மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.9.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

தலைப்பு: சொந்த ஊர்

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அதைச் சற்று அலசுவோம்

-------------------------------------------------------------
லக்கினாதிபதி, 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார். நம்ம ஜாதகரும், தில்லியில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து தில்லியிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்

அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த் மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.

ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.25

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 

நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?

நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!

ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.

இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.

குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்

இயற்கையாகவே தீய கிரகங்கள்

சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும்  இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!


அன்புடன்,
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.25

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்)

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்) 

Lesson on Yoga: Dhwaja Yoga:

துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம்.

இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை

பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
..........................................................................

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும்.

தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது
சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன்

பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

A planetary combination formed by all the malefic placed in the 8th house and
all benefices in the ascendant. Under this combination, a leader is born
==================================================
சார், நான் மேஷ லக்கினக்காரன் செவ்வாய் எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? அல்லது நான் மகர லக்கினக்காரன், சனி எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? என்று யாரும் கேட்க வேண்டாம். ரிஷிகள் இந்த யோகத்திற்கான விதி முறைகளைக் கூறியுள்ளபோது அதை அப்படியே எடுத்துக் கொள்வது நல்லது! மாட்டேன் என்றால் - It is your problem and it is not concerned with astrology!

அன்புடன்
வாத்தியார்!
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.25

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்)

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்) 
கெட்ட யோகம்!
Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்,
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
==========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.25

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) 
--------------------------------------------------
Lesson on Yogas: Grahamalika Yoga

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில்
கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.
இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும்,
செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த
ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika \"planetary garland\" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate
------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.25

Astrology: மகாபாக்கிய யோகம்!

Astrology: மகாபாக்கிய யோகம்! 

இன்றைய பாடத்தில் ஒரு எளிமையான யோகத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
----------------------------------------------------------

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பெண்களுக்கு:

இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்!

Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.
+++++++++++++++++++++++++++++++++++++++
”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள்.

பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.25

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! Lesson on Yogas: Mathru Nasa Yoga

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! 
Lesson on Yogas: Mathru Nasa Yoga

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும்

அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.
++++++++++++++++++++++++++++++++++++++
1
பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
2
மாத்ருநாச யோகா:
(தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய
கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள்
பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.25

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 

பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான். வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள் என்று ஞானி ஒருவன் சொல்லிவைத்தான்.

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ளப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!
-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோல நல்ல நிலைமையில் இருக்கும் எவனும் ஜோதிடத்தையோ அல்லது ஜோதிடரையோ நாடமாட்டான். ஒரு கஷ்டம் வரும்போதுதான், அதுவும் அவனால் அதைத் தீர்க்க முடியாத நிலை அல்லது சூழ்நிலை வரும்போதுதான், தன் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பான்.

முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார்: “நான் செய்யாத தவறிற்காக, இப்போது என் அலுவலகத்தில் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறேன்”

நான் கேட்டேன்: “நீ தவறு செய்யாமல் எப்படி அவர்கள் உன்னை ஆட்படுத்துவார்கள். அதில் உன் பங்களிப்பு ஏதாவது நிச்சயமாக இருக்க வேண்டும்”

“ஆமாம், எனக்குக் கீழே உள்ளவன் செய்த தவறு. அவன் மீது நம்பிக்கை உள்ள காரணத்திற்கக, அவன் வைத்த காகிதங்களில் அவற்றை ஆராயமல் கையெழுத்துப் போட்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு!”

“போதாதா? அவனைப் போன்றவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை இடுவதற்குத்தானே உன்னை நியமித்திருக்கிறார்கள். நீ  ஒன்றைப் படிக்காமல் எப்படி கையெழுத்துப்போடலாம்? இது வேலையில் அக்கறையின்மை கணக்கில் வரும்”

“வரும் என்ன, வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது. எனக்கு ஒலையோடு நிற்குமா அல்லது வேலை போய்விடுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது”

அவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். வாங்கிப் பார்த்தேன்.

இதுபோன்ற கேள்விகளுக்கு, தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்தை லக்கினமாக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்.

அவர் மேஷ லக்கினக்காரர். பத்தாம் இடம் மகரம். அதன் அதிபதி, அதாவது பத்திற்கு உரியவன், சனீஷ்வரன், அவன் அந்த வீட்டிற்கு 5ஆம் இடத்தில் திரிகோணமேறி இருந்தான். அதுவும் நட்புவீட்டான ரிஷபத்தில். ஆகவே வேலையில் ஒரு ஸ்திரமும், முன்னேற்றமும் இருக்கும்.

சரி, இப்போது உள்ள பிரச்சினை எதனால்? அது தற்காலிகமானதா? எத்தனை நாட்கள் நீடிக்கும்? எப்போது உய்வு வரும்?

அதற்கு கோள்சாரச் சனியைப் பார்க்க வேண்டும். அதுவும் கேள்விக்குரிய பத்தாம் வீட்டை வைத்தே பார்க்க வேண்டும்.

அன்றையத் தேதியில், சனி சிம்மத்தில் இருந்தார். அது 10ஆம் வீட்டிற்கு எட்டாம் இடம். அதனால்தான் வேலையில் பிரச்சினை. அடுத்த சனிப்பெயர்ச்சி இன்னும் 3 மாதகாலத்தில் நடைபெறவுள்ளது.

ஆகவே நான் சொன்னேன். ”மூன்று மாத காலம் உன்னைப் பணிநிறுத்தம் (suspend) செய்யலாம். அதற்குப் பிறகு உண் பணி அங்கேயே தொடரும். வேலையை விட்டு உன்னைத் தூக்கும் வாய்ப்பு இல்லை”

அதன்படியே நடந்தது.

இதை ஒரு உதாரணத்திற்காகவே சொன்னேன்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகத்தை ஆராயும் வழிமுறைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

1. கோள்சாரச் சனி 10ஆம் இடத்திற்கு, 6, 8 & 12ஆம் வீடுகளில் பயணிக்கும் காலங்களில், வேலை அல்லது தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் உண்டாகலாம்.

2. ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்தில்)பயணிக்கும் காலத்தில், தொழிலில் போட்டியாளர்கள் உருவாகி, நமக்கு இடைஞ்சலை உண்டாக்கலாம். எதிரிகள் ஏற்படலாம். நமது தொழிலை ஸ்தம்பிக்கச் செய்யலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில், நமக்கு எதிரானவர்களால், அல்லது நம்மைப் பிடிக்காதவர் களால், பாதிப்புக்கள் உண்டாகலாம். அவப்பெயர் உண்டாகலாம். அந்தக் காலகட்டத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்

3. எட்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு எட்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். தொழிலை மாற்ற நேரிடலாம். தொழிலில் பலவிதமான சிக்கல்கள் (difficulties) ஏற்படலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் அவருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கீழ் நிலைக்குத் தள்ளப்படலாம் (depromotion) அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப்படலாம்.

4. பன்னிரெண்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு பன்னிரெண்டாம்  இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில், விரையங்கள் (Financial losses) ஏற்படலாம். தொழிலைக் கைவிட நேரிடலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் சம்பளம் குறைக்கப்படலாம். நமது பணியால், அலுவலில் ஏற்படும் நஷ்டத்திற்கான ஈட்டுத்தொகையை நாம் கட்டும்படி நேரிடலாம். அல்லது வேலையை விட்டே விலக நேரிடலாம்.

பயப்பட வேண்டாம். இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, அவற்றில் உள்ள கிரக நிலைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.25

Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)



Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)

1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும் சனீஷ்வரனின் ஆகிய இருவரும்  பரிவர்த்தனை
பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good planets) சுபக்கிரகங்கள்,

மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை உடையதாகும்.

முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு
அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில் இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.

அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று குறைத்துக்கொண்டே வந்து பலனைப்
பாருங்கள்.
---------------------------------------------------------------------
பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?

1. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள் வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8 &12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி  6, 8 & 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி

12ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை
இழந்துவிடுவார். அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான் பயன்படும். 

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.25

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages

Astrology: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் Chances of Multiple marriages

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!
- கவியரசர் கண்ணதாசன்

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால் அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிர்சி வகுப்பு பாடங்களை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி
வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்துவேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:

1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.9.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பாதிப்பு!

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பாதிப்பு!

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகள் Houses affected by Papakarthari Yoga 
ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்களுடன் குரு அல்லது சுக்கிரன் நின்றாலும் அந்த வீடு பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படுமா?

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், பாதிப்பு இருக்கும். சுப கிரகங்களின் கூட்டால் பாபகர்த்தாரி யோகத்தின் தன்மை மாறாது!

அன்புடன்
வாத்தியார்


6.9.25

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

சனீஸ்வரன் ஏழாம் வீட்டிலிருந்து சுய வீடாக இல்லாமலிருந்தால் மணவாழ்க்கை மணக்காது.

சனீஸ்வரன் மகரத்திலிருந்து ஏழாம் வீடானால் கடகலக்னமாகியிருந்தால் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்.

ஏழாம் அதிபதி சந்திரனைக் கவனிக்க வேண்டாமா? களத்திரகாரகன் சுக்கிரனின் அமைப்பைப் பார்க்க வேண்டாமா?

அதை எல்லாம் பாருங்கள். அவைகள் நன்றாக இருந்தால் திருமண வாழ்வும் நன்றாக இருக்கும்!

அதேபோல் சனீஸ்வரன் ஏழாம் அதிபதியாகி கும்பத்திலிருந்தால், சிம்மலக்னமானால் மண வாழ்க்கை எப்படியிருக்கும்.

இதற்கும் அதே பலன்தான்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன் 

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்
===========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.25

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.25

Astrology: அமலா யோகம்! Amala Yoga


Astrology: அமலா யோகம்! Amala Yoga

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.25

Astrology: அமரக் யோகம்! Amarak Yoga


Astrology: அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!