மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.20

தில்லானா மோகனாம்பாள் என்னும் மகத்தான படம் உருவான கதை!


தில்லானா மோகனாம்பாள் என்னும் மகத்தான படம் உருவான கதை!

சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் ..

1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள்.

இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள்.

இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.

கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ரங்கசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா.

சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார்.

வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும் தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம்.

சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.

தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள்.

எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை.

தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார். ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார்
                               
வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.

உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.

ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது..

கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.

அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.

வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.

சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார்.

காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.

நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.

அதேபோல மோகனாவுடன் மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..

இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.

வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.

சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.

1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டி என்ற அளவுக்கு இருந்தது.

தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையா நாயுடு,

நாதஸ்வர இசைக்காக அவர் மனதில் வைத்திருருந்த நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.

நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கதெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா?

இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர்.

நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன்

விளக்கிக்காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.

தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள் வாங்கிக் கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.

நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,

தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’ பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம். அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகி உருகி விசாரிப்பது தெரிய வரும்.

திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள்.

அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு

படத்தில் ஆழ்ந்துபார்த்தால், நலந்தானா பாடலில் நாதஸ்வரம், நாட்டியம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு காதலுக்காக உருகும் காதலர்களின் நடிப்பே அதிகம் தெரியவரும்.

நாட்டியமாடியபடியே ’’என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நான் அறியேன்’’ என்று பாடி ‘’புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண்பட்ட பாட்டை யார் அறிவார்?’’ என்று மார்பில் லேசா அடித்துக்கொண்டே கைகளை நெற்றியில் கொண்டுபோய்வைத்து தலையை கவிழ்த்து துயரத்தை பத்மினி வெளிப்படுத்துவார்.

அதைக்காணும் தவில்வித்வான் டிஎஸ் பாலையா, பக்கத்தில் வாசிக்கும் சிவாஜியின் தொடையை லேசாக தட்டி, ‘’எப்படிப்பட்ட பாசக்கார பெண் உனக்கு காதலியா கிடைச்சு உருகு உருகுன்னு உருகராய்யா. உண்மையிலேயே நீ கொடுத்துவச்சவன்யா’’ என்று சொல்லாமல் சொல்வார்.

இணைப்பில் உள்ள யூடியூப் காட்சியை பார்த்தீர்களானால் அந்த பொக்கிஷமான காட்சி உங்களுக்கு புரியவரும் என்ன மாதிரியான கலைஞர்களெல்லாம் நம் தமிழ் சினிமாவை ஆண்டுவிட்டு போயிருப்பார்கள் என்ற வியப்பே மேலோங்கும்.

தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது..

தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.

அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு.பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.

சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும் பாலையாவுக்காக தவில் வாசித்தவர்கள் இருவர்.

ஒருவர், திருவிடைமருதூர் வெங்கடேசன்.. இன்னொருவர் பாலையாவுக்கு பயிற்சி அளித்த, மதுரை டி. சீனுவாசன் என்கிற சீனா குட்டி அவர்கள்.

திருவிளையாடல் படத்தில், பாட்டும் நானே, பாவமும் நானே.. சிவாஜிக்காக தவிலில் கைவிளையாடிது இவருடையதுதான். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டின் ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தும் அந்த தவில் பிட்டுகூட சீனு குட்டி அவர்களின் கைவண்ணமே..

இத்தகைய திறமைமிக்க தவில் வித்வான்களின் விரல்கள் பேசிய பாஷையை அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா ஒரு அருவிபோல் பாயவிட்டார்.

அதனால்தான்,தில்லானாவில் ஆரம்ப காட்சியில் வரும் அந்த ஐந்து நிமிட நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக பாலையாவின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனார்கள்.

தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான்.

நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.

ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?

அதிலும் மோகனாவின் தாயாராக வடிவாம்பாள் கேரக்டரில் வரும் சிகே சரஸ்வதியும் நாகேஷும் ஒன்றாக தோன்றும் காட்சிகளெல்லாம் அவ்வளவு ஜாக்கிரதையாக, நேர்த்தியாக இருக்கும்படி அமைத்திருந்தார் இயக்குநர் ஏபிஎன் அவர்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் மோகனாவை வளைக்க துடிக்கும் மிட்டாதாரர் நாகலிங்கமான ஈ.ஆர் சகாதேவன்,, சிங்கபுரம் மைனரான பாலாஜி, மதன்பூர் மகாராஜாவான நம்பியார் ஆகிய மூவரிடமும் மோகனாவை கொண்டுசொல்ல வைத்தி போடும் திட்டங்களும் அதற்கு தோதாக மோகனாவின் தாயை ஆடம்பர வாழ்க்கை ஆசைகாட்டி எல்லாவற்றிற்கும் உடன்பட வைப்பதற்காக பேசும் வசனங்களும்..

‘’ஐயோ சிங்கபுரம் மைனர் நிக்கறாரே..என் கால் வலிக்குதே வைத்தி’’… என்று சிகே. சரஸ்வதி சொல்வதும், ‘’பாருங்க. நீங்க நிக்கறீங்க..அவா கால் வலிக்குதுன்றா’’ என்று நாகேஷ் நக்கலடிப்பதும் எத்தனையெத்தனை காட்சிகள்.

மற்ற கேரக்டர்களிடம் டாமினேட் எப்படி செய்யவேண்டும், மாட்டிக்கொண்டால் வெட்கமேபடாமல் தரைரேஞ்சக்கு எப்படி இறங்கிவிடவேண்டும் என்பதற்கெல்லாம் இந்த படத்தின் வைத்தி கேரக்டர்தான் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி,

ஏண்டாப்பா என்று ஷண்முகசுந்தரத்தை ஒருமையில் அழைத்துவிட்டு சிவாஜி முறைத்ததும் பின்வாங்குவதும், முன்பின் அறிமுகமே இல்லாமல் வடிவாம்பாளை முதன் முறையாக சந்திக்கும்போதே சிங்கபுரம் மைனரின் செல்வாக்கை சொல்லி அவரின் தோளைத்தொட்டு பேசும் அளவுக்குபோவதும் எவ்வளவு ஸ்பீடான மூவ்மெண்ட்ஸ் நாகேஷிடம்..

நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார்.

ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார்.

ஏபி நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா..

தில்லானா நாயகன் சண்முக சுந்தரம் என்றதும் இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாகவேண்டும், படத்தில் சிவாஜிக்கு உற்ற தம்பியாக வந்து எப்போதும் பக்கத்தில் அமர்ந்து தங்கரத்தினமாய் நாதஸ்வரம் வாசிக்கும் நடிகர் ஏவிஎம் ராஜனின் சொந்தப்பெயர்தான் சண்முகசுந்தரம்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்கள் அதில் உண்டு. மதன்பூர் மகாராஜா எம்என் நம்பியாரின் மகாராணியாக வரும் அம்பிகா, 50களிலும் 60களிலும் மலையாள உலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகி. மலையாளத்தின் முதல் வண்ணப்பட நாயகி. நடிகை பத்மினி, ராகினி, லலிதாவின் தாயாரான சரஸ்வதியை உடன்பிறந்த சகோதரியின் மகள்தான் இந்த அம்பிகா. இயக்குநர் பீம்சிங்கை மணந்துகொண்ட நடிகை சுகுமாரிக்கும் சகோதரி.

தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை படாதபாடு படுத்தும் அந்த பாட்டிதான் சுகுமாரி என்று சொன்னால்தான் இப்போதைய தலைமுறைக் தெரியும். பாசமலர் படத்தில் வாராயோ என் தோழி வாராயோ பாடலில் நடனமாடி அதன் பின் புகழ்பெற்ற சுகுமாரி என்றால் தெரியாது.

சுகுமாரியும் அம்பிகாவும் ஒரு மலையாள படத்தில் போட்டிபோட்டுக்கொண்டு ஆடிய பாம்பு நடனம் அந்தக்கால கேரள ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பை பெற்ற ஒன்று என்பார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கும். படத்தின் உயிர்நாடியான கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியான நடிகை எம்எஸ் சுந்தரிபாய்க்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் விட்டார் ஏபிஎன் என்பதுதான் புரியவில்லை..வில்லியாகவும் குணச்சித்திரமாகவும் அடித்து நொறுக்குவதில் கில்லாடி எம்எஸ் சுந்தரிபாய்

சிவாஜி,பாலையா, டி.ஆர் ராமச்சந்திரன், நாகையா சாரங்கபாணி, ஏவிஎம்ராஜன், தங்கவேலு, பாலாஜி, நாகேஷ் ஏகப்பட்டபேர் கதாநாயகன் அந்தஸ்த்து கொண்டவர்கள். அத்தனைபேருக்கும் மனசு கோணாதபடி முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால் ஏபி நாகராஜன் என்பவர் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்திருக்கவேண்டும்.,

தில்லானாவில் விடுபட்டபோன சுந்தரிபாய், எஸ்வி,ரங்காராவ், விகே.ராமசாமி எம்வி ராஜம்மா, சோ போன்றோருக்காகவே அதன் இரண்டாவது பார்ட்டை ஏபி நாகராஜன் உருவாக்கியிருக்கக்கூடாதா என்ற ஆசை அடிக்கடி வந்துவிட்டு போகிறது..
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.20

நெல்லிமரத்தின் சிறப்பு!

நெல்லிமரத்தின் சிறப்பு!

நெல்லி மரத்துக்கும் செல்வத்துக்கும் என்ன சம்மந்தம்....?

உலத்திலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனால் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம். குபேரன் மாதிரி பணக்காரணாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்தபோது என்ன.செய்தார் தெரியுமா?

போர் ஏற்ப்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழந்து விட்டார் குபேரன்.செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்.

"நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.

செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார்.

நெல்லி மரங்களின் பராமரிப்பிலும் குறை வைக்கவில்லை. ஏனெனில் சிவபெருமானின் ஆணை ஆயிற்றே

நாள்கள் கடந்து விட்டன.நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன.காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.

குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிற்று.சூழ்ச்சி செய்து செல்வம் பறித்த வளங்கள் எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.

குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.

"நெல்லி மரங்கள் வளர்ந்ததா?இழந்த செல்வம் கிடைத்ததா"? என்றார் சிவபெருமான்.

"நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.

"நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்று சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை சொல்லலானார்

மேலும்"ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள்" என்றார்.

மகாலட்சுமியின் சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து தினசரி நீர் ஊற்றி லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.20

சரணாகதி அடைந்த சிட்டுக்குருவி!

சரணாகதி அடைந்த சிட்டுக்குருவி! 

சரணாகதி ...இறைவா.....நீயே..... கதி!

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக்  கொண்டிருந்தனர்.

ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

“ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

“ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!

*"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”*- இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.

ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

 ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!

 மனிதன் தானே!  “நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு  புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத்
தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார்  ஸ்ரீ கிருஷ்ணர்!

 “பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

போர் நடந்து,  பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்!

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்.

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர்
சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள்
தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“ பகவானே! என்னை மன்னித்து விடு!

உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

“பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

*"சரணாகதி நீயேகதி"*  -- என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு 

*நம்புவோம் நிம்மதியாக வாழ்வோம்*

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.20

உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் திருநாள்தான் இனி!!!


உயிரோடு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் திருநாள்தான் இனி!!!

வசதியில்லா வீட்டுப் பெண்
வயசுக்கு வந்ததுபோல்
சினுங்காமல்  வந்துவிட்டாள்
சித்திரை திருமகள் 💥

மனிதன் செய்த
செயற்கை தவறுகளுக்கு
தன்னைத் தானே
சரிசெய்து கொள்கிறது இயற்கை🧚♂

அசுத்தம் கொட்ட
மனிதர்கள் இல்லையே
அழுக்கு தேய்த்து
குளித்து கொண்டது கங்கைநதி🏊♂

கூட்டம் போட
கட்சிகள் இல்லையே
கோடம்பாக்கத்தில்
ஊர்வலம் போயின
குயில்கள்😍

கூச்சல் போடும்
வாகனம் இல்லையே
கோயம்பேட்டில்
டூயட் பாடின குருவிகள்💗

பகலெல்லாம் பிள்ளைகளை
சிரிக்க வைக்க
வடிவேலு😁

இரவெல்லாம் இதயங்களை
உறங்க வைக்க
இளையராஜா🎸

வீட்டுக்குள்ளேயே
வாழ்வது ஒன்றும்
அத்தனை கடினமில்லை

சூழலும் பம்பரத்தை
கையில் ஏந்தி காட்டி,
கோலி குண்டுகளை
குறி வைத்து அடித்து காட்டி,
காரம் தூக்கலாக
கறி குழம்பு செய்து காட்டி

'அப்பா சூப்பர் மா'
என குழந்தையிடம்
வாங்கிய பட்டம்
1000 apraisalகளுக்கு சமம்🏆

வீடு கிடக்கட்டும்
நாடு என்ன செய்கிறது?

செய்தி சேனல்களை
பலமுறை பார்த்துவிட்டேன்.
கொலை கொள்ளை கற்பழிப்பு
எதுவும் இல்லை

சட்டம் தராத பயத்தை
சாவு தானே தருகிறது🌚

தலைக்கவசம்
அணியாத மூடர்களை
முகக் கவசம் அணிய வைத்த முற்போக்குவாதி
இந்த Corona✳

இளசுகள் மூளையை கழுவி
சண்டைகள் மூட்டும்
சாதி சங்கமுட்டாள்களின்
கைகளை முதலில் கழுவ சொன்ன மருத்துவன்
இந்த Corona👨🔬

இந்த தேசத்தில்
இரண்டு மக்கள்தான்.

அடுத்தவேளை
சாப்பாட்டுக்கு
எதை செய்யலாம்?

அடுத்தவேளை
சாப்பாடு இல்லையே
என்ன செய்யலாம்?

பால் கொண்டு Dolgona காபி
எப்படி செய்வது?

பாலுக்கு அழும் குழந்தைக்கு
சமாதானம் எப்படி செய்வது?

இருவருக்கும் சேர்த்தே
பிறந்துள்ளது சித்திரை திருநாள்😎

இந்த நன்னாளில்
கோயில்கள்
மூடிவிட்டால்
என்ன???

தெய்வங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
மருத்துவமனையில்👨⚕

சர்ச்சுகள்
மூடிவிட்டால்
என்ன???

ஒவ்வொரு தெருவையும்
காத்து நிற்கிறார் கர்த்தர்
காக்கிச் சட்டையில்⛪

பள்ளிவாசல்கள்
மூடிவிட்டால்
என்ன???

மூடப்படாத மளிகை கடையின்
ஒவ்வொரு அரிசியிலும்
ஏழைகளின் பெயரை எழுதி வைத்துள்ளான்
எல்லாம் வல்ல இறைவன்🕋

நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

மனித இனமே
நினைவு சின்னங்களில்
மட்டும்
இல்லை கடவுள்.

குப்பை அள்ளும் கரங்களில்,
தண்ணீர் கேன்போடும் வாகனங்களில்,
விதைப்பை நிறுத்தாத
விவசாயியின் வியர்வையில்,
விலையேற்றம் செய்யாத
வியாபாரி நேர்மையில்,
குழந்தைகள் கொஞ்சும்
மொட்டை மாடியில்,
நலம் விசாரிக்கும்
நண்பனின் குரலில்❤

எங்கெல்லாம் நம்பிக்கை வேர் உள்ளதோ அங்கெல்லாம் ஆண்டவனின் பேர் உள்ளது.

இன்றோ நாளையோ
நோய்க்கு மருந்து வரும்
ஊரடங்கு முடிந்துவிடும்.

வீட்டில் இருந்து
விடுதலை அடையும் திருநாளில்
என்ன செய்வேன் நான்?

மால்களுக்கு ஓடமாட்டேன்
மந்தையாக மாற மாட்டேன்
ஆழமாய் தினம் மூச்சு எடுப்பேன்
அன்னையிடம் பேச்சுக் கொடுப்பேன்🤰

அன்றாட சுமைகளில்
மனைவிக்கு தோள் கொடுப்பேன்
மனிதகுலம் சார்பாக
மருத்துவர்களுக்கு கை கொடுப்பேன்🥰

சில்லறைகள் மட்டுமல்ல
சிரிப்புகளும் சேகரிப்பேன்
தொல்லைகள் தந்தாலும்
பிள்ளைகளை
காதலிப்பேன்👶

புத்தாண்டோ
பிறந்தநாளோ தேவையில்லை
உயிரோடு வாழ்கின்ற
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுவேன்🥳

வாகனத்தில் செல்லும்போது
வீதியிலே சாமி கண்டால்
கையெடுத்து வணங்குதல் போல்

காவிரி வைகை தாமிரபரணி
நெடுஞ்சாலை நெடுக
நிரம்பிய இயற்கையை
கையெடுத்து
கும்பிடுவேன்🗻

கோடையிலும் கொஞ்சமாக
கொட்டிபோன மழையின்பின்
கையளவு மண் எடுத்து
கன்னத்தில் பூசிக் கொண்டு
கண்ணீரில் சிரித்தபடி
உரக்கச் சொல்வேன்
உலகிற்கு

"நண்பா.. 
வாழ நினைத்தால் வாழலாம்.
வழியா இல்லை பூமியில்?"
============================================
படித்ததில் பிடித்தது...
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.4.20

Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!


Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!

காதல் திருமணம் தெரியும்! அதென்ன கட்டுப்பட்ட திருமணம்?

Arranged Marriageஐ எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றோ அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் என்றோ சொல்லலாம்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு
யுவதியோ செய்து கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக்
கட்டுப்பட்ட திருமணம் என்று சொல்லலாம் இல்லையா?

அதுதான் கட்டுப்பட்ட திருமணம்!

எது நல்லது?

இரண்டுமே நல்லதுதான். தம்பதிகள் நல்லவிதமாக இணைந்து மன
ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரி!

இப்படிப் பொதுவாகச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - குறிப்பிட்டுச்
சொல்லுங்கள் எது நல்லது? உங்கள் கருத்துப்படி எது நல்லது?

என் அனுபவப்படி எது நல்லது என்பதில் ஒரு கருத்து உள்ளது. என்
ஆசானும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதைப் பதிவின் நடுவில் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் வறுத்தல் அல்லது பொரித்தல், காரம், உப்பு,
மசாலா பொடிகள் சேர்க்கும் வேலைகள் உள்ளது. அது முதலில். அப்போதுதானே சுவாமி பதிவு சுவையாக இருக்கும்?

இந்த ஜோதிடத் தொடரை ஆரம்பித்து 150 மாதங்கள் ஆகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் எனக்கு வந்த, வந்துகொண்டிருக்கின்ற மின்னஞ்சல்களில் 25 சதவிகிதம் தங்களுடைய திருமணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு வந்தவைதான் அல்லது வருபவை.

ஆண் வாசகர்களிடம் இருந்தும் வந்துள்ளன! கணிசமான அளவு
பெண் வாசகிகளிடம் இருந்தும் வந்துள்ளன.

உதாரணத்திற்கு சென்றவாரம் ஒரு அன்பரிடம் இருந்து வந்ததைக் கொடுத்துள்ளேன் பாருங்கள்:

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா? உங்களுக்கு நேரமில்லை என்று சொல்லாமல், எனக்காக - உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும்
ஒரு ஜீவனுக்காக, தயவு செய்து என் ஜாதகத்தைப் பரிசீலனை செய்து
பதில் எழுத வேண்டுகிறேன்."

நான் உடனே பதில் எழுதிக் கேட்டேன்: "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

இதற்கு மின்னல் வேகத்தில் பதில் வந்தது." ஆமாம் ஐயா! அவளும்
என்னைக் காதலிக்கிறாள்!"

இதற்கு என்ன எழுதுவது?

நான் எழுதிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்:

"அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து
விட்டாள் அல்லது தன்னுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து
விட்டாள் என்னும் நிலை எவ்வளவு உன்னதமானது? எவ்வளவு
உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல. அவளைத்
திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே
பெரிய காரியம். அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது. மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான் காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.

இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக்
கேட்டு வாங்கிப் பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?

சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில் முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!

"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'
என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ் மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.
காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!
ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண
வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான். கட்டுப்பட்ட
திருமணம் என்றால் அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்?
எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக்
காதல் தேடி வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட
திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது? எது
கெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.

வம்பு, வாதம், பிரதிவாதம், சண்டை இவைகள் தான் மிஞ்சும். அவரவர்க்கு அவரவர் செய்வதுதான் நியாயம். அந்த நியாயத்தில் உண்மையெல்லாம் ஓரங்கட்டப் பட்டுவிடும்.

அதனால் என் கருத்திற்கு இங்கே இடமில்லை. என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கருத்துத்தான் என் கருத்து. அதை அடுத்து
வரும் வரிகளில் கொடுத்திருக்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள். கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

அவர் எழுதிய 4 வரிக் கவிதை:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்"
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய
அவருக்குத் தெரியாத காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது
ஒரு முகம்தான் பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும். அதுபோல அவனுடைய
குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண் நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத் தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ
மணம் முடிப்பதால். காதல் திருமணங்களைவிட கட்டுப்பட்ட
திருமணங்கள் பாதுகாப்பானது. அதனால்தான் கவியரசர்
சொன்னார். பெற்றோர்கள் பார்ப்பதால் என்ன பெருமையோ;
அவர்கள் மற்றதையும் பார்ப்பதால் வரும் நன்மையே என்றார்

வீடாகட்டும், வேலையாகட்டும், திருமண வாழ்க்கையாகட்டும்,
பாதுகாப்பும், சுதந்திரத் தன்மையும் முக்கியமில்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதை முன் பதிவில் எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே எடுத்து எழுதினால், பதிவு, அனுமார் வால் போல நீண்டு விடும். ஆகவே எழுத வில்லை. விருப்பமுள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இன்றையப் பாடத்திற்கு வருகிறேன்.

1.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.
ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.
குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.
அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.
அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.
இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10
செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12.
1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13.
7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17.
எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18.
திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19.
பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20.
இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4.
சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.

Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.20

இரட்டை எழுத்து மனிதர்!


இரட்டை எழுத்து மனிதர்!

விசு.

சோ என்ற ஒற்றை எழுத்து மனிதரைப் போல விசு என்ற இந்த இரட்டை எழுத்து மனிதரையும் எனக்குப் பிடிக்கும். எழுபதுகளின் பிற்பகுதிகளில் இவரது நாடகங்கள் சிலவற்றைப் பார்த்த பொழுது விசு என்ற பிரமாண்ட கலைஞன் அதில் ஒளிந்து இருப்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால்  கே.பி. என்னும்துரோணருக்கு தெரிந்தது. பட்டைத் தீட்டப்பட வேண்டிய கல் இது. வைரமாய் ஜொலிக்கும் என்று.  விசுவின் நாடகத்தினைப் பட்டிணப் பிரவேசமாக்கினார். அதில் விசுவின் சினிமா பிரவேசம் வசன கர்த்தாவாக தொடங்கியது.

பட்டிணப் பிரவேசத்துக்குப் பின் ரஜினிகாந்த் நடித்த சதுரங்கம் , தில்லு முல்லு நெற்றிக்கண்.  ( K.B. தயாரிப்பு இயக்கம் ) முக்தா ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அவன் அவள் அது , கீழ்வானம் சிவக்கும் ( நடிகர் திலகம் சரிதா ) படங்களுக்கு வசனகர்த்தாவாக திரைக்கு பின்னால் பயணித்தார்.

அப்பொழுதுதான் குடும்பம் ஒரு கதம்பம் படம் வெளி வந்தது. பாலச்சந்தரின் சொந்தப் படம். எஸ்.பி.எம் டைரக்ஷன். எஸ்.வி . சேகர், சுஹாசினி , பிரதாப் போன்ற மிகை நடிப்பு இல்லாத நட்சத்திரங்கள் நடித்த குடும்பப் படம் என்றுதான் குடும்பம் ஒரு கதம்பம் படத்தைப் பார்க்கப் போனேன். என் பட்டியலில் இருந்த அத்தனை பேர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு என் நினைவில் நின்றவர் விசு மட்டுமே. அவரது வசனங்கள் மட்டுமே.

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியகார டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா அவர் எந்த ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டர் கிட்ட தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பான் என்ற வசனம் யாராவது ஏடாகூடமாகப் பேசினாலோ தெளிவில்லாமல் பேசினாலோ தேவை இல்லாமல் குழப்பினாலோ விசு மாதிரி பேசாதே என்று சொல்லும்படி ஒரு டிரெண்ட் செட்டானது. இந்த நீதி மன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது என்று ஆரம்பிக்கும் பராசக்தி வசனத்தைப் போல, நீர்தான் ஜாக்சன் துரை என்பதோ என்ற வீர பாண்டிய கட்ட பொம்மன் வசனத்தைப் போல விசுவின் வசனம் புகழ் பெற்றது. பொறுப்பே இல்லாத உபயோகமற்ற ஸ்ரீனிவாச ராகவனாக அறிமுகம் ஆன அவர் மற்றவர்களை useless fellow என்று குறிப்பிடும் மாடுலேஷன் இவர் ரேஞ் வேறு என்று புரிய வைத்தது.

எனக்கே இது விளங்கிய பொழுது பாலச்சந்தருக்கு விளங்காமலா இருக்கும் ? விசு என்னும் நாடக நடிகரை சினிமா நடிகராக , கதை வசன கர்த்தாவாக இயக்குனராக என்று அவரது அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தார் மணல் கயிறு என்னும் தனது தயாரிப்பில் .ஏற்கனவே அவரது தயாரிப்பில் லக்ஷ்மி இயக்கத்தில் மழலைப்பட்டாளம் படத்துக்கு வசனம் எழுதிய காரணத்தல் பாலச்சந்தர் மணல்கயிற்றினை இவரை தீரிக்க விட்டார்.  மன்னிக்கவும் இவரை இயக்கவிட்டார். உத்தரமேளூர் நாரதர் நாயுடு எட்டு கண்டிஷன் கிட்டுமணிக்கு கல்யாணம் செய்து வைத்து கலகலப்பாக்கினார். ராஜாமணி , சூர்யகோஷ் , கிஷ்மு இவர்கள் பக்க வாத்தியத்துடன் விசுவின் சினிமா கச்சேரி களைகட்டத் தொடங்கியது. ஆனாலும் இவரது  தனியாவர்த்தனத்தை மிகச்சரியான அளவில் இடம் பெறச்செய்தார். விசு என்னும் புயல் கோலிவுட்டை கலக்க தொடங்கியது.

விசுவின் குருவிற்கு எப்படி இருகோடுகளுக்குப்  பின்னர் ஒரு சறுக்கல் பத்தாம் பசலியில் வந்ததோ அப்படியே இவருடய அடுத்த படமான கண்மணிப் பூங்கா தோல்வியடைந்தது. ஆனால் விசு கலங்கவில்ல. அவர் சுதாரித்துக் கொள்ள சில மாதங்கள் தேவைப்பட மீண்டும் முக்தா ஸ்ரீனிவாசன் சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். ( கமலுடன் இவர் பணியாற்றிய ஒரே படம் இது ) புதுக்கவிதை , நல்லவனுக்கு நல்லவன் , மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் ரஜினிகாந்த்துடன் வசனகர்த்தாவாக பயணித்தார். இந்த காலகட்டத்தில் இவர் தன் பலம் குடும்ப படங்கள் என்பதை உணர்ந்து திருமதி ஒரு வெகுமதி, நாணயம் இல்லாத நாணயம்  , பெண்மணி அவள் கண்மணி என்று பல படங்களில் ஜெயந்தி, கே.ஆர். விஜயா போன்றவர்களோடு ஈடு கொடுத்து நடித்து எழுதி இயக்கினார். விசு ஒரு வெற்றிகரமான இயக்குனராக காலை ஊன்றிக்  கொண்டார்.அதை உணர  இவர் இயக்கிய சிதம்பர ரகசியம், ராஜ நீதி போன்ற கிரைம் படங்களின் தோல்வி உதவியது.

ஏ.வி. எம் மோடு ரஜினிகாந்த் படங்கள் மூலமாக ஏற்பட்ட தொடர்பு இவரை சம்சாரம் ஒரு மின்சாரம் இயக்கவைத்தது. இவரது உறவுக்கு கை கொடுப்போம் என்ற நாடகத்தை ஒய்.ஜி .மகேந்திரன் நடிப்பில் கே.எஸ்.ஜி . இயக்கி பெரும் தோல்வியை அடைந்த படம். அதனையே மீண்டும் தயாரிக்கும் விருப்பத்தை இயக்கினார். ஏவிஎம் சரவணன் சம்மதிக்க சம்சாரம் ஒரு மின்சாரம் உருவானது.

லக்ஷ்மி, மனோரமா, ரகுவரன், சந்திர சேகர், டெல்லி கணேஷ்,கமலா காமேஷ் இவர்களுடன் அம்மையப்பனாக விசு நடித்து இயக்க ஜனாதிபதி பரிசு பெற்ற இப்படம்தான் விசுவின் உச்சம். இதை மிஞ்சும் ஒரு படத்தை அவரால் தர முடியவில்லை. கிளைமாக்சில் சுசிலா ( ளக்ஷ்மி ) எடுத்த முடிவை பற்றி பேசாதவர்களே இல்லை. சரி. இல்லை தவறு என்று ஒரு பட்டி மன்றம் ஒவ்வொருவர் மனதிலும் , வீட்டிலும் , பொது இடங்களிலும் நடந்தது.

இந்த படம் சினிமா தயாரிப்பவர்களுக்கு ஒரு படமானது. படம் வெற்றி பெற நல்ல கதை அவசியம். ஆனால் அது மட்டுமே வெற்றி பெற உதவாது. பொருத்தமான நடிகர்கள், திரைக்கதை , வசனம், நல்ல தயாரிப்பு நிறுவனம் , போதுமான விளம்பரம் , இசை எல்லாமே சரியான விகிதத்தில் அமைய வேண்டும் என்பதை உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் தோல்வியும் சம்சாரம் அது மின்சாரம் வெற்றியும் தெளிவாக்கியது. இதற்கு முன்னரே கண்ணாடி என்ற தோல்விப் படம் நெற்றிக்கண் என்னும் வெறிப்படமான போதும் விசு நிருபித்தார்.

கிரேசி மோகனுடன் விஜயுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, சிவாஜியுடன்   ஆனந்த கண்ணீர், கேப்டனுடன் ஊமைவிழிகள் இப்படி  பல படங்களில்    நடித்தும் இயக்கியும் , பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்த விசு தன் குருவைப் போலவே சின்னத் திரையின் பக்கம் திரும்பினார். ஆனால் கே.பி ஐ போல அல்லாமல் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தும் வகையில் சன் டிவி யில் அரட்டை அரங்கம் இப்போதைய பல பேச்சு மன்றங்களுக்கு முன்னோடி. பின் சன் டீவியிலிருந்து ஜெயா டீவியில் மக்கள் அரங்கம். அதன் காரணமாக அதிமுக மூலமாக அரசியல் பிரவேசம்.

இப்படி ராஜபாட்டையாக இருந்த விசுவின் பயணம் அவரது உடல் நிலை காரணமாக தடை பட்டது. சிறு நீரக கோளாறுடன் கேன்சர் என வருடங்கள் ஓடியது. தன் மணல்கயிறின் தொடர்ச்சியாக மணல் கயிறு 2 படத்தினை சேகருக்காக எழுதினார். தன்னுடய தோல்விப் படத்தை வெற்றிப் படமாக்கியவருக்கு வெற்றிப்படத்தை மீண்டும் வெற்றி பெற செய்ய முடியவில்லை என்ற சோகத்துடன் அவரது திரைப்பட பயணம் நின்றது.

இவ்வளவு உடல் உபாதைகளுக்கு    இடையேயும் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடையில் நாடகங்களில் பங்கேற்றார். சென்னை ஹ்யூமர் கிளப்பில் அடிக்கடி பங்கேற்றார்.
மூன்று பெண்குழந்தைகளுக்கு தகப்பனாக பொறுப்போடு அவர் உரையாற்றினார். மிகுந்த பொருள் பதிந்த உரை . இன்றும் அது யூ ட்யூபில் இருக்கின்றது. ஜனவரி மாதம் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி , சோ மீது அவர் கொண்ட அன்பின் காரணமாக துக்ளக் வாச்கர்கள் குழு என்ற அமைப்பை ஜனவரி மாதம் தொடங்கி வைத்துப் பேசினார்.   பாஜாக வுடன்   தன்னை இணைத்துக் கொண்டார். யூ ட்யூப் சேனல் ஒன்றின் மூலமாக தன் திரை அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவரின் மரணச்செய்தியை கேட்ட பொழுது வருத்தமாக இருந்தது.

நீங்க சௌக்கியமா. நான் சௌக்கியம் என்று சம்சாரம் அது மின்சாரம் வசனம் . நாங்கள் சௌக்கியம் . நீங்கள் சௌக்கியமா என்று கேட்க முடியாதபடி மரணம் ஏற்றுக்கொண்டது.

கோதாவரி. நடுல கோட்ட போடு என்று அம்மையப்பன் கர்ஜித்தது காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்க , மரணம் உங்களுக்கும் தமிழ்ப் பட ரசிகர்களுக்கும் நடுவே தாண்டவும் அழிக்கவும் முடியாத கோட்டினை போட்டு விட்டதே என்ன செய்ய ?
-----------------------------------------------------------------------
படித்தத்தில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.4.20

மனக்கவலையை போக்கும் வழி!!!!


மனக்கவலையை போக்கும் வழி!!!!

இன்றைய சிந்தனை

'''கவலையின்மையே பலத்தைத் தரும்..''..
........................................................................

இந்த உலகத்தில் பலவற்றில் தோற்று போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவைதான்.

அவசரப்பட்டு மனக் கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களை படு குழியில் தள்ளிவிடும்.

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார்.

ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.

“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்கு பதில் அளித்தான்.

மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.

இளைஞனின் அம்மாவிடம்,

“அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள்.

‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவன் ஆகி விடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.

சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார்.

யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடிய வில்லை.

அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.

“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான்  இளைஞன் அதனால் பலமிழந்தான்.

கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

ஆம்.,நண்பர்களே..,

மனது சரியாக சிந்திக்க தொடங்கினால் மனக் கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை.

கவலையால் உடல், உங்கள் நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது..

வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழித்தேயாக வேண்டும்.❤🙏🏻🖤
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன் 
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.20

தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!


தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!

#சுப்ரமணியஸ்வாமி ஒருமுறை இப்படி #பேசினார் ...

இஸ்லாமியர்கள் #மெசபடோமியாவை 50 வருடங்களில் பிராந்தியத்தையே இஸ்லாம் மயமாக்கினார்கள்

கிறிஸ்தவர்கள்  200 ஆண்டுகளில் #ஐரோப்பா முழுவதையும் கிறிஸ்தவ நாடுகளாக்கினார்கள்

ஆசியாவின் முகப்பான #ஆப்கானிஸ்தானையும் சடுதியில் இஸ்லாம் நாடாக்கினார்கள்

#அமெரிக்கா கூட பழம் #செவ்விந்திய வழக்கங்களை விட்டு 100 ஆண்டுகளுக்குள் முழு கிறிஸ்தவமானது

ஆனால் #இந்தியா ...

2 ம் நூற்றாண்டிலிருந்து அவ்வப்போதும்,
14ம் நூற்றாண்டிலிருந்து 350 ஆண்டுகள் மொகலாயர்களாலும்
பின் 300 ஆண்டுகள் ஆங்கிலயே கிறிஸ்தவர்களாலும்
#பிரும்ம #பிரயத்தனம்  செய்யப்பட்டும்  இன்றுவரை 85% மக்கள் #இந்துக்களாகவே இருக்கிறார்கள்

#காரணம் ..? 
இந்துமகா சமுத்திரம் ...#அழிக்க முடியாது #என்றார் ✨

நான் கூட இந்துமதமும் இந்துக்களும் அமைதியானவர்கள் .எல்லா  #தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டவர்கள் . அதனாலால் தான் அழிவில்லை என்று நம்பினேன் ஆனால் உண்மை அதுவல்ல

உண்மையான காரணம் .....#போர் ✨

இந்துக்கள் இந்திய அரசர்கள் ஒருநாளும் தங்கள் இந்து #மதத்தையும் #கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கவே  இல்லை .அதற்காக  போரிடுவதை நிறுத்தவே இல்லை.

4ம் நூற்றாண்டில் #ராஜபுத்திர பிதாமகர் பாப்பா ராவல் முகம்மது காசிமை வென்று சிந்துநதிக்கு அப்பால் துரத்தியத்தில் ஆரம்பித்து

#மேவார் மார்வார் சௌகான்கள் என்று பெரும் வீரர்கள் வாளை உருவிக்கொண்டே தான் இருந்தார்கள்

அங்கங்கே சமாதனம் செய்தாலும் மதத்தையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்தினால் வீறுகொண்டு எழுவார்கள் என்ற பயத்திலே இஸ்லாம் மன்னர்கள் இருந்தார்கள்

சாதாரண ஏழை குடிமகன் கூட #ஜஸியா  வரி கட்டினானே தவிர மதம் மாறவில்லை. #கங்கையில் குளிக்க விளக்கு எரிக்க கூட வரி  விதிக்கப்பட்டது

வரி  கட்டி கஜானாவை நிரப்பினார்களே  தவிர குளிப்பதை யாரும் நிறுத்தவில்லை

அடுத்தது வந்த மாவீரன் #சிவாஜி உயிர் ஒன்றுமே இல்லை என்று நிரூபித்து மதத்தை காத்ததோடு தன் எண்ணங்களையும் விதைத்துவிட்டே விண்ணுலகம்  சென்றார்

அடுத்தடுத்து ராஜாராம் தாராபாய் என்று தோன்றிக்கொண்டே இருந்தார்கள் கலாச்சாரத்தை காக்க  வியாபாரம் பண்ணவந்த வெள்ளையர்களும்  அறிந்திருந்தார்கள் அவர்களது எல்லை எதுவென்று மொத்தத்தில் பார்த்தால் இந்திய மக்களின் மன்னர்களின் போர்தான் நமது கலாச்சாரத்தை காத்திருக்கிறது

தாய்மார்கள் தாலாட்டுக்கு பாடுவார்களாம் இப்படி

"தன்மான சிங்கங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரர் தோன்றுவார் !"

ஒவொரு பகுதியிலும், நாட்டிலும் வீர்கள் தோன்றிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்

என்ன ...#கடந்த அறுபதுவருடங்கள் #அடிமைகளால் ஆளப்பட்டோம் ......

 இப்போது மறுபடியும் #பாரத #தேசம் காக்க, #இறையாண்மை காக்க, கலாச்சாரம் காக்க  ஒரு #வில்லேந்திய #வீரன் வந்து விட்டார் ...

இனி எல்லாம் #ஜெயமே.

வாழ்க பாரதம் 🇮🇳
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.20

முட்டாள்களிடையே வாழ்ந்த கெட்டிக்காரன்!



முட்டாள்களிடையே வாழ்ந்த கெட்டிக்காரன்!

கவிஞர் கண்ணன்தாசனின் புத்தகத்திலிருந்து சில வரிகள்...!

கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !

"இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடியாது."

"ஏன் ?"

"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"

"எப்படி ?"

"அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."

சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

அப்போதுதான் இந்த சென்ஸார் பிரச்சினை எழுந்தது.

சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்."

கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."

சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."

கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"

சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது. "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."

கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:

"எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்."

Accepted.

படத்தில் தான்  சிவாஜி இப்படிப் பாடுவார்.
ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.

கண்ணதாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது."

ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது. சென்ஸார் சீறியது.
"அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"

அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?

"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."

இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.

இப்போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?
என்ன ஆனாலும் சரி .எவர் சொன்னாலும் சரி .இதை நான் மாற்ற மாட்டேன்."

இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"

வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :

"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."

பாவ மன்னிப்பு வந்தது. பாடல்களும் ஹிட் ஆனது.

ஆனால் சென்ஸார் கண்களில் மண்ணைத் தூவி , 'பாவமன்னிப்பு' படப் பாடலில் , இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார் கண்ணதாசன்.

"மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்."

இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :

"நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக  செத்துப் போனேன்.”

*- கண்ணதாசன்*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.20

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*
 
இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.20

Astrology: ஜோதிடமும் கடவுளின் பிடிமானமும்!


Astrology: ஜோதிடமும் கடவுளின் பிடிமானமும்!

தனக்கு ஜோதிடக்கலை தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு , போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு தன் கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்குத் தெரியவருகிறது. இதனால் தான் கற்ற கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்தபின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா, ஜோதிடம் என்பது பொய்தானே எள்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா என்று கேட்கிறார்.

ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன், ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் கணிதத்தில் வரவில்லை அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன். இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னார் பாருங்கள் பதில்.

அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்து கொண்டால் பிறகு நான் எதற்கு??? இந்த பதிலை கேட்டவுடன் சகாதேவனுக்கு
தூக்கிவாறிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம். எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில்.....இந்த ரகசியமானது  பாரதம் பேசுகிறது நூலில் இருந்து.....!!!
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.20

மகாபாரதத்தில் ஊரடங்கு !


மகாபாரதத்தில் ஊரடங்கு !

மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார்.

அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார்.

இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார்.

மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.

நாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது.

இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர்.

இதன் உள்கருத்தைப் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை.

நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

கிருமியை பற்றிய எண்ணம் கூட வரக் கூடாது.

அது அதனுடைய நேரம் வரும் போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும்.
இறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது.
வீட்டில் இருப்போம். நம் வாழ்வு நன்றாக இருக்கும்.🙏
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.20

நீங்களும் நானும் தமிழ் புத்தாண்டும்!!!!

நீங்களும் நானும் தமிழ் புத்தாண்டும்!!!!

சார்வரி தமிழ்ப் புத்தாண்டு 14-04-2020 செவ்வாய்க்கிழமை

தமிழ் புத்தாண்டு முக்கியத்துவம்

மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக சித்திரை தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு - அறிமுகம்

தமிழ் மாதமாகிய சித்திரை மாதப் பிறப்பு என்பது, ஆண்டு தோறும், புது வருடப் பிறப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது, ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருகிறது. மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

சார்வரி வருஷத்திய  வெண்பா பலன்
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.

அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக  பாதிக்க நேரிடும்
 
உலகின் பண்டைய கலாசாரங்கள் அனைத்தும், நாள், வாரம், மாதம், வருடம் போன்றவற்றைக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ எனப்படும் நாள்காட்டிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இது ‘ஆல்மனாக்’ அல்லது ‘காலண்டர்’ எனப்படும். தமிழர்களின் பழம் பெரும் கலாசாரமும் இதற்கு விதி விலக்கல்ல. பொதுவாக, மாதங்களும், வருடங்களும் சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாரம்பரியமும் இந்த முறையையே பின்பற்றுகிறது. சூரியன் தனது வான்வெளிப் பயணத்தின் பொழுது 12 ராசிகளின் வழியாகச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் தங்கியிருக்கும் காலம், ஒரு குறிப்பிட்ட மாதமாகக் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, முதல் ராசியான மேஷ ராசியில் அவர் தங்கி இருக்கும் காலம், சித்திரை மாதமாகக் கருதப்படுகிறது. அவர் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளான, சித்திரை முதல் நாள், ஒரு புதிய தமிழ் வருடத்தின் துவக்கமாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இது சித்திரை வருடப் பிறப்பு என்றும், ஆங்கிலத்தில் தமிழ் நியூ இயர் என்றும் கூட வழங்கப்படுகிறது.
 
தமிழர்கள் காலத்தைக் கணக்கிடும் முறைப்படி, வசந்த காலம் என்பது சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது; எனவே, இந்த மாதப் பிறப்பு புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும், சிலரிடையே நிலவுகிறது.   

பல்வேறு மொழி பேசும், கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் இது போன்ற புத்தாண்டுப் பிறப்பை, பலவகைப் பெயர்களில், பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி என்றும், மலையாள வருடப் பிறப்பு விஷூ என்றும் அழைக்கப்படுகிறது.  இவ்வாறு புதிய தமிழ் வருடம் பிறக்கும் நாள், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஒவ்வொறு தமிழ் வருடத்திற்கும் ஒரு தனிப் பெயர் உள்ளது. 

 
ஆண்டு அல்லது வருடம் என்பது, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் ‘சம்வத்ஸரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற, குறிப்பிட்ட 60 ஆண்டுகள் அல்லது சம்வத்ஸரங்கள், ஒரு தொகுதியாகக் கருதப்படுகின்றன. இந்த 60 ஆண்டுக் காலப் பொழுதில் இருக்கும் 60 வருடங்களுக்கும் தனித் தனிப் பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுத் தொகுதி அல்லது காலகட்டம், சுழன்று, சுழன்று மீண்டும், மீண்டும் வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், இந்த 60 வருடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வருடமும், 60 வருடங்களுக்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. வருடங்களின் இந்த சுழற்சி என்பது, ‘சம்வத்ஸர சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.

சார்வரி என்ற சொல்லுக்கு ‘ஒளி’ அல்லது ‘அந்தி வேளை ஒளி’ என்று பொருள். இந்த சார்வரி ஆண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு 07.20 மணிக்குப் (இந்திய நேரம்) பிறக்கிறது. இருப்பினும், இந்த சார்வரி வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு 2020 ஆக, அதற்கு மறுநாள், ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

ஜனவரி மாத மத்தியிலிருந்து ஜூலை மாத மத்தியப் பகுதி  வரையிலான காலம், சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும், புனிதமான உத்தராயணம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடத்தைப் போலவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டும், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.
 
புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்க மாதமான மிகச் சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை மாதப் பிறப்பின் போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

 மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும். பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம். இதேநேரம் பாடசாலைகள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுண்டு. வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்வர்.நல்ல சுபவேளையில் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.மேலும் சுபவேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கைத் தொடங்குவார்கள்.இதேநேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள்.பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள்.

மங்களகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வதால் இந்த வருடம் முழுநாளும் மனங்கள் மகிழ்வு பெறும் என்பது எம்மவரின் ஐதீகமாகும்.தமிழ் புத்தாண்டு தினத்தில் மேற்கண்டவற்றை செய்பவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள், தோஷங்கள் போன்றவை நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். கொடிய நோய்கள் ஏதும் குடும்பத்தில் உள்ள எவரையும் பாதிக்காது. வறுமை நிலை, தொழில் வியாபார நஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும்.

நமது முன்னோர் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர்.ஒன்று சௌரமானம்.சௌரம் என்றால் சூரியன்.சூரியன் மேட ராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டன.சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப் பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும்.இந்த வருடப் பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றையது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப் பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 12அமாவாசைகள் வருகின்றன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

மாதா, பிதா, குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும்.சித்திரை மாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும்.மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத் தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.தேசிய விளையாட்டுகளில் போர்த் தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும்.இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது.தற்போது வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி,மஞ்சுவிரட்டுதல், தலையனை அடித்தல, கயிறு இழுத்தல் போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆண்டாண்டு காலமாக, மக்கள், தமிழ்ப் புத்தாண்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பாரம்பரியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியும், வழிபாடுகளை நடத்தியும், இந்த நாளை அனுசரிக்கும் அவர்கள், அதே நேரம், பல சுவைகளும் கலந்த விருந்து உண்டும், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டும், இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

இளவேனிற் காலமாகிய சித்திரையையும், புத்தாண்டையும் ஒரு சேர வரவேற்கும் விதமாக, மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடுகிறார்கள். இந்த நாளில், மருந்து நீர் எனப்படும் விசேஷமான மூலிகை நீரில் குளிப்பது, ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. மஞ்சள், மிளகு, துளசி இலை, வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தண்ணிரில் நீராடுவது, உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும். அத்துடன் கூட, அந்த வருடம் யாருக்காவது, ஏதாவது நட்சத்திர தோஷம் ஏற்பட்டால், இந்தக் குளியல் அந்த தோஷ விளைவுகளை நீக்கும் அல்லது குறைக்கும், என்பது நம்பிக்கை.

நீராடிய பிறகு, சிலர் புத்தாடை அணிகிறார்கள். ஒரு சிலர் சிவப்பு அல்லது சிவப்பும், வெள்ளையும் கலந்த உடை அணிகிறார்கள். தூய ஆடை அணிந்த பிறகு, கடவுளை வணங்கி இறை வழிபாடு செய்கிறார்கள். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுகிறார்கள். பின்னர் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்தோ, தொடர்பு கொண்டோ, அவர்களுடன் சித்திரை வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் நியூ இயர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

 
சுகம், துக்கம், சிரிப்பு, சோகம் என பலதரப்பட்ட அனுபவங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. இதைக் குறிக்கும் வகையில், அனைத்து வகை சுவைகளும் இந்தப் புத்தாண்டு தினத்தின் சிறப்பு விருந்தில் இடம் பெறுகின்றன. இந்தக் கால கட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் மாந்தளிருடன் கூட, கசப்பு சுவையுடைய வேப்பம் பூவையும், இனிமையான வெல்லத்தையும் கலந்து, செய்யப்படும் விசேஷமான பச்சடி உணவு, இவ்வாறு புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு எனப் பல சுவைகளையும், இந்தப் புத்தாண்டு நாளில் தருகிறது. இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன. பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.

மரபுகள்

புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

சோதிடம்:

சூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.

தமிழரின் காலக்கணிப்பு

நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

இந்திய வானியல்:

இந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.  பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (பொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.

தமிழ் வானியல்:

சங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.  நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம்.

ஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.

ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்கப்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்!முன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே.

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

அறுபது ஆண்டுகள்

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் பிரபவ முதல் அட்சய வரை காணமுடிகின்றது. வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன

01.  பிரபவ   02.  விபவ    03.  சுக்ல     04.  பிரமோதூத
05.  பிரசோற்பத்தி    06.  ஆங்கீரச      07.  ஸ்ரீமுக
08.  பவ     09.  யுவ    10.  தாது       11.  ஈஸ்வர
12.  வெகுதானிய      13.  பிரமாதி       14.  விக்கிரம
15.  விஷு     16.  சித்திரபானு   17. சுபானு 18.  தாரண
19.  பார்த்திப  20. விய  21. சர்வசித்து 22.  சர்வதாரி
23.  விரோதி  24. விக்ருதி 25.  கர   26.  நந்தன
27.  விஜய  28.  ஜய  29.  மன்மத   30.  துன்முகி
31.  ஹேவிளம்பி  32.  விளம்பி  33.  விகாரி
34.  சார்வரி  35. பிலவ  36. சுபகிருது 37. சோபகிருது
38.  குரோதி  39.  விசுவாசுவ 40. பரபாவ                       
 41.  பிலவங்க  42. கீலக 43.சௌமிய 44.  சாதாரண
45.  விரோதகிருது 46.  பரிதாபி 47.  பிரமாதீச
48.  ஆனந்த 49.  ராட்சச 50.  நள 51.  பிங்கள
52.  காளயுக்தி 53.  சித்தார்த்தி 54.  ரௌத்திரி
55.  துன்மதி 56.  துந்துபி 57.  ருத்ரோத்காரி
58.  ரக்தாட்சி 59.  குரோதன  60.  அட்சய

மாதங்கள்

1     சித்திரை 
2     வைகாசி 
3     ஆனி 
4     ஆடி 
5     ஆவணி 
6     புரட்டாசி 
7     ஐப்பசி 
8     கார்த்திகை 
9     மார்கழி
10    தை 
11    மாசி 
12    பங்குனி 

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

1  வாரம்
2  திதி
3  கரணம்
4  நட்சத்திரம்
5  யோகம்

என்பனவாகும்.

வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

1. ஞாயிற்றுக்கிழமை
2. திங்கட்கிழமை
3. செவ்வாய்க்கிழமை
4. புதன்கிழமை
5. வியாழக்கிழமை
6. வெள்ளிக்கிழமை
7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். அதன் 30 பெயர்களும் வருமாறு:

1. அமாவாசை          16. பூரணை
2. பிரதமை                 17. பிரதமை
3. துதியை                   18. துதியை
4. திருதியை               19. திருதியை
5. சதுர்த்தி                   20. சதுர்த்தி
6. பஞ்சமி                     21. பஞ்சமி
7. சஷ்டி                        22. சஷ்டி
8. சப்தமி                      23. சப்தமி
9. அட்டமி                      24. அட்டமி
10. நவமி                      25. நவமி
11. தசமி                       26. தசமி
12. ஏகாதசி                  27. ஏகாதசி
13. துவாதசி                 28. துவாதசி
14. திரயோதசி            29. திரயோதசி
15. சதுர்த்தசி               30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. சைதுளை
5. கரசை
6. வனசை
7. பத்திரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:

1. அச்சுவினி 10. மகம் 19. மூலம்
2. பரணி 11. பூரம் 20. பூராடம்
3. கார்த்திகை 12. உத்தரம் 21. உத்திராடம்
4. ரோகிணி 13. அத்தம் 22. திருவோணம்
5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம்
6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம்
7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி
8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி
9. ஆயிலியம் 18. கேட்டை 27. ரேவதி

யோகம்

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

1. விஷ்கம்பம்,2. பிரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்கியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம்,  8. திருதி, 9. சூலம், 10. கண்டம்,11. விருதி,12. துருவம்,  13. வியாகதம், 14. அரிசணம்,
15. வச்சிரம், 16. சித்தி, 17. வியாதிபாதம்,18. வரியான், 19. பரிகம்,  20. சிவம் 21. சித்தம்  22. சாத்தீயம்  23. சுபம்   24. சுப்பிரம்  25. பிராமியம்  26. ஐந்திரம்  27. வைதிருதி 

யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:
(சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20' இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.

நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

இராசி

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

கோள்கள்

1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நாழிகை

நட்சத்திரம் / திதி  நாழிகை இருப்பு

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.

ஒரு நாழிகை என்பது 24 நிமையங்கள் கொண்ட கால அளவு. பகல் 30 நாழிகைகளையும், இரவு 30 நாழிகைகளையும் கொண்டது ஓரு நாள் எனப்பட்டது.

நாம் பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் அல்லது திதி ஒரு யோகம் இத்தனை நாழிகை இன்று இருக்கும் என்று ஏதாவது எண்ணை குறிப்பிட்டு இருக்கும்   ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரத்தை குறிக்கும்


24 நிமிடம் = ஒரு நாழிகை
60 நாழிகை = ஒரு நாள்
60 நிமிடம் = ஒரு மணி
24 மணி ஒரு நாள்

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணிகளைக் குறிக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் மலமாதம் என்றும், இரண்டு அமாவாசை வந்தால் விஷ மாதம் என்றும் சொல்வர். இந்த இரண்டிலுமே சுபநிகழ்ச்சி செய்வது கூடாது

வாக்கிய பஞ்சாங்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது.

தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

அனைவருக்கும் மங்களகரமான சார்வரி வருடம்  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
------------------------------------

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!