அடியவன் எழுதி, ஒரு மாத இதழின் சென்ற மாத இதழில் (20.1.2012) வெளிவந்த சிறுகதை. நீங்களும் படித்து மகிழ, இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------------------
சிறுகதை: அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியாரும்!
---------------------------------------------------------------------------------------
செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்த கரைகள். எந்நேரமும் கரைகளைத் தொட்டு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் நிறைந்த வாய்க்கால். வாய்க்காலை ஒட்டி இருபுறமும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பச்சைப் பசேல் என்ற நெல் வயல்கள். வயல்களின் வரப்புக்களில் நெடிதுயர்ந்த தென்னை மரங்கள். வாய்க்காலை ஒட்டிய பகுதியில் ஒரு முருகன் கோவில். பார்க்க ரம்மியமாக இருந்தது அந்தச் சிறு கிராமம்.
அந்தக் கிராமத்திற்கு ஒரு வேலையாக வந்த சாத்தப்ப செட்டியார், அவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. பேருந்தில் பயணித்த களைப்பு. அத்துடன் பசி. தன்னுடைய அந்தன நண்பர் வீட்டுக் கதவைத் தட்டினார்.
நல்ல வரவேற்பு. அத்துடன் நல்ல சாப்பாட்டையும் பறிமாறினார்கள். சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு, தக்காளி ரசம், வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி. சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தவர்., முற்றத்துத் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டார்.
எழுந்து பார்த்தபோது, இரவு மணி எட்டாகிவிட்டிருந்தது. பதறிவிட்டார்.
பொய்க்கோபத்துடன் நண்பரைப் பார்த்துக்கேட்டார்:
“என்னடா எழுப்பாமல் விட்டுவிட்டாய்? இத்தனை நேரம் தூங்கியிருக்கேனே?”
"தூக்கம் என்பது ஒரு வரம். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தீர் செட்டியார். அதானால்தான் எழுப்பவில்லை!”
பக்கத்து வீட்டிலிருந்து நாதஸ்வர ஓசை கேட்டது. மார்கழி மாதம். முகூர்த்தநாள் எதுவும் இல்லை. பின் எதற்கு நாதஸ்வர இசை? சின்ன கிராமம். சும்மா வாசித்தாலே போதும். கிராமம் முழுவதும் கேட்கும். ஆனால் ஒலிபரப்பி வைத்து ஒலி பரப்பிக்கொண்டிருந்தார்கள். இரவு நேரம் துவங்கிவிட்டதால் ஓசை அதிகமாகக் கேட்டது.
“என்னைய்யா விஷேசம்?” செட்டியார், அய்யரிடம் குறுகுறுப்புடன் கேட்டார்.
“அன்னதானம்” அந்தன நண்பர் பதிலுரைத்தார்.
“இந்த இரவிலா?”
“இல்லை. நாளை அதிகாலையில்!”
அன்னதானம் என்றால் நல்ல காரியம்தானே என்று நினைத்த செட்டியார், தொடர்ந்து கேட்டார். “எத்தனை மூட்டை அரிசி?”
“மூட்டையெல்லாம் கிடையாது. அரைப்படி அரிசி அன்னதானம். காலையில் மூன்று சாதுக்களுக்கு சாப்பாடு போடுவார்கள். அவ்வளவுதான்.”
“அதற்கு எதற்கு மேளதாளம்? மேளகாரர்களுக்கு ஆகும் செலவில் ஒரு மூட்டை அரிசியாவது அன்னதானம் செய்யலாமே?”
“மேளத்திற்கெல்லாம் செலவில்லை. அவர்களுடைய தோட்டத்தில் குடியிருப்பவர்கள். வருடத்திற்கு ஓரிரு தடவை கூப்பிடும்போது இலவசமாக வாசித்து விட்டுப் போவார்கள்”
“அடி சக்கை,” என்று வியந்த செட்டியார் தொடர்ந்து கேட்டார், “ பந்தா பேர்வழிகளா?”
“கஞ்சப்பேர்வழிகள். ஆனால் வீண் பெருமைக்கு ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு எங்களூரில் ஒரு பெயர் உண்டு தெரியுமா? அரைப்படி அரிசிக்காரர் வீடு என்று பெயர். அரைப்படி அரிசி அன்னதானம். விடியவிடிய மேளதாளம் என்பதின் சுருக்கம் அது!”
“ ஆகா” என்று வியந்த செட்டியார் சிந்தனையில் ஆழ்ந்தார். தன் அண்ணன் அடைக்கப்ப செட்டியாரும் அதுபோன்ற குணமுடையவர்தானே - அவருக்கும் இந்தப் பெயர் கன கச்சிதமாக இருக்குமே என்று நினைத்தார். நினைத்ததோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதுதான் அவருடைய அண்ணனின் போதாத நேரம். ஊருக்குத் திரும்பி வந்தவர், தன் பங்காளி நண்பர்கள் இருவரிடம் அதைச் சொல்ல, அது ஊர் முழுக்கப் பரவி, அவருடைய அண்ணன் அடைக்கப்ப செட்டியாருக்கும் அந்தப் பெயர், உண்டாகி வலுவாக நிலை கொண்டுவிட்டது.
நம் நாயகருக்கு அடையாளப் பெயர் உண்டான கதையை விரிவாகச் சொல்லிவிட்டேன்.
வாருங்கள் நம் நாயகருடைய வாழ்வில் நடந்த உண்மைக் கதையை இப்போது பார்ப்போம்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடைக்கப்ப செட்டியார் கோபத்துடன் இருந்தார். எப்போதும் இல்லாத கோபம். வீட்டிற்குள் நுழைந்து தன் செருப்பைக் கழற்றிய வேகத்திலேயே அது தெரிந்தது.
அதைக் கவனித்த அவருடைய அன்பு மனைவி விசாலாட்சி ஆச்சி, அவரைச் சாந்தப்படுத்தும் முகமாகக் கேட்டார்கள்.
“காஃபி சாப்பிடுகிறீர்களா? புதுப்பால் இருக்கிறது”
புதுப்பாலைக் காய்ச்சி, டிக்காஷன் போட்டு கொதிக்கக் கொதிக்கக் கிடைக்கும் காஃபி என்றால் அண்ணன் கிறங்கிவிடுவார். ஆனால் இப்போது கிறங்கவில்லை.
“புது விஷம் இருந்தால் கொடு. சாப்பிட்டுவிட்டு சிவனடிக்குப் போய்விடுகிறேன். நன்றி கெட்ட ஜனங்கள்”
“யாரைச் சொல்கிறீர்கள்? எதற்கு இந்தக் கோபம்? இருக்கிற ரத்தக்கொதிப்பு பத்தாதா?”
“நம்மூரில் இருக்கிற புதுப்பணக்காரர்களைத்தான் சொல்கிறேன். இடங்களின் விலைகள் ஏறியதில் கோடிக்கணக்கான பணத்தைத் தேற்றிவிட்டார்கள். தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள்”
“அவர்கள் ஒரு பக்கம் ஆடினால், நீங்கள் ஒரு பக்கம் ஆடுங்கள். உங்கள் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு நான்கு பேர் கிடைக்காமலா போய்விடுவார் கள்?”
“நேரம் காலம் தெரியாமல் விளையாட்டாகப் பேசாதே! என்னுடைய வருத்தம் உனக்கு எங்கே தெரியப் போகிறது?”
“சொன்னால்தானே தெரியும்!”
“இந்த ஊருக்கு எவ்வளவு செய்திருக்கிறேன் நான்? வங்கி வாசமே இல்லாத இந்த கிராமத்திற்கு எங்கள் வங்கிக் கிளையை நான் கொண்டு வரவில்லையா? ஆவின் பால் விற்பனை நிலையத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையா? பஞ்சாயத்து ஒன்றியத்துடன் போராடி, தெருவிற்குத் தெரு சாக்கடைகள் போட வைக்கவில்லையா? அரசிடம் எடுத்துச் சொல்லி ஆரம்பப் பள்ளியொன்றைக் கொண்டு வரவில்லையா? மக்கள் பயணிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து போகும்படி பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லையா? இது மாதிரி நான் செய்த சேவைகளைப் பட்டியல் போட்டு போஸ்டர் அடித்தா ஒட்ட
முடியும்?”
“எதற்குப் போஸ்டர்? நானூறு புள்ளிகள் இருக்கிற சின்ன ஊர்தானே இது. ஒரு செய்தியைக் காலையில் சொன்னால், சாயங்காலத்துக்குள் அத்தனை பேருக்கும் தெரிந்து விடுமே?”
“பாதிப்பேர்கள் தன்னைப் போணிகள். பொது அக்கறை இல்லாதவர்கள்.....சொல்லி என்ன பிரயோசனம்?”
“பிறகு எதற்கு கொதிப்போடு பேசுகிறீர்கள்? அடுத்தவர்களைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். முதலில் என்ன நடந்ததென்று சொல்லுங்கள்!”
“நகரச்சிவன் கோவில் திருப்பணிக் கமிட்டியில் என்னைச் சேர்க்கவில்லை. தொலைகிறது என்று விட்டுவிட்டேன். திருப்பணி முடிந்து அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. விழா மலர் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதிலும் என்னைச் சேர்க்கவில்லை.”
“அதற்காக சண்டை போடாதீர்கள். எதுவும் அதுவாக வரவேண்டும். நாம் கேட்டுப் பெறக் கூடாது. ஐந்துலட்சம், பத்துலட்சம் என்று நிதி கொடுத்தவர்களைத்தான் திருப்பணிக் கமிட்டியில் போட்டுள்ளார்கள். அதுபோல இதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும். நமக்கு உள்ள பெருமை போதும். எதையாவது கேட்டு இருக்கிற பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்”
“அவர்களை உணரவைக்க வேண்டும்”
“என்ன செய்யப்போகிறீர்கள்?”
செட்டியார் தீர்க்கமாகச் சொன்னார், “பொறுத்திருந்து பார்!”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விசாலாட்சி அவர்கள் தீவிர சிவபக்தை. தோடுடைய செவியனை நான்கு காலமும் வணங்குபவர். ஆச்சியின் கணவர் அடைக்கப்ப செட்டியார், வங்கிப்பணியில், தங்களுடைய வாரணாசிக் கிளையில் மூன்று ஆண்டு காலம் பணி செய்த காலத்தில் ஆச்சிக்கு ஏற்பட்டது அந்தத் தீவிர பக்தி!
பிறகு கர்நாடகா மாநிலத்தில், ஹூப்ளி நகரில், நான்காண்டு காலம் செட்டியார், வங்கியின் வட்ட மேலாளராகப் பணியாற்றிய காலத்தில் மேலும் அதி பக்தையானார். அங்கே இருக்கும் ராணி சென்னம்மாவின் சிலையைப் பார்த்துவிட்டுத் தானும், அந்த ராணியம்மாவைப்போலவே பட்டையாக விபூதி பூசிக் கொள்ளத் துவங்கிவிட்டார்.
அங்கே விபூதி நம் ஊரைப் போல தூளாகக் கிடைக்காது. உருண்டை வெல்லம் போல கட்டியாக இருக்கும். கிலோக் கணக்கில் வாங்கி வைத்துக் கொள்வார். தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம் ஒரு கட்டியைப் பரிசாகக் கொடுத்தனுப்புவார். அங்கே உள்ள மக்களைக் காட்டி அவர்களைப்போல பூசிக்கொள்ளுங்கள் என்பார்.
“காசியில் விஸ்வநாதன். சோலாப்பூரில் சித்தேஷ்வரன், ஹூப்ளியில் சந்திரமெளலீஸ்வரன் மதுரையில் சொக்கநாதன், எங்கள் ஊரில் சோமசுந்தரம் என்று பெயர்கள் மாறினாலும், எல்லா இடங்களிலும் நம் மனம் கவரும் ஈஸ்வரன்தான் இருக்கிறார்” என்பார் ஆச்சி
அத்துடன் “எல்லாம் ஈசன் செயல்” என்பார். “சப்குச் ஈஷ்வர் ஹை” என்று இந்தியில் சொல்வார். “அன்னி சிவமயம்” என்று தெலுங்கில் சொல்வார் “Everything is Eshwara!” என்று ஆங்கிலத்தில் சொல்வார். அடிக்கடி சொல்வார். ஆச்சிக்கு நான்கு மொழிகள் சரளமாக வரும்.
செட்டியாருக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. வங்கிப் பணியில் தன்னை மறந்து இருப்பார். சமயத்தில் மூழ்கிக் கிடப்பார்.
ஆனால் பணி ஓய்வுபெற்ற பிறகு, அவர் தன்னுடைய செட்டி நாட்டு கிராமத்திற்கே வந்து விட்டார். சொந்தங்களைப் போற்ற வேண்டுமென்ற ஞானம் அவருக்கு உண்டாகிவிட்டது. அதற்குக் காரணம் அவருடைய மகனின் திருமணத்தின்போதும், அவருடைய மணிவிழாவின் போதும் நினைத்த அளவிற்கு மக்கள் வராமல் போய்விட்டார்கள். இவர் யார் வீட்டிற்கு வந்தார் என்ற ஏச்சுக்கள் வேறு! அதைப் போக்குவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளாக அண்ணன்
மண்ணின் மைந்தனாக தன் செட்டிநாட்டுக் கிராமத்தில்தான் வசிக்கின்றார்.
ஆச்சியின் வற்புறுத்தலுக்காகத் தினமும் உள்ளூர் நகரச் சிவன் கோவிலுக்கு அவரும் சென்று வருவார். அதனால் ஏற்பட்ட ஈடுபாட்டில் அவரும் சிவபக்தராக மாறிவிட்டார், அப்படிப்பட்டவர் சொன்ன வார்த்தைகள் ஆச்சிக்கு வியப்பை உண்டாக்கியது.
நாம் இருவரும் சிவன்கோவில் குடமுழுக்கின்போது இங்கே இருக்க வேண்டாம் என்றவர், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் தங்களுடைய மகன் வீட்டிற்குப் போய்விடலாம் என்றார். கோவில் குட முழுக்கு முடிந்த பிறகு திரும்பி வருவோம் என்றார். ஆச்சிக்கு உடன்பாடு இல்லை.
சற்றுக் கோபம் மேலிடச் சொன்னார். “என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறீர்களா? சில பேர் மேல் உள்ள கசப்பை இறைவனிடம் ஏன் காட்ட வேண்டும்? கோவில் குடமுழுக்கிற்கைத் தவிர்ப்பதற்காக ஊரை விட்டு ஏன் ஓட வேண்டும்?”
“உனக்கு விருப்பமில்லை என்றால் நீ இங்கேயே இரு. என்னைப் போக வேண்டாம் என்று சொல்லாதே!”
“பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நம் ஊர்க் கோவிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனையோ நகரத்தார்கள் தனியாளாக நின்று பல கோவில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார்கள். வரலாறு தெரியாதா உங்களுக்கு? உங்களைத் திருப்பணிக் குழுவில் சேர்க்கவில்லை என்பதால் வெறுப்பு அடையலாமா? ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று பலரும் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வெறும் பத்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு, மூன்று பேர்களுக்கு இடமுள்ள குழுவில் உங்களையும் சேர்க்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா என்ன? நீங்கள் ஏன் ஐந்து லட்சம் அல்லது மூன்று லட்சமாவது கொடுத்திருக்கக்கூடாது? பணம் இருந்தால் மட்டும் போதுமா? பணத்தைக் கொடுக்க மனசு வேண்டும். அதுதான் முக்கியம். அந்த மனசு இருந்தால், இறைவனே உங்களுக்கு இடம் அளித்திருப்பான். அதை உணருங்கள்!”
“நீ வியாக்கியானம் பேசாதே! வயதான காலத்தில் கையில் பணம் இருக்க வேண்டும். Money is security against death என்பார்கள். வயசான காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க பணம் அவசியம்”
“நீங்கள் நினைப்பதுபோல பணம் ஒன்றும் உங்களைக் காப்பாற்றாது. இறையருள் மட்டுமே உங்களைக் காப்பாற்றும். வயதான காலத்தில் வாதநோய் வந்தால் என்ன செய்வீர்கள்? எது உங்களைக் காப்பாற்றும்? வாதநோய் வந்தால் உங்கள் சோற்றையே நீங்கள் அள்ளித்திங்க முடியாது. அதை நீங்கள் உணருங்கள். எங்கள் அப்பச்சி வாத நோய் வந்து பட்ட சிரமத்தை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்”
“விதிக்கப்பட்டு இருந்தால் வரும். விதிக்கப்பட்டுள்ளதற்குப் பெயர்தான் விதி. நீ சொல்வதற்காக நான் இருக்கப்போவதில்லை. என்னைக் குழப்பாதே!
மன ஆறுதலுக்காக நான் போகப்போகிறேன்”
“பிறகு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னஆச்சி அத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டார்.
என்ன ஆயிற்று? செட்டியார் குடமுழுக்கிறகு இருந்தாரா? அல்லது இல்லையா?
இறைவனின் சித்தம் வேறுவிதமாக இருந்தது. அதுதான் நடந்தது!
++++++++++++++++++++++++++++++++
அன்று இரவே, காரைக்குடிக்குச் சென்று, சென்னைக்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறிய அடைக்கப்ப செட்டியார், திருமயத்தைக்கூடத் தாண்டவில்லை. பேருந்து விபத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது. பேருந்தின் முன் பகுதியில் இருந்த எட்டு பேர்களுக்கு சரியான அடி. முதல் இருக்கையில் இருந்த செட்டியார் விபத்தின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டதில், தடுப்புக் கதவையும் தாண்டி படிக்கட்டு அருகில் தடால் என்று விழுந்துவிட்டார். இரத்தக் காயம் எதுவுமில்லை. ஆனால் உடல் முழுக்க பலத்த அடி. ஊமைக் காயங்கள்.
அடிபட்ட அனைவரையும், 108 அம்புலன்சில் ஏற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். தகவல் தெரிந்த ஆச்சி தன் உறவினர்கள் சிலருடன் மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தார்.
தன் கணவருக்குப் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை என்று தெரிந்த ஆச்சி சற்று நிம்மதி அடைந்தார். தனியார் மருத்துவமனை ஒன்றில் மாற்றி சேர்க்கப்பெற்ற செட்டியாருக்கு பத்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு மாதம் ஓய்வெடுங்கள் என்று சொல்லி, மருந்து மாத்திரைகளுடன் செட்டியாரைத் திருப்பி அனுப்பிவைத்தார்கள். தப்பித்தோமடா சாமி என்று
மனக்கலக்கம் நீங்கிய செட்டியாரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
“என் தாலி பாக்கியமும், சோமசுந்தரக் கடவுளிடம் நான் கொண்டுள்ள பக்தியும்தான் உங்களைக் காப்பாற்றியது” என்ற ஆச்சியின் வார்த்தைகளுக்கு அவர் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்து விட்டார். அதை உண்மை என்றும் உணர்ந்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
காலதேவனின் ஓட்டத்தில் நாற்பது நாட்கள் சென்றதே தெரியவில்லை. குடமுழுக்கு நாளும் வந்தது.
யாகசாலை பூஜைகள் எல்லாம் முடிந்து. மகா பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடந்தது. பஞ்சவாத்தியங்கள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்கிட, ராஜகோபுரம், விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சிவ கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், நகரத்தார்கள், நாட்டார்கள் என்று திரளான மக்கள் கலந்து கொள்ள குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.
ஊருணிக் கரைக்கு எதிரில் இருந்த திடலில் பெரிய கொட்டகை போடப்பெற்று, வந்திருந்த மக்கள் அனைவருக்கும் காலை, மற்றும் மதிய உணவுகள் சிறப்பாக வழங்கப்பெற்றது.
அன்று மாலை, கோவில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பணிக் குழுவினர் மூவருடன், நம் நாயகர் அடைக்கப்ப செட்டியாருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பெற்றது. பொன்னாடை, மாலை, மற்றும் நினைவுப்பரிசு என்று கலகலக்க வைத்துவிட்டார்கள். திரளான மக்களின் கைகுலுக்கல் பாராட்டு வேறு.
செட்டியார் ஆடிப்போய்விட்டார். நமக்கு ஏன் சிறப்பு செய்தார்கள் என்பது அவருக்குப் பிடிபடவில்லை. கண்கள் பனித்துவிட்டன.
இத்தனை நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்தவர், இன்று தானே கோவிலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதனால் நடந்தது எதுவும் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.
அவரைச் செல்ல விடாமல் திருப்பி ஊருக்கே கொண்டுவந்துவிட்ட சிவனின் மகிமையையும், சொற்ப காயங்களுடன் அவரைக் காப்பாற்றிய கருணையும், அதைவிட மேலாகத் தன் தாலிபாக்கியத்தைக் காப்பாற்றிய மேன்மையையும் எண்ணி எண்ணி, அதிசயித்த சாலா ஆச்சி அவர்கள், கோவிலின் நடப்பு நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். கோவில் குடமுழுக்கிற்கு தங்கள் வீட்டின் சார்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். அன்னதானச் செலவு முழுவதையும், அத்துடன் 48 நாட்கள் நடைபெறவுள்ள மண்டல பூஜைக்கான பிரசாதச் செலவு முழுவதையும்
தான் ஏற்றுக்கொள்வதாகவும், எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். உத்தேசமாகப் பத்து லட்சம் ஆகும் என்றார்கள். அன்றே ஒரே காசோலையில் அந்தப் பணத்தை ஆச்சி அவர்கள் கொடுத்துவிட்டார்கள். தன் கணவரின் பெயரில் அதை வரவு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள். நடந்து அதுதான்.
அது ஆச்சியின் சொந்தப் பணம். தன் தாய்வீட்டிலிருந்து வந்த பணத்தை அவர் வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அதனால் யாரையும் கேட்காமல் அவரால் கொடுக்க முடிந்தது. தன் கணவர், மற்றும் மகனிடம்கூட அதை அவர் வெளிபடுத்தவில்லை.
குட முழுக்கிற்கு அடுத்த நாள்தான் அடைக்கப்ப செட்டியாருக்கு அது தெரிய வந்தது. கண்கள் பனிக்க இருகரம் கூப்பித் தன் மனைவியை வணங்கினார். என்ன படித்து என்ன பயன்? உனக்குள்ள சிந்தனையும், பெருந்தன்மையும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று சொல்லி வருந்தினார்.
அதையெல்லாம் விடுங்கள் நம் நாயகருக்கு ஊரில் இப்போது என்ன பெயர் தெரியுமா?
“அன்னதானச் செம்மல் அடைக்கப்ப செட்டியார்”
மேடை போடாமல், உள்ளூர் மக்களாக வழங்கிய பெயர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!