மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.6.10

வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவும், வரலாறு காணாத குழப்பங்களும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                
வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவும், வரலாறு காணாத குழப்பங்களும்!

செம்மொழி மாநாட்டில் பிரதான அரங்கம் தவிர சிறப்பு அழைப்பாளர்களுக்கென 5 அரங்கங்கள். ஏற்பாடுகள் எல்லாம் அருமையாக இருந்தது. ஆனால் இட, மற்றும் நேர நெருக்கடியால் தொழில் நுட்ப வல்லுனர்களின் ஆய்வரிக்கை களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, எங்களைப் போன்ற (வெட்டிப்) பதிவர்களுக்கு உரிய இடமில்லாமல் செய்துவிட்டார்கள். பேசுவதற்கு ஆர்வத்துடன் சென்றவர்கள் பேசமுடியாமல் திரும்பிவிட்டோம்.

நடந்ததை விவரிக்க விரும்பவில்லை. எங்களை அழைத்தவர்களுக்கு அது மன உளைச்சலைக் கொடுக்கலாம். ஆகவே அதை விவரிக்கவில்லை!

இருந்தாலும், எனது பேச்சிற்காக எடுத்துச் சென்ற குறிப்பை முன்பே சொன்னபடி உங்களூக்குச் சமர்ப்பிக்கிறேன். இன்று ஒருநாள் மட்டும் நம் வகுப்பறையை செம்மொழி மாநாட்டு அரங்கமாக மனதில் வரித்துக்  கொண்டு எனது உரையைக் கேட்டு......ஸாரி .....படித்து (முடிந்தால்) மகிழவும்

அன்புடன்
வாத்தியார்

அங்கே உரை நிகழ்த்தமுடியாமல் போனதில் எனக்கு எந்தவித  நஷ்டமுமில்லை. எந்தவித  லாபமுமில்லை. எந்தவித வருத்தமுமில்லை! அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------------------------------------------------------------------

                                              இனியது, இனியது  இணையம்!
                                             ----------------------------------------------                   

இந்த இனிய பிற்பகல் பொழுதில் அரங்கில் திரளாகக் கூடியிருக்கும் உங்கள் அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்!

இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்ற இந்தப் பிரம்மாண்ட தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் தமிழக முதல்வர், மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறேன். அவரின் இளவல், துணை முதல்வர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.''


என்று கூறினார் முண்டாசுக் கவிஞர் பாரதியார்!

நம் அன்னைத் தமிழுக்கு நம்மாலான சேவையைச் செய்ய  வேண்டும்! செய்வோம்!

தாய் மொழியில் பேசும்போது, அல்லது கேட்கும்போது அல்லது எழுதும்போதுதான் மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது. அந்த நிறைவை, அந்த மகிழ்வை, எந்த வேற்று மொழியும் தராது. நீங்கள் எத்தனைதான் அதில் பாண்டித்யம் அல்லது மேன்மை பெற்றிருந்தாலும் அது தராது.

தாய்க்கு எப்படி மாற்று இல்லையோ, அப்படித் தாய்மொழிக்கும் இணையான மாற்றுக் கிடையாது.

இசைஞானி இளையராஜா அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுலாச் சென்றிருந்தார். அவர் திரும்பியவுடன், முன்னனித் தமிழ் வார இதழ் ஒன்று, அவருடைய பயண அனுபவத்தைக் கட்டுரையாக எழுதிக் கேட்க, அதை அவர் ஒரு  தொடர் கட்டுரையாக எழுதினார். முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியே அசத்தலாக இருக்கும்.

இளையராஜா இப்படி எழுதியிருந்தார்:

”நியூயார்க் விமான நிலையத்தைச் சென்றடைந்தேன். விமானத்தைவிட்டுக் கீழே இறங்கினேன்.வானத்தைப் பார்த்தேன். நம்மூரில் தெரியும் அதே சூரியன்தான் அங்கே தெரிந்தது. செல்வச் சீமானின் பூமி என்பதற்காக சூரியன் அங்கே மேக்கப் போட்டுக் கொண்டுவரவில்லை. நம்மூரில்  தெரியும் அதே சூரியன்தான் அங்கேயும் தெரிந்தது!”

என்னவொரு கண்ணோட்டம் பார்த்தீர்களா?

அந்தக் கண்ணோட்டம்தான் அவரை ஞானியாக்கியது.   

“சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போலாகுமா?” என்று காலத்தால் நிலைத்து நிற்கும் பாடல் ஒன்றையும் பதிவு செய்து கொடுத்தவர் அவர்!

நமது மண், நமது மொழி தருகின்ற இனிமையை வேறு எதுவும் தராது!

வெறும் சோற்றைத் திங்க முடியாது. சோற்றின் மீது கெட்டித் தயிர் ஊற்றி, சிறிது உப்புப்போட்டு பிசைந்து, சுள்ளென்ற கார மாங்காய் ஊருகாயுடன் கொடுத்தால், ஒரு வெட்டு வெட்டலாம். அதன் சுவையே அலாதியானது. அதனால்தான் 'மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்'  என்று நம் கிராமங்களில் சொல்வார்கள்.

அப்படி சும்மா இருந்த இணையத்திற்கு, தயிர், உப்பு, ஊறுகாய் சேர்த்தது போல, ஒருங்குறியீடு (uni code), மற்றும் regional language settings போன்ற தொழில் நுட்பங்களை எல்லாம் சேர்த்து பிசைந்து, அன்னைத் தமிழில் தந்தவுடன், அது நமக்கு இனியதாகி விட்டது.

அத்துடன் இ - கலப்பை, NHM writer போன்ற இணையத்தமிழ் எழுதிகள் பலவும் நமக்குக் கிடைத்தன. பொறியாளரும், மூத்த தமிழ்வலைப் பதிவருமான திரு.முகுந்தன் அவர்கள்தான் அந்த இ-கலப்பை என்னும் எளிய தமிழ் எழுதியை வடிவமைத்தவராவார். அவரை இங்கு நினைவுகூற வேண்டும். அதேபோல தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் தமிழ்த் திரட்டியை வடிவமைத்தவர், எங்கள் கோவையைச் சேர்ந்த பொறியாளரும், மூத்த
தமிழ்வலைப் பதிவருமான திரு. காசி ஆறுமுகம் அவர்கள். அவருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்தல் அவசியமாகும். இல்லை என்றால்,

”என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” 


எனும் அய்யன் வள்ளுவரின் வாக்கு நம் முன்னே வந்து நிற்கும்

ஆமாம், அன்னைத் தமிழில் எழுத முடியும், வாசிக்க முடியும் என்றவுடன்தான் இணையம் நமக்கு இனியதாகி விட்டது!.

அத்துடன் இணையம் நம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு,  நம் சட்டைப் பையில் தொலைபேசியை வைக்க முடியும் என்று நாம் யாரும் நினைத்திருக்க மாட்டோம். இப்போது வைக்க முடிகிறது. பத்து  ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று  யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டோம். இன்று அத்தனை நன்மைகளையும்  அனுபவித்துக்  கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் நுட்ப வல்லுனர்கள் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்றென்றும் கடைமைப்பட்டிருக்கிறோம்
நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

Telegram, Teleprinter, Fax என்று தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், வணிகர்களும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் எல்லாம் இன்று  குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. அந்த வேலைகள் அனைத்தையும், கணினி மற்றும் இணைய
இணைப்புக்களின் மூலம் சர்வசாதரணமாக நம்மால் செய்ய முடிகிறது.

கணினிதான் சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு. கணினிக்கு, இணையம் என்ற அழகான மற்றும் அறிவான, பெண்ணைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் இருவரும் - அதாவது,
கணினியும், இணையமும், எந்தவிதப் பிணக்கமும் இல்லாமல், ஒற்றுமையுடன்அன்பாகக் குடும்பம் நடத்தி, 10 மாதக் கணக்கு என்று எந்தக் கணக்கும் இல்லாமல், மாதா மாதம்  நிறையக் குழந்தைகளைப் பெற்றுத் தருகிறார்கள். அத்துடன் அசுர வேகத்தில் அக்குழந்தைகளை வளர்த்து, நமக்கு சேவகம் செய்ய அவர்களைப் பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளும்
கைகட்டி நமக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கின்றன!

Hotmail, gmail, yahoo mail, wikipedia, youtube, bolgger, orkut, Facebook, piccaso, tecnocarti 
போன்று நமக்கு சேவகம் செய்துகொண்டிருக்கும் குழந்தைகள்
எல்லாம், கணினி -இணையத் தம்பதிகள் பெற்ற குழந்தைகள்தான்!

நாம் சம்பளம் எதுவும் கொடுக்காமல் அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம். குழந்தைத்தொழிலாளர்கள் தடுப்புச் சட்டமெல்லாம் அவர்களிடம் செல்லாது. இந்த விஷயத்தில் நம்மிடமும் செல்லாது.

மனதிற்கு நிறைவைத் தருகின்ற அல்லது மகிழ்ச்சியைத் தருகின்ற இணையச் செயல்பாடுகள் அனைத்துமே இனியதுதான்!

network of networks எனப்படும் இந்த இணைய வலை முழுமையாக வடிவமைக்கப் பெற்று  40 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், கடந்த பத்து ஆண்டு களாகத்தான் அது இனிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆமாம்,
நமது அன்னைத் தமிழில் எதையும் எழுத முடிகிறது. சக நண்பர்கள் எழுதியுள்ளவற்றைப் படிக்க முடிகிறது. ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. தமிழில்
மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. தமிழில் எழுதி வலையில் ஏற்ற முடிகிறது. கடந்த  10 ஆண்டுகளில்தான் இந்த அசுர வளர்ச்சி.

ஒருங்குக் குறியீடு எனப்படும் unicode tamil எழுத்துருக்கள் கிடைத்த பிறகுதான், அத்தனையும்  சாத்தியமாயிற்று!

தற்போது இணையத்தில் கிடைக்காத தமிழ் இலக்கியங்களே இல்லை என்னும் நிலமை உள்ளது. Project Madurai - மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்’ என்னும் பெயரில் உலகளாவிய  தமிழர்கள் ஒன்று கூடி அதைச் சாத்தித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழர்கள் அனைவரும்
நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

சரி, எத்தனை இணையதளங்கள் உள்ளன? இன்றையத் தேதியில் 15 கோடி இணைய தளங்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அரசன் இல்லாத உலகம் இணைய உலகம்.  DNS registrars எனப்படும் பெயர்ப் பதிவாளர்கள் மட்டுமே இணையத்தில் உள்ளார்கள்.  இணைப்புக் கொடுக்கும் மூலவிக்கிரகம் என்னும் சர்வர் எதுவும் இல்லை. அத்தனையும் குல  தெய்வங்கள்தான்.

சரி ஆண்டவர் இல்லையா? ஏன் இல்லை? நாங்கள் அவரைக் கூகுள் ஆண்டவர் என்போம். எது கேட்டாலும், காத்திருத்தல் இன்றி உடனே கிடைக்கும். எது கேட்டாலும் - அதாவது எந்தத் தகவலைக் கேட்டாலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கும். அந்த அளவிற்கு, அவர் மற்ற அனைத்துக் குல தெய்வங்களுடன், தொடர்பு வைத்திருக்கிறார். நமக்குப் பிடித்துத் தருவதற்கான
தொழில் நுட்பத்தையும் வைத்திருக்கிறார்.

தொழில் முனைவோருக்கு இணையம் ஒரு வரப் பிரசாதம். தொழில் சம்பந்தமாக அல்லது  வியாபாரம் அல்லது ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமாக எந்த விவரம் கேட்டாலும் இணையத்தில் கிடைக்கும். அத்துடன் வகை வகையான வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின்
முகவரிகள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் எல்லாம் கிடைக்கும். அது எந்தத் துறையானாலும் சரி கிடைக்கும். உதாரணத்திற்கு indiamart என்னும் இணைய தளத்தில் எட்டு  லட்சம் முகவரிகள் வகைப் படுத்தி வைக்கப் பட்டுள்ளன. எல்லாம் உங்கள் பயன் பாட்டிற்காக!

அதுபோல ஏகப்பட்ட இணைய தளங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு நீங்கள் ஜவுளித்துறை (Textile) என்னும் சொல்லில் தேடினீர்கள் என்றால், அந்த இந்தியாமார்ட் வலைத்தளத்தில் 26 துணைப் பிரிவுகளில் (அதாவது sub-category யில்) மொத்தம்  60,000 முகவரிகள் கிடைக்கும். அதுபோல ஒவ்வொரு துறைக்கும் உங்களுக்கு நொடியில் தகவல்கள்  கிடைக்கும்

இரயில் பயணத்திற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே முன்பதிவு செய்து, பயணச் சீட்டை நீங்களே அச்சிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளை வீட்டில் இருந்தே நீங்கள் நிர்வகிக்கலாம், வரவு செலவு செய்துகொள்ளலாம்

இந்தியாவில் உள்ள அத்தனை இடங்களிலும் இருக்கும் BSNL தரைவழித் தொடர்பு  இணைப்புக்களுக்கான எண்களை - அது எந்த ஊரில் இருந்தாலும், யார் பெயரில் இருந்தாலும்,  சில நிமிடங்களில் தேடிப் பிடித்துவிடலாம். BSNL Telephone Directory அந்த அளவிற்கு வகைப் படுத்தப்பெற்று இணையத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது.

படங்களா? பாடல்களா? அல்லது பாடல் வரிகளா? எதுவாக இருந்தாலும் கேட்டவுடன் கிடைக்கும்.

MKT பாகவதரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலில் இருந்து, இன்றைய  ‘டாடி மம்மி வீட்டில் இல்லை, தடைபோட யாரும் இல்லை’ பாடல்வரை  எந்தப் பாடலாக இருந்தாலும் நொடிகளில் கிடைக்கும்

சரி, அதே பாடல்,  காட்சி வடிவில் வேண்டுமா? யூ டியூப் தளத்தில் கிடைக்கும்!

உங்கள் குழந்தைக்கு அன்னை தெரசாவைப் பற்றிய கட்டுரை வேண்டுமா? அல்லது ஆர்யபட்டாவைப் பற்றிய செய்தி வேண்டுமா? அல்லது அண்ணாமலையார் கோவிலைப் பற்றிய தகவல் வேண்டுமா?
அத்தனையும் கிடைக்கும்.

கூகுள் ஆண்டவர் கருணை மிக்கவர். உங்களுக்கு அவர் உடனே உதவுவார். நீங்கள் விரதம்  எதுவும் இருக்க வேண்டாம். தேங்காய் உடைத்து அர்ச்சனை எதுவும் செய்ய வேண்டாம்.  அதுதான் முக்கியமான விஷயம்!

இணையம் நம்மை எப்படி மாற்றியிருக்கிறது என்று ஒரு குட்டிக்கதை மூலம் சொல்கிறேன்.

சின்ன வயதில் கதை கேட்டு வளர்ந்தவன். கதை சொல்வதில்  ஆர்வ முள்ளவன். கையில் மைக் கிடைத்தால் கதை சொல்லாமல் இறங்குவதில்லை என்ற வைராக்கியம் உள்ளவன்.

ஆகவே வேறு வழியில்லை. நீங்கள் கதையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்!

இப்போது கதை:

கதை

இணையம் நம்மை எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? எல்லாம் இனிய மாற்றங்கள்தான். அந்த மாற்றங்கள் தொடரட்டும்.

இணையத்தின் இனிமை நாளுக்கு நாள் கூடட்டும்!

இணையத்தில் குறையே இல்லையா? இருக்கிறது. அது இணையத்தின் குற்றமல்ல. ஆபாசத் தளங்களையும், வைரஸ்களையும் இணையத்தில்
உலவ விட்டது. சக மனிதர்களின் குற்றமே. அதை மறந்துவிட்டு நல்லதை மட்டுமே  நாம்  எடுத்துக் கொள்வோம்.

இணையம் என்றுமே இனிமையானது.
மனதை மயக்கக்கூடியது.
சமூகத்திற்கு உதவக்கூடியது.

அதைப் போற்றி வளர்ப்போம்!

என்னுடைய உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்

வாய்ப்பிற்கு நன்றி! இந்த மேடையில் பேச வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அத்துடன் இதுவரை பொறுமையாக என் உரையைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றி

வணக்கம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

58 comments:

  1. மனது கனக்கின்றது... நீங்கள் கொடுத்த டிராப்ட் உரையில் புகழ்ச்சி கொஞ்சம் குறைந்து இருக்கலாம்... அடுத்தமுறையாவது இவர்களால் நடத்தப்படும் விழாக்களில் பேச கவிஞர் அப்துல் ரகுமானிடம் கிளாஸ் எடுத்துவிட்டு பின்னர் பேசுங்கள்.. எப்படியும் நீங்கள் பேசுவதைக்கேட்டுவிடவேண்டும் என்ற‌ ஆர்வக்கோளாறால் ஒருமுறை தங்கள் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்ததற்கு மன்னிக்கவும்.... கே. பழனிச்சாமி ... அன்னூர்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு வாழ்த்துகள்..!

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  3. வாத்தியாரின் இனிமையான குரலைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அது நிறைவேறாமல் போய் விட்டது. தங்களை நடத்திய விதம் அவர்கள் தங்களை நன்றாக சிங்காரித்து விட்டு மூக்கறுத்ததைப் போல் இருக்கிறது. இதற்கு மேல் நான் எழுதினால் அது தேவையற்ற அரசியலாகிவிடும். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வீட்டுக்கு போகும் போது மாலையோட போனிங்களா இல்லையா ?

    ReplyDelete
  5. மறப்போம். மன்னிப்போம்.

    என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.



    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. என்ன கதையை காணவில்லை அய்யா! நன்றி!

    ReplyDelete
  7. வரலாறு காணாத குழப்பத்தின் காரணமாகத் தங்கள் உரை அந்த மாநாட்டில் படிக்கமுடியாமல் போனது குறித்து வருத்தமில்லை. உங்கள் உரையை ஆழ்ந்து படிக்க "வகுப்பு அறை"யில் வசதி செய்து கொடுத்துவிட்டீர்கள். பொழுது போக்குக்காக, வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில், ஒரே கசமுசா சத்தத்தில் ஒருவரும் கவனிக்காத நிலையில் பேசிமுடிப்பதைக் காட்டிலும், உங்கள் வலைத்தளத்தைத் தேடிப்படிக்கும் ஆயிரமாயிரம் அன்பர்கள் படிக்கும்படி உங்கள் உரையை தந்ததே சிறப்பு! இதைத்தவிர வேறென்ன வேண்டும். 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பது தமிழ் மரபு. இடம் பார்த்து சபையினரின் ஆர்வமறிந்து, அவர்கள் தேவை அறிந்து கொடுக்கும் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லையேல் கம்பன் சொன்னது போல், "மன்னவ‌னும் நீயோ, வளநாடும் உனதோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கொம்பு உண்டோ" என்று சொல்லி, விட்டதடி ஆசை 'விளாம்பழத்தின் ஓட்டோடு' என்று போய்விட வேண்டியதுதான். ராஜாஜியின் வாக்குப்படி "குறையொன்றுமில்லை கோவிந்தா" என்போம். மனச்சுமை வேண்டாம். இறக்கி வையுங்கள். நன்றி.

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    செம்மொழி மாநாட்டில் பேசுவதற்கு முடியாமல் திரும்பியது வருத்தமாக உள்ளது என்றாலும்,
    எல்லாம் நன்மைக்கே என்று மன நிறைவு கொள்வோம்.

    அங்கே நிகழ்த்தவிருந்த உரையினை படிக்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
    இணையம் பற்றிய வரலாறு,தொழில் நுட்ப
    சாதனைகள்,இணையத்தின் தற்போதைய நிலை,இணையத்தில் தாய்மொழித் தமிழின்
    வளர்ச்சி முதலியன உதாரணங்கள் மற்றும் நிறைந்த விவரங்களுடன் தங்களின் உரை மிகுந்த சிறப்பாக உள்ளது.

    நம் அன்னைத் தமிழுக்கு நம்மாலான சேவையைச் செய்ய வேண்டும்

    தாய் மொழியில் மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது

    தாய்க்கு எப்படி மாற்று இல்லையோ, அப்படித் தாய் மொழிக்கும் இணையான மாற்றுக் கிடையாது.

    இணையம் என்றுமே இனிமையானது.
    மனதை மயக்கக்கூடியது.
    சமூகத்திற்கு உதவக்கூடியது.
    அதைப் போற்றி வளர்ப்போம்!

    முதலியன முத்தாய்ப்பாக உள்ளது.

    நம் வகுப்பறையினை இன்று செம்மொழி மாநாட்டு அரங்கமாக மனதில் கொண்டு உங்கள் உரையைப் படித்து மகிழ வாய்ப்பளித்த
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-24

    ReplyDelete
  9. வணக்கம் சார்,
    தங்கள் அங்கே பேசினீங்களேர் இல்லையோ அதைவிட்டுவிடுங்கள் நீங்க ஏன் நான் ஒரு வெட்டின்னு சொல்லுறீங்க சொல்லக்கூடாது. நீங்க தங்களின் பொன்னான நேரத்தை அதிகமாக் வகுப்பறை மாணவர்களுக்கு அர்பணம் பண்றீங்க நான் ரொம்ப நல்ல் தத்துவங்களை உங்களிட‌மிருந்ததும் சகோத்ர சகோத்ரிகளிட‌மிருந்தும் தெரிந்துகொள்வேன். இந்த த்மிழ் உரைமிகவும் நன்றாகயிருந்தது. நீங்க ரொம்ப கஷடபட்டு இவ்வளவு பெரிய உரையை தட்டச்சு
    செய்து வலையெற்றியிருககிறீகள் தங்களின் பொறுமையை என்னவென்று சொல்லுவது. ரொம்ப நன்றி சார்.
    சுந்தரி.

    ReplyDelete
  10. I really feel sorry about it. Avargal koduthu vaithathu avvalavu than. We are gifted to read your presentation which is very nice and would look forward to the story also. We are with you. bala riyadh.
    KMRK avargalukku, I tried to use thamizh ezhuthi, but it is taking long time for a novice like me. This is the reason why we dont write pinnuttam frequently. I will try to learn it when time permits.

    ReplyDelete
  11. ஐயா, தங்களை ச‌ந்திக்க முயன்றேன்... தோல்வியுற்றேன்... நான் 26ல் கம்பர் அரங்கில் 12 to 1.30ல் "எதிர்கால எரிசக்தி தேவைக்கு சூரிய ஒளி மின் நிலையங்கள்!" என்ற‌ தலைப்பில் பேச இருக்கின்றேன்!
    முடிந்தால் வரவும்! அத‌ன் சார‌ம் இங்கே!!
    http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0809/26/1080926033_1.htm

    த‌ங்க‌ள் க‌டைசி பெஞ்ச் மாண‌வ‌ன்,
    ஜாவா,
    ஆஸ்திரேலியா

    ReplyDelete
  12. இந்தியர்களைப் பற்றி, குறிப்பாகத் தமிழர்களைப் பற்றி நான் கூறிவரும் கருத்து
    உங்க‌ள் விஷயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் எல்லாம் உண்டு. ஆனால் எதுவும் சரிவர இயங்காது.ஆரவாரத்துடன் தமிழ‌ன் ஒரு செயலைத் துவங்குவான்,எப்படி அதனைத் தொடரப்போகிறோம் என்ற திட்டம் கைவசம் இல்லாமலேயே! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது
    சரிதான்;ஆனால் காற்று இல்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பது இல்லை.இங்கே எல்லாரும் ஆலோசகர்கள் தான். நடைமுறைப்படுத்ததான் யாரும் இல்லை.அழைப்புக் கொடுத்த விருந்தாளிக்கே இந்த மரியாதைதான் என்றால் அழையா விருந்தாளிகள் பாடு என்னவோ?!
    நெஞ்சம் குமுறுகிறது.விடுங்கள். போகட்டும்.

    ReplyDelete
  13. //////கே.பழனிசாமி, அன்னூர் said...
    மனது கனக்கின்றது... நீங்கள் கொடுத்த டிராப்ட் உரையில் புகழ்ச்சி கொஞ்சம் குறைந்து இருக்கலாம்... அடுத்தமுறையாவது இவர்களால் நடத்தப்படும் விழாக்களில் பேச கவிஞர் அப்துல் ரகுமானிடம் கிளாஸ் எடுத்துவிட்டு பின்னர் பேசுங்கள்.. எப்படியும் நீங்கள் பேசுவதைக்கேட்டுவிடவேண்டும் என்ற‌ ஆர்வக்கோளாறால் ஒருமுறை தங்கள் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்ததற்கு மன்னிக்கவும்.... கே. பழனிச்சாமி ... அன்னூர்.////////

    அது புகழ்ச்சி அல்ல! சபைமரபு. சபையில் பேசும்போது, விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களைக் குறிப்பிட வேண்டாமா சாமி?

    ReplyDelete
  14. //////rk guru said...
    அருமையான பதிவு வாழ்த்துகள்..!
    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html/////

    நல்லது. நன்றி! உங்கள் பதிவைப் பார்க்கிறேன்

    ReplyDelete
  15. /////ananth said...
    வாத்தியாரின் இனிமையான குரலைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அது நிறைவேறாமல் போய் விட்டது. தங்களை நடத்திய விதம் அவர்கள் தங்களை நன்றாக சிங்காரித்து விட்டு மூக்கறுத்ததைப் போல் இருக்கிறது. இதற்கு மேல் நான் எழுதினால் அது தேவையற்ற அரசியலாகிவிடும். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.////////

    என்னை மட்டுமல்ல, என்னைப்போல வந்திருந்த சுமார் 6 பதிவர்களை.
    இனிமையான குரலா? இனிமையான குரல் இருந்திருந்தால், நான் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்! இசைக்கலைஞனாகி இருப்பேன். இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு!

    ReplyDelete
  16. //////கோவி.கண்ணன் said...
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வீட்டுக்கு போகும் போது மாலையோட போனிங்களா இல்லையா?/////

    எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? மேடைகளில் இப்போதெல்லாம் பொன்னாடைகள்தான். 100 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்கள் வரையில் விதம் விதமாகக் கிடைக்கும்.

    ReplyDelete
  17. //////sury said...
    மறப்போம். மன்னிப்போம்.
    என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.
    சுப்பு ரத்தினம்.////////

    Oorvasi, Oorvasi, take it easy Oorvasi" பாடலும் என் நினைவிற்கு வரும்!

    ReplyDelete
  18. /////snkm said...
    என்ன கதையை காணவில்லை அய்யா! நன்றி!//////

    தற்சமயம் நேரம் இல்லை. பிற்கு ஒருநாளதைத் தருகிறேன்!

    ReplyDelete
  19. //////Thanjavooraan said...
    வரலாறு காணாத குழப்பத்தின் காரணமாகத் தங்கள் உரை அந்த மாநாட்டில் படிக்கமுடியாமல் போனது குறித்து வருத்தமில்லை. உங்கள் உரையை ஆழ்ந்து படிக்க "வகுப்பு அறை"யில் வசதி செய்து கொடுத்துவிட்டீர்கள். பொழுது போக்குக்காக, வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில், ஒரே கசமுசா சத்தத்தில் ஒருவரும் கவனிக்காத நிலையில் பேசிமுடிப்பதைக் காட்டிலும், உங்கள் வலைத்தளத்தைத் தேடிப்படிக்கும் ஆயிரமாயிரம் அன்பர்கள் படிக்கும்படி உங்கள் உரையை தந்ததே சிறப்பு! இதைத்தவிர வேறென்ன வேண்டும். 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பது தமிழ் மரபு. இடம் பார்த்து சபையினரின் ஆர்வமறிந்து, அவர்கள் தேவை அறிந்து கொடுக்கும் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். இல்லையேல் கம்பன் சொன்னது போல், "மன்னவ‌னும் நீயோ, வளநாடும் உனதோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கொம்பு உண்டோ" என்று சொல்லி, விட்டதடி ஆசை 'விளாம்பழத்தின் ஓட்டோடு' என்று போய்விட வேண்டியதுதான். ராஜாஜியின் வாக்குப்படி "குறையொன்றுமில்லை கோவிந்தா" என்போம். மனச்சுமை வேண்டாம். இறக்கி வையுங்கள். நன்றி./////

    மனதில் சுமையையே ஏற்ற மாட்டேன் சுவாமி. எல்லாம் நன்மைக்கே என்று ஒவ்வாதவைகளை அப்போதே உதறி விடுவேன். மனம் திறந்த உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சுவாமி!

    ReplyDelete
  20. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    செம்மொழி மாநாட்டில் பேசுவதற்கு முடியாமல் திரும்பியது வருத்தமாக உள்ளது என்றாலும்,
    எல்லாம் நன்மைக்கே என்று மன நிறைவு கொள்வோம்.
    அங்கே நிகழ்த்தவிருந்த உரையினை படிக்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
    இணையம் பற்றிய வரலாறு,தொழில் நுட்ப
    சாதனைகள்,இணையத்தின் தற்போதைய நிலை,இணையத்தில் தாய்மொழித் தமிழின்
    வளர்ச்சி முதலியன உதாரணங்கள் மற்றும் நிறைந்த விவரங்களுடன் தங்களின் உரை மிகுந்த சிறப்பாக உள்ளது. நம் அன்னைத் தமிழுக்கு நம்மாலான சேவையைச் செய்ய வேண்டும்
    தாய் மொழியில் மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது
    தாய்க்கு எப்படி மாற்று இல்லையோ, அப்படித் தாய் மொழிக்கும் இணையான மாற்றுக் கிடையாது.
    இணையம் என்றுமே இனிமையானது.
    மனதை மயக்கக்கூடியது.
    சமூகத்திற்கு உதவக்கூடியது.
    அதைப் போற்றி வளர்ப்போம்!
    முதலியன முத்தாய்ப்பாக உள்ளது.
    நம் வகுப்பறையினை இன்று செம்மொழி மாநாட்டு அரங்கமாக மனதில் கொண்டு உங்கள் உரையைப் படித்து மகிழ வாய்ப்பளித்த
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  21. //////sundari said...
    வணக்கம் சார்,
    தங்கள் அங்கே பேசினீங்களேர் இல்லையோ அதைவிட்டுவிடுங்கள் நீங்க ஏன் நான் ஒரு வெட்டின்னு சொல்லுறீங்க சொல்லக்கூடாது. நீங்க தங்களின் பொன்னான நேரத்தை அதிகமாக் வகுப்பறை மாணவர்களுக்கு அர்ப்பணம் பண்றீங்க நான் ரொம்ப நல்ல் தத்துவங்களை உங்களிட‌மிருந்ததும் சகோதர சகோதரிகளிட‌மிருந்தும் தெரிந்துகொள்வேன். இந்த தமிழ் உரைமிகவும் நன்றாகயிருந்தது. நீங்க ரொம்ப கஷடபட்டு இவ்வளவு பெரிய உரையை தட்டச்சு செய்து வலையெற்றியிருககிறீகள் தங்களின் பொறுமையை என்னவென்று சொல்லுவது. ரொம்ப நன்றி சார்.
    சுந்தரி.////////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. //////Balasubramanian Pulicat said...
    I really feel sorry about it. Avargal koduthu vaithathu avvalavu than. We are gifted to read your presentation which is very nice and would look forward to the story also. We are with you. bala riyadh.
    KMRK avargalukku, I tried to use thamizh ezhuthi, but it is taking long time for a novice like me. This is the reason why we dont write pinnuttam frequently. I will try to learn it when time permits.////

    உங்களின் அன்பிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பாலா!

    ReplyDelete
  23. ///////Jawahar said...
    ஐயா, தங்களை ச‌ந்திக்க முயன்றேன்... தோல்வியுற்றேன்... நான் 26ல் கம்பர் அரங்கில் 12 to 1.30ல் "எதிர்கால எரிசக்தி தேவைக்கு சூரிய ஒளி மின் நிலையங்கள்!" என்ற‌ தலைப்பில் பேச இருக்கின்றேன்!
    முடிந்தால் வரவும்! அத‌ன் சார‌ம் இங்கே!!
    http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0809/26/1080926033_1.htm
    த‌ங்க‌ள் க‌டைசி பெஞ்ச் மாண‌வ‌ன்,
    ஜாவா,
    ஆஸ்திரேலியா//////

    நீங்கள் இங்கே கோவையில் தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயரையும், அறை எண்ணையும் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  24. //////kmr.krishnan said...
    இந்தியர்களைப் பற்றி, குறிப்பாகத் தமிழர்களைப் பற்றி நான் கூறிவரும் கருத்து
    உங்க‌ள் விஷயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் எல்லாம் உண்டு. ஆனால் எதுவும் சரிவர இயங்காது.ஆரவாரத்துடன் தமிழ‌ன் ஒரு செயலைத் துவங்குவான்,எப்படி அதனைத் தொடரப்போகிறோம் என்ற திட்டம் கைவசம் இல்லாமலேயே! காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது
    சரிதான்;ஆனால் காற்று இல்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பது இல்லை.இங்கே எல்லாரும் ஆலோசகர்கள் தான். நடைமுறைப்படுத்ததான் யாரும் இல்லை.அழைப்புக் கொடுத்த விருந்தாளிக்கே இந்த மரியாதைதான் என்றால் அழையா விருந்தாளிகள் பாடு என்னவோ?!
    நெஞ்சம் குமுறுகிறது.விடுங்கள். போகட்டும்.//////

    நிதர்சனமான உண்மை! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. ஆசிரியருக்கு வணக்கம்,

    ஆறரைக் கோடியில் நீவீரும் ஒருவர்... அப்படி இருக்க அதிலே தங்களை சரியாக அடையாளம் கண்டு...
    அழைப்பிற்கும் அனுமதித்தமைக்கும் அர்த்தம் உண்டு.... திட்டமிடுதலில் வந்தக் கோளாறு போலும்....சாதாரண திருமண விழா அதுவும் நம் வீட்டில் நடந்தால் கூட நாம் முன்பு பலத் திருமண நிகழ்வுகளை செய்தவர்களின் அனுபவத் துணையுடன் செய்யும் போதும் மிகவும் சரியாக எதையும் செய்துவிடுவதில்லை. தவறாக நினைக்கவேண்டாம், எங்களுக்கு நாங்கள் கூறும் சமாதனம்.....

    தொழில்நுட்ப வல்லுனர்களின் உரைகள் இருக்கட்டும்.... தாங்கள் கூறியதுபோல் இந்தத் தமிழும், தமிழ் சார்ந்த கலை இலக்கியமும் தான் அந்த இணையத்திற்கே உயிர் கொடுத்துள்ளது.......இல்லை என்றால் அது வெறும் மின்னணுவியல் பதிவேடாக மட்டுமே இருக்கும்.

    இதில் இன்னும் மொரு விஷயம், இது தான் உண்மை... பெரும் பாலும் பொறியியலாளர் களுக்குள் கலை உணர்வு மிகுந்திருக்காது (அதன் சுவை, அருமை,மகிமையை உணர மாட்டார்கள் / lake or lagging of art sense) அவர்களோடு நாம் கைகோர்த்துச் செல்லும் போது இது போன்ற நிகழ்வுகள் இருப்பதே.....
    பொத்திவைத்த மல்லிகை உமது உரை அது வகுப்பறையில் அற்புத மணம் வீசுகிறது.
    மல்லிகையின் மணம், மஞ்சளின் நிறம், மன்னனின் குணம் அதுபோல வகுப்பறையின் அறிவுசால் கருத்துப் பகிர்வு என்றும் மாறுவதில்லை.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  26. உரை நன்றாக இருந்தது. நம் நாட்டின் சிறப்பு இந்த ஒருங்கிணைப்பு இல்லாத தன்மை தான். அது நமக்கு பழகிவிட்டதால்தான் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல் ஆகுமா என்று கூறுகிறோம். வேறு எந்த நாட்டில் இதுபோல் நடக்கும். கோவியார் கல்யாணபரிசை நினைவு கூறுகிறார் போல இருக்கிறது.

    ReplyDelete
  27. ஆம் . . .
    தமிழின் சிறப்பே சிறப்பு . .
    தமிழனின் செயல்களே அது தான் . .

    தொடக்க நாள் கூட தமிழில் இல்லாமல் (வணக்கம்) என்ற வார்த்தையுடன் தமிழை மறந்து (தமிழில் பேச தெரியாத)பேசும் மற்ற மொழிக்காரர்களின் பேச்சை மொழி மாற்றம் செய்யாதது. . .
    மாநாட்டு தலைவர் உரையிலும் தமிழ் இல்லாதது
    போதிய ஏற்பாடுகள் இல்லாதது என்ற நிலையில் . .
    ஆர்வலர்கள் எல்லாம் சூட்டிங் பார்க்க சென்றவர்களைப் போல் . .தான்..

    ஆர்வத்துடன் இருக்கும் நம்மவர்களுக்கு . .
    இது ஒரு சாதாரண விஷயம் அதனை சதா . . பேசி . . . "ரண" மாக்கக் கூடாது . .

    சும்மா ஒரு இதுக்கு . .
    இந்த மாநாடு அவுங்க தலையில நடந்தா . .

    அத்தனைபேருக்கும் மரியாதை கிடைச்சுருக்கும் . .
    மஞ்சளை விட பச்சைக்கு வசீகர சக்தி அதிகம் . .

    மூன்றை விட எட்டு பெரிசு . .
    எட்டை பிரிச்சு பாருங்க மூன்றும் அதனுடைய mirror imageம் தெரியும் . .

    நம்ம நாமளாவே இருப்போம் . .
    நம்மை தேடி வருபவர்களை நாம் மதிப்போம் . .
    வள்ளுவன் வாக்குப் படி
    எற்று என்று இரங்குவ செய்யற்க . .
    செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று . .

    வாழ்க . . வாழ்க . .

    ReplyDelete
  28. சேர வேண்டிய இடத்தில் சரியாக சேர்ந்திருக்கிறது உங்கள் உரை.எங்களுக்கு வேண்டியது கிடைத்தது. எல்லாம் இறைவன் சித்தம்.

    ReplyDelete
  29. Excellent speech, avargaluku koduthuvaikavillai.. pavam..

    ReplyDelete
  30. அருமையான உரை ஐயா. கேட்கத்தான் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. மாணவக் கண்மணிகள் அந்தக் கதையை எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  31. சிறப்பான கட்டுரை

    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  32. Hello Sir,

    Very good one. Thanks for sharing with us.

    Vannamalar

    ReplyDelete
  33. மாநாட்டில் இடம்பெறமுடியாமல்போன தங்களின் உரை படித்தேன். நிறைய தகவல்களும் கொஞ்சம் புள்ளிவிவரங்களுடனும் கூடிய உரைகள் ஓரளவு போரடிக்கவே செய்யும். ஆனால் சுவாரஸ்யமாக செய்துள்ளமை தங்களின் கைவண்ணம்.இம்மாநாடு தொடர்பான என்னுடைய பதிவையும் தவிர்க்காமல் படித்துப் பார்க்கவும். ஏனெனில் நிறையப்பேருக்குப் போய்ச் சேரவேண்டிய தகவல் அதில் உள்ளது.http://amudhavan.blogspot.com குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை ஆராதிப்பவர்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பதனால் இதனை வலியுறுத்துகிறேன்.

    ReplyDelete
  34. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆறரைக் கோடியில் நீவீரும் ஒருவர்... அப்படி இருக்க அதிலே தங்களை சரியாக அடையாளம் கண்டு...
    அழைப்பிற்கும் அனுமதித்தமைக்கும் அர்த்தம் உண்டு.... திட்டமிடுதலில் வந்தக் கோளாறு போலும்....சாதாரண திருமண விழா அதுவும் நம் வீட்டில் நடந்தால் கூட நாம் முன்பு பலத் திருமண நிகழ்வுகளை செய்தவர்களின் அனுபவத் துணையுடன் செய்யும் போதும் மிகவும் சரியாக எதையும் செய்துவிடுவதில்லை. தவறாக நினைக்கவேண்டாம், எங்களுக்கு நாங்கள் கூறும் சமாதனம்.....
    தொழில்நுட்ப வல்லுனர்களின் உரைகள் இருக்கட்டும்.... தாங்கள் கூறியதுபோல் இந்தத் தமிழும், தமிழ் சார்ந்த கலை இலக்கியமும் தான் அந்த இணையத்திற்கே உயிர் கொடுத்துள்ளது.......இல்லை என்றால் அது வெறும் மின்னணுவியல் பதிவேடாக மட்டுமே இருக்கும்.
    இதில் இன்னுமொரு விஷயம், இது தான் உண்மை... பெரும் பாலும் பொறியியலாளர் களுக்குள் கலை உணர்வு மிகுந்திருக்காது (அதன் சுவை, அருமை,மகிமையை உணர மாட்டார்கள் / lake or lagging of art sense) அவர்களோடு நாம் கைகோர்த்துச் செல்லும்போது இது போன்ற நிகழ்வுகள் இருப்பதே.....
    பொத்திவைத்த மல்லிகை உமது உரை அது வகுப்பறையில் அற்புத மணம் வீசுகிறது.
    மல்லிகையின் மணம், மஞ்சளின் நிறம், மன்னனின் குணம் அதுபோல வகுப்பறையின் அறிவுசால் கருத்துப் பகிர்வு என்றும் மாறுவதில்லை.
    நன்றிகள் ஐயா!//////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  35. /////krish said...
    உரை நன்றாக இருந்தது. நம் நாட்டின் சிறப்பு இந்த ஒருங்கிணைப்பு இல்லாத தன்மைதான். அது நமக்கு பழகிவிட்டதால்தான் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல் ஆகுமா என்று கூறுகிறோம். வேறு எந்த நாட்டில் இதுபோல் நடக்கும். கோவியார் கல்யாணபரிசை நினைவு கூறுகிறார் போல இருக்கிறது./////

    கோவியார் எனது வலைப்பதிவுகளின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவர்! கோவைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப்போனவர். அவருக்கில்லாத உரிமையா? அவர் நகைச்சுவைக்காக அந்தப் படத்தின் காட்சியைக் குறிப்பிட்டுள்ளார். நடப்பில், அதுபோல யாரும் செய்யமாட்டார்கள்! அது அவருக்கும் தெரியும்!

    ReplyDelete
  36. /////iyer said...
    ஆம் . . .
    தமிழின் சிறப்பே சிறப்பு . . தமிழனின் செயல்களே அதுதான் . .
    தொடக்க நாள் கூட தமிழில் இல்லாமல் (வணக்கம்) என்ற வார்த்தையுடன் தமிழை மறந்து (தமிழில் பேச தெரியாத)பேசும் மற்ற மொழிக்காரர்களின் பேச்சை மொழி மாற்றம் செய்யாதது. . .
    மாநாட்டு தலைவர் உரையிலும் தமிழ் இல்லாதது
    போதிய ஏற்பாடுகள் இல்லாதது என்ற நிலையில் . .
    ஆர்வலர்கள் எல்லாம் சூட்டிங் பார்க்க சென்றவர்களைப் போல் . .தான்..
    ஆர்வத்துடன் இருக்கும் நம்மவர்களுக்கு . .
    இது ஒரு சாதாரண விஷயம் அதனை சதா . . பேசி . . . "ரண" மாக்கக் கூடாது . .
    சும்மா ஒரு இதுக்கு . .
    இந்த மாநாடு அவுங்க தலையில நடந்தா . .
    அத்தனைபேருக்கும் மரியாதை கிடைச்சுருக்கும் . .
    மஞ்சளை விட பச்சைக்கு வசீகர சக்தி அதிகம் . .
    மூன்றை விட எட்டு பெரிசு . .
    எட்டை பிரிச்சு பாருங்க மூன்றும் அதனுடைய mirror imageம் தெரியும் . .
    நம்ம நாமளாவே இருப்போம் . .
    நம்மை தேடி வருபவர்களை நாம் மதிப்போம் . .
    வள்ளுவன் வாக்குப் படி
    எற்று என்று இரங்குவ செய்யற்க . .
    செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று . .
    வாழ்க . . வாழ்க . ./////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. ////Sekar said...
    சேர வேண்டிய இடத்தில் சரியாக சேர்ந்திருக்கிறது உங்கள் உரை.எங்களுக்கு வேண்டியது கிடைத்தது. எல்லாம் இறைவன் சித்தம்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. /////Mythili said...
    Excellent speech, avargaluku koduthuvaikavillai.. pavam..//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  39. /////SHEN said...
    அருமையான உரை ஐயா. கேட்கத்தான் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. மாணவக் கண்மணிகள் அந்தக் கதையை எதிர்பார்க்கிறோம்.
    அன்புடன்,
    செங்கோவி/////

    அதைத் தட்டச்சு செய்து பதிவிட வேண்டும். நேரம் கிடைக்கும்போது, அதைச் செய்கிறேன். பொறுத்திருங்கள் செங்கோவி!

    ReplyDelete
  40. //////Sabarinathan Arthanari said...
    சிறப்பான கட்டுரை
    பகிர்விற்கு நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////Vannamalar said...
    Hello Sir,
    Very good one. Thanks for sharing with us.
    Vannamalar////////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  42. //////Amudhavan said...
    மாநாட்டில் இடம்பெறமுடியாமல்போன தங்களின் உரை படித்தேன். நிறைய தகவல்களும் கொஞ்சம் புள்ளிவிவரங்களுடனும் கூடிய உரைகள் ஓரளவு போரடிக்கவே செய்யும். ஆனால் சுவாரஸ்யமாக செய்துள்ளமை தங்களின் கைவண்ணம்.இம்மாநாடு தொடர்பான என்னுடைய பதிவையும் தவிர்க்காமல் படித்துப் பார்க்கவும். ஏனெனில் நிறையப்பேருக்குப் போய்ச் சேரவேண்டிய தகவல் அதில் உள்ளது.http://amudhavan.blogspot.com குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை ஆராதிப்பவர்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பதனால் இதனை வலியுறுத்துகிறேன்.//////

    உங்களைப் பற்றிய விவரங்கள் அசத்தும்படியாக ஊள்ளது. அதை வகுப்பறை வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்:
    சொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள்! ரெய்கி பற்றி 'அற்புத ரெய்கி' ('நலம்'-கிழக்குப்பதிப்பக வெளியீடு) 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்'(விகடன் பிரசுரம்) இரண்டும் சமீபத்தில் எழுதிய நூல்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் அமுதவன். வாசகர்கள் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.

    ”எழுதுவதை சுவாரசியமாக எழுதுங்கள்
    எல்லோரும் படிப்பார்கள்”

    ”தலைப்பை நன்றாகப் போடுங்கள்
    தானே வருவார்கள்”

    அதுதான் பதிவுலகின் தாரகமந்திரம்!

    ReplyDelete
  43. ////SP.VR. SUBBAIYA said... Telegram, Teleprinter, Fax என்று தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், வணிகர்களும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் எல்லாம் இன்று குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. அந்த வேலைகள் அனைத்தையும், கணினி மற்றும் இணைய
    இணைப்புக்களின் மூலம் சர்வசாதரணமாக நம்மால் செய்ய முடிகிறது.

    கணினிதான் சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு. கணினிக்கு, இணையம் என்ற அழகான மற்றும் அறிவான, பெண்ணைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் இருவரும் - அதாவது,
    கணினியும், இணையமும், எந்தவிதப் பிணக்கமும் இல்லாமல், ஒற்றுமையுடன்அன்பாகக் குடும்பம் நடத்தி.... //////

    குழப்பங்களுக்கு பெயர் போன ஊர் நம்மூர்.இதிலே நீங்கள் அறிவித்தது போலே மேடை ஏறிப்பேசி இருந்தால்தான் ஆச்சரியம்.
    இந்த topic தான் பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் ஏற்கனவே இந்த கிளிப்பிங்கை பார்க்க அனுப்பியிருப்பேன்..
    பழைய தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி தாங்கள் வியக்கும் நேரம் புதிதாக நம்ம நாட்டுகாரர் ஒருவர் கண்டுபிடித்து ,வடிவமைத்து அளித்துள்ள
    presentation ஐ இந்த link லே கண்டு வியந்திடுங்கள்.
    http://economictimes.indiatimes.com/tv/TED-India-Pranav-Mistry/videoshow_ted/5231080.cms
    வெறும்கையில் முழம் போட முடியாது என்ற பழமொழி வழக்கொழிந்து போகும்..ஆமாம்..வெறும்கையில் டெலிபோன் பண்ண முடியுமென்றால்?
    நான்கே விரல்கள் கொண்டு புகைப்படம் எடுக்க முடியுமென்றால்?
    இது நடைமுறைக்கு வரும் நேரம் Telegram, Teleprinter, Fax என்று அந்த லிஸ்டிலே computer devices, camera என்று குப்பைக்குப் போகும் அபாயம் தெரிகிறது....
    அப்போது இணையத்துக்கும் கணினிக்குமான திருமண பந்தத்திலே கூட பெரிய விரிசல் ஏற்படும்..
    மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறும்...

    ReplyDelete
  44. The content is very good and It is very unfortunate that you are unable to deliver the same.

    Thanks for sharing with us and hope you will be able to deliver your next speech on 26th June.

    Regards
    Ramki

    ReplyDelete
  45. அன்புடன் வணக்கம்
    விபத்தான விமானத்தில் ஏறாமல் இருபது நல்லதா கெட்டதா??? நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் நீங்கள் வருவீர்கள் பார்க்கலாம் என இருந்தேன் அனால் பாருங்கள் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழல் ....நமது நாட்டிற்கே பெருமை தேடித்தந்த அறிவியலாளர்
    உலகத்தில் இந்தியவின் அடயாளம் அணு தந்தை சிறந்த கவிஞர் பச்சை தமிழர் அப்துல் கலாம் இவருக்கு அங்கே ஒரு சின்ன இடமில்லை ஒரு பத்து நிமிட உரைக்கு அவகாசமில்லை அப்படிப்பட்ட இடத்தில உங்க போன்றவர்களுக்கு!!!!! அன்பரே வேண்டாம் ..

    ReplyDelete
  46. Nice speech sir!
    We are planning to migrate to Coimbatore about a week from now.
    I am very interested in meeting you.

    ReplyDelete
  47. /////minorwall said...
    ////SP.VR. SUBBAIYA said... Telegram, Teleprinter, Fax என்று தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும்,

    வணிகர்களும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் எல்லாம் இன்று

    குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. அந்த வேலைகள் அனைத்தையும், கணினி மற்றும் இணைய
    இணைப்புக்களின் மூலம் சர்வசாதரணமாக நம்மால் செய்ய முடிகிறது.
    கணினிதான் சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு. கணினிக்கு, இணையம் என்ற அழகான மற்றும்

    அறிவான, பெண்ணைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் இருவரும் - அதாவது,
    கணினியும், இணையமும், எந்தவிதப் பிணக்கமும் இல்லாமல், ஒற்றுமையுடன்அன்பாகக் குடும்பம் நடத்தி....

    //////

    குழப்பங்களுக்கு பெயர் போன ஊர் நம்மூர்.இதிலே நீங்கள் அறிவித்தது போலே மேடை ஏறிப்பேசி

    இருந்தால்தான் ஆச்சரியம். இந்த topic தான் பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் ஏற்கனவே இந்த கிளிப்பிங்கை

    பார்க்க அனுப்பியிருப்பேன்.. பழைய தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி தாங்கள் வியக்கும் நேரம் புதிதாக நம்ம

    நாட்டுகாரர் ஒருவர் கண்டுபிடித்து ,வடிவமைத்து அளித்துள்ள presentation ஐ இந்த link லே கண்டு

    வியந்திடுங்கள்.
    http://economictimes.indiatimes.com/tv/TED-India-Pranav-Mistry/videoshow_ted/5231080.cms
    வெறும்கையில் முழம் போட முடியாது என்ற பழமொழி வழக்கொழிந்து போகும்..ஆமாம்..வெறும்கையில்

    டெலிபோன் பண்ண முடியுமென்றால்? நான்கே விரல்கள் கொண்டு புகைப்படம் எடுக்க முடியுமென்றால்?
    இது நடைமுறைக்கு வரும் நேரம் Telegram, Teleprinter, Fax என்று அந்த லிஸ்டிலே computer devices,

    camera என்று குப்பைக்குப் போகும் அபாயம் தெரிகிறது....
    அப்போது இணையத்துக்கும் கணினிக்குமான திருமண பந்தத்திலே கூட பெரிய விரிசல் ஏற்படும்..
    மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறும்.../////

    எல்லாம் வரவேற்கத்தக்க மாற்றம்தான் மைனர். உங்களின் மேலதிகத்தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  48. ///Ramki said...
    The content is very good and It is very unfortunate that you are unable to deliver the same.
    Thanks for sharing with us and hope you will be able to deliver your next speech on 26th June.
    Regards
    Ramki////

    முதல் உரைக்கு நேர்ந்த கெடுபிடிகளால், இரண்டாம் நாள் உரையைத் தயார் செய்யவில்லை நண்பரே!

    ReplyDelete
  49. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    விபத்தான விமானத்தில் ஏறாமல் இருபது நல்லதா கெட்டதா??? நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில்

    நீங்கள் வருவீர்கள் பார்க்கலாம் என இருந்தேன் அனால் பாருங்கள் அவசர வேலையாக வெளியே செல்ல

    வேண்டிய சூழல் ....நமது நாட்டிற்கே பெருமை தேடித்தந்த அறிவியலாளர்
    உலகத்தில் இந்தியவின் அடயாளம் அணு தந்தை சிறந்த கவிஞர் பச்சை தமிழர் அப்துல் கலாம் இவருக்கு அங்கே ஒரு சின்ன இடமில்லை ஒரு பத்து நிமிட உரைக்கு அவகாசமில்லை அப்படிப்பட்ட இடத்தில உங்க
    போன்றவர்களுக்கு!!!!! அன்பரே வேண்டாம் ../////

    ஆமாம், கலாம் அவர்களை அழைக்காதது அமைப்பாளர்கள் செய்த தவறுதான்! அதில் தமிழக மக்கள் அனைவருக்குமே ஒரு வருத்தம் உண்டு!

    ReplyDelete
  50. //////Naresh said...
    Nice speech sir!
    We are planning to migrate to Coimbatore about a week from now.
    I am very interested in meeting you.///////

    ஓ...சந்திக்கலாம். சந்திப்பின் போது ஜாதகத்தைத் தூக்கிகொண்டுவராமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  51. அர‌சிய‌லும் அதிகார‌மும் இணைந்து
    ந‌ட‌த்தும் ஒரு ப‌டோடோப‌ விழாவில்

    அன்புக்கும் அறிவுக்கும் பின்ன‌டைவு
    எதிர்பார்த்த‌ ஒன்றுதானே அய்யா

    அறிவுக்க‌ள‌ஞ்சிய‌த்தை அல‌ட்சிய‌ம்
    செய்ப‌வ‌ர்க‌ளுக்கே ந‌ட்ட‌ம் அதில்

    உங்க‌ளுக்கு ஒரு குறைவும் இல்லை
    உரையை ஒலி/ஒளி யூடியூப‌லாமே?

    வ‌குப்பு அறை மாண‌வ‌ க‌ண்ம‌ணிக‌ள்
    சார்ப்பில், தமாம் பாலா

    ReplyDelete
  52. //கோவியார் எனது வலைப்பதிவுகளின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவர்! கோவைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப்போனவர். அவருக்கில்லாத உரிமையா? அவர் நகைச்சுவைக்காக அந்தப் படத்தின் காட்சியைக் குறிப்பிட்டுள்ளார். நடப்பில், அதுபோல யாரும் செய்யமாட்டார்கள்! அது அவருக்கும் தெரியும்! //

    :)

    மிக்க நன்றி வாத்தியார். வாத்தியார் சீரியஸ் ஆசாமி இல்லை நகைச்சுவைக்கு சொந்தக்காரர் என்பதாக புரிய வைப்பதாகத்தான் என்னுடைய பின்னூட்டம் இருக்கும் என்பதை நீங்கள் வழிமொழிந்ததுக்கு நன்றி.

    கல்யாணப்பரிசு தங்கவேலுடன் ஒப்பிடுவது ஒரு கவுரவம் தான், அவரைப் போல பிறரை நோகடிக்காமல் நகைச்சுவை செய்ய எந்த காலத்திலும் நடிகர்கள் வரமுடியாது.

    ReplyDelete
  53. ///////Dammam Bala (தமாம் பாலா) said...
    அர‌சிய‌லும் அதிகார‌மும் இணைந்து
    ந‌ட‌த்தும் ஒரு ப‌டோடோப‌ விழாவில்
    அன்புக்கும் அறிவுக்கும் பின்ன‌டைவு
    எதிர்பார்த்த‌ ஒன்றுதானே அய்யா
    அறிவுக்க‌ள‌ஞ்சிய‌த்தை அல‌ட்சிய‌ம்
    செய்ப‌வ‌ர்க‌ளுக்கே ந‌ட்ட‌ம் அதில்
    உங்க‌ளுக்கு ஒரு குறைவும் இல்லை
    உரையை ஒலி/ஒளி யூடியூப‌லாமே?
    வ‌குப்பு அறை மாண‌வ‌ க‌ண்ம‌ணிக‌ள்
    சார்ப்பில், தமாம் பாலா/////

    வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச் செய்கிறேன். நன்றி பாலா!

    ReplyDelete
  54. /////கோவி.கண்ணன் said...
    //கோவியார் எனது வலைப்பதிவுகளின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவர்! கோவைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப்போனவர். அவருக்கில்லாத உரிமையா? அவர் நகைச்சுவைக்காக அந்தப் படத்தின் காட்சியைக் குறிப்பிட்டுள்ளார். நடப்பில், அதுபோல யாரும் செய்யமாட்டார்கள்! அது அவருக்கும் தெரியும்! // :)
    மிக்க நன்றி வாத்தியார். வாத்தியார் சீரியஸ் ஆசாமி இல்லை நகைச்சுவைக்கு சொந்தக்காரர் என்பதாக புரிய வைப்பதாகத்தான் என்னுடைய பின்னூட்டம் இருக்கும் என்பதை நீங்கள் வழிமொழிந்ததுக்கு நன்றி.
    கல்யாணப்பரிசு தங்கவேலுடன் ஒப்பிடுவது ஒரு கவுரவம் தான், அவரைப் போல பிறரை நோகடிக்காமல் நகைச்சுவை செய்ய எந்த காலத்திலும் நடிகர்கள் வரமுடியாது.////////

    நீங்கள் ஒப்பிடுவது சமயத்தில் இரட்டை கெளரவம் கோவியாரே!:-))))

    ReplyDelete
  55. ஐயா வணக்கம்...!
    'எல்லாம் நன்மைக்கே' என்ற positive attitudeஐ எனக்குள் வளர்த்ததே தாங்கள்தான்.. எனவேதான் சொல்கிறேன், 'எல்லாம் நன்மைக்கே'... ஐயா, நான் இருப்பதோ ஷிம்லாவில்.. பல விதமான பிரச்சினைக்ளுக்கிடையில்... ஒரு வேளை தாங்கள் உரை நிகழ்த்தியிருந்தாலும் பார்க்கும், கேட்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திருக்காது.. ஆனால் முழுவதுமாகப் படிக்கும் பாக்கியம் தற்போது எனக்கு கிடைத்து விட்டதே.... இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல..? கடவுளுக்கா.. தங்களுக்கா...? நான் இருவருக்குமே நன்றி சொல்வேன், ஏனெனில் நான் தங்களின் மாணவன்.. எல்லாம் நன்மைக்கே....!
    என் மூத்த சகோதரர் ஒரு தமிழாசிரியர்.. அவர் சொன்னார்.. தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், உலக செம்மொழி ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புக்களுக்குக் கூட சரியான, முறையான பிரதிநிதித்துவம் இல்லை என்று.. எனவே, எனக்குள்ளே சில கேள்விகள்.. இந்த மாநாடு தமிழுக்காகவா அல்லது தனிப்பட்ட சிலருக்காகவா? என்று.. நாம் அரசியல் பேசவேண்டாம்.. தமிழ்த்தாய் தன் குழந்தைகள் எல்லோரையும் வாழ வைப்பவள்.. அவள் பெயரைச் சொல்லி யார் வேண்டுமானால் வாழ்ந்துவிட்டு (பிழைத்துவிட்டு) போகட்டும்... ஆனால் அவளுக்காக உண்மையில் சேவை செய்யும் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தாமல்...

    மிக்க வலி, வேதனைகளுடன்

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்
    ஷிம்லா, ஹி.பி.

    ReplyDelete
  56. //////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    'எல்லாம் நன்மைக்கே' என்ற positive attitudeஐ எனக்குள் வளர்த்ததே தாங்கள்தான்.. எனவேதான் சொல்கிறேன், 'எல்லாம் நன்மைக்கே'... ஐயா, நான் இருப்பதோ ஷிம்லாவில்.. பல விதமான பிரச்சினைக்ளுக்கிடையில்... ஒரு வேளை தாங்கள் உரை நிகழ்த்தியிருந்தாலும் பார்க்கும், கேட்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திருக்காது.. ஆனால் முழுவதுமாகப் படிக்கும் பாக்கியம் தற்போது எனக்கு கிடைத்து விட்டதே.... இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல..? கடவுளுக்கா.. தங்களுக்கா...? நான் இருவருக்குமே நன்றி சொல்வேன், ஏனெனில் நான் தங்களின் மாணவன்.. எல்லாம் நன்மைக்கே....!
    என் மூத்த சகோதரர் ஒரு தமிழாசிரியர்.. அவர் சொன்னார்.. தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், உலக செம்மொழி ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புக்களுக்குக் கூட சரியான, முறையான பிரதிநிதித்துவம் இல்லை என்று.. எனவே, எனக்குள்ளே சில கேள்விகள்.. இந்த மாநாடு தமிழுக்காகவா அல்லது தனிப்பட்ட சிலருக்காகவா? என்று.. நாம் அரசியல் பேசவேண்டாம்.. தமிழ்த்தாய் தன் குழந்தைகள் எல்லோரையும் வாழ வைப்பவள்.. அவள் பெயரைச் சொல்லி யார் வேண்டுமானால் வாழ்ந்துவிட்டு (பிழைத்துவிட்டு) போகட்டும்... ஆனால் அவளுக்காக உண்மையில் சேவை செய்யும் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தாமல்...மிக்க வலி, வேதனைகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்
    ஷிம்லா, ஹி.பி./////////

    உங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்திப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி நண்பரே!
    எல்லாம் அவன் செயல். எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  57. உங்கள் உரை அருமை,
    i totally agree with Thanjavooraan்
    comments.

    ReplyDelete
  58. ////சிங்கைசூரி said...
    உங்கள் உரை அருமை,
    i totally agree with Thanjavooraan்////

    நல்லது. நன்றி சூரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com