Nagapattinam - Kayaarohaneswarar, Neelayathatchi temple படத்தின் மீது கர்சரை வத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!தாயார் இறந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் தேனப்பனின் மனதில்
இன்னும் சோகம் போகவில்லை.
‘அப்பச்சி’ என்று ஆத்தாள் கூப்பிடுவது போன்று வீடு முழுக்க அவ்வப்போது
கேட்டுக் கொண்டிருந்தது.
அன்று சனிக்கிழமை. ஆத்தா பழக்கிவிட்டுப்போன பழக்கம். சுடவைத்த
எண்ணெயும், சிகைக்காய்த் தூளும், கின்னங்களுமாக தோட்டத்துக்
குளியலறைக்குப் போனவன், குளிக்காமல், கிணற்றடித் திட்டில் உட்கார்ந்து,
பலத்த யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அங்கே தற்செயலாக வந்த அவனுடைய மனைவி முத்துலெட்சுமி,
அருகில் வந்து, அவனுடைய தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்,
” ராசாவுக்கு என்ன கவலை? எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை?”
”நமக்கு எங்கே கப்பம் வரும்? அப்பம்தான் வரும், அதுவும் சொல்லிவிட்டால்
ராயர்கடை அப்பம்தான் வரும்”
“பிறகென்ன? சூடாக நாலு அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப்
பார்க்க வேண்டியதுதானே? எதற்காக நொடித்துப்போய் உட்கார்ந்திருக்கிறீர்கள்?”
”எங்க ஆத்தா, நான் அவதிப்படனும்னு, ஒன்றைப் பெற்று, வளர்த்துவைத்து
விட்டுப் போயிருக்கிறாளே, அதை நினைத்துத்தான் கவலைப் பட்டுக்
கொண்டிருக்கிறேன்.”
“நீங்க கவலைப்படுவதாலே, அவதி பரிதாபப்பட்டு, போய்விடப்போகிறதா என்ன?”
“போகாது. ஆனாலும் இப்படி ஈவு இரக்கமில்லாத மனிதன், என் ஆத்தாவிற்கு
எப்படி மகனாகப் பிறந்தான் என்பதை நினைக்கும்போது, கோபம் கோபமாக
வருகிறது?”
“எல்லா விரல்களும் ஒரு மாதிரியா இருக்கிறது? வலது, இடது என இரண்டு
கைகளும் ஒருமாதிரியாகவா பயன்படுகிறது? குடும்பம் என்றால், அண்ணன்,
தம்பி என்றால், இப்படிக் கலந்துகட்டிதான் இருப்பார்கள். எல்லோரும் உங்களைப்
போல ஆத்தாபிள்ளையாகவா இருப்பார்கள்? நீங்கள்தான் விடாப்பிடியாக உங்கள்
ஆத்தாவைக் கடைசிவரை கூடவே வைத்திருந்து, கண்ணைப் போல பார்த்துக்
கொண்டீர்கள். உங்கள் அண்ணன் படித்து முடித்து வேலைக்குப் போன
நாளிலிருந்து இன்றுவரை பெரிய குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் தன்னைப்
பேணியாகவே இருந்துவிட்டார். தான், தனது மனைவி, மக்கள் என்று குடும்ப
அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் யார் திருத்த முடியும்?
அல்லது யார் மாற்ற முடியும்?”
”அதெல்லாம் ஆண்டவன் மாற்றுவான்!”
“ஆண்டவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா? பிறகெதற்கு அவரைப்
பற்றிய பேச்சு?”
“ஆண்டவன் அவரைக் கேட்கட்டும். ஆனால் ஆத்தாவின் மருத்துவச்
செலவிற்காகவும், கேதச் செலவுகளுக்காகவும் சடையப்ப செட்டியாரிடம்,
கடனாக வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?”
”உங்கள் ஆத்தா, காதில் போட்டிருந்த வைரத்தோட்டையும், கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியையும், இதர நகைகளையும் விற்றால் கடனைக் கொடுத்து விடலாமே? அதைச் செய்யுங்கள்”
’ஆத்தாவின் நகைகளை விற்க எனக்கு விருப்பம் இல்லை. ஆத்தாவின் நினைவாக அதை வைத்துக் கொள்ளப்போகிறேன்”
’சரி, அவரிடம் தவணை கேட்டு வையுங்கள். யோசித்து ஏதாவது செய்து,
கடனைக் கட்டிவிடலாம்”
“என் அண்ணன் பைசாக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே?
சும்மா விட்டுவிடலாம் என்கிறாயா?”
“கேட்டால் என்ன சொல்லுவார்? ஆத்தாவைக் காத்த அருமை மகன் எனும்
பெயர் உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஊருக்குள் கொடிபிடிக்கும் யோகம்
உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. சொந்தக்காரர்களிடையே உனக்குத்தான்
மதிப்பு இருக்கிறது. அதோடுசேர்த்துக் கடனையும் நீயே வைத்துக் கொள்
என்று கூறிவிடுவார்”
“ஒகோ!”
“என்ன ஒகோ? அதையெல்லாம் நானாக கற்பனை செய்து சொன்னேன்.
அவரிடம் கேட்டால் சண்டைதான் மிஞ்சும். நீங்கள் அவரிடம் ஒன்றும் கேட்க
வேண்டாம். ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆத்தாவிற்கு ஒத்தை மகனாக
இருந்தால் என்ன செய்வீர்கள்? யாரிடம் போய்க் கேட்பீர்கள்? ஆகவே உங்கள்
ஆத்தாவிற்கு நீங்கள் ஒத்தைமகன் என்று நினைத்துக் கொண்டு, அவரை மறந்து
விடுங்கள். ஒரு தெளிவு வரும்”
செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது தேனப்பனுக்கு.
அதோடு ஒரு தெளிவும் வந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++
மீனாட்சி ஆச்சி எனும் மீனியாச்சிக்கு இரண்டு மகன்கள் என்றாலும், இளைய
மகனான தேனப்பனைத்தான் அவர்கள் அப்பச்சி என்று கூப்பிடுவார்கள்.
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தப் பெயர், ஆச்சி அவர்களின்
மாமனாரின் திருப்பெயர். அதனால் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட
மாட்டர்கள். அதோடு, சின்ன வயதில் தேனப்பன் அழகாக, துறுதுறுவென்று
இருப்பான். அப்போது ஆச்சி, அவர்கள் என்னைபெத்த அப்பச்சி இவன்,
என் அப்பச்சியே எனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார்கள் என்று
வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி, இவனைக் கொஞ்சுவார்கள்.
நான் உன்னோடுதான்டா’ இருப்பேன் என்றும் சொல்வார்கள். அதன்படியே,
தனது எண்பது வயதுவரை அவனுடனேயே இருந்து விட்டு சென்ற மாதம்தான்
காலமானார்கள். ஆச்சியவர்களின் 55 வருட நாகபட்டிண வாழ்க்கை முடிவிற்கு
வந்துவிட்டது.
1954ஆம் ஆண்டு ஏகப்ப செட்டியாரைத் திருமணம் செய்துகொண்டு,
நாகபட்டிணத்திற்குக் குடிவந்த ஆச்சி, முதல் 5 வருட காலம் மஞ்சக்
கொள்ளைப் பகுதி கன்னாரத்தெருவில்தான் குடியிருந்தார்கள்.
அப்போது செட்டியாருக்கு, நகரத்தார் ஒருவரின் அடகுக்கடையில் வேலை.
சம்பளம் நூறு ரூபாய்.ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் செலவு
போக மாதம் இருபது ரூபாய் மிஞ்சும்.
முழுத்தேங்காய் இரண்டணாதான் விலை. கடைக்காரன் ஒரணாவை வாங்கிக்
கொண்டு அரைமூடி கேட்டால்கூடத் தருவான். காலணாவை வாங்கிக் கொண்டு
இரண்டு பற்றைகள் கீறியும் தருவான். காலைச் சட்டினிக்கு அது போதும்.
வாழ்க்கை எளிமையாக இருந்தது. விலைவாசி அத்தனை மலிவாக இருந்தது.
வேலைக்கு இருந்தால் முன்னுக்கு வரமுடியாது என்று தன் மாமனார் கொடுத்த
எட்டாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஐஸ்ஃப்ரூட், தயாரித்து விற்கும் கடை
யொன்றைச் செட்டியார் துவங்கினார்.
தினமும் பத்துப் பெட்டி அளவு ஐஸ் ஃப்ரூட்கள் தயாராகும். கூலியாட்கள்
சைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார்கள்.
நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து
சர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்
பள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில், அத்தனை பெட்டி ஐஸ்களும் விற்றுக்
காசாக வந்துவிடும்.
வடக்கு வீதியில் வீடும், ஐஸ் கடையும் ஒரே இடத்தில். வாடகைக் கட்டிடம்.
இன்றுவரை அங்கேதான் ஜீவனம் நட்ந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி ஐஸ்
பார்லர்’ என்றால் அனைவருக்கும் தெரியும். வேறுமனே மீனாட்சி ஐஸ் பார்லர்,
நாகபட்டிணம் என்று எழுதினால், கடிதங்கள் போய்ச் சேர்ந்துவிடும்.
அந்த அளவிற்குப் பெயருடன் விளங்கியது. ஆனால் வளர்ச்சிதான் இல்லை.
வருமானம் கைக்கும் வாய்க்குமாக இருந்தது. சேமிப்பு மூன்றாண்டுகளுக்கு
ஒரு முறை இத்துப்போன பெட்டிகளை, புதுப்பிக்கும் பணியில் கரைந்து விடும்.
மூத்தமகனை உள்ளூரிலும், பிறகு காரைக்காலில் உள்ள கல்லூரியிலும் படிக்க
வைத்த செட்டியார், அவனுக்கு தனியார் வங்கியொன்றில் வேலையும் வாங்கிக்
கொடுத்தார். அவன் விசுவாசமில்லாதவன். தன்னைப் பேணி, ஆரம்பத்தில்
வீட்டிற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன், திருமணமான பிறகு
ஒன்றும் செய்வதில்லை. பணத்தைக் கட்டிக்கொண்டு அழுவான்.
சும்மா அழுகமாட்டான். மூக்கால் அழுவான்.
இளையவன், அவனுக்குப் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தான்.
அது ஆச்சி அவர்களின் நச்சரிப்பால் ஏற்பட்டது. ”எனக்குப் பெண் குழந்தை
யென்றால் கொள்ளைப் பிரியம். எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.
அவளுக்கு நீலா என்று பெயர் வைக்க வேண்டும்.” என்று சொல்லிக்
கர்ப்பம் தரித்தார்கள் அவர்கள்.
விதி எப்போதுமே விருப்பத்திற்கு எதிராகத்தான் வேலை செய்யும்.
ஆச்சி அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. பெண் குழந்தை
பிறக்கவில்லை. மாறாக மீண்டும் ஆண் குழந்தையே பிறந்தது. ஒருவாரம்
வரை கண்கலங்கியவர்கள், பிறகு சமாதானமாகிவிட்டார்கள்.
தேனப்பன் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, செட்டியாருக்கு உடல்
நலமில்லாமல் போய்விட்டது. அவனை மேல் படிப்புப் படிக்க வைக்காமல்,
ஐஸ் கடைக்கு, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு விட்டார் செட்டியார்.
ஆச்சி இதற்கு வருத்தம் தெரிவித்தபோது. செட்டியார் சிலாக்கியமாகச்
சொன்னார். “அவனுக்கு நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும்
ஜாதகக்காரனல்ல அவன். பின்னால் நன்றாக இருப்பான். இப்போது நீ
தொணதொணக்காதே!”
தேனப்பனுக்கும், தண்ணீர், எசன்ஸ், சாக்ரின், சீனி என்று மூலப்பொருட்களைக்
கலக்கி நேர்த்தியாக ஐஸ்ப்ரூட் போடும் தொழில் சின்ன வயதிலிருந்தே
அத்துபடியானதால், வியாபாரம் களைகட்டியது. இன்னும் இரண்டு சில்லிங்
பெட்டிகளைப் போட்டுத் தொழிலை விரிவாக்கினார்கள். கையில் சேர்ந்த
காசில் தேசிய நெடுங்சாலையில் தாமரைக்குளத்திற்கு எதிரே
(தற்போது தேவி திரையரங்கம் இருக்கும் பகுதியில்) 25 செண்ட் இடத்தை
வாங்கினார்கள்.
ஆனால் யார் கண்பட்டதோ - வாங்கிய இடம் நிலைக்கவில்லை.
ஆறு மாத காலத்திலேயே அதை விற்கும்படியாகிவிட்டது. செட்டியாருக்குப்
புற்று நோய்வந்து, சென்னைக்குக் கூட்டிக் கொண்டுபோய் வைத்தியம்
பார்த்ததில் அந்தப் பணம் கரைந்தது போக, செட்டியாரும் காலமாகிவிட்டார்.
அப்போது தேனப்பனுக்கு 25 வயது. யாரும் பெண் சொல்லிவிடவில்லை.
ஐஸ்புரூட் மாப்பிள்ளை என்று எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு
சம்மதிக்கவில்லை. மீனாட்சி ஆச்சி, தன்தம்பி மகளை, பைசா கூட
வாங்கிக் கொள்ளாமல் தன் மகனுக்கு மணம் முடித்து, நாகபட்டிணத்திற்குக்
கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.
காலச் சுழற்சியில், முத்துலெட்சுமி நாகைக்கு வந்து இருபது வருடங்கள்
ஓடி விட்டது. தனக்கு வாழ்வு கொடுத்த விசுவாசத்தில், முத்துலெட்சுமி, தன்
அத்தைக்கும், தேன்னப்பனுக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்தாள்.
தாம்பத்யமும் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு இன்று ப்ள்ஸ் டூ முடித்து விட்ட
நிலையில் ஒரு பையனும் இருக்கிறான். இதுதான் தேனப்பனின் பூர்வ கதை.
**************************
காலதேவன்தான் சிறந்த ஓட்டக்காரன். எதைப்பற்றியும் கவலைப்படாமல்
சீராக ஓடிக்கொண்டிருப்பவன். அவனுடைய ஓட்டத்தில், பலருடைய வாழ்க்கை
முன்னுக்கு வந்திருக்கிறது. பலருடைய வாழ்க்கை பின்னுக்குப் போயிருக்கிறது.
அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் தேனப்பனின் வாழ்க்கை பலரும் புருவத்தை
உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தது. எல்லாம் அவன்
தாயார் கும்பிட்ட தெய்வபலன். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று
அவர்கள் மனனம் செய்து அனுதினமும் பாடிய ‘ராஜேஷ்வரி கவசத்தின்’ மகிமை.
அதோடு தேனப்பனும், தன் தாயார் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடாமல் எந்தப்
பணியையும் செய்வதில்லை.
தன் தாயரின் நினைவாக, தாயாரின் ஜென்ம நட்சத்திரமான மக’ நட்சத்திரத்தன்று,
நீலாதயாட்சி திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ததோடு, பத்து ஏழைகளுக்கு
அன்னதானம் செய்தும் வந்தான்.
நீலாயதயாட்சியின் கருணையால், அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே
நாளில் நீங்கியது. அவனுடைய மகன் பள்ஸ் டூ தேர்வில், மாவட்டத்திலேயே
முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற, அவன் படித்த தனியார் பள்ளிக்கூட
நிரவாகம் மகிழ்ந்து, அவனுக்கு, பொறியியற் படிப்பிற்கு சீட் வாங்கிக்
கொடுத்ததோடு, அவனுடைய படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே
ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். திருவாரூரில் நிலம் நீச்சு,
நவீன அரிசியாலை என்று செல்வம் கொழித்துக் கொண்டிருந்த நகரத்தார்
ஒருவர், தேனப்பனை நிர்வாகப் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு,
நாகப்பட்டிணம் - வேளாங்கன்னி சாலையில், இரண்டு கோடி ரூபாய்
செலவில் மிகப் பெரிய ஒயிட் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைத்
துவக்கினார்.
அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலையும், இரண்டு மடங்கு
விரிவானது. தேனப்பனின் மகனும் படித்து முடித்து, இந்தியாவின் மிகப்
பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியிலமர்ந்தான்.
ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு. ஹுண்டாய்
சான்ட்ரோ கார் என்று தேனப்பனின் வாழ்க்கை அடையாளம் தெரியாமல்
மாறிவிட்டிருந்தது.
அதே நேரத்தில், தேனப்பனின் சகோதரர் வாழ்க்கை சிரம தசையில்
இருந்தது. திருமணமாகிச் சென்ற அவருடைய பெரிய மகள் திரும்பி
வந்து விட்டாள். சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு
நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் எனக்குத் திருமணம்
வேண்டாமென்று தகறாறு செய்து கொண்டிருக்கிறாள். அவர் வேலை
பார்த்த வங்கியில், தவறாக வழங்கப்பட்டு, வராமல் சிக்கலில் மாட்டிக்
கொண்டுவிட்ட பெரும் பணத்திற்காக, வங்கி நிர்வாகம், இவரைப் பணி
நீக்கம் செய்ததொடு, வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய
மனைவிக்கும் பலவிதமான உடற்கோளாறுகள். வைத்திய செலவில்,
பணம் திறந்துவிட்ட பைப் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கிறது.
**********************
அடுத்த நாள் சரஸ்வதி பூஜை. வழக்கம்போல ஆத்தாவின் தேக்குமரப்
பெட்டியடிப் பெட்டியை பூஜையில் வைத்துக் கும்பிட்டான் தேனப்பன்.
அது பழைய வீட்டில், ஆத்தாவின் அறையில், சுவற்று அலமாரியில்
முன்பு இருந்தது. இதுவரை அதைத் திறந்து ஒருமுறைகூடப் பாத்திராத
தேனப்பன், ஒரு குறுகுறுப்புடன் அதைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டான்.
சாவி கிடைக்கவில்லை.
ஸ்க்ரூ டிரைவர் ஒன்றைவைத்து, பூட்டை நெம்பித் திறந்துவிட்டான்.
உள்ளே இரண்டு ஓலைச் சுவடிகள் இருந்தன. ஐவரி எழுத்தாணி ஒன்று
இருந்தது. சிவப்பு பட்டுத் துணி ஒன்று இருந்தது. மாமப் பட்டு. அதையெல்லாம்
எடுத்துவைத்துவிட்டுப் பார்த்தபோது, கடைசியில் கனத்த கவர் ஒன்று இருந்தது.
அதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அத்துடன் முத்துமுத்தான
ஆத்தாவின் கையெழுத்தில் கடிதம் ஒன்றும் இருந்தது.
”அன்பு மகன் தேனப்பனுக்கு, மீனாட்சி எழுதிக்கொண்டது.இத்துடன் உள்ள பணத்தை என் அந்திமகாரியங்களுக்கு வைத்துக் கொள். ஊரில் உள்ள நம் வளவு வீட்டு அறையில், என்னுடைய தோதகத்தி பீரோவில் பவுன் காசுகள் உள்ளன. கீழ்தட்டுப் பலகைக்கு அடியில் உள்ள தடுப்புப் பகுதியில் உள்ளன. மொத்தம் 108 பவுன் காசுகள். எனக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள் கழித்து, என் தந்தையார் எனக்குக் கொடுத்தது. ஒரு அவசரத்திற்கு, அது உதவும் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அது உனக்குத்தான். நீ எடுத்துக்கொள். உன் விருப்பப்படி அதைப் பயன் படுத்திக்கொள்.வேணும்,ஸ்ரீசண்முகநாதன் துணை!”கடிதத்தை படித்த தேனப்பன் கண் கலங்கிவிட்டான். ஆத்தாவிற்குத்தான்
நம் மீது எத்தனை அன்பு! உடன் இருந்த முத்துலெட்சுமி, கடிதத்தை வாங்கிப்
படித்துவிட்டு இப்படிச் சொன்னாள்:
“அடி சக்கை! யோகம்தான் உங்களுக்கு!”
“என்னடி சொல்றே?” இது தேனப்பன்.
“108 பவுன்ல கெளரிசங்கம் ஒன்று செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
108 பவுனில் நகை போட்டுக்கொண்ட முதல் நகரத்தார் என்ற பெருமை
உங்களுக்குக் கிடைக்கட்டும்”
“இல்லை, இல்லை! அந்த 108 பவுனில் ஒரு கழுத்திரு செய்து, உன் கழுத்தில்
அணிவித்து அழகு பார்க்க வேண்டும்!”
“எனக்கு உள்ள அழகு போதும். புது அழகு எல்லாம் வேண்டாம்.”
”ஏன் வேண்டாம்? எங்கள் தாயாருக்கு நான் ஒத்தை மகனென்று நீதானே
சொல்லுவாய். நான் ஒத்தை மகனென்றால், நீதானே ஒத்தை மருமகள் தானே?
அதனால் நீ போட்டுக் கொள்வதுதான் நியாயம்! அதோடு நகைகள் என்றால்
பெண்களுக்குத்தான் என்பது எழுதப் படாத விதி. ஆண்களுக்கு வெறும்
வேஷ்டி சட்டை போதும்!”
“நியாயத்தை பற்றிப் பேசினால், அந்தப் பவுன் காசுகளில் பாதியை நீங்கள்
உங்கள் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டும்”
இந்த இடத்தில் சற்று திகைத்துவிட்ட தேனப்பன், மெல்லிய குரலில் கேட்டான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“ஒத்தை மகன் என்று முன்பு நான் சொன்னது செலவிற்குத்தான். வரவுக்கல்ல. பூர்வீகவரவு எப்போதும் பொதுவானதுதான். உங்கள் ஆத்தா வைத்துவிட்டுப் போனதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரும் உங்கள் ஆத்தாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். கூடப்பிறந்தவன் பங்கை எடுத்துக் கொண்டால், குடும்பம் விருத்தியாகாது என்று எங்கள் ஆயாவீட்டு அய்யா சொல்வார்கள். ஆகவே அவருடைய பங்கு நமக்கு வேண்டாம். கூப்பிட்டு உட்காரவைத்து, அவரிடம் கொடுத்துவிடுங்கள்.....”முத்து லெட்சுமி சொல்லச் சொல்ல, தேனப்பனின் கண்கள் பனித்து விட்டன.
50 கிலோ பளிக்குச்சிலை - நடமாடும் தாஜ்மஹால் என்று பெண்ணை வர்ணித்து ஒரு கவிஞன் பாட்டெழுதினானே, அதுபோல முத்து லெட்சுமி 60 கிலோ எடையுடன், மனதுடன், நடமாடும் தங்கச் சிலை. அவளைவிட உயர்ந்த தங்கம் எங்கே உள்ளது? அவளைவிட உயர்ந்ததாக தேனப்பனுக்கு வேறு என்ன கிடைத்து விடப் போகிறது? &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க வளமுடன்!