாரதியே
உமக்கொரு  குரு  வணக்கம்!

கல்லுக்கும்  மண்ணுக்கும் முன்பாகத் தோன்றி
கவி சொல்லெடுத்து தந்த பெண்ணை
பட்டுடுத்தி பொன்போர்த்தி
மாசறு தங்கமாய்
தந்தாய் தமிழாய்.

அன்று
அடிமையை அறுத்து குடிமை பெற
பாரத போருக்கு நீ பாடினாய் பாஞ்சாலி சபதம்.

இன்று
எங்களை மீண்டும்
தமிழுக்கு  அடிமையாக்கி தலை வணங்க வைக்க - நீ
இன்னுமொரு சபதம் எடுத்து வரவேண்டும் .

ஈனப் பிறவிகளால் என் தமிழுக்கு  இழுக்கு.
சில்லறைக்கு நாவைவிற்கும் நவீன விலைமாதர்கள்
பால் குடித்த மார்பை அறுக்கிறார்கள்
தூங்க வைத்த  தாலாட்டை தீயிலிடுகிறார்கள்.  

பன்மொழிப் புலமை வேண்டும் அதற்காக
என் பைந்தமிழ் பரலோகம் போக வேண்டுமா?
பிற மொழியை பல்லக்கில் தூக்க
என் செந்தமிழ் செக்கிழுக்க வேண்டுமா?

"தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"
"வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்"
என்றுரைத்த வர்க்கத்தில் வந்தோம்
வந்தென்ன செய்தோம்?

உள்ளுக்குள் எரிகிறது தணல்
கொதிக்கிறது குருதி
அன்னையாம்  தமிழின் நலம் இகழ்வோரின்
நாக்கறுப்பேன்  உயிர் நாடியையும் அறுப்பேன். 

மீசையை முறுக்கி
மீண்டும் என் தமிழை
தாயாய்  மூச்சாய் அகண்ட காவிரியாய்
தலையில் வைத்துக் கொண்டாட
மீசை கவிஞனே  மீண்டும் வா
இன்னொரு சபதம் பாடிவா!

-தனூர் ராசிக்காரன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
3
அழகான ராட்சஷியே.!
ஆக்கம் by தேமொழி

"அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
 முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
 அடி மனச அருவாமணையில் நறுக்குறியே"


என்று கதாநாயகன் பாடும்பொழுது, "வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது", என்று பெருமூச்சு விட வேண்டாம்.  தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம்.  அவள் அவ்வாறு  செய்வதற்கும் காரணம் இருக்கிறது.  காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம்.  இதை நான் சொன்னால், அதாவது ...ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.  ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.  நம்ப முடியவில்லையா?  பாரதியாரின் "சந்திரிகையின் கதை" என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார்.  ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி.  அந்தக் குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள்.  அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது.  ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார்.  ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு "பெண்டாட்டிக்கு ஜயம்". அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகை பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சி பற்றி எழுதியவையே அதிகம்.

கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர்  என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார்.  பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும் (பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்  -  http://projectmadurai.org/pmworks.html.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியாரின் "சந்திரிகையின் கதை" என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
   வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது.  இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது.  இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். 

வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. 

மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். 

இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.  மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது.  மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன.  ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன.  மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும்.  அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும்.  அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான்.  புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான்.  மழை பெய்தால் கஷ்டப்படுவான்.  காற்றடித்தால் கஷ்டப்படுவான்.  தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான்.  ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது.  இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.  கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள்.  வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும்.  வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். 

அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம்.  பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள்.  மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள்.  இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். 

இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். 

அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது.  அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும்.  இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். 

நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் - நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. 

அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும்.  அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

ஆக்கம் by தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!