Short Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்
காரைக்குடியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்தச் சிற்றூர்.
இராமநாதன் செட்டியார் தன் மனைவி சீதை ஆச்சியுடன் அங்கே போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்து.
வெயில் சூடு பிடிக்கத் தொங்கியிருந்தது. காரை ஓட்டிக் கொண்டு வந்த அவர் வீட்டு டிரைவர் ஒரு புளிய மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார். செவர்லே ஸ்டேசன் வாகன் வண்டி. முன்பக்கம் மெட்டல் பாடி, பின்பக்கம் மரத்தினால் பாடி கட்டப்பட்டிருக்கும். ராசியான வண்டி என்பதற்காகச் செட்டியார் அதை விடாமல் வைத்திருந்தார்.
இராமனாதன் செட்டியாருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். இங்கே மட்டுமல்ல, மலேசியா, பினாங். கிள்ளான்ங், சிரம்பான் போன்ற இடங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் மனைவி சீதை ஆச்சியும் வரும்போது வெள்ளமாகக் கொண்டு வந்தார்கள். தட்டு, கிண்ணம், குவளை, தொன்னை என்று முழுவதும் வெள்ளியிலேயே செய்த டைனிங் செட் மட்டும் மொத்தம் 300 ஜோடிகள் வீட்டில் இருக்கிறதென்றால் மற்றதெல்லாம் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நூறு பவுனில் செய்த கெட்டிக் கழுத்திரு (திருமாங்கல்யம்) மற்றும் வைர அட்டிகைகள் (Diamond Necklace) மட்டும் தலா நான்கு உருப்படிக்கள் உள்ளன. மற்ற வைர நகைகள் போக உதிரி வைரங்கள் மட்டும் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆச்சியிடம் உள்ளது.
இருவருக்கும் ஒரேஒரு பெண்குழந்தை மட்டும்தான். அவளை நன்றாக வளர்த்து, உரிய பருவம் வந்தவுடன் தன் மைத்துனன் மகனுக்கே கட்டிவைத்து விட்டார் செட்டியார். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை. ஆண் வாரிசு இல்லை.
அந்தக் குறையைப் போக்குவதற்காகத்தான் இப்போது கிளம்பி வந்திருக்கிறார்.
கதை நடந்த காலம் 1948ம் ஆண்டு. பிரபலமான மகான்.. காந்தி மகான்... பாட்டு பட்டி தொட்டியயல்லாம் ஒலித்து மக்களைப் பரவசப் படுத்திக் கொண்டிருந்த காலம் அது.
வண்டியை விட்டு இறங்கிய செட்டியார் பார்த்தார். நான்கே எட்டு தூரத்தில் தான் லேனா என்னும் லெட்சுமணன் செட்டியாரின் வீடு இருந்தது.
பராமரிப்பின்றி முகப்புச்சுவர் சிதிலமடைந்து இருந்தது. முன்பு இரண்டொருமுறை வந்திருந்தாலும், ரெம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான் வருகிறார். லேனாதான் வரச் சொல்லியிருந்தார்.
தனது கடைக்குட்டிகள் இருவரில் ஒருவனை இவர் வீட்டிற்குச் சுவிகாரம் கொடுப்பதற்குச் சம்மதித்துப் பிள்ளை பார்க்க வரச் சொல்லியிருந்தார்.
”மானீ... நான் எட்டு மணிக்கே கிளம்பி விடுவேன். நான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் ஆச்சியிடம் செல்லியிருக்கிறேன். நீங்கள் பையனைப் பார்த்துவிட்டு வாருங்கள். மற்ற விபரங்களைக் காரைக்குடியில் மாவன்னா விட்டில் வைத்துப் பேசிக் கொள்eலாம்” என்றிருந்தார்.
இரண்டே நிமிடத்தில் சீதை ஆச்சி பின்தொடர லேனாவின் வீட்டிற்குள் நுழைந்தார் செட்டியார்.
அங்கே முகப்புத் திண்ணையில் சாய்ந்து படுத்திருந்த லேனாவின் சம்சாரம் சடாரென்று எழுந்து, வாய் நிறைய ‘’வாங்க ... வாங்க” என்று இவர்களை வரவேற்றார்கள்.
வருத்தமும், கவலையும் கூட்டாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது அந்த ஆச்சியின் முகத்தில்.
இருக்காதா பின்னே?
மூத்தவனை விடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பையன்களை ஏற்கனவே பிள்ளை விட்டாகிவிட்டது. இப்பொழுது கடைசி இருவரில் ஒருவனையும் விட்டுவிடுவதற்கு தன் கணவர் ஏற்பாடு செய்து வருவதில் ஆச்சிக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் போகிற இடத்திலாவது பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும் என்ற பெருநோக்கில்தான் கடைசியில் சம்மதித்தார். எல்லாம் அவர் வீட்டுச் செட்டியார் பிழைத்த பிழைப்பு. ஆடிய ஆட்டம்.
அந்த ஆச்சி சொன்னார். ‘’இரண்டு பேரும் கடைசிக் கட்டில்தான் இருக்கிறார்கள். பார்த்துவிட்டு வாருங்கள்.”
அங்கே அந்தச் சிறுவர்கள் இருவரும் பெரிய ஆட்டுக்கல் ஒன்றில் மாவு ஆட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல சிவந்த நிறத்தோடு களையாக இருந்தார்கள்.
பெரியவன் ஒல்லியாக இருந்தான். வயது பதினான்கு இருக்கும். சின்னவன் சற்றுக் குண்டாக இருந்தான். அவனுக்கு வயது பன்னிரெண்டு இருக்கும். இருவருமே சட்டையின்றி அரை டிராயர் அணிந்த நிலையில்தான் இருந்தார்கள்.
சின்னவன் உரலைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான். பெரியவன் தண்ணீர் தெளித்து மாவைக் குழிக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு கணம் ஆட்டுவதை நிறுத்திவிட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.
செட்டியாருக்கு இருவரையுமே பிடித்திருந்தது.
ஆச்சிக்கு யாரைப் பிடித்திருக்கிறது?
செட்டியார் மெல்லிய குரலில் கேட்டார், ‘’இஞ்சே... யாரைப் பிடித்திருக்கிறது?
ஆச்சி அதைவிட மெல்லிய குரலில் பதில் சொன்னார்.
”தள்ளுகிறவனையே கூட்டிக்கொள்வோம்!”
செட்டியார் மீண்டும் கேட்டார். ‘ஏன் அவனைப் பிடித்து இருக்கிறது?”
ஆச்சி சொன்னார். “ஆட்டுகிறவன் நம்மை ஆட்டி வைத்துவிடுவான். தள்ளுவதற்குத்தான் பொறுமை வேண்டும். தள்ளுகிறவன்தான் நம்மோடு இசைஞ்சு வருவான்!
ஆச்சியின் இந்தப் பதிலால் செட்டியார் அசந்து விட்டார். என்ன கெட்டிக்காரத்தனம் பாருங்கள்.
சொன்னபடியே சீதை ஆச்சி ஒரு நல்ல நாளில் தள்ளியவனைத்தான் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
(எனது, செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள் - இரண்டாம் தொகுப்பு நூலில் உள்ள 20 கதைகளில் இதுவும் ஒன்று. உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்)
வார இறுதிப்பதிவு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!