மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 71 - 80. Show all posts
Showing posts with label Lessons 71 - 80. Show all posts

2.6.08

Astrolgy: மேலும் ஒரு அட்டவனை!

Astrolgy: மேலும் ஒரு அட்டவனை!

நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் பார்வையாளர் ஒருவர்
மின்னஞ்சலில் அனுப்பி வைத்த அட்டவணை ஒன்றைக்
கீழே கொடுத்துளேன்

அது உங்களுக்குப் பயன்படும்!

12 ராசிகள், ஒவ்வொரு ராசிகளுக்குள்ளும் அடங்கும் நட்சத்திரத்தின் பாதங்கள்,
அவற்றிற்குரிய ஆரம்ப திசைகள் என்று மூன்று விவரங்களும் ஒரே அட்டவனையில்
இருப்பது அதன் சிறப்பு.

27 நட்சத்திரங்கள் x 4 பாதங்கள் = 108 devide by 12 = 9 பாதங்கள் ஒவ்வொரு ராசிக்கும்
அதாவது ஒவ்வொரு ராசிக்கும் இரண்டே கால் நட்சத்திரங்கள்

கடிகார முள் வரிசையில் அட்டவனையைச் சுழற்றினால் அஸ்வினி, பரணி என்று
நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வரும்!

அனுப்பியவர் பெயர். திரு சதீஷ். அவருக்கு உங்களுடைய சார்பில்
என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

படத்தின் மீது கர்சரைவைத்துக் கிளிக்கினால் படம் பெரியதாகத் தெரியும்!
=============================================




வாழ்க வளமுடன்!

30.5.08

டாக்டர் ப்ரூனோ அவர்களின் பதிவு

Doctor Bruno அவர்களின் இந்தப் பதிவை அனைவரும் படிக்க வேண்டுகிறேன்

ஜோதிடப் பாடத்தில் குழந்தை பாக்கியம் பற்றிய முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்தும் அது பற்றி விரிவாக எழுத உள்ளார்.

நமது வகுப்பு மாணவர்கள் அனைவரும் படித்துப் பயனுறுக!

வாழ்க வளமுடன்!

29.5.08

Astrology: அடுத்த சூத்திரம்!

**************************************************************
Astrology: அடுத்த சூத்திரம்!

வாழ்க்கை ஒரு பயணம். எல்லாப் பயனத்திற்கும் ஒரு ஆரம்பமும்,
முடிவும் இருப்பதுபோல வாழ்க்கைப் பயணத்திற்கும் அது உண்டு!

ஜாதகம் என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட வாகனம். தசா, புக்தி என்பது
ரோடு. கோச்சாரம் என்பது நமது வாகனத்தின் ஓட்டுனர் (டிரைவர்)

வாகனங்களில் பலவகைகள் உண்டு! பழைய அம்பாசிடர், ஃபியட்டி
லிருந்து இன்றைய சொகுசு வாகனங்களான ஹோண்டா சிட்டி, பென்ஸ்,
ரோல்ஸ் ராய்ஸ் வரை!

வாகனம் (ஜாதகம்) அமைவதெல்லாம் அவரவர்கள் வாங்கிவந்த வரம்!

தேசிய நெடுந்சாலை, நான்கு வழி தங்கரதச் சாலை, மாட்டு வண்டிப்
பாதை, மண் பாதை என்று வாகனம் பயணிக்கும் வழிகளிலும் பலவகை
உண்டு.

வாகன ஓட்டிகளிலும் அப்படித்தான். பொறுப்புடன் ஓட்டுபவரிலிருந்து
கட்டடித்து ஓர்டேக் செய்து பயமுறுத்தி ஓட்டும் ஓட்டுனர்கள் உண்டு!

வாகனம், ரோடு, ஓட்டுனர் மூன்றுமே அருமையாக இருந்தால் பயணம்
சுகமாக இருக்கும்.

அதில் ஏதாவது ஒன்று குறைந்தால், பயணம் சுகப்படாது.

மூன்றுமே சரியில்லை என்றால் பயணம் அவதி நிறைந்ததாக இருக்கும்.
எப்போதடா முடியும் என்றிருக்கும்!

இருபது சதவிகிதம் பேர்களுக்குத்தான் மூன்றுமே சரியாக இருக்கும்.
இருபது சதவிகிதம் பேர்களுக்கு மூன்றுமே மோசமாக இருக்கும். மற்றவர்
களுக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து வாழ்க்கைப் பயணம் சராசரியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
சரி, இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன்?

வண்டியை விட்டுத் தள்ளுங்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மற்ற
இரண்டையும் பார்ப்போம்!

சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி நெடுஞ்சாலை, பகல் நேரப் பயணம் என்றால்
பயணம் நன்றாக இருக்கும். அதே பயணம் இரவில் என்றால் சற்று ரிஸ்க்
கானதுதான்.

நல்ல மற்றும் நன்மை பயக்கும் கிரகத்தின் தசாபுக்தி என்பது பகல் நேரப்
பயணம் போன்றது

தீய மற்றும் தீமை பயக்கும் கிரகத்தின் தசாபுக்தி என்பது இரவு நேரப்
பயணம் போன்றது.

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதாவது இப்போது பயணிக்கும் பாதை எப்படி உள்ளது? அதேபோல
அடுத்து வரப்போகும் பாதை எப்படி உள்ளது என்பது போன்ற விவரங்
களை எப்படித் தெரிந்து கொள்வது?

அதற்கு வழியுள்ளது. அதைச் சொல்லித் தருவதற்காகத்தான் இந்தப் பதிவு!
----------------------------------------------------------------------------------------------------------
1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் ஆகிய திரிகோண இடங்களிலும்,
4, 7, 10, மற்றும் 11ம் இடங்களில் இருக்கும் நாதர்களின் (கிரகங்களின்)
திசைகள் நன்றாக இருக்கும்

6, 8, மற்றும் 12ம் இடங்களில் இருக்கும் நாதர்களின் (கிரகங்களின்) திசைகள்
பயனுள்ளதாக இருக்காது. படுத்தி எடுக்கும்

திசா நாதனும், அந்த திசையில் வரும் புத்தி நாதனும் சேர்ந்துதான் பலனைத்
தருவார்கள். அதிலும் புத்தி நாதனின் கை ஓங்கி நிற்கும்.

குரு திசையில் சனி புக்தி என்றால், சனியின் கைதான் ஓங்கி நிற்கும்.
ராகு திசை சுக்கிர புக்தி என்றால் சுக்கிரனின் கைதான் வலுத்து நிற்கும்!

சரி, தசா நாதனும் புக்தி நாதனும் ஒரே இடத்தில் இருந்தால், அதில்
(இருவரில்) யார் Combust - அஸ்தமனம் ஆகாமல் - அதில் ஐந்து டிகிரிக்குள்
அடிபட்டுப்போகாமல் இருக்கிறார்களோ அவருடைய கைதான் ஓங்கி நிற்கும்

இருவரும் ஜாதகருக்கு நன்மை பயக்கும் கிரகங்கள் என்றால் அந்த புக்தி
முடிவதற்குள் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கி
விடுவார்கள். உதாரணத்திற்கு, சிம்ம லக்கின ஜாதகம் - பதினொன்றாம்
இடத்தின் அதிபதி புதனின் மகா திசை - லக்கின அதிபதி சூரியனின் புக்தி
நடைபெற்று அதாவது புதன் திசையில் சூரிய புக்தி என்றால் - அவர்கள்
இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் அதாவது ஏழில் கும்பத்தில் இருந்து
லக்கினத்தைப் பார்த்தால் - அந்த திசா புக்தி முடிவதற்குள் ஜாதகனுக்குப்
பெரும் புகழையும், விருதுகளையும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

இதுவே பத்தாம் இட அதிபதியுடன் சேர்க்கை என்றால் தொழிலில் அசுர
வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்கள்.

இதே காம்பினேசனில் 6 அல்லது 12ம் இடத்து அதிபதி என்றால்
விளைவுகள் மோசமாக இருக்கும்

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்
-----------------------------------------------------------------------------------------------
என்ன தலை சுற்றுகிறதா?

சுருக்கமான வழி இல்லையா?

இருக்கிறது!

இதுதான் சூத்திரம்

தசா நாதனும் புக்தி நாதனும் 6/8 அல்லது 1/12 Positionல் இருக்கக் கூடாது
அவ்வளவுதான்!

Simple. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

விளக்கம்:
உதாரணத்திற்கு குரு திசை புதன் புக்தி என்றால் குருவிற்கு ஆறாம் வீட்டில்
புதன் இருக்கக்கூடாது. (இருந்தால் புதனுக்கு எட்டாம் வீட்டில் குரு இருப்பார்
- எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்) அதே போல ஒருவருக்கொருவர்
1/12 Positionல் இருக்கக் கூடாது
----------------------------------------------------------------------------------------------------------------
முன்பு எழுதிய இந்தப் பதிவைப் பாருங்கள். தாசா புக்தியைப் பற்ற்ி விரிவாக
எழுதியிருப்பேன்

இப்போது சூத்திரத்தைக் கொடுத்துள்ளேன். அவ்வளவுதான்

Post dated 2.4.2007

அடுத்த பாடத்தை மூன்று நாட்கள் முன்பாகவே பதிவிட்டு விட்டேன்.
இது திங்கட்கிழமைப் பாடம். திங்கட் கிழமை ஊரில் இருக்க மாட்டேன்
அதனால் முன்பாகவே பாடத்தைக் கொடுத்து விட்டேன்

இதற்கு அடுத்த பாடம் கோச்சாரம் பற்றியது அது 3.6.2008 செவ்வாயன்று!

(தொடரும்)

27.5.08

ஜோதிட சூத்திரம் (Formula) No.1

ஜோதிட சூத்திரம் (Formula) No.1

ஜோதிடரிடம் செல்லும் அனைவரிடமுமே பொதுவான கேள்வி ஒன்று இருக்கும்!

அது: எப்போது சார் நல்ல நேரம்?

ஏன் இப்போது இருக்கும் நிலையில் என்ன குறை?

வாழ்க்கை சுவாரசியமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் அந்தக்
கேள்வி!

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆக வேண்டும். திருமணம் ஆனவர்களுக்கு
ஒரு குழந்தை பிறக்க வேண்டும். குழந்தை பிறந்தவர்களுக்கு அது நோய் நொடியின்றி
எப்போதும் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்கு அவர்கள்
சொன்னதைக் கேட்கும் மனைவி வேண்டும். பெண்களுக்கு மாமியார் மற்றும்
இன்லாக்களின் உபத்திரவம் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்து கை நிறையச்
சம்பளம் வேண்டும். முப்பத்திரண்டு வயதிற்குள் சொந்த வீடு மற்றும் சொந்த வாகனம்
வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம்
போன்ற நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி எழுதிக் கொண்டே போகலாம்

மொத்தத்தில் நாம் நினைத்த தெல்லாம் நடக்க வேண்டும்!

நினைத்ததெல்லாம் எப்படி நடக்கும்?

நாம் என்ன லல்லு வீட்டுக் குழந்தைகளா? அல்லது மன்மோகன் வீட்டுக் குழந்தைகளா?

அவர்களைக் கேட்டால்தான் தெரியும் அவர்களுடைய பிரச்சினைகள் என்னவென்று?

அதைக் கேட்டால் அதைவிட நம்முடைய பிரச்சினைகளே பரவாயில்லை என்று
தோன்றும்.

பொதுவாக அத்தனை மனிதர்களும், பணம் இருந்தால் போதும் எல்லாப் பிரச்சினை
களையும் தீர்த்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மை
அதுவல்ல! பணத்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பணத்தை வைத்து உங்களால் குழந்தைப் பேற்றைக்
கொடுக்க முடியுமா?

முடியாது! முடியவே முடியாது!

அட்லீஸ்ட் அவர்களுடைய மன உளைச்சலைப் போக்க முடியுமா? முடியாது?

இநதச் சமூகம் அவர்களை எத்தனை கேள்விகள் கேட்கின்றன என்பதாவது உங்களுக்குத்
தெரியுமா? தெரியாது!
---------------------------------------------------------------------------------------------
சரி பாடத்திற்கு வருகிறேன். ஒரு ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு அல்லது அவளுக்குக்
குழந்தை பாக்கியம் உள்ளதா என்று சொல்ல முடியுமா?

முடியும்!

அதற்குத்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது இருவருக்கும் மகேந்திரப்
பொருத்தம் என்னும் மக்கட் பொருத்தப் பேறு உள்ளதா என்று பார்த்து
திருமணத்தை நிச்சயம் செய்வார்கள்.

அஷ்டகவர்க்கத்திலும் அதற்கு ஒரு வழி உள்ளது.

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்கு உரிய காரகன் (authority for awarding
Children) குரு ஆகியோர் 28 பரல்களுக்குமேல் கொண்டிருக்க வேண்டும். இல்லை
யென்றால் இல்லை. தம்பதிகளுக்குப் பார்க்கும் போது இருவரில் ஒருவருக்காவது
அந்த அமைப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் இல்லை!

நிறைய மகப்பேறு மருத்துவர்களுக்கே குழந்தைகள் இல்லை! இன்றைய விஞ்ஞான
நுட்பங்களை வைத்து அவர்களால் ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடிய
வில்லை?

அதைத்தான் எல்லா வேதங்களும் சொல்கின்றன!

“இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் உனக்குத் தர முடியாது. அதுபோல
இறைவனால் உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்கவும் முடியாது!”

இதை உணர்ந்தவன் நிம்மதியாக இருப்பான்.
------------------------------------------------------------------
இந்த clipping ஐப் பாருங்கள்






++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே உள்ள உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.ஜாதகரின் லக்கினம் மகரம்
ஐந்தாம் வீடு ரிஷபம் அதன் பரல்கள் 24 மட்டுமே! ஐந்தாம் வீட்டின் அதிபதி
சுக்கிரனும், காரகன் குருவும் ஒன்றாகச் சேர்ந்து கும்பத்தில் இருக்கிறார்கள்
அங்கே உள்ள பரல்கள் 24 மட்டுமே. ஆக மூன்றுமே பலவீனமாக (வீக்காக)
உள்ளதால் ஜாதகருக்குக் குழந்தை இல்லை!

The lessor bindus in the said houses annihilated the prosperity.
(annihilate = to destroy completely; put out of existence)

ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு
மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்
காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.

28 என்பது சராசரி.

337 வகுத்தல் 12 = 28

சராசரி அல்லது சராசரிக்கும் மேல் இருக்க வேண்டும்.

மேஷ லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு சிம்மம். அதன் நாயகர் சூரியன்
ரிஷப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு கன்னி. அதன் நாயகர் புதன்
மிதுன லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு துலாம். அதன் நாயகர் சுக்கிரன்
கடக லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு விருச்சிகம். அதன் நாயகர் செவ்வாய்
கன்னி லக்கின ஜாதகரின் ஐந்தாம் வீடு மகரம். அதன் நாயகர் சனி
இப்படிப் பார்க்க வேண்டும்!

காரகன்:(authority)
தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
தாய்க்குக் காரகன் சந்திரன்
மன காரகன் சந்திரன்
தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
புத்திர காரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!

இதுதான் சூத்திரம் (Formula). இதை உபயோகித்து ஒரு வீட்டின் பலனைத்
தெரிந்து கொள்ளலாம். இது முக்கியமான சூத்திரம். ஆகவே நினைவில்
பதித்து வையுங்கள்.

குழந்தைப் பாக்கியத்தைப் பொறுத்தவரை, தம்பதியர் இருவருக்குமே
பார்க்க வேண்டும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். இருவருக்குமே
இல்லையென்றால் இல்லை! இருவரில் ஒருவருக்கு உண்டு என்றால் உண்டு!

ஒருவருக்கு மட்டும் இருந்தால் என்ன ஆகும்?

தாமதம் ஆகும். அவ்வளவுதான்.

சாதாரணமாக ஜோதிடர்கள், ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி, சுவாமி தரிசனம்
செய்துவிட்டு வாருங்கள், கிரக தோஷம் போகும் என்பார்கள். தாமத ஜாதகங்
களுக்கு அது முற்றிலும் பொருந்தும்
-------------------------------------------------------------------------
கல்வி, வேலை, திருமணம், வீடு, வாசல், பணம், உடல் நலம், மன நிம்மதி என்று
எல்லாவற்றிற்கும் இதே பார்முலாதான்!

வீடுகளை முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். காரகர்களை இப்போது
கொடுத்திருக்கிறேன். நீங்களே கணக்கிட்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக்
கொள்ளுங்கள்.

இன்றையப் பாடம் முக்கியமான பாடம். மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

பட்டையைக் கிளப்புங்கள். உங்களுக்கு மட்டும் கிளப்புங்கள்! அடுத்தவர்களுக்குக்
கிளப்பிவிடாதீர்கள்:-)))

அடுத்த பாடமும் முக்கியமானது; சுவையானது!
ஒரு சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது
அது அடுத்த வாரம்!
அதுவரை பொறுத்திருங்கள்!

(தொடரும்)

21.5.08

ஜோ.தொ: அட்டவனை வாரம்! அடுத்த அட்டவனை!

ஜோ.தொ: அட்டவனை வாரம்! அடுத்த அட்டவனை!

இதற்கு முன் பதிவில் ஒரு அட்டவனை கொடுத்திருக்கிறேன். பார்த்தீர்களா?
சுட்டி இங்கே!

கணிதத்தையும், வான சாஸ்திரத்தையும், ஜோதிடத்தையும் நாம்தான் உலகிற்குக் கொடையாக அளித்தோம்.

எந்தக் கொம்பனாலும் இதை மறுக்க முடியாது!

1,500 வருடங்களுக்கு முன்பே நாலந்தா பல்கலைக்கழகத்தில் பத்து லட்சம் ஓலைச்
சுவடிகளுக்கு மேல் இருந்ததாகவும், பல படையெடுப்புக்களால் அவைகளில் பாதிக்கு மேல்
தீக்கு இறையானதாகவும் சரித்திரம் சொல்கிறது. வரலாறு குறித்து வைத்துள்ளது.

அதற்கான சுட்டி இங்கே!

****************************************************************************
கொலம்பஸ் கண்டுபிடிக்காவிட்டால் அமெரிக்காவெல்லாம் இன்று இல்லை!

இந்தியா, சீனம், கிரேக்கம் ஆகியவைதான் உலகின் ஆதி நாடுகள்!

மற்ற நாடுகள் எல்லாம் இந்த மூன்று நாடுகளின் பாரம்பரியத்திற்கு நிகரானவை அல்ல!

அதை மனதில் வையுங்கள்!
---------------------------------------------------------------------
சூரியனை வைத்து ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். சந்திரனை வைத்துத் திங்கட்கிழமை
என்கிறோம் இப்படி சனி வரை வார நாட்களுக்குப் பேர் சூட்டிப் பொட்டு வைத்தது நாம்தான்.

இதைத்தான் ஒன்றும் செய்ய முடியாமல் ஆங்கிலேயர்கள், SUNday (Sunday) MOONday
(Monday) Saturnday என்று ஒப்புக்கொண்டு அழைக்கிறார்கள். இல்லையென்றால்
ராபர்ட் டே, ஜார்ஜ் டே, சோபியா டே ஒபாமா டே என்று இஷ்டப்படி வைத்திருப்பார்கள்!

அதைப் பற்றி நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன்
-------------------------------------------------------------------------------------------

என்னென்ன கிழமைகள் எதெதற்கு உகந்தது?

அட்டவனை ஒன்று கிடைத்தது. தந்திருக்கிறேன்.



*********************************************************************************
பயனானதுதானா?

நீங்கள்தான் சொல்லவேண்டும்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------------------------
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
-------------------------------------------------------------------------

20.5.08

ஜோ.தொ: இது தேவைப்படலாம் அல்லது படாமலும் போகலாம்!

ஜோ.தொ: இது தேவைப்படலாம் அல்லது படாமலும் போகலாம்!

இன்று ஒரு மருத்துவக் கம்பெனியின் கையேட்டில் அட்டவனை ஒன்றைப்
பார்த்தேன். அது எனக்குப் பரீட்சயமான அட்டவனைதான். வேறு பெரிய
வடிவத்தில் அது என்னிடம் முன்பே உள்ளது.

இருந்தாலும் அது ஸ்கேனருக்குள் அடங்காத அளவிற்குப் பெரிதானது.

இதைப் பார்த்தவுடன் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

சரி நமது வகுப்புக் கண்மணிகளுக்குப் பயன்படும் என்று சுட்டுக் கொண்டு
வந்துவிட்டேன். கீழே கொடுத்துள்ளேன்.

அது என்ன அட்டவனை என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

சிலருக்கு அது அவர்களின் சொந்த உபயோகத்திற்கே பயன்படும்.

சிலருக்கு அது அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்காகப் பயன்படும்

சிலருக்கு இப்போது பயன் படாது. பின்னால் ஒரு காலத்தில் பயன்படலாம்.

எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கிடைக்காத அட்டவனை இது.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்,
வாத்தியார்

-------------------------
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.5.08

ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?

இரவு நேரம். வீட்டில் மின்சாரம் தடைப்படுகிறது. இருள் சூழ்கிறது!

என்ன செய்வீர்கள்?

முதலில் மின் இலாக்காவை அல்லது திருவாளர் ஆற்காட்டாரைத் திட்டி விட்டு,
கஷ்டப்பட்டு மேஜை மேலிருக்கும் டார்ச் லைட்டை எடுப்பீர்கள்.

இன்னும் சிலர் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு, இரவுத்தூக்கம்
கெட்டுவிடுமே என்ற கவலையுடன், ஃப்யூஸ் கால் அலுவலகத்திற்குப் போன்
செய்து, “எப்போது மின்சாரம் மீண்டும் வரும்? என்று கேட்பீர்கள்

சரி, பொதுஜனக் குணம் என்ன?

“நம் வீட்டில் மட்டும்தான் போயிருக்கிறதா? அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலும்
போயிருக்கிறதா?” என்று பார்த்து, தெருவோடு எல்லா வீடுகளிலும் போயிருந்தால்
நிம்மதி அடைவதுதான் இந்தியப் பொதுஜனக் குணம் என்பார்கள்.

எல்லா வீடுகளிலும் போயிருந்தால் எவனாவது போன் செய்து, உடனே வந்து விடும்
அல்லது சரி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கை மேலிடுமாம்.

அதுபோல நம் மக்களுக்குப் பல வினோதமான குணங்கள் உண்டு!

கீழே உள்ள தசா விவரங்களைப் பாருங்கள்.

இதைப் பார்த்துவிட்டு, என் நண்பர் ஒருவர் சொன்னார்:

“நான் தப்பித்து விட்டேன், எனக்கு ராகு திசையே வராது!”

எனக்குச் சிரிப்பு வந்தது.

“எப்படிச் சொல்கிறீர்?” என்றேன்.

அவர் உடனே டக்கென்று சொன்னார்.

“நான் புனர்பூச நட்சத்திரம். ஆரம்ப திசை குரு திசைதான். அதில் இருப்பு
14 ஆண்டுகள் ஆகவே நான் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால்தான் ராகு திசை
வரும். அதற்கு சாத்தியம் இல்லை ஆகவேதான் ராகு திசை எனக்கு வராது. அதன்
சிரமங்களில் இருந்து தப்பித்து விட்டேன்” என்றார்

நான் விடவில்லை. தொடர்ந்து கேட்டேன். “சரி உங்களுடைய 50 வயதில்
கேது திசை வருமே அப்போது என்ன செய்வீர்கள் என்றேன்?”

”கேது திசை என்ன செய்யும்?” என்றார்

“ராகு திசை 18 வருடங்களில் அடிக்கும் அடியைக் கேது ஏழு வருடங்களிலேயே
செய்து விடும்” என்றேன்.

“எனக்கு ரிஷப கேது. நீசமடைந்தவன். அவனே நீசமடைந்ததால் - பலமிழந்து
இருப்பதால் பெரிதாக என்ன செய்து விடுவான்?”

“இங்கே பலம் முக்கியமில்லை. அவன் லக்கினத்திலிருந்து எந்த வீட்டில்
இருக்கிறானோ - அந்த வீட்டின் பலனை பக்காவாகக் கொடுத்து விடுவான். நீங்கள்
மிதுன லக்கினம், ஆகவே உங்களுடைய 12ஆம் வீட்டில் இருக்கும் கேதுவும்,
அதேபோல ஆறாம் வீட்டில் இருக்கும் ராகுவும் அவர்களுடைய
மேஜர் (மகா) திசை வரவேண்டும் என்றில்லாமல், அவர்களுக்குக் கிடைக்கும்
புக்திகளில் (Sub-periods) அந்த வேலையை நடத்தி விடுவார்கள். ஆகவே ஒன்பது
கிரகங்களும், திசை வரவேண்டும் என்ற கணக்குக் கிடையாது. ஒவ்வொரு கிரகத்தின்
மகா திசையிலும், மற்ற எட்டுக் கிரகங்களின் புக்தி வரும். அதது தனது புக்தியில்
நல்லதோ அல்லது கெட்டதோ - ஜாதகப் பலனைத் தவறாமல் கொடுத்து விடும்.”
என்றேன்.

ஒரு இசைக்குழுவில் பலர் சேர்ந்து மகிழ்ச்சி இசையையும் கொடுப்பார்கள். சோக
கீதத்தையும் கொடுப்பார்கள் இல்லையா? அதுபோல கிரகங்களும் உட்டணி போட்டு
அதே வேலையைச் செய்து விடும்.

அகவே எனக்கு அது வராது, இது வராது என்று சொல்லிக் கொண்டிராதீர்கள்

உங்களுக்காக மொத்த திசைகள், புக்திகளை அட்டவணையாக மாற்றிக் கொடுத்
திருக்கிறேன்.

மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு செய்த வேலையாகும் இது.

அட்டவனையை நன்றாகப் பாருங்கள். வேண்டும் என்றால் உங்கள் கணினியில்
சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் பல செய்திகள், பல விஷயங்கள் அதில் உள்ளன.

ராகு திசை மொத்தம் 6,480 நாட்கள். அதே ராகு மற்ற கிரகங்களின் திசையில்
புக்தியாக வந்தாலும் அதே 6,480 நாட்கள் உண்டு. இது எல்லா கிரகங்களுக்கும்
பொதுவானது.

நன்றாகப் பாருங்கள். ஒரு பெரிய செய்தியை அட்டவனையாக்கித் தந்துள்ளேன்.

அதன் மூலம் படைப்பின் பெருமையை உணர வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
சர்ட்டின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், பெரியதாகத் தெரியும்!




-------------------------------------------------------

12.5.08

ஜோதிடத் தொடர்: பூவெப்ப மலரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோதிடக் கட்டுரைத் தொடர்

நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள். நன்றாக வேலை செய்யக்கூடியவர்.
அதற்கான கல்வித் தகுதியும், திறமையும் உங்களிடம் இருக்கிறது.

ஆனால் உங்கள் வேலைக்கான பாராட்டும், அதைவிட முக்கியமாக அதற்குரிய
ஊதியமும் உங்களுக்குக் கிடைத்தால்தானே - உங்களுக்கு ஒரு சந்தோசமும்,
உற்சாகமும் இருக்கும்?

இல்லையென்றால் என்ன ஆகும்?

சலிப்புத்தான் மிஞ்சும்.

அல்லது இப்படி வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அமைப்பில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கான அங்கீகாரமும், பதவியும் இல்லையென்றால் உங்கள் செயல்பாடு
எப்படி இருக்கும்?

நீங்கள் ஒரு பெரிய இயக்குனரிடம் உதவியாளராக இருக்கிறீர்கள். உங்கள்
மூளையைக் கசக்கி நீங்கள் சொல்லும் திரைக்கதையோ, காட்சி அமைப்போ
சூப்பராக இருந்து, அது படத்திலும் வெளிப்பட்டு, அதன் பாராட்டு முழுவதும்
இயக்குனருக்கே போய், உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தால்
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அல்லது நீங்கள் ஒரு வியாபாரம் செய்கிறீர்கள். தொழிலின் நுணுக்கமெல்லாம்
உங்களுக்கு அத்துபடி. இருந்தாலும், போட்டி காரணமாக அல்லது நீங்கள்
இருக்கும் ஊரின் மக்கள் வாங்கும் திறன் காரணமாக, உங்கள் தொழிலில்
தேக்கம் ஏற்பட்டு அல்லது நஷ்டம் ஏற்பட்டு, ஒரு சோக நிலைக்கு (கடனுக்கு)
நீங்கள் தள்ளப்பட்டால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்?

இப்படிப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

உங்கள் நேரம் நன்றாக இருந்தால், நடப்பவை நன்றாக இருக்கும்.
இல்லையென்றால், இல்லை!

கிராமங்களில் சொல்வார்கள்:

”தரித்திரம் தந்தியில் வரும்; அதிர்ஷ்டம் தபாலில் வரும்”

அது உண்மை.

கஷ்டங்கள் ஒரு நொடியில் வந்து விடும்.

சரி, அது எப்போது போகும்? எப்படிப்போகும்?

நல்ல கிரகத்தின் திசை அல்லது புக்தி (Major Dasa or Sub Period) ஆரம்பமானவுடன்
அது போக ஆரம்பிக்கும். அந்த திசை அல்லது புக்தி முடிவதற்குள் எல்லாம் சரியாகி
விடும்.

உதாரணமாக குரு திசை, சனி புக்தியில் (30 மாதம்,12 நாட்கள்) ஒருவன் பல
விதமான சோதனைகளைத் துன்பங்களை அனுபவித்தான் என்றால், அதைத்
தொடர்ந்து வரும் குரு திசை புதன் புக்தியில் (27 மாதங்கள் 6 நாட்கள்)
சரியாகி விடும். பொதுவாக குருவும், புதனும் சேரும் போதெல்லாம் மாற்றங்களைக்
கொடுப்பார்கள். நல்லதைச் செய்வார்கள்.

அதற்காக குரு திசை புதன் புக்தி ஆரம்பித்த அன்றே ஸ்விட்ச் போட்ட மாதிரி
ஒரே நாளில் எல்லாம் சரியாகி விடாது. ஒவ்வொரு பகுதியாகச் சரியாகி, அந்தக்
குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் எல்லாம் சரியாகி விடும்.

மொத்த நட்சத்திரங்கள் 27
மொத்த கிரகங்கள் 9
ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சத்திரங்கள் சொந்தமாகும் அல்லது 3 நட்சத்திரங்களுக்கு
ஒவ்வொரு கிரகமும் அதிபதியாகும்

உங்கள் நட்சத்திரத்திற்கு யார் அதிபதி என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

உதாரணமாக நீங்கள் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிறந்திருந்தால்
உங்களுடைய நட்சத்திர அதிபதி கேது. உங்களுடைய ஆரம்ப திசையும் கேது திசைதான்

அடுத்த நட்சத்திரமான பரணி என்றால் உங்களுடைய அதிபதி சுக்கிரன்.உங்களுடைய
ஆரம்ப திசையும் சுக்கிர திசைதான்

இப்படியே வரிசையாக வரும். முன் பாடங்களில் இதையெல்லாம் தெளிவாகச் சொல்லி
இருக்கிறேன். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது முக்கியம்.

மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் 9 புக்திகள்(sub periods) ஆக மொத்தம்
81 புக்திகள் (sub periods) அவற்றின் மொத்தகாலம் 120 ஆண்டுகள்

நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா என்றால் இல்லை!

முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் போதிய மருத்துவ வசதி
இன்மையால் ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.

ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது

ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி நடக்கும் பொதுப் பலன்களைப்
பழைய நூல் ஒன்றிலிருந்து எடுத்து முன் பதிவுகளில் (ஜோ.பாடம் எண் 23 - 25)
கொடுத்திருந்தேன்

அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு
பெரிய முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!

அவருடைய பெயர் 'புலிப்பாணி'.

ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி

அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு
செய்து, வரிகளின் அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட் எடுத்து, Scan
செய்து பதிவிட்டிருந்தேன்

எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான். மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை
வாத்தியார் கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்

பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருந்தேன்.

அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும். யாரையும் கேட்க வேண்டாம்.
உங்களுக்கு நீங்களே நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று தெரிந்து அதற்குத்
தகுந்த மாதிரி வாழ்க்கையின் இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்

சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள் அதில் உள்ள மாதிரிதான் இருக்கும்.
மீதமுள்ள 25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின்
மேம்பாட்டைப் பொறுத்து பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில் (எண்22) நான்
சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக் கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க
வேண்டுகிறேன்

ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும்
சம்பவங்களை வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம் உள்ளது என்று தசா
புத்தி (sub periods) சொல்லும் போது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?

வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த மூன்று வருடத் துன்பங்களைத்
தெம்புடன் ஏற்றுக் கொள்வோமா - மாட்டோமா?

அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.

வேறு சுலபமான வழி இல்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது.

அஷ்ட வர்கத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சுய வர்க்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதன்படி, உங்கள் ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படி ஒவ்வொரு கிரகமும் என்ன
வலுவுடன் (Strength) என்று பாருங்கள் அதன்படி பலன் இருக்கும்.

உதாரணமாக ஒருவருக்குப் புதன் திசை நடக்கிறது.
அவருடைய ஜாதகத்தில் புதனின் சுய வர்க்கத்தில் உள்ள கிரகங்கள் அந்தக் குறிப்பிட்ட
கட்டத்தின் படி எத்தனை பரல்களுடன் இருக்கிறது என்று குறித்துக் கொண்டு
புக்திகளுடன் வைத்துப் பலன்களை பாருங்கள்

உதாரணத்திற்குக் கீழே உள்ள படிவத்தைப் பாருங்கள்.





---------------------------------------------------------------------------------------------------------------------
இதன்படி உங்களுக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மகிழ்வுடன் இருங்கள்.

இதே வரிசையில் (அஷ்டகவர்க்கத்தில்) அடுத்த பாடம் இன்னும் சுவையாக இருக்கும்.
அது அடுத்த திங்கட் கிழமையன்று (19.5.2008)

அதுவரை, பழைய படங்களை எல்லாம் புரட்டிப் பாருங்கள். பல செய்திகள் தெரிய
வரும்!

(இது: ஜோதிடக் கட்டுரை 2 உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப
மலரும்? பகுதி: 3)

அன்புடன்
வாத்தியார்

(தொடரும்)

2.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2



==========================================================
ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

முன்பகுதியைப் படித்துவிட்டு வாருங்கள்: சுட்டி இங்கே!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப்
பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும்.
நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம்
வகையில் சேரும்

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான
கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள்
இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில்
உள்ள 110 கோடி ஜனங்களுக்கும் 110 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு
வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம்
கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப்
பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும்.
சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று
நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி
விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர்
என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு
வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில்
பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ள
வில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப்
படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க
முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல்
அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக்
கொண்டேபோவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும்
உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை,
நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம்
பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தை
களைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது
ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும்
கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை.
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து
விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உரு
மாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால்
தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து
அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக்
கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி
முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல!
உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்
கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான்
ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்
மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்
அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று
வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்
களையும் புதிதாக மாற்றி விட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை
விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து
மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது
ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம்,
இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind)
ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது
வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது
என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்
தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே
அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக 28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக
இரண்டு பரல்களுடன் - அதாவது 30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது
இருத்தல் நல்லது.

அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது
சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால் நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன்
அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி
குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி
செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த
மூன்று இடங்கலையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை
ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம மனிதர் அல்லது
பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

பதிவின் நீலம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்ற செய்திகள்
அடுத்த பதிவில்

(தொடரும்)

புதியவர்களுக்கு: பரல்களைக் கணித்துக்கொடுக்கும் மென்பொருளிற்கு இங்கே சொடுக்கவும்:

----------------------------------------------------------------------------------------

1.5.08

பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1


====================================================

ஜோதிடக் கட்டுரை 2

உட்தலைப்பு: பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1

வியாபார நிமித்தமாக அடிக்கடி பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் பழக்கம் உண்டு.
இப்போதல்ல. அது முன்பு! பயணம் என்றால் பத்து மணி நேரம் முதல் இருபது மணி
நேரம் வரை பயணிக்க வேண்டும்

அவ்வாறு பயணிக்கும்போது,படிப்பதற்காக புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வேன்.

இளைஞனாக இருந்த காலத்தில், James Hadley Chase அல்லது Jeffery Archer புத்தகம்
ஒன்றை எடுத்துக் கொள்வேன். பெரும்பாலும் விலைக்கு வாங்கியதாகவோ அல்லது
நண்பர்கள் கொடுத்ததாகவோ இருக்கும். மணிக்கு முப்பது பக்கம் என்ற அளவில் அதை
முழுதாகப் படித்து விடுவேன். மேலோட்டமான படிப்பு அல்ல! முழுதாக உள்வாங்கி
ரசித்துப் படிக்கும் பழக்கம்.

பின்பு ஒரு காலகட்டத்தில், ஆன்மிகப் புத்தகங்களுக்கும், ஜோதிட நூல்களுக்கும் முக்கியம்
கொடுத்துப் படிக்க ஆரம்பித்தபோது, புதினங்கள் படிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டேன்.

ஜோதிட நூல்களைப்போலவே, ஜோதிட மாத இதழ்களையும் விரும்பி வாங்கிப் படிக்கத்
துவங்கினேன். Indian Expressன் Star Teller, Astrological Magazine ஆகிய ஜோதிட இதழ்களில்,
பிரபலமான ஜோதிட வல்லுனர்களான P.S Ayer, K.S.Rao, N.Sundararajan, Dr.V.P.Shukla,
V.S.Kalyanaraman போன்றோர்களின் கட்டுரைகள் அசத்தலாக இருக்கும் அதுபோல
அதன் ஆசிரியர் B.Venkatraman அவர்களின் கேள்வி பதில் பகுதி விறுவிறுப்பாக இருக்கும்.

Your Technical Difficulties Solved என்ற பகுதியில் ஜோதிடம் அறிந்த தங்களுடைய
வாசர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அனுப்பிய ஜாதகக் குறிப்பையும்
அருகிலேயே கொடுத்துப் பதிலையும் கச்சிதமாகச் சொல்லியிருப்பார் அவர். தொடர்ந்து
படிக்கும் வாசகர்கள், அந்தக்கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்று கொடுக்கப்
பட்டிருக்கும் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து பார்த்து யோசித்துவிட்டு, தங்கள் பதில்
அவருடைய பதிலுடன் ஒத்துப்போகிறதா என்று பார்ப்பது வழக்கம்.

சரியாக இருந்துவிட்டால் ஒரு சந்தோஷம் ஏற்படும் பாருங்கள், அதற்கு ஈடு இணையே
கிடையாது. சரியாக இல்லையென்றாலும், என்ன காரணத்தினால் அது தவறாகிவிட்டது
என்று நமது கணிப்பைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை அது ஏற்படுத்தும். அந்த
வகையிலும் அது மகிழ்வையே தரும். பல வாசகர்களின் ஜோதிட அறிவு வளர்ந்ததற்கு
அவருடைய எழுத்துக்களே காரணம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்:


=========================================================
இவ்வாறு மனம் ஒன்றியும், முனைப்புடனும் படிக்கும்போது நேரம் போவது தெரியாது.

பஸ்ஸில், அருகில் அமர்ந்திருப்பவரால் ஒன்றும் சிரமம் ஏற்படாது. ஆனால் ரயிலில்
பயணிக்கும்போது, உடன் பயணிக்கும் சக பயணிகள் சும்மா இருக்கமாட்டார்கள்.
ஆர்வத்துடன் பேச்சுக்கொடுப்பார்கள். அவர்களைத் தவிர்க்க முடியாது. புத்தகத்தை
மூடி வைத்துவிட்டு அவர்களுடன் தொடர்ந்து பேசும்படி ஆகிவிடும். அதிலும் ஒரு
லயிப்பு இருக்கும். ஆகவே சங்கடமின்றி அரட்டை அடிப்பது வழக்கம்.

அப்படி அரட்டை அடிப்பதிலும் பல சுவையான அனுபவங்களும், செய்திகளும்
கிடைக்கும். சில சமயம் நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களும் பயணிப்பார்கள். அவர்களுடன்
பல தகவல்களைக் கேட்டுப்பெற்ற அனுபவமும் எனக்கு உண்டு.

அப்படிக் கிடைத்ததுதான் நான் உங்களுக்கு விவரித்துச் சொன்ன சனீஸ்வரன் படித்த
பள்ளிக்கூடக் கதை!
--------------------------------------------------------------------------------------------------
பொதுவாக, ஜோதிடம் அறிந்தவர் நீங்கள் என்பது தெரிந்தால், அவர்களுக்கு உங்கள்
மேல் பத்து மடங்கு ஆர்வமும், மரியாதையும் டக்கென்று ஏற்பட்டுவிடும். இது நான்
பல இடங்களில் பார்த்திருக்கிறேன். (அதனால், பின்னால் பல அசெளகரியமும் ஏற்படும்
- அது தனிக்கதை!)

எல்லோரும் கேட்கக்கூடிய ஒரு பொதுக்கேள்வி உண்டு!

“நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். யார்தான் கஷ்டப்படவில்லை
என்று சொல்லாதீர்கள்! என் கஷ்டம் என்னைத் தொடர்ந்து வாட்டிக்கொண்டிருக்கிறது.
அது தீருமா? அல்லது தீராதா?”

என்று சொல்லியவாறு, தன் சட்டைப்பையில் தயாராக வைத்திருக்கும் தன்னுடைய
ஜாதகத்தை எடுத்து நீட்டிவிடுவார்கள்.

கஷ்டங்கள் இரண்டு வகைப்படும்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படுவதைப்போல - அதாவது அசையும் சொத்து, அசையாத
சொத்து என்று - இரண்டு வகைப்படுவதைப்போல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்

அவை என்னென்ன? அவைகளுக்குத் தீர்வு உண்டா? அவற்றின் தீர்வு காலத்தை - அதாவது
அவைகள் நீங்கும் காலத்தை நம் ஜாதகத்தைப் பார்த்து நாமே அறிய முடியுமா?

முடியும்!!!

அவற்றை உங்களுக்குச் சொல்லித் தருவதற்குத்தான் இந்தக் கட்டுரைத் தொடர். சற்று
நீண்ட தொடர். விவரமாக எழுத உள்ளேன்; பொறுமையாகப் படியுங்கள்!

(தொடரும்)
---------------------------------------
அன்புடன்,
வாத்தியார்