---------------------------------------------------------------------------------
என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?
இப்போது புதிதாகப் பதிவு எழுதுபவர்கள் நாளும் பொழுதுமாய்
அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக்குச் சென்று ஒரு
பாக்கெட் கடலை உருண்டை வாங்கிக் கொண்டு வருவதைவிட
’வலைப்பூ’ (Blog) ஒன்றைத் துவங்குவது மிகவும் சுலபமானது. யார் வேண்டுமென்றாலும் 15 நிமிடங்களுக்குள் ஒரு கூகுள் மின்னஞ்சல் கணக்கையும், Blogger கணக்கையும் துவங்கி, வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சுயமாக எழுதலாம். அல்லது கட் &
பேஸ்ட் செய்து எதை வேண்டுமென்றாலும் எடுத்து எழுதலாம்.
24.12.2005ல் முதன் முதலில் நான் எழுதத் துவங்கிய காலத்தில்
சுமார்
500 பேர்கள் மட்டுமே வலைப்பூக்களில் எழுதிக்
கொண்டிருந்தார்கள்.
இப்போது எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள்?
தமிழ்மணம் என்னும் வலைப்பூக்களை ஒருங்கிணைக்கும் தளத்தின்
(Tamil Blog Aggregator) புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும். கீழே கொடுத்துள்ளேன்.
மொத்தப் பதிவுகள்
(Blogs) : 9270
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்
(Posts) : 399
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்
(Comments) : 3419
எழுதப்பெறும் அத்தனை பதிவுகளையும் படிக்க முடியுமா?
முடியாது. முடியவே முடியாது. வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பவனுக்குக்கூட அது சாத்தியப்படாது.
அரசியல், சினிமா, நகைச்சுவை என்னும் தலைப்பில் வரும் பதிவுகளை பலரும் விரும்பிப் படிப்பார்கள்
அப்படி எழுதப்பெறும் பதிவுகளில் அதிகமான பேர்களை இழுக்கும் பதிவு அல்லது அதிகமான பேர்களைப் படிக்க வைக்கும் பதிவு என்றால் ‘இட்லி வடை’ வலைப் பதிவைச் சொல்லலாம் (
சுட்டி உள்ளது. பாருங்கள்)
கதை, கவிதை, இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றை எழுதும்
பதிவுகளுக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும்.
நமீதாவைப் பற்றி எழுதினால் கூட்டம் அதிகமாக வந்து சேரும்
நாயன்மார்களைப் பற்றி எழுதினால் நாற்பது பேர்கள் கூட வந்து
படிக்க மாட்டார்கள்
அனுஷ்கா சர்மாவின் படத்தைப் போட்டால் அனைவரும் பார்ப்பார்கள். ஆண்டாளின் படத்தைப் போட்டால், நீங்கள் கூவி அழைப்பவர்கள்
மட்டும்தான் வந்து பார்ப்பார்கள்.
எப்படிக் கூவி அழைப்பது?
பலரது மின்னஞ்சலையும் சேர்த்துவைத்துக்கொண்டு, ஆண்டாளின்
அல்லது ஆழ்வார்களின் படத்தைப் போட்ட பிறகு, அவர்களுக்கு
மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்து அழைக்க வேண்டும்.
எனக்கு தினமும் சில மின்னஞ்சல்கள் வரும். ”சார் நீங்கள் என்னுடைய பதிவை வந்து படித்து, உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்”
எதை எதைப் படிப்பது? என்ன கருத்தைச் சொல்வது? எல்லாவற்றிற்கும்
நேரம் வேண்டாமா?
இதுதான் நிலைமை
-------------------------------------------------------------------------
பதிவு எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு உந்துதல் இருக்கும். நமது
பதிவைப் பலபேர்கள் வந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம்
இருக்கும். பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு ஐம்பது பின்னூட்டமாவது விழுக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் துவக்கத்தில் அதெல்லாம் நடக்காது.
நான் ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். முதல் ஆறு மாதங்களில்
தினமும் 30 பேர்கள்கூட வந்து படிக்க மாட்டார்கள். Static Counter
வைத்திருந்தால் வருகிறவர்களின் எண்ணிக்கை தெரியும்.
நான் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதிக் கொண்டிருந்தேன். என் சிந்தனைகளை, கருத்துக்களை,
ஆவணப் படுத்துகிறோம் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்
எழுதத் துவங்கினேன்.
இன்றுவரை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
சிலர் வேறு ஒரு உபாயத்தைக் கடைப் பிடித்தார்கள். தினமும்
குறைந்தது ஒரு ஐம்பது பதிவுகளுக்காவது சென்று பின்னூட்டம்
போட்டு விடுவார்கள். அடுத்த நாள் வேறு ஒரு 50 பதிவுகள். இப்படி
சுழற்சி முறையிலொரு
300 பதிவுகளைத் தொடர்பில்
வைத்திருப்பார்கள்.
அந்த
300 பேர்களில் ஒரு
200 பேர்களாவது வந்து இவருடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவார்கள். அதாவது உனக்கு நான்.
எனக்கு நீ என்னும் உபாயம். இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார்கள்.
‘முதுகு சொறிந்து விடுதல்’ என்று பெயர். உனக்கு நான் முதுகு சொறிந்துவிடுகிறேன். எனக்கு நீ முதுகு சொறிந்துவிடு!’
நிலைமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?
----------------------------------------------------------
எழுதுகிறவர்களுக்கு யோசனை சொல்லும் முகமாக ஐந்து ஆண்டு
களுக்கு முன்பு நான் இரண்டு பதிவுகளை எழுதினேன். அதை
உங்களுக்குத் தெரிவிக்கும் முகமாகக் கீழே கொடுத்துள்ளேன்.
அந்த இரண்டு பதிவுகளும் 23.8.2006 & 24.8.2006ம் தேதிகள் என்று
அடுத்தடுத்த தேதிகளில் வெளியாகின. பலரையும் அவைகள் உள்ளே அழுத்துக்கொண்டு வந்தன, அந்த வார ஆக்கங்களில் முதல் இடத்தைப் பிடித்தன.(அத்துடன் எனக்கு வாத்தியார் பட்டத்தையும் பெற்றுத் தந்தன. அத்துடன் நான் வகுப்பறை என்ற இரண்டாவது வலைப்பூவையும்
துவக்கக் காரணமாக இருந்தன!)
==================================================
1
டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர்
(தொழில்நுட்பம் அப்படி என்னய்யா பாடு படுத்திவிடும் என்று எதிர்
மறையாக நினைப்பவர்கள் தயவு செய்து பதிவை விட்டு விலகவும் - மற்றவர்கள் வருக! வருக!)
வருடம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.
ஞாயிற்றுக்கிழமைதான் சில பல விஷயங்களுக்குச் செளகரியம் அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை வருடத்தை மட்டும் மறக்காமல்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
இந்த வருடத்தின் பெரிய அதிசயம் -அதிசயம் என்றவுடன் 50 கிலோ கொடியிடை அதிசயத்தையெல்லாம் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
இது தொழில் நுட்ப அதிசயம். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லக்
கூடிய கைப்பெட்டிக் கணினி முன் நான்அமர்ந்திருக்கிறேன் .
என் நண்பன் சிலிக்கன் valley சிங்காரம் பரிசாகக் கொடுத்துவிட்டுப்
போனான். மூன்று பில்லியன் (எத்தனை ஸைபர் என்று எழுத
வெல்லாம் நேரமில்லை) பிரச்சினைகள் அதில் வகைப்படுத்தப்பட்டிருப்ப தாகவும், எந்தப் பிரச்சினைக்கும் அது நொடியில் தீர்வுசொல்லிவிடும்
என்றும் சொல்லி விட்டுப் போனான்
மெமோ அல்லது பிங்க் ஸிலிப் ஏற்பாடு செய்து விடுவேன் என்று
மிரட்டும் டீம் மானேஜரிலிருந்து, என்னை வழியில் இறக்கி
விட்டுட்டுப் போடா என்று கலாய்க்கும் அலுவலகத்தோழி வரை,
வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழுந்தை முதல்,
பணத்தின் அருமையே இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரிய
வில்லை என்று தொணதொணக்கும் பெரிசுகள் வரை, அது போன்ற
எந்தப் பிரச்சினையானாலும் தீர்வு சொல்லுமாம் இந்த அதிசயம்!
நமக்கா பிரச்சினைகளுக்குப் பஞ்சம்? அடித்ததடா யோகம்! நம் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவதோடு, லோக்கல் நண்பர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லி அசத்துவோம்
என்ற குதுகலத்தோடு கணினி முன் நான் உட்கார்ந்திருக்கிறேன்
சிங்காரம் கொடுக்கும் போதே,
Very Very User Friendly System. Booting ஐ
மட்டும் நீ செய். மற்றதையெல்லாம் கழுத்தைப்பிடித்து அதுவே சொல்லிக்கொடுக்கும் என்று வேறு சொல்லி விட்டுப் போனான்
எதற்காக உட்கார்ந்திருக்கிறேன். கணினி என்னை அடையாளம்
கண்டு கொள்ள வேண்டாமா?
அதில் உள்ள
Remote Sensor கருவிகள் எல்லாம் நான்தான் User என்று
தெரிந்து கொண்டவுடன் என்னுடன் பேச ஆரம்பித்தது.
120 மொழிகள் அதற்குத் தெரியும். தமிழிலேயே, மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் என்று ஏழு வகைத் தமிழும் தெரியம்.
"உங்கள் பிரச்சினையின் வகையைச் (category) சொல்லுங்கள்" என்றது
"என்னுடைய வலைப்பூ
(Blog)" என்றேன்
"Okay! அதில் என்ன பிரச்சினை?"
"நிறைய பார்வையாளர்கள் வரமாட்டேன் என்கிறார்கள்"
"ஏன்? நன்றாக எழுதுகிறிர்களல்லவா?"
"யாராவது வந்து படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்டாலல்லவா அது தெரியும்!"
"இதுவரை எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறீர்கள்?"
"சுமார் முப்பது பதிவுகள் போட்டிருக்கிறேன்"
"ஒன்றில்கூட பின்னூட்டம் இல்லையா?"
"எதிர்பார்த்த அளவு இல்லை1"
"உங்கள் URLஐச் சொல்லுங்கள் - நான் போய் தேவையான அளவு மறு
மொழிந்து (பின்னூட்டம் போட்டு) விட்டு வருகிறேன்"
"தமிழ் மணத்தில் அதெல்லாம் நடக்காது. சாத்தி விடுவார்கள். நேர்மையான யோசனை ஒன்று தேவை!"
"சரி, தமிழ் மணத்தில் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம்
தெரியுமா?"
"நன்றாகத் தெரியும். சுமார் ஒரு லட்சம் பேர்கள் எழுதுகிறார்கள்.பத்து
லட்சம் வாசகர்கள் வந்து போகிறார்கள். நாளொன்றுக்குச் சராசரிப்
பதிவே சுமார் 20,000 த்தைத் தாண்டுகிறது."
"ஓஹோ!.........சரி அதில் எத்தனை பேர்கள் உங்கள் வலைப்பூவிற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"
"ஆயிரம் பேர்களாவது வந்து போனால் நல்லது!"
"வேறு ஏதாவது உப எதிர்பார்ப்பு இருக்கிறதா?"
"ஆமாம், மறந்து விட்டேன் - ஜி. கெளதம்,கில்லி, கோவி கண்ணன்,
குமரன், செல்வன், சிவமுருகன், நாமக்கல் சிபி, சுந்தர், தம்பி, தேவ்,
ஜி. ராகவன், நாகைசிவா, வசந்த், சந்திரவதனா, மியூஸ், டால்பின், இறைனேசன், வெற்றி, வெட்டிப்பயல், விடாது கருப்பு, மாயவரத்தான், ஞானவெட்டியான், ராஜதுரை, செந்தழல்ரவி, துளசி கோபால், குழலி,
என்று நூறு வலைப்பதிவர்களைக் குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.
அவர்கள் எல்லாம் வந்து போனால்நல்லது"
"அவர்கள் ஏன் வர வேண்டும்?"
"அவர்களெல்லாம் முன்னணி மற்றும் மூத்த வலைப்பூ பதிவாளர்கள்
கடந்த 20 வருடங்களாக வலையில் எழுதிக்குவிக்கும் நட்சத்திரங்கள். அவர்களுக்குத் தமிழ்மணம் நிர்வாகமே ஐந்து நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது. அவர்கள் எந்தப்பதிவில் நுழைந்து பார்த்தாலும்
அவர்கள் பெயருடன் Five Starகளும் சேர்ந்து பதிவாகும். அவர்கள்
எல்லாம் வந்து போனால் என் வலைப்பூவிற்கும் கெளரவமாக
இருக்கும்"
"அதெல்லாம் ஒன்றும் பிர்ச்சினையில்லை. அவர்களையெல்லாம்
உங்கடைய வலைப்பூவிற்குள் சுலபமாக வரவழைத்து விடலாம்:
"எப்படி?"
"முதலில் தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர்களை வளைத்து வரவைக்க வேண்டும். அப்படி Heavy Traffic உங்கள் வலைப்பூவிற்குள் ஏற்படும்போது, நீங்கள் சொல்லும் அந்த 100 ஸ்டார் பதிவாளர்களும்
என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆவலில் நுழைந்து விடுவார்கள்?
"லட்சம் பேர்களையா? அது எப்படி சாத்தியம்?"
"ஏன் முடியாது? மிகப் பெரிய பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்து விடுங்கள்!"
"பரிசுத் திட்டமா - அதுவும் தினமும் ஒரு லட்சம் பேருக்கா?"
"தினமும் வந்து போகிறவர்களுக்கு மாதம் ஒரு முறை பரிசளிக்கலாம்.
வந்து போகிறவர்களைக் கணக்கெடுத்து - அவர்கள்
Blog Identification
Number + Bank Account Number க்கெல்லாம் பணம் அனுப்புவதற்கு
Softwareஐஉங்கள் வலைப்பூவிலேயே பொருத்தி விடலாம்"
"அய்யோ சாமி..அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?"
"எங்கேயும் போகவேண்டாம். திட்டம் அறிவித்த நான்காவது நாளே
Hit Counter -
Visitors Country Counter எண்ணிக்கைகளை வைத்து Sponsor
களைப் பிடித்து விடலாம்.
Pepsi, Coke, Wall - Mart, Gap,Hundai, Suzuki,
Mitsubhishi, Reliance, Atrtel, Tata, BSNL Cellular Service, Indian Oil,
Hindusthan Lever என்று பல கம்பெனிகள் பணத்தைக் கொட்ட
ஆரம்பித்து விடுவர்கள். அதிலிருந்து கொடுத்து விடலாம்"
"கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடக்க வேண்டுமே?"
"நடக்கும் - நம்பிக்கைதான் அடிப்படை. ஆம்னி பஸ்ஸில் போகும்
போது ஊரில் கொண்டு போய்ச் சேர்ப்பாயா என்று உறுதி கேட்டு
விட்டா ஏறுகிறோம்? ஒரு நம்பிக்கையில் தானே ஏறுகிறோம். அதுபோலத்தான் இதுவும்!"
"வேண்டாம் - நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - வேறு நல்ல
யோசனை இல்லையா?"
"இருங்கள் வருகிறேன் - Please Wait!" என்று சொல்லிய கணினி 60 செகண்டுகளூக்குமேல் எதையோ குடைந்து படித்து (Read) விட்டு
மீண்டும் பேச ஆம்பித்தது.
"இரண்டு இறுதியான யோசனைகள் உள்ளன - ஒன்று வலைப்பூவில் எழுதுவதை நிங்கள் நிறுத்தி விடலாம்"
"அது சாத்தியமில்லை - என் எழுத்துத் தாகத்தைக் கட்டுப்படுத்த
முடியாது - இரண்டாவது யோசனை என்ன?"
"அப்படியென்றால் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் . இவ்வளவு
பேர்கள் வந்து போகவேண்டுமென்று ஆசைப் படாதீர்கள் - எல்லாப் பிரச்சினைகளுக்கும் - துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமென்று
புத்தர் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் தெரியமா?"
"தெரியும்!"
"அப்புறம் என்ன? அதையே தீர்வாகக் கொள்ளுங்கள் - வரட்டுமா?"
"Okay My Dear Friend - Thank You Very Much !" என்று சொல்லிவிட்டு அந்தக்
குட்டிப் பிசாசை (என் அகராதியில் இது செல்லமான வார்த்தை )
Shut Down செய்தேன்.
யோசித்துப் பார்த்தால் குட்டிப் பிசாசு சொன்ன கடைசித் தீர்வுதான்
எனக்குச் சரி என்று படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------------
2
தலைப்பை நன்றாகப் போடு
தானாக வருவார்கள்
-------------------------------
எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?
எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?
எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு
எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்
உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்
பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே
நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?
தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்
பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே
இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே யுகே!
---------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!