மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
1
1
கற்பனை காதலிக்கு ஓர் கவிதை!
ஆக்கம்: புவனேஷ்வர்
வகுப்பறைக்கு புதுமுகம். இளைஞர். அணுக் கழிவுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி
சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று
செம்மாந்து வருமாப்போல் வந்தாய்;
செந்திருவன்னாயுன் சோதி முகங்கண்டு
சிந்தை திறை கொடுத்தேன்;
நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்
வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;
அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்
தேயாத திலகமிட்ட திங்களடி நீ.
நினைக்கின்றேன் உன்னை நான், என்
நினைவினில் வாழ்கின்றாய் நீ;
பனிக்காலப் போர்வை போலும்
இனிக்கின்ற இதம் நீ என்னில்;
காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்
காதல் நலமெனவே களி நடமிடுவோம்;
காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்
ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;
-----------------------------------------------------------------
2
சின்ன சின்ன ஆசைகள்:
ஆக்கம்: புவனேஷ்வர்
வகுப்பறைக்கு புதுமுகம். இளைஞர். அணுக் கழிவுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி
பொன்மாளிகை வேண்டும், அங்கு
வெண்மதி சூழ்ந்திடும் வேளையிலே ஒரு
தண்ணிழல் முற்றமும் தென்றலுடன் என்
பண்ணிசை யாழ்மிசை பண்ணிடவே ஒரு
கன்னியவள் வேண்டும்;
கண்ணுக் கழ கழகாய், ஒரு
கன்றுடன் கறவைபுல் மென்றிட வேண்டும்
அன்றைய சோறுநிதம் மிம் மண்ணில்
சென்று தேடாமல் ஒன்றிட வேண்டும்
குன்றா மதி வேண்டும்;
கற்றவர் உடன்வேண்டும், மற்று
செற்றவள் சொந்தமும் வாணியுடன் நற்
கொற்றவை கூட்டணியும் – சற்று
பெற்று மகிழ்ந்திட அருள் வேண்டும்
நற்றவ மிக வேண்டும்;
எத்தனை இடர் வரினும் – அவை
அத்தனையும் யான் சுட்டிடவே – நல்
புத்தி உடன் வேண்டும்; என்னைக்
கட்டியணைத்திடு மன்னை நிகர்த் தொரு
பத்தினிப் பெண் வேண்டும்……
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
ஞாயிறே நலமே வாழ்க!
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு
பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க
ஓர் ஆழி தனை நடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே
(கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்.)
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப்பாடல்)
நமது இந்து தர்மம், வழிபடும் கடவுள்களை முதலாகக் கொண்டு ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. காணபத்யத்தை அடுத்து, சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வணங்கும் 'சௌரம்' பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
'லோக கர்த்தா' என வேதங்கள் புகழும் சூரிய பகவான், பிரத்யக்ஷமாக, நம் கண்முன் தோன்றி அருள் புரிபவர். அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர். உலகில் எவ்வுயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி, தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தரும் தேவதேவன்.
அவரது ஒளிக்கற்றைகளில் பேதமில்லை.நம் எல்லோருக்கும் மேல், வானத்தில் பிரகாசித்து, எல்லா உயிர்கள், பொருட்கள் மீதும் தன் ஒளிக்கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர்.
“மேலிருந்து பார்,மலமும் ஒன்றுதான் மலரும் ஒன்றுதான்.
கீழிறங்கினால் மலம் வேறுதான், மலரும் வேறுதான்!
பேத புத்தியை விட்டால் எல்லாம் ஒன்றுதான்
பேத புத்தியைக் கொண்டால் எல்லாம் வேறுதான்."
(கவிஞர் திரு. கே.முத்துராமகிருஷ்ணன்)
என்று பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர். தன்னை உதிக்கக் கூடாதென்று தன் கற்பின் சக்தியால் சாபமிட்ட நளாயினி, மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்த போது அவளது பக்திக்கு இரங்கி, அக்ஷய பாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான்.
சூரிய வழிபாடு, மிகப் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக் கல்வெட்டுக்களில், இவ்வழிபாடு இருந்த குறிப்புகள் இருக்கிறது. ‘முன் தோன்றிய மூத்த குடி’ என்று புகழப்படும் பழந்தமிழர் நாகரிகத்திலும் சூரிய வழிபாடே பிரதானமாக இருந்தது. உழவுத் தொழிலின் மேன்மைக்கு உதவும் சூரிய பகவானை பண்டைக்காலம் தொட்டே வழிபட்டு வந்துள்ளனர். தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல் நாள், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும், குறிப்பாக ரோமானிய நாகரிகத்தில் சூரிய வழிபாடு இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பாரசீகத்தின் 'மித்திரன்' என்ற பெயரிலும்,கிரேக்கத்தில் 'அப்பல்லோ' என்ற பெயரிலும், ரோமதேசத்தில் 'சால் இன்விக்டஸ் (Sol Invictus) என்ற பெயரிலும், எகிப்தில் ரா(Ra), என்றும், மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் லிசா (Liza) என்றும், வழங்கப்படுவதிலிருந்து, உலகெங்கிலும் சூரிய வழிபாடு வியாபித்திருந்ததை அறியலாம். ஜப்பான் முதலிய சில நாடுகளில் சூரியன் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார்.(
http://ancienthistory.about.com/od/sungodsgoddesses/a/070809sungods.htm)
சௌரம்' என்ற சொல் 'நான்கு' என்ற பொருளில் நான்முகனான பிரம்மாவைக் குறிப்பது என்றாலும் மிகப்பெரும்பாலான நூல்களில் சூரியனை குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ரிக் வேதம் 'அக்னியின் முதல்வன்' என்றும், யஜூர் வேதம், 'சகல உலகத்தையும் காப்பவன்' என்றும், சாமவேதம் 'உயிரினங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பவன் என்றும் சூரிய பகவானைப் போற்றுகின்றன.
சூரிய பகவான், சிவாகமங்களில் 'சிவ சூரியன்' என்றும் ஸ்ரீ வைணவத்தில், 'சூரிய நாராயணன்' என்றும், புகழப்படுகிறார்.
சூரிய பகவானாலேயே உலக இயக்கங்கள் நடைபெறுவது கண்கூடு. ஒரு நாளின் துவக்கமும் முடிவும் சூரியோதயத்திலிருந்தும், அஸ்தமனத்தி லிருந்துமே கணக்கிடப்படுகின்றன. ஒரு ஆண்டின் இரு பிரிவுகளான, உத்தராயண, தக்ஷிணாயனங்கள் சூரிய பகவானின் சஞ்சாரத்திலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களின் முதல் நாள், சூரியன் பன்னிரெண்டு ராசிகளில்,ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் தினத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது.
பஞ்சாங்கங்களில், வருடம், மாதம் கணக்கிடப்படும் முறையில், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 'சௌரமானம்' எனப்படும். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமானம்’ (சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல்) நடைமுறையில் உள்ளது.
சூரியபகவானின் ஒளிக்கற்றைகளின் வெம்மை சுட்டாலும், உயிரினங்களின் வாழ்வாதாரமான மழை பொழிவதற்கும் சூரிய பகவானின் கிரணங்களே காரணம். கடல் நீர் சூரிய வெப்பத்தால், ஆவியாகி, பின் மேகமாக மாறி மழையாகப் பொழிந்து உலகை காத்தலை அனைவரும் அறிவோம்.
மந்திரங்களில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிற 'காயத்ரி மந்திரம்' சூரிய பகவானைப் போற்றுவதாகும். இம்மந்திரம், “யார் நம் அறிவைத் தூண்டி நம்மை வழிநடத்துகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான, பிரகாசமான ஒளியை தியானிப்போமாக'' ' என்று பிரார்த்திக்கிறது. காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், இம்மந்திரத்தைக் கூறி, சூரிய பகவானைப் பிரார்த்தித்து அர்க்யம் விடுவது (சூரிய பகவானை நோக்கி, இருகரங்களிலும் நீரை ஏந்தி அருவி போல் பொழிந்து சமர்ப்பிக்கும் பூஜை முறை) இந்து தர்மத்தில், எந்த தெய்வத்தை வழிபட்டாலும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
எல்லா இறை மூர்த்தங்களிலும், வலது கண், சூரிய பகவான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண் சம்பந்தமான நோய்கள் நீங்க, ஞாயிற்றுக் கிழமைகளில், சிவபெருமானை சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் சாற்றி, வெள்ளெருக்கு சமித்தால் சூரியனுக்கு ஹோமம் செய்து, வழிபாடு செய்வது சிறப்பு.
சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பது போல், சூரிய பகவான் 'நமஸ்காரப் பிரியர்'.
யோகாசனங்களில், பன்னிரெண்டு நிலைகளை உள்ளடக்கிய, 'சூரிய நமஸ்காரம்',செய்வதால், முதுகுத்தண்டு, வயிறு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். விடியற்காலை வேளையில் இதைச் செய்வது மிக, மிக நல்லது.
'தேஹகர்த்தா, ப்ரஸாந்தாத்மா விஸ்வாத்மா, விஸ்வ தோமுக|
சராசராத்மா ஸூக்ஷ்மாத்மா, மைத்ரேய: கருணான்வித:||'
(சூரிய பகவான் உடல் காரகர், மகிழ்ச்சியளிப்பவர், உலகத்தின் மூலம், அண்ட சராசரங்களிலெல்லாம் ஒளிர்பவர். கருணையே வடிவானவர்).
பகவத் கீதையில், ‘ஒளிரும் பொருட்களில் நான் சூரியன்' என்கின்றார் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
"ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² ||
"(கீதை, பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்).
முதல் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரிய பகவானுக்கே. அவர் இதை மனிதகுலத் தந்தையான மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தனர். இக்ஷ்வாகு மன்னர், ஸ்ரீ ராம பிரானின் குல முன்னோர்களில் ஒருவர். காலப்போக்கில், அதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டதாலும், சில கருத்துக்கள் சிதைவுண்டதாலும், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.
"இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்"
இதில் விவஸ்வான் என்பது சூரிய பகவானின் ஒரு திருநாமம். சூரிய பகவானுக்கு, கங்க வம்சத்து அரசன் முதலாம் நரசிம்மன் எடுப்பித்த 'கொனார்க்' சூரியனார் கோவில் சிற்ப களஞ்சியங்களில் ஒன்று.
தமிழ்நாட்டில், சோழமன்னன், முதல் குலோத்துங்கனால் கட்டப்பட்ட, தஞ்சை மாவட்டம், திருமங்கலக்குடிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 'சூரியனார் கோவில்' சூரிய பகவானுக்கான நவக்கிரக க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
சூரிய பகவானின் தோற்றம் குறித்துப் பல்வேறு விதமாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஆணைப்படி, பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய போது, அவ்வுலகங்களிலிருந்த இருள் நீங்க, பிரம்மா, ஓங்காரமாகிய பேரொலியை உண்டாக்கினார். அதிலிருந்து பிரகாசமான ஒளியுடன் சூரிய தேவன் தோன்றினார் என்பது ஒரு புராணக் கதை.
சூரியபுராணத்தின்படி, காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்தவரே சூரிய பகவான். நவக்கிரக மண்டலத்தின் தலைவர் இவரே. இவர் க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுகிறார். ஆகவே, இவர் ஆதிபத்தியம் பெற்ற சிம்ம இராசி, சிம்ம லக்கினத்தைச் சேர்ந்தவர்கள், இயல்பாகவே, தலைமைப் பொறுப்புகளுக்கு உரிய ஆளுமைக் குணம், தன்னைச் சேர்ந்தவர்களைப் பாதுக்காத்து வழி நடத்துதல் போன்ற குணங்களைக் கொண்டு இருக்கிறார்கள்.
சூரிய பகவான், ஒற்றைச் சக்கரத் தேரில், வேதத்தின் ஏழு சந்தஸ்களை ஏழு குதிரைகளாகப் பூட்டி, அருணன் சாரதியாக இருக்க, மேருமலையைப் பவனி வருகிறார் என்கின்றன புராணங்கள். வாரத்தின் ஏழு தினங்களே ஏழு குதிரைகள் என்றொரு கூற்றும் உண்டு. ஒற்றை சக்கரமானது, நாம் விண்ணில் சூரியனைக் காணும் பரிதி (வட்ட) வடிவத்தைக்குறிக்கும். சூரிய பகவான் இரு கரங்களிலும் சங்கு சக்கரத்தை ஏந்தியுள்ளார். இதில், .சங்கு பிரபஞ்சம் யாவும் அவனிடமிருந்து வந்தவை என்பதையும் சக்கரமானது உலகம், சூரியபகவானின் ஆணையால் ஒழுங்குமுறையுடன் இயங்குகிறது என்பதையும் குறிக்கிறது.
சூரிய பகவானுக்கு, உஷா, ப்ரத்யுஷா என்ற இரு மனைவியரும், வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் இருக்கின்றனர். கொடை வள்ளல் கர்ணன், சுக்ரீவன், வால்மீகி முனிவர், அகத்தியர், வசிஷ்ட மஹரிஷி, பிருகு முனிவர் ஆகியோர் சூரிய பகவான் அருளால் பிறந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
அக்னி புராணம், சூரிய புராணம், விஷ்ணு புராணம் முதலிய அநேக புராணங்களில் சூரிய பகவான் போற்றப்படுகிறார். ஸ்ரீ ராமபிரான் அவதரித்த சூரிய குல முதல்வன் சூரிய பகவானே. 'நவ வியாகரணப் பண்டிதர்' என்று புகழப்படுபவர் சூரியன். விநாயகப் பெருமான் சூரியனை வலம் வந்தும், ஆஞ்சநேயர் சூரிய பகவானுக்கு எதிர்முகமாக சஞ்சரித்தும் அவரிடமிருந்து கல்வி கற்றனர்.
சூரிய பகவானைக் குறித்துப் பல துதிகள் இருந்தாலும், அவரை நிர்க்குணப்பரப்பிரம்மமாகப் போற்றும் 'ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம்' சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீராம ராவண யுத்த சமயத்தில், அகத்திய மாமுனிவரால், ஸ்ரீராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டது. இது. இதன், முதலிரு ஸ்லோகங்கள், இது சொல்லப்பட்ட சூழ்நிலையையும், மூன்றாவது ஸ்லோகம், அகத்தியர்,ஸ்ரீராமபிரானை நோக்கிக் கூறுவதாகவும், நான்கு முதல் முப்பதாவது ஸ்லோகங்கள் வரை சூரியனைப் போற்றுவதாகவும், முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம், சூரியபகவான், ஸ்ரீராமபிரானை வாழ்த்துவதாகவும் அமைந்திருக்கிறது. அதில் சில ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் காணலாம்.
ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: "
சூரிய பகவானே, பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், மக்களின் தலைவனாகிய ப்ரஜாபதி, இந்திரன், தன(பொருட் செல்வ)த்தை அருளும் குபேரன், காலம், யமதர்மராஜன், சந்திரன், மற்றும் வருணனுமாவார்.(அபாம்பதி -வருணன்).
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேபுத்ர: சங்க: சிசிரநாசன:
உலகத் தோற்றம்,ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாகச் சொல்வதுண்டு. அது இங்கே பொன்னாலான கருப்பையாகச் சொல்லப்படுகிறது.அந்தப் (உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான) பொன்மயமான கருப்பையை உடையவர் சூரிய பகவான்.. குறைந்த வெப்பத்தால் உண்டாகும் குளிரையும் நடுக்கத்தையும் தருபவர். எல்லாவற்றையும் உருவாக்குபவர். ஒளிவீசச் செய்பவர். அக்னியைத் தன் உடலாகக் கொண்ட அதிதியின் மகனான சூரிய பகவான், தன் வெப்பத்தால் குளிரைப் போக்குபவர்.
'
நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே'
சூரியபகவான், விண்மீன்களுக்கெல்லாம் தலைவர்.அண்டத்தின் பிறப்பிடமானவர். ஒளி வீசுபவர்க்கெல்லாம் ஒளியாகத் திகழ்பவர். (சந்திரன் முதலிய விண்மீன்கள், சூரியனிடமிருந்தே ஒளி பெறுகின்றன). பன்னிரு வடிவங்களைத் தாங்கியவர்.
நிர்க்குணப் பரப்பிரம்மமான சூரிய பகவானே, 'த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க'ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.
1. தேவர்களைக் காக்கும் இந்திரன்,
2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா,
3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன்,
4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா,
5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா,
6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான்,
7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன்,
8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான்,
9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு,
10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான்,
11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன்,
12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன்.
பாரசீகத்தைச் சேர்ந்த பார்சி வகுப்பினர் சௌரமதத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். காலப்போக்கில், இம்மதம், சைவ, வைணவத்தில் கலந்து விட்டது. எனினும், சூரிய வழிபாடு இன்றளவும் உள்ளது. ஸ்ரீ சூரிய பகவான், தம்மை விடியற் காலையில் வணங்கி வழிபடுவோருக்கு, ஆரோக்கியம், நினைவாற்றல், வெற்றி, புகழ் யாவும் வழங்கி வாழ்வாங்கு வாழவைக்கிறார் என்பது கண்கூடான உண்மை.
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
(கவியரசர் கண்ணதாசன்)
அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
அனைவருக்கும் பிடித்தமானவன் அவன்
ஆக்கம்: தேமொழி
தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலை சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் பிரபுவும். பிரபுவின் வலது கையில் ஹீலியம் பலூன் பறக்க இடது கையால் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான். ராஜலக்ஷ்மி நடக்க வாகாகத் தன் புடவைக் கொசுவத்தை சிறிது தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளது அருகில் அவளது தம்பி கதிரேசன் தோளில் ஒரு பையும் கையில் ஒரு பிளாஸ்டிக் வயர் கூடையுடனும் வந்து கொண்டிருந்தான்.
கதிரேசன் கான்பூர் ஐ.ஐ.டியில் எம்.டெக் முடித்து இந்த ஆண்டு பட்டம் வாங்குகிறான். அவனுக்கும் ராஜலக்ஷ்மிக்கும் ஜெயங்கொண்டம் சொந்த ஊர். ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டபின்பு ராஜலக்ஷ்மி சென்னையில் குடும்பத்துடன் வசித்துவர, துவாக்குடி பொறியியல் பல்கலையில் பி.டெக் முடித்திருந்த கதிர் மேற்படிப்பிற்கு கான்பூர் வந்திருந்தான்.
ஸ்ரீதரின் உடன் படித்த நண்பன் ஒருவனுக்கு, டெல்லியில் குடிபெயர்ந்த பின்பு தனது முப்பதாவது வயதிலாவது திருமணத்தை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியதால் அவனது திருமணத்திற்கு வரச்சொல்லி ஸ்ரீதருக்கு அன்புக் கட்டளை போட்டிருந்தான். பிள்ளைகளுக்கு பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்திருந்தது. கதிர் படிப்பு முடித்து ஊருக்கு திரும்பி வருவதற்குள் மொழிதெரியாத இடங்களை அவன் உதவியுடன் சுற்றிப் பார்த்துவிடும் எண்ணத்திலும், அத்துடன் திருமணத்திற்கும் சென்று வந்துவிடலாம் என்ற திட்டத்துடனும் ஸ்ரீதரும் ராஜலக்ஷ்மியும் குழந்தைகளுடன் வடக்கே பயணமாகியிருந்தார்கள்.
திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, டெல்லியை சுற்றிப் பார்த்த பின்னர், ஆக்ராவில் தாஜ்மஹால், அலகாபாத் என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வாரணாசிக்கு வந்திருந்தார்கள். காசியில் சாமி கும்பிட்ட பின்பு சென்னை திரும்புவதாகத் திட்டம். தங்கியிருந்த விடுதியில் இருந்து கோவிலுக்கு வரும் வழியில் குழந்தைகளுக்கும் பலூன் வாங்கியாகிவிட்டது. ராஜஸ்ரீக்கு ஆறு வயதாகியும் அவ்வப்பொழுது விரல் சூப்பும் பழக்கம் எட்டிப் பார்க்கும், அம்மா பெயரின் முதல் பகுதியையும் அப்பா பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து அவளுக்கு பெயர் வைத்திருந்தார்கள். அவள் விரல் சூப்புவதைக் கவனித்த ராஜலக்ஷ்மி, "ராஜிகுட்டி வாயிலிருந்து விரலை எடுடா" என்றாள்.
தரையில் கிடந்த ஏதோ ஒன்றை எடுக்கக் குனிந்த பிரபு கவனம் சிதறியதால் பலூனை தவறவிட்டு அது பறக்கவும் அழ ஆரம்பித்தான். ராஜலக்ஷ்மி உடனே ராஜிகுட்டியின் கையிலிருந்த பலூனை பிடுங்கி பிரபு கையில் கொடுக்க, இப்பொழுது ராஜி அழ ஆரம்பித்தாள். ஸ்ரீதருக்கு கோபம் வந்தது, "ஏய், உனக்கு அறிவிருக்கா? அவனை சமாதனப் படுதரதவிட்டுட்டு, சின்னக் குழந்தை பலூனைப் பிடுங்கறியே" என்று திட்டினான். ராஜலக்ஷ்மிக்கும் தான் சிறிதும் யோசிக்காமல் செய்த தவறு புரிந்தது. ஏன் அப்படி செய்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. கதிர் பலூனை மீண்டும் ராஜிகுட்டி கையில் கொடுத்து, "எங்க நீயும் பிரபு மாதிரி பலூன பறக்கவிடு, யார் பலூன் வேகமா பறக்குது பாக்கலாம்," என்றான். அவளும் பறக்கவிட, குழந்தைகள் "என் பலூன்தான் வேகமா பறக்குது, என் பலூன்தான்..." என்று கூச்சல் போட, பலூன் பறந்த கவலை திசை திரும்பியது.
ஆற்றில் ஒரு முழுக்கு போடும் எண்ணத்தில் ஆற்றை நோக்கி படியில் இறங்க ஆரம்பித்தார்கள். கதிர் சுற்றும் முற்றும் பார்த்தவாறு, "அக்கா இன்னைக்கு ரொம்பக் கூட்டமா இருக்கில்ல" என்றான். ஸ்ரீதர், "அவ முன்ன பின்ன ..." என்று ஆரம்பித்தவன் ராஜலக்ஷ்மி முறைப்பதைப் பார்த்த பின்பு, அபசகுனமா பேசாதீங்க என்ற திட்டு விழும்முன், "நாங்க இப்பதானே முதன் முதலா வரோம், எங்களுக்கு என்னத் தெரியும்?" என்றான்.
கதிர், "நான் போன தடவ என் ஃபிரெண்ட்ஸ்ஸோட வந்தப்ப இவ்வளவு கூட்டம் இல்லை, இருங்க அத்தான் யாரிடமாவது இன்னைக்கு என்ன விசேஷம்னு கேட்கிறேன்" என்று சொல்லியவாறு சுற்றும் முற்றும் பார்த்தான். காலை வெய்யிலில் பள, பள என மின்னும் வழுக்கைத் தலையுடன், ஹிந்தியில் ஏதோ எழுதியிருந்த காவித்துண்டு ஒன்றை உடலில் போர்த்தியிருந்த ஒரு வயதானவர் ஆற்றில் இருந்து படியில் ஏறி வந்து கொண்டிருந்தார். அவரிடம் கதிர் கசமுச என்று ஹிந்தியில் பேச அவரும் ஹிந்தியில் பதில் சொல்லிவிட்டு படியேறலானார்.
"இன்னைக்கு நீர் ஜால ஏகாதசியாம் அக்கா, அதான் இவ்வளவு கூட்டம்" என்றான் கதிர். மேலே ஏறிக் கொண்டிருந்த பெரியவர் மீண்டும் இறங்கி வந்து கதிரின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல ஆரம்பித்தார். கதிரும் மிக பவ்யமாக வாயில் கை பொத்தி கேட்டுக் கொண்டான். அவன் பணிவில் மகிழ்ந்தவர் போல பெரியவர் அவனது தலையில் கைவைத்து ஆசீர்வதித்து விட்டு மீண்டும் படியேறினார்.
"என்ன மச்சான் உன்ன ஆசீர்வதிக்க மறந்து போயிட்டாரா? அதான் திரும்பி வந்தாரா? என்ன சொல்றாரு அந்தப் பரோட்டாத்தலை?" என்றான் ஸ்ரீதர் கிண்டலாக. "மரியாதை, மரியாதை" என்று ஞாபகப் படுத்தி, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் ராஜலக்ஷ்மி.
"நான் தப்பா உச்சரிச்சிட்டேன்னு சொல்றார் அத்தான். நீர் ஜாலம், மாயா ஜாலமெல்லாம் இல்ல, அது நிர்ஜலம், தண்ணி கூட குடிக்காம விரதம் இருப்பாங்களாம், நிர்ஜல ஏகாதசி அப்படின்னு மகாபாரதக் கதை ஒன்றை சொல்லிட்டு போறாரு," என்றான் கதிர்.
"அட , அப்படியா நமக்குத் தெரியாமலே நல்ல நாளாப் பார்த்துதான் கோவிலுக்கு வந்திருக்கோம்" என்று மகிழ்ந்தாள் ராஜலக்ஷ்மி. ஆற்றில் காவியுடை சாமியார்கள் நிறைந்திருந்த படகு ஒன்று போனது. மற்றொரு படகில் இந்திய வெயில் தாளாத மேலை நாட்டுக்காரர்கள், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அரைக்கால் சட்டை, தொப்பி, கறுப்புக் கண்ணாடி போன்றவற்றை அணிந்து போய்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பார்தவற்றைஎல்லாம் படம் எடுத்துக் கொண்டு சென்றாள்.
"எல்லாத்தையும் படம் எடுக்குறாப்பா இந்தப் பொண்ணு, நாம தும்மினாலும் அதையும் படம் எடுப்பாளோ" என்றான் ஸ்ரீதர். அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, ராஜிகுட்டிக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியவில்லை. "ஏன்பா சிரிக்கிறீங்க?" என்று ஸ்ரீதரை உலுக்கினாள். அவளுக்கு விளக்கி சொல்லப் பொறுமை இல்லாத ஸ்ரீதர், "அப்பாவுக்கு தும்மல் வருது அப்படின்னு சொன்னேன்டா" என்றான். "இல்லப்பா, தப்பா சொல்றீங்க. அப்பாவுக்கு சிரிப்பு வருது," என்று தன்னால் முயன்ற அளவு ராஜிகுட்டி அவனது தவறை சுட்டிக் காட்டவும், மீண்டும் சிரிப்பு அலை எழுந்தது.
"அத்தான், காசிக்கு வந்தா ஏதாவது பிடித்தத விட்டுடனும்னு சொல்வாங்களே, நீங்க எத விடப் போறீங்க?" என்றான் கதிர். "வேணும்னா உங்க அக்காவா இங்கயே விட்டுடலாம்னு இருக்கேன், என்ன சொல்ற மச்சான்?" என்று அவனை சீண்டினான் ஸ்ரீதர். மூக்குக் கண்ணாடியை விரலால் தள்ளி சரி செய்துகொண்டு அவனை முறைத்தான் கதிர்.
இதைக் கவனித்த ராஜலக்ஷ்மி தம்பியின் தலையில் தட்டி, "அவர் விளையாட்டுக்குதானே சொல்றார், இதுக்கு ஏண்டா உனக்கு கோபம் வருது?" என்று சிரித்தாள். ஆனால் தனக்காக தன் தம்பிக்கு வந்த கோபத்தைப் பார்த்து அவள் முகத்தில் பெருமையும் தெரிந்தது.
"இல்ல, நான் நெசமாத்தான் சொல்றேன்", என்றான் ஸ்ரீதர். "நல்லா கவனிங்க, பிடிச்சத விடணும்னு சொல்லுவாங்க, அப்படின்னா நான் உங்களுக்கு ரொம்ப பிடிச்சவன்னு ஒத்துக்கிறீங்களா?" என்று மடக்கினாள் ராஜலக்ஷ்மி. "ஏன் மச்சான் உங்க அக்காவ வக்கீலுக்கு படிக்க வச்சிருக்கலாம்ல" என்றான் ஸ்ரீதர்.
"நான் ராஜிகுட்டியோட சண்டை போடுறத விட்டுடறேன்" என்றான் பிரபு. "நானும் பிரபு கூட இனிமே சண்டை போடுறத விட்டுடறேன்" என்றாள் ராஜிகுட்டி. "குடும்பத்தில யாருமே நடக்கிறதா பேசவே மாட்டீங்களோ? நீங்களே உங்க அம்மா அப்பாவுக்கும் எத விடலாம்னு சொல்லுங்க " என்றான் கதிர்.
ராஜிகுட்டி சிறிது யோசனைக்குப் பின், "அம்மா என்னோட பொம்மைய எடுத்து பிரபு கிட்ட கொடுக்கறத விட்டுடனும்" என்றாள். ராஜலக்ஷ்மி குற்ற உணர்வுடன் "ஸாரிடா குட்டி, அம்மா இனிமே அப்படி செய்றத விட்டுடுவேனாம், சரியா?" என்று ராஜிகுட்டிக்கு கையில் முத்தம் கொடுத்தாள். ஸ்ரீதர் பிரபுவின் உடைகளைக் களைந்து போட்டுவிட்டு அவனை ஜட்டியுடன் நீரில் இறக்கி குளிப்பாட்டினான். குனிந்து குளிப்பாட்டும் பொழுது அவன் கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம் கோர்த்த தங்க சங்கிலி ஆடிக்கொண்டிருந்தது. பிரபு, "அப்பா, இனிமே நீங்க இந்த மணி கோத்த சங்கிலி போடறத விட்டுடுங்க" என்றான். "ஏண்டா?" என்றான் ஆச்சர்யத்துடன் ஸ்ரீதர். "இத சாமியார்தான் போட்டுக்குவாங்களாம், நீங்கதான் சாமியார் இல்லையே" என்றான் பிரபு. பிரபுவுடன் சேர்ந்து ஸ்ரீதரும் ஒரு முழுக்கு போட்டு விட்டு எழுந்தான்.
ஏதோ யோசனையாக இருந்த ராஜலக்ஷ்மி, "கதிர், இன்னைக்கின்னு சிறப்பு பூஜை அப்படின்னு ஏதாவது செய்றது வழக்கம்னா, நாமும் செய்யலாமே," என்றாள். இதற்குள் குளித்து மாற்றுடைக்கு மாறியிருந்த கதிர் தன் தோள்பையில் இருந்து துண்டு, மாற்றுடை போன்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். "சரிக்கா, நான் யாரிடமாவது விசாரிச்சிட்டு வரேன்" என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு கதிர் படியேறினான். அவன் சிறிது தூரம் போன பின்பு, "கதிர், ஏய் தம்பி கதிர்" என்று கூவினாள் ராஜலக்ஷ்மி. "இப்ப ஏன் கூப்பாடு போடற, உனக்கு என்ன வேணும்? ராஜிகுட்டியும் நீயும் குளிச்சிட்டு மேலே வாங்க" என்று சொல்லிய ஸ்ரீதர் பிரபுவை துவட்டி விட்டு ஒரு துண்டை அவன் இடுப்பில் கட்டி விட்டு, தனக்கு மாற்றுடை அணிய ஆரம்பித்தான்.
"இல்லீங்க, அப்படியே பூஜைக்கு ஏதாவது வாங்கணும்னா கையோட வாங்கிட்டு வர சொல்லலாமேன்னுதான் அவன கூப்பிட்டேன்" என்றாள் ராஜலக்ஷ்மி. "அவனுக்கு இந்த சத்தத்தில எங்கே காதில விழப் போவுது, நானும் அவன் கூட போயிட்டு வந்துடறேன்," என்று சொல்லியவாறு சட்டையை மாட்டி, பையில் பர்சையும் வைத்துக் கொண்டான் ஸ்ரீதர். "பிரபு, அம்மாவுக்கு கொஞ்சம் உதவி பண்றியா கண்ணா?" என்று மகனிடம் கேட்டுக் கொண்டு, அவன் முடியைக் கோதி ஈரமாக இருக்கிறதா என்ற ஒருமுறை பார்த்துவிட்டு படி ஏறினான்.
வெள்ளைக்காரர்கள் சென்ற படகு மீண்டும் திரும்பி வர, அந்த படமெடுக்கும் பெண் இவர்களைப் பார்த்துக் கையாட்டினாள். "அம்மா, கைய ஆட்டுறாங்கம்மா" என்று பிரபு பதிலுக்கு கையை ஆட்டி சிரித்தான். ராஜலக்ஷ்மி ராஜிகுட்டியின் கவுனைக் கழட்டி போட்டுவிட்டு அவளைக் குளிப்பாட்டினாள். பிறகு முகத்தை திருப்பாமல் கைகளை மட்டும் நீட்டி, "பிரபு, அந்தத் துண்டை எடுத்துக் கொடுப்பா" என்றாள். கைக்கு துண்டு வராததால், ஏதாவது பராக்கு பார்க்கிறானோ என்று எண்ணித் திரும்பி, "பிரபு" என்றாள்.
பிரபு அங்கே இல்லை. திடீரென உடல் முழுவதும் பாய்ந்த மின்சாரம் போன்ற அதிர்ச்சியில் "பிரபு, பிரபு" உரத்த குரலில் கூவியவாறு மேலே செல்லும் படிகளை நோட்டமிட்டாள், ஆற்றின் பக்கம் பார்த்தாள். எங்கும் பிரபுவைக் காணவில்லை. இவள் போட்ட கூச்சலில் பக்கத்தில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். "பிரபு, பிரபு" என்று கூவியவாறு கூட்டத்தை தள்ளிக் கொண்டு படியேறி ஓடியவள், பாதியில் நினைவு வந்தவளாக மீண்டும் இறங்கி வந்து ஈர உடலுடனும் ஜட்டியுடனும் படியில் நின்றுகொண்டிருந்த ராஜிகுட்டியையும் இழுத்துக் கொண்டு மேலே ஓடி, இரு புறமும் பார்த்து மீண்டும் "பிரபு, பிரபு" என்று கூவினாள். கதிரும் ஸ்ரீதரும் சிறிது தூரத்தில் பேசிக் கொண்டே திரும்பி வந்தவர்கள் இவள் போட்ட கூச்சலையும், கோலத்தையும் பார்த்து வேகமாக ஓடி வந்தார்கள்.
ஒரு வழியாக ஒரு நிமிடத்தில் காணாமல் போன பிரபுவைப் பற்றி அழுகையுடன், பதட்டத்துடன் ராஜலஷ்மி சொல்லிமுடிக்க, கதிர் படியிறங்கி ஓடி ஆற்றில் இறங்கி அங்கும் இங்கும் துழாவித் தேடினான். பிரபு ஆற்றில் விழுந்திருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்கு. பக்கத்தில் நின்றவர்களைக் கேட்டான். ஸ்ரீதர் தான் வந்த வழியே திரும்பி ஓடி, மகன் தன்னைத்தேடி வந்திருப்பானோ என்ற யோசனையுடன் தேடினான். இதற்குள் பித்து பிடித்தவள் போல் ராஜலக்ஷ்மி கரையில் கூட்டத்தை தள்ளிக் கொண்டு கண்ணிற்கெட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் இடுப்பில் ராஜிகுட்டியுடன் "பிரபு, பிரபு" என்று பார்பவர்களுக்கு நெஞ்சைப் பிசையும்படியான வேதனை தருமளவிற்கு, தன் அடிவயிற்றில் இருந்து கூவிக்கொண்டு ஓடினாள்.
நேரம் செல்லச் செல்ல குழந்தை நீரில் விழுந்து மூழ்கிவிட்டானோ, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கூட்டம் தூக்கிச் சென்றுவிட்டதோ, இல்லை ஏதாவது வேடிக்கை பார்க்க சென்றவன் கூட்டத்தில் வழி தடுமாறி காணாமல் போய்விட்டானோ என்ற கவலை மட்டுமே மிஞ்சி நின்றது. காவல் நிலையம் சென்று கதிரின் உதவியுடன் பையனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். பர்ஸில் இருந்த குடும்ப படத்தை அடையாளத்திற்குக் கொடுத்தார்கள். அந்தப் படத்தில் இப்பொழுது மூன்றாவது வகுப்பு முடித்திருந்த பிரபு இன்னமும் சிறிய வயதில் இருந்தான். விடுதிக்கு சென்று சரியான சாப்பாடு தூக்கம் எதுவும் இன்றி நாட்களை ஓட்டினார்கள். சாப்பிட உட்கார்ந்தால் பிரபுவுக்கு பசிக்குமோ, அவனுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமோ என்று ஒவ்வொருவர் மனதிலும் எண்ணம் ஓடியது. சாப்பாடு இறங்கவில்லை. படுத்தால் பிரபுவுக்கு குளிரினால் போர்வை இருக்கமோ என்ற எண்ணம் ஓடியது. ஆனால் யாருக்கும் வெளியில் சொல்ல தைரியம் இல்லை.
அவன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதை மட்டும் மனம் எண்ணிப் பார்க்கக்கூட விரும்பவில்லை. வெளியில் சென்றால் கண்கள் பிரபுவைத் தேடி அலை பாய்ந்தது. ஆனால் ராஜிகுட்டிக்கு இன்னமும் பிரபு காணாமல் போன விவரம் சரியாகப் புரியவில்லை. அழுது கொண்டே இருக்கும் அம்மாவையும், கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் மாமாவையும் அப்பாவையும் தொந்தரவு செய்து பிரபு எங்கே என்று கேட்கத் தெரியவில்லை. அவ்வப்பொழுது இவளும் எங்கே காணாமல் போய்விடுவாளோ என்று ராஜலக்ஷ்மி மகளை இறுக்கிப் பிடித்துக் கொள்வாள். மூன்று வாரங்கள் ஓடியது, காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பையன் கிடைத்தால் சொல்கிறோம், நாங்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், முகவரி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ, உதவவோ முடியாத நிலையில் இருந்தார்கள்.
ஊரை விட்டு வந்து ஒரு மாதமாகி விட்டதால் பழைய வாழ்கைக்கு, பிரபு இல்லாமல் ஊருக்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிளம்பும் நாள் அன்று மீண்டும் அதே படித்துறைக்கு சென்று பிரபு கிடைக்க மாட்டானா என்ற நப்பாசையில் தேடினார்கள். வானத்தில் ஒரு பலூன் தனியாகப் பறந்து சென்றது, அதைப் பார்த்தவாரே இருந்த ஸ்ரீதர் தோளில் இருந்த ராஜிகுட்டியின் விசும்பல் கேட்டு திரும்பினான். அவள் பக்கத்தில் விளையாடிய இரண்டு பையன்களைப் பார்த்தவாறு கலங்கிய, கண்ணீர் பளபளக்கும் கண்களுடன் இருந்தாள். சிறிது தூரத்தில் எப்பொழுதும் நாசூக்காக உடை உடுத்தி, நளினமாக நடந்து கொள்ளும் ராஜலக்ஷ்மி தலை கலைந்து, உடை கலைந்து சுற்றுபுறம் பற்றிய கவலை இல்லாமல் தரையில் விழுந்து தொண்டை அடைப்பது போலக் கேவி கேவி அழுது கொண்டிருந்தாள். மூக்கிலும் கண்ணிலும் நீர் கொட்ட, தொண்டை கரகரத்துப் போய் ஆற்றைப் பார்த்து கதறிக் கொண்டிருந்தாள். தன் மனதில் உள்ளது போலவே பிரபு வளர்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவள் மனதிலும் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஸ்ரீதருக்குப் புரிந்தது.
ஸ்ரீதர் தன்தோளில் ராஜிகுட்டியை சுமந்தபடி, அரற்றிக் கொண்டிருக்கும் மனைவியிடமும் கதிரிடமும் சென்றான். அவளை எழுப்ப முயற்சித்த பொழுது ஏக்கத்டன் அவனைப் பார்த்த அவள் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. அம்மாவைப் பார்த்து ராஜிகுட்டியும் அழுததால் அவள் கண்ணீர்த்துளிகள் அவன் தோளில் விழுந்தது. அழும் மனைவி, மகள் முகத்தைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஏனோ யார் மீதோ ஆத்திரம் வந்தது. அப்பொழுது கோயில் மணி ஒலிக்க அது வந்த கோபுரத்தைத் திரும்பிப் பார்த்தான். கோபுரத்தில் இருந்து ஒரு பறவைக் கூட்டம் கிளம்பிப் பறந்து சென்றது. கோபுரத்தையே வெறித்துப் பார்த்தவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல தன் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மணி கோர்த்த சங்கிலியை வெருட்டென்று இழுத்து நீக்கி ஆற்றை நோக்கி வீசிவிட்டு, மனைவியை இழுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
ஊர் திரும்பி இரண்டு மாதம் கழிந்த பின்பு தேவாலயத்தில் மதம் மாறி ஞான ஸ்நானம் செய்து கொண்டார்கள். பாதிரியார் அவர்கள் நெற்றியில் சிலுவைக் குறி இட்டு "கர்த்தர் உம்மோடு இருப்பாராக.... பிதா, சுதன்,பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்...." என்று ஆசீர்வதித்தார்.
பின்குறிப்பு: உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கதை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
ஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன்
"சிரிப்புத்தான் வருகுதைய்யா...."என்று ஒரு பாடல் அந்தக் காலத்தில் உண்டு.
நான் இப்போது சொல்லப் போகும் நிகழ்ச்சிகளில் நகைச்சுவை இருப்பதாக நானாக நினைத்துக் கொண்டு எழுத முற்பட்டு விட்டேன்.சிரிப்பு வரவில்லையென்றால் ஒன்றும் பாதகமில்லை. 'எத்தனையோ எழுதிவிட்டார்.100வது ஆக்கத்தை நோக்கிய பயணத்திற்கு இது ஒரு படிக்கட்டு/எண்ணிக்கை' என்று எண்ணிக் கொண்டு கடந்து சென்று விடுங்கள்.
சிரிப்பு வந்தால் வாய் விட்டுச் சிரியுங்கள்; நோய் விட்டுப் போகும்.
========================================================
1973ல் தஞ்சாவூர் திரிபுரசுந்தரி நகரில் அண்ணனோடு வசித்து வந்தேன்.
அந்தக் காலனியில் ஒரு வீட்டில் திருட்டு நடந்து விட்டது. திருட்டு என்றால் ஏதோ பெரிய அளவில் தங்க நகை, பணம் ,பட்டுப்புடவை, வெள்ளித்தட்டு என்று நினைத்து விட வேண்டாம்.
திருட்டுப் போன பொருள் இரவு தண்ணீர் விடப்பட்ட மீந்த சோறு!
சமையல் அறை ஜன்னல் கதவைத் திறந்து மேடை மீது இருந்த பாத்திரத்தினை மூடியிருந்த தட்டில் பழைய சோற்றினை அள்ளி வைத்து எடுத்துச் சென்றுவிட்டான் திருடன்!
மறு நாள் செய்தி பரவிக் கூட்டம் கூட்டப் பட்டது.கூட்டத்தில் திருட்டைக் கண்டித்துத் தீர்மானம் போடப்பட்டது. திருட்டைத் தடுக்க இரவு நேர 'விஜிலென்ஸ் ஸ்குவாட்',ரோந்து(பாதுகாப்புப் படை) போக முடிவு செய்யப்பட்டது.
இது போல பொதுக் காரியம் என்றால் ஐயா(என்னைத்தான் மரியாதையாகச் சொல்லிக் கொள்கிறேன்) முன்னால் நிற்பார் இல்லையா!வயதோ 23.திருமணம் ஆகவில்லை.கேட்பானேன் சிண்டு விடைத்துக் கொண்டு விட்டது.
தினமும் குண்டாந் தடிகளையும், விசில்(சின்னப்பசங்க பயன் படுத்தும் பிகில்தான்) ஆகியவற்றை டூட்டி போடப்பட்டவர்களுக்கு மாலையில் கொண்டு கொடுத்து இன்று உங்கள் 'டெர்ன்'(முறை) என்று சொல்லி அனுப்ப வேண்டும்.
அவர்கள் தட்டிக் கழிப்பார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில்தான் எத்தனை வகை!எவ்வளவு நகைப்பு, சிரிப்பு.
முதல் காரணம்தான் சூப்பர். கொஞ்சம் செக்சியானது. பொருள் தெரியாதவர்கள்தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும். இங்கே சொன்னால் ரசாபாசம் ஆகிவிடும்.
"இன்று சந்தான சுக்கிர வாரம். நான் எப்படி இரவில் வெளியில் வரமுடியும்? மனைவி அனுமதிக்க மாட்டார்கள்"
இன்னொரு காரணம். 'என்னோடு துணைக்கு வருபவர்களில் இன்னார் சிரிப்பு பேய்ச் சிரிப்பாக இருக்கிறது.என்னய்யா இது நடுசாமத்தில் வெட்ட வெளியில் நின்று கொண்டு அப்படி சிரித்து கதிகலங்க வைக்கிறான்.எனக்கு வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்துவிட்டது. அந்த ஆளோடு நான் போக மாட்டேன்"
மற்றொருவர் சொல்லுவார்: "ராத்திரி நேரத்தில் உளுந்து வாசனை அடிக்கிறது"
"சரி. அதனால் என்ன? வாசனையைப் பிடித்துக்கொண்டு போக வேண்டியதுதானே?"
"என்னங்காணும் ஒன்றும் தெரியாத ஆளாயிருக்கிறீர்.இரவு நேரத்தில் நாகமும் சாரையும் சேர்ந்து இருக்கும் போது அந்த வாசனை அடிக்குங்காணும். பாம்பு கடித்து சாகணுமா? நான் போக மாட்டேன்"
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஒரு சம்பவம் நடந்தது. காற்றுக்காக ஜன்னல் கதவுகளை ஒரு இளம் ஜோடி திறந்து வைத்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் அவர்களுடைய அந்தரங்கத்தை ரசித்துவிட்டனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் சிலருடைய இரவு வாழ்கை பற்றிய கிசு கிசு எல்லாம் பரவத் துவங்கியது.இரவு ரோந்து ஸ்குவாடை நிறுத்த வேண்டி வந்தது.இருந்தாலும் ஒரு வருடம் போல அதனை வழி நடத்திய தற்பெருமை எனக்கு இன்றும் உண்டு.
=======================================================
அதே டி பி எஸ் நகரில் (திரிபுர சுந்தரிநகர் தான் அப்படிச் சுருங்கி விட்டது.சென்னையில் மட்டும் கே கே நகர், ஜேஜே நகர், டி நகர் என்று சொல்லலாம் தஞ்சையில் சொல்லக் கூடாதோ என்று ஏட்டிக்குப் போட்டியாக டி பி எஸ் நகர் ஆக்கிவிட்டார்கள்) நடந்த ஒரு சம்பவம் நல்ல தமாஷ்.
அந்தப் பகுதி மண்வாகுக்கு பலா நன்கு வளரும்.வீட்டுக்கு வீடு பலாமரம் உண்டு. ஏப்ரல், மே ,ஜூன் மாதங்களில் அந்தப்பகுதியே பலா வாசனையால் நிறைந்து இருக்கும். வீதி முழுதும் பலாச் சக்கைகளும், சகுணிகளும், கொட்டைகளுமாக குப்பை கிடக்கும்.
ஒரு நாள் காலையில் ஒரு நகர் வாசி தெருவில் நின்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்.
"எந்த களவாணிப் பயலோ ஏழு பலாப் பழங்களைத் திருடி விட்டான்! அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் சட்டினிதான்"
நகர் வாசிகள் கூடி என்ன ஏது என்று விசாரித்துக் ொண்டிருந்தனர்.
பக்கத்துவீட்டில் வசித்த திருவெண்காடர் பெயர் கொண்டவரின் தம்பி அவர்களுடன் விசாரிக்க வராமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் அப்படி பேசாமல் நின்றதே அவர் மேல் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது.
பலாப் பழத்தைத் திருட்டுக் கொடுத்தவர் மீண்டும் மீண்டும் 'ஏழு பழம் போச்சே!ஏழு பழம் போச்சே!'என்று கத்திக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த அண்டை வீட்டு ஹீரோ திருவாயைத் திறந்து," ஏங்க சும்மா பொய் சொல்றீங்க. மூணு பழம்தான் உங்க மரத்திலேயே இருந்தது. சும்மா ஏழு எழுன்னு கப்சா உடறீங்க" என்றார்.
கூட்டம் கொல் என்று சிரித்தது.அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொன்ன கதை ஆயிற்று. அவர்தான் பழங்களை எடுத்தது என்பது நிருபிக்கப்பட்டது.
========================================================
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி சாலையில் பல நகர்கள் உண்டு.மைய ஊரை விட்டு நகர்ந்து இருப்பதால் நகர் என்று பெயரோ?
ஆறு என்று எண்ணுள்ள நகரப் பேருந்துகள் அந்தப் பகுதியில் அதிகம்.ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்தபோது நடத்துனர் 'கணபதிநகர்'என்றார். ஒரு குண்டானவர்(நகர்ந்து) இறங்கிச் சென்றார்.
அடுத்த நிறுத்தத்தில் 'செல்வம் நகர் .ராஜப்பா நகர்'என்று நடத்துனர் கூவினார்.இரண்டு ஆடவர்கள் பேருந்தை விட்டு நகர்ந்து விட்டனர்.
அடுத்தது 'பாலாஜி நகர், திரிபுரசுந்தரி நகர்' என்று கூவினார். ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் நகர்ந்து விட்டனர்.
அடுத்து 'சரோஜ் நகர்' 'லட்சுமி'என்று கூவினார்.இரண்டு பெண்கள் இறங்கிக் கொண்டு நகர்ந்தனர்.
அடுத்து 'சுந்தரம் நகர், மங்கள புரம்'ஆணும் பெண்ணுமாக இருவர் இறங்கிக் கொண்டனர்.
அடுத்து முனிசிபல் காலனி என்றார் யாரும் இறங்கவில்லை.வண்டி ஈஸ்வரி நகர் வந்துவிட்டது. 'ஈஸ்வரி' என்று குரல் வந்தவுடன் ஒரு பெண் இறங்கிக் கொண்டார்.
இறுதி நிறுத்தமான மருத்துவக் கல்லூரியில் பேருந்து வந்து நின்றது.ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்து இருந்தார்.
நடத்துனர் அவரிடம் "இறங்குங்கள்" என்று சொன்னார்.
அந்த சிரிப்பு மனிதர் 'முடியாது' என்றார்.
"ஏன்? ஏன் முடியாது?"
"நான் என்ன இளிச்சவாயனா? எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்து இறக்கிவிட்டாயா இல்லையா? என்னையும் பெயர் சொல்லி அழைத்து இறக்கி விடு"
"எங்க நான் பேர் சொன்னேன்?"
"கணபதி, ராஜப்பா, செலவம் , பாலாஜி,சுந்தரம் ஈஸ்வரி என்றெல்லாம் பேர் சொல்ல வில்லையா?"
நடத்துனருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.திரு திருவென விழித்துக்கொண்டு நின்றார். அவருடைய முகத்தைப்பார்த்து நான் சிரித்தேன். நீங்களும் சிரியுங்கள்.
நன்றி! வணக்கம்!
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே.முத்துராமகிருஷ்ணன்.(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
ஆடுபுலி ஆட்டம்
ஆக்கம்: தனுசு
ஆடுபுலி ஆட்டமொன்று
ஆடப் போகிறேன்!-அதில்
முரண்பட்ட ஆடுகளை
வெட்டி சாய்க்க போகிறேன்!.
ஆட்டுமந்தை கூட்டமொன்று
கூடி மேயுது-அதில்
மேயாத ஆடு ஒன்று
நோட்டமிட்டு கூட்டம் கலைக்குது.
நோட்டமிட்ட ஆடு அது
வேஷம் கலைக்குது.
கூடி மேய்ந்த ஆட்டையே
அடிச்சி மேய பார்க்குது.
அடித்து மேயும் ஆடுஅது
ஆடு இல்லைங்கோ!
ஆடுபோல வேஷமிட்ட
புலிதானுங்கோ!
வேஷமிட்ட புலியது
ஆடிப்பாடுது
தப்புத்தாளம் கேட்டால் கூட
தலையை ஆட்டுது.
வேலை வெட்டி இல்லாத
வெள்ளை வேட்டி பெருசுகள்
வெட்டியாக ஊரை சுத்துது.-அது
வெள்ளையப்பன் பலம் பார்த்து நியாயம் சொல்லுது!.
ஏழையெனும் ஆட்டுக்கூட்டம்
நியாயம் கேட்டு நித்தம் வாடுது-அந்த
நீதி கெட்ட நியாயம் பேச வந்த புலிக்கூட்டம்
நிதி பார்த்து சாயிது!.
நீதி கேட்ட ஆடுகளில்
பாவப்பட்ட ஆட்டைப்பார்த்து
வெள்ளைப்புலி வீரம் காட்டுது-அது
அஞ்சு நூறு காசுக்காக அநியாயம் பேசுது.
புரியாத ஏழை பாழை கண்ணை கசக்குது.-சில
புரிந்து கொண்ட
அதே ஜாதி
பொங்கி எழுகுது.
நானும் அந்த பொங்கிஎழும் ஜாதி தானுங்கோ!
பொறுக்கவில்லை
பொறுமையில்லை
சொன்னால் கேளுங்கோ!-அதனால் நான்,
அடுபுலி ஆட்டம் ஒன்னு
ஆடப்போகிறேன்-அதில்
வேஷமுள்ள ஆடுகளை
வெட்டி சாய்க்கப் போகிறேன்!.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++
7
MANAGEMENT LESSONS FROM A FIVE HUNDRED RUPEE NOTE!
Sent by S.Sabari Narayanan
(Prakash Iyer, MD, Kimberly-Clark Lever and Executive Coach shares two important management lessons he learnt from a 500-rupee note. Read on)
1.
It happened some years ago but I can recall the evening like it happened
just last week.I was in an audience listening to a motivational guru.
The speaker whipped out his wallet and pulled out a five hundred-rupee note.Holding it up, he asked, "Who wants this five hundred rupee note?"
Lots of hands went up. Including mine.
A slow chorus began to build as people began to shout "Me!" "Me!"
I began to wonder who the lucky one would be who the speaker would choose. And I also secretly wondered -- and I am sure others did too -- why he would simply give away five hundred rupees.
Even as the shouts of "I want it" grew louder, I noticed a young woman running down the aisle.
She ran up onto the stage, went up to the speaker, and grabbed the five hundred-rupee note from his hand. "Well done, young lady," said the speaker into the microphone.
"Most of us just wait for good things to happen. That's of no use. You've got to make things happen."
The speaker's words have stayed with me ever since.
'Simply thinking about doing something is of no use'
Our lives are like that. We all see opportunities around us. We all want the good things.But the problem is we don't take action. We all want the five hundred rupee notes on offer. But we don't make the move. We look at it longingly Get up, and do something about it. Don't worry about what other people might think. Take action.
2.
Several years later, it was another day, another time. And another motivational speaker.
As I watched him pull out a five hundred rupee note and hold it up for all to see, I thought I knew what he was going to do next. But he just asked a simple question. "How much is this worth?"
"Five Hundred rupees!" the crowd yelled in unison.
"Right," said the speaker. He then took the note and crumpled it into a ball and asked "How much is it worth now?"
"Five Hundred rupees!" screamed the audience.
He then threw the note on the ground, stamped all over it and picked up the note and asked one more time: "And how much is it worth now?"
"Five Hundred rupees!" was the response.
"I want you to remember this," said the speaker. "Just because someone crumples it, or stamps on it, the value of the note
does not diminish.We should all be like the five hundred rupee note..In our lives, there will be times when we feel crushed, stamped over,beaten. But never let your self-worth diminish. Just because someone chooses to crush you -- that doesn't change your worth one bit! Don't allow your self-worth to diminish because someone says something nasty -- or does something dirty -- to you."
'Never let your self-worth diminish'
*
*
*When you feel sad, to cheer up just go to the mirror and say, `Damn I am
really so cute` and you will overcome your sadness. But don`t make this a
habit coz liars go to hell.*
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
இன்றைய பொன்மொழி:
No one could actually say that you deserve better.
Because the best thing that you deserve, will always be your choice.
வாழ்க வளமுடன்!