மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.1.09

அதிர்ஷ்டச் சக்கரம் (Wheel of Fortune)


என்னடா வாழ்க்கை இப்படியே உப்புச் சப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது
என்று கவலைப் படுகிறீர்களா?

கவலையை விடுங்கள்.

ஒரு ஞானி சொன்னான், "If you want to come up in life - You must have
4 things - Education, Ambition, Talent and Luck: But without the 4th item
(That is luck) the other 3 things will not work properly"

அதைத்தான் நம்ம ஊர் பெரிசுகள் எதற்கும் ஒரு நேரம் வேண்டும் என்பார்கள்.
வாரியார் சுவாமிகள் சொல்வார் "உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும்
பருவத்தால் அன்றிப் பழுக்காது (அதாவது பழம் கொடுக்காது)"

சரி நேரடியாக எழுத வந்த மேட்டருக்கு வருகிறேன்

எல்லா மனிதனின் வாழ்க்கையிலுமே 'திருப்பு முனை' (Turning Point) என்று
ஒன்று உண்டு. மக்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும்
கூட அது உண்டு

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கூட்டுங்கள். அதை நீங்கள்
பிறந்த வருட எண்ணோடு கூட்டுங்கள். கூட்டி வரும் எண்ணைக் கொண்ட
வருடம்தான் திருப்பு முனையைக் கொடுக்கும் வருடமாகும். மறுபடியும் அடுத்த
திருப்பு முனை எப்போது என்று தெரிய, கிடைத்த அந்த வருட எண்ணையே
மீண்டும் கூட்டி முதல் வரியில் சொல்லிய மாதிரியே செய்தீர்களானால் மீண்டும்
ஒரு புதிய வருடத்தின் எண் கிடைக்கும் அந்த வருடம்தான் அதற்கு அடுத்த
Turning Point. இப்படி கணக்கிட்டுக்கொண்டே போகலாம்

உதாரணம் வேண்டாமா? இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜா அவர்களின்
பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்வோம்

அவர் பிறந்தது 1943ம் வருடம்

1943 - கூட்டல் தொகை 17
17
----------
1960 - கூட்டல் தொகை 16
16
----------
1976 - கூட்டல் தொகை 23
23
----------
1999
---------
இளைய ராஜாவின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய
வருடங்கள்:- 1960, 1976 & 1999
----------------------------------------------

1960 - 1975

17 வயது வரை கிராமத்தில் இருந்த ராஜா அவர்கள் ஊரை விட்டுப்
புறப்பட்டு, தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்அவர்களுடன் சேர்ந்து
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும், பிறகு பல இயக்கங்களின்
மேடைகளிலும் பாட ஆரம்பித்ததும், பல இசைக் கருவிகளைக் கற்றுக்
கொண்டு வாசிக்க ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான், திரு,.தன்ராஜ்
மாஸ்டரிடம் இசையை நன்கு கற்று பாண்டித்யம் பெற்றதும் இந்தக்
காலகட்டத்தில் தான்.பல இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்து திரை
இசையின் நுட்பங்களை முழுதாகத் தன் மனதில் உள் வாங்கிக் கொண்டதும்
இந்தப் பீரியடில்தான்

1976 - 1998

1976ம் ஆண்டு திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்த 'அன்னக்கிளி'
படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்ததுதான் பெரிய திருப்புமுனை.
பட்டி தொட்டிகளிலெல்லாம் ' மச்சானைப் பாத்தீங்களா, மலை வாழைத்
தோப்புக்குள்ளே' பாட்டு ஒலித்து ஒரே மாதத்தில் இவர் பிரபலமாகியதோடு,
மொத்த தமிழ்த்திரை உலகத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்தார்
என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

அதற்குப் பிறகு திரையுலக ராஜாவாக, ஒருவருடமல்ல இரண்டு வருடங்களல்ல
சுமார் 23 ஆண்டுகள் கோலோச்சினார் என்று சொன்னால் அது மிகையல்ல

1999 முதம் இன்று வரை

AR.ரெஹ்மான், பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என்று இளம்
ரத்தங்களெல்லாம் திரையிசையில் நுழைய, இவரும் தன் பங்கிற்குத் தன்
மகன்கள் - கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரையும்
திரைக்கப்பலில் ஏற்றி விட்டு விட்டுத்தான் சற்று ஒதுங்கி, ஆன்மீகம்,
தியானம், Symphony என்று களம் இறங்கி விட்டார்.
----------------------------------------------------
அவர் பிரபலமானவர் - அவரை உதாரணமாக வைத்து எழுதினால்
அனைவருக்கும் எளிதில் புரியும் என்பதால் அவரை வைத்து விளக்கியுள்ளேன்
வேறு நோக்கம் எதுவுமில்லை (பின்னூட்டம் போடும் கண்மணிகள் குறித்துக்
கொள்ள வேண்டுகிறேன் இதை)

பதிவு பெரிதாகிக் கொண்டே போகிறது. இந்த Theory (Wheel of Fortune)
க்கு ஆதாரம் என்ன என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். அது மேதையும்
உலகப் புகழ்பெற்ற ஜோதிட வித்தகருமான திரு.சீரோ அவர்கள் எழுதியது.
Scanned பக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் பிறந்த எண்ணிற்கு
நீங்கள் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

செப்டம்பர் 5' 2006ஆம் ஆண்டில் நான் எழுதி என்னுடைய பல்சுவைப்
பதிவில் பதிவிட்டது. பலர் வகுப்பரைக்குப் புதியவர்கள். அவர்கள் அறிய
வேண்டும் என்பதற்காக இங்கே மீண்டும் பதிவிட்டுள்ளேன்.

அதன் சுட்டி இங்கே உள்ளது!
=========================================================
படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
===========================================================
வகுப்பறையின் 250வது பதிவு இது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
---------------------------------------------------------------------------------
ஜோதிடம், எண்கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவைப்
படித்துவிட்டு என்னைக் கேள்வி கேட்க வேண்டாம். உங்களுக்காகப்
பாடம் நடத்திவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
உங்களுக்காகத்தான் பலசுவை என்கின்ற இன்னொரு பதிவில் எழுதுகிறேன்
அங்கே வாருங்கள். இதெல்லாம் இருக்காது!
.............................................................................................................................................
வாழ்க வளமுடன்!

2.1.09

வெற்றியின் ரகசியம் என்ன?

வெற்றியின் ரகசியம் என்ன?
ஜாதகத்தை மறந்துவிட்டுக் கீழே உள்ளதைப் பாருங்கள்.
அனைத்து ராசியினருக்கும் அல்லது லக்கினத்திற்கும்
அது பொதுவானது:-)))


எட்டாவதாக நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்; சேர்த்துக்கொள்வோம்!
==========================================================
இரவல் சரக்கு;
வகுப்பறையின் வாசகி ஒருவர் அனுப்பியது.
அவருக்கு நன்றி!
வாழ்க வளமுடன்!

1.1.09

சிறப்புச் சிறுகதை: ஆயில்ய நட்சத்திரம்


"புதுமலர் வீணே வாடிவிடாமல்.....
புதுமலர் வீணே வாடிவிடாமல்......
புன்னகை வீசி... ஆறுதல்கூற.......
அருகில் வராத தேனோ?"

'அமுதைப் பொழியும் நிலவே, நீ அருகில் வராததேனோ?' என்ற
பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளைக் கேட்டால் உமையாள்
மனம் நொறுங்கிப் போவாள். சோகத்தை சுசீலா அம்மையார் பாடலில்
குழைத்துக் கொடுத்திருப்பார்கள். கேட்கும் உமையாள் பல மடங்கு
சோகமாகி விடுவாள்.

உமையாளின் திருமணம் இரண்டு ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்
கொண்டிருக்கிறது. சோகம் அதனால் அல்ல. தனக்கு மணம் பேசுகின்ற
பெற்றோர்கள் படும் அவஸ்தையைப் பார்த்துத்தான் அவள் நொந்து
போய் இருந்தாள்.

உமையாள் மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். விரிந்து சுருங்கும்
குடை போன்ற கண்கள். பிடறியை மறைக்கும் நீண்ட கருங்கூந்தல்.
அதில் இரண்டாக மடித்துச் சொருகப்பட்டிருக்கும் மல்லிகைச்சரம்.
அந்த மலர்கள் அவளுடைய தோள்களைத் தொடும் அழகு.
அளவெடுத்துப் பிரம்மன் செய்திருந்த அவளுடைய நாசியும், கன்னங்களும்,
அதரங்களும், என்று மொத்தத்தில் எவரையும் ஈர்க்கும்படியாக இருப்பாள்
அவள்.

உமையாள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் படித்தவள். எம்.ஃபில்
படிப்பையும் தொடர்ந்து படித்தவள். தற்சமயம் சென்னை கோடம்பாக்கத்தில்
உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கிறாள்.
வயது இருபத்தேழு நடக்கிறது.

அம்பத்தூர் இந்தியன் வங்கிக் காலனியில் வீடு.

'நாம் இருவர்; நமக்கு இருவர்' என்று அரசாங்கம் அடித்துச் சொன்ன பிறகு,
திருமணமான உமையாளின் பெற்றோர்களுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள்.
உமையாள் மூத்தவள் இரண்டு வருடம் கழித்துப் பிறந்த தம்பி ஒருவன்.
அளவான குடும்பம்.

அவளுடைய நிறமும், பிறந்த நட்சத்திரமும் கல்யாணச் சந்தையில் குறைகளாகப்
பார்க்கப்பட்டன. வெண் முத்தென்றால் இந்நேரம் அவள் விலை போகியிருப்பாள்.
அவள் கறுப்பு முத்து. அதோடு ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவள். அதுதான்
தடைகளாக இருந்தன.

பெண் மூலம் மாமனருக்கு ஆகாது; பெண் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது
என்று எந்தப் பாவி சொல்லி வைத்தானோ - வரன் கேட்டு வருகிறவர்கள்
ஓடிப்போய் விடுவார்கள்.

நட்சத்திரத்தில் என்ன இருக்கிறது? வேறு நட்சத்திரங்களாக இருந்து ஏழில்
சனி இருந்தால் என்ன செய்வார்களாம்? உமையாளிற்கு பாக்கிய ஸ்தானத்தில்
குரு உச்சமாகி, லக்கினாதிபதி சந்திரனுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்.
அதை யாரும் பார்ப்பதில்லை. நட்சத்திரத்தைக் கேட்டு ஓடி விடுகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை!

சரி, கொடுத்து வைத்தவன் யார்?

அவளைப் படைத்தவன் அதற்கு ஒரு வழி வைக்காமலா விட்டிருப்பான்?
பொறுத்திருந்து பாருங்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஹுண்டாய் மாட்டிஸ் காரைத் தன் தங்கை செல்லம்மை என்ற செல்வி
லாவகமாக ஓட்டுவதைப் பார்த்து வியந்து கொண்டே அருகில் அமர்ந்திருந்த
டாக்டர் கண்ணம்மை ஆச்சி அவர்கள், தன் தங்கையிடம்
மெதுவாகக் கேட்டார்.

"எப்படிடீ செல்வி, இந்த நெரிசலில் சிரமமின்றிக் கார் ஓட்டுகிறாய்?"

"பழகிவிட்டது ஆச்சி"

"டூ மச் ஆஃப் வயலேட்டர்ஸ். ரைட் சைடில் ஒரு மோட்டார் சைக்கிள்காரன்,
லெஃப்ட் சைடில் ஒரு ஆட்டோக்காரன் என்று நம்மைக் கடந்து செல்கிறார்கள்.
எங்கள் நாட்டில் இப்படிக் கடந்தால் பிடித்து உள்ளே போட்டு விடுவான்.
அத்தனை பேர்களும் போக்குவரத்து விதிகளைப் புறக்கணிக்கிறார்கள்"

செல்வி சிரித்துவிட்டுச் சொன்னாள்,"அப்படிப் பார்த்தால் சென்னையில் வண்டி
ஓட்டுபவர்களில் பாதிப்பேரை உள்ளே தள்ள வேண்டியதிருக்கும்!"

"அடக் கடவுளே!" என்று சொல்லிப் பெருமூச்சு விட்ட கண்ணம்மை ஆச்சி
தொடர்ந்தார்கள்."சரி, அதை விடு. இன்று நம்முடைய புரோகிராம் என்ன?"

"முதலில் கோயம்பேடு மார்க்கெட். அங்கே எங்கள் கம்பெனி ஆள்
பொங்கலுக்கு வேண்டிய காய்கறிகளை லிஸ்ட்டுப்படி வாங்கி வைத்திருப்பான்.
அதை வாங்கிக் கொண்டு, நாம் அம்பத்தூரில் உள்ள என் பெரிய நாத்தினார்
வீட்டிற்குப் போகிறோம். அதை அங்கே அவர்களிடம் கொடுத்து விட்டுத்
திரும்ப வேண்டியதுதான்."

"ஆமாம் சொன்னாயல்லவா, நம் அனைவருக்கும் அவர்கள் வீட்டில்தான்
பொங்கலென்று. எனக்கும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில்
ஆர்வம் உள்ளது. சரி, போய் வருவோம்."

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருந்தன. கரும்பு வண்டிக்காரனுடன்
பேரம் பேசிக்கொண்டிருந்த நமது நாயகியின் தாயார் மீனாட்சி ஆச்சி, தன்
வீட்டருகில் ஒரு கார் வந்து நிற்பதையும், அதிலிருந்து இரண்டு பெண்மணிகள்
இறங்குவதையும் பார்த்தவுடன் முகம் மலர்ந்தார்கள்

வந்த இருவரும், காரின் பின் இருக்கையிலிருந்து எடுத்து, ஆளுக்கு இரண்டு
கட்டைப் பைகள் வீதம் நிறையக் காய்கறிகளைத் தூக்கிக் கொண்டு வீட்டை
நோக்கி வர 'வாங்க, வாங்க' என்று வாய் நிறைந்து வரவேற்றார். மூவரும்
வீட்டிற்குள் நுழைந்தார்கள். மீனாட்சி ஆச்சிதான் முதலில் பேசினார்கள்

"எப்படி இருக்கீங்க டாக்டர்?"

"நியாயமா? நீங்கள் என்னைக் கண்ணம்மை என்று கூப்பிடுவதுதான் முறை!"

"நீங்கள் பேறுபெற்ற டாக்டர். அதைச் சொல்லிக் கூப்பிடுவதுதானே முறை?"

"பேறுபெற்ற டாக்டரா? எப்படிச் சொல்கிறீர்கள்?"

"அமெரிக்காவில் நீங்கள் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் இல்லையா?
மகப்பேறு மருத்துவம் தானே மருத்துவத்தில் முதன்மையானது. அதனால்தான்
அதற்குப் பேறு என்ற அடைமொழியையும் தமிழில் கொடுத்தார்கள்....!."

"சென்னையில் இருப்பவர்களிட்ம் எல்லாம் பேசி ஜெயிக்க முடியாது. நான்
சரணடைந்து விடுகிறேன். நீங்கள் எப்படிக் கூப்பிட்டாலும் எனக்குச் சம்மதமே!"
என்று கண்ணம்மை ஆச்சி கைகள் இரண்டையும் உயரத் தூக்கிக் கொண்டு
கூறவும், மற்ற இருவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்

அதற்குப் பிறகு மூவரும் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். எல்லாம் விட்டுப்
போன பழைய கதைகள், நிகழ்வுகள். அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.

நடுவில் செல்வி அடுக்களைக்குள் சென்று காப்பி கலந்து எடுத்துக் கொண்டு
வந்தாள்.

ஃபில்டர் காப்பியை ரசித்துக் குடித்த கண்ணம்மை ஆச்சி, சட்டென்று திரும்பி
வலப்புறம் இருந்த அறையை நோக்க, உள்ளே நீண்ட கண்ணாடி கதவுகளுடன்
இருந்த தேக்குமர ஷெல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அவர்கள்
கண்ணில் பட, ஆச்சரியத்துடன் கேட்டார்கள்,"இவ்வளவு புத்தகங்கள்
இருக்கின்றனவே? வாசிப்பில் ஆர்வம் உள்ள பாக்கியசாலி உங்கள் வீட்டில் யார்?"

"என் மகள்தான்" என்று மீனாட்சி ஆச்சி கூறவும், உள்ளே எழுந்து சென்ற
கண்ணம்மை ஆச்சி, தரையில் மண்டியிட்டு, கண்ணாடியின் வழியாக உள்ளே
அடுக்கியிருக்கும் பத்தகங்களைப் பார்க்கத் துவங்கினார்கள். சில புத்தகங்களின்
முதுகில் புத்தகத்தின் பெயர் இருந்தது. சிலவற்றில் இல்லை!

நிலையில் மாட்டியிருந்த திறவுகோலை எடுத்து மீனாட்சி ஆச்சி கொடுக்கவும்,
கண்ணம்மை ஆச்சி, கண்ணாடிக் கதவைத் திறந்து, செல்ஃபின் முதல் தட்டில்
இருந்த புத்தகங்களில் பத்துப் புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு,
தரையில் வசதியாக அமர்ந்து அவற்றைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

முதல் புத்தகமே அசத்தலாக இருந்தது. காந்திஜி எழுதிய, 'மை எக்ஸ்பரிமென்ட்
வித் ட்ரூத்' (சத்திய சோதனை). அடுத்த புத்தகம் வாரியார் சுவாமிகளின் விரிவுரை
விருந்து. அடுத்து கவியரசர் கண்ணதாசனின் 'மாங்கனி' கவிதை நூல். ஒவ்வொரு
புத்தகமாகத் தலைப்புக்களைப் பார்க்க பார்க்க ஆச்சி அவர்கள் பிரமித்துப் போய்
விட்டார்கள். ஆங்கில நூல்களுகளும், தமிழ் நூல்களும் சரிக்குச் சரிசமமான
எண்ணிக்கையில் இருந்தன. மொத்தம் ஐநூறு அல்லது அறுநூறு புத்தகங்கள்
இருக்கலாம். வேப்பங்காய் என்று இளவட்டங்கள் ஒதுக்கிவிடும் நூல்கள்தான்
அதிகமாக இருந்தன. அதுவே ஆச்சிக்குப் பிரமிப்பாக இருந்தது.

படிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக புத்தகங்களில் உள்ள சிறந்த வரிகள்
பென்சில் கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தன.

"அற்புதம்' என்று ஆங்கிலத்தில் சொன்ன ஆச்சி அவற்றை மீண்டும் உள்ளே
வைத்து விட்டு எழுந்துவிட்டார்கள்.

"உங்கள் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு இந்தப்
புத்தகங்கள்,கொடுத்து விட்டன!" என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார்கள்.

"அதுதான் நாளன்னைக்கு வரப்போகிறோமே. அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
இப்போது நேரமாகிவிட்டது. கிளம்புவோம்" என்று செல்வி கூற, புத்தகப் பிரியரான
கண்ணம்மை ஆச்சி அந்தப் புத்தகங்களைப் பிரிய மனமில்லாமல் கிளம்பினார்கள்.

அதுபோல உமையாளையும் பார்த்துப் பேசினால், அவளையும் பிரிய மனம்
வராது போய்விடும் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.

=========================================================

பொங்கலன்று காலையில் மீனாட்சி ஆச்சி அவர்களின் வீடு களை கட்டிவிட்டது.
செல்வி, செல்வியின் கணவர், அவர்களுடைய இரண்டு குழந்தைகள் மற்றும்
கண்ணம்மை ஆச்சி ஆகியோர் வந்தவுடன். மீனாட்சி ஆச்சியின் கணவர் சோமசுந்தரம்
அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.

தன் மகள் உமையாளையும், மகன் வீரப்பனையும் அழைத்து டாக்டர் ஆச்சிக்கு
அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

உமையாள் கோவில் விக்கிரகம் போல இருந்தாள். கையெடுத்துக் கும்பிட
வைக்கும் அழகு. கண்ணம்மை ஆச்சி மயங்கிப் போய்விட்டார்கள்.

இரண்டு நிமிடம் பேசிக்கொண்டிருந்தவள்,"அடுப்படியில் வேலையாக இருக்கிறேன்.
அங்கே வாருங்களேன். உங்களோடு பேசிக்கொண்டே என்னுடைய வேலை
களைச் செய்கிறேன்" என்றாள். ஆச்சி எழுந்து அவளுடன் சென்றார்கள்.

மீனாட்சி ஆச்சி பின்பக்கக் கிணற்றடித் திட்டில் சூரியனுக்குப் பொங்கல் வைக்கப்
போய் விட்டார்கள். நம்மூரில் என்றால் வளவு நடுவாசலில் வைப்போம். இங்கே
ஏது நடுவாசல்?

அடுப்படியில் உமையாள் காய்கறிகள் வெட்டும் வேகத்தையும், புளிக்கரைசல்
தயார் செய்த வேகத்தையும் பார்த்த கண்ணமமை ஆச்சிக்குப் புரிந்தது அவள்
படிப்பில் மட்டுமல்ல சமையலிலும் கெட்டிக்காரி என்று. உள் சமையல்
அனைத்தையும் உமையாள் தனியாகச் செய்து இறக்கி வைக்க வைக்கக்
கண்ணம்மை ஆச்சி அவளுடன் பேசிக்கொண்டே ஒவ்வொரு ஐட்டத்திற்கும்
அளவைக் கேட்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டிருந்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, கத்தரிக்காய் புளிக்குழம்பும், கருணைக்கிழங்கு கெட்டிக்
குழம்பும் அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுபோய் விட்டன.

"எல்லாம் சூப்பராக இருக்கிறது" என்று வாயாராமல் சொல்லிக் கொண்டே
சாப்பிட்டு முடித்தார்கள்.

வேறு என்னென்ன தெரியும் என்று கேட்டபோது, உமையாளின் அத்தை செல்வி
"அவளுக்கு நடனத்தை தவிர மற்ற எல்லாக் கலைகளும் தெரியும்" என்று
பஞ்சிங்காகச் சொல்லி, "அது தெரியாமல் போனதற்கு அவளுடைய அப்பச்சி,
நடன வகுப்பிற்கு அவளை அனுப்ப மறுத்ததுதான் காரணம்" என்றும்
நகைச்சுவையாகச் சொன்னார்கள்.

"இதற்கெல்லாம் நேரம் ஏது?" என்று டாக்டர் ஆச்சி வினவ, உமையாள்
மெல்லிய குரலில் சொன்னாள்,"எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டி
இல்லை. நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அதுதான் காரணம்"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதற்கு அடுத்த நாள். கண்ணம்மை ஆச்சி தன் தங்கையிடம் பேச்சுக் கொடுத்தார்கள்

"செல்வி, உன் நாத்தினார் மகளை என் மகனுக்குக் கட்டுவார்களா?"

"ஏன் இப்படிக் கேட்கிறாய்?"

"அமெரிக்க மாப்பிள்ளை என்றால் சிலர் வேண்டாம் என்பார்கள் என்று கேள்விப்
பட்டேன். பெண்னைக் கஷ்டப்பட்டு வளர்த்து அவ்வளவு தூரத்தில் எதற்காகக்
கொடுக்க வேண்டும்? உள்ளூர் மாப்பிள்ளையே போதும் என்பார்களாமே?"

"தங்கம் தங்கமாகக் கட்டுவார்கள். ஆனால் அதில் இரண்டு சிக்கல் இருக்கிறது"

"என்னடி சிக்கல்?"

"அவள் கறுப்பு. உன் பையன் ஒத்துக் கொள்ள வேண்டுமே?"

"என் பையன் மட்டும் என்ன சிவப்பா? அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை
அவன் ஒத்துக் கொள்வான். இல்லையென்றாலும் நான் சொன்னால் கேட்டுக்
கொள்வான்"

"அவள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவள். அது ஒரு குறை"

"அதில் என்ன குறை?"

'ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பார்கள்"

"அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நட்சத்திரம் என்ன செய்துவிடும்?அந்த
நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பெண்களுக்குமா திருமணம் ஆகாமல் இருக்கிறது?
எல்லாவற்றிற்கும் மேல் இறைவன் இருக்கிறான். எனக்கு அதீதமான இறை
நம்பிக்கை உண்டு. என்னிடம் பரிசோதனைக்கு வரும் அல்லது பிரசவத்திற்கு
வரும் பெண்களுக்கு, இறைவனை மனதார வணங்கிவிட்டே நான்
அவர்களுடைய அடி வயிற்றில் கையை வைப்பேன். இதுவரை ஒன்றுகூடத்
தவறானாதில்லை. எல்லாம் இறைவனின் சித்தம்!"

"ஆச்சி, நீங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தால், பிரச்சினை ஒன்றும் இல்லை.
உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறி விடும்"

செல்வி இப்படிச் சொன்னவுடன், கண்ணம்மை ஆச்சி அடுத்துச் செய்ய
வேண்டியது என்ன என்கின்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்தடுத்து எல்லாம் நல்லபடியாக நிறைவேறியது. கண்ணம்மை ஆச்சியின்
மகன் சுந்தரத்திற்கும், உமையாளிற்கும் இனிதாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு அடுத்த நாள் காலையில், கண்ணம்மை ஆச்சியின் கணவர்
சொக்கலிங்கம் ஆச்சியுடன் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். மருமகளாக
வந்தவள் அருமையான பெண் என்று மகிழ்ந்து சொன்னார்.

அத்துடன் ஆச்சியிடம் சொன்னார்."பெண் பார்க்க நானும் சுந்தரமும் வந்த
அன்று உன் தங்கை சில விஷயங்களைச் சொன்னாள். உடனே நான்
வடபழனியில் உள்ள ஜோதிடர் ஒருவரைப் போய் பார்த்தேன். ஜோதிடர்,
இது சுத்த ஜாதகம்.இவளால் உங்கள் மனைவிக்கு எந்தத் தீங்கும் நேராது
என்று சொன்னார். அதோடு பெண்ணும், உங்கள் மனைவியும் கும்ப
லக்கினக்காரர்கள். பெண்கள் ஜாதகங்களில் கும்பலக்கினம் உயர்வான
லக்கினம். அதனால்தான் அதற்கு நிறை கும்பத்தை அடையாளமாகக்
கொடுத்தார்கள். ஒரே லக்கினக்காரர்கள் என்பதால் இருவருடைய குணங்களும்
ஒரே மாதிரியாக இருக்கும். ஒற்றுமையாக இருப்பார்கள் அல்லது விட்டுக்
கொடுத்துப் போய்விடுவார்கள். ஆகவே நீங்கள் வேறு யோசனையின்றி
இந்தப் பெண்ணை உங்கள் மகனுக்கு மணம் செய்து வைக்கலாம் என்றும்
கூறினார். அதை அப்போது உனக்கு நான் கூறவில்லை!"

"அதை நான் ஜாதகத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொண்டேன். என்னைப்
போலவே அவளுக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது. தொலைக்காட்சி
சீரியல்களைப் பார்த்து நேரத்தை வீண்டிக்கூடாது என்கின்ற எண்ணம் இருக்கிறது.
அதோடு என்னைப்போலவே படு சுறுசுறுப்பானவள். இப்படி சொல்லிக் கொண்டே
போகலாம்"

"ஆயியம் நட்சத்திரம் ஆகாது என்று மற்றவர்கள் சொல்லியும், காது கொடுத்துக்
கேட்காதது பாராட்டப் பட வேண்டியதாகும். ஆகாது என்பதற்கு இன்னொரு
அர்த்தமும் உண்டாம் சமயங்களில் மாமியாரை எடுத்து விடுமாம்.ஆகவே
நீ ஜாக்கிரதையாக இரு" என்று அவர் நகைச்சுவையாகச் சொன்னார்.

உடனே ஆச்சி அவர்கள் புன்னகையுடன் பதில் சொன்னார்கள்.

"நான் நன்றாக வாழ்ந்து விட்டேன். என் மகனுக்கு நல்ல துணையைத்
தேடிக்கொடுத்துவிட்டேன். ஆகவே காலதேவன் போர்டிங்பாஸ் கொடுத்து மேலே
அனுப்பினால் நான் கவலைப் பட மாட்டேன்"

"அடடே சீரியசாகி விடாதே. நான் நகைச்சுவைக்காகச் சொன்னேன். உன் மகன்
மேல் வைத்திருக்கும் பிரியத்தில் பாதியாவது என் மேலும் வை!"

"அதெல்லாம் இல்லாமலா? நான் இந்தப் பெண்ணைத் தேர்வு செய்ததற்கு
ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. மருத்துவர் தொழிலால் என் மகனுக்கு
நான் நன்றாகச் சமைத்துப் போடவில்லை. இவள் வாய்க்கு ருசியாக நன்றாகச்
சமையல் செய்வாள். அதோடு மிகவும் அன்பானவள். என் மகனைக் கண்போல
பார்த்துக் கொள்வாள்."

"அது மட்டும்தான் காரணமா?"

"இல்லை இன்னொரு காரணம் இருக்கிறது. அவள் வீட்டிற்கு முதன்
முதலாகப் போனபோது, அவளுடைய அறையில் பார்த்தேன். ஒரு பாடலின்
நான்கு வரிகளைத் தட்டச்சு செய்து, பிள்ளையார்பட்டி பிள்ளையார் படத்தின்
கீழ் பகுதியில்அவள் ஒட்டி வைத்திருந்தாள். அதைப்பார்த்தவுடன் நெகிழ்ந்து
போய் விட்டேன். அந்தக் காலத்தில் எனக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே
போன போது, நான் மருத்துவம் படித்தவள் என்று பல வரன்கள் என்னை
மணம் செய்துகொள்ள மறுத்தபோது, நான் பலமுறை நொந்து போயிருக்கிறேன்.
அப்போதெல்லாம் எனக்கு ஆறுதல் தந்தது அந்த வரிகள்தான். புதுமலர் வீணே
வாடிவிடாமல்..... புன்னகை வீசி...ஆறுதல்கூற....... அருகில் வராத தேனோ?"
என்கின்ற அந்த வரிகளை நான் என் ஆயுசிற்கும் மறக்க மாட்டேன்.
பெண்ணின் மனசு பெண்ணிற்குத்தான் தெரியும். அதுபோல பெண்ணின்
தவிப்பும் பெண்ணிற்குத்தான் புரியும்!"

ஆச்சியின் கண்கள் பனித்துவிட்டன.

ஆச்சியின் கண்கள் மட்டுமா? அவர்கள் இருவருக்கும் காப்பி எடுத்துக்
கொண்டு வந்த உமையாளின் காதில் ஆச்சி அவர்கள் கடைசியாகக் கூறியது
விழ அவள் கண்களும் பனித்து விட்டன!

**********************************************************************************
அடியேன் எழுதி, டிஸம்பர் '2008ல், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து
அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. உங்களுக்கு
அறியத்தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------
"வாத்தியார்?"

"என்ன ராஜா?"

"இது உங்கள் பல்சுவைப் பதிவில் வரவேண்டிய கதை அல்லவா?"

"ஆமாம் ராஜா! ஆனால் இது நட்சத்திரம் குறித்து எழுதப்பெற்றதால்
இதில் பதிவிட்டுள்ளேன். ஆயில்யம் நட்சத்திரத்தை ஒதுக்காதீர்கள்
என்பதுதான் முக்கியமான மெசேஜ்!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை எப்படி இருக்கிறது? அது பற்றி ஒரு வரி எழுதுங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்







வாழ்க வளமுடன்!