மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.7.08

ஜோதிடப் பாடத்தின் 100வது பதிவு!: யார் செல்வந்தன்?

என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார்,"யார் செல்வந்தன்?"

நான் சொன்னேன் "செல்வம் இருப்பவன் எல்லாம் செல்வந்தன் இல்லை!"

அவர் விடவில்லை,"அது தெரியும் ; அதனால்தான் கேட்கிறேன்!"

"யாருக்குக் கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்!"
என்று நான் சொன்னேன்

"அதுதான் உண்மை! Health is welath!" என்று சொன்ன அவர், அதற்குப்
பிறகு ஒரு மணி நேரம் அது பற்றிப் பேசிவிட்டுத்தான் என்னை விட்டார்.

இன்று கோவையிலும், திருப்பூரிலும் பெரிய அளவில் தொழில் செய்பவர்
களுக்கு, சொத்துக்களைப் போலவே கோடிக்கணக்கில் வங்கிக் கடன்கள்
உள்ளன. 24 மணி நேரமும் பணத்தை ஈட்டும் சிந்தனையிலேயே இருப்பதால்
சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கமோ அல்லது தேவையான
அளவு தூக்கமோ இல்லாமல் தவிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்
பலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் உண்டு!

பணத்தைத் துரத்தும்போது, நோய்களையும் சேர்த்துதான் துரத்துகிறோம்
என்பதைப் பலர் உணர்வதில்லை!
--------------------------------------------------------------
இப்போது பாடம்!

தலைப்பு: ஆறாம் வீடு (The sixth house in a birth chart)

ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு
எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது.

ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி
மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes)
பற்றிச் சொல்லும் வீடு.

நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்!
தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா!

ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான்.
ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம்.
கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து
விட்டால் அது சுகம்!

அதுபோல எதிரிகளும் அப்படித்தான். நாம் நட்பு பாராட்டும் தன்மையை
ஏற்படுத்திக் கொண்டால் எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சரி, இந்த மூன்றுமே - அதாவது நோய், கடன், எதிரி ஆகிய மூன்றுமே
உங்களைக் கேட்டுத்தான் ஏற்படுமா? இல்லை! ஜாதகத்தில் கோளாறு
என்றால், எந்தக் கொம்பனாலும் அவற்றைத் தவிர்க்க முடியாது.
கதவைத் தட்டிக் கொண்டு அல்ல, கதவை உடைத்துக் கொண்டு
அவைகள் உள்ளே நுழைந்து விடும். என் அனுபவத்தில் பலரை நான்
பார்த்திருக்கிறேன்.

வந்துவிட்டுப் போகட்டும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது
அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கோ வழி இருக்கிறதா?

ஏன் இல்லை? இருக்கிறது! அதுதான் இறைவழிபாடு.
இறைவன் கருணை மிக்கவன். உங்கள் கர்ம வினைகளால் ஏற்படும்
இவற்றை எல்லாம் கடக்க அவன் உதவுவான்.

அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன். ஜோதிடமும், இறை வழிபாடும்
ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்தது.

வள்ளுவப் பெருந்தகை அசத்தலாக இப்படிச் சொன்னார்:

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்!"

அவர் மொத்தமாக மனிதப் பிறப்பையே பிணி என்று சொல்லிவிட்டார்
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு நோய்கள் இருக்கும் ; ஆனால் கடன் இருக்காது. கையில்
நிறையப் பணம் வைத்திருப்பார். இன்னொருவர் மிகுந்த உடல் நலத்துடன்
இருப்பார். ஆனால் கடன் தொல்லைகள் அவருக்கு இருக்கும்.

அவதிப்படுவதில் கணக்கிட்டால் இருவர் நிலையும் ஒன்றுதான். வில்லன்கள்
வேறுபடலாம். ஆனால் கதாநாயகி அல்லது நாயகனின் துயரம் ஒன்றுதான்

அதுபோல ஒருவர் நல்லவராக, திறமைசாலியாக இருக்கலாம். அவர்மேல்
பொறாமையும், எரிச்சலும் கொண்ட எதிரிகள் அவருக்குத் தெரியாமலேயே
இருக்கலாம்.

இந்த நிலைகளை உள்ளடக்கியதுதான் ஆறாம் வீடு. அதனால்தான் ஆறாம்
வீட்டை வைத்துப் பலன் சொல்வது மிகவும் சிரமமான காரியம். பலத்த
ஆராய்ச்சி செய்துதான் பலன் சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால்
ஜோதிடர் பொய்யாகிப் போய்விடுவார்.(ஜோதிடம் பொய்யில்லை)

ஆறாம் வீட்டை வைத்து ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வலிகள்(pains)
ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணத்திற்கு ஆறாம் வீட்டு அதிபன் இரண்டாம் வீட்டில் அமர்ந்துவிட்டான்
என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவ்வாறு அமைப்புள்ள
அனைவருக்குமே ஒரே மாதிரித் துன்பம் வரும் என்று நினைக்க வேண்டாம்.

அந்தக் கிரகம், அமர்வினால் பெறும் உச்ச நீசம், நட்பு, பகை, அதோடு
மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை என்று ஏற்படும் வெவ்வேறு நிலைகளால்
பலன்களும் மாறுபடும்.

அவதிப்படுவது என்றாகிவிட்ட பிறகு எப்படி அவதிப்பட்டாலும் அது ஒன்றுதான்
அவதி அவதிதான். ஒருவர் நோயால் அவதிப்படலாம், ஒருவர் கடன்களால்
அவதிப்படலாம், ஒருவர் எதிரிகளால் அவதிப்படலாம். ஒருவர் துரதிர்ஷ்டங்
களினால் அவதிப்படலாம். ஆனால் அவதி அவதிதான்.

இங்கே துரதிர்ஷ்டம் என்பது சூழ்நிலைகளால் (unfortunate situations) ஏற்படுவதைக்
குறிக்கும்.

வங்கி வேலைதான் என்றாலும், ஒரு கிராம வங்கி அல்லது ஒரு கூட்டுறவு வங்கி
அல்லது ஒரு தனியார் வங்கி அல்லது ஒரு தேசிய வங்கி அல்லது ஒரு பன்னாட்டு
வங்கி என்று வங்கிகளில் வேலை பார்க்கும் சூழ்நிலைகளிலும், வருமானத்திலும்
(சம்பளத்திலும்) எத்தனை வேறுபாடுகள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!

You can call it as circumstance, or chance or unluck, but it is unfortunate!

பாடத்தைப் படித்துத் தேறுவதால் மட்டுமே ஒருவர் சரியான பலனைச் சொல்லிவிட
முடியாது. இதிலேயே ஊறி அனுபவம் பெற்றவரால்தான் நெத்தியடியாகப் பதிலைச்
சொல்ல முடியும்.

பாடம் 50% + அனுபவம் 50%

அனுபவம் என்பது பல ஜாதகங்களைப் பார்ப்பதாலும், அதுபற்றி ஜாதகர்களுடன்
பேசித் தெளிவதாலும், ஜோதிட அறிவுடையவர்களுடன் உரையாடுவதாலும்
மட்டுமே கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டைப்பற்றித் தெரிந்து கொள்ள, ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள்,
ஆறாம்வீட்டின் அதிபதி (owner), அவர் சென்று அமர்ந்த இடம் (placement),
அவரோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் (associates), ஆறாம் வீட்டில் வந்து அமர்ந்தவர்கள்,
ஆறாம் வீடு பெறும் பார்வைகள் (aspects) போன்றவற்றை அலச வேண்டும்!

மெலும் ஜாதகத்தில் உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.

யோகத்தில் அவயோகம்கூட உண்டா என்று கேட்காதீர்கள்!

அவயோகமும் உண்டு! அவற்றைப் பற்றி யோகங்கள் என்னும் தலைப்பில் பாடம்
நடத்தும்போது விரிவாகச் சொல்கிறேன்.

இன்று ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்!

அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம்
எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால்
அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.

வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற
நிலையில் நிறுத்திவிடும்!

உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால்
பயந்து விடாதீர்கள்.

அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ
அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள்
பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
-------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டு அதிபதி வெவ்வேறு வீடுகளில் அமர்ந்திருப்பதால் ஏற்படும்
பொதுப் பலன்கள் (The results of Sixth Lord occupying different houses)

1.
முதல் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying lagna in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புத்
துறையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கும். சாதாரண ராணுவ வீரராகவோ
அல்லது காமாண்டராகவோ பணிபுரிவார். அல்லது காவல் துறையிலோ அல்லது
சிறைத்துறையிலோ பணிபுரிவார். ஜாதகத்தின் மேன்மை அளவை வைத்து
அதில் பெரிய பதவி வரைக்கும் சென்று அமரக்கூடியவராகவும் இருப்பார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் திருட்டுத்தொழிலோ அல்லது ஒரு பெரிய மோசடிக் கூட்டத்திலோ
பணியாற்ற நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying second house in a horoscope)

இது நல்ல அமைப்பு அல்ல! இது குடும்ப வாழ்க்கைக்கும், நிதிநிலைக்கும்,
கண் பார்வைக்கும், பேச்சுத்திறமைக்கும் உரிய வீடாகும். இந்த வீட்டில்
ஆறாம் அதிபதி வந்து அமர்ந்தால், ஜாதகனுக்குப் பார்வைக்கோளாறுகள்,
பற்சிதைவுகள் ஏற்படும். திக்குகின்ற பேச்சு நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கை
தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்ததாக இருக்கும். எதிரிகளால்
பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அது அந்த தீய கிரகத்தின்
தசா புத்தியில் ஏற்படும். அதே அமைப்போடு சுக்கிரனும் நீசமாகியிருந்தால்
ஜாதகன் வறுமையில் உழல்வான். பசிக்கு உணவின்றி பட்டினி கிடக்க
நேரிடும்.
-----------------------------------------------------------------------------------------------------
3
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying third house in a horoscope)
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும். அல்லது உடன்
பிறப்புக்களுக்கு அடிக்கடி நோய் நொடிகளை ஏற்படுத்தும். அதன் பொருட்டு
ஜாதகனுக்கு பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அல்லது இங்கே வந்து அமரும் ஆறாம் அதிபதி நீசமாகியிருந்தால் ஜாதகன்
வீட்டின் கடைசி ஆண் குழந்தையாக இருப்பான். ஜாதகியாக இருந்தால்
அவளுக்கு அடுத்து அவள் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்காது.
--------------------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fourth house in a horoscope)
ஜாதகன் ஒரு மோசமான வீட்டில் குடியிருப்பான் அல்லது மோசமான சூழலில்
அவன் வீடு இருக்கும். கல்வி தடைப்பட்டுவிடும். ஜாதகன் தன் அன்னையைக்
கைவிட்டுவிடுவான். தாய் மாமாக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பார்கள்

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
பெற்ற தாயுடனான உறவு தர்க்கங்களால், சண்டைகளால் சீர்கெட்டு இருக்கும்.
முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை நடத்திக்
கொண்டிருப்பான். குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fifth house in a horoscope)

நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான். தாயார் மூலம் மாமா வழிச்
சொத்துக்கள் கிடைக்கும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மனப் போராட்டம் உடையவனாக இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying his own house in a horoscope)
தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை
உடையவனாக இருப்பான். தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.

இந்த வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய
உறவுகளுடன் பகை ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
7
ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying seventh house in a horoscope)
இந்த அமைப்புள்ள ஜாதகன் தாய்வழி மாமா மகளையோ அல்லது தந்தை
வழி அத்தை மகளையோ திருமணம் செய்துகொள்வான்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் விவாகரத்துப் பெற்றவனாக இருப்பான்.அல்லது மனைவி இளம்
வயதிலேயே இறந்து போயிருப்பாள். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான்

நவாம்சமும் கெட்டிருந்தால் (ஏழாம் வீடு)ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக
அழகிழந்தவளாக இருப்பாள். இதே வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின
அதிபதியும் கூட்டணி சேர்ந்தால், ஜாதகன் ஆண்மைக் குறைபாடுகள்
உடையவனாக இருப்பான். தீயபெண்களின் சகவாசத்தால் அடிக்கடி
தொல்லைகளுக்கு ஆளாகுபவனாக இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eigth house in a horoscope)

ஜாதகன் மத்திம ஆயுள் உடையவனாக இருப்பான்.
(He will die in the middle age). இது பொது விதி!
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் இதற்கு விதிவிலக்கும் உண்டு!

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவனாக
இருப்பான். பெண் வேட்டையில் ஈடுபடுபவனாக இருப்பான். மற்றவர்களை
இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying ninth house in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால், ஜாதகனின் தந்தை நீதித்துறை
யில் பணியாற்றுபவராக இருப்பார். தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில்
இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
தந்தையுடன் சச்சரவுகள் ஏற்பட்டு சுமூகமான உறவு இருக்காது.
வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
உறவினர்களால் தீமைகள் ஏற்படும். நன்றி கெட்ட செயல்களைச் செய்ய
நேரிடும். அறவழிகளுக்கு எதிரான செயல்களைச் செய்ய நேரிடும்
--------------------------------------------------------------------------------------------------
10
பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying tenth house in a horoscope)

பாவச் செயல்கள், தீய செயல்களைச் செய்ய நேரிடும் அல்லது தொழிலாகக்
கொள்ள நேரிடும். இறையுணர்வாளர்கள் போல இருப்பார்கள். ஆனால்
கேவலமான வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சிலர் போலிச்
சாமியார்களாக இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்வார்கள். தானும்
பயப்படக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பார்கள்.கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வார்கள். கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eleventh house in a horoscope)

மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான
புகழுடன் வாழ்வார். அவரால் ஜாதகன் பல ஆதாயங்களைப் பெறுவார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஏழ்மை தாண்டவம் ஆடும். மோசமான சூழலில் வாழ நேரிடும். அடிக்கடி
சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெறவும் நேரிடும்
------------------------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying twelth house in a horoscope)

வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகனால்
மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------------
இவை அனைத்துமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஜாதகத்தின்
மற்ற அமைப்புக்களை வைத்து இவை கூடலாம், குறையலாம் அல்லது
இல்லாமல் போகலாம்.
----------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை எனது தட்டச்சும் நேரம் ஆகியவை
கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி அடுத்த பதிவில். அதுவரை பொறுமை காக்கவும்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

BSNL அகண்ட வரிசை இணைய இணைப்பு இரண்டு நாட்களாக கோவைப் பகுதியில்
வேலை செய்யவில்லை. அதனால் அதிகமாகத் தவிப்புற்றது அடியேனாகத்தான்
இருக்கும். இன்று காலை முதல் வேலை செய்கின்றது. உடனே இடுகையை
வலையேற்றியுள்ளேன்!

வாழ்க வளமுடன்!

75 comments:

  1. ஆசிரியர் ஐயா,

    அருமையாய் சொல்லியிருக்கீங்க.

    கடனில்லா கஞ்சி காக்கஞ்சினலும் சரி

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவ்ம்

    யாது ஊரே யாவரும் கேளிர்.


    100 வது பதிவுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.
    1000 விரைவில் மலர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Dear Sir,

    Thanks for making a lot of efforts to write this lesson. I truly appreciate it...hats off to you!!!

    Congrats to your 100th post.

    -Shankar

    ReplyDelete
  3. சதம் போட்ட வாத்தியார் ஐயாவுக்கு
    இதமான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  4. ஜன்னிய ராகங்களில் ஒன்று மஞ்சரி
    வகுப்பறையில் வாத்தியார் போட்டது செஞ்சுரி
    ஆறாம் வீட்டில் கிரகம் சரியில்லைன்னா வரும் இன்ஜூரி

    ///// பெரிய மோசடிக் கூட்டத்திலோ பணியாற்ற நேரிடும்!!/////

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  5. ஆசான் மற்றும் சகாக்களுக்கு வணக்கம்.
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    அர்ப்பணிப்பு உணர்வோடு தாங்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

    ஐயா, 6ம் இடம் பற்றிய பாடம் புரிகிறது.
    ஆனால் நல்ல பார்வை,தீய பார்வை சரியாக விளங்கிடவில்லை.மற்றும் சுய வர்க்கம் என்பதிலும் சந்தேகம் உள்ளது.மீண்டும் பழைய பாடங்களுக்கு செல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. //////பொதிகைத் தென்றல் said...
    ஆசிரியர் ஐயா,
    அருமையாய் சொல்லியிருக்கீங்க.
    கடனில்லா கஞ்சி காக்கஞ்சினலும் சரி
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம்
    யாது ஊரே யாவரும் கேளிர்.
    100 வது பதிவுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.
    1000 விரைவில் மலர வாழ்த்துக்கள்.//////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி பொதிகையாரே!

    ReplyDelete
  7. //////hotcat said..
    Dear Sir,
    Thanks for making a lot of efforts to write this lesson. I truly appreciate it...hats off to you!!!
    Congrats to your 100th post.
    -Shankar////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சங்கர்!

    ReplyDelete
  8. /////துளசி கோபால் said...
    சதம் போட்ட வாத்தியார் ஐயாவுக்கு
    இதமான இனிய வாழ்த்து(க்)கள்.////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்!

    ReplyDelete
  9. /////துளசி கோபால் said...
    சதம் போட்ட வாத்தியார் ஐயாவுக்கு
    இதமான இனிய வாழ்த்து(க்)கள்.////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்!

    ReplyDelete
  10. /////துளசி கோபால் said...
    சதம் போட்ட வாத்தியார் ஐயாவுக்கு
    இதமான இனிய வாழ்த்து(க்)கள்.////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்!

    ReplyDelete
  11. /////கல்கிதாசன் said...
    ஜனனிய ராகங்களில் ஒன்று மஞ்சரி
    வகுப்பறையில் வாத்தியார் போட்டது செஞ்சுரி
    ஆறாம் வீட்டில் கிரகம் சரியில்லைன்னா வரும் இன்ஜூரி
    ///// பெரிய மோசடிக் கூட்டத்திலோ பணியாற்ற நேரிடும்!!/////
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!//////

    வாத்தியாருக்குக் கிடையாதா தந்தூரி?

    ReplyDelete
  12. /////தியாகராஜன் said...
    ஆசான் மற்றும் சகாக்களுக்கு வணக்கம்.
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அர்ப்பணிப்பு உணர்வோடு தாங்கள் செய்யும் சேவைக்கு
    நாங்கள் தலை வணங்குகிறோம்.
    ஐயா, 6ம் இடம் பற்றிய பாடம் புரிகிறது.
    ஆனால் நல்ல பார்வை,தீய பார்வை சரியாக விளங்கிடவில்லை.
    மற்றும் சுய வர்க்கம் என்பதிலும் சந்தேகம் உள்ளது.மீண்டும் பழைய
    பாடங்களுக்கு செல்வதாக தவறாக நினைக்க வேண்டாம்./////

    ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியான அட்டவனை இருக்கும் பாருங்கள்
    அதில் அந்தக்குறிப்பிட்ட கிரகம் ராசியில் எங்கே இருக்கிறதோ, அதே இடத்தில்
    அந்தக்கிரகத்திற்கு அட்டவணையில் உள்ள எண்தான் அதன் சுயவர்க்கம்
    0 முதல் 8 வரைதான் அந்த எண் இருக்கும்
    4 என்பது சராசரி
    4க்கு மேல் நல்லது
    4க்குக் கீழே நல்லது அல்ல. கிரகம் பலவீனமாக உள்ளது என்று பொருள்!

    ஒவ்வொரு கிரகமும், தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாம் இடத்தைப் பார்க்கும்
    சில கிரகங்களுக்கு இதைத்தவிர விசேச பார்வைகள் உண்டு
    குருவிற்கு - 5 & 9 ஆம் இடங்கள்
    சனிக்கு - 3 & 10ஆம் இடங்கள்
    செவ்வாய்க்கு - 4 & 8ஆம் இடங்கள்
    குரு,சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை நல்லது
    ராகு, கேது, சனி ஆகியவற்றின் பார்வை தீங்கானது!
    இப்போது புரியும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  13. ஆசானை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... விரைவில் 1000 பதிவுகள் தர ஆசானுக்கு அருள் புரிய பழனி முருகனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. 6ஆம் இடத்தில் சந்திரன் இருக்க முன்பின் கிரகம் எதுவும் இல்லை...ஆனால் 5ம் இடத்தில் மாந்தி மட்டும் உள்ளார்..

    மாந்தி கிரகமா?

    இல்லை அம்பேல் தானா?

    ReplyDelete
  15. /////கூடுதுறை said...
    ஆசானை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
    விரைவில் 1000 பதிவுகள் தர ஆசானுக்கு அருள் புரிய
    பழனி முருகனை வேண்டுகிறேன்//////

    ஆகா, அவர் அருள் இல்லாமலா? அவர்தான் அடியேனை எழுதவைத்துக் கொண்டிருக்கிறார்!

    ReplyDelete
  16. ////கூடுதுறை said...
    6ஆம் இடத்தில் சந்திரன் இருக்க முன்பின் கிரகம் எதுவும் இல்லை...
    ஆனால் 5ம் இடத்தில் மாந்தி மட்டும் உள்ளார்..
    மாந்தி கிரகமா?
    இல்லை அம்பேல் தானா?/////

    மாந்தி உபகிரகம் மட்டுமே! ஆறாம் வீட்டில் எத்தனை பரல்கள் என்று பாருங்கள்
    ஆறாம்வீட்டு அதிபதி புதன் தன் சுயவர்க்கத்தில் எத்தனை பரல்கள் என்று பாருங்கள்
    பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்!

    ReplyDelete
  17. சச்சின் போல (முதல்)செஞ்சுரி போட்ட எனது அருமை வாத்தியர்க்கு எனது வாழ்த்துக்கள்.

    இனி பாடத்தின் கேள்விகள்.
    1.எனது ஆறாம் வீட்டில் கேது உள்ளார், பறல்களின் எண்ணிக்கை 36
    2.ஆறாம் வீட்டின் அதிபதி குரு 5'ம் வீட்டில் உள்ளார் பறல்களின் எண்ணிக்கை 3, மொத்தம் 23
    3.சந்திரன் 8'ம் வீட்டில் தனித்து, முன்னும் பின்னும் யாரும் இல்லாமல் உள்ளார். பறல்கள் 6.

    எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் வாத்தியரே?

    ReplyDelete
  18. ///ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியான அட்டவனை இருக்கும் பாருங்கள்
    அதில் அந்தக்குறிப்பிட்ட கிரகம் ராசியில் எங்கே இருக்கிறதோ, அதே இடத்தில்
    அந்தக்கிரகத்திற்கு அட்டவணையில் உள்ள எண்தான் அதன் சுயவர்க்கம்///

    ஐயா,
    உதாரணமாக அடியேனி்ன் மகர லக்ன ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம், 10 மிடமாகிய துலாம். சந்திரனுக்குரிய அஷ்டவர்க்க சக்கரத்தில் துலாத்தில் 4 பரல்கள் உள்ளன.

    அதே போன்று 6 & 9 க்குடைய புதன், 4ம் இடமாகிய மேஷ ராசியில் இருக்கிறார்.தற்போது புதனின் அஷ்டவர்க்க சக்கரத்தில் மேஷத்தில் 6 பரல்கள் உள்ளன.

    முடிவு: சந்திரன் சுய வர்க்கத்தில் 4 பரல்களும், புதன் சுயவர்க்கத்தில் 6 பரல்களும் பெற்றுள்ளனர்.

    தெளிவு : சந்திரன் சுய வர்க்கத்தில் 4 பரல்களும், புதன் சுயவர்க்கத்தில் 6 பரல்களும் பெற்றுள்ளனர்.

    சுய வர்க்கம் பற்றிய அடியேனின் புரிதல் சரியா என அறிந்திட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  19. 6ம் வீட்டில் 33ம் அதில் அமர்ந்த சனிக்கு 6ம் லக்கினத்தில் புதனுக்கு 6ம் உள்ளன..

    நான் தப்பித்தேனா?

    இது ஒரு ஜோதிடநாத்திக கேள்வி.(இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமான கேள்வி)

    மாந்தி சனிக்கு உபகிரகம் என்றால் பூமிக்கு சந்திரன் உபகிரகம் தானே? ஏன் அதற்கு மட்டும் கிரக பதவி மற்றும் இத்தனை முக்கியத்துவம்?

    ReplyDelete
  20. //////கோவை விமல்(vimal) said...
    சச்சின் போல (முதல்)செஞ்சுரி போட்ட எனது அருமை வாத்தியர்க்கு எனது வாழ்த்துக்கள்.
    இனி பாடத்தின் கேள்விகள்.
    1.எனது ஆறாம் வீட்டில் கேது உள்ளார், பறல்களின் எண்ணிக்கை 36
    2.ஆறாம் வீட்டின் அதிபதி குரு 5'ம் வீட்டில் உள்ளார் பறல்களின் எண்ணிக்கை 3, மொத்தம் 23
    3.சந்திரன் 8'ம் வீட்டில் தனித்து, முன்னும் பின்னும் யாரும் இல்லாமல் உள்ளார். பறல்கள் 6.
    எனக்கு பலன்கள் எப்படி இருக்கும் வாத்தியரே?//////

    ஆறாம் வீட்டில் 36 பரல்கள் உள்ளதால் கவலை வேண்டாம்.அந்த வீடு நன்றாக உள்ளது!
    கெடுதல்கள் நேராது!

    ReplyDelete
  21. //////தியாகராஜன் said...
    ///ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியான அட்டவனை இருக்கும் பாருங்கள்
    அதில் அந்தக்குறிப்பிட்ட கிரகம் ராசியில் எங்கே இருக்கிறதோ, அதே இடத்தில்
    அந்தக்கிரகத்திற்கு அட்டவணையில் உள்ள எண்தான் அதன் சுயவர்க்கம்///
    ஐயா,
    உதாரணமாக அடியேனி்ன் மகர லக்ன ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம், 10 மிடமாகிய துலாம். சந்திரனுக்குரிய அஷ்டவர்க்க சக்கரத்தில் துலாத்தில் 4 பரல்கள் உள்ளன.
    அதே போன்று 6 & 9 க்குடைய புதன், 4ம் இடமாகிய மேஷ ராசியில் இருக்கிறார்.தற்போது புதனின் அஷ்டவர்க்க சக்கரத்தில் மேஷத்தில் 6 பரல்கள் உள்ளன.
    முடிவு: சந்திரன் சுய வர்க்கத்தில் 4 பரல்களும், புதன் சுயவர்க்கத்தில் 6 பரல்களும் பெற்றுள்ளனர்.
    தெளிவு : சந்திரன் சுய வர்க்கத்தில் 4 பரல்களும், புதன் சுயவர்க்கத்தில் 6 பரல்களும் பெற்றுள்ளனர்.
    சுய வர்க்கம் பற்றிய அடியேனின் புரிதல் சரியா என அறிந்திட வேண்டுகிறேன்.////

    புரிதல் சரிதான்!

    ReplyDelete
  22. /////கூடுதுறை said...
    6ம் வீட்டில் 33ம் அதில் அமர்ந்த சனிக்கு 6ம் லக்கினத்தில் புதனுக்கு 6ம் உள்ளன..
    நான் தப்பித்தேனா?
    இது ஒரு ஜோதிடநாத்திக கேள்வி.(இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமான கேள்வி)
    மாந்தி சனிக்கு உபகிரகம் என்றால் பூமிக்கு சந்திரன் உபகிரகம் தானே?
    ஏன் அதற்கு மட்டும் கிரக பதவி மற்றும் இத்தனை முக்கியத்துவம்?////

    இந்திய ஜோதிடமே சந்திரனை வைத்துத்தான்!
    அதுதான் தாய்க்கு அதிபதி!
    அதுதான் மனதிற்கு அதிபதி
    அதை உபகிரகமாக இந்திய ஜோதிடம் சொல்லவில்லை!
    மாந்தியின் கதை அப்படியல்ல!
    அது வில்லங்க கிரகம். ஜாதகத்தில் உள்ள கெடுதல்களைக்
    கணக்கிடுவதற்கு மட்டுமே அது பயன் படுகிறது!
    தாய்க்கும் வில்லிக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா?

    அதை விடுங்கள் ஆறாம் வீட்டில் 33 பரல்கள் இருப்பதனால் - தப்பித்துவிட்டீர்கள்
    It will give you standing power to overcome any situation!

    ReplyDelete
  23. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    அர்ப்பணிப்பு உணர்வோடு தாங்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.


    ஆறுக்கு(ரிஷபம்) உரியவன்(சுக்ரன்) பதினொன்றில்(துலாம்) அமர்ந்தால் எப்படி பலன் கொள்வது குருவே?

    ஜாதகாரகன் தான் மூத்தவன், அவன் பேர் அம்பி! என்பது பின்குறிப்பு.

    ReplyDelete
  24. //SP.VR. SUBBIAH said...
    ஆறாம் வீட்டில் 36 பரல்கள் உள்ளதால் கவலை வேண்டாம்.அந்த வீடு நன்றாக உள்ளது!
    கெடுதல்கள் நேராது!//

    நன்றி வாத்தியரே..
    வகுப்பறையின் மாணவர்களின் வருகை எண்ணிக்கை குறைவாக உள்ளது போல தெரிகிறதே, எல்லோரும் என்ன விடுப்பில் உள்ளனரா ?

    ReplyDelete
  25. வாங்கைய்யா வாத்தியாரைய்யா
    வரவேற்க வந்தோமைய்யா,ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமைய்யா.. :)))

    ஆசிரியர் வாங்கிய 100/100க்கு அன்பு நல்வாழ்த்துக்கள்!!!

    உங்க சொந்த ஊரான தேவகோட்டையில் 10மணி நேர மின்வெட்டுன்னு மக்கள் தொ.கா சொன்னது. கோவையிலே இணைய தொடர்பு பிரச்சனைன்னு நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது.

    ஆறாம் இடத்து விளக்கங்களுக்கு நன்றி.
    கடன் வாங்கும் போதும், சுகம் தேடும் போதும் இன்பம். திருப்பித்தரும் போது துன்பம். ஆண்டவன் கடனாய் கொடுத்த உடலை தவறாக செலவழித்தால் நோய் எனும் வட்டி, குட்டி போட்டு ஜிங்..ஜிங்.. என்று ஆடும்!

    ஒழுக்கமும்'இறை நம்பிக்கையும் தான் ஆறமிடத்து வர/சாபத்துக்கு வழி சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து..

    ReplyDelete
  26. அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் மற்றும்

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  27. அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் மற்றும்

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  28. நூறவது பதிவு! விரைவில் "இதுவரை வந்தவர்கள்" உம் ஒரு லட்சம் தாண்டிவிடும் போல இருக்கே! வாழ்துக்கள்!

    ReplyDelete
  29. வாத்தியார் போட்டார் சதம்,
    அவர் பதிவுகள் பல விதம்,
    வாத்தியார் வகுப்றை வந்தால் ஏற்படும் இதம்,
    அவரின் பின்னூடடம் சில சமயம் படுத்திவிடும் பதம்,
    இறைவன் ஒருவனே என்பது என் மதம்.
    இதோடு என் கவிதை கதம்.

    டிஸ்கீ : என் முதல் கவிதை முயற்சி(எல்லாம் லண்டன்-காரரை பார்த்து நானும் எழுத முயற்சித்தது), வாத்தியருக்கு பிடித்த சிம்பு அப்பா பாணியில்...:-))

    ReplyDelete
  30. இன்னா விமல். நம்ம ரூட்ல கிராஸ் பண்றாப்பல கீது. ஏக்கனவே என் கவிதை!!! மூலிமா வாத்தியார நான் டாச்சர் பண்றன். இப்ப நீங்களுமா?. வாத்தியார் டென்சனாகி பூடுவாறு.

    வாத்தியார் ஐயா. ஆறாம் இல்லத்தில் அமர்ந்த கிரகங்கள், கோச்சார ரீதியாக ஆறாம் இடத்தின் பலன்கள் அடுத்த பதிவில் வரும் என்று நினைக்கின்றேன்.
    இருந்தாலும் ஒரு கேள்வி.
    ராசிநாதன் ஆறாமிடத்தில் வரும் காலங்களில் பலன் எப்படி இருக்கும்?.

    ReplyDelete
  31. //கல்கிதாசன் said...
    இன்னா விமல். நம்ம ரூட்ல கிராஸ் பண்றாப்பல கீது. ஏக்கனவே என் கவிதை!!! மூலிமா வாத்தியார நான் டாச்சர் பண்றன். இப்ப நீங்களுமா?. வாத்தியார் டென்சனாகி பூடுவாறு.//

    என்னாது திரும்பவும் முதல்-லேந்தா.., தாங்காதுபா...:-(((

    ReplyDelete
  32. //////ambi said...
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அர்ப்பணிப்பு உணர்வோடு தாங்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
    ஆறுக்கு(ரிஷபம்) உரியவன்(சுக்ரன்) பதினொன்றில்(துலாம்) அமர்ந்தால் எப்படி பலன் கொள்வது குருவே?
    ஜாதகாரகன் தான் மூத்தவன், அவன் பேர் அம்பி! என்பது பின்குறிப்பு.////

    அது ஆறாம் இடத்திற்கு ஆறாம் இடம். ஆகவே mixed results!

    ReplyDelete
  33. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    ஆறாம் வீட்டில் 36 பரல்கள் உள்ளதால் கவலை வேண்டாம்.அந்த வீடு நன்றாக உள்ளது!
    கெடுதல்கள் நேராது!//
    நன்றி வாத்தியரே..
    வகுப்பறையின் மாணவர்களின் வருகை எண்ணிக்கை குறைவாக
    உள்ளது போல தெரிகிறதே, எல்லோரும் என்ன விடுப்பில் உள்ளனரா?////

    மாலை நேரத்தில் பாருங்கள்! (between 4PM to 11PM)

    ReplyDelete
  34. /////தமாம் பாலா (dammam bala) said...
    வாங்கைய்யா வாத்தியாரைய்யா
    வரவேற்க வந்தோமைய்யா,ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமைய்யா.. :)))
    ஆசிரியர் வாங்கிய 100/100க்கு அன்பு நல்வாழ்த்துக்கள்!!!
    உங்க சொந்த ஊரான தேவகோட்டையில் 10மணி நேர மின்வெட்டுன்னு
    மக்கள் தொ.கா சொன்னது. கோவையிலே இணைய தொடர்பு பிரச்சனைன்னு
    நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது.
    ஆறாம் இடத்து விளக்கங்களுக்கு நன்றி.
    கடன் வாங்கும் போதும், சுகம் தேடும் போதும் இன்பம்.
    திருப்பித்தரும் போது துன்பம். ஆண்டவன் கடனாய் கொடுத்த
    உடலை தவறாக செலவழித்தால் நோய் எனும் வட்டி, குட்டி
    போட்டு ஜிங்..ஜிங்.. என்று ஆடும்!
    ஒழுக்கமும்'இறை நம்பிக்கையும் தான் ஆறமிடத்து
    வர/சாபத்துக்கு வழி சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து../////

    நீங்கள் சொன்னால் சரி!:-)))

    ReplyDelete
  35. /////Rajagopal said...
    அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் மற்றும்
    அன்புடன்
    இராசகோபால்////

    இந்தப் பதிவை முழுதாகப் படித்தீர்களா?
    அல்லது உங்களுக்குத் தேவையான இடங்களை மட்டும் பார்த்தீர்களா?

    ReplyDelete
  36. /////Rajagopal said...
    அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் மற்றும்
    அன்புடன்
    இராசகோபால்////

    கூடிய விரைவில்!

    ReplyDelete
  37. /////திவா said...
    நூறவது பதிவு! விரைவில் "இதுவரை வந்தவர்கள்" உம்
    ஒரு லட்சம் தாண்டிவிடும் போல இருக்கே! வாழ்துக்கள்!////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. ////கோவை விமல்(vimal) said...
    வாத்தியார் போட்டார் சதம்,
    அவர் பதிவுகள் பல விதம்,
    வாத்தியார் வகுப்றை வந்தால் ஏற்படும் இதம்,
    அவரின் பின்னூடடம் சில சமயம் படுத்திவிடும் பதம்,
    இறைவன் ஒருவனே என்பது என் மதம்.
    இதோடு என் கவிதை கதம்./////

    :-))))

    ReplyDelete
  39. /////கல்கிதாசன் said...
    இன்னா விமல். நம்ம ரூட்ல கிராஸ் பண்றாப்பல கீது. ஏக்கனவே என் கவிதை!!!
    மூலிமா வாத்தியார நான் டாச்சர் பண்றன். இப்ப நீங்களுமா?.
    வாத்தியார் டென்சனாகி பூடுவாறு.
    வாத்தியார் ஐயா. ஆறாம் இல்லத்தில் அமர்ந்த கிரகங்கள்,
    கோச்சார ரீதியாக ஆறாம் இடத்தின் பலன்கள் அடுத்த பதிவில்
    வரும் என்று நினைக்கின்றேன்.
    இருந்தாலும் ஒரு கேள்வி.
    ராசிநாதன் ஆறாமிடத்தில் வரும் காலங்களில் பலன் எப்படி இருக்கும்?./////

    அது ராசிநாதனின் தன்மையைப் பொறுத்தது. கிரகத்திற்கு கிரகம் அது வேறுபடும்!

    ReplyDelete
  40. /////கோவை விமல்(vimal) said...
    //கல்கிதாசன் said...
    இன்னா விமல். நம்ம ரூட்ல கிராஸ் பண்றாப்பல கீது. ஏக்கனவே
    என் கவிதை!!! மூலிமா வாத்தியார நான் டாச்சர் பண்றன். இப்ப நீங்களுமா?.
    வாத்தியார் டென்சனாகி பூடுவாறு.//
    என்னாது திரும்பவும் முதல்-லேந்தா.., தாங்காதுபா...:-(((/////

    சைலன்ஸ் ப்ளீஸ்!

    ReplyDelete
  41. நூறாவது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் , நான் பெற்ற அறிவு பெறுகஎன் வையகம் என நினைக்கும் தங்களின் பெருந்தன்மைக்கு நான் தலைவணங்குகின்றேன். ஆண்டவன் உங்களுக்குச் சகலநலங்களையும் அருளட்டும் , வாழ்கவள‌முடன்.

    இத்துறையில் சொல்லித்தர ம்றுப்பவர்களையே நான் சந்தித்துள்ளேன் ,உங்களை அவர்கள் சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளட்டும்.
    ஒரு கேள்வி

    லக்கினத்தில் 33 பரல்கள் , லக்கினாதி 6 இல், 6 ம் இடத்தில் 37 பரல்கள்
    ,6 ம் அதிபதி 3 இல் , 3 ம் இடத்தில் 34 பரல்கள் ,பலன் என்ன ?
    ( 6 ம் இட அதிபதி குரு சுயவர்க்கத்தில் 6 பரல்கள் )

    ReplyDelete
  42. //1.எனது ஆறாம் வீட்டில் கேது உள்ளார்//

    நீங்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவீர்கள.

    அதாவது extra curricular activities அதிகம் இருக்கும் (உதாரணம் - பாடல், நடனம், ஜோதிடம் !!!, நிலம்/பொருள்/வாகனம் வாங்கி விற்பது, ஆன்மிகம் )

    ReplyDelete
  43. Dear sir

    I have 6th house empty. 6th house lord saturn is in simha lagna with sun and mercury.

    Lagna parals -24
    Saturn paral -3
    6th house paral- 27
    Mercury paral-5

    Saturn is not in friendly house. How to get interpretions?

    -Shankar

    ReplyDelete
  44. ஆறாம் வீட்டு அதிபதி,நல்ல பார்வை படாமல் எந்த வீட்டில் இருந்தாலும் தொல்லைதான் போல...

    ReplyDelete
  45. /////தமிழன் said...
    நூறாவது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் , நான் பெற்ற அறிவு
    பெறுகஎன் வையகம் என நினைக்கும் தங்களின் பெருந்தன்மைக்கு நான்
    தலைவணங்குகின்றேன். ஆண்டவன் உங்களுக்குச் சகலநலங்களையும்
    அருளட்டும் , வாழ்கவள‌முடன்.
    இத்துறையில் சொல்லித்தர ம்றுப்பவர்களையே நான் சந்தித்துள்ளேன் ,
    உங்களை அவர்கள் சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளட்டும்.
    ஒரு கேள்வி
    லக்கினத்தில் 33 பரல்கள் , லக்கினாதி 6 இல், 6 ம் இடத்தில் 37 பரல்கள்
    ,6 ம் அதிபதி 3 இல் , 3 ம் இடத்தில் 34 பரல்கள் ,பலன் என்ன ?
    ( 6 ம் இட அதிபதி குரு சுயவர்க்கத்தில் 6 பரல்கள் )//////

    லக்கினாதிபதி ஆறில் இருந்தாலே எதிர்நீச்சல் போட வேண்டிய ஜாதகம்
    எதையும் போராடித்தான் பெற வேண்டும்.

    ReplyDelete
  46. ///////புருனோ Bruno said...
    //1.எனது ஆறாம் வீட்டில் கேது உள்ளார்//
    நீங்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவீர்கள.
    அதாவது extra curricular activities அதிகம் இருக்கும்
    (உதாரணம் - பாடல், நடனம், ஜோதிடம் !!!,
    நிலம்/பொருள்/வாகனம் வாங்கி விற்பது, ஆன்மிகம் )/////

    அதோடு துணிச்சல் மிக்கவர்!

    ReplyDelete
  47. ////hotcat said...
    Dear sir
    I have 6th house empty.
    6th house lord saturn is in simha lagna with sun and mercury.
    Lagna parals -24
    Saturn paral -3
    6th house paral- 27
    Mercury paral-5
    Saturn is not in friendly house. How to get interpretions?
    -Shankar//////

    லக்கினம்தான் மிகவும் முக்கியம் அங்கே 25 அல்லது 25ற்குக் கிழாகப் பரல்கள் இருந்தால்
    வாழ்க்கை அதிருப்தியாக இருக்கும்!

    ReplyDelete
  48. //////தங்ஸ் said...
    ஆறாம் வீட்டு அதிபதி, நல்ல பார்வை படாமல் எந்த வீட்டில்
    இருந்தாலும் தொல்லைதான் போல.../////

    உண்மைதான் நண்பரே!

    ReplyDelete
  49. //குருவிற்கு - 5 & 9 ஆம் இடங்கள்
    சனிக்கு - 3 & 10ஆம் இடங்கள்
    செவ்வாய்க்கு - 4 & 8ஆம் இடங்கள்
    குரு,சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை நல்லது
    ராகு, கேது, சனி ஆகியவற்றின் பார்வை தீங்கானது!
    இப்போது புரியும் என்று நினைக்கிறேன்//

    மகரலக்கினம்.. சனி அதிபதி அவர் 4ல் அமர்ந்து10 ம் இடம் லக்க்னத்தை பார்பது தீங்கானாதா? அவர் லக்கினாதிபதி -குரு வேறு 5ம் பார்வை.

    ReplyDelete
  50. 100 வது பதிவுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  51. Thank you Sir for your Lessons, Congratulation for the 100th Post in Indian Astrology.

    ReplyDelete
  52. அய்யா வணக்கம், அஷ்டாக்காவர்கம் பற்ற நல்ல தமிழ் புத்தகம் பரிந்துரைக்கவும்.

    நன்றி

    கார்த்திக்

    ReplyDelete
  53. ஹலோ சார்,

    ஆஹா முதல்செஞ்சுரியா....என்னோட்ச் வாழ்த்துக்கள்.இனியும் பல செஞ்சுரிகள் அடிக்க வேண்டும்.

    இங்க ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பவர் க்அட் ஆகுது, அதனால படிச்சுட்டு தான் கேள்விகள் கேட்ப்பேன்.

    ReplyDelete
  54. //////aravindaan said...
    //குருவிற்கு - 5 & 9 ஆம் இடங்கள்
    சனிக்கு - 3 & 10ஆம் இடங்கள்
    செவ்வாய்க்கு - 4 & 8ஆம் இடங்கள்
    குரு,சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை நல்லது
    ராகு, கேது, சனி ஆகியவற்றின் பார்வை தீங்கானது!
    இப்போது புரியும் என்று நினைக்கிறேன்//
    மகரலக்கினம்.. சனி அதிபதி அவர் 4ல் அமர்ந்து10 ம் இடம்
    லக்க்னத்தை பார்பது தீங்கானாதா? அவர் லக்கினாதிபதி -குரு வேறு 5ம் பார்வை.////

    மகர லக்கின சனி 4ல் - மேஷத்தில் என்றால் நீசம் பெற்றுள்ளார்.
    லக்கினநாதன் நீசமானால் வாழ்க்கை எதிர்நீச்சல்தான்.
    அவர் பத்தாம் பார்வையாக லக்கினத்தைப் பார்த்தால் தவறில்லை!
    அவர் நாதன் அல்லவா? அதோடு மகரம் அவருடைய சொந்த வீடல்லவா?
    தனக்குத்தானே அவர் எப்படி தீங்கு செய்வார்.
    கவலையை விடுங்கள். தனது விஷேச பார்வை மூலம் உங்களுக்கு அவர்
    நிற்கும் பலத்தைக் (standing power) கொடுப்பார்!

    ReplyDelete
  55. //////Geekay said...
    100 வது பதிவுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்!!///

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  56. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    Thank you Sir for your Lessons, Congratulation
    for the 100th Post in Indian Astrology.////

    உங்கள் அன்பிற்கு நன்றி நவநீதன்!

    ReplyDelete
  57. //////karthiksve said...
    அய்யா வணக்கம், அஷ்டாக்காவர்கம் பற்ற நல்ல தமிழ் புத்தகம் பரிந்துரைக்கவும்.
    நன்றி
    கார்த்திக்//////

    திரு.ராஜன் என்பவர் எழுதியுள்ள புத்தகம் உள்ளது!
    கிடைக்குமிடம்:
    கிரி டிரேடிங் ஏஜென்ஸி,
    10, கபாலீஸ்வரர் சன்னதி,
    மைலாப்பூர்
    சென்னை - 600 004

    ReplyDelete
  58. /////Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா முதல்செஞ்சுரியா....என்னோட்ச் வாழ்த்துக்கள்.
    இனியும் பல செஞ்சுரிகள் அடிக்க வேண்டும்.
    இங்க ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பவர் க்ட் ஆகுது,
    அதனால படிச்சுட்டு தான் கேள்விகள் கேட்ப்பேன்.////

    அப்படியே செய்யுங்கள் சகோதரி!

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. ஐயா, தற்போதைய பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்வி.
    குருவும்,சுக்கிரனும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்கள்.
    இந்நிலையில், குருவின் சொந்த வீடான மீனத்தில் பகை கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்றதன் ரகசியமான காரணம் அறிய தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  61. ///////தியாகராஜன் said...
    ஐயா, தற்போதைய பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்வி.
    குருவும்,சுக்கிரனும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்கள்.
    இந்நிலையில், குருவின் சொந்த வீடான மீனத்தில் பகை கிரகமான
    சுக்கிரன் உச்சம் பெற்றதன் ரகசியமான காரணம் அறிய தர வேண்டுகிறேன்.///

    செவ்வாய் தன் பகைவனான சனியின் வீட்டில் (மகரம்) உச்சம்
    ராகு / கேது தங்கள் பகைவானான செவ்வாயின் வீட்டில் உச்சமாவது எப்படியோ
    இதுவும் அப்படித்தான்.

    குரு, சுக்கிரன், சந்திரன் இம்மூன்றும் இயற்கையில் நல்ல கிரகங்கள்
    சுக்கிரன் வீட்டில் (ரிஷபம்) சந்திரன் உச்சமாகிறது
    குருவின் வீட்டில் (மீனம்) சுக்கிரன் உச்சமாகிறது
    சந்திரனின் வீட்டில் (கடகம்) குரு உச்சம்பெறுகிறார்.
    Mutual understanding போலும். கலையை வகுத்த ரிஷிகளுக்கே முழு உண்மையும் வெளிச்சம்!

    பகைவன் வீட்டில் உச்சமாவதற்கு நாங்கள் விளயாட்டாக ஒரு காரணம் சொல்வோம்.
    மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில்தான் மதிப்பு அதிகம்:-))))))
    என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?:-))))

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயாவின் நூறாவது பதிவுக்கு.


    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  63. அன்பு வாத்தியாரே, பதிவை மீண்டும் படித்தேன். அதற்கே மூச்சு வாங்கிவிட்டது! :-))

    டோஸ்ட்மாஸ்டரில் க்ரமேரியன் என்று சொல்வார்கள். அது போல கீழ் கண்டவற்றை சரி செய்து கொள்ளவும்.
    புத்தகமாக்கலுக்கு என் 'அணில் முயற்சி' :))

    ///மற்றும் திரதிர்ஷ்டங்களைப் (Diseases//

    ////அதானால்தான் நான்///

    ///உரைடுயாவதாலும்
    மட்டுமே////

    ///வயதான கலத்தில்///

    ///நேறிடும்.///

    ///இறையுணவாளர்கள் போல///

    -ஜல்லடையான ஜால்ரா!!!!!

    ReplyDelete
  64. //குருவின் சொந்த வீடான மீனத்தில் பகை கிரகமான
    சுக்கிரன் உச்சம் பெற்றதன் ரகசியமான காரணம் அறிய தர வேண்டுகிறேன்.//

    முதலில் எனக்கு இது (ப்கை வீட்டில உச்சம்) தோன்றவில்லை. முதன் முதலில் எனக்கு வித்தியாசமாக தோன்றியது, கல்ல்வி, வித்தையை குறிக்கும் புதன், கல்வி, தொழிலை குறிக்கும் குருவின் வீட்டில் நீச்சமாவது தான். அது குறித்து சிந்திக்கும் போது தான் சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சமாவது புரிந்தது !!! வியக்க நேரிட்டது

    குருவிற்கும் சுக்கிரனுக்கும் என்ன பகை தெரியுமா

    குரு எனப்து பிரகஸ்பதி - தேவர்களின் குரு
    சுக்கிரன் என்பது சுக்கிராச்சாரியார் - அசுரர்களின் குரு

    இது அறிந்த உடனும் வியப்பு வந்தது !!!

    ReplyDelete
  65. ///dr.bruno said..
    கல்வி, வித்தையை குறிக்கும் புதன், கல்வி, தொழிலை குறிக்கும் குருவின் வீட்டில் நீச்சமாவது தான். அது குறித்து சிந்திக்கும் போது தான் சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சமாவது புரிந்தது !!! ////

    டாக்டர், புதன் குறிக்கும் வித்தை unorthodox/unconventional ஆக நூதனமாக, காலகட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன். குரு குறிப்பது, கேள்வி கேட்காமல் முன்னோர்/ஆசிரியர் பாடத்தை உள்வாங்கிக்கொள்வது. ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் (ஏட்டு)படிப்பு நன்றாக வரும் என சில ஜோதிடர் சொல்ல கேட்டிருக்கிறேன். புதன் உச்சமாக இருந்தால் ஒருவேளை 'ஸ்கூல் ட்ராப் அவுட்' ஆகி பில்கேட்ஸ் போல் புகழ் பெறலாமோ என்னவோ? :-))

    அதே போல காசு,பணம் பற்றி கவலைப்படாமல் ஆத்மார்த்தமாக கடமையை செய்யும் குரு, மனதளவில்
    மகிழ்ச்சியாய்/சந்தோஷமாய் இருப்பதை சுக்ரனின் உச்சம் குறிக்கின்றது என எடுத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
  66. குருவே,

    முழுவதுமே படிக்கின்றேன். தேர்வுகள் வைக்கும் பொழுது பாடங்கள் மனதில் நன்றாக பதிகின்றது.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  67. //////விஜய் said...
    வாழ்த்துக்கள் ஆசிரியர் ஐயாவின் நூறாவது பதிவுக்கு.
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com///////

    நன்றி விஜய்!

    ReplyDelete
  68. ///////தமாம் பாலா (dammam bala) said...
    அன்பு வாத்தியாரே, பதிவை மீண்டும் படித்தேன். அதற்கே மூச்சு வாங்கிவிட்டது! :-))
    டோஸ்ட்மாஸ்டரில் க்ரமேரியன் என்று சொல்வார்கள். அது போல கீழ் கண்டவற்றை சரி செய்து கொள்ளவும்.
    புத்தகமாக்கலுக்கு என் 'அணில் முயற்சி' :))
    ///மற்றும் திரதிர்ஷ்டங்களைப் (Diseases//
    ////அதானால்தான் நான்///
    ///உரைடுயாவதாலும்
    மட்டுமே////
    ///வயதான கலத்தில்///
    ///நேறிடும்.///
    ///இறையுணவாளர்கள் போல///

    தட்டச்சுப் பிழைகளைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி பாலா! திருத்திவிட்டேன்.
    மென்பொருள், வல்லினம் மெல்லினங்களுக்கு உதவ மாட்டேன் என்கிறது!:-))))

    -ஜல்லடையான ஜால்ரா!!!!!//////

    ஜல்லடை வேறு; ஜால்ரா வேறு! இரண்டிற்கும் வெவ்வேறு பயன்பாடுகள் உண்டு!

    ReplyDelete
  69. //////புருனோ Bruno said...
    //குருவின் சொந்த வீடான மீனத்தில் பகை கிரகமான
    சுக்கிரன் உச்சம் பெற்றதன் ரகசியமான காரணம் அறிய தர வேண்டுகிறேன்.//
    முதலில் எனக்கு இது (பகை வீட்டில உச்சம்) தோன்றவில்லை. முதன் முதலில்
    எனக்கு வித்தியாசமாக தோன்றியது, கல்வி, வித்தையை குறிக்கும் புதன்,
    கல்வி, தொழிலை குறிக்கும் குருவின் வீட்டில் நீச்சமாவது தான். அது குறித்து
    சிந்திக்கும் போது தான் சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சமாவது புரிந்தது !!!
    வியக்க நேரிட்டது
    குருவிற்கும் சுக்கிரனுக்கும் என்ன பகை தெரியுமா
    குரு எனபது பிரகஸ்பதி - தேவர்களின் குரு
    சுக்கிரன் என்பது சுக்கிராச்சாரியார் - அசுரர்களின் குரு
    இது அறிந்த உடனும் வியப்பு வந்தது !!!////////

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி டாக்டர்!
    அசுரர்கள் இல்லையென்றால் தேவர்களுக்கு வேலை ஏது டாக்டர்?:-))))))

    ReplyDelete
  70. //////தமாம் பாலா (dammam bala) said...
    ///dr.bruno said..
    கல்வி, வித்தையை குறிக்கும் புதன், கல்வி, தொழிலை குறிக்கும் குருவின்
    வீட்டில் நீச்சமாவது தான். அது குறித்து சிந்திக்கும் போது தான் சுக்கிரன்
    குருவின் வீட்டில் உச்சமாவது புரிந்தது !!! ////
    டாக்டர், புதன் குறிக்கும் வித்தை unorthodox/unconventional ஆக
    நூதனமாக, காலகட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்.
    குரு குறிப்பது, கேள்வி கேட்காமல் முன்னோர்/ஆசிரியர் பாடத்தை உள்வாங்கிக்
    கொள்வது. ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் (ஏட்டு)படிப்பு நன்றாக வரும்
    என சில ஜோதிடர் சொல்ல கேட்டிருக்கிறேன். புதன் உச்சமாக இருந்தால்
    ஒருவேளை 'ஸ்கூல் ட்ராப் அவுட்' ஆகி பில்கேட்ஸ் போல் புகழ்
    பெறலாமோ என்னவோ? :-))
    அதே போல காசு,பணம் பற்றி கவலைப்படாமல் ஆத்மார்த்தமாக
    கடமையை செய்யும் குரு, மனதளவில் மகிழ்ச்சியாய்/சந்தோஷமாய் இருப்பதை
    சுக்ரனின் உச்சம் குறிக்கின்றது என எடுத்துக்கொள்ளலாமா?///////

    எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள் பாலா!
    ஆனால் நடுவில் வாத்தியாருக்கு மாலை போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்;-)))))

    ReplyDelete
  71. //////Rajagopal said...
    குருவே,
    முழுவதுமே படிக்கின்றேன். தேர்வுகள் வைக்கும் பொழுது
    பாடங்கள் மனதில் நன்றாக பதிகின்றது.
    அன்புடன்
    இராசகோபால்//////

    அடடா, கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது! இதே போல அந்தக் கொச்சி
    மாணவரும் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    ReplyDelete
  72. //டாக்டர், புதன் குறிக்கும் வித்தை unorthodox/unconventional ஆக நூதனமாக, காலகட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன். குரு குறிப்பது, கேள்வி கேட்காமல் முன்னோர்/ஆசிரியர் பாடத்தை உள்வாங்கிக்கொள்வது. ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் (ஏட்டு)படிப்பு நன்றாக வரும் என சில ஜோதிடர் சொல்ல கேட்டிருக்கிறேன். புதன் உச்சமாக இருந்தால் ஒருவேளை 'ஸ்கூல் ட்ராப் அவுட்' ஆகி பில்கேட்ஸ் போல் புகழ் பெறலாமோ என்னவோ? :-))//

    குரு “ஏட்டுக்கல்வியையும்” புதன் “வித்தையையும்” (இதை Education vs Experience / Skill என்று கூறலாமா) குறிக்கிறது என்று கருத்து உண்டு.

    ஆனால் ஜோதிடத்தின் முதல் பாடம் என்ன வென்றால் - பொது விதி எதுவும் கிடையாது. அந்தந்த ஜாதகத்தின் அமைப்பை வைத்து தான் கூற வேண்டும் (சரியா ஆசானே)

    --

    சச்சின் டென்உல்கரின் ஜாதகத்தில் குரு நீச்சம், செவ்வாய் உச்சம், புதன் நீச்சம், சுக்கிரன் உச்சம், சூரியன் உச்சம்.

    பள்ளி படிப்பு பாதிதான் என்றாலும் அவருக்கு தெரியாதா ”வித்தையா”

    ReplyDelete
  73. //////புருனோ Bruno said...
    //டாக்டர், புதன் குறிக்கும் வித்தை unorthodox/unconventional ஆக நூதனமாக,
    காலகட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன். குரு குறிப்பது,
    கேள்வி கேட்காமல் முன்னோர்/ஆசிரியர் பாடத்தை உள்வாங்கிக்கொள்வது.
    ஜாதகத்தில் புதன் கெட்டிருந்தால் (ஏட்டு)படிப்பு நன்றாக வரும் என சில
    ஜோதிடர் சொல்ல கேட்டிருக்கிறேன். புதன் உச்சமாக இருந்தால் ஒருவேளை
    'ஸ்கூல் ட்ராப் அவுட்' ஆகி பில்கேட்ஸ் போல் புகழ் பெறலாமோ என்னவோ? :-))//
    குரு “ஏட்டுக்கல்வியையும்” புதன் “வித்தையையும்”
    (இதை Education vs Experience / Skill என்று கூறலாமா) குறிக்கிறது
    என்று கருத்து உண்டு.
    ஆனால் ஜோதிடத்தின் முதல் பாடம் என்ன வென்றால் - பொது விதி
    எதுவும் கிடையாது. அந்தந்த ஜாதகத்தின் அமைப்பை வைத்து தான் கூற
    வேண்டும் (சரியா ஆசானே)////////

    100% உண்மை டாக்டர்!
    ஒருவருக்குக் கல்வி தூக்கலாக இருக்கும், மற்றொருவருக்கு அனுபவம் தூக்கலாக இருக்கும்
    இரண்டுமே தூக்கலாக இருப்பவர்கள் மிக மிகக்குறைவு.

    சிறந்த உதாரணமாக கவியரசர் கண்ணதாசன் அவர்களைச் சொல்லலாம். அவர் எட்டாம்
    வகுப்பு வரைக்குமே படித்தவர். பல சிகரங்களைத் தொட்டவர். எல்லாம் அவருக்கு அனுபவத்தால்
    கிடைத்தவையே!

    எட்டாம் வீட்டில் புதன் மறைந்துவிட்டால். அந்த ஜாதகருக்கு வித்தைக் குறைவு என்பார்கள்
    அந்த அமைப்பு உள்ள ஜாதகர்களை நான் பார்த்திருக்கிறேன்.

    உங்கள் கருத்துப் பறிமாற்றத்திற்கு நன்றி டாக்டர்!


    ////////சச்சின் டென்டூல்கரின் ஜாதகத்தில் குரு நீச்சம், செவ்வாய் உச்சம், புதன் நீச்சம்,
    சுக்கிரன் உச்சம், சூரியன் உச்சம். பள்ளி படிப்பு பாதிதான் என்றாலும் அவருக்கு
    தெரியாதா ”வித்தையா”///

    நிதர்சனமான உண்மை!

    ReplyDelete
  74. என் ஜாதகத்தில் ஆறாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதன் இருப்பது ஐந்தாம் வீட்டில். "நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான்" அன்று கூறப்டிருபது போல் எனக்கு ஆடிசம் உள்ள மகள் இருக்கிறாள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com