Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?’பணம் எதை எதைக் கொடுக்கும்?’ என்று கேட்டால் சாமானியனின் பதில், அதாவது சராசரி மனிதனின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
”அம்மாவைத்தவிர, பெற்ற தாயைத் தவிர, விலைமதிப்பில்லாத தாயன்பைத் தவிர எல்லாவற்றையும் கொடுக்கும்” என்பான்
உண்மையான பதில் அதுவல்ல!
’பணம் எதை எதைக் கொடுக்காது?’ என்று கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.
பணம் நல்ல, அன்பான மனைவியைக் கொடுக்குமா? அல்லது நல்ல, புரிந்து நடக்கக்கூடிய கணவனைக் கொடுக்குமா? கொடுக்காது. தவறிக் கிடைத்தால் அது பணத்தால் வந்ததாக இருக்காது. ஜாதகப் பலனால் வந்ததாக மட்டுமே இருக்கும்!
இரண்டாம் வீடும், ஏழாம் வீடும், அதன் அதிபதிகளும், காரகர்களும் நன்றாக இருந்தால் மட்டுமே அது கிடைக்கும்!
பணம் நல்ல பிள்ளைகளைக் கொடுக்குமா? நல்ல பெயரை வாங்கிக்கொடுக்ககூடிய, பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடிய, பெற்றோரை மதித்து நடக்கக்கூடிய பிள்ளைகளைக் கொடுக்குமா? கொடுக்காது. ஒருவனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு அம்சமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
பணத்தால் மட்டுமே அது நடக்காது.
பணம் கல்வியைக் கொடுக்குமா? ப்ளஸ் டூவில் 98% கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பைக் கொடுக்குமா?
பணம் அறிவைக்கொடுக்குமா?
பணம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்குமா?
பணம் நகைச்சுவை உணர்வை, எப்போதும் கலகலப்பாக இருக்கும் உணர்வைக் கொடுக்குமா?
பணம் நம் மீது பாசத்தோடு, பரிவோடு இருக்கும் உறவினர்களைக்கொடுக்குமா?
பணம் நல்ல தொழிலை, நமக்கு வசப்படும் தொழிலைக் கொடுக்குமா?
பணம் விசுவாசமுள்ள நல்ல வேலைக்காரர்களைக் கொடுக்குமா?
பணம் அடுத்தவரை சரிபண்ணிக்கொண்டு செல்லும் நல்ல குணத்தைக் கொடுக்குமா?
பணம் முழு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
பணம் எப்போதும் நிம்மதியாக இருக்கும் நிலையைக் கொடுக்குமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்
மேலே குறிபிட்டுள்ள எதையும் பணம் கொடுக்காது!
---------------------------------------------------------------------
இன்றைய பொருள் சார்ந்த உலகில் அநேக மக்கள், பொருள் இருந்தால், அதாவது பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
ஆனால் உலக அனுபவம் அதை வேறு விதமாகச் சொல்கிறது. மாற்றிச் சொல்கிறது.
மகான்கள் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள், பணத்தைத் தேடி ஓடாதே என்று சொல்கிறார்கள். உனது சக்தி, முயற்சி, செயல், மற்றும் நேரம் முழுவதையும் பணத்தைத் தேடுவதில் செலவழிக்காதே என்று சொல்கிறார்கள்.
மற்ற எல்லா செயல்களையும்விட பணத்தேடல், பணத்தைச் சம்பாதிப்பதற்கான அல்லது பணத்தைக் கைப்பற்றுவதற்கான வழிமுறைகள் உங்களை அதிகமான அதர்மங்களை, பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது, செய்ய வைக்கிறது என்கிறார்கள்.
உங்களுடைய மென்மையான/மேன்மையான குணங்களையும், நல்ல கொள்கைகளையும் அது அழித்துவிடக்கூடும்.
எத்தனை சொத்துச் சண்டைகள்? குவித்து வைத்த அல்லது இம்மி இம்மியாகச் சேர்த்துவைத்த சொத்துக்களுக்காக எத்தனை விதமான சண்டை சச்சரவுகள். எத்தனை விரோதங்கள்? எத்தனை மனப் போராட்டங்கள்?
அப்பன் மகனுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள், அல்லது உடன் பிறந்த சகோதரிகளுடன், சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்திற்குள் எத்தனை சண்டைகள்? எத்தனை சதிகள்? வெட்டு, குத்துக்கள்?
கட்டித்தழுவ வேண்டிய உறவுகள் எல்லாம் வெட்டி வீசப்படும் நிலைமை. கொட்டி கவிழ்க்கப்படும் நிலைமை!
அனுதினமும் செய்திதாள்களில் எத்தனை செய்திகள் வருகின்றன!
வயல் வரப்பை ஒரு அடி அகலப்படுத்தியதற்காக அண்ணனின் கையை வெட்டிய தம்பியை நாம் பார்க்கவில்லையா?
சொத்துத் தகறாரில் அப்பனைப் போட்டுத் தள்ளிய மகனைப் பற்றி நாம் கேள்விப்படவில்லையா?
பணத்திற்காக உயிர் நண்பனுக்குத் துரோகம் செய்யும் ஆசாமிகளை நாம் பார்க்கவில்லையா?
பணத்தால் சந்தோஷம் என்ற குழந்தை மட்டும் உருவாகாது. துன்பம் என்ற தீராத கஷ்டம் என்ற பிணியுள்ள, முடமான குழந்தையும் பிறக்கும். அதை மனதில் வையுங்கள்.
மற்ற செயல்களால், மற்ற விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானதே என்று ஒரு ஆய்வு சொல்கின்றது.
நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவில் கிடைக்கின்ற பணமே நமக்குப் போதுமானதாகும். அதுவே நமக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த அளவைத் தாண்டிக் கிடைக்கின்ற பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது!
ஓரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதிகமான பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்!அதீதமான பணம் கிடைக்கும்போது, அதைப் பாதுகாப்பது, தகுந்த இடத்தில் அதை முதலீடு செய்வது போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும்.
சாதாரண மக்கள் தங்கள் தேவைக்கு உரிய பணம் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை.
பணம் இருப்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாதவனும் மகிழ்ச்சியாக இல்லை!மொத்தத்தில் இரண்டுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் ஒருவகை. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இன்னொருவகை!
தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும் சொல்கின்றன!
அதை உணருங்கள். அது மட்டும் போதும், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!
-----------------------------------------
A successful person is one who can lay a firm foundation with the bricks that others throw at him or her. - David Brinkleyபிருஹத் பாரசாரா ஹோரா என்னும் பழமையான ஜோதிட நூல் என்ன சொல்கிறது?
1. பதினொன்றாம் வீடு மிகவும் நன்றாக இருந்தால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
(an auspicious 11th house makes a person happy at all times)2. அதேபோல 11ஆம் வீட்டுடன் 9ஆம் வீடும் நன்றாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியுடையதாக அமையும். மனைவி, மக்கள், வாழ்க்கை என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமுமே சூப்பராக இருக்கும். 9ஆம் வீடு என்பது 11ஆம் வீட்டிற்குப் பதினொன்றாம் வீடாகும். அதையும் மனதில் வையுங்கள்!
9th house (11th from 11th house).இது மேலநிலை வகுப்புப் பாடம் (http://classroom2013.com) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!