மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.6.12

Mental Health நமக்கு முதல் எதிரி யார்!


Mental Health நமக்கு முதல் எதிரி யார்?
மனவளக் கட்டுரை

மனிதனுக்கு என்ன வேண்டும்?

நிம்மதியும், சந்தோஷமும் வேண்டும்! அது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்துவிடும்.

இதே கேள்வியை ஒரு கவிஞனிடம் கேட்டார்கள். அவன் அழகாகச் சொன்னான்:

காலையில் மலச் சிக்கலும்
இரவில் மனச் சிக்கலும்
இருக்கக் கூடாது!

அதுவும் ஒருவகையில் உண்மைதான்!

ஆனால் இதே கேள்வியை சக மனிதனிடம் கேட்டால், பதில் வேறுவிதமாக இருக்கும். ஒவ்வொருவரின் பதிலும் ஒருவிதமாக  இருக்கும். ஆனால் பொதுவான பதில் இதுவாகத்தான் இருக்கும்:

“பணம். பணம் வேண்டும் சுவாமி. அது மட்டும் தாராளமாகக் கிடைத்தால் போதும். மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்”

அப்படி எல்லாம் பார்த்துக் கொள்ள முடியாது. பிறகு விதிக்கு என்ன வேலை? விதிக்கப்பெற்றதற்கு என்ன வேலை? வாங்கி வந்த வரத்திற்கு என்ன வேலை?

அதை இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது தலைப்புச் செய்திக்கு வருகிறேன்.

நமக்கு முதல் எதிரி யார்? அல்லது எது?

ஒரு ஞானி சொன்னான்.

பகை, நெருப்பு, குப்பை மூன்றையும் மிச்சம் வைக்காதே! மிச்சம் வைத்து விட்டுப் படுக்காதே!

நெருப்பை அனைத்துவிட்டுப் படுக்கலாம். குப்பையைத் தெருக்கோடியில் உள்ள தொட்டியில் கொண்டுபோய்க் கொட்டி விட்டு  வந்து படுக்கலாம். பகையை என்ன செய்வது?

பகையை விட்டு வைக்கக்கூடாது. விட்டு வைத்தால் பார்த்தீனியம் செடியைப்போல, அல்லது கருவேல மரத்தைப்போல அது  வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே, உட்கார்ந்து பேசித் தீர்த்துப் பகையை ஓட்டிவிட வேண்டும்.

சில சமயம் தீராத பகை வந்துவிடும். பகையாளி எதிரியாக மாறிவிடுவான். நமக்கு இடைஞ்சல் செய்யும் விதமாகப் பல தீய செயல்களைச் செய்து கொண்டிருப்பான். ஆகவே எதிரி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் சில சமயங்களில் அதுவும் நம் கையில் இல்லை. நாம் இசைந்து போனாலும் எதிரி நம்மைப் புரிந்துகொள்ளாமல்,  எதிரிடையாகவே இருந்தால் என்ன செய்ய முடியும்?

ஆறாம் வீட்டுக்காரனின் தசாபுத்திகளில் அது போன்ற எதிரிகள் உருவாகி நமக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த தசாபுத்தி  முடிந்த பிறகே, அவர்களைச் சமாளிக்கும் அல்லது கணக்கைத் தீர்க்கும் காலம் நமக்கு  வரும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டியதுதான். சகித்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

ஆனால் நமக்கு உண்மையான எதிரி ஒருவன் உண்டு என்றால் அது நம்முடைய சோம்பேறித்தனம்தான்!

நமக்கு முதல் எதிரி அந்த சோம்பல்தான். ஆகவே சோம்பல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். வேறு ஆளைத் தேடாதீர்கள்.

தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், நீங்களே எழுந்து சென்று வாட்டர் ஃபில்டரில் தண்ணீரைப் பிடித்துக் குடித்துவிட்டு  வாருங்கள். நாளொன்றிற்கு எழு முறைகள் அல்லது எட்டு முறைகள் அப்படிக் குடிக்க வேண்டியதாக இருந்தாலும் நீங்களே செய்யுங்கள். இல்லாளை ஏவாதீர்கள்.

நீங்கள் சாப்பிட்ட தட்டை நீங்களே கழுவுங்கள். உங்கள் உள்ளாடைகளை நீங்களே துவைத்து உலர்த்துங்கள்.

உங்களுக்கு ஜூனியர் விகடன் வேண்டுமென்றால், பெட்டிக்கடைக்கு நீங்களே சென்று வாங்கிக் கொண்டு வாருங்கள்.

உங்களுடைய வாகனத்தை நீங்களே துடைத்து சுத்தம் செய்யுங்கள். உங்கள் அறையை வாரம் ஒரு முறையாவது நீங்களே  சுத்தம் செய்யுங்கள்.

எதையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாதீர்கள். தள்ளி வைக்காதீர்கள்

லிப்ஃகோ என்னும் பெரிய புத்தக நிறுவனத்தின் உரிமையாளரை, ஒரு பத்திரிக்கை ஆசிரியர் நேர்காணல் செய்த போது கேட்டார்:

“உங்களுடைய வெற்றிக்கு என்ன காரணம் என்று. ஒற்றை வரியில் சொல்ல முடியுமா?”

உடனே அவர் பதில் சொன்னார்: ”உடனே செய் (Do it now) என்பதே என் வெற்றிக்கான தாரக மந்திரம்”

சோம்பேறித்தனம் இன்றி எதையும் அவ்வப்போதே செய்து வந்ததால், தான் வெற்றி பெற்றதாக அவர் அசத்தலாகச் சொன்னார்.

ஆகவே சோம்பேறிதனம் இன்றி பார்த்துக்கொள்வோம். அட்லீஸ்ட் இன்று முதல்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

வெள்ளி மலர்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய  சுட லைப்பொடி  பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே!
                                                          - திருஞான சம்பந்தர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பி.கு: வகுப்பறைக்கு சனி, ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமை புதிய பாடத்துடன் மீண்டும் சந்திப்போம்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் பின்னூட்டப் பெட்டியை உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தேவையில்லாத, இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை யாரும் இடவேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

28.6.12

Poetry தாசியிடமும் சன்யாசியிடமும் எது மிச்சமாகும்?

 Poetry தாசியிடமும் சன்யாசியிடமும்  எது மிச்சமாகும்?
கவிதைச் சோலை

 தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
       தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும்
       சாம்பல்தான் மீத மாகும்
பாச்த்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
       படும்பாடு கோடி யாகும்;
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன்எனும்
       பழம்பாடல் வாழு முலகில்
மாசற்ற பொன்னோடும் வைரமும் மணிகளும்
       மார்பாட வாழும் சிலையே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
       மதுரைமீ னாட்சி உமையே!
                          - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

27.6.12

Astrology Popcorn Posts: முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?


Astrology Popcorn Posts: முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்?

பாப்கார்ன் பதிவுகள்: பகுதி 7

ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் நீசமாக இருந்தால் என்ன ஆகும்?

காரில் இரண்டு டயர்கள் பஞ்சராக இருந்தால் என்ன ஆகும்?

காருக்காவது யாராவது ஆளைப் பிடித்து பஞ்சர்களை ஒட்ட வைத்துவிடலாம்.

கிரகங்களின் நீசத் தன்மையை எப்படி மாற்றமுடியும்?

முடியாது!

என்ன ஆகும் என்று பார்க்கலாம்.

புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, மற்றும் சனி ஆகிய ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் நீசமானால் ஜாதகத்தில் 4 வீடுகள்  அவுட்டாகிவிடும்.

கிரிக்கெட்டில் முதல் ஒவரிலேயே 4 விக்கெட்டுகள் சாய்ந்தால், அந்த டீம் கேப்டனின் மன நிலை எப்படி இருக்கும்? அப்படியாகிவிடும்  ஜாதகனின் நிலைமை.

அந்த 5 கிரகங்களும் தலா இரண்டு வீடுகளுக்கு ஓனர்கள் (அதிபதிகள்) அதை நினைவில் வையுங்கள்.

எனக்குத் தெரிந்த மிதுன லக்கின ஜாதகன் ஒருவனின் ஜாதகத்தில் புதனும் நீசம், குருவும் நீசம்

அந்த ஜாதகத்தில் புதனுக்கு இரண்டு வீடுகள் 1. லக்கினம் 2 நான்காம் வீடு (கல்வி, சுக ஸ்தானம்)
அதே ஜாதகத்தில் குருவிற்கு இரண்டு வீடுகள் 1. ஏழாம் வீடு (மனைவி) , 2 பத்தாம் வீடு (தொழில்)

1. லக்கினாதிபதி நீசமானதால் ஆசாமி குணக்கேடான ஆள், துக்கிரிகளோடு நட்பு, எல்லா கெட்ட பழக்கங்களையும் 22 வயதிற்குள் கற்றுக்
கொண்டு விட்டான்.

2..நான்காம் வீட்டதிபதி நீசமானதால் தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டுவரை படித்தான். அதற்குப் பிறகு படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை

3. பத்தாம் வீட்டுக்காரன் நீசமானதால்,  சரியான வேலை கிடைக்கவில்லை,  தன்னுடைய தந்தையின் அடக்குக் கடையிலேயே வேலை  பார்த்தான்  (எடுபிடி வேலை & காவல் காக்கும் வேலை)

4. ஏழாம் வீட்டுக்காரன் நீசமடைந்ததால், கஷ்டப்பட்டு செய்து வைத்த திருமணத்தின் மூலம் கைக்குக் கிடைத்த பெண் நிலைக்கவில்லை.
இவனுடைய அட்டூழியம் தாங்காமல் பிறந்த வீட்டிற்கே அவள் போய்விட்டாள். திரும்பிவர மறுத்துவிட்டாள்

சரி, சூரியனும், சந்திரனும் நீசமானால்?

ஒரு டீம் நல்ல பேட்ஸ்மேன்களே இல்லாமல் ஆடப்போவதைப் போன்றது அது!

சூரியன் தந்தைக்கு உரிய கிரகம் மற்றும் உடல் நலத்திற்கு உரிய கிரகம்
சந்திரன் தாய்க்கு உரிய கிரகம் மற்றும் மனநலத்திற்கு உரிய கிரகம்
அவை இரண்டு நீசமானால் இவை நான்கும் அமையாது. அத்துடன் ஒருவரின் ஜாதகத்தில் அவர்கள் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீடும் ஊற்றிக் கொண்டுவிடும். அதையும் மனதில் வையுங்கள்!

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முக்கிய அறிவிப்பு!

இனி வாரமலர் இல்லை! இல்லை! இல்லை!
சில குறிப்பிடமுடியாத காரணங்களுக்காக அது நிறுத்தப் படுகிறது.
காரணம் கேட்டு யாரும் மின்னஞ்சல் செய்ய வேண்டாம்!
இனி வாத்தியாரின் ஆக்கங்கள் மட்டுமே வகுப்பறையில் வெளிவரும்.
துவக்கத்தில் இருந்தது போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்பறை நடைபெறும்! சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை!

என்றும் நட்புடன்,
மேலும் தீராத அன்புடன்,
வாத்தியார்
27.6.2012
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.6.12

Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?


Astrology - Popcorn Posts கையில் காசு தங்குமா? தங்காதா?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 6

”வாத்தியார், இரண்டில் சனி இருந்தால் அந்த ஜாதகனுடைய கை ஓட்டைக் கை - கையில் காசு தங்காது” என்று சொல்கிறர்களே - அது உண்மையா?”

”அது உண்மையல்ல. வேறு அமைப்புக்களும் உள்ளன. அது தெரியாமல் ஓட்டைக் கை என்று சொல்வது தவறு”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”
-------------------------------------------------
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் குடியிருந்தால் அதாவது சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் அந்த வீடு பாதிப்பிற்கு உள்ளாகும்.

இரண்டாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள்.

பணத்திற்கான இடம் அது (House of finance)
குடும்ப வாழ்க்கைக்கான இடமும் அது (House of Family)
அத்துடன் வாக்கு ஸ்தானத்திற்கான இடமும் அதுதான் (House of speech)

அதில் ஒரு இலாக்கா பாதிக்கப்படும்

ஏன் அப்படி? சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த மூன்று இலாக்காக்களுமே பாதிப்பிற்கு உள்ளாகாதா?

ஆகாது. அந்த வீட்டுக்காரன் முக்கியம். அவன் நன்றாக, வலிமையாக இருந்தால் சனியின் பாதிப்பை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு நன்மைகளைச்  செய்வான். அத்துடன் காரகனும் (authority) முக்கியம்

பணத்திற்குக் காரகன் குரு
மனையாளுடன் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைக்குக் காரகன் சுக்கிரன்
அகட விகட சாமர்த்தியமான பேச்சிற்குக் காரகன் புதன்

இந்த மூவரில் யார் கெட்டிருந்தாலும் அந்த இலாக்கா சரிவர வேலை செய்யாது!

ஆகவே இவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும்!
-------------------------------------------------------
ஒரு உதாரண ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்


இரண்டாம் வீட்டில் சனியும், கேதுவும் டென்ட் அடித்து உட்கார்ந்திருக் கிறார்கள். காசு தங்காது என்று சொல்லிவிடலாமா? முடியாது. ஜாதகத்திற்கு உரியவர் பெரிய செல்வந்தர்.

நிலைமை மாறியதற்கு என்ன காரணம்?

அம்சம் முக்கியமில்லையா? அதையும் பாருங்கள். இரண்டாம் வீட்டதிபதி புதன் உச்சம் பெற்று அங்கே கொடியுடன் உட்கார்ந்திருக்கிறார்.அத்துடன் அதே புதன், ராசியில் திரிகோண வீட்டில் சுக்கிரனைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருக்கிறார். சுக்கிரன் ஜாதகருடைய 10ம் வீட்டதிபதி! தொழில் செய்து சுயசம்பாத்தியத்தில் செல்வம் சேர்ந்தது! தனகாரகன் குருவும் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார்!

ஜாதகர் யார் தெரிகிறதா?
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுடைய ஜாதகம் இது!
--------------------------------------------------------------
வாத்தி(யார்),  ஷாருக்கை எதற்காக முகப்பு படத்தில் போட்டீர்கள்?

ச்ச்சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான்! வாத்தியார் என்பதால் விளையாடக்கூடாதா?
--------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

25.6.12

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

Astrology: காஞ்சிப் பெரியவரின் ஜாதகம்!

ஜாதக அலசல் பாடம்!

பெரியவர் என்றால் அவர் ஒருவர்தான் பெரியவர். அந்தச் சொல்லிற்குத் தகுதியானவர் அவர் ஒருவர்தான்!

சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளைத்தான் சொல்கிறேன்

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குருவாக இருந்து சிறப்பாக இறைத் தொண்டாற்றியவர் அவர். நூறு ஆண்டுகாலம் வாழ்ந்து சிறந்தவர்.

வாழ்வது என்பது ஆண்டு எண்ணிக்கையில் அல்ல! சேவையை வைத்துக்கணக்கிட வேண்டும்.

1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1994ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிவரை வாழ்ந்து, தன் நற்செயல்களாலும், இறைப்பணிகளாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர்.

பிப்ரவரி 1907ம் ஆண்டில் அவருக்கு மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட 13 ஆண்டுகளை அவர் சிறுவனாக இருந்த கணக்கில் கழித்து விட்டால் சுமார் 87 ஆண்டுகள் இறைப்பணி செதிருக்கிறார். மக்களை நெறிப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

87ஆண்டுகள் உழைப்பது, பணி செய்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல! ஆர அமர உட்கார்ந்து யோசித்துப்பாருங்கள். இதுவரை வாழ்ந்த வாழ்வில், நீங்கள் எத்தனை ஆண்டுகள் சேவை செய்திருப்பீர்கள்? ஆண்டுகளில் வேண்டாம். மாதங்களிலாவது சொல்லுங்கள்!
அல்லது நாட்களிலாவது சொல்லுங்கள்.

அவருடைய ஜாதகத்தை அலசுவதை ஒரு பாக்கியமாகக் கருதி,  இன்று அதைச் செய்திருக்கிறேன்.

கருத்து வேறுபாடு உடையவர்கள் பதிவை விட்டு விலகவும்.

கருத்து வேறுபாடு உடைய பின்னூட்டங்களுக்கும் அனுமதியில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெரியவரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சுட்டியைப் பயன் படுத்துங்கள். தேமொழியின் அக்கா விக்கி காமாட்சி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த நமது வகுப்பறை மாணவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அன்பர் புவனேஷ்வர் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிறப்பு விவரம்
பிறந்த தேதி: 20.5.1894
பிறந்த நேரம்: மதியம் 1.22 மணி
பிறந்த ஊர்: விழுப்புரம்
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: சிம்ம லக்கினம்
ராசி: விருச்சிக ராசி

இயற்பெயர்: சாமிநாதன்
கல்வித்தகுதி: திண்டிவனத்தில் அப்போது இருந்த அமெரிக்கன் மிஸன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்
வேதபாடங்களைத் தனியாக ஒரு ஆசிரியர் மூலம் கற்றுத் தேர்ந்தவர்
படிக்கின்ற காலத்தில் இவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்:
One day the whole world will fall at his feet!
----------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

337 வகுத்தல் 12 = 28 இது சராசரி பரல் கணக்கு
சுவாமிகளின் ஜாதகத்தில்
2ல் 30 பரல்கள் (வாக்கு ஸ்தானம்)
4ல் 28 பரல்கள்
5ல் 30 பரல்கள்
6ல் 33 பரல்கள்
8ல் 35 பரல்கள்
10ல் 28 பரல்கள்
---------------------------------------------------
சுயவர்க்கப் பரல்கள்:

சூரியன் 4 பரல்கள்
சந்திரன் 7 பரல்கள்
செவ்வாய் 4 பரல்கள்
புதன் 5 பரல்கள்
குரு 6 பரல்கள்
சுக்கிரன் 6 பரல்கள்
சனி 2 பரல்கள்

ஒரு கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 8 பரல்கள். 4 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும்.சுவாமிகளுக்கு 4 கிரகங்கள் அதிக பரல்களுடன் வலிமையோடு உள்ளன.
-----------------------------------------------------------
திரிகோண வீடுகள், கேந்திர வீடுகள், மறைவிடங்களுக்கான் பரல்கள்



திரிகோண்ங்கள் (1,5,9) = 79 பரல்கள்
கேந்திரங்கள் (4,7,10) =  83 பரல்கள்
இந்த 6 வீடுகளுக்கும் சராசரி 27 பரல்கள்

மறைவிடங்கள் (Inimical Houses)
3,6,8, 12 =  121 = சராசரி 30 பரல்கள்
லெள்கீக வாழ்க்கைக்கான அமைப்பில்லாமல் ஞான வாழ்க்கைக்கான அமைப்புத்தான் ஜாதகத்தில் உள்ளது
--------------------------------------------------------
 1. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் உள்ளனர்.

2. சுக்கிரன் உச்சம். அத்துடன் குரு பகவானுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.

3. அஷ்டகவர்க்கத்தில் சுபக் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவர்கள் தங்களுடைய சுயவர்க்கத்தில் அதிக பரல்கள் பெற்று வலுவாக உள்ளார்கள். குருவிற்கு 6 பரல்கள், சந்திரனுக்கு 7 பரல்கள், சுக்கிரனுக்கு
6 பரல்கள்.

4. வெற்றிகளுக்கு உரிய 3ம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுத்துள்ளார். சுவாமிகள் மடத்தின் குருவாக பல ஆண்டுகள் திறம்படப் பணி செய்துள்ளார். செய்யும் வேலையில் சிரத்தையைக் கொடுத்ததோடு, பெரும்புகழையும் சுக்கிரன் கொடுத்தார்.

5. சுக்கிரன் இந்த ஜாதகத்திற்கு 10ம் இடத்து அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்றதுடன், தன் வீட்டிற்கு 11ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

6. சிம்ம லக்கின ஜாதகம். வனங்களில் சிங்கத்திற்கு என்ன சிறப்போ, அதே சிறப்பு 12 லக்கினங்களிலும் சிம்ம லக்கினத்திற்கு ஒரு தனிச்  சிறப்பு உண்டு. நாயகர்களின் லக்கினம்.

7. லக்கினாதிபதி சூரியன் கேந்திரங்களில் முக்கியமான பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது ஒரு சிறப்பு

8. லக்கினாதிபதி சூரியனுடன் லாபாதிபதி புதனும், பூர்வபுண்ணியாதிபதி குருவும் கூட்டாக உள்ளார்கள்.இதுவும் ஒரு சிறப்பு

9. கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம். குருவும் சந்திரனும் கேந்திர வீடுகளில் எதிரெதிரே பலத்துடன் அமர்ந்துள்ளார்கள். ஜாதகரை  அறவழியில் கொண்டு சென்றதுடன், பெரும் புகழையும் கொடுத்தார்கள்.

10. புத ஆதித்த யோகம்: புதனும் சூரியனும் கூட்டாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.  புத்திசாலித்தனம், நிபுனத்துவம்,சாமர்த்தியம், பிரபலம், மரியாதைக் குரியவாரக இருத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் சூரியனும்,  புதனும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அதுவும் முக்கியமான கேந்திரத்தில் இருப்பதையும் பாருங்கள்

11. ஆதியோகம்: சந்திரனுக்கு 6 அல்லது 7 அல்லது 8ல் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே  சந்திரனுக்கு 7ல் குருவும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பிற்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய பொறுப்பு தேடி வரும் சுவாமிகளுக்கு ஆன்மீக குருவாக பக்தர்களை வழிநடத்திச் செல்லும் பதவி கிடைத்தது.

12. சாமரயோகம்: 7 அல்லது 8 அல்லது 10ம் வீடுகளில் இரண்டு நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள்,
மேதைத் தனம், பல கலைகளில் தேர்ச்சி ஆகியவை இருக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில் குருவும், புதனும் 10ல் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள்

13. தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
சுவாமிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.

14. ராஜயோகம்: (equal to a king) 5ம் அதிபதி லக்கினகாரகனோடோ அல்லது 9ம் அதிபதியோடோ சேரும்போது இந்த யோகம் உண்டாகும். சுவாமிகளின் ஜாதகத்தில் 5ம் அதிபதி குரு லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார்.

15. விபரீத ராஜயோகம்: எட்டாம் அதிபதி குருவும் 12ம் அதிபதி சந்திரனும் சமசப்தகமாக உள்ளார்கள்

16. ராஜ சம்பந்த யோகம் அமத்யகாரகன் (இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன்) உச்சம் பெற்றுள்ளதால் கிடைத்தது. அதீத புத்திசாலித்தனம்

17. ஆட்சியாளர்களுடனா தொடர்பு: லக்கினாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் கிடைக்கும். சுவாமிகளின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி 10ல்

சுவாமிகள் லெளகீக வாழ்க்கை (அதாவது பொருள் சார்ந்த உலகியல் வாழ்க்கை) வாழாமல் துறவியாக ஆனதற்குக் காரணம்.
1
முதலில் பூர்வ புண்ணியம். பூர்வ புண்ணியாதிபதி குருவும், லக்கினாதிபதி சூரியனும் சேர்ந்து 10ம் வீட்டில் அமர்ந்து ஒரு மடாதிபதியாக ஆக்கினார்கள்.  இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
2.
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும், ஜாதகரின்
வாழ்க்கை ஜாதகருக்குப் பயன்படாது - மற்றவர்களுக்குதான் பயன்படும். பயன்பட்டது.
3.
லக்கினத்தில் குறைவான பரல்கள் (24 பரல்கள் மட்டுமே உள்ளன). இரண்டாம் வீட்டில் குடும்பஸ்தானத்தில் சனி, கேது ஆகிய தீய  கிரகங்கள். லக்கினத் திற்கு ஏழாம் அதிபதி சனி, அந்த வீட்டிற்கு எட்டில். இக்காரணங்களால் அவதிகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை  இல்லாமல் போய்விட்டது. ஜாதக மேன்மையினால், அவற்றைக் கொடுக்காமல் சின்ன வயதிலேயே காலதேவன் அவரைத்  துறவியாக்கிவிட்டான்

ஆயுள்
1
ஆயுள் காரகன் சனியின் நேரடிப் பார்வையில் எட்டாம் வீடு. எட்டாம் வீட்டுக்காரன் குரு கேந்திரத்தில். எட்டாம் வீட்டிற்கு  அஷ்டகவர்க்கத்தில் 35 பரல்கள். ஆகவே நீண்ட ஆயுள். பரிபூரண ஆயுள் சுமார் நூறு ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.
2
மூன்றாம் வீடு வாழ்வதற்கு உள்ள சக்திகளைக் காட்டும். எட்டாம் வீடு ஆயுளைக் காட்டும். அந்த இரண்டு வீடுகளுக்கும் 12ம் வீடு  அவற்றிலிருந்து 12ம் வீடு - அதாவது 3ற்கு 12ம் வீடு 2. எட்டிற்கு 12ம் வீடு 7. ஆக 2ம் வீடும்,
7ஆம் வீடும்தான் மாரக ஸ்தானங்கள். அதன்  அதிபதிகள் தான்
மரணத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் தாமதிக்கும் போது
(அதாவது அவர்களுக்கு உரிய தசாபுத்திகள் வராதபோது) 3ம் அதிபதி
அல்லது 8ம் அதிபதி அந்தவேலையைச் செய்துவிடுவார்கள்.
3
சுவாமிகளுக்கு குரு திசை சூரிய புத்தியில் மாரகம் ஏற்பட்டது. குரு எட்டாம் இடத்ததிபதி. அவரோடு சூரியனும் கூட்டாக இருப்பதைக்  கவனியுங்கள். குரு மகாதிசை சூரிய புத்தியில் அது நடந்தது. சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்கள்.

------------------------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.6.12

Manavar Malar மனதை வருடும் மருத்துவமனை அனுபவங்கள்!

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
 1

மனதை வருடும் மருத்துவமனை அனுபவங்கள்!
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன், பெங்களூர்

 எனக்கு அறுவை சிகிச்சைகள் நடந்த காரணங்கள், அவை சம்பந்தப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் போன்றவற்றை பின்னொரு பதிவில் தருகிறேன். இம்முறை, ஆபரேஷன் தியேட்டர் அனுபவங்கள் மட்டும்.

‘நான் முதல் முறை ஆபரேஷன் தியேட்டரைப் பார்த்த போது ’ என்று ஆரம்பிப்பது இயலாது. ஏனென்றால் நான் முதலில் பார்த்ததே(?!!) ஆபரேஷன் தியேட்டர்தான்.

 என்னைத் தலைகீழாய் பிடித்துத் தூக்கி, பிருஷ்டத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தவரைப் பார்த்து, 'பொறந்ததும் பொறக்காததுமாய் இப்படி அறையறியே' என்று திட்ட நினைத்து இயலாமல் போனதால் ஓவென்று அழுதேன்.

இப்படியாகத்தானே, என் சிசேரியன் ஜனனத்துக்கு டாக்டர் நண்பகலில் குறித்திருந்த முகூர்த்தம் சற்றும் மதிக்கப்படாமல் போய், விடிகாலை யிலேயே, அம்மாவுக்கு வலியெடுத்ததால், கொட்டும் மழையில் டாக்டர் ஓடி வந்து கத்தியோடு இரத்தமோடு என் பூலோகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தார்.
என் தாத்தாவுக்கு ஆபரேஷன் நடந்த போதுதான் ஆபரேஷன் தியேட்டரை நினைவு தெரிந்து பார்த்தேன். பீதி ததும்பும் கண்களால் பார்த்தது நினைவிருக்கிறது. அப்போது சிறிய வயது.

பின் ஒரு நாளில் எனக்கு ஆபரேஷன் தியேட்டர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது தான், வழியனுப்புவது வேறு, நாமே போவது வேறு என்பது என் மண்டையில் உறைத்தது. அதுவும் மக்கள் கிளப்பும் பீதி தனி ரகம்.
ஒண்ணு சாம்பிளுக்கு,

'ஆபரேசன் தியேட்டருக்குள்ள நிறைய ஆவி சுத்தும்!!!!. அங்கனக்குள்ள, ஆபரேசன் நடந்தவுக நிறையப் பேரு செத்துப்போயிருப்பாங்கல்ல' என்று என் மீது பேரன்பு கொண்ட வேலைக்காரப் பெண்மணி கிலி கிளப்பியதோடு அல்லாமல், மந்திரித்த கயிறு ஒன்று வாங்கி வந்து என் கையில் கட்டினார். எனக்கு இது வேடிக்கையாக இருந்தாலும் அவளது அன்புக்குக் கட்டுப்பட்டு, கட்டிக்கொண்டேன். கிளம்பும் போது என்னவர் இதைப் பார்த்து கேட்க,  நான் காரணம் சொன்னதும் தலையிலடித்துக் கொண்டார்.

முதல் நாள் இரவே அட்மிட்டாகியாயிற்று. ஆபரேஷன் தியேட்டர் பக்கத்தில் பத்துத் தப்படியில் அறை கொடுத்தார்கள். மறு நாள் காலை மூன்று மணி சுமாருக்கு, ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்ல அலங்கரிக்கும் பெண் மணிகள் இருவர் 'என்ட்ரி' கொடுத்தனர். ஒருவர் செய்த முதல் வேலை, என் கையில் இருந்த கயிறைக் கத்தரித்தது தான்.

ஒருவர் சற்றே பெரிய சைஸ் கீரைக்கட்டு போல் இருக்கும் என் தலைமுடியை இரண்டாகப் பிரித்து, அந்தக்கால நடிகை சரோஜாதேவி தலையில் வைக்கும் பூ மாதிரி உர்ர்ருட்டி  பின்னல் போட்டு என்னை ரெட்டை ஜடை அம்முலு வாக்கினார்.

மற்றவர் கவுன் மாட்டி, கைகால்களில் உறை போட்டு, வலையாலான மணிமகுடம் சூட்டி அலங்கரித்து முடித்தார்.  புறங்கையில் ஓங்கி ரெண்டடி கொடுத்து, நரம்பு தேடி 'வெய்ன் ப்ளான்ட்' சொருகினார். ஒரு பெரிய ஷால் (பொன்னாடை?!!) போர்த்தினார்கள்.

நான் 'உத்தமபுத்திரன்' படத்தில், பட்டாபிஷேகத்திற்காக கொலுமண்டபம் போகும் சிவாஜி பாணியில் .'கண்மணிகாள், போய் வரட்டுமா!!' என்று ஸ்ரீதர் வசனத்தை கண்களால் பேசி விடைபெற்றுகொண்டு, ஜி.இராமநாதன் பின்னணி இசை மனதில் ஒலிக்க நர்ஸூடன் நடந்தேன்.

ஆபரேஷன் தியேட்டர் போனதும் அங்கு  நடக்கும் ப்ரொஸீஜரை அங்கு இருக்கும் டாக்டர் விளக்குவார் (இது நடைமுறை).  எனக்கு முதல் நாளே என்ன நடக்கும் என்று விலாவாரியாகச் சொல்லப்பட்டிருந்தது  (இதுவும் நடைமுறை). இது தெரியாமல், மறு நாள் அதை அங்குள்ள டாக்டர் வேகு வேகென்று தொண்டைத் தண்ணி வத்த 'ரிபீட்டு' செய்யும் போது, முந்திரிக்கொட்டை மாதிரி, 'நேத்தே சொல்லிட்டாங்க டாக்டர்' என்று உளறி முறை வாங்கினேன்.

அப்புறம் வந்தார் அனஸ்தீஷியா டாக்டர். கைப்பட்டியில் என் பெயரைப் பார்த்து, 'ஹை பார்வதி, ஹௌ ஆ யூ?' என்றார். அசந்தர்ப்பமாகத் தோன்றிய போதும் சிரித்து, 'ஃபைன்' என்றேன். 'ஸே ஒன் டூ த்ரீ' என்றார். சொல்ல ஆரம்பித்து, இரண்டு முடிக்கும் முன் மயக்கத்தில் ஆழ்ந்தேன்.

என் முதல் ஆபரேஷனில் நான் கற்ற பாடங்கள்.

1. ரிப்போர்ட்டுகளோடு, செய்த டெஸ்ட்களின் பில்களைப்  பத்திரப்படுத்த வேண்டும் என்பது. அவ்வாறு செய்யாததால் மெடிகல் இன்ஷ்யூரன்ஸ் இருந்தும், கணிசமான தொகையை இழந்தேன். சிலர் அட்மிட் ஆவதற்கு முன் எடுத்த டெஸ்ட்களின் பில்களை ரிப்போர்ட் ஃபைலில் பின் செய்யாமல் புக் மார்க் மாதிரி வைப்பார்கள். அவை காற்றில் பறந்தால் காசும் பறந்துவிடும். ஜாக்கிரதை!!!!.

2. ஒரு ஆபரேஷன் முடிந்ததும், 'ஆச்சு' என்று ரிப்போர்ட்களை பரணில் போடக்கூடாது. அவ்வாறு செய்திருந்தால் பின்னால் வேறொரு ப்ரச்னை வரும்போது டாக்டரிடம் நன்றாக 'வாங்க வேண்டிவரும்'. 'போன ஆபரேஷன்(அது என்னவாக இருந்தாலும்) ரிப்போர்ட் கொண்டாங்க' என்று சொல்லி வைத்த மாதிரி எல்லா டாக்டரும் கேட்பார்கள். அவர்களுக்கு அதில் நிறைய விஷயமிருக்கும். உதாரணமாக, நமக்கு ஒவ்வாத மருந்துகள் குறித்து அவர்கள் கண்டுபிடிக்கலாம்.

3. ஒரு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எடுப்பது என்பது இன்றைய காலக் கட்டாயங்களுள் ஒன்று. எடுத்தால் மட்டும் போதாது. அதில் என்னென்ன சிகிச்சைகள் 'கவர்' செய்யப்பட்டிருக்கின்றன முதலிய விவரங்களையும் மறக்காமல் நினைவு கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட முதல் ஆபரேஷனைப் பற்றி மறந்து போன நிலையில் மற்றொரு தியேட்டர் பிரவேசத் திருநாள் குறிக்கப்படவேண்டிய நிலை வந்தது. இந்த முறை எனக்கு அவ்வளவு பயமில்லை. முன்கூட்டியே, குறைந்த அளவே மயக்க மருந்து தரப்படும் என்று சொல்லிவிட்டார்கள்.

முதல் நாளே, கையில் வித வித ஊசிகள் போட்டு, போட்ட இடத்தை வட்டம் கட்டி, 'படம் வரைந்து பாகங்களைக் குறி' ரேஞ்சில் வட்ட, மா(பெரிய) வட்டங்களுக்கு மருந்துகளின் பெயர்களை எழுதினார்கள். எது அலர்ஜி என்று கண்டறிய இந்த டெஸ்ட். நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் ஊசி மருந்துகள் மனப்பாடமாயிருப்பது கட்டாயம்.

மறு நாள் அலங்காரமாகி, தியேட்டர் பிரவேசம் முடிந்து, 'மயக்கமென்ன' பாடி ஆகிவிட்டது. திடீரென்று கொஞ்சம் வலியேற்பட்டு, விழித்துக் கொண்டேன். தையல் போடுகிற ஸ்டேஜ் என்று நினைக்கிறேன். பக்கத்தில் ஒரு டாக்டர் ஆபரேஷன் முடிந்த தென்பில், 'யாரு வந்தாலும் விலை வாசி குறையாது' என்று கமென்ட் அடிப்பது காதில் விழுந்தது.  சிரமப்பட்டு விழித்தேன். முதலில் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. 'அமரதீபம்' சிவாஜி மாதிரி, 'நான் யார், என் பெயர் என்ன' என்று கேட்காத குறை. பின்,, ஆபரேஷன் தியேட்டரில் தான் இருக்கிறேன் என்று அறிந்து கொண்டேன். மெல்ல கஷ்டப்பட்டு வாய் திறந்து, 'டாக்டர், எனக்கு இன்னும் கொஞ்சம் அனஸ்தீஷியா கொடுங்க, நான் முழிச்சுட்டேன்' என, அவர் பதறிப்போனார் பாவம். பின், மீண்டும் ஒரு ஊசி கொடுத்து, 'தூங்கும்மா' என்று சமாதானப்படுத்தினார்.

பிறகு நான் செக்கப்புக்குப் போன போது, அந்த டாக்டர், 'ஏம்மா, மயக்கம் தெளிஞ்சுடுச்சுன்னா தெளிஞ்சுடுச்சுன்னு சொல்வீங்களா, என்னமோ, இன்னும் கொஞ்சம் மயக்க மருந்து கொடுங்கன்னு கடைக்காரர்கிட்ட கால்கிலோ கத்திரிக்கா கொடுங்கன்னு கேக்கற மாதிரி கூலா கேக்கறீங்க' என்று கிண்டலடித்தார்.

அடுத்த முறை எனக்கு ஏற்பட்டது அலாதியான அனுபவம். இது சற்றே பெரிய ஆஸ்பத்திரி. ஆபரேஷன் தியேட்டர் போனதும், ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தார்கள். என்னைப் போலவே நாலைந்து பேர் வரிசையில் இருக்கிறோம் என்பது புரிந்தது.

இது தியேட்டரின் முதல் பிரிவு. அடுத்த பிரிவில், யாருக்கு அடுத்தபடியாக ஆபரேஷன் நடக்கப் போகிறதோ அவர் உள்ளே கொண்டு செல்லப்படுவார். அப்புறம் மெயின் தியேட்டர். ஒவ்வொரு பிரிவிலும் நர்ஸ்கள் உண்டு.

இரண்டாவது பிரிவுக்கு வந்தவரை, அனஸ்தீஷியா (ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஆபரேஷன் முடியும் நேரத்துக்கு) கொடுத்து உள்ளே அனுப்புவார்கள். எக்கச்சக்க ஆபரேஷன்கள் நடந்து கொண்டிருந்ததால் இந்த ஏற்பாடு. டாக்டர்களும் ஷிஃப்ட் மாறுவார்கள்.

ஆபரேஷன் முதல் நாள் இரவிலிருந்தே 'உண்ணாவிரதம்' இருப்பது ஆபரேஷன் நடைமுறைகளில் ஒன்று என்று தியேட்டர் பிரவேச அனுபவமிருப்பவர்களுக்குத் தெரியும். என் கல்யாண (?!!) குணங்களில் ஒன்று பெரும் மன உளைச்சல், பசி போன்ற நேரங்களில் அடித்துப் போட்டாற்போல் தூங்குவது. 'இடி விழுந்தென்ன, இந்திரன் எழுந்தென்ன' என்று தூங்குவாள் என்பது என் பாட்டியின் கமென்ட்.

அதை வழுவாது ஒட்டி, முதல் பிரிவுக்கு வந்த உடனே அங்கிருந்த பெட்டில் படுத்துத் 'தூக்கம் கண்களைத் தழுவட்டுமே' என்று தூங்கத் துவங்கினேன். சற்று நேரத்தில் ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து அதில் படுக்க வைத்து இரண்டாவது பிரிவுக்குக் கொண்டு போனார்கள்.

நான் இரண்டாவது பிரிவுக்கு வந்ததும், டாக்டர் வந்து, என் அனஸ்தீஷியா அனுபவங்கள், இதற்கு முந்திய ஆபரேஷன்களில்  கொடுத்தது லோக்கலா, ஓவரால் அனஸ்தீஷியாவா, அலர்ஜிகள் உண்டா, வாந்தி போல பின் விளைவுகள், இருந்திருக்கிறதா என்றெல்லாம்  விசாரித்தார்.

ஊசி போடுவாராக்கும் என்று காத்திருந்து அவர் வர நேரமாகவே, தூக்கத்தைத் தொடர்ந்தேன். சற்று நேரத்தில் 'ஆட்டம்' கண்டு விழித்த போது ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். முதலில் ஆபரேஷன் நடந்து முடிந்திருந்த பேஷன்டை வெளியே கொண்டு வருவதைப் பார்த்து, 'இவங்களுக்கு என்ன ஆபரேஷன் நடந்துச்சு?' என்று நான் வார்டு பாயை வினவ, அவர் பேயறைந்தார் போல் என்னை விரைவாக, ஸ்ட்ரெச்சரை வெளியே தள்ளிக் கொண்டு வந்து, அங்கிருந்த நர்ஸை பல்லைக் கடித்துக்கொண்டு தாழ்ந்த குரலில் விளாசினார்.

நடந்தது இதுதான். மயக்க மருந்து டாக்டர் வந்து சென்ற போது வெளியே சென்றிருந்த அந்தப் பிரிவு நர்ஸ், திரும்ப வந்த போது நான் தூங்குவதைப் பார்த்து மயக்க மருந்து தந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு விட்டார். (எனக்குக் குறட்டை விடும் வழக்கமில்லை. அசையாமல் தூங்குவேன்) . வார்டு பாயிடம், 'அனஸ்தீஷியா கொடுத்தாச்சு, உள்ளே கொண்டு போ' என்றிருக்கிறார்'. அவரும் கொண்டு சென்ற போதுதான்  நான் விழித்துக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவே.

அப்போது மயக்க ஊசியுடன் டாக்டர் வந்து அவரும், 'உள்ளே ஆபரேஷன் முடிஞ்சுதான்னு செக் பண்ண வேண்டாமா?' என்று நர்ஸைத் தாளிக்க, எல்லோரும் ஏகத்துக்கு என் பக்கம் திரும்பி, 'நீங்க ஏன் தூங்கினீங்க' என்று துவங்க, நான் கூலாக 'சாப்பிடக்கூடாதுன்னு சொன்னீங்க, தூங்க வேணாம்னு சொல்லலியெ' என்று 'அதச் சொல்லலியே' பாணியில் பதிலளித்தேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு, தியேட்டர் பிரவேசத்தின் போது தூங்குவதைக் கைவிட்டேன்.

இந்த இடத்தில் டாக்டர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வது முறை என்று நினைக்கிறேன். எனக்கு ட்ரீட் செய்த எந்த டாக்டர்களும், 'நான் டாக்டர்' என்று நடந்து கொண்டதில்லை. அமைதியாக, 'நான் 'நெட்'டில் பார்க்கும் போது இந்த விஷயம் தெரிய வந்தது, இது எனக்கு அப்ளை ஆகுமா என்று புரியவில்லை. இது நீங்கள் நன்றாக விளக்கக் கூடும் என்பதால் கேட்கிறேன்' என்று நான் கேட்கும் விஷயங்களை, பொறுமையாக, ஒரு ஊசி முதற்கொண்டு, ஏன் போடுகிறோம் என்று விளக்கியிருக்கிறார்கள்.

சில வயதான டாக்டர்கள் கண்டிப்பாக (கடுமையாக அல்ல) இருப்பார்கள். இளம் டாக்டர்கள், நோயாளியை நண்பனாக நினைத்து உரையாடுகிறார்கள்.

ஒரு முறை, நான் ஆபரேஷன் டேபிளில்  'கவுந்தடித்த பறவை' யாக கை கால்கள் கட்டப்பட்டு, (ஸ்டாண்ட் கொடுத்துதான்) இருந்த போது, அடுத்த தியேட்டருக்கு (ஆபரேஷன் தியேட்டர்தாங்க) போன அனஸ்தீஷியா டாக்டர் வரத்தாமதமானது. முதல் நாள் கிருஷ்ண ஜெயந்தி. என்னருகில் இருந்த டாக்டர், 'நீங்க சீடை கொண்டுவந்திருப்பீங்கன்னு நினைச்சாரு, இல்லை ன்னதும் கோவிச்சுட்டுப் போயிட்டாரு' என்று ஜாலியாகக் கிண்டலடித்து மூடை மாற்றினார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நோயாளிகளை, 'இந்த டெஸ்ட் இங்க வேண்டாம், நிறைய செலவாகும், இந்த இடத்தில் போய் எடுத்துட்டு வாங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டு, பின் அவர்கள் ரிப்போர்ட் கொண்டு வந்ததும், 'இவங்க இப்போதான் இந்த டெஸ்ட் முடிச்சுருக்காங்க, இதை ரிபீட் செய்ய வேண்டாம்' என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் சமாளிக்கும் டாக்டர்கள் எனக்குத் தெரியும்.

அது போல, புகுந்த வீட்டில் மனநிலை சரியில்லை என்று சொல்லி, ஷாக் ட்ரீட்மென்ட்  கொடுக்கவென அவர்கள் அழைத்துவந்த ஒரு மருமகளை விசாரித்து, உண்மை அறிந்து, தானே போன் போட்டு அவள் பிறந்த வீட்டுக்குச் சொல்லி, பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவளைக் காப்பாற்றிய உன்னத மருத்துவரை நான் அறிவேன்.

இறுதியாக ஒரு வார்த்தை. மிகக்குறுகிய மனித வாழ்வில், உறவு, நட்பின் அருமையை உணர்த்தும் அற்புதப் பள்ளிக்கூடம் மருத்துவமனை என்றால் அது மிகையில்லை. வாழ்வில் அனைத்துப் பரிமாணங்களும் நிதர்சனமாகக் காணக்கிடைக்கும் இடம் அது. உப்புப் பெறாத காரணத்துக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனைக்கு வந்த ஒரு பையன், அங்கும் தன் முயற்சியைத் தொடர, மருத்துவமனையே கூடி நின்று அவனுக்கு அட்வைஸ் செய்தது போன்ற சம்பவங்கள், 'எனக்கென்ன' என்று போகாமல், அடுத்தவரின் பால் அக்கறை கொண்ட நம் மண்ணின் தனித்துவத்தைப் பற்றி என்னை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கின்றன.

ஒற்றைப் பிள்ளை, கண் எதிரில் விபத்துக்குள்ளாகி, கோமாவில் இருக்கும் போது, மனதில் அத்தனை வேதனையையும் தாங்கிக் கொண்டு,  தான் பூஜை செய்த பிரசாதங்களை, அந்த வார்டில் இருந்த நோயாளிகள் அனைவருக்கும் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் நலம் பெற வாழ்த்துவதோடு நில்லாமல், டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போகும் நோயாளிகளைப் பழக்கூடை தந்து வாழ்த்தும் வயதான அம்மா மாதிரி உன்னத மனிதர்கள் கண்முன் நடமாடுவதை அறியும் போது, நாம் தேவையில்லாத நாள்பட்ட குரோதம், வெறுப்பு முதலிய விஷச்செடிகளை மனதிற்குள் வளர்த்து அதற்கு முதல் பலியாவது எவ்வளவு அபத்தம் என்று புரிந்தது.

ஆயிரம் கோடிப் பணம் இருக்கட்டுமே, அன்பான வார்த்தைகள் தரும் மனிதர்கள் நம் பின்னால் இருப்பது தனி பலம். 'இதுதான் வாழ்க்கை' என்று கண்முன் தெரியும் போது, வேண்டாத வெறுப்புகளைக் கழித்து, வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் கூட்டுவது நம் கையில் தான்.  நான் கற்ற மருத்துவமனை அனுபவப் பாடங்களில் இதையே முதலாவதாக நினைக்கிறேன்.

ஆஸ்பத்திரியில் இருப்போருக்கு பண உதவி செய்வது மிகப்பலரால் முடியாத காரியம். உடல் உழைப்பால் உதவ முடிவது கூட சிரமமாக இருக்கலாம். நேரமிருப்பின் நேரில் பார்த்துச் சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, இல்லாவிட்டால் ஒரு போன் காலில் நலம் விசாரிப்பது, நம் உறவு, நட்பு வட்டத்தில் ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்கும்.

அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன். பெங்களூரு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2


Contribution to my nation 
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

என் அம்மான் சேய் (அம்மாஞ்சி) திரு.எஸ். கிருஷ்ணகுமார் அனுப்பிய மின் அஞ்சலை பிரசுரத்திற்கு அப்படியே தருகிறேன்.மொழி  மாற்ற‌ நேரமில்லை. மேலும் மொழி பெயர்த்தால் அதில் உள்ள 'வேகம்' போய்விடும் என்றும் தோன்றியது.ஆங்கிலத்தில் இருப்பதால் எல்லா மொழிக்காரர்களும் படித்துப் புரிந்து கொள்ளவும் தோதாக இருக்கும் என்று எண்ணி அப்படியே தருகிறேன்.

ஏனெனில் அதனுடைய கருத்து (யுனிவெர்சல்) உலகளாவியது.

Over to S.Krishnakumar
=============================================
Dear Earthly Siblings !

It was a blessing in disguise for me last month when my motor bike developed a technical snag. I was looking forward to the opportunity to get out of this tiresome peak hour journey's of moving inch by inch driving a vehicle.

I started going by public transports- Bus, Train & Share Auto ( Only by Tata Magic Not by Piaggio). Within few days around May 20th- there was  a Petrol price rise- non-availability of Petrol- lot of queues in Petrol Bunks- I was happily zipping past those bunks without any need to wait.

I could save 12 Litres of Petrol at least in this period. My (in) significant contribution towards my nation -
- I am now less polluting
- I could save few dollars for my country- especially when Rupee is shedding tears @Rs.56/ Dollar
- I could shed extra calories from my tummy
- My share towards unwanted expenditure of Govt. has come down
- I have increased my tolerance limit by traveling in Public Transports

I am looking forward to days where I could freely walk on roads with no vehicles ,with everyone around me so happy to walk leisurely in the road without the fear of vehicles, with no vehicles parked on the roads- I don't need to zig zag even in a tiny lane. I don't need to run for my life to cross a road. Every dog could happily run across without being hit.

It is Possible -
 When I care for You &
            you care for me!

         You don't Car for a nearby store
you don't buy a car without a place to store
        don't roar your bike my ears are sore
             we have nothing left to tore

        Don't drive to save time
            life is wonderful to lie lame

         Please care for Me
I don't want to die on the road.

Best Regards
 S. Krishna Kumar
============================================================
பி.கு:
"போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட" என்று பாடலாம்.

ஐயாவின் அலைபேசி அழைப்பு, மற்றும் பல நண்பர்களின் அறிவுரைப்படி வகுப்பறையில் தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளேன்.

இதில் முக்கியப் பங்கு டெல்லி உமாஜிக்குத்தான். என் ஆக்கங்களில் பலவற்றை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.பல ஆக்கங்களின் தலைப்பை எழுதாமல், கருவின் முக்கியப் பகுதியை/சொற்களைக் கோடிட்டுக் காட்டி எழுதியிருந்தார்.அதிலிருந்து என் எழுத்தும் ஏதோ ஒரு மூலையில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தோன்றியது.மனதில் மகிழ்ச்சி தோன்றியது.

ஒரு படைப்பாளிக்கு வேறு என்ன வேண்டும்? 
ஒரு பாராட்டும் வாசகன்/வாசகி 
அவர்கள்  இருக்கும் வரை என் எழுத்துப் பணி தொடரும்.
நன்றி!
வாழ்க வளமுடன்!
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

ஒடிஸி ஆட்டம்
வரைபடம்
வரைந்து அனுப்பியவர்: தேமொழி


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
(இந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த சகோதரி 
தேமொழி அவர்களுக்கு நன்றிகள் .)

மாலைகொடு வீரைய்யா!
ஆக்கம்: தனுசு

வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டிதனம் ஏனைய்யா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னை
கட்டிக் கொண்டு போய்யா!

முருக்கு மீசை மாமனே!
திறுக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.

எட்டு பத்து சிங்கக்குட்டி
பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
மயிலக்காளை பொன்னையா! .

விடலைக்கோழி விரட்ட
வேட்டைக்காரன் ஓடாதே!
வெட்கப்பட்டு தப்பாதே
வச்சக்குறி மீளாதே!

கடைசி மாமன் பெண்குட்டி
என்னைவிட சிறுகுட்டி-அவள்
மூனுமாசம் முன்னாடி
முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

ஓலமிதை கேட்பாய்யா-மனக்
கோலம் கான வருவாய்யா -எங்கள்
வாத்தியார் பெயர் சுப்பையா
அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

தப்புத்தாளம் இல்லையா!-இது
தப்புத்தாண்டா இல்லையா!
ஊரைக்கூட்டி சொல்லையா!
ஊமத்துரை பேசய்யா!

நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
காவக்காரன் இல்லாட்டி -நரி
ஊளையிடும் வாலாட்டி.

காடுகரை காக்கும் வேலய்யா!
அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!
-தனுசு-

------------------------------------------
5


சந்தணம் மணக்கும் என்றாலும் சமையலில் சேர்ப்பதில்லை!
ஆக்கம்: தனுசு

விபத்தே
உனக்கொரு விபத்து வந்து
சேராதா?
உயிரிழக்க மாட்டாயா?
அல்லது
உன் கோரக் கைகால்கள்
அடிப்பட்டு ஊனமாகாதா?

ஏனென்றால்
அதனால்
எங்களுக்கு
விபத்து நேராதல்லவா?
அல்லது
விபத்தின் போது
உன் கொடுரம் குறையுமல்லவா?

எங்கும் இருப்பவன் இறைவன்
என்பது போல்
நீயும் எங்கும் எதிலும்
நீசமற நிறைந்திருக்கிறாய்.!

நீ
பிரதானமாய் சாலையை
தேர்ந்தெடுப்பது ஏன்?
நாங்கள்
சாலை விதிகளை மீறுகிறோம் என்பதாலா?

எங்கள்
பார்வையும் நினைவும்
இரு துருவங்களாகும் போது
நீ
விபத்தில் விருந்தே தந்துவிடுகிறாய்!

எங்கள்
ரோமியோக்கள் வாகனத்தில்
தங்களின் ஜூலியட்டுக்காக
சாலையில் எட்டு போடும் போது
நீ
ஏழரையாய் வந்து விடுகிறாய்

எங்கள்
நடபாதை பாடகர்கள்
ராகலீலையில் சரிகம பாடும்போது
நீ
எமனாய் வந்து எதிர்பாட்டுத் தருகின்றாய்.

எங்கள்
விடலைகள் வளைவை வெற்றிகொள்ள
வேகத்தை விரட்டும் போது
நீ வளையாமால்
உயிரை எடுத்துக்கொள்கிறாய்

எங்கள்
உற்சாகபான ராஜாக்கள்
இருவாகனத் தேரில்
சொர்க்கபுரி தேடும்போது
நீ
தேடி வந்து
தேர் ஏற்றி மாலைபோட்டு விடுகிறாய்.

எங்கள்
பண வசதிக்கு ஏற்ப
ஓடும் ஊர்தியில் ஏறும் அவசரத்தில்
பிசகினால்
நீ
எங்களை
பிண ஊர்தியில் ஏற்றிவிடுகிறாய்.

எங்களுக்கு
உன்னால் உண்டாகும்
வலியும் வேதனையும் விட
எங்கள் குடும்பத்தாருக்கு
நீ
தரும் வலியும் வேதனையும்
அதிகம், அதிகம்.

சந்தணம் மணக்கும் என்பதால்
சமையலில் சேர்ப்பதில்லை!
சாகசம் தெரியும் என்பதால்
சாலையில் செய்யக்கூடாதுதான்.

தங்கத்திற்கு மாற்று உண்டு
எங்கள் அங்கத்திற்கு மாற்று இல்லை!
உறைவை கொடுக்க பலர் உண்டு
ஆனால்
உயிரை கொடுப்பவர் யார்?

வெட்ட வெட்ட முளைக்க
எங்கள் உடல் என்ன வாழையா?
ஒன்று போனால் இன்னொன்று வர
உயிர் என்ன ஒன்பதா?

புரிந்து கொண்டோம்.
சமரசம் ஒன்று செய்துகொள்வோம்!
இனி...
சாலை விதிகளை மதிக்கிறோம்
நீயும் உன் பாசக்கைகளை
விலக்கி கொள்.
உன்னை மதித்தால்
உண்டுவாழ்வு அல்லவா!

-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6

வைத்தீஸ்வரன் கோவில்
ஆக்கம்: சரவணன், திருவாரூர்

சிந்துஜாவிற்கு 2 வயது 6 மாதம். திடீரென்று உடலில் மிக அதிக அளவிலான வீக்கம். நீர் பிரிவதில் சிக்கல். உள்ளூரில் வைத்து எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் பலன் இல்லாமல் தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவர் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள சிறப்பு நிபுணரிடம் செல்ல பரிந்துரைத்தார். குழந்தையை தூக்கிக்கொண்டு அதன் பெற்றோர்கள் இரவு முழுவதும் பேருந்தில் பயணம் செய்து காலை 6 மணிக்கே அந்த மருத்துவர் வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள்.

குறைந்தது 70 வயதாவது இருக்கும் அந்த மருத்துவருக்கு. தூக்கம் போய்விட்டது அவர் கூப்பாடு போடவில்லை. விஷயத்தை கேட்டுவிட்டு குழந்தையின் சுவாசத்தை கவனித்தார்.. பிறகு சில பரிசோதனைகளை எழுதிக்கொடுத்து, அந்த பரிசோதனைக்கூடத்திற்கு செல்லும் வழியைக் காண்பித்ததுடன் வழியில் உள்ள இரண்டு மூன்று ஹோட்டல்களைப் பற்றிக் கூறி அங்கே சாப்பிட்டுவிட்டே போகலாம். 8 மணிக்கு முன்னால் பரிசோதனைக்கூடத்தில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று அனுப்பி வைத்தார்.

மாலையில்தான் பரிசோதனையின் முடிவுகள் கிடைத்தன. ""தஞ்சாவூர்லேருந்து அந்த டாக்டர் என்கிட்ட அனுப்பினதும் அவரை விட நான் பெரிய டாக்டர்னு நினைச்சுடாதீங்க. அவரே நல்ல டாக்டர்தான். அவருக்கு நோயைப் பத்தி புரியாம அனுப்பலை. ஒரு விஷயத்தைப் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்ச ரெண்டு பேர் கலந்து ஆலோசனை செஞ்சா புதிய கோணத்துல தீர்வு கிடைக்கும்னுதான் அவர் என் பேரை பரிந்துரை செஞ்சிருக்கார்.

குழந்தைக்கு பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை. பெட்ரோல் போட்டா வண்டி ஓடுற மாதிரி புரதச் சத்து மனிதனை இயங்க வைக்கிது. அந்த புரதம் மனிதனோட சிறுநீர்ல 5 முதல் 10 என்ற அளவில்தான் வெளியேறணும். ஆனா இந்த குழந்தைக்கு 150 முதல் 170 வரை வெளியேறுது. அதுதான் இந்த குழந்தைக்கு உடல் முழுவதும் இவ்வளவு மோசமா வீங்குறதுக்கு காரணம். அதோட சிறுநீரகம் உப்பை பிரிக்கிற வேலையை செய்யுறதுக்கும் கஷ்டப்படுது.

சல்லடையில பெரிய ஓட்டை இருந்தா அதுல எதைப் போட்டு சலிச்சாலும் அது எல்லாம் அப்படியே கீழே வர்ற மாதிரி புரோட்டீன் வெளியேறிடுது. இதுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவத்துறையில ஆராய்ச்சிதான் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த பிரச்சனை லட்சத்துல ஒருத்தருக்கு வர்றதே அபூர்வம். புரோட்டீன் வெளியேறுறதை தடுக்க முடியலைன்னா என்ன, அதை அதிகமா குழந்தைக்கு கொடுத்துட வேண்டியதுதான். ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் இதுமாதிரி உப்பு அதிகமா இருக்குற பண்டத்தை கொடுக்கவே கூடாது. நிலக்கடலை, பயறு இது மாதிரி புரதச்சத்து இருக்குற உணவை அதிகமா கொடுக்கணும். கடலையை வறுத்து கொடுத்தா உப்பு போட்டு திங்க சொல்லும். ஆனா கடலை மிட்டாயா செஞ்சு கொடுக்கலாம். இப்படி புரதத்தை குழந்தைக்கு அதிகமாக சேர்க்க என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க. இப்போ 3 மாசத்துக்கு மருந்து எழுதித் தர்றேன். இது இப்போ இந்த குழந்தைக்கு இருக்குற மோசமான உடல்நிலையை மீட்டு கொண்டு வர்றதுக்கு மட்டும்தான். அப்புறம் மருந்து மாத்திரை தேவையில்லை. சாப்பாட்டில் கட்டுப்பாடு முக்கியம்.

இந்த மாத்திரை, மருந்து சாப்பிட்டும் உடலுக்கு கோளாறுன்னா என்னைத் தேடி வரணும்னு இல்லை. தஞ்சாவூர்ல நீங்க பார்த்த டாக்டர்கிட்டயே ஆலோசனை கேட்கலாம். '' என்று பொறுமையாக அவர் பேசிய விதத்திலேயே குழந்தையின் தாய்க்கு நம்பிக்கை வந்துவிட்டது.இந்த சம்பவம் 2008 பிப்ரவரியில் நடந்தது. உடன் சென்றிருந்த எனக்கு, சென்னையில் இப்படி ஒரு டாக்டரா? என்று வியப்பு. இவருக்கு இயல்பாவே இந்த குணமா? இல்லை...ரொம்ப பாவம் பண்ணி அதனால பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு வந்த ஞானோதயமா அப்படின்னு என் மனசுல சந்தேகம் வந்தாலும் அதை கேட்கவில்லை.

அந்த மருத்துவர் கொடுத்த மருந்துகளை கொடுத்துவந்ததுடன் அவர் சொன்னபடி அந்த குழந்தைக்காக குடும்பமே உணவுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. குழந்தையின் தந்தை, அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தன்று வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தார். 6 மாதங்கள் தொடர்ந்து சென்ற அவரிடம், எவ்வளவு நாள் இந்த மாதிரி போவதாக உத்தேசம் என்று கேட்டேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை என்றார்.

தினமும் வேலைக்கு செல்வதைப் போல் ஒவ்வொரு மாதமும் அவர் மகளின் ஜென்ம நட்சத்திரத்தன்று குடும்பத்துடன் அல்லது இவர் ஒருவராவது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்வது வழக்கமாகிப் போனது. புரோட்டீன் வெளியேறுவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர் சொன்னதைக் கேட்ட அந்த குழந்தையின் தந்தை முழு பாரத்தையும் வைத்தீஸ்வரன் கோயில் சுவாமியின் மீது இறக்கி வைத்துவிட்டார் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. அதற்காக சாமி பார்த்துக்கொள்ளும் என்று அலட்சியமாகவும் அவர் இருக்கவில்லை. குழந்தையின் சாப்பாட்டு விஷயத்தில் அவர் மனைவியை விட இவர் அக்கறையுடனும் கண்டிப்புடனும் இருப்பதை நான் அறிவேன். அது மாயமா, மந்திரமா என்று எனக்கு புரியவில்லை. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக குழந்தைக்கு எந்தபிரச்சனையும் இல்லை.

உறவினர் வீட்டிலோ, திருமண இடத்திலோ எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிட்டால் மட்டும் அந்தக்குழந்தைக்கு ஒத்துக்கொள்வதில்லை. இரண்டு மூன்று முறை அவஸ்தைப்பட்ட பின்னர் அந்த விஷயத்திலும் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த விஷயத்தை நான் மறந்தே போனேன். இப்போது ஏன் அது என் நினைவில் வந்தது தெரியுமா?
***********************************************************
Bhogar said...

    மேற்கொண்டு தனக்கு எதுவும் அறுவை சிகிச்சை நடக்குமோ என்று,
    இவன் பயப்படுகிறான்.அகத்தியனை நம்பி வந்ததால்,
    இவனுக்கு அந்த துன்பம் ஏற்ப்படாது.

    ஒவ்வொரு மாதத்தில் வருகிற,இவனுடைய ஜென்ம நட்ச்சதிரத்தில், வைத்தியனுக்கெல்லாம் வைத்தியனாகிய,வைத்தீஸ்வரன்கோவிலில்,குடி கொண்டுள்ள ஈசனை,வைதீஸ்வரனை,வணங்கி வர வேண்டும்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு,பணம் இல்லாத ஏழைகளுக்கு,தன்னால் முயன்ற அளவிற்கு,பொருளுதவி செய்து வரவேண்டும்.

    இந்த இரண்டு வழிமுறைகளை,வாழ்க்கை முழுவதும் அனுசரித்து வந்தால்,அகத்தியன் அருளால் நலமோடு வாழ்வான்.    என்று அருள்வாக்கை முடித்தார்.

    இந்த அருள்வாக்கை கேட்ட பெரியவர்,சிறிது நேரம் சிலை போல் அமர்ந்து விட்டார்.

    தன்னுடைய உடல் சார்ந்த,துன்பத்திற்கெல்லாம்,  தன் முன் ஜென்ம கர்மவினைகள் தான்,காரணமென்று உணர்ந்து கொண்டதாகவும்,
அகத்தியர் கூறியபடியே,இனி நடப்பதாகவும் உறுதி எடுத்தார்.

    அகத்தியரின் ஜீவ நாடியை தனக்கு அறிமுகப்படுத்தியதற்கு,எனக்கு நன்றி கூறினார்.   அகத்தியர் கூறியபடி நடந்ததால்,அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் கடைசி வரை வரவில்லை.

    இது போல் பல முற்பிறவி அனுபவங்களை,நாடி மூலம் எனது,     சொந்த  செலவிலே ஆராய்ந்து உள்ளேன்.

    இது போல் பலரின் முற்பிறவி கர்மவினை அனுபவங்களை,ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு தெரிந்த உன்மை இது தான்.

    ''காரணமின்றி இவ்வுலகில் காரியம் எதுவும் நடப்பதில்லை.நாம் இன்று அனுபவிக்கிற இன்பம் துன்பத்திற்கான காரணங்கள்,நம்முடைய முற் பிறவிகளில்  உள்ளது''.

    ஓம் சரவணபவ நம
********************************************************************
அகத்தியர் சொன்னதாக  20ஆம் தேதி பதிவுக்கு போகர் எழுதிய பின்னூட்டத்தில் படித்ததும் சிந்துஜாவின் தந்தையிடம் ""வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தில் சென்று வணங்கி வரவேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை சொன்னது யார்'' என்று கேட்டேன்.

யாரும் சொல்லவில்லை. பொதுவாக வியாதிகளை குணப்படுத்தும் கடவுள் என்ற நம்பிக்கை இருப்பதால் நானாவே வேண்டிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் சென்று வருகிறேன் என்றார்.

இறைவனின் திருவிளையாடலை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில் வாசலில் குடியிருப்பவனுக்கு கூட இப்படி ஜென்ம நட்சத்திரத்தில் சென்று வழிபடவேண்டும் என்ற நினைப்பு வராமல் போயிருக்கலாம். அல்லது யாரும் சொல்லாமல் இருக்கலாம். இரண்டு மூன்று மணி நேரம் பயணம் செய்து அந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று வழிபட வேண்டும் என்று அவர் மனதில் தானாகவே தோன்ற என்ன காரணமாக இருக்கும்?

எனக்கு தெரிந்த காரணம், அந்த குழந்தையின் தந்தை ஒரு சிவாலய அர்ச்சகர். அவர் பிழைப்பிற்காக பல கோயில்களில் பூஜை, ஹோமம், அர்ச்சனை என்று சென்றாலும், வீட்டு வாசலில் உள்ள கோயிலில் வேறு வருமானம் இல்லாமல் இருந்தாலும், கிணற்றில் இருந்து குடத்தின் மூலம் நீர் இறைத்து,
7 லிங்கம் உட்பட எல்லா சாமிகளுக்கும் அபிஷேகம் செய்து வரும் புண்ணியம்தான் அவர் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்றக்காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கோயிலுக்கு இப்போ எந்த வருமானமும் இல்லை. திருப்பணி நடைபெற்று வரும் அந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தால் குறைந்தது
5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். தண்ணீர் பிடிச்சு அபிசேகம் செய்வதற்கும் எல்லா சன்னதியிலும் பைப் போட்டுடுவாங்க. அப்போ உங்கள் அண்ணனை குருக்களாக நியமித்தால் என்ன செய்வீர்கள் என்று சிலர் அவரிடம் கேட்டார்கள். பரவாயில்லை அவரே பூஜை செய்யட்டும். அவரால நிறைய இடங்களுக்கு அலைய முடியாது. நான் நாலு இடத்துக்கு அலைஞ்சு பூஜை செய்ய தயாரா இருக்கேன். அது மட்டுமில்லாம அந்த கோயிலுக்கு சம்பளமா அப்பாவுக்கு வந்த நெல்லை அரைச்சுதான் நாங்க சாப்பிட்டு வளர்ந்துருக்கோம். அப்படி இருக்கும்போது சாமியை பட்டினி போட எனக்கு மனசு வராது. அதனால என்னால முடிஞ்ச அளவு தண்ணீர் இறைச்சு தினமும் அபிஷேகம் செஞ்சுடுவேன் என்றார்.
***********************************************
இது உண்மைச்சம்பவம் என்பதால் குழந்தையின் பெயரை மாற்றியிருக்கிறேன். மற்றவர்களின் பெயர்களையும் குறிப்பிட வில்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7



கண்ணன் என் காதலன்
ஆக்கம்: புவனேஷ்வர்

பல்லவி:
காதலெ னும்மது வுண்டோம் – கோதையர்
மாதவ னாஞ்சிறு மாமல ரான்மிசை
காதலெ னும்மது வுண்டோம்;

அனுபல்லவி:
ஆதியி லாதியெம் மாயனவ் வேய்துளை
யூதிவ ருங்குழ லாயன ருந்தவர்
ஓதும றைபொரு ளானமு குந்தனின்
கோடிநி லாவொளி சோதிப தம்மிசை
(காதலெனும்)

சரணம்:
போதல்ம றந்தவன் காதலி னால்தரு
போதிநி ழல்துற வோனிகர் ஞானியர்
காதலு டன்னுற வாடிம கிழ்திரு
மாதவ னில்கலந் தேகிடவே யொரு
(காதலெனும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8

மென்பொருள் பொறியாளர்கள் படும் பாடுகள்!
படத்தை அனுப்பியவர்: ஜி.ஆனந்தமுருகன்
படத்தைக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++


நகைச்சுவை
பெருமைக்குரிய நமது அடுத்த குடியரசுத் தலைவர்!
படத்தை அனுப்பியவர்: ஜி.ஆனந்த்முருகன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Humour
Bad news, Good news, and Great news
Sent by S.Sabari Narayanan, Chennai

The day after his wife disappeared in a kayaking accident, an Anchorage man answered his door to find two grim-faced Alaska State Troopers.
"We're sorry Mr. Wilkins, but we have some information about your wife", said one of the troopers.
"Tell me! Did you find her?" Wilkins exclaimed.
The troopers looked at each other.  One said, "We have some bad news, some good news, and some really great news.  Which would you like to hear first?"
Fearing the worst, the ashen Mr. Wilkins said, "Give me the bad News first."
The trooper said, "I'm sorry to tell you, sir, but this morning we found your wife's body in Kachemak Bay.
"Oh my Gosh,"  exclaimed Wilkins. Swallowing hard, he asked, "What's the good news?"
The trooper continued,  "When we pulled her up, she had 12, twenty-five pound king crabs and 6 good sized Dungeness crabs clinging to her and we feel you are entitled to a share in the catch."
Stunned, Mr. Wilkins demanded, "If that's the good news, then what's the great news?"
The trooper replied, "We're going to pull her up again tomorrow..!!!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.6.12

Poetry கவிதைச் சோலை: உறவாக வந்தவள்!

 Poetry கவிதைச் சோலை: உறவாக வந்தவள்!

தான்பெற்ற செல்வனை ஏன்பெற்றோம் என்றுதான்
      தாயன்று மாண்டு போனாள்
தந்தையும் இப்பிள்ளை உருப்படா தென்றுதான்
      தணலிலே வெந்து போனான்
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்
      உயரத்தில் ஒளிந்து கொண்டான்
உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டுமே
      உறவாக வந்து நின்றாள்
வான்பெற்ற பேறுபோல் யான்பெற்ற தமிழிலே
      வாழ்கிறேன் வண்ண மயிலே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

Devotional மூதாட்டி பாடிய முருகன் பாடல்


Devotional மூதாட்டி பாடிய முருகன் பாடல்

பக்தி மலர்

தமிழ் மூதாட்டி பாடிய முருகன் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பலமுறை கேட்டதுதான். இருந்தாலும் இன்றும் ஒருமுறை கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
காணொளி:
http://youtu.be/cqiTqFaDveQ
Our sincere thanks to the person who uploaded the song




ஒளவையார் பாடிய பாடல் வரிகள்:

1. அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல்

2. கொடியது
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானே!

3.பெரியது
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

4. இனியது
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!
-----------------------------------
கீழே உள்ள பாடல் கந்தன் கருணை படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியது

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கும் வேலும்... மயிலும்...புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவது (முடிவு அது)
முடிவில் முதல் அது
முதலில் முடிவது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

21.6.12

Astrology Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?


Astrology  Popcorn Posts முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி  ஏன்(டா) பயமுறுத்துகிறீர்கள்?


பாப்கார்ன் பதிவுகள் - பகுதி 5

”இன்றைய வாழ்க்கையில் ஏன் இத்தனை துயரங்கள், துன்பங்கள், தொல்லைகள் என்றால், ஜாதகப்படி முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே (உரியதாகவே) அடுத்த பிறவி அமையும். ஆகவே முற்பிறவியின் கூட்டுப் பலன் தான் இப்பிறவி என்று சொல்கிறார்கள். ஒரே வார்த்தையில் கர்மவினை என்கிறார்கள். வாத்தியார் என்னடாவென்றால் வாங்கி வந்த வரம் என்கிறார். அப்படி முற்பிறவியில் என்னதான் செய்தேன்? அதைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?”

”இருக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளைக் கோடிட்டுக் காட்டும்.”

”எப்படி?”

”கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 என்று தீய வீடுகளில் போய் படுத்திருந்தாலும்,  ஜாதகன் முற்பிறவியில் புண்ணியத்தைவிட பாபங்களையே (பாவங்களையே) அதிகமாகச் செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சில கிரகங்கள், குறிப்பாக சுபக் கிரகங்களான, குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஜாதகன் முற்பிறவியில் புண்ணியங்களை, தர்மங்களை அதிகமாகச் செய்திருக்கிறான் என்றும் தெரிந்து கொள்ளலாம்.”

”கோடிட்டுக் காட்டாமல், விளக்கமாகச் சொல்ல வழி இல்லையா?”

”இருக்கிறது. அதற்கு பிரசன்ன ஜோதிடம் உங்களுக்கு உதவும்.”

”பிரசன்ன ஜோதிடமா? அது என்ன புதுக் கரடி?

”நடைமுறை ஜோதிடத்தைப்போல, அதுவும் ஜோதிடத்தின் வேறு ஒரு பகுதி. நடைமுறை ஜோதிடத்தில் இருந்து அது முற்றிலும் மாறு பட்டது. பிரசன்ன ஜோதிடம் மிகவும் விரிவானது. பிறகு ஒரு சமயம், நேரம் கிடைக்கும்போது, அதை விரிவாக - தொடராக எழுதலாம் என்றுள்ளேன். என்னிடம் பழைய நூல் ஒன்று உள்ளது. அதைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும். ஏராளமான  வடமொழிச் சொற்கள்.முதலில் நான் ஒரு வடமொழி தெரிந்த வாத்தியாரை வைத்து அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் விரிவு படுத்தி எழுத முடியும். என் நடையில் அனைவருக்கும் புரியும்படி எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்சமயம் நேரமில்லை. ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
Prasanna or Horary Astrology

The Prasanna branch is another unique division of Vedic Astrology. When a person asks a question to an astrologer, based on the time at which the question is asked, a horoscope is made for that time and date. With the help of this chart the astrologer predicts about the events that are going to take place. There are several types of Prasanna systems and it is almost a separate science by itself. Normally the Prasanna chart is studied along with the birth chart to give an additional dimension to predict the results correctly.

Horary Astrology is based on Hora or Hour.  Its principles are  similar to the principles of Natal Astrology.  Some factors which are unknown to Natal Astrology is known to Horary. For instance, a person may not have his time of birth. So he asks the Astrologer  questions and these questions are answered by Horary.

Karma =  The consequences of our past actions in this and previous lifetimes.
-------------------------------------------------------------------
முற்பிறவி

பிரசன்ன ஜோதிடத்தின் இன்னொரு பிரிவில், முற்பிறவியைக் குறித்து தெரிந்து கொள்ளும் வழி உள்ளது.

பிரசன்ன ஜோதிடத்தில், முற்பிறவியைக் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரத்தை வைத்து அந்த நிமிடத்திற்கான ஜாதகத்தைக் கணிப்பார்கள்.  கணிக்கப்பெற்ற ஜாதகத்தில், கீழ்க்கண்டவாறு வீடுகளை எடுத்துக் கொண்டு, ஜாதகனின் முற்பிறவியைச் சொல்வார்கள். முற்பிறவியில் அவன் செய்த சேட்டைகளூம், தேட்டைகளும், போட்ட ஆட்டங்களும், போட்ட ஆட்டைகளும் தெரியவரும்.

புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் செய்த புண்ணியங்களும் தெரியவரும்!

அவ்வாறு கணிக்கப்பெற்ற முற்பிறவிக்கான பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 9ஆம் வீடுதான் லக்கினம்: அதை வைத்து கர்மாவின் சுயரூபத்தைச் சொல்வார்கள் (Karma Swarupa)

10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)

இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!
---------------------------------------------------
இடைச் சேர்க்கை:

வடமொழிச் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை நமது வகுப்பறை மாணவர் திரு.ஸ்ரீகணேஷ் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தார். பதிவைப் படிப்பவர்களுக்கு அவைகள் உடனடியாகப் பயன் படட்டும் என்று பதிவில் உள்ளிட்டிருக்கிறேன். அன்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

10ம் வீடு கர்ம தனம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
सहाय ‍இதற்கு பின்பற்றுவோர், கம்பானியன், உதவி செய்பவர், வேலைக்காரர்கள் என்று லிஸ்ட் போடலாம்.
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
இதில் அதிகாரணா வில் வரும் "த" என்ற எழுத்துக்கு ஏற்ப அர்த்தம் கொள்ளலாம். முதன்மையான காரணம், (அ) மேற்பார்வையிடுதல் அதாவது சூப்பர்வைசிங்
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
பூத என்ற பூதம் என்ற பொருளில் கெட்ட என்றும் கொள்ளலாம், வஸ்து என்றால் பொருட்கள், பஞ்சபூதம் என்ற சொல்லில் வரும் அந்த அர்த்தமும் வரலாம். தேவ நாகரி எழுத்துக்களுக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
இதில் நாசகர்ணா (அ) காரண வா என்று தெரியவில்லை. காரண என்பது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது...அப்படி என்றால் நாசத்திற்கு காரணமான என்று எடுக்கலாம்...
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
சஹசார்யம் என்றால் தர்மபத்தினி அல்லது சகவாச தோழி என்றும் கொள்ளலாம்.
4ம் வீடு கர்ம ஆயூஸ் (Karmayus)
இது ஆயுள்
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
மேல் சொன்ன மூன்றும் நார்மல் அர்த்தம் தான். பாக்கியம், வியாபாரம், லாபம்
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
வ்யாயா என்பது செலவு, விரையமாகுதல்,என்று வெவ்வேறு பொருள் வரலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++====
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20.6.12

Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?


Astrology - Popcorn Posts அறுவை சிகிச்சை யாருக்கு, எப்போது ஏற்படும்?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி நான்கு!

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை?

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery.

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு
வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள்.

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி?

அதை இன்று பார்ப்போம்!

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது.

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும்  செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் -  பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட  நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின்
பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு
சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை
சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து,
அறுவை சிகிச்சைக்கு  உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும்
++++++++++++++++++++++++++++++++
“வாத்தி (யார்) அதென்ன புதிதாக பாப்கார்ன் பதிவுகள் என்ற பெயர்”

“ராசா, கொறிக்கும்படியாக ஒரே ஒரு மேட்டரை (செய்தியை அல்லது விதியை -astrological rule)  வைத்து, மனதில் பதியும் படியாக எழுதப்பெறும் பதிவுகளுக்கு இனி அந்தப் பெயர்தான்!”

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

19.6.12

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?

Astrology - Popcorn Posts பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன(டா) பயன்?
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி மூன்று!

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரண மடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.

எங்கே பார்க்க முடியும்?

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் (Daily Sheet Calenders) குறிப்பிட்டு இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++

18.6.12

Astrology - Popcorn Posts வாத்தியாராவது எப்படி?


Astrology - Popcorn Posts வாத்தியாராவது எப்படி?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி இரண்டு!

வாத்தியார் என்றால் ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா’ என்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார். அதாவது class teacher!

அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?

பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)

இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும்  புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other

இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!
--------------------------------------
எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.

ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teaching ability) கொடுத்தான். அதனால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

16.6.12

Manavar Malar லால்குடியார் அடித்த சதம்!

 மாணவர் மலர்

நமது வகுப்பறை மாணவர் லால்குடி கே முத்துராமகிருஷ்ணன் அவர்கள் இன்று எழுதியுள்ள கட்டுரையுடன்,  இதுவரை மொத்தம்  நூறு ஆக்கங்களை அவர் அனுப்பியுள்ளார். நமது வகுப்பறையின் சார்பில் அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு முன்னுரிமை தந்து முதல் ஆக்கமாக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். அத்துடன் வேறு ஏழு ஆக்கங்களும் உள்ளன. அனைவரும் படித்து மகிழுங்கள்,

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 லால்குடியார் அடித்த சதம்!

 'மக்கள் சேவையே மகேசன் சேவை’
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்
இது இவருடைய நூறாவது கட்டுரை.
-----------------------------------


'சதமானம் பவதி, சதாயுஷ்'என்று வாழ்த்துவார்கள். 'இன்னும் ஒரு  நூறாண்டு இரும்' என்பது அதற்குப் பொருள்.

அப்படிப் பட்ட‌ வாழ்த்து உண்மையாகவே நாம் அளிக்க வேண்டியவரைப் பற்றியும் அவர் பணிகளைப் பற்றியும் என் நூறாவது ஆக்கத்தில் கொடுப்பது என்று ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் முடிவு செய்தேன்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை', 'நர சேவையே நாராயண சேவை', 'ஜீவ சேவையே சிவ சேவை' என்பது எனக்கு மிக
வும் பிடித்த சொற்கள்.

எந்த ஊருக்குப்போனாலும் அந்த ஊரில் உள்ள நல்ல சேவை நிறுவனத்திற்குப் போவதும், அங்கே அவர்கள் செய்யும் பணிகளை அருகில் இருந்து பார்ப்பதும்,பாராட்டுவதும்,  முடிந்தால் அதனை என் பகுதியில் 'காப்பி'அடித்துத் தொண்டு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதுமாக என் பொழுது கழியும்.

பல தொண்டுகளைத் துவங்கித் தொடர முடியாமல் கை விட்டுள்ளேன். இதற்காக சமுதாயத்திலும், உறவு, நட்பு, குடும்பத்திலும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளேன்.அப்படித் தோல்விகளைச் சந்திக்கும் போதெல்லாம் சுவாமி விவேகானந்தரின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருக்கும்.

"ஒரு நற்செயலைத் தோல்வி பயத்தினால் துவங்கத் தயங்குபவனைக் காட்டிலும் துவங்கித் தோல்வி அடைபவனை நான் அதிகம் நேசிக்கிறேன் " என்பார் சுவாமிஜி.(நினைவிலிருந்து எழுதியுள்ளேன். கருத்தில் மாற்றம் இல்லை. சொற்களில் மாற்றம் இருக்கலாம்)

மனித சேவை என்று வந்துவிட்டால் நான்'எண்ணித் துணிக கருமம்' என்பதை வசதியாக மறந்து விடுவேன்.

1975ல் எனக்குத் திருமணம். நான் புதுமனைவியுடன் இல்லறத்தின் இன்பங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த போது, அதே ஆண்டில், என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது குறைவான,  பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்  ஒரு விபத்தில் தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்.

நான்காம் ஆண்டு பொறியியல் மாணவருக்கு லட்சியக்கனவு, தான் ஒரு கப்பல்படை அதிகாரி ஆக வேண்டும் என்பதே. சின்னக் குழந்தையாக இருந்த போதே கடல் மேல் மிதக்க்கும் கனவில் அந்த மாண‌வன் மூழ்கிவிட்டான்.

அதற்காகவே தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்தான். ராணுவத்தில் நேவி பிரிவைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டான்.  கல்லூரி இறுதியாண்டில் கப்பல் படையில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றிவாகை சூடிவிட்டான்.நேர்முகத் தேர்வு, உடற்பயிற்சி/தகுதித் தேர்வுகளிலும் தொண்ணூறு சதம் வெற்றியே. இறுதியாக ஓர் உடற்பயிற்சித் தேர்வின் போது கைதவறி மிக உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினான்.

நினைவு இழந்தவனை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பல நாட்கள் கவலைக்கிடம் பட்டியலில் இருந்தான். நீண்ட மாதங்கள் சிகிச்சை கிடைத்த பின்னர் உயிர் ஆபத்திலிருந்து தப்பினான் அந்த மாண‌வன்.

அப்போதுதான் அவனுக்கு அந்த அதிர்ச்சிச் செய்தி கூறப்பட்டது.

அவனுடைய கழுத்துக்குக் கீழ் எந்த அவயவமும் இயங்காது. பிறர் உதவியின்றி எந்தச் செயலும் செய்ய முடியாது.

"இப்படி உயிர் வாழ்வதற்கு நான் செத்தே போயிருக்கலாமே!"

மனத்திற்குள்ளும் , வெளியிலும் இந்தக் கேள்வியுடன் மருகினான்.

யாருக்கும் ஏற்படும் மன அழுத்தம் அவனுக்கும் ஏற்பட்டது.

அப்போதுதான்  ஆண்டவனின் குரல்,  பொறுமையுடன் அவனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் மூலமாகக் கிடைத்தது.

"கலங்காதே! நீ உயிர்பிழைத்தது தெய்வாதீனம்தான்.உன்னால் இந்த உலகிற்கு ஆக வேண்டிய நற்செயல் ஏதோ ஒன்று இருக்கிறது.துணிவு கொள்! "

சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊரான ஆய்க்குடிக்கு வந்து சேர்ந்தான்.ஆய்க்குடி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான்.பேச முடியுமே தவிர கைகால்களையோ, உடலையோ அசைக்கக் கூட முடியாது.

சிறிய அளவில் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் நடத்தினான்.

தன்னைப் போல உடல் ஊனம் உற்ற‌வர்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் துவங்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றிய நேரம் நல்ல நேரம்.

பள்ளிக்குப்பெயர் வைக்க வேண்டுமே!அவனுக்கு அதில் எந்தத் தயக்கமும் தோன்றவில்லை. தன் உயிரைக் காப்பாற்றி தனக்கு வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய டாக்டரின் பெயர்தான் முதலில் தோன்றியது.

அமர்சிங் என்ற மருத்துவருக்கு நன்றிக் கடனாக அவர் பெயரிலேயே "அமர் சேவா சங்கம்" 1981ல் துவங்கப்பட்டது.

ஐந்தே ஐந்து மாணவர்களுடன் தோன்றிய அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி இந்த 30 ஆண்டுகளில் ஆல விருட்சம் போல வளர்ந்து பாரத அளவில், ஏன் உலக அளவிலும் கூட‌ ஒரு 'மாடல்', மாதிரிப் பள்ளியாகத் திகழ்கிறது.

அந்தப் பொறியியல் மாணவனின் பெயர் ராமகிருஷ்ணன்.இப்போது அவருக்கும் 57 வயது இருக்கும்.

1991ல் சங்கரராமன் என்ற ஆடிட்டர், அவரும் ஒரு சக்கர நாற்காலியில் வலம் வரவேண்டிய துர்பாக்கியத்திற்கு உள்ளானவர், அமர்சேவா சங்கத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணனையும், அந்தப் பள்ளியையும் கண்டதும் காதல் கொண்டார்.அங்கேயே ராமகிருஷ்ணனுக்குத் துணையாகத் தங்கிவிட்டார்.

இந்த இரட்டையர்களுக்கும், அமர்சேவா சங்கத்திற்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன.

மேதகு அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ராமகிருஷ்ணனின் சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளார்.

www.amarseva.org

மேற்படி தளத்தில் முழு விவரங்களும் கிடைக்கும். அனபர்கள் அனைவரும் அந்த தளத்தினை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

உடல் நிலை ந‌ன்றாக இருக்கும் நம்மால் முடியாத நற்செயலை முற்றிலும் உடல் ஒத்துழைப்புக் கிடைக்காதவர்கள் செய்துள்ள சாதனைகளைப் படியுங்கள். தன்னம்பிக்கை தானாக வரும்.

அவர்களுடைய 2010‍‍‍‍=2011 ஆண்டறிக்கையைப் படியுங்கள். வரவு செலவு தணிக்கை அறிக்கையைப் பாருங்கள். இவ்வளவு துல்லியமான கணக்குக் கொடுக்கக் கூடிய பொது நிறுவனங்கள் இன்று பாரதத்தில் மிகச் சிலவே இருக்கின்றன.

இந்தக் காணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=fCajWROQp_M

உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் உதவ விருப்பம் உள்ளவர்கள் உதவுங்கள். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சொல்லுங்கள்.

அறம் செய விரும்புங்கள்.'அற‌ம் செய்வோரை அந்த அறமே காக்கும்' என்பது வேதம்.

வாழ்க வளமுடன்.
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

பின் குறிப்பு:
இனி என் ஆக்கங்கள் வாரம் தோறும் வெளிவராது. எப்போதாவது மன எழுச்சி தோன்றுமானால் எழுதுவேன்.15 ஆகஸ்டு 2010 முதல் இது நாள் வரை ஒவ்வொரு வாரமும் எழுதியுள்ளேன். பொறுமையுடன் வெளியிட்ட வாத்தியார் ஐயாவுக்கும், படித்து ஊக்கமளித்த மாணவ நண்ப‌ர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2


கண்ணை நம்பாதே!
ஆக்கம்: சதன்ராஜ் (திருநெல்வேலி) 
வகுப்பறை மாணவர் ( பதிவிற்குப் புது முகம்)
தொழில்: Used Cars Seller
------------------------------------    ‍‍‍‍‍‍    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍                                                         
        சில வாரங்களுக்கு முன்பு மாணவர் மலரில் சகோதரி தேமொழி அவர்கள் கவிஞர் மருதகாசியின் பாடல்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் முதன்மையாக கண்ணை நம்பாதே என்ற பாடலும் இருந்தது. அதைப்பற்றி எனக்கு தெரிந்த ஒரு விளக்கத்தை எழுதவேண்டும் என நினைத்து அதை இப்போதுதான் எழுதமுடிந்தது.(அவ்வளவு சோம்பேறி நான்)
    ‍‍‍‍‍‍    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍என் இளம்பிராயத்தில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு சந்தேகம் மனதில் வரும் நம் கண் நன்றாகத்தானே இருக்கிறது அது எப்படி நம்மை ஏமாற்றமுடியும்? நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளையோ, மனிதரையோ ,உள்ளது உள்ளபடிதானே காட்டுகிறது. ஊரில், கண் அளக்காததையா கை அளந்துவிடும் எனஒரு சொலவடை கூடஉண்டு .எனவே இந்தபாடலில் தவறு உள்ளது என நினப்பதுண்டு. ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையில் கிரகங்கள்  ஆடிய சதிராட்டத்தில்,பாடலில் தவறு இல்லை,நம் கண்ணில்தான் தவறு உள்ளது என பட்டுணர்ந்தபின்னே புரிந்ததுஎப்படி?
      கீழே கொடுத்துள்ள இரு விதமான அம்புகுறியிட்ட படத்தை பாருங்கள்.அதில் அம்புகுறிக்குள் இருக்கும் இரு நேர்கோடுகளை பாருங்கள்.
                
         நம் கண் எப்படி நமக்கு காட்டுகிறது? ஒன்று சிறியதாகவும்,மற்றது பெரியதாகவும் காட்டுகிறதல்லவா? உண்மையில் இரண்டும் சம கோடுகளே.எனக்கு ஸ்கிரீனில் அளவுகோலை கொண்டுவரும் வித்தை தெரியவில்லை.எனவே ஒருபேப்பரில் இரு சமகோடுகள் வரைந்து மேலும்,கீழும் அம்புகுறியிட் டு பாருங்கள் வேறுபாடகத்தான் நம்கண்கள் நமக்கு காட்டும்.    
     ஏன் மேலும்,கீழும் அம்புகுறிகளை போட்டாய் அதனால்தானே என் கண்கள் வித்தியாசமாக காட்டியது என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.ஆம் நண்பர்களே அதில்தான் நாம்படிக்கவேண்டிய வாழ்க்கைப்பாடம் உள்ளது.       
      மேல்நோக்கிய அம்புகுறிகள் நாம் தினமும் வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களின்,பொருட்களின் உயர்வான புறத்தோற்றம்.இந்த புறதோற்றத்தை கொண்டு,நல்லவன், நல்லது என நம்பி எத்தனைமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதுபோல் கீழான அம்புகுறிகளைப்போல் நல்ல புறத்தோற்றம் இல்லாத மனிதர்களின் அன்பு,நட்பை இழந்திருப்போம். இப்போது சொல்லுங்கள் நம்கண்கள் நம்மை  ஏமாற்றுகிறதா? இல்லையா?  
      சரி, இதைப்பற்றி அறிவியல்(மருத்துவம்) என்ன சொல்கிறது? அது அப்படித்தான்.எல்லோருடைய கண்களும் குறைபாடு உடையதே என.(என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன் மருத்துவம் தெரிந்தவர்கள் மேலும் விளக்கம் தரலாம்)   
       சரி, இதைப்பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது?
       நமது ஆன்மாவானது மனம் என்ற மாயையின் பிடிக்குள் உள்ளது.இந்த மாயமனதின் கட்டுப்பாட்டில் ஐம்புலன்களும் உள்ளன. கண் என்னும் புலன்வழியாக தெரியும் தோற்றத்தை மனமானது தன் நுட்பமான கபடத்தால் உண்மையை தெரியவிடாமல் சிறிது ஏற்றதாழ்வுடன் நம் அறிவை நம்பவைக்கிறது. நாம் ஏதாவது ஒரு மார்க்கம் மூலமாக (பக்திமார்க்கம்,தியானமார்க்கம்,இன்னபிற) தீவிர பயிற்சி மேற்கொண்டு, இந்த மனதைகடந்து ஆன்மாவை தரிசித்து,ஆன்மாவின் கட்டுப்பாட்டில் புலன்களை வைத்து,அப்போது பார்த்தால் இந்த உலகிலுள்ள அனைத்தின் உண்மை சொரூபம் தெரியவரும்.ஏன்,வானத்தில் உள்ள கோள்களே நம் கண்களுக்கு தெரியும்.(இதுவும் என் சிற்றரிவுக்கு தெரிந்தவரை கூரியிருக்கிறேன்.ஆன்மீகம் தொடர்பான சிறப்பான கட்டுரைகள் எழுதும் சகோதரி பார்வதிஅவர்கள்.போன்றோர் இன்னும் விளக்கம் தரலாம்).

நன்றி வணக்கத்துடன்
சதன்ராஜ்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 3


சைவமும் தமிழும்
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன்

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
(திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்)

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
(திருமூலர், திருமந்திரம்)

பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன்.

மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம்.  . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும்   மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி.  இறைவன் எண்குணத்தான். எண்குணமாவன,  தன் வயம் உடைமை,  தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.

சைவ சித்தாந்தத்தின் படி,  உயிர்கள் அநாதியானவை.  அவை  அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன.  இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை.  இறைவன் கருணை வடிவானவர்.  நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து,  துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை.

ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும்  பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.

ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே.
(திருமூலர், திருமந்திரம்)

தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே, தநு= உடல், கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன, புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.

சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும்.

“அவையே தானேயாய், இருவினையின்
 போக்கு வரவு புரிய ஆணையின்
 நீக்கமின்றி நிற்கும் அன்றே”       
(சிவஞானபோதம்)

சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.

பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 
(திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)

அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவைஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.

ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே. 
(திருமூலர், திருமந்திரம்)

 உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார்.  இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார்.  சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது.

கன்மம் என்பது,  ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).

ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும்.  மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.

ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.         
(அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார்  )

செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ.
(சிவஞான சித்தியார்)

(பொருள்: “முற்பிறவியில் செய்யும் வினையெல்லாம், இப்பிறப்பிலேயே பயன் தருமென்றால், இப்பிறவி வினையெல்லாம், இப்பிறவியோடே கெடும். பிற்பிறப்புக்கு அவை சேருவது எவ்விதம்? இந்தத் தூலவுடல் கெட்டு, சூக்குமமாய்ப் பொருந்து முறை எப்படியென்னில், தீபத்தில் ஒளி, திரியை விட்டு நீங்கி வேறு இடத்தில் ஒளிரும் என்று கூறுதல் போலவாம்.”)

‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது.

அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த
(இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)

சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.

மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
(திருமூலர், திருமந்திரம்)

வீடுபேறாகிய முத்தி நிலை:
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப்  பெற்று  சிவனாரின் திருவடிகளில்  கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும்   சிவனாரின் அடிமையாய்,  ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.

முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.

ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.

மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா 
(குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).

(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)
மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.
சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.

பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.
இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் 
(சிவஞான சித்தியார்)

சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை  சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.
தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.

சற்புத்திர மார்க்கம்(கிரியை):  இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.

சகமார்க்கம் (யோகம்)

இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. 
(திருமூலர், திருமந்திரம்)

இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.

சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும்.

ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை 
(சிவஞான சித்தியார்)

திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை  ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி'  எனவும் கூறப்படுகின்றன.

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை,  ஆண்டான் அடிமை போன்றதாகும். கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும். யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்.

ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.

மேற்கூறிய மார்க்கங்களில்,  உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார்.

தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.

தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.

இதில் சமய  தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண  தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.

சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.

சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர்.

சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.

சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


  
சான்றோனாக்குதல் தந்தையின் கடன் 
ஆக்கம்: தேமொழி

தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க.  நானும் திராவிட இயக்கம் அரசியல்ல, தேர்தல்ல ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன்.  நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு  பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க"  என்றார் பெரியார்.

பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை.  "சரி, விடுங்க நாயக்கரே, நம்மால இப்ப என்ன செய்யமுடியும் சொல்லுங்க?  இந்தாங்க கொஞ்சம் கடலை சாப்பிடுங்க" என்று கடலையை பெரியாரிடம் நீட்டுகிறார்.

"வேணாங்க ஐயா, நீங்களே வச்சிக்கிடுங்க.  பார்க்கிறவங்க இந்த வயசிலையும் கடலை போடுறேன்னு கன்னா பின்னான்னு குறை சொல்லுவாங்க, வெங்காயம்"  என்கிறார் பெரியார்.

அருகில் இருந்த மணியம்மையும் காந்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.  அப்பொழுது உற்சாகமாக பாடியவாறே வருகிறார் பாரதியார்.
"வாங்க தம்பி வாங்க, எங்க இந்தப் பக்கம்?" என்று முகம்மலர்கிறார் பெரியார்.

"தந்தையர்தின வாழ்த்துகளைச் சொல்லவந்தேன் தேசத்தந்தையே, தந்தை பெரியாரே உங்களை வணங்குகிறேன்", என்று பணிவாக வணங்கி சொல்கிறார் பாரதி.

அவர்கையில் கொஞ்சம் கடலையைக் கொடுத்துவிட்டு, பாரதியின் தோளைத் தட்டி, "நீங்களும் கொஞ்ச நாள் அதிகம் வாழ்ந்திருந்தால் உங்களையும் ஏதாவது ஒரு தந்தை என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் பாரதி" என்று சிரிக்கிறார் காந்தி.

"இல்லை, என்னையும் சில இலக்கியவாதிகள் "சிந்துக்குத் தந்தை" என்று என் பாடல்களின் சொல்நயத்தில் மகிழ்ந்து பாராட்டியதுண்டு.

"பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!..."
என்று பாரதிதாசன் பாராட்டியது நினைவிற்கு வருகிறது."

"சரி போகிறது...அப்படியே எனக்கு தந்தை பட்டம் இல்லாதிருந்தாலும் என்ன குறைந்துவிடும் என்கிறீர்கள் ஐயா? எப்படியும் நாம் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கப் போவதில்லை என்று மக்கள் முடிவு எடுத்துவிடுகிறார்கள்.  "தந்தை" என்று பட்டம் கொடுத்தால், சூசகமாக நீங்கள் சொல்வதை நாங்கள் ஒருபொழுதும் கேட்கவே போவதில்லை என்று சொல்லும் மறைமுக அறிக்கைதானே அது.  "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்று சொன்னாலும், அப்பா பேச்சுக்கு மரியாதை கொடுத்து கேட்டு நடப்பவர்கள் இந்த உலகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்கிறார் பாரதி ஆதங்கத்துடன்.

"தம்பி என்னமா யோசிக்கிறீங்க?" என்று ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார் பெரியார்.

"தம்பி, நீங்க கொஞ்சநாள் அதிகமா வாழ்ந்திருந்தா சுயமரியாதை இயக்கத்திற்கு நிறைய பாடல்கள் எழுதியிருப்பீர்கள்,  38 வயசெல்லாம் போகிற வயசா என்ன? நீங்க உயிரோட இருந்திருந்தா இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். நீங்கள் மறைந்து  20 ஆண்டுகள் கழித்து நான் திராவிட இயக்கம் ஆரம்பித்த பொழுது இந்நேரம் தம்பி இருந்தால் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி எழுச்சியுடன்எத்தனை பாடல்கள் பாடியிருப்பார் என நினைத்தேன்."

"சமீபத்தில் உங்களைப் பற்றிய  படம் ஒன்று பார்த்தேன். நம்ம பேராண்டி இளையராஜா இசையில உங்களுடைய  ..
..
"கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது  ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்."
[  காணொளி:   http://youtu.be/ScA2TJ-IUkU   ]

பாட்டைக் கேட்டு கண்ணு கலங்கிடுச்சுங்க தம்பி.  நாம தலை தலையா அடிச்சிக்கிட்டு சொன்னதையே இந்த தம்பியும் சொல்லியிருக்காரு.  இப்படி அற்ப ஆயுசில போயிட்டாருன்னு ரொம்ப வருத்தமாயிடிச்சி.  அப்புறம் மணியம்மை சமாதானப் படுத்தினாங்க" என்றார் பெரியார்.

"என்ன செய்யிறதுங்க ஐயா?
"நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"
என்று சக்தியிடம் புலம்பிப் பாடினேன்.  சக்தி என்மேல் இரக்கப்பட்டு நிலச்சுமை என வருந்தாதே என்று அழைத்து கொண்டு விட்டார்கள்" என்று ஆறுதலாக சொல்கிறார் பாரதி.

தொடர்ந்து "நானும் உங்களைப்பற்றி வந்த திரைப்படம் பார்த்த பின்பு வருத்தப்பட்டேன் ஐயா.  எவ்வளவு படித்து படித்து சொல்லிவிட்டு சென்றீர்கள். ஒரு திரைப்படம் எடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்களே.  சொன்னதை நடைமுறைப்படுத்துவதில் தவறி விடுகிறார்கள் நம் மக்கள் என்பது வேதனைதான்" என்றார் பாரதி.

"உங்கள் இருவருக்குமாவது பரவாயில்லை, என் படத்தை ரூபாயில் போட்டதுடன் மறந்துவிட்டார்கள்.  என்ன ஒரு தலைவலி கொடுத்தேன், எத்தனை விரட்டி அடித்தேன்.  என்னை அத்தனை திட்டு திட்டினாலும் கடைசியில் என்னை மதித்தும் என் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தவன் அந்த வெள்ளைக்காரன்தான்" என்றார் காந்தி.

பிறகு, "சரி பாரதி, நம் மக்கள் ஜாதிய விட்டொழிக்கிறதா  தெரியலையே, இதுக்கு ஏதாவது ஒரு வழி தோன்றுகிறதா உங்களுக்கு?" என்று ஆவலுடன் கேட்டார் காந்தி.

"இல்லாமலா? ஆனால் அதை சொன்னாலும் யாரும் கேட்கப்போவதில்லை என்று வெறுப்பாக இருக்கிறது" மீசை துடிக்க கோபத்துடன் முழங்கினார் பாரதி.

"பரவாயில்லை, சொல்லுங்க தம்பி,  ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?" என்று நிமிர்ந்து உட்கார்ந்து, புதிதாக பிறந்த உற்சாகத்துடன் தாடியை நீவிக்கொண்டு ஆர்வத்துடன் கேட்டார் பெரியார்.

"ஐயா, இதற்கு முதலில் கலப்பு மணத்தை ஆதரிக்கவேண்டும்.  அத்துடன்  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை மேம்படுத்தவேண்டும்."

"இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா உங்க திட்டத்த சொல்லுங்க"

"ஐயா, கலப்பு மணம் செய்பவர்களையும், இந்த கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளையும் ஒரு புதிய வகைப் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு சிறப்புச் சலுகை தரவேண்டும்.  மீண்டும் தந்தையின் ஜாதியோ அல்லது தாயின் ஜாதியோ, அல்லது எந்த ஜாதிக்கு அதிக சலுகை என்று முடிவு செய்து அந்த ஜாதிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவோ விடக்கூடாது.  கலப்பு மணத்தில்... ஜாதியோ, மதமோ, இனமோ... எந்தக் கலப்பாக இருந்தாலும், கலப்பு மணம் செய்பவர்களையும் அதில் பிறந்தவர்களையும் "சான்றோர்" எனக் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றோர்களுக்கே அரசு சலுகை கொடுப்பதில் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும்.  அதனால் சான்றோர் என்றால் "நற்பண்புகள் உள்ளவர்" என்ற பொருளைக் குறிப்பதற்கு சமத்துவ எண்ணமே அடிப்படையானது என்பதையும் உணர்த்தலாம்."

"இவ்வாறு செய்தோமானால் சான்றோர் எனக் குறிப்பிடப்படாதவர்களுக்கு, தாங்கள்  சான்றோர்கள் இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நினைத்து அவமானம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.  ஆனால் சலுகை கிடைக்கும் என்றால் நம் மக்கள் சான்றோராக மாற முயற்சிப்பார்கள்.  அப்படியும் கண்டு கொள்ளாமல் கலப்புமணத்தை ஆதரிக்காத பெற்றோர்களையும், தங்கள் ஜாதியில் வரன் பார்க்கும் பெற்றோர்களையும் அவர்கள் பிள்ளைகள் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்" என சுட்டிக்காட்டி இடித்துரைப்பார்கள்.

" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
  சான்றோன் எனக்கேட்ட தாய்."

என்பார்களே ஏன் உங்களுக்கு அந்த விருப்பம் இல்லை என்று அன்னையிடம் வாதிடுவார்கள்.  எதையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியும்.  நாங்கள் சான்றோர்கள் ஆவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? என்று போர்முழக்கம் இடுவார்கள்.  வளர்ப்பதில் குறை வைத்த குற்றவாளிகள், பிள்ளைகளிடம் அன்பில்லாதவர்கள், அவர்களது நல்வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள்  என்பது போன்ற வார்த்தைகளைக் கேட்க எந்தப் பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள்."

"பிறகென்ன, காலப்போக்கில் நிறைய சான்றோர்கள் உருவாகுவார்கள்.  சான்றோரும் சான்றோரும் இணைந்து தமிழகம் எங்கும் சான்றோர்களே நிறைந்திருப்பார்கள்.  பின்பு தமிழகத்தைப் பார்த்து வியந்து மற்றவர்களும் பின்பற்ற இந்தியா முழுவதும் ஜாதி, மத, இன பேதங்களே இல்லாத இந்தியாவாக மாறக்கூடும்" 

"அருமையான யோசனை பாரதி" எனக் கைதட்டிப் பாராட்டுகிறார் காந்தி.

"தம்பி, நம்ம மக்கள சான்றோராக்கிறது அவ்வளவு சுலபமில்ல, எப்படியோ இப்படி ஒரு குறுக்கு வழியில் அவங்கள சான்றோராக்க முயற்சி செய்யலாம்னு சொல்றீங்க" என்று குலுங்கி குலுங்கி உரத்த குரலில் சிரிக்கிறார் பெரியார்.  "தம்பி, இதை நடைமுறைப்படுத்த முடியும், மக்கள் ஒத்துழைப்பார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார் சந்தேகத்துடன் கேட்டார் பெரியார்.

"ஆமாம், பாரதி எனக்கும் அதைப்பற்றி யோசனையாக இருக்கிறது" என்று ஆழ்ந்த சிந்தனையுடன் காந்தி சொன்னார்.

"ஐயா, எனக்கு இளைய சமுதாயத்திடம் என்றும் நம்பிக்கை உண்டு.  உங்களைப் பின்பற்றிய அந்தக்கால இளைய பாரதத்தினர் இந்தியா சுதந்திரம் அடைவதில் பெரும்பங்கு வகிக்கவில்லையா? இன்றைய இளைய சமுதாயத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்"  என்று சொல்லியவாறு எழுந்த பாரதி,

"இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா பலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயிறு ஒப்பவே வா வா வா"
என்று பாடியவாறு கையசைத்து விடைபெற்ற வண்ணம் வீறு நடை போட்டுக் கிளம்பினார்.

தந்தைகுலத்திற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!
காணொளி


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5
 

தோழருக்கு வாழ்த்துக்கள்
ஆக்கம்: தனுசு

என்
வகுப்பறை தோழர்.
அவர் பெயர் கிருஷ்ணர்-இன்று சொல்லி
அடித்தார் ஒரு நூறு-இனி
சொல்லாமல் படைப்பார் பல நூறு!

எழுத்தில்
எளிமை என்பது
இவரின் நோக்கம்-அந்த எளிமையை
நானும் எடுத்தாள உண்டாக்கினார்
என்னிடம் பெரும் தாக்கம்.

இவர் படைப்பில்
தாயின் பாசத்துக்கு சுசிலா!
தாய் மண்ணின் பாசத்துக்கு தஞ்சை!
தன் எளிமைக்கு புளியோதரை!-பாருங்கள்
இந்த
சமூகவாதியின் படைப்பிலக்கண தெரிவுமுறை.

என் பாட்டி சொன்னதோ
வடை சுட்ட கதை!- இவர் பாட்டி
புகைவண்டியில் புகட்டியதோ
மாணவருக்கு தர்மத்தை!

ரசனையான  எழுத்தில்
ரஜினிகாந்தின் வேகம்!
இன்னும் எழுதுவதில்
வயதை மறந்த
கஜினிமுஹம்மதுவின் தாகம்!

வகுப்பறையில்
இவரின் ஆக்கம்-அது ஒரு
தமிழின் துணைப்பாட பகுதி!
இதைவிட வேறென்ன வேண்டும்
இவரின் படைப்புக்கு தகுதி!

பாலகன் கிருஷ்ணன்
திருடியது வெண்ணை-இந்த
வயோதிக கிருஷ்ணன்
திருடியது அவரின் எழுத்தால் என்னை.!

ரசிப்புக்கு
சிரிப்புக்கு
சிந்தனைக்கு
போதனைக்கு
நீதிக்கு
பக்திக்கு-என நமக்கு படைத்தார்
பல விருந்து!
நாமும் அளிப்போம்
"செந்தமிழ் செல்வர்" எனும்
கௌரவ விருது.!

ஆயிரம் பழமொழிக்கு
அர்த்தம்  சொன்னார்.
"உன்னைச்சொல்ல
உன் நண்பனை காட்டு"-இந்த
பழமொழிக்கு
தன்னையே தந்தார்.

வகுப்பறை சுப்பையா
தஞ்சை கோபாலைய்யா
இவருக்கு தோஸ்த்தையா!
அப்படியெனில்
இவரைப்பற்றி சொல்ல வேண்டுமாய்யா?

இந்த
செம்பிறை சீடருக்கு
பால்குடியில்
வந்தது தொண்டாற்றும் எண்ணம்.
அது
லால்குடியில் கோலோச்சுது இன்னும்.

எழுத்துக்கும் ஏழைக்கும்
இவரின்
தொண்டுகள் மேலும் சிறக்க
வகுப்பறை சார்பாய்
இந்த
பூச் செண்டுகள் தருகிறோம்
வாழ்க! வளர்க!!.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


சக்திகொடு!
ஆக்கம்: தனுசு


(சென்ற வாரத்தில் "வரிகள்" பற்றிய ஒரு பதிவு  வெளியிட்ட போது அதற்கு தேமொழி அவர்கள் "சக்திகொடு சக்திகொடு சக்திகொடு......."என்று ஒரு பின்னூட்டமிட்டார். அந்த சக்திகொடு எனும் வார்தை உண்டாக்கிய கவிதை இது.)


சக்தியே
எனக்கொரு சக்திகொடு
பாராளும் சக்தியே
எனக்கொரு சக்திகொடு.

சுற்றும் பூமி நின்றுபோக
கடலின் நீரும் வற்றிப்போக
தீயும் தீர்ந்து சாம்பலாய் போக
நான்
யாகம் செய்ய சக்தி கேட்கவில்லை!

நானிலம் ஆளும் நாயகி!
இந்த
மா நிலம் மக்கிடவேண்டுமா?
கூனிக்குறுக வேண்டியதெல்லாம்
கோபுரம் ஏறி ளர்ந்திடலாமா?

அரிதாரம் முதல் அவதாரம் வரை
அத்தனையும் இங்கு வேஷம்!
அதை புரியாமல்
போடுது ஒரு கூட்டம்  தினந்தோரும் கோஷம்!

பக்தியில் முக்திக்கு
சம்போ சிவ சம்போ!
பத்திக்கும் காமத்தீயில்
அத்தனையும் இங்கு அம்போ!

ராத்திரி ரகசியம் மட்டும்
இங்கு
சாஸ்திரம் பார்ப்பதில்லை-அந்த
ரம்மி ஆட்டத்தில் ராஜா ராணி
தட்சனை ஏதும் கேட்பதில்லை!

பாலாறு என்றொரு நைல் ஆறு!
அதனை
பங்கு வைக்கும் நாடுகளோ ஆறு!
இங்கு இருப்பதோ அதுபோல பல ஆறு-பாவம்
அதனாலே பலநூறு தகறாரு!

பட்டம் முதல் பட்டயம் வரை
கொள்ளை போகுது காசில்!
விட்டகுறை தொட்டகுறையாக
சட்டமும் படுக்குது பாயில்!

பத்திரம் முதல் பக்தர்வரை
யாதும் போலி!
தொண்டன் முதல் தலைவன் வரை
மேயும் வேலி!

உழைத்து பிழைக்க மறுக்கும் ஜனம்!
அவரின்
கண்ணில் தெரிவதெல்லாம் பணம்!
நெஞ்சில் நிறைவது
சுயநலம் என்ற குணம்!

எங்கெங்கு கானினும்
பிழையான பிழைப்பு
சரிசெய்ய நானிங்கு
யாருக்கு வைப்பது அழைப்பு!

என்னோடு கூட்டமில்லை
கொடி பிடிக்க யாருமில்லை!
நான்
கொண்டாடும் கொள்கையை
என் குடிசையிலும் ஆதரிப்பாரில்லை!

உள்ளம் பொறுக்கவில்லை-இங்கு
தஞ்சம் அநீதியின் எல்லை!
யாரின் நெஞ்சிலும் நீதியில்லை
நெடும் ஆட்டத்திற்கும் அளவில்லை

ஆடுகின்ற ஆட்டத்தை
ஆடும்வரை ஆடவிட்டு-அவர்
அடங்கும்  முன்
வந்ததற்கு வரவு வைக்க
மிச்சம் உள்ள மனித நேயம்
புரியவைக்க  சக்திகொடு.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7


நகைச்சுவை
அனுப்பியவர். ஜி.ஆனந்தமுருகன்

DEFINITIONS
Sent by G Ananthamurugan
School:A place where Papa pays and Son plays.

 
Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.
Nurse:A person who wakes u up to give you sleeping pills.
Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..
Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.
Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"
Conference: The confusion of one man multiplied by the number present.
Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.
Dictionary: A place where success comes before work.
Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.
Father: A banker provided by nature.
Boss:Someone who is early when you are late and late when you are early.
Politician: One who shakes your hand before elections and your Confidence after.
Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.
Smile:A curve that can set a lot of things straight.
Yawn:The only time some married men ever get to open their mouth.
Etc.: A sign to make others believe that you know more than you actually do.
Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.
Experience: The name men give to their mistakes. 

---------------------------------------------

School:A place where Papa pays and Son plays.

Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.

Nurse:A person who wakes u up to give you sleeping pills.

Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..

Tears:The hydraulic force by which masculine willpower is defeated by feminine waterpower.

Lecture: An art of transferring information from the notes of the Lecturer to the notes of the students without passing through "the minds of either"

Conference: The confusion of one man multiplied by the number present.

Compromise: The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.

Dictionary: A place where success comes before work.

Conference Room: A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.

Father: A banker provided by nature.

Boss:Someone who is early when you are late and late when you are early.

Politician: One who shakes your hand before elections and your Confidence after.

Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.

Smile:A curve that can set a lot of things straight.

Yawn:The only time some married men ever get to open their mouth.

Etc.: A sign to make others believe that you know more than you actually do.

Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

Experience: The name men give to their mistakes.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8


நகைச்சுவை
ஆக்கம்: எஸ்.சபரி நாராயணன், சென்னை

புதிதாகச் சேர்ந்த மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமான இயற்பியல் பாடம் ஒன்றை பேராசிரியர் ஒருவர் நடத்தத் துவங்கினார்.

இரண்டாம் நாள் பாடம் அதிக சிரமமாக இருந்தது.

ஒரு மாணவன் முரட்டுத்தனத்துடன் குறுக்கிட்டுக் கேட்டான்:

”இந்தக் கருமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?”

பேராசிரியர் அமைதியாகச் சொன்னார்,” பலருடைய வாழ்க்கையை இது காப்பாற்றும்!”

சில நிமிடங்களுக்குப் பிறகு அதே மாணவன் எழுந்து கேட்டான்,” இயற்பியல் எப்படி வாழ்க்கையைக் காப்பாற்றும்?”

”உன்னைப் போன்ற முட்டாள்கள் மருத்துவத்தில் பட்டம் பெறுவதை இது தடுத்து நிறுத்தும்!”
"It keeps idiots like you from graduating,"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!